கணம்தோறும் பிறக்கிறேன் 

Friday, April 11, 2025

படங்களாக ஒரு பதிவு

படங்களாக ஒரு பதிவு


அம்மாவின் திவசத்திற்காக திருச்சி சென்றபோது முத்தரசநல்லூர் குருவாயூர் கோவில், வைத்தீஸ்வரன் கோவில், சிதம்பரம் போன்ற கோவில்களுக்குச் சென்றோம். எப்போதும் செல்லும் மாணிக்க விநாயகர், திருவானைக்கோவில், ஸ்ரீரங்கமும் விடவில்லை. இவைகளைப்பற்றி என்ன எழுதுவது? படங்கள் பேசட்டும். நேரம் குறைவாக இருந்ததால் சந்திக்க விரும்பிய தோழிகளையும், பதிவர்களையும் சந்திக்க இயலவில்லை.




பரமபத வசல்



சிவராத்திரிக்காக விளக்கொளியில் ஜொலித்த திருவானைக்கோவில். நாங்கள் திருச்சியில் வசித்த பொழுது இப்படிப்பட்ட அலங்காரங்கள் கிடையாது.











மாணிக்க விநாயகர் கோவில் விதானத்தில் இருந்த விநாயகர் சிற்பங்களை படமெடுக்க முயன்றபொழுது ஒருவர்,"புகைப்படம் எடுக்காதீர்கள்" என்றார். கோவில் நிர்வாகத்தைச் சார்ந்தவர் என்று நினைத்தால்,"ஏதாவது சாப்பிடுகிறீர்களா? போளி இருக்கு, வடை இருக்கு" என்கிறார். கர்ர்ர்....


சின்னக்கடை வீதியின் வழியே St.Joseph church




Krishna Readymade Hall:

இந்த கடையோடு ஒரு உணர்வுபூர்வமான பந்தம் உண்டு. எங்களின் சிறு வயதில் எங்கள் அம்மா எங்களுக்கு உடைகள் (skirt& blose frock) வாங்கியிருக்கிறார். நான் என் மகளுக்கு வாங்கினேன், இப்போது என் பேத்திகளுக்கு, தொடரும் பாரம்பரியம்.

சமயபுரம் கோவிலுக்குச் சென்றபொழுது மயக்கிய அந்திவானம்

மேற்கண்ட படத்தை'தெய்வீகம்' என்ற புகைப்பட போட்டிக்கு அனுப்ப நினைத்தேன்.

திருச்சியில் நான் தவற விட்ட விஷயம் பெரிய கடை வீதியின் சவுக்கில்(செளக் என்னும் ஹிந்தி வார்த்தையை உள்ளூர்வாசிகள் சவுக்கு என்பார்கள்) இருக்கும் பழைய புத்தக கடை :((

வைத்தீஸ்வரன் கோவில் குளக்கரையில்

கங்கை கொண்ட சோழபுரம்


சிதம்பரம் செல்லும் வழியில் கங்கை கொண்ட சோழபுரம் கோவில். இதைக்கட்டிய ராஜேந்திர சோழன் தன் அப்பா கட்டிய பிரகதீஸ்வரர் கோவிலை விட உயரமாக இருக்கக்கூடாது என்று நினைத்ததால் இது 157 அடி உயரமாக கட்டப்பட்டதாம். பெரிய கோவில் 212 அடி. உயரம். மேற்கண்ட படத்தில் பிரமிடு போல தோன்றவில்லை? 

வெங்கட் நாகராஜ், கோமதி அக்கா, தி.கீதா போன்றவர்கள் போடும் படங்களோடு ஒப்பிடாதீர்கள். நான் ஒரு கத்துக்குட்டி.

Wednesday, April 9, 2025

பாடலாத்ரி, திருநின்றவூர்

சிங்கபெருமாள் கோவில்

கேரள விருந்தாளியோடு பாடலாத்திரி எனப்படும் சிங்கபெருமாள் கோவில், திருவள்ளூர் வீரராகவப் பெருமாள் கோவில், திருநின்றவூர் ஹிருதயாலீஸ்வரர் கோவில் எல்லாம் தரிசனம் செய்தோம். 

சிங்கப் பெருமாள் கோவில் ஒரு குடைவரை கோவில். அந்த சிறு குன்றே நரசிம்மர் என்ற கருதப்படுவதால் அந்த குன்றை வலம் வருவது சிறப்பு என்பது நம்பிக்கை. இங்கே தவம் செய்த ஜாபாலி முனிவர் தனக்கு நரசிம்மராக திருமால் காட்சி அளிக்க வேண்டும் என்று வேண்டியதால் உக்ர நரசிம்மராக அவருக்கு காட்சி அளித்தாராம். இங்கு பெருமாளுக்கு நெற்றிக் கண் உண்டு. தீபாராதனையின் பொழுது நெற்றிக்கண்ணை திறந்து தரிசிக்க வைக்கிறார்கள். அபூர்வ அனுபவம் அது. 



ஹிருதயாலீஸ்வரர் கோவில்:

அறுபத்து மூன்று நாயன்மார்களில் ஒருவரான பூசலார் சிவ பெருமான் மீது அதீத பக்தி பூண்டவர். தற்சமயம் திண்ணனூர் என்று அழைக்கப்படும் திருநின்றவூரில் வசித்த அவர், பெரும்பாலும் அங்கிருந்த இலுப்ப மர காட்டில்தான் அமர்ந்து தியானத்தில் எடுபட்டிருப்பார். அந்த சமயத்தில் காஞ்சிபுரத்தை ஆண்ட பல்லவ மன்னன், கைலாசநாதர் கோவிலை கட்டிக் கொண்டிருந்தார். அதைப்போல தானும் இறைவனுக்கு ஒரு கோவிலை கட்ட வேண்டும் என்று விரும்பிய பூசலார் மானசீகமாக இறைவனுக்கு கோவில் கட்ட ஆரம்பித்தார். பல்லவ மன்னன் கோவிலை கட்டி முடித்த அதே சமயத்தில் இவருடைய மனக்கோவிலும் முற்றுப் பெருகிறது. பல்லவ மன்னன் எந்த நாளில் கும்பாபிஷகேத்திற்கு நாள் குறித்திருந்தாரோ அதே நாளில் பூசலாரும் தன் இதயக்கோவிலுக்கு கும்பாபிஷேகம் செய்ய நாள் குறிக்கிறார். 

கும்பாபிஷேகத்திற்கு முதல் நாள் பல்லவ மன்னன் கனவில் தோன்றிய சிவ பெருமான், "நாளை திருநின்றவூரில் என் பக்தன் பூசலார் கட்டிய கோவிலுக்கு குடமுழுக்கு,  நான் அங்கு செல்ல இருப்பதால் நீ கட்டியிருக்கும் கோவிலில் எழுதருளுவது இயலாது" என்று கூறி விடுகிறார். மறுநாள் திருநின்றவூருக்குச் சென்ற மன்னன், "இங்கு பூசலார் கட்டியிருக்கும் ஆலயம் எங்கிருக்கிறது?" என்று விசாரிக்க, அந்த ஊர் மக்கள் ஆச்சர்யமடைகிறார்கள். "எப்போதும் இலுப்ப காட்டில் உட்கார்ந்திருக்கும் ஓரு ஏழை பிராமணர் கோவில் கட்டியிருக்கிறாரா?"  அவர் மன்னன் முன் நிறுத்தப்படுகிறார். "ஐயா! நீங்கள் கட்டியிருக்கும் கோவில் எங்கேயிருக்கிற்து?" என்று அரசன் கேட்க, அதிர்ச்சி அடைந்த பூசலார், " பிறர் அறியாமல் நான் மானசீகமாக கட்டிய கோவில் பற்றி எப்படி அறிந்து கொண்டீர்கள்?" என்று கேட்க, அரசர் தன் கனவைப் பற்றி விவரிக்கிறார். 

"என்னையும் ஒரு பொருட்டாக மதிக்கிறாரா நான் வணங்கும் ஈசன்?" என்று நெகிழ்ந்தார் பூசலார். அரசன் அவரை வணங்கி திரும்பினான் என்று  முடிகிறது பெரிய புராணம். ஆனால் பூசலார் விரும்பியது போல அவருக்கு கோவில் எழுப்பிக் கொடுத்தார் பல்லவ ராஜா என்கிறது கோவில் தல புராணம்.

பூசலார் இதய பூர்வமாக கோவில் எழுப்பியதால், இந்த கோவிலின் கருவறை விமானம் இதய வடிவத்தில் இருக்குமாம். கருவறைக்குள் சிவலிங்கத்திற்கருகில் சிலா வடிவில் பூசலாரையும் தரிசிக்கலாம். தனி சன்னிதியில் தாயார் மரகதாம்பிகை.

திருநின்றவூர் பக்தவத்சல பெருமாள் கோவிலில் பாலாலயம் செய்திருந்ததால் மூலவரை தரிசனம் செய்ய முடியவில்லை. அருகில் இருந்த ஏரிகாத்த ராமர் கோவிலுக்குச் சென்றோம். 

அங்கு கோவில் மூடும் நேரமாகி விட்டாலும், அங்கிருந்த வயது முதிர்ந்த பட்டாச்சாரியார் மிக அன்போடு எங்களை வரவேற்று தரிசனம் செய்வித்தார். நின்ற திருக்கோலத்தில் கம்பீரமாக ராமர். பக்கத்தில் வாத்ஸ்யல்யமே உருவாக ஜானகி மாதாவும், இளவல் லட்சுமணனும். அந்த பட்டாச்சாரியார் எங்களை அந்த கோவிலில் மூன்று விஷயங்களை கண்டிப்பாக பார்க்க வேண்டும் என்றார். கோவிலின் பின் பக்கம் இருக்கும் ஏரி, முன் பக்கம் இருக்கும் நவீன கஜேந்திர மோட்ச சிற்பம்,  கோவிலுக்குள் இருக்கும் ஆஞ்சனேயர் சிற்பம் இவைதான் அந்த மூன்றும்.


ராம லட்சுமணர்களை சுமந்து செல்லும் ஹனுமான்

ஹனுமனின் பின்புறம், ராம லட்சுமணர்களின் திருவடிகள்

அவர் சொன்னபடி  செய்தோம். அங்கிருக்கும் ஆஞ்சனேயர் சிற்பம் வேறு எங்கும் காண முடியாதது. தன் இரு தோள்களிலும் ராமனையும், லட்சுமணனையும் ஹனுமன் தூக்கிச் செல்வது போன்ற அபூர்வ சிற்பம். எங்களை அந்த ஹனுமந்தனை வலம் வரச் சொல்லி ஹனுமாரின் முன்னும்,பின்னும்(மார்பிலும், முதுகிலும்)கால்களை தொங்கவிட்டபடி அமர்ந்திருக்கும் ராம,லட்சுமணர்களின் பாதங்களை தரிசிக்க சொன்னதோடு, புகைப்படமும் எடுத்துக்கொள்ளச் சொன்னார். நன்றாக தரிசனம் செய்த நிறைவோடு வீடு திரும்பினோம்.


Thursday, March 20, 2025

இழந்த பொக்கிஷங்கள்

 இழந்த பொக்கிஷங்கள்


இதைப்பற்றி எழுத எத்தனையோ விஷயங்கள் உண்டு. நான் முக்கியமாக குறிப்பிட விரும்புவது கிணறு,  ஜட்கா வண்டி ,எனப்படும் குதிரை வண்டி மற்றும் மாட்டு வண்டி பயணங்களை.

அப்போதெல்லாம் தனி வீடுகள். பெரும்பாலும் எல்லா வீடுகளிலும்  கிணறு இருக்கும். அந்த கிணற்றில் நீர் இரைத்துதான் குளிக்க, குடிக்க, சமைக்க என்று எல்லாவற்றிர்க்கும் பயன் படுத்துவோம். கிணற்றுக்கு அருகில் நெல்லி மரம் இருந்தால் அந்த கிணற்று நீர் சுவையாக இருக்கும்.

கிணற்றடியில்தான் வீட்டு வேலை செய்பவர் பாத்திரங்களை துலக்குவார்.  கோடையிலும், வாடையிலும் குளிக்க இதமாக இருக்கும் கிணற்று நீரை இரைத்து குளிப்பது அலாதி சுகம்.

பாரதி ஆசைப்பட்டது போல எங்கள் வீட்டு கிணற்றுக்கு அருகில் தென்னை மரம் உண்டு, வளர்பிறை நாட்களில் நல்ல முத்துச் சுடர் போல நிலா ஒளி கிணற்று நீரில் பிரதிபலிக்கும்.

கிணறு இருந்தால் அதில் தவறுதலாக சாமான்கள் விழுவது சகஜம். அதை எடுப்பதற்கு பாதாள கரண்டி என்று ஒன்று உண்டு. அது யார் வீட்டில் இருக்கிறதோ அவர்களிடம் போய் கேட்டால் நம் வீட்டிலிருந்து ஒரு சாமானை வாங்கி வைத்துக் கொண்டுதான் பாதாள கரண்டியைத் தருவார்கள். அப்போதுதான் மறக்காமல் திருப்பித் தருவோமாம்.

இப்போது  வாஸ்துவிற்காக மீன் தொட்டி வைக்கச் சொல்கிறார்கள். அப்போது கிணறு அந்தப் பணியாற்றியது. இப்போது தனி வீடுகளில் கூட கிணறு இல்லை. பம்பு செட்தான். Gone are those days.

குதிரை வண்டி, மாட்டு வண்டி:



எழுபதுகளின் ஆரம்பம் வரையில் குதிரை வண்டிகள் இருந்தன. பழனியில் மட்டும் சமீப காலம் வரை குதிரை வண்டிகள் ஓடிக் கொண்டிருந்தன. 'குதிரை கிச்சா' கதையில் சுஜாதா எழுதியது போல குதிரை வண்டி ஸ்டாண்ட் எல்லா இடங்களிலும் ஒரே மாதிரிதான் இருக்கும். அந்த இடத்திற்கென்று பிரத்யேகமான வாசனை உண்டு. திருச்சி உறையூரில் நாங்கள் இருந்த பொழுது அழகிரி என்பவர்தான் எங்கள் ஆஸ்தான குதிரை வண்டிக்காரர்.


பிள்ளையார் சதுர்த்தி,தமிழ் வருடப் பிறப்பு நாட்களில் மாணிக்க விநாயகர் கோவிலுக்குச் செல்லவும், பாட்டியை குஜிலித் தெருவில் இருந்த டாக்டர் வீட்டிற்கு அழைத்துச் செல்லவும் அழகிரியின் குதிரை வண்டிதான். கூலி எட்டணாவோ, பத்தனாவோ. அதை வண்டிச் சத்தம் என்பார்கள். அது என்ன பாஷை?

சென்னையில் கூட 1974 வரை குதிரை வண்டிகள் இருந்ததாமே? இப்போது இருக்கும் டிராஃபிக்கில் குதிரை வண்டிகளும் இருந்தால் எப்படி இருக்கும்? கார்கள், ஆட்டோக்கள், டூ வீலர்களுக்கிடையே குதிரை வண்டி.. நினைத்துப் பாருங்கள். இத்தனை ஆட்டோ மொபைல்களை பார்த்து குதிரை மிரளலாம், அல்லது குதிரையைப் பார்த்து டூ வீலர் குமரி மிரளலாம். அவளுடைய போனி டெய்லை புல் என்று நினைத்து குதிரை இழுத்து விட்டால் முடிந்தது கதை. எனிவே போன ஜட்கா வண்டி திரும்ப வரப்போவதில்லை.

விடுமுறைக்கு கிராமத்திற்கு போகும் பொழுதெல்லாம் மாட்டு வண்டியில் நிறைய பயணித்திருக்கிறோம். எங்கள் வீட்டில் தஞ்சை மாவட்டத்திற்கே உரிய மோழை மாடுகள் என்னும் கொம்பில்லா மாடுகள் நிறைய உண்டு. வில் வண்டி, மொட்டை வண்டி எனப்படும் மேற் கூரையில்லாத வண்டி இரண்டுமே இருந்தன. அந்த மொட்டை வண்டியின் மீது வளைவான கூரையை பொறுத்தி விட்டால் அது கூண்டு வண்டியாகி விடும். நிறைய பேர் சாமான்களோடு பயணிக்கலாம். பெரும்பாலும் ஊருக்குத் திரும்ப ரயில் நிலையத்திற்கு வருவதற்கு கூண்டு வண்டிதான். அது உயரமாக ஏறுவதற்கு கஷ்டமாக இருக்கும் என்பதால் ஒரு நாற்காலியை போட்டு ஏறச் சொல்வார்கள். வைக்கோல் பரப்பி, அதன் மீது ஜமக்காளம் விரித்து மெத்தென்று உட்காரும்படி செய்திருப்பார்கள்.

என்ன இருந்தாலும் வில் வண்டியின் கெத்து வருமா? வில் வண்டி வைத்திருப்பதே ஒரு அந்தஸ்தான விஷயம். எங்கள் ஊரில் இரண்டு வீடுகளில்தான் வில் வண்டி இருந்தது. அதில் ஒன்று எங்கள் மாமா வீடு. எங்களுடைய இரண்டாவது மாமாவுக்கு மாடுகள், வண்டிகள் இவற்றில் அதிக ஈடுபாடு. மாடுகளையும், வண்டியையும் விதம் விதமாக அலங்கரிப்பார். வில் வண்டியில் உட்கார மெத்தை, தலை இடிக்காமல் இருக்க குஷன் எல்லாம் இருக்கும். அதில் கடைசியில் உட்கார்ந்து கொண்டு பாதுகாப்பு கம்பியை லாக் செய்து கொண்டு,காலை தொங்க போட்டுக் கொண்டு ஸ்டைலாக உட்கார்ந்து வர ரொம்ப ஆசை. ஆனால் அந்த வாய்ப்பு கிடைப்பது துர்லபம்.முன்பாரம், பின்பாரம் என்றெல்லாம் சொல்லி எங்களை(குழந்தைகளை) நடுவில் தள்ளி விட்டு விடுவார்கள். ஒரே ஒரு முறை வண்டி ஓட்டுனருக்கு அருகில் முன்னால் உட்காரும் சான்ஸ் கிடைத்தது. காலை தொங்கப் போட்டுக் கொண்டு உட்கார்ந்திருந்தேன். எங்கேயாவது மாடு சாணம் போட்டு பாவாடையை நாசமாக்கிவிடப் போகிறதே என்று பயமாக இருந்தது. அப்படிப்பட்ட பயத்திற்கெல்லாம் இப்போது இடமில்லை. கிராமங்களில் கூட எந்த வீட்டிலும் மாட்டு வண்டிகள் இல்லை. அதன் இடங்களை டிராக்டர்களும், கார்களும் பிடித்துக் கொண்டு விட்டன. மாடுகள் என்னவாயின?

Friday, March 14, 2025

நந்தீஸ்வரர் கோவில் நந்திவரம்(கூடுவாஞ்சேரி)

நந்தீஸ்வரர் கோவில் நந்திவரம்(கூடுவாஞ்சேரி)

சென்னையில்  ஒரு சிவன் கோவில் இருக்கிறது, நரம்பு, எலும்பு வியாதிகளுக்கு அங்கிருக்கும் சிவனை வழிபடுவது நல்லது என்று யாரோ எங்கள் கேரள விருந்தினருக்கு கூறினார்களாம், எனவே அந்த கோவிலுக்குச் செல்ல வேண்டும் என்று விரும்பினார். அவர் குறிப்பிடும் கோவில் கூடுவாஞ்சேரியில் நந்திவரம் என்ற இடத்தில்தான்  இருக்கிறது, நந்திவரம், நந்தீஸ்வரர் கோவில் என்று என் அக்கா பையன் கூறினார். ஆலயம் காப்போம் இயக்கத்தில் பெரும் பங்கு வகிக்கும் அவருக்கு கோவில் பற்றிய விவரங்கள் தெரியும். 

சென்னை-திருச்சி நெடுஞ்சாலையில் கூடுவாஞ்சேரியில் மெயின் ரோடிலிருந்து இடதுபுறம் நந்திவரம் என்று பெயர்ப்பலகை தென்படுகிறது, அந்தப் பாதையில் உள்ளே சென்றால், சிறிது தூரத்திலேயே நந்தீஸ்வரம் கோவிலை அடைந்து விடலாம்.

பல்லவர்கள் ஆட்சி காலத்தில் நந்திவர்மன் என்ற அரசன் பெயரால் 'நந்திவரம்' என்று அழைக்கப்பட்ட ஊர். வெகுகாலம் அப்படித்தான் அழைக்கப்பட்டதாம். கூடுவாஞ்சேரி இதன் பக்கத்து கிராமம். ஆனால் காலப்போக்கில் கூடுவாஞ்சேரியின் ஒரு பகுதியாக நந்திவரம் மாறிப் போனது இந்தப்பகுதி மக்களுக்கு ஒரு குறைதானாம். 

கோவிலுக்குள் செல்லலாம், மிகப்பெரிய கோவிலும் இல்லை, மிகச்சிறிய கோவில் என்றும் கூறிவிட முடியாது. சாதாரணமாக கிராமங்களில் இருக்கும் ஆலயங்கள் போல இருக்கிறது. சுத்தமாக பராமரிக்கப்படுகிறது.

கிழக்கு பார்த்த லிங்கத் திருமேனி, அம்பாள் தெற்கு பார்த்து எழுந்தருளியிருக்கிறாள். செளந்தர்யநாயகி என்னும் பெயருக்கேற்றார் போல் அழகாக நம் மனதை கவர்கிறாள். 

பிரகாரத்தில் ஸ்ரீனிவாச பெருமாள் தனி சன்னதி கொண்டருளுகிறார். பிரகாரத்தை சுற்றி வரும் பொழுது பின்பக்கம் ஸ்தல விருட்சமாக வில்வ மரம் உள்ளது. சூரிய பகவானுக்கு தனி சன்னதி. அந்த கோபுரத்தில் தேரில் சூரிய பகவானின் அழகான சிற்பம். சூரியனுடன் தேருக்கு ஒற்றைச் சக்கரம்தான் என்பார்கள், அதை அழகுற வடித்திருக்கிறார்கள். 


முன் பகுதியில் நாகலிங்க மரத்தடியில் ஒரு நந்தி இருக்கிறது. கோவில் திருப்பணிக்காக தோண்டிய பொழுது கிடைத்ததாம். நல்ல நிலையில் இருந்ததால் வெளியே வைத்து விட்டார்களாம். அதையும் வழிபடுகிறார்கள். அதற்கு பின்பக்க சுவரில் சித்தர்களின் ஓவியங்கள் வரையப்பட்டுள்ளன. நாகலிங்க மரத்தடியிலும், அதை ஒட்டி இருக்கும் சிமெண்ட் பெஞ்சிலும் சிலர் அமர்ந்து ஜபம், தியானம் செய்து கொண்டிருந்தார்கள். அந்தப்பக்கம் செல்லும் பொழுது அவசியம் சென்று தரிசியுங்கள். அர்ச்சகர் நன்றாக விளக்கங்கள் சொல்கிறார்.

கோவிலுக்கு எதிரே ஒரு ஏரி இருக்கிறது. ஊரப்பாக்கம் உட்பட இந்த பகுதிகளின் தண்ணீர் தேவைக்கு பயன் படுமாம். நம் முன்னோர்களின் நீர் மேலாண்மை வியக்க வைக்கிறது. சென்னை, பெங்களூர் போன்ற ஊர்களில் எத்தனை ஏரிகள்! இன்று எல்லாவற்றையும் தூர்த்து வீடுகள் கட்டிவிட்டு, தண்ணீர் இல்லை என்று நிலத்தடி நீரை உறிஞ்சுகிறோம்.  

தல வரலாறு(அர்ச்சகர் கூறியது):

இந்த ஊரில் மாடுகள் வைத்திருந்த ஒரு இடையர் அவருடைய ஒரு காராம்பசு, தினசரி ஒரு இடத்தில் பால் சொரிவதை கண்டு ஊர் பெரியவர்களிடம் சொல்கிறார். அவர்கள் அந்த இடத்தை தோண்ட, சிவலிங்கம் புலப்படுகிறது. அதை எடுத்து வழிபடுகிறார்கள். பின்னர் பல்லவ மன்னன் நந்திவர்மன் கோவில் கட்ட உதவி, நிவந்தங்களும் அளித்திருக்கிறார்.

ஒரு முறை மூலவரான சிவலிங்கம் பிளந்து அர்த்தநாரீஸ்வர கோலத்தில் காட்சி அளித்ததால், பின்னமான லிங்கத்தை வைக்கக்கூடாது என்னும் மரபை மீறி அதை இணைத்து மீண்டும் பிரதிஷ்டை செய்திருக்கிறார்கள். அதனால் திருமணத்தடை நீங்கவும்,ஸ குடும்ப ஒற்றுமைக்கும் வழிபடலாம்.


அப்பர் பெருமான் நந்திவரத்தை தாண்டிச் சென்ற பொழுது அவருக்கு, மூட்டு வலி இருந்ததால் ஊருக்குள் நடந்து வந்து சிவபெருமானை வணங்க முடியவில்லை, தொலைவில் இருந்தபடியே மனதால் சிவனை நினைத்து வணங்கினாராம். அதனால் இது வைப்புத்தலம் எனப்படுகிறது. அப்போது அவர் இந்த கோவிலுக்கு வந்து வணங்கும் பக்தர்களுக்கு எலும்பு, நரம்பு சம்பந்தமான நோயைகள் வரக்கூடாது என்று வேண்டிக் கொண்டாராம், அதனால் இங்கு வந்து வழிபடும் பக்தர்களின் எலும்பு மற்றும் நரம்பு சம்பந்தமான நோய்கள் தீரும் என்பது நம்பிக்கை.

அப்பர் பெருமானின் பாடல்:

 




Friday, March 7, 2025

சென்னை டைரி - 3

சென்னை டைரி - 3

சென்ற மாதம் என் அக்காவின் பேரனுக்கு பூணூல் என்பதற்காக சென்னைக்கு வந்தேன். அது முடிந்ததும் பெங்களூர் திரும்பி விடலாம் என்று நினைத்தேன். ஆனால் 17,18 தேதிகளில் மாதா அமிர்தானந்தமயி சென்னை விஜயம் என்பதால் பெங்களூர் திரும்புதலை ஒத்தி போட்டேன். 

அமிர்தானந்தமயி மடத்தில் இருக்கும் ஒரு பெண்மணி அம்மா எங்கெல்லாம் போகிறாரோ, அங்கெல்லாம் செல்வாராம். அதோடு மட்டுமல்லாமல் அந்தந்த ஊர்களில் இருக்கும் முக்கியமான கோவில்களுக்குச் செல்வாராம். அதுவும் பிராசீனமான கோவில்கள்தான் அவருடைய விருப்பம். இந்த முறை சென்னையில் இருக்கும் புராதனமான கோவில்களில் சிலவற்றை பார்க்க விரும்பினார். அவரை அந்த கோவில்களுக்கு அழைத்துச் செல்லும் பொறுப்பை என் பெரிய அக்காவின் பெண் ஏற்றுக் கொண்டாள். அவர்களோடு கைடு போல நானும் சென்றேன். 

முதலில் அவரை திருவேற்காட்டில் இருக்கும் வேதபுரீஸ்வரர் ஆலயத்திற்கு அழைத்துச் சென்றோம். அகத்தியருக்கு திருமண கோலத்தில் சிவ பெருமான் காட்சி தந்த இடம் என்பதால் லிங்கத் திருமேனிக்கு பின்னால் சிலா ரூபத்தில் சிவ பெருமானும், பார்வதி தேவியும் காட்சி அளிக்கிறார்கள். திருமணத் தடை நீக்கும் ஆலயம்.*

அங்கிருந்து திருவேற்காடு சென்று அம்மனை தரிசித்தோம். கோவிலில் நிறைய மாற்றங்கள். கருவறை என்னும் அமைப்பே இல்லை. நிறைய கும்பல் வருவதால் எல்லோரும் தரிசிக்க ஏதுவாக இருக்கலாம்,ஆனால் இதை ஆகம விதிகள் அனுமதிக்கிறதா என்று தெரியவில்லை.  

அங்கிருந்து மாங்காடு சென்றோம்.  கோவில் நடை அடைக்கும் நேரத்தை நெருங்கி கொண்டிருந்தாலும் நன்றாக தரிசனம் செய்ய முடிந்தது. கோவூரில் இருக்கும் மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலயம் நவகிரகங்களில் புதனுக்குரியது, கஜ பிருஷ்ட விமானம் போன்ற விஷயங்களை கேரள விருந்தினரிடம் சொல்லியிருந்ததால் அங்கு செல்ல விரும்பினார், ஆனால் நேரமில்லாமல் போய் விட்டது. 

அடுத்த நாள் சென்ற கோவில்கள் பற்றி அடுத்த பதிவில் பார்க்கலாம்.

*வேதபுரீஸ்வரர் கோவில் பற்றிய ஏற்கனவே என் வலைப்பூவில் பதிவாக எழுதியிருக்கிறேன் அதன் சுட்டி: https://thambattam.blogspot.com/2018/01/blog-post_29.html?m=1


   




Monday, February 24, 2025

செளதடுகா கணபதி

செளதடுகா கணபதி

ஜனவரி 25, 26 தேதிகளில் குக்கே சுப்ரமண்யா, தர்மஸ்தலா சென்று வரலாம் என்று முடிவு செய்து கிளம்பினோம். 

வீட்டில் செய்த தக்காளி தொக்கை பிரட்டில் தடவி காலை உணவிற்காக எடுத்துக் கொண்டோம். அதை காரிலேயே சாப்பிட்டோம். வழியில் MTRல் காபி மட்டும் குடித்து விட்டு பயணத்தை தொடர்ந்தோம். வழியெங்கும் மேற்கு தொடர்ச்சி மலையின் இயற்கை அழகை ரசித்தபடி சுகமான பயணம். 

எங்கள் பிரயாணத்தைப் பற்றி எங்கள் வீட்டில் வேலை செய்யும் லட்சுமியிடம் சொன்ன பொழுது, "குக்கே சுப்ரமண்யாவிற்கும், தர்மஸ்தலாவிற்கும் இடையில் ஒரு கணபதி கோவில் இருக்கிறது. அங்கு கணபதி கட்டிடம் ஏதும் இல்லாமல் வெட்ட வெளியில்தான் இருப்பார். மிகவும் சக்தி வாய்ந்தவர், அவரையும் தரிசனம் செய்துவி்ட்டு வாருங்கள்" என்றாள். ஆனால் அவளுக்கு அந்த இடத்தின் பெயர் சொல்லத் தெரியவில்லை. 

குக்கேயிலிருந்து தர்மஸ்தலா வந்து ஒரு ஹோட்டலில் தங்கியிருந்த பொழுது மாலையில் மத்யமர் சகோதரி உமா மூர்த்தி கைபேசியில் அழைத்தார். 

நாங்கள் தர்மஸ்தலாவில் தங்கியிருப்பதை சொன்னதும், " தர்மஸ்தலாவில் இருக்கிறீர்கள் என்றால் அங்கிருந்து செளதடுக்கா கணபதி கோவிலுக்கு அவசியம் செல்லுங்கள்" என்று கூறியதோடு, கோவில் பற்றிய விவரங்கள், செல்லும் வழி எல்லாவற்றையும் விவரமாக சொன்னார். எங்கள் பணிப்பெண் குறிப்பிட்டு, நாங்கள் செல்ல விரும்பிய கோவில் அதுதான். விநாயகரே உமா மூர்த்தி மூலம் விவரங்கள் சொல்லியிருக்கிறார் என்று தோன்றியது. 

தர்மஸ்தலா மஞ்சுநாதா ஸ்வாமி கோவிலில் எதிர்பார்த்ததை விட சீக்கிரமாக தரிசனம் கிடைத்தது. அங்கிருக்கும் அம்மனின் நாமம் கன்யாகுமரி என்பது ஆச்சர்யமாக இருந்தது. அம்மனுக்கு இருபுறமும் தர்ம தேவதைகளாம்.

மறுநாள் காலை செளதடுகா கணபதியை தரிசிக்கச் சென்றோம். ஒரு தோப்பில் வானமே கூறையாக அமர்ந்திருக்கிறார். கோவிலாக கட்ட முயன்ற பொழுதெல்லாம் கட்ட முடியாமல் தடை வந்ததால் அப்படியே விட்டு விட்டார்களாம். திருச்சி உறையூர் இருக்கும் வெக்காளி அம்மன் கோவில் நினைவுக்கு வந்தது. 





ஒரு மேடையில் விநாயகர் எழுந்தருளியிருக்கிறார். இரண்டு பக்கங்களிலும் கம்பி கட்டி விட்டிருக்கிறார்கள். அர்ச்சனை செய்பவர்கள் ஒரு பக்கம், தரிசனம் மட்டும் செய்பவர்கள் ஒரு பக்கம் விடுகிறார்கள். அந்த கம்பிகளில் வெவ்வேறு அளவுகளில் மணிகள் கட்டப்பட்டு அவை ஒலித்துக் கொண்டே இருக்கின்றன. 

இந்தக் கோவிலின் சிறப்பு இது. தங்கள் விருப்பங்கள் நிறைவேற வேண்டும் என்று நேர்ந்து கொள்ளும் பக்தர்கள், அவை நிறைவேறியதும் மணியை இந்த கோவிலில் கட்டுவார்களாம். அதற்காக பல்வேறு சைசில் மணிகள் இங்கிருக்கும் கடைகளில் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன. 

இந்தக் கோவிலின் மற்றுமொரு சிறப்பு அங்கு பிரசாதமாக வழங்கப்படும் வெல்ல அவல். பெரிய பாத்திரத்தில் கொண்டு வைத்து நைவேத்தியம் செய்த பிறகு எல்லோருக்கும் ஒரு பையில் அள்ளி,அள்ளி போட்டுக் தருகிறார்கள். இந்த மாதிரி ஒரு வெல்ல அவல் வேறு எங்கேயும் சுவைக்க கிடைக்காது. நாம் வீடுகளில் வெல்ல அவல் போல பிசுக்கென்று கையில் ஒட்டாமல், வேற லெவல் டேஸ்ட்!

இங்கு வெள்ளரிக்காயும் விசேஷமான நைவேத்தியமாம். இங்கிருக்கும் விவசாயிகள் தங்கள் கொல்லைகளில் விளையும் வெள்ளரிக் காய்களை இந்த விநாயகருக்கு படைப்பார்களாம். 

எதிரிகளால் அழிக்கப்பட்ட கோவிலில் இருந்த விநாயகர் விக்கிரகத்தை இடையர்கள் எடுத்துச் சென்று, வெள்ளரிக்காய்கள் விளையும் வயல்காட்டின் நடுவில் இருந்த புல்வெளியில் பிரதிஷ்டை செய்து வழிபட்டிருக்கிறார்கள். பின்னாளில் ஆலயம் கட்ட முயன்றபொழுது தடைகள், விநாயகரே சம்பந்தப்பட்டவர்கள் கனவில் தோன்றி தான் வெட்டவெளியில் இருப்பதையே விரும்புவதாக கூற அப்படியே விட்டு விட்டார்கள். கன்னடத்தில் 'செள' என்றால் வெள்ளரிக்காய் என்றும், 'தடுகா' என்றால் புல்வெளி என்றும் பொருளாம், அதனால்தான் இவர் செளதடுகா கணபதி. 

தர்மஸ்தலாவிலிருந்து குக்கே சுப்ரமண்யா செல்லும் வழியில் 16 கி.மீ. தொலைவில் உள்ளது. காரில் சென்றால் அரைமணிக்கும் குறைவான நேரம்தான் ஆகும். அந்தப்பக்கம் செல்வதாக இருந்தால் தவற விடாதீர்கள்.


Thursday, February 20, 2025

சென்னை டயரி - 2

சென்னை டயரி - 2

விருத்தாசலம் கொளஞ்சியப்பர் கோவிலில் இரண்டு வருடங்களுக்கு முன்பு ஒரு கோரிக்கைக்காக பிராது கட்டிவிட்டு வந்தேன். அந்த கோரிக்கை நிறைவேறியதால் அதை வாபஸ் வாங்கி, சுவாமிக்கு அர்ச்சனை செய்து விட்டு வர வேண்டும் என்பது முறை. அதற்காக13.2.25 வியாழனன்று  விருத்தாசலம் சென்றேன். 



என்னோடு என் பெரிய அக்காவின் பெண்ணும், கடைசி அக்காவும் வந்தார்கள். ஆறு மணிக்கு வீட்டை விட்டோம். வழியில் நல்ல மூடுபனி. சென்னை திருச்சி ஹைவேயில் Only Coffee உணவகத்தில் காலை சிற்றுண்டியை முடித்துக் கொண்டோம். அங்கு பொங்கலும், வடையும் நன்றாக இருக்கும், of course Coffee too.  சிற்றுண்டியைத் தவிர ஆர்கானிக் உணவுப் பொருட்கள், காட்டன் புடவைகள்,பெட் ஷீட்டுகள் போன்றவையும் விற்பனைக்கு இருக்கிறது. சாலையின் எதிர் புறத்தில் இதன் கிளை இருக்கிறது.


முதலில் விருத்தாசலம் பழமலைநாதர் (விருத்தகிரீஸ்வரர்) கோவிலுக்குச் சென்றோம். இங்குதான் சுந்தரர் பதிகம் பாடி பரவை நாச்சியாருக்காக பொன் பெற்று அதை இங்கிருக்கும் மணிமுத்தா நதியில் இட்டு, அதை திருவாரூரில் இருக்கும் குளத்தில் எடுத்துக் கொண்டார். அதை ஒட்டியே *'ஆற்றில் போட்டதை குளத்தில் தேடுவது' எனினும் பழமொழி வந்தது. 


அங்கிருக்கும் ஆழத்து விநாயகர் சன்னதி தனி கோவில் போல தனியாக கொடிமரத்தோடு இருக்கிறது. விநாயகருக்கான ஆறுபடை வீடுகளில் இதுவும் ஒன்று. அவரைத் தொழுது விருத்தகிரீஸ்வரர், பாலாம்பிகையையும் வணங்கி கொளஞ்சியப்பர் கோவிலுக்குச் சென்றோம். 


அங்கு நம் வேண்டுதல் நிறைவேறி விட்டால், பிராது வாபஸ் பெற வேண்டும். அதற்காக ரூ200/- கட்டினால் ஒரு form தருகிறார்கள். அதை கொளஞ்சி யப்பருக்கு முன்னால் வைத்து அர்ச்சனை செய்து, பின்னர் அந்த சீட்டை முனீஸ்வரர் சன்னதிக்கு முன் இருக்கும் பிராது கட்ட வேண்டிய மரத்தின் அடியில் கிழித்து போட்டுவிடச் சொல்கிறார்கள். நான் சென்ற முறை சென்றபோது அங்கிருக்கும் சுதை சிற்பங்கள் புதிதாக வண்ணம் தீட்டப்பட்டுஜொலித்தன, இப்போது அந்த வண்ணங்கள் உதிர்ந்து விட்டன. அதைப்போல சென்ற முறை சென்றபோது கப்பும் கிளையுமாக செழிப்பாக இருந்த மரத்தின் கிளைகளை கழித்து விட்டிருக்கிறார்கள். 


அங்கிருந்து பாண்டிச்சேரியில் இருக்கும் அரபிந்தோ,அன்னை அஸ்ரமம் மற்றும் மணக்குள சென்று வணங்கி விட்டு வீடு திரும்பினோம். வழியில் Only Coffee ல் மசாலா பால் அருந்தி விட்டு பயணத்தை தொடர்ந்தோம்.  வீடு வந்து சேரும் பொழுது இரவு 8:30.

*'ஆற்றில் போட்டதை குளத்தில் தேடுவது' என்னும் பழமொழிக்கான விளக்கம் குறித்த என்னுடைய யூ ட்யூப் லிங்க்

https://youtu.be/hkeTKz85fqA?si=NLysRULJro1g62e8