கணம்தோறும் பிறக்கிறேன் 

Thursday, January 6, 2022

படமா? காசா?

 படமா? காசா?

அசோக் நகர் ஆஞ்சநேயர்

ஒவ்வொரு வருடமும் ஹனும ஜெயந்தி அன்று சென்னை அசோக் நகரில் இருக்கும் ஆஞ்சநேயர் கோவிலில் நடைபெறும் லட்சார்ச்சனைக்கு கோவிலுக்கு மிக அருகில் வசிக்கும் என் சகோதரி எங்கள் குடும்ப உறுப்பினர்கள் எல்லோருக்கும் அர்ச்சனை டிக்கெட் வாங்கி அவரவருக்கு தோதான நேரத்திற்கு டோக்கனும் வாங்கி வைத்து விடுவாள். நாங்கள் போய் அர்ச்சனை செய்து விட்டு வருவோம்.  கோவிலில் பிரசாதமாக லட்டு, பூக்கள் தவிர ஒரு ஆஞ்சநேயர் படமும் தருவார்கள். அப்படி என்னிடம் மூன்று படங்கள் சேர்ந்து விட்டன. 

2017 ஆம் வருடம் என்று நினைக்கிறேன். கோவிலுக்கு கிளம்பும் பொழுது, "ஏற்கனவே நம்மிடம் மூன்று படங்கள் இருக்கின்றன, இந்த வருடம் வேறு ஒரு படத்தை கொடுத்தால் என்ன செய்வது? எத்தனை படங்களை வைத்துக் கொள்ள முடியும்?" என்று நினைத்தேன்.

கோவிலில் வழங்கப்பட்ட படங்களில் ஒன்று

அந்த வருடம் எங்கள் சகோதரிகள் எல்லோருக்கும் காலை பத்து மணி ஸ்லாட் டில் புக் பண்ணியிருக்கார் என் அக்கா. அர்ச்சனை முடித்து அவள் வீட்டில் மோர் குழம்பு, பீன்ஸ் பருப்பு உசிலி, சீரக ரசம் என்று சாப்பிட்டு விட்டு கோவிலில் கொடுத்த பையை பிரித்து பார்த்தேன். ஆஞ்சநேயர் படம் இல்லை. 'இந்த வருடம் படத்திற்கு பதிலாக ஆஞ்சநேயர் உருவம் பொறித்த வெள்ளி காசு கொடுத்திருக்கிறார்கள் என்றாள் என் சகோதரி. ஒரு சிறிய ஜிப் லாக் பையில் இருந்த அந்த வெள்ளி காசை "நல்ல வேளை, படம் கொடுக்கவில்லை" என்ற நினைப்போடு மீண்டும் பைக்குகள் வைத்தேன்.

வீட்டிற்கு வந்ததும், ஸ்வாமி அலமாரியில் வைப்பதற்காக பையில் கை விட்டால் வெள்ளி காசு இல்லை. பையை கவிழ்த்து பொறுமையாக ஒவ்வொன்றாக பிரித்துப் பார்த்தேன். ம்ஹும்! என் கைப்பையிலும் தேடினேன். இல்லை. என் சகோதரிக்கு ஃபோன் பண்ணி அவள் வீட்டில் இருக்கிறதா? என்று கேட்டேன். அங்கும் இல்லை என்று கூறி விட்டாள். 

"படமாக வந்தால் என்ன செய்வது என்று யோசித்தாயே..? வெள்ளிக் காசு என்றால் மட்டும் வரவேற்பாயா? உன் வீட்டிற்கு நான் ஏன் வர வேண்டும்?" என்று ஆஞ்சநேயர் அந்தர்த்யானமாகி விட்டாரோ? 

அதற்குப் பிறகு ஊர் மாற்றம், குடும்பத்தில் சில இழப்புகள், கொரோனா போன்ற காரணங்களால் ஹனும ஜெயந்தி விழாவில் கலந்து கொள்ள முடியவில்லை. இந்த வருடம் கனடா வந்து விட்டேன். பார்க்கலாம் அடுத்த வருடமாவது ஹனும ஜெயந்தி பூஜையில் கலந்து கொள்ள அசோக் நகர் ஆஞ்சநேயர் அருள் வேண்டும். 🙏🙏


Tuesday, January 4, 2022

திருவெம்பாவை - 20

திருவெம்பாவை - 20


போற்றி அருளுக நின் ஆதியாம் பாதமலர்
போற்றி அருளுக நின் அந்தமாம் செந்தளிர்கள்
போற்றி எல்லா உயிர்க்கும் தோற்றமாம் பொற்பாதம்
போற்றி எல்லா உயிர்க்கும் போகமாம் பூங்கழல்கள்
போற்றி எல்லா உயிர்க்கும் ஈறாம்
இணையடிகள்
போற்றி மால் நான்முகனும் காணாத புண்டரீகம்
போற்றி யாம் உய்ய ஆட்கொண்டருளும் பொன்மலர்கள்
போற்றி யாம் மார்கழி நீராடேலோர் எம்பாவாய்.

பாவை நோன்பை முடிக்கும் பெண்கள் சிவபெருமானை போற்றி வணங்குவதாக அமைந்திருக்கிறது திருவெம்பாவையின் கடைசி பாடல்.

அனைத்திற்கும் மூலமான மலர்ப் பாதங்களை போற்றுகிறோம்.
அனைத்திற்கும் முடிவான செம்மை பொருந்திய தளிர் பாதங்களை போற்றுகிறோம்.
எல்லா உயிர்களின் எதிலிருந்து தோன்றுமோ அந்த பொற் பாதங்களை  போற்றுகிறோம்.
இவ்வுலகில் உள்ள உயிர்களும் அனுபவிக்கும் போகங்களாக விளங்கும் கழலணிந்த மலர் பாதங்களை போற்றுகிறோம். எல்லா உயிர்களின் முடிவாக விளங்கும் பாதங்களை போற்றுகிறோம்.
திருமாலும், நான்முகனான பிரம்மனும் காண முடியாத தாமரைப் பாதங்களை போற்றுகிறோம்.
நாங்கள் உய்யும் பொருட்டு எங்களை ஆட்கொண்டு அருளும் பொற்பாதங்களை வணங்கி மார்கழி நீராடுகிறோம். 

இத்துடன் திருவெம்பாவை முற்றுப்பெறுகிறது. திருச்சிற்றம்பலம்.

Monday, January 3, 2022

திருவெம்பாவை - 19

திருவெம்பாவை - 19

உங்கையிற் பிள்ளை உனக்கே அடைக்கலமென்று
அங்கு அப்பழஞ் சொற் புதுக்குமெம் அச்சத்தால்
எங்கள் பெருமான் உனக்கொன்று உரைப்போம் கேள்
எம் கொங்கை நின் அன்பரல்லாதோர் தோள் சேரற்க
எம் கை உனக்கல்லாது எப்பணியும் செய்யற்க
கங்குல் பகலெங்கண் மற்றொன்றும் காணற்க
இங்கு இப்பரிசே எமக்கு எம்கோன் நல்குதியேல்
எங்கெழிலன் ஞாயிறு எமக்கேலோர் எம்பாவாய்.

பாவை நோன்பை நிறைவு செய்யும் பெண்கள் சிவ பெருமானிடம் தங்கள் கோரிக்கையை வைக்கிறார்கள். பெண்களுக்கு திருமணம் செய்து கொடுக்கும் பொழுது, அவள் கையை பிடித்து மாப்பிள்ளையாக வரும் ஆண் மகனிடம், "இனி இந்தப் பெண் உன்னுடைமை" என்று ஒப்படைப்பது காலம் காலமாக இருந்து வரும் பழக்கம்.  அதை நினைத்தாலே எங்களுக்கு அச்சமாக இருக்கிறது. எங்கள் பெருமானே உன்னிடம் நாங்கள் ஒன்று சொல்ல விரும்புகிறோம், கேட்பாயாக. நாங்கள் ஒரு சிவ பக்தனுக்கு மனைவியாகி அவனால் தழுவப் படுவதையே விரும்புகிறோம். எங்கள் கரங்கள் சிவத்தொண்டிலேயே ஈடுபட வேண்டும். இரவும், பகலும் எம் கண்கள் உன்னையே தரிசிக்க வேண்டும். இந்த பரிசை மட்டும் எங்களுக்கு நீ தந்து விட்டால் சூரியன் எந்த திசையில் உதித்தாலும் எங்களுக்கு கவலை இல்லை. 

பாவை நோன்பு நோர்ப்பது நல்ல மண வாழ்க்கை அமைய வேண்டும் என்பதற்காகத்தான். அதற்காக  யாரோ ஒருவனை மணந்து கொள்வதில் இந்த பெண்களுக்கு விருப்பமில்லை என்பதை 'உன்கையிற் பிள்ளை உனக்கே அடைக்கலம் எனும் அங்கு அப்பழஞ்சொற் புதுக்கும் எம் அச்சத்தால்' என்னும் வரிகளும், இறைத்தொண்டு வாய்த்து விட்டால் வேறு எதுவும் பொருட்டில்லை என்பதை இறுதி வரிகளும் தெளிவு படுத்துகின்றன. திருவெம்பாவையின் மகுடமாக விளங்கும் பாடல் இது.


Sunday, January 2, 2022

திருவெம்பாவை - 18

திருவெம்பாவை - 18


அண்ணாமலையான் அடிக்கமலம் சென்றிறைஞ்சும்
விண்ணோர் முடியின் மணித்தொகை வீறற்றாற் போல்
கண்ணார் இரவி கதிர் வந்து கார் கரப்பத்
தண்ணார் ஒளி மழுங்கித் தாரகைகள் தாமகல
பெண்ணாகி ஆணாய் அலியாய் பிறங்கொளிசேர்
விண்ணாகி மண்ணாகி
இத்தனையும் வேறாகி
கண்ணா ரமுதமாய் நின்றான் கழல்பாடி
பெண்ணே இப்பூம்புனல் பாய்ந்தாடலோர் எம்பாவாய்.

ஒளி வடிவான அண்ணாமலையாரின் பாதத்தில் விழுந்து துதிக்கும் தேவர்களின் கிரீடத்தில் பதிக்கப் பட்டிருக்கும் நவரத்தினங்கள் தங்கள் பிரகாசத்தை இழப்பதை போல, கதிரவன் உதித்து இருளை விரட்டியதால் நட்சத்திரங்கள் தங்கள் ஒளியை இழந்து மறைந்து விட்டன. பெண், ஆண், மூன்றாம் பாலினத்தார், ஒளி பொருந்திய விண், மண் மற்றும் பல் வேறு பொருள்களானவரும், நம் கண்ணிற்கு இனிமையானவருமாகிய அண்ணாமலையாரின் பாதகமலங்களை துதிக்க இந்த பூக்கள் பூத்திருக்கும் பொய்கையில் நீராடலாம் பெண்ணே.

Saturday, January 1, 2022

திருவெம்பாவை - 17

திருவெம்பாவை - 17


செங்கண் அவன்பால் திசைமுகன்பால் தேவர்கள்பால்
எங்கும் இலாதோர் இன்பம் நம்பாலதாக்
கொங்கு உண் கருங்குழலி நந்தம்மை கோதாட்டி
இங்கு நம் இல்லங்கள் தோறும் எழுந்தருளிச்
செங்கமலப் பொற்பாதம் தந்தருளும் சேவகனை
அங்கண் அரசை அடியோங்கட்கு ஆரமுதை
நங்கள் பெருமானைப் பாடி நலம் திகழ்ந்
பங்கயப் பூம்புனல் பாய்ந்தாடேலோர் எம்பாவாய்.

அழகான கண்களை உடைய திருமால் மீதும்,  திசைக்கு ஒரு முகம் வைத்துக் கொண்டிருக்கும் பிரம்மா மீதும், தேவர்கள் மீதும் கொண்டிருக்கும் அன்பை விட அதிகமாக நம் மீது அன்பு வைத்திருப்பவரும், நம் குற்றங்களை களைந்து நம்மை உயர்த்தும் பொருட்டு நம் மனமாகிய வீட்டில் எழுந்தருளி சிவந்த தாமரை மலர்கள் போன்ற தன் பாதங்களை காட்டி நமக்கு சேவை செய்பவரும், அழகான கண்களை உடைய அரசனும், அடியவர்களுக்கு அமுதம் போன்றவரும் நம்முடைய பெருமானுமாகிய சிவபெருமானை பணிந்து நலம் பெறும் பொருட்டு தாமரை மலர்கள் பூத்திருக்கும் அழகிய இந்த சுனையில் நீராடலாம் வாருங்கள்.

Friday, December 31, 2021

திருவெம்பாவை - 16

திருவெம்பாவை - 16

முன்னிக்கடலை சுருக்கி எழுந்துடையாள்
என்னத் திகழ்ந்து எம்மை ஆளுடையாள்
மின்னிப் பொலிந்து எம்பிராட்டி திருவடிமேல்
பொன்னம் சிலம்பின் சிலம்பித் திருப்புருவம்
என்னச் சிலை குலவி நந்தம்மை
ஆளுடையாள்
தன்னில் பிரிவிலா எம்கோமான் அன்பர்க்கு
முன்னியவள் நமக்கு முன்சுரக்கும் இன்னருளே
என்னப் பொழியாய் மழையேலோர் எம்பாவாய்

முன்னொரு பாடலில் பாவைப் பெண்கள் நீராடும் பொய்கை அவர்களுக்கு சிவபெருமானையும், பிராட்டியையும் நினைவு படுத்தியது போல இந்தப் பாடலில் மழை வருவதற்கான சூழல் அவர்களுக்கு பிராட்டியை நினைவு படுத்துகிறது.

கருநீலக்கடலை சுருங்கியது போல திரண்டிருக்கும் கார் மேகங்கள் பிராட்டியையும், மழை வரும் முன் பளிச்சிடும் மின்னல் அவளுடைய மெல்லிய இடையையும், இடியோசை அம்பிகை காலில் அணிந்திருக்கும் பொற்சிலம்பு எழுப்பும் இசையையும்,  வானில் தோன்றும் வானவில் வளைந்திருக்கும் அவளது புருவத்தையும், நினைவூட்டுவதாக கூறும் அப்பெண்கள் மழையிடம் ஒரு வேண்டுகோள் வைக்கிறார்கள். பெண்கள் பாவை நோன்பு நோர்ப்பது நல்ல கணவனை அடைந்து தங்கள் வாழ்க்கை செழிக்க வேண்டும் என்பதற்காகவும், நாட்டில் நல்ல மழை பொழிந்து சமுதாயம் செழிப்பதற்காகவும்தான். எனவே அந்த மழை எப்படி பொழிய வேண்டும் என்றால் தன் கணவனை பிரியாத பார்வதி பக்தர்களுக்கு அருள வேண்டும் என்னும் பொழுது அவருக்கு முன்னால் ஓடி வந்து அருளுவது போல எங்களுக்கு தேவையான நேரத்தில் காத்து நிற்கத் தேவையில்லாமல் பொழிய வேண்டும்.

Thursday, December 30, 2021

திருவெம்பாவை - 15

திருவெம்பாவை - 15


ஓரொரு கால் எம்பெருமான் என்றென்றே
நம்பெருமான் சீரொருகால் வாய் ஓவாள்
சித்தம் களிகூர நீரொருகால் ஓவா
நெடுந்தாரை கண்பனிப்ப பாரொருகால் வந்து
அணையாள் விண்ணோரைத் தான் பணியாள்
பேரரையற்கு இங்ஙனே பித்தொருவர் ஆமாறும்
ஆரொருவர் இவ்வண்ணம் ஆட்கொள்ளும் வித்தகர் தாள்
வார் உருவப் பூண்முலையீர் வாயார நாம்பாடி
ஏர் உருவப்பூம்புனல் பாய்ந்தாடலோர் எம்பாவாய்.

இந்தப் பாடல் குளத்தில் நீராடும் பெண்கள் தங்கள் தோழி ஒருத்தியின் பக்தியைப் பற்றி பேசுவதாக அமைந்திருக்கிறது. சாதாரணமாகவே எந்த ஒரு துறையிலும் முன்னேற விரும்புகிறவர்கள் அந்த துறையில் சிறப்பாக  விளங்குகிறவர்களின் செயல்பாடுகளை முன்மாதிரியாக கொள்வதுதானே வழக்கம்.

அழகிய ஆபரணங்கள் பூண்டிருக்கும் கொங்கைகளை உடைய பெண்களே, அதோ அங்கே வரும் நம் தோழி சிவபெருமானின் நினைவிலேயே வாழ்பவள். ஒரு முறை சிவனே என்பாள். மீண்டும் மீண்டும் பல முறைகள் எம்பெருமான் எம்பெருமான் என்றே மன மகிழ்ச்சியோடு கண்களில் நீர் வழிய உணர்ச்சி வசப்பட்டு பிச்சியைப் போல பிதற்றுவாள். இவ்வுலகை மறந்து பூமியில் கால் பாவாமல் பேரின்பப் பெருவெளியில் மிதப்பாள். அந்தப் பெண்ணை ஆட்கொண்டு இப்படிப்பட்ட நிலைக்கு ஆளாக்கிய வித்தகனாகிய சிவபெருமானின் திருவடிகளை நாமும் பாடி அழகான இந்தப் பொய்கையில் நீராடலாம் வாருங்கள்.

Tuesday, December 28, 2021

திருவெம்பாவை - 14

திருவெம்பாவை - 14

காதார் குழையாடப் பைம்பூண் கலனாடக்
கோதை குழலாட வண்டின் குழாம் ஆட
சீதப்புனலாடிச் சிற்றம்பலம் பாடி
வேதப் பொருள்பாடி அப்பொருளா மாபாடி
சோதி திறம்பாடி சூழ்கொன்றைத் தார்பாடி
ஆதி திறம்பாடி அந்தமா மாபாடி
பேதித்து நம்மை வளர்ந்தெடுத்த பெய்வளை தன்
பாதத் திறம்பாடி ஆடேலோர் எம்பாவாய்.

மற்றுமொரு அழகான பாடல். பாவை நோன்பு நோர்க்கும் பெண்களைப் பற்றிய வர்ணனை. அந்தப் பெண்கள் பொய்கையில் குடைந்து நீராடும் பொழுது அவர்கள் காதில் அணிந்திருக்கும் குழைகள் ஆடுகின்றன, உடலில் அணிந்திருக்கும் அணிகலன்கள் ஆடுகின்றன, கூந்தல் அசைகிறது, அதில் அவர்கள் சூடியிருக்கும் மலர்கள் அமைகின்றன, அந்த மலர்களை மொய்க்கும் வண்டுகளும் சுற்றிச் சுற்றி ஆடுகின்றன. இப்படி நீராடும் நாங்கள் வேதத்தின் பொருளாக விளங்கும் சிவபெருமானை துதித்து, உருவமற்ற சோதியாக உயர்ந்த அவர் நமக்காக ஒரு உருவத்தை எடுத்துக் கொண்டு கொன்றை மாலை அணிந்து காட்சியளிக்கிறாரே அவரின் திறத்தையும், நன்மை, தீமைகளை பிரித்து காட்டி நம்மை உயரச்செய்யும் உமையாளின் பாதகமலங்களையும் பாடி நீராடுகிறோம்.

திருவெம்பாவை - 13

திருவெம்பாவை - 13



பைங்குவளைக் கார் மலரால் செங்கமலப் பைம்போதால்
அங்கங் குருகினத்தாற் பின்னும் அரவத்தால்
தங்கள் மலங்கழுவு வார்வந்து சார்தலினால்
எங்கள் பிராட்டியும் எங்கோனும் போன்றிசைந்த
பொங்கு மடுவிற் புகப்பாய்ந்து பாய்ந்து
நம் சங்கஞ் சிலம்பச் சிலம்பு
கலர்ந்தார்ப்பக்
கொங்கைகள் பொங்கக் குடையும் புனல் பொங்கப்
பங்கயப் பூம்புனல் பாய்ந்தாடு ஏலோர் எம்பாவாய்.

பாவை நோன்பு மேற்கொள்ளேம் பெண்களுக்கு அவர்கள் நீராடும் குளத்தின் காட்சி சிவ பெருமானையும், பார்வதி தேவியையும் நினைவு படுத்துகிறது. 

அந்தக் குளத்தில் பூத்திருக்கும் கரு நிறம் கொண்ட குவளை மலர்கள் பார்வதி தேவியையும், சிவப்பு நிற தாமரை மலர்கள் சிவபெருமானையும், நீர் அருந்த வந்து வரிசையாக அமர்ந்திருக்கும் வெண்மை நிற குருகுப் பறவைகள் சிவ பெருமான் அணிந்திருக்கும் மாலையையும், குளத்தில் அங்கும் இங்கும் ஓடும் நீர்ப் பாம்புகள் சிவ பெருமான் அணிந்திருக்கும் நாகாபரணங்களையும், அந்த குளத்தில் நீராடி தங்கள் உடல் அழுக்குகளை கழுவிக் கொள்கிறவர்கள், சிவ நாமத்தை ஜபித்து தங்கள் ஆன்மாவை தூய்மை படுத்திக் கொள்ளும் அடியார்களையும் ஒத்திருப்பதாக தோன்றுகிறது. அப்படிப்பட்ட பொய்கையில் நம் கைகளில் அணிந்திருக்கும் சங்கு வளையல்கள் ஒலி எழுப்பவும் அதோடு சேர்ந்து பாதச் சலங்கைகள் ஒலிக்கும் வண்ணம் தாமரைகள் பூத்திருக்கும் குளத்தில் பாய்ந்து அதனால் அந்தப் பொய்கை அசைய, நம் கொள்கைகளும் அசைய நீராடுகிறோம்.

நம்மை அந்த குளக்கரைக்கு அழைத்துச் செல்லும் வண்ணம் மிக அழகான வர்ணனை. பொய்கையை‌ பார்க்கும் பொழுது சில பெருமானின் நினைவு வருகிறது என்பது பக்தியின் சிறப்பு. கோபிகைகளுக்கு பார்க்கும் அத்தனை பேரும் கண்ணனாக தெரிந்தார்கள் என்று பாகவதத்தில் படித்திருக்கிறோம். "மண்ணை இருந்து துழாவி வாமனன் மண் இது என்று சொல்லும், விண்ணைத் தொழுது அவன் மேவும் வைகுண்டம் என்று கை காட்டும்..." என்று ஆழ்வார் பாடவில்லையா? "பார்க்கும் மரங்கள் எல்லாம் நந்தலாலா நின்றன் பச்சை நிறம் தோன்றுதய்யே நந்தலாலா என்பது மஹாகவியின் வாக்கு.

Monday, December 27, 2021

திருவெம்பாவை -12

 திருவெம்பாவை -1




ஆர்த்த பிறவித்துயர் கெட நாம் ஆர்த்தாடும்

தீர்த்தன் நல் தில்லைச் சிற்றம்பலத்தே தீயாடும்
கூத்தன் இவ் வானும் குவலயமும் எல்லோமும்
காத்தும் படைத்தும் கரந்தும் விளையாடி
வார்த்தையும் பேசி வளைசிலம்ப வார் கலைகள்
ஆர்ப்ப அரவம் செய்ய அணிகுழல்மேல் வண்டார்ப்ப
பூத்திகழும் பொய்கை குடைந்துடையான் பொற்பாதம்
எத்தி இருஞ்சுனை நீராடேலோர் எம்பாவாய்

எங்கள் பிறவித் துன்பம் நீங்குவதற்காக நாங்கள் வணங்கும் சிவபெருமான் தலையில் கங்கையை கொண்டவராக கையிலே நெருப்பை ஏந்தி அந்தத் தில்லையிலே நடனமாடுகிறார். அவர் இந்த வான், மண் அதற்கு இடையில் உள்ள பொருள்கள் எல்லாவற்றையும் விளையாடுவது போல மிகவும் அனாயசமாக படைத்து, காத்து, அழிக்கவும் செய்கிறார். அவரை நாங்கள் புகழ்ந்து பேசியபடி எங்கள் கை வளையல்கள் ஒலிக்க இடையில் அணிந்திருக்கும் மேகலை சிணுங்க, தலையில் சூடி இருக்கும் வாசமுள்ள மலர்களை மொய்க்கும் வண்டுகள் ஒலி எழுப்ப இந்தப் பொய்கையில் நீராடி வணங்குகிறோம்.

Sunday, December 26, 2021

திருவெம்பாவை - 11

திருவெம்பாவை - 11


மொய்யார் தடம் பொய்கை புக்கு முகேர் என்னக்
கையால் குடைந்து குடைந்து உன் கழல்பாடி
ஐயா வழியடியோம் வாழ்ந்தோம் காண்
ஆரழல் போல் செய்யா!
வெண்ணீறு ஆடி! செல்வா!
சிறு மருங்குல் மையார் தடங்கண் மடந்தை மணவாளா!
ஐயா! நீ ஆட்கொண்டருளும் விளையாட்டில்
உய்வார்கள் உய்யும் வகையெல்லாம் உய்ந்தொழிந்தோம்
எய்யாமல் காப்பாய் எமையேலோர் எம்பாவாய்.

கொழுந்து விட்டு எரியும் நெருப்பு போல சிவந்த நிறம் கொண்டவரே, திருநீற்றிலேயே குளித்தது போல உடலெங்கும் வெண்ணீறு பூசிக் கொண்டிருப்பவரே, சிறுத்த இடையும், பெரிய கண்களும் கொண்ட பார்வதியின் மணாளனே,  வண்டுகள் மொய்க்கும் பொய்கையில் நீராடி, வழி வழியாக உன்னை வழிபடுவதால் நாங்கள் நலமாக வாழ்கிறோம். பக்தர்களை ஆட்கொண்டு அருளும் உன் திருவிளையியாடலுக்கு ஆட்பட்டதால் பல நன்மைகளை அடைந்தோம். இதிலிருந்து குறையாமல் எங்களை காப்பாயாக. 

Saturday, December 25, 2021

திருவெம்பாவை -10

 திருவெம்பாவை -10


பாதாளம் ஏழினும் கீழ் சொற்கழிவு பாதமலர்
போதார் புனைமுடியும் எல்லாப் பொருள்முடிவே
பேதை ஒருபால் திருமேனி ஒன்றல்லன்
வேதமுதல் விண்ணோரும் மண்ணும் துதித்தாலும்
ஓதஉலவா ஒரு தோழன் தொண்டர் உளன்
கோதில் குலத்தரன் தன் கோயிற்பிணாப் பிள்ளைகாள் 
ஏதவனூர் ஏதவன்பேர் ஆருற்றார் ஆரயலார்
ஏதவனைப் பாடும் பரிசேலோர் எம்பாவாய்.


சிவ பெருமானின் கோவிலை நாடி வந்திருக்கும் பெண் பிள்ளைகளே, சிவனின் பெருமையை எப்படி கூறுவது? அவருடைய திருவடியோ அதள, விதள, சுதள, தளாதள, ரசாதளா, மஹாதள, பாதாள என்னும் ஏழு உலகங்களுக்கும் கீழே உள்ளது, திருமுடியோ எல்லா உலகங்களையும் தாண்டி உள்ளது. அதை விவரிக்க நம்மிடம் சொற்கள் இல்லை. பெண்ணை தன் இட பாகத்தில் கொண்ட அவரை விண்ணுலக தேவர்களும், மண்ணுலக மாந்தர்களும் பல விதமாக பாடினாலும் முழுமையாக விளக்க முடியாதவர். வேதங்களின் முதல் பொருள். இப்படியெல்லாம் இருந்தாலும் தொண்டர்களின் உள்ளத்தில் இருப்பவன். அவர்களுக்கு ஒரு தோழன். தனக்கென்று ஒரு ஊரோ, பெயரோ இல்லாதவன்(எண்ணற்ற பெயர்களை உடையவன், எல்லா இடங்களிலும் உறைபவன் என்பது மறைந்திருக்கும் பொருள்). அவனுக்கு வேண்டியவர்கள், வேண்டாதவர்கள் என்றும் கிடையாது.

Friday, December 24, 2021

திருவெம்பாவை - 9

 திருவெம்பாவை - 9


முன்னைப் பழம் பொருட்கும் முன்னைப் பழம்பொருளே

பின்னைப் புதுமைக்கும் பேர்த்தும் அப்பெற்றியனே
உன்னைப் பிரானாகப் பெற்ற உன் சீர் அடியோம்
உன்னடியார் தாள் பணிவோம் அங்கு அவர்க்கே பாங்காவோம்
அன்னவரே எம் கணவர் ஆவார்
அவர் உகந்து சொன்ன பரிசே தொழும்பாய் பணி செய்வோம்
இன்னவகையே எமக்கு எம் கோன் நல்குதியேல்
என்ன குறையும் இலோம் ஏலோர் எம்பாவாய்.

இப்போது எல்லா பெண்களும் சிவபெருமான் உறையும் கோவிலை அடைந்து விட்டார்கள். அங்கு இறைவனைப் பணிந்து தங்கள் கோரிக்கையை வைக்கிறார்கள்.

பாவை நோன்பு அனுஷ்டிப்பதின் நோக்கங்களுள் ஒன்று நல்ல கணவனை அடைவது. இந்த பெண்களைப் பொறுத்தவரை யார் நல்ல கணவன்? சிவனடியாராக இருப்பவன்தான். சிவபெருமான் மீது பக்தி கொண்ட ஒருவன்தான் தங்களுக்கு கணவனாக வர வேண்டும் என்று இந்தப் பாடலில் வேண்டுகிறார்கள். 

இந்த உலகில் மிகப் பழமையானது என்று ஒன்றை சொன்னால் அதைவிடப் பழமையானவனாகவும்,  புதுமை என்று வரும் பொருளை விட புதுமையானவனாகவும் விளங்குகிறான் நீ. உன்னைத் தலைவனாக பெற்ற சிறந்த அடியவர்களாகிய நாங்கள் உன்னையும் பணிவோம், உன் அடியவர்களையும் பணிவோம். அவர்களோடு இணங்கி இருப்போம். அந்த சிவனடியார்களில் ஒருவரே என் கணவராகி விட்டால் அவர் எந்த சிவத்தொண்டில் ஈடுபட்டாலும் நாங்கள் அவருக்கு பணி செய்வோம். இப்படிப்பட்ட ஒரு பரிசை எங்களுக்கு அளித்தால் எங்கள் வாழ்வில் ஏது குறை?

Thursday, December 23, 2021

திருவெம்பாவை - 8

திருவெம்பாவை - 8 


கோழிச் சிலம்பச் சிலம்பும் குருகு எங்கும்
ஏழில் இயம்ப இயம்பும் வெண்சங்கு எங்கும்
கேழில் பரஞ்சோதி கேழில் பரங்கருணை
கேழில் விழுப்பொருள்கள் பாடினோம் கேட்டிலையோ?
வாழி! ஈதென்ன உறக்கமோ வாய் திறவாய்?
ஆழியான் அன்புடைமை ஆமாறும் இவ்வாறோ?
ஊழி முதல்வனாய் நின்ற ஒருவனை
ஏழை பங்காளனையே பாடு ஏலோர் எம்பாவாய்.

பெண்ணே கோழி(சேவல்) கூவுவதும், குருகுப் பறவைகள் எழுப்பும் ஒலியும், கோவிலிலிருந்து வரும் மங்கள வாத்தியத்தின் நாதமும், சங்கொலியின் ஓசையும்,  ஒப்புமை அற்ற பரஞ்சோதியாகிய சில பெருமானின் ஒப்புயர்வற்ற கருணையையும், இணையற்ற சிறப்பையும் நாங்கள் பாடும் ஓசையும் கேட்கவில்லையா?அப்படி ஓர் உறக்கமா? உன்னிடமிருந்து சத்தமே இல்லையே? கடலளவு கருணை கொண்டவன் மீது உன் அன்பை வெளிப்படுத்தும் வழிகளுள் இதுவும் ஒன்றா? பிரளய காலத்திலும் அழியாமல் இருக்கும் ஒருவனும், பெண்ணை தன் இடது பாகத்தில் கொண்டவனுமாகிய அந்த சிவ பெருமானை பாடு.
மாணிக்கவாசகர் திருவெம்பாவை பாடல்களை 

திருவண்ணாமலையில்தான் பாடினார் என்பதற்கு இந்தப் பாடலில் வரும் 'ஏழைப்பங்காளனை' என்னும் வார்த்தை ஒரு சான்று என்பார்கள். ஏழைப்பங்காளன் என்பதை ஏந்திழை பங்காளன் அதாவது பெண்ணை தன் உடலின் ஒரு பங்காக கொண்டவன் என்று பொருள் கொள்ள வேண்டும். தவமியற்றிய பார்வதி தேவிக்கு தன் உடலின் இடது பாகத்தை அளித்து அர்தாதநாரீஸ்வரராக அவர் அருளுவது திருவண்ணாமலையில் தான்.

துயிலிடைப் பாடல்கள் என்னும் பாடல்கள் இந்த பாடலோடு முடிகின்றன. வெளியே நிற்கும் பெண்கள் உள்ளே உறங்கிக்  கொண்டிருக்கும் பெண்களை எழுப்புகிறார்கள் என்பது ஒரு உருவகம். 

வெளியே நிற்பவர்கள், உள்ளே உறங்கிக் கொண்டிருக்கும் பெண் எல்லாம் நாம்தான்.  அடிப்படையில் கடவுள் பக்தியும், ஆன்மீக நாட்டமும் கொண்டிருந்தாலும் நம் கர்ம வினை அதற்கு ஒத்துழைக்க மறுக்கின்றது. விழித்துக்கொண்ட புத்தி, உறங்கிக் கொண்டிருக்கும் புலன்களையும், மனதையும் எழுப்புவதாகக் கொள்ளலாம்.

Wednesday, December 22, 2021

திருவெம்பாவை - 7

 திருவெம்பாவை - 7

அன்னே யிவையுஞ் சிலவோ பல அமரர்
உன்னற் கரியான் ஒருவன் இருஞ்சீரான்
சின்னங்கள் கேட்பச் சிவனென்றே வாய் திறப்பாய்
தென்னாஎன் னாமுன்னந் தீசேர் மெழுகொப்பாய்
என்னானை என்னரையன் இன்னமுதென் றெல்லோமும்
சொன்னோங்கேள் வெவ்வேறாய் இன்னந் துயிலுதியோ
வன்னெஞ்சப் பேதையர் போல் வாளா கிடத்தியால்
என்னே துயிலின் பரிசேலோர் எம்பாவாய்.

பெண்ணே இப்படி எங்களை வாசலில் நிற்க வைத்திருக்கிறாயே என்று வெளிப்படையாக சொல்லாவிட்டாலும் இதுவும் உன் விளையாட்டுகளில் ஒன்றா என்று கேட்பதன் மூலம் அதைத்தான் உணர்த்துகிறார்கள் எனலாம். தொடர்ந்து அவர்கள்," பெண்ணே நீ எப்படிப்பட்டவள் தெரியுமா?  உருத்திராட்சம், விபூதி, திரிசூலம்,பிறைச்சந்திரன் போன்ற 
சிவபெருமானுக்குரிய அடையாளங்களைப் பார்த்தாலே சிவனே! சிவனே என்பாய், யாராவது தென்னாட்டுடைய சிவனே போற்றி என்று கூறுவதற்காக தென்னா.. என்று தொடங்கும் பொழுதே தீயிலிட்ட மெழுகு போல் உருகுவாய், சிவன்தான் என் தந்தை, அவரே என் அரசன், எனக்கு அமுதம் போன்றவன் என்றெல்லாம் கூறுவாய், அப்படிப்பட்ட, அமரர்களாலும் அறியப்பட முடியாத, பரம்பொருளாகிய ஒருவனும், பெருமைகள் கொண்டவனுமாகிய சிவபெருமானின் பெருமைகளை நாங்கள் பாடுவதைக் கேட்டும் கல் நெஞ்சம் கொண்டவளைப்போல நீ பேசாமல் படுத்துக் கொண்டிருக்கிறாய். இதுதான் தூக்கத்தின் சிறப்பு போலிருக்கிறது.

Tuesday, December 21, 2021

திருவெம்பாவை - 6

திருவெம்பாவை - 6

மானே நீ நென்னலை நாளை வந்து உங்களை
நானே எழுப்புவன் என்றலும் நாணாமே
போன திசை பகராய் இன்னம் புலர்ந்தின்றோ
வானே நிலனே பிறவே அறிவரியான்
தானே வந்து எம்மைத் தலையளித்து ஆட்கொண்டருளும்
வான்வார் கழல்பாடி வந்தோர்க்கு உன் வாய் திறவாய்
ஊனே உருகாய் உனக்கே உறும் எமக்கும்
ஏனோர்க்கும் தம் கோனைப் பாடேலோர் எம்பாவாய்


அடுத்த வீட்டிற்கு சென்றால் அந்த பெண்ணும் உறங்கிக் கொண்டுதான் இருக்கிறாள். மானே என்று அவளை மிக இனிமையாக அழைக்கும் தோழிகள்,"நேற்று நீ, நான் முதலில் வந்து உங்களை எல்லாம் எழுப்புவேன் என்றாய் அந்த வார்த்தை எங்கே போனது? அப்படி கூறிவிட்டு நாணமின்றி உறங்கிக் கொண்டிருகாகிறாய். உனக்கு இன்னும் பொழுது புலரவில்லையா? விண்ணகத்து தேவர்களும், மண்ணில் வசிக்கும் மாந்தர்களும், இந்த இரண்டு நிலைகளுக்கும் இடைப்பட்ட முனிவர்கள், ஞானிகள் போன்றவர்களாலும் முழுவதுமாக அறிந்து கொள்ள முடியாதவனும், நம்மை போன்ற பக்தர்களுக்கு தானே இறங்கி வந்து அருளுகிறவனுமாகிய அந்த சிவப் பரம்பொருளை போற்றி நாங்கள் பாடுவதை கேட்டும் வாய் திறவாமலும், ஊன் உருகாமலும் கிடப்பது உனக்கு மட்டுமே
சாத்தியம். எங்களுக்கு மட்டுமல்ல எல்லா உயிர்களுக்கும் அரசனாகிய சில பெருமானைப் போற்றிப் பாடலாம் வா".

Monday, December 20, 2021

திருவெம்பாவை பாடல் - 5

 திருவெம்பாவை  - 5




மாலறியா நான்முகனும் காணா மலையினை நாம்
போலறிவோம் என்றுள்ள பொக்கங்களே பேசும்
பாலூறு தேன்வாய்ப் படிறீ கடைதிறவாய்
ஞாலமே விண்ணே பிறவே அறிவறியான்
கோலமும் நம்மை ஆட்கொண்டருளிக் கோதாட்டும்
சீலமும் பாடிச் சிவனே
சிவனேயென்று
ஓலம் இடினும் உணராய் உணராய்காண்
ஏலக்குழலி பரிசேலோர் எம்பாவாய்

வாசனை பொருந்திய கூந்தலை உடைய பெண்ணே திருமாலும், நான்முகனும் காண முடியாத அண்ணாமலையார் எனக்கு மிகவும் நெருக்கமானவர் தெரியுமா? என்று பாலிலும், தேனிலும்‌ ஊறியது போன்ற இனிமையான வார்த்தைகளை பேசுவாயே? வந்து உன் வாசல் கதவுகளை திறப்பாயாக. இந்த உலகில் உள்ள மனிதர்களும், விண்ணுலகில் உள்ள தேவர்களும் அறிய முடியாதவரும் நம் குறைகளை மன்னித்து நமக்கு அருளுவதற்காக ஒரு வடிவம் எடுத்து வருபவருமாகிய சிவ பெருமானின் பெயர்களை சிவனே, சிவனே என்று நாங்கள் உரக்கப் பாடுவதை கேட்டும் நீ உறங்குகிறாயே இதுதான் உன் சிறப்பா?

Sunday, December 19, 2021

திருவெம்பாவை பாடல் 4

 


திருவெம்பாவை பாடல் 4


ஓண்ணித்தில நகையாய்
இன்னம் புலர்ந்தின்றோ
வண்ணக் கிளி மொழியார்
எல்லோரும் வந்தாரோ
எண்ணிக் கோண்டுள்ளவா
சொல்லுகோம் அவ்வளவும்
கண்ணைத் துயின்றவுமே
காலத்தை போக்காதே
விண்ணுக்கொரு மருந்தை
வேத விழுப் பொருளை
கண்ணுக்கினியானை பாடி
கசிந்துள்ளம் உள்நெக்கு 
நின்றுருக யாமாட்டம்
நீயே வந்து எண்ணிக் குறையில்
துயிலேலோர் எம்பாவாய்

முத்துப்பல் சிரிப்பை உடைய பெண்ணே உனக்கு இன்னும் பொழுது விடியவில்லையா? என்று வெளியே நிற்கும் தோழிகள் கேட்டதும் இன்னும் தயாராகாத வீட்டிற்குள் இருக்கும் பெண்ணிற்கு ரோஷம் வந்து விடுகிறது. 

"என்னை மட்டும் பெரிதாக குறைகூறுகிறீர்களே? மற்ற எல்லோரும் வந்து விட்டார்களா?"
என்று வினவுகிறாள்.
யார் யாரெல்லாம் வந்திருக்கிறோம் என்று கூற நாங்கள் தயார், ஆனால் அந்த நேரத்தில் நீ உறங்கி விடாதே
விண்ணுலக தேவர்களுக்கே மருந்தாக இருப்பவன், வேதத்தின் மேலான உட்பொருளானவன், நமக்காக ஒரு அழகான உருவம் கொண்டிருப்பவன், அப்படிப்பட்டவனை பாடி நாங்கள் நெக்குருகி நிற்கிறோம்,எனவே நீயே வந்து எத்தனை பேர்கள் வந்திருக்கிறோம் என்று எண்ணி, எண்ணிக்கை குறைந்தால் உறங்கிக் கொள்.




Saturday, December 18, 2021

திருவெம்பாவை - 3

திருவெம்பாவை - 3



முத்தன்ன வெண்நகையாய் முன்வந்து எதிர் எழுந்தென்
அத்தன் ஆனந்தன் அமுதனென்ற உள்ளுறித்
தித்திக்கப் பேசுவாய் வந்துன் கடை திறவாய்
பத்துடையீர் ஈசன் பழஅடியீர் பாங்குடையீர்
புத்தடியோம் புன்மை தீர்த்தாட் கொண்டாற் பொல்லாதே
எத்தோ நின் அன்புடமை எல்லோம் அறியோமே
சித்தம் அழகியார் பாடாரோ நம் சிவனை
இத்தனையும் வேண்டும் 
நமக்கேலோர் எம்பாவாய்.

இந்தப் பாடலும், வெளியே நிற்கும் தோழிகளுக்கும் உள்ளே உறங்கிக் கொண்டிருக்கும் பெண்ணிற்கும் இடையே நிகழும் ஒரு உரையாடலாகத்தான் அமைந்திருகாகிறது.

"முத்துப்போல் பளிச்சென்ற புன்னகை கொண்டிருக்கும் பெண்ணே! எங்களோடு பேசும் பொழுது சிவபெருமான்தான் என் தந்தை, என் சந்தோஷமே அவன்தான், எனக்கு மரணமற்ற வாழ்வை அளிக்கவல்ல அமுதம் போன்றவன் என்றெல்லாம் நாவினிக்க பேசுவாய்.‌ உன் வீட்டு கதவைத் திறப்பாயாக". என்று கேலியாக கூறியதும்... 

உள்ளே இருப்பவளுக்கு நாணமும்,குற்ற உணர்ச்சியும் மேலிட, நல்ல பண்புகள் கொண்ட பெண்களே, நீங்கள் எல்லோரும் சிவபெருமான் மீது பற்று கொண்டவர்கள், நீண்ட நாட்களாக அவருடைய அடியவர்கள், நானோ புதியவள், உங்கள் நடைமுறைகளை எனக்கு சொல்லிக் கொடுத்து, என் குற்றங்களை மன்னித்தால் ஆகாதா? இதுதான் உங்கள் அன்பா? என்கிறாள்.
அவர்கள் விட்டு விடுவார்களா?

"அடியே, நீ சிவபெருமான் மீது கொண்டிருக்கும் பக்தி எங்களுக்குத் தெரியும்" என்றதும்
அவள் வாளாதிருப்பாளா?

"உள்ளம் தூய்மையாக இருப்பவர்கள் சிவனின் பெருமையை பேசுவதைத்தானே விரும்புவார்கள்? (இப்படி மற்றவர்களை குறை கூறுவார்களா? என்பது உட்கிடை)என்றதும், 

வெளியே நிற்கும் தோழிகளோ, "உன்னையும் சேர்த்துக் கொண்டதற்கு எங்களுக்கு இதுவும் வேண்டும், இன்னமும் வேண்டும்" என்பதாக இந்தப் பாடலை முடிக்கிறார்.

என்ன ஒரு அழகிய நாடகம் போன்ற படைப்பு!

Friday, December 17, 2021

திருவெம்பாவை பாடல் 2

திருவெம்பாவை பாடல் 2




பாசம் பரஞ்சோதிக்கென்பாய் இராப்பகல் நாம் 
பேசும் போதெப்போது இப்போதார் அமளிக்கே
நேசமும் வைத்தனையோ நேரிழையாய் நேரிழையீர்
சீசி இவையுஞ் சிலவோ விளையாடி
ஏசும் இடம் ஈதோ விண்ணோர்கள் ஏத்துதற்குக்
கூசும் மலர்ப்பாதம் தந்தருள வந்தருளும்
தேசன் சிவலோகன் தில்லைச் சிற்றம்பலத்துள்
ஈசனார்க்கு அன்பர் யாம் ஆரேலோர் எம்பாவாய்.

முதல் பாடலில் ஒரு பெண்ணை எழுப்பி அழைத்துக் கொண்டு வந்தவர்கள் அடுத்த பெண்ணின் வீட்டிற்கு வருகிறார்கள். அவளும் இன்னும் எழுந்திருக்கவில்லை. வாசலில் நிற்பவர்களுக்கு அலுப்பாக இருக்கிறது ஏனென்றால் இந்த பெண் எப்படிப்பட்டவள் என்றால், இரவும் பகலும் தோழிகளோடு பேசும் பொழுதெல்லாம் தனக்கு மிகவும் விருப்பமானவர் பரஞ்சோதியாகிய அந்த சிவபெருமான்தான் என்று கூறுகிறவள். ஆனால் இன்று இன்னும் எழுந்திருக்காமல் உறங்கிக் கொண்டிருப்பதை பார்த்து வெளியே நிற்கும் தோழிகள் சற்றே கேலியாக," அழகான ஆபரணங்களை அணிந்து கொண்டிருக்கும் பெண்ணே,எங்களிடம் சிவபெருமான்தான் என் பாசத்திற் குரியவர் என்று கூறினாய். ஆனால் உன் பாசம்  படுக்கையின் மீதுதான் என்று புரிந்து விட்டது"  என்றதும் உள்ளே இருப்பவளுக்கு கோபம் வந்து விடுகிறது. "நீங்களும்தான் அழகான ஆபரணங்களை அணிந்திருக்கிறீர்கள். என்னை கேலி செய்து ஏசும் நேரமா இது? நாம் எல்லோருமே தேவர்களுக்கு கூட காட்ட விரும்பாத தன்னுடைய திருவடியை பக்தர்களுக்கு காட்டி அருளக்கூடிய, தில்லையில் இருக்கும் ஈசனின் அன்பர்கள் தானே?" என்று சமாதானமாக பேசி சமாளிக்கிறாள். 




Thursday, December 16, 2021

திருவெம்பாவை - 1

 திருவெம்பாவை



ஆதியும் அந்தமும் இல்லா அரும்பெரும் சோதியை

யாம் பாடக் கேட்டேயும் வாள் தடங்கண்
மாதே வளருதியோ வன்செவியோ நின்செவிதான்
மாதேவன் வார்கழல்கள் வாழ்த்திய வாழ்த்தொலி போய்
வீதிவாய்க் கேட்டலுமே விம்மிவிம்மி மெய்ம்மறந்து
போதார் அமளியின் மேல் நின்றும் புரண்டு இங்ஙன்
ஏதேனும் ஆகான் கிடந்தாள் என்னே என்னே
ஈதே எந்தோழி பரிலோர் எம்பாவாய்

பாவை நோன்பு என்பது நாட்டில் நல்ல மழை பெய்து பயிர்கள் செழிக்கவும், நல்ல கணவனை அடைந்து தங்கள் வாழ்க்கை செழிக்கவும் பெண்கள் அனுசரிக்கும் நோன்பு.

மாணிக்கவாசகர் தன்னை ஒரு பெண்ணாக உருவகப்படுத்திக் கொண்டு நாயகன்,நாயகி பாவத்தில் திருவண்ணாமலையில் குடி கொண்டிருக்கும் அண்ணாமலையாரை துதித்து பாடியதுதான் திருவெம்பாவை பாடல்கள். இதில் முதல் ஒன்பது பாடல்கள் முதலில் எழுந்த பெண்கள், விடியற்காலையில் எழுந்து, பாவை நோன்பு நோற்பதற்கு வருவதாக கூறிவிட்டு, எழுந்திருக்காமல் உறங்கிக் கொண்டிருக்கும் பெண்களை எழுப்புவதாக அமைந்திருக்கும். 

முதல் பந்திலேயே சிக்ஸர் அடிப்பதை போல, முதல் பாடலின் முதல் வரியிலேயே யாரைக் குறித்து இந்த பாடல்கள் பாடப்பட்டன என்று தெளிவு படுத்தி விடுகிறார். 

ஆதியும் அந்தமும் இல்லா அருட்பெரும் சோதியாக எழுந்து, உயர்ந்து நின்றவன் அந்த அண்ணாமலையான் தானே? அப்படிப்பட்ட அந்த அண்ணாமலையானின் பெருமைகளை நாங்கள் பாடக் கேட்டும் பெரிய கண்களை உடைய பெண்ணே  நீ உறங்கிக் கொண்டிருக்கிறாயே? உன் செவிகள் என்ன இரும்பாலானவையா? 
வீதியில் யாராவது சிவபெருமானின் பெருமைகளை பேசிக்கொண்டு செல்வதை கேட்டாலே உணர்ச்சி வசப்பட்டு அழுவாயே? இப்போது நாங்கள் உன் வீட்டு வாசலில் வந்து சிவநாமத்தை சொல்கிறோம், நீயானால் எழுந்து வராமல் மெத்தையிலே புரண்டு கொண்டிருக்கிறாய். இதுதான் உன் சிறப்பா?
 

Tuesday, December 14, 2021

பார்ப்பது, கேட்பது, படிப்பது(தொடர்ச்சி)

பார்ப்பது, கேட்பது, படிப்பது(தொடர்ச்சி)



நான் இங்கே வருவதற்கு முன் என் மகன் இந்திரா நூயி எழுதிய மை லைஃப் இன் ஃபுல் என்ற புத்தகத்தை அமேசானில் வரவழைத்தான். ஊருக்கு வருவதற்கு முன் அதை படித்து விட வேண்டும் என்று நினைத்தேன், ஆனால் முடியவில்லை. இந்திரா நூயி பெப்ஸி கோவின் சிஇஓ வாக ஆவதோடு நிறுத்தி இருந்தேன். 

இங்கே வந்து லைப்ரரியில் தேடினால் வெயிட்டிங் லிஸ்ட் 93. ஒவ்வொருவரும் ஒரு புத்தகத்தை 14 நாட்கள் வைத்திருக்கலாம். அந்த கணக்கில் பார்த்தால் என் முறை வருவதற்கு வருடக்கணக்கில் ஆகிவிடும். ஆகவே நெட்டில் டவுன்லோட் செய்து படிக்க வேண்டும் அதற்கும் லைப்ரரியில் வசதி இருக்கிறது. ஆனால் அங்கேயும் இரண்டு வாரங்கள் காத்திருக்க வேண்டும். அதற்கு பிறகு தான் படித்து முடிக்க வேண்டும் படித்து முடித்த பிறகு அதை பற்றி சொல்கிறேன். 

இங்கிருக்கும் நூலகத்தில் தமிழ் புத்தகங்களும் பார்க்க முடிந்தது. அசோகமித்திரன், தி ஜானகிராமன், எஸ். ராமகிருஷ்ணன் போன்றவர்களின் புத்தகங்கள் இருந்தன இதுவரை எஸ்ராவின் கதை எதுவும் நான் படித்ததில்லை. எனவே அவர் எழுதிய 'நிமித்தம்' என்னும் புத்தகத்தை எடுத்து வந்தேன்.  

காதுகேளாத  ஒருவனின் அனுபவங்கள், சோகங்கள் கதையாக விரிந்திருக் கின்றன. "குளிக்கும் பொழுது தண்ணீர் கீழே விழும் சத்தம் கேட்காதா?" என்று ஒருவர் கேட்கிறார். அவனுக்கு கேட்காது. தண்ணீர் உடம்பில் படும் உணர்வுதான். காது கேட்காதவர்களின் இழப்புகளை துல்லியமாக புரிய வைத்த இடம் இது.  

தேவராஜ் என்னும் சிறுவன் குளிர் காய்ச்சலுக்கும் பிறகு தன் செவித்திறனை இழக்கிறான். இடது காது முற்றிலும் செயலிழக்க, வலது காது கொஞ்சமாக கேட்கும். இப்படிப்பட்ட ஒரு குழந்தைக்கு ஆதரவும், பரிவும் கிடைக்காததால் அவன் சந்திக்கும் அவமானங்களும் சோகங்களும் அவனை அலைக்கழிக்கின்றன. "செத்து தொலையாமல் இருந்து எங்களை தொல்லை செய்கிறாய்" என்று எப்போதும் அவனை கரித்துக் கொட்டும் மூர்க்கத்தனமான தந்தை, பள்ளியில் ஆசிரியர் பேசுவது புரியாமல் இவன் மதங்க மலங்க முழிக்கும் பொழுது, "செவிட்டு முண்டமே ஏன் இங்கே வந்து உயிரை வாங்குகிறாய்?" என்று புளியமர விளாரால் விளாசும் ஆசிரியரால் படிப்பை பாதியில் நிறுத்துகிறான். 

அவனுக்கு காது கேட்க வைப்பதற்காக அவன் தாய் எடுக்கும் முயற்சிகள் தோற்கின்றன. காது கேளாதோர் களுக்கான பள்ளியில் அவனை சேர்த்து விடுகிறாள். அங்கு அளவிற்கு அதிகமான மாணவர்கள் ஒரு சிறிய அறையில் ஒருவரோடு ஒருவர் இடித்துக் கொண்டு படுத்துக் கொண்டதில் ஒரு மாணவனுக்கிருந்த சரும நோய் இவனுக்கும் வந்துவிடுகிறது. அதை குணப்படுததிக்கொண்டு வா என்று வீட்டிற்கு அனுப்பி விடுகிறார்கள். வந்தவனுக்கு திரும்பிச் செல்ல பிடிக்கவில்லை.   தந்தையால் மூர்க்கமாக சிதைக்கப்படும் காதல், எந்த வேலையிலும் நிலைக்க முடியாமை என்று நூலறுந்த பட்டமாக அலைகிறது அவன் வாழ்வு. 

தேவராஜின் வாழ்க்கையில் தென்றலாய் இருப்பவர்கள் அவன்மீது அன்பாக இருக்கும் புஷ்பா டீச்சரும், ஓவியரான அவர் கணவரும், மற்றும் நண்பன் ராமசுப்பு மட்டுமே. இறுதியில் ராமசுப்பு வால் நிறந்தர வருமானத்திற்கு வழி பிறக்க, அவனுடைய 47 வயதில் கணவனை இழந்த ஒரு நர்ஸை மணந்து கொள்ள சம்மதிக்கிறான்.  திருமண சடங்குகள் ஒரு அபத்தமான நாடகமாக தோன்றுகிறது. முன்பை விட இப்போதுதான் வாழ்க்கையை நினைத்து பயமாக இருக்கிறது என்று முடிகிறது கதை.

கதையின் நீளம் அதிகம்.  காது கேட்காத ஒருவன் அனுபவிக்கும் துயரங்களை மட்டும் சொல்லி இருந்தால் அதற்கு ஒரு தீர்வும் சொல்லியிருந்தால் நன்றாக இருந்திருக்கும். சொல்ல வந்த விஷயம் நச்சென்று பதிந்திருக்கும்.  இந்த கதையில் அவன் சந்தித்த மனிதர்கள், அவர்களுடைய வாழ்க்கை என்று பிரிந்து போய் அவன் யார் யாரிடம் பழகினாலும் அவர்களை பற்றி எல்லாம் ஒவ்வொரு அத்தியாயம். அவர் திரட்டிய பல விஷயங்கள் அத்தனையையும் ஒரு நாவலில் கொட்டியிருக்கிறார். அதனால் மூலக்கரு சிதைந்து போகிறது. பாஸிட்டிவாக முடிக்காததும்,  செவித்திறன் அற்றவர்கள் எப்படி வாழ்க்கையை அமைத்துக் கொள்ள வேண்டும் என்ற வழிகாட்டுதல்கள் இல்லாததும் குறைகளாக எனக்குப்பட்டன. 




Monday, December 13, 2021

பார்ப்பது, கேட்பது, படிப்பது

பார்ப்பது, கேட்பது, படிப்பது 

இங்கு வந்ததிலிருந்து ஒரு நாளைக்கு ஒன்று என்ற ரேஞ்சில் நிறைய சினிமாக்கள் பார்க்கிறேன்.  தமிழ்தான் என்றில்லை, ஹிந்தி,  ஆங்கிலம்,  மலையாளம் எல்லாம்தான். அண்ணாத்த, அரன்மனை3 போன்ற படங்களை இதய நோயாளிகள் தவிர்ப்பது நலம். அந்த இரைச்சல் அவர்கள் உடம்பிற்கு ஆகாது. ரஜினிகாந்த் இனியும் தொடர்ந்து நடிக்கத்தான் வேண்டுமா?

இந்த படங்களை பார்த்த பொழுது இது தமிழ் சினிமாவின் இருண்ட காலமோ என்று தோன்றியது. நம்பிக்கையளிக்கும் விதம் வேறு சில படங்களும் வந்திருக்கின்றன.  

ஜெய் பீம் நன்றாகத்தான் இருந்தது. அந்தப் படத்தின் கான்ட்ரவர்சிகளை பலரும் எழுதி விட்டார்கள். ஜெய் பீமிற்கு ஒரு மாற்று போன்ற படம் 'ருத்ர தாண்டவம்'. நல்ல போலீஸ், வக்கீலாக வரும் ராதா ரவி,"இந்த நாட்டு மக்கள் அத்தனை பேருக்குமான அரசியல் அமைப்பு சட்டத்தை எழுதியவர் அம்பேத்கர். அவரை  ஒரு குறிப்பிட்ட இனத்திற்கு மட்டும் சொந்தக்காரர் என்பது போல சொல்கிறார்கள்" என்கிறார். ஒரு வேளை இதற்கு தியேட்டரில் கைதட்டல் கிடைத்திருக்கலாம்.

வெங்கட் பிரபுவின் மாநாடு ஒரு வித்தியாசமான முயற்சி. டைம் லூப் என்னும் கான்செப்ட் தமிழுக்கு புதுசு. இன்று,நேற்று,நாளை என்னும் படத்தில் டைம் மிஷின் கான்செப்ட்டிலும் இறந்தவர் மீண்டும் பிழைப்பது போல் வரும். இதில் மீண்டும் மீண்டும் வருவது, எஸ்.ஜெ. சூர்யா வார்த்தைகளில் "வந்தான், சுட்டான், செத்தான், ரிபீட்.." . இந்த கான்செப்ட் எத்தனை பேருக்கு புரியும் என்று தோன்றியது. ஒரு இடத்தில் கூட தேங்காத விறுவிறுப்பு படத்தின் பிளஸ் குறிப்பாக படத்தின் முதல் பாதி விறுவிறுவிறு.... 

ஒரு மாநிலத்தின் முதலமைச்சரை ஒரு மாநாட்டில் வைத்து கொலை செய்து அதை மதக் கலவரமாக மாற்ற நடக்கும் முயற்சி எப்படி முறியடிக்கப்படுகிறது என்பதுதான் கதை. இந்த சாதாரண கதையை டைம் லூப் என்னும் கான்செப்டை பயன்படுத்தி ஸ்வாரஸ்யமாக்கியிருப்பது இயக்குனரின் திறமை.   

இந்த படத்தின் கதாநாயகன் சிம்புவாக இருந்தாலும், எஸ்.ஜே.சூர்யா ஸ்டீல்ஸ் தி ஷோ. கொஞ்சம் ஓவர் ஆக்டிங் என்று தோன்றலாம், ஆனால் அப்படி நடித்தால்தான் அந்த காரெக்டர் நிற்கும். வில்லனாக ஒய்.ஜி.மகேந்திரன் சிறப்பாக செய்திருக்கிறார்.  சினிமா ஒரு கூட்டு முயற்சி என்பது இந்த படத்தில் நன்கு விளங்குகிறது. எடிட்டர், இசையமைப்பாளர், திரைக்கதாசிரியர் என்று அத்தனை பேரும் தங்கள் பங்களிப்பை சிறப்பாக செய்திருக்கிறார்கள். தவற விடக்கூடாத படம். 

இந்தப் படத்தின் கதாநாயகி கல்யாணி ப்ரியதர்ஷன். "இவள் 'வரனே அவஸ்யமுண்டு'  என்னும் மலையாள படத்தின் கதாநாயகியாச்சே? அதில் 
ஷோபனாவின் மகளாக நடித்திருக்கிறாள்"  என்று என் மகள் கூறியதும் ஷோபனா நடிப்பதை நிறுத்தி விட்டார் என்றல்லவா நினைத்தேன், பார்த்து விட வேண்டியதுதான் என்று அந்த மலையாள படத்தை பார்த்தேன். திருமண வயதில் பெண் இருக்கும் சிங்கிள் பேரண்டான ஷோபனாவுக்கும்,  கட்டுப்படுத்த முடியாத தன் கோபத்திற்கு மனோதத்துவ சிகிச்சை எடுத்துக் கொள்ளும்  எக்ஸ் சர்வீஸ் மேனான சுரேஷ் கோபிக்கும் இடையே மலரும் நட்பை அழகாக சொல்லியிருந்த படம். இப்படியெல்லாம் ஏன் தமிழில் படங்கள் எடுப்பதில்லை என்னும் தாபம் வருகிறது. ஆனால் மலையாள இளம் கதா நாயகர்களுக்கும் ஹீரோயிசம் காட்ட வேண்டும் என்ற ஆசை வந்து விட்டதோ என்று தோன்றுகிறது. 

நிவின் பாலி நடித்திருந்த ஒரு படம் சரியாக சென்றுகொண்டே இருந்தது, தீடீரென்று தமிழ்.தெலுங்கு படங்களைப் போல மாறி விட்டது. துல்கர் சல்மான் படத்தில்கூட அவர் ஒரே ஒரு குத்து விடுகிறார், பேருந்தின் கண்டக்டர் பேருந்தின் முன் கண்ணாடியை உடைத்துக் கொண்டு கீழே விழுகிறார். ஹூம்ம்! காதை செவிடாக்கும் ஜாரிங் இசை இல்லை என்பது மலையாளப் படங்களின் சிறப்பு.

படித்த புத்தகங்களை பற்றி அடுத்த பதிவில் பார்க்கலாம்.



Friday, December 10, 2021

காணொளி காணீர்.

இந்த பதிவில் இரண்டு காணொளிகளை பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். ஒன்று கப்பல் கவிழ்ந்தாலும் கன்னத்தில் கை வைக்காதே என்னும் பழமொழிக்கான விளக்கம்.  மற்றது என் மாமா மகன் நடித்திருக்கும் குறும்படம். 

https://www.youtube.com/watch?v=GzjQ9_wSdWQ&t=16s


மேற்கண்ட காணொளியில் நான் கன்னம் என்பது கடப்பாரை போல ஒரு ஆயுதம் என்று கூறியிருந்தேன். எங்கள் உறவினரான திருமதி.நிர்மலா கல்யாணராமன் அவர்கள் கன்னம் என்பது உறுதியான மூங்கில் கழி, அதன் கீழ் பாகத்தில் ரசாயன கலவைகள் கலந்த துணி கட்டப்பட்டிருக்கும். அந்தக் காலங்களில் வீடுகள் பெரும்பாலும் மண், சுண்ணாம்பு, காறை போன்ற கரையக் கூடிய பொருட்களால் தான் கட்டப்பட்டிருக்கும் என்பதால் ரசாயன கலவை கொண்ட கன்னத்தால் சுவரை சத்தமில்லாமல் கரைத்துவிட முடியும். என்னும் விளக்கத்தை அளித்திருந்தார்.

அடுத்து பிராயச்சித்தம் என்னும் குறும்படத்தை பார்த்து உங்கள் கருத்தை பகிருங்கள்.




https://www.youtube.com/watch?v=bpgvrRhmKFU




Monday, December 6, 2021

கிறிஸ்துமஸ் அலங்காரங்கள்

கிறிஸ்துமஸ் அலங்காரங்கள் 

ஒவ்வொரு ஊருக்கும் ஒரு அழகு உண்டு அந்த பிராந்தியத்திற்கு என்று விசேஷமான பண்டிகைகள் உண்டு. அது வரும் சமயத்தில் அந்த இடத்தின்  பொலிவு அதிகமாகிவிடும். பொங்கல் என்றால் கிராமங்களில்தான் அதன் அழகை பார்க்க முடியும் நாங்கள் திருச்சியில் இருந்த வரை  தீபாவளி கடைத் தெருவை பார்ப்பதற்கென்றே ஒருமுறை சின்ன கடை வீதி பெரிய கடை வீதி எல்லாம் சுற்றி விட்டு வருவோம்.  சென்னையிலும் விண்டோ ஷாப்பிங் செய்யவே டி.நகர் சென்றிருக்கிறோம். ஊரே ஜொலி ஜொலிக்கும்.  ஓமானில் ரமதான் வருகிறது என்றால் அந்த ஊரின் தோற்றமே மாறிவிடும். ஒரு ஃபெஸ்டிவல் மூடு வந்து விடும். கடைகள் எல்லாம் இரவு பதினொன்றரை திறந்திருக்கும். பூங்காக்களும் அப்படியே. நிறைய பேர் இரவு பூங்காக்களுக்கு குடும்பத்தோடு சென்று உணவருந்தி விட்டு மெல்ல வீடு திரும்புவார்கள். அதைப்போல இப்பொழுது இங்கு கனடாவில் கிறிஸ்துமஸ் நெருங்கிக் கொண்டிருப்பதால் ஊர் விளக்கு அலங்காரங்களால் ஜொலிக்கிறது. அதன் சில காட்சிகள் உங்கள் பார்வைக்கு



நாதன் பிலிப் ஸ்கொயர்(Nathan Phillips square) என்னும் இடத்தில் நிறுவப்பட்டிருக்கும் இந்த கிறிஸ்துமஸ் மரம்தான் டொரோண்டோவின் அதிகாரபூர்வ கிருஸ்துமஸ் மரம். 58 அடி  உயரமும்,, 300,000 விளக்குகளும், 500 அலங்கார அமைப்புகளும் கொண்டிருக்கிறது. இந்த மரம் நிறுவப்பட்ட பிறகுதான் மற்ற இடங்களில் கிருஸ்துமஸ் மரங்கள் நிறுவப்படுமாம். 








உறைந்திருக்கும் பனியில் ஸ்கேட்டிங் விளையாடுபவர்கள் அவுட் ஆஃப் 
ஃபோகஸில் தெரிகிறார்களா? 

பனிக்கட்டி சிற்பங்கள் 


ஈடன் சென்டர் என்னும் வணிக வளாகத்தில் வைக்கப்பட்டிருந்த பெரிய கிருஸ்துமஸ் மரம்.