கணம்தோறும் பிறக்கிறேன் 

Saturday, May 20, 2023

ஒடிஷா யாத்திரை – 6

 ஒடிஷா யாத்திரை – 6

கோனார்க், லிங்கராஜ், பிமலாம்பாள் கோவில்கள்  




எங்கள் பயணத்தின் மூன்றாம் நாள், கடைசி நாளும் கூட என்பதால் காலை சிற்றுண்டி சாப்பிட வந்த பொழுதே அறையை காலி செய்து பெட்டிகளை கீழே கொண்டு வந்து விட்டோம். சிற்றுண்டியை சாப்பிட்டு விட்டு எல்லோரும் சொன்னபடி எட்டு மணிக்கெல்லாம் கிளம்பி விட்டோம். அங்கிருந்து கிளம்பி, ஒரு பெட்ரோல் பங்கில் வண்டிக்குத் தேவையான டீசலை நிரப்பிக்கொண்டு ஹைவேயில் விரைந்தது வண்டி. திடீரென்று வண்டியின் அடி பாகத்திலிருந்து ஏதோ சப்தம் வந்தது. டயர் பஞ்சராகியிருக்கும் என்று நினைத்தோம். வண்டியை ஓரம்கட்டி நிறுத்திவிட்டு, டிரைவர் இரங்க, வண்டியிலிருந்த சில ஆண்களும் இறங்கினார்கள். அவர்கள் சொன்ன தகவல் அதிர்ச்சி அளித்தது. டயர் எதுவும் பஞ்சராகவில்லை, டீசல் நிரப்பியிருந்த டீசல் டாங்கை தாங்கி பிடித்திருந்த க்லாம்பின் திருகாணி கழன்று விட்டதால், டீசல் டாங்க் கீழே விழுந்து டீசலை சிந்தியபடியே உருண்டிருக்கிறது. கிட்டத்தட்ட ½கி.மீ. உருண்ட டீசல் டாங்க் தீ பிடிக்காமல் இருந்தது இறையருள்தான். பஸ் கம்பெனிக்கு ஃபோன் பண்ணி வேறு ஒரு பேருந்து வரவழைத்தார்கள். இதில் ஒரு மணி நேரம் வீணானது. வெய்யிலுக்கு முன்னால் கோனார்க் சென்று விடலாம் என்று நினைத்தது நடக்கவில்லை. ஆனால் இங்கும் தலைக்கு குல்லா, செல்ஃபி ஸ்டிக் போன்றவை வாடகைக்கும், விலைக்கும் கிடைக்கின்றன.

 

மெயின் கேட்டிலிருந்து கோனார்க் சூரியன் கோவிலுக்கு செல்லும் வழியில் இரண்டு பக்கங்களிலும் பூங்கா, அழகான சிலைகள்.. ஆனால் அவற்றையெல்லாம் நிதானமாக ரசிக்கவோ, புகைப்படமெடுக்கவோ முடியவில்லை. ஏனென்றால் நல்ல கும்பல், கைடு வந்து விட்டார். எல்லோரும் சேர்ந்து வாருங்கள் என்றார்கள், உள்ளே செல்ல நுழைவு டிக்கெட் உண்டு. அதிலும் இரண்டு பேர் புகைப்படமெடுக்க சற்று நேரம் எடுத்துக் கொண்டதில் எங்களோடு உள்ளே வர முடியாமல் போய் விட்டது. பிறகு எங்கள் குழுவில் ஒருவரை தொடர்பு கொண்டு, டூர் ஆபரேட்டர் போய் அழைத்துக் கொண்டு வந்தார்.

 

சபா மண்டபம் 

சூரியன் கோவிலுக்கு முன்பு ஒரு மண்டபம் இருக்கிறது. அதை சபா மண்டபம் என்கிறார்கள். அந்த காலத்தில் தேவதாசிகள் எனப்பட்ட நடனமாதர்களின் நடனம் இங்குதான் நடைபெறுமாம். அதைத் தாண்டி பிரதானமான சூரியன் கோவில். பன்னிரெண்டு சக்கரங்கள் மற்றும் ஏழு குதிரைகள் பூட்டிய பிரும்மாண்டமான தேர் வடிவ கோவிலின் மத்தியில் உள்ளே சூரிய பகவான் திருவுரு இருக்குமாம். ஆனால் கோவிலுக்குள் நுழையும் வாசல்கள் போர்ச்சுகீசியர்களால் அடைக்கப்பட்டு விட்டதாம். காரணம் இந்தக் கோவில் தஞ்சை பெரிய கோவிலைப் போல  எந்த பூச்சு வேலை இல்லாமல் கற்கள் ஒன்றோடொன்று பொருத்திக் கொள்ளும்படி(inter-locking system) கட்டப்பட்டது. இடையில் இரும்புத் துண்டுகளும், கோபுரத்தின் மேலே 50 டன் எடையுள்ள காந்தமும் பொருத்தப் பட்டிருப்பதால் அந்த காந்தத்தின் ஆகர்ஷணத்தால் கோவில் சிதையாமல் காக்கப்படுகிறதாம். இந்த காந்த சக்தியால் கடலில் சென்ற கப்பல்கள் திசை தவறின. இதனால்தான் போர்ச்சுகீசியர்கள் இந்த கோவிலின் வெளிப்புரத்தை சிதைத்தார்களாம். ஆனால் கருவரைக்கு மேலே இருக்கும் பெரிய 50 டன் காந்தம் அப்புறப்படுத்த பட்டால் கோவில் இடிந்து விடும் என்பதால் அங்கு யாரும் நுழைய்க் கூடாது என்று வாயில்கள் அடைக்கப்பட்டதாம்.

 

கோவில் முழுவதும் கருப்பு நிற கிரானைட் கற்களாலும், சிவப்பு நிற பாறைகளாலும் கட்டப் பட்டிருக்கிறது. கோணம்+அர்க்கன் = கோனார்க் என்று பொருள் கூறுகிறார்கள். அர்க்கன் என்பது சூரியனின் மற்றொரு பெயர். சூரியனுக்கான இந்த கோவில் முழுக்க முழுக்க ஜியானெண்ட்ரி அடிப்படையில் அமைக்கப் பட்டுள்ளதால் இந்த பெயர். சூரியனின் சுழற்சி, அதன் விளைவான நேரம், வாரம், மாதம், அயணம் இவைகளை குறிக்கும் விதமாகத்தான் இங்கு சக்கரங்கள், அதில் இருக்கும் ஆரங்கள் எல்லாம் அமைக்கப்பட்டிருக்கின்றன.



 

தேரின் ஒவ்வொரு பக்கத்திலும் மனித வாழ்க்கை சம்பவங்களை விளக்கும் சிற்பங்கள். ஒரு பக்கத்தில் மனிதனின் வாழ்க்கையில் மூன்று பருவங்களான குழந்தைப் பருவம், இளமைப் பருவம், முதுமைப் பருவ  காலங்களில் அவர்கள் ஈடுபடும் செயல்கள் சிற்பங்களாக செதுக்கப்பட்டிருக்கின்றன. குழந்தை பருவ விளையாட்டுகளை குறிக்கும் சிற்பங்கள் கீழ் பகுதியிலும், இளமைப் பருவ (காம)கேளிக்கைகள் சிற்பங்கள் நடுப் பகுதியிலும், முதுமைப் பருவ இறை வழிபாடுகளை காட்டும் சிற்பங்கள் மேற் பகுதியிலும் செதுக்கப்பட்டுள்ளன. இவைகளில் இளமைப் பருவ கேளிக்கை சிற்பங்களே சுலபமாக பார்க்கக் கிடைக்கின்றன. இதற்கு அந்த கைட் கூறிய காரணம், கலிங்கப் போரில் நிறைய உயிரிழப்புகள். ஜனத்தொகை மிகவும் குறைந்து விட்டது. மக்களின் உணர்வைத் தூண்டி மக்கள் தொகையை அதிகரிப்பதற்காகவே இந்த சிற்பங்கள் இப்படி அமைக்கப்பட்டிருக்கின்றனவாம்.  

 



இன்னொரு பக்கம் பெண்களின் வாழ்க்கை முறை, அம்மியில் அரைப்பது, உரலில் இடிப்பது, துணி துவைப்பது போன்ற சிற்பங்கள் ஏன் மாமியார் மருமகள் சண்டை கூட சிற்பமாக.

 

கொனார்கிலிருந்து புவனேஷ்வர் செல்லும் வழியில் பிப்பிலி என்னும் கிராமத்தில் ஷாப்பிங் செய்வத்ற்காகவே ஒரு மணி நேரம் நிறுத்துவதாக இருந்தது. அங்கு வரிசையாக கடைகள், எல்லாவற்றிலும் ஒடிஷாவின் கைவினை பொருள்கள். ஆனால் காலையில் டீசல் டாங்க் கீழே விழுந்ததால் ஒரு மணி நேரம் வீணாகி விட்டது. எனவே இங்கு, 15 நிமிடம் மட்டுமே கொடுத்தார்கள். முடிந்த அளவு ஷாப்பிங் செய்து கொண்டோம். வழியில் மதிய உணவை முடித்துக் கொண்டு புவனேஷ்வரில் லிங்கராஜ் கோவிலுக்குச் சென்றோம்.

 

லிங்கராஜ் ஆலயம் 

லிங்கராஜ் கோவில் புவனேஷ்வரில் அமைந்திருக்கும் பழமையான கோவில். இங்கு இருக்கும் சிவலிங்கம் சுயம்பு லிங்கம் எங்கிறார்கள். அது மட்டுமில்லை, சிவனும்,விஷ்ணுவும் சேர்ந்த அம்சம் என்கிறார்கள். பூரியில் பிரசாதம் தயாரிக்க ஏழு பானைகளை ஒன்றின் மீது ஒன்றாக அடுக்கி சமைப்பது போல இங்கு ஐந்து பானைகளை ஒன்றின் மீது ஒன்றாக அடுக்கி சமைப்பார்களாம். அங்கு போலவே இங்கும் மேலே இருக்கும் பானையில் இருக்கும் உணவுதான் முதலில் வேகுமாம். கோவிலில் எக்கச்சக்க கும்பல். ஜெகன்னாதர் கோவிலைப் போலவே இங்கும் கும்பலில் நசுங்கி வெளியே வந்தோம்.



கேதார்நாத்,விமலாம்பாள் கோவில் 



அங்கிருந்து கேதார்நாத் கோவிலுக்குச் சென்றோம். அங்கு குடிகொண்டிருக்கும் அம்மன் விமலாம்பாள், அவர்கள் பிமலாம்பாள் என்கிறார்கள். அது ஒரு சக்தி பீடம். அம்மனின் சுண்டுவிரல் விழுந்த இடமாம். அம்மன் அழகாக சான்நித்தியதோடு விளங்குகிறாள். தரிசனம் செய்து கொண்டோம். வெய்யில், அலைச்சல், லிங்கராஜ் கோவிலின் தள்ளு முள்ளு, எல்லோரும் மிகவும் ஓய்ந்து விட்டோம்.

 

வழியில் ஒரு பாலாஜி கோவில் இருந்தது. தரிசனம் செய்யலாம் என்றால் அங்கு திரை போடப்பட்டிருந்தது. நடை திறக்க காத்திருந்தால் விமான நிலையம் செல்ல நேரமாகிவிடும் என்பதால் கிளம்பி விட்டோம். இரவு உணவை கையில் கொடுத்து விட்டார்கள். விமான நிலையத்தில் ரசகுல்லா வாங்கிக் கொண்டேன். விமானம் ½ மணி நேரம் தாமதம். வீடு செல்ல இரவு 12 மணி ஆகி விட்டது. அக்காவும், அவர் கணவரும் கவலையோடு காத்திருந்தார்கள்.

ஒடிஷா யாத்திரையில் கலந்து கொண்டவர்கள்:


 இந்த குழுவில் பல் டாக்டராக ஹைதராபாத்தில் பணியாற்றும் சேலத்தை சேர்ந்த ஒரு பெண்ணும், பெற்றோர்களோடு வந்திருந்த ஒரு இளைஞனையும் தவிர பெரும்பான்மையோர் 60+, சிலர் 50+. நான் தனியாக செல்லப் போகிறேன் என்றதும் கேட்ட எல்லோரும், “தனியாகவா?” என்றார்கள். ஆனால் அப்படி தனிமையாக உணரவில்லை. இந்த பயணத்திற்குப் பிறகு உறவினர்களோடு செல்வதை விட, இப்படி தெரியாதவர்களோடு செல்வதே மேல் என்று தோன்றியது. யாரும் யாரையும் காக்க வைக்காமல் நேரத்திற்கு ரெடியாகி விட்டோம். எல்லோருக்கும் ஒரு கமிட்மெண்ட் இருந்தது.


இங்கு வந்திருந்தவர்களில் குறிப்பிடத்தக்கவர் அருணாசலம் என்னும் தொழில் முனைவர். நல்ல கலகலப்பாக இருந்தார். அடுத்ததாக திருமதி சுவர்ணா ஜெகன்னாதனும் அவர் கணவர் ஜகன்னாதனும். ஜ்கன்நாதன் பொதுவுடைமை வங்கியில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். பணி ஓய்விற்குப் பிறகு நிறைய பயணிக்கிறார்களாம். அதைப் போல கிருத்திகா, சுரேஷ் தம்பதிகளும் நிறைய பயணம் செய்வார்களாம். அதிலும் இந்த யாத்ரிகா டிராவல்ஸ் மூலம்தான் உள் நாடு, வெளி நாடு சுற்றுலாக்கள் செல்வார்களாம். நிர்ப்பவர்களில் நடுவில் நீல நிறத்தில் கட்டம் போட்ட சட்டை  அணிந்தவரும், அவருக்கு அருகில் வெள்ளை நிற டி ஷர்ட் அணிந்தவரும் சகோதரர்கள். ஒருவருக்கு மனைவி இல்லை, இன்னொருவரின் மனைவி வெளியே எங்கேயும் வர மாட்டாராம், எனவே சகோதரர்கள் மட்டும் வந்திருந்தார்கள். மே மாதம் ஆஸ்திரேலியா செல்லப் போகிறார்களாம். ஹைதராபாத்தில் பணிபுரியும் பல் டாக்டர்தான் பேபி ஆஃப் த டீம். அவருடைய தாயாரோடு வந்திருந்தார். சேலத்திலிருந்து வந்திருந்த பவானி என்பவரின் பெண்ணும் இந்தப் பெண்ணும் ஒரே வகுப்பில் படித்தார்களாம். அதைப்போல என்னோடு அறையை பகிர்ந்து கொண்ட பத்மஜா என்பவருக்கு நம் ஆன்சிலாவைத் தெரியும் என்றார்(ஒரே வங்கி). எங்கள் இருவருக்கும் நன்றாக ஜெல் ஆகி விட்டது.

 

அவரவரை அறிமுகபடுத்திக் கொள்ளுங்கள் என்றபோது, நான்,”மத்யமரில் ஆக்டிவ் மெம்பர்” என்றேன், உடனே, சிவகாமி என்பவர், “மத்யமரில் இருக்கிறீர்களா? ராதை சாய்ராமைத் தெரியுமா?” என்றார். நான் உணர்சிவசப்பட்டு, “குஜராத்தில் இருக்கிறாரே, அவர்தானே?” என்றேன், “அது ராதா ஸ்ரீராமாக இருக்கும், இவள் பெங்களூரில் இருக்கிறாள், என் தங்கைதான்” என்றார். “நன்றாக ஓவியங்கள் வரைவாரே, அவர்தானே?” என்றதும் ஆமாம் என்று ஆமோதித்ததோடு என்னோடு புகைப்படம் எடுத்துக்கொண்டு தங்கைக்கு அனுப்பினார். அவரிடமிருந்து ராதையின் காண்டாக்ட் நம்பரை வாங்கிக் கொண்ட நான் தற்சமயம் ஃபோனில் பேசிக்கொண்டிருக்கிறேன், விரைவில் நேரில் சந்திப்பேன் என நினைக்கிறேன். சென்னையிலிருந்து வந்திருந்த ஒரு பெண்மணி, அவரது சகோதரி இருவரும் திருச்சி இந்திராகாந்தி கல்லூரியில் படித்தார்களாம். அங்கு பணி புரிந்த என் அத்தை பெண்ணை தெரியும் என்றார்கள். ஒரு நாள் இரவு உணவருந்தும் பொழுது சுரேஷ் என்பவர், மாயவரத்திர்கு அருகில் இருக்கும் பெரம்பூர்தான் எங்கள் பூர்வீகம்” என்றார், “அட! எங்கள் சம்பந்திக்கு அந்த ஊர்தான்” என்றேன். World is small, isn’t?

 

இவ்வளவும் சொல்லிவிட்டு, யாத்ரிகா டூர்ஸ் பற்றி சொல்லாமல் விடலாமா? எல்லா ஏற்பாடுகளையும் நன்றாக செய்து, நல்ல ஹோட்டலில் தங்க வைத்து, அருமையான, வயிற்றை பாதிக்காத சாப்பாடு போட்டு அழைத்துச் சென்ற யாத்ரிகா ட்ராவல்சுக்கு தாராளமாகா ஒரு ஜே போடலாம். சென்னை அண்ணாநகரிலிருந்து இயங்குகிறது இந்த நிறுவனம். இந்த பதிவுகளை தொடர்ந்து வாசித்து கருத்திட்ட அன்பர்களுக்கு நன்றி.  






Tuesday, May 9, 2023

பொன்னியின் செல்வன் -2

 பொன்னியின் செல்வன் -2



ஊர் உலகமே பார்த்து விட்ட பொ.செ.2 ஐ நான் பார்க்காவிட்டால் சாமி குத்தமாகிவிடாதா? அதற்குள் அதைப் பற்றி நெகடிவ் விமர்சனங்கள் வந்து விட்டன, இருந்தாலும் பார்க்க வேண்டும் என்று ஒரு எண்ணம். ரஞ்சனி நாராயணன் அவர்கள்,"நாம் சேர்ந்து போகலாமா?" என்று கேட்டதும் சரி என்று சொல்லி விட்டேன். இத்தனைக்கும் நான் இருப்பது ஒரு இடம், அவர் இருப்பது ஒரு இடம். இரண்டு பேரும் பார்த்துக் கொண்டதும் இல்லை என்பது ஸ்வாரஸ்யம்.  அது இருக்கட்டும், படத்துக்கு வரலாம்.

பொ.செ.1 வந்த பொழுது அது எப்படி இருக்குமோ? என்று சந்தேகம் இருந்தது, ஆனால் படம் பிடித்தது. இரண்டாம் பாகம் நிச்சயம் நன்றாக இருக்கும் என்ற நம்பிக்கையில் எதிர்பார்த்தேன்.. ஹூம்..!

படத்தின் முதல் பகுதியில் என்னை மிகவும் கவர்ந்தவர் கேமிராமேன் ரவிவர்மன். இந்த பகுதியில் அவர் கூட பெரிதாக கவரவில்லை. தோட்டாத்ரணி ஏமாற்றவில்லை. பிரமாதமான செட்டுகள், அருமையான லைட்டிங். விக்ரம் வெளுத்து வாங்கியிருக்கிறார். கதையில் ஆதித்த கரிகாலன் பாத்திரம் ஒரு ஃப்ரீக் என்பது போல படைக்கப்பட்டிருக்கும். ஆனால் படத்தில் அவனை வீரனாகவும், கெட்டிக்காரனாகவும் காட்டியிருக்கிறார். அந்த அளவிற்கு மற்ற கதாபாத்திரங்கள் சித்தரிக்கப்பட்டிருக்கிறதா என்றால், இல்லை என்பது சோகம். கதையில் ஆழ்வார்கடியான் வரும் பகுதிகள் நகைச்சுவையாக இருக்கும். ஆனால் அவன் சாதுர்யம் மிக்கவனாகத்தான் படைக்கப்பட்டிருப்பான். படத்திலோ அவன் கோமாளியாக்கப்பட்டு விட்டான். அவனுடைய பாஸான அனிருத்த பிரும்மராயர் எப்படிப்பட்ட ராஜ தந்திரி! இங்கே இரண்டு காட்சிகளில் வருகிறாரா? வந்தியத் தேவன் டம்மியாக்கப்பட்டு விட்டார். 

மந்தாகினியின் கதா பாத்திரம் மோசமாக சிதைக்கப்பட்டிருக்கிறது. மேக்கப்பை கலைத்த ஐஸ்வர்யாவின் தலையில் நரைத்த முடி விக்கை வைத்து ஒரே ஒரு காட்சியில் இங்கும் அங்கும் ஓடு என்று சொன்னது போல இருக்கிறது. கடைசியில் மதுராந்தகனுக்குப்பதிலாக முடிசூட்டப்பட வேண்டும் என்பதற்காகத்தான் சேந்தன் அமுதன் கதா பாத்திரமே, அப்படி செய்யப் போவதில்லை என்னும் பொழுது எதற்கு அந்தப் பாத்திரம்?  

திரிஷாவிடம் இருக்கும் இயல்பான கம்பீரம் குந்தவையின் பாத்திர படைப்பிற்கு உதவியிருக்கிறது. பார்திபேந்திர பல்லவனாக நடிக்கும் விக்ரம் பிரபு நந்தினியாக நடித்த ஐஸ்வர்யா ராயிடம் பேசும் காட்சி, நந்தினியின் மோக வலையில் வீழ்ந்து கிடக்கும் ஒருவன் பேசுவது போல இல்லாமல், அம்மா பிள்ளை பேசுவது போல இருக்கிறது. ஐஸ்வர்யாவை விட அவரது குரல் நன்றாக நடித்திருக்கிறது. பாராட்டுகள் தீபா வெங்கட்!  ஜெயம் ரவியின் தோற்றமும் நடிப்பும் நல்ல கம்பீரம்! 

அகனக பாடலைத் தவிர மற்ற பாடல்கள் படத்தோடு ஒட்டவில்லை. ரவிதாசன்&கோவிற்கு காட்டுவாசி போல ஏன் இப்படி ஒரு ஒப்பனை? குறையையே சொல்ல வேண்டி வருமே என்பதால் விமர்சனமே எழுத வேண்டாம் என்று நினைத்தேன். 

இந்த படத்தால் ஒரு நன்மை என்னவென்றால் இப்போது யூ டியூபில் எக்கச்சக்க சோழர் காலத்தைப் பற்றிய பதிவுகள். 



Monday, May 8, 2023

ஓடிஷா யாத்திரை - 5

 ஓடிஷா யாத்திரை - 5

ஸிலிகா ஏரி, பூரி சங்கர மடம், ப்ளூ ஃப்ளாக் பீச்:

சிலிகா பீச்சில் என்னோடு அறையை பகிர்ந்து கொண்டவர்

ஒரு வழியாக ஹோட்டல் அறைக்கு வந்து கொஞ்சம் ஓய்வெடுத்துக் கொண்டு சாப்பிடச் சென்றோம். சூப் தொடங்கி, ஐஸ் க்ரீம் வரையான சுவையான உணவு. என் அறைத் தோழி “கோவில் இரவு 11 வரை திறந்திருக்குமாம், மீண்டும் ஒரு முறை செல்லலாமா?” என்றார். எனக்கு தூங்கினால் போதும் என்றிருந்தது.

மறுநாள் காலை 7:30க்கு ப்ரேக்ஃபாஸ்ட் ரெடியாகிவிடும். ரெஸ்டாரெண்ட் வந்து விடுங்கள் என்றதால், குளித்து ரெடியாகி கீழே வந்தோம். ப்ரெட், பட்டர், ஜாம், சாண்ட்விச், கார்ன் ஃப்லெக்ஸ், சாக்கோ ஃப்லெக்ஸ், இட்லி, வடை, சட்னி, சாம்பார், ஆலு பரோடா, வாழைப்பழம், தர்பூசணி துண்டுகள். ஆரஞ்சு மற்றும் திராட்சை பழச்சாருகள், வேகவைத்த முட்டை, காபி, டீ என்று ப்ஃபே முறையில் ராஜபோக காலை உணவு. அதை முடித்துக் கொண்டு சிலிகா ஏரிக்கு கிளம்பினோம்.



சிலிகா ஏரி 1,100 சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் விரிந்திருக்கும் இந்தியாவின் மிகப்பெரிய ஏரி. அங்கு படகு சவாரி செய்யும் பொழுது  வித்தியாசமான பறவைகளை பார்க்கலாம். அதிர்ஷ்டம் இருந்தால் டால்ஃபின்களும் கண்ணில் படலாம் என்றார்கள். போகும் வழி எங்கும் மா, பலா,வாழை தோப்புகள், அதிகமாக பலா மரங்கள் அதிகம் கண்ணில் பட்டதால் தஞ்சை, மாயவரம், கும்பகோணம் பகுதியில் பயணம் செய்கிறோமொ என்று தோன்றியது. பூரியிலிருந்து சிலிகா ஏரி 70கி.மீ. தொலைவில் இருக்கிரது, பயண நேரம் கிட்டத்தட்ட 11/2 மணி நேரம். அந்த நேரத்தில் எல்லோரையும் தங்களை அறிமுகப்படுத்திக் கொள்ளச் சொன்னார். எல்லோரும் தங்களைப் பற்றிய விவரங்களை பகிர்ந்து கொண்டோம்.

சிலிகா எரியை அடைந்த பொழுது, அங்கிருக்கும் கடைகளில் பறவைகளுக்கு போடுவதற்கு உணவு  சிறிய பாக்கெட்டுகளில் விற்கிறார்கள். அதைத் தவிர படகில் செல்லும் பொழுது அணிந்து கொள்ள தொப்பி வாடகைக்கு கிடைக்கிறது. தொப்பி இல்லாதவர்கள் வாடகைக்கு எடுத்துக் கொண்டார்கள். எங்கள் குழுவினருக்கு மொத்தம் மூன்று படகுகள் தேவையாக இருந்தது. படகில் சென்ற பொழுது பறவைகளுக்கான உணவை நீரில் போட்டதும், அவற்றை சாப்பிட பறவைகள் கூட்டம் கூட்டமாக வந்து பரவசமூட்டின. டால்ஃபின் எதுவும் எங்கள் கண்களில் படவில்லை.

அங்கிருந்து அந்த ஏரி வங்காள விரிகுடாவில் கலக்கும் முகத்துவாரத்திற்கு அருகில் படகை நிறுத்திய அந்த படகோட்டி ஒரு பாத்திரத்தை எடுத்துக் கொண்டு வந்தான். சிப்பிகள் நிறைந்திருந்த அந்த பாத்திரத்திலிருந்து சிப்பிகளை எடுத்து தட்டி தட்டி உடைத்தான். சில சிப்பிகளுக்குள் முத்து இருப்பது தெரிந்தது. சில முத்துக்கள் வெண்மை நிறத்திலும், சில சிப்பிகளுக்குள் கருப்பு நிற முத்துக்களும் இருந்தன. வெண்மை நிற முத்துக்கள், ரூ.ஐநூறும், கருப்பு நிற முத்துக்கள் ரூ.ஆயிரமும் சொன்னான். நாங்களும் வாங்கினோம். முத்துக்கள் விற்பனையானபின் மண் கட்டி போல ஒன்றை(பவளப்பாறை?) கொண்டு வந்து அதை உடைத்து பவளங்களும், பளபளவென்று கற்களும்(அதை நவரத்தினம் என்றான்) எடுத்தான். அவைகளும் முறையே ரூ.ஆயிரதிற்கும், அயிரத்து ஐநூறுக்கும் விற்க்கப்பட்டன.

அங்கிருந்து அந்த ஏரி கடலில் கலக்கும் முகத்துவாரத்தை பார்க்கச் சென்றோம். நல்ல வெய்யிலில் கிட்டத்தட்ட ஒன்றரை கிலோ மீட்டர் மணலில் நடந்து சென்றோம். கடற்கரைக்குச் சென்றோமே தவிர முகத்துவாரம் எது என்று தெரியவில்லை.

பூரி சங்கர மடம் முகப்புத் தோற்றம்

பூரி சங்கர மடத்தில் இருக்கும் பழமையான கிணறு


ஆதி சங்கரர் உறங்கியதாக கூறப்படும் சலவைக்கல் படுக்கை

ஹோட்டலுக்கு திரும்பி, உணவு உண்டு விட்டு, கொஞ்சம் ஒய்வெடுத்துக் கொண்டு மாலை பூரி சங்கர மடம் சென்றோம். சங்கர மடம் என்பது அஜென்டாவில் இல்லாததால் விரும்பியவர்கள் தனித்தனி குழுவாக சென்றோம். செல்லும் வழியில் பூரியின் கடற்கரையைத் தாண்டித்தான் செல்ல வேண்டியிருந்தது. அது பப்ளிக் பீச். எங்களுக்கு பரிந்துரைக்கப்பட்டது ப்ளு ஃப்ளாக் பீச் என்ற தனியார் பீச். அதை பார்த்து விட்டு புடவை ஷாப்பிங்க் என்று நினைத்துக் கொண்டிருந்தோம்.


நாங்கள் சங்கர மடத்திற்கு ஒரு ஷேர் ஆட்டோவில் சென்று விட்டோம். அந்த தெரு குறுகலாக இருந்ததால் ஆட்டோ நிற்க முடியாது என்பதால் அனுப்பி விட்டோம். திரும்பும் பொழுது ஆட்டோ கிடைக்காமல் நடக்கத் தொடங்கினோம். எதிரே வந்த சில ஆட்டோக்களை நிறுத்தி, சந்திரபாகா பீச் போக வேண்டும் என்றதும், எல்லோரும் தலை தெறிக்க ஓடி விட்டார்கள். சந்திரபாகா பீச் என்பது பூரியிலிருந்து புவனேஷ்வர் செல்லும் வழியில் இருக்கிறது. மயிலாப்பூரிலிருந்து மெரீனா பீச் போக வேண்டும் என்பதற்கு பதிலாக கோவளம் பீச் போக வேண்டும் என்றால் எந்த ஆட்டோக்காரர் வருவார்?

தப்பாக சொல்கிறோமோ என்ற சந்தேகத்தில் எங்கள் ஐடனரியை செக் பண்ணிய ஒரு பெண் ப்ளூ ஃப்ளாக் பீச் என்று கூற அதன்பின் ஆட்டோ கிடைத்து ப்ளூ ஃப்ளாக் பீச் சென்றோம். அங்கு குளிக்க, நீந்த ஐம்பது ரூபாய் கட்டணம், இல்லாவிட்டால் இருபது ரூபாய் கட்டணம். நாங்கள் இருபது ரூபாய் டிக்கெட் எடுத்துக்கொண்டு சென்றோம். இந்தியாவின் சுத்தமான கடற்கரைகளுள் இதுவும் ஒன்றாம். கோல்டன் பீச் என்றழைக்கப்படும் இந்த கடற்கரை இந்தியாவின் பெருமைக்குரிய ப்ளூ ஃபளாக் சர்டிஃபிகேட் பெற்ற எட்டு கடற்கரைகளில் ஒன்றாம். நாங்கள் சென்றபொழுது இருட்டி விட்டது. கடல் உள்வாங்கியிருபது போல் தோன்றியது. கடலுக்குள் அதிக தூரம் செல்ல வேண்டாம் என்று அங்கிருந்த பணியாளர்கள் எச்சரித்தனர். சில புகைப்படங்கள் எடுத்துக் கொண்டு ஹோட்டலுக்குத் திரும்பினோம்.


சாப்பிடும் பொழுது, “நாளை காலை அறையை காலி செய்து கொண்டு சீக்கிரம் கீழே வந்து விடுங்கள். ப்ரேக்ஃபாஸ்ட் சாப்பிட்டு விட்டு இங்கிருந்து எட்டு மணிக்குள் கிளம்பினால்தான் வெய்யிலுக்கு முன் கொனார்க் செல்ல முடியும்” என்றார் கைட். அதைப்போலவே எல்லோரும் சீக்கிரம் ரெடியாகி காலை உணவை முடித்துக் கொண்டு, டாணென்று எட்டு மணிக்கெல்லாம் ரெடியாகி விட்டோம். ஆனாலும் எங்களால் வெய்யிலுக்கு முன்னால் கோனார்க் செல்ல முடியவில்லை. ஏன் தெரியுமா?

-தொடரும்

Wednesday, May 3, 2023

பூரி ஜகன்னாதர் தல வரலாறு

 பூரி ஜகன்னாதர் தல வரலாறு

 

சத்ய யுகத்தில் அவந்தி நகரத்தை ஆண்டு வந்த ஒரு அரசன் இந்திரத்துய்ம்னன். மஹாவிஷ்ணுவின் பக்தனான அவர் மஹாவிஷ்ணுவின் மூர்த்தம் ஒன்றை பிரதிஷ்டை செய்ய விரும்பினார். அந்த சமயத்தில் நீலகிரியில் மஹாவிஷ்ணுவின் நீலமாதவ விக்ரகம் பூஜிக்கப்பட்டு வந்தது என்பதை கேள்விப்பட்ட இந்திரதுய்ம்னன் அந்தச் சிலையை தேடி நாலா திசைகளிலும் ஆட்களை அனுப்புகிறார். எல்லோரும் வெறும் கையோடு திரும்புகிறார்கள்.


வித்யாபதி என்பவர் தேடிக் கொண்டே விஷ்வாவசி என்பவரின் வீட்டை அடைகிறார். அங்கு அவர் மகள் லலிதாவின் அழகால் கவரப்பட்டு அங்கேயே சில நாட்கள் தங்குகிறார். அங்கு விஷ்வாவசியின் நம்பிக்கைக்கு பாத்திரமாகி அவர் பூஜிக்கும் நீலமாதவன் விக்கிரகத்தை தரிசிக்கும் வாய்ப்பு கிடைக்கிறது. அவர் தன் நாட்டிற்குச் சென்று இந்திரதுய்ம்னனிடம் நீலமாதவன் விக்கிரகம் இருக்குமிடத்தை கூறுகிறார். உடனே இந்திரத்துய்ம்னன் நீல மாதவ விக்கிரகத்தை அடையும்பொருட்டு படை திரட்டிக் கொண்டு அவ்விடத்திற்கு வருகிறார், ஆனால் நீல மாதவன் விக்கிரகம் அங்கில்லை, அப்போது அவருக்கு, “பாங்கி நதிக்கருகில் உங்களுக்கு ஒரு மரக்கட்டை கிடைக்கும் அதை வைத்துக்கொண்டு விக்கிரகத்தை படைக்கவும்” என்று ஒரு அஸரீரி கேட்கிறது.

 

அதன்படியே அவருக்கு ஒரு மரக்கட்டை கிடைக்கிறது. அதைக்கொண்டு பலராமர், கிருஷ்ணர், சுபத்திரா தேவியின் மூர்த்தங்களை வடிவமைக்க சிற்பிகளை அழைக்கிறார். பலரும் மறுத்துவிட வயதில் மூத்த ஒரு சிற்பி தான் இருபத்தோரு நாட்களுக்குள் சிலைகளை வடித்துத் தருவதாக ஒப்புக்கொள்கிறார். அனால், தான் தனியாக ஒரு அறைக்குள் அமர்ந்து கொண்டு சிலைகளை வடிப்பதகவும், இருபத்தோரு நாட்களுக்குப் பிறகுதான் கதவை திறக்க வேண்டும் என்று நிபந்தனை விதிக்கிறார். அரசனும் அதற்க்கு ஒப்புக்கொண்டு அவரை மரக்கட்டையோடு ஒரு தனியறைக்குள் அனுப்புகிறான்.

 

நாட்கள் செல்லுகின்றன. அறைக்குள் வேலை நடக்கும் அறிகுறி எதுவும் தென்படவில்லை. இது அரசிக்கு சந்தேகத்தை கிளப்ப, அவள் தூண்டுதலின்படி அரசன் ஒரு நாள் திடீரென்று அறைக்கதவை திறக்கிறான், உள்ளே சிற்பி யாரும் இல்லை, முழுவதும் முற்றுப் பெறாத பலராமர், கிருஷ்ணர்,சுபத்திரா தேவியின் சிலைகள் மட்டுமே இருக்கின்றன. அரசன் திகைத்து நிற்கும் பொழுது, அந்த சிலைகளையே பிரதிஷ்டை செய்யும்படி அவருக்கு தெய்வ வாக்கு கிடைக்கிறது. அத்ற்குட்பட்டு ஒரு கோவிலை நிர்மாணித்து, அந்த சிலைகளை பிரதிஷ்டை செய்கிறார்.

 

ஆனால், புராண கதையில் குறிப்பிட பட்டிருக்கும் கோவில் அல்ல தற்போது இருப்பது. கி.பி.1200ல் அந்தப் பகுதியை ஆண்ட அனந்தவர்மன் என்னும் அரசர் இந்தக் கோவிலை நிர்மாணிக்கும் பணியை துவங்கியிருகிறார். அது அவருடைய பேரன் மஹாமனா நரபதி அனங்க பீம்தேவ் காலத்தில் முடிவடைந்ததாம். கங்கை முதல் கோதாவரி வரையுள்ள சாம்ராஜியத்தின் வரியை இதற்காக செலவழித்ததாக கூறப்படுகிறது.

 

மரத்தாலான இந்த விக்கிரகங்கள் பழுதடைந்தால் அதை மாற்றுவதை ஜெகன்னாத பகவானின் புதிய தோற்றம் என்கிறார்கள். எந்த வருடத்தில் ஆடி மாதத்தில் இரண்டு அமாவாசைகள் வருகிறதோ அந்த வருடம் சித்திரை மாத பௌர்ணமி அன்று வாசேலி தேவியிடம் புதிய விக்கிரகம் அமைக்க உத்தரவு கிடைக்க வணங்குகிறார்கள். புதிய விக்கிரக அமைப்பிற்காக எங்கே வேப்ப மரம் கிடைக்கும் என்று தெரிந்து கொள்வதற்காக மங்கலா மா என்னும் தேவியை வணங்குகிறார்கள். கனவில் தேவியின் கட்டளை கிடைக்கிறது. பிறகு கோவிலைச் சார்ந்தவர்கள் மூன்று குழுக்களாக பிரிந்து மரத்தை தேடி புறப்படுகிறார்கள்.

 

பலராமர் விக்கிரகம் செய்ய்ப்படும் வேப்ப மரம் வெண்மையாக இருக்க வேண்டும் என்பது நியதி. அந்த மரத்தில் சங்கு சின்னம் இருக்குமாம். ஐந்து கிளைகளை கொண்ட மரமாக இருக்குமாம்.

 

கிருஷ்ணர் விக்கிரகம் செய்யப் பயன்படும் கிளையில் சக்கரம் சின்னம் இருக்கும் என்றும், அதில் ஏழு கிளைகள் இருக்கும் என்றும் கூறப்படுகிறது.       

 

ஸ்ரீரெங்கம் போலவும், மதுரை மீனாட்சி போலவும் இங்கும் வருடம் முழுவதும் உற்சவங்கள் கொண்டாடப்படுவதோடு, ஜெகன்னாதருக்கு விதம் விதமான அலங்காரங்களும் செய்யப்படுகின்றன.

 

அங்கிருக்கும் அத்தனை சன்னதிகளுக்கும் செல்ல முடியவில்லை. தரிசனத்தை முடித்துக் கொண்டு திரும்பினோம். வழியெங்கும் பிரசாத கடைகள். திருப்பதி லட்டு, பழனி பஞ்சாமிர்தம் போல அந்த ஊரின் சிறப்பு பிரசாதம் காஜா எனப்படும் இனிப்பு. தெருவின் இரண்டு பக்கங்களிலும் கடைகளில் அடுக்கடுக்காக வைக்கப்பட்டிருக்கும் காஜா. அதைத்தவிர பெரிய உருளிகளில் கொதிதுக் கொண்டிருக்கும் ரச மலாய் மற்றும் ரசகுல்லா கடைகள். ரஸ்குல்லாவின் பிறப்பிடம் ஒடிஷாதனாம். இங்கிருந்துதான் கொல்கத்தா சென்றிருக்கிறதாம்.

 

கும்பலில் நசுங்கியதோடு, நடை வேறு.. எல்லோருக்கும் டீ குடித்தால் தேவலை என்றிருந்தது. தெருவோர கடையில் சர் சர்ரென்று ஆத்தி கொடுத்துக் கொண்டிருந்தார். அவரிடமே குடித்திருக்கலாம். ஒரு சின்ன ஜூஸ் கடையில் நுழைந்து காபி, டீ கிடைக்குமா? என்று கேட்டதற்கு அங்கிருந்த பெண் இல்லை என்று கூறி விட்டாள். நகர்ந்திருக்கலாம், முதலாளி போன்ற இளைஞன், “கொஞ்சம் வெய்ட் பண்ணுங்கள்” என்றதும், எங்களோடு வந்த ஒருவர் “இருபது டீ” என்று ஆர்டர் கொடுத்து எல்லோரையும் நிற்கச் சொன்னார். நாங்களும் நின்றோம், நின்றோம்.. உள்ளே நான்கு பேர்கள்தான் உட்கார முடியும். நேரம் ஓடிக் கொண்டிருந்தது. என்ன செய்கிறாள்? இதோ பால் டப்பாவை எடுத்து விட்டாள்.. ஐயையோ பால் பவுடர் டீயா? என்ற மைண்ட் வாய்ஸை அடக்கினேன். சும்மா நிற்கிறோமே என்று சாண்ட்விச்சும், ஃபிங்கர் சிப்சும் ஆர்டர் கொடுத்தார். சிலர் பக்கத்து கடையில் ரசமலாய் வாங்கி சாப்பிட்டார்கள். கடைசியில் டீ என்று ஒன்று வந்தது. அதில் சர்க்கரை இருந்தது, பால் இருந்தது, குங்குமப்பூ கூட போட்டிருந்தார்களாம். டீத்தூள்..?? அதை மட்டும் போட மறந்து விட்டார்கள்.

 

டீ குடித்துவிட்டு வாங்கித் தந்தவருக்கு ஒரு நன்றியை கூறிவிட்டு நாங்கள் நகர்ந்து விட்டோம். ஆர்டர் கொடுத்தவர் ஆயிரம் ரூபாயைக் கடைக்காரரிடம் கொடுத்து விட்டு, மிச்சம் கொடுக்கப் போகிறார் என்று எதிபார்த்திருக்க, அவன், “நீங்கள் இன்னும் இரண்டாயிரம் ரூபாய் தர வேண்டும்” என்று சொல்லியிருக்கிறார், ஏன் என்று கேட்டதற்கு, “ அந்த டீயில் குங்குமப்பூ போட்டிருக்கிறதே” என்றானாம். அவர் தொழிலதிபராக இருந்ததாலோ என்னவோ கேட்ட தொகையை கொடுத்து விட்டு வந்திருக்கிறார்.

- தொடரும்

Monday, May 1, 2023

ஆம் பன்னா

 ஆம் பன்னா

டில்லி, உ.பி. ஸ்பெஷலான மாங்காய் சர்பத். செய்முறை பார்க்கலாமா?

புளிப்பு மாங்காய் - 1

புதினா இலைகள் - சிறிதளவு.

சர்க்கரை அல்லது

வெல்ல சர்க்கரை - 1/2 கப்

உப்பு - 1 டீ ஸ்பூன்

சீரகம் - 1 டீ ஸ்பூன் 



*மாங்காயை அடுப்பில் சுட்டுக் கொள்ளவும். 

சுட்ட மாங்காயில் தோலை உரித்து விட்டு செதில் செதிலாக சீவிக் கொள்ளவும். 

பின்னர் அதில் சர்க்கரை, உப்பு, புதினா இலைகள் சேர்த்து மிக்ஸியில் கூழாக அரைத்துக் கொள்ளவும். 

அந்த கூழை ஒரு பாத்திரத்தில் ஊற்றி விட்டு அதில் வறுத்து பொடி செய்த சீரகப் பொடியை போட்டு கலந்து ஃபிரிட்ஜில் வைத்து விடவும்.

தேவையான பொழுது 1/4 டம்பளருக்கும் குறைவாக மாங்காய் கூழோடு குளிர்ந்த நீர் சேர்த்து கலந்தால் சுவையான ஆம் பன்னா வை அருந்தலாம்.



*சுட்ட வாசனை பிடிக்காதவர்கள் மாங்காயின் தோலை சீவி, செதில் செதிலாக நறுக்கி வேகவைத்து அரைத்துக் கொள்ளலாம்.





Tuesday, April 25, 2023

ஓடிஷா யாத்திரை - 3 பூரி ஜகன்னாதர்

ஓடிஷா யாத்திரை - 3

பூரி ஜகன்னாதர்



இந்துக்களுக்கு மிகவும் முக்கியமான கோவில்களில் பூரி ஜெகன்னாதர் ஆலயமும் ஒன்று. மஹாவிஷ்ணு வடக்கே பத்ரியில் பத்ரிநாராயணராகவும், தெற்கே ராமேஸ்வரத்தில் ஈஸ்வரனை வழிபடும் ராமனாகவும், மேற்கே துவாரகையில் கண்ணனாகவும், கிழக்கே பூரியில் ஜெகன்னாதராகவும் எழுந்தருளியிருக்கிறார். இந்த நான்கு தலங்களும் சார்தாம்(புண்ணிய தலங்கள்) என்று அழைக்கப்படுவதோடு ஹிந்துக்கள் கண்டிப்பாக செல்ல வேண்டிய கோவில்கள் என்றும் கருதப்படுகின்றன. இப்போது ஊடகங்களில் இதைப் பற்றியெல்லாம் நிரைய வருவதாலோ என்னவோ எப்போதும் கும்பல் அதிகம் இருக்கிறதாம்.

 

நாங்கள் சென்றபோதும் நல்ல கும்பல் இருந்தது. ஆனால் இது குறைச்சல் என்றார் கைட். நாங்கள் தங்கியிருந்த ஹோட்டலிலிருந்து கோவிலுக்கு ஷேர் ஆட்டோவில் சென்றோம். ஒரு ஆட்டோவில் எட்டு பேர் பயணிக்கலாம். கோவில் வரை ஆட்டோவை அனுமதிக்க மாட்டார்கள் என்பதால் சற்று தொலைவிலேயே இறக்கி விட்டு விட்டார்கள். நடக்கத் தொடங்கினோம். கோவிலுக்குள் செல்ஃபோன், காமிரா, தோலால் செய்யப்பட்ட பெல்ட், பர்ஸ் போன்றவைகளை அனுமதிக்க மாட்டார்கள் என்பதால் ஹோட்டல் அறையிலேயே வைத்துவிடச் சொன்னார்கள். என்னுடைய பர்ஸ் ரெக்சின்தான், இருந்தாலும் அறையில் வைத்து விட்டு தேவையான பணத்தை ஒரு பிளாஸ்டிக் பையில் எடுத்துக் கொண்டேன். முன்பே தெரிந்திருந்தால் வீட்டிலிருந்து ஒரு துணி பர்ஸ் அல்லது சுருக்குப்பை கொண்டு சென்றிருக்கலாம்.  செல்ஃபோன் கண்டிப்பாக வேண்டும் என்றால் கோவிலில் லாக்கர்கள் இருக்கும், வைக்கலாம் என்றார்கள். ஆனால் நமக்காக மற்றவர்கள் காத்திருக்க வேண்டும், எனவே அறையில் வைப்பதே உத்தமம் என்று எல்லோரும் அறையிலேயே வைத்துவிட்டோம்.

 

கோவிலை நெருங்கும் சமயம் கோவில் நடைமுறைகள் தெரிந்த ஒருவரை அறிமுகம் செய்து வைத்து அவர் சொல்வதை கேட்டு நடக்கச் சொன்னார் அந்த ஊர் கைட். அவருக்கு ஹிந்திதான் மாலும். அவரிடம் “ஹிந்தி தெரியாது போடா” என்றா சொல்ல முடியும்? நல்ல வேளை எங்கள் குழுவில் ஹிந்தி தெரிந்த ஒருவர் அவர் சொன்னதை எங்களுக்கு தமிழில் மொழி பெயர்த்தார்.

 


அவர் சொன்ன விவரங்கள்: “கோவிலுக்குள் செல்வதற்கு எந்தவிதமான கட்டணமும் கிடையாது. யாராவது உங்களை சுவாமியிடம் அழைத்துச் செல்கிறேன், காசு கொடுங்கள், என்று கேட்டாலோ, அன்னதானம் செய்யுங்கள் என்று காசு கேட்டாலோ கொடுக்க வேண்டாம்.  ஏதாவது காணிக்கை தர வேண்டும் என்று நினைத்தால் உண்டியலில் போடுங்கள் அல்லது அன்னதானம் செய்வதற்கான கவுண்டரில் பணம் கட்டுங்கள். பூரியில் அன்னதானம் செய்வது சிறப்பு. எல்லோரும் சேர்ந்து வாருங்கள். என்று கூறி விட்டு எங்களில் உயரமாக இருந்த ஜெகன்நாதன் என்பவரை முன்னால் போகச்சொன்னார். அவர் ஒரு துண்டை தலைக்கு மேல் சுழற்றியபடி செல்ல, அந்த ஜெகன்நாதரை தரிசிக்க இந்த ஜெகன்நாதனை பின்தொடர்ந்தோம். நாங்கள் சென்றது பின்வாசல் வழியாக.

 


பூரி ஜெகன்நாதர் ஆலயத்திற்குள் மொத்தம் பன்னிரெண்டு சன்னதிகள் இருக்கிறதாம். அவைகளை எல்லாம் நாங்கள் பார்க்கவில்லை. நேராக ஜெகன்நாதர் சன்னதி மட்டுமே. நாங்கள் சென்ற நேரம் அந்த ஆலய பிரதான கோபுரத்தின் மேலே பறந்து கொண்டிருந்த சிவப்பு நிறக் கொடியை இறக்கி விட்டு, மஞ்சள் நிறக் கொடியை ஏற்றும் நேரம். பிரகாரம் முழுவதும் பக்தர்கள் சுற்றி நின்று கொண்டு, பக்தியோடு கோஷமிட்டபடி அதை பார்த்துக் கொண்டிருந்தார்கள். அந்த கோபுரத்தின் உச்சியில் இருந்து தொங்கிக் கொண்டிருக்கும் சங்கிலியின் வளையத்தில் கால் வைத்து ஏறுகிறார். அந்த கொடிகள் காற்று வீசும் திசைக்கு எதிர் திசையில் பறக்கும் என்பது பூரியின் ஒரு அதிசயம். தஞ்சை பெரிய கோவிலைப் போல இந்தக் கோவிலின் நிழலும் தரையில் விழாது, இந்த கோபுரத்தின் மேலே கருடன் பறக்காது என்பதெல்லாம் மற்ற சிறப்புகள். இங்கே பிரசாதத்தை பானையில்தான் சமைப்பார்களாம். அதுவும் ஏழு பானைகளை ஒன்றின் மீது ஒன்றாக அடுக்கி சமைப்பார்களாம். அதில் மேல் பானையில் இருக்கும் அரிசி முதலில் வெந்து விடுமாம், பிறகு அதற்கு அடுத்த பானை, என்று வரிசையாக இறங்கு முகத்தில் வந்து, கடைசியில் கீழே இருக்கும் பானையில் இருக்கும் அரிசி வேகுமாம்.

 

முதலில் நான்கு வரிசைகளாக அனுப்பப்படும் பக்தர்கள் பிரதான வாயிலுக்கருகே செல்லும் பொழுது ஒன்றாக சங்கமித்து விடுகிறார்கள். பிரும்மாண்டமான வாயில். இருபுறமும் ஒவியமாக வரையப்பட்டிருக்கும் ஜெய, விஜயீபவர்களின் மீது வெண்ணையை விட்டெரிந்து, அந்த ஓவியத்தின் அழகை சிதைத்திருக்கிரார்கள் மக்கள். இது என்னவிதமான பக்தி என்று புரியவில்லை. ஒரு விஷயத்தை நம்மால் படைக்க முடியாவிட்டாலும் பரவாயில்லை, சிதைக்காமல் இருக்கலாம் என்பதை நாம் எப்போதுதான் உணரப் போகிறோமோ?

 

பல வருடங்களுக்குப் பிறகு, கும்பலில் சிக்கி, நீந்தி, சன்னதியை அடைகிறோம். நடுவில் சுபத்ரா, அவளுக்கு வலது புறம் பலராமர், இடது புறம் கிருஷ்ணர். இப்படி சகோதரர்களோடு சகோதரி மட்டும் கோவில் கொண்டிருப்பது பூரியில் மட்டும்தான் என்று நினைக்கிறேன். மரத்தால் ஆன திருவுருவங்கள். முழுமை அடையாமல் இருக்கின்றன. அதற்கு காரணம் தெரிய வேண்டுமானால் பூரியின் தல வரலாறு தெரிய வேண்டும். இந்த பதிவு மிக நீளமாகி விட்டது, எனவே அடுத்த பதிவில் பார்க்கலாம்.   

படங்கள் - நன்றி கூகுள் 

Thursday, April 20, 2023

ஓடிஷா யாத்திரை – 2

ஓடிஷா யாத்திரை – 2

சாட்சி கோபால் கோவில்:



பிஜுபட்னாயக் விமான நிலையத்திலிருந்து ஏ.சி. பஸ்ஸில் ஏறி பூரி நோக்கி புறப்பட்டோம். வழியில் சாட்சி கோபால் கோவிலுக்குச் சென்றோம்.

புவனேஷ்வர், பூரி நெடுஞ்சாலையில் புவனேஷ்வரிலிருந்து கிட்டத்தட்ட 20 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது சாட்சி கோபால் கோவில். வடமொழியில் சாஷி கோபால் என்கிறார்கள். பக்தன் ஒருவனுக்காக சாட்சி சொல்ல அந்த பரந்தாமனே வந்ததால் இந்தப்பெயர்.

பூரியிலிருந்து காசிக்கு இரண்டு அந்தணர்கள் செல்கிறார்கள். அதில் ஒருவன் இளைஞன், மற்றவர் முதியவர். யாத்திரையில் அந்த முதியவரை இளைஞன் நன்றாக கவனித்துக் கொள்கிறான். அவனுடைய பணிவிடையில் மகிழ்ந்த முதியவர், ஊர் திரும்பியதும் தன் மகளை அவனுக்குத் திருமணம் செய்து தருவதாக பத்ரி நாரயணரை சாட்சியாக வைத்து உறுதி அளிக்கிறார். ஆனால் ஊர் திரும்பியதும், அந்த இளைஞனுக்கு தனக்கு இணையான அந்தஸ்து இல்லை என்பதால் பெண் கொடுக்க மருத்து விடுகிறார். அவன் அவருடைய வாக்குறுதியை நினைவூட்ட, “அந்த கிருஷ்ணனே வந்து சாட்சி சொல்லட்டும், நான் என் பெண்ணை உனக்கு திருமணம் செய்து வைக்கிறேன் எங்கிறார். உடனே அவன் மீண்டும் காசிக்குச் சென்று, எந்த கிருஷ்ணரை சாட்சி வைத்து அவர் பெண்ணைத் தருவதாக கூரினாரோ அந்த கிருஷ்ணரிடம் சென்று முறையிட்டு, தன்னோடு வரும்படி அழைக்கிறான். கிருஷ்ணரும், தான் அவனோடு வருவதாகவும், அவன் முன்னால் செல்ல, அவர் பின் தொடர்ந்து வருவதகவும் கூறுகிறார். ஆனால் முன்னால் செல்லும் அவன் எந்தக் காரணம் கொண்டும் திரும்பி பார்க்கக் கூடாது என்று ஒரு நிபந்தனை விதிக்கிறார். அதற்கு அவன் ஒப்புக் கொள்ள, இருவரும் நடக்க ஆர்ம்பிக்கின்றனர். தனக்கு பின்னால் ஒலிக்கும் சலங்ககை ஒலியைக் கொண்டு கிருஷ்ணர் தன்னை தொடர்வதை ஊர்ஜிதம் செய்து கொள்கிறான். இந்த ஊரின் மணல்மேட்டை கடக்கும் பொழுது மணலில் கால்கள் புதைவதால் சலங்கை சத்தம் நின்று விடுகிறது. கிருஷ்ணர் விதித்த நிபந்தனையை மறந்த அந்த இளைஞன் திரும்பி பார்க்க கிருஷ்ணர் அங்கேயே சிலையாகி விடுகிறார். அவனுடைய பக்தியை மெச்சிய அவ்வூர் மக்கள், அங்கே கிருஷ்ணருக்கு கோவில் எடுத்தார்கள் என்பது தல வரலாறு.



சிறிய கோவில்தான். கோவிலுக்கு வெளியே கருட ஸ்தம்பம். ஓடிசா பாணி கோபுரம். நுழை வாயிலில் இரண்டு சிங்கங்கள். உள்ளே சென்றால் நேராக கருவறை வரை செல்ல முடிகிறது. வட இந்திய கோவில்கள் போல் வெள்ளை நிற சலவைக் கல் இல்லாமல் மிக அழகான கருமை நிற குழலூதும் கண்ணன் நம் உள்ளத்தை கொள்ளை கொள்கிறான். பக்கவாட்டில் ராதை. தரிசனம் சிது விட்டு வெளியே வருகிறோம். பிரகாரத்தை வலம் வரும்பொழுது பின் புறம் கோஷ்ட்டத்தில் நரசிம்மரையும், வலது புறம் பிரம்மாவும் இருக்கிறார்கள். இடது புறம் திண்ணையில் தென் நாட்டு பாணியில் அழகான, பெரிய விநாயகர். இவரும் சலவைக் கல்லால் ஆனவர் இல்லை. சுவற்றில் நடராஜரைப் போல் சூலம், நெருப்பு எல்லாம் ஏந்தி நடனமாடும் விநாயகரின் அழகிய ஓவியம்.




கோவிலின் பக்கவாட்டுத் தோற்றம்
ஸ்தல விருட்சம்-பலா மரம்


சாட்சி கோபால்கோவில் பூரி ஜெகன்னாதர் கோவில் கட்டப்படுவதற்கு முன்னாலேயே கட்டப்பட்டதாம். மூல விக்கிரகம் தெற்கேயிருந்து கொண்டுவரப்பட்டது என்றும் கூறுகிறார்கள். டூரிஸ்டுகள் அதிகம் வரும் எல்லா கோவில்களைப் போலவே இங்கும் காசு பறிப்பதில் குறியாக இருக்கிறார்கள். அங்கு கட்டணசேவை இல்லாத போதிலும், நாங்கள் வெளி மாநிலத்திலிருந்து வந்திருப்பவர்கள் என்பதை புரிந்து கொண்டு, பத்து ரூபாய் நுழைவுக் கட்டணம் வாங்க வேண்டும் என்றார் ஒருவர். எங்கள் கைட் அவரோடு சண்டை போட்டு, எங்களை உள்ளே அழைத்துச் சென்றார். உள்ளே, “தட்சணை போடுங்கள் தட்சணை போடுங்கள்” என்று கேட்டு ஒரு பெரிய தாம்பாளத்தில் தட்சணை வசூல் செய்கிறார்கள். அதில் பத்து ரூபாய், இருபது ரூபாய் இவைகளை உட்னே அப்புறப்படுத்தி, மினிமம் ஐம்பது ரூபாய் என்பது போல ஒரு தோற்றத்தை உருவாக்குகின்றனர். இட்ஸ் ஆல் இன் த கேம்!

வழியில் மதிய உணவை முடித்துக் கொண்டு (சூப், பராத்தா, இரண்டு சைட் டிஷ், புலவ், சாதம், சாம்பார், ரசம், தயிர், ஊறுகாய், பப்படம், காய்கறி சாலட், குலாப் ஜாமூன், ஐஸ்க்ரீம்) அங்கிருந்து பூரியை சென்றடைந்தோம். நாங்கள் தங்குவதற்காக ஏற்பாடு செய்யபட்டிருந்த சக்தி ஹோட்டலில் எங்களை ஆம் பன்னா(மாங்காய்,புதினா ஜூஸ்) கொடுத்து வரவேற்றார்கள். எங்கள் அறைக்குச் சென்று கொஞ்சம் ஓய்வெடுத்துக் கொண்டு மாலை பூரி ஜகன்னாதரை தரிசிக்க புறப்பட்டோம்.

-தொடரும்   







Monday, April 17, 2023

ஒடிஷா யாத்திரை

ஒடிஷா யாத்திரை

ஸ்மார்ட் வாட்ச்சை காணோம்..:



இந்தியாவிற்குள் பார்த்தே ஆக வேண்டும் என்று நான் விரும்பும் சில இடங்களுள் ஓடிசாவில் உள்ள கோனார்க் சன் டெம்பிளும் ஒன்று. என் உறவிலும், நட்பிலும் எல்லோரையும் கேட்டுப் பார்த்தேன், ஒவ்வொருவருக்கும் ஒரு பிரச்சனை. அந்த சமயத்தில்தான் பெங்களூர் மத்யமர் மீட் ஒன்றில் சந்தித்த சரோஜா அருணாசலம் அவர்கள் தான் டூர் ஆபரேட்டர் மூலம் தனியாக சுற்றுலாக்கள் செல்வதாகவும், அவை சிறப்பாக நடத்தப்படும் என்றும், அங்கு வருபவர்கள் நண்பர்களாகி விடுவார்கள் என்றும் கூறியது சற்று தைரியம் தந்தது. அந்த சமயத்தில் முகநூலில் வந்த யாத்ரிகா டூர்(ஆபரேட்டர்கள்) விளம்பரம் என்னைக் கவர அவர்களொடு தொடர்பு கொண்டு ஒடிஷா சுற்றுலாவிர்கு புக் பண்ணிக் கொண்டேன்.

சென்னை விமான நிலையத்தில்

நான் அவர்களை தொடர்பு கொண்டபோது ஒரே ஒரு சீட்தான் இருக்கிறது என்றார்கள். 50% டிக்கெட் கட்டணம் கட்டியதுமே டிக்கெட் அனுப்பி விட்டர்கள். ஏப்ரல்7,8.9 ஆகிய மூன்று நாட்கள் பயணம். நான் 6ஆம் தேதி காலையிலேயே கிளம்பி சென்னையை அடைந்தேன். 7ஆம் தேதி காலை 9:25க்கு விமானம். 7.25க்குள் விமான நிலையத்தை அடைந்து விட்டேன். அங்கு சிறு குழுவாக நின்று கொண்டிருந்த சிலரைப் பார்த்தால் ஒடிஷா யாத்ரீகர்களாக இருப்பார்களோ என்று தோன்றியது. விசாரித்ததில் என் யூகம் சரிதான் என்று புரிந்தது. எங்களுக்கான காலை உணவை பாக் பண்ணி கொடுத்து விட்டார்கள். அதைப் பெற்றுக் கொண்டு லக்கேஜை செக் இன் பண்ணி செக்யூரிடி செக் அப்பிற்காக சென்றோம். அங்கே ஸ்மார்ட் வாட்சையும் அவிழ்த்து ஸ்கேன் பண்ண வேண்டிய சாமான்களோடு போட வேண்டும் என்றார்கள். நான் அப்படியே செய்து எக்ஸ்-ரே மிஷினுக்குள் அனுப்பி விட்டு அந்தப் பக்கத்தில் ஸ்கேன் செய்து வந்த டிரேயில் பார்த்தால் என் ஹேண்ட் பேக், செல்ஃஃபோன் இரண்டும் இருந்தன. ஸ்மார்ட் வாட்ச்..? காணோம்… பானு.. பிரச்சனை இல்லாமல் உன்னால் பயணிக்க முடியாதா?

ங்கே போயிருக்கும்? கொஞ்சம் பதட்டமாக இருந்தது. மிக சமீபத்தில் என் மகன் வாங்கித் தந்திருந்த வாட்ச். அங்கிருந்த பணியாளரிடம் தெரிவித்த பொழுது, “நீங்கள் வைத்த டிரேயில்தான் இருக்கும், சரியாக பாருங்கள்” என்றார். அந்த டிரேயைத் தேட முடியவில்லை, ஏனென்றால் அதற்கு மேல் பல டிரேகள் வந்து விட்டன.

கம்ப்யூட்டர் திரையில் ஸ்கேன் செய்யப்படும் பொருள்களை பார்த்துக் கொண்டிருந்தவரிடம் கூரியதும், அவர் செக் செய்து விட்டு, “வாட்ச் உங்கள் கைப்பையில்தான் இருக்கிறது, சரியாகப் பாருங்கள்” என்றார். “ஐயா, இது வேறு கடிகாரம், நான் தேடுவது ஸ்மார்ட் வாட்ச்” என்றதும், என்னை கொஞ்ச நேரம் காத்திருக்கச் சொன்னார். பிறகு ஒருவர் என்னை அழைத்து, “மேடம், உங்கள் வாட்ச் அந்த் டிரேயில்தான் இருந்திருக்கிறது, நீங்கள் சரியாக பார்க்கவில்லை, வந்து கொண்டிருக்கிறது” என்று சொல்லி, எக்ஸ்-ரே மிஷினிலிருந்து வெளியே வந்த ஒரு டிரேயில் இருந்த என் ஸ்மார்ட் வாட்சை எடுத்துக் கொடுத்து விட்டு, “சிலர் பதட்டத்தில் லாப் டாப்பைக் கூட விட்டு விட்டு சென்று விடுவார்கள்” என்றார்.

பிஜுபட்னாயக் விமான நிலையத்தில் ஆஞ்சனேயர்(மணல் சிற்பம்)




உள்ளே சென்று அமர்ந்து ட்ரவலர்ஸ் கொடுத்திருந்த இட்லி, ஃப்லாக்ஸ் சீட்ஸ் சத்துரண்டை இவற்றை மட்டும் சாப்பிட்டேன். கம்பு புட்டை விமானத்தில் சாப்பிடலாம் என்று நினைத்தேன். ஆனால் விமானத்தில் தூங்கி விட்டதால் சாப்பிட முடியவில்லை. உணவிற்குப் பிறகு காபி சாப்பிடலாம் என்று தோன்றியது. அங்கிருந்த காஃபிடேயில் ஒரு காபி 280 ரூபாய் என்றாள் அங்கிருந்த பெண். சீ! சீ! இந்தக் காபி கசக்கும் என்று திரும்பி விட்டோம். விமானத்தில் பேப்பர் படித்து, ஒரு குட்டித் தூக்கம் போட்டேன். குறித்த நேரத்திற்கு சற்று முன்பாகவே பிஜுபட்னாயக் விமான நிலயத்தை அடைந்தது எங்கள் விமானம். பெட்டி வருவதற்குள் அங்கு மணலில் அமைக்கப்பட்டிருந்த ஆஞ்சநேயர் முன் ஒரு புகைப்படம் எடுத்துக் கொண்டேன். வெளியே எங்களை வரவேற்ற அந்த ஊர் கைட் எங்கள் குழுவில் இருந்த அனைவருக்கும் ஒரு அழகான முத்துமாலை கொடுத்து, அடையாளத்திற்காக அதை வெளியே செல்லும் பொழுது அணிந்து கொள்ள வேண்டும் என்றார். நான் மட்டுமே அதை கடை பிடித்தேன். மற்றவர்கள் ஒரு நாள் மட்டுமே அணிந்து கொண்டார்கள்.

ட்ராவலர்ஸ் கொடுத்த முத்து மாலை

- தொடரும்

Saturday, April 15, 2023

கனவு பலித்தது

 கனவு பலித்தது



என் படைப்புகளை புத்தகமாக பதிப்பிக்க வேண்டும் என்று ரொம்ப நாட்களாக ஆசை. ஆனால் நமக்கு அது சாத்தியப்படுமா? என்று ஒரு சந்தேகம் அடி மனசில் இருந்து கொண்டே இருந்தது. நிச்சயமாக முடியும் என்று நம்பிக்கை தந்து குவிகம் பதிப்பகத்தை  திரு. ராய செல்லப்பா அவர்கள் அறிமுகம் செய்வித்தார்.  அதோடு மட்டுமல்லாமல் என் கதைகளில் வெளியிடக் கூடிய தகுதிக்கு ஏற்ற கதைகளை தேர்ந்தெடுத்துக் கொடுத்ததோடு, அவற்றில் சிறு திருத்தங்களும் கூறினார். 



என் தோழியான கீதா ரங்கன் ப்ரூஃப் ரீடிங் செய்து தர, நம் ரேவதி பாலாஜி அழகான அட்டைப் படம் வரைந்து தர, சகோதரர் அனந்த நாராயணன் அவர்களும், இனிய தோழியான ஆன்சிலா பெர்னாண்டோவும் அணிந்துரை எழுதித் தர, குவிகம் பதிப்பகம் தரமாக அச்சிட்டு என் கனவை நனவாக்கி விட்டார்கள். இதற்கு முன் நான்கு மின் நூல்கள் வெளியிட்டிருந்தாலும் நம் புத்தகத்தை அச்சில் பார்க்கும் பொழுது அலாதி சந்தோஷம்.  

உணவை சமைத்தால் மட்டும் போதுமா? எல்லோரும் சாப்பிட்டு நன்றாக இருக்கிறது என்று சொன்னால்தானே சமைத்தவருக்கு சந்தோஷம். அதைப் போல் என்னுடைய இந்த நூலை நீங்கள் எல்லோரும் வாங்கி, படித்தால்தான் இந்த என் பணி பூரணமடையும். புத்தகத்தின் விலை பிரதி ஒன்று ரூ.100/- மட்டுமே. விருப்பமுள்ளவர்கள் என்னை 9841178728 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளுங்கள்.  நன்றி. 



Wednesday, April 12, 2023

பிரார்த்தனை, நேர்த்திக் கடன்

பிரார்த்தனை, நேர்த்திக் கடன்


நான் பத்தாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த பொழுது சப்ஸ்டிட்யூட்டாக வந்த ஒரு ஆசிரியை பாடம் எதுவும் எடுக்காமல், பொதுவாக எங்களோடு பேசிக்கொண்டிருந்தார். அப்போது எல்லோரிடமும்,” கடவுளிடம் என்ன வேண்டிக் கொள்வீர்கள்” என்று கேட்டார். பெரும்பான்மையோர் “நன்றாக படிக்க வேண்டும்” என்று வேண்டிக் கொள்வதாக சொன்ன பொழுது நான், “எதுவும் வேண்டிக்கொள்ள மாட்டேன்” என்றேன். அதற்கு அவர், “நிஜமாகவா? பெரிய விஷயம்” என்றார்.

ஆனால் நாம் எப்போதும் பத்தாம் வகுப்பு மாணவியாகவே இருந்துவிட முடியுமா என்ன? வளர, வளர நாம் எதிர்கொள்ளும் தோல்விகள், நிராசைகள், சந்திக்கும் துக்கங்கள் நம்மை வேண்டிக்கொள்ளத்தான் தூண்டுகின்றன. என்னுடைய பிரார்த்தனைகள் பெரும்பாலும் கோவிலுக்கு நடந்து செல்வது, எனக்கு பிரியமான ஏதாவது ஒன்றை அந்தக் காரியம் நடக்கும்வரை விட்டுக் கொடுப்பது என்றுதான் இருக்கும்.

என் மகன் சி.ஏ. தேர்வில் இரண்டாம் முறையும் தோற்றப் பொழுது மிகவும் மனமுடைந்து போய், “இனிமேல் என்னால் பரீட்சை எழுத முடியாது, நான் வேலைக்குச் செல்கிறேன்” என்றான். என் மகன் பட்டப் படிப்பு முடித்து விட்டுதான் சி.ஏ.வில் சேர்ந்தான். லயோலாவில் அவன் கோல்ட் மெடலிஸ்ட்! அவன் பள்ளித் தோழர்களில் பலர் ப்ளஸ் டூவிற்குப் பிறகு இஞ்ஜினீயரிங்க் முடித்து வேலையிலும் அமர்ந்து விட்டது அவனுக்கு மிகப்பெரிய மன அழுத்தத்தை தந்தது.

அப்போது எனக்கு, அவன் சி.ஏ.வில் தேர்ச்சி அடையும் வரை நமக்கு பிடித்த ஏதாவது ஒன்றை விடுகிறேன் என்று ஷிர்டி பாபாவிடம் வேண்டிக் கொள்ளலாம் என்று தோன்றியதால் எனக்கு மிகவும் பிடித்த விஷயம் எது என்று யோசிக்க ஆரம்பித்தேன்.

சாப்பாட்டு விஷயத்தில் இதுதான் பிடிக்கும், இது பிடிக்காது என்பது கிடையாது. சாக்லேட் கொஞ்சம் அதிகமாக பிடிக்கும். ஆனால் எல்லாவற்றையும் விட ரொம்ப ரொம்ப பிடித்தது புத்தகங்கள் படிப்பதுதான். அதிலும் கதைகள் படிக்க மிகவும் பிடிக்கும். எனவே, என் மகன் சி.ஏ.முடிக்கும் வரை கதைகள் படிப்பதில்லை என்று முடிவு செய்தேன். அப்போது பார்த்து பாலகுமாரன் ஃபோன் செய்து, “நான் கங்கை கொண்ட  சோழன் என்று ஒரு புத்தகம் எழுதியிருக்கிறேன். படித்து விட்டு எப்படி இருக்கிறது என்று சொல். நீ நல்ல ரீடர், நன்றாக இருந்தால் நன்னா இருக்கு என்பாய், நன்றாக இல்லாவிட்டால், நன்றாக இல்லை என்று சொல்லி விடுவாய்” என்கிறார். எப்படி இருக்கும் எனக்கு? “கொஞ்ச நாள் கதைகள் படிக்க வேண்டாம் என்று இருக்கிறேன் சார்” என்றேன் கொஞ்சம் வருத்தத்தோடு.



என் மகள், “இவ்வளவு பெரிய ரைட்டர் உன்னிடம் அபிப்ராயம் கேட்பதெல்லாம் சாதாரணமான விஷயம் கிடையாது. நீ கண்டிப்பாக அந்த புத்தகத்தை படித்து அதைப் பற்றி அவரிடம் சொல்லத்தான் வேண்டும்” என்று கூறி எனக்கு ‘கங்கை கொண்ட சோழன்’ எல்லா பகுதிகளையும் வாங்கித் தந்தாள். என் மகனும் அந்த முறை சி.ஏ.வில் தேர்ச்சி அடைந்து விட்டான். நான் கங்கை கொண்ட சோழன் புத்தகத்தை படித்து முடித்து, பாலகுமாரனிடம் அதைப் பற்றிய என் கருத்தை பகிர்ந்து கொண்டேன்.   

Wednesday, March 29, 2023

சேமிப்பு, சிக்கனம்

 சேமிப்பு, சிக்கனம்

சென்ற வாரம் மத்யமரில் கொடுக்கப்பட்ட வாராந்திர டாபிக் சேமிப்பு, சிக்கனம். 

இந்த தலைப்பில் பெரும்பாலானோர் பொருளாதார சிக்கனத்தைப் பற்றி மட்டும் எழுதியிருகிறார்கள். ஆனால் பொருளாதாரத்தை தாண்டி, தண்ணீர், எரி பொருள், மின்சாரம், போன்ற விஷயங்களிலும் சிக்கனத்தை கடை பிடிக்க வேண்டியது அவசியம்.

வீடுகளில் கிணறுகள் இருந்த காலத்தில் பாத்திரம் தேய்க்க, துணி தோய்க்க தண்ணீரை சிக்கனமாகத்தான் செலவு செய்வார்கள். எந்த அளவு தண்ணீர் செலவாகிறதோ அந்த அளவு காசு செலவாகும் என்று கூறுவார்கள். கிணற்றிலிருந்து நாம்தானே நீர் இரைக்க வேண்டும்? மோட்டார் போட்டு, தண்ணீர் இரைத்து, குழாயை திறந்தால் தண்ணீர் கொட்டும் என்னும் நிலை வந்த பிறகு தண்ணீர் சிக்கனம் என்பது இல்லாமல் போய் விட்டது.

குழாயைத் திறந்து வைத்துக் கொண்டு பல் தேய்ப்பது பலர் பழக்கம்(ரயில் பயணங்களிலும் சில பயணிகள் இப்படி நடந்து கொள்வார்கள்). 2015ல் சென்னையில் வெள்ளம் வந்த பொழுது எங்கள் குடியிருப்பில் வெள்ளம் புகுந்து, தரை தளத்தை ஆக்கிரமித்து விட்டது. தரை தளத்து வீடுகளில் இருந்தவர்களில் ஒரு பெங்காலி தந்தைக்கும், மகளுக்கும் எங்கள் வீட்டில் அடைக்கலம் கொடுத்தோம். Water water everywhere, not a drop to drink என்பது போன்ற நிலை. ஒவர்ஹெட் டாங்கில் தண்ணீர் இருந்ததால் குழாயில் தண்ணீர் வந்து கொண்டிருந்தது, மிகவும் ஜாக்கிரதையாக பயன்படுத்திக் கொண்டிருந்தோம். கீழ் வீட்டுக்காரரோ குழாயை திறந்து விட்டுக் கொண்டு பல் தேய்க்கிறார். “ஐயா, தயவு செய்து குழாயை மூடுங்கள், தண்ணீர் சிக்க்னம், தேவை இக்கணம்” என்றதும் அவர்,   “நான் கங்கை ஓடும் பிரதேசத்திலிருந்து வருகிறேன். எங்களுக்கு தண்ணீர் கஷ்டம் என்றால் என்னவென்றே தெரியாது” என்றார். சிக்கனம் என்பது ஒரு நாளில் வந்துவிடாது. பழக வேண்டும். சிலர் குளிக்கும் பொழுது சோப்பு தேய்த்துக் கொள்ளும் பொழுது கூட ஷவரை திறந்து வைத்துக்கொண்டு குளிப்பார்கள்.

எரி வாயு, மின்சாரம் போன்றவற்றை சிக்கனமாக பயன்படுத்த பல குறிப்புகள் வந்துகொண்டிருப்பதால் அவற்றை இங்கே விரிவாக கூறத் தேவையில்லை என நினைக்கிறேன்.

நாம் எல்லோரும் கடைபிடிக்க வேண்டிய இன்னொரு சிக்கனம் வார்த்தை சிக்கனம். வளவளவென்று பேசுகிறவர்களை விட சுருக்கமாக பேசுகிறவர்களுக்கு எப்போதுமே மரியாதை அதிகம். மிகச்சிறந்த உதாரணம் திருக்குறள். எவ்வளவு பெரிய விஷயங்களை இரண்டே அடிகளில் நச்சென்று சொல்லி விடுகிறது! நவீன எழுத்தாளர்களில் சுஜாதாவின் சிறப்பு சின்ன, சின்ன வாக்கியங்கள்.

இவ்வளவு ஏன்? மூச்சை சிக்கனமாக பயன்படுத்துவதன் மூலம் ஆயுளை நீடித்துக்கொள்ள முடியும் என்பதுதானே யோக சாத்திரம். வேக வேகமாக மூச்சு விடுவது மூச்சை விரயம் செய்வதற்கு ஒப்பானது. காமம், கோப வசப்படும்பொழுது மூச்சு விரயமாவதால்தான் அவற்றை கட்டுப்படுத்தச் சொல்கிறார்கள்.

இந்த கட்டுரைக்கு போஸ்ட் ஆப் தி வீக் கிடைத்தது. இதை நான் எழுதிக் கொண்டிருந்தபொழுது யூ டியூபில் எதையோ கேட்டுக் கொண்டிருந்தேன். அப்போது வந்த மிகவும் பொருத்தமான ஒரு விளம்பரம்.  



 

Monday, March 20, 2023

ஒரு விளக்கம்

ஒரு விளக்கம்:

என்னுடைய சென்ற பதிவில் முரளி என்பவரின் மர்ம மரணம் படித்தவர்களுக்கு ஒரு குழப்பத்தை ஏற்படுத்தியிருப்பது புரிந்தது, காரணம் நான் சில தகவல்களை முழுமையாகத் தரவில்லை.  அதில் அவர் மனைவி முதல்  நாளே பேஸஞ்சர்ஸ் மேனிஃபெஸ்ட்   பார்க்காததுதான் எனக்கு உறுத்தியது. முதலில் அலுவலகத்தை தொடர்பு கொண்டு, அவர் அங்கிருந்து கிளம்பி விட்டார் என்பதை உறுதி செய்து கொண்ட பிறகே பேசெஞ்சேர்ஸ் மேனிபெஸ்ட் பார்த்திருக்கிறார். அதன் பிறகு போலீஸில் புகாரும் கொடுத்திருக்கிறார். ஆனால்   போலீஸ் மெத்தனமாக இருந்திருக்கிறது என்றுதான் தோன்றுகிறது. திறமையாக செயல்பட்டிருந்தால் அடையாளம் தெரியாத உடலை இவருக்கு காட்டியிருப்பார்கள். 

ஒரு ஜோதிடர், உங்களுக்கு அவரைப் பற்றி செய்தி வரும் என்று கூறிய சில நாட்களிலேயே அவருடைய உடை மற்றும் பாஸ் போர்ட் பார்சலில் வந்திருக்கிறது. அதில் மிகவும் பயந்து போய் விட்டார் அவர் மனைவி. உடனேயே அவரைப் பற்றிய தகவல் மராட்டிய செய்தித் தாளில் வந்து, அவர் போலீசால் தகனம் செய்யப்பட்டிருப்பது தெரிந்திருக்கிறது. எங்கேயோ, ஏதோ தவறு நடந்திருக்கிறது, அதை தோண்டப் போய் குழந்தைகள் உயிருக்கு ஏதாவது ஆபத்து நேர்ந்து விடுமோ என்ற பயத்தில்தான் அவர் கேஸை வாபஸ் வாங்கி விட்டார். 

அதன் பிறகு எங்களுக்கு கிடைத்த செய்தி இறந்து போன முரளி ஹவாலா பண பரிமாற்றத்தில் ஈடு பட்டிருந்தாராம். அது கூட துர் மரணத்திற்கு காரணமாக இருந்திருக்கலாம், அதை அவர் மனைவி அறிவாரா? என்பதும் தெரியாது. நமக்கு சரியாக தெரியாத விஷயங்களை எழுத வேண்டாமே என்று விட்டு விட்டேன். 

Friday, March 17, 2023

கடலைக் கடந்து - 10

 கடலைக் கடந்து - 10


டிராவல் ஏஜெண்டிடமிருந்து டிக்கெட்டைப் பெற்றுக் கொண்ட முரளி, அதை சரி பார்த்து விட்டு, மனைவிக்கு ஃபோன் செய்து, தான் ஊருக்கு வரப்போகும் நாளை உறுதி படுத்தினான்.

வளைகுடா நாடுகளிலிருந்து விடுமுறைக்கு ஊருக்கு வரும் எல்லோரையும் போல் முரளியும் மனைவியிடம், என்ன வாங்கிக் கொண்டு வர வேண்டும் என்று கேட்க, அவள் அப்போது(1990ன் துவக்க காலங்கள்) இந்தியாவில் கிடைக்காத நட்டெல்லா, ஃபேளவர்ட் சீஸ், குழந்தைகளுக்கு உடைகள், தனக்கு யார்ட்லி சோப், மாமியாருக்கு ஆக்ஸ் ஆயில், பாதாம், முந்திரி, குங்குமப்பூ என்று பட்டியலிட, எல்லாவற்றையும் குறித்துக் கொண்ட முரளி, அவள் கேட்காத நகை ஏதாவதும் வாங்கிச் செல்ல வேண்டும் என்று நினைத்துக் கொண்டான்.

தொடரும் முன் முரளியைப் பற்றி கொஞ்சம் தெரிந்து கொள்ளலாம். பம்பாயில் கெமிகல் இஞ்சினீயரிங் முடித்த முரளி அங்கேயே ஒரு கம்பெனியில் முதலில் வேலை பார்த்தான். பிறகு ஓமானில் ஒரு பிரபலமான  கம்பெனியில் வேலை கிடைத்து வந்தது அவனுடைய அதிர்ஷ்டம் என்றுதான் கூற வேண்டும். திருமணமாகி முதல் குழந்தைக்கு எட்டு வயதாகும் வரை ஒமானில் குடும்பதோடு வசித்தான். மனைவி இரண்டாவது முறை கருவுற்றபோது பிறக்கப் போவது இரட்டை குழந்தைகள் என்பது தெரிந்தது. மேலும் சில சிக்கல்களும் இருந்ததால், குடும்பத்தை இந்தியாவுக்கே திருப்பி அனுப்பி விட்டு, தான் மட்டும் மஸ்கட்டில் இருந்தான். பணி நிமித்தமாக அடிக்கடி இன்டீரியர் செல்ல வேண்டி வரும். ஊருக்குச் செல்லும் முன் ஒரு வாரம் அப்படி இன்டீரியரில் வேலை இருந்தது. அங்கு வேலையை முடித்து விட்டு புதன் கிழமை நகருக்குத் திரும்பி வெள்ளியன்று பம்பாய்க்கு பயணப்படலாம் என்று நினைத்தான். வியாழனன்று ஷாப்பிங் செய்து கொள்ளலாம் என்று முடிவு செய்தான்.  

புதன் மாலை இண்டீரியரில் வேலையை முடித்துக் கொண்டு அலுவலகத்தில் விடை பெற்றுக் கொண்டு, அலுவலக வண்டியில் வீட்டு வாசலில் இறங்கிக் கொண்டான்.

வெள்ளி இரவு ஒரு மணிக்கு ஓமானிலிருந்து புறப்படும் விமானம், பம்பாயை அதிகாலை அடைந்து விடும். இமிக்ரேஷன், கஸ்டம்ஸ் போன்ற சடங்குகளை முடித்துக் கொண்டு வெளியே வந்து, டாக்ஸி பிடித்தால் ஏழு மணிக்கு வீட்டை அடைந்து விடலாம்.

ஆனால் ஏழு மணிக்கு அவன் வீட்டிற்கு வரவில்லை, எட்டு மணியானது, ஒன்பது, பத்து என்று நேரம் ஓடியதே தவிர முரளி வரவில்லை. அவன் மனைவி லதாவுக்கு கவலை வந்தது. அவளுக்கு ஏனோ பேசஞ்செர்ஸ் மேனிஃபெஸ்ட் வாங்கிப் பார்க்க வேண்டும் என்று தோன்றவில்லை. மஸ்கட்டில் கணவனின் வீட்டு டெலிஃபோனை தொடர்பு கொண்டாள். ரிங்க் போனது, யாரும் எடுக்கவில்லை. அலுவலகத்தை தொடர்பு கொண்டாள். அவர்கள் அவன் புதன் கிழமை கேபிடலுக்கு திரும்பி விட்டான் என்றதோடு நிற்காமல், விமான நிலையத்தில் விசாரித்து அவன் வெள்ளியன்று ஓமானிலிருந்து கஸ்டம்ஸ் மற்றும் இமிக்ரேஷன் முடித்து விமானம் ஏறியதை உறுதி படுத்தினாகள். அதன் பிறகு பம்பாய் விமான நிலையத்தில் அவன் பயணம் செய்த விமானத்தின் பேசஞ்சர்ஸ் மேனிஃபெஸ்ட் பார்த்ததில் அதில் முரளியின் பெயர் இருந்தது. ஓமானிலிருந்து கிளம்பியவன் பம்பாய் வந்திருக்கிறான், ஆனால் வீடு திரும்பவில்லை. எங்கே சென்றான்? எந்த தகவலும் இல்லை. லதா பூஜைகள், ஜோசியர்கள் என்று போனாளே தவிர, போலீஸ் கம்ப்ளெய்ண்ட் கொடுக்க வேண்டும் என்று தோன்றவில்லை.

பதினைந்து நாட்கள் கழிந்து அவள் வீட்டிற்கு கோயம்புத்தூரிலிருந்து ஒரு பார்சல் வந்தது. அதில் முரளியின் ஒரு பேண்ட்,ஷர்ட்,பர்ஸ் மற்றும் பாஸ்போர்ட் இருந்திருக்கின்றன. அனுப்பியவர் விவரம் எதுவும் இல்லை. முரளியின் குடும்பதினர்களுக்கு எதுவும் புரியவில்லை.

அந்த சமயம் அவர்கள் பக்கத்து வீட்டிற்கு வந்திருந்த ஒருவர் இந்த விஷயங்களை கேள்விப்பட்டு, சில நாட்களுக்கு முன் மராட்டிய தினசரி ஒன்றில் சாலையோரத்தில் கண்டெடுக்கப்பட்ட சடலம் ஒன்றின் புகைப்படம் ஒன்றை வெளியிட்டு, உறவினர்கள் தகுந்த ஆதாரம் காட்டி அந்த உடலை பெற்றுக் கொள்ளலாம் என்று ஒரு அறிவிப்பு வெளியானது என்று கூறியிருக்கிறார். அந்த செய்தி தாளை வாங்கி பார்த்ததில் அது முரளிதான் என்று தெரிந்திருகிறது. உடனே போலீஸை அணுகியதில்,“இத்தனை நாட்களாக யாரும் க்ளைம் செய்யாததால், நாங்களே எரித்து விட்டோம்” என்றார்களாம்.

என்ன கொடுமை பாருங்கள்? முரளி எப்படி இறந்தான்? விபத்தினாலா? அல்லது கொலை செய்யப்பட்டனா? கொலை என்றால் என்ன காரணம்? இப்படி எதுவுமே தெரியாது. அவன் மனைவி அந்த கேசை தோண்ட வேண்டாம் என்று கூறி விட்டாள்.

எங்களுக்கு மிகவும் அதிர்ச்சி அளித்த மரணம் இது. முரளியைத் தெரியும். நெருங்கிய நட்பு என்று கூற முடியாவிட்டாலும் பழக்கம் உண்டு. நாங்கள் அறிந்த வரையில் நாகரீகமானவர். இந்த மாதிரி மரணங்களில் என்னென்னவோ புரளிகள் வருமே, அது போல முரளியைப் பற்றியும் அவர் ஹவாலா பணப்பறிமாற்றம் செய்தார் என்று செய்திகள் வந்தன. நாங்கள் அவற்றை புறம் தள்ளி விட்டோம்.

இது இப்படி என்றால், இன்னொருவர் குடும்பம் இந்தியாவில் இருந்தது, அவர் மட்டும் தனியாக மஸ்கட்டில் இருந்தார். காலை அலுவலகத்திற்கு சென்று விட்டு, உணவு இடைவேளையின் பொழுது வீட்டிற்கு வந்தவர் உணவு இடைவேளைக்குப் பிறகு அலுவலகம் திரும்பவில்லை. அலுவலகத்தில் அதை பெரிதாக நினைக்கவில்லை. மறுநாளும் அவர் அலுவலகதிற்கு வரவில்லை, எந்த தவலும் அவரிடமிருந்து இல்லை, என்றதும் அலுவலகத்திலிருந்து அவரை ஃபோனில் அழைத்திருக்கிறார்கள், ஃபோன் எடுக்கப்படவில்லை, மதியம் ஒரு முறை அழைத்திருக்கிறார்கள், அப்போதும் பதில் இல்லை, ஏதோ தவறாக இருக்கிறதே? இப்படி சொல்லாமல், கொள்ளாமல் லீவு போடுகிறவர் இல்லையே? என்ற சந்தேகத்தோடு அவர் வீட்டு கதவை உடைத்துப் பார்த்தால், சோபாவில் உட்கார்ந்த நிலையிலேயே மரணத்திருக்கிறார்.

இப்படிபட்ட செய்திகளை கேள்விப்படும்பொழுதெல்லாம் ‘திக்’கென்றிருக்கும். கடவுளே! நான் இந்த ஊருக்கு பயணியாகத்தான் வந்தேன், பயணியாகவே திரும்பச் செல்ல வேண்டும் என்று வேண்டிக் கொள்ளத் தோன்றும்.