கணம்தோறும் பிறக்கிறேன் 

Thursday, April 20, 2023

ஓடிஷா யாத்திரை – 2

ஓடிஷா யாத்திரை – 2

சாட்சி கோபால் கோவில்:



பிஜுபட்னாயக் விமான நிலையத்திலிருந்து ஏ.சி. பஸ்ஸில் ஏறி பூரி நோக்கி புறப்பட்டோம். வழியில் சாட்சி கோபால் கோவிலுக்குச் சென்றோம்.

புவனேஷ்வர், பூரி நெடுஞ்சாலையில் புவனேஷ்வரிலிருந்து கிட்டத்தட்ட 20 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது சாட்சி கோபால் கோவில். வடமொழியில் சாஷி கோபால் என்கிறார்கள். பக்தன் ஒருவனுக்காக சாட்சி சொல்ல அந்த பரந்தாமனே வந்ததால் இந்தப்பெயர்.

பூரியிலிருந்து காசிக்கு இரண்டு அந்தணர்கள் செல்கிறார்கள். அதில் ஒருவன் இளைஞன், மற்றவர் முதியவர். யாத்திரையில் அந்த முதியவரை இளைஞன் நன்றாக கவனித்துக் கொள்கிறான். அவனுடைய பணிவிடையில் மகிழ்ந்த முதியவர், ஊர் திரும்பியதும் தன் மகளை அவனுக்குத் திருமணம் செய்து தருவதாக பத்ரி நாரயணரை சாட்சியாக வைத்து உறுதி அளிக்கிறார். ஆனால் ஊர் திரும்பியதும், அந்த இளைஞனுக்கு தனக்கு இணையான அந்தஸ்து இல்லை என்பதால் பெண் கொடுக்க மருத்து விடுகிறார். அவன் அவருடைய வாக்குறுதியை நினைவூட்ட, “அந்த கிருஷ்ணனே வந்து சாட்சி சொல்லட்டும், நான் என் பெண்ணை உனக்கு திருமணம் செய்து வைக்கிறேன் எங்கிறார். உடனே அவன் மீண்டும் காசிக்குச் சென்று, எந்த கிருஷ்ணரை சாட்சி வைத்து அவர் பெண்ணைத் தருவதாக கூரினாரோ அந்த கிருஷ்ணரிடம் சென்று முறையிட்டு, தன்னோடு வரும்படி அழைக்கிறான். கிருஷ்ணரும், தான் அவனோடு வருவதாகவும், அவன் முன்னால் செல்ல, அவர் பின் தொடர்ந்து வருவதகவும் கூறுகிறார். ஆனால் முன்னால் செல்லும் அவன் எந்தக் காரணம் கொண்டும் திரும்பி பார்க்கக் கூடாது என்று ஒரு நிபந்தனை விதிக்கிறார். அதற்கு அவன் ஒப்புக் கொள்ள, இருவரும் நடக்க ஆர்ம்பிக்கின்றனர். தனக்கு பின்னால் ஒலிக்கும் சலங்ககை ஒலியைக் கொண்டு கிருஷ்ணர் தன்னை தொடர்வதை ஊர்ஜிதம் செய்து கொள்கிறான். இந்த ஊரின் மணல்மேட்டை கடக்கும் பொழுது மணலில் கால்கள் புதைவதால் சலங்கை சத்தம் நின்று விடுகிறது. கிருஷ்ணர் விதித்த நிபந்தனையை மறந்த அந்த இளைஞன் திரும்பி பார்க்க கிருஷ்ணர் அங்கேயே சிலையாகி விடுகிறார். அவனுடைய பக்தியை மெச்சிய அவ்வூர் மக்கள், அங்கே கிருஷ்ணருக்கு கோவில் எடுத்தார்கள் என்பது தல வரலாறு.



சிறிய கோவில்தான். கோவிலுக்கு வெளியே கருட ஸ்தம்பம். ஓடிசா பாணி கோபுரம். நுழை வாயிலில் இரண்டு சிங்கங்கள். உள்ளே சென்றால் நேராக கருவறை வரை செல்ல முடிகிறது. வட இந்திய கோவில்கள் போல் வெள்ளை நிற சலவைக் கல் இல்லாமல் மிக அழகான கருமை நிற குழலூதும் கண்ணன் நம் உள்ளத்தை கொள்ளை கொள்கிறான். பக்கவாட்டில் ராதை. தரிசனம் சிது விட்டு வெளியே வருகிறோம். பிரகாரத்தை வலம் வரும்பொழுது பின் புறம் கோஷ்ட்டத்தில் நரசிம்மரையும், வலது புறம் பிரம்மாவும் இருக்கிறார்கள். இடது புறம் திண்ணையில் தென் நாட்டு பாணியில் அழகான, பெரிய விநாயகர். இவரும் சலவைக் கல்லால் ஆனவர் இல்லை. சுவற்றில் நடராஜரைப் போல் சூலம், நெருப்பு எல்லாம் ஏந்தி நடனமாடும் விநாயகரின் அழகிய ஓவியம்.




கோவிலின் பக்கவாட்டுத் தோற்றம்
ஸ்தல விருட்சம்-பலா மரம்


சாட்சி கோபால்கோவில் பூரி ஜெகன்னாதர் கோவில் கட்டப்படுவதற்கு முன்னாலேயே கட்டப்பட்டதாம். மூல விக்கிரகம் தெற்கேயிருந்து கொண்டுவரப்பட்டது என்றும் கூறுகிறார்கள். டூரிஸ்டுகள் அதிகம் வரும் எல்லா கோவில்களைப் போலவே இங்கும் காசு பறிப்பதில் குறியாக இருக்கிறார்கள். அங்கு கட்டணசேவை இல்லாத போதிலும், நாங்கள் வெளி மாநிலத்திலிருந்து வந்திருப்பவர்கள் என்பதை புரிந்து கொண்டு, பத்து ரூபாய் நுழைவுக் கட்டணம் வாங்க வேண்டும் என்றார் ஒருவர். எங்கள் கைட் அவரோடு சண்டை போட்டு, எங்களை உள்ளே அழைத்துச் சென்றார். உள்ளே, “தட்சணை போடுங்கள் தட்சணை போடுங்கள்” என்று கேட்டு ஒரு பெரிய தாம்பாளத்தில் தட்சணை வசூல் செய்கிறார்கள். அதில் பத்து ரூபாய், இருபது ரூபாய் இவைகளை உட்னே அப்புறப்படுத்தி, மினிமம் ஐம்பது ரூபாய் என்பது போல ஒரு தோற்றத்தை உருவாக்குகின்றனர். இட்ஸ் ஆல் இன் த கேம்!

வழியில் மதிய உணவை முடித்துக் கொண்டு (சூப், பராத்தா, இரண்டு சைட் டிஷ், புலவ், சாதம், சாம்பார், ரசம், தயிர், ஊறுகாய், பப்படம், காய்கறி சாலட், குலாப் ஜாமூன், ஐஸ்க்ரீம்) அங்கிருந்து பூரியை சென்றடைந்தோம். நாங்கள் தங்குவதற்காக ஏற்பாடு செய்யபட்டிருந்த சக்தி ஹோட்டலில் எங்களை ஆம் பன்னா(மாங்காய்,புதினா ஜூஸ்) கொடுத்து வரவேற்றார்கள். எங்கள் அறைக்குச் சென்று கொஞ்சம் ஓய்வெடுத்துக் கொண்டு மாலை பூரி ஜகன்னாதரை தரிசிக்க புறப்பட்டோம்.

-தொடரும்   







10 comments:

  1. கடைசியில் அந்த இளைஞனுக்கு கல்யாணம் ஆனதா இல்லையா?  அதை அம்போ என்று விட்டு விட்டீர்களே...  அலலது விட்டு விட்டார்களே...!

    ReplyDelete
    Replies
    1. ஆகாமல் இருக்குமா? நிச்சயமாக நடந்திருக்கும்.

      Delete
  2. படங்கள் மிகவும் அழகாக இருக்கிறது.

    சாட்சி கோபால் கோயில் வரலாறு சுவாரஸ்யமாக இருந்தது தொடர்ந்து வருகிறேன்...

    ReplyDelete
  3. வணக்கம் சகோதரி

    பதிவு அருமை. ஒவ்வொரு கோவிலுக்குந்தான் ஒரு வரலாறு கதை அதன அடையாளமாக இருப்பதை பார்க்கும் போது அந்த கோவில் தரிசனங்கள் மனதுக்குள் ஒரு திருப்தியை தந்து விடுகின்றன.

    இந்தக் கோவிலின் கதையும் நன்றாக உள்ளது. கண்ணனே சாட்சி சொல்ல பின் தொடர்ந்து வருவதை மனக்கண்ணால் கண்டு அவனை தரிசித்துக் கொண்டேன்.

    கோவில் படங்கள் அனைத்தும் அருமை. நடனமாடும் விநாயகரை வணங்கிக் கொண்டேன். தங்கள் யாத்திரை பயணத்துடன் தொடர்கிறேன். பூரி ஜகன்னாதரை காணும் ஆவலில் காத்திருக்கிறேன். பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    ReplyDelete
  4. படிப்பது பெரிதில்லை, அதைப்பற்றி இவ்வளவு விரிவாக கருத்துரை எழுதுகிறீர்களே அதை பாராட்ட வேண்டும்.

    ReplyDelete
  5. இது புதிய கோயில் இது வரை தெரிந்ததில்லைபானுக்கா. கதை கேட்டது போல இருக்கு.....

    மதியம் சாப்பாடு நல்ல கனமான சாப்பாடாக இருக்கே விருந்து போல!

    முதல் படம் செம.

    ஆம் பன்னா!! ஆஹா ரொம்பப் பிடிக்கும்...ஆனா எனக்குக் குடிக்க முடியாதே!! வீட்டில் செய்வதுண்டு!

    கீதா

    ReplyDelete
  6. குழு ஒருங்கிணைப்பாளர் நல்ல சாப்பாடு போட்டிருக்காரே! நாங்க மந்த்ராலயம் போனப்போ அந்த ஒருங்கிணைப்பாளர் மந்த்ராலயத்தில் போடும் அன்னதானத்தில் எங்களைச் சாப்பிட வைத்து விட்டுச் சாப்பாட்டுக்கு 100 ரூ ஒருத்தருக்கு என வசூலித்துவிட்டார். கேட்டும் பலனில்லை.

    ReplyDelete