மஹாபெரியவர் தரிசன அனுபவங்கள்
மஹா பெரியவாள் தரிசன அனுபவங்கள் என்னும் நூலை படித்துக் கொண்டிருக்கிறேன். அதில் அவருடைய தொண்டர்கள், மற்றும் பக்தர்கள் அவரை தரிசனம் செய்த அனுபவங்களை விவரித்திருக்கிறார்கள். இதில் டாக்டர் ஸி.கே.ராமன் என்பவர் எழுதியிருக்கும் இரண்டு அனுபவங்கள் என்னை மிகவும் கவர்ந்ததோடு மட்டுமல்ல, மஹா பெரியவர்களைப் பற்றிய என் புரிதலையும் மாற்றின.
1977ஆம் ஆண்டு அமெரிக்காவின் தூதராக புகழ் பெற்ற வழக்கறிஞரும், பொருளாதார நிபுணருமான திரு.பால்கிவாலாவை அரசு நியமித்தது. பதவி ஏற்க அமெரிக்கா செல்வதற்கு முன்பாக பெரியவரை தரிசிக்க விரும்பிய பால்கிவாலா காஞ்சிபுரம் வந்திருந்தாராம். ITDC விருந்தினர் மாளிகையில் தங்க வைக்கப்பட்டிருந்த பால்கிவாலா விருந்துக்கு முன்னர் பெரியவரை தரிசிக்க விரும்பியிருக்கிறார். உடனே டாக்டர் ராமன் அவர்கள் ஒருவரை மடத்திற்கு அனுப்பி, பால்கிவாலா பெரியவரை தரிசிக்க விரும்பும் விஷயத்தை கூறி அனுமதி வாங்கிவர சொல்லியிருக்கிறார். ஆனால் மடத்தில் இருந்தவர்கள் ஹிந்துக்கள் அல்லாதவரை பெரியவர் தனியாக தரிசிக்க இயலாது என்று கூறி விட்டனராம்.உடனே திரு.ராமன் அவர்கள் தானே நேரில் மடத்திற்குச் சென்று, மஹா பெரியவரை சந்தித்து, விஷயத்தை கூறியதும், அவர்,"பால்கிவாலாவா? அவர்தானே நம்ம அர்ச்சகாள் கேஸில் சுப்ரீம் கோர்ட்டில் வாதாடி ஜெயித்துக் கொடுத்தார்?வரச்சொல்லு,வரச்சொல்லு" என்றாராம். உடனே டாக்டர் ராமன் பால்கிவாலாவை அழைத்துக் கொண்டு பெரியவரை காணச் சென்றாராம். பெரியவர் அவரோடு சுமார் அரைமணி நேரம் ஹிந்தியில் பேசிக் கொண்டிருந்தாராம். அவருக்கு ஆசீவாதமும் பண்ணி அனுப்பினாராம். "இதை என்றும் மறக்க முடியாது" என்று பால்கிவாலா சொல்லிச் சொல்லி மகிழ்ந்தாராம்.
அவர் குறிப்பிட்டிருக்கும் மற்றொரு சம்பவம்: 1977ஆம் ஆண்டு ஜேசீஸ் அமைப்பின் சார்பில் ஏழை மணமக்களுக்கு இலவச திருமணம் நடத்தி வைத்தார்களாம். திருமணம் முடிந்த பிறகு சில தம்பதிகள் பெரியவரிடம் ஆசி பெற விரும்பினார்களாம். நடந்த திருமணங்களில் சில கலப்பு மணங்களாம். அதனால் அவற்றை பெரியவர் ஏற்றுக் கொள்வாரோ மாட்டாரோ என்ற தயக்கம் டாக்டர் ராமனுக்கு வரவே, ஒரு அன்பரை மடத்திற்கு அனுப்பி அனுமதி கேட்டிருக்கிறார். அவர்கள் மறுத்து விட்டார்களாம். இவர் விடாப்பிடியாக தானே நேரில் சென்று மஹாபெரியவரிடம் தம்பதிகளை அழைத்து வர உத்தரவு கேட்டிருக்கிறார். அவர் மறுக்காமல், "வரச்சொல்" என்றதோடு எத்தனை பேர் என்று கேட்டாராம், இருபது ஜோடி மணமக்கள் என்றதும் அனைவரையும் வரச்சொல்லி, அனைவருக்கும் இருபது நிமிடங்கள் அறிவுரையும், ஆசிர்வாதமும் வழங்கி ஒவ்வொரு ஜோடிக்கும் ரூ.125/ மதிப்புள்ள வஸ்திரங்கள் வழங்கினாராம். ஜெயேந்திரரும் அதில் கலந்து கொண்டு அவர்களை வாழ்த்தியது மேலும் அதற்கு பெருமை சேர்த்ததாம். பரமாச்சார்யர் பழமையை ஆதரிப்பவர்தான் ஆனாலும், மனிதாபிமானத்திற்கு அப்புறம்தான் இவையெல்லாம் என்று அன்று உணர்த்திக் காட்டியது எங்களையெல்லாம் மெய்சிலிர்க்க வைத்தது என்று திரு.ராமன் முடித்திருக்கிறார். எனக்கும் அதே உணர்வுதான். பரமாச்சாரியார் பழமையை வீட்டுக் கொடுக்க மாட்டார், கலப்புத் திருமணங்களை கண்டிப்பாக ஆதரிக்க மாட்டார், தீவிர ஜாதீய அபிமானி என்று நினைத்திருந்தேன். அதை மாற்றியது டாக்டர் ராமன் அவர்களின் கட்டுரை.
பெரியவர்கள் என்றும் பெரியவர்களே!..
ReplyDeleteஉண்மை! நன்றி.
Deleteமஹா பெரியவா பற்றிய பல வேண்டாத கருத்துகளை நான் ஏற்பதே இல்லை.
ReplyDeleteஒரு மஹா பெரிய கருணை தெய்வம்.
அவரை நினைப்பதாலேயே பல துன்பங்கள் என் வாழ்வில் மறைந்திருக்கின்றன.
மிக நன்றி பானுமா.
//ஒரு மஹா பெரிய கருணை தெய்வம்.// இதை எந்த சந்தேகமும் கிடையாது. நன்றி.
Deleteமஹாபெரியவரைப் பற்றி படிப்பதே இனிமை.
ReplyDeleteரிஷி மூலம் ந்திமூலம் பார்க்கக் கூடாது என்பதுபோல அவங்க செய்யும் செயலையும் எடைபோடக் கூடாது. அவர்கள் செய்வதில் எல்லாம் அர்த்தம் பொதிந்திருக்கும்.
இன்னொன்று, மடத்தின் தலைவர்கள் என்றால் மடத்தின் மரபுகளை ஸ்டிரிக்ட் ஆக தொடரணும். சிலர் காலத்தைக் கருதி சில நீக்கு போக்குகளை அனுசரிப்பர். சிலர் முழுமையாக புதுமைகள் செய்ய முற்படுவர்.
//மடத்தின் தலைவர்கள் என்றால் மடத்தின் மரபுகளை ஸ்டிரிக்ட் ஆக தொடரணும்.//உண்மைதான். நன்றி.
Deleteநாங்க பலமுறை பெரியவரைப் பார்த்திருக்கோம். பல பேர் பலவிதமாகக் கருத்துச் சொல்கின்றனர். என்றாலும் நாங்கள் ஏற்பதில்லை. இப்போது அவரைப் பற்றி தினமும் விதம் விதமாகக் கதைகள் வருவதைத் தான் ஏற்க முடியவில்லை. :( எல்லாமே உண்மை எனச் சொல்ல முடியாதே!
ReplyDelete//கதைகள் வருவதைத் தான் ஏற்க முடியவில்லை. :( எல்லாமே உண்மை எனச் சொல்ல முடியாதே!// நான் அப்படி நினைக்கவில்லை. எல்லாம் உண்மையாகத்தானிருக்கும் என்றே நினைக்கிறேன். தான் உயிரோடு இருந்தவரை அவை வெளியே வராகி கூடாது என்று பெரியவரின் சங்கல்பமாக இருந்திருக்கலாம். வருகைக்கு நன்றி.
Deleteபெரியவர் ஆசாரங்களைத் தீவிரமாகக் கடைப்பிடித்தாலும் ஏழை ஜனங்களுக்கும் அருள் புரிந்திருக்கிறார். ஆனால் ஜெயேந்திரர் ஒரு படி மேலே போய்ச் சேரி வாழ் ஜனங்களுக்குத் தொண்டு செய்திருக்கார். இன்னும் சொல்லப் போனால் ஜெயேந்திரரை "சேரி சாமியார்" என்றே அழைப்பார்கள். இந்த விஷயத்தில் பெரியவருக்கும் ஜெயேந்திரருக்கும் ஒத்துப் போகவில்லைதான்!
ReplyDeleteஅதனால்தானோ என்னவோ வீரமணி கூட ஜெயேந்திரர் மறைந்த பிறகு அவர் சமுதாய பணி ஆற்றியிருக்கிறார் என்று கூறினார்.
Deleteநான் மடத்தின் மூன்று பெரியவர்களையு ஒரு சேர கண்டிருக்கிறேன்
ReplyDeleteஅப்படியா? 80களின் இறுதியில் இருந்திருக்கலாம். வருகைக்கு நன்றி.
ReplyDeleteம்... ம்...
ReplyDeleteகருத்து சொல்ல தெரியவில்லை. இறையை நம்புபவன் நான்.
வணக்கம் சகோதரி
ReplyDeleteமஹா பெரியவா பற்றி நல்லதொரு தொகுப்பு. படித்து தெரிந்து கொண்டேன். சென்னையிலிருந்த போது முதல் தடவையாக உறவினர்களுடன் காஞ்சிபுரம் சென்று, சுவாமிகளை வரிசையில் சென்று தரிசனம் செய்து வந்திருக்கிறோம். அப்போது அவர் உடம்பு முடியாமல் படுத்தபடி இருந்தார். அங்குதான் கூட்டத்தில் என் மகளுக்கு (சிறுவயது) அப்போதுதான் வாங்கிப் போட்ட கழுத்துச் செயினை தவற விட்டு வந்தோம். கூட்டத்தில் பக்தியுடன் தரிசிக்க வந்தவர்களுடன் திருடவும் வந்திருப்பார்கள் என அப்போது எங்களால் நம்பவே இயலவில்லை. பகிர்வுக்கு மிக்க நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
நிறைய அனுபவங்கள் பற்றி படித்திருக்கிறேன். எங்கள் குடும்பத்திலும் இப்படி சில விஷயங்கள், நிகழ்வுகள் உண்டு.
ReplyDelete