கணம்தோறும் பிறக்கிறேன் 

Tuesday, July 20, 2021

அபார்ட்மெண்ட் அலப்பறைகள்!

அபார்ட்மெண்ட் அலப்பறைகள்!

அளவற்ற காற்று, அருகாமையில் அங்காடி 
பத்துநிமிட நடையில் பேருந்தில் பயணிக்கலாம் 
நிலத்தடியில் நீருக்கு பஞ்சமில்லை என்று 
பல கூறி  அடுக்குமாடி குடியிருப்பில் 
வீடொன்றை விற்று விட்ட     
வித்தகன் சொன்னது பொய்யில்லை 
சொல்லாமல் விட்டது 
இசையென்ற பெயரில் இரைச்சலாய் ஓசை 
விரும்பினாலும் வெறுத்தாலும் வறுபடும் மீன்வாசம்
பால் பாக்கெட் திருட்டு, பறிபோகும் செய்தித்தாள் 
இன்னும் ஜாதிச்சண்டை, இனச்சண்டை,மொழிச்சண்டை 
இத்தனையும் உண்டு எங்கள் குடியிருப்பில்  

இது எப்போதோ அப்பார்ட்மெண்ட் வாசம் பற்றி நான் எழுதியது.

பெரிய குடியிருப்பு வளாகங்களில் வசிப்பதில் பல சௌகரியங்கள் உண்டு.  குழந்தைகள் வெளி நாட்டிலோ, வெளி ஊர்களிலோ இருக்க, இங்கே தனியாக இருக்கும் முதியவர்களுக்கு பாதுகாப்பு,பொழுதுபோக்கு எல்லாம் கிடைத்துவிடும். சிறு குழந்தைகளுக்கு தோழர்களும் கிடைத்து, விளையாட இடமும் கிடைக்கும். அவ்வப்பொழுது வாயை மெல்ல அவலும் கிடைக்கும்.

அக்கம்பக்கத்தில் இருப்பவர்கள் ஒத்துழைக்காவிட்டால் சமயங்களில் சில பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். குடியிருப்புகளில் வசிப்பவர்கள் நாய் வளர்த்தால் அதனால் வரும் சண்டைகள்... எங்கள் குடியிருப்பில் இந்த செல்லங்களால் அடிக்கடி சண்டை வரும். அதனால் சில சமயங்களில் போலீசும் வரும். 

அன்று நடைப் பயிற்சிக்குச் சென்ற பொழுது ஒரு பிளாக் முன்பு கொஞ்சம் கும்பல், சில போலீசும் நின்று கொண்டிருந்தார்கள். விசாரித்ததில் யாரோ ஒருவன் பொண்டாட்டியை அடித்திருக்கிறான், சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் போலீசை வரவழைத்து விட்டனர் என்று தெரிந்தது. அப்போது இரண்டு பேர் பேசிக் கொண்டது காதில் விழுந்தது:

"என்ன சார்? வழக்கம் போல நாய் தகறாரா?" 

"இல்லையில்லை, எவனோ ஒருத்தன் பொண்டாட்டிய போட்டு அடிச்சிருக்கான்."

"ஓ! அந்த நாயா?" 

இதைக் கேட்டு எனக்கு சிரிப்பு வந்தது. அதே சமயத்தில் இந்த உரையாடல் எங்கேயாவது நிஜமான நாயின் காதில் விழுந்து, அது கோவித்துக் கொண்டு விடப்போகிறது என்றும் கவலையும் வந்தது.

தமிழ் சினிமாக்களில் இன்னும் கதாநாயகியை, கதாநாயகன் பொது இடத்தில் பளீரென்று அறைவது போன்ற காட்சிகளை வைக்கிறார்கள்.  நல்ல வேளை, அறை வாங்கிய நாயகி கன்னங்களைத் தடவியபடி,'சுகம்,சுகம்,அது இன்பமான துன்பமானது..' என்று பாடுவதில்லை. 

**************************************

மற்றொரு சுவாரஸ்யம் டெலிகிராம் க்ரூபில் நடந்தது. எங்கள் வளாகத்தில் டெலிக்ராமில் நிறைய குழுக்கள் இருக்கின்றன. பொதுவாக ஒரு க்ரூப், ஆண்கள் க்ரூப்,பெண்கள் க்ரூப், இதைத்தவிர அந்தந்த மாநில குழுக்கள். இதில் பொதுவான பெண்கள் குழுவில் எல்லா மாநிலத்தை சேர்ந்தவர்களும் உண்டு. அப்படியிருக்க அதில் தகவல்கள் பரிமாறிக்கொண்டிருக்கும் பொழுது ஹிந்தி பேசும் பெண் ஒருத்தி ஹிந்தியில் ஏதோ ஒரு ஜோக்கை டைப் செய்து அனுப்பியிருக்கிறாள். அது புரியாததால், ஹிந்தி தெரியாத, கோபமும்,குறும்பும் கொண்ட தமிழ்ப் பெண் ஒருத்தி தமிழில் ஒரு செய்தியை டைப் செய்து அனுப்பி விட அவளுக்கு அங்குஒரே கை தட்டல், தமிழ் க்ரூப்பில் "வெரி குட்! இப்படித்தான் இந்த ஹிந்திகாரர்களுக்கு  புகட்ட வேண்டும்" என்று ஏக பாராட்டுகள். 

"எல்லோருக்கும் ஹிந்தி புரியும், என்பதால்தான் அவள் ஹிந்தியில் ஜோக் அனுப்பினாள்" என்று ஹிந்திக்காரர்கள் கூற, "எங்களுக்கு ஹிந்தி தெரியும் நீங்களாக எப்படி அனுமானம் செய்து கொள்ளலாம்? பலரும் இருக்கும் இடத்தில் எல்லோருக்கும் தெரிந்த மொழியில் செய்திகளை பரிமாறிக் கொள்வதுதானே அடிப்படை சபை  நாகரீகம்?" என்று தமிழ்க்காரர்களும் கேட்க, சபை களை கட்டியது. 

****************************************

சமீபத்தில் எனக்கு வந்த வாட்சாப் செய்தி:




25 comments:

  1. //என்று தமிழ்க்காரர்களும் கேட்க, சபை களை கட்டியது. //

    //என்று தமிழ்க்காரர்களும் கேட்க, சபை களை கட்டியது. //

    என்று தமிழ்க்காரர்களும் கேட்க, சபை ரகளை காட்டியது!!!

    ReplyDelete
    Replies
    1. நீங்கள் சொல் வேந்தர்தான்.

      Delete
  2. ஏனோ எனக்கு நூற்றுக்கணக்கான, ஆயிரக்கணக்கான அபார்ட்மெண்டுகள் இருக்கும் வகை பிடிப்பதில்லை.  

    ReplyDelete
    Replies
    1. நான் இப்போது இருக்கும் அபார்ட்மெண்ட் ஏரியா.. சில வருடங்களில் 11 டவர்களுடன் 1500க்கும் மேல் மக்களோடு இருக்கும். காற்றோட்டமாக நிறைய இடம், ஜிம், யோகா, ஸ்விம்மிங் குளங்கள் என்றெல்லாம் நன்றாகத்தான் இருக்கும். பாதுகாப்பு.

      இருந்தாலும், பொதுவாக நண்பர்கள் கிடைப்பது அரிது.

      Delete
    2. நமக்கு பிடிக்கிறதா இல்லையா என்பது விஷயம் கிடையாது. மகன்,மருமகள் விருப்பம் தானே முக்கியம். அவர்கள் ஓட்டு பெரிய சொஸைட்டிக்கே.
      சிறிய ஒற்றை கட்டிடங்கள் பாதுகாப்பு குறைச்சல் என்று தோன்றும். இரண்டு பிளாக் இருந்தால் போதும் என்பது எங்கள் விருப்பம். அதிலேயே ஜிம், நீச்சல் குளம் எல்லாமும் இருக்கும்படி குடியிருப்புகள் உள்ளன.ஆனால் மருமகள் இப்படி பெரிய சொசைட்டி வேண்டும் என்றார். இந்த மாதிரி இடங்களில் காமன் ஏரியாவுக்கே நிறைய பைசா போகும். மெயின்டெய்ன் மும் அதிகம்.

      Delete
  3. இப்போதெல்லாம் அறை வாங்கிய பெண்கள் உடனே வட்டியுடன் திருப்பிக் கொடுத்து விடுவார்கள்...   "புதுமைப் பெண்களடி...   பூமிக்கு கண்களடி...   பாரதி சொன்னானே...  கவி பாரதி சொன்னானே..."

    ReplyDelete
    Replies
    1. இது கோவை சரளாக்கள் காலம்.

      Delete
  4. நல்ல கலாட்டாவாக இருக்கும் போல! எங்கள் குடியிருப்பில் அப்படி எல்லாம் எதுவும் நடப்பதில்லை. யாரும் நாயோ, பூனையோ வளர்ப்பதும் இல்லை. செடிகள் கூட பால்கனி இருப்பவர்கள் வைச்சுக்கொள்வதில்லை. நாங்கள் உட்பட! அவரவர் அவரவர் குடியிருப்புக்களில் சமையல், சாப்பாடு என இருந்து விடுகிறோம். அவ்வப்போது நேரில் பார்க்க நேர்ந்தால் குசலம் விசாரிப்பதோடு சரி. வெள்ளிக்கிழமைகள், விசேஷ நாட்களில் வெற்றிலை, பாக்கோடு தின்பண்டங்கள் பரிமாறிக்கொள்வோம். சண்டையெல்லாம் பெரிசா வந்ததில்லை.

    ReplyDelete
  5. இந்த விற்பனை வீழ்ச்சி அடையட்டும்...

    ReplyDelete
  6. வணக்கம் சகோதரி

    அப்பார்ட்மெண்ட் அலப்பறைகள் தலைப்பு நன்றாக உள்ளது.

    /பெரிய குடியிருப்பு வளாகங்களில் வசிப்பதில் பல சௌகரியங்கள் உண்டு.......
    அவ்வப்பொழுது வாயை மெல்ல அவலும் கிடைக்கும்./

    நல்ல நகைச்சுவை எழுத்து. வம்பை வளர்ப்பதிலும், விலை கொடுத்து வாங்குவதிலும் இந்த மனிதர்களுக்கு இணையேது..?

    /எல்லோருக்கும் ஹிந்தி புரியும், என்பதால்தான் அவள் ஹிந்தியில் ஜோக் அனுப்பினாள்" என்று ஹிந்திக்காரர்கள் கூற, "எங்களுக்கு ஹிந்தி தெரியும் நீங்களாக எப்படி அனுமானம் செய்து கொள்ளலாம்? பலரும் இருக்கும் இடத்தில் எல்லோருக்கும் தெரிந்த மொழியில் செய்திகளை பரிமாறிக் கொள்வதுதானே அடிப்படை சபை நாகரீகம்?" என்று தமிழ்க்காரர்களும் கேட்க, சபை களை கட்டியது. /

    ஹா.ஹா.ஹா. பல மொழிகள் பேசுபவர்கள் ஒருங்கே குடியிருக்கும் இடங்கள் இந்த அப்பார்ட்மெண்ட் குடியிருப்புகள். இதில் உன் மொழி, என் மொழி என பேதம் வந்தாலும் பிரச்சனைதான். இதை புரிந்து கொள்பவர்கள்தான் யார்..? புரிந்தவர்கள் எடுத்துச் சொன்னாலும் அவர்களுக்கே பிரச்சனைதான்.

    வாட்சப்பில் வந்த தள்ளுபடி செய்தி காலத்திற்கேற்ற தள்ளுபடி விற்பனை. அந்த பெயரை உபயோகிக்காது விட்டாலும், நம் மக்கள் கடைகடையாக ஏறி இறங்குவார்கள்.:) சுவாரஸ்யமான பகிர்தலுக்கு மிக்க நன்றி சகோதரி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    ReplyDelete
    Replies
    1. வழக்கம் போல் விளக்கமான பின்னூட்டத்திற்கு நன்றி கமலா.

      Delete
  7. சுவாரஸ்யமான வாழ்க்கை என்றே தெரிகிறது.
    நாய்கள் சண்டை நாய்ஸி யாக இருக்கும்.

    அபார்ட்மெண்ட் ஆனாலும் தனிப் பார்ட்மெண்டாக
    இருத்தலே சுகம்.

    ReplyDelete
  8. நாய்கள் சண்டை நாய்ஸி. அதை வைத்து மனிதர்கள் போடும் சண்டை நாஸ்டி.

    ReplyDelete
  9. திண்டுக்கல்லாரை வழி மொழிகின்றேன்

    ReplyDelete
  10. அலப்பறைகள் தான். திருவரங்கத்தில் 99 வீடுகள் கொண்டு முதன் முதலில் கட்டியது ஆதித்யா... அதிலும் இப்படியான ஸ்வாரஸ்யங்கள் - குறிப்பாக வம்புகள் உண்டு! :)

    சுவையான பதிவு.

    ReplyDelete
    Replies
    1. குடியிருப்புகளும் கூட்டு குடும்பம் மாதிரிதான். சண்டை, சமரசம் எல்லாம் சேர்ந்ததுதான்.

      Delete
  11. எங்கள் குடியிருப்பில் யாரும் யாரோடும் பேச நேரமில்லாமல் இருப்பார்கள் என்று முன்பு போட்டு இருந்தேன். ஆனால் என் கணவரின் கடைசி நிமிடங்களில் எதிர் வீட்டு மனிதர்கள் வந்து உதவியது மறக்கவே முடியாது.

    //அக்கம்பக்கத்தில் இருப்பவர்கள் ஒத்துழைக்காவிட்டால் சமயங்களில் சில பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். //

    அக்கம்பக்கத்து உறவுகள் என்றும் வேண்டும்.

    வாட்ஸ் அப்பில் இப்போது அக்கம் பக்கம் உறவுகள் நலம் விசாரிப்பு தொடர்கிறது.

    முன்பு போல அடுத்த வீட்டில் என்ன நடக்கிரது என்று பார்க்க யாருக்கும் இப்போது நேரமில்லை என்றே நினைக்கிறேன். அதனால் வம்புகள் முன்பை விட குறைவுதான்.

    ஆடி தள்ளும்படி விளம்பரம் சிரிப்பை வரவழைக்கிறது எப்படி எல்லாம் விளம்பரம்!


    .




    ReplyDelete
    Replies
    1. சமீபத்தில் என் மகனுக்கு பி.பி. அதிகமாகி விட்டது. எங்கள் வீட்டிற்கு மேல் மாடியில் இருந்த ஒரு பெண் தன்னுடைய கை குழந்தையை என்னிடம் விட்டு விட்டு என் மகனை ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றாள். அந்த குழந்தை பாவம் அதிகமாக அழுத்தித் அதற்கு ஜுரமே வந்து விட்டது.

      Delete
    2. அதிகமாக அழுது என்று வர வேண்டும்.

      Delete
  12. //தமிழ் சினிமாக்களில் இன்னும் கதாநாயகியை, கதாநாயகன் பொது இடத்தில் பளீரென்று அறைவது போன்ற காட்சிகளை வைக்கிறார்கள்//

    மேடம் மாற்றி ஏழுதி விட்டீர்கள்... திரைப்படங்கள் பார்ப்பது இல்லையோ... ?

    ReplyDelete
  13. ஹாஹா! வாங்க ஜி! நீங்கள் சொல்வது புரிகிறது. கதாநாயகிகளும்  ஹீரோக்களை அடிக்கிறார்கள், ஆனால் அது  செல்லமாக :)

    ReplyDelete