கணம்தோறும் பிறக்கிறேன் 

Monday, July 22, 2019

குரு பூர்ணிமா @ புனே

குரு பூர்ணிமா @ புனே


தகடு சேட் கணபதி கோவில்
புனே ஆட்டோ ஓட்டுனர்கள் சென்னை ஆட்டோ ஓட்டுனர்களுக்கு சளைத்தவர்கள் அல்ல.  நம்மை ஏற்றிக்கொண்டு விட்டு, இறங்கும் பொழுது மேலே போட்டு கொடுக்கச் சொல்லி தகராறு செய்கிறார்கள்.

கேரளாவுக்கும், பெங்களூருக்கும் பிறந்த குழந்தை போல இருக்கிறது புனே. சாலையின் இரு ஒரங்களிலும் நிழல் தரும் மரங்களை நட்டது யார் என்று தெரியவில்லை. அவற்றில் ஆலமரம் உட்பட பெரும்பான்மையை அப்படியே பராமரிக்கிறார்கள்.  நிறைய ஆலமரங்களை பார்க்க முடிந்தது. புதிய இடம் என்றாலும் புனே மீது ஒரு பாந்தவ்யம் உண்டாயிற்று.

நாங்கள் குளித்து, உடை மாற்றி, திருமண மண்டபத்திற்கு வந்த பொழுது, திருமண முதல் நாள் காலை நிகழ்ச்சிகளான விரதம், நிச்சயதார்த்தம் போன்றவை முடிந்து விட்டன.

மாலையில் சங்கீத். நம் சம்பிரதாயத்தில் இல்லாத மெஹந்தி, சங்கீத் போன்றவை இப்போது எல்லா திருமணங்களிலும் இடம் பெற தொடங்கி விட்டன. ஜானவாசம் விடை பெற்று விட்டது. விருந்தில் பானி பூரி, பேல் பூரி போன்ற சாட் அயிட்டங்களையும் சேர்த்து 21 அயிட்டங்கள். இளம் பெண்களின் தட்டில் வெள்ளரிக்காய், கேரட்,  வெங்காயம் இவைகளைதான் பார்க்க முடிந்தது. ரத்த அழுத்தத்திற்கும், சர்க்கரைக்கும் மாத்திரை சாப்பிடும் முதியவர்கள் இரண்டு குலாப் ஜாமூன்கள், கப் நிறைய ரஸமலாய், ஐஸ்கிரீம் என்று ஒரு கட்டு கட்டினார்கள்.

மறுநாள் திருமணத்தன்று காலை ஒரு சிறு தட்டில் மூணு ஸ்பூன் பைனாப்பிள் கேசரி, (இப்போது பைனாப்பிள் சீஸனோ? நேற்று பைனாப்பிள் ரசம், இன்று கேசரி)அரை தோசை, ஒரு ரவா இட்லி, சரவணபவன் மினி டிபனில் வழங்கப்படும் வடையை விட சற்றே பெரிய வடை என்று திட்டமாக டிஃபன்(செகண்ட் சர்விங் இருந்தது). மதியம் பால் பாயசம், வெள்ளரிக்காய் பச்சடி, பீன்ஸ் பருப்பு உசிலி, உ.கி.கார கறி(இதை யாரவது நன்றாக செய்வார்களா?), அவியல் என்று அதே சலிப்பூட்டும் மெனு. இந்த மெனுவை மாற்றுகிறவர்களுக்கு அவர்கள் விரும்பும் உணவகத்தில் ஒரு மாதத்திற்கு உணவு டோக்கன் வாங்கித்தரலாம்.

மாலை எங்கள் உறவினர் ஒருவரைப்பார்ப்பதற்காக சென்றோம். அவர்கள் இருப்பது வளர்ந்து வரும் கான்கிரீட் காடான புனே. அவர்களிடம் புனேயில் பார்க்க வேண்டிய இடங்கள் எவையெவை? என்று கேட்டதற்கு டாகுதாஷ் சேட் கணபதி கோவில், சனிவார் வாடா, பாலாஜி டெம்பிள் என்று அடுக்கினார்கள். என்னைப் பொருத்தவரை பாலாஜி என்றால் அவர் திருப்பதியில் இருப்பவர்தான். கீதா அக்கா பார்வதி ஹில்லுக்கு சென்று விட்டு வாருங்கள் என்றார். ஆனால் அங்கு 800 படிகள் ஏற வேண்டுமாமே...?

ஷாப்பிங் சென்று பூனா காட்டன் சாரி வாங்கலாம் என்று நினைத்தேன். நண்பரின் மனைவியோ,"பூனா காட்டன் சாரியெல்லாம் சென்னை யிலேயே கிடைக்கும், இங்கெல்லாம் ஷாப்பிங் எல்லாம் வைத்துக் கொள்ளாதீர்கள்" என்று கூறி விட அதுவும் கேன்சல்ட்.


மறுநாள் தகடு சேட் கணபதி கோவிலுக்குச் சென்றோம்.  ஊரின் மத்தியில், பிரதான சாலையில் இருக்கிறது அந்த கோவில். குரு பூர்ணிமாவோடு கூடிய செவ்வாய் கிழமை என்பதாலோ என்னவோ கூட்டம் இருந்தது. ஆனால் நகர்ந்து கொண்டே இருந்ததால் நன்றாக தரிசனம் செய்ய முடிந்தது. கோவில் வாசலிலேயே கடைகளில் விதம் விதமான மோதகங்கள் விற்கப்படுகின்றன. கோவில் சிறியதுதான், ஆனால் தங்க மயமாக ஜொலிக்கிறார் விநாயகர்.  வெளியே பெரிய மூஞ்சூறு வாகனம். நம் ஊரில் சிவனுக்கு எதிரே இருக்கும் நந்தியின் காதில் தங்கள் வேண்டுதல்களை சொல்வதைப்போல இங்கு மூஞ்சூரின் காதில் தங்கள் பிரார்த்தனைகளை சொல்லி வேண்டுகிறார்கள்.

நீட் தேர்வில் தேற வேண்டுமா? காதலிப்பவனை கைப்பிடிக்க வேண்டுமா?
என்ன வேண்டுதலோ?

என் கணவருக்கு ஏனோ மகாத்மா காந்தியை வீட்டுச் சிறையில் வைத்திருந்த, கஸ்தூரிபா இறந்த ஆகாகான் அரண்மனைக்குச் செல்வதில் அத்தனை விருப்பம் இல்லை. நாங்கள் அதை முன்பு ஒரு முறை பார்த்திருக்கிறோம்.  அங்கு கஸ்தூரிபாவுக்கு சமாதி உண்டு.



சனிவார் வாடா நுழை வாயில் 
மாலை சனிவார் வாடாவுக்குச் சென்றோம். நாங்கள் அந்த இடத்தை அடையும் பொழுது 5:35. 5:30 வரைதான் உள்ளே அனுமதிப்பார்களாம். வெளியே இருந்து புகைப்படங்கள் மட்டும் எடுத்துக் கொண்டோம். வாடா என்னும் மராட்டிய வார்த்தைக்கு புராதனமான கட்டிடம் என்று பொருளாம்.  "உள்ளே என்ன இருக்கிறது?" என்று எங்கள் உறவினர் பையனை கேட்ட பொழுது, " ஒரு பெரிய கதவு இருக்கும், அதன் உள்ளே சென்றால் அரண்மனையின் இடிபாடுகள்" என்று அவன் கூறியது நினைவுக்கு வர சரி பெரிதாக எதையும் மிஸ் பண்ணவில்லை என்று நினைத்துக் கொண்டேன். "இந்த இடத்திற்கு ஏன் சனிவார் வாடா என்று பெயர்?" என்று ஆட்டோ ஓட்டுனரை கேட்டேன். "இங்கு கிழமைகளின் பெயர்களில் சோம் வார் பேட், புத்வார் பேட் என்றெல்லாம் இடங்கள் உண்டு. அது போல இந்த இடம் சனிவார் பேட், இங்கிருக்கும் வாடா சனிவார் வாடா" என்றார்.

பின்னர் ஜங்கிலி மஹராஜ் சாலையில் இருக்கும் பாதாளீஸ்வரர் சிவன் கோவிலுக்கும், அதற்கு அருகில் இருந்த ஜங்கிலி மஹராஜ் என்னும் மஹானின் அதிஷ்டானத்திற்கும் சென்றோம்.

பாதாளீஸ்வரர் ஆலயம் மிகவும் புராதனமானதாம் 1500 வருடங்களுக்கு முந்தையது என்று அங்கு அமர்ந்திருந்த ஒருவர் கூறினார். அந்த கட்டிடம் தொல்பொருள் இலாகாவுக்கு சொந்தமானது என்ற அறிவிப்பினை பார்க்க முடிந்தது.

சிறிய சிவலிங்கத்தை நாம் தொட்டு வணங்கலாம். எதிரே ஒரு வட்ட வடிவ மண்டபத்தில் நந்தி இருக்கிறது.


அந்த பூங்காவில் இருக்கும் 92 வயதான ஆலமரம்
அருகில் இருக்கும் ஜங்கிலி மஹராஜ் அதிஷ்டானத்தில் குரு பூர்ணிமா என்பதால் சிறப்பு பூஜைகள் இருந்தன. குரு பூர்ணிமா அன்று ஒரு மஹானின் அதிஷ்டானத்திற்கு செல்ல முடிந்ததில் எனக்கு மிகவும் சந்தோஷம்.

எத்தனையோ மகான்கள் இந்த ஞான பூமியிலே. அத்தனை பேருக்கும் நம் வணக்கங்கள்.












35 comments:

  1. வணக்கம் சகோதரி

    தாங்கள் சென்று வந்த புனே பயணத்தைப் பற்றி சுவாரஸ்யமாக, மிகவும் அருமையாக எழுதியுள்ளீர்கள். கணபதி கோவில் நன்றாக உள்ளது. அத்தனை படங்களும் அருமை. குரு பூர்ணிமா தரிசனம் பற்றிய அனைத்து விபரங்களும் அறிந்து கொண்டேன். உங்களால் எங்களுக்கும் நல்ல தரிசனம் கிடைத்தது.

    சனிவார் வாடாவிற்கு உறவினர் பையன் சொன்னதும், தாங்கள் மூஞ்சூறுவிடம் வேண்டிக் கொள்பவரின் மனதின் எண்ணத்தை உணர்த்தியதும் வாய் விட்டுச் சிரிக்க வைத்தது.

    கல்யாண சமையல் பட்டியலும், அதற்கும் தங்கள் நகைச்சுவை எண்ணங்களையும் மிகவும் ரசித்தேன். பதிவு மிகவும் நன்றாக உள்ளது. பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    ReplyDelete
    Replies
    1. பதிவின் ஒவ்வொரு பகுதியையும் கவனித்து, குறிப்பிட்டு பின்னூட்டமிட்டதற்கு நன்றி.

      Delete
  2. //கேரளாவுக்கும், பெங்களூருக்கும் பிறந்த குழந்தை போல இருக்கிறது புனே//

    நல்லா இருக்கு உவமை.

    மூஞ்சுருவின் காதில் வலையுலகம் நசிந்து போவதையும், அதை பழையபடி எல்லோரையும் எழுத வைக்கும்படியும் நீங்கள் பிரார்த்தனை செய்து இருக்கலாமே...

    புகைப்படங்கள் அருமை.

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும், ரசிப்புக்கும், பின்னூட்டத்திற்கும் நன்றி.

      Delete
  3. குட்மார்னிங்.

    புனேயில்பெரிய அளவில் பார்க்கக்கூடிய இடங்கள் என்று ஏதுமில்லை போலும்.

    ReplyDelete
    Replies
    1. சிறிய அளவில் இருக்கிறது. அதற்கு அருகில் மலை வாசஸ்தலங்கள் இருக்கின்றன. ஊர் அமைதியாக இருக்கிறது.

      Delete
  4. கல்யாண மெனு புனே போயும் விடவில்லையா? எனக்கும் கல்யாணங்களில் இந்த சங்கீத் போன்ற சத்தங்களைப் பிடிப்பதில்லை. என்ன செய்ய! உறவினர்களோடு எதுவும் பேசமுடியாது... காதில் இரைச்சல்.

    ReplyDelete
    Replies
    1. பா.வெ. மேடம் சொல்லும் இந்த ஒன்றை நானும் ஒத்துக்கொள்கிறேன். பருப்புசிலி, அக்கார அடிசல், அவியல் என்ற வஸ்து, சேனை ஃப்ரை, இலையில் ஃப்ரூட் சாலட் என்று முதலில் போடுவது..... அப்புறம் ஒரு கலந்த சாதம் (புளியோதரை), பூண்டு இல்லாத காராசேவு -

      காலையில் டிஃபன் சாப்பிட்டால், மதியம் எதுவுமே சாப்பிட முடிவதில்லை.அதிலும் 11 மணிக்கு. பேசாம தயிர் சாதம், இஞ்சித் தொகையல், ஒரு கப்பில் பாயசம், நல்ல பான் (வெற்றிலை பாக்கு மடித்துத் தருவது) போதாதோ?

      Delete
    2. இப்போதெல்லாம் நிச்சயதார்த்தத்தை காலையிலேயே முடித்து விடுகிறார்கள். மாலையில் ஏதாவது வேண்டாமா?

      Delete
    3. மாலையில்தானே ரிசப்ஷன். அது வெளியார்களுக்கும் உரிய விழா. அதுனால அதில் பல்வேறு சுவைகளும் கலந்துடுது.

      Delete
  5. புனேயில் என் அத்தைப்பையன் இருக்கிறான். அழைத்துக்கொண்டே இருக்கிறான். ஒருமுறையாவது போய்வர வேண்டும். அங்கு பார்க்க என் முதல் தெரிவு அந்த அரண்மனை இடிபாடுகளாய் இருக்கும். அப்புறம் அந்த மூஞ்சூறும் பிள்ளையாரும்!

    ReplyDelete
    Replies
    1. கண்டிப்பாக சென்று விட்டு வாருங்கள். ஆகாகான் அரண்மனையை விட்டு விடாதீர்கள். அப்படியே மஹாபலேஷ்வருக்கு செகண்ட் ஹனிமூன் கூட போகலாம்.

      Delete
  6. அப்போ பார்வதி ஹில்லுக்கு செல்லவில்லையா...?

    நண்பரின் மனைவிக்கு "உங்களுக்கும் ஒரு சேலை வாங்கித்தர்றேன்"-ன்னு சொல்ல வேண்டாமோ...?

    ReplyDelete
    Replies
    1. இல்லை டி.டி. 800 படிகள் ஏறுவது என் கணவருக்கு மிகவும் கஷ்டம். ஸ்நேகிதரின் மனைவிக்கு இப்போது புடவையில் ஆர்வம் குறைந்து விட்டது.

      Delete
  7. புதிய இடங்கள், கோயில்கள். பார்க்க அருமையாக இருந்தன.

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும், கருத்துக்கும் மிக்க நன்றி.

      Delete
  8. //ஷாப்பிங் சென்று பூனா காட்டன் சாரி வாங்கலாம் என்று நினைத்தேன். நண்பரின் மனைவியோ,"பூனா காட்டன் சாரியெல்லாம் சென்னை யிலேயே கிடைக்கும், இங்கெல்லாம் ஷாப்பிங் எல்லாம் வைத்துக் கொள்ளாதீர்கள்" என்று கூறி விட அதுவும் கேன்சல்ட்.// கோலாப்பூர்ப் புடைவைகள் தான் புனேயிலும் கிடைக்கின்றன என நினைக்கிறேன். பார்வதி ஹில்ஸ் விட்டுட்டீங்களே! :( நாங்க ஏறிப் போனோம் சில வருடங்கள் முன்னர். நீங்களும் போயிருக்கலாம். போகட்டும். கோலாப்பூரிலாவது புடைவைகள் வாங்கினீங்களா?

    ReplyDelete
    Replies
    1. டி.டி.க்கு சொன்னதையே உங்களுக்கும் சொல்ல வேண்டும். 800 படிகள் ஏறுவது என் கணவருக்கு ரொம்ப கஷ்டம். ஸ்ரவணபெலகோலா சென்று விட்டு மிகவும் கஷ்டப்பட்டு விட்டார். எனவே இந்த முறை ரிஸ்க் எடுக்க விரும்பவில்லை.
      கோலாப்பூரில் புடவை வாங்கினேன்.

      Delete
  9. ஆட்டோக்காரங்க புனேயிலும் கூடத் தான் கேட்பாங்க. எங்களுக்கு என்னமோ இம்முறை கொஞ்சம் நல்ல ஆட்டோக்காரராகக் கிடைத்தனர். மஹாராஷ்ட்ராவின் மற்ற இடங்களை விட புனேயில் ஆட்டோவுக்கு அதிகம் செலவாகும். அதே மும்பையில் கரெக்டாக மினிமம் 35 ரூபாய் என்றால் 35 ரூபாய் தான் வாங்குவாங்க!குஜராத்திலும் அப்படியே!

    ReplyDelete
    Replies
    1. ஆட்டோ விஷயத்தில் மும்பையை மிஞ்ச முடியாது.

      Delete
  10. எரவாடாவுக்கு எல்லாம் போக நாங்களும் விரும்பவில்லை!

    ReplyDelete
    Replies
    1. இதை சொல்லவே வேண்டாம். :)

      Delete
  11. சதாரா போனீங்களா இல்லையா? ஆவலோடு காத்திருக்கேன். பரமாசாரியார் அங்கேயே தங்கி வழி நடத்தினார். பத்மா சுப்ரமணியம் தன் டாக்டரேட் படிப்புக்கு இங்கே தான் பிள்ளையார் சுழி போட்டார். அவரும் அங்கே தங்கி இருந்திருக்கிறார்.

    ReplyDelete
    Replies
    1. சதாரா சென்றோம். நடராஜரை தரிசித்தோம். விவரங்கள் வரும்.

      Delete
  12. இடுகை பெரியது.

    இன்னும் விளக்கமாக இரண்டு இடுகைகளாக எழுதியிருக்கலாம்.

    ReplyDelete
    Replies
    1. கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் நெல்லை பானுக்காவிடம் போய் இடுகை பெரிதுனு சொல்லிருக்கீங்க!!!!!!!!!!!!!!! அக்கா உள்ளதையும் சுருக்கிடாதீங்க!!!!!!!!!

      கீதா

      Delete
    2. ஒரு வேளை என் ஸ்டாண்டர்ட் படி நீளம் அதிகம் என்று சொல்லியிருக்கலாம்.

      Delete
  13. இடுகை பெரிது என்று எனக்கும் தோன்றியது. பிரித்தால் மிகவும் சிறியதாகி விடுமோ என்றும் தோன்றியது. பிள்ளையார் கோவில் பற்றிய விவரங்கள் எனக்கு கிடைக்கவில்லை. சனிவார் வாடாவில் விளக்கங்கள் ஹிந்தியில் மட்டுமே எழுதப்பட்டிருந்தன. ஆங்கிலத்தில் இருந்திருந்தால் அதை படித்து விட்டு எழுதியிருக்கலாம். கருத்துக்கு நன்றி.

    ReplyDelete
  14. டாகுதாஷ் சேட் கணபதி கோவில் நன்றாக இருக்கிறது.

    மூஞ்சூரின் காதில் தங்கள் பிரார்த்தனைகளை சொல்லி வேண்டுகிறார்கள்.//

    இப்போதுதான் கேள்வி படுகிறேன்.


    குரு பூர்ணிமா அன்று ஒரு மஹானின் அதிஷ்டானத்திற்கு சென்று வணங்கி வந்தது மகிழ்ச்சி.


    படங்களும், செய்திகளும் அருமை.

    ReplyDelete
    Replies
    1. மூஞ்சூரின் காதில் கோரிக்கைகளை சொல்வதை நானும் அங்குதான் முதல் முறையாக பார்த்தேன்.
      வருகைக்கும், கருத்திற்கும் நன்றி.

      Delete
  15. பானுக்கா இனிய காலை வணக்கம்.

    கல்யாண விவரணங்கள் சொன்னதை மிகவும் ரசித்தேன் உங்கள் எழுத்து ஸ்டைல் சிரிக்க வைத்து...

    நானும் பிள்ளையார் கோயில் சென்றிருக்கிறேன் ஆனால் அந்த பாதாளீஸ்வரர், ஜங்கிலி மகராஜ் போனதில்லை.

    பூனா கேரளா பங்களூரின் குழந்தை// ஹா ஹா ஹா ஹாஹ் ஆ அங்கும் கட்டிடக் காடு பெருகி வருகிறது அக்கா. ஆனால் பூனா வெதர் கிட்டத்தட்ட பங்களூர் போலத்தான். மேற்குத்தொடர்ச்சி மலையின் இந்தப் பக்கம் பங்களூர் மைசூர் என்றால் அந்தப் பக்கம் பூனா மும்பை...

    இன்னும் நிறைய எதிர்பார்க்கிறோம் அக்கா உங்க பயணம் பற்றி.

    ஆம் அங்கு கிழமைப் பெயர்களில் ஏரியா...புத்வார் என்றெல்லாம்.

    சனிவார் போனதில்லை.

    கீதா

    ReplyDelete
  16. வருகைக்கும் விரிவான பின்னூட்டத்திற்கும் நன்றி கீதா.

    ReplyDelete
  17. அந்த விநாயகர் கோவில் பேர், "தகடு சேட் (Dhagadu Sait) என்று நினைக்கிறேன் !!!

    ReplyDelete
    Replies
    1. ஓ! அப்படியா? மராட்டிய உச்சரிப்பு எனக்கு சரியாக புரியவில்லை. திருத்தி விடுகிறேன். நன்றி.

      Delete
  18. புனே இதுவரை சென்றதில்லை. மஹாராஷ்ட்ரா - அந்த வழியே ஒவ்வொரு முறை இரயில் பயணித்தாலும் ஒரு இடம் கூட தங்கிப் பார்த்ததில்லை! :( பார்க்காத மாநிலங்களில் பட்டியலில் மஹாராஷ்டிரமும் உண்டு.

    புனே தகவல்கள் அனைத்தும் சிறப்பு.

    கல்யாண சாப்பாடு மெனு - :)))

    ReplyDelete