கணம்தோறும் பிறக்கிறேன் 

Friday, September 8, 2017

தெருவில் ஒலித்து மறைந்த குரல்கள்

தெருவில் ஒலித்து மறைந்த குரல்கள் 

என்னுடைய பால்ய காலம் முதல் இளமைக் காலம் வரை நம் ஊரில் பெரும்பாலும் தனி வீடுகள்தான் இருந்தன. பிரிட்ஜ், டி.வி., வாஷிங் மெஷின், போன்றவை 90% வீடுகளில் கிடையாது. கிரைண்டர், மிக்ஸி, டூ வீலர் போன்றவையே ஆடம்பரம்தான். ஏ.சி.யா? அப்படீன்னா..என்ன? சிந்தாமணி,அமராவதி, டி.யூ.சி.எஸ்., போன்றவை தவிர சூப்பர் மார்க்கெட் என்னும் கான்செப்ட் பெரிதாக வளரவில்லை. எல்லோரும் பக்கத்தில் இருக்கும் நாடார் கடையிலோ, செட்டியார் கடையிலோதான் மாதாந்திர கணக்கில் சாமான்கள் வாங்குவார்கள். அதற்கென்று ஒரு குட்டி நோட்டு உண்டு. அந்த கடைகளில் பிளாஸ்டிக் பை தர மாட்டார்கள். நாம்தான் சாமான்கள் வாங்க துணிப் பையும், எண்ணெய் வாங்க தூக்கும் கொண்டு செல்ல வேண்டும்.    

எனவே அப்போதெல்லாம் தெருக்களில் நிறைய சாமான்கள் விற்றுக் கொண்டு வருவார்கள். விதம் விதமான குரல்களிலும், தொனி-  களிலும் தங்கள் பொருள்களை விற்றுக் கொண்டு போவார்கள். 

வீடுகளில் அம்மியும், ஆட்டுக்கல்லும் மட்டுமே இருந்ததால் "ஆட்டுக்கல் குத்தலையோ, அம்மிக்கல் குத்தலையோ" (ஆட்டுக்கல்லையும், அம்மிக்கல்லையும் பொள்ளுவதை  "குத்தலையோ?" என்பார்கள்). என்றபடி தலையில் ஒரு சிறிய சாக்கு பையை வைத்துக் கொண்டு   ஒருவர் கூவிக் கொண்டே செல்வார். 

ஒவ்வொரு ஞாயிறென்றும் பகல் மூன்று மணி அளவில் கடிகாரம், பேனா ரிப்பேர் செய்வதாக ஒருவர் ஒரு பெரிய மரப்பெட்டியை சுமந்து கொண்டு வருவார். அதில் வித விதமான பேனாக்கள் வைத்திருப்பார். கடிகாரத்தை சர்வீஸ் செய்யக் கொடுத்தால் கண்களில் ஒரு லென்ஸை மாட்டிக் கொண்டு, "பார் எத்தனை அழுக்கு" என்று நம்மிடம் காட்டுவார். "ஸ்ப்ரிங் சரியில்லை, முள் சரியில்லை" என்று ஏதோ கூறி, என்னவோ செய்து ஓடவிட்டு செல்லுவார். அந்த கடிகாரம் கொஞ்ச நேரம் ஓடும் பிறகு நின்று விடும். சரி செய்தவரிடம் கேட்கலாம் என்றால் கொஞ்ச நாள் தலையை காட்ட மாட்டார்.

இவரைத் தவிர, "பூ...ட்... ரிப்பேர்(பூட்டு ரிப்பேர்), கொடை ரிப்பேர் என்று கூவியபடி ஒரு ஆள் அடிக்கடி வருவார். மழைக் காலங்களில் சிலர் அவரிடம் தங்கள் வீட்டு குடைகளை ரிப்பேர் செய்து கொள்வார்கள். 

வெள்ளிக் கிழமை என்றால் காலையில்," உப்பு, வெள்ள வெள்ள (வெள்ளை, வெள்ளை) உப்பு.." என்று கை வண்டியில் உப்பை தள்ளிக் கொண்டு விற்க வருபவரிடம் பெரும்பாலும் எல்லோரும் உப்பு வாங்குவார்கள். வெள்ளிக் கிழமை உப்பு வாங்க வேண்டும் என்பது ஐதீகம் அல்லவா?     

வாரத்தில் இரண்டு முறை கெரசின் ஆயில் விற்றுக் கொண்டு வருபவர் அந்த வண்டியில் உள்ள மணியால் ஒலி எழுப்பும் பொழுது தாய்மார்கள்  தெரிந்து கொள்வார்கள் கெரசின் என்று. அப்போ- தெல்லாம் எல்லா வீடுகளிலும் கேஸ் அடுப்பு கிடையாது.கேஸுக்கு  புக் பண்ணிவிட்டு கனெக்ஷனுக்காக காத்திருக்க வேண்டும். சிலிண்டர் தீர்ந்து விட்டாலும் புது சிலிண்டர் அத்தனை சீக்கிரம் வந்து விடாது. எனவே எல்லோர் வீட்டிலும் மண்ணெண்ணெய் அடுப்பும், அதற்கு தேவையும் இருக்கும். 

மண்ணெண்ணெயை ட்ரம்மில் வாங்கி வைத்துக் கொள்வார்கள். அதிலிருந்து ஒரு பாட்டிலுக்கு இறைத்து வைத்துக் கொள்வார்கள். அப்படி இறைக்க ஒரு பம்பும்  எல்லார் வீடுகளிலும் இருக்கும். 1974-75 கால கட்டங்களில் மண்ணெண்ணெய் தட்டுப்பாடு இருந்தது. விற்பவர் ஒரு வீட்டுக்கு இரண்டு லிட்டருக்கு மேல் விற்க மாட்டார். 
எனவே மண்ணெண்ணைக்காக காத்திருக்கும் குடும்ப தலைவிகளுக்கு அந்த வண்டியின் மணி சத்தம் இன்பத் தேன் வந்து காதில் பாய்ந்தது போல இருக்கும்.

அந்த சமயத்தில் ரா.கி.ரெங்கராஜன் அவர்கள் குமுதத்தில் 'ஷ்ணாயில் ' என்று எழுதிய கதையை படித்தது இன்னும் நினைவில் இருக்கிறது. பதினோராம் வகுப்பு படிக்கும் ஒரு மாணவனின் அண்ணா கெரசின் ஆயில் விற்பவர். நன்றாக படிக்கும் அந்த மாணவன், எப்போதாவது அண்ணாவோடு உதவிக்கு செல்லும் போதெல்லாம் அண்ணாவிடம் அதை 'ஷ்ணாயில்' என்று சொல்வது தவறு, கெரசின் ஆயில் என்றுதான் கூறவேண்டும் என்பான். தம்பி கூறுவதை கேட்டுக் கொண்டாலும் அண்ணா ஷ்ணாயில் என்று கூவுவதை மாற்றிக் கொள்ள மாட்டார். பள்ளி இறுதி தேர்வு விடுமுறையில் அண்ணாவுக்கு ஒரு விபத்தில் காலில் அடிபட்டு நடக்க முடியாமல் போய் விடும். எனவே அவன் மண்ணெண்ணெய் விற்கச் செல்வான். அவனோடு படித்த பெண் வந்து கெரசின் வாங்குவாள், இவனைத் தெரிந்தது போல காண்பித்துக் கொள்ள மாட்டாள். அவன் முதலில் கெரசின் ஆயில் என்று கூவுவான், அது அவனுக்கே வித்தியாசமாக ஒலிக்க, 'ஷ்ணாயில்' என்றே அவனும் குரல் கொடுக்கத்  தொடங்குவான். என்று முடியும் கதை. 

இதைத் தவிர அந்தந்த ஸீசன்களுக்கு ஏற்றாற்போல கோல மாவு, வடு மாங்காய் எல்லாம் தெருவில் வரும். மல்லி, ஜாதி, கனகாம்பரம் போன்ற பூ விற்கும் பெண்கள், மாலையில்தான் வருவார்கள். மல்லிகைப் பூ சீசனில் மதியம் இரண்டு மணிக்கே உதிரிப் பூவை சைக்கிளில் விற்றுக் கொண்டு வருவார்கள்.   

பால்காரர்கள் சைக்கிளில்தான் வருவார்கள். சைக்கிள் பாரில் சற்று பெரிய மணியை கட்டி வைத்து, அதை அசைத்துதான் ஒலி எழுப்புவார்கள். ஒவ்வொரு பால்காரரின் மணியும் வித்தியாசமாக ஒலிக்கும். காலை,மாலை என இரு வேளை மட்டுமே பால் கிடைக்கும். பாக்கெட் பாலும் கிடையாது, அதை வைத்துக் கொள்ள குளிர்சாதன பெட்டியும் கிடையாது. நடுவில் யாராவது விருந்தாளிகள் வீட்டுக்கு வந்து விட்டால், அக்கம் பக்கத்தில் யார் வீட்டிலாவது பால் இருக்குமா என்று கேட்க வேண்டும்.  

பஞ்சு மிட்டாய் வியாபாரிகள் கூட சிறிய மணியை ஒலி எழுப்பியபடிதான் வருவார்கள்.

இரவில் எட்டு மணிக்கு மேல் கடலை வருத்தபடி செல்லும் வண்டிக் காரர் அந்த இரும்பு சட்டியில்  தட்டி 'டங் டங்' என்று ஒலி எழுப்புவார். பத்து பைசாவுக்கு ஒரு பொட்டலம் கடலையில் அடியில் ஒரு சிறு வெல்லத் துண்டும் போட்டு கொடுப்பார்.

தலை நரைத்து, வெள்ளை புடவை கட்டிக்கொண்டு வெண்ணை,நெய் கொண்டு வரும் கவுண்டர் பெண்மணியின் அருகில் சென்றாலே வெண்ணை வாசம் அடிக்கும். அதற்கு பிறகு எங்கள் வீட்டிற்கு சனிக்கிழமைதோறும் வெண்ணை கொண்டு வருபவர் அரை கிலோ வெண்ணை அளந்து போட்ட பிறகு, கையை நீட்டினால் ஒரு உருண்டை வெண்ணை கையில் போடுவார். 

பெரும்பாலும் மதியத்தில்தான் "பழைய சேலைகளுக்கு பாத்திரம், பிளாஸ்டிக் பக்கெட்" என்று குரல் எழுப்பியபடி எவர்சிவர், அலுமினிய பாத்திர வியாபாரிகள்   வருவார்கள். 

விடுமுறை நாட்களில் வண்டியில் ஐஸ் க்ரீம் விற்பவர்கள் மற்றும் பலூன்காரர்கள் சிறு குழந்தைகள் வீட்டில் இருக்கிறார்கள் என்று தெரிந்தால் நகராமல் 'பாம் பாம்'  என்று ஹாரன் ஒலி எழுப்புவார்கள். 

ஒவ்வொரு வியாழக் கிழமையும் பாத்திரங்கள் துலக்க அரப்புத்தூள் கொண்டு வரும் பெண்மணி பசலைப்  பொடி என்று பச்சை நிறத்தில் ஒரு பொடி கொண்டு வருவார், கொஞ்சம் கொழகொழப்பாக இருக்கும் அதை சிகைக்காயோடு சேர்த்து தலைக்கு தேய்த்துக் குளிப்போம். என் மகளுக்கு அரப்புத்தூள் என்றால் என்னவென்றே தெரியாது. 

இதைத் தவிர காவடி போல நீண்ட கழியின் இரு புறங்களிலும் தொங்க விடப்பட்டிருக்கும் பானைகளை சுமந்தபடி 'பதநி , பதநி' என்று விற்றுக் கொண்டு செல்லும் பதநீர் வியாபாரிகள். ஒரு அடுப்பில் வைக்கப்பட்டிருக்கும் சூடான சேமியா பாயசத்தை,'சே..மி..யா.. பா..ய..ஸ்.." என்று விற்றுச் சென்றவர்களை பார்த்திருக்கிறேன், ஆனால் இவை இரண்டையும் ருசித்ததில்லை. சேமியா பாயசம் பிரமாதமாக இருக்கும் என்பார் என் அண்ணா. 

காலை வேளைகளில் கீரை, காய் கறி இவைகளைக்கொண்டு வருபவர்களின் அழைப்பு. ஒரு கைப்பிடி அரிசிக்கு ஒரு கட்டு கொத்தமல்லி தரும் பாட்டி. இதே ஒரு கைப்பிடி அரிசிக்கு இலந்தை பழம்,களாக்காய் எல்லாம் வாங்கி சாப்பிட்டிருக்கிறோம்.

இதில் விளக்குமாறு விற்பவர்களும், ஒட்டடை கம்பு விற்பவர்களும்தான் பரிதாபத்துக்குரியவர்கள்.  எல்லோரையும் போல அவர்களும் தங்கள் பொருளின் பெயரை குறிப்பிட்டுதான் கூவுவார்கள். நாமும் அவர்களை கவலையேப் படாமல் ஏ! விளக்குமாறு! ஏ! ஒட்டடை கம்பு! என்று அழைப்போம், கொஞ்சம் கூட பாதிப்படையாமல் அவர்கள் வருவார்கள். சாதாரணமாக யாரையாவது இப்படி அழைத்து விட முடியுமா? 

எண்பதுகளின் இறுதியிலிருந்து நிலைமை மாற ஆரம்பித்தது. மிக்ஸியும், கிரைண்டரும் ஆடம்பரம் என்பதிலிருந்து அத்தியாவசியம் என்னும் நிலைமைக்கு மாறத் துவங்கின. தொன்னூறுகளின் இறுதியில் ஐ.டி. பூம் ஏற்பட்ட பிறகு, குளிர்சாதன 
பெட்டியும், வாஷிங் மிஷினும் அத்தியாவசியமாகி விட்டன. கடன் அட்டைகள் புழங்க ஆரம்பித்த பிறகு நாடார் கடைகளின் இடத்தை  சூப்பர் மார்கெட்டுகள் பிடித்துக் கொண்டன. 

தனி வீடுகள் குறைந்து கேட்டட் கம்யூனிட்டிகள் பெருகிய பிறகு வீதியில் சாமான்கள் விற்றுக் கொண்டு வருபவர்கள் என்ன ஆனார்கள் என்று தெரியவில்லை. 

இப்போதெல்லாம் ஆன் லைனில் ஆர்டர் கொடுத்தால் சாமான்கள் அட்டை பெட்டியில் அழகாக வந்து விடுகின்றன. மாறுதல்தானே வாழ்க்கை! 

Sunday, September 3, 2017

என் பின்னூட்டங்கள்

என் பின்னூட்டங்கள்

பெரும்பாலும் என் பின்னூட்டங்கள் கடைசியில்தான் வரும். காரணம் எனக்கு கிடைக்கும் சொற்ப நேரத்தில் பதிவுகளை படித்து முடிக்கவே நேரம் சரியாக போய் விடும். பிறகு தனியாக பின்னூட்டம் இடுவேன். சில சமயம் ரொம்ப நாளாகி விட்டது, இனிமேல் பின்னூட்டம் அளித்தாலும், அதை எழுதியவரே படிப்பாரோ மாட்டாரோ என்ற தயக்கம் எழுத விடாது. சில சமயங்களில் போன் வழியாக அனுப்பும் பின்னூட்டங்கள் போய் சேரவே சேராது  :(( 

எதற்கு இவ்வளவு வியாக்கியானம்? கீதா அக்காவின் யார் யாரை மன்னிப்பது என்னும் பதிவிற்கு பின்னூட்டம் எழுத நினைத்தேன், ஆனால் நாட்கள் மிக அதிகமாகி விட்டதால் தனி பதிவாகவே எழுதி விடலாம் என்று தோன்றியது. நீங்களும் என் பதிவை படிக்கும் முன் கீதா அக்காவின் மேற்படி பதிவை ஒரு முறை படித்து விட்டால், தொடருவது சுலபமாக இருக்கும்.

கீதா அக்கா தன்னுடைய பதிவில் ராமன் ராவண வாதத்திற்குப் பிறகு சீதையை தீக்குளிக்கச் சொன்னதை தவறு கிடையாது என்று நியாயப்படுத்தி இருக்கிறார். மேலும், தனக்கு கம்ப ராமாயணத்தில் அத்தனை பரிச்சயம் கிடையாது என்றும், வான்மீகி ராமாயணம் மற்றும் துளசி தாஸரின் ராமா சரித மாநஸ் படித்திருப்பதாகவும் கூறியிருக்கிறார். இன்னும் துளசி தாசரும், கம்பரும் ராமனை தெய்வமாகவே சித்தரித்திருக்க, வான்மீகி  மட்டுமே ராமனை ஒரு மனிதனாக கண்டுள்ளார் என்றும் கூறியிருக்கிறார். 

இதிலெல்லாம் எனக்கும் உடன்பாடுதான். என்னுடைய ஒரே சந்தேகம் சீதை அக்னி பிரவேசம் செய்தாள் என்றால் நிஜமாகவே நெருப்பில் புகுந்து எந்த வித சேதாரமும் இல்லாமல் வெளிப்பட்டாளா? என்பதுதான். ராமனையும், சீதையையும் அவதாரங்களாக கருதினால் இதை மறு பேச்சில்லாமல் ஒப்புக் கொள்ளலாம்,அப்படி இல்லாமல் சாதாரண மனிதர்கள் என்னும் பொழுது இது சாத்தியமா? என்று சந்தேகம் வருகிறது. 


எனக்குத் தெரிந்த ஒரு பேராசிரியர்,"புராணங்களை படிக்கும் பொழுது சில விஷயங்களை ஓவர் லுக் செய்ய வேண்டும், சில விஷயங்களை நுட்பமாக ஆராய்ந்து புரிந்து கொள்ள வேண்டும், சிலவற்றை அப்படியே ஏற்றுக் கொள்ள வேண்டும்  என்பார். லக்ஷ்மணன் பதினான்கு வருட வனவாசத்தில் தூங்கவே இல்லை என்பதை ஓவர் லுக் செய்ய வேண்டும், அவன் அப்படி கண்ணும் கருத்துமாக ராமனை கவனித்துக் கொண்டான் என்பதுதான் அதற்குப் பொருள் என்பார்.  இந்த அக்னி பிரவேச விஷயமும் அப்படிப்பட்ட ஒன்று என்றுதான் எனக்குத் தோன்றுகிறது.

ஒவ்வொரு கால கட்டத்திலும் சில சொற்கள், அல்லது  pharseகள் புழக்கத்தில் இருக்கின்றன. இப்போது, "அவனை செஞ்சுடணும்", "வெச்சு செய்யணும்" என்றெல்லாம் கூறினால், அது நல்லவிதமானது அல்ல. அதைப் போல, ''கேக் வாக்" என்றால் மிகவும் சுலபமானது என்றுதானே பொருள் கொள்வோம். நிஜமாகவே கேக்கின் மீது நடப்பது கிடையாதே. அதைப் போல அந்த கால கட்டத்தில் எதிர் கொள்ள மிகவும் கடினமாக இருப்பதை அக்னி பிரவேசம் என்று குறிப்பிட்டிருக்கலாம். மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா தன்னுடைய அரசியல் வாழ்க்கையை பற்றி கூறும் பொழுது, "நெருப்பு ஆற்றில் நீந்தி வந்தேன்" என்றதை எப்படி புரிந்து கொண்டோம்?



இப்படி abstract ஆக பல விஷயங்கள் நம் புராணங்களிலும், இதிகாசங்களிலும் உண்டு.  ஒரு முறை  திரு.ஜெய ராமா சர்மா அவர்கள் ராமாயண பிரவசனம் ஒன்றில் அகலிகையின் சாபத்தை பற்றி கூறும் பொழுது, "அகலிகையை கல்லாக போகும்படி கௌதமர் சபித்தார் என்றால், நாம் எல்லோரும் நினைக்கும்படி அவள் உணர்ச்சிகள் அற்ற வெறும் பாறையாக சமைந்து விடவில்லை. அவளுக்கு எல்லா உணர்வுகளும் இருக்கும் ஆனால், அனுபவிக்க முடியாது. பசிக்கும், சாப்பிட முடியாது, தாகம் எடுக்கும், தண்ணீர் அருந்த முடியாது, நகர வேண்டும் போலிருக்கும் ஆனால் இயலாது(அப்பா எத்தனை கொடுமை?) என்றார். காரணம், தன்னோடு இருப்பது தன் கணவர் அல்ல என்று அகலிகைக்கு தெரிந்து விடுகிறது, ஆனாலும், சரீர சுகத்தை விட்டுக் கொடுக்க மனம் இல்லாமல் அவள் இருந்ததால் சரீர சுகம் எதையும் அனுபவிக்க முடியாமல் கல் போல கிடக்க வேண்டும் என்று சபித்தாராம் கௌதமர். 

மஹா பாரதத்தில் குந்தியும், மாதுரியும் surrogate motherகளாக இருந்து பாண்டவர்களை ஈன்றிருக்கிறார்கள் என்பது விஞ்ஞானம் வளர்ந்து இருக்கும் இந்த கால கட்டத்தில் நமக்கு புரிகிறது. துரோணரின் பிறப்பு பரிசோதனை குழாய் குழந்தையின் பிறப்பை ஒத்து இருக்கிறது. அதே சமயத்தில் திரௌபதி ஐவரை மணந்து கொண்டதை அப்படியேதான் ஏற்றுக் கொள்கிறோம்.

மஹாபாரத யுத்தத்தின் பொழுது துரோணரை கொல்வதற்காக அவரிடம் தர்மபுத்திரர்,"அஸ்வத்தாமா அதஹா:குஞ்சரஹ:(இறந்தது அஸ்வத்தாமா என்னும் யானை) என்று கூறியவுடன் அதுவரை தரையிலிருந்து ஒரு அடி உயரத்தில் சென்று கொண்டிருந்த அவருடைய தேர் தரையில் இறங்கியது. என்கிறார் வியாசர். இதன் உட் பொருள் என்ன? அவருடைய தேர் அத்தனை நாட்கள் பரந்து கொண்டா இருந்தது? இல்லை, அதுவரை நடை முறை உலகில் இல்லாமல் ஒரு லட்சிய உலகத்தில் வாழ்ந்து கொண்டிருந்த தர்மபுத்திரர் நடை முறை உலகிற்கு இறங்கி வருகிறார் என்பதுதானே.  இப்போதும் நாம் லட்சியவாதிகளை பார்த்து "பூமியில் கால் ஊன்றி நில்" என்றுதானே சொல்கிறோம்? இந்துமதி, 'தரையில் இறங்கும் விமானங்கள்' என்று ஒரு அருமையான நாவல் எழுதியிருக்கிறார்.

ராமனை விட்டு விட்டு கிருஷ்ணனை நோக்கி வருவோம். பெரும்பாலோனோர் கிருஷ்ணனை பற்றி கூறும் ஒரு குற்றச்சாட்டு அவன் ஒரு ஸ்த்ரீ லோலன் என்பதாகும். கோபிகைகளோடு ராஸக்ரீடை புரிந்ததவன், அவர்கள் குளிக்கும் பொழுது அவர்கள் ஆடைகளை கவர்ந்து சென்றவன் என்றெல்லாம் கிருஷ்ணனை பழி கூறுகிறார்கள். உண்மையில் கிருஷ்ணன் ஒரு வாலிபனாக இதைச் செய்யவில்லை. சிறு குழந்தையாக இருந்த பொழுதுதான் இந்த லீலைகளை செய்திருக்கிறான். சிறு குழந்தைகள் இருக்கும் வீட்டில் உள்ளவர்களுக்கு தெரியும் எல்லா குழந்தைகளும் செய்வதுதான் இது போன்ற விஷமங்கள் என்பது. மகா பெரியவரே இதைப் பற்றி, " இப்போதெல்லாம் கிருஷ்ணனை ஒரு வாலிபனாக சித்தரித்து,அவன் கோபியரோடு ராசக்ரீடை செய்வது போல காலண்டர் போடு-  கிறார்கள், அது தவறு" என்று கூறியிருக்கிறார். 

மேலும் ஸ்ரீ கிருஷ்ணன் பிரமச்சாரி என்பதற்கு பாகவதத்தில் உள்ள சாட்சி பரீக்ஷித்தின் பிறப்பு. மகாபாரத யுத்த சமயத்தில் உத்தரையின் கர்ப்பத்தில் இருந்த சிசு ப்ரம்மாஸ்திரத்தால் தாக்கப்பட, பிறக்கும் பொழுதே இறந்துதான் பிறக்கிறது. அந்த குழந்தைதான் பாண்டவர்களின் ஒரே வாரிசு.அதுவும் இப்படி ஆகி விட்டதே என்று எல்லோரும் துக்கத்தில் இருக்க, அங்கு வரும் வியாசர் நைஷ்டிக பிரமச்சாரி ஒருவர் இந்த குழந்தையை தொட்டால் அது உயிர் பெரும் என்கிறார். நாரதர் உட்பட யாருக்கும் அந்த பிண்டத்தை தொடும் தைரியம் வரவில்லை. அப்போது குழந்தையை பார்க்க வரும் கிருஷ்ணர் உயிரில்லாத அந்த பிண்டத்தை தீண்ட அது உயிர் பெற்று விடுகிறது. அப்போதுதான் குந்தி, கிருஷ்ணரிடம்,"எங்களுக்கு எப்போதும் துன்பத்தையே தா, அப்போதுதான் நாங்கள் உன்னை மறக்காமல் இருப்போம் என்று வேண்டுகிறாள். நிறைய பெண்களை மணந்து கொண்ட கிருஷ்ணன் எப்படி பிரும்மச்சாரியாக இருக்க முடியும் என்ற கேள்விக்கு,"அந்த பெண்களை அடைய வேண்டும் என்று கிருஷ்ணர் விரும்பி அவர்களை மணக்கவில்லை. அந்த பெண்கள் கிருஷ்ணனை அடைய வேண்டும் என்று விரும்பி அவனை அடைந்தார்கள். எனவே மனதால் அவன் ப்ரம்மச்சாரிதான். என்று கூறப் படுகிறது. ஒரு விஷயத்தை செய்வதை விட எப்படி செய்கிறோம் என்பதுதான் முக்கியம் என்பதை வலியுறுத்த இந்த நிகழ்ச்சி கூறப் பட்டிருக்கலாம். 

இப்படி பல விஷயங்கள்.. சொல்லிக்கொண்டே போகலாம். சாதாரணமாக விநாயகரில் ஆரம்பிப்பதுதான் நம் மரபு. நாம் விநாயகரோடு முடிக்கிறேன். ஜி.எம்.பி. அவர்கள் விநாயகர் அகவலுக்கு பொருள் எழுதியிருந்தார். அதில் வரும் "மூலாதாரத்து மூண்டெழு கனலை காலால் எழுப்பும் கருத்தறிவித்தே" என்பதை பூடகமாக விளக்குவதுதான் தேவர்களும் அசுரர்களும் பாற்கடலை கடைத்தார்கள் என்னும் கதை.  பாற்கடலை கடைந்த பொழுது காமதேனு, கற்பக விருட்சம், அப்சரஸ்கள், லட்சுமி, சரஸ்வதி, தன்வந்திரி போன்ற பல விஷயங்கள் வெளி வந்தன. ஆல கால விஷமும் வந்தது, இறுதியில் அமுதமும் வந்தது. இவை எல்லாமே குறியீடுகள்தான்.   இதன் பொருளை பின்னர் கூறுகிறேன். இந்த பதிவு மிகவும் நீண்டு விட்டது.

படங்கள் நன்றி Google

Wednesday, August 30, 2017

விளாம்பழ பச்சிடி

விளாம்பழ பச்சிடி 
















தேவையான பொருள்கள்: 

விளாம்பழம் - 2(விநாயகர் சதுர்த்திக்கு வாங்கியது இருக்குமே)
வெல்லம்(பொடித்தது) - விளாம்பழ விழுது அளவு. இனிப்பு பிடித்தவர்கள் கொஞ்சம் அதிகம் போட்டுக் கொள்ளலாம்.
உப்பு - 1/2 டீ ஸ்பூன் 
தாளிக்க - கடுகு - 1/4 டி ஸ்பூன், மிளகாய் வற்றல் - 1, எண்ணெய் 




செய் முறை:

விளாம்பழம் பழுத்ததும்(முகர்ந்து பார்த்தால் வாசம் வரும்) அதை தரையில் கொஞ்சம் வேகமாக தட்டினால் உடைந்து விடும். உள்ளே இருக்கும் சதைப்பகுதியை எடுத்து ஒரு பாத்திரத்தில் போட்டு, கொஞ்சம் வெதுவெதுப்பான வெந்நீரை ஊற்றி ஊற வையுங்கள். இரண்டு நிமிடங்கள் கழித்து ஊறவைத்த விளாம்பழத்தை சாம்பாருக்கு புளி கரைப்பது போல பிசைந்தால், பழத்தின் கோது (நார் போன்ற பகுதி) கையில் தட்டுப்படும். அவற்றை தனியே வைத்து விட்டு, உப்பு, வெல்லம் இவைகளை சேர்த்து, அடுப்பில் சின்ன தீயில் வைத்து வெல்லம் நன்றாக கரையும் வரை அடி பிடிக்காமல் கிளறவும். பின்னர் இறக்கி வைத்து, கடுகு, மிளகாய் வற்றல் தாளித்து இறக்கினால் சுவையான, சத்தான விளாம்பழ பச்சிடி தயார். இதை சாம்பார் சாதம், புளி சேர்க்காமல் செய்யும் பொறித்த குழம்பு, மிளகூட்டல் போன்றவற்றிற்கு தொட்டுக் கொள்ளலாம்.    


விளாம்பழத்தின் பயன்கள்:

வயிற்றுப்புண், வயிற்றுப்போக்கு, அஜீரணம், மலச்சிக்கல் போன்ற பல வயிற்று உபாதைகளுக்கு நல்ல மருந்து. சர்க்கரை நோயை குணப்படுத்துவதிலும், புற்று நோய் வராமல் தடுப்பதிலும் சிறப்பான பங்கு வகிக்கிறது. ஆடி, ஆவணி, புரட்டாசியில்தான் அதிகம் கிடைக்கும். தவற விடாமல் வாங்கி சாப்பிடுங்கள். 

Friday, August 25, 2017

ஒரு நடிகை நாடகம் பார்ப்பதை ஒரு ரசிகை நினைத்துப் பார்க்கிறாள்

ஒரு நடிகை நாடகம் பார்ப்பதை ஒரு ரசிகை நினைத்துப் பார்க்கிறாள் 


ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள் - திரைப்படமாக்கப்பட்ட ஜெயகாந்தனின் இன்னொரு கதை. 'சில நேரங்களில் சில மனிதர்கள்' படம் தந்த வெற்றியில்   இந்த கதையையும் படமாக்கினார்கள் போலிருக்கிறது, ஆனால் படம் வெற்றி பெறவில்லை. இந்த படத்தின் பலம் , வசனம்(இந்தப் படத்தை பார்ப்பதற்கு பதிலாக, எல்.பி. ரெகார்டாக வந்தால் போட்டுக் கேட்கலாம் என்று விகடன் விமர்சனத்தில் எழுதியிருந்தார்கள்)நடிப்பு, மற்றும் பாத்திரப் படைப்பு. இந்த படத்தில் வரும் கல்யாணியைப் போன்ற பெண் பாத்திரப் படைப்பை அதற்கு முன்னும் தமிழ் சினிமாவில் கண்டதில்லை, அதற்கு பின்னும் இது வரை காணவில்லை.

கல்யாணியை காதலித்து மணந்து கொள்ளும் பத்திரிகையாளன் ரெங்கா, அவளோடு ஏற்படும் கருத்து  வேற்றுமை காரணமாக," ஒரு நல்ல நட்பை நாம் அவசரப் பட்டு கெடுத்து விட்டோம், பிரிந்து விடலாம்" என்பான். அதற்கு அவள், நாம் இருவரும் திருமணம் செய்து கொள்ளலாம் என்று நீங்கள்தான் சொன்னீர்கள், இப்போது பிரிந்து விடலாம் என்றும் நீங்கள்தான் சொல்கிறீர்கள், இதில் எனக்கு எதுவும் இல்லை" என்பாள்.

என்னைப் பிரிந்தால் நீ வருத்தப் படுவாயா? என்று கணவன் கேட்க, "இல்லை வருத்தப்பட மாட்டேன், உங்களோடு இருந்த நாட்களை நினைத்துக் கொண்டு சந்தோஷமாக இருப்பேன்" என்று அவள் கூறியதும், "உன்னுடைய இந்த பதில் எனக்கு ஏமாற்றமளிக்கிறது. அதுதான் ஆம்பள புத்தி" என்பான்.

விவகாரத்துக்காக அவர்கள் சந்திக்கும் ரங்காவின் நண்பரான வக்கீல்," நீங்கள் சொல்வதெல்லாம் விவாகரத்துக்கு போதுமான காரணம் கிடையாது. நீங்கள் இரண்டு பேரும் ஒரு வருடம் பிரிந்திருக்க வேண்டும்" என்று கூறி விடுகிறார். அந்த கால கட்டத்தில் கல்யாணிக்கு இடுப்புக்கு கீழே பாதிக்கப்பட்டு, நடக்க முடியாமல் படுத்த படுக்கையாகி விடுகிறார்.  அந்த செய்தியை கேள்விப் பட்டு அவளுக்கு உதவுவதர்க்காக வந்து அவளோடு சேரும் ரங்காவிடம் வழக்கறிஞர், "நீ கேட்ட விவாகரத்து கிடைப்பதற்கு இந்த ஒரு காரணம் போதும்" என்றதும், "வாழ இஷ்டமில்லாத இரண்டு பேரை இழுத்து பிடித்து வாழச் சொல்லி கட்டாயப் படுத்தும் உங்கள் சட்டம், எப்போது ஒருவருக்கு ஒருவர் துணையாக இருக்கவேண்டுமோ அப்போது பிரிந்து போகலாம் என்கிறது" என்று சீறுவார்.  

படம் கொஞ்சம் மெதுவாகத்தான் நகரும். இருந்தாலும் எல்லா பாத்திர படைப்புகளுமே சிறப்பு. சொற்ப நேரமே வரும் தேங்காய் சீனிவாசன்,காந்திமதி போன்ற எல்லோருமே நன்றாக நடித்திருப்பார்கள். ஸ்ரீகாந்த் நடித்திருந்த ஒரு சில படங்களில் இதுவும் ஒன்று. லட்சுமியின் நடிப்பை பற்றி சொல்ல வேண்டுமா?  கதையை படிக்கும் பொழுது கல்யாணி, ரங்கா பாத்திரங்களைப் பற்றி நம் மனதில் வரும் பிம்பங்களை முழுமையாக லட்சுமியும் ஓரளவுக்கு ஸ்ரீகாந்தும்  திரையில் கொண்டு வந்திருப்பார்கள். ஆனால் படிக்கும் பொழுது பெரிய பாதிப்பை ஏற்படுத்தாத வக்கீல் கதா பாத்திரத்தை கையில் எடுத்துக் கொண்டு  நாகேஷ் நடிப்பில் விஸ்வரூபம் எடுத்திருப்பார்.

என்னுடைய கல்லூரி காலத்தில் பார்த்த படம் இது. இப்போதும் ஜெயா டி.வி.யில்(அதில் மட்டும்தான் போடுகிறார்கள்) ஒளிபரப்பும் பொழுதெல்லாம் பார்ப்பேன்.

இந்த படத்தில் இரண்டு பாடல்களை ஜெயகாந்தன் எழுதி இருக்கிறார். அதில் கடைசியில் வரும் பாடல் இது.





தனிமையில் ஒரு கொண்டாட்டம்!

தனிமையில் ஒரு கொண்டாட்டம்!

எங்கள் வீட்டு விநாயகர்
என் வாழ்க்கையில் நானும் என் கணவரும் மட்டும் தனியாக கொண்டாடிய முதல் விநாயகர் சதுர்த்தி இந்த வருடம்தான். 
திருமணத்திற்கு முன்பு எங்கள் வீட்டில் எல்லா பண்டிகைகளும் உறவினர்களோடு சேர்ந்துதான் கொண்டாடுவோம். 

திருச்சியிலேயே இருந்த எங்கள் மாமாக்களின் குடும்பத்தார்கள் எங்கள் வீட்டிற்கு வந்து விடுவார்கள். வீடு நிறைய மனிதர்கள் இருப்பார்கள். குறிப்பாக விநாயகர் சதுர்த்தியும், தீபாவளியும் எல்லோரும் சேர்ந்துதான் கொண்டாடுவோம்.

*நாங்கள் கணபதி அக்கிரஹாரத்தை பூர்வீகமாக கொண்டவர்கள் என்பதால் வீட்டில் பிள்ளையார் சிலை வாங்கி பூஜிக்கக்கூடாது. என் அப்பா பிள்ளையார் படம் ஏன் பிள்ளையார் படம் போட்ட காலண்டர் கூட வைத்துக் கொள்ள அனுமதிக்க மாட்டார். கோவிலுக்கு சென்றுதான் அர்ச்சனை செய்து, நைவேத்தியம் செய்து விட்டு வர வேண்டும். அதனால் காலை எட்டரை மணிக்குள் பிரசாதம் ரெடியாகி விடும். அப்பா எங்களை அழகிரி குதிரை  வண்டியில் திருச்சி உச்சி பிள்ளையார் கோவிலுக்கு அழைத்துச் செல்வார். அங்கிருக்கும் மாணிக்க விநாயகருக்கு அர்ச்சனை செய்து விட்டு, பட்டர் ஒர்த் ரோடில் இருந்த அத்தை  வீட்டிற்கு சென்று பிரசாதம் கொடுத்து விட்டு வருவார். வண்டியிலிருந்து எங்களை இறங்க விட மாட்டார். நாங்களெல்லாம் இறங்கினால் நேரமாகி விடும் என்று பயம். அத்தை வீட்டில் பெரும்பாலும் பூஜை நடந்திருக்காது, சில சமயம் பூஜை முடிந்திருந்தால் அத்தை அவர்கள் வீட்டு பிரசாதம் கொடுப்பாள். எல்லா வருடமும், "வாசல் வரை வந்து விட்டு, உள்ளே வராமல் போகிறீர்களே" என்பாள். அப்பாவும் எல்லா வருடமும்," மணியாகி விட்டது, அங்கே எல்லோரும் காத்துக் கொண்டிருப்பார்கள்,போய் சாப்பிட வேண்டும்" என்பார்.

அம்மா, பாட்டி,மாமி என்று  நாங்கள் எல்லோரும் சேர்ந்து கொழுக்கட்டை செய்வோம். குழந்தைகளாகிய  நாங்கள் கொழுக்கட்டைக்கு சொப்பு செய்து கொடுப்போம், அம்மாவும், மாமியும் பூர்ணம் வைத்து மூடுவார்கள். மாமி கொழுக்கட்டையின் மூக்கு பெரிதாக இருந்தால், "உன் மூக்கு மாதிரி பெரிய மூக்கு, இது என் மூக்கு மாதிரி சின்ன மூக்கு, இது ஜப்பான்காரன் போல சப்பை மூக்கு" என்றெல்லாம் பேசிக் கொண்டே செய்வார். காலையில் எல்லோருக்கும் இலையில் போடுவதற்கு கொஞ்சம் செய்து விட்டு, மாலையில் மீண்டும் ஒரு செஷன் கொழுக்கட்டை செய்வோம். பூர்ண கொழுக்கட்டையும் அம்மணி கொழுக்கட்டையும் மாலை மற்றும் இரவு நேர மெனு. 

திருமணமாகி மஸ்கட்டில் இருந்த பொழுது நண்பர்கள் யாராவது வருவார்கள். பிறகு குழந்தைகள் இருந்தார்கள். இருவருக்கும் திருமணமாகி அவரவர் வீட்டில் கொண்டாடுகிறார்கள். இந்த வருடம் எங்களாலும் மகன் வீட்டிற்கு செல்ல முடியவில்லை, அவர்களுக்கும் இங்கு வர இயலவில்லை. எனவே நாங்கள் மட்டும் தனியாக கொண்டாடுகிறோம். தனியாக பண்டிகை கொண்டாடுவதைப் போல் போர் வேறொன்றும் இல்லை. 

கணவருக்கு இனிப்பு சாப்பிட முடியாது, வெறும் பழங்களை மட்டும் வைத்து நைவேத்தியம் செய்து விடலாமா? என்று தோன்றியது. ஆனலும் பழக்கத்தை விட மனமில்லாமல் பாயசம், வடை, அப்பம், கொழுக்கட்டை(பூர்ணம்,எள்ளு பொடி) என்று எல்லாம் செய்து விட்டேன். யார் சாப்பிடுவது? சுண்டல் வேறு இருக்கிறது..

வலை உலக நண்பர்கள் யாரையாவது கூப்பிட்டிருக்கலாம்.ஏனோ கில்லர்ஜியின் பெயர்தான் நினைவுக்கு வருகிறது. :)
-------------------------------------------------------------------------------------------------------------

* கணபதி அக்கிரகாரம் என்பது திருவையாருக்கும் கும்பகோணத்திற்கும் இடையில் உள்ள கிராமம். இங்கு வசிப்பவர்களுக்கு விநாயகரே எல்லாமும். பிள்ளையார் என்றால் கணபதி அக்கிரஹார பிள்ளையார்தான் என்பதால்தான் வீட்டில் வேறு பிள்ளையார் படங்கள் வைத்துக் கொள்வதில்லை. அந்த ஊரில் விநாயக சதுர்த்தி அன்று எல்லா வீட்டிலிருந்தும் வரும் பிரசாதங்களை ஒன்றாக கலந்து ஸ்வாமிக்கு நைவேத்தியம் செய்து பிறகு எல்லோரும் எடுத்துக் கொள்வார்கள். அன்று வழக்குகள் தீர்த்து வைக்கப்படும், சகோதரர்களுக்குள் பாகப் பிரிவினை கூட அன்றுதான் நடக்கும் என்றெல்லாம் கேள்வி பட்டிருக்கிறேன். 

நாங்கள் பல தலைமுறைகளுக்கு முன்பாக கண்டமங்கலத்தில் வந்து செட்டில் ஆகி விட்டாலும், விநாயக சார்த்தி அன்று எங்கள் ஊரில் உள்ள பிள்ளையார் சன்னிதியில் எங்கள் தாயாதிகள் எல்லோரும் ஒன்றாக அர்ச்சனை செய்து, எல்லார் வீடு ப்ரசாதங்களையும் கலந்து நைவேத்தியம் செய்து பின்னர் பகிந்து கொள்வார்கள். 

Monday, August 21, 2017

வரமா? சாபமா?

வரமா? சாபமா?

என்னுடைய 'நாள்  நல்ல நாள்' என்னும் பதிவில் பணிக்கு செல்லும் பெண்களுக்கு மாதவிடாயின் பொழுது விடுமுறை அளிப்பது என்பதை பற்றி நகைச்சுவையாக எழுதியிருந்தேன். ஆனால் சமீபத்திய குமுதம் சிநேகிதி இதழில் இதைப் பற்றிய செய்தி ஒன்றை படித்த பொழுது அதே விஷயத்தை கொஞ்சம் சீரியசாக யோசிக்கலாமோ என்று தோன்றியது. 



மேற்கண்ட செய்தியை மேலெழுந்தவாரியாக பார்த்தால் பெண்களுக்கு மிகவும் உதவும் ஒரு திட்டமாகத்தான் தோன்றும். ஆனால் கொஞ்சம் ஆழ்ந்து யோசித்தால்...?

மேலும் இதில் உள்ள நடைமுறை சிக்கல்களை ஆராய்ந்து பார்த்தார்களா என்று தெரியவில்லை. பள்ளியில் ஒவ்வொரு பெண்ணுக்கும், ஆசிரியைக்கும் மாதம் மூன்று நாட்கள் விடுமுறை என்பது எவ்வளவு பெரிய சிக்கல்? அன்றைக்கு தேர்வு இருந்தால் அதிலிருந்தும் விலக்கு கோருவார்களா ?  தவிர பெண்களின் அந்த வலியையும், வேதனையையும் உணர முடியாத விடலை பருவ ஆண்கள், "இவர்களுக்கு வேறு வேலை கிடையாது," என்றோ, "உங்களுக்கு என்ன மாதம் மூன்று நாள் ஜாலியாக லீவு போட்டு விடுவீர்கள்" என்றோ கேலிதான் பேசுவார்கள்.  

மாத விலக்கின் பொழுது எல்லா பெண்களுக்கும் வயிற்று வலி வரும் என்று கூறி விட முடியாது. அப்படியே வந்தாலும் அது இரண்டு மணி நேரங்களுக்கு மேல் நீடிக்காது. அப்பொழுது, சூடாக ஏதாவது குடித்து விட்டு,கொஞ்சம் தூங்கினால் சரியாகி விடும். எனவே பள்ளிகளில், ரிட்டயரிங் ரூம் ஒன்று கட்டி, வயிற்று வலியால் அவதிப் படும் பெண்களை ஓய்வெடுக்கச் சொல்லலாம். வேண்டுமென்றால் வலி நிவாரணி மருந்துகளை தரலாம். இன்னும் நிஜமான அக்கறை இருந்தால் யோகா பயிற்சிகள் கொடுத்து வயிற்று வலியை சமாளிக்கும் வழிகளை சொல்லிக் கொடுக்க வேண்டுமே ஒழிய, விடுமுறை அளிப்பது பயன் அளிக்காது. 

என்னுடைய இரண்டாவது அக்கா கொஞ்சம் பயந்த சுபாவம் கொண்டவர்கள். அவர் வயதுக்கு வந்த புதிதில் ஒவ்வொரு மாத விலக்கின் பொழுதும் பள்ளி செல்லாமல் விடுமுறை எடுத்துக் கொண்டாராம். ஒரு முறை ஊரிலிருந்த வந்திருந்த எங்கள் பெரிய மாமா,(அவருக்கு பெண்கள் ஆண்களுக்கு நிகராக படிக்க வேண்டும், வேலைக்குச் செல்ல வேண்டும் என்ற எண்ணம் உண்டு) என் அக்காவுக்கு கவுன்சிலிங் கொடுத்து பள்ளி செல்ல வைத்தாராம். அதுதான் முறையான செயல். 

அலுவலகங்களை எடுத்துக் கொள்ளுங்கள். அங்கு பணி புரியும் பெண்கள் ஒவ்வொரு மாதமும் மூன்று நாட்கள் விடுமுறை எடுத்துக் கொண்டால் அவர்கள் செயல் திறன் குறைவாக மதிப்பிடப்படாதா? கட்டிட வேலை, வயல் வேலை, ஏன் திரைப்பட துறையில் கூட ஆண்களுக்கு வழங்கப் படும் சம்பளம் பெண்களுக்கு கிடையாது. காரணம், ஆண்கள் செய்யும் அளவிற்கு, பெண்களால் வேலை செய்ய முடியாது என்பதுதான். மாதம் மூன்று நாள் விடுமுறை என்பதை ஒப்புக் கொண்டால், எல்லா துறைகளிலும் ஆண்கள் அளவு பெண்கள் செயலாற்றுவதில்லை என்று குறிப்பிட்டு, பெண்களுக்கு சம்பளத்தை குறைத்தால் ஒப்புக் கொள்ளாமல் இருக்க முடியுமா?

பெண்கள் வேலைக்குச் செல்வது என்பது இப்போது மட்டும் நடக்கும் ஒரு நிகழ்வு அல்ல. காடு,கழனிகளில் வேலை செய்யும் பெண்களுக்கும், வீட்டு வேலை செய்யும் பெண்களுக்கும் இந்த தொந்திரவுகள் கிடையாதா? இந்த திட்டத்தை வரவேற்பவர்கள் அவர்கள்  வீட்டில் வேலை செய்யும் பணிப் பெண்ணுக்கு மாதம் மூன்று நாட்கள் விடுமுறை அளிக்கத் தயாரா?

பெண்கள் பணியாற்ற மிகவும் கடினமான துறைகளான ராணுவம், விண்வெளி ஆராய்ச்சி, திரை உலகில் தொழில் நுட்ப பிரிவுகள் ஆகி இவற்றில் பெண்கள் புகுந்து, சாதனைகள் படைத்துக் கொண்டிருக்கும் வேளையில் அவர்களின் சிறகுகளை வெட்டும் முயற்சியாகத்தான் இது எனக்குப் படுகிறது. 

Thursday, August 17, 2017

நாள் நல்ல நாள்

நாள் நல்ல நாள் 


"ஹாய் ரம்ஸ் எப்படி இருக்க?" என்று கேட்டபடியே வீட்டுக்குள் 
சதீஷ் நுழைந்த பொழுதே ரமாவிற்கு கணவன் உற்சாக மூடில் இருக்கிறான் என்பது தெரிந்து விட்டது. 

"என்ன ஒரே குஷி? ஆபிஸில் என்ன விசேஷம்?"

"அப்படி கேளு.. என் டீமில் இருக்கிற வித்யா இன்னிக்கு செமத்தியா என்கிட்ட மாட்டிக்கிட்டா.. வெச்சேன் அவளுக்கு சரியான ஆப்பு.."

"என்ன ஆச்சு?"

"இன்னிக்கு லீவு கேட்டா, முடியாதுனு சொல்லிட்டேன்."

"இது ஒரு பெரிய விஷயமா?"

"கண்டிப்பா.. அவ லீவு கேட்டதுக்கு சொன்ன காரணம்தான் முக்கியம்."

"அப்படி என்ன காரணம்? குழந்தைக்கு உடம்பு சரியில்ல.."

"அப்படியெல்லாம் சொல்லியிருந்தா கொடுத்திருப்பேனே.. ஐ  காட் மை சம்ஸ்(பீரியட்ஸ்) னு சொன்னா.. யார் கிட்ட? எங்கிட்ட..?
என்ன மேடம், உங்களோடது டுவெண்ட்டி செவென் டே சைக்கிள், பன்னிரண்டு நாள்தான் ஆகிறது.. அதுக்குள்ள எப்படினு கேட்டேன், பதிலே இல்ல, மரியாதையா ஆஃபீஸுக்கு வந்துட்டா.."

"இந்த விவரம் எல்லாம் உனக்கு எப்படி தெரியும்?"

"ஏன் தெரியாம? ஆபிஸில் வேலை பார்க்கும் எல்லோருடைய பீரியட்ஸ் டைமும் பிங்கர் டிப்பில் வெச்சிருக்கேன். தீபிகாவுக்கு தர்ட்டி டே சைக்கிள், அடுத்த வாரம் ட்யூ, சாக்ஷாவுக்குதான் கொஞ்சம் இரெகுலர், ப்ரியா..."

சதீஷ் அடுக்கிக் கொண்டே போக, "வெய்ட்! வெய்ட்! என்று இடை மறித்த ரமா  என்னோட சைக்கிள் தெரியுமா?" என்று கேட்க.

கொஞ்சம் திடுக்கிட்ட சதீஷ், "அது... உனக்கு ட்வெண்ட்டி செவென் டே சைக்கிள் தானே..?" என்க,

"ட்வெண்ட்டி செவென் டே சைக்கிள் தானே..?..தட் மீன்ஸ் யூ ஆர் நாட் ஷுயர்.. எனக்கு எப்போ டியூ? சொல்லு பார்க்கலாம்.."

"வந்து.. இப்படி திடீர்னு கேட்டா எப்படி சொல்றது..?" சதீஷ் சமாளிக்க முயற்சி செய்தான்.

"வித்யா என்ன முன்னாலேயே சொல்லி வெச்சுட்டு லீவ் கேட்டாளா? ஊர்ல இருக்கிறவ டேட் எல்லாம் தெரியறது, பெண்டாட்டி பத்தி தெரியல..."

ரமா விருட்டென்று எழுந்து உள்ளே சென்று கதவை சாற்றிக் கொள்ள.. "உனக்கு தேவையடா இந்த பெருமை?" என்று சோபாவில் சரிந்தான். 

வேறொன்றுமில்லை பெண்களுக்கு மாதவிடாயின் பொழுது விடுமுறை அளிக்க வேண்டும் என்று பிருந்தா காரத் கூறியதை கேட்டதும், என் கற்பனை பறவை சிறகை விரித்து விட்டது. 

Monday, August 14, 2017

ஆடி அவஸ்தைகள்!

ஆடி அவஸ்தைகள்!




"ஆடி மாதம் வந்து விட்டாலே தொல்லை தாங்க முடியவில்லை..." என்று அலுத்துக் கொண்டார் ஒரு நண்பர். "ஏன்? என்னாச்சு?" என்றேன். 

பின்னே என்ன அவரவர் இஷ்டத்திற்கு சேல், சேல் என்று கூவத் தொடங்கி விடுகிறார்கள். நாம்தானே கஷ்டப் பட வேண்டியிருக்கு..?" என்றார். 

அவர் கஷ்டத்திற்கு நான் ஒன்றும் செய்ய முடியாது, எனக்கு வேறு வித கஷ்டம்.  

என்னது நான் சொல்வது காதில் விழவில்லையா? இன்னும் கொஞ்சம் சத்தமாக பேச வேண்டுமா? 

ஓ.. லவுட் ஸ்பீக்கர் அலறுகிறதா? அதை மீறி கத்த வேண்டுமா? 
இதுதான், நான் சொல்ல நினைத்ததும். இந்த லவுட் ஸ்பீக்கர் தொல்லை...

அம்மனுக்கு கூழ் ஊற்றுகிறேன் என்ற பெயரில் வெள்ளிக்கிழமை கூழ் ஊற்றுகிறார்கள் என்றால் வியாழக் கிழமை முதலே லவுட் ஸ்பீக்கரில் பாட்டு அலறத் தொடங்கி விடும். 

இந்த பாடல்களுக்கு இசை அமைத்தவர்களோடு கொஞ்சம் பேச முடிந்தால் நன்றாக இருக்கும். 

"சின்னஞ் சிறு பெண் போலே..." போல  கம்போஸ் செய்ய வேண்டாம், குறைந்த பட்சம் எல்.ஆர்.ஈஸ்வரியின்,"தாயே கருமாரி.." போலவாவது இருக்க வேண்டாமா?

"துர்கா, சாமுண்டி.. " என்று முதலில் ஒரு பெண் அலறுகிறார், உடனே பின்னணி இசை ஒலிக்கிறது. எப்படிப்பட்ட பின்னணி தெரியுமா? எழுபதுகளில் வந்த படங்களில் கதாநாயகியை வில்லன் கடத்தி கொண்டு செல்வான், அவனைத் துரதியப்படி கதாநாயகன் ஒரு காரில் வரும் பொழுது பின்னணியில் ஒரு இசை ஒலிக்குமே, அதைப் போன்ற ஓசை. இதைக் கேட்டால் பக்தி வரும் என்ற அந்த இசை அமைப்பாளரின் நம்பிக்கை வியக்க வைக்கிறது. 

இவர்களுக்கு இத்தனை சத்தம் போடவும், தன் பக்தியை மற்றவர்கள் மீது திணிக்கவும் யார் உரிமை கொடுத்தார்கள்? மார்கழி மாதத்தில் அதிகாலையில் திருப்பாவை,திருவெம்பாவை பாடல்களை ஒலி பரப்புவது தொந்தரவு என்று அவற்றை ஒலி பரப்பக் கூடாது என்று தடை செய்தார்களே, குடியிருப்பு பகுதிகளில் மட்டுமல்லாது அலுவலகங்கள் நிறைந்திருக்கும் பகுதிகளிலும் கூட நாள் முழுவதும் இத்தனை இரைச்சலாக பாடல்கள் போடுவது அங்கு பணி ஆற்றுபவர்களுக்கு எத்தனை பெரிய அசௌகரியம்? இதைப்பற்றி  ஏன் யாரும் ஒன்றும் சொல்வதில்லை? 

இப்படிப்பட்ட கோவில் உற்சவங்களில் இன்னொரு தமாஷ் அவர்கள் ஓலி பெருக்கியை கையாளும் விதம். மைக் என்னும் ஆங்கில வார்த்தையை ஓலி பெருக்கி என்று அழகாக, பொருத்தமாக மொழி பெயர்த்திருக்கிறார்கள். நம்மால் ஒரு கூட்டம் முழுமைக்கும் கேட்கும்படி கத்த முடியாது என்பதற்காகத்தான் ஒலி அளவை பெருக்கிக் காட்டும் மைக்கை பயன் படுத்துகிறோம். ஆனால் நம்மவர்களோ ஒலி பெருக்கியில் உச்ச பட்ச டெசிபலில் அலறுவார்கள் . 

விவேக் நகைச்சுவையாக சொன்னார், நான் எனக்கு தெரிந்த விதத்தில் கூறியிருக்கிறேன். ஊதுகிற சங்கை ஊதுவோம், விடியும் போது விடியட்டும் 

Sunday, August 6, 2017

சில செய்திகள், சில எண்ணங்கள்

சில செய்திகள், சில எண்ணங்கள் 


வரதக்ஷனை கேட்டு தன்னை கொடுமை படுத்தினார்கள் என்று ஒரு பெண் புகார் கொடுத்தால் சம்பந்தப்பட்ட கணவன்,மற்றும் அவன் வீட்டாரை உடனே கைது செய்து சிறையில் அடைக்கலாம் என்று சட்டம் இயற்றப் பட்ட பொழுது, சோ மட்டுமே அதை கண்டித்தார்.
"இதனால் தனிப்பட்ட விரோதம் காரணமாக ஒரு பெண் மாமனார், மாமியாரை பழிவாங்க வேண்டும் என்ற நோக்கத்தோடு புகார் கொடுத்தால் அப்பாவியான அவள் கணவனும், அவன் பெற்றோரும் தண்டிக்கப் படக்கூடும்" என்றார். ஆனால் அப்படி பெரும்பாலும் நடக்காது. 


வரதக்ஷனை கொடுமைக்காக பல பெண்களின் புகுந்த வீடுகளில் ஸ்டவ்கள் வெடித்ததால்தான் அப்படி ஒரு சட்டம் இயற்றப் பட்டது. நம் பாரத நாரிகள் கணவனோ, மாமியாரோ அவளை கொளுத்தினால் கூட, இறக்கும் தருவாயில் அவளிடம் வாக்குமூலம் வாங்க காத்திருக்கும் போலீசிடம், "என் கணவருக்கும் இதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை, இது ஒரு விபத்துதான்' என்று கூறி ராமன்களை(??)மன்னிக்கும் சீதைகளாக இருந்ததால், குற்றவாளிகள் என்று நன்றாக தெரிந்தாலும் அவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்க முடியாமல் இருந்தது. அதற்காகத்தான் வரதக்ஷனை கொடுமைகளில் சம்பந்தப் பட்டவர்களை விசாரணை இல்லாமல் கைது செய்யலாம் என்ற சட்டம் இயற்றப்பட்டது. அது மீண்டும் மாற்றப்பட்டு விட்டது.


மனிதர்களுக்கு காதல் உணர்வை தூண்டுவது மூளையில் சுரக்கும் டோபோமைன் என்னும் ஹார்மோனம். காதல் உணர்வு கம்மியாக இருப்பவர்களுக்கு இந்த டோபோமைனை ஊசி மூலம் செலுத்தினால் காதல் உணர்வு அதிகரிக்குமாம். நம் நாட்டை பொறுத்த வரை டோபோமைன் சுரக்காமல் இருக்க மருந்து கண்டு பிடிக்கலாம். 'சொல்வதெல்லாம் உண்மை' நிகழ்ச்சியில் ஒரு பெண்ணை விசாரித்த லட்சுமி ராமகிருஷ்ணனிடம் அந்தப் பெண்,"பிளஸ் டூ படிச்சேன்,லவ் பண்ணினேன்" என்று கூற,லட்சுமி ராமகிருஷ்ணன்,"லவ் பண்ணியது இருக்கட்டும், வேற என்ன உருப்படியா பண்ணின?" என்றார். அதைப் போல நம் ஊர் இளைஞர், மற்றும் இளம்பெண்களை இந்த காதல் படுத்தும் பாடு இருக்கிறதே..! பாருங்கள் வாரா வாரம் ஓட்டுக்களை குவித்த ஓவியா  பிக் பாஸிலிருந்து வெளியேற காதல்தானே காரணம்!(அட சட்! பி.பி.யை தவிர்க்க முடியவில்லையே..!)


அதே போல தவிர்க்க முடியாத வேறு சில விஷயங்கள்  ஜி.எஸ்.டி., நீட் தேர்வு. ஜி.எஸ்.டி. பற்றி பேச எனக்கு ஞானம் பத்தாது. நீட் தேர்விலிருந்து தமிழ் நாட்டிற்கு விலக்கு அளிக்க வேண்டும் என்று தினசரி தொலைக்காட்சியில் கதறுகிறவர்கள் எல்லோரும், சி.பி.எஸ்.சி. பாடத்திட்டம், ஸ்டேட் போர்ட் பாடத்திட்டம் என்று ஏதோ சி.பி.எஸ்.சி. பாடத்திட்டத்தில் அதிகமாக கற்பிக்கப்படுவது போலவும், ஸ்டேட் போர்ட் பாடத்திட்டத்தில் ஒன்றுமே கற்பிக்கப் படுவதில்லை போலவும் பேசுகிறர்கள். உண்மையில் சி.பி.எஸ்.சி., ஐ.சி.எஸ்.சி., ஸ்டேட் போர்ட் எல்லாமே ஒரே பாட திட்டம்தான், கற்பிக்கப்படும் முறைதான் வேறு. முதல் இரண்டு போர்டுகளின் கல்வி முறை  ஒரு நிலத்தை ஆழ உழுவதற்கு சமம் என்றால், ஸ்டேட் போர்ட் கல்வி முறை அதே நிலத்தை அகல உழுவதற்கு சமம்.

ஸ்டேட் போர்டில் கிராம புறத்து மாணவர்கள் கல்வி கற்க எளிதாக இருக்க வேண்டும் என்று சொல்லி,ஒரு புறம் பாடத்திட்டத்தை நீர்த்து போக செய்து விட்டு, மறுபுறம் மதிப்பெண்களை அள்ளிப் போட்டு வாங்கும் மார்க்குகளுக்கு மரியாதை இல்லாமல் செய்து விட்டார்கள். வட மாநில பல்கலைக்கழகங்களில் தமிழ் நாட்டில் படித்து ஒரு மாணவன் 90 சதவிகிதம் பெற்றால் அதிலிருந்து 10மார்க்குகள் குறைவாகத்தான் மதிப்பிடுவார்கள். அதற்காகத்தான் ஒரு பொது தேர்வு நடத்தி அதன் மூலம் மாணவர் சேர்க்கை நடை பெறுகிறது. அதே முறையை மருத்துவ கல்லூரி சேர்க்கைக்கும் கடை பிடிப்பதில் என்ன தவறு? இவர்கள் பாட முறை எதையும் மாற்ற வேண்டாம். ஸ்டேட் போர்ட் தரத்தை உயர்த்த வேண்டுமென்றால் இரண்டு விஷயங்கள் செய்தால் போதும். ஒன்று, புத்தகத்தில் இருக்கும் அதே கேள்வியை நம்பரைக் கூட மாற்றாமல் கேட்பதை நிறுத்த வேண்டும். இரண்டாவது மதிப்பெண்களை அள்ளிப் போடுவதை குறைக்க வேண்டும். இவை இரண்டையும் செய்தாலே தரம் தன்னால் உயர்ந்து விடும். 

Tuesday, August 1, 2017

விக்ரம் வேதா - (விமர்சனம்)

விக்ரம் வேதா 
(விமர்சனம்) 



போலீசுக்கு தண்ணி காட்டும் நிழலுலக தாதா வேதாவை(விஜய் சேதுபதி) பிடிக்க அமைக்கப்படும் தனிப்படையில் ஒருவரான விக்ரம்(மாதவன்), அவரின் கூட்டாளியும், நண்பனுமான பிரேம் ஒரு ஆபரேஷனில் இறந்து விட, பிரேமை கொன்றது யார்? என்று அறிய முற்படும் பொழுது பல முடிச்சுகள் அவிழ்கின்றன. இறுதியில் தன் நண்பனை கொன்றவனை கண்டு பிடித்து பழி தீர்த்தாரா? என்பதே விக்ரம் வேதா. புஷ்கரின் காயத்ரியின் மூன்றாவது படம். 

நேர்மையான, துடிப்பான போலீஸ் அதிகாரி வேடத்தில் சிக்கென்று பொருந்துகிறார் மாதவன். அவருடைய மனைவியாக வரும் ஷ்ரத்தா ஸ்ரீநாத் நல்ல தேர்வு. ரொமான்ஸிலும் சரி,கணவன் யாரை வேட்டையாட துடிக்கிறானோ அவனுக்கே வக்கீலாக பணியாற்ற வேண்டியதால் ஏற்படும் ஊடலிலும் சரி தான் ஏற்றுக் கொண்ட பாத்திரத்திற்கு நியாயம் கற்பிக்கிறார்.

இதுவரை திரைப் படங்களில் அங்கும் இங்கும் மட்டும் தலை காட்டிய பிரேமுக்கு மாதவனுக்கு இணையான ரோல். அவரும் சிறப்பாக செய்திருக்கிறார்.

வழக்கமான தேர்ந்த நடிப்பு விஜய் சேதுபதியினுடையது. தன்  தம்பியைப் பற்றி மாதவனிடம் துக்கம் தொண்டையை அடைக்க, கண்ணீரை அடக்கியபடி பேசும் பொழுது, தன்னால் நெகிழ்ச்சியாகவும் நடிக்க முடியும் என்று நிரூபிக்கிறார்.

அவருடைய தம்பியாக வரும் தம்பியை எங்கேயோ பார்த்த மாதிரி இருக்கிறது. தன் பாத்திரம் உணர்ந்து நடித்திருக்கிறார். அவருடைய ஜோடியாக வரும் வரலக்ஷ்மி சரத்குமார் கலக்கல். அதுவும் அந்த ரெஸ்டாரெண்ட் காட்சியில்,"ஆங்.." என்னும் ஒரே வார்த்தையை விதம் விதமாக சொல்லும் பொழுது ரசிக்க வைக்கிறார். 

மாதவனின் குழுவில் வரும் சந்தானம் என்னும் கதாபாத்திரம் அதீத பயம், அதீத அடக்கமாக வரும்பொழுதே பின்னால் மாறுமோ என்று சந்தேகம் வருகிறது.

படத்திற்கு பெரிய பலம் சாம் சி.எஸ்ஸின் இசை. 'டசக்கு டசக்கு..' பாடல் ஜனரஞ்சகம் என்றால் யாஞ்சி..' பாடல் இனிமை. 

தாதாக்களை நியாயப்படுத்துதல், போலீஸ் ஒழுங்கில்லை என்று காட்டுவது, அண்ணன் தம்பி செண்டிமெண்ட், காதலா? கடமையா? என்ற போராட்டம், பாரில் குத்துப்பாட்டு, நிறைய வயலென்ஸ் என்ற தமிழ் சினிமாவின் அம்சங்கள் அத்தனையும் இருந்தாலும் தொய்யாத திரைக்கதை + வித்தியாசமான ட்ரீட்மெண்ட் படத்தை ரசிக்க வைக்கிறது.   

Sunday, July 23, 2017

பெரம்பூர் என்னும் பிரம்மபுரி

பெரம்பூர் என்னும் பிரம்மபுரி


மாயவரத்திலிருந்து காவிரிப்பூம்பட்டினம் செல்லும் மார்கத்தில் உள்ளது. பெரம்பூர் என்னும் சிற்றூர். குத்தாலம் தாலுகா, நாகப்பட்டினம் டிஸ்ட்ரிக்ட். அங்கிருக்கும் சுப்பிரமணிய ஸ்வாமிதான் என் மகளின் புகுந்த வீட்டினர்க்கு குல தெய்வம். 

கோவில் சிறியது என்று கூறிவிட முடியாது. கருவறையில் மயில் மீது வலது காலை கீழே தொங்க விட்ட படியும், இடது காலை மடித்தும் அமர்ந்த கோலத்தில் எழிலாக முருகன், தனி சந்நிதியில் தெய்வயானை. இந்தமுறை என் மகள் வீட்டாருடன் அந்த கோவிலுக்குச் சென்ற பொழுது, கோவிலைப் பற்றிய சிறப்புகளை அங்கிருக்கும் அர்ச்சகரிடம் கேட்டறிந்தேன்.

தற்பொழுது பெரம்பூர் என்று அறியப்பட்டாலும், இந்த ஊருக்கு புராதன பெயர் ப்ரம்ம மங்களபுரம் அல்லது பிரம்மபுரி என்பதாகும். பிரம்மபுரி என்பதே பெரம்பூர் என்று மருவி இருக்கலாம். பிரம்மா தான் இழந்த பதவியை மீண்டும் பெற்ற தலமாம் இது. பிரம்மாவுக்கு பதவி பறி போனதா? எப்போது? ஓம் என்னும் பிரணவ மந்திரத்திற்கு பொருள் என்ன என்று முருகன் வினவ, அதற்கு பொருள் தெரியாததால் பிரம்மாவை சிறையில் தள்ளி *அவருடைய தொழிலான படைக்கும் தொழிலை முருகன் எடுத்துக் கொள்கிறார். பிரம்மா தன் தவறை உணர்ந்து முருகனிடம் மன்னிப்புக் கேட்க, அவருக்கு மீண்டும் படைக்கும் தொழிலை ஒப்படைத்த இடம்தான் இது. ஆக, பிரம்மாவிற்கு 
நல்லது(மங்களம்) நடந்ததால் இது ப்ரம்ம மங்களபுரம். 

அதே போல சூரனை சம்ஹாரம் செய்து, அவனை மயிலாகவும், சேவலாகவும் மாற்றி, சேவலை கொடியிலும், மயிலை வாகனமாகவும் ஏற்றுக்கொள்கிறார். மயிலாக மாறிய சூரபத்மன் தன்னுடைய அசுர குணம் அழிய வேண்டும் என்பதற்காக தவம் இயற்ற, அந்த மயிலின் தலையில் தன் இடது ஆள்காட்டி விரலை பதித்து உபதேசம் செய்கிறார் முருகன். பெரும்பாலான கோவில்களில் மயிலின் தலை பாகம் முருகனுக்கு வலது புறம் இருக்கும், அவ்வாறு அமைத்திருந்தால் அது அசுர மயில் எனப்படுமாம்.இங்கு முருகனுக்கு இடது புறம் மயில் தலை பக்கம் இருக்கிறது. மேலும் மயில் தன் தலையைத் திருப்பி முருகனை பார்த்த வண்ணம் இருக்கிறது, ஆகவே அது தேவ மயில் என அறியப்படுகிறதாம். முருகனும் தன் தலையை சற்றே வலது புறம் சாய்த்து மயிலை நோக்கிய வண்ணம் இருக்கிறார்.  அதே போல சாதாரணமாக எல்லா கோவில்களிலும் முருகனின் கையில் இருக்கும் வேல் வீர வீல் என்றுதான் அழைக்கப்படுமாம், இங்கு முருகனின் கையில் இருக்கும் வேலுக்கு வஜ்ஜிர வேல் என்று பெயராம். எங்கெல்லாம் தேவயானை தணி சந்நிதியில் குடி கொண்டிருக்கிறாளோ, அங்கெல்லாம் முருகனுக்கு முன் யானைதான் வாகனமாக இருக்கும் என்னும் வழக்கத்தை ஓட்டி இங்கும் முருகனுக்கு முன் யானை வாகனம் காணப்பட்டாலும், பிரதான நுழைவு வாயிலில் மயில் வாகனமும் காணப்படுகிறது. அந்த மயில் வாகனத்திற்கு அருகில் ஸ்வாமியை வணங்கிய நிலையில் ஒரு மனிதருக்கு சிறிய சிலை உள்ளது. அது, இந்த கோவிலை நிர்மாணித்த மிளகு செட்டியாரின் சிலை என்றார்.

இங்கிருக்கும் முருகனின் பக்தரான செட்டியார் ஒருவர் மிளகு வியாபாரம் செய்து வந்ததால் மிளகு செட்டியார் என்று அழைக்கப்பட்டாராம். தினமும் மிளகு சேர்த்த வெண் பொங்கலை மட்டும் அதுவும் ஒரு முறை மட்டுமே உண்டு வந்த அவர், தன மிளகு வியாபாரத்தில் ஈட்டிய பொருளைக் கொண்டு இந்த கோவிலை ஐந்து நிலை கோபுரம் கொண்டதாக நிர்மாணம் செய்கிறார். அது முடியும் தருவாயில் தனக்கு முடிவு நெருங்கி விட்டதை உணர்ந்த அவர் இங்கிருந்து நகர்ந்து சென்று விடுகிறார். ஆனால் இறக்கும் தருவாயில் இந்தக் கோவிலை காட்டியது தான்தான் என்று உலகுக்கு அறிவிக்க கூடாது என்றும், முருகனை எப்போதும்  தரிசனம் செய்து கொண்டிருக்கும் வண்ணம் தன் உடல் அடக்கம் செய்யப்பட வேண்டும் என்றும், வருடத்தில் ஒரு நாள், அதாவது பொங்கலன்று மட்டும் தனக்கு மிளகு கலந்த வெந்நீரால் அபிக்ஷேகம் செய்யப்பட வேண்டும் என்றும் அதுவும் முதலில் முருகனுக்கு அபிஷேகம் செய்த பிறகுதான் தனக்கு செய்ய வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டு இறந்து போகிறார். அவருடைய விருப்பத்தின்படியே வாசலில் மயில் வாகனத்திற்கு அருகில் அவருக்கு ஒரு சிலை பிரதிஷ்டை செய்து, அதற்கு பொங்கலன்று மட்டும் மிளகு கலந்த வெந்நீரால் அபிஷேகம் செய்யப்படுகிறது என்றும் கூறினார்.

பிரகாரத்தை வலம் வரும் பொழுது, சிவன் கோவில்களில் கோஷ்டத்தில் தெற்கு முகமாக பார்த்து தக்ஷிணாமூர்த்தி இருப்பதை போல இந்த கோவிலில் தெற்கு முகமாக பார்த்து முருகனே 'குஹ தஷிணாமூர்த்தியாக' மயில் மீது இடது காலை மடித்து, வலது திருவடியை தொங்க விட்டு தக்ஷிணாமூர்த்தி கோலத்தில் அமர்ந்திருக்கிறார். பிரகாரத்தின் இடது கோடியில் விநாயகரும், வலது கோடியில் தனி சந்நிதியில் பிரம்மபுரீஸ்வரர் என்னும் திருநாமத்தோடு சிவ பெருமானும் குடி கொண்டிருக்கிறார்கள். சிவன் சந்நிதியில் அகத்தியரும் காணப்படுகிறார். சிவன் சந்நிதியின் கோஷ்டத்தில் தென் புறம் நோக்கியவண்ணம் தக்ஷிணாமூர்த்தியும் இருக்கிறார். சிறப்பான கோவில். அங்கிருக்கும் அர்ச்சகரும் சிரத்தையோடு பூஜைகளும், அலங்காரங்களும் செய்கிறார். தரிசிக்க வேண்டிய ஆலயம். 

ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம்  

* ப்ரம்மாவிடமிருந்து படைப்புத் தொழிலை எடுத்துக் கொண்ட முருகன் ஒரு வாரம் படைப்புத் தொழிலை மேற்கொண்டாராம். ஆனால் ப்ரம்மாவைப் போல் மனிதர்களில் வித்தியாசம் காட்ட முடியாமல் எல்லோரையும் ஒரே மாதிரி படைத்தது விட்டாராம். அப்போது படைக்கப் பட்டவர்கள்தான் சீனர்களும், ஜப்பானியர்களும் என்று ஒரு செவி வழி கதை உண்டு.  

படங்கள்:  கூகிள், நன்றி!

How to reach Perambur?: மயிலாடுதுறையிலிருந்து நாகப்பட்டினம் வழியாக பொறையாறு செல்லும் எண் 440 வழித்தட பேருந்தில் சென்றால் பெரம்பூரில் இறங்கி கொள்ளலாம்.


Monday, July 10, 2017

பயணங்கள் முடிவதில்லை

பயணங்கள் முடிவதில்லை 


சிறு வயதில் பயணம் செய்ய மிகவும் ஆசைப்பட்டிருக்கிறேன். அப்பொழுதெல்லாம் திருச்சி, விடுமுறை நாட்களில் கண்டமங்கலம் தவிர அதிகம் பிரயாணம் செய்ய வாய்த்ததில்லை. மிகவும் நெருங்கிய உறவுக் காரர்கள் வீட்டு திருமணங்களுக்கு குழந்தைகளில் யாராவது ஒருவரைத்தான் அழைத்துச் செல்வார்கள். அந்த லக்கி டிராவில் நமக்கு வாய்ப்பு கிடைத்தால் உண்டு. அப்படி ஒரு அதிர்ஷ்ட வாய்ப்பில் ஏழாம் வகுப்பு படிக்கும் பொழுது எங்களின் ஒன்று விட்ட மாமாவின் திருமணத்திற்க்காக முதன் முதலாக சென்னை (அப்போது மெட்ராஸ்) வரும் வாய்ப்பு கிடைத்தது. என் மூத்த சகோதரி திருமணமாகி புதுக்கோட்டையில் இருந்த பொழுது ஓரிரு முறைகள் புதுக்கோட்டை சென்றிருக்கிறேன். இரண்டாவது அக்கா, மூன்றாவது அக்காக்கள்  திருமணத்திற்குப் பிறகு அவ்வப்பொழுது சென்னை வந்தேன். என் திருமணத்திற்குப் பிறகு பயணங்கள் கொஞ்சம் அதிகம்தான். 

பயணத்தால் நமக்கு கிடைக்கும் அனுபவங்களை எந்த புத்தகத்திலும் படித்து பெற்று விட முடியாது. இப்போதும் பயணம் செய்ய விருப்பம் இருக்கிறது, ஆனால் உடல் சற்று அசந்து போகிறது. தவிர, பயணங்களுக்குப் பிறகு வீட்டை சீரமைப்பதை நினைத்தால், எங்கேயும் போக வேண்டாம் என்று தோன்றுகிறது. 

மூன்று வாரங்களாக புட்டபர்த்தி, திருவண்ணாமலை, திருப்பதி மயிலாடுதுறை என்று சற்று அலைச்சல். புட்டபர்த்தியில் முன்பு போல வெளிநாட்டவர் அதிகம் இல்லை. அங்கிருந்த வெஸ்டர்ன் கேண்டீன் மூடப்பட்டு விட்டது.  

 திருவண்ணாமலைக்கு இரண்டு வருடங்களுக்குப் பிறகு சென்றேன். பெரிதாக மாற்றமில்லை. நாங்கள் அங்கிருந்த பொழுது மளிகை சாமான்கள் உள்பட வாங்கி கொண்டிருந்த ரோஷன் மால் பெயர் மாற்றம் செய்யப் பட்டுள்ளது.  














கிரிவலம் வரும் பொழுது அடி அண்ணாமலையார் கோவிலிலிருந்து பார்த்தால் மலையின் இந்த பகுதியில் நந்தியின் முகம் போல தெரியும். இந்த படத்தில் இரண்டு செடிகளுக்கு இடையில் பாருங்கள் ஒரு முண்டு போல் தெரிகிறது. நேரில் பார்க்கும்பொழுது அமர்ந்திருக்கும் நந்தி போலவே தெரியும். என்னுடைய செல் போனில் இவ்வளவுதான் முடிந்தது.










நாளொரு மேனி பொழுதொரு வண்ணம் என்பது திருப்திக்குத்தான் முற்றிலும் பொருந்தும்.  நான்கு வருடங்களுக்குப் பிறகு திருப்பதி விஜயம். APTDC மூலம் முன் பதிவு செய்து கொண்டு சென்றோம். நாங்கள் புக் பண்ணிய பொழுது திருப்பதியில் தரிசனத்திற்க்காக ரூ.300க்கு டிக்கெட்,காலை சிற்றுண்டி, பகல் உணவு உட்பட நபர் ஒருவருக்கு ரூ.1600/- என்றார்கள். ஆனால் பயணம் செய்த அன்று ஜி.எஸ்.டி. வரியால் ஹோட்டல் கட்டணங்கள் உயர்ந்து விட்டன, எனவே சிற்றுண்டி, மதிய உணவு நீங்களே ஏற்பாடு செய்து கொள்ளுங்கள் என்று கூறி, ரூ. 200/- திருப்பி தந்து விட்டார்கள்.  எப்படியோ, ஒரு பெரிய கூடத்திற்குள் நுழைந்து, நீ...ள ... நடந்து, ஒரு இடத்தில் இடது புற கண்ணாடி ஜன்னல் வழியாக பார்த்த பொழுது கோபுரம் தெரிந்தது. இந்த இடத்திற்கு முன்பு வந்திருக்கிறோம் என்று தோன்றியது. பெரிதாக கும்பல் இல்லை, என்றாலும்  ஸ்வாமியை தரிசிக்க செல்லும் வாயில் அருகே ஏனோ தள்ளு முள்ளு. வித்தியாசமாக அலமேலுமங்காபுரத்தில் அதிக நேரம் வரிசையில் காத்திருக்க நேர்ந்தது. 





மயூரநாதர் கோவில் முகப்பு 
மாயவரத்திற்கு அருகில் இருக்கும் என் பெண் வீட்டாரின் குல தெய்வம் கோவிலுக்கு செல்லும் பொழுதெல்லாம் மாயவரத்தில் தங்குவோமே தவிர அங்குள்ள மயூரநாதர் கோவிலுக்குச் செல்வதில்லை. இந்த முறை மயூரநாதர் கோவிலுக்குச் சென்றோம். அன்று பௌர்ணமி என்பதாலோ என்னவோ நிறைய பேர் கோவிலை வலம் வந்து 
கொண்டிருந்தார்கள்.  அபயாம்பிகை சந்நிதியில் லலிதா ஸஹஸ்ரநாம அர்ச்சனை நடந்து கொண்டிருந்தது. நின்ற நெடிய கோலத்தில் மனதை கொள்ளை கொண்டாள் அபயாம்பிகை. 

மறுநாள் என் மகள் வீட்டாரின் குலதெய்வமான சுப்ரமணிய சுவாமி கோவில் இருக்கும் பெரம்பூருக்கு சென்று அபிஷேக, ஆராதனைகளை முடித்துக் கொண்டு சென்னை திரும்பினோம். 

இன்னும் திருநெல்வேலி, உடுப்பி, சிருங்கேரி, பண்டரிபுரம், கோனார்க் சூரியன் கோவில், பத்ரிநாத் போன்ற ஆன்மீக பயணங்களும், சுற்றுலாவாக லண்டன்,பாரீஸ், ரோம், ஸ்விசர்லாந்து போன்ற நகரங்களுக்கும் செல்ல ஆசை. ம்ம்ம்ம்!

Saturday, June 24, 2017

பூனைகள் திரிகின்றன.

பூனைகள் திரிகின்றன.

கடந்த சில வருடங்களாக படிப்பில் முன்னாலும் பொருளாதாரத்தில் பின் தங்கியும் இருக்கும் மாணவர்களுக்கு படிப்பிற்க்காக பொருளுதவி கிடைக்க உதவி செய்கிறேன். தகுதியான மாணவர்கள் என்று தெரிந்தால் பள்ளிக்கட்டணம் கட்ட உதவும் தொண்டு நிறுவனங்களில் சிபாரிசு செய்வேன், என் அக்காவின் மருமகளிடம் சொன்னால் அவள் அலுவலகம் மற்றும் நட்பு வட்டாரத்தில் பணம் வசூலித்துக் கொடுப்பாள். அதை  தேவைப் படும் பெற்றோர்களுக்கு அனுப்பி வைப்பேன். என்னால் முடிந்த தொகையை கொடுப்பதும் உண்டு.

இந்த வருடமும், சிலர் என்னை உதவிக்கு அணுகினர். ஆனால் எதிர்பார்த்த இடங்களில் கிடைத்த தொகை போதுமான அளவு இல்லை. மெட்ரிகுலேஷன் பள்ளிகள் வசூலிக்கும் தொகையைப் பார்த்தால் மயக்கம் வருகிறது. ஏழாம் வகுப்பிற்கும், எட்டாம் வகுப்பிற்கும் இருபத்தி இரண்டாயிரம் குறிப்பிட்டிருக்கிறார்கள். அதில் பள்ளிக் கட்டணம் ரூ.ஏழாயிரம், புத்தகங்கள்  மற்றும் இதர சேவை(??) என்று குறிப்பிட்டு ரூ.பதினைந்தாயிரம். என்னிடம் பள்ளிக் கட்டணம் பெற்றுச் சென்ற ஒருவர், "மேடம், முழு கட்டணமும் செலுத்தினால்தான் புத்தகம் தருவார்களாம், கொஞ்சம் உதவி செய்யுங்கள் மேடம்" என்று கெஞ்சும் பொழுது மனம் சங்கடப் படுகிறது.  

இன்னொரு பள்ளியிலும் பள்ளிக் கட்டணம் ரூ.ஒன்பதாயிரம், இதர சேவைகள்,ரூ.ஐந்தாயிரம் என்று வசூல் செய்கிறார்கள். இதர சேவைகள் என்பதில் புத்தகங்கள் மற்றும் நோட்டு புத்தகங்கள், சீருடை, காலணி, புத்தகப் பை(school bag) என்பவை அடங்குகின்றன.

ஏழாம் வகுப்பிற்கும், எட்டாம் வகுப்பிற்கும் பதினைந்தாயிரத்திற்கு புத்தகங்களா? ஷூவும், புத்தகப் பையும், சீருடையும் பள்ளியில்தான் வாங்க வேண்டும் என்பது என்ன சட்டம்? 

ஒவ்வொரு வருடமும் அதிகம் பணம் வசூலிக்கும் மெட்ரிகுலேஷன் பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கப் படும் என்ற அறிவிப்பு மட்டும் வருகிறது, ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்கப் பட்டதாக தெரியவில்லை.பிளஸ் டூ தேர்வில் ரேங்க் சிஸ்டத்தை ஒழித்தது போல பள்ளிகள் புத்தகங்கள், சீருடை, இன்ன பிற விஷயங்கள் வழங்கக் கூடாது என்று சட்டம் வந்தால் பள்ளிக் கட்டண சுமை பெரிதும் குறையும்.  

பூனைகள் திரிகின்றன, வீட்டில் உள்ள பாலையும், தயிரையும், குடிக்கின்றன. அவற்றை பிடிக்க, குறைந்த பட்சம்  மணி கட்டத்தான் ஆட்கள் இல்லை. 

Sunday, June 4, 2017

எளிய மனிதர்கள்,பெரிய உண்மைகள்.

எளிய மனிதர்கள்,பெரிய உண்மைகள்.

சில சமயங்களில் அதிகம் படிக்காத எளிய மனிதர்கள் மிக உயர்ந்த தத்துவங்களை அனாயசமாக சொல்லிச்  சென்று விடுவார்கள்.  என் வீட்டில் வேலை செய்யும் பணிப் பெண்  கோடை காலம் ஆரம்பித்ததிலிருந்து தினமும்," ராத்திரி  தூக்கமே இல்லை, கரண்ட் போய் விட்டது வீட்டிற்குள் காற்று வருவதற்கு வழியே இல்லை. அதனால் தூக்கமே இல்லை.." என்று புலம்புவாள். அதைத்தவிர  அவள் குடியிருப்பது முதல் மாடியில். தண்ணீர் வேறு கீழிருந்து மேலே  வர வேண்டியிருக்கிறது என்பதும்  குறை. வேறு வீடு மாற்றி விடலாம் என்று தேடித் கொண்டிருந்தாள். சென்ற மாத ஆரம்பத்தில் வீடு மாற்றியும் விட்டாள். 

அவள் வீடு மாற்றி ஒரு வாரம் கழிந்து, "புது வீடு வசதியாக இருக்கிறதா?" என்று அவளிடம் கேட்டேன். "யாரும் அப்போ சொல்லவில்லை இப்போ, அந்த வீட்டுக்கா போய் இருக்கிறாய்? தண்ணியே விடாதே அந்த பொம்பள என்கிறார்கள். ஒரு நாளைக்கு ரெண்டு குடம்தான் விடறாங்க, தெரு முனையிலிருந்து தண்ணீர் கொண்டு வர வேண்டி இருக்கு..." என்று அலுத்துக் கொண்டாள். 

"அட கஷ்டமே! முன்னாலேயே விசாரித்திருக்க மாட்டாயோ?" என்று நான் சொன்னதும், "என்னவோ போங்க, எதெல்லாம் அனுபவிக்கனும்னு இருக்கோ, அதை எல்லாம் அனுபவித்து கழித்து விடலாம். இப்படியேவா இருந்துடும்? எல்லாம் ஒரு நாள் மாறும்.. சுகப் படும் பொழுது யார்கிட்ட போய் சொன்னோம்? என்றாள். 

நான்  அசந்து போனேன். பள்ளிக்கூட வாசலை கூட மிதிக்காதவள், எப்பேர்ப்பட்ட விஷயத்தை வெகு சாதாரணமாக சொல்லி விட்டாள்?

எதெல்லாம் அனுபவிக்கனும்னு இருக்கோ, அதை எல்லாம் அனுபவித்து கழித்து விடலாம். - எதிலிருந்தும் தப்பித்துக் கொள்ள நினைக்கக் கூடாது.

இப்படியேவா இருந்துடும்? எல்லாம் ஒரு நாள் மாறும்.. -  இதுவும் கடந்து போகும்.

இந்த விஷயங்களைத்தானே நாம் மீண்டும் மீண்டும் ஆன்மீக  சொற்பொழிவுகளில் கேட்கிறோம், அதை எத்தனை அனாயசமாக கூறி விட்டாள் படிப்பறிவில்லாத ஒரு எளிய பெண்!