கணம்தோறும் பிறக்கிறேன் 

Tuesday, June 19, 2018

படித்ததில் வருந்த வைத்தது


படித்ததில் வருந்த வைத்தது

ஃபேஸ் புக், ட்விட்டர், வாட்சாப் போன்ற விஷயங்கள் இன்று பலரையும் ஆட்டிப் படைக்கிறது என்பது பலராலும் மறுக்கப்படாத உண்மை. போதை வஸ்துக்களுக்கு அடிமையானவர்களை மீட்பது போல மேற்படி விஷயங்களுக்கு அடிமையானவர்களை மீட்க அவர்களுக்கு சிகிச்சை அளிக்கும் நிலயங்கள் அதிகமாகிக் கொண்டிருக்கின்றன. கேட்ஜெட்ஸ் போதை உயிரை மாய்த்துக் கொள்ளும் அளவிற்கு செல்லுமா அதுவும் இரண்டு வயது குழந்தையை அனாதையாக விட்டு விட்டுச் செல்லும் அளவிற்கா?


பெங்களூரில் வசித்து வந்த இளம் கணவன் மனைவி, அவர்களுக்கு இரண்டு வயதில் ஒரு குழந்தை. மனைவி, வீட்டையும், குழந்தையயும் கூட சரியாக கவனிக்காமல் எப்போதும் வாட்சாப், ட்விட்டர், ஃபேஸ் புக் என்று மூழ்கி இருந்ததால் கணவன் மனைவி இடையே அடிக்கடி கருத்து வேற்றுமை, சண்டை என்று நடந்திருக்கிறது. சம்பவம் நடந்ததற்கு முதல் நாள், கணவன், தன் மனைவியின் சகோதரனை தொலை பேசியில் அழைத்து, ”உங்கள் சகோதரியோடு என்னால் இனிமேல் வாழ முடியாது, அவளை உங்கள் வீட்டிற்கு அழைத்துச் செல்லுங்கள்” என்று கூறியிருக்கிறார். அதற்கு அவர் மைத்துனன், தான் தன் சகோதரியோடு பேசி சரி செய்வதாக சொல்லியிருக்கிறார். மறு நாள், அந்தப் பெண், தன் சகோதரனுக்கு ஃபோன் செய்து, தன் கணவருக்கும், தனக்குமிடையே உள்ள கருத்து வேற்றுமையைப் பற்றி கூறியிருக்கிறார். அவளிடம், தான் ஞாயிறன்று பெங்களூர் வருவேன் என்றும், அப்போது நேரில் பேசிக் கொள்ளலாம் என்றும் சமாதானம் செய்திருகிறார். 

ஞாயிரன்று  காலை சகோதரியின் வீட்டை அடைந்து கதவை தட்டியிருகிறார், கதவு திறக்கப்படாததால், அக்கம் பக்கத்தினர் உதவியோடு கதவை உடைத்துக் கொண்டு உள்ளே நுழைந்தவருக்கு அதிர்ச்சி. இரண்டு வயது குழந்தை ஹாலில் உட்கார்ந்திருக்க, கணவன், மனைவி இருவரும் இரண்டு படுக்கை அறைகளில் தூக்கு மாட்டிக் கொண்டு இறந்திருந்தனராம். முதல் நாள் இரவு அவர்கள் இருவரும் வாக்குவாதம் செய்து கொண்ட சத்தம் கேட்டதாக அண்டை வீட்டினர் தெரிவித்துள்ளார்கள்.

தன் குழந்தையை அனாதையாக்கிவிட்டுச் செல்ல அந்த தாய்க்கு எப்படி மனம் வந்தது?

இது இப்படி என்றால், சிரிப்பதா? அழுவதா என்று தெரியாமல் திகைக்க வைத்த செய்தி ஒன்று இதுவும் இளம் கணவன் மனைவி சம்பந்தப் பட்டதுதான். மனம் ஒன்று பட்டதால், மதத்தை பெரிதாக நினைக்காமல் இணைந்த காதல் ஜோடி அது. இரண்டாவது குழந்தை பிறந்த பொழுது பெயர் வைப்பதில் பிரச்சனை வெடித்திருக்கிறது.



அந்தப் பெண்ணின் மத வழக்கப்படி 28ம் நாள், ஜோஹன் மணி சச்சின் என்று பெயர் வைத்திருக்கிறார்கள். ஆனால் அப்பாவுக்கோ அபினவ் சச்சின் என்று பெயர் வைக்க ஆசை. இருவரும் விட்டு கொடுக்க மறுத்து, கோர்ட் வரை சென்று விட்டார்கள். வழக்கை விசாரித்த நீதிபதி, இருவர் சொன்ன பெயரையும் இணைத்து ஜோஹன் சச்சின் என்று பெயரிட்டு இருவர் சம்மதத்தையும் பெற்று(ரகசியமாக தலையில் அடித்துக் கொண்டிருபாராயிருக்கும்) அந்தப் பெயரையே பிறப்பு சான்றிதழில் பதிவு செய்தனராம். இதை முன்பே செய்திருக்கலாமே!

26 comments:

  1. இரண்டு செய்திகளுமே புதுசு. முதல் செய்தி படிக்கவே கஷ்டமாயிருக்கிறது. மனம் பலவீனமாகிக் கொண்டே வருகிறது இந்தக் கால மக்களுக்கு.

    ReplyDelete
    Replies
    1. ஆமாம், வீடுகளில் வழி நடத்த பெரியவர்கள் இல்லாததும், அக்கம் பக்கத்தில் பழகாததும் முக்கிய காரணங்களோ என்று தோன்றுகிறது.

      Delete
  2. இரண்டு சம்பவங்களும் வேதனை தருபவை .
    வாட்ஸாப்புக்காக ஒரு சண்டை அதையிட்டு தற்கொலை :(
    உலகம் சீரழிவை நோக்கி ..எதையும் ஒரு அளவோடு வைத்துக்கொள்ள தெரியவில்லை இக்கால பிள்ளைகளுக்கு .
    இரண்டாவது சம்பவம் உண்மையில் ஜட்ஜ் தனது தலையில் அடித்துக்கொண்டிருப்பர் .இதுக்கெல்லாம் நீதிமன்றம் போனா :(

    ReplyDelete
    Replies
    1. முதல் சம்பவத்தில் அந்தப் பெண் மீதுதான் கோபம் வருகிறது. இரண்டாவதில் இரண்டு பேருக்குமே பிடிவாதம்.

      Delete
    2. // எதையும் ஒரு அளவோடு வைத்துக்கொள்ள தெரியவில்லை இக்கால பிள்ளைகளுக்கு .// உங்களுக்கு அவ்வளவு வயதாகி விட்டதா ஏஞ்சல்? நான் உங்களை யுவதி என்று நினைத்துக் கொண்டிருக்கிறேன். ;)

      Delete
    3. noooooo :)) இக்கால பிள்ளைகள்னு சொன்னது எங்க மாதிரி பிள்ளைங்க கணவன் மனைவி தம்பதியர் :))))))

      Delete
  3. வழக்கமாக நான் எப்பொழுதும் சொல்வதே... விஞ்ஞானம் வளர, வளர மனிதர்களுக்கு புதுப்புது பிரச்சனைகள் வளர்ந்து கொண்டே வரும்.

    இந்த செல்போனால் பல வீட்டிலும் பிரச்சனைகள்தான். இனி கல்லூரிகளில் செல்போன் அனுமதிக்க கூடாது.

    இதுவே சற்று மீள்வதற்கு வழி.

    ReplyDelete
    Replies
    1. // விஞ்ஞானம் வளர, வளர மனிதர்களுக்கு புதுப்புது பிரச்சனைகள் வளர்ந்து கொண்டே வரும்.// அதற்காக வளர்ச்சி வேண்டாமென்று கூறிவிட முடியுமா? எதையும் அளவோடு கையாள கற்றுக் கொடுக்க வேண்டும்.

      Delete
  4. முதல் சம்பவத்தில் உள்ளவர்கள் பைத்தியகாரர்கள் அவர்களிடம் குழந்தை வளருவதற்கு பதில் அனாதையாகி போன பின் வேறுயாரிடாமாவது வளர்ந்தால் பரவாயில்லை

    இரண்டாம் சம்பவத்தில் உள்ளவ்ர்களுக்கு காதல் ஒரு கேடா என்று கேட்கதான் தோன்றுகிறது இவர்கள் காதல் திருமணம் புரியாமல் பெரியவர்கள் பார்த்து வைத்து திருமணமாக இருந்தாலும் எங்க்ள் குடும்பவழக்கப்படி பெயர் வைக்கவில்லை என்று சண்டைதான் போடுவார்கள்.


    பொதுவாக சொன்னால் இந்த காலத்தில் உள்ளவர்கள் படித்து பட்டம் பெற்றாலும் வாழ்க்கை அனுபவங்களையை படிக்காமல் பெயிலாகி கொண்டுதான் இருக்கிறார்கள்

    ReplyDelete
    Replies
    1. மிகவும் சரியாக சொல்லியிருக்கிறீர்கள்.

      Delete
  5. படிக்கப் படிக்கப் பயம் படர்கிறது.முகம் பாராது முகநூல் பார்த்து விடியும் பொழுதுகள் இப்படித்தான் முடியும்

    ReplyDelete
    Replies
    1. அப்படி பயப்பட வேண்டாம், தெளிவானவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். செய்தித் தாளில் படித்த விஷயம் எனக்கு கவலை அளித்ததால், அதை இறக்கி வைக்க எல்லோருடனும் பகிர்ந்து கொண்டேன்.

      Delete
  6. இப்படி பல சம்பவங்கள் நடக்கின்றன.. சைனாவிலும் ஒரு இளம் தம்பதி எந்நேரமும் நெட்டில் இருந்து 10 மாதக் குழந்தைக்கு பால் ,உணவு குடுப்பதை மறந்திட்டினமாம்.. குழந்தை போய் விட்டது சத்தமின்றி:(.

    முதல் சம்பவம் நெஞ்சை உருக்குது... நான் நினைக்கிறேன் சண்டை அதிகமானதால் மனைவி தூக்க்குப் போட்டிருக்கலாம்.. பழி தன்னில் வரப்பொகுதே என உடனே கணவரும் தூங்கியிருக்கலாம்... இருப்பினும் குழதையைக் ஹோலில் தனியே விட்டு விட்டு ஹையோ ஆண்டவா.. எவ்வளவு மனக் கஸ்டம் வந்தாலும் கொஞ்சமாவது மனக் கொன்றோல் வேண்டும்.. இதுவும் கடந்து போகும் என எண்ண வேண்டும்.

    ReplyDelete
    Replies
    1. // சண்டை அதிகமானதால் மனைவி தூக்க்குப் போட்டிருக்கலாம்.. பழி தன்னில் வரப்பொகுதே என உடனே கணவரும் தூங்கியிருக்கலாம்...// எனக்கும் இப்படித்தான் தோன்றியது, இருவரில் யாரோ ஒருவர் இறந்ததால், மற்றவர் பழிக்கு அஞ்சி, தவறான முடிவை எடுத்திருப்பார் என. மொத்தத்தில் இருவருமே பொறுப்பற்றவர்கள்.

      Delete
  7. பெயர் சூட்டும் சம்பவம் போல நான் அரிஞ்ச ஒன்று.. கிறிஸ்தவரும் இந்துவும் விரும்பித்திருமணம் செய்து ஒரு ஆண் குழந்தை பிறந்தது...[இலங்கையில்]

    குழந்தை என்ன சமயம் என இருவரும் தீர்மானிக்கவில்லை... பேசாமல் இருந்தாயிற்று.. ஸ்கூலில் சேர்க்க நிட்சயம் சமயம் சொல்ல வேண்டும்.. அதனால ஒரு வருடம் தாமதமாகிவிட்டது இன்னும் ஸ்கூலில் சேர்க்காமல் இருக்கிறார்கள் என அறிந்தேன் பிறகு என்னாச்சோ தெரியவில்லை.. இருவருக்கு குழந்தை விசயத்தில் சமயத்தை விட்டுக் குடுக்க விருப்பமில்லையாம்.. அப்போ என்ன காதல் இது...

    ReplyDelete
    Replies
    1. / இருவருக்கு குழந்தை விசயத்தில் சமயத்தை விட்டுக் குடுக்க விருப்பமில்லையாம்.. அப்போ என்ன காதல் இது...//
      மோகம் முப்பது நாள், ஆசை அறுபது நாள் காதலோ என்னவோ?

      Delete
  8. நிதானம் தவறும் நிலையில் முடிவு கொடுமையாக அமைந்துவிடுகிறது. போலி வாழ்க்கையின் போக்கு இப்படித்தான் அமையும்.

    ReplyDelete
    Replies
    1. எதற்கு எவ்வளவு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்று தெரியாததும் முக்கிய காரணம்.

      Delete
  9. முதல் செய்தி:-

    வருத்தப்பட வேண்டியவர்கள் போய்ச்சேர்ந்து விட்டார்கள்..
    இதில் நாம் வருத்தப்பட்டு ஒன்றூம் ஆகப் போவதில்லை..

    அந்தக் குழந்தை தான் பாவம்...

    இரண்டாவது செய்தி:-
    சொல்வதற்கு ஒன்றுமில்லை...

    ஆனால் இன்னுமொரு செய்தி..

    சென்ற பிப்ரவரியில் டில்லியில் நடந்தது..
    தன் மகளைக் காதலித்தான் என்பதற்காக
    அந்த இளைஞனை அடித்துக் கொன்று விட்டார்கள்..

    அந்த குடும்பத்தினரை அழைத்து சமீபத்தில் இஃதார் விருந்து கொடுத்திருக்கிறார் - கொல்லப்பட்ட இளைஞனின் தந்தை..

    உலகம் இப்படியும் சுழன்று கொண்டிருக்கிறது...

    ReplyDelete
    Replies
    1. // உலகம் இப்படியும் சுழன்று கொண்டிருக்கிறது...// ஆம் நாம் நாள் விஷயங்களை பார்த்து நம்பிக்கை கொள்ள வேண்டும். நான் குறிப்பிட்டிருப்பவை எச்சரிக்கை மணி.

      Delete
  10. இரண்டு செய்திகளும் புதுசு.

    பொதுவா கம்ப்யூட்டர் கேம்ஸுக்கு நிறையபேர் அடிமையாவதைப்போல் வாட்சப்புக்கும் அடிமையாக இருக்கிறார்கள். இதன் காரணம், 'உயிரோடு இருக்கும் சொந்தங்களைக் காட்டிலும் விநோத உலக எலெக்டிரானிக் சொந்தங்களை மனம் நம்புவதுதான்.

    குழந்தைக்குப் பெயர் வைப்பதில் சண்டையா? விநோதம்தான்.

    ReplyDelete
    Replies
    1. வாங்க நெ.த. நீண்ட நாள் கழித்து வந்திருக்கிறீர்கள்.
      அதீத எதிர்பார்ப்பு, யதார்த்தத்தை புரிந்து கொள்ளாதது முதல் சம்பவத்திற்கு காரணம் என்றால், நீயா? நானா? என்ற போட்டி இரண்டாவது சம்பவத்திற்கு காரணம்.

      Delete
  11. இரண்டு செய்திகளுமே கேள்விப்படாதவை. என்றாலும் இந்தக் காலத்து இளைஞர்களும் இளைஞிகளும் தொட்டதற்கெல்லாம் "தான்" என்னும் உணர்வு கொண்டவர்களாக இருக்கிறார்கள். இவங்களுக்கு இதான் முக்கியம், குழந்தையோ குடும்பமோ இல்லைனு தோணுது! அந்த இரண்டு வயதுக் குழந்தை என்ன பாபம் செய்தது? இம்மாதிரிப் பெற்றோர் அமைய! அடுத்ததுப் பேசித் தீர்த்துக் கொண்டிருக்கலாம். இங்கேயும் அதே தான் என்னும் ஈகோ! :( விட்டுக் கொடுப்பதைக் கேவலமாக நினைக்கிறாங்க!

    ReplyDelete
    Replies
    1. ஆமாம், தன் முனைப்பு அதிகமாக இருக்கிறது. பாதிக்கப்படுவது குழந்தைகள்தான்.

      Delete
  12. துளசி: மிகவும் வேதனையான நிகழ்வுகள். குழந்தையை நினைத்தால்தான் மிகவும் பரிதாபமாக இருக்கிறது. பலரும் இப்போது இந்த எலக்ட்ரானிக்குடன் தங்கள் உறவை வளர்த்துக் கொள்வதால் நடக்கும் ஒன்று. மற்ற சம்பவம் புரிதல் இல்லாததால்...இதில் காதல் கல்யாணம் என்ன புரிதலோ தெரியவில்லை. இருவரும் இணைந்தே பெயரை இருவருக்கும் பொதுவானதான பெயரைச் சூஸ் செய்வதை யோசித்திருக்கலாம்..இப்படித்தான் ஈகோ ஆட்சி செய்கிறது. நல்லகாலம் நீதிபதி நல்ல தீர்ப்பை வழங்கி அவர்கள் சேர்ந்தார்கள்.

    கீதா: இரண்டுமே எமோஷனல் கோஷன்ட் இல்லாத நிகழ்வுகள். முன்பெல்லாம் ஐக்யூ முக்கியம் என்றார்கள் இப்போது இக்யூ மிக மிக முக்கியம் என்பது வலியுறுத்த வேண்டிய காலகட்டம். சாதாரண மனிதர்களுக்கும் இந்த இக்யூ படுத்துகிறது.... ஐக்யூ அதிகம் இருந்தாலும் இந்த இக்யூ அதிகம் படுத்துகிறதுதான்....

    அந்தக் குழந்தை பாவம்.

    ReplyDelete
  13. வாங்க துளசிதரன், அந்தப் பெண் ஏதோ கற்பனை உலகில் சஞ்சரித்திருப்பாளோ என்று தோன்றுகிறது. attention seeker ஆக இருந்திருக்கலாம். அது கணவனிடமிருந்து கிடைக்காததால் காட்ஜெட்டை சரணடைந்து விட்டாளோ என்னவோ. எப்படியிருந்தாலும் மனோ வியாதிக்காரிதான். இரண்டாவது கேஸ் ப்யூர் ஈகோ.

    உண்மைதான் கீதா, இமோஷனல் கோஷண்ட் மிகவும் முக்கியம். அதுவும் பெண்களுக்கு. இ.கியூ.வில் ஸ்டராங்காக இருக்கும் பெண்கள் எந்த சூழ்நிலையிலும் ஜெயிப்பார்கள்.

    ReplyDelete