கணம்தோறும் பிறக்கிறேன் 

Monday, April 27, 2020

ஜே.கிருஷ்ணமூர்த்திக்கு ஜே!


ஜே.கிருஷ்ணமூர்த்திக்கு ஜே!



SECURITY IS A PRISON என்பது ஜே.கிருஷ்ணமூர்த்தி கூறியது. இதை வைத்து பாலகுமாரன் கூட தனது இரும்பு குதிரைகள் நாவலில் 'விஸ்வநாதனுக்கு பின்னால் ஒரு வலுவான குடும்பம் இருந்தது, அவனை முன்னேற விடாமல் தடுத்தது' என்று எழுதியிருப்பார். சமீபத்தில் நான் பார்த்த பல தமிழ் வெப் சீரிஸ்கள் என்னை ஜே.கிருஷ்ணமூர்த்திக்கு ஜே போட வைக்கின்றன.

இந்த வெப் சீரிஸ்கள் பலவும் திறமையுள்ள இளைஞர்களால் எடுக்கப்படுகின்றன.  ஆனால் இந்த திறமையை வைத்து அவர்கள் என்ன சொல்கிறார்கள் என்பதுதான் மிகவும் ஏமாற்றமளிக்கிறது.


எல்லா சீரிஸ்களிலும் பேசப்படும் விஷயம் டேட்டிங், லிவிங் ரிலேஷன்ஷிப், பெண்ணை கணக்கு பண்ணுவதில் உள்ள சிக்கல்கள் மட்டுமே.  அதில் வரும் எல்லா இளைஞர்களும்,  அவர்கள் மாணவர்களோ, வேலைக்குச் செல்பவர்களோ மொடாக்குடியர்களாக இருக்கிறார்கள். இதில் பெண்களும் விதிவிலக்கல்ல. நல்ல பழக்கங்கள் கொண்டவர்களே இல்லையா என்று தோன்றுகிறது. ஆங்கிலத்தில்தான் பெரும்பாலும் பேசுகிறார்கள். ஆணோ,பெண்ணோ ஆங்கிலத்தில் கெட்ட வார்த்தை பேசத்  தயங்குவதில்லை.

காலாண்டு காதல் என்று ஒரு குறும்படம். திருமண வெள்ளி விழாவை கொண்டாடும்  தகப்பனார், மனைவி காதலியாக இருந்த காலத்தில் அவளுக்கு எழுதிய காதல் கடிதம் அவளிடம் வந்து சேரவில்லை என்று வருத்தப்படுகிறாராம். உடனே அவர் மகன் நாட்டின் கிழக்கு கோடிக்கு பைக்கிலேயே சென்று டெலிவரி செய்யப்படாத அந்த கடிதத்தை தேடி கொண்டு வருகிறானாம். அடடா! என்ன ஒரு சேவை! இதுவா ஒரு தகப்பனை சந்தோஷப்படுத்தும்?

இந்தக் கால இளைஞர்களுக்கு தியாகம், பாசம் போன்ற உணர்வுகள் கிடையாதா? பெரும்பான்மையான வீடுகளில் ஒன்று அல்லது இரண்டு குழந்தைகள் மட்டுமே. சோஃபா, ஏ.சி, ஃபிரிட்ஜ், கலர் டிவி போன்றவை ஆடம்பரம் என்பதைத்  தாண்டி, அத்தியாவசியம் என்னும் நிலைக்கு வந்தாகிவிட்டது. அப்பாவின் பாரத்தை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்பதற்காக மேல் படிப்பை தியாகம் செய்வது, தங்கைகளுக்கு திருமணம் செய்ய வேண்டும், தம்பியை படிக்க வைக்க வேண்டும் என்ற கடமைகளால் தன் திருமணத்தை தள்ளிப் போட வேண்டிய நிர்பந்தம் போன்ற பொறுப்புகள்  இல்லாததால் காதல் மட்டுமே பெரிதாக தோன்றுகிறது போலிருக்கிறது.

மற்றொரு குறும்படத்தில்(first date) தான்  விரும்பும் பெண்ணோடு முதல் முறையாக டேட்டிங் செல்லும் மாணவன். தன் பர்ஸிலிருந்த பணத்தை நண்பன் ஏற்கனவே ஆட்டையை போட்டு விட்டதை அறியாமல் ஒரு ஆடம்பர உணவகத்திற்கு அழைத்துச் சென்று விடுகிறான். அங்கு போன பின்னர்தான் தன் பர்சில் வெறும் இருநூறு ரூபாய்கள் மட்டுமே இருப்பதை பார்க்கிறான். ரெஸ்ட் ரூம் செல்வதாக பெண் தோழியிடம் பொய் சொல்லி சொல்லி, நண்பனுக்கு போன் மேல் போன் போட்டு, பணத்தை கொண்டுவரச்சொல்லி கெஞ்ச, அங்கு அவன் நண்பர்கள் இவன் பணத்தில் சரக்கடித்து ஜாலியாக இருக்கிறார்கள். கொஞ்சம் கூட சமூக பிரக்ஞை இல்லாத படைப்புகள்.  சமூக பிரக்ஞை அற்றுப் போனதற்கு சௌகரியமான வாழ்க்கைச் சூழல்தான் காரணமா? அப்படி ஒரு தன்னிறைவை அடைந்து விட்டோமா?


எழுபதுகளில் பாலகுமாரன் எழுத ஆரம்பித்த புதிதில் அவர் எழுதிய கவிதை ஒன்று

கொத்திக்கொண்டு போவாண்டி
ஆப்பிள் சிவப்பு என் பேத்தி 
பாட்டி சொன்னாள் திடத்தோடு 
அம்மா விடுவாள் பெருமூச்சு 
வெட்டிப் பொழுது கழிப்பானேன் 
வேலை தேடேன் எங்கேனும் 
அப்பா சொல்வார் தரை நோக்கி 
அண்ணன் முறைப்பான் எனைப் பார்த்து 
கொத்திக் கொண்டு போவதற்கு 
ஜாதக பட்சி வரவில்லை 
வெட்டிப் பொழுதின் விடிவுக்கும் 
வேலை வரலை இது நாளாய் 
வேலை தேடி கால் தேய 
வெளியே நடக்கத் தலைப்பட்டால் 
ஈயாய் கண்கள் பல மொய்க்க 
என்னை உணர்ந்தேன் தெரு மலமாய்.

இந்த ஒரு சிறு கவிதையில் ஒரு மத்தியதர குடும்பத்தைச் சேர்ந்த பெண்ணின் நிலை, கனவுக்கும் நிதர்சனத்திற்கும் இடையே உள்ள இடைவெளி  எத்தனை அழகாக விவரிக்கப்பட்டிருக்கிறது! அப்போதெல்லாம் படிக்க வைப்பது கஷ்டம், அப்படியே படித்தாலும் வேலை கிடைப்பது குதிரைக் கொம்பு.  திருமணத்திற்கு வரதட்சணை என்னும் வில்லன்.

 இப்போது அப்படி இல்லை. மகனோ, மகளோ பிளஸ் டூ தேர்வு எழுதிய உடனேயே பெற்றோர் மேனேஜ்மேண்ட் கோட்டாவில் சீட் புக் பண்ணி  விடுகின்றனர். வேலையில்லா திண்டாட்டம் இப்போதுதான் மீண்டும் தலை தூக்குகிறது. திருமணம் நடக்காமல் போவதற்கு வரதட்சணை போன்ற புறக்காரணங்கள் இல்லை.

ஒரு படைப்பாளி சிறப்பாக செயல்பட வேண்டுமென்றால் அவனுக்கு நிம்மதியான குடும்ப சூழல் வேண்டும் என்று காளிதாசன் சொன்னதாக சொல்வார்கள். பாரதிக்கு என்ன நிம்மதியான சூழல் இருந்தது? கண்ணதாசனின் மிகச் சிறந்த பாடல்களை அவர்  கடுமையான பொருளாதார நெருக்கடியில் இருந்தபோதுதான் எழுதியதாக கேள்விப்பட்டிருக்கிறேன். நல்ல கலைஞர்களுக்கு சூழல் ஒரு பொருட்டாக இருக்க முடியாது. அவர்களுக்குத் தேவை எம்பதி (empathy). இது இல்லாமல் நல்ல படைப்புகள் உருவாக முடியாது. நான் சொல்வது சரியா?

நண்பர்களே உங்கள் கருத்துகளுக்காக காத்திருக்கிறேன். 











36 comments:

  1. சமூகம் சீரழிவதால் இப்படி படைப்புகளை எடுக்கிறார்களா ? அல்லது இப்படி படைப்புகளை பார்த்து இளையசமூகம் இவ்வழியில் செல்கிறதா ?

    ReplyDelete
    Replies
    1. சமூகத்தில் அங்கொன்றும் இங்கொன்றுமாக நடப்பதை இவர்கள் வெளிச்சம் போடும் பொழுது, மற்றவர்களுக்கு துணிச்சல் வந்து விடுகிறது. வருகைக்கு நன்றி. 

      Delete
  2. மேலே நீங்க சொல்லி இருப்பதெல்லாம் எதில் வருகிறது? தொலைக்காட்சி சானல்களிலா? நாங்க செய்திகளைத் தவிர்த்து எஸ்விபிசி சானல் கச்சேரிகள், ஸ்லோகங்கள்னு பார்க்கிறோம். இந்த மாதிரி எல்லாம் பார்க்க வாய்ப்பே கிடைத்ததில்லை. ஆனால் சமூகம் மிகவும் மோசமான நிலைமையில் உள்ளதுனு மட்டும் புரியுது. ஆபத்தான மோசமான நிலைமை.

    ReplyDelete
    Replies
    1. //மேலே நீங்க சொல்லி இருப்பதெல்லாம் எதில் வருகிறது?// You tube.

      Delete
    2. //சமூகம் மிகவும் மோசமான நிலைமையில் உள்ளதுனு மட்டும் புரியுது. ஆபத்தான மோசமான நிலைமை.// உண்மைதான். வருகைக்கு நன்றி. 

      Delete
  3. ஒவ்வொரு மனிதனுக்கும் மேன்மையான எண்ணம், கீழ்த்தரமான எண்ணம்/ஆசை இருக்கும். படைப்பாளி என்பவன் மேன்மையானவற்றை அதிகமாகவும், கீழ்த்தரமானவற்றை, மேம்போக்காகவும் (சமூகத்தை பிரதிபலிக்கணும் என்பதால்) சொல்லணும். பொதுவா கீழ்த்தரமானவற்றில்தான் மனித மனம் கவனம் அதிகம் செல்லும். அதை மனைமாற்றுவது படைப்பாளிகளால் மட்டும்தான் முடியும்.

    குறுகிய லாபத்திற்காக அபூர்வமாக இருக்கும் இருட்டை மட்டுமே படைப்பாளிகள் வெளிச்சம் போட்டுக் காட்டுவதால் சமூகம் கெடுகிறது.

    ஆனால் இந்த சீரீயல்களைப் பார்த்து மகிழ்பவர்களும் 1/3 குற்றத்தைச் செய்பவர்களே. அவற்றைப் புறக்கணிக்க ஆரம்பித்தால் இந்த சோ கால்ட் படைப்பாளிகள் திருந்துவார்கள்.

    ReplyDelete
    Replies
    1. //ஆனால் இந்த சீரீயல்களைப் பார்த்து மகிழ்பவர்களும் 1/3 குற்றத்தைச் செய்பவர்களே. //உண்மைதான். எண்ணெய் பொறுத்தவரை நான் பார்த்து மகிழவில்லை. மகிழ்ந்திருந்தால் இந்த கட்டுரை எழுதியிருக்க மாட்டேன். நன்றி.  

      Delete
    2. நான் சொல்வது, பெரும்பாலான வீடுகளில் சீரியல்களுக்கு அடிமையாகிக்கிடப்பவர்களை. என் நண்பன், தினம் இந்த சீரியல்களை ஆட்டோ ரெக்கார்ட் செய்து, பிறகு வீட்டுக்கு வந்த பிறகு பார்ப்பான். எனக்குத் தெரிந்து நிறையபேர்கள் சீரியல்களை ஏதோ யாகம் செய்வதுபோல தினமும் பார்ப்பார்கள், அதைப்பற்றி டிஸ்கஸ் பண்ணுவார்கள். எங்கள் வீட்டில் நாங்கள் எந்த சீரியலையும் பார்ப்பதில்லை.

      Delete
  4. நான் பார்த்தவரை தொலைக்காட்சியில் ஒரு குறிப்பிட்ட ப்ரான்ட் தேநீர் விளம்பரம் தான் எனக்குப் பிடிக்காதது. பிள்ளை அம்மாவிடம் ஒரு பெண்ணைக் காட்டித் தாங்கள் சேர்ந்து வாழ்வதாய்ச் சொல்வதாயும், அம்மா தேநீரைக் குடித்துக் கொண்டே பரவாயில்லை என்பதாயும் வருகிறது. அதை எடுத்தால் நன்றாக இருக்கும். இப்படியான விளம்பரங்கள் சமூகக் கட்டுப்பாட்டையும் பாரம்பரியத்தையும் சிதைக்கிறது.

    ReplyDelete
    Replies
    1. நீங்கள் சொல்லியிருப்பது நியாயம்தான். ஆனால் நிலைமை'பேய்கள் அரசாண்டால் பிணம் தின்னும் சாத்திரங்கள்..' என்பது போல மாறிக்கொண்டு வருகின்றது. 

      Delete
  5. இப்படியான வெப்சீரிஸ் (இதுவே எனக்கு இப்போதுதான் அறிந்து கொண்டேன்) பார்த்ததில்லையே சகோதரி. பார்க்கும் வாய்ப்பும் இல்லை.

    ஆனால், நீங்கள் சொல்லியிருப்பதிலிருந்து இளைஞர்கள் எப்படியான படம் எடுக்கிறார்கள் என்று. இது நல்ல சூழல் அல்ல. உங்களின் ஆதங்கத்துடன் எனதும்.

    துளசிதரன்

    ReplyDelete
    Replies
    1. வாங்க துளசி சார். நான் வெப் சீரிஸ் என்று குறிப்பிட்டு விட்டேன். நான் பார்த்தவை குறும்படங்கள். எப்படியோ அதில் கூறப்பட்டிருக்கும் விஷயம்தானே முக்கியம். ஆரோக்கியமாக இல்லை என்பது நிஜம். 

      Delete
  6. பானுக்கா வெப்சீரிஸ் படங்கள் பற்றி தெரியவில்லை. நான் இன்னும் க்வீனே பார்க்கவில்லை. அதைப் பார்க்கும் வாய்ப்பு நழுவிக் கொண்டே போகிறது. குறிப்பாக அதன் வால்யூம் கொஞ்சம் கஷ்டமாக இருக்கு. ஹெட் செட் போட்டால் அதிக நேரம் போட இயலவில்லை.

    எனக்குத் தோன்றுவது, திறமைசாலிகள் நினைத்திருப்பது தவறு. அதாவது இப்படி எடுத்தால்தான் படம் போகும் என்றோ, மக்கள் விரும்பிப் பார்ப்பார்கள் என்றோ தவறான எண்ணத்தில் எடுக்கிறார்கள். உண்மையைச் சொல்லப் போனால் நல்ல படங்கள் நன்றாகப் போகின்றன. குறும்படம் கூட. எடுக்கப்படும் விதத்தில் எடுத்தால் மிக மிக நல்ல வரவேற்பு இருக்கும். என்பது என் கணிப்பு. உலக அளவில் இது ரீச் ஆகும் என்று நினைக்கிறீர்களா? நிச்சயமாக இல்லை. ஒரு சிறு கூட்டத்துக்காக இப்படியான படம் எடுப்பதை விட, உலக அளவில் ரீச் ஆகணும் என்று சிந்தித்தால் நல்ல படங்கள் எடுக்க முடியும் எடுக்கலாம். இப்படி எடுத்தால்தான் படம் ஓடும் என்று பார்வையாளர்கள் மீது பழி போடுவது ம்ம்ம்ம்ம்ம் ..படம் எடுக்க்கும் விதம் மாற வேண்டும். அவர்களின் கணிப்பு தவறான கணிப்பு..
    உங்கள் கருத்துகளே எனக்கும்…

    செம கவிதை

    கீதா

    ReplyDelete
    Replies
    1. இயல்பாக எடுக்கிறேன் பேர்வழி என்று இப்படி செய்கிறார்கள். மணி ரத்தினம் போன்ற பெரிய இயக்குனர்களே, "I don't want to preach, I am reflecting the society" என்று கூறினால் என்ன செய்ய முடியும்? நன்றி கீதா. 

      Delete
    2. //"I don't want to preach, I am reflecting the society" // - இவர்களெல்லாம் சமூகத்தின் தீய பக்கங்கள் என்பது என் எண்ணம். எதை மறைக்கணும், எதை வெளிப்படுத்தணும் என்பதெல்லாம் நல்ல சிந்தனை உள்ளவர்களுக்குத் தெரியும். கல்கியும் அவர் சரித்திர நாவல்களில் நிறைய காதல் சீன்கள், அதற்கான நிகழ்வுகளை எழுதியிருப்பார், வெகு நாகரீகமாக.

      சமூகத்தில் நடப்பதுதான் என்று சினிமாவில் குடிக்கும் காட்சிகளையும், குடிப்பதை ஒரு அன்றாட நிகழ்வாகக் காண்பிப்பதையும் ஜஸ்டிஃபை செய்பவர்கள், அதனால் 'குடிப்பது தவறல்ல' என்று எண்ணிக்கொள்ளும் சிறுவர்களைப் பற்றி, வருங்காலத்தைப் பற்றி சிந்திப்பதே இல்லை.

      Delete
    3. இவர்களின் நோக்கம் பணம் சேர்ப்பது மட்டுமே. கொஞ்சம் கூட சமூக பிரக்ஞை கிடையாது.

      Delete
  7. இவைதான் சமூகத்தின் குறிப்பாக நகர்ப்புற, பெரும்பான்மை என்றால் சமூகம் கண்டிப்பாக நல்ல திசையில் பயணிக்கவில்லை. அல்லது மீடியா இதை மட்டும் அதிகம் காட்டுவதால் நமக்கு அப்ப்டித் தோன்றுகிறதா? இதுவும் எனக்கு எழும் கேள்வி.

    கீதா

    ReplyDelete
  8. அக்கா கூடவே ஒரு தகவல்...இது இளைய சமூகம் பற்றிய பதிவு கரெக்ட்டா....நம் இந்தியாவில் இளையசமூகம் தான் அதிகமாம்...வயோதிகர் குறைவாம். இது இப்போதைய சூழலுக்கான ஆய்வில் சொல்லப்பட்டிருப்பது.

    அப்போ முடிச்சுப் போட்டுப் பார்க்கலாமோ நீங்கள் சொல்லியிருப்பதை.

    கீதா

    ReplyDelete
  9. கிலர்ஜி தேவகோட்டை அவர்களின் கேள்விதான் எனது எண்ணமும்.
    இக்கால படங்களும் இப்படியேதான் செல்கின்றன.

    ReplyDelete
    Replies
    1. ஆமாம், அதுதான் கவலையூட்டுகிறது. Thank you.

      Delete
  10. குறும் படம் என்றதும் எங்கள் பிளாக் வாட்ஸாப் குருப்பீல் நண்பர் ரஹ்மான் அவர்கள் சமீபத்தில் அறிமுகப்படுத்திய குறும்படம் ஒன்று நினைவுக்கு வந்தது.

    நல்ல குறும்படம் எடுக்கும் திறமையான இளைஞர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். அவர்கள் பெரும்படம் எடுக்கும் வாய்ப்பு கிடைக்கும் பட்சத்தில் -- 'காக்கா முட்டை' என்று ஒரு திரைப்படம் வந்ததல்லவா? -- அந்த மாதிரி அருமையாக எடுப்பார்கள். சில வருடங்களுக்கு முன் தொடர்ச்சியாக சில திரைப்படங்கள் -- அழகர்சாமி குதிரையா? -- ஓரு நம்பிக்கை வெளிச்சம் கிடைத்தது. மேற்கு தொடர்ச்சி மலைத் தொடர்களீலேயே நிகழும் அற்புதத் திரைப்படம் ஒன்று பார்த்தேன். காவியம். கச்சடா படங்கள் எல்லாம் நினைவில் இருக்கும். அந்தப் படத்தின் பெயர் கூட நினைவுக்கு வர மட்டேனெங்கிறது.
    ஜெயமாந்தன் 'உன்னைப் போல ஒருவன்' எடுக்கவில்லையா?

    ஆனால் அந்த மாதிரி படங்களுக்கெல்லாம் இங்கு இடமில்லை. திரையுலகமோ மலை விழுங்கி பாம்பு. ஒன்றரை கோடி ரூபாயில் ரஜினிக்கு ஒரு பாடல் செட் போடுவதில் தான் அவர்களுக்கு திருப்தி. விட்டுத் தள்ளுங்கள்.

    நீங்கள் சொல்லியிருக்கும் விஷயத்திற்கு வருவோம்.

    ஏன் குறும்படம் எடுக்கிறார்கள்? அதற்கான தேவை என்னவாயிருக்கும்? என்ற யோசனை ஓடியது. பிலிம் இன்ஸ்டிடியூட்டில் பயிற்சிக் கல்வி பெறுபவர்கள், ப்ராக்டிகல் பயிற்சிகளுக்காக குறும்படங்கள் எடுத்து சமர்ப்பிக்க வேண்டிய தேவை இருக்கலாம்.
    அவை ஒட்டுமொத்தமாகத் திரையிடப்படும் பொழுது சினிமா பிரபலங்கள் வருகை தருவதும் உண்டு. எந்த மோதிரக்கையாலாவது குட்டு பட வாய்ப்பு கிடைக்கும் என்பதற்காக இப்படியான குறும்படங்கள் எடுக்கிறார்களா, தெரியவில்லை. இந்த மாதிரி சப்ஜெக்ட்டுகளில் எடுத்தால் தான் முன்னுக்கு வர முடியமோ தெரியவில்லை. அல்லது வேறு வகைகளில் வணிக சம்பந்தப்பட்டதாக இருக்கலாம். அடுத்த தலைமுறையின் போக்கிற்காக ஒரு டிரெண்டாகவும் ஆக்கலாம்.

    நமக்குப் பிடிக்காமல் இருக்கலாம். நீங்கள் சொல்வதிலிருந்து இந்த மாதிரியான சப்ஜெக்ட்டுகளுக்கு டிமாண்ட் இருப்பதாகத் தெரிகிறது. வணிக விஷயங்களில் டிமாண்ட் தானே அரசன்?.. அதனால் தான் கொடிகட்டிப் பறக்கிறது, போலும். லீவ் இட். நம்மால் முடிந்தது, அவ்வளவு தான்.

    ReplyDelete
    Replies
    1. தெளிவான அலசலுக்கு நன்றி. அழகர்சாமியின் குதிரை நல்ல படம். அவ்வப்பொழுது நல்ல படங்கள் வந்து கொண்டுதான் இருக்கின்றன. என்னுடைய கவலை, இன்னும் ஐம்பது வருடங்களுக்குப் பிறகு இப்படிப்பட்ட படங்களை பார்க்கிறவர்கள் "நம்முடைய முன்னோர்கள் இவ்வளவு மோசமாகவா  இருந்தார்கள்?" என்று நினைப்பார்களோ என்பதுதான். 

      Delete
  11. அன்பு பானு மா,
    சீரியலகளிலிருந்து விலகி 8 வருடம் ஆகிறது.

    பாலகுமாரனைச் சிறிதே படித்திருக்கிறேன்.

    ReplyDelete
  12. ஒரு படைப்பாளி சிறப்பாக செயல்பட வேண்டுமென்றால் அவனுக்கு நிம்மதியான குடும்ப சூழல் வேண்டும் என்று காளிதாசன் சொன்னதாக சொல்வார்கள். பாரதிக்கு என்ன நிம்மதியான சூழல் இருந்தது? கண்ணதாசனின் மிகச் சிறந்த பாடல்களை அவர் கடுமையான பொருளாதார நெருக்கடியில் இருந்தபோதுதான் எழுதியதாக கேள்விப்பட்டிருக்கிறேன். நல்ல கலைஞர்களுக்கு சூழல் ஒரு பொருட்டாக இருக்க முடியாது. அவர்களுக்குத் தேவை எம்பதி (empathy). இது இல்லாமல் நல்ல படைப்புகள் உருவாக முடியாது. நான் சொல்வது சரியா?////////////This is what I improve. Thank you Banu ma

    ReplyDelete
  13. விளம்பரங்களும் சளைத்தவை அல்ல என்பதுபோல பல விளம்பரங்கள் பார்த்திருக்கிறேன். ஒன்றிரண்டை பேஸ்புக்கில் சுட்டிக்காட்டி எழுதியும் இருக்கிறேன்.

    ReplyDelete
  14. ஒரு விளம்பரத்தில் ஒரு அம்மா, தன் பையனிடம் அவன் அப்பா யார் என்று பல போட்டோக்களைக் காட்டிக் குழம்பத் தொடங்கும்போது ஐபிஎல்லோ எதுவோ தொடங்கும். அவன் இதில் கவனம் கலைந்து அங்கு ஓடி விடுவான்!

    ReplyDelete
  15. பாலகுமாரனின் இந்தக் கவிதை அவ்வளவு கவரவில்லை. படிக்கும்போது வேறு சில கவிதைகள் கவனத்தைக் கவர்ந்திருக்கின்றன.

    ReplyDelete
    Replies
    1. //பாலகுமாரனின் இந்தக் கவிதை அவ்வளவு கவரவில்லை// நீங்கள் ஒரு பெண்ணாக இல்லாதது காரணமோ?
      நன்றி ஶ்ரீராம்

      Delete
    2. உண்மைதான், பாலகுமாரனின் எழுத்தே பின்னாட்களில் கவரவில்லை. ஆனால் இந்தக் கவிதையின் யதார்த்தம் குறிப்பிடத்தக்கது. எங்க வீட்டிலும் என் கடைசி நாத்தனாரை இப்படித் தான் சொல்லிக்கொண்டு இருந்தார்கள். ஜாதகத்தைப் பார்த்தே பெண்ணைக் கொண்டு போயிடுவாங்க என்பார்கள். பெண்ணே போதும், உங்க சீரெல்லாம் எதுக்கு எனச் சொல்லுவார்கள் என்றெல்லாம் எதிர்பார்ப்புக்களை அந்தப் பெண் மனதில் ஏற்றிவிட்டுக் கடைசியில் கஷ்டப்பட்டுத் தான் கல்யாணமே நடந்தது. ஆகவே பெற்றோரின் அதீத எதிர்பார்ப்பு தங்கள் பெண் விஷயத்தில் இருந்தது என்பது வரையில் இந்தக் கவிதை (?) உரைநடைக்கவிதை!!!!! ஏற்கக்கூடிய ஒன்றே.

      Delete
  16. நல்லதொரு பதிவு. இப்படியான நிறைய விஷயங்கள் இணையத்தில் கொட்டிக் கிடக்கின்றன. நான் தேடித் தேடி நல்ல விளம்பரங்களை, குறும்படங்களைப் பார்த்து எனது பக்கத்திலும் சிலவற்றை பகிர்ந்து கொள்வதுண்டு. ஆரம்பிக்கும்போதே பார்க்கப் பிடிக்காத நிறைய படங்கள் உண்டு இங்கே. பல குறும்படங்கள் பார்த்தால் ஏன் பார்த்தோம் என ஆகிவிடும்.

    நீங்கள் இங்கே குறிப்பிட்டு இருக்கும் 25 ஆண்டு காதல் குறும்படம் என் பக்கத்திலும் பகிர்ந்தேன். அதில் சில விஷயங்கள் எனக்குப் பிடித்திருந்தன - அந்த இளைஞனின் முயற்சி மற்றும் ஹிமாச்சலப் பிரதேசத்தின் அழகு! எல்லாவற்றிலும் நல்லதும் கெட்டதும் உண்டு. எது தேவை என்பதை நாம் தான் முடிவு செய்ய வேண்டும்.

    ReplyDelete
    Replies
    1. நீங்கள் பகிரும் விளம்பரப் படங்கள் சிறப்பாக இருக்கும்.
      காலாண்டு காதல் குறும்படம் தொழில் நுட்பத்தில் மிகச்சிறப்பாக இருந்தது. இவ்வளவு திறமையும் வெறும் காதல் படம் எடுக்க மட்டுமே பயன்படுவதுதான் வருத்தமாக இருக்கிறது. நன்றி வெங்கட்.

      Delete
  17. நல்லவேளை இதுபோல் எதையும் பார்ப்பதில்லை... பார்க்கவும் விரும்புவதில்லை...

    தங்களின் கேள்விற்கு பதிலாக இருக்கலாம்... அது :-

    "நான்" என்பதை தவிர்த்தால் தான் படைப்பாளியாகவே முடியும்... "நான்" தவிர்ப்பது சிரமம் தான்... ஒவ்வொரு சிந்தனையின் போதும், பேசும் போதும், இப்படி பல... முடிவாக செயலின் போதும் தவிர்க்க முற்பட்டால் படைப்பாளி...? அதன் பின்னே இயற்கை செய்யும் சூழலுக்கேற்ப படைப்புகள் பிறந்தபின்பே "படைப்பாளியா...? உழைப்பாளியா...?" இவைகளில் பல உண்டு... இப்படி பலவற்றையும் காலம் முடிவு செய்யும்...

    கண்ணதாசன் பற்றி சொன்னீர்கள்... கீழே உள்ளதும் கண்ணதாசன் பற்றியே...

    எனக்குப் பிடித்த தன்னம்பிக்கை தரும் பல காணொளிகளில், எடுத்துக்காட்டுக்காக ஒரே ஒரு காணொளி → மனதை மாற்று வாழ்க்கை மாறும்

    ReplyDelete
  18. வணக்கம் சகோதரி

    நல்ல பதிவு. சமுதாய சீர்கேடுகளை அலசிப்பார்க்கும் பதிவு. நீங்கள் கூறிய கருத்துக்கள் சரிதான். காலத்திற்கேற்றபடி ஒவ்வொரு குடும்பத்திலும் பல மாறுதல்கள். பொறுப்புக்கள், அதனால் வரும் அனுபவங்கள் ஒரு திறமையான படைப்பாளிக்கு உதவியாக நின்று அவரை சிறந்த படைப்பாளியாக உருவாக்கும். ஆனால் அதில் அவரின் மனம் வேறுபடாத முனைப்பும், காலத்தின் பரிசுந்தான் கணிசமான பங்களிப்பை தரும் என்பது உறுதியான நிலைபாடு. கடவுளின் துணையின்றி அவனால் வாழ்க்கை எனும் ஆற்றில், சிறப்பான படகுகள்,வலுவான துடுப்புகள் இருந்தும் புகழ் எனும் அக்கரையை அடைய இயலாது.

    இப்போதுள்ள சீரியல்கள் பார்ப்பதற்கு அதில் நல்ல கருத்துக்கள் ஒன்றுமில்லை. வன்மம்,பழி வாங்குவது போன்ற கெட்ட எண்ணங்கள் நிறைய வந்து விட்டது. நீங்கள் கூறும் வெப் சீரிஸ் என்னவென்று பிறகுதான் கேட்டு அறிந்து கொண்டேன்.அதையெல்லாம் இது வரை பார்த்ததில்லை.

    எழுத்தாளர் பாலகுமாரன் எழுதிய கவிதை நன்றாக உள்ளது. பெண்கள் இப்போது கட்டாயமாக வேலைக்குச் சென்று சம்பாதிப்பதால் வரதட்சணை கொடுமை இப்போது ஒரளவு குறைந்துள்ளது. மேலும் சூழ்நிலைகளால், ஆண், பெண்களின் ஆதிக்கங்கள் மாறி, மாறித்தான் வரும் என்பது சமுதாய நிர்பந்தங்களின் கணக்கு போலும்..! பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    ReplyDelete
  19. விரிவான பின்னூட்டத்திற்கு நன்றி கமலா.

    ReplyDelete