கணம்தோறும் பிறக்கிறேன் 

Sunday, August 15, 2021

சேமிப்பு

சேமிப்பு


சேமிப்பு என்பது நம் ரத்தத்திலேயே உள்ள ஒரு விஷயம். 90களில் உலகமே மிகப் பெரிய பொருளாதார சரிவை சந்தித்த பொழுது, இந்தியா மட்டும் காப்பாற்ற்ப் பட்டதற்கு நம்முடைய சேமிக்கும் பழக்கம்தான் காரணமாக இருந்து வந்தது. 

ஊதாரித்தனத்தை கண்டித்தும், சேமிப்பை வலியுறுத்தியும் விதம் விதமான கதைகளும், பாடல்களும் சிறு வயது முதற்கொண்டே நமக்கு கற்றுக் கொடுக்கப் பட்டிருக்கின்றன. அவற்றுள் பிரதானமானது 

ஆனா முதலில் அதிகம் செலவானால் 
மானம் இழந்து மதிகெட்டு போனதிசை 
எல்லார்க்கும் கள்ளனாய் ஏழ்பிறப்பும் தீயனாய்  
நல்லாருக்கும் பொல்லனாம் நாடு 

என்னும் ஒளவையாரின் நல்வழி வெண்பா. அதைப் போலவே கம்ப ராமாயணத்தில் இறுதியில் கலக்கமுற்று நிற்கும் ராவணன் நிலையை "கடன் பட்டார் நெஞ்சம் போல் கலங்கினான் இலங்கை வேந்தன்" என்று கடன் பட்டவர்களோடு இலங்கேஸ்வரனை ஒப்பிட்டு பேசியிருப்பதிலிருந்தே கடன் வாங்குவது எத்தனை தவறு என்று புரிய வைத்திருக்கிறார்கள். 

நம் பெரியவர்கள் சிறு துளி பெரு வெள்ளம் என்பார்கள். எங்கள் பாட்டி அடிக்கடி,"ஒண்ணொன்னா சேர்த்தா காசா? ஒருமிக்க சேர்த்தா காசா?" என்று கேட்பார். காசை சேர்ப்பது பற்றி நிறைய பேர்கள், நிறைய விஷயங்கள் எழுதி விட்டார்கள். நான் சேமிப்பின் அடுத்த கட்டத்தைப்பற்றி பேச விரும்புகிறேன். 

பேச்சிலும், எழுத்திலும் சிக்கனத்தை கடைபிடிப்பது நமக்கு மட்டுமல்ல நம் பேச்சை கேட்பவர்களுக்கும், படிப்பவர்களுக்கும் கூட நிலம் பயக்கும். திருக்குறளின் பெருமை என்ன? சுருங்கச் சொல்லி விளங்க வைத்தல்தானே?  மற்றவர்கள் ஒரு பாராவில் எழுதும் விஷயத்தை ராஜாஜி ஒரே வரியில் சொல்லி விடுவார் என்பது அவருடைய பெருமைகளில் ஒன்று. 

நாம் எல்லோரும் கண்டிப்பாக செய்ய வேண்டியது, நம் சக்தியை வீணாக்காமல் இருத்தல். நம்முடைய எனர்ஜி ஒன்பது துவாரங்கள் வழியே மிகவும் பொறுப்பற்ற முறையில் நம்மால் வீணடிக்கப் படுகிறது. அதை நெறி படுத்தவும், சேமிக்கவும்தான் நம்முடைய மதம் உண்ணா நோன்பு, மௌன விரதம் போன்றவற்றை வலியுறுத்துகிறது. 

எந்த புலனை சிக்கனமாக பயன்படுத்துகிறோமோ அந்த புலன் தன்னுடைய வீர்யத்தை இழக்காது. மஹாபாரதத்தில் தன்னுடைய கண்களை கட்டிக்கொண்டதால் காந்தாரியின் பார்வைக்கு மிகுந்த தீட்சண்யம் உண்டாகிவிடுகிறது. அதனால்தான் தன்னுடைய மகனான துரியோதனனின் உடலை தான் பார்ப்பதன் மூலம் வஜ்ஜிரம் போல் உறுதியாக்குகிறாள். 

மூச்சு பயிற்சிகளில் கற்றுக் கொடுப்பது என்ன? நிதானமான மூச்சு!
ஒருவன் தன வாழ் நாளில் இவ்வளவு மூச்சுதான் விட வேண்டும் என்று இருக்கும், பிராணாயாமம் போன்ற பயிற்சிகளின் மூலம் நமக்கென்று வழங்கப்பட்டிருக்கும் மூச்சை வைத்துக் கொண்டே அதிக நாட்கள் வாழ முடியும். உதாரணமாக நீங்கள் ஒரு நாளைக்கு நூறு முறை ஸ்வாசிக்கிறீர்கள் என்றால் அதை எண்பதாக உங்களால் குறைக்க முடியும் என்னும் பொழுது நீங்கள் ஒரு நாளைக்கு இருபது மூச்சுகளை சேமிக்கிறீர்கள்,அதற்கேற்றார் போல் உங்கள் ஆயுள் நீட்டிக்கப்படும்.  கோபப்படும் பொழுதும், காம வசப்படும் பொழுதும் மூச்சு தாறுமாறாக போவதால் அவற்றை குறைக்க வேண்டும் என்கிறார்கள்.  இதற்காகத்தான் நம் நாட்டில் ஆரோக்கியமான வாழ்விற்கு நாளிரண்டு, வாரம் இரண்டு, மாதம், இரண்டு, வருடம் இரண்டு என்ற பழக்கத்தை பின்பற்ற வேண்டும் என்று சொல்லி வைத்தார்கள். 

அதாவது ஒரு நாளைக்கு இரண்டு முறை மலம் கழிக்க வேண்டும், வாரத்திற்கு இரண்டு முறை எண்ணெய் தேய்த்து குளிக்க வேண்டும், மாதத்திற்கு இரண்டு முறைதான் தாம்பத்ய கொள்ள வேண்டும், வருடத்திற்கு இரண்டு முறை வயிற்றை சுத்தம் செய்து கொள்ள வேண்டும். 

நம் மதத்தை பொறுத்த வரை நாம் இந்த பிறவியில் வாழ்வதற்கு தேவையான செல்வத்தை சேர்ப்பதுஎவ்வளவு முக்கியமோ, அவ்வளவு முக்கியம் அடுத்த பிறவிக்கான புண்ணியங்களை தேடுவதும். அதையும் நாம் இப்போதே சேர்க்க வேண்டும். 

பெரியாழ்வாரின் சரித்திரத்தில் வரும் ஒரு சுவையான சம்பவம் பொற்கிழி அறுத்தல். பெரியாழ்வார் அவதரித்தது பாண்டிய நாடு. அவர் வாழ்ந்த காலத்தில் பாண்டிய நாட்டை ஆண்ட மன்னன் ஒரு முறை நகர் வலம் வந்த பொழுது,வடக்கிலிருந்து வந்த பைராகி ஒருவர் ஒரு பாடலை பாடிக் கொண்டு செல்கிறார். அதில், "இரவிற்கான உணவை பகலிலேயே தயார் செய்து கொள்ள வேண்டும், மழை காலத்திற்கு தேவையான உணவை வெய்யில் காலத்திலேயே தேடிக்கொள்ள வேணும், முதுமைக்கு தேவையான  செல்வத்தை இளமையிலேயே சம்பாதித்துக் கொள்ள வேண்டும். அடுத்த பிறவியில் சுகத்தை பெறுவதற்கு இந்த பிறவியியிலேயே புண்ணியத்தை சம்பாதித்துக் கொள்ள வேண்டும்" என்று பொருள்பட அமைந்திருக்கிறது. அதைக் கேட்ட அரசனுக்கு மற்ற விஷயங்கள் புரிந்தாலும், அடுத்த பிறவிக்கான புண்ணியத்தை இந்த ஜென்மத்திலேயே எப்படி சேர்த்துக் கொள்வது என்பதில் சந்தேகம் வர, அதற்கான வழியை சொல்பவர்க்கு பரிசாக  வழங்குவதற்காக பொற்காசுகளை ஒரு மூட்டையாக கட்டி, சரியான விடை சொல்பவருக்கு அது பரிசாக வழங்கப்படும் என்று அறிவிக்கிறான். அதை பெரியாழ்வார் சரியான விடை கூறி பெற்றுக் கொண்டார் என்று கதை செல்லும். இங்கே விஷயம், அடுத்த பிறவிக்கான புண்ணியத்தை இந்த பிறவியிலேயே தேடிக் கொள்ள வேண்டும் என்பதுதான். 

அந்த புண்ணியத்தை எப்படி சேர்ப்பது என்று திருமூலர் மிகவும் சுலபமாக வழி காட்டுகிறார்.
யாவர்க்குமாம் இறைவனுக்கொரு பச்சிலை 
யாவர்க்குமாம் பசுவிற்கொரு வாயுறை 
யாவர்க்குமாம் உண்ணும் உணவில் ஒரு கவளம் 
யாவர்க்குமாம் இனிய வார்த்தை கூறுதல் 
எவ்வளவு எளிய முறை! தினசரி கடவுளுக்கு ஒரு அருகம் புல்லோ, துளசி தளமோ, வில்வ தளமோ சாற்றலாம். பசுவிற்கு ஒரு கையளவு புல் கொடுக்கலாம், (இங்கே பசு என்பதை கால்நடை என்று கொண்டு ஏதாவது ரூ விலங்கிற்கு உணவளிக்கலாம்), பெரிய அளவில் அன்னதானம் செய்ய வேண்டும் என்பதில்லை, நாம் சாப்பிடும் சாப்பாட்டில் ஒரு கவளத்தை யாருக்காவது தரலாம், இவை எதுவுமே செய்ய முடியாதென்றால் இனிமையாக பேசலாம் என்கிறார். செய்ய முடியாதா என்ன? 

சில வாரங்களுக்கு முன்பு மத்யமரில் சேமிப்பு என்பதை பற்றி எழுதச் சொல்லியிருந்தார்கள். மற்றவர்கள் ஆர்.டி., இன்சூரன்ஸ், நகைச்சீட்டு என்பவை பற்றி எழுதிய பொழுது நான் சேமிப்பை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்ல விரும்பி இந்த கட்டுரையை எழுதினேன். குறைவான பேர்களே வாசித்திருந்தார்கள் ஆனாலும் POTW( Post of the week) கிடைத்தது.

22 comments:

  1. படிச்சுட்டேனோ? ஓஹோ! மத்யமரில் போட்டதா? அப்போப் படிச்சிருக்கேன்னு நினைக்கிறேன். :)

    ReplyDelete
    Replies
    1. மத்தயமரில் இல்லாத எ.பி.காரர்களுக்காக இங்கே. சிலர் மத்யமரில் இருந்தாலும் இங்கேயும் பகிரச் சொல்கிறார்கள். இரண்டு இடங்களிலும் வாசித்ததற்கு நன்றி.  

      Delete
  2. மூச்சு சேமிப்பைப் பற்றி நானும் கேள்விப்பட்டிருக்கிறேன்.  நம்மால் முடியாத காரியம்!!   பேச்சைக்குறை என்பார்கள்.  அது என்னால் முடியும்!  மகாபெரியவர் பிடி அரிசி திட்டம் கொண்டுவந்தாரே, அது இந்த சேமிப்புவ வகையில் வரும்.

    ReplyDelete
    Replies
    1. //மூச்சு சேமிப்பைப் பற்றி நானும் கேள்விப்பட்டிருக்கிறேன்.  நம்மால் முடியாத காரியம்!! // அது அவ்வ்கிளவு ஒன்றும் கஷ்டம் கிடையாது ஸ்ரீராம். முயற்சி பண்ணுங்கள்,ஆயுளை அதிகரித்துக் கொள்ளுங்கள்.ஆல் தி பெஸ்ட்! 

      Delete
  3. என் மகன் பள்ளியில் படிக்கும்போது சேமிப்பு என்கிற தலைப்பில் பேச்சுப் போட்டிக்கு பேசச்சொல்லி பையனைச் சேர்த்து விட்டார்கள்.  நான் எழுதித் தந்ததோடு, எப்படி பேசவேண்டும் என்றும் சொல்லிக் கொடுத்தேன்.  இப்பொழுதும் அவன் அதை மனப்பாடமாக அதே ராகத்தில் சொல்வான்!

    ReplyDelete
    Replies
    1. நான் என் மகளுக்காக நிறைய எழுதி கொடுத்திருக்கிறேன். ஒரு முறை பேரண்ட் டீச்சர்ஸ் மீட்டிங்கின் பொழுது அவளுடைய டீச்சர்," எவ்வளவு லேட்டாக சொன்னாலும் எப்படியோ பிரிபேர் பண்ணிக்கொண்டு வந்து மறுநாள் பேசி விடுவாள்" என்றதும் நாமும் மகளும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டோம். என்னதான் நான் எழுதிக் கொடுத்தாலும் அவள்தானே பேச வேண்டும்.

      Delete
  4. சிறந்த பாடலுடன் நல்ல விளக்கம்

    ReplyDelete
  5. இன்றைய காலக்கட்டத்திற்கு தேவையான அருமையான கருத்துக்கள் மேடம்.

    ReplyDelete
  6. ஓ.. மத்தியமருக்காக எழுதியதா? நான் ஏதோ புதிதாக ஆச்ரமம் ஆரம்பிக்க எண்ணியிருக்கிறீர்களோ... அதற்கான பயிற்சிக்களம்தான் இதுவோ என்று நினைத்தேன்.

    //நம்முடைய எனர்ஜி ஒன்பது துவாரங்கள் வழியே மிகவும் பொறுப்பற்ற முறையில் நம்மால் வீணடிக்கப் படுகிறது.// - நம் எனெர்ஜி, ஐம்புலன்களினால் மட்டுமே வீணடிக்கப்படுகிறது.

    ReplyDelete
    Replies
    1. ஆஸ்ரமமா? அட! இது கூட நன்றாக இருக்கிறதே?
      //நம் எனெர்ஜி, ஐம்புலன்களினால் மட்டுமே வீணடிக்கப்படுகிறது.//நீங்கள் புலன்களை மட்டும் குறிப்பிடுகிறீர்கள், நான் அந்த புலனின்பத்திற்கான பொறிகளை சொன்னேன்.

      Delete
  7. வணக்கம் சகோதரி

    நல்ல சிறப்பான பதிவு. சேமிப்பின் மகத்துவம் பற்றி விரிவாக அழகாக சொல்லியுள்ளீர்கள். இறுதியில் அடுத்த பிறவிக்கு தேவையான புண்ணியத்தை இந்தப் பிறவியில் எப்படி சேமிப்பது என்பதை திருமூலர் பாடலுடன் விளக்கமாக எடுத்துச் சொன்னது மிக சிறப்பாக உள்ளது. சிறந்த பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    ReplyDelete
    Replies
    1. தெளிவான பின்னூட்டத்திற்கு நன்றி கமலா.

      Delete
  8. இப்போதெல்லாம் தாங்கள் தஞ்சையம்பதியின் பக்கம் வருவதில்லை..
    வெகு தொலைவாகி விட்டது!..

    ReplyDelete
    Replies
    1. கிடைக்கும் நேரத்தில் வந்தாலும் பின்னூட்டமிடுவதில்லை  மற்றபடி பேதம் எதுவுமில்லை. தவறாக நினைக்க வேண்டாம். 

      Delete
  9. திருமூலர் அருளிய -
    யாவர்க்குமாம்.. - எனும் திருமந்திரப் பாடல் பதினேழு வயதில் மனதில் பதிந்தது. இன்று வரை நீதி நேர்மை தவறியது இல்லை.. கொஞ்சம் கோபம் இருந்தாலும் குணம் கெட்டது இல்லை...

    இன்னுரை சொல்வதற்கும் - யாரிடத்தில்?.. என்ற கணக்கு இருக்கின்றது...

    நன்றாற்றலுள்ளும் தவறுண்டு அவரவர் பண்பறிந்து ஆற்றாக் கடை.. - என்கின்றார் வள்ளுவர் பெருமான்..

    நல்லது செய்வது மட்டுமல்ல.. பேசுவதும் நல்லவர்களது இடத்தில் வேண்டும்...

    கூடா நட்பிடத்தில் குளிரப் பேசுவதால் ஆகப் போவது என்ன!?..

    ReplyDelete
  10. சிந்திக்க வைக்கும் செய்திகளுடன் பதிவு..
    இப்படியெல்லாம் என்னால் ஆக்காது..

    வாழ்க வளமுடன்!..

    ReplyDelete
    Replies
    1. //இப்படியெல்லாம் என்னால் ஆக்காது//..ஐயோ! உங்களால் ஆகாது என்றால் வேறு யாருக்கு சாத்தியம்? நீங்கள்  கௌரவத்தை சிரம் தாழ்த்தி ஏற்றுக் கொள்கிறேன். மிக்க நன்றி!

      Delete