கணம்தோறும் பிறக்கிறேன் 

Saturday, April 21, 2018

சில தேடல்கள்


சில தேடல்கள் 

வாழ்க்கை என்பது ஒயாத தேடல்கள்தானே? வயதிர்கும், முதிர்ச்சிக்கும் தேவைக்கும் ஏற்ப தேடும் விஷயங்கள் மாறலாம், தேடுதல் நிற்காது.
என்னுடைய சமீபத்திய தேடல் உங்களுக்கு சிரிப்பூட்டலம். தமிழ் பத்திரிகை ஏதாவது கிடைக்காதா? என்று அலைகிறேன்.


பெங்களூரில் நாங்கள் முன்பு வசித்த திப்பசன்த்ராவில் தினசரி செய்திதாள் போட்டவரிடம் சொன்னதும் குமுதம் சினேகிதியும், ம.மலரும் தொடர்ந்து போட்டு விட்டார்.
வீடு மாற்றியதும் இங்கு(ஹொரமாவு) செய்திதாள் போடும் பையரிடம் எனக்குத் தேவையான பத்திரிகைகளை கூறியதும்,” சரி மேடம் என்று தமிழில் மாட்லாடியவுடன் எனக்கு அஷ்டு சந்தோஷா! ஆனால் அது நீடிக்கவில்லை. நானும் தினசரி பேப்பர் வரும் பொழுது, புத்தகங்கள் வந்திருக்கிரதா? என்று பார்த்து பார்த்து ஏமாந்தேன்.

குறிப்பிட்ட இரண்டு புத்தகங்களுமே மாதம் இரு முறை வரும். ஓன்றாம் தேதி வர வேண்டிய ம.மலர் மூன்றாம் தேதி வரும். கு.சி. 28ம் தேதியே வந்து விடும். ஆனால், ஏழு தேதி ஆகியும் வராததால் என்ன ஆச்சு என்று பேப்பர் போடும் பொழுது மடக்கி கேட்க வேண்டும் என்று காத்திருந்தேன், எப்படியோ என் கண்களில் மண்ணைத் தூவி விட்டு ஓடி விட்டான். ஒரு நாள் பிடித்து விட்டேன். புத்தகம் கிடைக்கவில்லை என்றும் மே மாதத்தில் இருந்து கண்டிப்பாக போடுவதாகவும் சொன்னான்.இத்தனை நாட்கள் கிடைக்காத புத்தகங்கள் அப்போது எப்படி கிடைக்கும் என்று எனக்கு கேட்கத் தோன்றவில்லை.

அவனை நம்புவதற்கு பதிலாக நாமே புத்தக கடை இருக்கும் இடத்தை தேடி கண்டுபிடித்து வாங்கிக் கொண்டு வந்து விடலாமே என்று இந்த ஏரியாவில் வெகு நாட்களாக வசிக்கும் உறவுக்கார பெண்ணிடம் விசாரித்த பொழுது ரெயில்வே கேட் தாண்டி ஹார்ட்வேர் கடைக்கு அருகில் ஒரு செய்திதாள் ஏஜென்சி இருப்பதாக கூறினாள். டூ வீலரில் சென்று பார்த்த பொழுது ஹார்ட்வேர் கடைகள்தான் கண்ணில் பட்டன.

மற்றொரு இடமாக அவள் குறிபிட்ட காந்தி சிலைக்கு அருகில் ஒரு ஹோட்டல் இருந்தது, அதன் அருகில் ஒரு சிறிய பெட்டி கடை இருந்தது அதில் சில தமிழ் செய்திதாள்களும் இருந்தன. ஆனால் ஒரு பொடி பெண்ணைத் தவிர வேறு யாரும் இல்லை.  அந்தக் குழந்தையிடம் முதலில்,”கடையில் யாரும் இல்லையா? என்றேன், அந்தக் குழந்தை தலை ஆட்டியது. சரி நான் கேட்டது புரியவில்லை போலிருக்கிறது என்று நினைத்து, நான் அறிந்த ஹிந்தியில்,”அந்தர் கோயி ஹை?” என்றேன். தூங்குகிறார்கள் என்று அபிநயம் பிடித்தது. உள்ளே எட்டிப் பார்த்தால் கையை தலைக்கு முட்டு கொடுத்தபடி எனக்கு முதுகு காட்டியபடி ஒரு பெண்மணி படுத்துக் கொண்டிருந்தார்.
“தமிழ் புத்தகம் இருக்குங்களா”?
“இல்லீங்க..”
“வருமா?”
“வராது..”
அந்தப் பெண்ணிற்கு என்ன பிரச்சனையோ? திரும்பி கூட பார்க்காமல் படுத்தபடியே பதில் சொன்னார்.
என்னடா இது? ஹொரமாவுக்கு வந்த சோதனை? இப்படி ஒரு தமிழ் மறைவு ப்ரதேசமா?  மஸ்கட்டில் கூட எல்லா பதிரிகைகளும் கிடைத்ததே? அண்டை மாநிலம்.. ஹூம்ம்ம்ம்!

Saturday, April 14, 2018

கேட்ட ஞாபகம் இல்லையோ..?

கேட்ட ஞாபகம் இல்லையோ..?




ஏப்ரல் 24 ரேடியோவை கண்டுபிடித்த மார்கோனி பிறந்த நாளாம். எப்.எம்.ரேடியோ ஒன்றில் சொன்னார்கள். அதைக் கேட்டதும் பல பழைய நினைவுகள் கிளர்ந்தெழுந்தன.  நான் சிறுமியாக இருந்த பொழுது அதாவது 1960களில் ரேடியோ என்பது ஒரு ஆடம்பர பொருள். அப்பொழுதெல்லாம் ரேடியோ  வைத்துக் கொள்ள வேண்டுமென்றால் லைசென்ஸ் வாங்க வேண்டும். எங்கள் தெருவில் ராமையா மாமா என்பவர் வீட்டில்தான் ரேடியோ உண்டு. நல்ல கச்சேரிகள், கிரிகெட் மேட்ச் கமெண்ட்ரி இவைகளை அவர்கள் வீட்டு வாசல் திண்ணையில் ஸ்டூல் போட்டு அதில் ரேடியோவை வைத்து பெரிதாக ஒலிக்க வைப்பார்கள், விருப்பமுள்ளவர்கள் உட்கார்ந்து கேட்பார்கள். ஆனால் அவர்களுக்கு சினிமா பாடல்களில் விருப்பம் இல்லாததால் சினிமா பாடல்கள் கேட்க முடியாது. அந்த பாக்கியம் எங்கள் எதிர் வீட்டில் இருந்த ஸ்ரீனிவாச ஐயர் என்பவர் ரேடியோ வாங்கியவுடந்தான் கிட்டியது. அவர்கள் வீட்டில்தான் நேயர் விருப்பம், ஞாயிற்றுக் கிழமைகளில் ஒலிச்சித்திரம் அல்லது  நாடகம் இவைகளை கேட்போம். விடுமுறைகளில் ஊருக்குச் செல்லும் பொழுது தாத்தா வரும் வரை சினிமா பாடல்கள் அதுவும் வால்யும் குறைவாக வைத்து கேட்கலாம்.


எழுபதுகளில் நிலைமை மாறி ரேடியோ எல்லா வீடுகளிலும் ஒரு தவிர்க்கமுடியாத அங்கமாகி விட்டது. எழுபதுகளின் துவக்கத்தில் தொலை காட்சி பெட்டி சென்னை போன்ற பெரு நகரங்களுக்கு வந்து விட்டாலும் இப்போது அங்கு அது அடம்பர வஸ்து! மேலும் தொலை காட்சியில் ஒளி பரப்பு மாலை ஆறு மணிக்குத்தான் துவங்கும் ஆகவே ரேடியோ தன் இடத்தை தக்க வைத்துக் கொண்டது. அந்தக் காலத்தை ரேடியோவின் பொற்காலம்  என்றே கூறலாம்.  சிறிய  ட்ரான்சிஸ்டர் ரேடியோ பாத்ரூம் உட்பட எல்லா இடங்களுக்கும் எங்களோடு வரும். இதில் கவனிக்கப் பட வேண்டிய விஷயம் அந்த காலங்களில் ரேடியோவில் தண்ணீர் தெளிக்காமல் குளிக்க கூடிய அளவிற்கு குளியல் அறை அத்தனை பெரிதாக இருந்திருக்கிறது!!

வியாழக் கிழமைகளில் காலை 5:30க்கு சிலோன் ரேடியோவில் சாய் பஜன், கலை 7:20 க்கு விவித பாரதியில் 'சங்கீத் சரிதாவில் கேட்ட லதா மங்கேஷ்கர் பாடிய  சில மீரா பஜன்கள் இப்போதும் நினைவில் இருக்கின்றன. வெள்ளி கிழமைகளில் திருச்சி ரேடியோவில் காலை 8:30க்கு மங்கள வாத்தியம் என்று நாதஸ்வரம் ஒலிபரப்புவார்கள். அதைத் தவிர ரேடியோ விழா மற்றும் இசைவிழா கச்சேரிகள், சங்கீத உபன்யாசங்கள் கேட்க தடை எதுவும் கிடையாது. சினிமா பாடல்கள் மட்டும் பெரிதாக வைத்து விட முடியாது. "என்ன டீ  கடை மாதிரி அலறுகிறது .." என்று பட்டென்று ரேடியோவை நிறுத்தி விட்டு போய் விடுவார்கள் வீட்டு  பெரியவர்கள்.  நல்ல வேளை இளையராஜா வந்தார், அவருடைய காம்போசிஷன் என் அப்பாவுக்கு பிடித்தது. "இளையராஜா ஜீனியஸ்தான்" என்று அப்பா மெச்சிக் கொண்டதால்,'ஆயிரம் தாமரை மொட்டுகளே'வையும், செந்தாழம் பூவில் வந்தாடும் தென்றலையும் பெரிதாக வைத்து ரசிக்க முடிந்தது.

இசை கச்சேரிகள் மட்டுமல்ல காரைக்குடி கம்பன் விழா பட்டிமன்றங்களும் ரசித்த விஷயங்கள். அவர்களில் நீதிபதி எம்.எம்.இஸ்மாயில் தவிர திருச்சி தேசிய கல்லூரி பேராசிரியர் திரு. ராதா கிருஷ்ணன், திரு. திருமேனி, திரு.சத்தியசீலன், குன்றக்குடி அடிகளார் போன்றவர்களின் பேச்சு மிகவும் ரசிக்கத்தக்க வகையில் இருக்கும்.

சினிமா பாடல்களை ஒலி பரப்பியதில் சிலோன் ரேடியோவுக்கு தனி இடம் உண்டு. பாடல்களை விரும்பி கேட்டவர்களின் பெயர்களை, "கலா,மாலா பாலா,லீலா... ராஜேந்திரன், மகேந்திரன், கிருபாகரன்.. என்று ரைமிங்காக அவர்கள் படிக்கும் அழகு..!  பாடல்களை மட்டும் ஒலி பரப்பாமல், அந்தப் பாடல்களை  எழுதிய கவிஞர்களின் கற்பனைத் திறன், சந்த சிறப்பு, இவைகளையும் நடு நடுவே விளக்குவார்கள். நிகழ்ச்சி முடியும் பொழுது, "ஐயோ ராஜா என்னை விட்டு போயிடீங்களா.."? என்று நீயா படத்தில் ஸ்ரீ பிரியா பேசும் டயலாக்கை ஒலி பரப்பி, உடனே, "இல்லை ஸ்ரீ பிரியா மீண்டும் அடுத்த வாரம் இதே நேரத்தில் சந்திக்கலாம்" என்று கூறிய ராஜாவின் சாதுர்யம் யாருக்குத்தான் பிடிக்காது !! ரேடியோ சிலோனின் ராஜாவும் மயில்வாகனனும் பலரைக் கவர்ந்த ரேடியோ ஜாக்கிகள்.

அப்படி நம்மூரில் பலரைக் கவர்ந்த செய்தி வாசிப்பாளர்கள் என்று சரோஜ் நாராயணசுவாமி, விஜயம், மற்றும் பத்மநாபன் இவர்களை குறிப்பிடலாம். "தனது அறிக்கையில் பிரதமர் திட்ட வட்டமாக அறிவித்தார்" என்று விஜயம்  செய்தி வாசிக்கும் பொழுது திட்டத்திலும், வட்டத்திலும் அவர் கொடுக்கும் அழுத்தம் இன்னும் என் நினைவு அடுக்குகளில் இருக்கிறது. வீட்டு பெரியவர்கள் ரேடியோவில் நியூஸ் கேட்கும் பொழுது கை குழந்தை கூட அழக் கூடாது என்பது அப்போது பல வீடுகளில் எழுதப்படாத சட்டம்.

ஞாயிற்று கிழமை மதியம் ஒலி பரப்பாகும் போர்ன்விட்டா க்விஸ் கான்டெஸ்ட், வெள்ளி இரவு ஒலி பரப்பான பின்னிஸ் டபுள் ஆர் க்விட்(Binny's double or quit) வினாடி வினா நிகழ்சிகளில் சரியான விடை அளித்து விட்டால் அப்பா லேசாக சிரித்தபடி தலை அசைப்பார்.

இரவு 9:30க்கு விவித பாரதியில் வண்ணச்சுடர் என்று மேடை நாடகங்களை ஒலி பரப்புவார்கள். அதில் மனோகர் உட்பட விசு, மௌலி, ஒய்.ஜி.பி., எஸ்.வி.சேகர், பூர்ணம் விஸ்வநாதன், காத்தாடி ராமமூர்த்தி, போன்ற எல்லா பிரபல நாடக குழுக்களின் நாடகங்களையும் கேட்டு ரசிப்போம். வண்ணச்சுடர் ஒலிபரப்பாகும் நேரத்தில்தான் அப்பா சாப்பிட உட்காருவார். அப்போது ஏதாவது அழுகை வசனம் கேட்டது என்றால் அப்பாவுக்கு கோபம் வரும். "சாப்பிடும் நேரத்தில் என்னமா? அதை நிறுத்துங்களேன்.." என்று சத்தம் போடுவார் அதனால் ஒலி மிகவும் குறைந்து விடும்.

1981இல் டில்லியில் ஏஷியன் கேம்ஸ் நடந்த பொழுது கலர் டி.வி இந்தியாவில் அறிமுகம் செய்யப் பட்டது. கொடைக்கானலில் சாட்டிலைட் அமைக்கப் பட்டு ஹிந்தி நிகழ்சிகளை பார்க்கலாம் என்று வகை செய்யப் பட்டது. பெரும்பாலான வீடுகளில் தொலைகாட்சிப் பெட்டி ஒரு விருந்தினரைப் போல வந்தது. சென்னை வாசிகளைப் போல நாங்களும் மதியத்தோடு ரேடியோவுக்கு விடை கொடுத்து விட்டு மாலைகளில் தொலை காட்சி முன் உட்கார்ந்து புரிகிறதோ இல்லையோ ஹம் லோக், கர் ஜமாய், ஏக் கஹானி(இது நிஜமாகவே ஒரு நல்ல சீரியல்) போன்றவற்றை ரசிக்க ஆரம்பித்தோம். 87இல் தமிழ் நிகழ்சிகளையும் பார்க்கலாம் என்ற நிலை வந்தது. இனிமேல் ரேடியோவுக்கு என்ன வேலை? அது மட்டுமில்லை தொழில் நுட்பம் வளர வளர சினிமா பாட்டோ, கச்சேரியோ, புராண சொற்பொழிவோ ரேடியோவைத்தான் நம்பி இருக்க வேண்டும் என்ற நிலை மாறி விட்டது. இன்றைக்கு கைபேசியிலேயே நாம் கேட்க விரும்பிகிறவைகளை அப்லோட் செய்து கொள்ள முடியும். திடீரென்று ரேடியோ மிர்ச்சியின் தயவால் ஏகப்பட்ட எப்.எம்.கள்.  பெயர்தான் வேறு வேறாக  இருக்கின்றதே ஒழிய செயல்பாடு எல்லாவற்றுக்கும் ஒன்றுதான். ஓவர் டாகிங்+கலாய்ப்பு+சினிமா=எப்.எம். என்றாலும் அவ்வப்பொழுது கேட்பேன். சில நிகழ்ச்சிகளில் கலந்தும் கொள்வேன்.


    
பின் குறிப்பு:
இது ஒரு மீள் பதிவு. 

Thursday, April 12, 2018

வீட்டை மாற்றிப் பார்!

வீட்டை மாற்றிப் பார் 











கல்யாணம் பண்ணிப்பார், வீட்டைக் கட்டிப் பார் என்று சொன்னவர்கள் ஏனோ வீட்டை மாற்றிப் பார் என்று சொல்லவில்லை.

அவர்களுக்கென்ன வீடு மாற்றும் தேவை இல்லாத பாக்கியவான்கள். எந்த ஊரில் பிறந்தார்களோ அதே ஊரிலேயே இறுதி வரையில் வாழ முடிகிறவர்கள்  புண்ணியம் செய்தவர்கள். பல வருடங்கள் வாழ்ந்த வீட்டைஒழிப்பது என்பது, அதுவும் இனிமேல் எங்கேயும் போகப் போவதில்லை என்று நினைத்துக் கொண்டு சேர்த்த சாமான்களை மூட்டை கட்ட வேண்டும் என்றால் முழி பிதுங்குகிறது.



பழைய ஃபைல்கள் இருக்கும் பெட்டியை ஒழித்த என் கணவர் ஒரு ஃபைலை என் முன் போட்டார். "இது வேண்டுமா பார்.." நான் மஸ்கட் போன புதிதில் என் அம்மா எனக்கு எழுதிய கடிதங்கள். எழுதி பழக்கம் இல்லாததால் சிறு குழந்தையின் கையெழுத்தைப் போல, "உன் உடம்பு ஏன் இளைத்தாற்போல் இருக்கிறது? " உடம்பை கவனித்துக் கொள்.." என்று ஆதுரத்துடன் அம்மா எழுதிய கடிதத்தை எப்படி கிழிப்பது?

"இது யார் கல்யாண செலவு அப்பா?  ஒரு சீமந்தமும் நடந்திருக்கிறது? நாலு நாள் சத்திர வாடகை நாலாயிரம் ரூபாயா? இன்டரெஸ்டிங்..! வைத்துக் கொள்ளலாம். " என் மகன் ஒரு  ஃபைலை எடுத்து வைத்தான்.

என் குழந்தைகளின் ரிப்போர்ட் கார்டுகள். ஹெல்த் ரெகார்டுகள். இவையெல்லாம் என் பொக்கிஷங்கள் இல்லையா? இதைத் தவிர இன்சூரன்ஸ ஃபைல்கள். இவற்றில் எதையும் களைய முடியாது.

நான் சேமித்த புத்தகங்களில் சிலவற்றை ஆர்வமுள்ளவர்களுக்கு அளித்து விட்டேன். மற்றவற்றை எடுத்துக் கொள்ள வேண்டும்.

சமயலறைக்குள் வந்தால் 1987 லிருந்து என்னோடு பயணிக்கும் ஸ்ரீரங்கத்தில் வாங்கிய தோசைக்கல். அதைப் போன்ற கனமான கல் இப்போது கிடைப்பது இல்லை. கல் சட்டியை விட முடியுமா? நல்ல வேளை பரணி எனப்படும் பீங்கான் ஊறுகாய் ஜாடிகள் என்னிடம் கிடையாது. வீட்டு வேலை செய்த பெண்ணிடம் கொடுத்த ஒரு பிரெஸ்டிஜ் ஐந்து லிட்டர் குக்கர் மற்றும் சிறிய குக்கர் தவிர இன்னும் இரண்டு குக்கர்கள் இருக்கின்றன.
"எவ்வளவு குக்கர்கள் வைத்துக் கொள்வாய் அம்மா?"
"மஸ்கெட் ஜாகைக்காக ஒன்று, சென்னை ஜாகைக்காக ஒன்று.."
இதைத் தவிர திவசம் போன்ற விசேஷங்களுக்காக சமைப்பதற்காக வாங்கப்பட்ட பித்தளை, வெண்கலப்  பாத்திரங்கள். நல்ல வேளை கண்ணாடி பாத்திரங்களை முன்பே என் மருமகளிடம் கொடுத்து விட்டேன்.

இதைத் தவிர கொலு பொம்மைகள் மற்றும் ஷோ கேஸ் கிரிஸ்டல் பொம்மைகள். இவற்றை நல்லபடியாக உடையாமல் கொண்டு போக வேண்டும்.

ஷூ ராக்கை திறந்தால் என் கணவரின் காலணிகள்தான் இடத்தை ஆக்கிரமித்துக் கொண்டிருக்கின்றன. வீட்டில் போட்டுக் கொள்ளும் செருப்பு நான்கு ஜோடி, வாக்கிங் செல்லும் போது அணிந்து கொள்ள நாலு அல்லது ஐந்து ஜோடி(வாக்கிங் செல்வதே கிடையாது என்பதுதான் ஹை லைட்).

இங்கே ஒரு விஷயம் சொல்லியாக வேண்டும், என் கணவருக்கு ஷாப்பிங் செய்வது மிகவும் பிடிக்கும்.  நான் எனக்கு ஒரு புடவை போதும் என்றால் கூட நாலு புடவைகள் வாங்கித் தரும் ரகம். (அதிரா காதில் புகை வருகிறதா?) அவரோடு கடைக்குச் செல்லும் பொழுது ஒரு கட்டத்தில் நானும் என் குழந்தைகளும் அவரை பிடித்து இழுத்து வர வேண்டும். அதனால் *அவருக்கு மனைவி மட்டும் ஒன்று. மற்ற எல்லாமே இரண்டுக்கு மேல்தான். இத்தனை சாமான்களையும் இப்போது மூட்டை கட்டி ஆக வேண்டும். சக்தி கொடு... இறைவா..!

*இதற்கு கில்லர்ஜியின் கேள்வி என்னவாக இருக்கும் என்பதை யூகிக்க முடிகிறது.







    



Sunday, March 25, 2018

கோதண்டராமசாமி கோவில் - நந்தம்பாக்கம், சென்னை

கோதண்டராமசாமி கோவில் - நந்தம்பாக்கம், சென்னை





சென்னையில் இருக்கும் புராதனமான கோவில்களில் நந்தம்பாக்கத்தில் இருக்கும் கோதண்டராமசாமி கோவிலும் ஒன்று. நந்தம்பாக்கம் ட்ரேட் சென்டருக்கு எதிரே உள்ள கோதண்டராமசாமி கோவில் சந்தில் அமைந்துள்ள இந்த கோவில் அளவில் மிகப் பெரியது என்று கூற முடியாது.

ராஜ கோபுரத்தை கடந்து உள்ளே சென்றதும் பலி பீடம், துவஜஸ்தம்பம் தாண்டி, கருங்கல் மண்டபத்தில் பெரிய திருவடியாகிய கருடாழ்வார் சன்னதி. மண்டபம் முழுவதும் கம்பி கேட்டால் மூடப்பட்டு பக்கவாட்டில் நுழைவு இருக்கிறது.





கர்பக்ரஹத்திற்குள் நுழையும் முன் இடதுபுறம் திருக்கச்ச நம்பிகளுக்கு தனி சன்னதியும், வலது புறம் மணவாள மாமுனிவர் மற்றும் ராமானுஜர் இருவரும் ஒரு சன்னதியிலும், அதை ஒட்டி கண்ணாடி அறையும் இருக்கின்றன.

மூல ஸ்தானத்தில் கிழக்கு நோக்கி ஶ்ரீநிவாச பெருமாள் எழுந்தருளியிருக்கிறார். அவருக்கு வலது புறம் அலர்மேலுமங்கத் தாயாரும், இடது புறம் ஆண்டாளும் தனி சன்னதி கொண்டிருக்கிறார்கள். அருகிலேயே தெற்கு நோக்கி *மடியில் சீதா தேவியை இருத்தி, தன் தம்பிகளான லக்ஷ்மண, பரத, சத்ருகுணன் புடைசூழ அமர்ந்த கோலத்தில் ஶ்ரீராமசந்திரமூர்த்தி காட்சி அருளுகிறார். மலர்ந்த முகத்துடன் சிறிய மூர்த்தம்.  இந்த சன்னதிக்கு நேர் எதிரே கைகளை கூப்பிய வண்ணம் ஆஞ்சநேயர் பக்தி பரவசமாக விளங்குகிறார். எல்லோரையும் தரிசித்துக் கொண்டு வெளியே வந்தால் பிரகாரத்தில் சற்று பெரியவராக கைகளை கூப்பிய வண்ணம் நின்ற கோலத்தில் ஆனந்த ஆஞ்சநேயர் தனி சன்னதியிலும், சக்கரத்தாழ்வார் தனி சன்னதியிலும் எழுந்தருளியிருக்கிறார்கள்.







பிரகாரத்தை வலம் வரும் பொழுது இடது புறம் உற்சவங்கள் நடத்த பெரிய மண்டபமும், சொர்க வாசலும் இருக்கின்றன. அதைத்தவிர வலதுபுறம் நம்மாழ்வாருக்கென்று தனி சன்னதியும், பிருந்தாவன கண்ணன் என்று கிருஷ்ணனுக்காக தனி சன்னதியும் இருக்கின்றன.






சிறிய அளவில் நந்தவனம் நன்றாக பராமரிக்கப்படுகிறது. கோவிலை இன்னும் கொஞ்சம் நன்றாக பராமரிக்கலாம். கோவிலுக்கு வெளியே இருக்கும் பெரிய குளம் எல்லா நகர குளங்களைப் போலவே வரண்டு கிடக்கிறது.

இப்போது ராமநவமி உற்சவம் நடப்பதால் பெருமாள் குதிரை வாகனத்தில் புறப்பாடு கண்டருள தயாராகிக் கொண்டிருந்தார். இரண்டு பெண்கள் கோவில் வாசலில் மிக அழகாக கோலமிட்டு க் கொண்டிருந்தனர்.











உங்களுக்கு நேரம் கிடைக்கும் பொழுது அவசியம் ஒரு முறை சென்று குடும்ப சகிதமாக இருக்கும் ஶ்ரீராமனை சேவியுங்கள். நம் குடும்ப ஒற்றுமை ஓங்கச்செய்து, நாம் இழந்த செல்வங்களை அவன் மீட்டுத் தருவான்.

*சீதையை தன் மடியில் வைத்த்தபடி ராமன் காட்சி அளிக்கும் அபூர்வமான தலங்களில் இது ஒன்று. மற்றொன்று பத்ராசலம்.

தலபுராணம்:

சீதையைத்தேடி தென்திசை வரும் ராமனும், இலக்குவனனும் அப்போது இங்கிருந்த ப்ருங்கி மஹரிஷியின் ஆஸ்ரமத்தில் தங்கினார்களாம். ப்ருங்கி மஹரிஷி ஆஸ்ரமம் இருந்த இடம் ப்ருங்கி மலை. அதுவே பின்னாளில் மருவி பரங்கி மலை என்றாகி விட்டது. ராமர் தங்கிய இடமே ராமாபுரம். அதற்கு அருகில் இருக்கும் ஶ்ரீதேவி குப்பம் என்னும் இடம் முன்னாளில் சீதாதேவி குப்பம் என்று அழைக்கப்பட்டதாம்.இதற்கு அருகில் இருக்கும் போரூரில் உள்ள சிவ பெருமானை வழிபட்டு ராவணனோடு யுத்தம் செய்ய ராமர் புறப்பட்டதாலேயே அது போரூர் என அழைக்கப்படுகிறது என்றும் ஒரு நம்பிக்கை.

வால்மீகி ராமாயணத்தில் இந்த இடம் பிருந்தாரண்யம் என்றும், கம்பராமாயணத்தில் நந்தவனம் என்றும் குறிப்பிடப் படுகிறது. நந்தவனம் என்பதே நந்தம்பாக்கம் என்று மருவியிருக்கிறது.

கிருஷ்ண தேவராயரின் மாகாண பிரதிநிதியான சஞ்சீவி ராயரால் 750 ஆண்டுகளுக்கு முன் எழுப்பப்பட்ட கோவில்.
பிருந்தாரண்ய க்ஷேத்திரம்
நளினக விமானம்
வைகானச ஆகமம்
நதி வன்மீக நதி(இன்றைய அடையாறு)

***********************************************************************************

Monday, March 19, 2018

வசந்த நவராத்திரி

வசந்த நவராத்திரி




தேவி உபாசகர்களுக்கு மிகவும் முக்கியமான பண்டிகை நவராத்திரி.
ஒரு வருடத்தில் நான்கு நவராத்திரிகள் அவர்களால்
கொண்டடப்பட்கின்றன. அவைகள் ஆஷாட நவராத்திரி,  சாரதா நவராத்திரி, பௌஷ்ய அல்லது மக நவராத்திரி,  மற்றும்  வசந்த  நவராத்திரி.

இவற்றில் ஆஷாட நவராத்திரி  என்பது  ஆடி மாத  அமாவாசைக்குப்  பிறகு ஒன்பது நாட்கள் கொண்டாடப்படும். ஆஷாட நவராத்ரியில் உபா சிக்கப்பட வேண்டிய தேவி மாதங்கி! மதுரை மீனாக்ஷி  மாதங்கியின்  வடிவே!  சாரதா  நவராத்ரியில்  சிறப்பாக  வழிபடப்படுவது  மகிஷாசுரமர்தினி.  பௌஷிய நவராத்ரி வாரஹிக்கு உரியது. ஜம்புகேஸ்வரம்  என்னும் திருவானைகோவிலில் குடி கொண்டிருக்கும் அகிலாண்டேஸ்வரி 
வாரஹியின் அம்சமே! வாரஹி வழிபாடு இரவில் செய்யப்பட வேண்டியது.

பங்குனி மாத  அமாவாசைக்குப்பிறகு  வரும்  பத்து  நாட்கள்  வசந்த  நவராத்ரி ஆகும். தென் இந்தியாவில் சாரதா நவராத்ரியும் வட இந்தியாவில் வசந்த நவராத்ரியும்  சிறப்பாக  கொண்டாடப் படுகின்றன.  சாரதா நவராத்ரியின்  முக்கிய அம்சம் பொம்மை கொலு என்றால், வசந்த நவராத்ரியின்  சிறப்பு  விரதமும்  பூஜையும்.  தெற்கே  நவராத்திரியின் கடைசி நாளான நவமி அன்று கல்விக்  கடவுளான  சரஸ்வதி  தேவியை  பூஜிக்கிறார்கள்,  வட இந்தியர்களோ வசந்த பஞ்சமி அன்று சரஸ்வதி பூஜை செய்கிறார்கள்.  

இனி வசந்த நவராத்ரியின் சிறப்பை விளக்கும் கதையைப் பார்போம்: 

கோசல நாட்டை ஆண்டு வந்த த்ருவசிந்து என்னும் மன்னன் வேட்டைக்குச் 
சென்ற போது சிங்கத்தினால் கொல்லப்படுகிறான். அவனுக்குப் பிறகு அவனுடைய இரு மனைவிகளுள் ஒருத்தியான மனோரமாவிர்க்குப் பிறந்த 
சுதர்சனனை அரசனாக்க ஏற்பாடுகள் நடக்கின்றன. அப்பொழுது  துருவசிந்துவின் மற்றொரு மனைவி லீலாவதி மூலம் பிறந்த மகனுக்கே 
பட்டம் சூட்டப் பட வேண்டும் என்று லீலாவதியின் தகப்பனாரான 
உஜ்ஜைனி அரசர் யுதாஜித் கலகம் செய்கிறார். அவரோடு போரிட்ட
மனோரமாவின் தந்தை  கலிங்க  தேச  அரசர்  வீரசேனர்  யுத்தத்தில்  மாண்டு போகிறார். இதை கேள்விப்பட்ட  மனோரமா  தன்  மகன்  சுதர்சனனையும் உதவிக்கு ஒரு அடிமையையும் அழைத்துக் கொண்டு கானகம் சென்று பரத்வாஜ முனிவரிடம் தஞ்சம் அடைகிறாள்.

லீலாவதியின் தகப்பனார் யுதாஜித்  அவர்  விரும்பியபடி  தன்  பேரனான  ஷத்ருஜித்திர்க்கு பட்டம் சூட்டிய  பிறகு  மனோரமாவையும்  அவள்  மகன் சுதர்சனனையும் கொல்வதற்காக காட்டிற்கு வருகிறான்.  அவர்களை தன்னிடம் ஒப்படைக்கும்படி பரத்வாஜரிடம் வேண்ட,
தன்னிடம் அடைக்கலமாக வந்தவர்களை தான் கை விட முடியாது என்று 
கூறிவிடுகிறார். அவரோடு  யுத்தம்  செய்ய  முற்பட்டவனை  அவரின்  மகத்துவத்தைக் கூறி அமைச்சர் தடுத்து விட நாடு திரும்புகிறான். 

பரத்வாஜரின் ஆஸ்ரமதிற்கு வருகை புரிந்த சில ரிஷி குமாரர்கள் 
மனோரமாவின் அடிமையை அவனுடைய பெயராகிய   க்லீபன் என்று
அழைக்கிறார்கள். இதை கேட்ட சிறுவனாகிய சுதர்சனனுக்கு க்லீபன் என்று 
கூப்பிட வராததால், 'க்லீம்' என்று அழைக்கத் தொடங்குகிறான். க்லீம் என்பது அம்பாளின் பீஜ மந்த்ரமனத்தால் அதை மீண்டும் மீண்டும் 
உச்சரித்த சுதர்சனனுக்கு அம்பிகை காட்சி அளித்ததோடு சக்தி வாய்ந்த  வில் 
மற்றும் எடுக்க எடுக்க குறையாத அம்புராத்துனியையும் அளிக்கிறாள்.

நாளடைவில் அழகிய யுவனாக வடிவெடுத்த சுதர்சனனைக் கண்ட காசி தேச 
அரண்மனை ஊழியர்கள் காசி தேச  இளவரசியான  சசிகலாவிற்கு  நடக்கவிருக்கும் சுயம்வரத்தில் கலந்து கொள்ள அவனுக்கு அழைப்பு
விடுக்கிறார்கள்.

அங்கு சென்ற சுதர்சனனை விரும்பி சசிகலா மாலை இடுகிறாள். அப்பொழது
அங்கு வருகை  புரிந்திருந்த  யுதாஜித்  அதற்க்கு  எதிர்ப்பு  தெரிவிக்கிறான்.  தேவியின் துணையோடு யுதாஜித்தை எதிர்க்கிறான் சுதர்சனன். சுதர்சனனுக்கு உதவி புரியும் அம்பிகையை யுதாஜித் இழிவு படுத்த கோபம்
கொண்ட தேவி அவனை சாம்பலாக்குகிறாள். பிறகு சுதர்சனனையும்  சசிகலாவையும் வாழ்த்திய அம்பிகை தன்னை வசந்த நவராத்ரியில்
முறைப்படி பூஜிக்கும்படி கட்டளை இடுகிறாள்.

சசிகலாவோடு  பரத்வாஜரின் ஆஸ்ரமதிற்கு  திரும்பிய  சுதர்சனனை  வாழ்த்தி கோசல நாட்டு அரசனாக முடி  சூட்டுகிறார்  பரத்வாஜர். பிறகு அரசனான சுதர்சன் தன் மனைவி சசிகலாவோடு  விதிவத்தாக அம்பிகையை  பூஜித்து  சகல  பாக்கியங்களும்  பெற்று  வாழ்ந்தான்.  அவன் வழி தோன்றல்களான ராம லக்ஷ்மனர்களும் வசந்த   நவராத்ரியில் அம்பிகையை  பூசித்திருக்கிரர்கள். 

வசந்த நவராத்திரியில்தான் ராம நவமியும் வரும். அன்று விசிறி, பலாச்சுளை, பானகம், நீர்மோர் இவை விநியோகிப்பது சிறப்பு.

*இந்த வருடம் ஏப்ரல் 3 தொடங்கிய வசந்த நவராத்திரி ஏப்ரல் 12 ராம 
நவமியோடு முடிந்தது.  இதைப் படிக்கும் எல்லோருக்கும் எல்லாம் 
வல்ல அம்பிகையின் அருள் கிடைக்க வேண்டுகிறேன்!

யா தேவி சர்வ பூதேஷு மாத்ரு ரூபேண சம்ஸ்திதா:
நமஸ் தஸ்மை! நமஸ் தஸ்மை! நமஸ் தஸ்மை! நமோ நம:      

*இது 2011இல் எழுதப்பட்டது. ஹேவிளம்பி வருடமான இந்த வருடம்(2018) 18.3.2018 தொடங்கி, 26.3.2018 அன்று முடிகிறது.         

Tuesday, March 13, 2018

காசி யாத்திரை யூ.கே. யாத்திரை.

காசி யாத்திரை   யூ.கே. யாத்திரை.


நான் சுந்தரேசன் வீட்டை நெருங்கும் போது, சுந்தரேசனும், அவர் மனைவி சீதாவும் ஏதோ வாக்குவாதத்தில் ஈடுபட்டிருந்தார்கள். அவர்கள் வீட்டிற்கு செல்லலாமா வேண்டாமா என்று கொஞ்சம் தயங்கினேன். இவ்வளவு தூரம் வந்தாகி விட்டது, பார்க்காமல் செல்ல வேண்டாம் என்று அழைப்பு மணியின் பொத்தானை அழுத்தினேன்.

"அடட! வா வா! எவ்வளவு நாளாச்சு?" என்று அவனும், "வாங்கண்ணா, நீங்கமட்டும் வந்திருக்கீங்க, அண்ணி வரலையா?" என்று சீதாவும் வழக்கம் போல உற்சாகமாக வரவேற்க, நானும் சகஜமாக உள்ளே நுழைந்தேன். 

எனக்கு முதலில் குடிக்க நீரும், பிறகு எங்கள் இருவருக்கும் தேன்குழல் பின்னர் எனக்கு சர்க்கரை குறைவான ஸ்டராங் காபி எல்லாம்வந்தன. சீதாவின் சிறப்பு இதுதான். சிலரைப் போல ஒவ்வொரு முறையும் எனக்கு காபி ஸ்ட்ராங்காக, சர்க்கரை குறைச்சலாக வேண்டுமென்று சொல்ல வேண்டாம். முதல் முறை சொன்னதை நினைவில் வைத்துக் கொள்வாள். 

சுந்தரேசனுக்கு எதிர்த்தாற்போல் இருந்த மேஜை மீது காசி யாத்திரை டூர் அழைத்துச் செல்லும் டிராவல்ஸ்களின் ப்ரோஷர்கள் நிறைய இருந்தன. 

"காசிக்கு போகலாம் என்று உத்தேசமா?"

ஆமாம். ஆனால் நான் மட்டும் நினைத்தால்  போதுமா? கூட வரவேண்டியவர்கள் மாட்டேன் என்று சொன்னாலென்ன செய்ய முடியும்?" என்றான்.

"நான் வர மாட்டேன்னு சொல்லவில்லை. இந்த வருஷம் வேண்டாம், அடுத்த வருஷம் வருகிறேன்னுதான் சொல்றேன்" என்று சீதா உள்ளே புகுந்தாள்.

ஓஹோ! இதுதான் இவர்களுக்குள் விவாதமா? என்று நினைத்துக் கொண்டேன். 

"அது என்ன அடுத்த வருஷம்?" என்று நான் கேட்டதும், "கேளு, நீயே கேளு என்ற சுந்தரேசன், தொடர்ந்து, "இந்த வருஷம் யூ.கே. போகணுமாம்..."  

"யூ.கேயா..?" என்னையே கொஞ்சம் தூக்கிப் போட்டது இந்த பதில்.. "யூ.கேயில் யார் இருக்கிறார்கள்?"

இவளோட பெரியப்பா பையன் இருக்கிறான். இந்த முறை விடுமுறையில் வந்தவன் சும்மா இல்லாமல், நீ அங்க வந்து விடு, உனக்கு ஊரை சுற்றிக் காட்டுவது என் பொறுப்பு. லண்டன் மட்டும் இல்ல, பாரிஸ், சுவிச்சர்லாந்து என்று எங்கெல்லாம் போக முடியுமோ அங்கெல்லாம் அழைத்துச் செல்கிறேன் என்று சொல்லி விட்டான்.   அவனோட சிஸ்டர் போகப்போகிறாளாம், தானும் போகணுமாம்.." 

"பையன் வேறு, போய்ட்டு வாங்கோ, யாரோ கூப்பிடும் பொழுது ஏன் சான்சை மிஸ் பண்ணனும்? என்று சொல்லி விட்டான். ஒன்வே டிக்கெட் அவன் ஸ்பான்சர் பண்ணுகிறானாமாம்.கேட்கணுமா..?"

"அவன் உங்களையும் சேர்த்துதான் சொன்னான்.  ஒன்வே உங்களால் போட முடியாதா?" 

சுந்தரேசன் இதற்கு பதில் சொல்லாமல் மௌனம் சாதிக்க, சீதா தொடர்ந்தாள். " முதலில் ராமேஸ்வரம், பின்னர் அலகாபாத், காசி,கயா, அங்கு செய்ய வேண்டிய சடங்குகளுக்கான செலவு, பின்னர் மீண்டும் ராமேஸ்வரம், பின்னர் வீட்டில் சமாராதனை இவையெல்லாம் செய்து முடிக்க குறைச்சலாகவா செலவாகும்? அதை யூ.கே. ட்ரிப்புக்கு பயன் படுத்திக் கொள்ளலாமே..?"

இப்போது என் நண்பனுக்கு உதவலாம் என்று நினைத்த நான், "அது சரிம்மா, ஆனா ஒரு விஷயம் இருக்கு, காசி யாத்திரை எல்லாம் சீக்கிரம் செய்து விடுவது நல்லது. அங்கு செய்ய வேண்டிய சடங்குகளை எதுவும் சாப்பிடாமல் பட்டினியாக செய்ய வேண்டும். மேலும், அங்கெல்லாம் நிறைய படிகள் இறங்கி, ஏறி, அதிகம் நடக்க வேண்டியிருக்கும். அதற்கெல்லாம் உடம்பில் தெம்பு வேண்டாமா?"

சீதா உடனே, உடம்பில் தெம்பு இல்லா விட்டாலும் பரவாயில்லை" என்று தொடங்கியதும், "என்ன சொல்ல வருகிறாள் இவள்?" என்று ஆலோசித்தேன். அவளோ தொடர்ந்து," காசிக்கு போக முடியாவிட்டாலும், காசிக்கு நிகரான ஷேத்திரங்கள் என்று நம் நாட்டில் பல ஷேத்திரங்கள் இருக்கின்றன. எங்கெல்லாம் நதிகள் கிழக்கு மேற்காக பாயாமல், உத்திர வாஹினியாக, அதாவது வடக்கு தெற்காக பாய்கிறதோ, அவை எல்லாம் காசிக்கு இணையான ஷேத்திரங்கள்தான். அங்கு பிதுர் கடன் செய்யலாம். திருவையாறு அப்படிப்பட்ட ஒரு ஷேத்திரம். பாபநாசம், பவானி என்னும் முக்கூடல் திரிவேணி சங்கமத்திற்கு இணையானது. அந்த மாதிரி யூ.கேவிற்கு இணையாக ஒரு இடம் நம் ஊரில் உள்ளதா?" என்று கேள்வி கணையை வீச, நானும், சுந்தரேசனும் வாயடைத்துப் போனோம். 

அப்புறம் என்ன, இரண்டு மாதங்களுக்குப் பிறகு, அவர்கள் லண்டன் செல்லும் ஏர் இந்தியா விமானத்தில், "ஃபாசன் யுவர் சீட் பெல்ட்" என்னும் அறிவிப்புக்கு கட்டுப்பட்டார்கள்.    

Sunday, March 11, 2018

ramani vs ramani



வாய் விட்டு சிரிச்சா நோய் விட்டுப்போகும்.

Tuesday, March 6, 2018

வரமா சாபமா?

வரமா சாபமா? 

சமீபத்தில் பலரை அதிர்ச்சிக்கு உள்ளாக்கிய விஷயம் ஸ்ரீதேவியின் மரணம். வாழ்ந்த பொழுது எப்படி ஊடகங்களை ஈர்த்தாரோ, அதே அளவு, ஏன் அதை விட அதிகமாக ஊடகங்களை ஈர்த்தார். 

எத்தனை எத்தனை விமர்சனங்கள்?  எத்தனை யூகங்கள்? அவர் மரணத்திற்கு காரணம் அழகை பாதுகாக்க அவர் செய்து கொண்ட அறுவை சிகிச்சைகள், அவர் அருந்தியிருந்த மது, என்றெல்லாம் ஹேஷ்யங்கள்.  மது விஷயம் வெளி  வந்ததும் அவர் மீதிருந்த அனுதாபம் கொஞ்சம் குறைந்தது. மீம்ஸ்கள் அதிகரித்தது. இவைகளை கண்டித்தும் பலர் பதிவிட்டனர். 

ஒருவர், "எத்தனையோ பிரபலங்கள் மதுவுக்கு அடிமையாகியிருந்தனர். ஆனால் அவர்களெல்லாம் ஆண்கள் என்பதால் அவர்களின் அந்த பழக்கத்தை கண்டித்து எந்த செய்தியும் வந்ததில்லை. ஸ்ரீதேவி பெண் என்பதால் அவருக்கு மது அருந்தும் பழக்கம் இருந்ததை இவர்களால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. இது ஆணாதிக்க மனப்பான்மை" என்று எழுதி இருக்கிறார். என்ன சொல்ல வருகிறார் இவர்? ஆண்கள் செய்யும் எல்லா  அபத்தங்களையும் பெண்களும் செய்வதுதான் பெண் விடுதலையா?






இருக்கட்டும். அழகு என்பது ஆண்டவன் அளிக்கும் அன்பளிப்பு என்று கூறுவார்கள். ஆனால் ஸ்ரீதேவி மட்டுமல்ல, ஜெயலலிதா, டயானா சார்லஸ், மார்லின் மன்றோ போன்ற அழகிகளின் வாழ்க்கையின் சோகமும், அவர்களின் மரணத்தின் மர்மமும் எப்போதோ படித்த ஒரு புது கவிதையை நினைவூட்டுகின்றன. 

இங்கே 
வரங்களே சாபங்களானால்
தவங்கள் எதற்காக? 

Friday, March 2, 2018

முதல் நாள் இன்று...

முதல் நாள் இன்று...

கிரீஷுக்கு ஒரே சந்தோஷம். அவர்களுடைய குழந்தைக்கு நகரத்தின் மிகச் சிறந்த பள்ளியில் இடம் கிடைத்து விட்டது.  அந்தப் பள்ளியில் பிளே ஸ்கூலில் இடம் வாங்க வேண்டுமென்றால் அப்ளிகேஷன் தரப்படும் நாளுக்கு முதல் நாள் இரவே பெற்றோர்கள் வரிசையில் நிற்க தொடங்கி விடுவார்கள். விடிய விடிய வரிசையில் நின்று அப்ளிகேஷன் வாங்கியது ஒரு காலம். இப்போதெல்லாம் ஆன் லைனில் விண்ணப்பத்தை தரவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து அனுப்ப வேண்டும். அவர்கள் ஏற்றுக் கொள்ளாவிட்டால் மீண்டும் அணுக முடியாது. அப்படிப்பட்ட பள்ளியில் இடம் கிடைப்பது எவ்வளவு பெரிய விஷயம்!

பள்ளிக்கு பணம் கட்டிய பிறகு, குழந்தையிடம் தினசரி," நீ ஸ்கூலுக்கு போகணும், அங்கு உனக்கு நிறைய ஃப்ரண்ட்ஸ் இருப்பார்கள், ஜாலியா விளையாடலாம்" என்றெல்லாம் தினமும் சொல்லி தயார் படுத்தினார்கள். சில நாட்கள் "ஓகே" என்று கூறிய குழந்தை, சில நாட்கள் "வேண்டாம்", என்று அம்மாவை கட்டிக்க கொள்ளும். 

பள்ளி செல்வதற்காக, ஸ்கூல் பேக், டிஃபன் பாக்ஸ், வாட்டர் பாட்டில் ஷூ என்று ஒவ்வொன்றாய் வாங்கினார்கள். அப்போதெல்லாம் சந்தோஷமாக இருந்த தீப்தி, நாட்கள் நெருங்க நெருங்க, அழ ஆரம்பித்து விட்டாள். கிரீஷுக்கு அவளை எப்படி சமாதானப் படுத்துவது என்று தெரியவில்லை. 

ஸ்கூலுக்கு செல்ல வேண்டிய நாள் வந்தது. வழியெல்லாம் ஒரே அழுகை. பள்ளிக்கூட வாசலில் இவர்களை நிறுத்தி விட்டு, குழந்தையை இவர்களிடமிருந்து வாங்கி கொண்ட ஆயா அம்மாவும், ஒரு ஆசிரியையும்," நீங்க போய்டுங்க, நாங்க பாத்துக்கறோம்" என்றார்கள். பல குழந்தைகள் வீறிட்டு அழ, ஒரே களேபரம். தீப்தியும் கட்டுப்படுத்திக்கொள்ள முடியாமல் பெரிதாக அழ ஆரம்பித்தாள்.
குழந்தை ஸ்ரீஷா,"அம்மா அழாதம்மா, நான் சமத்தா இருப்பேன்" என்று அம்மா தீப்தியின் கண்களை துடைத்து விட்டது. 

"பாரு, குழந்தை அழாமல் இருக்கு, நீ அழற, எல்லோரும் உன்னை வேடிக்கை பார்க்கிறார்கள், கம் ஆன் " என்று கிரீஷ் தீப்தியை தேற்றி அழைத்துச் சென்றான்.    

Thursday, March 1, 2018

மாசி மகம்

மாசி மகம்

ஹிந்து மதம் ஒரு மனிதனுக்குரிய ஆன்மீக வளர்ச்சிக்கு தேவையான விஷையங்களை அந்தர்முக சாதனை, பகிர்முக சாதனை என இரண்டாகப் பிரிக்கிறது. அந்தர்முக சாதனை பிராணாயாமம், ப்ரித்யாகாரம், தாரணை,த்யானம்,சமாதி என விரிந்தால்  பகிர்முக  சாதனையில்  தினசரி வழிபாடு, தான தர்மங்கள் செய்தல், ஆலய தரிசனம், புனித நீராடுதல் என்பவை அடங்கும்.  





முக்கிய புண்ணிய நதிகளாக கருதப்படும் கங்கை, யமுனை, கோதாவரி, நர்மதா, சிந்து, காவேரி, போன்ற  நதிகளில் நீராடுவதும்,  ஒரு சில கோவில்களில் உள்ள குளங்களில்(உ,ம். மாமங்க குளம்,மற்றும் திரு நள்ளார் குளம்)   முழுகுவதும், சமுத்திரத்தில் ஸ்நானம் செய்வதும் சிறப்பானதாக கருதப்படுகின்றன. ஆனாலும் எல்லா சமுத்திரங்களும்   எல்லா நாட்களிலும் ஸ்நானம் செய்ய ஏற்றதாகது. ராமேஸ்வரம் தவிர மற்ற  கடல்களில்  குறிப்பிட்ட  நாட்களில்  மட்டும்தான் புனித நீராடலாம்  என்பது  சாத்திர  விதி.   அப்படிப்பட்ட  கடல் நீராடலுக்கு ஏற்ற சிறப்பான  நாள் மாசி மகம்! 



மாசி மாதத்தில் பௌர்ணமியும் மக நட்சத்திரமும் சேரும் நாளே மாசி மகம் ஆகும். சைவர்கள், வைணவர்கள், சாக்தர்கள்  ஆகிய  எல்லோருக்குமே  இது ஒரு சிறப்பான நாள் ஆகும்.

பிரளயத்திற்குப் பிறகு பிரபஞ்சத்தை படைக்க தேவையான பொருள்கள் அடங்கிய அமுத கலசத்தை சிவ பெருமான்  உடைத்து  பிரும்மாவிடம்  கொடுத்த நாள் மாசி மக திருநாள் ஆகும்.

திருவண்ணாமலையில் இருந்த   வல்லாளன்  என்னும்  அரசனுக்கு  குழந்தைகள் கிடையாது, பெரும்  சிவ பக்தனான அவன், தான் இறந்து  போனால்  தனக்கான  இறுதிச்  சடங்குகளைச் செய்ய ஒரு மகன்  இல்லையே  என வருந்த, சிவ பெருமான் அவனுக்கு முன் ஒரு சிறுவனாக  தோன்றி அவனுடைய இறுதிச் சடங்குகளை  தானே  செய்யவதாக  வாக்குறுதி அளித்தார். அந்த மன்னன் இறந்து போனது ஒரு மாசி மகமாக அமைய, சிவ பெருமான் அவனுக்குரிய  சம்ஸ்காரங்களை  கடற் கரையில்  செய்ததோடு அன்று கடலில் நீராடுபவர்களுக்கு முக்தி அளிப்தாகவும் அருளினார்.    

 மேலும் மீனவப்  பெண்ணாக பிறந்த பார்வதி தேவியை, யாராலும் கொல்ல முடியாத ராட்சச திமிங்கலத்தை  மீனவ தோற்றத்தில் வந்த  சிவ பெருமான் கொல்வதன் மூலம்    மணம் முடித்த நாளும் ஒரு மாசி  மகத்திலேதான்!(திரு விளையாடல் படத்தில் ஜிங்கு சக்கு.. ஜிங்கு சக்கு என்று  பின்னணி     ஒலிக்க  சிவாஜி  கணேசன்  நடந்தது  நினைவிற்கு  வருகிறதா?அதே தான்...!)  பராசக்தியே தனக்கு மகளாகப் பிறந்தது குறித்து மகிழ்ந்த மீனவ குல அரசன், சிவனும் பார்வதியும் மணக்கோலத்தில் தனக்கு காட்சி தந்தது போல உலக மக்கள் அத்தனை பேருக்கும் காட்சி தர வேண்டும் என்று வேண்டிக் கொள்ள மாசி மகத்தன்று பார்வதி தேவியோடு சிவ பெருமானும் கடற் கரையில் எழுந்தருள்கிறார்!



வைணவ சம்பிரதாயத்தில் சமுத்திர ராஜன் மகளான லட்சுமி தேவியை திருமால் மணந்து கொண்டதால், சமுத்திர ராஜன் திருமாலுக்கு  மாமனாராகிறார்! 
தொலை  தூரத்தில்  மகளை  திருமணம்  செய்து கொடுக்கும்  எல்லா  தந்தையரையும்  போலவே கடலரசனும் தான் தான் மகளையும்  மருமகனையும்  எப்போது பார்ப்பது என 
கேட்க, ஒவ்வொரு வருடமும் மாசி மகத்தன்று தான் கடற் கரைக்கு வந்து காட்சி தருவேன் என பெருமாள் வாக்களித்து, அப்படியே கடற் கரைக்கு எழுந்தருளுகிறார். எனவேதான் கடற்கரையை ஒட்டிய நகரங்களில் உள்ள பெருமாள் கோவில்களிலெல்லாம் அன்று பெருமாள் கடற் கரைக்குச் செல்வதும் தீர்த்தவாரி கொண்டருள்வதும் இன்றும் வழக்கமாக உள்ளன.      

இந்த வருடம் மாசி மகம் 18 .02 .2011  வெள்ளைக் கிழமையன்று வந்தது. நானும் என மகளும் கடற் கரையை(மெரினா பீச்) அடைந்த பொழுது கலை மணி 6:30 . அப்பொழுதே  அங்கு  பலர்  பெருமாளின்  வருகைக்காக  காத்திருந்தனர். முதலில் எழும்பூரிலிருந்து  ஸ்ரீனிவாச பெருமாள் எழுந்தருளினார்.

கண்ணகி சிலை சிக்னலுக்கு எதிரே பெருமாளின் குடை தெரிந்தது, அதுவரை  அமர்ந்து கொண்டிருந்த மாமிகள் பரபரவென்று பெருமாளை  வரவேற்க  பெரிதாகவும் அழகாகவும் கோலங்கள் போட்டனர்.





பின்னர்  பெருமாளோடு பக்தர்களும் கடலுக்குச் சென்று நீராடினர். அதன் பின்னர் திருவல்லிகேணியில் இருந்து பார்த்தசாரதி பெருமாள் கடற்கரைக்கு  எழுந்தருளினார்.  அவரோடும்  தீர்த்தவாரியில்  உற்சாகமாக  பங்கெடுத்துக்   கொண்டோம்.  


  
அதன் பின்னர் திருவடீஸ்வரன்பேட்டையில்ருந்து  கடற் கரைக்கு வந்த சிவன் பார்வதி தேவியை தரிசனம் செய்து கொண்டு உடல்   முழுக்க நர நரத்த மணலோடும், மனம் முழுக்க கொப்பளித்த சந்தோஷத்தோடும்  வீடு வந்தோம்.  




Monday, February 26, 2018

கதை அல்ல நிஜம்!

கதை அல்ல நிஜம்!

"சினிமாவைப் பார்த்துதான் உலகம் கெட்டுப்போகிறது," என்று பொது மக்களும், "உலகத்தில் நடப்பதைத்தான் நாங்கள் காட்டுகிறோம்" என்று திரை உலகத்தினரும் ஒருவரை ஒருவர் கை காட்டுவது வழக்கம்தான் என்றாலும், திரைப்படங்களில் நாம் பார்க்கும் சில சம்பவங்கள் நம் வாழ்க்கையிலோ அல்லது நம்மை சுற்றி இருப்பவர்கள் வாழ்க்கையிலோ நடப்பதைப்பார்த்துக் கொண்டுதான் இருக்கிறோம். அதே போல திரைப் படங்களில் சித்தரிக்கப்படும் சில கதை மாந்தர்களைப் போல நிஜ வாழ்க்கையிலும் நாம் சிலரை பார்க்க முடியும்.

அப்படிப்பட்ட மனிதர்களையும் சம்பவங்களையும் அலசுவதுதான் இந்த கட்டுரையின் நோக்கம். 

எனக்கு ஒரு தோழி இருந்தாள். கொஞ்சம் குறும்புக்காரி. என் அக்காவின் வகுப்புத் தோழி. பின்னாளில் எனக்கும் நட்பானாள். பெண்களும் ஆண்களும் சகஜமாக பழகாத அந்தக் காலத்திலேயே பசங்களோடு சுலபமாக பழகுவாள். அப்போதெல்லாம் ஸ்ரீரங்கத்தில் ரெயில் நிலையத்தை ஒட்டி ரயில்வே க்ராஸிங்கில்  மேம்பாலம் கிடையாது. ரயில்வே கேட்டுதான். ரயில்வே கேட் மூடப் பட்டு விட்டால் பேருந்துகள் கேட் திறப்பதற்காக காத்திருக்கும். passenger train இல் தொத்திக் கொண்டு செல்லும் விடலைப் பையன்கள் பேருந்தில் உட்காந்திருக்கும் இளம் பெண்களைப் பார்த்து கை அசைப்பார்கள். அந்த சமயம் பேருந்தில் என் தோழி இருந்தால், டாடா காட்டும் பையன்களுக்கு இவளும் பதிலுக்கு டாடா காண்பிப்பாள். "ஏன் இப்படி செய்கிறாய்?" என்றால், "ஏதோ அவர்களுக்கு ஒரு சந்தோஷம் கிடைக்கட்டுமே" என்பாள். 

அவள் அவளை விட ஒரு வயது இளைய பையனை காதலித்தாள். இருவரும் பிராமணர்கள் என்றாலும், வேறு வேறு பிரிவினர் என்பதால் இரண்டு வீட்டிலும் எதிர்ப்பு இருந்தது. அவளுடைய காதலன் பம்பாயில் வேலை பார்த்துக் கொண்டிருந்தான். அவன் ஒரு முறை விடுப்பில் வந்த பொழுது, இவள் வீட்டு சாமி அறையில், ஒரு மஞ்சள் கயிற்றில் மஞ்சளைக் கோர்த்து அவனை விட்டு கட்ட சொல்லி விட்டாள். என்னிடம் அதைக் கூறிய பொழுது, "இது என்ன பைத்தியக்காரத்தனம்? இது என்ன மாதிரி திருமணம்? ஒருவர் கூட சாட்சிக்கு இல்லாத இந்த திருமணம் எப்படி செல்லும்?" என்று கேட்டதற்கு, "கடவுள் சாட்சியாக அவன் என் கழுத்தில் தாலி  கட்டியிருக்கிறானே..?" என்றாள்.  அந்த நிகழ்ச்சிக்குப் பிறகு ஒரு முறை என் வீட்டிற்க்கு வந்தாள். அவளிடம் என் அம்மா," என்ன .... எப்போ கல்யாணம் பண்ணிக்கப் போற?" என்று கேட்டார். (ஏனென்றால் அப்போது அவள் வாதை ஒத்த பெண்களுக்கு திருமணம் ஆகி குழந்தை கூட பிறந்து விட்டது. ஏன் எனக்கே திருமணமாகி விட்டது).  அவள் சற்றும் அசராமல், "எனக்கு கல்யாணம் ஆயிடுத்து மாமி, நான் சுமங்கலி" என்றதும், என் அம்மா, "பார்த்தியாடி, இவளுக்கு எல்லாம் விளையாட்டுதான்" என்றார். எனக்கு ஒரே கிலி, நான் சற்று மறைவாக,வெளிச்சம் என் முகத்தில் விழாதபடி நின்று கொண்டிருந்ததால், நான் முழித்த முழியை என் அம்மாவால் பார்க்க முடியவில்லை, நான் தப்பித்தேன். 



அலை பாயுதே படத்தில் மாதவனும் ஷாலினியும் இரு வீட்டுக்கும் தெரியாமல் ஒரு கோவிலில் கல்யாணம் செய்து கொள்ள போவார்கள்  அப்போது மாதவன் குடும்ப நண்பரான ஒரு பெண்மணி,  "கார்த்திக், என்ன கோவிலுக்கெல்லாம் வந்திருக்க?"என்று கேட்பார், உடனே, மாதவன், "இங்க ஒரு பெண்ணை கல்யாணம் பண்ணிக்கலாம்னு இருக்கேன்" என்று சீரியசாக கூற அந்தப் பெண்மணியோ அதை நம்பாமல்,"உனக்கு எல்லாம் விளையாட்டுதான்" என்பார் 

அலை பாயுதே படத்தை பார்க்கும் பொழுதெல்லாம் குறிப்பாக இந்த காட்சியை பார்க்கும் பொழுதெல்லாம் எனக்கு என் தோழிதான் நினைவுக்கு வருவாள்.  'அவள் அப்படித்தான்' படம் பார்த்த பொழுதும்  இவள் ஞாபகம்தான் வந்தது.  

எந்தப் படம் என்று தெரியவில்லை, அந்தப் படத்தின் காமெடி மிகவும் பிரபலம். காலையில் பிரமாதமாக பூஜை செய்து, பெற்றோர்கள் காலில் விழுந்து வணங்கும் வடிவேலு, மாலை நன்றாக குடித்து விட்டு வந்து அதே பெற்றோர்களை துவைத்து எடுப்பார். கேட்டால், "அது நல்ல வாய், இது நாற வாய்" என்பார்.



என் சகோதரியின் வீட்டிற்கு பக்கத்தில் இருந்தவர்கள் வீட்டிலிருந்து காலையில், கணகணவென்று மணி அடித்து "ஓம், ஸ்ரீ மாதா மஹாராக்னி,ஸ்ரீமத் சிம்ஹாசனேஸ்வரி .." என்று பலமாக சப்தம் கேட்கும். இரவில் அதே குரல், கன்னா பின்னாவென்று கெட்ட வார்த்தைகளை இரைக்கும். சில சமயம் பெற்றோர்கள் அடி வாங்கும் ஓசை கூட கேட்கும். மேற்படி படத்தை இயக்கிய இயக்குனர் இப்படிப்பட்ட காட்சிகளை பார்த்திருப்பாரோ?

எங்கள் நெருங்கிய உறவில் ஒரு பையன் தன் முப்பத்திரெண்டாவது வயதில் இளம்  மனைவியையும், மூன்று வயது மகனையும் விட்டு விட்டு, அகாலமாக இறந்து போனான். குடும்பமே அந்த இழப்பை தாங்க முடியாமல் கதறிக் கொண்டிருந்தது. அவனுடைய குழந்தையோ வீட்டிற்கு வருபவர்களிடம் எல்லாம்,"என்னோட அப்பா செத்துப் போய்ட்டா.." என்று  தான் என்ன சொல்கிறோம் என்பது புரியாமலேயே சொல்லி எல்லோருடைய துக்கத்தையும் அதிகப் படுத்திக் கொண்டிருந்தது. 

நாயகன் திரைப்படத்தில் கதா நாயகனால் கொலை செய்யப்பட்ட இன்ஸ்பெக்டரின் மன நிலை பிறழ்ந்த மகன் வீட்டிற்கு வருபவர்களிடம் எல்லாம்," மேரா பப்பா மர் கயா" என்று சொல்லும் அந்த காட்சியை காண நேர்ந்தால் வயிற்றில் கத்தி சொருகப் படும் வேதனையை உணருவேன்.

காட்சிகள் இவை என்றால், நிறைய நிஜ மாந்தர்கள் சினிமா பாத்திரங்களை நினைவூட்டுவார்கள். என் மருமகளை பாலசந்தர் பட ஹீரோயின் என்போம். பாலசந்தரின் படங்களில் மலையாளம் பேசும் ஒரு பாத்திரம் வரும். நிறைய படங்களில் கதாநாயகி திடீர் திடீரென்று ஹிந்தியில் பேசுவாள். என் மருமகள் டில்லியில் பிறந்து வளர்ந்ததால், என்னதான் வீட்டில் பேசும் மொழி தமிழ் என்றாலும், அவளுக்கு சரளமாக பேச வேண்டுமென்றால் ஹிந்தியைத்தான் நாடுவாள். இதைப் பற்றி என் மகன், "கோபமாக இருக்கும் பொழுது ஹிந்தியில் பேசுவாள், அதானல் கோவமா இருக்கானு புரிந்து விடும்" என்பான். எனவே கே.பி.பட ஹீரோயின். 

என்னுடைய சின்னஞ்சிறு வயதில் நான் பார்த்த படம் 'சின்னஞ் சிறு உலகம்'. அந்தப் படத்தி நடித்தவர்கள் யார்? என்ன கதை போன்ற விஷயங்கள் எனக்கு நினைவில் இல்லை. ஒரே ஒரு காட்சி மட்டும் நன்றாக ஞாபகம் இருக்கிறது. அந்தப் படத்தில் ஒரு திருமணத்திற்குச் செல்லும்  நாகேஷ் அழ ஆரம்பிப்பார். அடக்க முடியாமல் அவர் அழுவதைப் பார்த்த எல்லோரும் ஒருவர் பின் ஒருவராக அழ ஆரம்பித்து விடுவார்கள். இறுதியில் நாதஸ்வரம் வாசித்துக் கொண்டிருபவர்களும் அதை கீழே வைத்துவிட்டு அழ ஆரம்பித்து விடுவார்கள். கடைசியில் யாரோ ஒருவர் நாகேஷிடம்,"ஏன் அழுதாய்?" என்று கேட்பார். அவர் அதற்கு," கல்யாணப் பெண்ணுக்கு அருகில் குத்து விளக்கு எரிந்து கொண்டிருக்கிறது, எங்கேயாவது அந்தப் பெண்ணின் புடவைத்த தலைப்பு பறந்து அந்த விளக்கில் பட்டு, புடவை பிடித்துக் கொண்டு, அந்த நெருப்பு பெண்ணிடமிருந்து மாப்பிள்ளைக்கு பரவி, அப்படியே கொஞ்சம் கொஞ்சமாக எல்லோருக்கும் பரவி விட்டால் என்ன செய்வது என்று நினைத்தேன், அழுகை வந்து விட்டது" என்பார். இதைப் போலவே மிகையாக கற்பனை செய்து கவலைப் படும் மனிதர்களை நான் அறிவேன். அப்படிப்பட்டவர்களை 'சின்னஞ் சிறு உலகம் நாகேஷ் என்போம். 

தில்லானா மோகனாம்பாளில் நாகேஷ் ஏற்றிருந்த கதா பாத்திரமான சவடால் வைத்தி போல பல பேரை நிஜத்தில் பார்த்ததுண்டு. 



மணல் கயிறு படத்தில் விசு ஏற்ற கதா பாத்திரமான நாரதர் நாயுடு போல பல திருமணங்களை செய்து வைத்திருக்கிறார் என் அம்மா. அதைப் போல பொய்கள் சொல்லி அல்ல. பெண் வீட்டாரைப் பற்றிய நல்ல விஷயங்களை மட்டும் பிள்ளை வீட்டாரிடமும், பிள்ளை வீட்டாரைப் பற்றிய நல்ல விஷயங்களை மட்டும் பெண் வீட்டாரிடமும் சொல்லி, இரு வீட்டாரிடமும் இருக்கும் அதீத எதிர்பார்ப்புகளை பேசி சரி செய்து, திருமணத்தை நடத்தி வைப்பார். திருமணத்திற்குப் பிறகு அவர்களுக்குள் ஏதாவது பிரச்சனை வந்தால், அவர்கள் இருவரும் சேர்ந்து கொண்டு என் அம்மாவை குற்றம் சாட்டுவார்கள்(மணல் கயிறு க்ளைமாக்ஸ்). என் அம்மாவோ அதை எல்லாம்  பொருட்படுத்தாமல், வேறு யாராவது "என் பெண்ணுக்கு/பையனுக்கு நல்ல வரன் இருந்தால் சொல்லுங்களேன்" என்றால் உடனே அடுத்த கல்யாணத்தை நடத்தி வைக்க தயாராகி விடுவார். ஆனால் சம்பந்தப்பட்ட பெண்கள் , என் அம்மாவிடம் அதற்காக நன்றியோடு  இருந்திருக்கிறார்கள்.  



'கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்'  படத்தில் ஐஸ்வர்யா ராய் ஏற்றிருந்த கதாபாத்திரம் என்னை நினைவூட்டியதாக என் கணவர் சொன்னார். அதில் அப்பாஸ், பாரதிதாசன் பாடலை,பாரதியார் பாடல் என்று கூறி விட, அவர் கூறியது தவறு என்று புத்தகத்தை எடுத்துக் காட்டி நிரூபிப்பார் ஐஸ். என்னிடமும் அந்த அசட்டுத்தனம் உண்டு.  

"யாரோ, ஏதோ சொல்கிறார்கள், சொல்லிவிட்டு போகட்டுமே.."என்று என்னால் விட முடியாது.  தன் தோல்வியால்  தளராத விக்ரமாதித்யன் போல பல முறை தோற்றாலும் மீண்டும் மீண்டும் இந்த குணத்தை மாற்றிக் கொள்ள முயற்சி செய்து கொண்டேதான் இருக்கிறேன். அடுத்த ஜென்மத்தில் அந்த டிப்ளமசி கை கூடலாம்!!



Thursday, February 22, 2018

நீடித்த சந்தோஷம் எது?

நீடித்த சந்தோஷம் எது?


முகநூல்(face book) தோழி திருமதி காயத்ரி  சுந்தரேசன் சமீபத்தில் ஒரு கேள்வி எழுப்பி இருந்தார். 

Pleasure- what is it that gives one pleasure? Physical?mental?emotional? which is lasting pleasure? 

நான் தமிழில் சிந்திப்பதால் இதை தமிழ் படுத்துகிறேன். ஒருவருக்கு எது சந்தோஷத்தை கொடுக்கிறது? புலனின்பமா? அறிவு சார்ந்த இன்பமா? இல்லை உணர்வு சார்ந்த இன்பமா? எந்த இன்பம் நீடித்திருக்கும்?

நல்லது! முதலில் புலனின்பத்தை எடுத்துக் கொள்வோம். கண்டு,கேட்டு, உற்று,உணர்ந்து.முகரும் இந்த ஐவகை இன்பங்களும் பெண்ணிடம் உண்டு. சாப்பாட்டிலும் உண்டு. இந்த இரண்டு வகை இன்பங்களை தேடித் தேடி ஓடாதவர்கள் உண்டா? இதனால் கிடைக்கும் இன்பம் நிச்சயமாக நிலையானது கிடையாது. 

மேலும் இந்த புலனின்பத்தை அனுபவித்து தீர்த்து விட முடியாது. மகாபாரதத்தில் வரும் யயாதி கதையில் யயாதி கூறியதைப் போல, உலக இன்பங்களை அனுபவித்து தீர்த்து விடலாம் என்று நினைப்பது எரிகின்ற கொள்ளிக்கு நெய் வார்த்து அதை அணைத்து விடலாம் என்று நினைப்பதற்கு ஒப்பானது. எனவே நீடித்த இன்பத்தை ஒரு போதும் தராது. அதனால்தான் நம் முன்னோர்கள் இது ஒரு வரம்பிற்குள் இருக்க வேண்டும் என்பதர்காகத்தான் அவ்வப்பொழுது விரதங்களை அனுஷ்டிக்க வேண்டும் என்று வலியுறுத்தினர். 

அடுத்து அறிவார்ந்த சந்தோஷம்: அறிவார்ந்த சந்தோஷம் என்று ஒன்று உண்டா என்று தெரியவில்லை. ஏனென்றால் அறிவு செயல் பட ஆரம்பிக்கும் பொழுது சந்தோஷம் விடை பெற்று விடும். சிறு வயதில் மயலின் இறகை நோட்டு புத்தகத்தில் வைத்து அது குட்டி போடும் என்று நம்பும் சந்தோஷம் வளர்ந்த பிறகு இருக்குமா?  

மணிக்கொடி எழத்தாளர்களில் ஒருவரான கு.ப.ராஜகோபால் ஒரு அருமையான சிறு கதை எழுதி உள்ளார்.  அதில் சித்தார்த்தன் என்னும் இளவரசன் ஏன் புத்தனானான்  என்பதற்கு ஒரு காரணம் கூறியிருப்பார். 

இரவில் மனைவி யசோதராவோடு சுகிக்கிறான் சித்தார்த்தன். அதற்குப் பிறகு அவள் உறங்கி விட, இவ்வளவுதானா? இதற்குத்தானா? என்னும் கேள்விகள் அவனை வாட்ட, அன்றிரவே அரண்மனையை விட்டு வெளியேறுகிறான். என்று  முடித்திருப்பார்.

அடுத்தது உணர்வு பூர்வமான சந்தோஷம்: இது சற்று உயர்ந்த ரகம்: மேலே சொன்ன இரண்டு ரகங்களும் அனுபவிக்கும் ஒருவருக்கு மட்டும் சந்தோஷத்தை தரும் என்றால், இதில் நாம் மற்றவரையும் சந்தோஷப்படுத்தலாம். எப்படி என்றால் ஒருவர் பாடுகிறார். அது அவருக்கு சந்தோஷம், அது நன்றாக இருக்கும் பட்சத்தில் கேட்பவருக்கும் சந்தோஷம். எம்.எஸ்.சுப்புலக்ஷ்மி  இன்று இல்லை. ஆனால்  அவருடைய சங்கீதம் இன்றும் நம்மை சந்தோஷப் படுத்துகிறது. 

ஸ்வாமி ஏ.பார்த்தசாரதியின் உரையில் ஒரு முறை குறிப்பிட்டார். இந்த உலகில் மூன்று  விதமான உதவிகள் உண்டு. ஒன்று பணத்தால் ஒருவருக்கு உதவுவது. இது அதமம் (கடைசி). இரண்டாவது உடலால் ஒருவருக்கு உதவுவது இது மத்யமம்(இடை நிலை). மூன்றாவது உணர்வு பூர்வமாக ஒருவருக்கு உதவுவது, இதுதான் உத்தமம் (உயர்ந்த நிலை). 

முன்பெல்லாம், எல்லா மகான்களும் பாடகர்கள், நடிகர்கள், கதாசிரியர்கள், விளையாட்டு வீரர்கள் போன்ற செலிப்ரிடிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் பொழுது நான், "எல்லா இடங்களிலும் பெரிய மனிதர்கள் என்றால் ஒரு தனி கவனிப்புதான்" என்று நினைத்துக் கொள்வேன்.  ஆனால் அவர்கள் தங்கள் திறமையால் எத்தனை பேர்களை உணர்வு பூர்வமாக சந்தோஷப் படுத்துகிறார்கள்? அதற்கான அங்கீகாரம்தான் அவர்களுக்கு  கொடுக்கப்படும் முக்கியத்துவம். மேலும் இந்த உணர்வு பூர்வமான சந்தோஷத்தை தெய்வீகமாக மாற்றுவது எளிது. 

இதில் எதுவுமே நிலைத்த சந்தோஷத்தை தராது என்பதுதான் உண்மை. எதுவுமே நீடித்த சந்தோஷத்தை தராது என்பதை கண்டு கொள்வதுதான் சந்தோஷத்தை தரும்.  

யாதனின் யாதனின் நீங்கியாங்கு நோதல் 
அதனின் அதனின் இல 

எதில் எதில் இருந்தெல்லாம் விலகி இருக்கிறோமோ அவைகளால் துன்பம் கிடையாது என்று இதைத்தான் வள்ளுவர் சொன்னார். நீங்குதல் என்பது  புறக்கணித்தல் அல்ல எட்டி இருத்தல், டிடாச்மென்ட். இதை பழக்கிக் கொண்டோமானால் வாழ்கை இனிக்கும்! 

பி.கு.: இது ஒரு மீள் பதிவு. பழைய கடிதங்களை படிப்பதை போல, பழைய பதிவுகளை படிப்பதும் ஒரு சுகம்தான். 

Thursday, February 15, 2018

வேடிக்கை மனிதர்கள்

 வேடிக்கை மனிதர்கள்

நிஜம் கற்பனையை விட விநோதமானது என்பார்கள். அப்படி இரண்டு செய்திகள்:

சவுதி அரேபியாவில் ஒரு பெண் விவாகரத்து கோரியிருக்கிறாள். காரணம் அவள் கணவன் தன் தாயை விட தன்னை அதிகம் நேசித்ததாம்.

மனைவியை தாறுமாறாக நேசித்த அந்த கணவன் அவளை சந்தோஷமாக வைத்துக் கொள்ள வேண்டும் என்பதற்காக அவளை வெளிநாட்டு சுற்றுலாவுக்கெல்லாம் அழைத்து சென்றிருக்கிறான். அவள் ஆசைப்பட்டதையெல்லாம் வாங்கி தந்திருக்கிறான். மனைவியை இப்படி மாங்கு மாங்கென்று கவனித்தவன் பெற்ற தாயை புறக்கணித்ததை அவளால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. "இன்றைக்கு எனக்காக சொந்த தாயாரை கவனிக்காமல் விடும் இவன் நாளைக்கு என்னை விட அதிகமாக அவனைக்கவர்ந்த வேறு ஒரு பெண்ணைக் கண்டால் என்னை கை கழுவ மாட்டான் என்று என்ன நிச்சயம்?, இவன் நம்பத் தகுந்தவன் அல்ல" என்று கூறியிருக்கிறாள். என்ன ஒரு ட்விஸ்ட்!

சீனாவின் விமான நிலயம் ஒன்றில் பாதுகாப்பு சோதனைக்காக ஒரு பெணணிடம் அவளுடைய கைப்பையை ஸ்கேன் செய்யும் பொருட்டு எக்ஸ் ரே மிஷினில் போடச் சொல்லி இருக்கிறார்கள். எக்ஸ் ரே மிஷினில் போட்டால் தன் கைப்பையில் வைத்திருக்கும் பணம் எங்கேயாவது திருட்டுப் போய் விடுமோ என்று பயந்த அந்தப் பெண் தானே எக்ஸ் ரே மிஷினுக்குள் புகுந்து வெளி வந்திருக்கிறாள். எதிர் பக்கம் தங்கள் உடைமைகளை எடுத்துக் கொள்ள காத்திருந்தவர்களுக்கு அதிர்ச்சி.