கணம்தோறும் பிறக்கிறேன் 

Tuesday, May 23, 2017

வெற்றிலையும் எலுமிச்சம்பழமும்

வெற்றிலையும் எலுமிச்சம்பழமும் 




இந்துக்களின் வாழ்க்கையில் வெற்றிலைக்கு  சிறப்பான இடம் உண்டு. வெற்றிலை இல்லாத பூஜை,வழிபாடு, பண்டிகை எதுவும் கிடையாது. ஒரு சுப காரியத்திற்க்காக வாங்க வேண்டிய சாமான்கள் லிஸ்ட் போடும் பொழுது முதலில் மஞ்சள் குங்குமம் என்று எழுதி விட்டு, அடுத்த இடத்தை பிடிப்பது வெற்றிலை பாக்குதான். திருமண நிச்சயதார்த்தத்தை பாக்கு வெற்றிலை மாற்றிக்  கொள்வது என்றுதான் வழக்கு மொழியில் சொல்லப் படும். இரு வீட்டாரும் ஒருவருக்கு மற்றவர் வெற்றிலை பாக்கு கொடுப்பதோடுத்தான் திருமணம் முடிகிறது. அது மட்டுமல்ல திருமணத்திற்கு வந்து விட்டு வெற்றிலை பாக்கு வாங்கி கொள்ளாமல் செல்லக் கூடாது என்பது மரபு. இப்போதெல்லாம் அந்த வேலையை கேட்டரிங் கான்ட்ராக்ட்காரர்கள் கவனித்துக் கொள்கிறார்கள். அந்த பையில் தேங்காய் போடப் பட்டிருக்கும், தேங்காய் வெற்றிலை பாக்கு வழங்கப்பட்டு விட்டால் அதற்கு மேல் அங்கு தேங்காமல் இடத்தை காலி செய்து விட வேண்டும் என்று பொருளாம். 

எது எப்படி இருந்தாலும் நான் சொல்ல வந்ததது வெற்றிலைக்கான பெயர்க்க காரணம். காஞ்சி மஹா பெரியவர் ஒரு முறை அவருக்கு முன் வைக்கப் பட்டிருந்த தட்டிலிருந்து ஒரு வெற்றிலையை எடுத்து கையில் வைத்துக் கொண்டு, "வெற்றிலையை ஏன் வெற்றிலை என்று கூறுகிறோம் தெரியுமா?" என்று சுற்றி இருந்தவர்களை கேட்டாராம். யாருக்கும் பதில் தெரியவில்லை. பிறகு அவரே, "ஒரு செடி என்றிருந்தால் இலை, பூ, காய், கனி என்று எல்லாம் இருக்கும். ஆனால் வெற்றிலைச் செடியில் பூ, காய், கனி என்று எதுவும் கிடையாது, வெறும் இலை மட்டும்தான். வெற்று இலைதான் வெற்றிலை ஆகி விட்டது". என்றாராம். 

ஒரு விருந்து என்றால் வெற்றிலை போட்டுக் கொண்டால்தான் நிறைவு. இப்போதெல்லாம் மிட்டா  பான் என்று வடக்கிந்திய பெரிய வெற்றிலையில் என்னென்னவோ சேர்த்து இனிப்பாக ஒன்று தருகிறார்கள். நல்ல வேளை, அருகிலேயே நம்மூர் வெற்றிலை,பாக்கு, சுண்ணாம்பும் வைக்கிறார்கள். என் விருப்பம் இரண்டாவதுதான். '

ஆய கலைகள் அறுபத்து நான்கில் வெற்றிலை போடுவது உண்டா என்று தெரியவில்லை. அந்த கலையில் தஞ்சாவூர்காரர்களை மிஞ்ச முடியாது. முதலில் கொஞ்சம் பாக்கு, அல்லது சீவலை வாயில் போட்டுக் கொண்டு விடுவார்கள்.  பிறகு தண்ணீரில் இருக்கும் வெற்றிலையை எடுத்து வேட்டியிலோ, துண்டிலோ துடைத்து சுண்ணாம்பை அளவாக தடவுவார்கள், பிறகு அதை சரி பாதியாக குறுக்கு வாட்டில் மடித்து அந்த காம்பை ஆரம்பத்திலிருந்து நுனி வரை சர்ரென்று கிழிக்கும் அழகு..! பிறகு அதை சுருட்டி ஆள் காட்டி விரலுக்கும் நாடு விரலுக்கும் நடுவில் வைத்துக் கொள்வார்கள். அவர்களுக்கு எத்தனை வெற்றிலை வேண்டுமோ அத்தனையையும் ரெடி பண்ணிய பிறகு ஒவ்வொன்றாக வாய்க்குள் தள்ளுவார்கள். சிலர் கள்ளக் குரலில் பாடிக் கொண்டே  இதை செயல் படுத்துவார்கள். 

அவர்கள் குதப்பிக் கொண்டிருக்கட்டும், நாம் எலுமிச்சம் பழத்தின் சிறப்பை பார்க்கலாம். 

நம் நாட்டில் பெரியவர்களை பார்க்கச் செல்லும் பொழுது அவர்கள் கையில் எலுமிச்சம் பழம் கொடுத்து வணங்குவது மரபு(தில்லானா மோகனாம்பாள் படம் ஞாபகம் இருக்கிறதா? அதில் சவடால் வைத்தி பெரிய மனிதர்களை முதலில் பார்க்கும் பொழுதெல்லாம் ஒரு எலுமிச்சம் பழம் கொடுப்பார்). இதற்கு என்ன காரணம்?

எல்லா பழங்களும் காயாக இருக்கும் பொழுது கசப்பாகவோ, துவர்ப்பாகவோ, புளிப்பாகவோ இருக்கும். பழுத்த பிறகுதான் அதற்கு இனிப்பு வரும். ஆனால், எலுமிச்சம் பழமோ காயாக இருக்கும் பொழுதும் புளிப்பாகத்தான் இருக்கும், பழுத்த பிறகும் அதே புளிப்புச் சுவைத்தான். இதை நாம் பெரியவர்களுக்கு கொடுக்கும் பொழுது, நம் இருவருடைய உறவும் இந்த எலுமிச்சம்பழத்தை போல எப்போதும் மாறாமல் இருக்கட்டும் என்று குறிப்பால் உணர்த்துகிறோமாம்  

-- ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் உபன்யாசத்தில் கேட்டது.

Tuesday, May 16, 2017

ப.பாண்டி (விமர்சனம்)

ப.பாண்டி (விமர்சனம்)



தனுஷ் முதல் முறையாக இயக்கி இருக்கும் படம். முதல் காதலில் தோற்ற இருவரும் தங்கள் முதிய பிராயத்தில் அந்த காதலை புதுப்பித்துக் கொள்ளலாமா என்று யோசிக்கும் கதை. 

கதா பாத்திரத்திற்கேற்ற நடிகர்களை தேர்வு செய்திருப்பதிலேயே தனுஷிற்கு பாதி வெற்றி கிடைத்து விடுகிறது. அந்த அப்பா பாத்திரத்திற்க்கு ராஜ் கிரானை விட வேறு ஒரு சிறந்த தேர்வு இருக்க முடியுமா? ஆரம்ப காட்சிகளில் மகனிடம் பயந்து கொண்டு பம்முவதும், பேரக் குழந்தைகளிடம் பாசம் காட்டுவதிலும், நண்பர்களோடு முக நூலில் போடுவதற்காக விடம் விதமாக போஸ் கொடுக்கும் வெள்ளந்தி தனத்திலும், இறுதியில் "உனக்காக இரண்டு தடவ வீட்டை விட்டு ஓடி வந்திருக்கேன்" என்று கூறுவதிலும் சபாஷ் போட வைக்கிறார். 

கடைசி இருபது நிமிடங்கள் மட்டுமே வந்தாலும் தன். முத்திரையை பதிக்கிறார் ரேவதி. எந்த கல்மிஷமும் இல்லாமல் முன்னாள் காதலனோடு பைக்கில் ஊர் சுற்றுவதும், "வீட்டு அட்ரஸ் கொடுத்தது தப்பா போச்சு" என்று ராஜ் கிரனை கோபிப்பதும், மகளிடம்(நம்ம டி.டி) முன்னாள் காதலனைப் பற்றி பேசுவதும், கடைசியில் எப்போதோ முன்னாள் காதலனோடு எடுத்துக் கொண்ட புகைப் படத்தை அவனிடமே திரும்ப கொடுத்து விட்டு,அவனுக்கு கண்ணீர்  மல்க விடை கொடுப்பதும்.ஆஹா ...!

"வயதானாலும் துணை துணைதான்" என்று மகள் கூறி விட்டுச் சென்றதும் ஒரு துள்ளல் நடை நடக்கிறாரே..! வயதானாலும் ரேவதி ரேவதிதான். 

சின்ன வயது ரேவதியாக வரும் மடோனா செபாஸ்டியனும் சிறப்பாகவே நடித்திருக்கிறார். ராஜ் கிரண் மகனாக வரும் பிரசன்னா பாஸ் பண்ணி இருக்கிறார், முதல் வகுப்பில் இல்லை. மற்றபடி எல்லோருமே தங்கள் தங்கள் ரோலை நன்றாக செய்திருக்கிறார்கள். 

வளர்ந்து வரும் இளம் இசை அமைப்பாளரான ஷான் ரோல்டன் இசையில் தனுஷ் மடோனா படும் பாடல் நன்றாக இருக்கிறது. பி.ஜி.எம். சிறப்பு. தற்கால இசை அமைப்பாளர்களை போல சிந்தசைசர் பயன் படுத்தாமல் அசல் இசைக்கருவிகளை கொண்டு இசை அமைத்திருக்கிறாராம். வாழ்க! வளர்க!

கம்பி மேல் நடப்பது போன்ற ஒரு கருவை எடுத்துக் கொண்ட தனுஷின் துணிச்சலையும், அதை கொஞ்சம் கூட விரசம் தட்டாமல் எடுத்திருக்கும் திறமையையும் பாராட்டலாம்!

Friday, May 12, 2017

அருந்தச் சொல்வது மாங்கனி சாறு (மேங்கோ ரஸ்)

அருந்தச் சொல்வது மாங்கனி சாறு
(மேங்கோ ரஸ்)

தேவையான பொருள்கள்:
மாம்பழம் -  2 அல்லது 3
சர்க்கரை - 1 டேபிள் ஸ்பூன் 
காய்ச்சி ஆற வைத்த பால் - 1 கப் 



























முதலில் மாம்பழங்களை நன்கு கழுவி தோல் சீவி செதில் செதிலாக நறுக்கிக் கொள்ளவும். பின்னர். அந்த துண்டுகளை மிக்சியில் அல்லது whipper மூலம் கூழாக்கிக் கொள்ளவும். அதில் சிறிது நீர் சேர்த்து அடுப்பில் வைத்து, சர்க்கரை சேர்த்து லேசாக சூடாக்கவும். கொதிக்க கூடாது. சூடான மாம்பழக் கூழ் ஆறியதும், பால் சேர்த்து குளிர் சாதன பெட்டியில் வைத்து ஜில்லென்று அருந்தலாம். கோடை காலத்திற்கேற்ற சுவையான பானம். 


பால் சேர்ப்பதற்கு முன் 
பால் சேர்த்த பிறகு 
























சர்க்கரை சேர்க்க காரணம் எல்லா பழங்களும் ஒரே சுவையில் இருக்காதல்லவா? சர்க்கரை அதை சமன் செய்யும்.  

நார் மாம்பழம், புளிப்பு மாம்பழம் போன்ற எல்லா வகை மாம்பழங்களிலும்  மேங்கோ ரஸ் செய்யலாம். நார் பழமாக இருந்தால், மிக்சியில் சற்று அதிக நேரம் அடிக்க வேண்டும். புளிப்பான பழங்களுக்கு சர்க்கரை கொஞ்சம் அதிகம் சேர்க்க வேண்டும்.     

இந்த மேங்கோ ரசை சப்பாத்திக்கு சைட் டிஷாக பயன் படுத்துபவர்கள் உண்டு. 


Saturday, May 6, 2017

கோடையும் எடையும்

கோடையும்  எடையும்


வெய்யில் காலம் வருகிறது என்றால் எனக்கு கொஞ்சம் பயம் வரும். தகிக்கும் வெய்யில், பவர் கட் இவைகளை நினைத்து மாத்திரம் அல்ல. கூடப் போகும் என் எடையை நினைத்தும்தான். கோடையில்தான் எடை குறையுமாம். அதிகம் வியர்பதால் எடை குறைந்து விடும் என்கிறார்கள். நாம் வியர்க்க விட்டால்தானே? வியர்க்க ஆரம்பிக்கும் பொழுதே, "உஸ்... அப்பா... முடியல... ஏ.சி.ஐ போடு" என்று வியர்வையை அடக்கி விடுகிறோம். 




அது மட்டுமா? ஜில்லுனு ஏதாவது குடிச்சால்தான் தாகம் அடங்கும் என்று நன்னாரி சர்பத் என்ன? ரோஸ் மில்க் என்ன? இவைகளைத் தவிர பாட்டில் பாட்டிலாக உள்ளே தள்ளும் குளிர் பானங்கள் கிலோ கிலோவாக நம் எடையை ஏற்றி விடுகின்றனவே...! குளிர் பானங்களோடு நிறுத்திக் கொள்கிறோமா? ஆங்காங்கே இருக்கும் ஐபாகோக்களும்(IBACO) , மில்கிவேக்களும்(MILKY WAY) நம்மை வா என்று அழைக்கும் பொழுது மாட்டேன் என்றா சொல்ல முடியும்? உள்ளே நுழைந்து வித விதமான ப்ளேவர்களில் ஐஸ் க்ரீம்களை வெளுத்து கட்டினால் எடை ஏறாமல் இருக்குமா?

வெய்யில் கொளுத்துகிறதே என்று திருமணங்கள் நடத்தாமலா இருக்கிறார்கள்? கல்யாணம்,காது குத்தல், பிறந்த நாள், க்ரஹ பிரவேசம், என்று எப்படியும் ஒரு மாதத்தில் இரண்டு நிகழ்ச்சிகளிலாவது கலந்து கொள்ள வேண்டி இருக்கிறது. இப்பொழுதெல்லாம் எந்த விருந்துமே ஐஸ் கிரீம் இல்லாமல் இல்லை. அதைத் தவிர இன்னும் இரண்டு இனிப்புகள்... எல்லாவற்றையும் பரிமாறி வைத்து விடுகிறார்கள். உணவை வீண் ஆக்க முடியுமா? ஜோதிகா வேறு சின்ன திரையில் வந்து, "உணவை வேஸ்ட் பண்ணாதீர்கள், ப்ளீஸ், வேஸ்ட் பண்ணாதீர்கள்" என்று கெஞ்சும் போது வீண் பண்ண முடியுமா? எல்லாவற்றிற்கும் நம் வயிற்றில் இடம் அளிக்கிறோம். எடை ஏறாமல் இருக்குமா? 

ஐஸ் க்ரீம் ஐ ஒதுக்கலாம் என்றால்?"ஏன் ஐஸ் க்ரீம் சாப்பிடலையா? ஷுகரா"? என்று அக்கறையாக விசாரிப்பார் பக்கத்து இலை காரர்."சீ சீ அதெல்லாம் இல்ல, வெய்ட் ஏறிக் கொண்டே போகிறது, அதான்.." "ஒரு நாள் சாப்பிட்டா ஒண்ணும் ஆகிடாது". என்று உசுப்பேற்றி உசுப்பேற்றியே நம்மை 'ஓவர் வெய்ட்' ஆக்கி விடுகிறார்கள்.



விருந்தை விட்டுத் தள்ளுங்கள், என்றாவது ஒரு நாள்தான், வீட்டில் இருக்கும் வில்லன்களை என்ன செய்வது? எல்லாவற்றிலும் முதன்மையானது மாங்காய்!!! மாவடு, மாங்காய் தொக்கு, ஆவக்காய், மாம்பழம் என்று பல வடிவங்களில் அது படுத்தும் பாடு இருக்கிறதே..!


அம்மாவிடமும், மாமியாரிடமும் எதை கற்றுக் கொள்கிறோமோ இல்லையோ ஊறுகாய் போட கற்றுக் கொண்டு விடுகிறோம். முதலில் சாதத்திற்கு தொட்டுக் கொள்ளத்தான் ஊறுகாயை போட்டுக் கொள்வோம். அது கொஞ்சம் மீந்து விடும். சரி ஊறுகாயை வீணாக்க வேண்டாமே என்று கொஞ்சம் சாதம் போட்டுக் கொள்வோம், இப்போது மறுபடியும் ஊறுகாய் மீந்து விடும். இப்படி சாதத்திற்கு ஊறுகாய், ஊறுகாய்க்கு சாதம் என்று மாற்றி மாற்றி சாப்பிட்டால் எடை எப்படி ஏறாமல் இருக்கும்? 

இனிமேல் இப்படிப் பட்ட சபலங்கள் எல்லாம் கூடாது என்று எண்ணி ஊறுகாயை குறைவாக போட்டுக் கொள்கிறேன். ஐபாகோ களையும், மில்கி வேக்களையும் புறக்கணித்து விட்டேன்.  ஆனால் மாம்பழம்?? 


செந்தூரான், நீலம், பங்கனப்பள்ளி, இமாம்பசந்து என்று கலர் கலராக வண்டிகளில் அடுக்கி வைக்கப் பட்டிருக்கும் மாம்பழக் கவர்ச்சியிலிருந்து விடுபடுவது கொஞ்சம் கடினம்தான்... வயதோ ஏறிக் கொண்டிருக்கிறது ஒரே ஒரு நல்ல சுவையான மாம்பழத்தை சாப்பிட்டு விட்டு நிறுத்தி விடலாம் என்று தீர்மானித்தேன். ஆனால் அதில் ஒரு சிக்கல் பாருங்கள், ஒரு வெற்றி படம் கொடுத்து விட்டு நடிப்பதை நிறுத்தி விடலாம் என்று நினைக்கும் சூப்பர் ஸ்டாருக்கு வெற்றி படம் வாய்க்காதது போல எனக்கும் சுவையான மாம்பழம் கிடைக்க மாட்டேன் என்கிறது. ஒன்று புளிக்கிறது, அல்லது நாராக இருக்கிறது, அல்லது சப்பென்று இருக்கிறது. என்ன செய்வது? இன்றைக்கு கூட மாம்பழம் வாங்கி இருக்கிறேன்.. எப்படி இருக்க போகிறதோ? 

எடை? அதைப் பற்றியெல்லாம் இப்போது என்ன? கொஞ்சம் நடந்தால் குறைந்து விடப் போகிறது... தவிர நான் என்ன அழகி போட்டிக்கா செல்லப் போகிறேன்?.. கிடக்கட்டும் கழுதை

படங்கள் உதவி: கூகுள் . இது ஒரு மீள் பதிவு 

Friday, May 5, 2017

எங்கள் ஊர்களுக்கு கிடைத்த கௌரவம் !!

எங்கள் ஊர்களுக்கு கிடைத்த கௌரவம் !!


நான் பிறந்து வளர்ந்த ஊரான திருச்சி மற்றும் எங்கள் சொந்த ஊரான தஞ்சை ஜில்லாவை சேர்ந்த கண்டமங்கலம் ஆகிய இரண்டு ஊர்களுக்கும் இந்த வாரம் ஒரு கௌரவம் கிட்டியிருக்கிறது.

இந்தியாவின் சுத்தமான நகரங்களுள் ஆறாவது இடத்தில் திருச்சி இருக்கிறது. (சத்திரம் பேருந்து நிலையம் துர்கந்தம் இல்லாமல் இருக்கிறதா?)

எங்கள் சொந்த ஊரான கண்டமங்கலம் டிஜிட்டல் கிராமமாக அறிவிக்கப் பட்டிருக்கிறது.  

பணமில்லா பரிவர்த்தனையை ஊக்குவிக்கும் விதமாக பிரதமர் நரேந்திர மோடி முதன் முதலாக குஜராத் மாநில அகோதரா கிராமத்தை ஐ.சி.ஐ.சி.ஐ வங்கி மூலம் டிஜிட்டல் கிராமமாக மாற்றினார். அதன் தொடர்ச்சியாக அந்த வங்கி இந்தியாவின் வெவ்வேறு மாநிலங்களில் உள்ள நூறு கிராமங்களை டிஜிட்டல் கிராமங்களாக மற்றும் பணியில் ஈடுபட்டுள்ளது. தமிழகத்தில் தேர்வு செய்யப்பட்டுள்ள 12 கிராமங்களில் எங்கள் ஊரான கண்டமங்கலமும் ஒன்று.

கிராம மக்கள் இரண்டாயிரத்து இரு நூறு பேர்களில் ஆயிரத்து எழுநூறு பேர்களுக்கு வங்கி கணக்கு துவங்கப்பட்டு ஏ.டி.எம். அட்டைகளும் வழங்கப்பட்டு விட்டதாம். கடைகளில்(எனக்கு தெரிந்து பெருமாள் கோவிலுக்கு பக்கத்தில் ஒரு கடை உண்டு) ஸ்வாய்ப்பிங் மெஷினும் வழங்கப் பட்டு விட்டதாம். 

அடுத்த முறை ஊருக்கு செல்லும் பொழுது கதிர்வேலு கடையில் ஒரு சோடா குடித்து விட்டு, கார்டை தேய்த்து விடலாம். முன்னோடி கிராமமாக இருப்பதில் சந்தோஷம்!!:)))) 

Thursday, April 27, 2017

நினைச்சது ஒண்ணு, நடந்தது ஒண்ணு

நினைச்சது ஒண்ணு, நடந்தது ஒண்ணு 


சற்றே பருமனான என் தோழியின் மகள் கல்லூரியில் படிக்கிறாள். அவளுக்கு தன் உருவம் குறித்து கொஞ்சம் தாழ்வு மனப்பான்மை. எடையைக் குறைக்கும்
முயற்சியில் ஈடுபட விரும்பினாள். டயட் அவளுக்கு கடினமாக இருந்தது. சில நாட்கள் செய்வாள், விட்டு விடுவாள். நான் அவளுக்கு ஒரு ஆலோசனை சொன்னேன்.

Thursday, April 13, 2017

தோல்வியே வெற்றியாய்

தோல்வியே வெற்றியாய் 

இன்றைய வெற்றிகரமான ஹீரோ வசந்த் குமாரின் மகன் வருண், ஸ்கூலிலிருந்து வந்ததும் ஷூவை கழற்றி வீசினான். புத்தகப் பையை சோபாவில் தூக்கி எறிந்து விட்டு,"ரொம்ப பசிக்கிறது மம்மி! சாப்பிட ஏதாவது குடு.." என்று சொல்லிவிட்டு அம்மாவின் செல்போனை எடுத்துக் கொண்டு நோண்டத் தொடங்கினான். 

"சரி, சரி, நீ மொதல்ல முகம் கழுவி ட்ரெஸ் சேன்ஜ் பண்ணிட்டு வா. வந்த உடனே செல்.."  என்று மகனை விரட்டி விட்டு, தம்பி வந்துடுச்சு, டிபன் எடுத்து வையுங்க" என்று சமையல்கார அம்மாவுக்கு வசுந்தரா உத்தரவிட்டாள்.

ஒரு புறம் டி.வி.யை ஓட விட்டு, இன்னொரு புறம் செல் போனை பார்த்துக் கொண்டே டிபனை சாப்பிடத் தொடங்கினான்.

"என்னடா? எக்ஸாம் மார்க்கெல்லாம் வந்தாச்சா?" என்று கேட்ட அம்மாவிடம்,"ஓ! ஐயாதான் முதல், நாளைக்கு பேரன்ட்ஸ்,டீச்சர்ஸ் மீட்டிங்கில்  ரிப்போர்ட் கார்ட் கிடைக்கும்" என்றதும் நிம்மதியான வசுந்தரா, மறுநாள் மிகுந்த நம்பிக்கையோடு பள்ளிக்குச் சென்றாள்.
அங்கு சென்றதும்தான் மகன் சொன்னது அப்பட்டமான பொய் என்று தெரிந்தது. கணிதத்தில் மட்டும் பார்டரில் பாஸ் ஆகியிருந்தான், மற்ற பாடங்களில் எல்லாம் மிகவும் குறைந்த மதிப்பெண்கள். ஆசிரியர்கள் புகார் சொன்ன பொழுது தலை குனிந்து கேட்டுக் கொண்டான். 

வீட்டிற்கு திரும்பி வரும் பொழுது,"என்னடா வருண்? என்னமோ 
முதல் மார்க் என்றாய்..? எல்லாவற்றிலும் இவ்வளவு குறைந்த மார்க்? என்று துக்கம் தொண்டையை அடைக்க கேட்டதும், "என்னமா ரொம்ப ஓவர் ரியாக்ட் பண்ற? அப்பாவின் படங்கள் ஓடாவிட்டாலும் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும்... அப்படின்னுதானே விளம்பரம் செய்கிறார்கள்..? என்று கேட்டதும், பதில் பேச முடியாமல் உறைந்தாள்.


புத்தாண்டு வாழ்த்துக்கள்!

புத்தாண்டு வாழ்த்துக்கள்!


வலையுலக நண்பர்களுக்கு விஷு மற்றும் ஹேவிளம்பி தமிழ் புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்! இந்த புத்தாண்டில் நல்ல மழை பொழியவும், நாடு செழிக்கவும், அன்பும் அமைதியும் ஓங்கவும் இறைவனை வேண்டுகிறேன்.





Monday, March 27, 2017

மாலையில் மலர்ந்த நோய்..:((

மாலையில் மலர்ந்த நோய்..:((

கிட்டத்தட்ட மூன்று வாரங்களுக்குப் பிறகு கணினியை திறந்திருக்கிறேன். மார்ச் 8 அன்று பேத்திக்கு வைத்தீஸ்வரன் கோயிலில் மொட்டை அடிப்பதற்காக சென்று விட்டு வந்தவள் 10ம் தேதி மதியம் உடல் வலி, தலை வலி, குளிர் என்று உடல் நல குறைவுக்கான அறிகுறிகள் தோன்ற ஒரு க்ரோஸினை போட்டுக் கொண்டு படுத்துக் கொண்டேன். மறு நாள் உடல் நல பாதிப்பு அதிகம் இருந்ததால் மருத்துவரிடம் சென்றேன். அவர் தந்த மருந்துகளை எடுத்துக் கொண்டதில் காலையில் ஜுரம் இருக்காது. "காலை அரும்பி பகலெல்லாம் போதாகி மாலை மலரும் இந்நோய்"  என்ற வள்ளுவர் வாக்கினைப் போல மதியத்திலிருந்து உடல் நலம் மோசமாகும், மாலையில் அதிகமாகி விடும். ஒரு வேலை டைபாய்டு ஆக  இருக்கப் போகிறது என்று பயமுறுத்தினார்கள். முதல் நாள் 102 டிகிரியைத் தோட்ட ஜுரமாணி அடுத்த நாள் 104 இல் போய் நின்றது. பிறகு என்ன? ரத்தப் பரிசோதனை, ட்ரிப்ஸ், ஆன்டிபயாட்டிக்ஸ் ஆரம்பம்.. 
பிளட் டெஸ்ட் ரிசல்ட் நார்மல், வைரல் பீவர்தான். ஒரு வாரம் இருக்கும். மூன்று நாட்கள்தானே ஆகின்றன? இன்னும் நாலு நாட்கள் இருக்கிறதே.. கொஞ்சம் கொஞ்சமாக ஜுரம் குறைந்து விடும். " என்றார் மருத்துவர். குறைந்தது. ஆனால் அசதியும் இருமலும், வாய் கசப்பும்... அப்பப்பா! இன்னும் முழுமையாக சரியாகவில்லை. 

வாட்சாப் செய்திகள் இருநூறை தாண்டி விட்டன. அவ்வப்பொழுது. ஏதோ கொஞ்சம் வாட்சாப் மற்றும் முகநூல் மட்டும் பார்த்தேன். செல்போனில் ப்ளாக் பார்ப்பது அத்தனை சௌகரியமாக இல்லை. 
இனிமேல்தான் விட்டவற்றை பிடிக்க வேண்டும். 

Monday, March 6, 2017

என் மகன் யார் முகம்?

என் மகன் யார் முகம்?


மிஸஸ் அண்ட் மிஸ்டர் ஹரி, அடுத்தது நீங்கள்தான். பைல் வைத்திருக்கிறீர்களா? எப்படி பே பண்ண போகிறீர்கள்? கார்ட்? பேங்க் ட்ரான்ஸ்பார்? அல்லது போன் பேமெண்ட்?

"பேங்க் ட்ரான்ஸபார்." 

"அப்படியென்றால் நீங்கள் முழு தொகையையும் இப்போதே செலுத்தி விடுங்கள். ஒரு வேலை நீங்கள் செலுத்திய தொகை அதிகமாக இருந்தால் நாங்கள் உங்கள் வாங்கி கணக்கிற்கே இரண்டு வேலை நாட்களுக்குள் திருப்பி அனுப்பி விடுவோம்". 

"ஓகே" ஹரி தன்னுடைய கை பேசியிலிருந்து அந்த மருத்துவ மனையின் கணக்கிற்கு அந்த ரிஷப்ஷனிஸ்ட் கூறிய தொகையை டிரான்ஸ்பார் செய்து விட்டு இருக்கையில் மீண்டும் வந்து அமர்ந்தவுடன். ஒரு டிரேயில் நான்கு பிஸ்கெட்டுகள், டீ, மற்றும் ஜூஸ் எடுத்து வந்த பெண் இவர்கள் முன் நீட்ட, ஹரியும் மாயாவும் மறுத்தார்கள். 

"உங்கள் முறை வருவதற்கு எப்படியும் நாற்பது நிமிடங்கள் ஆகும். எனவே எடுத்துக் கொள்ளுங்கள். இதற்காக நீங்கள் தனியாக பே பண்ண வேண்டாம்". 

ஹரி டீ கோப்பையை எடுத்துக் கொள்ள, மாயா பழச்சாற்றை தேர்ந்தெடுத்தாள்.

ஜுஸை உறிஞ்சியபடி," இவர்கள் நிஜமான பெண்களா? அல்லது ரோபோக்களா"? என்றாள்.

"பெண்கள்தான்..."

"எப்படி சொல்கிறாய்"?

"தெரியும்.." 

"உனக்கு தெரியும் என்பதுதான் தெரிகிறதே.. எப்படி தெரிந்து கொண்டாய்"?

"வீட்டில் போய் சொல்கிறேனே.."

"இல்லை இப்போதே சொல்.. இன்னும் முப்பத்தைந்து நிமிடங்கள் கடத்த வேண்டும்.."

"சேலை கட்டும் பெண்ணுக்கொரு வாசம் இருக்கு என்று சென்ற நூற்றாண்டு பாடல் ஒன்று உண்டு..."

"வெய்ட்! வெய்ட்!  சேலை கட்டும்... அப்படீன்னா"?

"மை காட்! இதுக்குதான் வீட்டில் போய் சொல்றேன் என்றேன்". என்றவன், செல்லை நோண்டி ஒரு படத்தை அவளுக்கு காண்பித்த,"தோ, இந்தப் படத்தில் உள்ள பெண் அணிந்திருக்கும் உடைதான் சேலை" என்றான்.

" ஏய், இது சாரி, நான் கூட நம் திருமணத்தன்று அணிந்து கொண்டேனே.."!

"சபாஷ்! கண்டு பிடித்து விட்டாயே.. அதேதான்.."

"நீ வேறு ஏதோ பேர் சொன்னாயே.."?

"சேலை.. சாரியை சேலை என்றும் சொல்வார்கள்".

"ஓகே"
"இப்போது வந்த பெண் எங்கே சாரி கட்டிக் கொண்டிருக்கிறாள்"?

"இப்போ யார்தான் சாரி கட்டிக்கிறா? உன்னோட எள்ளு கொள்ளு பாட்டி தினமும் கட்டிக்கொண்டிருக்கலாம்.."

"இதையா? தினமுமா...? ஓ காட்.."

"சரி அதை கட்டிக்க கொண்டால் என்ன"?

அவன் பதில் சொல்ல துவங்குவதற்குள், "மிஸ்டர் அண்ட் மிஸ்ஸஸ் ஹரி.. "என்று அழைப்பு கேட்டது.

அவர்கள் இருவரும் எழுந்து, டாக்டர் அறைக்குள் சென்றார்கள்.
"வெல்கம் ஹரி வெல்கம் மாயா", என்று வரவேற்ற டாக்டர் ஐம்பது வயதை நெருங்கி கொண்டிருக்கலாம்.. ஆனால் நாற்பது என்றுதான் பார்ப்பவர்கள் கூறுவார்கள். 

"ஸோ! யூ ஹாவ் டிசைடட் டு ஹவ் எ கிட்? ரைட்"?

"எஸ் டாக்டர் "

"உங்களுக்கு அதற்கான அரசாங்க அனுமதி கிடைத்து விட்டதா"? 

"ஓ எஸ்"! என்ற ஹரி, தன் செல்போன் மெமோரியில் இருந்த ஒரு கடிதத்தை அவரிடம் காண்பிக்க, அதை படித்த அவர்," குட்! இதை என்னுடைய மெயில் ஐ.டிக்கு அனுப்பி விடுங்கள். நீங்கள் எந்த முறையில் குழந்தை பெற்றுக் கொள்ள போகிறீர்கள்? இயற்கையாகவா  இல்லை செயற்கை கருத்தரிப்பா"?

"இயற்கை முறைதான்.."

"குட்! இப்போது பெரும்பாலானோர் செயற்கை கருத்தரிப்புக்கு செல்கிறார்கள். கணவனும் மனைவியும் வேறு வேறு இடங்களில் வசிப்பது, வொர்க் பிரஷர் என்று வெவ்வேறு காரணங்கள். உங்கள் கர்ப்பம் உறுதி செய்யப்பட்டு விட்டது,  நாற்பது நாட்கள் இல்லையா ?" என்று பைலை புரட்டிக்கொண்டே கேட்டார்.

"ஆம்"!

"வெரி குட்! கங்கிராஜுலேஷன்ஸ்! உங்களுக்கு எப்படிப்பட்ட குழந்தை வேண்டும்"? 

மாயா தன்னுடைய ஐ புக்கை நீட்ட, அதை பெற்றுக்கொண்டு படிக்க ஆரம்பித்தார்.

கருத்த,சுருட்டை முடி, நீண்ட நீல விழிகள். சற்றே பரந்த மூக்கு, கோதுமை நிறம், உயரமாக இருக்க வேண்டும். கொஞ்சம் புஷ்டியாக இருந்தால் தவறு இல்லை...

டாக்டருக்கு சிரிப்பு வந்தது. "ஆப்பிரிக்க, ஐரோப்பிய, இந்திய கலவையாக இருக்கிறதே"? என்றார்.

"எனக்கு அப்படித்தான் வேண்டும். தவிர எனக்கிருக்கும் சைனஸும், கணவர் வழியில் இருக்கும் சர்க்கரை நோயும் வேண்டாம்".

"ஓ! அதெல்லாம் நாம் வாழும் முறையில் இருக்கிறது. எனிவே, முயற்சிக்கலாம்..! என்றவர், ஒரு பட்டனைத் தட்ட, உள்ளே வந்த அசிஸ்டென்டிடம் ப்ரோஸெஸ் ரூம் தயாரா"? என்று கேட்க, அந்த ஜூனியர் டாக்டர் தலை அசைக்க, "கம் மாயா, வீ வில் கோ பார் தி ப்ரொசீஜர்.. என்றுவிட்டு, கொஞ்சம் காத்திருங்கள் ஹரி" என்றார்.

அரை மணி நேரம் கழித்து வெளியே வந்தவர், ஹரியிடம், "நீங்கள் கேட்டிருக்கும் மாற்றங்களை கருவின் டி.என்.ஏ.வில் செய்து விட்டேன். உங்கள் விருப்பப்படியே உங்களுக்கு மகனோ, மகளோ பிறப்பார்கள். என்றார். மாதா மாதம் தவறாமல் பரிசோதனைக்கு வர வேண்டும் என்றார்". 

அவர் கூறியதையெல்லாம் அப்படியே கடை பிடித்தார்கள். குறித்து கொடுத்த தேதிக்கு ஒரு வாரம் முன்பாகவே மாயாவுக்கு குழந்தை பிறந்து விட்டது. அவர்கள் கேட்ட படியே  நீல் கண்களும், சுருட்டை தலை முடியுமாக பிறந்த குழந்தையைப் பார்த்து உறவினர்களும், "நண்பர்களும் ரொம்ப வித்தியாசமாக இருக்கே? யார் மாதிரி"? என்று ஆச்சரியப்பட்டார்கள்.

அது மாயாவுக்கும் ஹரிக்கும் முதலில் கொஞ்சம் பெருமையாக இருந்தது. நாட்கள் செல்லச், செல்ல, "இவன் யார் மாதிரி? நம் குடும்பத்தில் யாரும் இப்படி கிடையாதே"? என்ற விமர்சனங்கள் கொஞ்சம் சங்கடமூட்டின. 

குழந்தை ராமும் தான் மட்டும் கூட்டத்தில் சேராமல் தனியாக இருப்பதை அசௌகரியமாக உணர்ந்தான். அவனை எப்படியோ தேற்றினார்கள்.

பழனியில் பால் அபிஷேகம் செய்ய பத்து வருடங்களுக்கு முன் பதிவு செய்திருந்தது இப்போதுதான் அலாட் ஆகியிருந்தது. அவனும், மாயாவும் குழந்தை ராமுடன் பழனி சென்றார்கள். கோவிலில் தரிசனம் முடித்து வெளியே வந்தவுடன் யாரோ முதுகைத்   தட்டினார்கள். . 

"நீ ராஜீவ் மகன் ஹரிதானே"?

"ஆமாம், நீங்க"?

என்னைத் தெரியவில்லையா? நான் உங்கப்பாவின் நண்பன் கார்த்திக்..

"ஓ .! அங்கிள்.. நீங்களா? எனக்கு சட்டென்று அடையாளம் தெரியவில்லை. என்னை எப்படி கண்டு பிடித்தீர்கள்"?

"என்ன கஷ்டம்? நீதான் அப்படியே உங்க அப்பா போலவே இருக்கிறாயே? என்றவர் பேசிக்கொண்டிருந்த விட்டு, இது யார்"? என்று குழந்தையை பார்த்து கேட்டார். 

"என் பையன்..ராம்."

"அப்படியா? இவன் உன்னைப் போல் இல்லை, அம்மா மாதிரியும் தெரியவில்லை...வித்தியாசமாக இருக்கிறான்.ஆப்ட் பேபியா?"

"ஆமாம்..  "என்று கூறிய ஹரிக்கு தன் மகனின் அடையாளத்தை தான் அழித்து விட்டோமோ என்று ஒரு குற்ற உணர்ச்சி ஏற்பட்டது. 

Wednesday, March 1, 2017

சென்னை - பெங்களூர் - திருச்சி - சென்னை

சென்னை - பெங்களூர் - திருச்சி - சென்னை 

சென்ற வாரம் பெங்களுர், திருச்சி என்று கொஞ்சம் அலைச்சல் வாரம். சென்னை-பெங்களூர், பெங்களூர்- திருச்சி இரண்டுமே இந்த முறை பேருந்து பயணம். ஏ.சி. ஸ்லீப்பர் கோச். போகும் பொழுது கொஞ்சம் தூங்கினேன். அதனால் கஷ்டமாக இல்லை. வரும் பொழுது தூக்கம் வரவில்லை, படிக்க புத்தகம் எதுவும் இல்லை. சம்மணமிட்டு அமர்ந்தபடி கொட்ட கொட்ட விழித்துக் கொண்டு வந்தேன். சும்மாயிருப்பது எவ்வளவு கடினம் என்று புரிந்தது. நீண்ட நாட்களுக்கு முன்பு வாசித்த ரா.முருகனின் ஒரு சிறு கதை நினைவுக்கு வந்தது. பேச்சிலர் மேன்ஷனில் தங்கியிருக்கும் இளைஞன் ஒருவன், விடுமுறை நாள் ஒன்றின் பகல் பொழுதில்
ரூம் மேட் வெளியே சென்று விட தனியாக என்ன செய்வது என்று புரியாமல் தியானம் செய்யலாம் என்று உட்காருவான், அப்பொழுது அடுக்கடுக்காக அவனுள் எழும்பும் எண்ணங்கள்... சற்று நேரம் கழித்து கதவை திறந்து கொண்டு வரும் அறை நண்பன்,"என்னடா சும்மா உட்கார்ந்திருக்கிறாய்? தியானம் செய்வதுதானே..? என்பதோடு கதை முடியும்.

சென்னை பெங்களூர் சாலையைப் போல, பெங்களூர் திருச்சி சாலை அத்தனை நன்றாக இல்லை. நம்மை அவ்வப்பொழுது உருட்டி விடுகிறது, தூக்கி அடிக்கிறது.

திருச்சி செல்லும் போதெல்லாம் மாணிக்க விநாயகரை தரிசிக்காமல் வர மாட்டோம். பெரும்பாலும் ரெங்கநாதரையும், சில சமயங்களில் அகிலாண்டேஸ்வரியையும், சமயபுரம் மாரியம்மனையும் தரிசனம் செய்வது வழக்கம். இந்த முறை நேரம் குறைவாக இருந்த காரணத்தால் முதலில் பெரியம்மாவை பார்த்து விடலாம் என்று முடிவு செய்தோம். நீங்கள் யாரையாவது நினைத்துக் கொள்ளாதீர்கள். நான் குறிப்பிடுவது உலகிற்கெல்லாம் படியளக்கும் நம் ரெங்கநாயகித் தாயார்!! பெருமாள் பெரிய பெருமாளாக இருக்கும் பொழுது தாயார் பெரியம்மாதானே?

இப்போதெல்லாம் எப்போதுமே திருவரங்கம் கோவிலில் கும்பல்தான், அதிலும் அன்று வெள்ளிக்கிழமை, ஸ்ரீரங்கம் சுக்கிர க்ஷேத்திரம் அல்லவா? கும்பல் கொஞ்சம் அதிகம்தான். தாயார் சந்நிதியில் தேவை இல்லாமல் நெருக்கினார்களோ என்று தோன்றியது. ஆனாலும் நன்றாக தரிசனம் கிட்டியது.  சேவிக்க முடியுமா என்று யோசித்தோம், அங்கிருந்த வாட்ச்மேன்," மணி இப்போ 4:40தானே? ஐந்து முப்பது வரை தரிசனம் உண்டு" என்றார். ஆனாலும், மிகப் பெரிய வரிசை பயமுறுத்தியது. எனவே ரூ.250/- க்கு டிக்கெட் வாங்கி கொண்டு கொஞ்சம் வேகமாக நகர்ந்த வரிசையில் சென்று, பெருமாளை தரிசித்தோம். எப்போது ரெங்கனைப் பார்த்தது போதும் என்று திருப்தி ஏற்பட்டிருக்கிறது? பார்க்க, 
பார்க்க அலுக்காத ஆராவமுதன் அல்லவா அவன்!! 

வெளியே, இருக்கும் கடைகளில் அல்ப ஷாப்பிங்! எப்பொழுதும் சகோதரிகளில் யாராவது ஒருவர் ஒரு இரும்பு வாணலியோ, தோசை கல்லோ, கல் சட்டியோ வாங்குவோம். இந்த முறை யாரும் எதுவும் வாங்கவில்லை. ரெங்க விலாஸ் புத்தக கடையில் திருவரங்கன் உலா புத்தகத்தை பார்த்து விட்டு, அவர்கள் கார்ட் எடுத்துக் கொள்வதில்லை என்று கூறி விட்டதால் வைத்து விட்டேன். முடிந்தால் கிண்டலில் டவுன்லோட் செய்து கொள்ள வேண்டியதுதான்.  

கார்ட் என்றதும் நினைவுக்கு வருகிறது. டீ மானிடைசேஷன் விளைவு ஸ்ரீரங்கம் கோவிலில் டிக்கெட் கவுண்டரில் 'All banks credit & debit cards accepted here' என்னும் போர்ட் பார்க்க முடிந்தது. பெங்களூர் இஸ்கான் கோவிலிலும் உண்டியல் அருகே இதே போன்ற அறிவிப்பை பார்த்தோம். பெரும்பாலான கோவில்களில் இப்போதெல்லாம் கார்டு பேமெண்ட் இருக்கிறது போலிருக்கிறது. நல்லதுதான்! 

ஆக, இந்த முறை திருச்சி விசிட் முடிந்தது. அடுத்த விசிட் எப்போது என்று தெரியவில்லை. அடுத்த விசிட்டின் பொழுது இறை அருள் இருந்தால் வை.கோ. அவர்களையும், கீதா சாம்பசிவம் அவர்களையும், ரிஷபன் அவர்களையும்(இவரை சந்திக்க வேண்டும் என்பது நீ...ண் ....ட... வருட கனவு) சந்திக்கலாம்.

Sunday, February 19, 2017

மாறிவரும் மதிப்பீடுகள் - திருமண உறவு

Thanks google for picturesமாறிவரும் மதிப்பீடுகள் - திருமண உறவு 



முகநூலில் பலரும் பல விஷயங்களை பகிர்ந்து கொள்கிறார்கள். சிலவற்றை பகிர்வதால் வரும் ஆபத்துகளை பற்றி அவ்வப்பொழுது எச்சரிக்கைகள் வந்தாலும் எல்லா குடும்ப நிகழ்வுகளையும் பகிர்கிறார்கள். இதில் குறிப்பிடத்தக்கது கல்யாண நிச்சயதார்த்த புகைப்படங்கள். 

சமீபத்தில் பகிரப்பட்ட ஒரு நிச்சயதார்த்த புகைப்படங்கள் மிகவும் அதிர்ச்சி அளித்தன. அவை நிச்சயதார்த்த புகைப்படங்களா? அல்லது தேனிலவு புகைப்படங்களா? என்று தோன்றும் அளவிற்கு நெருக்கமான, கட்டி அணைத்தபடியும், முத்தம்கொடுப்பது போலவும்... கடவுளே! என்ன நடக்கிறது இங்கே?

இதை வீட்டில் சொன்ன பொழுது என் மகன், "எந்த காலத்தில் இருக்கிறாய் அம்மா?, இப்போதெல்லாம் என்கேஜ்மென்ட், திருமணம் போன்ற எல்லாவற்றிற்கும் டீசர் போடுகிறார்கள், இது கேண்டிட் போட்டோகிராஃபி காலம்" என்று கூறி விட்டு, அவனுடைய நண்பர், உடன் வேலை பார்ப்பவர் இவர்களின் என்கேஜ்மெண்ட் மற்றும் திருமண டீசர் வீடியோவை காண்பித்தான். இதில் எனக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை. இப்படி எல்லாம் செய்பவர்கள் கொஞ்ச காலத்தில் விவாகரத்து செய்து விடுகிறார்களே, அதுதான் கவலை அளிக்கிறது. 

மேலை நாடுகளுக்கும் நம் நாட்டிற்கும் இருக்கும் வித்தியாசம் நம் நாட்டில் திருமணம் என்பது வாழ்வின் மிகப் பெரிய நிகழ்வு, மணமக்களுக்கு மட்டுமல்ல, அவர்களின் பெற்றோர்களுக்கும் கூட. குறிப்பாக பெண்ணை பெற்றவர்கள். பெண் பிறந்தது முதலே அவளின் திருமணத்தை எதிர் பார்க்க தொடங்கி விடுகிறார்கள். தங்களின் பல சௌகரியங்களை குறைத்துக் கொண்டு குழந்தைகளை படிக்க வைத்து, திருமணம் செய்து கொடுப்பதில்தான் தங்களின் வாழ்வின் அர்த்தமே அடங்கியுள்ளதாக இன்றைக்கும் நினைக்கிறார்கள். ஆனால் குழந்தைகளோ அதைப் பற்றி எந்த கவலையும் இல்லாமல் அல்ப காரணங்களுக்காக விவாகரத்து செய்வது அச்சமும் கவலையும் அளிக்கிறது.

ஆடம்பரமாக நடத்தப்படும் திருமண நிச்சயதார்த்த நிகழ்ச்சிகளுக்கு செல்லும் பொழுது நல்லபடியாக திருமணம் நடக்க வேண்டுமே என்றும், திருமணங்களுக்குச் செல்லும் பொழுது இந்த திருமண பந்தம் நிலைத்திருக்க வேண்டுமே என்றும் தோன்றுகிறது. ஏனென்றால் நிச்சயமான திருமணங்கள் நின்று போவதும், நடந்த திருமணங்கள் விவாகரத்தில் முடிவதும் வெகு சகஜமாகிவிட்டது.



முன்பெல்லாம் வீட்டில் பெண்ணுக்கோ, பிள்ளைக்கோ திருமணம் நடந்து சிறிது நாட்களில்,"என்ன விசேஷம்"? என்று விசாரிப்பார்கள். அதற்கு பொருள் வேறு. இன்று அப்படி கேட்டால், "டைவர்ஸ் ஆகி விட்டது", என்றோ. "டைவர்ஸுக்கு அப்ளை செய்திருக்கிறார்கள்" என்றோ பதில் வருவது ஆச்சர்யமில்லை. உண்மையில் எங்களின் இரண்டு நண்பர்கள் ஒருவருக்கு பெண், மற்றவருக்கு பிள்ளை அப்படித்தான் சொன்னார்கள். இருவருமே விவாகரத்திற்கு சொன்ன காரணம் அவர்களுக்குள் compatibility இல்லை என்பது. திருமணம் ஆன ஒரே வருடத்திற்குள் தங்களுக்குள் கம்பட்டபிலிட்டி இல்லை என்றும் அதற்கு விவகாரத்துதான் தீர்வு என்றும் எப்படி முடிவு எடுக்கிறார்கள்? இத்தனைக்கும் இப்போதெல்லாம் திருமணம் நிச்சயமானதிலிருந்து தினசரி போனில் மணிக்கணக்கில் பேசுகிறார்கள், சேர்ந்து வெளியே போகிறார்கள். அப்போதெல்லாம் அவர்களுக்கு தங்களுக்குள் கம்பட்டபிலிட்டி இல்லை என்று தெரியவில்லையா?

உண்மையில் கம்பட்டபிலிட்டி என்று ஒன்று இருக்கிறதா? இவர்கள் ஏதோ கற்பனையில் வாழ்கிறார்களோ? எது இவர்களை விவாகரத்திற்கு துரத்துகிறது? அப்புசாமி சீதா பாட்டியைப்போல தினசரி சண்டை போட்டுக் கொண்டே பொன்விழா கொண்டாடிய தம்பதியினர் இருந்திருக்கிறார்களே..! இதற்கு முந்தைய தலைமுறையில் ஒவ்வொரு குடும்பத்திலும் மூன்று, நான்கு பெண்கள் இருப்பார்கள். அவர்களுக்கு திருமணம் செய்து தர வேண்டும் என்பது ப்ரம்ம ப்ரயத்தனம்தான். பெற்றோர்களின் சிரமத்தையும், தங்கள் கணவன் வீட்டில் வாழா விட்டால் அது தன் உடன் பிறந்தவர்களையும் பாதிக்கும் என்று அஞ்சியே பெரும்பாலான பெண்கள் தங்கள் துயரங்களை பொறுத்துக் கொண்டார்கள்.  எனக்கு தெரிந்த என் வயதை ஒத்த  ஒரு பெண்மணி திருநெல்வேலி சைவ பிள்ளை சமூகத்தை சேர்ந்தவர். பிறந்து வளர்ந்தது எல்லாம் டில்லியிலும், மும்பையிலும், திருமணம் செய்து கொண்டதோ திருநெல்வேலியில் பிறந்து வளர்ந்து அங்கேயே வசித்த ஒருவரை. அவர் தன்னுடைய ஆரம்ப கால திருமண வாழ்க்கையைப் பற்றி குறிப்பிடும் பொழுது, ஒரு 'கல்ச்சுரல் ஷாக்' என்பார். அதற்க்காக விவாக ரத்து செய்துவிடவில்லை. "நான் அந்த முடிவு எடுத்திருந்தால், என் தந்தைக்கு ஹார்ட் அட்டாக் வந்து விடும் என்னும் பயமே என்னை எல்லாவற்றையும் சகித்துக் கொள்ள வைத்தது" என்பார்.  இன்றைய பெண்களுக்கு அப்படிப்பட்ட நிர்பந்தங்கள் எதுவும் இல்லை, அதோடு பொருளாதார சுதந்திரம்.

திருமண வாழ்க்கைக்கு மற்றொரு வில்லன், செல்போன். இப்போதெல்லாம் ஒரு வீட்டில் எத்தனை நபர்கள் இருக்கிறார்களோ,அத்தனை செல்போன்கள். திருமணமாகி புகுந்த வீடு செல்லும் பெண் காலையில் எழுந்ததும் அம்மாவுக்கு குட்  மார்னிங்கும், இரவு படுக்கைக்கு போகும் முன் குட் நைட்டும் சொல்வது தவறு கிடையாது. ஆனால் அன்று நடக்கும் அத்தனை விஷயங்களையும் ஒப்பிப்பது சரியா? தகவல் தொடர்பு இத்தனை விரிவடையாத காலத்தில் கணவன் மனைவிக்கிடையே ஏற்படும் சின்ன சின்ன மனஸ்தாபங்களை உடனே அம்மாவுக்கு சொல்ல முடியாது, அதை கடிதமாக எழுதலாம் என்று நினைக்கும் பொழுது அதன் வீரியம் குறைந்திருக்கும். ஆனால் இன்று எல்லாம் உடனக்குடன் அம்மாவுக்கு தெரியப்படுத்தப்படுவதால், பிரச்சனை பெரிதாக்கப் படுமே ஒழிய குறையாது. 

நாற்பது வருடங்களில் பெண்களின் வளர்ச்சி, ஆண்களின் வளர்ச்சியை விட அதிகம். ஆண்களின் பக்கத்தில் என்ன தவறு என்று என்னால் கணிக்க முடியவில்லை. ஏனென்றால், இப்போது நகர்புற ஆண்கள் நிறைய மாறி இருக்கிறார்கள். கிராமங்களைப் பற்றி எனக்குத் தெரியவில்லை. 

நாற்பது வருடங்களுக்கு முன் குழந்தைகளை பார்த்துக் கொள்வது முழுக்க முழுக்க பெண்களின் வேலையாகத்தான் இருந்தது. ஒரு திருமணத்தில் தான்  சாப்பிட்டு வரும் வரை குழந்தையை பார்த்துக் கொள்ள சொல்லி விட்டு சென்ற மனைவி திரும்ப வருவதற்குள் குழந்தை கணவரின் மடியில் சிறுநீர் கழித்து விட்டான் என்பதற்காக எல்லோர் முன்னாலும் மனைவியை கண்ணா பின்னாவென்று கத்திய கணவர்மார்களை நான் பார்த்திருக்கிறேன். இப்போதெல்லாம் ஆண்கள் அப்படியெல்லாம் குரூரமாக நடந்து கொள்வதில்லை. பொறுமையாக டயாபர் மாற்றுகிறார்கள். வீட்டு வேலைகளையும் பகிர்ந்து கொள்கிறார்கள்.  ஆனாலும் டபுள் ஸ்டாண்டர்டும், எல்லா பிரச்சனைகளையும் படுக்கையில் தீர்த்துக் கொள்ள முடியும் என்று நினைப்பதையும் இந்தக் கால பெண்களால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை என்றுதான் தோன்றுகிறது. 

பிறந்த நாளையும், திருமண நாளையும் நினைவில் வைத்துக் கொள்ள முடியாதது ஆண்களின் பிறவிக்கோளாறு. தவிர சினிமா, விளம்பர கணவர்களைப் போல வெளிப்படையாக தன் காதலை வெளிச்சம் போடுவார்கள் என்றும் எதிர்பார்க்க முடியாது. இந்தக்குறைகளை பெரிது படுத்தாமல் விட்டு விட வேண்டும். 

மேலும் கணவன் மனைவிக்குள் ஒரு இடைவெளி வேண்டும்(space). கணவனோ,மனைவியோ அவரவருக்கென்று தனிப் பட்ட விருப்பங்கள், பொழுது போக்குகள் இருக்கலாம். கல்யாணம் ஆகிவிட்ட ஒரே காரணத்திற்காக எல்லாவற்றையும் உதறி விட வேண்டும் என்று நினைப்பது தவறு. 

"நான் பேச நினைப்பதெல்லாம் நீ பேச வேண்டும்..
நான் காணும் உலகங்கள் நீ காண வேண்டும், நீ காணும் 
பொருள் யாவும் நானாக வேண்டும் ..." என்பதெல்லாம் சினிமாவில் பார்க்கவும் கேட்கவும் நன்றாக இருக்கும். ஆனால் நடை முறையில் எப்படி மூச்சு திணறும் என்று நினைத்துப் பார்க்க வேண்டும்.

நான் பேச நினைப்பதை என்னை பேச விடு, உனக்கு என்ன பேச வேண்டுமோ அதை பேசிக்கொள் என்று சொல்வதுதான் ஆரோக்கியமான மண வாழ்க்கை. 
காதல் என்பது ஒருவரை ஒருவர் மதிப்பது, விட்டு கொடுப்பது. விட்டுக் கொடுப்பவர்கள் கெட்டுப்  போவதில்லை. 


Sunday, February 5, 2017

இரண்டாம் தாரம்

இரண்டாம் திருமணம் 

"அக்கா, வர ஞாயிறு அயோத்யா மண்டபத்தில் சுயம்வர ஹோமம் நடக்கப்போறது, கார்த்தாலே எட்டு மணிக்கு ஆரம்பம். கிருஷ்ணாவோட ஜாதகத்தை எடுத்துண்டு நீயும் அத்திம்பேரும் வாங்கோ. அந்த ஹோமத்தில் கலந்துண்டா, நிச்சயம் கல்யாணம் ஆகிடும். எங்க நாத்தனாரோட மச்சினர் பொண்ணுக்கு கல்யாணம் தட்டிப்போயிண்டே இருந்தது. போன வருஷம் இந்த ஹோமத்தில் கலந்துண்டா, உடனே கல்யாணம் நிச்சயம் ஆயிடுத்து.. கிருஷ்ணாக்கும் சீக்கிரம் கல்யாணம் நிச்சயம் ஆகட்டும்.." சித்ரா பேசிக்கொண்டே போனாள். 

"ம்.. சரி.." என்றதோடு போனை துண்டித்தாள் சந்திரா. 

"யாரு?.. என்னவாம்"? என்ற கணவரின் கேள்விக்கு பதிலாக முதல் பாராவில் இருந்த விஷயங்களை சொல்ல, அவரும் பதில் பேசாமல் டி.வி.யை நிறுத்தி செய்தி தாளை கையில் எடுத்துக் கொண்டார்.  

இப்போதெல்லாம் எல்லா சம்பாஷணைகளும் கிருஷ்ணாவின் திருமண பேச்சில்தான் வந்து முடிகின்றன. 

பார்ப்பதற்கு லட்சணமாக இருக்கும், கை நிறைய சம்பாதிக்கும், கெட்ட பழக்கங்கள் எதுவும் இல்லாத பையனுக்கு முப்பது மூன்று வயதாகியும் திருமணம் நடக்காததன் காரணம் தெரியவில்லை. 

கிருஷ்ணாவிற்கு இருபத்தைந்து வயதானபொழுது அவன் தங்கைக்கு திருமணம் ஆனது. அப்போது எல்லோரும் "கிருஷ்ணா உனக்கு லைன் க்ளியர்" என்றபோது "இன்னும் இரண்டு வருடங்கள் போகட்டும்" என்றான். 

அதைப் போலவே இரண்டு வருடங்கள் கழித்து, ஒரு நல்ல நாளில், மேட்ரிமோனியல் சைட் ஒன்றில் பதிவு செய்தார்கள். பெண்ணுக்கு பதிவு செய்து விட்டு வீடு திரும்புவதற்குள், புகைப்படம் அப் லோட் கூட ஆகவில்லை அழைப்புகள் வர தொடங்கி விட்டன. தினமும் ஏழெட்டு அழைப்புகளுக்கு குறையாது. ஆனால் க்ரிஷ்ணாவிற்கு அந்த அளவு ரெஸ்பான்ஸ் இல்லை. ஏன் என்று குழம்பிய பொழுது, ஏற்கனவே பிள்ளைகளுக்கு மேட்ரிமோனியல் சைட்டுகளில் பதிவு செய்து திருமணம் முடித்த உறவினர்களும், நண்பர்களும் "இப்படித்தான் இருக்கும், அது மட்டுமல்ல நாம் அழைத்தாலும் பதில் வராது" என்று தைரியம் அளித்தார்கள்/பயமுறுத்தினார்கள்
அப்பொழுது பார்த்து அவனுக்கு ஆன் சைட்டில் சுவீடன் செல்லும் வாய்ப்பு வந்தது. சுவீடனா? என்றார்கள். ஆறு மாதம்தான் அங்கிருப்பான், திரும்பி வந்து விடுவான் என்றாலும் மீண்டும் அழைக்கவில்லை.

ஒரு வருடம் கழித்து மீண்டும் ஆன்சைட்டில் அமெரிக்கா சென்றான். 
இவர்கள் மேட்ரிமோனியல் சைட்டில் பார்த்து சொல்லும் பெண்களை அவனுக்கு பிடிக்காது, அவனுக்கு பிடிக்கும் பெண்களின் ப்ரொபைலில் ஏதாவது குறை இவர்களுக்கு படும். 

இந்தப் பெண் பரத நாட்டியம் கற்றுக் கொண்டிருக்கிறாளாம், அதைத் தொடர விருப்புகிறாளாம், அதெல்லாம் நமக்கு சரி படுமா? அவ டான்ஸ் ஆட போயிட்டா, இவன் நட்டுவாங்கம் பண்ணுவானா? என்றார் கணவர்.

இவர்களுக்கும் பொருத்தம் என்று தோன்றி, அவனுக்கும் பெண்ணை பிடித்திருந்தால், ஜாதகம் சேராது. அல்லது, எங்கள் பெண் இங்கு நல்ல வேலையில் இருக்கிறாள் அதை விட்டு விட்டு வெளிநாடு செல்ல அவளுக்கு விருப்பம் இல்லை என்பார்கள். 

எல்லாம் ஒத்து வந்து இவர்கள் வீடு வரை வந்த சிலர் அதற்குப் பிறகு எந்த பதிலும் சொல்லவில்லை. வீடு சிறியது என்று நினைத்தார்களோ என்னவோ. சிலர் நீங்கள் இன்னும் கார் வாங்கவில்லையா? என்று கேட்டார்கள். அவர்கள் வீட்டில் இரண்டு கார்கள் இருக்கிறதாம். 

அதற்காக பெண்ணைப் பெற்ற எல்லோரும் மோசம் என்று கூறி விட முடியாது. எளிமையாக, யதார்த்தமானவர்களும் இருந்தார்கள். வீடு, காரெல்லாம் எங்க ஓடிடப் போறது? வயதிருக்கிறது, படிப்பு இருக்கு, வேலை இருக்கு, எதிர்காலத்தில் வாங்காமலா இருப்பார்கள்? என்று கூறியவர்களும் இருந்தார்கள். ஆனால், அவர்களோடு உறவைத் தொடர முடியாமல் பாழாய்ப் போன ஜாதகம் தடுத்ததே. 

எப்படியோ கிருஷ்ணா முப்பது வயதை கடந்து விட்டான். அதற்குள் அவன் கார் வாங்கி விட்டான், பழைய இரண்டு பெட் ரூம் வீட்டை கொடுத்து விட்டு, நகருக்குள்ளேயே  செகண்ட் ஹாண்ட் மூன்று பெட் ரூம் வீடு வாங்கி அதை புதுப்பித்துக் கொண்டார்கள்.  ஆனால் தலை முடி பின்னோக்கிச் சென்று நெற்றி பெரிதாகி விட்டது சந்திராவுக்கு கவலை தந்தது. 

இதெல்லாம் பெரிய விஷயமில்லை, இன்னிக்கு நிறைய இளைஞர்களுக்கு சீக்கிரம் தலை வழுக்கையாகி விடுகிறது. பொல்யூஷன், கெமிக்கல்ஸ் கலந்த ஷாம்பூதான்  காரணம். என்று  
சமாதானம் கூறப் பட்டாலும் பெண்கள் அதை ஏற்றுக் கொண்டு திருமணம் செய்து கொள்ள சம்மதிக்க வேண்டுமே?

பெண்ணுக்கு திருமணம் செய்யும் போது கூட இத்தனை கவலைப் படவில்லை. பிள்ளைக்குத்தான் ரொம்ப கவலையாக இருக்கிறது. அந்த கவலை அவளுக்கு சர்க்கரை நோயையும், கண்களுக்கு கீழ் கருவளையங்களையும் உண்டாக்கியது. 

மெல்ல மெல்ல உறவினர்களும் நண்பர்களும் பரிகாரங்கள் சொல்ல ஆரம்பித்தார்கள். ஓ.எம்.ஆரில் இருக்கும் நித்யகல்யாண பெருமாள் கோவிலுக்கு சென்று அவன் பெயரில் அர்ச்சனை செய்து அர்ச்சகர் தரும் மாலையை அவன் கழுத்தில் அணிந்து கொண்டு கோவிலை மூன்று முறை வலம் வந்தால்...

"அய்யய்யோ, அவன் இதையெல்லாம் செய்யவே மாட்டான்". 

"அவன் செய்யாவிட்டால் நீங்கள் செய்யுங்களேன்.."

அங்கு போன பொழுதுதான் ஊரில் இத்தனை பேருக்கு இன்னும் கல்யாணம் ஆகவில்லையா? இது நம் வீட்டில் மட்டும் நடக்கும் கதை இல்லை போலிருக்கிறது என்று ஆறுதல் தோன்றியது. 

திருமணம்சேரி என்றார்கள், திருச்சிக்கு அருகில் திருப்பஞ்சீலி என்றார்கள், திருப்பதி பெருமாளுக்கு திருக்கல்யாணம் செய்யச் சொன்னார்கள் எவ்வளவு ஊர்களுக்கு செல்ல முடியும்?  பிரதோஷத்தன்று சிவன் கோவிலில் புது அகல் விளக்கில் விளக்கேற்ற சொன்னார்கள். இவர்களும் முடிந்ததை செய்தார்கள். ஒரு கட்டத்தில் யாராவது பரிகாரம் சொன்னால், நிறைய செய்து விட்டோம் என்று கூறியதை திமிர் என்றார்கள்.

சமீபத்தில் மேட்ரிமோனியல் விளம்பரத்தை புதுப்பிக்கலாம் என்று சென்ற பொழுது, அங்கிருப்பவர், "முப்பது மூணு வயசா? 

கஷ்டமாச்சே சார்.. பசங்களுக்கு முப்பது வயதிற்குள் திருமணம் முடித்து விட வேண்டும், அதற்குப் பிறகு பெண் கிடைப்பது கஷ்டம்.. " என்றார். எதற்கும் இருக்கட்டும் என்று புதுப்பித்தார்கள். ஆனால் பலன் ஏதுமில்லை.

நீ ஜாதகம் ரொம்ப அலசி பார்க்கிறாயா..? அதனால்தான் டிலே, " என்றார் மாமா. ஜாதகம் பார்க்கத் தொடங்கி விட்டு எப்படி நிறுத்துவது? நட்சத்திர பொருத்தம் மட்டும் போதும் என்று முடிவெடுத்தாள்.  

பிராமினாக இருந்தால் போதாதா? ஏன் ஐயர் பெண்தான் வேண்டும் என்று பிடிவாதம் பிடிக்கிற? ஐயங்காரோ, ராயரோ, தெலுங்கு பிராமினோ ஓகே னு சொல்ல வேண்டியதுதானே..

அதையும் முயற்சி செய்து பார்த்தாகி விட்டது. ஒரு ஐயங்கார் பெண்ணும், ஒரு மாத்வ பெண்ணும் பிடித்திருந்தது.அந்தப் பெண்களின் பெற்றோர்களும் முதலில் சரி என்றார்கள். பின்னர் எங்கள் வீட்டில் பெரியவர்கள் வேண்டாம் என்கிறார்கள் என்று கூறி விட்டார்கள். 

ஒரு முறை குடும்ப விசேஷம் ஒன்றிலும் வழக்கம்போல கிருஷ்ணாவின் திருமண பேச்சு வந்த பொழுது, அவன் அப்பா,":வெஜிடேரியனாக இருந்தால் போதாதா? எந்த ஜாதியாக இருந்தால் என்ன? என்றதும் அவர் தம்பி பையன் கார்த்திக் ," பெரிப்பா இந்த மாதிரி ரிஸ்க் எல்லாம் எடுக்காதீர்கள். ஊர் பக்கம் ஜாதி சங்கங்களில் அவர்கள் வீட்டு குழந்தைகள், குறிப்பாக பெண்கள் ஜாதி விட்டு ஜாதி திருமணம் செய்து கொள்ள கூடாது என்று தீர்மானமே நிறைவேற்றி இருக்கிறார்கள். நீங்க பாட்டுக்கு ஏதாவது புரட்சி செய்து, எங்க அண்ணாவை போட்டுட்டாங்கன்னா..?எனக்கு என் அண்ணா வேணும் என்று கிருஷ்ணாவை கட்டிக் கொண்டான். 

"போடா, நீ சொல்றதை நம்ப முடியாது, ஏதாவது அடிச்சு விடுவ..."
.
ப்ராமிஸ்.. எங்க ஆஃபிஸில் ஒரு மதுரை பையனும், கோயம்புத்தூர் பக்கத்துல ஒரு ஊர் பெண்ணும் எட்டு வருஷமா லவ் பன்றாங்க. ரெண்டு பேர் வீட்டுலேயும் ஒத்துக்கலை, ஒரு வழியா பையன் வீட்டில் ஒப்புக் கொண்டார்கள், பெண் வீட்டில் நோ. கடைசீல இப்போ, "நீ அவனைத்தான் கல்யாணம் செஞ்சுப்ப என்றால் எங்களால் கல்யாணத்துக்கு வர முடியாது. நாங்கள் உன்னை ஏற்றுக் கொண்டோம் என்று தெரிந்தால், எங்களை ஜாதியிலிருந்து விலக்கி வைத்து விடுவார்கள். நீ வீட்டை விட்டு ஓடிப் போய்ட்டானு சொல்லி விடுகிறோம்.எங்கேயாவது போய் திருமணம் செய்து கொண்டு நன்றாக இரு என்று கூறி விட்டார்கள். அடுத்த வாரம் குன்றத்தூரில் கல்யாணம்.."

அவன் சொன்னதை நம்பவும் முடியவில்லை, நம்பாமலும் இருக்க முடியவில்லை. என்றாலும் ஜாதி விட்டு ஜாதி கல்யாணம் என்னும் ஐடியாவை கை விட்டார்கள்.

மாப்பிள்ளை கூட, "அவன் ஆஃபிஸில் எத்தனை பெண்கள் வேலை செய்வார்கள்? ஒருத்தி கூடவா இவன் கண்ணுக்கு படல? அவ்ளோ பழமா உங்க அண்ணா?" என்றாராம். 

அப்படியெல்லாம் சொல்லிவிட முடியாது. அவ்வப்பொழுது பெண்களை வீட்டிற்கு அழைத்து வருவதுண்டு. சிலரை, கலீக் என்றும் சிலரை பிரெண்ட் என்றும் அறிமுகப் படுத்துவான். அவர்கள் வீடு சென்றதும், "யாருடா இந்தப் பொண்ணு? இவளுக்கு என்ன வயசு இருக்கும்? என்று அம்மா ஆரம்பித்தால், "நீ எங்க வரேன்னு தெரியும், ஷி இஸ் கமிடெட், வாயை மூடிண்டு வேலையைப் பாரு" என்பான்.

நேற்று வெள்ளிக்கிழமை அன்று, அம்மா, இந்த சண்டே  என்னோடு கலீக் ஒருத்தியை சாப்பிட கூப்பிட்டிருக்கேன், உனக்கு ஓகேவா என்றான். 

சாப்பிட வந்த பெண் அமரிக்கையாகவும், லட்சணமாகவும் இருந்தாள். 

"ஷி இஸ் சுஜாதா, அண்ணா நகரில் இருக்கிறாள். கொஞ்ச நாள் ஆஸ்திரேலியாவில்  இருந்தாள், இப்போதுதான் என்னோட ப்ரொஜெக்டில் சேர்ந்திருக்கிறாள் என்று அறிமுகப் படுத்தினான். 

அந்தப் பெண் அரட்டை அடிக்கவில்லை, ஆனால் சகஜமாக பழகினாள். சுஜாதா, ஆஸ்திரேலியா.... இவளை பற்றி முன்பு ஒரு முறை ஏதோ சொல்லியிருக்கிறான். சட்டென்று நினைவுக்கு வரவில்லை. 

சாப்பிட்டு முடித்து கொஞ்ச நேரம் பேசிக்கொண்டிருந்து விட்டு அந்தப் பெண் கிளம்பிச் சென்றது. மாலை தேநீரோடு வந்த பிஸ்கெட்டை எடுத்து ஒரு கடி கடித்து விட்டு, " நான் சுஜாதாவை கல்யாணம் செய்து கொள்ள போகிறேன்" என்றதும், 

யாரு சுஜாதா..? என்றார் அவன் தந்தை.

இன்னிக்கு மதியம் லஞ்சுக்கு வந்தாளே..

கிருஷ்ணா கூறியதும், சந்திராவின் மனசுக்குள் பொறி தட்டியது. 

"இந்தப் பெண் ஏற்கனவே திருமணமாகி விவாகரத்தானவள் இல்லையோ"?
   
"ஆமாம், அவளோட எக்ஸ் ஹஸ்பாண்ட் ட்ரக் அடிக்ட். வெளிநாட்டு மாப்பிள்ளை என்று சரியாக விசாரிக்காமல் கொடுத்து விட்டார்கள். பாவம், ஒரு வருஷம் கஷ்டப்பட்டுவிட்டு, திரும்பி வந்து விட்டாள்".

"டைவர்ஸ் கிடைத்து விட்டதா? அல்லது லீகல் ப்ரோஸெடிங் போயிண்டிருக்கா"?

"போன மாதம்தான் கிடைத்தது". 

"பின்னல் பிரச்சனை எதுவும் வரக்கூடாது".

"அதெல்லாம் வராதுப்பா. டைவர்ஸ் கிடைக்கறதுக்கு முன்னாலேயே அவன் இன்னொரு கல்யாணம் பண்ணிக்கொண்டு விட்டான்.. ராஸ்கல்.."

"திடீர்னு ஒரு பெண்ணை கூட்டி வந்து, அவளை கல்யாணம் செய்து கொள்ளப் போறேன் என்கிறாய், அதுவும் ஒரு டிவோர்சியை.., குழந்தைகள் இருக்கா"? 

"இல்லை.." 

"கிவ் அஸ் சம் டைம் டு திங்க் "

"எவ்ளோ நாள்? ஒரு மாதம்"?

"அவ்ளோ வேண்டாம்... டக்குனு முடிவு பண்ற விஷயமா? பை த வே, அவ ஒப்புக்கொண்டு விட்டாளா"?

"இன்னும் அவளிடம் சொல்லவே இல்லை". 

"பிரமாதம்  ! அவளோட அபிப்ராயம் தெரியாது, எங்ககிட்ட ஏன் கேட்கிற"? 

அப்பாவின் கேள்வி கிருஷ்ணாவை கோப மூட்டியது. "உங்ககிட்ட கேட்காம,தெருவில் போகிறவர்களிடமா கேட்க முடியம்? என்ன பேசற"?

"கோப படாதே.. நீ க்ளியரா இருக்கியான்னு தெரியல.."

"நான் க்ளியராதான் இருக்கேன். நம்மளும் மேட்ரிமோனியல் சைட்டிலெல்லாம் ரிஜெஸ்டெர் பண்ணி பார்த்தாச்சு. நோ யூஸ். இந்த பெண்ணை எனக்கு பிடித்திருக்கிறது, அதனால்தான் கேட்டேன். உங்களுக்கு அப்ஜெக்ஷன் இல்லைனா, நான் அவ கூட பேசுவேன்.. அவளுக்கு நடந்தது ஒரு விபத்து.."

ஹாலில் கொஞ்சம் மௌனம் நிலவியது. 

"நீ என்னமா சொல்லற"

"ஏற்கனவே கல்யாணம் ஆன பெண்ணை ஏண்டா நீ கல்யாணம் பண்ணிக்கணும்? உனக்கு என்ன குறைச்சல்"?

கிருஷ்ணா மெல்ல சிரித்தான். "நீ ஒரு அம்மாவாகவே யோசிக்கற.., நேத்து என் பிரெண்ட் ஒருத்தன், இனிமே கொஞ்சம் சிக்கனமா செலவு பண்ணனும்டா, பொண்ணுக்கு அடுத்த வருஷம் மஞ்ச நீராட்டு விழா வந்துடுமோனு பயமா இருக்கு என்கிறான்.  தலை முடி குறையத் தொடங்கி விட்டது மட்டுமல்ல, நரைக்கவும் தொடங்கி விட்டது. தொந்தி விழுந்தாச்சு. கல்யாணம் ஆகலை என்பதால் நான் பையன் கிடையாது, மாமா.. உண்மையா யோசிச்சா எனக்கும் சுஜாதாவுக்கும் எட்டு வயது வித்தியாசம் இருக்கு"

"ஏற்கனவே கல்யாணம் ஆனவள்..." சந்திரா மீண்டும் அதையே சொன்னாள். 

"என்னம்மா தப்பு? முப்பத்தாறு வருஷம் முன்னால நீ செஞ்சதை நான் இப்போ பண்ணப் போறேன்.. அவ்ளோதானே.."?

எதிர் பார்க்காத இந்த தாக்குதலால் அடிபட்டுப் போன சந்திரா பதில் சொல்ல முடியாமல் மகனை வெறித்தாள். 

"சாரிமா , நான் எதுவும் தப்பா சொல்லல, மனைவியை இழந்த அப்பாவுக்கு நீ இரண்டாம் தாரமாகத்தானே வாழ்க்கைப் பட்டாய்? அதே  போன்ற  நிலையில் இருக்கும் ஒரு பெண்ணை நான் மணந்து கொள்வதில் என்ன தவறு"? 

"யாரோட யாரை நீ கம்பேர் பண்ற?  உங்கப்பாவுக்கு அப்போ வயது அதிகம் ஆகவில்லை, கல்யாணமான ஒரே வருடத்தில் மனைவி மூளைக் காய்ச்சலால் இறந்து விட்டாள். அந்த சமயத்தில் என் பிறந்த வீட்டில் ரொம்ப கஷ்டமான நிலைமை, பெண்ணுக்கு எப்படியாவது நல்லபடியா கல்யாணம் ஆனால் போறும்னு நினைச்ச உங்க தாத்தா என்கிட்டே கேட்டார், நானும் நிலைமையை புரிஞ்சுண்டு சரின்னேன். எனக்கு அதுல எந்த வருத்தமும் கிடையாது. உங்க அப்பாவும் என்னை நன்னாத்தான் வெச்சுண்டிருக்கார்".

"அதேதான்மா இங்கேயும். அப்பாவோட இடத்தில சுஜாதா இருக்கா. உனக்கு கல்யாணம் பண்றது கஷ்டமாக இருந்தது என்றால் எனக்கு கல்யாணம் ஆகறது கஷ்டமாக இருக்கு. நிலைமையை புரிஞ்சுண்டு நீ ரெண்டாம் தாரமா வாழ்க்கைப்பட்டாய், நிலைமையை புரிஞ்சுண்டு நான் அவளை ரெண்டாவது முறையா தாரமாக்குகிறேன். தப்பா? எனிவே, நீங்க யோசிச்சு வையுங்க. நான் சுந்தரம் பஜன் போயிட்டு வரேன்". கிருஷ்ணா கிளம்பினான். 

அவன் சென்ற கொஞ்ச நேரத்தில்," நான் அம்மன் கோவில் வரைக்கும் போயிட்டு வரேன், நீங்களும் வரேளா? 

"வரேனே...",என்றவர் சட்டையை மாட்டிக் கொள்ளும் போது, "இது ஏன் நமக்கு தோணவே  இல்லை? ஆண் மகனைப் பொறுத்த வரை திருமணமோ, மருமணமோ, பெண் கன்னி கழியாமல் இருக்க வேண்டும் என்று நினைக்கிறோம். நாம் மாற வேண்டும் " என்றார்.

"இப்போ நிறைய மாறியாச்சு" என்று பதில் சொன்னாலும், அவளால் முழு மனதாக ஒப்புக் கொள்ள முடியவில்லை. கோவிலுக்கு செல்கிறேன், அங்கு எனக்கு ஏதாவது நல்ல சகுனம் கிடைக்கட்டும், இந்த திருமணத்திற்கு ஒப்புக் கொள்ளலாம் என்று நினைத்துக் கொண்டாள்.

கோவிலில் விசேஷமாக எதுவும் நடக்கவில்லை. கொஞ்சம் நிம்மதியாகவும், ஒரு ஓரத்தில் கொஞ்சம் ஏமாற்றமாகவும் இருந்தது. 

வழக்கமாக செருப்பு விடும் பூக் கடையில் செருப்பை மாட்டிக் கொள்ள வந்த பொழுது, அவர், கொஞ்சம் இருங்கம்மா, என்றார். 

"நேத்து திருப்பதி போயிட்டு வந்தேன். திருக்கல்யாணம் பண்ணனும்னு ரொம்ப நாளா எண்ணம், இப்போதான் முடிஞ்சுது" இந்தாங்க பிரசாதம்,என்று, ஒரு பையில் லட்டு, திருமாங்கல்ய சரடு, குங்குமம், இவற்றோடு கொஞ்சம் பூவும் சேர்த்து கொடுத்தார். 

அதை கையில் வாங்கி கொண்டு கணவரை பார்க்க, அவள் மனது புரிந்து ஒரு பொருள் பொதிந்த புன்னகை புரிந்தார். 

வீட்டுக்கு வந்ததும் ஹாலில் உட்கார்ந்திருந்த கிருஷ்ணாவிடம் திருப்பதி லட்டுவை கொடுத்து விட்டு, "சுஜாதாவிடம் சீக்கிரம் பேசு. அவர்கள் வீட்டிலும் பேசி சீக்கிரம் முடிவு பண்ணலாம்" என்றாள்.