கணம்தோறும் பிறக்கிறேன் 

Tuesday, August 28, 2018

சின்ன சின்ன செய்திகள்



சின்ன சின்ன செய்திகள் 







சிந்தூரா என்றால் என்னவென்று கேட்ட அதிரவுக்காக இந்த பாடல். எனக்கு ஒரு சந்தேகம். எ.பி.யின் கண்களில்  அனுஷ்கா, தமன்னா தவிர வேறு கதாநாயகிகள் பட மாட்டார்களா? இந்தப் பொண்ணு ஹன்சிகாவுக்கு என்ன குறை?   
xxxxxxxx

வரலட்சுமி விரதம் பற்றி பதிவிடுகையில் தோன்றிய விஷயம். நாக சதுர்த்தி, கருட பஞ்சமி, வரலக்ஷ்மி விரதம் எல்லாவற்றிலும் பூஜை முடிந்ததும் அது சம்பந்தப்பட்ட கதை ஒன்றை வாசிப்பார்கள். வாழக்கையில் ஏதோ ஒரு கஷ்டத்தில் இருந்த ஒருவர் பெரும்பாலும் பெண், இந்த விரதத்தை அனுஷ்டித்து எப்படி நற்கதி அடைந்தார் என்று விளக்கும் கதையாக அது இருக்கும். வரலட்சுமி விரதம் சம்பந்தப்பட்ட கதை எனக்கு தெரியவில்லை. ஆனால், வரலக்ஷ்மி நோன்பின் முக்கிய பாடல் 'வரலக்ஷ்மி வருவாய் அம்மா..(பாக்யாத லக்ஷ்மி பாரம்மா..)' என்னும் பாடல்தானே? லட்சுமி நம் வீட்டிற்கு வர வேண்டும் என்றால் என்ன செய்ய வேண்டும்? என்று கூறும் கதை. சிறு வயதில் கேட்டது.

ஒரு முறை லட்சுமி தேவி பூமியில் வாழும் மனிதர்களுக்கு கருணை புரியலாம் என்று அதிகாலை நேரத்தில்  வைகுண்டத்திலிருந்து கீழே இறங்கி வருகிறாள். எந்த வீட்டிற்கு செல்லலாம் என்று யோசித்தபடியே வந்து கொண்டிருக்கும் பொழுது, ஒரு வீட்டில் புழுத்த சாணத்தைக் நீரில் கரைத்து அதைக் கொண்டு வாசலில் தெளித்து கோலம் போடுகிறாள் அந்த வீட்டு அம்மாள். லட்சுமி தேவி அருவருத்து அந்த வீட்டத் தாண்டிச் சென்று விடுகிறாள். அதற்கு அடுத்த வீட்டில் காலை வேளையில் வாசல் திண்ணையில் தலையை விரித்துப் போட்டுக் கொண்டு அமர்ந்து பேன் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். காண சகிக்காமல் நகர்ந்து விடுகிறாள். வேறொரு வீட்டிலோ காலை வேளையில் ஒருவரோடு ஒருவர் சண்டை போட்டுக் கொண்டு பிக் பாஸின் மஹத் போல கெட்ட வார்த்தைகளை இறைத்துக் கொள்கிறார்கள்."சீ! சீ! இந்த வீட்டில் நான் எப்படி இருக்க முடியும்?" என்று அங்கிருந்தும் அகன்று விடுகிறாள். வேறொரு வீட்டிலோ இப்படிப்பட்ட அசம்பாவிதங்கள் எதுவும் இல்லை, ஆனால் சூரிய உதயத்திற்கு பிறகும் உறங்கிக் கொண்டிருக்கின்றனர். மனமொடிந்து போன லட்சுமி தேவி சே! ஒரு வீடு கூடவா நான் வசிக்கத்தகுதி உடையதாக இருக்காது? என்று வருந்தும் பொழுது, அந்த சிறு குடிசை கண்ணில் படுகிறது. பளிச்சென்று வாசலில் சாணி தெளித்து கோலமிடப்பட்டு, உள்ளே விளக்கேற்றி வைக்கப் பட்டிருக்கிறது. அந்த வீட்டில் உள்ளவர்கள் காலையில் குளித்து விட்டு, அமைதியாக அவரவர் வேலைகளை பார்த்துக் கொண்டிருக்கின்றனர். ஆஹா! நான் வசிக்க தோதான இடம் இதுதான்" என்று அந்த வீட்டிற்குள் நுழைகிறாள் மஹாலக்ஷ்மி. அதன் பிறகு அந்த வீட்டின் வளம் பெருகத் தொடங்குகிறது. இந்த கதை மூலம் வீட்டில் லட்சுமி கடாக்ஷம் நிறைய வேண்டுமானால் என்னவெல்லாம் செய்யக் கூடாது, என்னவெல்லாம் செய்ய வேண்டும் என்று சொல்லப்படுகிறது. ஆனால் காலத்தை ஒட்டி சில மாறுதல்கள் செய்ய வேண்டியிருக்கும் . உதாரணமாக வீட்டு வாசலில் யார் இப்போதெல்லாம் சாணம் தெளிக்கிறார்கள்? அதே போல இப்போதைய இளைய தலைமுறையினர் எட்டு மணிக்கு முன்னாள் துயிலெழுகிறார்களா?

xxxxx 



எழுத்தாளரும், வீணை வித்தகியும் ஆன கீதா பென்னட் காலமாகி விட்டாராம். புற்று நோயால் பாதிக்கப்பட்ட அவர் அதிலிருந்து மீண்டார். ஆனால் அந்த அரக்கன் மீண்டும் அவரைத்தாக்கி அவர் உயிரைக் குடித்து விட்டான்.  சென்னை அசோக் நகரில் என் சகோதரியின்
வீட்டிற்கு பக்கத்து வீடு அவருடைய சகோதரியின் வீடு. தனி பங்களாவாக இருந்த அதை இடித்து அபார்ட்மெண்ட் ஆக்கிய பொழுது அவரும் அதில் ஒரு வீடு வாங்கி கொண்டார்.  ஒவ்வொரு வருடமும் டிசம்பரில் சென்னைக்கு வருவார். அப்போது அவரை சந்தித்து உரையாடியிருக்கிறேன். ராமபுரத்தில் எங்கள் விக்னேஸ்வரா லேடீஸ் கிளப்பிற்கு ஒரு முறை சிறப்பு விருந்தினராக வந்தார்.  மூன்று வருடங்களுக்கு முன்னர் சென்னைக்கு அவர் கணவரோடு வந்திருந்த பொழுது, அவர் கணவருக்கு நம் ஊரின் இரைச்சலைத்தான் தாங்க முடியவில்லை என்றார். 

ஒரு முறை குமுதத்தில் பட்டுக்கோட்டை பிரபாகரின் மனைவி, வாஸந்தியின் கணவர் போன்றே  பிரபல எழுத்தாளர்களின் வாழ்க்கைத் துணைகளை கதைகள் எழுத வைத்து வெளியிட்டார்கள். அதில் கீதா பென்னட்டின் கணவர் ஆங்கிலத்தில் எழுதியிருந்த கவிதையை அவர் கதையாக்கியிருந்தார்.  அவைகளை என்னால் ரசிக்க முடியவில்லை காரணம் எல்லோரும் தங்கள், தங்கள் வாழ்க்கைத் துணை எழுதுவது போலவே (அவர்கள்தான் எழுதி கொடுத்தார்களோ என்னவோ?) எழுதியிருந்தார்கள். "ப.பிரபாகரின் கதையை படிக்க வேண்டும் என்றால் அவர் எழுதியிருப்பதையே படித்து விடலாமே? எதற்கு டூப்பிளிகேஸி?" என்று நான் கேட்டதை திறந்த மனதோடு ஏற்றுக் கொண்டார். "உண்மைதான், இவையெல்லாம் பிசினெஸ் கிம்மிக்ஸ்" என்றார். "ஒரு நாவல் எழுத வேண்டும்" என்று ஆவல் என்றார். அது நிறைவேறாமலேயே ஆயுள் முடிந்து விட்ட்து.  



19 comments:

  1. இங்கே திருவரங்கத்தில் உள் வீதிகளில் இப்போதும் சாணி கரைத்து வாசல் தெளித்துக் கோலமிட்டிருப்பதைக் காணலாம். கிராமங்களுக்குச் செல்லும்போதும் பார்க்கிறேன் என்றாலும் அங்கேயும் இப்போதெல்லாம் குறைந்தே வருகிறதோ எனத் தோன்றும். எங்க பகுதியிலும் சில வீடுகளில் இரண்டு வேளையும் வாசல் தெளித்துக் கோலமிடுபவர்களும் உண்டு. ஒரே கோலத்தை ஒரு வாரம் வைச்சுக்கிறவங்களும் உண்டு. சென்னையில் தனி வீட்டில் இருந்தவரை நானும் இரண்டு வேளையும் வாசல் தெளித்துக் கோலம் போட்டிருக்கிறேன். 2011 ஆம் ஆண்டு ஆகஸ்ட் வரை!

    ReplyDelete
    Replies
    1. ஸ்ரீரெங்கத்தில் மிக அழகாக பெரிய பெரிய கோலங்கள் போடுவார்கள். அதுவும் உள் வீதிகளில் பெருமாள் தினசரி எழுந்தருளுவார் என்பதால் கோலம் தினசரி கோலம் போடுவார்கள். அதுவும் மார்கழி மாதங்களில் அறிவிக்கப் படாத கோலப் போட்டியே நடக்கும். அதிகாலை மூன்று மணிக்கு எழுந்து ஒருவரை ஒருவர் மிஞ்சும் வண்ணம் கோலம் போடுவார்கள். இப்போதும் கோலம் போடத் தெரிந்த பெண்கள் இருக்கிறார்கள்.ஆனால், சந்தர்ப்பமும், சூழ்நிலையும் இடம் கொடுப்பதில்லை.

      Delete
  2. இவங்க தான் தமன்னாவா? விளம்பரங்களில் பார்க்கிறேன் என நினைக்கிறேன். கீதா பென்னெட்டின் சிறுகதைகள் பொதுவாக நன்றாக இருக்கும். அவர் வீணை வாசித்துக் கேட்டதில்லை. அவர் அனுபவக்கட்டுரைகள் அவரோட சிறுகதைகளை விட சுவாரசியமாக இருக்கும்.

    ReplyDelete
    Replies
    1. //அவர் அனுபவக்கட்டுரைகள் அவரோட சிறுகதைகளை விட சுவாரசியமாக இருக்கும்.// ஆமாம், லேசான நகைச்சுவையோடு எழுதுவார். சுவாரஸ்யமாக இருக்கும்.

      Delete
  3. /இந்தப் பொண்ணு ஹன்சிகாவுக்கு என்ன குறை? //

    குறை ஒன்றும் இல்லை. அவர் புர் அழகைவிட அகா அழகு எனக்கு பிடிக்கும். அவர் நிறைய நல்ல காரியங்களைத் தன் சம்பாத்தியத்தில் செய்கிறார். உதாரணமாக நிறைய அனாதைக் குழந்தைகளைத் தத்தெடுத்து வளர்க்கிறார். எங்கள் பாஸிட்டிவ் செய்திகளிலும் இடம் பெற்றிருக்கிறார்.

    ReplyDelete
    Replies
    1. // எங்கள் பாஸிட்டிவ் செய்திகளிலும் இடம் பெற்றிருக்கிறார்.// நான் எ.பி.க்குள் வருவதற்கு முன்னாலா?

      Delete
  4. நாக சதுர்த்தி, கருட பஞ்சமிக்கு அம்மா சொன்ன கதைகள் நினைவில் இருக்கு. ஆனால் வரலக்ஷ்மி விரதத்துக்கு கதை சொன்னதாய் நினைவில்லை. சொல்ல நேரமே இருந்திருக்காதோ அம்மாவுக்கு என்று தோன்றுகிறது. பரபரப்பான நோன்பு!

    ReplyDelete
    Replies
    1. வரலக்ஷ்மி நோன்பு அன்று எஸ்.வி.பி.சி. சேனலில் வரலக்ஷ்மி விரத பூஜை காண்பித்தார்கள். முடிவில் கதையும் சொன்னார்கள்.

      Delete
  5. கீதா பென்னட் பற்றி நானும் பத்திரிக்கைச் செய்தியில் படித்தேன். அப்போதே எங்கள் குடும்ப வாட்சாப் க்ரூப்பிலும் பகிர்ந்திருந்தேன். யாரும் கண்டுகொள்ளவில்லை.

    ReplyDelete
  6. இப்போதெல்லாம் யார் வீட்டுவாயிலில்சாணம் தெளிக்கின்றார்கள்? நியாயமான ஆதங்கம்.

    ReplyDelete
    Replies
    1. அபார்ட்மெண்டில் அது சாத்தியம் இல்லையே? வருகைக்கு நன்றி.

      Delete
  7. >>> இப்போதெல்லாம் யார் வீட்டுவாயிலில்சாணம் தெளிக்கின்றார்கள்?..<<<

    பசு, காளை முதலான மாடுகளின் எண்ணிக்கையை வெகுவாக குறைத்தாயிற்று...

    கால்நடைகளை வளர்ப்போரும் குறைந்து கொண்டிருக்கின்றார்கள்...

    மாட்டுச் சாணத்திற்கு எங்கே செல்வது?...

    அப்படியே மாட்டுச் சாணம் கிடைத்து விட்டாலும்
    நம் மக்கள் கரைத்துத் தெளித்து விடவா போகின்றர்கள்!?..

    ReplyDelete
    Replies
    1. என்ன செய்வது? காலத்தின் கட்டாயம். இப்போது பழைய விஷயங்களின் மேன்மையை உணர ஆரம்பித்திருக்கிறார்கள். இருந்தாலும், வாசலில் சாணம் தெளிக்கும் பழக்கம் மீண்டும் வருமா என்பது சந்தேகம்தான்.கருத்திற்கு நன்றி.

      Delete
  8. துளித்துளி செய்திகள் அருமை.

    ReplyDelete
    Replies
    1. வாங்க சகோ. மகள் திருமணம் சிறப்பாக நடந்திருக்கும் என்று நினைக்கிறேன். பெண்ணை புகுந்த வீட்டிற்கு அனுப்பிய கையோடு எ.பி.க்கு வந்து விட்டீர்களே? கருத்திற்கு நன்றி.

      Delete
  9. சென்னையில் வீதி தோறும் மாடுகள் போகும். சாணியும் கிடைக்கும். இப்போது இரண்டும் இல்லை. அம்மா அதற்குப் பதில் மஞ்சள் பொடி கலந்து அத்தனூண்டு வாசலுக்கு அழகாகக் கோலம் போடுவார்.
    நானும் அவ்வாறே.
    பொதுவாக வீடு சுத்தமாக இருந்து ,பூஜை அறையில் மலர்கள் வைத்து, சாம்பிராணி தூபம் போட்டாலே
    அழகு மிளிரும்.

    இந்த ஊரில் ஊது பத்து ஏற்றினால் சிறிது நேரத்தில் அணைத்துவிடுவார்கள். கற்பூரம் நோ நோ.
    கோவிலிலேயே அப்படித்தான். எல்லாம் இந்த
    கார்ப்பெட்,மரத்தரையினால் வரும் உபத்திரவங்கள்.
    மிக நன்றி பானு மா.

    ReplyDelete
    Replies
    1. //பொதுவாக வீடு சுத்தமாக இருந்து ,பூஜை அறையில் மலர்கள் வைத்து, சாம்பிராணி தூபம் போட்டாலே
      அழகு மிளிரும்.//
      அழகு மட்டுமல்ல தெய்வீகம். ஆனால் என்ன செய்ய முடியும்? எல்லாம் காலதேச வர்த்தமானத்தை அனுசரித்து இருக்க வேண்டியதுதான்.

      Delete
  10. சின்னச் சின்ன செய்திகள் சிறப்பு - குறிப்பாக வரலக்ஷ்மி விரதம் கதை....

    கீதா பென்னட் - :(

    ஹன்சிகா - சரி தான்... :)

    ReplyDelete
  11. ஆ! கீதா பென்னட் போயிட்டாங்களா. இப்ப உங்க பதிவு பார்த்துத்தான் அறிகிறேன் பானுக்கா...

    உங்க பதிவு பார்த்துட்டு கூகுளில் தேடினால் அவங்க முக அடையாளமே மாறியிருந்தது இதுவா கீதா பென்னட் என்று தோன்றியது.

    என் கோ ஸிஸ்டர் இவங்க அப்பா ராமநாதன் அவர்களின் மாணவி.

    70 வயதை நெருங்கிய சமயம் என்பதும் தெரிந்தது.

    கதைகள் சில வாசித்துள்ளேன்.

    கீதா

    ReplyDelete