கணம்தோறும் பிறக்கிறேன் 

Sunday, May 1, 2016

திக் திக் நிமிடங்கள்!

திக் திக் நிமிடங்கள்!

வாழ்க்கை என்பது அனுபவங்களால் ஆனது. சிறியதும், பெரியதும், நல்லதும் கெட்டதுமான அனுபவங்களே வாழ்க்கை. நல்ல அனுபவங்கள் மகிழ்ச்சியையும், மோசமான அனுபவங்கள் படிப்பினையையும் தருகின்றன. *நேற்று நான் ஒரு பாடம் கற்றுக் கொண்டேன். 

நேற்று காலை மணி ஒன்பதரை இருக்கும். திடீரென்று மின்சாரம் துண்டிக்கப் பட்டது. ஒரு வேளை பராமரிப்புக்காக காலை ஒன்பது மணி  முதல் மாலை ஐந்து மணி வரை நிறுத்தப் பட்டிருக்கிறதோ? என்று முதல் நாள் செய்தி தாளை எடுத்து பார்த்ததில் அப்படி எதுவும் இல்லை. அக்கம் பக்கத்தில் உள்ள வீடுகளில் மின்சாரம் இருப்பது தெரிய வந்தது. ஏன் நம் வீட்டில் மட்டும் இல்லை என்று குழம்பிய பொழுது, மூன்றாம் மாடியில் வசிக்கும் சிறுமி, காசு கட்டிடீங்களா ஆண்டி? எங்க வீட்டுல கூட காசு கட்டல என்று கரெண்டை கட் பண்ணிட்டாங்க." என்றாள். 
"கட்டியாச்சே.." என்றதும், ஆன் லைனில் கட்டுகிறீர்களா? அப்படீன்னா ரெபரென்ஸ்  நம்பர் கேக்கறாங்க. வாசலில் செகூரிடி அருகில் ஒரு ஈ.பீ. ஆபீஸ் ஆள் உட்கார்ந்திருக்கார் சீக்கிரம் போய் காட்டுங்க" என்றாள்.(தெளிவுதான்)

மின்சார கட்டணம், தொலை பேசி கட்டணம் எல்லாவற்றையும் என் மகன்தான் கட்டுவது வழக்கம். அவன் இப்போது வெளியூர் செல்வதற்காக விமான நிலையத்தில் அல்லவா இருப்பான். என்ன செய்வது? என்று குழம்பினேன். என் மகள் அவனை கை பேசியில் அழைத்துப் பார்க்கலாம் என்று முயற்சி செய்ய, ஏதோ ஒரு நல்ல காலம் அவன் பதில் அளித்தான். என் மகள் அவனுக்கு விவரங்களிச் சொல்லி, TNEB receipt ஐ அவள் மெயில் ஐடிக்கு அனுப்ப சொல்ல அவனும் அப்படியே செய்ய, அதை ஈ.பீ. அலுவலகத்தில் சென்று காண்பிக்க உடனே மின்சாரம் வந்து விட்டது. இதுதான் என் அனுபவம் என்று அவசரப் பட்டு முடிவுக்கு வந்து விடாதீர்கள். முக்கியமான விஷயம் இனிமேல்தான் வருகிறது. 

என் மகளின் ஆதார் அட்டையில் அவளுடைய கை பேசி எண் தவறாக குறிக்கப் பட்டிருக்கிறது. அதை திருத்த வேண்டுமென்றால் குறிப்பிட்ட வார்டின் கார்பரேஷன் கிளை அலுவலகத்திற்கு நேரே சென்றுதான் விண்ணப்பம் கொடுக்க வேண்டும் என்று கூறப் பட்டதால் அலுவலகத்திற்கு விடுப்பான நேற்று அந்த வேலையை முடித்து விடலாம் என்று அதற்காக கிளம்பிக் கொண்டிருந்தாள். இடையில் ஏற்பட்ட மின்சார தடையால் தன்னுடைய கைப் பையை எங்கள் வீட்டிலேயே வைத்து விட்டு சென்று விட்டாள். அதையும், அவளின் டூ வீலர் சாவியையும் கீழே கொண்டு வந்து தருமாறு என்னிடம் கூறினாள். 

அப்போதுதான் அடுப்பில் குக்கரை வைத்திருந்த நான் அவள் கேட்ட பொருள்களை எடுத்துக் கொண்டு,  என் காலை கட்டிக் கொண்டு அழுத என் பேத்தியையும்  தூக்கிக் கொண்டு( நல்ல வேளையாக) கீழே சென்ற பொழுது எப்போதும்  செய்வது போல் ஸ்டாப்பரை போடாமல் வாசல் கதவை முக்கால் வாசி திறந்து வைத்து விட்டு சென்றேன். என் பெண்ணிடம் அவள் கேட்டவற்றை கொடுத்து விட்டு மேலே வந்து பார்த்தால்... ஆட்டோ லாக் கதவு பூட்டிக் கொண்டு விட்டது. என்னிடம் சாவி கிடையாது.  

உள்ளே எண்பத்தாறு வயது நிறைந்த எங்கள் அத்திம்பேர் (நாத்தனாரின் கணவர்) இருந்தார். ஆனால் அவருக்கு 90% காது கேட்காது. ஹால் சோபாவில் உட்கார்ந்திருந்தாலாவது பெல் சத்தம் கேட்கலாம், உள்ளே படுத்துக் கொண்டிருக்கிறார், நான் வாசலில் நின்றபடி காலிங் பெல்லை அடித்துக் கொண்டே இருக்கிறேன்.. ம் ஹூம்..! அவருக்கு காது கேட்டால்தானே கதவை திறப்பார்? சமையல் அறையில் இருந்து குக்கர் ஒரு விசில், இரு விசில் என்று ஒலி  எழுப்ப, எனக்கு பிரஷர் எகிற ஆரம்பித்தது,
இன்னொரு பக்கமோ வியர்வை தங்க முடியாமல் குழந்தை அழ ஆரம்பித்து விட்டது. 

என் கையில் செல் போனும் இல்லை. பக்கத்து வீட்டிற்க்குச் சென்று 
என் மகளுக்கும், கணவருக்கும் போன் செய்தால், அவர்கள் எடுத்தால்தானே..? என்னோடு என் பக்கத்துக்கு வீட்டுகாரர்களும் சேர்ந்து கொண்டு கதவை இடித்தார்கள், பெல் அடித்தார்கள். இந்த கலாட்டா சத்தம் கேட்டு எதிர்வீட்டுகாரர்களும் வந்து விட்டார்கள். அவர்களும் அவர்கள் பங்கிற்கு கதவை தட்டினார்கள். எதற்கும் பலன் இல்லை. இப்போது குக்கர் எங்கேயாவது வெடித்து விடப் போகிறது என்னும் பயத்தோடு, அத்திம்பேருக்கு காது கேட்காததால்தான் திறக்கவில்லையா? அல்லது முதியவரான அவர் மயங்கி விழுந்து விட்டாரா? என்னும் கவலையும் சேர்ந்து கொண்டது. 

எங்கள் வீட்டின் வாசல் கதவிற்கு மூன்று சாவிகள் உண்டு. ஒன்று என் கணவரிடமும், ஒன்று என்னிடமும், மற்றொன்று என் மகளிடமும் இருக்கும். இப்போது என் சாவி வீட்டினுள் மாட்டிக்கொண்டு விட்டது. என் கணவரோ, மகளோ வந்தால் கதவைத் திறந்து விடலாம். "ஆண்டி, அங்கிள் அங்கே வரார்.. வண்டு ஒன்று கூவ, மேலே இருந்த படியே," வீட்டு சாவியை சீக்கிரம் கொடுங்கள் என்று கூவினேன். "சாவியா? நீங்கள் எல்லாம் வீட்டில் இருக்கிறீர்களே என்று நான் சாவியை எடுத்துக் கொண்டு செல்லவில்லை" என்றாரே பார்க்கலாம்.. போச்சுடா! ஒரே கதி என் மகள்தான்.

"சுபா எங்கே போய் இருக்கிறாள் என்று சொல்லுங்கள். நான் கண்ணனை விட்டு சாவியை வாங்கி வரச் சொல்லுகிறேன்". பக்கத்துக்கு வீடு ரதி உதவ முன் வந்தார். 
"ராமாவரம் லக்ஷ்மி நரசிம்மர் கோவிலுக்கு அருகேதான் இருக்கு என்று கூகுளில் பார்த்து விட்டு சென்றுருக்கிறாள், சரியாகத் தெரியாது.."
"பால்கனி கிரில் திறந்துதானே இருக்கும்? ஒரு ஏணி வைத்து யாரையாவது பால்கனி வழியாக உள்ளே நுழையச் சொல்லலாமே..?"
எதிர் வீடு நவநீதாவின் ஆலோசனை. 
"இல்லையே.. பால்கனி கிரில் பூட்டிதான்  இருக்கும்".
போச்சு.. ஒரு ஒரு கதவாக மூடிக்கொண்டே வருகின்றதே..!
இல்லை இல்லை எல்லா கதவுகளும் மூடவில்லை, அத்திம்பேர் படுத்திருக்கும் பெட் ரூம் ஜன்னல் திறந்து இருக்கிறது. அங்கிருக்கும் நெட்லானை அலம்ப வேண்டும் என்பதற்காக கழட்டிய பொழுது ஜன்னலை திறந்து வைத்திருக்கிறோம்.
ஓ!வெரி குட்! நந்து நீயும், கண்ணனும் கீழே போய் பின்னல் ஏணி இருக்கும் அதில் ஏறி அந்த தாத்தாவை கூப்பிட்டு கதவை திறக்கச் சொல்லுங்கள்". என்று தெளிவாக உத்தரவு பிறப்பித்து விட்டு, நீங்கள் ஏன் வெளியில் நிற்கிறீர்கள்? உள்ளே வாருங்கள் என்று எங்களையும் அவர் வீட்டிற்க்கு அழைத்துச் சென்றார் நவநீதா. நாங்கள் அவர் வீட்டிற்க்குள் சென்று தண்ணீர் குடிக்க கேட்டோம். தண்ணீர் வருவதற்குள் 'க்ளிக்' என்ற ஓசையோடு எங்கள் வீட்டு கதவு திறந்தது. 

அப்பாடா!... என் கணவர் ஓடிப்போய் அடுப்பை நிறுத்தினார். 
"யாரோ ஒரு பையன் தாத்தா, தாத்தா என்று கூப்பிட்டு கதவை திறக்கச் சொன்னான். ரொம்ப நேரமா தட்டுகிறீர்களா?"
"சீ! சீ! அதெல்லாம் இல்லை". ஒரு வயதான விருந்தினரிடம் வேறு என்ன சொல்ல முடியும்? 

சரி இதிலிருந்து என்ன கற்று கொண்டாய்? என்கிறீர்களா? 
வீட்டின் ஒரு சாவியை அக்கம் பக்கத்தில் யாரிடமாவது கொடுத்து வைக்க வேண்டும். பால்கனி கிரில்லை தினசரி பூட்ட வேண்டியதில்லை. ஐந்து நிமிடமோ, பத்து நிமிடமோ சாவியை மறக்க கூடாது என்பது கோல்டன் ரூல். பதிமூன்று வருடங்கள் மறக்காமல் இருந்தது பெரிய விஷயமில்லை, ஒரு முறை மறந்ததுதான் பெரிய விஷயம்.

last but not the least இக்கட்டான நேரத்தில் பதட்டப் படாமல் உதவிய ரதி தேவதாசுக்கும், நவநீதா ராமசாமிக்கும் என் நன்றிகளை தெரிவித்தே ஆக வேண்டும்!

*இது ஒரு மீள் பதிவு, எனவே நேற்று என்பது நான்கு வருடங்களுக்கு முந்தைய நிகழ்வு.

Tuesday, April 26, 2016

பாழாப் போன டி.வி. வந்து பாடாப் படுத்துது

பாழாப் போன டி.வி. வந்து பாடாப் படுத்துது

நான் சுகம், நீ சுகமானு 
நாலுவரி எழுதேன்னு நச்சரிக்கும் அம்மாவுக்கு
நாளைக்குத்தான் எழுதணும் இன்று  
பாழாப் போன டி.வி. வந்து பாடாப் படுத்துது!

அடுத்த வீட்டு அக்காவுக்கு அறுவை சிகிச்சை 
ஆச்சுதாம், ஆதரவாய் பார்த்து பேச 
ஆகவில்லை இன்னோமும் 
பாழாப் போன டி.வி. வந்து பாடா படுத்துது!

கையில்எடுத்த சோறு காஞ்சு போன பின்னாலும் 
வாய் போய் சேரவில்லை வாய்க்கு ருசி ஏதுமில்லை 
பாழாப் போன டி.வி. வந்து பாடாப் படுத்துது 

வீட்டினுள் பேச்சில்லை, வீதியில் உறவில்லை 
கலகலக்கும் விளையாட்டு, கைவேலை ஏதுமில்லை 
பாழாப் போன டி.வி. வந்து பாடா படுத்துது.



Wednesday, April 20, 2016

Morning Marina

MORNING MARINA


"ஞாயிரு காலை பீச்சுக்கு போகலாமா"? என்றேன், வெளியே செல்வதில் அதிக விருப்பம் கொண்ட என் கணவர் உடனே ஆமோதித்தார். காலை ஐந்து முப்பதுக்கு பீச்சில் இருந்தால் உதய சூரியனை, சீ சீ சூரிய உதயத்தை காணலாம். அப்படியே பிள்ளையார் சதுர்த்தி அன்று வாங்கிய பிள்ளையாரையும் கடலில் விசர்ஜனம் செய்து விடலாம். ஒ.கே. டன்! என்று முடிவு செய்தோம். எங்களோடு பெண், மாப்பிளையும் சேர்ந்து கொண்டார்கள். பிறகு என்ன, காலையில் பீச், பிறகு கற்பகாம்பாள் கோவில், பிறகு சரவண பவனில் சிற்றுண்டி.. என்று திட்டம் போட்டு கொண்டோம்.

எல்லோரையும் போலவே எனக்கும் கடலை பார்க்க பிடிக்கும். கடலோ,மலையோ அந்த பிரம்மாண்டத்தின் முன் நாம் எத்தனை சிறியவர்கள் என்ற எண்ணம்தான் தோன்றும். கடலை கை கூப்பி வணங்கத் தோன்றும். ஏதோ ஒன்றிர்க்கு கட்டுப்பட்டு கடல் தன் எல்லையை மீறாமல் இருக்கிறது. அது மீறினால்..? சீறினால்..? ஒரு முறை சீறியதை பார்த்தோமே.! 

திருச்சியில் வசித்த வரை விடுமுறையில் போர் அடிக்கும் பொழுதெல்லாம், "மெட்ராசில் இருந்தால் பீச்சுக்காவது போகலாம், இங்கு எதுவும் இல்லை" என்று கூறுவோம். எங்களுக்கெல்லாம் அப்போது  மெட்ராசில் இருக்கும் அத்தனை பேரும் தினசரி பீச்சுக்கு செல்வார்கள் என்றுஒரு நினைப்பு .  இதைத் தவிர லா.ச. ரா. அவர்கள் தன்னுடைய சிந்தாமணி என்னும் நூலில் இரவில் பீச்சில்  அமர்ந்து கொண்டு  க.நா.சு., புதுமை பித்தன்,ந.பிச்சமூர்த்தி போன்ற மணிக் கொடி இலக்கிய ஜாம்பவான்கள் நடத்திய இலக்கிய பரிவர்த்தனை பற்றியும், என் அபிமான எழுத்தாளராகிய இந்துமதி தன் நண்பர்களான மாலன், சுப்பிரமணிய ராஜு, பாலகுமாரன் போன்றவர்களோடு தான் நடத்திய இலக்கிய விவாதங்களைப் பற்றியும் படித்த பிறகு என் பீச் ஆசை அளவு கடந்து போனது. ஆனால் இங்கு வந்த பிறகு நிதர்சனம் வேறு மாதிரி இருக்கிறது. 

சென்னையில் செட்டில் ஆகி பதிமூன்று வருடங்கள் ஆகின்றன, இது வரை பதிமூன்று முறை பீச்சுக்கு சென்றிருப்போமா என்பது சந்தேகம்.ஆரம்பத்தில் சில முறை மாலையில் கடற்கரைக்குச் சென்றோம். அது கடற்கரையாக இல்லை. நடக்க முடியாமல் கடைகள், கடற்காற்றை அனுபவிக்கலாம்.. உணவகங்களிலிருந்து வரும் எண்ணை கமறல் வாசம் + மீன் பஜ்ஜி வாசத்தையும் சகித்துக் கொண்டு... குழந்தைகளை அழைத்துக்கொண்டு செல்ல வேண்டும் என்றால் கையேடு ஒரு குடை எடுத்துச் செல்வது நலம், அப்போதுதான் பொது இடம் என்று கூட தெரியாமல் தாறுமாறாக நடந்து கொள்பவர்களை உங்கள் குழந்தைகள் கண்ணில் படாமல் மறைக்க முடியும். ஆகவே இப்போதெல்லாம் கடற்கரைக்கு செல்வதென்றால் காலையில்தான் செல்கிறோம். 

எங்களைப் போல நிறைய பேர்கள் கலையில் வருகிறார்கள் என்பது அங்கு போகும் பொழுதுதான் தெரிகிறது. வாக்கிங் செல்லவும், உடற் பயிற்சி செய்யவும், விளையாடவும், குடும்பத்தோடு பொழுதை செலவிடவும், கை கோர்த்து நின்றபடி சிரிக்கவும்(லாபிங் கிளப்), பறவைகளுக்கு உணவிடவும், மூலிகை சாறு பருகவும்  பலர் வருகிறார்கள். பஜ்ஜி கடை மட்டும் வந்து விடக் கூடாது.







Friday, March 25, 2016

காதலும் கடந்து போகும் (விமர்சனம்)

காதலும் கடந்து போகும் (விமர்சனம்)




படித்த,நாகரீகமான ஒரு பெண் படிக்காத ஒரு பேட்டை ரௌடியை காதலிக்கும் வழக்கமான கதைதான்!

விழுப்புரத்திலிருந்து ஐ.டி கம்பெனியில் வேலை கிடைத்து சென்னைக்கு வந்து  தோழிகளோடு தனி வீட்டில் தங்கி முழுமையான ஐ.டி. பெண்ணாக வாழ்க்கையை அனுபவிக்கும் யாழினி (மடோனா செபாஸ்டியன்) பணி செய்யும் அலுவலகம் ஒரு மோசமான நாளில் மூடப்படுகிறது. சென்னையிலேயே தங்கி வேறு வேலை தேடிக் கொள்ள நினைக்கும் அவர் எளிய மனிதர்கள் வசிக்கும் பகுதிக்கு குடி வந்து, செய்யாத ஒரு கொலைக்காக சிறைக்குச் சென்று விட்டு பார் ஓனராக ஆகும் ஆசையில் இருக்கும் அடியாள் விஜய் சேதுபதியின் எதிர் வீட்டு பெண்ணாகிறார். இந்த இருவருக்கும் இடையே மலரும் காதல்தான் படமாக விரிகிறது.

படத்தின் முன் பாதி பெரிதாக சுவாரஸ்யமான சம்பவங்கள் ஏதும் இல்லாமல்,அடியாளாக உதார் காட்டி கிளம்பும் கதிர் (விஜய் சேதுபதி) பரிதாபமாக அடி வாங்கி திரும்பும் நகைச் சுவையிலும், வேலை தேடி அவமானப் படும் யாழினியின் சோகத்திலும் சுற்றிச் சுற்றி வருகிறது. இரெண்டாம் பாதி காதல் வயப் படும் கதா நாயகிக்காக படிக்காத கதா நாயகன் அவளுடைய மேலதிகாரியாக நடிப்பது, அவளுக்காக நேர்காணல் அறையில் கதா நாயகன் புகுந்து கோக்குமாக்காக நடந்து கொள்வது என்று ஒரே சினிமாத்தனம், அந்த க்ளைமாக்ஸ் உள்பட..!

விஜய் சேதுபதி திறமையான நடிகர்தான், இந்த படத்திலும் சிறப்பாகத்தான் நடித்திருக்கிறார், என்றாலும் இன்னும் எத்தனை படங்களில் மெட்ராஸ் பாஷை பேசிக்கொண்டு ஒரே மாதிரி நடிக்கப் போகிறார்?   விழுப்புரம் பெண் என்று கூறப்படும் கதா நாயகி மடோனா செபாச்டியென் வியென்னாவிலிருந்து வந்து இறங்கியது போல இருக்கிறார். ஆனால் நடிப்பு கச்சிதம்! சந்தோஷ் நாராயணின் பின்னணி இசை அமர்க்களம்! பாடல்கள் ஏற்கனவே கேட்டது போலவே இருக்கின்றன. 

பழைய கள்ளை, நளன் குமாரசாமியின் ட்ரீட்மென்ட்  என்னும் புதிய மொந்தையில் ஊற்றி தந்திருக்கிறார்கள்.

Sunday, January 24, 2016

ஊருக்கு இளைத்தவன்...!

ஊருக்கு இளைத்தவன்...!

கோவிலுக்கு செல்லும் பெண்கள் ஜீன்ஸ் அணிந்து செல்லக் கூடாது என்னும் உயர் நீதி மன்ற உத்தரவிற்கு இடைக் கால தடை வாங்கி   இருக்கிறார் ஒரு பெண்மணி. அவர் கூறி இருக்கும் காரணம் இந்த உத்தரவு பெண்கள் தங்கள் இஷ்டப் படி உடை உடுத்தும் சுதந்திரத்தை மறுக்கிறதாம்.

அம்மணி உங்கள் சுதந்திரம் என்பது அடுத்தவரின் மூக்கு நுனி வரைதான் என்பதை அறியாதவரா நீங்கள்? வழிபாட்டு தலத்தில் ஜீன்சும், இறுக்கமான மேல் சட்டையும் அணிந்து வரும் பெண்ணால் மற்றவர்களின் கவனம் கலையாதா? இப்படி கூறினால் உடனே "கோளாறு உங்கள் பார்வையில் இருக்கிறது, அதற்கு பெண் என்ன செய்வாள்"? என்று கேட்காதீர்கள். பெண்ணைப் பார்த்து சலனப் படுபவன்தான் ஆண், அப்படித்தான் இயற்கை படைத்திருக்கிறது. வழிபாட்டு தலத்தில் அவனை சலனப் படுத்த வேண்டாமே.

அப்படியாவது பொது இடங்களுக்குச் செல்லும் போது இப்படி உடை அணியுங்கள், ஷாப்பிங் செல்லும் போது அப்படி உடை அணியுங்கள், விசேஷங்களுக்குச் செல்லும் போது இந்த மாதிரிதான் உடுத்திக் கொள்ள வேண்டும் என்று கூறவில்லை. நீச்சல் குளத்திற்குச் செல்லும் பொழுது ஒன்பது முழம் புடவையை கட்டிக் கொண்டுதான் நீந்த வேண்டும் என்று யாரும் வற்புறுத்தவில்லை. கோவிலுக்குச் செல்லும் பொழுது நாகரீகமாக( I mean dignified not fashionable) மற்றவர்களுக்கு உறுத்தாமல் உடை அணிந்து செல்லுங்கள் என்று சொல்லுவது தவறா?

அவரிடம் ஒரு கேள்வி, நட்சத்திர விடுதிகளிலும், கார்பொரேட் விருந்துகளிலும் டிரஸ் கோட்  என்பது கண்டிப்பாக பின்பற்றப்பட வேண்டிய விஷயம். அவை எல்லாம்  இவரைப் போன்றவர்களின் சுதந்திரத்தை  பறிக்கவில்லையா? அல்லது அங்கெல்லாம் செல்லும் பொழுதும் தன் இஷ்டப்படிதான் உடை அணிந்து செல்வார?  

 மற்ற மதங்களில் வழிபாடு செய்யும் பொழுது பெண்கள் தலையில் முக்காடு போட்டுக் கொள்ள வேண்டும் என்று கட்டாயம் உண்டு. அவர்கள் தங்கள் சுதந்திரம் பறிக்கப் படுகிறது என்று கூப்பாடு போடுவதில்லை. எந்த கட்டுப்பாடும் விதிக்காத இந்து மதத்தில்தான் எல்லாவற்றிர்க்கும் எதிர்ப்பு! என்ன செய்வது? இந்தியாவில்   ஊருக்கு  இளைத்த பிள்ளையார் கோவில் ஆண்டி இந்து மதம்தானே? 

Friday, December 18, 2015

வாராது போல் வந்த மாமழையும் பெரு வெள்ளமும்

வாராது போல் வந்த மாமழையும் பெரு வெள்ளமும் 

 
மழை இல்லை மழை இல்லை என்று சென்னை வாசிகள் புலம்பியது போக கிட்ட தட்ட ஒரு மாதமாக மழை கொட்டோ கொட்டென்று கொட்டி சென்னையை ஒரு வழி பண்ணி விட்டது. அக்டோபர் மாத ஆரம்பம் வரை வறண்டு கிடந்த ஏரிகள் நிரம்பி வழிகின்றன. 

என் வாழ்க்கையில் நான் சந்தித்த இரண்டாவது வெள்ளம் இது. 38 வருடங்களுக்கு முன் 1977 நவம்பரில் திருச்சியில் சரியாக சொன்னால் ஸ்ரீரங்கத்தில் சந்தித்த வெள்ளம். கரை புரண்டோடிய காவேரி திருச்சியை வெள்ளக் காடாக்கியதில் ஸ்ரீரங்கம் துண்டிக்கப்பட்டது. அக்கம் பக்கத்தில் இருந்த ஐந்தாறு குடும்பத்தினர் எங்கள் வீட்டு மாடியில்தான் அடைக்கலம் ஆனர். சத்தமே இல்லாமல் பெருகி வந்த காவேரி, கவனியுங்கள் சத்தமே இல்லாமல் பெருகி வந்த காவேரி... ஆம் சினிமாக்களில் காண்பிப்பது போல வெள்ளம் சப்தம் போட்டுக் கொண்டு, ஆர்பரித்து, சீறிப் பாய்ந்து வராது. சப்தமே இல்லாமல்தான் வரும். எங்கள் வீட்டுக்கு அருகில் இருந்த குடிசைகளை ஒவ்வொன்றாக இடித்துத் தள்ளி, எங்கள் தெருவில்(ராகவேந்திரபுரம்) நுழைந்து, கொஞ்சம் கொஞ்சமாக வீடுகளையும் ஆக்கிரமிக்க தொடங்கியது.தண்ணீர் ஏறிக் கொண்டிருந்து, பெரும்பான்மையோர் மாடியில், கீழே படுத்த படுக்கையாக இருந்த எங்கள் தாத்தா, சின்ன தாத்தா, அப்பா,அம்மா, மாமா, மற்றும் எங்கள் வீட்டு பசு மாடு. 

நாங்கள் மெல்ல மெல்ல உயர்ந்து கொண்டிருந்த தண்ணீரை வேடிக்கை பார்த்தபடி இருந்தோம். காலையில் எங்கள் மாமா மாட்டிடமிருந்து பால் கறந்து தர, அம்மா எல்லோருக்கும் காபி வழங்கினாள். பின்னர் தீபாவளி பட்சணங்கள் விநியோகிக்கப்பட்டன. எட்டு மணிக்குப் பிறகு எங்கள் அம்மாவும், பக்கத்து வீட்டு சரோஜா மாமியும் எலுமிச்சை சாதம், தயிர் சாதம் தயாரித்து எல்லோருக்கும் போட்டார்கள். ஏதோ பிக்னிக் சென்றது போல கொஞ்சம் ஜாலியாக அனுபவித்த வெள்ளம் அது. மதியம் நீர் மட்டம் நன்றாக குறைந்து விட அவரவர் வீடுகளுக்குச் சென்று வேலையை பார்க்க ஆரம்பித்தார்கள். தொன்னூறு ஆண்டுகளுக்குப் பிறகு வந்த வெள்ளம் என்றார்கள். ஆஹா! வாழ்க்கையில் ஒரு முறை வெள்ளம் பார்த்து விட்டேன் என்று சந்தோஷப் பட்டுக் கொண்டேன். 

இந்த வருட கதையை பார்ப்போமா: நவம்பர் 25ம் தேதி மதியம் வெளியே சென்ற என் கணவரும் மருமகளும் மாலை ஆறு மணிக்கு அமிஞ்சி கரையிலிருந்து கிளம்பி  விட்டதாகவும் நல்ல மழை பெய்து கொண்டிருப்பதால் வண்டிகள் வேறு பாதையில் திருப்பி விடப் பட்டிருப்பதாகவும் அவர்கள் தேனாம்பேட்டை வழியாக வந்து கொண்டிருப்பதாகவும் கை பேசியில் கூறினார்கள். ஒன்பது மணி ஆகியும் வீடு வந்து சேராததால் தொடர்பு கொண்ட போது, டிராப்பிக் ஜாம் காரணமாக  சைதாபேட்டை பாலத்தில்  நிற்பதாக கூறினார்கள். மணி பத்து, பதினொன்று என்று ஓடிக் கொண்டே இருந்தது அவர்கள் வீடு திரும்பவில்லை,மழையும் நிற்கவில்லை. பல முறை கை பேசியில் அழைத்த பொழுதும் அழைப்பை ஏற்கவில்லை.. பன்னிரண்டு மணிக்கு என் கணவர், "இப்போதுதான் ஒவ்வொரு வண்டியாக விட ஆரம்பித்திருக்கிறார்கள், கிண்டியில் இருக்கிறோம் வந்து விடுவோம்" என்றார். அவர்கள் வீடு வந்து சேர்ந்த பொழுது மணி ஒன்று முப்பது. அதன் பிறகு சாப்பிட்டு விட்டு படுத்தோம்.  ஆட்டோ ஓட்டுனரையும் எங்கள் வீட்டிலேயே உறங்கச் சொல்லி விட்டோம். இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால் அந்த ஓட்டுனருக்கு இருட்டி விட்டால் கண் சரியாக தெரியாது. அதனால் அவர் ஏழு மணிக்கு மணிக்கு மேல் சவாரிக்குச் செல்ல மாட்டார். அன்று இருட்டோடு மழையும் சேர்ந்து கொண்டு விட்டது..!இந்த கூத்தில் அவர்கள் நல்லபடியாக வந்து சேர்ந்தது கடவுள் அருள்தான்.

அன்று பெய்த மழையில் எங்கள் வீட்டிற்கு அருகில் இருக்கும் கால்வாய் நிரம்பி எங்கள் குடியிருப்பின் பின் வாசல் வழியாக தண்ணீர் உள்ளே புகுந்து குழைந்தைகள் விளையாடும் இடத்திர்க்கருகே உள்ள கார் பார்கிங்கில் நிறுத்தப்பட்டிருந்த கார்களை லேசாக சேதம் செய்தது.


அதன் பிறகு 29ம் தேதி வரை மழை இல்லை. ஆனால் பளிச்சென்று வானம் கண் திறக்கவில்லை. 29ம் தேதி மீண்டும் மழை துவங்கியது. 30ம் தேதி விடியல் காலை நல்ல மழை.வழக்கம் போல பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்தவுடன் மழை விட்டு கொஞ்சம் வெய்யல் கூட வந்தது!!! 

அன்று மதியம் தொடங்கிய மழை மறு நாளும் விடாமல் கொட்டித் தீர்க்க, காலை ஏழு மணிக்கு அலுவலகம் கிளம்பிய என் மாப்பிள்ளை தாம்பரம் சென்று சேர பத்து மணி ஆகி இருக்கிறது. வண்டலூர் வரை சென்றவரை ஊரப்பாக்கம் ஏரி உடைந்து விட்டதால் இப்படியே திரும்பி சென்று விடுங்கள் என்று திருப்பி விட்டு விட்டார்களாம். அப்போது மணி இரண்டு, அவர் வடபழனியில் இருக்கும் தன் வீட்டை அடையும் போது மாலை ஆறு மணி ஆகி இருக்கிறது என்றால் போக்கு வரத்து நெரிசலை யூகித்துக் கொள்ளுங்கள்.

எங்களுக்கு பிற்பகல் பதினோரு மணிக்கு மின்சாரம் துண்டிக்கப் பட்டது. பன்னிரண்டு மணி சுமாருக்கு என் மகள் தொலை பேசியில் அழைத்து, "செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து 30000 கண அடி நீர் திறந்து விட்டிருக்கிறார்களாம், அங்கு தண்ணீர் வந்து விட்டதா?" என்றாள்.நான், "இல்லை கார் பார்கிங்கில் மணல் மூட்டைகள் போட்டிருக்கிறார்கள், எனவே தண்ணீர் வராது" என்று மிகவும் நம்பிக்கையோடு கூறினேன். மேலும் குழந்தைக்கு பால் பவுடர் டப்பா வாங்கி கை வசம் வைத்துக் கொள்ள அறிவுறுத்தி விட்டு, அவர்கள் வீட்டிற்கு வந்து விடும்படி அழைத்த அவள் மாமியாருக்கு நன்றி கூறி அப்படி அவசியம் வந்தால் வருகிறோம் என்றேன்.

மாலை அசோக் நகரில் வசிக்கும் என் சகோதரியிடம் பேசிய பொழுது,செம்பரம்பாக்கம் ஏரி திறந்து விடப் பட்டால் எங்கள் தெருவிற்கு தண்ணீர் வரும், ஆனால் சீக்கிரம் வடிந்து விடும் என்றாள். நான் தமாஷாக அழகன் படத்தில் வரும்,
"என் வீட்டில் இரவு, அங்கே இரவா? இல்ல பகலா? 
எனக்கும் மயக்கம்.." 
என்னும் பாடலை ரீ மிக்ஸ் செய்து, 
என் வீட்டில் வெள்ளம் அங்கே வந்துச்சா, இன்னும் வல்லையா? எத்தனை அடி? " 
என்று பாடி சிரித்தோம். அப்போது கூட நான் வெள்ளம் வரும் என்று நம்பவில்லை.

இரவு பதினோரு என் கணவர் என்னை எழுப்பி நம் காலனியில் தண்ணீர் புகுந்து விட்டது, "உன் வண்டி சாவி கொடு வண்டியை வேறு இடத்தில் வைக்கலாம்" என்றார். கீழே சள சளவென்று  மக்களின் பேச்சுக் குரல். அர்த்த ராத்திரியில் வெள்ளம் வந்ததால் செய்வதறியாது தவித்த மக்கள்!!. இரண்டு மணிக்கு தரை தளத்தில் புகுந்தது தண்ணீர். அங்கிருந்தோர் மாடி வீடுகளுக்கு வந்தனர். காலை ஆறு மணிக்கு மாடிப் படியின் கடைசி படியில் இருந்த தண்ணீர் பத்து மணிக்குள் விறு விறுவென்று பத்து படிகளுக்கு மேல் ஏறி விட்டது.  நாங்கள் முக்கியமான பொருள்களையும், ஆவணங்களையும்(documents) லாப்டில்(loft) வைத்தோம். ஓவர் ஹெட் டாங்கில் இருந்த தண்ணீரை குளிப்பது, துணி துவைப்பது போன்ற செயல்களை தவிர்த்து தேவையான பாத்திரங்களை கழுவுவது, சமைப்பது இவைகளுக்கு மட்டும் பயன் படுத்தினோம்.
மொட்டை மாடிக்குச் சென்று பக்கத்தில் இருக்கும் செல்லம்மாள் நகர் மக்களுக்கு  ஒரு ஏணிக்கு அடியில் இரண்டு தெர்மோ கோல்அட்டைகளை வைத்து கட்டி  படகு போல செய்து அதில் வந்து உணவும் நீரும் தன்னார்வ தொண்டர்கள் வழங்குவதை வேடிக்கை பார்த்தோம். மறு நாள் இதே படகில்தான் செல்லம்மாள் நகரில் இருந்தவர்களை ஒவ்வொருவராக வெளியேற்றினார்கள். 
எங்கள் காலனியை சூழும் வெள்ளம் 

வெள்ள நீரில் மூழ்கிக் கொண்டிருக்கும் எங்கள் குடியிருப்பின் கார்கள்

மேலே ரோந்து வரும் ஹெலிகாப்டர்

அசோக் நகரிலிருந்து வட பழனி செல்லும் என் சகோதரி குடும்பம்
எங்கள் குடியிருப்பில் இருந்த ஒரு நிறை மாத கர்ப்பிணி பெண் ராணுவ வீரர்களால் ஹெலிகாப்டர் மூலம் காப்பற்றப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு அங்கு இரட்டை குழந்தைகளை ஈன்றதை செய்தி தாள்களில் படித்திருப்பீர்களே.

புதன் கிழமை இரவு சீக்கிரம் எல்லோரும் உறங்கச் சென்று விட்டார்கள் என்றுதான் தோன்றியது. முதல் நாள் ஏறிய நீர் மட்டம் உயரவும் இல்லை தாழவும் இல்லை. என்னதான் செய்ய முடியும்? ஆனால் அந்த அமைதி கொஞ்சம் அச்சம் ஊட்டியது. 

மறு நாள் காலை எழுந்து பார்த்த பொழுது குறைந்திருந்த நீர் மட்டம் சற்று தைரியம் அளித்தது. மொட்டை மாடியில் சென்று பார்த்த என் மருமகள்,"ரோடு தெரிகிறது" என்று சந்தோஷப் பட்டாள். மதியம் சாப்பிட்டு விட்டு கை அலம்பினோம், தண்ணீர் தீர்ந்தது. நான் பிடித்து வைத்திருந்த தண்ணீரை வைத்து ஒரு நாள் ஓட்டி விடலாம்.. நாளை என்ன செய்வோம் என்று கவலை வந்தது.

அன்று இரவு வானில் நட்சத்திரங்கள் தெரிய,"அப்பாடா! நட்சத்திரங்கள் தெரிய ஆரம்பித்து விட்டன இனிமேல் மழை வராது" என்று சந்தோஷப் பட்டேன். என் மகிழ்ச்சியில் தண்ணீர் ஊற்றி அணைத்தது  மீண்டும் கொட்டிய மழை. நல்ல வேளை பதினைந்து நிமிடங்களுக்கு மேல் பெய்யவில்லை.

வெள்ளி அன்று காலை சுத்தமாக தண்ணீர் வடிந்து விட்டிருந்தது. ஆனால் பாதிப்பு அதிகம்! குறிப்பாக தரை தள வீட்டில் இருந்தவர்களுக்கு மிக மிக அதிகம். வீடிற்கு வெளியே போடப் பட்டிருந்த விலை உயர்ந்த சோபக்களையும், தொலை காட்சி பெட்டிகளையும், வீட்டு  உபயோக பொருள்களையும் பார்க்க, பார்க்க மனது நொந்தது. எங்கள் குடியிருப்பில் மட்டும் ஏறத்தாழ இருநூறு கார்களும், முன்னூறுக்கும் மேல் இரு சக்கர வாகனங்களும் தண்ணீரில் மூழ்கின. இது ஒரு புறம் என்றால் உடுத்த மாற்றுத்  துணி கூட இல்லாமல் வாழ்கையை மீண்டும் அடிப்படையிலிருந்து ஆரம்பிக்க வேண்டிய ஏழை மக்களின் நிலை மிகவும் பரிதாபம். 

நகரின் பல இடங்களில் வெள்ளம் வடிந்து பதினைந்து நாட்கள் ஆன பிறகும் கூட தண்ணீர் வடியவில்லை. சாலைகள் கிழித்து போடப் பட்டிருக்கின்றன. என்றாலும் சாலையில் வழக்கம் போல போக்குவரத்து தொடங்கி விட்டது. சென்னை மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு வெகு சீக்கிரம் திரும்பி விட்டார்கள். "எவ்ளோ அடிச்சாலும் தாங்கறான், இவன் ரொம்ப நல்லவன்டா" என்னும் வடிவேலு காமெடிதான் நினைவுக்கு வருகிறது.    

ஒரு பின்னூட்டம்:

1977ல் ஒரு வெள்ளம் 2015ல் ஒரு வெள்ளம் என இரு வெள்ளங்களை பார்த்திருக்கிறேன். இந்த 38 கால இடைவெளியில் நம் வாழ்க்கை எத்தனை மாறி விட்டது? 

அப்போது திருச்சியில் தொலை காட்சி பெட்டி,வாஷிங் மிஷின்  யாரிடமும் கிடையாது. பிரிஜ், மிக்சி, கிரைண்டர், போன்றவை ஆடம்பர பொருள்கள். விலை உயர்ந்த புடவைகளும் மிகக் குறைவு. ஆனால் இன்றோ அரசாங்கமே விலை இல்லா மிக்சி, கிரைண்டர் என்று கொடுத்து மக்களை ஆடம்பரத்திற்கு பழக்கி விட்டு விட்டது. அப்போது தனி மனித இழப்பு குறைவு. இப்போதோ தனி மனித இழப்பே அதிகம்.

முற்றிலும் கணினி மயமாக்கப் பட்டு விட்டதால் வங்கியில் பணம் இருந்தாலும் அதை எடுக்க முடியவில்லை. ஏ.டி.எம்., ஆன் லைன் செயல்பாடு என்று இருப்பதால் வாடிக்கையாளர்கள் யார் என்றே வங்கி மேலாளர்களுக்கு தெரியாத நிலையில் அவர் எப்படி உதவுவார்? யோசிக்க வேண்டிய விஷயம் இது.  

Saturday, October 10, 2015

பஞ்ச கன்னிகைகளை நினைப்போம், பாவங்களை தொலைப்போம்

பஞ்ச கன்னிகைகளை நினைப்போம், பாவங்களை தொலைப்போம் 


அகல்யா திரௌபதி குந்தி மண்டோதரி தாரா 
ததா பஞ்சகன்யா ஸமரேன்  நித்யம் 
மஹா பாதக நாசனம்!

தினசரி சொல்ல வேண்டிய ஸ்லோகங்களில் இதுவும் ஒன்று. அகலிகை, திரௌபதி, குந்தி(குந்திக்கு பதிலாக சீதா என்றும் சிலர் கூறுவார்கள்),மண்டோதரி, தாரா என்னும் ஐந்து பெண்களை தினமும் நினைக்க அல்லது ஸ்மரிக்க மஹா பாதகங்களும் நசித்துப் போகும் என்பது இதன் மேலெழுந்த பொருள். உட்கிடை என்ன என்று சற்று ஆராயலாமா?

மேலே குறிப்பிடப் பட்டிருக்கும் ஐந்து பெண்களும் பெரிய தபச்வினிகள் கிடையாது. பெரும்பாலும் சோகத்தில் தன் வாழ் நாளை கழித்தவர்கள். ஏன் இன்னும் சொல்லப் போனால் கற்பு நிலையில் கூட விஞ்சி நிற்பவர்கள் இல்லை. 




இந்திரனால் வஞ்சகமாக தன கற்பை இழந்தவள் அகலிகை,அதனால் கல்லாய் சமைந்தவள்.  கல்லாய் சமைவது என்றால் நாம் எல்லோரும் நினைப்பது போல அவள் வெறும் பாறையாகி விடவில்லை.கல் போல சமைந்தாள். அதாவது பசிக்கும் ஆனால் சாப்பிட முடியாது, தாகம் எடுக்கும் நீர் அருந்த முடியாது. இந்திரன் அவளை ஆட்கொண்ட பொழுது அது தன் கணவன் இல்லை வேறு ஒருவன் என்று அவளுக்கு தெரிகிறது இருந்தாலும் உடல் இச்சையை கட்டுப் படுத்த முடியாமல் கல் போல் கிடந்ததால், "கல் போல கிட" என்று கௌதமர் இட்ட  மிகக் கடுமையான சாபம்.  

திரௌபதி இந்த காலத்தில் கூட ஒப்பு கொள்ள முடியாதபடி ஒரே சமயத்தில் ஐந்து கணவர்களோடு வாழ்ந்தவள்.அவள் அனுபவிக்காத சோகங்களா? அரசியல் காரணங்களுக்காக ஐந்து ஆண்களை மணக்க வேண்டிய நிர்பந்தம். மாவீரர் களாகிய ஐந்து கணவர்கள் இருந்த போதும் சபையில் துகிலுரிக்கப் பட்டாள். 


 

குந்தியோ திருமணத்திற்கு முன்பே கர்ப்பமாகி பிறந்த குழந்தையை பெட்டியில் வைத்து ஆற்றில் விட்டு விட்டு அந்த குற்ற உணர்ச்சியோடு வாழ் நாளை கழித்தவள்.  குந்திக்கு பதிலாக சீதை என்று கொண்டாலும் ஜனக ராஜன் மகள், தசரதன் மருமகள், பேராண்மை கொண்ட ராமனின் மனைவி என்று இத்தனை பெருமைகள் இருந்தாலும் ராவணனால் சிறையெடுக்கப் பட்டாள். அதற்குப் பிறகும் மிகக் கடுமையான சுடு சொற்களை ராமன் பேசி அவள் தீக்குளித்து
 தான் பரிசுத்தமானவள் என்று நிரூபித்த பிறகே அவளை மீண்டும் தன் மனைவியாக ஏற்றுக் கொள்கிறான் ராமன். அதன் பிறகும் நிறை மாத கர்பிணி என்ற இரக்கம் இல்லாமல் காட்டிற்கு விரட்டப் படுகிறாள்.  சுக்ரீவன் மனைவியாகிய தாரா மைத்துனனாகிய வாலியால் கவர்ந்து செல்லப் பட்டவள். ஒவ்வொரு பெண்ணிற்கும் இப்படி ஒரு சோகமான பின்னணி.  அவர்களால் எப்படி நம் மஹா பாதகத்தை நசிக்கச் செய்ய முடியும்? அப்போது இந்த ஸ்லோகம் பொய் சொல்லுகிறதா? இல்லை, இந்தப் பெண்களின் வாழ்கையை சிந்தியுங்கள். ஒவ்வொரு பெண்ணின் சோகத்திற்கும் ஏதோ ஒரு ஆண், அவனுடைய பேராசை, கூடா  ஒழுக்கம் இவைகளே காரணமாக இருந்திருக்கின்றன. இதை சிந்திக்கும் எந்த ஆணும் பெண்ணுக்கு தீங்கிழைக்க விரும்புவானா? 

மண்டோதரியின் கணவனாகிய ராவணன் பிறன் மனை விழைதல் என்னும் பெரும் பாவத்தை செய்ததால் அவள் மீது எந்த தவறும் இல்லாத போதும் அவள் தன் புதல்வர்களை இழக்கிறாள், கணவனை இழந்து தானும் மாண்டு போகிறாள்.

மே ற்கண்ட  ஸ்லோகத்தில் இந்த பெண்களை வணங்குகிறேன்
என்றோ, துதிக்கிறேன் என்றோ குறிப்பிடப் படவில்லை. நினையுங்கள், மஹா பாதகம் நசித்துப் போகும் என்றுதான் உள்ளது. அந்த பெண்களை நினைப்போம், அவர்கள் பட்ட துயரங்களை நினைத்துப் பார்ப்போம் அதற்கான காரணங்களை எண்ணிப் பார்ப்போம், பாவம் செய்ய மனம் வராது, அதாவது பாவம் நசித்துப் போகும்.  

Thursday, October 8, 2015

மாயா - விமர்சனம்

மாயா - விமர்சனம் 



நாம் பார்த்துக் கொண்டிருக்கும் சினிமா, அதற்குள் ஒரு சினிமா, ஒரு கட்டத்தில் நிஜ சினிமா மாந்தர்கள் கதை சினிமா பாத்திரங்களாக மாறி விடும் அமானுஷ்யம்தான் கதையின் ஜீவன். வண்ணத்தில் வருவது நிஜ சினிமா,கருப்பு வெள்ளையில் வருவது சினிமாவுக்குள் வரும் சினிமா என்பது நமக்கு புரியும் பொழுது இடை வேளை வந்து விடுகிறது. நிஜ சினிமா கதா நாயகி நயன்தாரா கதை சினிமாவுக்குள் எப்படி  புகுந்து புறப்பட்டார் என்பதுதான் பின் பாதி.

கணவனைப் பிரிந்து கைக் குழந்தையுடன் தோழியின் வீட்டில் அடைக் கலமாகி, கடுமையான பண தட்டுப்பாட்டில் இருக்கும், சினிமாவில் ஒரு ப்ரேக் கிடைக்க முயன்று கொண்டிருக்கும் நயன்தாரா கதை ஒன்று, ஒரு பத்திரிகையில் வேலை பார்க்கும் ஆரிக்கு 'மாயாவனம்' என்னும் தொடருக்கு படம் வரைய தொடங்கியவுடன் நேரும் விபரீதங்கள் ஒருகதை, அதில் கிளை கதையாக அவருடைய பாஸின் மனைவிக்கும் அவருக்கும் உள்ள தொடர்பு,  இருள் என்று ஒரு திகில் படம் எடுத்து விட்டு அது போனி ஆகாததால், இந்த படத்தை தனியாக இரவுக் காட்சி பார்ப்பவர்களுக்கு ஐந்து லட்சம் வெகுமதி என்று அறிவிக்கும் இயக்குனர் கதை ஒன்று. (உஸ்ஸ்! அப்பாடா?) இப்படி தனித் தனியாக இயங்கும் கதைகளை எப்படியோ ஒன்று சேர்த்து விடுகிறார் இயக்குனர்.  ஒளிப் பதிவும், இசையும் அவருக்கு நல்ல துணை! 

நயன்தாராவை பொறுத்த வரை படம் முழுவதும் முகத்தை சோகமாக வைத்துக் கொண்டிருந்து விட்டு, கொஞ்சம் பயந்தால் போதும். அதை சரியாக செய்திருக்கிறார். அவர் தோழியாக வரும் லக்ஷ்மி பிரியா நன்றாக செய்திருக்கிறார்.  மற்ற நடிகர்கள் எல்லோருமே கச்சிதம்! மர்மங்களை யூகிக்க முடிவது ஒரு குறை. படத்தை பார்த்து விட்டு பயப் படுகிறோமோ இல்லையோ குழம்புவது நிச்சயம். குழப்பம் தீர்ந்தால் ரசிக்கலாம்.   

Wednesday, May 20, 2015

கோடையும் எடையும்

கோடையும்  எடையும்


வெய்யில் காலம் வருகிறது என்றால் எனக்கு கொஞ்சம் பயம் வரும். தகிக்கும் வெய்யில், பவர் கட் இவைகளை நினைத்து மாத்திரம் அல்ல. கூடப் போகும் என் எடையை நினைத்தும்தான். கோடையில்தான் எடை குறையுமாம். அதிகம் வியர்பதால் எடை குறைந்து விடும் என்கிறார்கள். நாம் வியர்க்க விட்டால்தானே? வியர்க்க ஆரம்பிக்கும் பொழுதே, "உஸ்... அப்பா... முடியல... ஏ.சி.ஐ போடு" என்று வியர்வையை அடக்கி விடுகிறோம். 




அது மட்டுமா? ஜில்லுனு ஏதாவது குடிச்சால்தான் தாகம் அடங்கும் என்று நன்னாரி சர்பத் என்ன? ரோஸ் மில்க் என்ன? இவைகளைத் தவிர பாட்டில் பாட்டிலாக உள்ளே தள்ளும் குளிர் பானங்கள் கிலோ கிலோவாக நம் எடையை ஏற்றி விடுகின்றனவே...! குளிர் பானங்களோடு நிறுத்திக் கொள்கிறோமா? ஆங்காங்கே இருக்கும் ஐபாகோக்களும்(IBACO) , மில்கிவேக்களும்(MILKY WAY) நம்மை வா என்று அழைக்கும் பொழுது மாட்டேன் என்றா சொல்ல முடியும்? உள்ளே நுழைந்து வித விதமான ப்ளேவர்களில் ஐஸ் க்ரீம்களை வெளுத்து கட்டினால் எடை ஏறாமல் இருக்குமா?

வெய்யில் கொளுத்துகிறதே என்று திருமணங்கள் நடத்தாமலா இருக்கிறார்கள்? கல்யாணம்,காது குத்தல், பிறந்த நாள், க்ரஹ பிரவேசம், என்று எப்படியும் ஒரு மாதத்தில் இரண்டு நிகழ்ச்சிகளிலாவது கலந்து கொள்ள வேண்டி இருக்கிறது. இப்பொழுதெல்லாம் எந்த விருந்துமே ஐஸ் கிரீம் இல்லாமல் இல்லை. அதைத் தவிர இன்னும் இரண்டு இனிப்புகள்... எல்லாவற்றையும் பரிமாறி வைத்து விடுகிறார்கள். உணவை வீண் ஆக்க முடியுமா? ஜோதிகா வேறு சின்ன திரையில் வந்து, "உணவை வேஸ்ட் பண்ணாதீர்கள், ப்ளீஸ், வேஸ்ட் பண்ணாதீர்கள்" என்று கெஞ்சும் போது வீண் பண்ண முடியுமா? எல்லாவற்றிற்கும் நம் வயிற்றில் இடம் அளிக்கிறோம். எடை ஏறாமல் இருக்குமா? 

ஐஸ் க்ரீம் ஐ ஒதுக்கலாம் என்றால்?"ஏன் ஐஸ் க்ரீம் சாப்பிடலையா? ஷுகரா"? என்று அக்கறையாக விசாரிப்பார் பக்கத்து இலை காரர்."சீ சீ அதெல்லாம் இல்ல, வெய்ட் ஏறிக் கொண்டே போகிறது, அதான்.." "ஒரு நாள் சாப்பிட்டா ஒண்ணும் ஆகிடாது". என்று உசுப்பேற்றி உசுப்பேற்றியே நம்மை 'ஓவர் வெய்ட்' ஆக்கி விடுகிறார்கள்.



விருந்தை விட்டுத் தள்ளுங்கள், என்றாவது ஒரு நாள்தான், வீட்டில் இருக்கும் வில்லன்களை என்ன செய்வது? எல்லாவற்றிலும் முதன்மையானது மாங்காய்!!! மாவடு, மாங்காய் தொக்கு, ஆவக்காய், மாம்பழம் என்று பல வடிவங்களில் அது படுத்தும் பாடு இருக்கிறதே..!


அம்மாவிடமும், மாமியாரிடமும் எதை கற்றுக் கொள்கிறோமோ இல்லையோ ஊறுகாய் போட கற்றுக் கொண்டு விடுகிறோம். முதலில் சாதத்திற்கு தொட்டுக் கொள்ளத்தான் ஊறுகாயை போட்டுக் கொள்வோம். அது கொஞ்சம் மீந்து விடும். சரி ஊறுகாயை வீணாக்க வேண்டாமே என்று கொஞ்சம் சாதம் போட்டுக் கொள்வோம், இப்போது மறுபடியும் ஊறுகாய் மீந்து விடும். இப்படி சாதத்திற்கு ஊறுகாய், ஊறுகாய்க்கு சாதம் என்று மாற்றி மாற்றி சாப்பிட்டால் எடை எப்படி ஏறாமல் இருக்கும்? 

இனிமேல் இப்படிப் பட்ட சபலங்கள் எல்லாம் கூடாது என்று எண்ணி ஊறுகாயை குறைவாக போட்டுக் கொள்கிறேன். ஐபாகோ களையும், மில்கி வேக்களையும் புறக்கணித்து விட்டேன்.  ஆனால் மாம்பழம்?? 


செந்தூரான், நீலம், பங்கனப்பள்ளி, இமாம்பசந்து என்று கலர் கலராக வண்டிகளில் அடுக்கி வைக்கப் பட்டிருக்கும் மாம்பழக் கவர்ச்சியிலிருந்து விடுபடுவது கொஞ்சம் கடினம்தான்... வயதோ ஏறிக் கொண்டிருக்கிறது ஒரே ஒரு நல்ல சுவையான மாம்பழத்தை சாப்பிட்டு விட்டு நிறுத்தி விடலாம் என்று தீர்மானித்தேன். ஆனால் அதில் ஒரு சிக்கல் பாருங்கள், ஒரு வெற்றி படம் கொடுத்து விட்டு நடிப்பதை நிறுத்தி விடலாம் என்று நினைக்கும் சூப்பர் ஸ்டாருக்கு வெற்றி படம் வாய்க்காதது போல எனக்கும் சுவையான மாம்பழம் கிடைக்க மாட்டேன் என்கிறது. ஒன்று புளிக்கிறது, அல்லது நாராக இருக்கிறது, அல்லது சப்பென்று இருக்கிறது. என்ன செய்வது? இன்றைக்கு கூட மாம்பழம் வாங்கி இருக்கிறேன்.. எப்படி இருக்க போகிறதோ? 

எடை? அதைப் பற்றியெல்லாம் இப்போது என்ன? கொஞ்சம் நடந்தால் குறைந்து விடப் போகிறது... தவிர நான் என்ன அழகி போட்டிக்கா செல்லப் போகிறேன்?.. கிடக்கட்டும் கழுதை

படங்கள் உதவி: கூகுள் .

Saturday, May 9, 2015

சில முரண்பாடுகள்

சில முரண்பாடுகள்

வாழ்க்கை என்பதே மாறிக் கொண்டே இருப்பதுதான். மாறுதல் இன்றேல் வாழ்க்கை இல்லை, என்றாலும் சில மாறுதல்கள் வியப்பாகத்தான் இருக்கின்றன. 

நாங்கள் குழந்தைகளாக இருந்த பொழுது ஒரு வீட்டில் குறைந்த பட்சம் எட்டு நபர்கள் இருப்பார்கள். ஆனால் ஒரு வீட்டிற்கு ஒரு குளியல் அறை ஒரு கழிப்பறைதான் இருக்கும். 

இன்றோ ஒரு வீட்டில் நான்கு பேர் என்பது கூட குறைந்து மூன்றாகி விட்டது.  ஆனாலும் அந்த மூன்று பேருக்கு மூன்று படுக்கை அறைகள், மூன்று அட்டாச்ட் பாத் ரூம்!!!

இப்போது போல 2BHK/3BHK என்றில்லாமல் திண்ணை, கூடம், தாழ்வாரம், முற்றம், ரேழி(இதில் வாசல் ரேழி, கொல்லை  ரேழி என்று இரண்டு உண்டு. எ ழுத்தாளர்  சுஜாதா'"நீளமான, குறுகலான, கோமணம் போன்ற இந்த பகுதியைத்தான் நாங்கள் ரேழி என்போம் என்று ஒரு கதையில் எழுதியிருப்பார்). ரேழி உள்,  என்ற அந்த செட் அப்பில்  ரேழி உள் என்பது தான் படுக்கை அறையாக கருதப் படும். அப்போதைய வீடுகளின் திண்ணை எல்லாவற்றையும் கொள்ளும் மகாராஜன் கப்பல்! வீட்டிற்கு வரும் விருந்தாளிகளில் ஆண்களுக்கு அடைக்கலம் தருவது இந்த திண்ணைதான். 

வளைகாப்பு, சீமந்தம், பூணூல், ஆண்டு நிறைவு போன்ற சிறிய விசேஷங்கள் வீட்டில்தான் நடக்கும். அதற்கே குறைந்தது 100 உறவினர்கள் வருவார்கள். விசேஷங்கள் நடக்கும் வீட்டில் இடமில்லை என்றால் அக்கம் பக்கம் வீடுகளில் படுத்துக் கொள்வார்கள்( என்ன இப்போ? ஒரு ராத்திரிதானே..?.)  

ஏன் திருமணங்கள் கூட இரண்டு வீட்டிர்கிடையே பந்தல் போடப் பட்டு, ஒரு வீட்டில் மாப்பிள்ளை வீட்டு காரர்களை தங்க வைத்து, மற்றொரு வீட்டில் பெண் வீட்டு காரர்கள் தங்கிக் கொண்டு நடத்தி இருக்கிறார்கள்.  இன்றோ எல்லா விசேஷங்களும் மண்டபங்களில்தான் நடத்தப் படுகின்றன. ஒவ்வொரு திருமண மண்டபமும் அதற்க்கு அருகிலேயே ஒரு மினி ஹாலை குட்டி போட்டு விடுகிறது. உறவினர்கள் எண்ணிக்கை மிகவும் அருகிப் போய் விட்டாலும், வரும் விருந்தாளிகள் தங்க தனியாக ரூம் போட வேண்டி இருக்கிறது. 

அதைப் போல எங்களின் பள்ளி நாட்களில் டியூஷன் வைத்துக் கொள்வது மிகவும் அவமானகரமான விஷயம். மக்கு பிள்ளைகள்தான் டியூஷன் வைத்து கொள்வார்கள் என்று ஒரு அபிப்ராயம் உண்டு.  இன்று மிக நன்றாக படிப்பவர்களும் டியூஷன் வைத்துக் கொள்கிறார்கள். அது மட்டுமில்லை, எந்த பள்ளியில் படிக்கிறார்கள் என்பது மட்டுமல்லாமல், யாரிடம் டியூஷன் படிக்கிறார்கள் என்பதை வைத்தும் அவர்களின் திறன் மதிப்பிடப் படுகிறது.

ஒன்பதாம் வகுப்பிலிருந்து பன்னிரெண்டாம் வகுப்பு வரை விளையாட்டு, பொழுது போக்கு, போன்ற பல விஷயங்கள் மறுக்கப்பட்டு மிகக் கடுமையாக பிழியப்படுகிறார்கள். ஆனால் என்ன வேடிக்கை என்றால் அந்த மாணவர்கள் நன்றாக படிக்கக் கூடியவர்களாக இருந்தாலும் கூட, ரிசல்ட் வரும் முன்பே நல்ல கல்லூரிகளில் பணம் கொடுத்து அட்மிஷன் வாங்கி விடுகிறார்கள். 
நல்ல கல்லூரியில் படித்தால்தான் நல்ல நிறுவனத்தில் வேலைக்கு சேர முடியும் என்ற எண்ணம்... !

வேலைக்கு சேர்ந்தாகி விட்டால் போதுமா? வெளி நாட்டிற்க்கு சென்றாக வேண்டுமே.. விசா ஆஞ்சநேயருக்கோ, விசா வினாயகருக்கோ வேண்டிக் கொண்டு, தேங்காயோ, மாங்காயோ கட்டி மகனை அமெரிக்காவிற்கு அனுப்பி விடுகிறோம். மகளாக இருந்தால் அமெரிக்க மாப்பிள்ளைக்குத்தான் முதலிடம். 

அமெரிக்காவில் குப்பை கொட்டி விட்டவர்களால் இங்கே திரும்பி வர முடியுமா? இந்தியாவில் வயதான பெற்றோர்கள் தனியாக இருக்க வேண்டாம் என்று அவர்களை முதியோர் இல்லத்தில் சேர்த்து விட்டால்,"இவர்களுக்காக நாங்கள் எத்தனை கஷ்டப்பட்டிருக்கிறோம்? எங்களை கொண்டு முதியோர் இல்லத்தில் தள்ளி விட்டார்களே.."? என்று புலம்புகிறார்கள். வேடிக்கை மனிதர்கள்.  

Thursday, April 16, 2015

புது வருட குழப்பங்கள்!

புது வருட குழப்பங்கள்!  


  









இந்த புது வருடத்தின் பெயர் மன்மத வருடம். என்ன ஒரு வசீகரமான பெயர்!

எத்தனை புத்தாண்டுகள்? பாரம்பரியமான தமிழ் புத்தாண்டு. ஆங்கிலேயர்களின் உபயம் ஆங்கில புத்தாண்டு. தைப் பொங்கல் நாள்தான் தமிழ் புத்தாண்டு என்று திடீரென்று கலைஞர் விட்ட கரடி!


இந்தியாவில் எத்தனை மாநிலங்கள் உள்ளதோ அத்தனை புத்தாண்டுகள் கொண்டாடப்படும் என்று நினைக்கிறேன், ஒன்றிரண்டு குறையலாம்..! 

எனக்கு தெரிந்து பஞ்சாப், சண்டிகர், உ.பி., குஜராத் மாநிலங்களில் தீபாவளிக்கு அடுத்த நாளை புத்தாண்டாக கொண்டாடுகிறார்கள். மராட்டியர்கள்  குடி படுவாவையும், கன்னடர்களும், தெலுங்கர்களும் யுகாதியையும்  புது வருடமாக கொண்டாடுகிறார்கள். தமிழர்களாகிய நாமும், கேரளர்களும் சித்திரை மாத பிறப்பை புது வருடமாக கொண்டாடுகிறோம். மற்ற மாநிலத்தவர் சந்திரமானச பஞ்சாங்கத்தையும்(Lunar calendar),தமிழ் நாட்டிலும் கேரளாவிலும் சௌரமானச பஞ்சாங்கத்தையும்(solar calendar) பின்பற்றுவதால் இந்த வழக்கம். அதில் கூட நாம் இருவரும் ஒரே நாளில் புது வருடத்தை கொண்டாடுவதில்லை ஒரு நாள் முன்னே பின்னே வருகிறது. 



இந்த வருடம் ஏப்ரல் 14ம் தேதி நாம் விடுமுறை எடுத்துக் கொண்டு, விருந்து சாப்பாடு சாப்பிட்டு,தொலை காட்சியில் சிறப்பு நிகழ்சிகளைப் பார்த்து, கோவில்களில் நெரிபட்டொம். ஆனால் மலையாளிகள் ஏப்ரல் 15 தான் விஷுக் கனி கண்டு, புத்தாடை அணிந்து கொண்டு, சத்யா சாப்பிட்டார்கள். நேற்று மதியம் 12 மணிக்குத்தான் சூரியன் மேஷ ராசிக்குள் பிரவேசிக்கிறார். சூர்யா உதயத்தின் பொழுது அவர் மீன ராசியில்தானே இருக்கிறார், அப்போது எப்படி புது வருடம் பிறந்து விட்டது என்று சொல்ல முடியும்? என்பது அவர்களின் வாதமாக இருக்கலாம்.



இதில் ஒரு வேடிக்கை என்னவென்றால் கேரள, தமிழக இரு மாநிலத்தவருமே சூரியன் எந்த ராசியில் இருக்கிறதோ அதைக் கொண்டுதான் மாதங்களை அனுசரித்தாலும் அவர்கள் அந்தந்த ராசியின் பெயரைத்தான் மாதங்களுக்கும் வழங்கி மேஷ மாசம், ரிஷப மாசம் என்று குறிப்பிடுகிறார்கள். ஆனால் இங்கே கொஞ்சம் சொதப்புகிறோம். மாதங்களை அனுசரிப்பது சூரியனை வைத்து, ஆனால் அதற்கான பெயர்களோ சந்திரனை வைத்து. அதாவது அந்த மாதத்தில் எந்த நக்ஷத்திரத்தில் பௌர்ணமி வருகிறதோ அந்த நக்ஷத்திரத்தின் பெயர்தான் மாதங்களுக்கு வழங்கப் பட்டிருக்கிறது. உதாரணமாக சித்திரை மாதத்தில் சித்ரா நக்ஷத்திரத்தில் பௌர்ணமி வரும், வைகாசி மாதத்தில் விசாக நக்ஷத்திரத்தில் பௌர்ணமி வரும்.  கார்த்திகை மாதத்தில் கார்த்திகை நக்ஷத்திரத்தில் பௌர்ணமி வரும்.. அதைக் கொண்டே தமிழ் மாதத்தின் பெயர்கள்...

மீனமோ,மேஷமோ, பாலக்காட்டில் பிறந்து, தஞ்சாவூர் பெண்ணை மணந்து கொண்டிருக்கும் இனிப்பு விரும்பியான என் கணவரை போன்றவர்களுக்கு முதல் நாள் போளி வடையும், மறு நாள்  பலா பழ பாயசமும், அடை பிரதமனும் கிடைக்கும் பட்சத்தில் எந்த நாளில் சித்திரை பிறந்தால் என்ன? எல்லாவற்றையும் கொண்டாடி விட்டு போகலாம்.     

கூடி களிக்கவும், கொண்டாடி மகிழவும் 
சின்ன திரை முன் சிறை பட்டு கிடக்கவும் 
சித்திரையோ, தையோ,
ஆங்கிலமோ, தமிழோ 
அனைத்தயும் வரவேற்போம். 

Tuesday, March 17, 2015

மாமியார் கொடுமை போச்சு, மேலதிகாரி கொடுமை வந்தது டும்! டும்! டும்!

மாமியார் கொடுமை போச்சு, மேலதிகாரி கொடுமை வந்தது 
டும்! டும்! டும்! 



அந்தக் கால சினிமாக்களிலும் கதைகளிலும் பார்த்தால் சாதுவான நல்ல பெண்களை மாமியார்கள் ஆட்டி படைப்பார்கள். கதா நாயகிகளும் அத்தனை கொடுமைகளையும் வாய் திறக்காமல் பொறுத்துக் கொள்வார்கள். ஏன் நிஜத்திலும் அது பெருவாரியாக நடந்தது. இதெற்கெல்லாம்  பெண்களுக்கு படிப்பறிவு இல்லாததுதான் காரணம். பெண்கள் படித்து வேலைக்குச் சென்று பொருளாதார சுதந்திரம் பெற்று விட்டால் இந்தக் கொடுமைகளிலிருந்து விடுதலை பெற்று விடலாம் என்ற எண்ணம் வலுப் பெற்று பெண் கல்வி வலியுறுத்தப் பட்டது. என்றாலும் ஆரம்ப காலங்களில் பெண்களை கல்லூரிக்கு அனுப்ப பெரும்பாலோர் தயங்கினார்கள். அதற்கு அப்போதிருந்த குடும்ப அமைப்பும் ஒரு காரணம். ஒவ்வொரு வீட்டிலும் ஆணும் பெண்ணுமாக ஆறேழு குழந்தைகள் இருந்த பொழுது பெண்ணென்றால் எப்படியும் திருமணமாகி அனுப்பி விட வேண்டும், ஆகவே அவளை எதற்கு செலவழித்து படிக்க வைக்க வேண்டும்? அதற்கு பையனை படிக்க வைத்தால் அவன் சம்பாதித்து கொடுப்பான்  என்ற எண்ணம்தான் மேலோங்கி இருந்தது. ஆகவே பெண் கல்வி என்பது பள்ளியோடு பெரும்பாலும் முடிந்தது. அதைத் தாண்டி கல்லூரிக்கு அனுப்பியவர்களில் பி.ஏ. படித்தால் போதுமே எதற்கு கஷ்டப்பட்டு பி.எஸ்சி படிக்க வேண்டும் என்று நினைத்தவர்கள் உண்டு.  அதே போல பெண்களுக்கு ஏற்ற வேலை என்றால் அது டீச்சர் வேலைதான் என்று ஒரு கருத்தும் இருந்தது. 

அதற்கு அடுத்த கட்டத்தில் பெண்களுக்கான தகுதியான வேலை என்பதில் வங்கி வேலையும் சேர்ந்து கொண்டது. காலை 9 மணிக்கு போய் விட்டு மாலை 6 மணிக்கு வீட்டிற்க்கு வந்து விடலாம். அப்பொழுது வங்கிகளில் வேலைக்கு சேர்ந்த பல பெண்கள் உத்தியோக உயர்வு வேண்டாம் என்று எழுதி கொடுத்து விட்டு க்ளர்க்காகவே இன்னும் வேலை செய்து கொண்டிருக்கிறார்கள். அதற்கு அடுத்த இடத்தில் தொந்தரவில்லாத அரசு உத்தியோகங்கள். தனியார் நிறுவனங்களில் வேலைக்கு சென்ற பெண்கள் சொற்பம்தான். 

காலம் மாறியது, குடும்பங்கள் சிறுத்தன. எட்டும் அறிவினில் ஆணுக்கு பெண் இங்கு சற்றும் இளைப்பில்லை என்று  படிக்க ஆரம்பித்த பெண்கள் இல்லாத துறை இன்று இல்லை. பக்கத்து தெருவிற்கு செல்வதற்கே துணையோடுதான் செல்ல வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்ட பெண்கள் இன்று வெளி நாடுகளுக்கே படிக்கவும் உத்தியோக நிமித்தமாகவும் தனியாக செல்கிறார்கள். போன தலைமுறை பெண்களைப் போல இல்லாமல் தனியார் நிறுவனங்களில் வேலைக்கு செல்லவே இன்றைய பெண்கள் விரும்புகிறார்கள். பொருளாதார சுதந்திரம் அடைந்து விட்டதால் இப்போதெல்லாம் வரதக்ஷணை கொடுமைகளெல்லாம் வெகுவாக குறைந்து விட்டன. 

அப்படியானால் கொடுமையான மாமியார்களெல்லாம் சீரியெல்களில் மட்டும்தான் இருக்கிறார்கள் போலிருக்கிறது என்று அவசரப்பட்டு முடிவுக்கு வந்து விடாதீர்கள். பலர் அலுவலகங்களில் மேலதிகாரிகளாக இருந்து தனக்கு கீழே பணி புரிபவர்களை வதை கொட்டுகிறார்கள். அதே 'மாமியார் உடைத்தால் மண் குடம் மருமகள் உடைத்தால் பொன் குடம்' மனப்பான்மை. அந்தக் கால மாமியார்களைப் போலவே ஜாடையாக குத்தல் பேச்சுக்கள், எள்ளல்கள். நாங்கள் எல்லாம் இப்படியா இருந்தோம் என்னும் அசூயை..அப்பப்பா! ஒரு பெண் அதிகாரியின் கீழ் வேலை பார்க்கும் இன்னொரு பெண் படும் துன்பங்கள் இருக்கிறதே...! 

அந்தக் காலத்தில் சொல்வார்கள், மருமகள் தன் மாமியார் செய்யும் கொடுமை எல்லாவற்றையும் பொறுமையாக சகித்துக் கொள்வாளாம் காரணம் தானும் ஒரு நாள் மாமியார் ஆவோம், தனக்கு வரும் மருமகளை படுத்தி வைக்கலாம் என்ற எண்ணம். இந்தக் காலத்தில் அந்த உணர்வு அலுவலகத்திற்கு ஷிப்ட் ஆகி விட்டது போலிருக்கிறது. 
 
உங்கள் வீட்டில் அல்லது உங்களுக்கு தெரிந்த பணி புரியும் பெண்கள் இருந்தால் கேட்டு பாருங்கள் அவர்கள் யார் கீழே பணி புரிய விரும்புகிறார்கள்? என்று பத்துக்கு எட்டு பேர் ஆண்களுக்குத் தான் ஓட்டளிப்பார்கள். பாக்கி இருவரில் ஒருவர் பேப்பர் போட்டிருப்பார், இன்னொருவர் ஜால்ரவாக இருப்பார்.   


மாமியார்: 

நாங்களெல்லாம் கார்த்தால நாலு மணிக்கு எழுந்தா 
ராத்திரி பத்து மணிக்கு படுக்க போற வரை உட்கார முடியாது. 

புள்ள பெத்த பச்ச உடம்புன்னு கூட பாக்காம எங்க மாமியார் 
வேலை வாங்குவா 

என்னது பொறந்த வீட்டுக்கு போறயா? இங்க ரெண்டு நாளுக்கு தேவையான இட்லி,தோசை மாவு அரைச்சு வைச்சுட்டு, புளி காய்ச்சல் செஞ்சு வைச்சுட்டு, குண்டான், தவலை எல்லாத்திலும் தண்ணி ரொப்பி வைச்சுட்டு போ 



மேலதிகாரி:

உங்களை மாதிரி எடுத்த எடுப்புல ஆபீசர் ஆகிடல, கிளார்க்கா சேர்ந்து, படிப்படியா உயர்ந்து, இன்னிக்கு மேனேஜர் ஆகி இருக்கேன். 18 வருஷ அனுபவம்.

எங்க காலத்தில் மெடெர்னெடி லீவு மூணு மாசம்தான். இப்போ மாதிரி ஆறு மாசம் கிடையாது.

என்னது பர்மீஷனா? பெண்டிங் வொர்க் எல்லாம் முடிச்சுட்டு, பைலிங் வொர்க் இருந்தா அதை முடிச்சுட்டு போங்க.


எப்பொழுதுமே ஒரு பெண்ணுக்கு இன்னொரு பெண்தான் எதிரி. முன்பு வீடுகளில், இப்போது அலுவலகங்களில்.

படங்கள்: நன்றி: ask.com & google

Tuesday, February 10, 2015

ஸ்ரீரங்கம் தை தேர்

ஸ்ரீரங்கம் தை தேர் 

ஏறத்தாழ 28 வருடங்களுக்குப் பிறகு ஸ்ரீரெங்கம் நம்பெருமானின் தை தேர் உற்சவம் பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. பிப்ரவரி 1ம் தேதி ஒரு குடும்ப சுப நிகழ்ச்சிக்காக ஸ்ரீரெங்கம் செல்ல வேண்டி இருந்தது. 2ம் தேதி தை தேர். இந்த வாய்ப்பை நழுவ விட விரும்பாமல் ஒரு நாள் அதிகம் தங்கி தேர் திருவிழாவை கண்டு களித்து(நிஜமாக) விட்டு வந்தேன். உண்மையாக சொல்ல வேண்டுமென்றால் தேருக்கு முதல் நாள் நடக்கும் 'கோண வையாளி' என்னும் சிறப்பு நிகழ்ச்சியையும் பார்க்க விரும்பினேன். முடியவில்லை. அதென்ன 'கோண வையாளி' என்று கேட்பவர்களுக்கு...






















வேங்கடவன் வடிவழகு, காஞ்சி குடை அழகு, ஸ்ரீரெங்கம் நடை அழகு என்பது வழக்கு. வைணவ தலங்களில் முக்கியமான திருப்பதியில் சாலிக்ராம பெருமாளின் திருமேனி அழகு. காஞ்சிபுரத்தில் வரதராஜ பெருமாளுக்கு பிடிக்கப் படும் குடை அழகு. ஸ்ரீரங்கத்திலோ ஸ்ரீ ரங்கநாதரின் நடை அழகு. அந்த நடைக்கு வையாளி என்று பெயர். பெருமாளை எழுந்தருளச் செய்யும் பொழுது, பெருமாளின் விக்ரஹத்தை சுமந்து வரும் ஸ்ரீ பாதாம் தாங்கிகள் தங்கள் கைகளை பிணைத்துக் கொண்டு கால்களை ஒரே போல சற்று அகட்டி வைத்து நடப்பார்கள். தொலைவிலிருந்து பார்க்கும் நமக்கு ரெங்கநாதர் கம்பீரமாக நடந்து வருவது போல மிக அழகாக தோன்றும்.

தேருக்கு முதல் நாள் குதிரை வாகனத்தில் சுவாமி புறப்பாடாகி வருவார். மறுநாள் அதிகாலையில் தேர் கிளம்ப வேண்டும் என்பதால் முதல் நாள் மாலையே அலங்காரம் செய்யப்பட்டு தயார் ஆகி விடும்.  பிரும்மாண்டமாக நிற்கும் அந்த தேரைக் கண்டு பெருமாள் ஏறி வரும் குதிரை மிரண்டு ஓடுவது போல கற்பனை செய்து ஒரு நிகழ்வு நடக்கும். அதுவரை சாதாரணமான வையாளியில் நடந்து வரும் ஸ்ரீபாதம்தாங்கிகள் தேருக்கு எதிரே வரும் பொழுது குதிரை மிரண்டு ஓடுவது போல தாறுமாறாக, தறி கெட்டு ஓடுவது போல கோணல் மாணலாக ஓடுவார்கள். அவர்கள் மட்டுமல்ல, தீவட்டி ஏந்தி வருபவர்களும் அப்படியே கோணல்மானலாக ஓடுவார்கள். அது மட்டுமல்லாமல் அப்படி தறி கெட்டு ஓடிய குதிரை ஒரு ஓரமாக நின்று மூச்சு வாங்கும், அப்பொழுது குதிரையின் தலை மேலும் கீழுமாக அசையும், பெருமாள் பிடித்துக் கொண்டிருக்கும் அந்த குதிரையின் தும்பும் அதற்கேற்றார் போல் அசையும். ஒரு நாடகம் போன்ற மிக சுவாரஸ்யமான இந்த நிகழ்ச்சிதான் கோண(ல்) வையாளி எனப்படும்.



மறு நாள் காலை நான் சென்ற பொழுது பெருமாள் வடக்கு உத்திர வீதியின் இறுதிக்கு  வந்து கொண்டிருந்தார். அந்த மூலை திரும்பி கிழக்கு உத்திர வீதிக்கு வரும் வரை பார்த்து விட்டு வந்தேன். இதில் எனக்கு ஏமாற்றம் அளித்த ஒரு விஷயம்.. அப்போதெல்லாம் அதாவது ஸ்ரீ ரங்கத்தில் அடுக்கு மாடி குடிஇருப்புகள் வராத பொழுது எத்தனை பேர்கள் வந்தார்களோ அதே அளவு மக்கள்தான் ஸ்ரீரங்கத்தின் மக்கள் தொகை பன்மடங்கு பெருகி விட்ட இந்த காலத்திலும் வந்தது. இன்னும் அதிக அளவு மக்கள் வந்திருக்க வேண்டாமா?

முன்பெல்லாம் தேருக்கு மர சக்கரங்கள், அவை மூலை திரும்ப வெகு நேரம் எடுக்கும். ஆனால் திருச்சி BHEL நிறுவனம் அந்த சக்கரங்களில் இரும்பு சட்டம் அடித்து தந்த பிறகு சற்று சீக்கிரம் மூலை திரும்பி விடுகிறது. தேர் மூலை திரும்புவதை பார்த்தால் நம் வாழ்க்கையில் ஒரு திருப்பம் வரும் என்று கூறுவார்கள். ஆனால் எனக்கு மூலை திரும்பும் நிகழ்ச்சி வாழ்க்கையின் ஒரு தத்துவத்தை உணர்த்துவது போல தோன்றியது.

ஓடிக்கொண்டே இருக்கும் தேர், ஒரு மூலைக்கு வரும் பொழுது அதை திருப்புவது கடினமாக இருக்கும். தேர் சக்கரங்களுக்கு கீழே பின்னால் ஏத்தம் கட்டை என்று ஒன்றை சொருகுவார்கள். இப்பொழுது அது சீசா மரம் போல ஆகி விடுகிறது, அதில் ஆண்கள் உட்கார்ந்து அழுத்த, சக்கரம் கொஞ்சம் நகர்ந்து கொடுக்கும், அதே நேரத்தில் முன்னால் வடம் பிடிப்பவர்கள் இழுக்க, சற்று முன்னேறும். இப்படி இம்மி இம்மியாக நகரும் தேர் மூலை திரும்பி விட்டால் பிறகு கட கடவென்று நகர ஆரம்பித்து விடும். ஆனாலும் இந்த நேரத்தில் பின்னாலிருந்து ஏத்தம் கட்டை போடுபவர்களும் சரி, முன்னாலிருந்து வடம் பிடித்து இழுப்பவர்களும் சரி அதை தங்கள் செயலாக சொல்லிக் கொள்வது இல்லை.  மேலே தேரில் உட்கார்ந்திருக்கும் பெருமாளின் விருப்பமாகவே சொல்கிறார்கள்.

எல்லோர் வாழ்க்கையிலும் முன்னாலும் செல்ல முடியாமல், பின்னாலும் செல்ல முடியாமல், ஸ்தம்பித்து நிற்பது போல ஒரு சமயம் வரும். அப்போது ஏத்தம் கட்டை போடுவது போல சிலர் உதவுவார்கள். அதை பயன் படுத்திக் கொண்டு நம்முடைய முயற்சி என்னும் வடத்தை இழுப்பதை விட்டு விடாமல் தொடர்ந்தால் மேலே இருக்கும் இறை அருள் செயல் பட நம் வாழ்வில் திருப்பம் வரும்.

 
         

Wednesday, January 21, 2015

அரபிக் கடலோரம் ஓர் அழகை கண்டேனே - III


அரபிக் கடலோரம் ஓர் அழகை கண்டேனே - III


கேரளாவில் நங்கள் சென்ற மற்றொரு முக்கியமான கோவில் சோட்டாணிக்கரை பகவதி கோவில். கோவில் கீழ் காவு, மேல் காவு என்று இரண்டு பகுதிகளாக இருக்கிறது. இரண்டு அம்மன்களும் சகோதரிகள், கீழ் காவில் உள்ள பகவதி அக்கா என்றும் மேல் காவில் எழுந்தருளி இருப்பது தங்கை என்றும் ஒரு நம்பிக்கை. முதலில் கீழ் காவில் உள்ள பகவதியை தரிசனம் செய்து கொண்டு பிறகு தான் மேல் காவில் உள்ள பகவதியை தரிசனம் செய்ய வேண்டும் என்பது முறை. இரண்டு இடங்களிலும் எழுந்தருளியிருக்கும் அம்மன் அருள் வடிவாக காட்சி அளிக்கிறாள்.   

மேல் காவு பகவதி கோவில்  

மன நிலை பாதிக்கப் பட்டவர்களும், துர்சக்திகளால் பீடிக்கப் பட்டு துயருபவர்களும் இங்கே வந்து பஜனம் இருந்து, அம்மனின் அபிஷேக தீர்த்தத்தை முகத்தில் தெளித்துக் கொண்டு, பிரசாதம் உட்கொண்டு வர, அந்த பாதிப்புகளிலிருந்து அவர்கள் விடுபடுவது இன்றளவும் நடக்கும் ஒரு விஷயம். இரவு எட்டு மணிக்கு கீழ் காவில் அம்மனுக்கு நடக்கும் குருதி பூஜை மிகவும் பிரசித்தி பெற்ற ஒன்று.  முன் காலங்களில் இந்த பூஜை இரவு பன்னிரண்டு மணிக்கு நடக்குமாம். அப்பொழுது விலங்குகள் பலியிடப்பட்டு அந்த ரத்தம் அன்னத்தோடு கலந்து அம்மனுக்கு நைவேதியம் செய்யப்படுமாம். தற்போது மிருகங்களை பலியிடுவது தடை செய்யப் பட்டுவிட்டதால் மஞ்சள் பொடியைத் தான் குருதி பிரசாதம் என்று தருகிறார்கள்.    

குருதி பூஜையில் கலந்து கொள்ளும் நோயாளிகள் தங்கள் கைகளாலும், தலையாலும் பெரிய பெரிய ஆணிகளை கீழ் காவில் உள்ள மரத்தில் அறைவார்களாம் அப்பொழுது அவர்கள் உடலில் இருந்து வெளியேறும் ரத்தத்தின் மூலமாக அவர்கள் உடம்பில் இருக்கும் தீய சக்திகளும் வெளியேறி விடும் என்பது வெறும் நம்பிக்கை மட்டுமல்ல நிஜமும் கூட. அதற்கு சாட்சியாக கீழ் காவில் உள்ள  மரத்தில் அறையப்பட்டிருக்கும் ஆணிகளை இப்பொழுதும் காண முடிகிறது. அங்கு மட்டுமல்லாமல் மேல் காவில் உள்ள கருங்கல் தூண்களிலும் ஆணிகள் அறையப் பட்டிருக்கின்றன. 

கீழ் காவில் ஆணிகள் அறையப் பட்டிருக்கும் மரம்
  
அதைத் தவிர கேரள கோவில்களுக்கே உரிய வெடி வழிபாடும் இங்கு உண்டு. மேலும் அவரவர் வேண்டுதல்களுக்கு ஏற்ப கை, கால், கண், மற்றும் ஆண்.பெண் உருவங்களை கோவில் தேவ ஸ்தானம் வைத்திருக்கிறது. அவற்றை நாம் ஏதோ ஒரு ஒரு குறிப்பிட்ட தொகை செலுத்தி எடுத்துக் கொண்டு கோடி மரத்திற்கு அருகே வைத்து குறிப்பிட அங்கங்களின் நோய் தீர பிரார்த்தித்துக் கொள்ளலாம். 

கீழ் காவில் கோவிலுக்கான பெரிய குளம் உள்ளது(தற்சமயம் அதை செப்பனிட்டுக் கொண்டிருக்கிறார்கள்). அங்கிருந்து படியேறி வந்தவுடன் இடது பக்கம் விநாயகர் மற்றும் ஆஞ்சநேயருக்கு தனி தனி சன்னதிகள். அங்கு தொழுது விட்டு, கொடிமரத்தை வணங்கி, கேரளாவுக்கே உரிய சிறிய வாயில் வழியே கோவிலின் உள்ளே செல்கிறோம். தக தகவென்று ஜொலிக்கும் கருணை பெருகும் அம்பிகையின் வடிவு நம்மை ஆகர்ஷிக்கிறது.  இங்கிருக்கும் அம்மன் காலையில் வெள்ளை ஆடை உடுத்தி சரஸ்வதியாகவும், மதியம் சிவப்பு ஆடை அணிந்து லக்ஷ்மியாகவும், மாலையில் நீல உடையில் துர்க்கையாகவும் காட்சி அளிக்கிறாள். சாதாரனமாக எல்லா தெய்வ உருவங்களும் வலது கையை அபய ஹஸ்தமாக வைத்திருப்பதுதான் வழக்கம் ஆனால் இங்கே வலது கையால் தீய சக்திகளை அடக்குவதால் இடது கையை அபய ஹஸ்தமாக காட்டியபடி எழுந்தருளி இருக்கிறாள். உள் சுற்றில் ஸ்ரீ தர்ம சாஸ்தாவுக்கு தனி சந்நிதி உள்ளது. சற்றே பெரிய வெளி பிரகாரத்தில் இடது புறம் மகாவிஷ்ணுவிற்கு தனி சந்நிதி இருக்கிறது.  

ஏறக்குறைய இருபது ஆண்டுகளுக்கு முன் இந்தக் கோவிலுக்கு சென்ற பொழுது, கொஞ்சம் சிறியதாக, சற்றே அமானுஷ்யமாக இருந்த கோவில் இடைப் பட்ட காலத்தில் நன்கு வளர்ந்து பெரியதாகி விட்டது. 

கேரள யாத்திரை எப்போதுமே மனதிற்கு சந்தோஷம் தரக் கூடியதுதான். காரணம் அழகான இயற்கை காட்சிகள் மட்டுமல்ல(அது கொஞ்சம் மொனாடனஸ் க்ரீன்தான்). அந்த சுத்தம்!ரயில்வே ட்ராக்கை கூட பெருக்குகிறார்கள். கோவில்களில் நெரிசல் இருந்தாலும் கூச்சலும், இரைச்சலும் இல்லை. புதாறு போட் ரெஸ்டாரென்ட் ஐ  பார்த்த பொழுது, இது நம்மூராக இருந்தால் இந்த ரெஸ்டாரென்ட் ஐ சுற்றி பிளாஸ்டிக் குப்பிகளும், தட்டுகளும், மிதக்கும் என்று நினைத்துக் கொண்டேன். பிரயாணங்களில் குறைவாக சாப்பிடுகிறார்கள். அதனாலோ என்னவோ மலைப் பாங்கான பிரதேசமாக இருந்தாலும் பேருந்து பயணங்களில் யாரும் வாந்தி எடுப்பது இல்லை. புகை வண்டியில் கழிப்பறைகளில் துர்நாற்றம் குறைவாக இருக்கிறது. நம்மூரில் நாம் பேருந்து நிலையத்தை நெருங்கி கொண்டிருக்கிறோம் என்பதை அங்கிருந்து வரும் துர்  நாற்றம்  ஒரு கிலோ மீட்டருக்கு முன்னாலேயே தெரிவித்து விடும். கேரளாவில் அந்த கெட்ட  வாடை எங்குமே இல்லை. நம் சேட்டங்களிடம் நாம் கற்றுக் கொள்ள வேண்டிய விஷயங்கள் இருக்கின்றன பாண்டிகளே!