கணம்தோறும் பிறக்கிறேன் 

Monday, July 23, 2018

மேகங்கள் விலகும்


மேகங்கள் விலகும்


பட படவென கரகோஷம் எழ கை கூப்பி, நன்றி கூறி ஸ்வர்னா மேடையிலிருந்து இறங்கினாள்.

“எக்ஸலெண்ட் ஸ்வர்னா! இவ்ளோ நன்னா பண்ணுவனு நான் எதிர் பார்க்கவேயில்லை”. என்று அவள் உறுபினராக இருக்கும் லேடீஸ் க்ளப் தலைவி அணைத்துக் கொண்டார்.

“ஸூப்பர் மேடம்,”

“ரொம்ப நன்னா இருந்தது,” 

என்று பலரும் பாராட்ட, ஸ்வர்னா மகிழ்சியில் திக்கு முக்காடினாள்.
இது நகரின் பெரிய மகளிர் அமைப்பின் ஆண்டு விழா. இவள் சார்ந்திருக்கும் லேடீஸ் க்ளபிற்கு அழைப்பு விடுத்ததோடு, அவர்கள் அறிவித்திருந்த போட்டிகளில் எதில் பங்கேற்கிறார்கள் என்றும் கேட்டிருந்தார்கள்.

அழைப்பிதழை படித்த ப்ரசிடெண்ட் கலா சந்தர்,” நாம் எதில் கலந்து கொள்ளலாம்?” என்று கேட்க,

“க்ரூப் சாங்க், டான்ஸ், ட்ராமா, மிமிக்ரி” என்று ஆளாளுக்கு குரல் கொடுத்தார்கள்.

“க்ரூப் சாங்க் நிறைய பேர் வருவாங்க, ஸ்டில், கன்சிடர் பண்ணலாம். டான்ஸ் வேண்டாம், ட்ராமா.. சுமதி நீதானே சொன்ன? இன்சார்ஜ் எடுத்துகறயா?

“ஐயையோ, ட்ராமாவும் போடலாம்னு சொன்னேன்…” ஐடியா கொடுத்த சுமதி ஒரேயடியாக பல்டி அடித்தாள்.

மிமிக்ரி… குட் ஐடியா.. ஆனால் யாருக்கு மிமிக்ரி பண்ண வரும்?
ஸ்வர்னா தயங்கி கை தூக்கினாள்,

வாவ்! ஸ்வர்னா நீ மிமிக்ரி பண்ணுவியா? தெரியவே தெரியாதே… எங்களுக்கு ஏதாவது செஞ்சு காட்டினா, உன் பெயரையே கொடுத்துடுவேன். கலா சந்தர் கேட்க, ஸ்வர்னா தனக்கு தெரிந்த கிருபானந்த வாரியார், மேஜர் சுந்தர்ராஜன், ஹரிதாஸ் கிரி என்று செய்து காண்பித்தாள்.

இவ்வளவு டாலண்ட் வைத்துக் கொண்டு இத்தனை நாள் ஏன் வாயை திறக்கவே இல்லை? ரைட். உன்னோட பெயரையே கொடுத்து விடுகிறேன். அருணா சாயிராம் சேர்த்துக் கொள். ஒழுங்கா ப்ராக்டீஸ் பண்ணு, சொதப்பிடக் கூடாது.

வீட்டிற்கு வந்து கணவனிடம் தான் மிமிக்ரி செய்யப் போவதாக கூறியதும்,”மிமிக்ரியா? நீயா? அப்படினா என்னனு தெரியுமா?” என்று அவன் கேட்டதும், அவளின் உற்சாக பலூன் பட்டென்று உடைந்தது.
கல்லூரியில் படிக்கும் பொழுது அவள் மேடையை கலக்கி இருக்கிறாள் என்பது அவள் கணவனுக்கு தெரிந்திருக்க நியாயம் இல்லையே.

எப்படியோ போட்டியில் கலந்து கொண்டு,இதோ முதல் பரிசும் பெற்றாகி விட்டது. மிக மிக சந்தோஷமாக இருந்தது. எத்தனை வருடங்களுக்குப் பிறகு ஒரு பாராட்டு?

சமையல், வீட்டு வேலை, தூக்கம் என்ற ஒரே வட்டத்துக்குள் சுற்றி சுற்றி வருவதற்கு ஒரு மாற்று. அதிலும் பாராட்டு என்பதே மறந்து விடுமோ என்றுகூட தோன்றும்.

“என்ன இன்னிக்கு சமையல் உப்பு சப்பில்லாமல் இருக்கு?” என்று குறை சொல்லத் தெரியும் நாக்கிற்கு, நன்றாக சமைத்திருக்கும் நாட்களில் ஏன் பாராட்ட மனம் வருவதில்லை?

வாசலில் கொஞ்சம் நேரம் அதிகம் செலவழித்து கோலம் போட்டால், ஃபளாட்டில் சின்னதாக கோலம் போட்டால் போதாதா? தனி வீடா தட்டு கெட்டு போறது?” என்பார் மாமியார்.

கணவனோ, “கோலம் அழகா இருக்கே..? யார் போட்டது?” என்பான். வீட்டில் இருப்பது மொத்தம் இரண்டு பெண்கள்தான். அதில் அம்மாவால் குனிந்து கோலமெல்லாம் போட முடியாது, மனைவிதானே போட்டிருக்க வேண்டும் என்பது கூட புரியாதா? அல்லது புரிந்து கொள்ள விருப்பமில்லையா?

இதையெல்லாம் அம்மாவிடம் சொன்னால், “உங்க அப்பா என்னை பாராட்டியிருக்காரா?” என்பாள். ஏக்கங்களை முழுங்கியபடி வாழக்கற்றாள். பன்னிரெண்டு வருட ஏக்கங்களை சிதறடித்து விட்டது இந்த பரிசு.

இவள் கொண்டு வந்த பரிசுக் கோப்பையை பார்த்த மாமியார், “ கீதாவும் இப்படித்தான் காலேஜ் படிக்கும் பொழுது போட்டினு போனா பரிசு வாங்காம வர மாட்டா” என்றார்.

தபாலில் பட்டப்படிப்பை முடித்த நாத்தனார் எப்படி கல்லூரியில் பரிசு வாங்கியிருக்க முடியும்? என்ற கேள்வி எழும்பினாலும், என் மகளை விட நீ உசத்தி கிடையாது என்னும் எண்ணமே உள்ளிருப்பது என்பது புரிய மௌனமானாள்.

சென்டர் டேபிலில் வைக்கப்பட்டிருந்த ட்ராஃபியை பார்த்த மகன், “ஹை! ட்ராஃப்பி! யாரோடது?” என்றான்.

கணவனோ, “அட! நெஜமாவே வின் பண்ணிட்டயா? க்ரேட்! மொத்தம் எவ்வளவு பார்டிசிபெண்ட்ஸ்? நீ மட்டும்தானா?” என்று சிரித்துக் கொண்டே கேட்டதும், இவளுக்கு கோபம் வந்தது.

“பாராட்ட வேண்டாம், கேலி பண்ணாமல் இருக்கலாம்..”

“பாராட்டிடால் போச்சு, ரோஹித், கிவ் ஹெர் அ பிக் ஹாண்ட்”

தகப்பனும், மகனும் கை தட்டினார்கள். டி.வி. ரிமோட்டை கையில் எடுத்துக் கொண்டு சோஃபாவில் உட்கார்ந்தவன், அவள் கொண்டு வந்து தந்த காஃபியை உறிஞ்சியபடி, “ராத்திரி சாப்பிட என்ன?” என்றான்.

"தோசை"

“வெறும் தோசை மட்டும்தானா? ஸ்வீட் எதுவும் கிடையாதா?”

“ஸ்வீட் எதுக்கு?”

“என்னம்மா இப்படி கேட்டுட்ட? ட்ராஃபி வின் பண்ணியிருக்க? செலிபிரேட் பண்ண வேண்டாமா?”

“நானே வின் பண்ணுவேன், அதுக்கு, நானே ஸ்வீட் பண்ணி கொண்டாடனுமா? தேவையில்லை.”

“சே! சே! கண்டிப்பா செலிபிரேட் பண்ரோம்.. ஆனா, இன்னிக்கு இல்லை, நாளைக்கு, வெளில போய் சாப்பிடலாம்..”

“அப்பா, பிசா ஹட்பா..”

“பிசா ஹட் வேண்டாம், லிட்டில் இட்டாலி போகலாம்..”

“வாவ்! சூப்பர்!” இவளுக்கான கொண்டாட்டத்தை இவளுடைய விருப்பத்தை பற்றி கவலைப் படாமல் அவர்களே முடிவெடுத்தார்கள்.

மாலையில் கோவிலுக்குச் சென்றிருந்த பொழுது அலைபேசி அழைத்தது. அவளுடைய கல்லூரித் தோழி ரேவதி. பின்னர் அழைப்பதாக குறுந் செய்தி அனுப்பி விட்டு வீட்டுக்கு வந்ததும் அழைத்தாள். 

“நாளைக்கு என் வீட்டில் காலேஜ் ஃப்ரண்ட்ஸ்‌ ரீ யூனியன் இருக்கு. நீயும் ஜாயின் பண்ணிக்கொள், லெவென் டூ த்ரீ வந்துவிடு” என்றாள்.

“என்ன திடீர்னு?”

“ஸந்தியா யூ.எஸ்ஸிலிருந்து வந்திருக்கா, கிரிஜாவும் சிங்கபூரிலிருந்து வரா.. எல்லாரையும் மீட் பண்ண முடியுமானு கேட்டாங்க..அதுதான்..”

“ஓகே..” எல்லோரையும் பார்த்து எத்தனை நாட்களாகி விட்டன? கல்லூரி படிப்பை முடித்து திருமணம் ஆகும்வரை எல்லோருடனும் தொடர்பு இருந்தது. அவரவர் திருமணம் ஆகிச் சென்றதும் விட்டுப்போன தொடர்பு, இப்போது முகநூல் மூலம் புதுபிக்கப்பட்டிருக்கிறது.

ரேவதியின் வீட்டிற்கு டூ வீலரில் சென்றால் அரை மணி நேரத்தில் சென்று விடலாம். காலை சாப்பாட்டை முடித்துக்கொண்டு சென்றால் மாலை நாலு மணிக்குள் திரும்பி விடலாம்.

- தொடரும் 

11 comments:

  1. தொடர்கதையா? தொடர்கிறேன். உணர்வுபூர்வமாக இருக்கும் போலவே...

    ReplyDelete
  2. ஆஹா... நல்ல ஆரம்பம்.

    முடிவு வரப் போகிறது எனப் பார்த்தால் தொடர்கதை... தொடர்கிறேன்.

    ReplyDelete
  3. ஆவ்வ்வ் என்னாது பானுமதி அக்காவின் கதையில தொடரா? நம்ப முடியவில்லை.. எப்பவும் சோட் அண்ட் சுவீட்டாத்தானே எழுதுவீங்க.. சூப்பர் கதை..

    ஸ்வர்ணா கணவருக்கும் பல்ப் கொடுத்துவிட்டு, நண்பியைப் பார்க்கச் சென்றிட்டாவோ?:) ஆனா நீங்க இதுக்கு ஏதும் டுவிஸ்ட் வைப்பீங்க அதனால நான் முடிவு பற்றி வாயே திறக்க மாட்டேன் ஜாமீஈஈஈஈஈஈஈ:)))

    ReplyDelete
    Replies
    1. கணவருக்கும் மகனுக்கும் என வந்திருக்கோணும் மிஸ்சாகிட்டுது..

      Delete
  4. ஆரம்பம் நல்லா இருக்கு ..ஆனா தொடரும் போட்டதால் மேகத்தை பற்றிய கருத்துக்கள் மொத்தமா சொல்றேன்

    ReplyDelete
  5. மேகங்கள் விலகும் என எதிர்பார்க்கிறேன். இப்படிப் பாராட்டுக்களைப் புகுந்த வீட்டில் எதிர்பார்க்கவும் முடியாது என்பது உண்மை. அதிலும் பெண் ஒருத்தி இருந்தாலே மாமியார்கள் தங்கள் பெண்களைத் தான் தூக்கி வைச்சுப்பாங்க! :) இது ஜகஜம்! :))))) நல்ல சரளமான நடை. தொய்வே இல்லாமல் போகிறது. சம்பாஷணைகளையும் இடை இடையே சேர்த்துக் கொண்டு சம்பவங்களையும் எளிதாகச் சொல்லிப் போகிறீர்கள். தொடர்ந்து எழுதினால் நல்லா ஜொலிக்கலாம்.

    ReplyDelete
  6. நிதர்சனமான தொடக்கம்...

    பாராட்டவும் ஒரு மனசு வேணும் ..பலருக்கு அது தான் இருக்க மாடேங்குது...

    ReplyDelete
  7. மனம் விட்டுப் பாராட்டுவது என்பது வெற்றிப் பரிசுகள் பலவற்றுக்கும் மேலானது...

    அதிலும் கணவனின் பாராட்டு என்பது ஈடு இணையற்றது....

    தொடரும்., ஆவலுடன்..

    ReplyDelete
  8. தொடரின் ஆரம்பமே அசத்தலாக இருக்கிறது. வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  9. தொடர் கதை அருமை.
    பாராட்டுக்கு ஏங்கும் உள்ளம்.
    தோழிகள் சந்திப்பு மனதை மகிழவைக்கும்.

    ReplyDelete
  10. பானுக்கா பின்னிட்டீங்க...செமையா இருக்கு. பல வீடுகளிலும் இப்படித்தானோ/நே??!! செமையா எழுதறீங்கக்கா...டக் டக்குனு போகுது....பொதுவாகவே பாராட்டுதல் என்பது அதுவும் பெண்களுக்கு மனம்திறந்த பாராட்டுகள் என்பதெல்லாம் அபூர்வம்.

    உணர்வு பூர்வமான கதை என்று தோன்றுகிறது. இதோ அடுத்ததும் வாசித்துவிட்டு கருத்து இன்னும் போடுறேன்....

    கீதா

    ReplyDelete