கணம்தோறும் பிறக்கிறேன் 

Monday, November 26, 2018

வழிந்ததே அசடு வழிந்ததே


வழிந்ததே அசடு வழிந்ததே

தமிழகத்தின் டெல்டா மாவட்டங்களை கஜா புயல் தாக்கிய நேரம், என்னை ஜலதோஷ புயல் தாக்கியது. மூக்கிலிருந்து விடாமல் ஜலதாரை, உடம்பு வலி, தலை வலி, லேசான ஜுரம். dola 650 போட்டுக்கொண்டு, கார்த்திகைக்கான நெய் அப்பம்,பொரி,அடை வகையறாக்களை செய்து விட்டேன். கோலம் போடுவது, விளக்குகளுக்கு திரி போட்டு, எண்ணெய் விட்டு, சந்தன ம், குங்குமம் இடுவது போன்ற சில்லறை வேலைகளை செய்வதுதான் கஷ்டமாக இருந்தது.

கார்த்திகை அன்று இரவு என் மகனோடு  என் சினேகிதியின் மகளின் திருமணத்தில் கலந்து கொள்ள சென்னைக்கு செல்வதாக இருந்தது. உடல் நிலை காரணமாக என் பயணத்தை ரத்து செய்து விட்டேன். ஊருக்குச் செல்லும் முன் என் மகன் ஆவி பிடிக்கச் சொல்லி, அதற்கான கருவியையும் எடுத்து கொடுத்து விட்டு சென்றான். 

அதை எப்படி பயன் படுத்துவது என்று  அட்டைப் பெட்டியில் போட்டிருந்தது. அந்த கருவியில் குறிப்பிடப்பட்டிருக்கும் அளவு தண்ணீர் ஊற்றவும் என்றிருந்தது. பெரிய குவளை போன்றதில் எவ்வளவு தண்ணீர் ஊற்ற வேண்டும் என்பதற்கான அடையாளம் எதுவும் இல்லை. எனவே நான் அரை டம்ளர் தண்ணீர் ஊற்றி, மிஷினை ஆன் செய்தேன். தண்ணீர் கொதிப்பது போல ஓசை வந்ததேயொழிய, ஆவி வரவில்லை. பக்கவாட்டிலிருந்து நீர் வழிந்தது. தண்ணீர் அதிகம் விட்டு விட்டோம் போலிருக்கிறது என்று கொஞ்சம் தண்ணீரை குறைத்தேன். அப்படியும் ஆவி வரவேயில்லை. சரிதான் நாம் அடுப்பிலேயே வெந்நீர் போட்டுக் க்கொள்ளலாம் என்று அதை ஓரம் கட்டிவிட்டு, அடுப்பில் வெந்நீர் போட்டு ஆவி பிடித்தேன். 

அடுத்த நாள் காலை என்னை அழைத்த என் மருமகள்," நேற்று தண்ணீரை எங்கு ஊற்றினீர்கள்? என்றாள், நான் சொன்னதும் சிரித்துக் கொண்டே, "அங்கு ஊற்றக் கூடாது, அந்த பெரிய கப்பை கழற்றி அடியில் ஊற்ற வேண்டும், அதில் அளவு குறிப்பிட பட்டிருக்கிறது பாருங்கள்" என்றாள். 

இருமுவது போல பாவலா காட்டி, முகத்தை துடைத்துக் கொண்டேன். வேறு வழி.

இருமலால் தூங்க முடியாமல் அவஸ்தைப்பட்ட இரவு, யூ ட்யூபில் பார்த்த எழுத்தாளர் சாரு நிவேதிதாவின் பேட்டியை இணைத்திருக்கிறேன். சாருநிவேதிதாவின் கதைகளை நான் படித்ததில்லை. கட்டுரைகளை படித்திருக்கிறேன். தன்னுடைய நூல் வெளியீடுகளை ஒரு விழா போல செய்பவர்.  துணிச்சலான எண்ணங்களுக்கு சொந்தக்காரர். கேட்டு விட்டு சொல்லுங்கள். 

அதற்கு முன் ஒரு கேள்வி. சம கால எழுத்தாளர்களின் எழுத்துக்களை எத்தனை பேர் படிக்கிறோம்?  சுஜாதா, பாலகுமாரனுக்குப் பிறகு வந்த எழுத்தாளர்களில் எத்தனை பேரின் படைப்புகளை படித்திருக்கின்றீர்கள்?  ஆம் என்றால் நீங்கள் படித்தவற்றில் சிறப்பானதை எனக்கு சொல்லுங்கள். இல்லை என்றால் ஏன்? தயவு செய்து தேவி பாலா, இந்திரா சௌந்திரராஜன் என்றெல்லாம் கூறி விடாதீர்கள். 







18 comments:

  1. ஜலதோஷம் கொஞ்சம் கஷ்டம் தான்.

    சாரு நிவேதிதா படித்ததில்லை. நீண்ட காணொளி - விடுமுறை நாளில் தான் பார்க்க வேண்டும்.

    ReplyDelete
    Replies
    1. கண்டிப்பாக பாருங்கள்.

      Delete
  2. மருந்து எடுத்துக் கொண்டால்
    ஒரு வாரத்திலும்
    மருந்து எடுத்துக் கொள்ளாவிட்டால்
    ஏழு நாளிலும் ஜலதோஷம் போய்விடும் என்பார்கள்...

    நம்மிடம் அதெல்லாம் பலிக்காது...

    பத்து நாளாவது புரட்டி எடுத்து விடும்...

    ReplyDelete
    Replies
    1. //பத்து நாளாவது புரட்டி எடுத்து விடும்// இங்கேயும் அதேதான்.

      Delete
  3. நமக்கு மாசக்கணக்கில் சிரமப்பட்ட பின்னர் குணம் அடையும்! அது இஷ்டம் அதெல்லாம். மருத்துவரே தலை சுற்றிக் கொண்டு யோசனையில் ஆழ்ந்து விடமாட்டாரா? எதுக்கும் அசையாதே! இஃகி, இஃகி!

    ReplyDelete
  4. சாரு நிவேதிதாவை நான் அதிகம் படிச்சதில்லை. ஒரு முறை என்னோட அக்காரவடிசல் செய்முறையைச் சாரு நிவேதிதா குமுதத்தில் என்னோட பெயரைப் போட்டுப் பகிர்ந்திருந்தார். அதை ஏடிஎம்மும், எங்க உறவினர் சிலரும் சொன்னாங்க! அம்புட்டுத்தான் அவருக்கும் எனக்கும் உள்ள எழுத்தாளர்-வாசகர் தொடர்பு! எஸ்.ராமகிருஷ்ணனின் பயணக்கட்டுரைகள் விகடனில் வந்தப்போப் படிச்சேன். ஆனால் இப்போ விகடன் படிச்சே சுமார் 20 வருஷம் இருக்குமோ? மற்ற வாராந்தரிகள் ஏதும் படிக்கலை. கல்கியில் பா.ராகவன் ஒரு சில நாவல்கள் எழுதினப்போப் படிச்சிருக்கேன். ஆனாலும் பெரிசா நினைவில் இல்லை. அவரின் பேலியோ தொடர் தான் நன்கு ரசிச்சுப் படிச்சேன். மற்றபடி சமீபகால எழுத்தாளர்கள் எனில் யாரையும் தெரியாது என்றே சொல்லணும். வண்ணதாசன், வண்ணநிலவன், நாஞ்சில் நாடன், நீல.பத்மனாபன் ஆகியோரின் எழுத்துக்கள் கொஞ்சம் பிடிக்கும். ஜெயமோகனைச் சில கதைகள், நாவல்கள் படிக்கையிலேயே பிடிக்காமல் போய்விட்டது! பொதுவாக இப்போ ரிவிஷன் செய்வதைஅத் தவிர்த்துப் புதுசா எதுவும் படிக்கலைனே சொல்லணும். காலச்சக்கரம் நரசிம்மாவை இதில் சேர்ப்பீங்களா இல்லையானு தெரியலை! பெரியவர் கி.ராஜநாராயணன் அவர்களின் எழுத்தும் பிடிக்கும். இயல்பான கதை ஓட்டம். நாமும் கூடச் சேர்ந்து அந்தக் கிராமங்களில் வாழ்வது போன்ற எண்ணம் மனதில் வரும்.

    ReplyDelete
    Replies
    1. //வண்ணதாசன், வண்ணநிலவன், நாஞ்சில் நாடன், நீல.பத்மனாபன் ஆகியோரின் எழுத்துக்கள் கொஞ்சம் பிடிக்கும்.// எனக்கு நிறையவே பிடிக்கும். பிரபஞ்சனை விட்டு விட்டீர்களே? ஆனால் இவர்கள் எல்லோரும் சுஜாதா, பாலகுமாரன் காலத்தவர்கள்தான்.
      //பெரியவர் கி.ராஜநாராயணன் அவர்களின் எழுத்தும் பிடிக்கும்.// அவர் லெஜெண்ட்!
      நீங்கள் சொல்வது போல பா.ராகவன், காலசக்கரம் நரசிம்மா இவர்களின் எழுத்துக்களை படித்திருக்கிறேன், பெரிதாக நினைவில் இல்லை.
      இப்போது எழுதிக் கொண்டிருப்ப்வர்களில் சங்கரநாராயணன், இரா.முருகன் இவர்களோடு எங்கள் ப்ளாகிலும் எழுதும் ரிஷபன்ஜி என்று வெகு சொற்பமானவர்களைத்தான் குறிப்பிட முடிகிறது. அதிலும் பெண் எழுத்தாளர்கள் ஒருவர் கூட இல்லை பாருங்கள். ஹூம்..!

      நீங்கள் ஒருவராவது என் கேள்விக்கு விடை தந்தீர்களே...மிக்க நன்றி.

      Delete
    2. பிரபஞ்சன் நினைவில் இருந்தார். ரிஷபனும் கூட! ஆனால் ரிஷபன் எழுதிய குறுநாவல்கள் நிறையப் படிச்சிருக்கேன். பல மனதில் இன்னமும் நிற்கின்றன. அவற்றைக் குறித்துக் "கல்கி" பத்திரிகைக்கு விமரிசனம் கூட அனுப்பினேன். மங்கையர் மலரிலும் வந்திருக்கு. நாவல்கள் எனப் பார்க்கையில் எதுவும் படிச்சதாக நினைவில் இல்லை.

      பிரபஞ்சனை எடுத்துக் கொண்டால் அவ்வளவு ரசிக்கவில்லை. யதார்த்தம் என்னும் போர்வையில் எல்லை மீறி இருப்பாரோ எனத் தோன்றும். இப்போதைய பெண் எழுத்தாளர்கள் என எடுத்துக் கொண்டால் நாமெல்லாம் தான்! :)))))))

      பா.ராகவன் ராமேஸ்வரத்தை அடிப்படையாக வைத்து எழுதிய ஓர் நாவல் நன்றாக இருந்தது.சுமார் 20 வருஷம் முன்னே இருக்கும்.

      Delete
    3. அப்புறம் அந்தப் பேட்டி வீடியோ, சாரு நிவேதிதாவோடது, பற்றிய விமரிசனம் சரியா யாரும் சொல்லலை. ஆகவே நான் போட்டே பார்க்கவில்லை. தேசத்துக்கு விரோதமான கருத்துகள் சொல்லப்பட்டிருப்பதாகச் சொல்கின்றனர். மேலும் நீண்ட வீடியோ!

      Delete
    4. // இப்போதைய பெண் எழுத்தாளர்கள் என எடுத்துக் கொண்டால் நாமெல்லாம் தான்! :)))))))// APPADI PODUNGA ARUVAALAI..!!!

      Delete
    5. தேச விரோத கருத்துக்கள் எதுவும் இல்லையே? கமலையும், ரஜினியையும் ஒரு பிடி
      பிடிதிருக்கிரார். தே.வி.க. ஒரு வேளை இதன் தொடர்சியில் இருக்கலாம்.

      Delete
  5. Replies
    1. ஜலதோஷ சிரமத்திலிருந்து விடுபட்டு விட்டேன். இருமல் இன்னும் ஓயவில்லை. நீங்கள் ஏதோ விபத்தில் சிக்கியதாக படித்தேன். பெரிதாக பாதிப்பு ஏதும் இல்லையே? கவனமாக இருக்கவும். நன்றி.

      Delete
  6. This comment has been removed by the author.

    ReplyDelete
  7. காணொளி யாரும் பார்க்கவில்லையோ?

    ReplyDelete
  8. I really like the post.It is informative post. I shared post in Vehicle towing company. It is best training provide. Thanks for posting.

    ReplyDelete