கணம்தோறும் பிறக்கிறேன் 

Tuesday, November 5, 2019

கோலங்கள்

கோலங்கள்



வீட்டு வாசலிலும், பூஜை அறையிலும் தினசரி கோலம் போடுவது நம் மரபு. மண் அடுப்புகளில் சமைத்துத்துக் கொண்டிருந்த பொழுது, தினசரி அடுப்பை பசு மாட்டின் சாணி போட்டு மெழுகி விட்டு அதில் கோலம் போட்டு வைப்பார்கள்,அதை பார்ப்பதற்கே லக்ஷ்மிகரமாக இருக்கும்.  எங்கள் வீட்டில் மண் அடுப்பு போய், காஸ் அடுப்பு வந்த பிறகும், அந்த பழக்கம் தொடர்ந்து கொண்டிருந்தது. இப்பொழுது பொங்கலுக்கு முதல் நாள் மட்டுமே அடுப்பில் கோலம் போடுகிறோம்.

அதே போல தீபாவளிக்கு முதல் நாள் வெந்நீர் தவலையை தேய்த்து, அதில் சந்திரன், சூரியன் வரையும் பழக்கமும் இருந்தது. வெந்நீர் தவலையை எலக்ட்ரிக் ஹீட்டர்கள் பிடித்துக் கொண்டுவிட்ட இந்த காலத்தில் சந்திரனாவது, சூரியனாவது?

கோலங்கள் வெறும் அழகுக்காக மட்டும் போடப்படுவதில்லை. அதில் ஆன்மீகமும் மறைந்திருக்கிறது. ஒரு வார்த்தையை ஒரு குறிப்பிட்ட மீட்டரில் உச்சரிக்கும் பொழுது, அது சக்தி வாய்ந்த மந்திரமாக மாறுவது போல, சாதாரண கோடுகளும், வளைவுகளும் திட்டமாக வரையப்படும் பொழுது சக்தி பெற்றவைகளாக மாறுகின்றன.



நாம் பிள்ளையார் கோலம் என்று கூறும் மேலும் கீழுமாக இரண்டு முக்கோணங்கள் அமைந்த கோலம் முருகனை குறிப்பது. இதில் மேலிருந்து கீழே இறங்கும் முக்கோணம் மண்ணுலக இச்சைகளையும், கீழிருந்து மேலே செல்லும் முக்கோணம் விண்ணுலகு ஏகும் விருப்பத்தையும் குறிக்கின்றது. மனித வாழ்க்கை இந்த இரண்டும் இணைந்தது என்பதே இதன் உட்பொருள் என்று சான்றோர்கள் கூறுகிறார்கள்.

அதே போல் ஹ்ருதய கமலம் கோலமும், ஐஸ்வர்ய கோலமும் அம்பிகையின் வடிவமாகவே கருதப்படுகின்றன. அதனால் அவைகளை வாசலில் போடக்கூடாது என்பார்கள்.



மஹாலக்ஷ்மியின் கருணைக்கு பாத்திரமாவது எப்படி என்பதை விளக்க வரும் ஒரு கதை இப்படி தொடங்கும்; தன்னுடைய அருளை யாருக்காவது வழங்க வேண்டும் என்று விரும்பிய லட்சுமி தேவி ஒரு முறை பூமிக்கு இறங்கி ஒரு கிராமத்திற்குள் நுழைகிறாள். அங்கு ஒரு வீட்டில் காலை வேளையில் வாசல் திண்ணையில் தலையை விரித்து போட்டுக் கொண்டு பேன் பார்த்துக் கொண்டிருந்தார்களாம் அந்த காட்சியில் அருவருத்து அந்த வீட்டிற்குள் நுழையாமல் தாண்டிச் சென்று விடுகிறாள். அடுத்த வீட்டில் ஒருவருக்கொருவர் சண்டையிட்டுக் கொண்டிருந்தனராம். அதுவும் அமங்கலமான சொற்களால் ஒருவரை ஒருவர் திட்டிக்கொண்டும், சபித்துக் கொண்டும் இருந்ததை கேட்ட திருமகள் அந்த இடத்தை வெகு விரைவாக கடந்து சென்று விடுகிறாள். இன்னொரு வீட்டிலோ சூரியன் உதித்த பிறகும் எழுந்திருந்து வாசல் தெளித்து கோலம் கூட போடாமல் தூங்கிக் கொண்டிருந்தனராம். அதற்கடுத்த வீட்டில் புழுத்த சாணத்தால் வாசல் தெளிப்பதை பார்த்து அங்கிருந்தும் நகர்ந்து விடுகிறாள். கடைசியாக ஒரு வீட்டில் ஏழ்மை நிலையில் இருந்தாலும் அதிகாலையில் எழுந்து, வாசல் தெளித்து அழகாக கோலமிட்டு, வீட்டிற்குள் பூஜை அறையிலும் கோலமிட்டு, விளக்கேற்றி வைக்கப்பட்டிருந்ததாம். அதனால் கவரப்பட்ட ஸ்ரீதேவி,"இந்த இடம்தான் நான் வாசம் செய்ய தோதான இடம்" என்று அந்த வீட்டிற்குள் பிரவேசித்து அங்கு வசிக்க தொடங்கியதும் அந்த குடும்பத்தினரின் வறுமை நீங்கி செல்வ செழிப்பு ஏற்பட்டது என்று அந்த கதை முடியும்.  இதிலிருந்து முக்கிய நிகழ்வுகளுக்கு மட்டுமல்லாமல் தினசரி கோலமிடுவதும் நமக்கு எத்தனை முக்கியத்துவம் வாய்ந்தது என்று தெரிந்து கொள்கிறோம்.

துளசி வழிபாட்டில் சொல்லப்படும் ஸ்லோகத்தில்,
'அன்புடனே நல்ல அருந்துளசி கொண்டு வந்து
முற்றத்தில் தான் வளர்த்து, முத்துப் போல் கோலமிட்டு..' என்று வரும். நம்முடைய வழிபாட்டில் கோலதிற்கு முக்கிய பங்கு உண்டு. கார்த்திகை மாதம் கோவில்களை சுத்தம் செய்து கோலமிடுவது ஒரு மிகச்சிறந்த புண்ணிய காரியமாகவே கருதப்படுகிறது.

பகவதி சேவையின்பொழுது போடப்படும் கோலம்(பத்மம்) 
கேரளீயர்களுக்கு பகவதி சேவை என்னும் அம்பிகை வழிபாடு
முக்கியமானது. அந்த பூஜையில் முக்கியமானது பத்மம் எனப்படும் கோலம் வரைவது. அதை பூஜாரிதான் வரைவார். கலர் பொடிகள் கொண்டு மிக அழகாக காட்சி தரும் அந்த கோலத்தை வரையவே இரண்டு மணிநேரங்கள் பிடிக்கும். கோலத்தின் நடுவில் பெரிய குத்து விளக்கை ஏற்றி வைத்து அதில் அம்பிகையை ஆவாஹனம் செய்து பூஜிப்பார்கள்.

மஸ்கட்டில் இருக்கும் கிருஷ்ணர் கோவிலில் விசேஷ தினங்களில் கலர்
பொடி கொண்டு போடப்படும் ரங்கோலி தவிர, பழங்கள், காய்கறிகள், உலர் பழங்கள், நவதானியங்கள் என்று ஒவ்வொரு நாளும் விதம் விதமாக பெரிய பெரிய கோலங்களை போடுவார்கள். அதை விரைவாகவும் போட்டு விடுவார்கள் என்பது சிறப்பு. 

சில பண்டிகைகளுக்கென்று தனி கோலங்களும் இருக்கின்றன. சுமங்கலி பிரார்த்தனை, சமாராதனை போன்றவைகளுக்கு ஒவ்வொரு குடும்பத்திலும் ஒரு குறிப்பிட்ட கோலம்தான் போட வேண்டும் என்ற வழக்கம் கூட இருக்கும்.  மதுரையைச் சேர்ந்த பிராமணர்கள்  திருமணங்களில் மணமகன், மணமகள் அமர வேண்டிய இடத்தில்  போட வேண்டிய மணை கோலம் போடும்பொழுது தனித்தனியாக இரண்டு கோலங்கள் போடாமல், இரண்டும் ஒன்றையொன்று ஒட்டிக்கொண்டிருப்பதை போல போடுவார்கள்.

அப்பொழுதெல்லாம் ஸ்ரீரங்கத்தில் மார்கழி மாதம் என்றால் அதிகாலை மூன்றரை மணிக்கு எழுந்து போட்டி போட்டுக் கொண்டு தெருவை அடைத்து பெரிய பெரிய கோலங்களை போடுவார்கள். எங்கள் அம்மா மிக அழகாக கோலம் போடுவார். நான் சிறுமியாக இருந்த பொழுது எங்கள் வீட்டிற்கு எதிர் வீட்டில் இருந்த மாமி, "நீதான் அழகாக கோலம் போடுகிறாய். இரண்டு வீட்டிற்கும் பொதுவாக நீயே கோலம் போட்டு விடு" என்று என் அம்மவிற்கு இடம் ஒழித்து கொடுத்து விடுவார்.  

குனிந்து கோலம் போடுவது நல்ல உடற்பயிற்சி மட்டுமல்ல, மூளைக்கும் நல்ல பயிற்சி. கோடுகளை எப்படி வளைப்பது, எங்கே இணைப்பது என்பதையெல்லாம் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டாமா? இதைப் போன்ற செயல்களை செய்து கொண்டிருந்ததால்தான் முன்பு டிமென்ஷியா போன்றவை அதிகம் பேர்களை தாக்கவில்லையோ என்னவோ.

இப்போதெல்லாம் திருமணம் போன்ற விசேஷங்களில் கேட்டரிங்காரர்களே கோலமும் போட்டு விடுகிறார்கள். சமீபத்தில் நான் கலந்து கொண்ட ஒரு திருமணத்தில், "ஒரு கோலம் போட வேண்டும்" என்று சாஸ்திரிகள் கூறியதும்  மேடைக்கு விரைந்தது 50+ வயதுக்காரர்கள்தான். இளைய தலைமுறையினர் யாரும் முன்வரவில்லை என்றாலும் கோலம் போடும் கலை அறவே ஒழிந்து போய் விடவில்லை என்பது ஒரு ஆறுதல். அது பழையபடி செழிக்க வேண்டும் என்பது ஆசை.  அத்தனைக்கும் ஆசைப்படுகிறோமோ இல்லையோ, இத்தனைக்கு ஆசைப் படலாமே.






கோலங்களுக்கு கூகுளுக்கு நன்றி.



31 comments:

  1. வணக்கம் சகோதரி

    அழகான விளக்கங்களுடன் மிக அழகான கோலங்கள். உண்மைதான்..!சாஸ்திர சம்பிரதாயங்களுக்கும், கோலங்களுக்கும் நிறைய சம்பந்தம் உண்டு. ஆனால் கல்யாண மண்டபங்களில் இப்போது மனைக் கோலம் அவர்களே போட்டு விடுகிறார்கள்.

    அந்த காலத்தில் எங்கள் அம்மா விஷேச தினங்களுக்கு அதுவும் தீபாவளி பொங்கலுக்கு இரண்டு மணிநேரமாக வீட்டு வாசலை அடைத்தபடி கோலம் போடுவார்கள். அதெல்லாம் மிகவும் சுவாரஸ்யமாகன நாட்கள். நானும் அம்மாவிடம் கற்றதுதான் நிறைய கோலங்கள் போடுவேன். அதன் பின் (எனக்கு) வீடுகள் சுருங்கியதும் வாசல் விஸ்தார குறைவில், கோலங்களும் சுருங்கி விட்டன. ஆனாலும் கடந்த வருடம் வரை வீட்டு வாசலில் கோலங்களை விடாது போட்டு வந்தேன். நிறைய கோலங்கள் போட்டு வைத்த நோட்டுக்கள் வீடுகள் மாற்றும் போது கண்ணிலே காணாதே போய் விட்டன. அழகான பதிவு. மிகவும் அருமையாக பாரம்பரிய முறைகளை விளக்கிச் சொல்லிய விதம் ரசித்தேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.

    ReplyDelete
    Replies
    1. விரிவான பின்னூட்டத்திற்கு நன்றி.

      Delete
  2. இப்போவும் எரிவாயு அடுப்பில் கோலம் போட்டுத் தான் சமைப்பேன். :))))) எனக்கப்புறமா எப்படியோ தெரியாது.

    ReplyDelete
  3. //மதுரையைச் சேர்ந்த பிராமணர்கள் திருமணங்களில் மணமகன், மணமகள் அமர வேண்டிய இடத்தில் போட வேண்டிய மணை கோலம் போடும்பொழுது தனித்தனியாக இரண்டு கோலங்கள் போடாமல், இரண்டும் ஒன்றையொன்று ஒட்டிக்கொண்டிருப்பதை போல போடுவார்கள்.// என் கல்யாணத்தில் இந்தக் கோலத்தினால் பெரியதொரு வாக்குவாதமே எழுந்தது. கோலம் கூடப் போடத்தெரியலைனு என் புக்ககத்தினரும்/முக்கியமாய் மாமியாரும் சொல்ல, கல்யாணங்களில் இப்படித்தான் போடணும் என என் பெரியம்மா/பாட்டி ஆகியோரும் சொல்லப் பின்னர் புரோகிதர்கள் இதை ஒரு பெரிய விஷயமா எடுத்துக்க வேண்டாம்னு எடுத்துச் சொல்லிச் சமாதானம் செய்து வைத்தார்கள். எங்க பக்கம் ஒரே கோலம் அச்சானியம் என்பார்கள்.

    ReplyDelete
    Replies
    1. எங்கள் உறவில் ஒருவர் மதுரையை பிறந்த வீடாக கொண்டவர். அவருடைய மகனின் நிச்சயதார்தத்தின் பொழுது, மதுரை வழக்கப்படி கோலம் போட்டார். மற்றவர்களுக்கு அது புதிதாக இருந்தது. பெரிதாக குறை சொல்ல விட்டாலும், "அவள் வீட்டு வழக்கப்படி எப்படி கோலம் போடலாம் என்று முணுமுணுத்தார்கள்.

      Delete
    2. கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் இதுதான் இதுதான் இந்த மாதிரியான விஷயங்கள் தான் பிடிக்காத ஒன்று அக்காஸ்! எந்த வழக்கத்தில் போட்டால் என்ன? எந்த வழக்கம் பின்பற்றினால் என்ன? இது ஒவ்வொருவர் வழக்கம் அது எப்படி இருந்தால் என்ன? நல்லது நடக்கட்டும் என்று விடாமல் நல்லது நடக்கும் சமயம் இப்படி ஒரு நெகட்டிவ் சண்டைகள், வம்புகள், பொருமல்கள்...கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்...

      கீதா

      Delete
  4. https://sivamgss.blogspot.com/2011/05/blog-post_05.html// கோலத்தினால் சண்டை

    ReplyDelete
    Replies
    1. Sorry, the page you were looking for in this blog does not exist. என்று வருகிறதே:((

      Delete
    2. https://sivamgss.blogspot.com/2011/05/blog-post_05.html

      It is going. you have to delete // which comes after html. :D I have tried now. No problem for me. Now try the link given above.

      Delete
  5. அழகான கோலங்களுடன் அருமையான பதிவு...

    இன்றைய நவநாகரிக யுவதிகளுக்கு கோலங்களின் அருமை தெரியுமா!.. - என்பது சந்தேகந்தான்..

    எங்கள் வீட்டில் தனிட்த்துவமான அரிசி மாவு தான் ...
    எவ்வித ரசாயண வண்ணப் பொடியையும் உபயோகப்படுத்துவது கிடையாது....

    கோலம் என்பதே அழகு தான்..

    மகிழ்ச்சி.. நன்றி...

    ReplyDelete
    Replies
    1. //இன்றைய நவநாகரிக யுவதிகளுக்கு கோலங்களின் அருமை தெரியுமா!.. - என்பது சந்தேகந்தான்..// வெகு சிலருக்கு தெரிந்திருக்கிறது. வருகைக்கு நன்றி.

      Delete
    2. /எங்கள் வீட்டில் தனிட்த்துவமான அரிசி மாவு தான் ...
      எவ்வித ரசாயண வண்ணப் பொடியையும் உபயோகப்படுத்துவது கிடையாது....// கேட்பதற்கு சந்தோஷமாக இருக்கிறது. 

      Delete
    3. மாவு மிஷினில் அரிசி மாவைக் கோலத்துக்கு என்று சொல்லியே அரைத்து/திரித்து வாங்குவேன்.

      Delete
    4. நானும் அரிசி மாவுதான். அதில் கோலப்பொடி கலப்பதில்லை.

      வாசலில் போடுவதற்கு மாமியார் வீட்டில் கோலப்பொடியுடன் அரிசி மாவு கலந்து வைத்திருப்பாங்க இழை நன்றாக வருவதற்கு என்று.

      கீதா

      Delete
  6. கோலம் - திருவரங்கத்தில் இப்போதும் இருக்கிறது! முன் அளவுக்கு இல்லை என்றாலும் இன்னும் தொடர்ந்து சிறுமிகள் கூட அழகழகாகக் கோலம் போகிறார்கள். தேர் சமயத்தில் ஓடி ஓடி கோலம் போடுவதுண்டு.

    கோலம் பற்றிய உங்கள் பகிர்வு நன்று. பாராட்டுகள்.

    ReplyDelete
    Replies
    1. கேட்பதற்கு சந்தோஷமாக இருக்கிறது. வருகைக்கு நன்றி.

      Delete
  7. என்ன பாதிக் கதைதான் சொல்லியிருக்கீங்க?

    ....அந்த வீட்டில் வறுமை நீங்கி செல்வச் செழிப்பு ஏற்பட்டது. பணம் வந்தபிறகு இன்னமும் குடிசைக்குள் இருக்கணுமா என நினைத்து பக்கத்து நகரத்தில் அடுக்குமாடிக் குடியிருப்பில் வீடு வாங்கிக்கொண்டு அங்கே சென்றுவிட்டனர். செல்வம் பெருக ஆரம்பித்ததும் முன்புபோல் வீட்டை மெழுகுவதோ இல்லை கோலம் போடுவதோ, மற்ற குடியிருப்புவாசிகளைப்கோல் மறந்துவிட்டது.....

    ReplyDelete
  8. நீங்கள் ஏன் இரு வாரங்களுக்கு ஒருமுறை கோலங்கள் பதிவு போடக்கூடாது? இல்லை வேறு தளங்கில் உண்டா?

    ReplyDelete
  9. கோலங்களும் விளக்கமும் அருமை.

    ///ஒரு கோலம் போட வேண்டும்" என்று சாஸ்திரிகள் கூறியதும் மேடைக்கு விரைந்தது 50+ வயதுக்காரர்கள்தான்.///
    ஐ ஒப்ஜக்‌ஷன் யுவர் ஆனர்:)..... நம்மவர்களில் ஒரு வழக்கம் இருக்கிறது, சிறியவர்களை தலைஎடுக்க விடவே மாட்டார்கள், தலை இருக்க வாலாடக்கூடாது என்பதில் குறியாக இருப்பினம், விட்டுக்குடுத்தால் நிட்சயம் பல இளையவர்கள் முன்வந்திருப்பார்கள்.

    ReplyDelete
    Replies
    1. நீங்கள் சொல்வதை அப்படியே ஏற்றுக் கொள்கிறேன். நானும் கோலம் போட முன்செல்லவில்லை, ஏனென்றால் நானும் இளைய தலைமுறைதானே?;)

      Delete
  10. பானுக்கா கோலம் பதிவு சூப்பர். எனது இளமைப் பருவத்தை ரொம்பவே நினைவு படுத்திவிட்டது. அம்மாவின் அம்மா, அப்பாவின் அம்மா இருவருமே கோயிலில் கோலம் போடுபவர்கள். என்ன அம்மாவின் அம்மா வீட்டில் பாட்டி என்னை தினமும் காலை 4 மணிக்கு எழுப்பிவிடுவார். படிப்பு எல்லாம் அப்புறம் முதலில் திருவாழிமார்பனுக்குக் கோலம் போட்டுவிட்டுத்தான் மறு வேலை. புரட்டாசி சனி, வைகுண்ட ஏகாதசி, திருவிழா சமயங்களில் கோயில் முழுவதும் மாக்கோலம் போட வேண்டும்.

    புகுந்த வீட்டிற்கு வந்த பிறகு எல்லா விஷேஷங்களுக்கும் கோலம் போடும் ட்யூட்டி எனக்கு. அங்கிருந்தால் தினமும் கோலம் போடும் ட்யூட்டியும். அது போல சாமி ரூமிலும்.

    நானும் இப்போதும் இரவு கேஸ் அடுப்பை துடைத்துவிட்டு சின்னதாகவேனும் ஒரு புள்ளி வைத்து ரவுன்ட் போடுகிறேன். மேடையிலும் சின்னதாக அடுப்பின் அடியில். சில சமயங்களில் விட்டுப் போவதும் உண்டு.

    கீதா

    ReplyDelete
    Replies
    1. நீங்கள் ஒரு சகலகலாவல்லி என்பதில் சந்தேகமில்லை. 

      Delete
  11. இப்போதும் சிறியவர்கள் கோலம் போடுகிறார்கள்.

    முன் காலத்தில் இந்தக் கோலம் போடுவதே ஓர் அடையாளமாக இருந்தது. நான் கல்லூரியில் படித்த போது என் சீனியர் ஒருவர் தமிழ்க்கலாச்சாரம் கோலங்கள் என்று ஒரு எம்ஃபில் ஆராய்ச்சிக்கட்டுரை செய்தார். அப்போது நான் கோலத்தில் யுனிவேர்சிட்டி முதல் பரிசி வாங்கியிருந்த நேரம். என்னிடம் வந்து வித விதமான கோலங்கள் வரைந்து தரச் சொன்னார். கல்யாணக் கோலங்கள், (ஒவ்வொரு சமூகத்திற்குமான மனைக்கோலம்) விசேஷக் கோலங்கள், புள்ளிக் கோலங்கள், என்று பல வகையில்.

    கோலம் கல்யாணக் கோலம் என்றால் அதுவும் செம்மண் தீட்டி வரையப்பட்டிருந்தால் அந்த வீட்டில் நல்லது நடக்கிறது என்று வழிப்போக்கர்கள் திண்ணையில் படுத்துறங்கி தண்ணீர் அருந்தி என்று செல்வார்கள். அது போலவே தான் வாழை மரமும். மாவிலை, பந்தலும் எல்லாம்.

    கோலம் இல்லை என்றால் அல்லது வாசலில் என்ன மரம்/இலை/பந்தல் என்பதை வைத்து அந்த வீட்டில் துக்கம் என்பதையும் தெரிந்து கொண்டு வழிப்போக்கர்கள் தவிர்ப்பதும் உண்டு.

    கீதா

    ReplyDelete
    Replies
    1. விரிவான மீள் வருகைக்கு நன்றி. 

      Delete
  12. கேரளத்தில் நீங்கள் சொல்லியிருப்பது போல் போடுவதுண்டு. மற்றபடி கேரளத்தில் வீட்டில் இப்பழக்கம் இல்லை. பிராமணர்கள் தவிர. எனவே கோலம் போட்டிருந்தால் கண்டிப்பாக அவர்கள் தமிழ்நாட்டவர்கள் அல்லது பிராமணர்கள் என்று தெரிந்து கொள்ளலாம்.

    துளசிதரன்

    ReplyDelete
    Replies
    1. அத்தம் பத்து என்று ஓணத்தை ஒட்டி பாத்து நாட்கள் பூக்கோலம் போடுவார்களே? தினசரி கோலம் கிடையாது என்பது எனக்கு புதிய தகவல். வருகைக்கு நன்றி. 

      Delete
  13. கோலம் பகிர்வு மிக அருமை.விளக்கமாக சொன்னீர்கள்.
    நெல்லைத்தமிழன், அடுக்குமாடி குடியிருப்பு கோலம் என்று சின்ன சின்ன அழகான கோலங்கள் உண்டே! அங்கும் அழகிய பூஜை அறை அதில் போடுகிறார்கள். மார்கழி மாதம் தெருவடைச்சு போடும் கோலம் வேண்டுமென்றால் இல்லாமல் இருக்கலாம்.

    ReplyDelete
  14. நன்றி கோமதி அக்கா. அபார்ட்மெண்ட்களில் பெரும்பாலும் ஸ்டிக்கர் கோலம்தான். 

    ReplyDelete