கணம்தோறும் பிறக்கிறேன் 

Wednesday, June 29, 2022

மனதில் நின்ற வரிகள், வசனங்கள்.அ

மனதில் நின்ற வரிகள், வசனங்கள்.

சமீபத்தில் மத்யமரில் Post of the week வாங்கிய என்னுடைய பதிவு இது. சிலவற்றை எழுதும் பொழுதே மனதிற்கு ஒரு திருப்தி வரும். அப்படிப்பட்ட பதிவு என்பதால் இங்கும் பகிர்ந்து கொள்கிறேன். 

லௌகீக வாழ்க்கையில் (material life) வெற்றி பெற்றவர்களைத்தான் திறமைசாலிகள் என்று கருதுகிறோம். அப்படி வெற்றிக் கனியை எட்டிப் பிடிக்க முடியாதவர்களை அசடு என்று சொல்லத் தயங்குவதில்லை. ஆனால் அசோகமித்திரன் ஒரு கதையில் (கதை பெயர் மறந்து விட்டது) என்ன சொல்கிறார் தெரியுமா? 

"கெட்டிக்காரத்தனம், அசட்டுத்தனம் என்றெல்லாம் கிடையவே கிடையாது. நாம் செய்யும் ஒரு காரியம் வெற்றி அடைந்து விட்டால் அதுதான் கெட்டிக்காரத்தனம், புத்திசாலித்தனம். அந்த காரியம் தோல்வி அடைந்து விட்டால் அதுவே அசட்டுத்தனம், முட்டாள்தனம் ஆகி விடும். How true! 

இதே வெற்றி, தோல்வி பற்றி ஜெயகாந்தனுடைய கருத்தையும் மறக்க முடியாது. 'ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள்' படத்தில் வரும் "நடிகை பார்க்கும் நாடகம் இதில் ரசிகர் எல்லாம் பாத்திரம்..." என்ற பாடலில்

"நன்மை என்பதும், தீமை என்பதும்

நாமணிந்திடும் வேடமே இதில்

வெல்வதென்னடி, தோல்வி என்னடி

மேடையில் ஒர் விளையாடலில் நாம்

மேடையில் விளையாடலில்" 

என்னும் வரிகளை மறக்கவே

முடியாது. 

ஜெயிக்கறதாவது? தோற்கறதாவது? All crap, just live the life என்று அனாயாசமாக கூறிவிட்டு சென்றுவிட்டார்.

லா.ச.ரா. அவருடைய பாற்கடல் அல்லது சிந்தாநதி இந்த இரண்டு நூல்களுள் ஏதோ ஒன்றில் 

"சிறு வயதில் கஷ்டப்படுவது பூண்டு வைத்த பாத்திரம் போல, எத்தனை தேய்த்து அலம்பினாலும் அந்த வாடை போகாது" என்று எழுதியிருந்ததையும். 

அவருடைய 'தரிசனம்' சிறுகதையில் கன்யாகுமரியை  

'அபிஷேக சுந்தரியாய் அவளின் அந்த சகிக்க முடியாத சௌந்தர்யம்!" என்று வர்ணித்ததையும்... அடடா! எப்படி மறக்க முடியும்?

சுஜாதாவின் 'சிவந்த கைகள்' கதையில் 

"பொய் சொல்லுவதற்கு அசோக்கின் இரண்டு விதிகள்

பொய் சொல்லாதே

பொய் சொன்னால் அதை உண்மையாக்கிவிடு"

எனக்கு பொய் சொல்ல வேண்டும் என்ற நிர்ப்பந்தம் ஏற்படும் பொழுதெல்லாம் இதை நினைத்துக் கொள்வேன். பொய் சொல்ல மாட்டேன்.

தி.ஜானகிராமன் மோகமுள் கதையை 

"இந்த பிரபஞ்சத்திற்கு எதுவுமே புதிதில்லை" 

என்னும் அட்சர லட்சம் பெறும் வார்த்தைகளோடு முடித்திருந்ததை மறக்க முடியுமா?

அவரே 'அன்பே ஆரமுதே' நாவலில் 

'இல்லறத் துறவு எவ்வளவு புனிதமோ அவ்வளவு புனிதம் துறவில்லறமும்'

என்று எழுதியிருந்ததும் மனதில் பச்சக்கென்று ஒட்டிக் கொண்ட வரிகள்.


சமீபத்தில் படித்த எஸ்.ராமகிருஷ்ணனின் நாவலில் காது கேட்காத ஒருவன்தான் கதாநாயகன். அதில் அவன் ,"குளிக்கும் பொழுது தண்ணீர் கீழே விழும் சத்தம் கேட்காது" என்று சொல்வதாக வரும் வரிகள் என்னை அதிர வைத்தது. இப்படி ஒரு விஷயம் இருக்கிறதா? என்ற எண்ணம் நெஞ்சை பிசைந்தது.

எவ்வளவு முயற்சி செய்தும் நாம் விரும்பும் சில விஷயங்கள் நடக்காத பொழுது 'முத்து' படத்தில் சூப்பர் ஸ்டார் சொல்லும்

"கிடைக்கிறது கிடைக்காம இருக்காது, கிடைக்காம இருக்கறது கிடைக்காது" என்னும் வசனம்தான் ஆறுதல்.

மற்றொரு மறக்க முடியாத வசனம் விருமாண்டி படத்தில் கமல் கூறும்,

"பெரும்பாலும் நாம் சந்தோஷமா இருக்கும் பொழுது நமக்கு அது தெரிவதில்லை " 

எவ்வளவு அர்த்தமுள்ள வசனம்! 

கண்ணதாசனின் இந்த வரிகளை கூறாமல் இந்த கட்டுரை நிறைவு பெறாது.

பிறப்பில் வருவது யாதெனக் கேட்டேன்
பிறந்த பார் என இறைவன் பணித்தான்
இறப்பில் வருவது யாதெனக் கேட்டேன்
இறந்து பார் என இறைவன் பணித்தான்
மனையாள் சுகமெனில் யாதெனக் கேட்டேன்
மணந்து பார் என இறைவன் பணித்தான்
அனுபவித்தே தான் அறிவது வாழ்வெனில்
ஆண்டவனே நீ ஏன் எனக் கேட்டேன்
படைத்தவன் சற்றே அருகினில் வந்து
அனுபவம் என்பதே நான்தான் என்றான் 

23 comments:

  1. சுவாரஸ்யமான பதிவு.  முன்பு நான் படித்துக் கொண்டு வருவதில் கவர்ந்த வரிகளை குறித்து வைத்துக் கொண்டே வரும் வழக்கம் இருந்தது.  

    ReplyDelete
    Replies
    1. பானுமதிJuly 1, 2022 at 7:50 AM

      எல்லாம் மனதில் குறித்துக் கொள்வதுதான்.

      Delete
  2. அசோகமித்திரன் படம் மட்டும் இருக்கிறது!  அவர் வரிகள் எதையும் காணோம்.  ஜெயகாந்தனும், கண்ணதாசனும் நீங்கள் பகிர்ந்திருப்பதில் டாப்.

    ReplyDelete
    Replies
    1. "கெட்டிக்காரத்தனம், அசட்டுத்தனம் என்றெல்லாம் கிடையவே கிடையாது. நாம் செய்யும் ஒரு காரியம் வெற்றி அடைந்து விட்டால் அதுதான் கெட்டிக்காரத்தனம், புத்திசாலித்தனம். அந்த காரியம் தோல்வி அடைந்து விட்டால் அதுவே அசட்டுத்தனம், முட்டாள்தனம் ஆகி விடும். How true! //

      இருக்கிறது ஸ்ரீராம் இதுதான் அசோகமித்திரன் அவர்களின் வரிகள்

      கீதா

      Delete
    2. இருக்கே ஶ்ரீராம். கீழே உடனேயே வந்து விடுகின்றதே!

      Delete
    3. "கெட்டிக்காரத்தனம், அசட்டுத்தனம் என்றெல்லாம் கிடையவே கிடையாது. நாம் செய்யும் ஒரு காரியம் வெற்றி அடைந்து விட்டால் அதுதான் கெட்டிக்காரத்தனம், புத்திசாலித்தனம். அந்த காரியம் தோல்வி அடைந்து விட்டால் அதுவே அசட்டுத்தனம், முட்டாள்தனம் ஆகி விடும். How true!

      Delete
    4. பானுமதிJuly 1, 2022 at 7:53 AM

      இருவரும் அவரவர் துறைகளில் ஜித்தன் கள் அல்லவா? நடிகை பார்க்கும் நாடகம் பாடலை நேயர் விருப்பமாக கேட்ட ஞாபகம்.

      Delete
  3. Replies
    1. பானுமதிJuly 1, 2022 at 7:53 AM

      நன்றி

      Delete
  4. பானுக்கா நேற்று உங்கள் பதிவு வந்ததும் போட்டேனே கருத்து இப்போது காணவில்லையே

    கீதா

    ReplyDelete
  5. நல்ல அருமையான பதிவு பானுக்கா. எல்லாம் நினைவு வைத்திருக்கீங்க. நானும் வாசிக்கும் போது அட! என்று மனதில் அல்லது நோட் செய்து வைப்பேன். ஆனால் பின்னர் அதை எங்கு மேற்கோள் காட்டிக் குறிப்பிட நினைத்தேனோ அது சில சமயங்களில் நினைவு வராது இப்போது வேர்ட் டாக்குமென்டில் போட்டு வைத்துக் கொள்கிறேன்.

    கீதா

    ReplyDelete
    Replies
    1. பானுமதிJuly 1, 2022 at 7:55 AM

      நன்றி கீதா

      Delete
  6. அசோகமித்திரன் அவர்களின் அழகான வரிகளை நான் அடிக்கடி சொல்வது. வாழ்க்கையில் வெற்றி தோல்வி என்பதே கிடையாது. ஒரு சில நேரங்களில் ஒரு சில விஷயங்களுக்கு அது அளவீடாக, மதிப்பாய்வாகப் (கல்வி சம்பந்தப்பட்ட விஷயங்கள் வேலை சம்பந்தப்பட்ட விஷயங்கள்) பயன்படுத்த மனிதர்கள் நாம் உருவாக்கியதெ அல்லாமல், கிடையாது என்று சொல்வது வழக்கம்.

    கீதா

    ReplyDelete
    Replies
    1. பானுமதிJuly 1, 2022 at 7:55 AM

      உண்மைதான்.

      Delete
  7. அதே போன்று ஜெயகாந்தன் அவர்களின் வரிகளும் செம

    கீதா

    ReplyDelete
  8. முகநூலிலும் படிச்சேன். ஆனால் கமல், ரஜினி பற்றிப் படிச்சதாக நினைவில் வரலை.

    ReplyDelete
    Replies
    1. எஸ்.ரா. எழுதியதை மும், கண்ணதாசன் கவிதையையும் மத்யமர் பதிவில் சேர்க்க மறந்து விட்டேன். இங்குதான் சேர்த்திருந்தேன். கமல், ரஜினி வசனம் அங்கும் கறிப்பிட்டிருந்தேனே.

      Delete
  9. Replies
    1. பானுமதிJuly 1, 2022 at 7:58 AM

      நன்றி டி.டி.

      Delete
  10. வாசிப்பது எதுவானாலும் ஊன்றி வாசித்திருக்கிறீர்கள். இப்படி பலரது எழுத்துக்களை  சட்டென்று உருவி ஒன்றாக கோர்த்து கட்டுரை எழுதியது (அதுவும் படங்களுடன்) வியப்பே!!!! பாராட்டுக்கள், மற்றும் வாழ்த்துக்கள். 
    Jayakumar

    ReplyDelete
  11. பானுமதி வெங்கடேஸ்வரன்July 1, 2022 at 5:18 PM

    நன்றி சார் __/\__ __/\__

    ReplyDelete
  12. நீங்கள் குறித்துள்ள பொன்மொழிகளை எத்தனை முறை வேண்டுமானாலும் படித்துக்கொண்டே இருக்கலாம். ஆனால் இவைகளை இளைஞர்களிடம் கொண்டுபோகவேண்டும். அது தான் முக்கியம்.

    ReplyDelete
  13. நன்றிங்க அம்மா.

    ReplyDelete