கணம்தோறும் பிறக்கிறேன் 

Monday, December 26, 2022

ஆன்லைன் அலப்பறைகள்!

 ஆன்லைன் அலப்பறைகள்!


எழுபதுகளின் துவக்கத்தில்தான் திருச்சியில் முதன்முதலாக சிந்தாமணி சூபர் மார்கெட் வந்தது. அதுவரை செட்டியார் அல்லது நாடார் கடைகளில் மளிகை சாமாங்களை வாங்கிய மக்களுக்கு பிளாஸ்டிக் கவர்களில் பேக் செய்யபட்ட துவரம் பருப்பு, கடலைப் பருப்பு எப்படி இருக்குமோ? என்ற சந்தேகம் இருந்தது.  

அப்போதெல்லம், ஏன் எண்பதுகளில் கூட வருடாந்திர சாமான் என்று ஒரு வருடதிற்கு தேவையான பருப்பு, புளி, மிளகாய் வற்றல், போன்றவற்றை மொத்தமாக பங்குனி, அல்லது சித்திரை மாதங்களில் வாங்கி வெய்யிலில் காய வைத்து, பரணில் பெரிய பானைகளில் வைத்து அவ்வப்பொழுது எடுத்து பயன் படுத்துவார்கள். வீடுகள் சிறியதாக ஆக பரண் என்னும் சங்கதி வழக்கொழிந்து போனது. இப்போதைய லாஃப்டுகள் பரணுக்கு அருகே வர முடியாது.      

அதன் பிறகு மாதந்திர சாமான்கள் வாங்கும் வழக்கம் வந்த பொழுது, நாடார் கடைகளில் பேப்பரை கூம்பு வடிவத்தில் செய்து அதில் மடித்து தரும் து.பருப்பு, க.பருப்பு, ப.பருப்புகளை கையால் தொட்டுப் பார்த்து வாங்குவதில் கிடைக்கும் திருப்தி, பிளாஸ்டிக் பாக்கெட்டுகளில் சீல் செய்யப்பட்டு விற்கப்படும் பண்டங்களை வாங்குவதில் இல்லை என்று அப்போது நினைத்தார்கள். நாளடைவில் நாடார் கடைகளிலும் நெகிழி பைகளே உபயோகத்திற்கு வந்தன.

அதைப் போலத்தான் ஆன் லைன் வர்தகங்கள். 55+ல் இருக்கிறவர்கள் வேண்டுமானால் ஆன் லைன் வியாபாரத்தில் விருப்பம் காட்டாமல் இருக்கலாம். இளைய தலைமுறை பெரும்பாலும் ஆன் லைன் வர்த்தகத்தைத்தான் விரும்புகிறார்கள். அதுவும் கொரோனா உபயத்தால் ஆன்லைனுக்கு அடிமையாகி விட்டார்கள் என்றே சொல்லலாம். எங்கள் உறவில் ஒருவர் அமெரிக்காவில் வசிக்கிறார். சமீபத்தில் தன் மகனுக்கு  திருமணத்தை அங்கேயே நடத்தினார். கல்யாண ஜவுளி, நகை எல்லாவற்றையும் ஆன் லைனிலேயே முடித்து விட்டாராம்.   

எங்கள் வீட்டைப் பொருத்தவரை இப்போதெல்லம் எல்லாம் ஆன் லைனில்தான். போக்குவரத்து நெரிசலில் அவதிப்பட வேண்டாம். இரண்டு மூன்று சைட்டுகளில் விலையை ஒப்பிட்டு பார்த்து ஆர்டர் செய்கிறார்கள். பொருள்கள் தரமாக இருக்கின்றன. காய்கறிகள் கூட நன்றாகத்தான் இருக்கின்றன. மேலும் காய்கறிகளை கொடுத்து விட்டு,” நன்றாக இருக்கிறதா? என்று செக் பண்ணிக் கொள்ளுங்கள், உங்களுக்கு திருப்தியாக இல்லையென்றால் வேறு மாற்றிக் கொண்டுவந்து தருகிறோம்” என்பதோடு அவர்களின் கைபேசி எண்ணை தந்து விட்டு, “தயவு செய்து இந்த எண்ணிற்கு போன் பண்ணுங்கள், காய்கறிகள் சரியில்லையென்று அலுவலகத்திற்கு போன் பண்ணி விடாதீர்கள், எங்கள் வேலைக்கு பிரச்சனையாகிவிடும்” என்று ஒருவர் கூறியபொழுது கஷ்டமாக இருந்தது.

மகன் வரவழைத்த ஜம்போ சைரஸ் சாம்பிராணி கூம்பும் புகை படர்ந்திருக்கும் எங்கள் வீடும் 

சமீபத்தில் என் மகன் சாம்பிராணி கூம்பு ஆன் லைனில் ஆர்டர் பண்ணிய பொழுது ஜம்போ சைஸ் என்பதை கவனிக்கவில்லை. அட்டைப் பெட்டியை திறந்து பார்த்தால் ஒரு சிறிய பூ தொட்டி போல சாம்பிராணி கூம்பு! அதை ஏற்றி வைத்தால் வீடு ஏதோ பூத் பங்களா செட் போட்டது போல ஆகி விடுகிறது. வெளி நாடுகளாக இருந்தால் fire alarm அலறியிருக்கும். இப்படி சில பாதகங்கள்.  

புது வருடம் பிறக்கப் போகிறது. எனக்கு டெய்லி ஷீட் காலண்டர் அவசியம் வேண்டும். மகன், மகள் குடும்பத்திற்கு காலண்டர் அனாவசியம். செல்ஃபோன் இருக்க காலண்டர் எதற்கு?” என்பார்கள். எனக்கு காலை எழுந்து, பல் தேய்த்தவுடன் அந்த தேதியை கிழிக்க வேண்டும். அதில் வெறும் தேதி மட்டுமா இருக்கிறது? நட்சதிரம், திதி, போன்றவைகளையும் தெரிந்து கொள்ளலாமே?

அன்று இந்திராநகர் செல்ல வேண்டியிருந்தது. அதற்கு அருகில் இருக்கும் திப்பஸந்திராவில் தமிழ் காலண்டர்கள் கிடைக்கும் என்பதால் அங்கு சென்று காலண்டர் வாங்கி வரலாம் என்றேன். மகனும்,மருமகளும் சிரித்து விட்டு, “ஆன்லைனிலேயே ஆர்டர் பண்ணலாம்” என்று கூறியதோடு, மருமகள் உடனே ப்ரௌஸ் பண்ணி என்னிடம் காட்டி,”உங்களுக்கு எந்த மாதிரி வேண்டும்?” என்று கேட்டு, உடனே ஆர்டர் செய்தாள். இரண்டு நாட்களுக்குள் வந்து விட்டது.

ஆன்லைனில் வந்த காலண்டர்.

அப்பா அம்மா தவிர பாக்கி அத்தனையையும் ஆன் லைனில் வாங்கிவிடலாம். என்றாள் மறுமகள். அதையும்தான் வாங்கிவிட முடிகிறதே.. சர்ரகேட் மதர்!!


14 comments:

  1. ஹாஹாஹா அக்கா சரியா சொன்னீங்க....சர்ரகேட் மதர் அதுவும் கூட இப்போது ஆன்லைனில் யாரேனும் இருக்காங்களான்னு தேட முடிகிறது. (சர்ரகேட் மதர் என்றதும் இதை ஒட்டி ஒரு கதை வேறு நான் எழுதி...ஹிஹிஹிஹி...இப்போது நினைவுக்கு வருகிறது!! நான் எழுதும், எழுதி பாதியில் வைத்திருக்கும் கதைகளின் ஜனனம் எப்போது என்று தெரியவில்லை!!!)

    ஆன்லைனில் நம் வீட்டில் ஒரு சிலது மட்டுமே வாங்கும் வழக்கம் அதுவும் இப்போது சமீபத்தில். கடைகளில் இல்லை என்றால் மட்டுமே...அல்லது கடைகளில் உள்ளதை விட விலை குறைவாக, ஆஃபர் என்று இருந்தால் மட்டுமே...அப்படி வாங்குபவை நன்றாகவே இருக்கின்றன.

    எனக்குக் கடைகளுக்குப் போய்ப் பார்த்து பார்த்து வாங்குவது ரொம்பப் பிடிக்கும். அது ஒரு அவுட்டிங்க் போல, மனதிற்கு கொஞ்சம் ரிலாக்ஸ்டாக இருக்கும் என்பதால்...பெரும்பாலும் கடைகளில்தான் வாங்குவதாகிறது

    கீதா

    ReplyDelete
  2. முடித்த லைன் சூப்பர்!!!

    கீதா

    ReplyDelete
  3. அக்கா உங்களுக்கு டக் டக்கென்று எழுத வருவதற்குப் பாராட்டுகள்!!! எனக்கு அது ஒரு சேலஞ்ச்சாகி விட்டது சமீபகாலமாக. மனதிற்குள் அருவியாய்க் கொட்டும் ஆனால் எழுத்தில் முடியவில்லை.கமலின் பாட்டுதான்!!! ஹிஹிஹிஹி

    கீதா

    ReplyDelete
    Replies
    1. எனக்கும் அந்த கஷ்டம் உண்டு. சில சமயம் இப்படி டக்கென்று எழுதி விடுவேன்.

      Delete
  4. காலக் கொடுமையடா கந்தசாமி..
    காலக் கொடுமை!..

    ReplyDelete
    Replies
    1. காலத்தின் கட்டாயம் என்றும் கூறலாம் இல்லையா? நன்றி.

      Delete
  5. We must adopt to new technology. எங்க வீட்டில் உடைகள் (பலதும்) ஆன்லைன்லதான் வாங்குவது. மனைவிக்கு ப்ரெசெண்ட் பண்ண ஆன்லைனில் 18 புடவைகள் வாங்கி அதில் 16ஐ திருப்பி அனுப்பிவிட்டோம் (பலவித ப்ராண்ட்). மருந்துகள் ஆன்லைனில். அனேகமா காய்கறி தவிர (அதையும்கூட, மகளுக்குத் தேவையானதை...எதையாவது அவள் பண்ணணும் என்று நினைத்தால் ஆன்லைன்) மற்ற எல்லாம் ஆன்லைன். வீட்டை அடுத்து இருக்கும் மெட்ரோ, பலசரக்குகளுக்கு (அதிலும் பல, ஆன்லைனில்தான்).

    மருந்துகள் ஆன்லைனில் ஆர்டர் செய்வதால் 20 சத டிஸ்கவுண்ட், வீடு தேடி மருந்தைத் தருவாங்க. இல்லைனா நாம நடந்துபோய், நின்னு, 10 சத டிஸ்கவுண்ட்ல வாங்கிட்டு வரணும்.

    ReplyDelete
    Replies
    1. ஆமாம், கால மாற்றங்களை ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும் நன்றி. நெல்லை.

      Delete
  6. Yes. நன்றி டி.டி. உங்கள் தளத்திற்குச் சென்று நீண்ட நாட்களாகி விட்டது.

    ReplyDelete
  7. Why no posts in 2023? I used to read eagerly.

    ReplyDelete
  8. நாங்க ஆன்லைன் வர்த்தகமே வைச்சுக்கறதில்லை. எல்லாம் நேரில் பார்த்துத் தெரிந்து கொண்டு தான். அதுவும் பணமாகக் கொடுத்துத்தான். நெல்லை சொல்றாப்போல் புடைவைகள் எல்லாம் வாங்குவதில்லை. புடைவைக்கடையில் போய்ப் பார்த்துத் தான். நேற்று ப்ரஸ்டிஜ் சேவை மையத்தை அடுப்பு சுத்தம் செய்வதற்காக அணுகினால் பதிவு செய்யவே பணம் கட்டுங்க, ஆன்லைனில் என்றார்கள். எங்களிடம் ஜிபேயோ, பேடிஎம்மோ எதுவும் கிடையாது. டெபிட் கார்டோ/க்ரெடிட் கார்டோ பயன்பாட்டிலும் வைச்சுக்கலை. அதைச் சொன்னதும் தொலைபேசி இணைப்பையே கட் பண்ணிட்டாங்க. ஏதேனும் போகஸ் கம்பெனி ஆட்களோனு நினைச்சோம்.

    ReplyDelete