![]() |
சிங்கபெருமாள் கோவில் |
கேரள விருந்தாளியோடு பாடலாத்திரி எனப்படும் சிங்கபெருமாள் கோவில், திருவள்ளூர் வீரராகவப் பெருமாள் கோவில், திருநின்றவூர் ஹிருதயாலீஸ்வரர் கோவில் எல்லாம் தரிசனம் செய்தோம்.
சிங்கப் பெருமாள் கோவில் ஒரு குடைவரை கோவில். அந்த சிறு குன்றே நரசிம்மர் என்ற கருதப்படுவதால் அந்த குன்றை வலம் வருவது சிறப்பு என்பது நம்பிக்கை. இங்கே தவம் செய்த ஜாபாலி முனிவர் தனக்கு நரசிம்மராக திருமால் காட்சி அளிக்க வேண்டும் என்று வேண்டியதால் உக்ர நரசிம்மராக அவருக்கு காட்சி அளித்தாராம். இங்கு பெருமாளுக்கு நெற்றிக் கண் உண்டு. தீபாராதனையின் பொழுது நெற்றிக்கண்ணை திறந்து தரிசிக்க வைக்கிறார்கள். அபூர்வ அனுபவம் அது.
ஹிருதயாலீஸ்வரர் கோவில்:
அறுபத்து மூன்று நாயன்மார்களில் ஒருவரான பூசலார் சிவ பெருமான் மீது அதீத பக்தி பூண்டவர். தற்சமயம் திண்ணனூர் என்று அழைக்கப்படும் திருநின்றவூரில் வசித்த அவர், பெரும்பாலும் அங்கிருந்த இலுப்ப மர காட்டில்தான் அமர்ந்து தியானத்தில் எடுபட்டிருப்பார். அந்த சமயத்தில் காஞ்சிபுரத்தை ஆண்ட பல்லவ மன்னன், கைலாசநாதர் கோவிலை கட்டிக் கொண்டிருந்தார். அதைப்போல தானும் இறைவனுக்கு ஒரு கோவிலை கட்ட வேண்டும் என்று விரும்பிய பூசலார் மானசீகமாக இறைவனுக்கு கோவில் கட்ட ஆரம்பித்தார். பல்லவ மன்னன் கோவிலை கட்டி முடித்த அதே சமயத்தில் இவருடைய மனக்கோவிலும் முற்றுப் பெருகிறது. பல்லவ மன்னன் எந்த நாளில் கும்பாபிஷகேத்திற்கு நாள் குறித்திருந்தாரோ அதே நாளில் பூசலாரும் தன் இதயக்கோவிலுக்கு கும்பாபிஷேகம் செய்ய நாள் குறிக்கிறார்.
கும்பாபிஷேகத்திற்கு முதல் நாள் பல்லவ மன்னன் கனவில் தோன்றிய சிவ பெருமான், "நாளை திருநின்றவூரில் என் பக்தன் பூசலார் கட்டிய கோவிலுக்கு குடமுழுக்கு, நான் அங்கு செல்ல இருப்பதால் நீ கட்டியிருக்கும் கோவிலில் எழுதருளுவது இயலாது" என்று கூறி விடுகிறார். மறுநாள் திருநின்றவூருக்குச் சென்ற மன்னன், "இங்கு பூசலார் கட்டியிருக்கும் ஆலயம் எங்கிருக்கிறது?" என்று விசாரிக்க, அந்த ஊர் மக்கள் ஆச்சர்யமடைகிறார்கள். "எப்போதும் இலுப்ப காட்டில் உட்கார்ந்திருக்கும் ஓரு ஏழை பிராமணர் கோவில் கட்டியிருக்கிறாரா?" அவர் மன்னன் முன் நிறுத்தப்படுகிறார். "ஐயா! நீங்கள் கட்டியிருக்கும் கோவில் எங்கேயிருக்கிற்து?" என்று அரசன் கேட்க, அதிர்ச்சி அடைந்த பூசலார், " பிறர் அறியாமல் நான் மானசீகமாக கட்டிய கோவில் பற்றி எப்படி அறிந்து கொண்டீர்கள்?" என்று கேட்க, அரசர் தன் கனவைப் பற்றி விவரிக்கிறார்.
"என்னையும் ஒரு பொருட்டாக மதிக்கிறாரா நான் வணங்கும் ஈசன்?" என்று நெகிழ்ந்தார் பூசலார். அரசன் அவரை வணங்கி திரும்பினான் என்று முடிகிறது பெரிய புராணம். ஆனால் பூசலார் விரும்பியது போல அவருக்கு கோவில் எழுப்பிக் கொடுத்தார் பல்லவ ராஜா என்கிறது கோவில் தல புராணம்.
பூசலார் இதய பூர்வமாக கோவில் எழுப்பியதால், இந்த கோவிலின் கருவறை விமானம் இதய வடிவத்தில் இருக்குமாம். கருவறைக்குள் சிவலிங்கத்திற்கருகில் சிலா வடிவில் பூசலாரையும் தரிசிக்கலாம். தனி சன்னிதியில் தாயார் மரகதாம்பிகை.
திருநின்றவூர் பக்தவத்சல பெருமாள் கோவிலில் பாலாலயம் செய்திருந்ததால் மூலவரை தரிசனம் செய்ய முடியவில்லை. அருகில் இருந்த ஏரிகாத்த ராமர் கோவிலுக்குச் சென்றோம்.
அங்கு கோவில் மூடும் நேரமாகி விட்டாலும், அங்கிருந்த வயது முதிர்ந்த பட்டாச்சாரியார் மிக அன்போடு எங்களை வரவேற்று தரிசனம் செய்வித்தார். நின்ற திருக்கோலத்தில் கம்பீரமாக ராமர். பக்கத்தில் வாத்ஸ்யல்யமே உருவாக ஜானகி மாதாவும், இளவல் லட்சுமணனும். அந்த பட்டாச்சாரியார் எங்களை அந்த கோவிலில் மூன்று விஷயங்களை கண்டிப்பாக பார்க்க வேண்டும் என்றார். கோவிலின் பின் பக்கம் இருக்கும் ஏரி, முன் பக்கம் இருக்கும் நவீன கஜேந்திர மோட்ச சிற்பம், கோவிலுக்குள் இருக்கும் ஆஞ்சனேயர் சிற்பம் இவைதான் அந்த மூன்றும்.
![]() |
ராம லட்சுமணர்களை சுமந்து செல்லும் ஹனுமான் |
![]() |
ஹனுமனின் பின்புறம், ராம லட்சுமணர்களின் திருவடிகள் |
அவர் சொன்னபடி செய்தோம். அங்கிருக்கும் ஆஞ்சனேயர் சிற்பம் வேறு எங்கும் காண முடியாதது. தன் இரு தோள்களிலும் ராமனையும், லட்சுமணனையும் ஹனுமன் தூக்கிச் செல்வது போன்ற அபூர்வ சிற்பம். எங்களை அந்த ஹனுமந்தனை வலம் வரச் சொல்லி ஹனுமாரின் முன்னும்,பின்னும்(மார்பிலும், முதுகிலும்)கால்களை தொங்கவிட்டபடி அமர்ந்திருக்கும் ராம,லட்சுமணர்களின் பாதங்களை தரிசிக்க சொன்னதோடு, புகைப்படமும் எடுத்துக்கொள்ளச் சொன்னார். நன்றாக தரிசனம் செய்த நிறைவோடு வீடு திரும்பினோம்.
பாடலாத்ரி தரிசித்திருக்கிறேன். திருநின்றவூர் தரிசித்ததில்லை. சென்று வர ஆவல்.. எப்போதோ...
ReplyDeleteசரி, இரண்டு படங்கள் போட்டிருக்கிறீர்கள். ஏரி படம் போடவில்லையே...
ReplyDeleteஇருட்டி விட்டது, அதனால் எடுத்த படம் சரியாக இல்லை.
ReplyDeleteவணக்கம் சகோதரி
ReplyDeleteபதிவு அருமை. பாடலாத்திரி கோவில் சிறப்புகளையும், ஸ்தல புராணத்தையும் படித்து தெரிந்து கொண்டேன். படங்களின் வாயி லாக ஸ்ரீ நரசிம்மரை தரிசித்துக் கொண்டேன்.
திருநின்றவூர் கோவிலில், ஸ்ரீ ஆஞ்சனேயர் ஸ்ரீ ராமலெட்சுமணரை சுமந்து செல்லும் அருமையான சிற்பச் சிலையை பகிர்ந்தமைக்கும் நன்றி. ஒவ்வொரு கோவில்களிலும் ஒவ்வொரு சிறப்பு. அதை புரிந்து கொண்டு அறியும் போது, அந்த கோவிலின் தரிசனங்கள் முழுமையாக கிடைப்பதை உணர்கிறோம். அது போல் நீங்களும் பல கோவில்களை நன்றாக தரிசனம் செய்து திரும்பியமைக்கு மகிழ்ச்சி.அதன் மூலம் எங்களுக்கும் நல்ல தரிசன பகிர்வுகள் கிடைத்ததற்கும் நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
__/\__ __/\__
Deleteபானுக்கா, சிங்கப்பெருமாள் போயிருக்கிறேன். அங்கு பிரசாத க்டையில் பொடி தோசையும் வாங்கிச் சாப்பிட்ட நினைவு. ஹிஹிஹி எங்கு போனாலும் இதுதான் நமக்கு!! அப்புறம்தான் நாளை என்பதெல்லாம் இல்லை!!!!!!!!ன்றதெல்லாம்....
ReplyDeleteஹ்ருதயாலீஸ்வரர் கதை மனதை இழுக்கிறது. மனக்கோவில்தானே எல்லாரும் எழுப்ப வேண்டும் என்று சொல்லப்படுகிறது! இது எப்படி விட்டுப் போச்சு என்று தெரியலை திருநின்றவூர் நிறைய முறைகள் போயிருப்பதால்...
பாடலாத்திரி படங்கள் இல்லையே? பக்தவத்சலர் கோவிலும் ராமர் கோவிலும் போயிருக்கிறேன் என்னைப் பெற்ற தாயார்னு அங்கு விசேஷம். அங்கு ஒரு அட்டை கொடுப்பாங்க அதில் சில எண்கள் இருக்கும் ஒவ்வொரு கட்டத்திலும் (9) 9 ஒரு ரூபாய் காயின் வைத்து ஒன்பது வெள்ளிக்கிழமைகள் திருநின்றவூர் தாயை வேண்டி லக்ஷ்மி பூஜை செய்து 9 வெள்ளி முடிந்ததும் அங்கு போய் அந்தக் காயின்களை (81 ரூ ஆகிடுமா) உண்டியலில் சேர்த்து 9 பெண்களுக்கு வெற்றிலை பாக்கு வைத்துக் கொடுக்கச் சொல்லி சொல்வாங்க....கேட்டிருக்கிறேன்.
கீதா
நான் எடுத்த ஏரி படங்கள் இருக்கின்றன. ஆ இப்பதான் நினைவுக்கு வருது. இங்கு சென்ற போது எடுத்த படங்கள் (அது இருக்கும் 8, 9 வருஷம்!!!!) எல்லாம் மாஸ் ஸ்டோரேஜில் இருக்கு. லாப்டாப்போடு கனெக்ட் பண்ணி தேடிப் பார்க்க வேண்டும் . கிடைத்தால் பகிர வேண்டும். அது சரி இவரையும் அங்கு ஏன் ஏரிகாத்த ராமன்னு சொல்றாங்க? பின் பக்கம் ஏரியை சொல்றாங்க? அது மதுராந்தக ஏரி இல்லையோ? ஏரி காத்த ராமர்.
ReplyDeleteகீதா