கணம்தோறும் பிறக்கிறேன் 

Saturday, September 19, 2026

அதீதம்

 அதீதம் 

அதீதம் என்றால் எனக்கு இரண்டு பேர்கள் நினைவுக்கு வருவார்கள். ஒருவர் நெருங்கிய உறவில் ஒரு பெண்மணி மற்றும் ஒரு நண்பர்.  

அந்த பெண்மணியின் கணவர் வெளிநாட்டில் வேலை பார்த்ததால் பத்தொன்பது வயதிலேயே திருமணமான இவர் கிட்டத்தட்ட முப்பது வருடங்கள் வெளிநாடுகளில் வசித்ததால் இந்தியா ஒரு குப்பை மேடு என்ற எண்ணம். அதனால் வெளியே எங்கும் செல்ல மாட்டார்.  

வாங்கும் மளிகை சாமன்களைை கழுவி வெய்யிலில் உலர்த்தி எடுத்து வைக்க வேண்டும். சாம்பார், ரசம் போன்றவைகள் செய்வதற்கு புளியை ஊற வைக்க வேண்டுமானால் அதை அலம்பிய பிறகுதான் ஊற வைக்க வேண்டும். தினமும் காலையில் காபி போடும் முன் ஃபில்டர், பால் காய்ச்சும் பாத்திரம், காபி குடிக்க பயன் படுத்தும் டவரா,டம்ப்ளர் போன்றவைகளை ஸ்டிரிலைஸ் செய்ய வேண்டும்.  

இவருடைய இந்த அதீத சுத்தத்தினால் பாதிக்கப்பட்டது அவருடைய மருமகள்தான். வெளியே எங்கும் சாப்பிட மாட்டார். கல்யாணங்களுக்குச் செல்வதானால் கூட அவருடைய மருமகள் அவருக்காக சமைத்து வைத்து விட்டுதான் செல்ல வேண்டும். கோவில்களில் தரும் தீர்த்தப்பிரசாதத்தைக் கூட அருந்த மாட்டார். அதை வாங்கி கீழே விட்டு விடுவார். தான் செய்வது எப்படிப்பட்ட அபசாரம் என்று உணரவேயில்லை.  

இவர்கள் வீட்டில் யாராவது வெளியூர்களுக்குச் சென்றுவிட்டு வந்தால் பெட்டிகளை உள்ளே கொண்டு வந்துவிட முடியாது. வாசல் வராண்டாவில் வைத்து துணிகளை எடுத்து விட வேண்டும். பெட்டியை அலம்பிய பிறகுதான் உள்ளே எடுத்துச் செல்ல வேண்டும்.  

வீட்டிற்கு வருபவர்கள் வாசலில் இருக்கும் குழாயில் காலை அலம்பிய பிறகுதான் உள்ளே வர வேண்டும். தப்பித் தவறி யாராவது காலை அலம்பாமல் உள்ளே வந்து விட்டால் அவர்கள் சென்றதும் வீட்டை டெட்டால் போட்டு துடைக்க வேண்டும்.  அவருடைய மருமகளின் நிலையை நினைத்துப் பாருங்கள்.  

அறுவை சிகிச்சை செய்வதற்கு முன்பு மருத்துவர்கள் கையை சோப்பு போட்டு கழுவி உதறுவார்களே அப்படி இவர்கள் வீட்டில் எல்லோரும் சாப்பிடும் முன் கைகளை கழுவி உதறுவார்கள், டவலில் துடைத்துக் கொண்டால் அதில் இருக்கும் கிருமி கைகளில் ஒட்டிக் கொண்டு விடுமே..! 

இவர் இப்படி என்றால், நண்பரின் அதீதம் வேறு வகை. அவருக்கு சாப்பிட பிடிக்கும். சமைக்கவும் பிடிக்கும். ஆனால் சமைக்கிறேன் பேர்வழி என்று அவர் படுத்துவது.. ஏ! அப்பா! எல்லாவற்றையும் நிறைய செய்து விடுவார். அவர் வீட்டிற்கு நான்கு பேர்களை சாப்பிட அழைப்பார். இருபது பேர்கள் சாப்பிடலாம் போல அவர் மனைவியை சமைக்கச் சொல்வார்.  

சாம்பார் என்றால் அரைத்து விட்ட சாம்பார், பொடி போட்ட சாம்பார், புளிக்குழம்பு, மோர்க்குழம்பு, பொரித்த குழம்பு.  

ரசம்: மைசூர் ரசம், எலுமிச்சை ரசம், ஜீரக ரசம். 

கூட்டு: அரைத்து விட்ட கூட்டு, பயத்தம் பருப்பு போட்ட கூட்டு, அவியல். 

பொரியல்: தேங்காய் போட்ட கறியில் இரண்டு வகை, வதக்கல் கறியில் இரண்டு வகை. 

சிப்ஸ்: உருளைக்கிழங்கு சிப்ஸ், வாழைக்காய் சிப்ஸ், நேந்திரன் சிப்ஸ், பொரித்த அப்பளம் 

பாயசம்: பால் பாயசம், வெல்லம் போட்ட பாயசம், பச்சடி. 

வடை: உளுந்து வடை, பருப்பு வடை, தயிர் வடை. 

இதைத்தவிர இலைக்கு போளி அல்லது மைசூர் பாக் போல ஒரு ஸ்வீட் 

ஊறுகாய்: மாங்காய் ஊறுகாய், எலுமிச்சை ஊறுகாய் தவிர மாங்காய் பிசிறல்   

எதற்கு இவ்வளவு ஐட்டம்கள்? என்று கேட்டால் சாப்பிட வருபவர்களுக்கு அரைத்துவிட்ட சாம்பார் பிடிக்காது என்றால் சாய்ஸ் இருக்க வேண்டாமா என்பார். இத்தனை ஐட்டம்கள் செய்கிறோமே கொஞ்சம், கொஞ்சம் செய்தால் போதாதா என்று அவர் மனைவி கேட்க முடியாது. மஸ்கட்டில் அவர் இந்த லூட்டி அடித்தார். அங்கெல்லாம் சமையலுக்கு உதவிக்கு ஆட்கள் கிடைக்க மாட்டார்கள். அவர் மனைவி ஒற்றை ஆளாக இவை அத்தனையையும் செய்ய வேண்டும்.  

எக்கச்சக்கமாக சமைத்து, மிஞ்சியதை மறுநாளுக்கும் வைத்துக் கொள்ள அனுமதிக்க மாட்டார். அப்படியே கொட்டுவார். அநியாயம்!நன்றாகப் பாடுவார். ஆனால் பாடுவது மட்டுமே கலைத் திறமை என்ற எண்ணம். மற்ற கலைகளை பாராட்ட மாட்டார். பெண்களுக்கு எந்த மதிப்பும் தரத் தேவையில்லை என்ற எண்ணம் கொண்டவர். பெண்களுக்கென்று ஒரு சொந்த கருத்து இருக்கக் கூடாது என்ற நினைப்பும் உண்டு. அவரது ஒரே மகன் ஒரு விபத்தில் இறந்ததும், மனைவியைப் பற்றி கொஞ்சம் கூட நினைக்காமல், ஏற்கனவே இதய நோயாளியான அவர் அளவிற்கு அதிகமாக குடித்து பத்து நாட்களுக்குள், மனைவியை நிராதாரவாக விட்டு விட்டு இறந்து போனதும் அதீதம்தானே!   

No comments:

Post a Comment