கணம்தோறும் பிறக்கிறேன் 

Wednesday, September 10, 2014

சினிமாவில் வராத கவுண்டமணி செந்தில் காட்சி!

சினிமாவில்  வராத கவுண்டமணி  செந்தில் காட்சி!



கவுண்டமணி: ஏண்டா நாயே! என்னடா சொன்ன என்கிட்ட? சொல்லுவியாடா ? சொல்லுவியாடா? (செந்திலை அடிக்க ஓடுகிறார்)

அண்ணே! ஏன் அண்ணே அவனை அடிக்கிறீங்க?

இந்த நாய் கிட்ட நான் என்ன கேட்டேன்,  இவன் என்ன பண்ணியிருக்கான்? கேளுங்க...

அப்படி என்னப்பா செஞ்ச?  அண்ணன் உன்கிட்ட என்னப்பா சொன்னாரு?

அவரு தங்கச்சிக்கு பையன்  பாக்க சொன்னாரு..

அவ்வளவுதானே? பாத்தியா?

பார்த்தேன்,

அவுரு எப்படி  சொன்னாரு, நீ எப்படி பார்த்த?

அவரு சொன்ன மாதிரியே நல்ல ஹீ..

கவுண்டமணி: டேய்! வேணாம் சொல்லாத, படுவா..

அண்ணே, விடுங்கண்ணே, நீ சொல்லுப்பா,  எந்த மாதிரி பையன் பார்த்த..?

நல்ல ஹீரோ மாதிரி மாப்பிளைதான் பார்த்தேன்.

டேய்!  மறுபடியும் அதயே சொல்ற,,?

அண்ணே!  நீங்க சொன்ன மாதிரிதானே பாத்துருக்கான், அப்புறம் ஏன் போட்டு அடிக்கிறீங்க?

கவுண்டமணி(லேசான அழுகையோடு): நீங்களே சொல்லுங்க ஹீரோ இப்படியா  இருப்பான்? அவர் கை காட்டும் இடத்தில், நபர் அழுக்காக, பரட்டை தலை, லுங்கி, வாயில் பீடி, எட்டு நாள்  மீசையோடு, போதையில் சொருகும் கண்களோடு, கேட்ட வார்த்தை பேசியபடி இருக்கிறான். அவனைக்கண்டு அதிர்ந்து போனவர்கள் செந்தில் பக்கம் திரும்பி,

என்னப்பா இது?

என்னங்க? இவர் ஹீரோ மாதிரின்னு சொன்னாரே தவிர, எந்த கால ஹீரோன்னு சொன்னாரா? இப்போல்லாம் ஹீரோ இப்படித்தானே இருக்காங்க?

கவுண்டமணி: டேய்! வேண்டாம், ஓடிப் போயிடு... அடிக்க வர, செந்தில் தப்பித்து ஓடுகிறார்..



   



Monday, August 18, 2014

நினைவலைகள்!

நினைவலைகள்! 

எல்லா பண்டிகைகளின் பொழுதும் அம்மாவின் நினைவு வரும். குறிப்பாக கோகுலஷ்டமியிலும், நவராத்திரியிலும்,  தீபாவளியின் பொழுதும் அம்மாவின் நினைவை தவிர்க்கவே முடியாது. 

அம்மாவின் இஷ்ட தெய்வம் ஸ்ரீ குருவாயூரப்பன் என்பதால் அதிக பட்ச ஈடுபாட்டோடு பட்சணங்கள் செய்வாள். அன்று முழுவதும் முழு பட்டினி! ஜுரம் வந்தது போல வித விதமான பலகாரங்கள் அலுக்காமல் சலிக்காமல் செய்து  கொண்டே இருப்பாள். ஓரிரு முறை தானே நெல்லை ஊற வைத்து, உரலில் இடித்து வீட்டிலேயே அவல் கூட தயாரித்திருக்கிறாள்! ஒவ்வொரு செயலிலும் தென்படும் கிருஷ்ணனின் மீதான அம்மாவின் அன்பு! மற்றபடி உட்கார்ந்து  சுலோகம் சொல்வதோ பூஜை செய்வதோ அம்மாவின் வழக்கம் இல்லை. பூஜைக்கான அத்தனை ஏற்பாடுகளையும் செய்து கொடுப்பாள். நாங்கள் பஜனை செய்வோம்! 

இதைப் போலவே நவராத்திரி! ஒன்பது படி கட்டி, அழகாக பார்க் அமைத்து கொலு வைப்பாள். வைதீகர் ஒருவரை வைத்து தேவி மஹாத்மியம் பாராயனதிற்க்கு ஏற்பாடு செய்வாள். அந்த சிறப்பு பூஜைக்கான ஏற்பாடுகள். அதைத் தவிர தினசரி வீட்டில் உள்ளவர்கள் செய்யும் பூஜைக்கான ஏற்பாடு, பாயசம் வடையோடு சமையல், மாலையில் சுண்டல், வெள்ளிக்கிழமை அன்று புட்டு, இதற்க்கு நடுவில் எங்களுக்கு ஒவ்வொரு நாளும் ஒரு வேடம், வருபவர்களுக்கு வெற்றிலை பாக்கு வழங்குவது, தானும் மற்றவர் வீடுகளுக்கு செல்வது, என்று எத்தனை விஷயங்களை அனாயசமாக செய்திருக்கிறாள்..! இத்தனைக்கும் இப்போது போல மிக்ஸி, கிரைண்டர் போன்ற வசதிகள் கிடையாது.  ஏன் தண்ணீர் கூட வெளியிலிருந்து பிடித்துக் கொண்டு வர வேண்டும். இதில் வெள்ளிக் கிழமை அன்று ஒரு சுமங்கலியை சாப்பிட சொல்லி புடவை வைத்து கொடுப்பதும் நடக்கும். 

தீபாவளி அன்றும் அம்மாவுக்கு பட்சண ஜுரம் பிடிக்கும். அதற்க்கு நடுவில் எங்களுக்கு டிரஸ் கூட தைத்து கொடுத்திருக்கிறாள். விடியல் காலை தீபாவளி மருந்து கிளறி விட்டு, சுடச் சுட மைசூர்பாக் கிளறி கொட்டுவது அம்மாவின் வாடிக்கை. எங்களையெல்லாம் எண்ணை தேய்த்து குளிக்க வைத்து, புதிது அணியச் செய்து, நாங்கள் ஒரு கோர்ஸ் பட்டாசு வெடித்து விட்டு உள்ளே வந்ததும் எங்களுக்கு காபி கொடுத்து விட்டு துலா ஸ்நானம்  செய்ய காவிரிக்கு கிளம்பி விடுவாள். வீட்டில்  வேலை செய்பவர் உட்பட அத்தனை பேருக்கும் புது துணி வாங்கி கொடுக்கும் அம்மா ஒரு முறை கூட புதுசு அணிந்து கொண்டதாக எனக்கு ஞாபகம் இல்லை. நாங்கள் யாரும், "உனக்கு என்னம்மா வாங்கிக் கொண்டாய்"? என்று கேட்டதும் இல்லை. 

Saturday, July 19, 2014

அரிமா நம்பி! - review

அரிமா நம்பி!


ஒரு பப்பில்(PUB) முதல் நாள் இரவு அறிமுகம் ஆகும் விக்ரம் பிரபுவும், பிரியா ஆனந்தும் உடனே காதலில் விழுந்து  மறுநாளும் ஒரு ரெஸ்டாரெண்டில் சந்தித்து, "பார் மூடும் நேரமாகி விட்டது சார்" என்று சர்வர் கூறும் வரை குடித்து, குடியைத் தொடர(அடடா!) ப்ரியாவின் வீட்டிற்க்குச் செல்கிறார்கள். அங்கு அவர் கடத்தப் பட, அதன் பின்னணி என்ன? அவரை அரிமா நம்பி மீட்டாரா? என்பதுதான் கதை. அரிமா என்றால் சிங்கம், நம்பி என்பது இளைஞன் என்பதைக் குறிக்கும் தமிழ்ச் சொல்.           

A.R. முருகதாசின் சீடர் ஆனந்த் சங்கர் இயக்கி இருக்கும் முதல் படம். குருவிற்கு ஏற்ற சீடராக படத்தை விறுவிறுவென்று கொண்டு சென்றிருக்கிறார்! படம் ஆரம்பித்த பத்தாவது நிமிடம் தீயாக பற்றிக் கொள்ளும் பரபரப்பு இறுதி வரை நீடித்திருப்பது ஒரு சிறப்பு. ட்ரம்ஸ் சிவமணி இசைஅமைப்பாளராக அறிமுகம். பாடல்களில் இன்னும் கொஞ்சம் கவனம் செலுத்தி இருக்கலாம். 

பொதுவாக இந்த மாதிரி   படங்களில் கதா நாயகிக்கு பெரிதாக நடிக்க வாய்ப்பு இருக்காது, இதில் கதா நாயகனுக்கும் இல்லை. சமீபத்திய ந ம்பிக்கை நட்சத்திரமான விக்ரம் பிரபு ஓடுகிறார், துரத்துகிறார், சண்டை போடுகிறார். கொஞ்சம் காதலிக்கவும் கற்றுக் கொள்ளலாம்.

அதென்ன பிரியா ஆனந்த் எல்லா படங்களிலும் ஹீரோவோடு சேர்ந்து   மட்டையாகிற அளவுக்கு குடிக்கிறார்? நவீன பெண்கள் எல்லோருமே இப்படித்தான் இருக்கிறார்களா என்ன? 

சின்ன  ரோலில் வந்தாலும் எம்.எஸ்.பாஸ்கர் மனதில் நிற்கிறார். 

பிரியா ஆனந்த் குடியிருக்கும் அபார்ட்மெண்ட் சர்வேயலென்ஸ் காமிராவில் பிரியா ஆனந்தும் விக்ரம் பிரபுவும் பதிவாகாமல் போனது எப்படி? ஒரு பெரிய சேனலின் சி.ஈ.வோ.வின் வீடு இப்படியா கை வைத்ததும் திறந்து கொள்ள கூடியதாய் காவல் எதுவும் இல்லாமல் அனாமத்தாய் இருக்கும்? அதன் வாசலில் பார்க் செய்யப் பட்டிருக்கும் விக்ரம் பிரபுவின் பைக்  வில்லன் கையாட்களின் கண்களில் படாதது எப்படி? எந்த சென்ட்ரல் மினிஸ்டர் ஐ.ஜி. ஆபீசில் உட்கார்ந்து வில்லனைத் தேடுவார்? அங்கு  உண்மைக்கு வெகு அருகில் வந்து விடும் இளம் போலிஸ் அதிகாரியை வெகு அலட்சியமாக கொலை செய்கிறாரே அது அவ்வளவுதானா? 
தனக்கு எல்லாமே தன தந்தைதான் எனும் கதாநாயகி அவர் கொடூரமாக கொலை செய்யப் பட்டிருக்கிறார் என்று அறியும் போது ஏதோ நாலு வீடு  இருக்கும் அங்கிள் இறந்து போனது போல ஏனோ தானோ என்றுதான் கண்ணீர் வடிப்பாரா? என்பது போன்ற கேள்விகளை மறக்கடிக்கிறது படத்தின் விறுவிறுப்பு!  

Friday, July 4, 2014

BEAUTY HAS AN ADDRESS 

I have a big list of places I would like to visit in and around the Globe. My first preference will be Oman even though I have visited and lived over there for more than two decades. May be that is the reason I would like to visit Oman again. Yes It is my home away home. 

I landed Oman on 05 Jan 1987 to join my husband who was working over there, and left that place on Dec.2013. During my stay over there.I was watching the growth of Oman as a mother watches her daughter growing and feel proud about her beauty and elegance. 

In '87 Oman was developing. There were no proper roads in Wadi Kabir, Hamriya and Honda road areas. Al-Khuwair was developing. The 'bhs' building was a land mark. When CCC came we were thrilled to visit that. but now...! What a growth!. How many Hyper markets!! Those days only very few parks.. In early '90s Qurum park was developed. I still remember those days we visited that park with our kids. I am curious to know whether it has the same look or changed?   

I would like to visit Rumaiz garden, Nakhal, Rustaq, and Nizwa. Those were our favourite picnic destination those days.. Now I would like to visit agin all those places and see the difference. Nakhal has a small water falls and taking a dip at the hot springs of Rustaq will cure skin diseases...Isn't it? 

My favourite picinic spot in Oman is Yiti beach. I would like to visit Yiti beach during Nov-Feb, because at that time rare birds will come to Yiti. Moreover driving to Yiti beach, and Quriyat are awesome experience. I don't want to miss that. I would like to visit Al-sawadi beach too to collect colourful  and beautiful shells .   

Recently Oman has developed interesting tourist attractions like going deep into the sea and watch dolphins. I enjoyed that twice, Wow! It's really fantastic. Who will not wish to have that splendid experience again? and the next fascinating, thrilling experience is desert safari... I will definitely go for it once more.

One more place I want to visit in Oman is Salalah. When we were there, we planned many times but could not make it. So during my next visit I don't want to miss it. Travelling by road in Oman is awesome, especially the sea side roads in Seeb will be a pleasure. So I will definitely take a l..o..n..g road trip. 

Last but not the least is visiting Shiva temple at Muscat and Krishna temple at Darseit and worship. I suppose there is no need to mention that my trip to Oman will not be completed without relishing Sambar Vada at Oman express and Dokla at Bollywood restaurant. 

Monday, June 23, 2014

VI ANNUAL DAY CELEBRATIONS OF SRI VIGNESWARA LADIES CLUB - RAMAPURAM

 VI  ANNUAL DAY CELEBRATIONS OF SRI VIGNESWARA LADIES CLUB - RAMAPURAM 

ராமாபுரத்தில் இருக்கும்  எங்கள் 'விக்னேஸ்வரா லேடிஸ் கிளப்'ன் ஆறாவது ஆண்டு விழாவை 17.6.2014 செவ்வாய் கிழமை அன்று கொண்டாடினோம். இடம் ராமாபுரம் கே.பி. நகர் மாநகராட்சி பூங்கா. விழாவின் முக்கிய நிகழ்ச்சி ராமாபுரம் அரசு உயர் நிலை பள்ளியில் படித்து பத்தாம் வகுப்பு பொது தேர்வில் முதல் மூன்று இடங்களை பெற்ற மாணவர்களுக்கு ரொக்க பரிசும் அதைத் தவிர அதே பள்ளியில் பயிலும் ஐம்பது மாணவ,மாணவிகளுக்கு நோட்டு புத்தகங்களும், இரண்டு மாணவர்களுக்கு சீருடையும் வழங்கியதுதான்.

Displaying IMG_0902.JPG
FROM LEFT TO RIGHT: Mrs.Jayanti, Mrs.Bhanumathy,Mrs.Shyamala, Ms.Bargavi Devandra,Mrs.Kanchana,Mrs.Rajalakshmi
மாலை 4:30 க்கு நிகழ்ச்சி துவங்கும் என்று குறிப்பிட்டிருந்தாலும் நான்கு மணி முதலே சங்க உறுப்பினர்கள் குவிய ஆரம்பித்து விட்டனர். அதன் பிறகு பள்ளிக் குழந்தைகளும் வந்து சேர்ந்தனர். எல்லோருக்கும் சிற்றுண்டியும், காபியும் வழங்கப் பட்டவுடன் நிகழ்சிகள் திருமதி.சுந்தரி அவர்கள் இறை வணக்கம் பாட இனிதே துவங்கின.   வரவேற்புரையை விக்னேஸ்வரா லேடிஸ் கிளப் ன் தலைவி திருமதி.சியாமளா வெங்கடராமன் அவர்கள் வாசித்தார்கள். அதன் பிறகு விழாவிற்கு தலைமை தாங்கிய, Tamil Nadu Social Welfare Board இல் இணை இயக்குனராக பணி புரிவதோடு, இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி, விமென்ஸ் இந்தியன் அசோசியேஷன், சி.பி. ராமசாமி ஐயர் பௌண்டேஷன் போன்றவைகளில் சிறப்பு செயலாளராக சேவை புரியும்  MS. பார்கவி தேவேந்திரா அவர்கள் உரையாற்றினார்கள். அவருடைய தோற்றத்தைப் போலவே அவரின் பேச்சும் எளிமையாக இருந்தது. அதன் பிறகு மாவட்ட கல்வி அதிகாரியாக பணியாற்றி ஓய்வு பெற்ற திருமதி. காஞ்சனா அவர்கள் விக்னேஸ்வரா லேடிஸ் கிளப் செய்து வரும் சேவைகளை புகழ்ந்ததோடு நிறுத்திக் கொள்ளாமல் மாணவர்களுக்கு அறிவுரையும் கூறி ஒரு பெப் டாக் வழங்கினார்.

Displaying IMG_0812.JPG
Gathering of students

Displaying IMG_0792.JPG
 Mrs.Bhanumathy & Mrs. Jayanti compering the evet

Displaying IMG_0889.JPG
Prize distribution

Displaying IMG_0904.JPG
Chief guest with Club members
இதன் பிறகு ராமாபுரம் அரசு உயர் நிலைப் பள்ளியில் படித்து பத்தாம் வகுப்பு பொது தேர்வில் முதலிடம் பிடித்த மாணவன் வேங்கடக்ரிஷனனுக்கு விக்னேஸ்வரா லேடிஸ் கிளப் சார்பில் ரூ.1500/- வழங்கப்பட்டது. இந்த மாணவன் 493/500 மதிப்பெண்கள் பெற்று திருவள்ளூர் மாவட்டத்தில் மூன்றாம் இடத்தை பெற்றுள்ளான் என்பது  குறிப்பிடத் தக்கது.  இரண்டாம் மற்றும்
மூன்றாம் இடத்தை பிடித்த விஜய சாந்திக்கும் கீர்த்தனாவுக்கும் முறையே ரூ.1000/-, ரூ.800/- ரொக்க பரிசுகளாக வழங்கப்பட்டன. இதைத் தவிர அறிவியல் படத்தில் 100/100 மதிப்பெண்கள் வாங்கிய ஐஸ்வர்யா என்னும் மாணவிக்கும், பிரகாஷ் என்னும் மாணவனுக்கும் ரொக்கப் பரிசாக தலா ரூ.100/- வழங்கப் பட்டது.

வேங்கடக்ரிஷ்ணனுக்கு ஒரு ரிஸ்ட்வாட்சினை முதுபெரும் எழுத்தாளரான திருமதி.பத்மா மணி அவர்கள் வழங்கினார்கள். அவனுடைய திறமையை மெச்சி ஈரோட்டில் உள்ள ஒரு தனியார் பள்ளி அவனுடைய +2 படிப்பிற்கான செலவை ஏற்றுக் கொண்டு அவனை அங்கேயே அழைத்துக் கொண்டு சென்று விட்டதால் அவனுக்கான பரிசை அவன் தாயார் பெற்றுக் கொண்டார்.

அதன் பிறகு பொருளாதாரத்தில் நலிவு அடைந்த நிலையில் உள்ள இரு மாணவர்களுக்கு சீருடையும், ஐம்பது மாணவர்களுக்கு புத்தகங்களும் வழங்கப் பட்டன. ஐந்து வருடங்கள் முன்பு இரண்டு குழந்தைகளுக்கு புத்தகம் வழங்குவதோடு ஆரம்பித்த இந்த நல்ல விஷயம் இப்போது ஐம்பது குழந்தைகளுக்கு வழங்குவது வரை வந்திருக்கிறது.  இது மேலும் மேலும் வளரும் என்று நம்புகிறோம்!



  

Wednesday, June 18, 2014

பட்டிமன்ற மேடையா? பெண்ணிய மேடையா?

பட்டிமன்ற மேடையா? பெண்ணிய மேடையா?



வழக்கறிஞர் சுமதியின் மேடை பேச்சை மிகவும் விரும்பி ரசிப்பவள் நான். பட்டி மன்ற மேடை களில் தன் தரப்பு வாதத்திற்கான பாயிண்டுகளை ஒவ்வொன்றாக அடுக்கி  நச்சென்று அவர் முடிக்கும் அழகை வியப்பேன். ஆனால் கடந்த ஞாயிறன்று(15.6.2014) சன் டி.வி.யில் ஹூஸ்டனில் நடை பெற்ற 'கல்யாண மாலை' நிகழ்ச்சியின் சிறப்பு அம்சமான பட்டி மன்றத்தில் அவர் பேசியதை கேட்ட பொழுது அதிர்ந்து போனேன்! 'திருமண வாழ்க்கை சுவையா? சுமையா'?  என்பதில் சுமையே என்னும் தலைப்பில் பேச வந்த அவர் ஸ்டேஜ் டேகோரம்  என்பதை பற்றி கவலைப் படாமல் சேலையை வரிந்து கட்டிக் கொண்டு குழாயடியில்  சண்டை போடுபவர் ரேஞ்சுக்கு பேசியது கொஞ்சம்  கூட ரசிக்கும் படியாக இல்லை.  

திருமணமாகி புகுந்த வீட்டிற்கு வரும் பெண்ணிடம்  அவள் மாமியார் குளித்து விட்டு சமையல் அறைக்குள் வா என்று கூறுவது சுமையாம். "குளிக்காம வந்தா டிஸ்மிஸ் பண்ணிடுவியா?" என்பது சுமதியின் கேள்வி. இப்பொழுது எந்த மாமியார் அப்படி கூறுகிறார் என்று தெரியவில்லை.அப்படியே கூறினாலும் என்ன தவறு? ஆசாரம் என்பது முழுக்க முழுக்க அறிவியல் பூர்வமானது ஒரு குடும்பம் முழுவதற்கும் உணவு தயாரிக்க வேண்டிய இடத்தில் சுகாதாரத்தை கடை பிடிக்க சொல்வது தவறா? 

திருமணம் செய்து கொண்ட பெண்ணிடம் அவள் கணவன், "நீ என்னை அட்ஜெஸ்ட் செய்து கொள்கிறாயோ இல்லையோ என் அப்பா அம்மாவை அட்ஜெஸ்ட்  செய்து கொள்" என்று கூறுவது அவருக்கு எரிகிறதாம். அதாவது ஒரு நல்ல பையன் தனக்காக கஷ்டப்பட்ட தன் பெற்றோர்களை அனுசரித்து தன் மனைவி நடந்து கொண்டால் போதும்,அதற்காக இவன் அவளை அனுசரித்து போக தயாராக இருக்கிறான். அது கூட இவருக்கு எரியும் என்றால் வேறு எது இவருக்கு குளிர்ச்சி ஊட்டும் என்று தெரியவில்லை. மேலும் நடுவர் பாக்யராஜை தனிப்பட்ட முறையில் தாக்கியதும் பட்டிமன்ற நாகரீகமாக இல்லை.

என்னதான் வாழ்க்கை முறை மாறி இருந்தாலும் பெண்கள் சந்திக்கும் வேதனைகள் கொஞ்சம் அதிகமாகத்தான் இன்றும் கூட இருக்கின்றன. என்றாலும் பட்டிமன்ற மேடையை பெண்ணியம் பேசும் மேடையாக மாற்றுவது சரியில்லை என்று சுமதிக்கு தெரியாமல் போனது ஆச்சர்யம். 

ஒரு வேளை இவை எல்லாமே pre fixingஆக  கூட இருக்கலாம் (இப்பொழுதெல்லாம் பெரும்பாலான ஷோக்கள் அப்படித்தானே நடத்தப் படுகின்றன)  இருந்தாலும் உலகம் முழுவதும் ஒளி பரப்பக் கூடிய ஒரு நிகழிச்சியின் தரம் தாழ்ந்து போகலாமா?           

Monday, June 9, 2014

கும்பகோணத்தைச் சுற்றி ஒரு குறும் சுற்றுலா - II

கும்பகோணத்தைச் சுற்றி ஒரு குறும் சுற்றுலா - II


இந்த முறை நாங்கள் சென்ற கோவில்கள் எல்லாம் பிரபலமானவை என்பதால் அவைகளைப் பற்றி பெரும்பாலனோர் அறிந்திருப்பீர்கள். எனவே அவைகளின் சிறப்பு அம்சத்தைப் பற்றி மட்டும் குறிப்பிடலாம் என்று நினைக்கிறேன்.

திருவிடைமருதூர்:

பெரும்பாலான சோழ  தேச கோவில்களையும் போல இதுவும் மற்றொரு பிரும்மாண்டமான கோவில்.  மிகப் பெரிய சுதை நந்தியும், கர்பக்ரஹத்தில் பெரிய லிங்கமும் பிரமிப்பூட்டுகின்றன. 'மூன்று முழமும் ஒரு  சுற்று,முப்பது முழமும் ஒரு சுற்று' என்னும் சொலவடை உருவாக காரணமான மூன்று கோவில்களுள் இதுவும் ஒன்று. தஞ்சை பிரகதீஸ்வரர் கோவிலில் உள்ள பிரகதீஸ்வரர்  , திருவிடைமருதூர் மகாலிங்கம்,திருச்சி தாயுமானவர் கோவிலில் இருக்கும்  மாத்ருபூதேஸ்வரர் ஆகிய மூன்றுமே பெரிய லிங்கத் திரு மேனிகள். எனவே இவற்றிற்கு சாற்ற வேண்டிய வஸ்திரம் மூன்று முழமாக இருந்தாலும் சரி முப்பது முழமாக இருந்தாலும் சரி ஒரு சுற்றுதான் வரும் என்பதால் ஏற்பட்ட வசனம்.

கோவிலில் அம்மன் சந்நிதி தவிர மூகாம்பிகைக்கென்று ஒரு தனி சந்நிதி உள்ளது. அங்கு ஸ்ரீ சக்ர மேருவும் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. நந்தியை தாண்டிச் செல்லும் பொழுது பிரதான வாயிலுக்கு முன் இடது புறம் வரகுண பாண்டியனை பிடிப்பதற்காக காத்திருக்கும் ப்ரஹ்ம்மஹத்தி தம்மை பீடித்து விடுமோ என்ற அச்சத்தில் யாரும் அதே வழியில் திரும்பி வருவதில்லை. அம்மன் சந்நிதியில் தரிசனம் தரிசனம் முடித்துக் கொண்டு அப்படியே வெளியே வந்து விடுகிறார்கள்.

மருத மரத்தை(அர்ஜுன மரம்) தல வ்ருக்ஷமாக கொண்ட மூன்று முக்கிய தலங்களுள் ஆந்திராவில் உள்ள ஸ்ரீ சைலம்  எனப்படும்  மல்லிகார்ஜுன ஷேத்ரம் தலை மருதம் என்றும், திருநெல்வேலிக்கு அருகில் உள்ள திருபுடை மருதூர் கடை மருதம் என்றும் இவை இரண்டுக்கும் இடைப்பட்ட பகுதியில் இருப்பதால் இது இடை மருதம் என்றும் அழைக்கப் படுகிறது. சுவாதி நட்சத்திரக் காரர்கள் வழிபட வேண்டிய தலம் இது.

சாதாரணமாக சிவன்  கோவில்களில் பிரகாரத்தில் விநாயகர், சுப்பிரமணியர், தட்சிணாமூர்த்தி, துர்க்கை, பைரவர்,சண்டிகேஸ்வரர் போன்ற தெய்வங்களை தரிசிக்கலாம். இந்த கோவிலுக்கோ திருவலஞ்சுழி(விநாயகர்), சுவாமி மலை(சுப்பிரமணியர்), ஆலங்குடி(தட்சிணாமூர்த்தி), பட்டீஸ்வரம் (துர்க்கை) சீர்காழி சட்டநாதர் கோவில் (பைரவர்), சிதம்பரம்(நடராஜர்) போன்ற கோவில்களே பரிவார தேவதைகளாக விளங்குவது ஒரு சிறப்பு.

பட்டீஸ்வரம்:

காமதேனுவின் மகள் பட்டியல் வணங்கப்பட்ட தேனுபுரிஸ்வரர் என்னும் சிவன் கோவிலே பிரதானமாக இருந்தாலும், பட்டீஸ்வரம் என்றாலே இங்குள்ள துர்க்கை அம்மனே பெரும்பாலநோர்க்கு நினைவில் வரும். அத்தனை சக்தி வாய்ந்த அம்மன். ராஜராஜசோழனின் மந்திரியாக இருந்த அன்பில் அநிருத்த பிரம்ம ராயரின் இஷ்ட தெய்வம். சாந்தம் தவழும் அழகிய வடிவம். இரண்டு வருடங்கள் முன்பு வரை கூட அம்மனுக்கு மடிசார் புடைவைதான் அணிவித்து வந்தார்கள். இப்போதோ சாதாரண மாம்பழ கட்டு. காலம் போகிற போக்கில் சூடிதார் அணிவிக்காமல் இருந்தால் சரி!

இந்தக் கோவிலில் சிவன் சந்நிதியிலிருந்து பார்த்தால் நேராக வீதி கண்ணில் படுகிறது. நந்தி சிவனுக்கு நேராக இல்லாமல் சற்று நகர்ந்து உள்ளது. ஒரு கோடை காலத்தில் பக்தர்கள் புடை சூழ திருஞான சம்பந்தர் பஜனை செய்தபடி வரும் அழகை காண விரும்பிய சிவா பெருமான் நந்தியை சற்று நகர்ந்து இருக்கும்படி கட்டளை இட்டாராம். அதன்படி அவரும் நகர்ந்து இருக்கிறார்.

திரு நாகேஸ்வரம்:

ராகுவிற்கான பரிகார தலம் இது. இங்குள்ள சண்டிகேஸ்வரர் சந்நிதியில் மூன்று யுகங்களுக்கான(த்ரேதா யுகம், த்வாபர யுகம், கலி யுகம்) மூன்று சண்டிகேஸ்வரர்கள் உள்ளனர்.  தனி கோவிலில் குடி கொண்டிருக்கும் கிரி குஜாம்பாள் சந்நிதியில் லலிதா சஹஸ்ர நாமத்தில் வரும் ச சாமர ரமா வாணி சவ்ய தக்ஷின சேவிதாயை என்னும் நாமத்திர்கேற்ப சரஸ்வதியும்,லக்ஷ்மியும் அம்மனுக்கு இரு புறங்களிலும் எழுந்தருளி இருப்பதை தரிசிக்கலாம். அம்மனுக்கு புனுகு சட்டம் சார்த்தப் பட்டிருக்கிறது, அபிஷேகம் கிடையாது.



திருபுவனம் கோவில் நன்றாக பராமரிக்கப்படுகிறது. அதைப் போலவே கணபதி அக்ரஹாரம் விநாயகர் கோவிலும் அளவில் சிறியதாக இருந்தாலும் சிறப்பாக பராமரிக்கப் படுகிறது.

இருபது வருடங்களுக்கு முன் அர்ச்சகர் ஒரு நாளைக்கு ஒரு முறை வந்து அர்ச்சனை செய்து விட்டு போன திங்களூர்(நவ கிரக கோவில்களில் சந்திரனுக்கு உரியது) இன்று யத்ரீகர்களால் நிரம்பி வழிகிறது. கோவிலுக்கு முன்னால் மண்டபம் எடுத்து கட்டப்பட்டு சிறப்பாக இருப்பதை காண சந்தோஷமாக இருக்கிறது. இங்கு நவக்ரகங்களும் சூரியனை பார்த்தபடி இருக்கின்றன.

இன்றைக்கு சிறு கிராமங்களாக இருக்கும் ஊர்களில் அமைந்திருக்கும் பிருமாண்டமான கோவில்களை பார்க்கும் பொழுது ஒரு காலத்தில் அவை பெரிய ஊர்களாக இருந்திருக்கக் கூடும் என்று தோன்றுகிறது. அவைகளில் சில நன்றாக பராமரிக்கப் படுகின்றன. சில கோவில்களில் ஒரே ஒரு அர்ச்சகர் அம்மன் சந்நிதியை பூட்டி விட்டு சுவாமி சந்நிதிக்கும், சுவாமி சந்நிதியை பூட்டி விட்டு அம்மன் சந்நிதிக்கும் வந்து பூஜை செய்கிறார். நம் முன்னோர்கள் நமக்கு விட்டு சென்றிருக்கும் பொக்கிஷங்கள் கோவில்கள். அவைகள் காப்பாற்றப் பட வேண்டுமானால் அர்ச்சகர்கள் போஷிக்கப் பட வேண்டும். அதை செய்ய வேண்டியது நம் கடமை.  





Friday, May 16, 2014

கேட்ட ஞாபகம் இல்லையோ..?

கேட்ட ஞாபகம் இல்லையோ..?




ஏப்ரல் 24 ரேடியோவை கண்டுபிடித்த மார்கோனி பிறந்த நாளாம். எப்.எம்.ரேடியோ ஒன்றில் சொன்னார்கள். அதைக் கேட்டதும் பல பழைய நினைவுகள் கிளர்ந்தெழுந்தன.  நான் சிறுமியாக இருந்த பொழுது அதாவது 1960களில் ரேடியோ என்பது ஒரு ஆடம்பர பொருள். அப்பொழுதெல்லாம் ரேடியோ  வைத்துக் கொள்ள வேண்டுமென்றால் லைசென்ஸ் வாங்க வேண்டும். எங்கள் தெருவில் ராமையா மாமா என்பவர் வீட்டில்தான் ரேடியோ உண்டு. நல்ல கச்சேரிகள், கிரிகெட் மேட்ச் கமெண்ட்ரி இவைகளை அவர்கள் வீட்டு வாசல் திண்ணையில் ஸ்டூல் போட்டு அதில் ரேடியோவை வைத்து பெரிதாக ஒலிக்க வைப்பார்கள், விருப்பமுள்ளவர்கள் உட்கார்ந்து கேட்பார்கள். ஆனால் அவர்களுக்கு சினிமா பாடல்களில் விருப்பம் இல்லாததால் சினிமா பாடல்கள் கேட்க முடியாது. அந்த பாக்கியம் எங்கள் எதிர் வீட்டில் இருந்த ஸ்ரீனிவாச ஐயர் என்பவர் ரேடியோ வாங்கியவுடந்தான் கிட்டியது. அவர்கள் வீட்டில்தான் நேயர் விருப்பம், ஞாயிற்றுக் கிழமைகளில் ஒலிச்சித்திரம் அல்லது  நாடகம் இவைகளை கேட்போம். விடுமுறைகளில் ஊருக்குச் செல்லும் பொழுது தாத்தா வரும் வரை சினிமா பாடல்கள் அதுவும் வால்யும் குறைவாக வைத்து கேட்கலாம்.


எழுபதுகளில் நிலைமை மாறி ரேடியோ எல்லா வீடுகளிலும் ஒரு தவிர்க்கமுடியாத அங்கமாகி விட்டது. எழுபதுகளின் துவக்கத்தில் தொலை காட்சி பெட்டி சென்னை போன்ற பெரு நகரங்களுக்கு வந்து விட்டாலும் இப்போது அங்கு அது அடம்பர வஸ்து! மேலும் தொலை காட்சியில் ஒளி பரப்பு மாலை ஆறு மணிக்குத்தான் துவங்கும் ஆகவே ரேடியோ தன் இடத்தை தக்க வைத்துக் கொண்டது. அந்தக் காலத்தை ரேடியோவின் பொற்காலம்  என்றே கூறலாம்.  சிறிய  ட்ரான்சிஸ்டர் ரேடியோ பாத்ரூம் உட்பட எல்லா இடங்களுக்கும் எங்களோடு வரும். இதில் கவனிக்கப் பட வேண்டிய விஷயம் அந்த காலங்களில் ரேடியோவில் தண்ணீர் தெளிக்காமல் குளிக்க கூடிய அளவிற்கு குளியல் அறை அத்தனை பெரிதாக இருந்திருக்கிறது!!

வியாழக் கிழமைகளில் காலை 5:30க்கு சிலோன் ரேடியோவில் சாய் பஜன், கலை 7:20 க்கு விவித பாரதியில் 'சங்கீத் சரிதாவில் கேட்ட லதா மங்கேஷ்கர் பாடிய  சில மீரா பஜன்கள் இப்போதும் நினைவில் இருக்கின்றன. வெள்ளி கிழமைகளில் திருச்சி ரேடியோவில் காலை 8:30க்கு மங்கள வாத்தியம் என்று நாதஸ்வரம் ஒலிபரப்புவார்கள். அதைத் தவிர ரேடியோ விழா மற்றும் இசைவிழா கச்சேரிகள், சங்கீத உபன்யாசங்கள் கேட்க தடை எதுவும் கிடையாது. சினிமா பாடல்கள் மட்டும் பெரிதாக வைத்து விட முடியாது. "என்ன டீ  கடை மாதிரி அலறுகிறது .." என்று பட்டென்று ரேடியோவை நிறுத்தி விட்டு போய் விடுவார்கள் வீட்டு  பெரியவர்கள்.  நல்ல வேளை இளையராஜா வந்தார், அவருடைய காம்போசிஷன் என் அப்பாவுக்கு பிடித்தது. "இளையராஜா ஜீனியஸ்தான்" என்று அப்பா மெச்சிக் கொண்டதால்,'ஆயிரம் தாமரை மொட்டுகளே'வையும், செந்தாழம் பூவில் வந்தாடும் தென்றலையும் பெரிதாக வைத்து ரசிக்க முடிந்தது.

இசை கச்சேரிகள் மட்டுமல்ல காரைக்குடி கம்பன் விழா பட்டிமன்றங்களும் ரசித்த விஷயங்கள். அவர்களில் நீதிபதி எம்.எம்.இஸ்மாயில் தவிர திருச்சி தேசிய கல்லூரி பேராசிரியர் திரு. ராதா கிருஷ்ணன், திரு. திருமேனி, திரு.சத்தியசீலன், குன்றக்குடி அடிகளார் போன்றவர்களின் பேச்சு மிகவும் ரசிக்கத்தக்க வகையில் இருக்கும்.

சினிமா பாடல்களை ஒலி பரப்பியதில் சிலோன் ரேடியோவுக்கு தனி இடம் உண்டு. பாடல்களை விரும்பி கேட்டவர்களின் பெயர்களை, "கலா,மாலா பாலா,லீலா... ராஜேந்திரன், மகேந்திரன், கிருபாகரன்.. என்று ரைமிங்காக அவர்கள் படிக்கும் அழகு..!  பாடல்களை மட்டும் ஒலி பரப்பாமல், அந்தப் பாடல்களை  எழுதிய கவிஞர்களின் கற்பனைத் திறன், சந்த சிறப்பு, இவைகளையும் நடு நடுவே விளக்குவார்கள். நிகழ்ச்சி முடியும் பொழுது, "ஐயோ ராஜா என்னை விட்டு போயிடீங்களா.."? என்று நீயா படத்தில் ஸ்ரீ பிரியா பேசும் டயலாக்கை ஒலி பரப்பி, உடனே, "இல்லை ஸ்ரீ பிரியா மீண்டும் அடுத்த வாரம் இதே நேரத்தில் சந்திக்கலாம்" என்று கூறிய ராஜாவின் சாதுர்யம் யாருக்குத்தான் பிடிக்காது !! ரேடியோ சிலோனின் ராஜாவும் மயில்வாகனனும் பலரைக் கவர்ந்த ரேடியோ ஜாக்கிகள்.

அப்படி நம்மூரில் பலரைக் கவர்ந்த செய்தி வாசிப்பாளர்கள் என்று சரோஜ் நாராயணசுவாமி, விஜயம், மற்றும் பத்மநாபன் இவர்களை குறிப்பிடலாம். "தனது அறிக்கையில் பிரதமர் திட்ட வட்டமாக அறிவித்தார்" என்று விஜயம்  செய்தி வாசிக்கும் பொழுது திட்டத்திலும், வட்டத்திலும் அவர் கொடுக்கும் அழுத்தம் இன்னும் என் நினைவு அடுக்குகளில் இருக்கிறது. வீட்டு பெரியவர்கள் ரேடியோவில் நியூஸ் கேட்கும் பொழுது கை குழந்தை கூட அழக் கூடாது என்பது அப்போது பல வீடுகளில் எழுதப்படாத சட்டம்.

ஞாயிற்று கிழமை மதியம் ஒலி பரப்பாகும் போர்ன்விட்டா க்விஸ் கான்டெஸ்ட், வெள்ளி இரவு ஒலி பரப்பான பின்னிஸ் டபுள் ஆர் க்விட்(Binny's double or quit) வினாடி வினா நிகழ்சிகளில் சரியான விடை அளித்து விட்டால் அப்பா லேசாக சிரித்தபடி தலை அசைப்பார்.

இரவு 9:30க்கு விவித பாரதியில் வண்ணச்சுடர் என்று மேடை நாடகங்களை ஒலி பரப்புவார்கள். அதில் மனோகர் உட்பட விசு, மௌலி, ஒய்.ஜி.பி., எஸ்.வி.சேகர், பூர்ணம் விஸ்வநாதன், காத்தாடி ராமமூர்த்தி, போன்ற எல்லா பிரபல நாடக குழுக்களின் நாடகங்களையும் கேட்டு ரசிப்போம். வண்ணச்சுடர் ஒலிபரப்பாகும் நேரத்தில்தான் அப்பா சாப்பிட உட்காருவார். அப்போது ஏதாவது அழுகை வசனம் கேட்டது என்றால் அப்பாவுக்கு கோபம் வரும். "சாப்பிடும் நேரத்தில் என்னமா? அதை நிறுத்துங்களேன்.." என்று சத்தம் போடுவார் அதனால் ஒலி மிகவும் குறைந்து விடும்.

1981இல் டில்லியில் ஏஷியன் கேம்ஸ் நடந்த பொழுது கலர் டி.வி இந்தியாவில் அறிமுகம் செய்யப் பட்டது. கொடைக்கானலில் சாட்டிலைட் அமைக்கப் பட்டு ஹிந்தி நிகழ்சிகளை பார்க்கலாம் என்று வகை செய்யப் பட்டது. பெரும்பாலான வீடுகளில் தொலைகாட்சிப் பெட்டி ஒரு விருந்தினரைப் போல வந்தது. சென்னை வாசிகளைப் போல நாங்களும் மதியத்தோடு ரேடியோவுக்கு விடை கொடுத்து விட்டு மாலைகளில் தொலை காட்சி முன் உட்கார்ந்து புரிகிறதோ இல்லையோ ஹம் லோக், கர் ஜமாய், ஏக் கஹானி(இது நிஜமாகவே ஒரு நல்ல சீரியல்) போன்றவற்றை ரசிக்க ஆரம்பித்தோம். 87இல் தமிழ் நிகழ்சிகளையும் பார்க்கலாம் என்ற நிலை வந்தது. இனிமேல் ரேடியோவுக்கு என்ன வேலை? அது மட்டுமில்லை தொழில் நுட்பம் வளர வளர சினிமா பாட்டோ, கச்சேரியோ, புராண சொற்பொழிவோ ரேடியோவைத்தான் நம்பி இருக்க வேண்டும் என்ற நிலை மாறி விட்டது. இன்றைக்கு கைபேசியிலேயே நாம் கேட்க விரும்பிகிறவைகளை அப்லோட் செய்து கொள்ள முடியும். திடீரென்று ரேடியோ மிர்ச்சியின் தயவால் ஏகப்பட்ட எப்.எம்.கள்.  பெயர்தான் வேறு வேறாக  இருக்கின்றதே ஒழிய செயல்பாடு எல்லாவற்றுக்கும் ஒன்றுதான். ஓவர் டாகிங்+கலாய்ப்பு+சினிமா=எப்.எம். என்றாலும் அவ்வப்பொழுது கேட்பேன். சில நிகழ்ச்சிகளில் கலந்தும் கொள்வேன்.


      
பின் குறிப்பு:
இது ஒரு மீள் பதிவு. 

Wednesday, April 30, 2014

கும்பகோணத்தை சுற்றி ஒரு குறும் சுற்றுலா!

கும்பகோணத்தை சுற்றி ஒரு குறும் சுற்றுலா!

சுவாமி மலைக்குச் செல வேண்டும் என்று கொஞ்ச நாட்களாக நினைத்துக் கொண்டிருந்தேன். அங்கே செல்லலாம் என்று முடிவெடுத்த பொழுது, "ஏன் சுவாமி மலை மட்டும் செல்ல வேண்டும்? பக்கத்தில் இருக்கும் வேறு சில கோவில்களுக்கும் சென்று வரலாமே" என்று என் மகன் கேட்க, இதுவும் நல்ல யோசனையாக இருக்கிறதே என்று அப்படியே செய்ய முடிவெடுத்தோம்.

உழவன் விரைவு வண்டியில் பயணித்து காலை 5:45க்கு கும்பகோணத்தை அடைந்தோம். ஏப்ரல் மாத மத்தியல் விடியல் காலையில் மூடு பனி!!! ஆச்சர்யம்! கும்பகோணம் இப்போது சுற்றுலா மையம் ஆகி விட்டது.  நவீன வசதிகளோடு நிறைய ஹோட்டல்கள். குக்கிராமமான  சுவாமி மலையில் கூட நவீன வசதிகளோடு விடுதிகள்..!ஆன் லைனில் முன் பதிவு செய்து கொள்ளலாம்.

சுவாமி மலை என்று பொதுவாக அழைக்கப்படும் இந்தக் கோவிலுக்கு திருவேரகம் என்றும் ஒரு பெயர் உண்டு என்பதும் இது முருகனின் ஆறுபடை வீடுகளில் ஒன்று என்பதும் பலருக்கும் தெரிந்திருக்கும். சுவாமி மலை என்று அறியப்பட்டாலும் உண்மையில் இது ஒரு மலை கிடையாது,சிறிய குன்றுதான் அதுவும் செயற்கையாக உருவாக்கப்பட்ட குன்று என்பதால் கட்டுமலை என்று அழைக்கப்படுகிறது என்பது சிலருக்கே தெரிந்திருக்கும். இந்த கோவில் இரண்டு நிலைகளாக உள்ளது. முதல் நிலையில் மீனாட்சி அம்மன்,சுந்தரேஸ்வர சுவாமி, சண்டிகேஸ்வரர், மற்றும் நவக்ரகங்களுக்கு தனித் தனி சந்நிதிகள் உள்ளன. அங்கிருந்து வருடங்களின் பெயர்களை கொண்ட அறுபது படிகளை ஏறிச் சென்றால் முருகன் சந்நிதி. அதற்கு முன் தென் திசை நோக்கி இருக்கும்விநாயகரை வணங்கி கொள்கிறோம் (வேறு ஏதாவது கோவில்களில் இப்படி தென் திசை பார்த்திருக்கும் பிள்ளையார் உண்டா என்று தெரியவில்லை). நெடிதுயெரெந்திருக்கும் முருகன். கண் குளிர தரிசனம் செய்கிறோம்!


அங்கிருந்து திருவலஞ்சுழி சென்றடைந்தோம். திருவலஞ்சுழி என்றதும் பெரும்பாலானோர்  வெள்ளை விநாயகர் கோவில்தான் பிரதானம் என்று நினைத்துக் கொள்வோம்.  ஆனால் அடிப்படையில் இது பெரிய நாயகி உடனுறை ஜடாமுடிநாதர் என்னும் கபர்தீஸ்வரர் ஆலயமாகும்! பிருமாண்டமான கோவில்! கோவிலில் நுழைந்து கொடிமரத்தை தாண்டியதுமே வெள்ளை விநாயகர் என்னும் ஸ்வேத விநாயகர் சந்நிதி.
இந்திரன் பூஜித்த சிறிய வெண்ணிற விநாயகர்!அவருக்கு முன் பிரசித்தி பெற்ற ஒற்றைக் கல்லினால் ஆன  பலகணி(சாளரம்). அந்த பலகணி மட்டுமல்ல கோவில் முழுவதிலுமே அழகான சிற்ப வேலைப்பாடுகள்! சுவாமியை தரிசனம் செய்து விட்டு தனி கோவிலில் எழுந்தருளி இருக்கும் பெரிய நாயகியையும் வணங்குகிறோம். அம்மன் சந்நிதிக்கருகில் அஷ்ட புஜ துர்கைக்கென்று தனி சந்நிதி.   ராஜ ராஜ சோழன் வணங்கிய 'நிசும்ப சூதனி' இதுதான் என்றும் ஒவ்வொரு முறை போருக்குச் செல்லும் முன்னும்  இவளை வணங்கிச் சென்றதால்தான் போர்களில் வெற்றி பெற்றான் என்றும் அருகில் வைக்கப் பட்டிருக்கும் அறிவிப்பு பலகை சொல்கிறது. ஆனால் நிசும்ப சூதனி கோவில் தஞ்சாவூரில்தான் இருக்கிறது என்றும் இங்கிருக்கும் அஷ்டபுஜ துர்கையை ராஜ ராஜ சோழன் வணங்கினான் என்பதற்கு ஆதாரம் இல்லையென்றும் எழுத்தாளர்  பாலகுமாரன் கூறுகிறார். எப்படி இருந்தாலும் கண்களில் கருணை வழியும் துர்கையை வணங்கிக் கொள்கிறோம்.

--தொடரும்

பின் குறிப்பு:

திருவலஞ்சுழி தல புராணம்:


குடகு மலையிலிருந்து புறப்பட்ட காவிரி, திருவலஞ்சுழிக்கு முன்னால் ஒரு
த்வாரத்தில்(குழிக்குள்) சென்று மறைந்து  விட்டது. காவேரி தஞ்சையின் இறுதி வரை வரும், தாம் பயன் பெறலாம்,என்று நினைத்த சோழ தேச மக்களும், மன்னனும் ஏமாற்றமடைந்தனர். காவிரியை மீண்டும் வெளியே கொணர்வது எப்படி என்று ஆலோசித்தப்பொழுது, ஒரு அரசன் அல்லது முற்றும் துறந்த முனிவர் ஒருவரை பலியிட்டால், காவேரி மீண்டும் வெளிவந்து ஓடத் துவங்கும் என்று கூறப்பட்டது. உலக மக்களின் நன்மைக்காக ஏரகண்ட முனிவர் தன்னை பலியிட்டுக் கொள்ள காவிரி தான் மறைந்திருந்த பிலத்திலிருந்து வெளிப்பட்டு இவ்விடத்தில் வலப்புறமாக சுழித்துக்கொண்டு ஓடத் துவங்கியது. அதனாலேயே இவ்விடம் திருவலஞ்சுழி என்று வழங்கப்படலாய்ற்று. அப்பொழுதே காவேரியை தஞ்சை டெல்டா பகுதிக்கு வரவழைப்பது பிரச்சனைதான் போலிருக்கிறது!!   


   








Thursday, April 10, 2014

ராகு காலமும் எம கண்டமும்

ராகு காலமும் எம கண்டமும் 





ஒரு முறை சூரியன் முதல் சனி வரை உள்ள கிரகங்கள்  சிவ பெருமானிடம் சென்று தாங்கள் மனிதர்களுக்கு உதவும் பொருட்டு ஒரு நாளில் சில நாழிகைகளை(மணித்துளிகளை) தங்களுக்கு தருமாறு வேண்டினர். சிவனும் அவர்களின் நல்ல எண்ணத்தை மதித்து ஒரு நாளில் மூன்று மணி நேரங்கள் அவர்களுக்கு என்று ஒதுக்கினார். அந்த மூன்று மணி நேரங்களையும் சேர்ந்தர்போல ஒரே சமயத்தில் கொடுக்காமல் காலையில் ஒரு மணி நேரம். மதியம் ஒரு மணி நேரம், இரவில் ஒரு மணி நேரம் என்று பிரித்து வழங்கினார். அது ஹோரை என்று வழங்கப்படும்! ஒவ்வொரு நாளும் அதற்குரிய ஹோரையில் துவங்கும். உதாரணமாக திங்கள் கிழமையின் முதல் ஹோரை சந்திர ஹோரை ஆகும். ஒவ்வொரு ஹோரையிலும் சில காரியங்கள் செய்வது சிறந்த பலனைத் தரும். இதை விவரித்தால்... 

சூரிய (ஞாயிறு) ஹோரையில் அரசாங்க அலுவல்களை செய்யலாம். 
சந்திர ஹோரையில் பிரயாணங்கள்,திருமண விஷயங்கள் செய்வது நலம். 
செவ்வாய் ஹோரையில் மருந்துண்ணுவதும், சிகிச்சை மேற்கொள்ளுவதும், போருக்கு செல்லுவதும், கடன் அடைப்பதும், நிலம்,வீடு சம்பந்தப்பட்ட விஷயங்களைத் தொடங்குவதும் வெற்றியைத் தரும். 
புத ஹோரையில் கல்வி, வியாபாரம் போன்ற காரியங்களை ஆற்றுவது நலம் பயக்கும். 
குரு(வியாழன்) ஹோரை எல்லா நல்ல காரியங்களுக்கும் உகந்தது. குறிப்பாக, கோவிலுக்குச் செல்லுதல், மகான்களை தரிசித்தல், பூஜை போன்ற தெய்வீக விஷயங்களுக்கு சிறப்பானது. 
சுக்ர(வெள்ளி) ஹோரை திருமணம் பேச,திருமணம் நடத்த, நிச்சயதார்த்தம் முடிக்க,ஆபரணங்கள் வாங்க, பூன,க்ரஹ பிரவேசம் சாந்தி முஹுர்த்தம் போன்ற சுப காரியங்கள் நடத்த ஏற்றது. 
சனி ஹோரையில் இயந்திரங்கள் மற்றும் வாகனங்களை அமைப்பது/இயக்குவது எண்ணெய் ஆட்டுவது போன்ற காரியங்களைச் செய்யலாம்.  

மேற்கண்ட ஏழு கிரகங்களுக்கும் கிடைத்த வரத்தை கேள்விப்பட்ட சாயா கிரகங்களான ராகுவும், கேதுவும் தங்களுக்கும் அதைப் போல  நாளில் மூன்று மணி நேரம் வேண்டும், ஆனால் அந்த மூன்று மணி நேரத்தில் மற்ற கிரகங்களைப் போல மனிதர்களுக்கு நன்மை செய்யாமல் தீமை செய்ய பயன் படுத்துவோம் என்று எண்ணின. அவைகளின் தீய எண்ணத்தை புரிந்து கொண்ட இறைவன், "மற்ற கிரகங்கள் மனிதர்களுக்கு நன்மை செய்ய நினைத்தன, ஆனால் நீங்கள் இருவரும் கெடுதல் செய்ய விரும்புகிறீர்கள், நன்மை,தீமை இரண்டும் கலந்ததுதான் வாழ்க்கை, ஆகவே உங்களுக்கும் ஒரு நாளில் சில மணித் துளிகளை ஒதுக்குகிறேன், ஆனால் மற்ற கிரகங்களுக்கு போல் மூன்று மணி நேரம் கிடையாது,அதில் பாதியான ஒன்றரை மணி நேரமே.." என்றார். அது முதல் தினமும் ராகுவிற்கான ஒன்றரை மணி நேரம் ரகு களம் என்றும், கேதுவிற்கான ஒன்றரை மணி நேரம் எமகண்டம் என்றும் கடைபிடிக்கப் படலாயிற்று. அந்த நேரத்தில் நல்ல செயல்கள் எதுவும் தொடங்குவது அத்தனை ஸ்லாகியமல்ல என்பது ஒரு நம்பிக்கை
என்றாலும் விருச்சிக லக்னம் மற்றும் விருச்சிக ராசியை சேர்ந்தவர்களுக்கும், மகர ராசியில் ராகு இருக்க பிறந்தவர்களுக்கும் ராகு காலம் எந்த வித தீய பாதிப்பையும் ஏற்படுத்தாது என்பதும் அனுபவ ஜோதிட பாடம். மேலும் ரகு காலம், எம கண்டம் இரண்டிற்கும் இடையில் நல்ல ஹோரைகள் வந்து விடுவதும் அவற்றின் பாதிப்பிலிருந்து நம்மை பாதுகாக்கும். இப்படி நல்ல ஹோரைகளால் நம்மை காக்க வேண்டும் என்பதற்க்காகத்தான் அவை ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நேரத்தில் துவங்குகின்றன போலும்!     

Monday, March 24, 2014

idiot box wisdom box

idiot box wisdom box


தொலை காட்சியை அதாவது டி.வி. யை இடியெட் பாக்ஸ் என்று சொல்பவர்கள் உண்டு. காரணம், டி.வி. பார்க்கும் பொழுது நம் சிந்திக்கும் திறன் குறைந்து விடுவதுதான். ஆனால் முட்டாள்கள் என்று நாம் நினைக்கும் சிலர் சில சமயங்களில் சில அபூர்வ கருத்துக்களை கூறுவார்கள். அது போல டி.வி.மூலமும் நாம் சில புதிய விஷயங்களை அறிந்து கொள்ள முடியும்.

டி.வி.யில் எனக்கு கிடைத்த சில விஷய தானங்கள்:

சமையலுக்கு தாளித்தவுடன் பாத்திரத்தை மூடி விட வேண்டும். அப்போதுதான் சூடாக தாளித்த கடுகு அல்லது சீரகத்திலிருந்து வெளிப்படும் புகை தாளிக்கப்பட்ட பண்டத்தின் மீது ஒரு ஏடு போல படிந்து அந்த பண்டம் மூன்று மணி நேரம் வரை கேட்டுப் போகாமல் பாதுகாக்குமாம். இதை கூறியது திரு. சுகி சிவம் அவர்கள்!

சென்னையில் கோடம்பாக்கம், நுங்கம்பாக்கம், புரசைவாக்கம்(வாக்கம், பாக்கம் இரண்டும் ஒரே பொருள் உடையவைதான்),மேடவாக்கம், புழுதிவாக்கம்,மடிப்பாக்கம் என்று பல வாக்கங்கள்/பாக்கங்கள் இருப்பதை அறிவோம். இங்கு மட்டும் ஏன் இத்தனை பாக்கங்கள் தெரியுமா? ஏரி போன்ற நீர் நிலையை ஒட்டிய பகுதிதான் பாக்கம் என்று அழைக்கப்படுமாம். இதை கூறியது திரு.கண்ணன் பட்டச்சார்யா அவர்கள்.

மேலே குறிப்பிட்ட இடங்களில் எல்லாம் ஒரு லேக்வியு(lake view) தெருவோ, லேக் வியு அபார்ட்மெண்டொ இருப்பதை பார்க்கலாம். சென்னையின் உள்ளேயும் புறமும் நூற்றி ஐம்பதிர்க்கும் மேற்பட்ட நீர் நிலைகள் இருந்தனவாம்!  அவற்றில் பெரும்பான்மை தூர்க்கப்பட்டு விட்டன என்பது எவ்வளவு பெரிய சோகம்!  

நேஷனல் ஜாக்ரபி சானலில் ஒரு முறை பகார்டி ரம் தயாரிப்பதை காட்டினார்கள். ரம் நிரப்பும் முன் அந்த குப்பிகளை தண்ணீரால் கழுவாமல் ரம்மால்தான் கழுவுவர்களாம். காரணம் குப்பிகளில் ஒரு வேளை தண்ணீர் தேங்கி,அதனுடன் ரம் கலந்து விட்டால், ரம்மின் சுவை மாரி விடும் என்னும் எச்சரிக்கையாம்! செய்யும் தொழிலில் அவர்களின் அக்கறை என்னை வியக்க வைத்தது.

இதைத் தவிர 'அனிமல் பிளானெட்' சானலில் காண்பிக்கப் படும் மிருகங்களின் வாழ்கை முறைகளைப் பார்க்கும் பொழுது மனிதர்களாகிய நாம் மிருகங்களிடமிருந்து எந்த வகையில் வித்தியாசப்படுகிறோம்? என்று தோன்றும். நமக்கிருக்கும் அத்தனை உணர்வுகளும் அவைகளுக்கும் இருக்கின்றன என்பது மட்டுமல்ல, அதை நம்மைப் போலவே அவைகளும் வெளிப் படுத்துகின்றன என்பதுதான் ஆச்சர்யம்!

இதைத் தவிர ஜோதிட சம்பந்தமாக சில நல்ல தகவல்கள் டி.வி.யில் கிடைத்திருக்கின்றன. அதைப் போலவே ஒரே பெற்றோருக்கு பிறந்த இரு குழந்தைகளுள் ஒன்று சிறப்பாகவும், மற்றொன்று கஷ்ட நிலைமையிலும் இருக்க காரணம் என்ன என்னும் என்னுடைய நீண்ட கால கேள்விக்கு ஜக்கி வாசுதேவ் அவர்கள் அளித்த கர்மா பற்றிய விளக்கம் விடையளித்தது. பூஜ்ய ஸ்ரீ முரளி தர சுவாமிகளின் அருளுரைகள் திறக்கும் கதவுகள் ஏராளம்!
ஆக தொலைகாட்சி தொல்லை காட்சியாக எப்போதுமே இருப்பதில்லை.









Thursday, March 13, 2014

சாவித்ரி

சாவித்ரி

இன்னும் இரண்டு நாட்களில் காரடையான் நோன்பு வருகிறது. அஸ்வபதி என்னும் அரசனுக்கு மகளாக பிறந்து, குறை ஆயுள் உடையவன் என்று அறிந்தும் சத்தியவானை மணந்து, தன பதிவ்ரதா தன்மையினாலும், தெய்வ பக்தியினாலும், எமனுடன் போராடி தன் கணவனின் உயிரை மீட்டவள் சாவித்ரி என்பது எல்லோருக்கும் தெரிந்த கதை. சாவித்ரி என்னும் அந்தப் பெண் மட்டுமல்ல, சாவித்ரி என்னும் பெயரே ஒரு அசாதரணமான தன்மை கொண்டதோ என்று தோன்றுகிறது.

சாவித்ரி வித்யாசாலா:

முதலில் எங்கள் ஊரான திருச்சியிலிருந்து ஆரம்பிக்கிறேன். யாரிடமாவது நான் பிறந்து, வளர்ந்து, படித்தது எல்லாம் திருச்சியில்தான் என்றால் உடனே அவர்கள், "எங்கே படித்தீர்கள்? சாவித்ரி வித்யாசாலாவிலா?"  என்பார்கள். அப்படி திருச்சிக்கே ஒரு அடையாளமான கல்வி நிறுவனம் அது. நாம் உலகத்தின் எந்த மூலைக்குச் சென்றாலும் அங்கே எஸ்.வி.எஸ்.சிலோ  (சாவித்ரி வித்யா சாலா வின் சுருக்கம்) அல்லது அதன் சகோதரி நிறுவனமான எஸ்.ஆர். காலேஜிலோ படித்த ஒரு பெண்ணை சந்திக்க முடியும். அவர் அங்கு பிரபலமாகவும் இருப்பார்.

சாவித்ரி வைத்தி:



எண்பது வயதை கடந்தும் சமூக தொண்டில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டிருக்கும்  கொண்டிருக்கும் திருமதி சாவித்ரி வைத்தி 'மண்டே சாரிட்டி கிளப்' மூலம் தன சமூக சேவையை தொடங்கியவர். பின்னர் அதரவற்ற பெண்களுக்காக விஸ்ராந்தி என்னும் முதியோர் இல்லத்தை அமைத்தார். தமிழகத்தின் முதல் முதியோர் இல்லமான அதில் 150 க்கும் மேற்பட்ட மூதாட்டிகள் வசிக்கிறார்கள். இதைத்தவிர ஒற்றை பெற்றோரை(single parent) உடைய குழந்தைகளுக்காக "மலர்ச்சி" என்னும் நிறுவனத்தையும் மனச் சோர்வு உடைய இளம் பெண்கள் தற்காலிகமாக தங்கிப் போக 'நிழல்' என்னும் அமைப்பையும் நடத்திக் கொண்டிருக்கிறார்.

சாவித்ரி - அரபிந்தோவின் அற்புத காவியம்!



ஆன்மீகத்தில் நாட்டமுடையவர்களால் எப்படி  ராமகிருஷ்ண பரமஹம்சரையும், விவேகானந்தரையும், ரமண மகரிஷியையும் தவிர்க்க முடியாதோ அப்படி  தவிர்க்க முடியாத மற்றொரு  மகான் ஸ்ரீ.அரவிந்த கோஷ்!
அவர் எழுதிய பல நூல்களுள் முக்கியமானவை 'லைப் டிவைன்(life divine)',சிந்தசிஸ் ஆப் யோகா(synthesis of yoga)', மற்றும் சாவித்ரி என்னும் அமர காவியம். இதை எழுத அரவிந்தர் 50 வருடங்கள் எடுத்துக் கொண்டார். வெளியிடப்படும் முன்  18 முறைகள் திருத்தி அமைத்தாராம். இரண்டு பாகங்களாக 1950 ம் வருடமும் 1951 ம் வருடமும் வெளியிடப்பட்டது. 

49 காண்டங்களில்,24000 வரிகளில் எமனோடு போராடி தன் கணவன் சத்யவானின் உயிரை சாவித்ரி மீட்ட கதை அருமையான ஆங்கிலத்தில் விவரிக்கப் படுகிறது. இங்கு சத்ய ஜீவிதத்தை சுமந்திருந்தாலும், மரணத்திற்கும்,அறியாமைக்கும் இலக்காகும் ஜீவனுக்கு சத்யவானும், அவனை காக்க இறங்கி வரும் தெய்வீக அருளுக்கு சாவித்ரியும், நிலயாமைலிருந்து சாஸ்வததிர்க்கு நம்மை உயர்த்தும் தவ வலிமைக்கு சாவித்ரியின் தந்தை அஸ்வபதியும், விஷய ஞானம் இருந்தும் தெளிவு இல்லாததால் குருடாகி, தன்னுடைய சிறப்பான ஆளுமையை இழக்கும் அறிவுக்கு சத்யவானின் தந்தையும் உருவகப்படுத்தப் படுகின்றனர் என்று சான்றோர் உரைப்பர். என்னைப் போன்ற சிற்றறிவு கொண்டார்க்கு இக்காவியத்தை படித்து புரிந்து கொள்வது கடினம்தான். அர்த்தம் புரியாவிட்டாலும் என்ன இதன் ஒவ்வொரு வரியும் விசேஷ சக்தி கொண்டது . மந்திரமாக ஜபித்து பலன் அடையலாம். அப்படி பலன் அடைபவர் பலர் இருக்கிறார்கள்.

நடிகையர் திலகம் சாவித்ரி:





நல்ல வேளை இப்போது போல அப்போது கதா நாயகி என்றால் தோள் பட்டை எலும்புகள் தெரிய வேண்டும் என்று யாரும் நினைக்கவில்லை. அது கூட பரவாயில்லை, கதா நாயகி நடிக்கவே தேவை இல்லை என்றும் இல்லை. அப்படி இருந்திருந்தால் குண்டு முகமும், வண்டு கண்களும் கொண்ட இந்த நடிகையின் இயல்பான திறமை கண்டுகொள்ளபடாமலே போயிருக்கும். என்ன நடிப்பு! என்ன நடிப்பு! மிஸ்ஸியம்மாவையும், மாயா பஜாரையும் எத்தனை முறை பார்த்திருக்கிறேன்..! சிவாஜிக்கு இணையாக பலர் நடித்திருக்கிறார்கள், ஆனால் சிவாஜியை தூக்கி சாப்பிட்டு ஏப்பம் விட்டது இரண்டே பேர்தான். ஒன்று நாகேஷ், மற்றொன்று சாவித்ரி! 


இவருடைய நடிப்பு திறமைக்கு ஒரு சாம்பிள் சொல்ல வேண்டும் என்றால் ஒரு முறை பின்னணி பாடகி பி.சுசீலா கூறியதைத்தான் குறிப்பிட வேண்டும். ஒரு தொலைகாட்சி நிகழ்ச்சியில் பி.சுசீலாவிடம், "நீங்கள் பாடியதற்கு எந்த நடிகை மிகச் சிறப்பாக நடித்திருக்கிறார் என்று நினைக்கீறிர்கள்?" என்று கேட்டபொழுது, அவர், சரஸ்வதி சபதம் படத்தில் கோமாதா எங்கள் குலமாதா பாடலில் கொஞ்சம் தம் பிடித்து பாடி  விட்டு இறுதியில் வண்ணகோமதா... என்று முதித்து விட்டு கொஞ்சம் மூச்சு வாங்கி கொண்டிருப்பேன். நான் எந்த இடத்தில மூச்சு வாங்கிக் கொண்டேனோ அதே இடத்தில் சாவித்திரியும் லேசாக மூச்சு வாங்கிக் கொள்வது போல நடித்திருப்பார், அதைப் பார்த்த பொழுது எனக்கு மிகுந்த சந்தோஷமாகவும், ஆச்சர்யமாகவும் இருந்தது."என்றார். அவருடைய இடம் இன்னும் நிரப்பப் படவில்லை.

சாவித்ரி - திரைப்படம்!

1980இல்  பரதன் இயக்கத்தில் மேனகா நடித்து வெளியான 'சாவித்ரி' திரைப்படம் எதிர்ப்பு அலையை சந்தித்தது. வயோதிகரை மணந்து கொள்ளும் இளம் அந்தணப் பெண் வேறு ஜாதியைச் சேர்ந்த ஒரு இளைஞனோடு உறவு கொள்வதாக எடுக்கப்பட்ட அந்த படத்தை தடை செய்யக் கோரி பிராமண சங்கங்கள் போராட்டத்தில் ஈடுபட்டது தமிழக வரலாற்றில் முதல் முறை.

சாவித்ரி என்னும் பெயர் ஒரு கலக்கு கலக்கும் போலிருக்கிறது. உங்களுக்கு தெரிந்த சாவித்ரிகளைப்  பற்றி எழுதுங்கள்! 





  






Sunday, March 2, 2014

கண் தானம் - என் எண்ணம்!

கண் தானம் - என் எண்ணம்!



அவ்வப்பொழுது நம் ஊடகங்களில் கண் தானத்தைப் பற்றி கட்டுரைகளோ, சொர்பொழிவுகளோ வரும். அவை எல்லாமே இலங்கையில்தான் மிக அதிகமாக கண் தானங்கள் நடக்கின்றன, அதற்கு காரணம் அந்த நாடு புத்த மதத்தை தழுவியிருக்கும் நாடு, புத்த மதம் மற்ற உயிர்களுக்கு உதவி புரிவதை வலியுறுத்தும் மதம், எனவேதான் அங்கு கண் தானம் அதிக அளவில் நடக்கிறது என்று கூறுவார்கள்/எழுதுவார்கள். நேற்று(1.3.2014) சனிக்கிழமை சன் டி.வி.யில் 'இந்த நாள் இனிய நாள்' நிகழ்ச்சியில் பேசிய திரு.சுகி.சிவம் அவர்களும் இதையே கூறினார். நம் மத நம்பிக்கைகள் கண் தானத்தை தடுக்கின்றன என்று வருத்தமும் கொஞ்சம் கோபமும் பட்டார். சுகி.சிவம் அவர்களே இப்படி கூறியவுடன், நம் மத நம்பிக்கை ஏன் கண் தானத்தை  தடுக்கிறது? என்று யோசித்தேன், அதை உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன், சரியாய், தவறா கூறுங்கள்.

நம் இந்து மதமும் எல்லா மதங்களையும் போல மற்ற உயிர்களுக்கு உதவி செய்வதை வலியுறுத்தத்தான் செய்கிறது. ஆனால் அது ஏன் உறுப்பு தானங்களை ஆதரிப்பதில்லை? இந்து மதம் என்ன இதயம் இல்லாததா? இல்லவே இல்லை, இங்குதான் நாம் கொஞ்சம் நுட்பமாக யோசிக்க வேண்டும். மற்ற மதங்களில் இல்லாத ஒரு விஷயம் இந்து மதத்தில் வலியுறுத்தப்படுகிறது. அதுதான் கர்மக் கொள்கையும் மறு பிறப்பில் நம்பிக்கையும். அதன்படி ஒருவன் இந்தப் பிறவியில் அடையும் நன்மை தீமைகளுக்கு அவன் சென்ற பிறவிகளில் செய்த நன்மை தீமைகளே (பாவ, புண்ணியங்களே) காரணம் என்பதை அழுத்தி சொல்வதோடு, அந்தக் கர்மங்களை ஆகாமி, சஞ்சித, பிராரப்த என்று மூன்றாகவும் பிரித்து விவரிக்கின்றது. இதில் மிகவும் முக்கியமான ஒரு விஷயம் என்னவென்றால் இந்த கர்ம வினையிலிருந்து யாரும் தப்ப  முடியாது, கடவுள் உட்பட! இதை இந்து மத புராணங்கள் விளக்கும். 

இருக்கட்டும், இதற்கும் உறுப்பு  தானத்திற்கும் என்ன சம்பந்தம் என்று கேட்கிறீர்களா? இந்து மத கோட்பாட்டின்படி யாரோ ஒருவருக்கு இந்தப் பிறவியில் உறுப்பில் குறைபாடு உண்டாகிறது என்றால் அதற்கு அவர் தன்னுடைய  முந்தைய பிறவியில்/பிறவிகளில் செய்த ஏதோ ஒரு தீவினைதான் காரணம். இதை சற்றே விரிவு படுத்திக் கூறினால் அவர் தன்னுடைய பூர்வஜென்ம வினைப் பயனை இந்தப் பிறவியில் அனுபவித்துக் கழிக்கிறார் என்று பொருள். அந்த வினைப் பயனை அவரை முழுவதுமாக அனுபவிக்க விடாமல் தன்னுடைய உறுப்பை தானமாக தருவதன் மூலம் வேறு ஒருவர் தடுத்து விட்டால் அனுபவிக்க வேண்டிய வினை எங்கே செல்லும்? உதாரணமாக நாம் ஒரு பேருந்தில் பயணிக்கிறோம், நல்ல கும்பலான அந்த பேருந்தில் நமக்கு உட்கார இருக்கை கிடைத்து விட்டது. அமர்ந்திருக்கிறோம், அப்போது கையில் குழந்தையோடு ஒரு பெண்மணி ஏறுகிறாள், அவளுக்கு இடம் கொடுக்க வேண்டும் என்று நாம் விரும்பினால் நம்முடைய இடத்தை விட்டுக் கொடுக்க வேண்டும். அவளுக்கும் இடம் கிடைக்க வேண்டும், நானும் உட்கார வேண்டும் என்றால் நடக்குமா?

மகான்களால் மட்டுமே ஒருவரின் வினைப் பயனை வேரறுக்க முடியும். அவர்களுமே சில சமயங்களில் தன் பக்தர்களின் வியாதியை நீக்கிய பிறகு அதன் பாதிப்பை சில நாட்களோ,சில மணி நேரங்களோ அனுபவித்திருக்கிறார்கள் என்பதை படித்தும், கேட்டுமிருக்கிறோம்.  இந்தக் காரணத்தினால்தான் ஹிந்துக்களுக்கு கண் தானம் செய்வதில் தயக்கம் இருக்கும் இன்று நினைக்கிறேன். சரியா? தவறா? சொல்லுங்கள்...






Thursday, October 31, 2013

திருக்கண்டேன் பொன் மேனி கண்டேன் (திருகோவிலூர் திவ்ய தரிசனம்)

திருக்கண்டேன் பொன் மேனி கண்டேன் 
(திருகோவிலூர் திவ்ய தரிசனம்)


அன்று திருகோவிலூரில் நல்ல மழை. தங்க ஒரு இடம் தேடிய அந்த வைணவருக்கு ஒரு வீட்டின் இடை கழியில் இடம் கிடைத்தது. அங்கேயே படுத்துக் கொண்டார். சற்று நேரத்தில் கதவு தட்டப் பட்டது. திறந்தால்,  மழைக்கு ஒதுங்க இங்கே இடம் கிடைக்குமா? என்று கேட்டபடி வாசலில் ஒரு அந்தணர்! நான் ஒருவன் இங்கே படுத்துக் கொண்டிருந்தேன், நாம் இருவர் உட்கார்ந்து கொள்ளலாம் உள்ளே வாருங்கள் என்று அழைத்தார். அந்த இருவரும் அமர்ந்து கொண்டனர். மீண்டும் பட பட படபடவென்று கதவு தட்டப்பட்டது. திறந்தால் இம்முறையும் ஒரு வைணவர் நிற்கிறார். "வெளியே நல்ல மழை. அது நிற்கும் வரை இங்கே தங்கி விட்டு செல்லலாமா"? என்று வந்தவர் கேட்க, தாரளமாக... உள்ளே வாருங்கள், நாங்கள் இருவர் அமர்ந்து கொண்டிருக்கிறோம், நாம் மூவர் நிற்க முடியும் உள்ளே வாங்கள், என்று அவரையும் வரவேற்றனர். இருக்கும் இடத்தில் மூன்று பேரும் நெருக்கி அடித்து நின்று கொண்டிருந்தனர்,மழை சாரலைத் தவிர்க்க கதவையும் சாற்றியாகி  விட்டது. அகவே கும்மிருட்டு! இந்த நிலையில் அந்த மூவருக்கும் இடையே இன்னும் ஒருவர் புகுந்தது போல இட நெருக்கடி...சற்று தள்ளிதான் நில்லுங்களேன் ஏன் இப்படி நெருக்குகிரீர்கள்? நான் எங்கே ஐயா நெருக்குகிறேன்? நீங்கள் அல்லவா என்னை நெருக்குகிறீர்கள்? என்று ஒருவரை ஒருவர் குற்றம் சாட்டிக் கொள்கின்றனர். அந்த மூவருக்கும் இடையே இன்னும் ஒருவரும் நிற்கிறார் என்பது எலோருக்கும் தெரிகிறது, ஆனால் அவருடைய உருவம் தென்படவில்லை. ஒரு விளக்கு இருந்தால் நன்றாக இருக்கும் என்று தோன்றியது ஆனால் விளக்கிற்கு எங்கே போவது? முதலாமவர்க்கு சட்டென்று ஒரு எண்ணம் உதிக்க ஒரு பெரிய விளக்கை ஏற்றினார். ஆம் இந்த உலகத்தையே ஒரு விளக்காக்கி அதில் சமுத்திரத்தை எண்ணையாக ஊற்றி, கதிரவனையே விளக்காக ஏற்றிய விளக்கு.. அதில் அந்த மூவருக்கும் இடையே புகுந்தது யார் என்று ஓரளவுக்கு புலப்பட்டது என்றாலும் தெளிவாக தெரியவில்லை. இன்னொரு விளக்கு இருந்தால் நன்றாக இருக்குமே என்று நினைத்த இரண்டாமவர் மற்றொரு விளக்கை ஏற்றினார் அன்பை விளக்காகவும் ஆர்வத்தை நெய்யாகவும் தம் சித்தத்தை திரியாகவும் கொண்ட விளக்கு.. அதை ஏற்றியவுடன் மூன்றாமவருக்கு பளிச்சென்று புலப்பட்டுவிட்டது. "திருக்கண்டேன் பொன்மேனி கண்டேன்" என்று தொடங்கி தங்களுக்கு இடையே புகுந்திருப்பது சங்கும் சக்கரமும் ஏந்திய தடக்கையினனாகிய நாராயணனே என்று அறிவித்தார். இப்படித்தான் நாலாயிர திவ்ய ப்ரபந்தம் பிறந்தது. அந்த மூவரும் வேறு யாரும் இல்லை, பன்னிரெண்டு ஆழ்வார்களில் முதல் மூவரான பொய்கை ஆழ்வார் பூதத்தாழ்வார், மற்றும் பேய் ஆழ்வார், ஆகும். அப்படிப்பட்ட சிறப்பு வாய்ந்த திருத்தலமான திருகோவிலூருக்கு  செல்லும் பாக்கியம் கிடைத்தது.


புராதனமான கோவில். 192 அடி  உயரமுள்ள கிழக்கு கோபுரம் 108 வைணவ திவ்ய தேச கோவில்களில் உயரமான  கோபுரத்தை உடைய ஒன்று. கருடாழ்வாரை சேவித்துக் கொண்டு மூலவரை தரிசிக்க உள்ளே செல்கிறோம். எந்த வைணவ கோவிலிலும் இல்லாத வழக்கமாய் அர்த்த மண்டபத்தில் விஷ்ணு துர்க்கை காட்சி அளிக்கிறாள். உலகளந்த அண்ணனுக்கு காவலாம் தங்கை!!  சுயம்பு உருவம் என்றார் பட்டாச்சாரியார். கிருஷ்ணன் அவதரித்த பொழுது அவனோடு அவதரித்த மாயாதான் இங்கே விஷ்ணு துர்கையாக எழுந்தருளியிருக்கிறாள் என்றார். தன்னைவணங்கும் பக்தர்களுக்கு கல்வி, உத்யோக ப்ராப்தி, திருமண பேறு, குழந்தை பாக்யம் என அணித்தையும் தருகிறவளாம். 

அவளை வணங்கி உள்ளே செல்கிறோம். பெருமாளின் த்ரிவிக்ரம கோலத்தை தரிசிக்க விரும்பிய ம்ருகண்டு முனிவருக்கு அவரின் தவத்தை மெச்சி பெருமாள் அளித்த தரிசனம்.  அடடா! என்ன திருக்கோலம்! பிரும்மாண்டமாய், இடது திருவடியை தரையில் ஊன்றி, வலது திருவடியை உயர்த்தி, வலது கையில் சங்கும் இடது கையில் சக்கரமும் ஏந்தி புன்னகை தவழும் திருமுகத்தோடு 20 அடி உயர மேனி பார்க்க பார்க்க பரவசமூட்டுகிறது! உயர்த்திய திருவடிக்கருகே மஹாலட்சுமி, உயர்த்திய திருவடியின் கீழே மஹாபலி, ஆதிசேஷன்,இடது திருவடியை பூஜிக்கும் பிரும்மா என்று அற்புத கோலம்!  அதைத்தவிர முதல் மூன்று ஆழ்வார்கள் மற்றும் மிருகண்டு முனிவர் பெருமாளுக்கு இடது புறம் இருக்கிறார்கள். பிரகாரத்தில் தனி சந்நிதியில் புஷ்பவல்லி தாயார். மற்ற கோவில்களில் பார்க்க முடியாத ஒரு அதிசயம், கொடி மரத்திற்கு எதிரே சற்று உயரத்தில் ஒரு சாளரம் போன்ற அமைப்பில் கையில் வெண்ணெய் ஏந்தியபடி நிற்கும் கண்ணனையும் காண முடியும்.

இந்த கோவிலின் மற்ற சிறப்புகள், 108 வைணவ திவ்ய தேசங்களுள் ஒன்று. அதே போல பஞ்ச கிருஷ்னாரண்ய ஷேத்ரங்களுள் ஒன்று. திவ்ய ப்ரபந்தம் தோன்றிய இடம். திருமங்கை ஆழ்வாரால் மங்களாசாசனம் செய்யப்பட்டது. சாதாரணமாக எல்லா கோவில்களிலும் இருப்பதை போல வலது கையில் சக்கரம், இடது கையில் சங்கு என்றில்லாமல்,மாற்றி வலது கையில் சங்கை ஏந்தியிருப்பதால் ஞானத்தை அருளக் கூடியவர் என்று நம்பிக்கை. 
புன்னகை தவழும் பெருமாளின் மலர்ந்த முகத்தை தரிசனம் செய்தால் நம் கவலைகள் மறையும் என்று கோவில் தலபுராணம் தெரிவிக்கிறது. உண்மைதான்! உலகளந்த பெருமாளின் அழகை காணும் போது ,
‘மையோ, மரகதமோ, மறி
     கடலோ, மழை முகிலோ, 
ஐயோ, இவன் வடிவு!’ என்பது ஓர்
     அழியா அழகு உடையான். 
என்னும் கம்ப ராமாயணப் பாடல் நினைவுக்கு வருகிறது.  ராமனின் அழகை வர்ணிக்க முயன்ற கம்பர் முடியாமல் தோற்றுப்  போய்  "ஐயோ! இவன் அழகை எப்படி சொல்வேன்?" என்று முடித்திருப்பார். அதுதான் நினைவுக்கு வருகிறது. இந்தக் கால இளசுகளின் பாஷையில் சொன்னால்,"சான்சே இல்ல, அல்டிமேட்!"

பெருமாளின் திருமுகத்தைப் பார்க்கப் பார்க்க நம் மனதில் ஆனந்தம் பெருகுகிறது. எங்கே ஆனந்தம் இருக்கிறதோ அங்கே கவலைகள் இருக்குமா என்ன? ஒரு முறை திருகோவிலூர் சென்று உலகளந்த பெருமாளை தரிசித்து ஆனந்தம் அடையுங்கள்! விழுபுரத்திலிருந்து 40 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்திருக்கும் திருக்கோவிலூருக்கு விழுப்புரதிலிருந்து ஏராள பேருந்துகள் உள்ளன! திருவண்ணாமாயிலிருந்தும் செல்லலாம். 

Tuesday, October 15, 2013

ராஜா ராணி

ராஜா ராணி 

நீண்ட நாட்களுக்குப் பிறகு நயன்தாராவின் வருகை! கை தட்டி வரவேற்கலாம்! படத்தின் மிகப் பெரிய பலம் அவர்தான்! படம் முழுவதும் பிழியப் பிழிய அழுகிறார் கிளிசரின் போட்ட சினிமா அழுகை இல்லை கண்களில் உள்ள மை கரைந்து வழியும் நிஜ அழுகை! என்றாலும் அதைப் பார்க்கும் நமக்கு எரிச்சலோ, அலுப்போ வராதது அவருக்கு கிடைத்த வெற்றிதானே!  
இரண்டு ஹீரோக்கள், இரண்டு கதா  நாயகிகள், முன்பாதியில் ஒன்று பின்பாதியில் ஒன்று என்று இரண்டு பிளாஷ்  பாக்குகள் இப்படி படமே இரண்டு பாதியாக பிரிந்து நிற்கிறது. முதல் பாதியை சத்யராஜ், நயன்தார,ஜெய் இவர்களின் திறமையும் அனுபவமும் காப்பாற்றுகின்றன. இரண்டாம் பாதியை தூக்கி நிறுத்த சந்தானம் மட்டும் முயலுகிறார்.  ஆர்யா கொஞ்சம் நடிக்கவும் முயற்சிக்கலாம் நஸ்ரியாவுக்கு போகப் போக நடிக்க வரும் என்று தோன்றுகிறது.
ஜீ .வீ .பிரகாஷின் இசையில் எந்த பாடலும் ஈர்க்கவில்லை. வசனம் சில இடங்களில் மட்டும் பளிச்சிடுகிறது. ஆர்யா படம் முழுவதும் குடித்துக் கொண்டே இருக்கிறார். அதனாலோ என்னவோ படம் கொஞ்சம் தள்ளாடுகிறது. இந்தப் படத்தை சிலர் மௌன ராகத்தோடு ஒப்பிடுகிறார்கள். அதற்கும் இதற்கும் ஆறு வித்தியாசங்கள் சொல்லலாம் முக்கியமான வித்தியாசம் மௌன ராகம் காலத்தை வென்ற கிளாசிக் !

Friday, October 4, 2013

மஹாலய அமாவாசையும் மாடும்!
இன்றைக்கு மகாளய அமாவாசை! இன்று பசு மாட்டிற்கு அகத்தி கீரை கொடுப்பது நல்லது என்று ஏதாவது புத்தகத்தில் படித்திருப்பேன் அல்லது டி.வீ. சானெல் எதிலாவது யாராவது கூறியிருப்பார்கள்... அது நினைவுக்கு வரவே கே.கே.நகரில் இருக்கும் ஐயப்பன் கோவிலில் இருக்கும் மாடுகளுக்கு அகத்தி கீரை கொடுக்கலாம் என்று நானும் என் மகனும் ஒரு கட்டு  அகத்தி கீரை வாங்கிக் கொண்டு சென்றோம்.
என் மகனுக்கு ஒரு கட்டு என்பது ரொம்பவும் குறைந்த அளவு என்று தோன்றியது. கோவில் வாசலிலே அகத்தி கீரை விற்பார்கள், வாங்கிக் கொள்ளலாம் என்று நினைத்தேன். ஆனால் என் நினைப்பு எவ்வளவு தவறு என்பது அங்கே போனதும்தான் தெரிந்தது. எனக்கு முன்னாலேயே பலர் அங்கு விற்றுக் கொண்டிருந்த அகத்தி கீரை அனைத்தையும் வாங்கி மாடுகளுக்கு போட்டு விட்டனர். என் மகன் நீட்டிய அகத்தி கீரை கட்டை முகர்ந்து பார்த்த மாடு முகத்தை திருப்பி கொண்டு விட்டது. கொட்டிலில் வைக்கோல் போடும் இடம் முழுவதும் அகத்தி கீரையாகவே இருந்தால் அது என்னதான் செய்யும்?
சரி நம் வீட்டுக்கு வரும் வழியில் ஒரு வீட்டு வாசலில் மாடு கட்டியிருப்பார்கள், அங்கு போட்டு விடலாம் என்று திரும்பினோம். அங்கும் சிலர் அகத்திகீரை கட்டை போட்டிருந்தார்கள் என்றாலும் கீரை அதுவரை திகட்டாததால் நாங்கள் கொடுத்ததை சாப்பிட்டது. எங்களுக்கு பின்னாலேயே இன்னொருவர் கீரை கட்டோடு வந்தார்... அடுத்த முறை  கொஞ்சம்  ஜாக்கிரதையாகத்தான் இருக்க வேண்டும்
அகத்தி கீரை போடப் போனால் நம்மை மாடு முட்டினாலும் ஆச்சர்யமில்லை.

Wednesday, October 2, 2013

பெரியோரைப் போற்றுவோம்!

பெரியோரைப் போற்றுவோம்!
 
 
 
அகில இந்திய காங்கிரெஸ் கமிட்டி அந்த இளைஞருக்கு மாதம் பதினைந்து ரூபாய் சம்பளமாக கொடுத்து வந்தது. அதை வைத்துக் கொண்டுதான் குடும்பத்தை ஓட்ட வேண்டும். ஒரு சமயம் எதிர் பாராத திடீர் செலவு வந்தது எப்படி சமாளிப்பது என்று அவர் குழம்பிய பொழுது அவர் மனைவி, "என்னிடம் கொஞ்சம் பணம் இருக்கிறது அதை வைத்துக் கொண்டு சமாளிப்போம்" என்று தன்னிடம் இருந்த பணத்தை எடுத்துத் தந்தார். இவருக்கோ ஆச்சர்யம், "உன்னிடம் ஏது பணம்"? என்று எல்லா கணவன்மார்களையும் போலவே கேட்க, "நீங்கள் தந்த பதினைந்து ரூபாயில் பன்னிரண்டு ரூபாய்  மட்டும் செலவழித்து விட்டு மிச்சம் மூன்று  ரூபாயை சேமித்து வந்தேன்" என்றார். அப்படியா என்று கேட்டுக் கொண்ட அவர் உடனே காங்கிரெஸ் கமிட்டிக்கு ஒரு கடிதம் எழுதினார் என்னவென்று தெரியுமா? "ஐயா! நீங்கள் எனக்கு தரும் சம்பளம் அதிகம் எங்கள் குடும்ப செலவிற்கு ரூ.பன்னிரண்டு  மட்டும் போதும். எனவே அடுத்த மாதம் முதல் ரூ.பன்னிரண்டு  மட்டும் அனுப்புங்கள்" என்று!!! நம்ப முடிகிறதா? அதனால்தான்  பிரதமராக பணியாற்றிய அவர் இறந்த பொழுது அவர் கடனில் அம்பாசிடர் கார் வாங்கிய நிலுவை பாக்கி இருந்தது.  
 
இப்படி பட்ட எளிய, நேர்மையான மா மனிதர் திரு.லால் பகதூர் சாஸ்திரி. அவருக்கும் இன்றுதான் பிறந்த நாள் (அக்டோபர் இரண்டு). இன்று அவரையும் நினைவு கூர்வோம்! 
 
இன்றைய அரசியல் வாரிசுகள் எந்த வியக்கும் செல்லாமல் கோடி கணக்கில் செலவழித்து சினிமா எடுக்கிறார்கள். அவர்கள் வாங்கியிருக்கும் ஆடம்பர கார்களை நிறுத்துவதற்கே கிழக்கு கடற்கரை சாலையில் நிலங்களை வாங்குகிறார்கள்.  இந்த சூழலில் லால் பகதூர் சாஸ்திரி போல ஒருவர் நம் நாட்டு பிரதமராக இருந்திருக்கிறார் என்பதே ஆச்சர்யமாக இருக்கும். சரித்திரம் தன்னைத் தானே புரட்டிப் போட்டுக் கொள்ளும் என்பார்கள்(history repeats itself) என்பார்கள். அப்படி புரட்டிப் போட்டுக் கொள்ளட்டும் மீண்டும் நமக்கு உன்னதமான தலைவர்கள் கிடைக்கட்டும் என்று இந்த நாளில் வேண்டிக் கொள்வோம்!