கணம்தோறும் பிறக்கிறேன் 

Monday, August 12, 2019

திருஉத்திரகோசமங்கை

திருஉத்திரகோசமங்கை


நீண்ட நாட்களாக திருஉத்திரகோசமங்கை செல்ல வேண்டும் என்ற என் ஆசை சமீபத்தில் நிறைவேறியது. காசிக்கு செல்லும் முன் ராமேஸ்வரம் செல்ல வேண்டும் என்பதால் அங்கு சென்ற பொழுது உத்திரகோசமங்கைக்கும் சென்றோம்.

சைவர்களுக்கு மிகவும் முக்கியமான கோவிலான இது ராமநாதபுரம் மாவட்டத்தில், இராமநாதபுரத்திற்கும் ராமேஸ்வரத்திற்கு இடையில், இராமேஸ்வரத்திலிருந்து 70 கி.மீ. தொலைவில் உள்ளது.  . ராமாயண காலத்திற்கு முற்பட்ட மிகவும் புராதனமான கோவில்என்கிறார்கள். மண்டோதரி இங்கிருக்கும் மங்களேஸ்வரரை வழிபட்டுதான் ராவணனை கணவனாக அடைந்தாளாம்.

உத்திரம் என்றால் உபதேசம், கோசம் என்றால் ரகசியம், மங்கை என்பது இங்கே பார்வதி தேவியை குறிக்கிறது. சிவபெருமான் மங்கையாகிய பார்வதி தேவிக்கு, வேதங்களின் பொருளை ரகசியமாக உபதேசித்த இடம் என்பதால் உத்திரகோசமங்கை. திரு என்னும் அடைமொழி சேர்த்து திருஉத்திரகோசமங்கை.
இறைவன்: மங்களேஷ்வரர்/மங்கள நாதன்
இறைவி : மங்களேஷ்வரி
ஸ்தல விருட்சம் : இலந்தை
நடராஜர் : ஆதி சிதம்பரேசன்


இரண்டு கோபுரங்கள் தெரிகிறதா?

பெரிய விஸ்தாரமான கோவில். சுவாமி சந்நிதிக்கு, அம்பாள் சந்நிதிக்கு என்று இரண்டு கோபுரங்கள். கோவில் வளாகம் சுத்தமாக பராமரிக்கப்படுகிறது.

இந்த கோவிலின் கருவறைக்கு முன்பு வலது பக்கத்தில் பெரிய சாளக்ராமமா?? சிறிய லிங்கமா என்று தெரியாமல் ஒன்று இருந்தது.  அதைப்பற்றி விசாரித்தபொழுது, அந்த அர்ச்சகர்," இது இராவணன் பூஜித்த சாளக்ராமம்" என்றார்.  புகைப்படம் எடுத்துக் கொள்ள அனுமதித்தார்.

ராவணன் பூஜித்த சாளக்ராமம் 



ராமநாதபுரம் ராஜா

மரகத நடராஜர் சன்னதி

இந்த கோவிலில் பல வித்தியாசமான விஷயங்கள் உள்ளன.

சாதாரணமாக எல்லா சிவன் கோவில்களிலும் நுழைவு வாசலில் இடது புறம் விநாயகருக்கும், வலது புறம் முருகனுக்கும் சிறிய சந்நிதி இருப்பதை காணலாம். இங்கு அது இடம் மாறி வலது புறத்தில் முருகனுக்கும், இடது புறம் விநாயகருக்கும் சிறிய சந்நிதிகள் காணப்படுகின்றன.

சிவனுக்கு ஆகாது என்று சொல்லப்படும் தாழம்பூவால் இங்கிருக்கும் சிவபெருமானை அர்ச்சனை செய்யலாம்.

இங்கிருக்கும் நடராஜர் முழுவதும் மரகத கல்லால் வடிக்கப்பட்டவர். அதிக ஒலி மரகத கல்லில் விரிசலை ஏற்படுத்தும் என்பதால் இந்த கோவிலில் மேளம் போன்ற அதிக ஒலியை ஏற்படுத்தும் கருவிகள் வாசிக்கப்படுவதில்லை. சப்தத்தால் பாதிக்கப்படாமல் இருப்பதற்காக வருடம் முழுவதும் இந்த நடராஜர் சந்தன காப்பிடப்பட்டு இருக்கிறார்.  மார்கழி மாதத்தில் வரும் பௌர்ணமி மற்றும் திருவாதிரை அன்று மட்டும்(பெரும்பாலும் இரண்டும் ஒரே நாளில்தான் வரும்) சந்தன காப்பு களையப்பட்டு அபிஷேகங்கள் செய்யப்படுமாம்.  பிறகு மீண்டும் சந்தன காப்பிடப்பட்டு விடுகிறது.

இங்கிருக்கும் நடராஜருக்கு கையில் பாம்பு கிடையாது, இடுப்பில் புலித்தோல் கிடையாது, தலையில் கங்கை கிடையாது என்று கோவிலில் வைக்கப்பட்டிருக்கும் அறிவிப்பு பலகையில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இங்குதான் முதன்முதலாய் நடராஜா நடனம் ஆடினாராம், அதற்குப்பின்னர்தான் சிதம்பரத்தில் ஆடினாராம், எனவே இது ஆதி சிதம்பரம் என்றும் அழைக்கப்படுகிறது.  இத்தனை சிறப்புக்கள் கொண்ட நடராஜர், கோவிலின் வெளிப்பிரகாரத்தில் தனி சந்நிதியில் எழுதருளியிருக்கிறார்.

திருவிளையாடற்புராணத்தில் வரும் வலை வீசி மீன் பிடித்த படலம் இங்கேதான் நிகழ்ந்தது.

தற்சமயம் கோவிலில் பராமரிப்பு பணிகள் நடந்து கொண்டிருக்கின்றன. அதனாலோ என்னவோ, இந்த கோவிலின் சிறப்பு அம்சமான திறந்த வாய்க்குள் சுழலும் பந்தோடு கூடிய யாளியை பார்க்க முடியவில்லை. அறுபது மூவர் சிலைகளுக்கு மேல் ஒவ்வொரு நாயனாரும் செய்த திருப்பணி ஓவியமாக தீட்டப்பட்டிருக்கிறது.

கோவிலை விட்டு வெளியே வந்த பொழுது எங்கள் காரோட்டி,"இந்த கோவிலுக்கு எல்லோரும் வந்து விட முடியாது, இங்கிருக்கும் சிவன் அழைத்தால்தான் வர முடியும்" என்றார். கடவுளுக்கு நன்றி கூறி கிளம்பினோம். தென்னாடுடைய சிவனே போற்றி!



                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                       













44 comments:

  1. உத்தரகோசமங்கை. அடிக்கடி கேள்விப்படும் பெயர். இராமாயண காலத்துக்கும் முற்பட்டது என்னும்தகவபால் ஆச்சர்யம்.

    ReplyDelete
  2. வலதுபுறம் முருகன், இடதுபுறம் விநாயகர்... இதெல்லாம் அவ்வளவு கவனித்ததில்லை!

    ReplyDelete
    Replies
    1. இன்று கோவிலில் என்ன பிரசாதம் கிடைக்கும்? பொங்கலா? புளியோதரையா? என்று மட்டும் சிந்திப்பதை கொஞ்சம் நிப்பாட்டினால் இவையெல்லாம் கண்ணில் படலாம். ஹா ஹா!

      Delete
    2. ஹா...ஹா..ஹா...

      ஆமாம்.. இங்கு என்ன பிரசாதம் தந்தார்கள்?

      Delete
    3. ஶ்ரீராம், பொதுவாக சிவன் கோயில்களில் பிரசாதம் முன்கூட்டிச் சொல்லி வைத்திருந்தால் கொடுப்பார்கள். நாம் மத்தியான (உச்சிக்காலம்) வழிபாட்டுக்குச் சென்றால் அப்போது சில சமயங்களில் கொடுக்கின்றனர். சிதம்பரம் கோயிலில் கொடுப்பார்கள். ஆவுடையார் கோயிலில் புழுங்கலரிசிச் சாதமும் பாகற்காய்க் குழம்பும் கொடுப்பார்கள் என நண்பர் ஒருத்தர் சொல்லி இருக்கார்.

      Delete
    4. அதுவே பெருமாள் கோயில் என்றாலோ, ஆஞ்சி கோயில் என்றாலோ, மாரியம்மன் போன்ற குலதெய்வங்கள் கோயில் என்றாலோ நிச்சயமாய் ஏதேனும் ஓர் பிரசாதம் விநியோகம் செய்து கொண்டிருப்பார்கள்.

      Delete
    5. புழுங்கலரிசி சாதமும், பாகற்காய் குழம்புமா? அடடே... கேள்விப்பட்டதுமில்லை, சாப்பிட்டதுமில்லை.

      Delete
    6. ஆமாம், புதுக்கோட்டை மாவட்டத்து ஆவுடையார் கோயில். மாணிக்கவாசகரின் தேவாரத்தில் குறிப்பிடப்படும் திருப்பெருந்துறை! இங்கே ஆவுடை தான் கருவறையில்.அருவ வழிபாடு! இங்கே தான் மணிவாசகருக்கு ஞானம்/குரு மூலம் தீக்ஷை? கிடைத்தது. தீப ஆராதனை கிடையாது. புழுங்கலரிசியும், பாகல்காய் கறி? அல்லது குழம்பு கீரையோடு

      Delete
    7. இந்தக் கோயிலைத் தான் மாணிக்கவாசகர் கட்டியது என்பார்கள். ஒரு சிலர் இல்லை என்பார்கள். மணிவாசகர் கட்டிய இந்தக் கோயிலுக்குப் பாண்டியன் குதிரை வாங்கக் கொடுத்த பொன்னைச் செலவு செய்ததால் ஈசனே குதிரை வீரன் போல் வந்து நரிக்கூட்டத்தைப் பரிக்கூட்டமாக்கியதும், பின்னர் பரிக்கூட்டம் நரியாகி மாறி ஓடிப் போனதும் அதைத் தொடர்ந்த மணிவாசகருக்குச் சிறையும், புட்டுக்கு மண் சுமந்த திருவிளையாடலும் நடைபெறும். அடுத்த மாசம். இதோ இன்னும் 2,3 நாட்களில் வரும் ஆவணி மாதம்! சொக்கநாதரின் (ஸ்வாமி) பட்டாபிஷேஹம் ஆனதும் திருவிழா!

      Delete
    8. சிதம்பரத்தில் அர்த்தஜாம பூஜைக்குப் பிறகு சூடான பால் பிரசாதமாக கிடைக்கும்.

      Delete
    9. நான் சொன்ன திருவிழா மதுரை புட்டுத் திருவிழா என்னும் ஆவணிமூல உற்சவம் என்பதைக் குறிப்பிட மறந்திருக்கேன்.

      Delete
    10. என்னது.... திருப்பள்ளியெழுச்சி பாடிய கோவிலில் புழுங்கலரிசியும் பாகல் குழம்புமா? இது என்ன அநியாயம்... காலையில் பொங்கல் கொத்சு அல்லது தோசை கொடுத்தாலும் ஏத்துக்கலாம்.

      போற்றி ! என்வாழ் முதல் ஆகிய பொருளே! புலர்ந்தது ; பூங்கழற் கிணைதுணை மலர்கொண்டு

      ஏற்றிநின் திருமுகத்து எமக்கருள் மலரும் எழில்நகை கொண்டுநின் திருவடி தொழுகோம்!

      சேற்றிதழ்க் கமலங்கண் மலரும்தண் வயல்சூழ் திருப்பெருந் துறையுறை சிவபெருமானே!

      ஏற்றுயர் கொடியுடையாய்! எனை உடையாய்! எம்பெருமான் பள்ளி எழுந்தருளாயே

      Delete
    11. பாகல் குழம்பா, கறியா நினைவில் இல்லை. கோயிலுக்குப் போனதில்லை. இந்த ஆவுடையார் கோயிலும் திரு உத்தரகோசமங்கையும் நீண்டநாட்களாகப் பார்க்க வேண்டிய பட்டியலில் வரிசையில் காத்திருக்கின்றன. ஈசன் அழைக்கும்போது போகலாம்.

      Delete
    12. இன்று கோவிலில் என்ன பிரசாதம் கிடைக்கும்? பொங்கலா? புளியோதரையா? என்று மட்டும் சிந்திப்பதை கொஞ்சம் நிப்பாட்டினால் இவையெல்லாம் கண்ணில் படலாம். ஹா ஹா! //

      ஹா ஹா பானுக்கா என்னையும் அந்த லிஸ்ட்ல சேர்த்துக்கோங்க...

      இப்பத்தான் கீழ நானும் கவனிப்பதில்லை ஆனா பிரசாதம் மட்டும் என்ன எங்கு நு பார்த்துவிடுவேன் என்று சொல்லிவிட்டு வந்தால் இங்க ஏற்கனவே ஸ்ரீராம் கொடுத்து நீங்க பதில்!!!!!!!!!

      கீதா

      Delete
  3. மரகதலிங்கமா? இன்னுமா திரு பொன் மாணிக்கவேலுக்கு வேலை தராமல் இருக்கிறார்கள்?!!!

    ReplyDelete
    Replies
    1. உலகின் மிகப் பழமையான நடராஜர். பத்திரமாக இருக்கட்டும்.

      Delete
  4. கார் ஓட்டுநர் கூறியது கிட்டத்தட்ட எல்லாக் கோவில்களுக்குமே பொருந்துகிறது! என் அனுபவம்!

    ReplyDelete
    Replies
    1. //கார் ஓட்டுநர் கூறியது கிட்டத்தட்ட எல்லாக் கோவில்களுக்குமே பொருந்துகிறது! என் அனுபவம்!// நீங்கள் சொல்வது சரிதான். நம் வீட்டுக்கு பக்கத்தில் இருக்கும் சிறிய கோவிலுக்கு கூட நம்மால் செல்ல முடியாது. அதற்கு இறைவனின் சங்கல்பமும் இருக்க வேண்டும். கருத்துகளுக்கு நன்றி.

      Delete
    2. உத்தரகோசமங்கையில் உறவினர்களே இருந்தார்கள். ஆனாலும் கோயிலுக்குப் போக முடியலை. அதன் பின்னரும் இந்தக் கோயில் வழியாகவே நாலைந்து முறை ராமேஸ்வரம் சென்றும் இன்னமும் நடராஜர் அழைக்கவில்லை! :(

      Delete
  5. உத்திரகோசமங்கை - அழகான கோவில் தரிசனம் உங்கள் மூலம் சாத்தியமாயிற்று.

    காசிக்குச் செல்வதற்கு முன் இராமேஸ்வரம் - காசிக்கு வருகிறீர்களா? தில்லி பயணம் உண்டா?

    ReplyDelete
    Replies
    1. காசி யாத்திரைக்கு பிளான் செய்திருக்கிறோம். இறைவன் அருளால் நன்றாக நடக்க வேண்டும். டில்லி வந்து காசி செல்வது கொஞ்சம் சுற்று இல்லையோ? நன்றி வெங்கட்.

      Delete
    2. தில்லி போய்க் காசிக்குத் திரும்புவது சுற்றுத் தான்!

      Delete
  6. இராவணனுக்கே ஆகாது எனும் போது, சிவனுக்கு தாழம்பூ ஆனால் என்ன, ஆகவிட்டால் என்ன...? பாவம் மண்டோதரி...! வரலாறு பிறகு...!

    ராமநாதபுரம் ராஜா படத்தை பார்த்தவுடன் ஒரு திடுக்... கொஞ்சம் வெளிச்சத்தில் எடுக்கக் கூடாதா...? பயந்து விட்டேன் அம்மா...!

    ReplyDelete
    Replies
    1. //இராவணனுக்கே ஆகாது எனும் போது, சிவனுக்கு தாழம்பூ ஆனால் என்ன, ஆகவிட்டால் என்ன...? பாவம் மண்டோதரி...! வரலாறு பிறகு...! // ராவணனுக்கு ஆகாதா? இது என்ன புதுக்கதை?

      மண்டோதரி மீது பரிதாபம் கொள்ளத் தேவை இல்லை, ஏனென்றால் ராவணன் ஒரு மாபெரும் வீரன், ராவணேஸ்வரன் என்று 'ஈஸ்வர' பட்டம் பெற்றவன். ஆய கலைகள் அறுபத்து நான்கிலும் வித்தகன். பிறன்மனை விழைதல் என்னும் தவறுதான் அவன் வீழ்சிக்கு காரணமானது. ராவணன் பேராண்மை கொண்டவன், ராமன் பிறன்மனை நோக்கா பேராண்மை கொண்டவன். பேராண்மையை, பிறன்மனை நோக்கா பேராண்மை வெற்றி கொண்ட கதைதான் ராமாயணம் என்பார் மறைந்த புலவர் கீரன்.
      வருகைக்கு நன்றி.

      Delete
    2. //ராமநாதபுரம் ராஜா படத்தை பார்த்தவுடன் ஒரு திடுக்... கொஞ்சம் வெளிச்சத்தில் எடுக்கக் கூடாதா...? பயந்து விட்டேன் அம்மா...!//
      :)))

      Delete
    3. டிடி சொன்னதும் தான் மறுபடி போய்ப் படத்தைப் பார்த்தேன். ராமநாதபுரம் ராஜா எனப் போட்டிருந்ததைக் கவனிக்கலை.

      Delete
    4. //இராவணனுக்கே ஆகாது எனும் போது, சிவனுக்கு தாழம்பூ ஆனால் என்ன, ஆகவிட்டால் என்ன...?// ராவணன் என்ன ஈசனைவிடப் பெரியவனா? தாழம்பூ ஆகாது என்னும் கதையே வேறே இல்லையோ?

      // பாவம் மண்டோதரி// சிறந்த சிவபக்தை! அன்றாடம் வழிபாடு செய்பவள். தன் கணவன் செய்தது. செய்வது. எல்லாம் தவறு எனச் சுட்டிக்காட்டும் தைரியம் கொண்டவள். அவளை ஏன் பாவம் எனச் சொல்ல வேண்டும்?

      Delete
  7. வணக்கம் சகோதரி

    உத்திரகோசமங்கை மிகவும் அழகான பெயருடைய சிவஸ்தலம். படங்களும், பகிர்வும் நன்றாக உள்ளது. நல்ல விஷயங்களை விபரமாக அறிந்து கொண்டேன். மரகத கல்லால் ஆன நடராஜரைப் பற்றி நீங்கள் சொல்லியவுடன் நானும் இந்த கோவில் தரிசனம் செய்த நினைவு வருகிறது.ஒரு தடவை என் அண்ணா, மன்னியுடன் இராமேஸ்வரம் சென்ற போது இந்த கோவிலுக்கும் சென்று வந்த நினைவு வருகிறது. எல்லா படங்களும், கோபுர தரிசனம் படங்களும் மிகவும் அழகாக உள்ளது. பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    ReplyDelete
  8. நான் பலநூறுமுறை சென்ற ஊர்.
    சிலமுறை கோவிலுக்குள் சென்றதுண்டு.

    ReplyDelete
  9. உங்கள் ஊருக்கு மிக அருகில்தானே இருக்கிறது. தேவகோட்டையை கடக்கும் பொழுது உங்களைத்தான் நினைத்துக் கொண்டேன். நன்றி சகோ.

    ReplyDelete
  10. நான் பார்க்க விரும்பிய, இதுவரை பார்த்திராத கோயிலுக்கு இப்பதிவு மூலமாகச் செல்லும் வாய்ப்பு. அங்கு செல்லும் நாளுக்காகக் காத்திருக்கிறேன்.

    ReplyDelete
    Replies
    1. விரைவில் உங்கள் விருப்பம் நிறைவேற ஆதிநடராஜரும், மங்களேஸ்வரரும் அருளட்டும். வருகைக்கு நன்றி.

      Delete
  11. இது வரை பார்க்காத இந்தக் கோயிலுக்குச் செல்லும் நாளுக்காக நானும் காத்திருக்கிறேன். எப்போ வாய்ப்புக் கிடைக்குமோ தெரியவில்லை. இங்கே ஆடியதைத் தான் "அறையில் ஆடியது" எனவும் சிதம்பரத்தில் ஆடியதை "அம்பலத்தில் ஆடியது" என்றும் சொல்வார்கள்.

    ReplyDelete
  12. வருகைக்கும், பதில்களுக்கும் நன்றி. ஆதி நடராஜர் உங்களுக்கும் விரைவில் தரிசனம் அளிக்கட்டும். அங்கு வந்த வேறு சிலரும் நடராஜரை தரிசிப்பதைத்தான் விரும்பி கேட்டனர்.

    ReplyDelete
  13. Replies
    1. விஷயம் என்பதை விடயம் என்று எழுதுவதைப் போல் சாளக்ராமம் என்பதை சாலிகிராமம் என்று எழுதலாம் என்று நினைத்துக் கொண்டு விட்டேன் ஹி ஹி! சுட்டிக் காட்டியதற்கு நன்றி.

      Delete
  14. பானுக்கா ஹப்பா இப்பத்தான் படங்கள் வந்தது அதிலும் கடைசிப் படம் வரவே இல்லை...கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்...

    நெட் அத்தனை படுத்தல்.

    கோயில் தகவல்கள் ரொம்ப அருமை. ஆனா பாருங்க மீக்கு இத்தனை கவனம் கிடையாது. கோயில் போனாலும் எல்லாம் பார்த்தாலும் எது எங்கிருக்கிறார் என்று இது வரை கவனித்துக் கொண்டதில்லை. ஆனால் கோயிலில் பிரசாதம் உண்டா என்று மட்டும் பார்த்து விடுவேன். ஹிஹிஹிஹி..இது வரை கோயில் பற்றி பதிவு எழுதியதில்லை என்றே நினைக்கிறேன்.

    கீதா

    ReplyDelete
  15. ஹப்பா ஒரு வழியா கமென்ட் போயிருச்சு...

    ரொம்பவே சலிப்பாக இருக்கு...கமென்ட் போடவும் சரி தளம் வரவும் சரி...நேரம் ரொம்ப எடுக்கிறது எல்லா தளங்களும். காலையில் மட்டும் தான் கொஞ்சம் உறுப்படியாக வருகிறது. அப்புறம் மதியம் மேல் கொஞ்சம் கொஞ்சமாக போய் மாலையில் ரொம்பத் தகராறு.

    இக்கோயில் நான் சென்றிருக்கிறேன் ஆனால் மிகவும் சிறிய வயதில். கொழும்பிலிருந்து ராமேஸ்வரம் வந்துதான் வருவது வழக்கம். அப்போது இரு முறை சென்றிருக்கிறேன் ஆனால் வடிவம் எதுவும் நினைவில்லை. அது போலத்தான் ராமேஸ்வரம் கோயிலும். தனுஷ்கோடியும். திருப்புல்லாணி எல்லாமே..

    இப்போது எந்தக் கோயில் சென்றாலும் கோபுரம் சிலைகள் இதனை படம் பிடிப்பேன் மற்றொன்று மனமார்ந்து செய்வது பிரார்த்தனை. ஆனால் என்ன எங்கு இருக்கிறது என்று கேட்டால் ஹிஹிஹி...

    ரொம்ப அழகான விவரங்கள் அக்கா. படங்களும் ரொம்ப அழகாக வந்திருக்கு. இரு கோபுரங்கள் தெரிகின்றனவே...

    கீதா

    ReplyDelete
  16. வருகைகளுக்கும், விவரமான பின்னூட்டத்திற்கும் நன்றி கீதா.

    ReplyDelete
  17. வருடம் முழுவதும் இந்த நடராஜர் சந்தன காப்பிடப்பட்டு இருக்கிறார்...

    அழகிய படங்களுடன் விரிவான தகவல்கள் திருஉத்திரகோசமங்கை பற்றி ..பதிவிற்கு மிகவும் நன்றி ..

    ReplyDelete
  18. உங்கள் காரோட்டியிடம் என்னைப் பற்றியும் கொஞ்சம் சொல்லி வைக்கக் கூடாதா? ராமேஸ்வரம் போயும் உத்தர்கோசமங்கையைப் பார்க்கவில்லையே நான்!

    ReplyDelete
  19. மார்கழி திருவாதிரை அன்று போய் அபிஷேகத்தை பார்த்து இருக்கிறேன்.சந்தனம் கலைக்கப்பட்டு அருமையான ,மரகத ந்டராஜனை பார்த்து இருக்கிறேன். பக்கத்தில் இருக்கும் பெரிய தொட்டியில் சந்தன நீர் சேகரிக்கபடும்.
    படங்கள் எல்லாம் அழகு.

    நாங்கள் போன போது கோவில் மிகவும் சிதிலம் அடைந்து இருந்தது இப்போது நல்ல நிலையில் இருக்கிறது.

    ReplyDelete