கணம்தோறும் பிறக்கிறேன் 

Friday, May 8, 2020

திக் திக் நேரம் (ஒரு கதையும் ஒரு நிஜமும்)

திக் திக் நேரம் 
(ஒரு கதையும் ஒரு நிஜமும்)

கதை: 

முரளி அலுவலகத்திலிருந்து கிளம்பி, அம்மா சொல்லியிருக்கும் சாமான்களை வாங்கிக் கொண்டு ஊருக்கு கிளம்பும் பொழுது மணி ஏழாகி விட்டது.  அவன் அலுவலக பியூன் அவனோடு பஸ் ஸ்டாண்ட் வரை வந்து பஸ்ஸில் ஏற்றி விட்டான். 

"இருட்டடிச்சே சார், கையில் பூவெல்லாம் எடுத்துக்கிட்டு போறீங்க.."

"ஊருல குல தெய்வம் கோவிலில் நாளைக்கு பூஜை. அதுக்குத்தான் பூ".

"கொஞ்சம் முன்னாள் கிளம்பியிருக்கலாமே சார். இருட்டின பிறகு மல்லிகைப் பூவெல்லாம் எடுத்துக்கிட்டு போகக் கூடாது"

"ஏன்?"

அது வந்து.. மோகினி.. சென்று தொடங்கியவன், "அதெல்லாம் சும்மா சார். நீங்க தகிரியமா  போங்க..  வீடு ரோடு மேல தான இருக்கு? 

"இல்ல ரோட்டிலிருந்து உள்ள ஒரு முக்கா மைல் நடக்கணும்." என்று முரளி கூறியதும்,"அப்படியா? என்றவன் கொஞ்சம் சுரத்து குறைந்து
கந்த சஷ்டி கவசம் தெரியும்ல? சொல்லிகிட்டே போய்டுங்க..  ஒண்ணும் பயமில்ல.." என்று பய விதையை மனசுக்குள் விதைத்தான்.

முரளியின் சொந்த ஊருக்கு திருச்சியிலிருந்து இரண்டு பஸ்கள்  மாறிச் செல்ல வேண்டும். கடைசி பஸ் இரவு எட்டு மணிக்கு. அவர்கள் ஊரின் மெயின் ரோடில் இறங்கி அங்கிருந்து முக்கால் மைல் நடக்க வேண்டும். இரண்டு புறமும் வயல்கள் இருக்க, ஒத்தையடி பாதை. ஊரின் ஆரம்பத்தில் ஒன்றும், நடுவில் ஒன்றுமாக இரண்டே விளக்குகள்தான். அதைப் பற்றியெல்லாம் எந்தக் கவலையும் இல்லாமல்தான் இருந்தான். ஆனால் அவனை ரோட்டில் இறக்கி விட்டு விட்டு பேருந்து நகர்ந்ததும்  பொட்டென்று தெரு விளக்குகள் அணைந்து  சாலை  கும்மிருட்டாகியது.  

"எங்க போறீங்க?' என்று ஒரு குரல் வந்ததும் கொஞ்சம்  திடுக்கிட்டான். இருட்டுக்கு கண்களை பழக்கிக் கொண்டு  பார்த்தபொழுது அந்தக் குரலுக்குரியவர் பக்கத்திலிருந்கும் குடிசை வாசலில் நின்றிருப்பது தெரிந்தது.

"பட்டாமணியர் வீட்டுக்கு".

"பார்த்து போங்க, இன்னிக்கு காலையிலிருந்து கரெண்டு போயிட்டு போயிட்டு வருது."

முரளி நடக்க ஆரம்பித்தான். செல் ஃபோனில் டார்ச் லைட்டை  போட்டுக் கொண்டான். கொஞ்ச தூரம் போனதும் டார்ச் ஒளியிழந்து நின்றது. வேலை பளுவில் சார்ஜ் செய்ய மறந்தது நினைவில் வந்தது. வேரு வழியில்லை. இருட்டில்தான் நடக்க வேண்டும். 

சுற்றிலும் கண்ணை ஓட்டிய பொழுது சற்று தொலைவில்  குபீரென்று ஏதோ பற்றி எரிந்தது. கொள்ளிவாய் பிசாசு..? சீ ! அப்படியெல்லாம் ஒன்று கிடையவே கிடையாது. அது மீத்தேன் வாயு. 

கால்கள் சற்று எட்டிப் போட, வாய் கந்த சஷ்டி கவசத்தை முணுமுணுக்க ஆரம்பித்தது. தன்னை யாரோ தொடர்கிறார்கள் என்பது போல் உணர்ந்தான். 

பிரமை இல்லை, நிஜம்தான். தனக்குப் பின்னால் சரக் சரக்கென்று காலடி ஓசை சீராக கேட்பதை உணர்ந்தான்.  அவன் வேகமாக நடக்கத் துவங்க அந்த காலடியும் வேகமாக தொடர்ந்து வந்தது. 

பாதி தூரம் கடந்து விட்டோம், இன்னும் பாதிதான், வேறு வழியில்லை, ஓட ஆரம்பித்தான். அவனைத்துரத்தி வந்த அதுவும் ஓடி வந்தது. 

மூச்சைப் பிடித்துக் கொண்டு ஓடினான். அப்பாடா! இதோ ஊரு துவக்கத்தில் இருக்கும் சந்திக்கரை பிள்ளையார் கோவில் கண்ணில் படுகிறது.  வேகத்தை மட்டுப்படுத்தினான். 

கோவிலை நெருங்கி கன்னத்தில் போட்டுக்கொண்டு கும்பிட்ட பொழுது, 

"வா முரளி, ஏன் இவ்வளவு நேரமாயிடிச்சு? " மாமா தோளைத் தொட்டார். 

"என்ன இது? உடம்பெல்லாம் இப்படி வேர்துருக்கு?"
 
"நடந்து வந்ததால இருக்கும்." பேசிக் கொண்டே வந்த வழியை உற்றுப் பார்த்தான். எதுவும் தென்படவில்லை. 

வீட்டிற்குப் போய் குளித்து, சாப்பிட்டு, படுக்கும் பொழுது கூட பயம் முழுமையாக விலகவில்லை. நடந்த அசதி, ஜில்லென்று காற்று எல்லாமுமாக சேர்ந்து ஆழ்ந்த தூக்கம் வந்தது. காலையில் தாத்தா யாரிடமோ சத்தம் போட்டுக் கொண்டிருப்பது கேட்டு கண் விழித்தான். பல் துலக்க கொல்லைப்புறம் சென்ற பொழுது, அங்கு மாட்டுக் கொட்டிலில் ரெங்கனும், அனுசுயாவும் பேசிக்கொண்டிருப்பது காதில் விழுந்தது.  

"நேத்து ராத்திரி சினிமாவுக்கு போயிட்டு எத்தனை மணிக்கு வந்த?"
அதையேன்  கேக்குற? ஒன்பது மணிக்கு ரோட்டுல வந்து எறங்கினா கும்மிருட்டு. மெதுவா நடந்தேன். முன்னால யாரோ போய்கிட்டிருந்தாங்க, சரி தொணையாச்சுன்னு நானும்  பின்னலேயே வந்தேன், அவன் என்ன நினைச்சானோ..திடீர்னு ஓட ஆரம்பிச்சுட்டான்.."

"அப்புறம்?"

அப்புறம் என்ன? நானும் அவன் பின்னாலேயே ஓடியாந்துட்டேன்.."

ரங்கன் சொன்னதைக் கேட்டு அனுசுயா கலகலவென்று சிரிக்க, முரளி எதுவும் காதில் விழாதது போல் உள்ளே வந்தான்.  
*********************************************************************************
நிஜம்:

அப்போது எங்கள் அக்கா செயின்ட் மேரீஸ் சாலையில் வசித்து வந்தார். அவர் வீட்டுக்கு எதிரே ஒரு இடுகாடு உண்டு. பல திரைப்படங்களில் வந்திருக்கிறது அந்த இடுகாடு. 

என் சகோதரியின் கணவர் வேலை பார்த்த தொழிற்சாலையில் வேலை நேரம் காலை, மதியம், இரவு என்று ஷிஃப்ட் மாறி  மாறி வரும். அவர் இரவு நேர ஷிஃப்ட் பார்க்கச் சென்றிருந்த ஒரு நாள் நாங்கள் இரவு உணவை முடித்து விட்டு பேசிக் கொண்டிருந்தோம். அப்போது 'ஜல் ஜல்'  என்று சலங்கை ஒலி கேட்டது. முதலில் சற்று அசிரத்தையாக இருந்த நாங்கள் அந்த ஒலி வீட்டைச் சுற்றி வருவது போல் கேட்டதும் கொஞ்சம் பயந்தோம். தினமும் இரவு 9:30க்கு மேல் கேட்கத் தொடங்கும் அந்த சலங்கை சத்தம் பத்து அல்லது பத்தே காலுக்கு அடங்கி விடும். 

ஒரு தனி வீட்டின் போர்ஷனான அதில் குழாய், பாத்ரூம், டாய்லெட் எல்லாம் வெளியேதான் இருந்தன. ஒரு நாள் இரவு சாப்பாடு,மற்றும் வேலைகளை முடித்து கதவை சாத்தியாகி விட்டது. திடீரென்று பாத்ரூமில் விளக்கெரிந்து குழாயில் தண்ணீர் கொட்டும் சத்தம் கேட்டதும், நானும் என் அக்காவும் மிகவும் பயந்து விட்டோம். பாத்ரூமில் யாரு? என்ற எங்கள் கேள்விக்கு பதில் இல்லை. சற்று நேரம் கழித்து வாசல் அழைப்பு மணியை யாரோ அழுத்தினார்கள். தயக்கத்தோடும், பயத்தோடும் மெள்ள கதவைத் திறந்து பார்த்தால் வெளியே எங்கள் சகோதரர்! வரும் வழியில் எதையோ மிதித்து விட்டதாகவும், அதனால் நேராக பாத்ரூமுக்குப் போய் காலை கழுவிக் கொண்டு வந்ததாகவும் சொன்னார். எங்களை பயமுறுத்தவே வேண்டுமென்றே எங்கள் கேள்விக்கு பதில் அளிக்கவில்லையென்றும் சொன்னார்.   

அதோடு தினசரி ஜல் ஜல் என்று சப்தம் வருகிறதே அது என்ன தெரியுமா? என்று கேட்டார். அவரே சொல்லட்டும் என்று நாங்கள் பேசாமல் இருந்தோம். 

"ஒரு ரிக்ஷாகாரன் தன்னுடைய வண்டியின் முன் சக்கரத்தில் சலங்கையை கட்டி வைத்திருக்கிறான். அவன் சவாரிக்காக இந்த தெருவை சுற்றி சுற்றி வரும்பொழுது எழுப்பப்படும் ஒலிதான்  நம்மை இத்தனை நாட்களாக பயமுறுத்தியிருக்கிறது".என்று கூறியதும் "சே! இவ்வளவுதானா?" என்று நினைத்துக் கொண்டோம். பயம் விலகி விட்டதாலோ என்னவோ எங்களுக்கு அதன் பிறகு அந்த சலங்கை சத்தம் காதில் விழவில்லை.  


32 comments:

  1. ஹா.. ஹா.. இரண்டையும் பயத்துடன் இரசித்தேன். மீத்தேன் லேட்டஸ்ட்டாக இணைந்து கொண்டது ஸூப்பர்.

    ReplyDelete
  2. என்னங்க இப்படி சப்புன்னு ஆக்கிட்டீங்க! "ஜல்-ஜல்-ஜல் என்னும் சலங்கையொலி" பாட்டைக் கேட்டமாதிரி இருக்கு. சும்மாவானும் ஒரு மோகினிப்பேயை கொஞ்ச நேரம் கதையில நொழைச்சிருக்கலாம்ல? கொரொனாவும் அதுவுமா கொஞ்சம் கிக் ஏறியிருக்குமே!

    ReplyDelete
    Replies
    1. எழூதியிருக்கலாம். ஆனால் பயந்த சுபாவம் கொண்ட நான் எழுதும் பொழுதே வீல் என்று கத்தி மயங்கி விட்டால்..? நீண்ட நாட்களுக்குப் பிறகு வருகை புரிந்திருக்கிறீர்கள். நன்றி.

      Delete
  3. அருமை...அருமை...நிழலும் நிஜமும் ...வாழ்த்துகள்..

    ReplyDelete
  4. இரண்டுமே ஏற்கெனவே படிச்சேனே? அதோட எனக்கு இந்த மாதிரிக் கதைகளிலும் நிஜங்களிலும் ஆவலும் எதிர்பார்ப்பும் அதிகம்.

    ReplyDelete
    Replies
    1. மத்யமரில் படித்திருப்பீர்கள். அங்கு வராதவ்ர்களுக்காக. எனக்கு இதெல்லாம் கொஞ்சம் பயம். இரவு திகில் கதைகளை படித்தால் எழுந்து விளக்கை அணைத்து விட்டு படுக்க பயமாக இருக்கும். நன்றி.

      Delete
    2. அப்படியா? ஆனாலும் உங்களுக்குக் கதை சொல்லும் ஆற்றல் மிகுதியாகவே உள்ளது. அதை மேம்படுத்திக்கொள்ளுங்கள். நேற்று 2 கருத்துரை போட்டிருந்தேன். வழக்கம்போல் ஒண்ணு காணோம்! :( இந்தக் கணினி படுத்தும் பாட்டில் அடிக்கடி இப்படி ஆகிறது. நேரடியாகக் கருத்துரை இடுவதால் காப்பியும் செய்து கொள்ளவில்லை. என்ன எழுதினேன் என நினைவில் இல்லை! :(

      Delete
    3. நான் போடும் கருத்துரைகள் கூட சில சமயங்களில் காணாமல் போகும். பாராட்டுக்கு நன்றி. 

      Delete
    4. உங்க கதைகளிலும் நிஜத்திலும் வந்த பேயார் தூக்கிக் கொண்டு போய்விடுகிறாரோ? சமீப காலங்களில் அதிகமாக ஆகி உள்ளது. :))))

      Delete
  5. வணக்கம் சகோதரி

    சுவையான திக்.. திக்.. திகில் தருணங்களை கதையிலும்... நிஜத்திலுமாக... சுவாரஷ்யமாக சொல்லியுள்ளீர்கள். தனிமை, இருள் இரண்டும் சேர்ந்தால், பயமெனும் அரக்கன் பேயாக மாறி பயமுறுத்தி விடுகிறான். கதையில் ஆரம்பத்திலேயே பியூன் பயத்தை துவக்கி வைத்து விடுகிறார். அப்போதே நம்மையும் பயம் பிடிவாதமாக பற்றிக் கொண்டு விட்டது. அடுத்து என்னவாகுமோ என்ற பரபரப்பை கொண்டு சென்று இறுதியில் இருளில் பின்தொடர்ந்தவரை காட்டியது அருமை.

    எனக்குள்ளும் இந்த ஜல்ஐல் சலங்கை ஒலியைப்பற்றிய கதை ஒன்று உள்ளது. அதை தங்கள் நிஜம் நினைவூட்டி விட்டது. பயம் தெளிந்த பின் எல்லாமே மறந்து விடுகிறது மனசு. இருக் கதைகளையும் அழகாக கோர்த்து தந்திருப்பது அருமை. பாராட்டுக்கள்.
    பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    ReplyDelete
  6. வழக்கம் போல் அழகாக விமர்சித்திருக்கிறீர்கள். மிக்க நன்றி.

    ReplyDelete
  7. ஹா... ஹா... ஹா..்். திகிலான அனுபவம்தான். சுவையான கதை.

    ReplyDelete
  8. கதை வாசிப்பில் இருந்த பயப்பீதி நிஜத்தில் இல்லை.

    எப்பொழுதுமே பய உணர்வு என்பது பயமாகவே மனசில் நீடித்தால் தான் அது பயமாகவே மனதில் தங்கியிருக்கும் போல. உண்மை தெரியும் வரை தான் அந்த நீடிப்பு என்று ஆகிவிட்டால் இன்னொரு பயம் வந்து மனசில் தேங்கும் வரை இந்த பயம் காணாமல் போய் விடும் போலிருக்கு.

    ஆக, அடுத்த பயக்கதைக்கு இப்போதே அச்சாரம் போட்டு விடுங்கள். இந்த மாதிரி கதைகளை ஸ்டப் பை ஸ்டப் நகர்த்த உங்களுக்கு நன்றாகத் தெரிந்திருக்கிறது என்பது என் அபிப்ராயம். கிடைத்த புளியங்கொம்பை விட்டு விடாது கெட்டியாகப் பற்றிக் கொள்ளுங்கள். அடுத்த கதையில் புளியமரம் வந்தாலும் பயக்கதைக்கு வலு சேர்க்கும் தான்.

    ReplyDelete
    Replies
    1. //இந்த மாதிரி கதைகளை ஸ்டப் பை ஸ்டப் நகர்த்த உங்களுக்கு நன்றாகத் தெரிந்திருக்கிறது என்பது என் அபிப்ராயம்.//உங்களைப்போன்ற ஒரு அனுபவஸ்தரிடமிருந்து இப்படி ஒரு பாராட்டு மிகவும் மகிழ்ச்சியூட்டுகிறது. I thought thriller is not my cup of tea. உங்கள் அறிவுரையை கடைபிடிக்க முயற்சிக்கிறேன். மிக்க நன்றி. 

      Delete
  9. கதை அருமை.

    நிஜம்
    முகநூலில் படித்தேன்.
    மிக அருமையாக திக் திக் நினைவுகளை சொன்னீர்கள்.

    ReplyDelete
  10. அன்பு பானுமா,
    சூப்பர் நரேஷன்.
    நேற்றுதான் குழந்தைகளுக்குப் பேய்க்கதை ஒன்றைச் சொன்னேன்.
    அப்போது இந்த செயிண்ட் மேரீஸ் ரோடு சிமெற்றி
    பற்றியும் சொன்னேன்.
    பஸ் அந்தப்பக்கம் போகும் போது பார்க்க மாட்டேன்.
    பிறகு காரில் இவருடன் பயணிக்கும் போது இந்த இடமெல்லாம் வயலாக இருந்த காலாத்தில் நரிகள் ஊளையில் கதையையும் சொல்வார்.
    இவ்வளவு பக்கத்தில் இருந்திருக்கிறீர்கள்.
    தெரியாமல் போச்சே.
    மகளின் தோழியின் வேடும் எதிர்வரிசையில் இருக்கும். பாட்டியோடு அவளும் அக்காவும் இருந்தார்கள். சகோதரனும் உண்டு.
    இப்பொழுது அவள் கலிஃபோர்னியாவில் இருக்கிறாள்.தனி கம்பெனியே
    நடத்துகிறாள்.
    ஸ்ரீவித்யா என்று பெயர்.

    ReplyDelete
    Replies
    1. வாங்க அக்கா. அங்கு கவிஞர் மு.மேத்தா வீடு கூட இருந்தது. என் அக்கா கிரேசி மோகன் நாடகங்களில் நடிக்கும் கோபி என்பவரின் வீட்டிலிருந்தாள். (அவர் மை.ம.கா.ராஜன் படத்தில் டில்லி  கணேஷின் அசிஸ்டெண்ட்டாக வருவார்). என் அக்கா வீட்டில் வேலை பார்த்த பெண் அந்த இடுகாட்டிலேயேதான் வசித்தாள். "உனக்கு பயமாய் இல்லையா?" என்றால் "என்ன பயம்?" என்பாள்.  அடிக்கடி முதல் நாள் இரவு அங்கு ஷூட்டிங்   நடந்ததாக  கூறுவாள். 

      Delete
  11. குழாய் சத்தமும் சலங்கை சத்தமும் சூப்பர்
    சஸ்பென்ஸ். மன்ம் நிறை பாராட்டுகள்.

    ReplyDelete
  12. எனக்கு கீதா ர்ங்கனின் க்தையும் நான் எழுதிய் கடை ஒன்றும் நினவுக்கு வந்தது அரண்டவன் கண்ணுக்கு இருண்ட தெல்லாம் பயம் அல்லதுபேய்

    ReplyDelete
    Replies
    1. நீங்கள் எழுதிய கதை நினைவில் இல்லை. கீதா ரங்கன் எழுதிய கதை எனக்கும் நினைவில் வந்தது. நன்றி. 

      Delete
  13. கதையும் நிஜமும்... நன்றாக இருந்தது. நேற்று தான் ஒரு பேய்க்கதை கேட்டுக் கொண்டிருந்தேன். இன்று இங்கே ஒரு பேய்க்கதை. கூடவே நிஜமும்!

    ரசிக்க முடிந்தது.

    ReplyDelete
  14. திக் திக் நிமிடங்கள் மா ...

    இரண்டும் திகில் தான் ..

    முகநூலிலும் வாசித்தேன் ...

    ReplyDelete