கணம்தோறும் பிறக்கிறேன் 

Wednesday, August 24, 2016

பெரியோரைப் பணிவோம்!

பெரியோரைப் பணிவோம்!

இந்த வருடம் எழுத்தாளர் சாவி, இசைப் பேரரசி எம்.எஸ்.சுப்புலக்ஷ்மி ஆகிய இருவருக்கும் நூற்றாண்டு என்பது பலருக்கும் தெரியும், மற்றொரு மாமனிதருக்கும் இது நூற்றாண்டு என்பது சிலருக்கு தெரிந்திருக்கலாம்.  

மேலை நாடுகளில் ஸ்டார் ஹோட்டல்களில் தங்குபவர்கள் படிக்க வேண்டும் என்பதற்காக பைபிளின் சிறிய பிரதி ஒன்றை வைத்திருப்பார்களாம். அதை ஒட்டி நம் நாட்டிலும் ஸ்டார் ஹோட்டல்களில் பைபிளின் கை அடக்க பிரதி ஒன்று வைக்கப்பட்டு வந்தது. மேலை நாடுகள் கிருத்தவ மதத்தை சார்ந்தவை என்பதால் அங்கு பைபிள் வைக்கப்படுவது நியாயம். நம் நாடு இந்து மதத்தை தழுவியதுதானே, இங்கு ஏன் பைபிளை வைக்க வேண்டும்? பகவத் கீதையின் கை அடக்க பிரதியை வையுங்கள் என்று கூறி, அதை செயல் படுத்த வைத்தவர். இவரை நினைத்தால் பகவத் கீதையை நினைப்போம். பகவத் கீதையை நினைத்தால் ஒரு நாடகம் பார்ப்பது போன்ற உணர்வைத் தந்த, அழகான ஆங்கிலத்தில் இவர் ஆற்றிய அருமையான   பேருரைகள்தான் நினைவுக்கு வரும். இப்போது தெரிந்திருக்குமே நான் யாரைக் குறிப்பிடுகிறேன் என்று..? 

ஆமாம், சுவாமி சின்மயானந்தா என்று  அறியப்படும் ஸ்வாமி சின்மயானந்த சரஸ்வதிதான். 1916 ம் ஆண்டு,மே மாதம் 8ம் தேதி எர்ணாகுளத்தில் பாரு குட்டி, குட்டன் மேனன் தம்பதியினருக்கு மகனாக பிறந்த அவருக்கு பாலகிருஷ்ணன் என்று பெயரிட்டு பாலன் என்று அழைத்தனர். பெயருக்கு ஏற்றார் போல் சுட்டித்தனமும், குறும்பும் மிகுந்திருந்த அந்தக் குழந்தைக்கு புத்திசாலித்தனத்திலும் குறைவிருக்கவில்லை. ஐந்து வயதிலேயே தாயை இழந்தாலும் உறவினர்கள் மூலம் பாசம் நிறையவே கிடைத்ததது. 


1940ஆம் ஆண்டு லக்னோ சர்வகலாசாலையில் ஆங்கில இலக்கியம் மற்றும் சட்டம் படிக்க சேர்ந்தார். அப்பொழுது தீவிரமாக இருந்த சுதந்திர போராட்டம் இவரையும் ஈர்க்க 1942 ஆம் ஆண்டு நேரடியாக அதில் ஈடுபட்டார்.அதன் பயனாக சிறை வாசம், அங்கு அவரை பீடித்த டைபாய்டு நோய். அந்த நோயால் இறந்து கொண்டிருந்த கைதிகளுள் இவரும் ஒருவராகி விடப் போகிறாரே என்று பயந்த ஜெயில் வார்டன் அவரை சிறைச் சாலைக்கு வெளியே தெருவோரம் வீசி எறிந்து விட்டு சென்று விட்டாராம். இரக்க குணம் கொண்ட ஒரு கிருத்தவ மாது இவரை காப்பாற்றி நோயிலிருந்து மீட்டாராம். பிறகு தன் படிப்பை தொடர்ந்து, முடித்து, 1945 ஆம் ஆண்டு டெல்லியில் நேஷனல் ஹெரால்ட் பத்திரிகையின் ஆசிரியர் குழுவில் வேலைக்கு சேர்ந்திருக்கிறார். அங்கு அவர் எழுதிய கட்டுரைகள் பெரும் வரவேற்பை பெற்றன. அங்கிருந்த காலத்தில்தான் அவருக்கு வாழ்க்கையை பற்றியும், ஆன்மிகம் குறித்தும் நிறைய கேள்விகள் மனதில் பிறந்தன. அதற்கு விடை காணும் பொருட்டு அரபிந்தோ, ரமணா மகரிஷி, ஸ்வாமி சிவானந்தா போன்ற பெரியோர்களின் புத்தகங்களை படித்திருக்கிறார். அவற்றுள் ஸ்வாமி சிவானந்தாவின் போதனைகள் இவரைக் கவரவே அவரை நேரில் சந்தித்து தன் சந்தேகங்களை தீர்த்துக் கொள்ளலாம் என்று ஸ்வாமி சிவானந்தாவை சந்திக்க சென்றார். அவரோடு ஒரு மாதத்தை கழித்தப் பிறகு ஒரு புதிய பால கிருஷ்ணனாக டில்லி திரும்பினார். அதன் பிறகு பலமுறை டில்லிக்கும் ரிஷிகேஷிற்கும் பயணம் மேற்கொண்டார். 

இறுதியாக 1945 பிப்ரவரி மாதம் 25 ஆம் தேதி அவருக்கு துறவற தீக்ஷையும், சின்மயானந்த சரஸ்வதி என்னும் பெயரையும் அளித்தார்.  அதன் பிறகு தன் சீடர் பகவத் கீதை, பிரம்ம சூத்திரம், உபநிஷத் இவைகளை கற்றுத் தேரர் வேண்டும் என்று விரும்பிய ஸ்வே சிவானந்தா, சின்மயானந்தாவை தபோவன் என்னும் ஆசானிடம் பயிற்ச்சி சொல்லி உத்திர காசிக்கு அனுப்பி வைத்தார். தபோவன் என்ற அந்த கண்டிப்பான ஆசிரியரிடம் அவர் பயின்ற எட்டு வருடங்கள் மிகவும் கடுமையானவை. அதில் தேர்ந்த பிறகு தான் கற்றுக் கொண்டதை, தன் ஞானத்தை மற்றவர்களுக்கு எடுத்துச் சொல்ல வேண்டும் என்று விரும்பிய சின்மயானந்த தன விருப்பத்தை தபோவன் அவர்களிடம் வெளியிட்டார். ஆனால் தபோவன் குருஜியோ, மக்கள் அதற்க்கு இன்னும் தயாராகவில்லை, "நீ சொல்வதை புரிந்து கொள்ளும் பக்குவம் அவர்களுக்கு கிடையாது. உபதேசம் செய்வதற்கு பதிலாக நீ ஒரு ஆறு மாதம் இந்தியா முழுவதும் ஒரு பக்கிரியைப் போல சுற்றி, மக்களை சந்தித்து விட்டு வா" என்றார்.   

அந்த அறிவுரையை ஏற்று சின்மயானந்தாவும் கால் நடையாகவே பல ஊர்களுக்கும் பயணப்பட்டார். மக்களிடம் பிச்சை பெற்றும், தெரு ஓரங்களிலும், கோவில்களிலும் படுத்து உறங்கி பலதரப்பட்ட மக்களை சந்தித்த பின் மறந்து போன நம் ஆன்மீக விஷயங்களை மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டிய பொறுப்பு தனக்கு இருப்பதாகவே அவருக்குத் தோன்றியது, தன கருத்தை தபோவனிடம் வெளியிட இந்த முறை அவர் சம்மதம் அளித்தார், சரி, சொற்பொழிவு செய் ஆனால் உன் பேச்சை கேட்பதற்கு குறைந்த பட்சம் நான்கு பேராவது இருக்க வேண்டும் என்ற நிபந்தனையுடன்.

சின்மயானந்த கீதை பேருரைகளை தொடங்கினார். அது அத்தனை எளிதாக இருக்கவில்லை. ஓர் பக்கம் படித்த, ஆங்கிலேய மோகம் கொண்ட மேல்தட்டு வர்க்கம் இதை கேட்க விரும்பவில்லை. மறுபக்கம் சனாதனிகள் என்று என்று தங்களை சொல்லி கொண்ட தானும் வேதாந்த விஷயங்களை படிக்காமல், மற்றவர்களையும் படிக்க விடாமல் செய்து கொண்டிருந்த மேல் ஜாதியினர் ரகசியமாக வைத்திருந்த வேதாந்த விஷயங்களை எல்லோருக்கும் இவர் போதித்ததை அதுவும் ஆங்கிலத்தில், சுத்தமாக விரும்பவில்லை. ஆனாலும் மெல்ல மெல்ல நிலை மாறியது. 60களில் வேர் விட்டு இந்தியா மட்டுமல்ல வெளி நாடுகளிலும் சின்மயா மிஷிகளுக்கு கிளைகள் உள்ளன. 62 பள்ளிகள், அதைத் தவிர பாலவிஹார், மற்றும் யுவ கேந்த்ரா அமைப்புகள் குழந்தைகளுக்கும், இளைஞர்களுக்கும் வழி காட்டுகின்றன. அதைத் தவிர ஸ்வாமி தயானந்த சரஸ்வதி, ஸ்வாமி ஏ. பார்த்தசாரதி, தயானந்த சரஸ்வதியின் சீடரான ஸ்வாமி ஓம்காரானந்த, என்று வாழை அடி வாழையாக வரும் திருக் கூட்ட மரபை தோற்றுவித்திருக்கிறார். அவர்கள் இவர் காட்டிய பாதையில் கீதையையும், உபநிஷதத்தையும் மக்களிடம் கொண்டு போய் சேர்த்துக் கொண்டிருக்கிறார்கள். 

இவை எல்லாவற்றையும் தாண்டி எத்தனை நூல்கள்? ஆன்மீக விஷயங்கள் மட்டுமல்லாது அன்றாட வாழ்க்கைக்கும் வழிகாட்டும் கலங்கரை விளக்கங்கள் அவை. ஒரு முறை ஒரு குழந்தை அவரிடம்,"ஸ்வாமிஜி, நீங்கள் எங்கு வசிக்கிறீர்களா"? என்று கேட்டது, அதற்க்கு அவர் சிரித்துக் கொண்டே ரயில் நிலையங்களிலும், விமான நிலையங்களிலும்" என்று கூறினாராம். அங்குள்ள புத்தக கடைகளில் இவருடைய புத்தகங்கள் வைக்கப்பட்டிருப்பதையே அப்படி கூறினார். ஆம் புத்தகங்கள் வடிவில் அவர் அங்கெல்லாம் வசித்துக் கொண்டுதான் இருக்கிறார். நாம்தான் தேடி கண்டு கொள்ள வேண்டும். 

எங்கெல்லாம் பகவத் கீதையும், உபநிஷத்தும், விவேக சூடாமணியும் படிக்கப் படுகிறதோ, அங்கெல்லாம் ஸ்வாமி சின்மயானந்தா சூக்ஷும ரூபத்தில் அதை ரசித்துக் கொண்டிருப்பார். 
ஹரி ஓம்! 

Tuesday, August 16, 2016

இரண்டு உறுதி மொழிகள்!!

இரண்டு உறுதி மொழிகள்!!

உறுதி மொழிகளை புத்தாண்டு அன்றுதான் எடுக்க வேண்டுமா என்ன? எல்லா நல்ல நாட்களிலும் எடுத்துக் கொள்ளலாம். அதன்படி நான் சுதந்திர தினத்தன்று இரண்டு உறுதி மொழிகளை எடுத்துக் கொண்டிருக்கிறேன். 

ஆகஸ்ட் 1-15 மங்கையர் மலரில் பத்மவாசன் என்பவர் தண்ணீர் சிக்கனத்தை பற்றி எழுதியிருந்த கட்டுரையில் ஷவரில் குளிப்பதை விட, பக்கெட்டில் தண்ணீர் நிரப்பி அதில் குளிப்பது தண்ணீர் சிக்கனத்திற்கு உதவும். ஷவரில் குளிக்கும் பொழுது நம்மை அறியாமல் அதிக நேரம் குளிக்கும் அபாயம் உள்ளது என்றும், சச்சின் டெண்டுல்கர் கூட ஒரு பக்கெட் நீரில் குளிப்பதாக உறுதி எடுத்திருப்பதாகவும், அவர் குடும்பத்தினரையும் அவ்வாறு செய்யச் சொல்லியிருப்பதாகவும் படித்த பிறகு, நானும் ஒரு பக்கெட் நீரில் குளிப்பது என்று உறுதி எடுத்திருக்கிறேன். பல நாட்கள் ஷவரில் குளித்து பழகி விட்டதால் இப்போது ஒண்ணேகால் பக்கெட் தண்ணீர் தேவைப் படுகிறது. கூடிய விரைவில் ஒரு பக்கெட் நீரில் குளிக்க பழகி விடுவேன்.

இதை என் மகளிடம் சொன்னேன், "வாட் இஸ் த சைஸ் ஆப் த பக்கெட்? வேரியஸ் சைசெஸ் ஆர் அவைலபில்" என்கிறாள். என்ன செய்ய? 

அடுத்த உறுதிக்கு காரணம் நேற்று(15.8.2016), விஜய் டீ.வி.யில் ஒளிபரப்பான  சுதந்திர தின சிறப்பு பட்டிமன்றம். திரு.சுகி.சிவம் தலைமையில் இன்று மக்களிடையே மேலோங்கி இருப்பது வீட்டு நலமா? நாட்டு நலமா? என்னும் தலைப்பில் வாதிட்டார்கள். வீட்டு நலமே என்னும் கட்சிக்காக பேசிய முனைவர் ராமலிங்கம், நாம் எல்லோரும் கடவுளிடம் வேண்டிக் கொள்ளும் பொழுது நான் நன்றக இருக்க வேண்டும், என் குழந்தைகள் நன்றக இருக்க வேண்டும் என்றுதான் வேண்டுகிறோம், யாராவது என் நாடு நன்றாக இருக்க வேண்டும் என்று வேண்டுகிறோமா? என்றார். நியாயமான கேள்விதான். 

சாதாரணமாக என் தினசரி பிரார்த்தனை
வாழ்க அந்தணர், வானவர் ஆனினம் 
வீழ்க தண்புனல், வேந்தனும் ஒங்குக 
ஆழ்க தீயதெல்லாம் அரன் நாமமே சூழ்க 
வையகமும் துயர் தீர்க்கவே 

என்னும் தேவாரப் பதிகம்  சொல்லி, "லோகா சமஸ்தா சுகினோ பவந்து", "சர்வ ஜனோ சுகினோ பவந்து" என்று கூறி நமஸ்கரிப்பதோடுதான் முடியும். ஆனால் குறிப்பிட்டு, என் தேசம் நலமாக  இருக்க வேண்டும் என்று வேண்டியதில்லை. இனிமேல் எங்கள் நாட்டிற்கு சுய நலம் அற்ற திறமையான தலைவர்களை கொடு, என் தேசம் தன்னிறைவு பெற்று விளங்க வேண்டும் என்றும் வேண்டிக் கொள்ளப் போகிறேன், என் பிரார்த்தனையில் என்னோடு இணைந்து கொள்ள விரும்புகிறவர்கள் இணைந்து கொள்ளலாம். கூட்டுப் பிரார்த்தனைக்கு வலிவு அதிகம்!   

Saturday, August 6, 2016

குருவே சரணம்

                  குருவே சரணம்


ஹிந்து ஆன்மீக பொருட்காட்சியில் ஆசிரியர்களுக்கு பள்ளி மாணவர்கள் பாத பூஜை செய்ததை குறித்து கனிமொழி பார்லிமெண்ட் டில் சர்ச்சை கிளப்பியுள்ளார்,என்னவோ செய்யக் கூடாததை செய்ய வைத்ததைப்போல. கனிமொழியிடம் நாம் வேறு எதை எதிர்பார்க்க முடியும்? மாணவர்களை தூண்டி விட்டு 'ஒழிக' கோஷம் போடச் சொல்லி தான் படிக்கும் பள்ளிகளில் மற்றும் கல்லூரிகள் மீது கல்லெரியக் கற்றுக் கொடுத்த கூட்டத்தின் வாரிசு தானே இவர்.

மாணவர்கள் ஆசிரியர்களை வணங்குவதால் அவர்களிடம் கேள்வி கேட்க முடியாதாம்...!! எங்கே போய் முட்டிக் கொள்வது? உலகிலேயே கேள்வி பதில் மூலம் ஒரு மதக் கொள்கைகள் பரப்பப்பட்டது என்றால் அது ஹிந்து மதம் தான். உபநிஷத் முழுவதுமே மாணவன் கேள்விகள் கேட்க அதற்கு ஆசரியர் அளித்த பதில்கள்தான்.

ஆசிரியர்களை மதிப்பதும் வணங்குவதும் உயரிய பண்பு. அது ஜாதிக்கும் மதத்திற்கும் அப்பாற்பட்டது. நம் நாட்டின் முன்னாள் ஜனாதிபதி சங்கர் தயாள் சர்மா அவர்கள் ஓமான் நாட்டிற்கு விஜயம் செய்த போது அந்த நாட்டின் அரசரான சுல்தான் காபூஸ் அவரகள் சங்கர் தயாள் சர்மாவிற்கு அளிக்கப்பட்ட ராணுவ அணிவகுப்பு மரியாதையில்  தானும் கலந்து கொண்டதோடு திரு.சர்மா நாற்காலியில் அமர்ந்த பிறகே தான் தன் ஆசனத்தில் அமர்ந்தார். காரணம் சுல்தான் காபூஸ் புனேயில் படித்த பொழுது அவருடைய ஆசிரியராக சங்கர் தயாள் சர்மா இருந்திருக்கிறார். தான் ஒரு நாட்டின் அரசர், அதற்கு வருகை தந்திருக்கும் மற்றொரு நாட்டின் அதிபர் சங்கர் தயாள் சர்மா என்று நினைக்காமல் அவர் தன்னுடைய முன்னாள் ஆசிரியர் என்று வணங்கிய சுல்தான் காபூஸ் பண்பாளர்.




Friday, July 29, 2016

அரிசி,தேங்காய் வெல்லப்பாயசம்

    அரிசி,தேங்காய் வெல்லப் பாயசம்
              ( ஆடி வெள்ளி ஸ்பெஷல்)

தேவையான பொருள்கள்:


அரிசி    ---- 1/2 கப்
தேங்காய் துருவல் ----- 1/2 கப்
வெல்லம் ------- 200கிராம்
ஏலக்காய் ----- 4
முந்திரி பருப்பு  ----- 6

அரிசியை கழுவி இரண்டு மணி நேரம் ஊற வைக்கவும்.  ஊறியதும் தேங்காய் துருவலை சேர்த்து அரைக்கவும். மாவு போல நைசாக இருக்க வேண்டாம், அதிகம் கொரகொரப்பாகவும் இருக்கக் கூடாது. அரைத்த மாவோடு ஒரு கப் தண்ணீர் சேர்த்து,அடுப்பில் மிதமான தீயில் வைத்து கை விடாமல் கிளறவும். மாவு வெந்ததும், வெல்லத்தூளை சேர்த்து மீண்டும் அடி பிடிக்காமல் கிளறவும். வெல்லம் நன்கு கறைந்து பச்சை வாசனை போனவுடன்(ஏறத்தாழ 10 நிமிடங்கள் அடுப்பில் இருக்க வேண்டும்), கீழே இறக்கி வைத்து, ஏலக்காய் பொடி செய்து போட்டு, முந்திரி பருப்பை சிறியதாக ஒடித்து நெய்யில் வறுத்து பாயசத்தில் சேர்க்கவும். சுவையான, பாயசம் ரெடி. அடிப் பிடித்து விடாமல் கிளறிக் கொண்டே இருக்க வேண்டும் என்பதைத் தவிர இது செய்வதற்கு மிகவும் சுலபமானது.
 

Sunday, July 24, 2016

மழையில் நனைந்தபடி மலை நாட்டிற்கு - 3


மழையில் நனைந்தபடி மலை நாட்டிற்கு - 3
நம்முடைய வழிபட்டு முறையில் குல தெய்வம்,இஷ்ட தெய்வம், தவிர கிராம தேவதை, அல்லது காவல் தெய்வம் என்றும் உண்டு. இந்த காவல் தெய்வங்கள் பெரும்பாலும் ஊர் எல்லையில் இருக்கும் பெண் தெய்வங்களாகத்தான் இருக்கும். அய்யனார் விதி விலக்கு. பாலக்காட்டு காரர்கள் இந்த காவல்தெய்வங்கள் இருக்கும் கோவில்களை 'காவு' என்கிறார்கள். அது போல எங்கள் குடும்பத்திற்கான தெய்வம் எமூர் என்னும் இடத்தில் இருக்கும் கல்லெகுளக்கற பகவதி என்று அறியப்படும் ஹேமாம்பிகை ஆகும். பாலக்காட்டிலிருந்து மலம்புழா செல்லும் வழியில் இருக்கிறது எமூர்.
















இந்த கோவிலில் கர்பகிரஹத்தில் அம்மன் விக்கிரஹம் எதுவும் இருக்காது. அபயஹஸ்தமாக இரண்டு கைகள் மட்டுமே காணப்படும்.

குரூர்,மற்றும் கைமுக்கு என்னும் இரு நம்பூதிரிகள் தினசரி அடர்ந்த காட்டினுள் அமைந்திருக்கும் துர்கை அம்மன் கோவிலுக்கு செல்வதை வழக்கமாக வைத்துக் கொண்டிருந்தனர். ஒரு நாள் அவர்கள் இருவரும் மிகவும் அசதியோடு ஒரு மரத்தடியில் அமர்ந்து கொண்டிருந்த பொழுது, ஒரு வயதான மூதாட்டி அவர்கள் இருவருக்கும் சில பழங்களை உண்ணத்தருகிறாள், அதை சாப்பிட்டவுடன் அவர்களுடைய அசதி மறைந்து விடுகிறது. இது குறித்து அவரை வியப்படையும் பொழுது அவர்களுக்கு எதிரே தங்கம் போல ஜொலித்துக் கொண்டு ஒரு யானைக்கு அருகில் நின்ற கோலத்தில் அம்பிகை அவர்களுக்கு கட்சி தருகிறாள். வயது ஏற,ஏற, தினசரி காட்டிற்குள் சென்று அம்பாளை தரிசனம் செய்வது கடினமாக ஆவதை எண்ணி கவலை கொள்கிறார்கள். அப்போது அம்மன் அவர் கனவில் தோன்றி, தான் இதே இடத்தில் அவர்களுக்காக எழுந்தருளப் போவதாக கூறுகிறாள். மறு நாள் அங்கிருக்கும் குளத்திலிருந்து முதலில் தங்க மயமான இரு கரங்கள் மட்டும் வெளி வருகின்றன. அதைக்  கண்டதும் உணர்ச்சி வசப்பட்ட குரூர் நம்பூதிரி குளத்தில் குதித்து அந்தக் கரங்களை பற்றிக் கொள்கிறார். உடனே, அந்த இரு கரங்களும் கல்லாக சமைந்து விடுகின்றன. அந்த கரங்களையே வழிபட உத்தரவாகின்றது. சுற்றி இருக்கும் குளத்தை தூர்த்து கோவிலாக கட்டி வழிபட தொடங்கினர். இங்கு தேவி காலையில் சரஸ்வதி அம்சமாகவும், மதியம் லட்சுமி அம்சமாகவும், மாலை துர்கையின் அம்சத்தோடும் இருப்பதாக ஐதீகம்.

சிறிய கோவில். உள் சுற்றில் ஒரு சிறிய கதவு வழியாக குளத்திற்கு சென்று விடலாம். கொஞ்சம் அதிகமாக மழை பெய்தால் தண்ணீர் கோவிலுக்குள் வந்து விடும் என்றுதான் தோன்றுகிறது. அம்மன் சன்னதிக்கு வெளியே மர விதானத்தில் நவகிரஹங்களை காண முடிகிறது. நாங்கள் சென்ற பொழுது பெண்கள் லலிதா சஹஸ்ரநாமம் வாசித்துக் கொண்டிருந்தார்கள். கோவிலை வலம் வந்து நமஸ்கரித்தோம்.

அப்போது உன்னி என்பவர் தன்னை அறிமுகம் செய்து கொண்டு எங்களை பற்றி விசாரித்தார். பிறகு எங்களை அங்கிருக்கும் அலுவலகத்திற்கு அழைத்துச் சென்று அவருடைய மற்ற சகாக்களை அறிமுகம் செய்தார். முன்பெல்லாம் இந்த குளத்தில் யாரும் குளிக்க மாட்டார்கள். இப்போது குளிப்பது, துணி துவைப்பது போன்ற செயல்களால் குளம் அசுத்தமாகி விட்டது. மேலும் மிகவும் புராதனமான இந்த கோவிலை செப்பனிட்டு பல ஆண்டுகள் ஆகி விட்டன. இப்போது குளத்தை சீர் செய்து, கோவிலை புதுப்பிக்க ஒரு கமிட்டி அமைத்திருக்கிறோம். எப்பொழுது புனருத்தாரணம் என்று முடிவு செய்து பிறகு உங்களுக்கு தெரிவிக்கிறோம், உங்கள் விலாசம் கொடுத்து விட்டு செல்லுங்கள் என்று விலாசம் கேட்டு வாங்கிக் கொண்டார்.  

அங்கிருந்த மற்றொரு நபர், இந்திரா காந்தி இந்தக் கோவிலுக்கு வந்து தொழுத பிறகுதான் 'கை' சின்னத்தை காங்கிரஸ் கட்சியின் சின்னமாக தேர்ந்தெடுத்து வெற்றி பெற்றார் என்னும் ஒரு ஸ்வாரஸ்யமான தகவலையும் சொன்னார். அதோடு மட்டும் இல்லாமல் அருகில் இருக்கும் ஒரு சிவன் கோவிலில் இன்றுதான் பிரதிஷ்டை தினம், அங்கும் சென்று விட்டு செல்லுங்கள் அப்போதுதான் உச்சிகால பூஜை நேரமாக இருக்கும். என்றார். நாங்களும் அவ்விதமே அந்த சிவன் கோவிலுக்கும் சென்று வணங்கினோம். அந்த சிவன் கோவிலில் தக்ஷிணாமூர்த்திக்கென்று தனி சந்நிதி இருக்கிறது. கேரளாவில் சாதாரணமாக எந்தக் கோவிலிலும் தக்ஷிணாமுர்த்திக்கென்று தனி சந்நிதி கிடையாது. அங்கு எங்களுக்கு தனியாக பிரசாதமும் திரு.உன்னி வாங்கித் தந்தார். மன நிறைவோடு அங்கிருந்து கிளம்பினோம்.

எங்க வீட்டு ஐயாவுக்கு ஏனோ மலம்புழா நீர் தேக்கத்திற்கு செல்ல வேண்டும் என்று ஒரு ஆசை. அங்கு தண்ணீர் எல்லாம் இருக்காது என்று நாங்கள் சொல்வதை கேட்காமல் மலம்புழாவிற்கு வண்டியை விடச் சொன்னார். வந்து விட்டோமே என்று சில புகைப் படங்கள் எடுத்துக் கொண்டு கோவை நோக்கி பயணித்தோம். 

எங்கேயாவது பகல் உணவு சாப்பிட வேண்டுமே.. நல்ல ஹொட்டேல் எங்கே இருக்கும் என்று தேடிக் கொண்டே வந்தோம். என்னுடைய சாய்ஸ் அன்னபூர்ணா கௌரிசங்கர். ஆனால் சரவணபவன் 6 கி.மீ. சரவண பவன் 5கி.மீ. என்ற போர்ட் எங்கள் பசியை அதிகப் படுத்தியது. கேரள எல்லை முடிந்து, தமிழ் நாடு தொடங்கும் இடத்திலேயே இருக்கிறது. சரவண பவன் இருக்கிறதே, இங்கேயே சாப்பிட்டு விடலாம் என்று உள்ளே சென்றதும்தான் தெரிகிறது, அது சரவண பவன் இல்லை, ஸ்ரீ சரவண பவன். அதே போன்ற போர்ட், அதே போன்ற எழுத்துக்கள், ஆனால் கண்ணுக்கு தெரியாமல் ஸ்ரீ என்னும் எழுத்து. இப்படியும் ஒரு ஏமாற்று!

@Marudhamalai, taken in Panorama mode

என் மகன் வெள்ளியங்கிரியில் உள்ள ஈஷா சென்டருக்கு செல்ல வேண்டும் என்று விரும்பியதால், நேரே அங்கு சென்று விட்டோம். மிகப் பெரிய, அழகிய வளாகம். காற்று நம்மைத் தள்ளுகிறது. என்கணவரும்  மகனும் ஆண்களுக்கான சூரிய குண்டத்தில் குளித்தார்கள், நானும் என் மருமகளும் பெண்களுக்கான சந்திர குண்டத்தில் குளிக்காமல் அவர்கள் சொல்லிய முறைப்படி நீரை ப்ரோக்ஷித்துக் கொண்டோம். பின்னர் லிங்க பைரவியை தரிசித்து,  

தியான லிங்கத்தின் முன் அமர்ந்து தியானம் செய்ய முயற்சித்தோம். 
பின்னர் அங்கிருக்கும் காண்டீனில் வாழைக்காய் பஜ்ஜி சாப்பிட்டு, காபி அருந்தி அங்கிருந்து கிளம்பி கோவை ரயில் நிலையம் அருகில் ஒரு லாட்ஜில் தங்கினோம்.

Esha Centre


இங்கே உள்ளே செல்லும் முன் நம்முடைய செல்ல போனை செருப்பு வைக்கும் இடத்திலேயே தனியாக ஒரு பையில் பூட்டு கொடுத்து விட்ஸ் வேண்டும். ஆனால் சிலர் செல் போனை உள்ளே கொண்டு வந்து புகைப்படங்களும் எடுத்துக் கொண்டனர். எப்படி என்று புரியவில்லை.

"இரவு உணவுக்கு அன்னபூரணா செல்லலாமே" என்றேன், "அதற்க்கு மூன்று கி.மீ. போகணும், இப்போது இங்கேயே ஏதாவது சாப்பிடலாம்".என்றார்கள். சரி என்று பக்கத்தில் இருந்த ஒரு ஹோட்டலுக்குச் சென்றோம். ஆஹா! இதுவல்லாயோ இட்லி! இதுவல்லவோ சாம்பார்! என்றாள் அனு. "அட சாப்பாட்டு ராமி! ரெண்டு நாளில் உனக்கு நாக்கு செத்துப் போய் விட்டதா?"
"என்ன செய்வது? எண் சாண் உடம்புக்கு வயிறுதானே பிரதானம்?"
"திருத்த முடியாது..."

மறு நாள் மதியம் 3:30க்கு எங்களுக்கு சென்னை செல்லும் சதாப்தியில் டிக்கெட். நிறைய நேரம் இருக்கிறதே மருத மலை சென்று வரலாம் என்று முடிவு கட்டினோம். மறு நாள் காலையில் என் அண்ணா அனுப்பியிருந்த வாட்ஸ் ஆப் மெஸேஜ் பார்த்த பிறகுதான் எனக்கு அன்று நக்ஷத்திர பிறந்த நாள் என்று தெரிய வந்தது. ஆஹா! பிறந்த நாள் அன்று மருத மலை முருகன் கோவிலுக்குச் செல்லப் போகிறோமா? என்ன பாக்கியம்! என்று புளகாங்கிதமடைந்தேன்! ஆகவே, கோவிலுக்கு செல்லும் முன் எதுவும் சாப்பிட வேண்டாம் என்று அண்ணா பூர்ணாவுக்குச் சென்றாலும் எதுவும் சாப்பிடாமல் ஜூஸ் மட்டும் குடித்தேன். 

மருத மலைக்கு சென்று இருபது வருடங்களுக்கு மேல் ஆகி விட்டது. எக்கச்சக்க வித்தியாசம்!. சமீபத்தில் குடமுழுக்கு ஆகியிருக்கிறதோ என்னவோ, கோபுரம் பளிச்சிட்டது. எங்கள் ஊரில் தரிசிக்க முடியாத வரதராஜ பெருமாளை இங்கு ஒரு தனி சந்நிதியில் தரிசித்தோம். 
முருகனை வணங்கி கீழே இறங்கினோம்.

தாகமாக இருந்ததால் இளநீர் அருந்தினோம். முதலில் குடித்த இளநீர் அத்தனை சுவையாக இல்லை, அதை கடைக்காரரிடம் சொன்னதும் வேறு ஒரு இளநீர் சீவிக் கொடுத்தார். இது சுவையாக இருந்தது. முதலில் குடித்தது மூன்று வாரங்களில் காய்க்கும்  மரத்தின் இளநீராம், இரெண்டாவதாக குடித்தது மூன்று மாதங்களில் முறையாக காய்க்கும் மரத்தின் இளநீராம். 
"அட! காலக் கொடுமையே" என்றாள் அனு

மதிய உணவை என் அத்தை பெண் வீட்டில் முடித்துக் கொண்டு, ரயிலைப் பிடித்தோம். அதில் எங்களுக்கு வாய்த்தது நடு வரிசையாகப் போய் விட்டது. எதிர் எதிரே இருக்கைகள் அமைந்து விட்டதால் காலை நீட்ட முடியாமல் ஒரே பொசிஷனில் உட்கார்ந்த படியே பயணிக்கும்படியாகி விட்டது. மூன்று நாட்களுக்கு மேல் கஷ்டப் பட்டேன். கடுகு எண்ணெய் வேப்ப  எண்ணெய், நல்லெண்ணெய் மூன்றையும் இரும்பு கரண்டியில் சூடு செய்து, எங்கெல்லாம் வலிக்கிறதோ அங்கெல்லாம் தடவி, ஊற வைத்து,வெந்நீர் ஊற்றி குளித்து கொஞ்சம் சரி செய்து கொண்டிருக்கிறேன், அடுத்த டூர் காத்துக்கொண்டிருக்கிறதே...! ராதே கிருஷ்ணா! 

Friday, July 22, 2016

மழையில் நனைந்தபடி மலை நாட்டிற்கு - 2


மழையில் நனைந்தபடி மலை நாட்டிற்கு - 2


பார்த்தசாரதி பெருமாளை தரிசித்தப் பிறகு நாங்கள் மம்மியூர் மஹாதேவன் கோவிலுக்குச் சென்றோம். குருவாயூர் கோவிலுக்குச் சென்றவர்களுக்கு நினைவுக்கு வரலாம்... அங்கு பகவதியை தரிசித்து விட்டு ப்ரதக்ஷிணமாக வரும்பொழுது, ஒரு மூலையில் ஒரு மரத்தடியில் இங்கு நின்றபடி மம்மியூர் மகாதேவன் இருக்கும் திசை நோக்கி வணங்கவும் என்ற அறிவிப்பை காணலாம். அப்படி என்ன விசேஷம் மம்மியூர் மஹாதேவன் கோவிலில் என்று கேட்கலாம்.

குரு பகவானும், வாயு பகவானும் தங்களுக்கு கிடைத்த கிருஷ்ண விக்கிரஹத்தை எங்கே பிரதிஷ்டை செய்வது என்று பொருத்தமான இடத்தை தேடி அலைகிறார்கள். அவர்கள் குருவாயூரை அடைந்த பொழுது, அந்த குளக்கரையில் அமர்ந்து நெடு நாட்களாக தவம் செய்து கொண்டிருந்த சிவ பெருமான் இங்கே குருவாயூரப்பனுக்கு கோவில் கட்ட இடத்தை விட்டு கொடுத்து விட்டு பார்வதி தேவியோடு தான் பக்கத்துக்கு ஊருக்கு நகர்ந்து சென்றாராம், அவருடைய அந்த பெருந்தன்மைக்கு நன்றி தெரிவிக்கும் விதமாகவே மம்மியூர் மகாதேவனை வழிபட வேண்டும் என்கிறார்கள். மம்மியூர் மகாதேவனை தொழுதால்தான் குருவாயூர் யாத்திரை முழுமை பெரும் என்பதும் ஒரு நம்பிக்கை. சிவபெருமானின் மஹிமை பெற்ற ஊர், 'மஹிமையூர் ' என்பதே மருவி மம்மியூர் ஆகி விட்டதாம். 

நாங்கள் அங்கு சென்ற நேரம் உச்சிகால பூஜை நேரம். தீபாராதனை முடிந்தவுடன் உள்ளே தரிசனத்திற்கு அனுமதித்தார்கள், சிவன் சந்நிதியில் வணங்கி, பிரகாரம் சுற்றிக் கொண்டு மஹாவிஷ்ணு சந்நிதியில் வணங்கி அங்கிருந்த ஒரு வாசல் வழியே வெளியே வந்து விட்டோம். உடனே நடை அடைத்து விட்டார்கள். சிவன் சந்நிதிக்கு, மஹாவிஷ்ணு சந்நிதிக்கும் இடையே இருந்த பார்வதி தேவியின் சந்நிதியை தரிசனம் செய்ய முடியவில்லை. வெளியில் இருந்தபடியே வணங்கினோம்.

மம்மியூரைத் தொடர்ந்து குருவாயூர் தேவஸ்தானம்(அங்கு தேவோஷம் என்கிறார்கள்) பராமரிக்கும் 'ஆன கூட்டா'  சென்றோம். நுழைவு கட்டணம் தலைக்கு ரூ.20/- வசூலிக்கிறார்கள். காமிரா உள்ளே எடுத்துச் செல்ல அனுமதி இல்லை, ஆனால் செல் போன் அனுமதிக்கிறார்கள். 

இருக்கும் யானைகளில் பெரும்பான்மை ஆண் யானைகள்தான். இந்த யானைகளெல்லாம் ஏன் சோனியாகவும் கொஞ்சம் சோகமாகவும் இருக்கின்றன? என்ற அனுவின் கேள்வி நியாயமாகத்தான் பட்டது.

அங்கிருந்து குருவாயூர் சென்று தேவஸ்தான கெஸ்ட் ஹவுசில் வசதியான சூட் ஒன்று கிடைத்தது. பள்ளிகள் திறந்து விட்டன, மழை வேறு, எனவே கும்பல் அதிகம் இருக்காது என்ற கணக்கெல்லாம் பொய்த்து கும்பல் இருந்தது. ஆனால் நகர்ந்து கொண்டே இருந்ததால் சீக்கிரம் பார்த்து விட  முடிந்தது. மாலை தரிசனம் முடித்து,  மறுநாள் காலை நிர்மால்ய தரிசனத்திற்க்காக இரவு 2:00 மணிக்கு நாங்கள் கோவிலை அடைந்த பொழுது, மிக நீண்ட வரிசையைப் பார்த்து பயந்து விட்டோம். காலை 3:00 மணி முதல், 3:20 வரைதான் நிர்மால்ய தரிசன நேரம் என்றார்கள். 20 நிமிடத்திற்குள் இத்தனை பெரும் பார்த்து விட முடியுமா? என்று பயம் வந்தது. ஆனால் கிடு கிடுவென்று வரிசை நகர்ந்ததால் எல்லோராலும் பார்க்க முடிந்தது.

வரிசையில் நின்று கொண்டிருந்த பொழுது சுற்றுப் புறத்தை நோட்டம் விட்ட அனு, குருவாயூர் எப்படி மாறிப் போய் விட்டது? என்றாள். 
ஆமாம், எல்லா இடங்களும் மாறிக்கொண்டுதானே இருக்கின்றன..?
பக்தர்கள் அதிகமாக வராத தொடங்கும் பொழுது அவர்களுக்கு தேவையான வசதிகள் செய்து தர வேண்டாமா?
வசதிகள் செய்து தரட்டும், அதற்காக அடைப்படை மாறிவிடக் கூடாது..
ஆரம்பித்து விட்டாயா? இங்கே என்ன அடிப்படை மாறி விட்டதாம்? 
உனக்கு நினைவில்லையா? முன்பெல்லாம் கிழக்கு நடையில் நின்று பார்த்தால் கோவிலை முழுமையாக தரிசிக்க முடியும். இப்போது டின் ஷீட்டில் பெரிதாக கொட்டகை போல போட்டிருக்கிறார்கள், அது வாசல் தோற்றத்தை மறைத்து விடுகிறது. கொடிமரம் பாதிதான் தெரிகிறது. 
நீ சொல்வதும் சில சமயம் சரியாகத்தான் இருக்கிறது.
இன்னொன்றும் கவனித்தாயா? முன்பெல்லாம் எல்லா கேரள கோவில்களை போலவே குருவாயூரும் அமைதியாகத்தான் இருக்கும். ஆனால் இப்போது யாத்ரீகர்கள் அதிகமாகி விட்டதாலோ என்னவோ சளசளவென்று பேச்சு..
சரி சரி, நீ பேச்சை நிறுத்து, நடை திறக்கப் போகிறார்கள்....

ஸ்வாமியை தரிசனம் செய்து விட்டு வரும் பொழுது, இத்தனை ப்ராசீனமான கோவில்.. ஏன் ஆழ்வார்கள் மங்களாசாசனம் செய்யவில்லை? அனுவிற்கு சந்தேகம்.  

எனக்கும் தெரியவில்லை.. தெரிந்தவர்கள் யாராவது பதில் சொன்னால் கேட்டுக் கொள்ளலாம்.

அங்கிருந்து பாலக்காடு செல்வதற்கு காலை 6:30க்கு கிளம்பி விட   வேண்டும் என்று தீர்மானித்ததால் அதற்குள் ஒரு குட்டி தூக்கம் போடலாம் என்று மற்றவர்கள் தூங்கி விட நான் மட்டும் மீணடும் ஒரு முறை கோவிலுக்குச் சென்று சந்தன காப்பு அலங்காரத்தில் கையில் குழலோடு கட்சி அளித்த அந்த குழந்தை கண்ணனை ஆசை தீர தப்பு தப்பு ஆசை தீருமா என்ன? மீண்டும் ஒரு முறை தரிசித்தேன்.  

அங்கிருந்து 7:30க்கு கிளம்பினோம். பாலக்காட்டை அடையும் பொழுது மணி 11 ஆகி விட்டது. என் கணவரின் சொந்த ஊரான கோவிந்தராஜபுரத்தில் இருக்கும் வரதராஜ பெருமாள் கோவிலிலும் 10:30க்கு நடை அடைத்து விடுவார்களாம். ஆகவே அங்கும் பெருமாளை தரிசிக்க முடியவில்லை. என் கணவரின் பூர்வீக வீட்டில் இப்போது வசிப்பவர்கள் ஊரில் இல்லாததால் அங்கும் உள்ளே சென்று பார்க்க முடியவில்லை. புகைப்படம் மட்டும் எடுத்துக் கொண்டோம்.

தொடர்ந்து செல்லலாம்.... 


Thursday, July 21, 2016

மழையில் நனைத்தபடி மலை நாட்டிற்கு

மழையில் நனைத்தபடி மலை நாட்டிற்கு 


விடுமுறையில் வந்திருக்கும் மகன், மருமகளோடு குருவாயூர் மற்றும் என் கணவரின் சொந்த ஊரான  கோவிந்தராஜபுரம் (பாலக்காடு) மற்றும் எமூர் ஹேமாம்பிகா கோவிலுக்கும் சென்று வரலாம் என்று கிளம்பினோம். ஆலப்புழா விரைவு வண்டியில் திருச்சூரை அடைந்த நாங்கள் ரயில் நிலையத்திற்கு அருகிலேயே ஒரு விடுதியில் குளியலை முடித்துக் கொண்டு, காலை 10:30க்கு நடை அடைத்து விடுவார்கள் என்று கூறப் பட்டதால் காலை உணவை புறக்கணித்து கோவிலுக்குச் சென்றோம். 

"அதென்னவோ நமக்கும் வருண தேவனுக்கும் ஒரு ராசி இருக்கிறது.. நாம் எங்காவது கிளம்பினால் அவர் நமக்கு முன் அங்கு வந்து விடுவார்.  இப்பொழுதும் அப்படித்தான்!"
 நான் இப்படி சொன்னதும், எப்பொழுதும் என்னை விட்டு பிரியாத என் தோழி அனு, நமுட்டு சிரிப்பு சிரித்தாள்.  
"என்ன சிரிப்பு? என்றேன், 
"மழை சீசனில் கேரளாவிற்கு போக முடிவெடுத்து விட்டு இப்படி ஒரு பேச்சு!"  என்றாள், 
என்ன பதில் சொல்ல முடியும்? மணி ஆகிறது, கிளம்பு என்றா? அவள்தான் எனக்கு முன்னாள் கிளம்பி நிற்கிறாளே!

எப்படியோ நாங்கள் கோவில்களுக்கு செல்லும் விதமாக மழை அவ்வப்பொழுது ஒதுங்கி வழி விட்டது. கேரள கோவில்களில் சூடிதார் அணிந்து கொள்ள அனுமதிக்க மாட்டார்கள், எனவே புடவை கட்டிக்கொள் என்று என் மருமகளிடம் கூறினேன். ஆனால், சூடிதாரை அனுமதிக்கிறார்கள். 



பிரமாண்டமான திருச்சூர் வடக்குநாதர் கோவில் மிக அழகாக பராமரிக்கப் படுகிறது. மூலவர் திருமேனி மீது நெய் சாற்றுகிறார்கள். அதற்காக கோவில் வளாகத்துக்குளேயே சிறிய அகல் விளக்கில் நெய் விற்கிறார்கள். நாம் அதை வாங்கி கருவறைக்கு அருகில் வைத்து விட்டால், அவர்கள் ஸ்வாமி மீது அதையே அபிஷேகம் செய்வது போல ஊற்றி விடுவார்கள். ஆனால் கர்பகிரஹத்தில் சிவ லிங்கம் எதுவும் காண கிடைக்காது.

இதன் தாத்பரியம் என்ன? தாத்பர்யம் என்ன? என்று அனு நச்சரித்தாள். இவள் ஒரு சள்ளை, ஏதோ கோவிலுக்கு போனோமா, சாமியை கும்பிட்டோமா? பிரசாதம் சாப்பிட்டோமா என்று இருக்காமல், எல்லாவற்றிற்கும் அர்த்தம் தெரிய வேண்டுமாம்..

அங்கு தமிழ் புரிந்து கொள்ளும் ஒருவர் இருந்தார், அவரிடம் கேட்டதற்கு, அவர்," யாருமே லிங்கத்தை கண்டதில்லை, உறைந்திருக்கும் நெய்க்குள் லிங்கம் இருப்பதாக ஐதீகம்" என்றார். அங்கு ஊற்றப்பட்டிருக்கும் நெய் கடும் கோடையில் கூட உருகாது என்றும், அந்த நெய்யில் எறும்பு மொய்க்காது என்றும் கூறுகிறார்கள். நெய் உறைந்த திரு மேனியை முழுமையாக அலங்கரித்திருந்தார்கள். மிக நன்றக இருந்தது. 



வடக்குநாதர் சந்நிதியிலிருந்து அப்பிரதக்ஷிணமாக சென்று ஸ்வாமி சன்னதிக்கு பின்னால் இருக்கும் பகவதியை தரிசனம் செய்து கொள்ள வேண்டும். ஸ்வாமிக்கு செய்யப்படும் அபிஷேக தீர்த்தம் வெளியே வரும் கோமுகியை கங்கை என்கிறார்கள். அங்கு கங்கைக்கு ஒரு சிலையும் இருக்கிறது. கங்கையை கடந்து செல்ல அனுமதி இல்லை என்று போர்டோடு தாண்டிச் செல்ல முடியாமல் கயிறும் கட்டப்பட்டு இருக்கிறது. இங்கு மட்டுமில்லை வேறு சில சிவன் கோவில்களிலும் இதைப் போன்ற அமைப்பை காண முடிகிறது. 

வடக்குநாதர் சந்நிதிக்கு அருகில் தனி சந்நிதியில் ராமர். வெளி பிரகாரத்தில் அய்யப்பன், கிராதன்(வேடனாக வந்த சிவன்), கோ சாலை கிருஷ்ணன், ஆதி சங்கரர் ஆகியோர்களுக்கு தனி சந்நிதி. இதை தவிர ஆதி சங்கரர் சமாதியும் இருக்கிறது. 

ஆதி சங்கரரின் பெற்றோர்களான ஆர்யாம்பாளும், சிவ குருவும் இங்கு வந்து பஜனம் இருந்துதான் அதி சங்கரரைப் பெற்றெடுத்தார்கள். எனவே அதி சங்கரரின் வாழ்க்கையை சித்தரிக்கும் காட்சிகள் ஓவியங்களாக வரையப்பட்டிருக்கின்றன. அதைப் பார்த்த என் சிநேகிதி அனு, "இந்த சித்திரங்களில் ஆர்யாம்பாளை கேரள பெண்மணி போல சித்தரித்துள்ளார்கள், என்னால் இதை ஒப்புக் கொள்ள முடியவில்லை என்றாள். 
உன் ஒப்புதல் யாருக்கு வேண்டும்? வாயை மூடிக்கொண்டு வா என்று விரட்டினேன்.
அவளோ விடாமல், ஆதி சங்கரரின் பெற்றோர்கள் வைதீக பிராமணர்கள், அவர்களை அப்படித்தானே வரைய வேண்டும்? என்று தொணப்பினாள். 
நாம் கும்பகோணத்திற்கு அருகில்  சென்ற போது, ஒரு கோவிலில் கோவிந்த தீக்ஷதருக்கும் அவர் மனைவிக்கும் சிலை இருந்ததை பார்த்தோமே அதில் அவர்கள் வைதீக பிராமணர்கள் போலவா உடை அணிந்திருந்தார்கள்?" என்று கேட்டு அவள் வாயை அடைத்தேன்.   

திருச்சூரிலிருந்து அதே காரில் குருவாயூர் சென்று விட்டோம். குருவாயூரில் உள்ள வெங்கிடாசலபதி கோவிலுக்கு முதலில் சென்றோம். கேரள பாணியில் அமைந்த சிறிய கோவில். நெடியோனாகவே தரிசித்த மாலவனை வாமன மூர்த்தி போல சிறிய உருவில் தரிசிப்பது வித்தியாசமாக இருக்கிறது. உள் பிரகாரத்திலேயே தனி சந்நிதியில் வெங்கிடாதம்மாளாக அருளை அள்ளி வழங்கும் தாயார். கொடி மரத்திற்கருகில் நமஸ்கரித்து வெளியே வருகிறோம்.  ராமானுஜர் இந்த கோவிலுக்கு வந்திருக்கிறாராம் ஆகவே அவருக்கும் தனி சந்நிதி. 

கோவிலுக்கு வந்திருக்கும் பக்தர்கள் அனைவரையும் பிரசாதம் தயாராக உள்ளது சாப்பிட்டு  விட்டு செல்லுங்கள் என்று அழைப்பு விடுத்தார்கள். குறிப்பாக நாங்கள் வெளியூரிலிருந்து வந்திருக்கிறோம் என்று அறிந்து கொண்டு அந்தக் காலங்களில் கல்யாணங்களில் மாப்பிளை வீட்டாரை உபசரிப்பது போல பேர் பேராக உபசரித்தார்கள். இப்படி ஒரு உபசாரம் எங்களுக்கு கிடைக்கும் என்று தெரிந்திருந்தால் திருச்சூரில் டிபன் சாப்பிட்டிருக்க மாட்டோம். அவர்கள் உபசரிப்பை நன்றியோடு மறுத்துவிட்டு, பார்த்தசாரதி பெருமாள் கோவிலுக்குச் சென்றோம்.



இதுவும் சிறிய கோவில்தான். நுழையும் முன், வேறு கோவில் பிரசாதம் உட்பட சாப்பிடும் பொருள்கள் ஏதாவது இருந்தால் உள்ளே எடுத்துச் செல்ல அனுமதி இல்லை, வெளியே வைத்து விடுங்கள் என்றார்கள். பார்த்தசாரதி என்பதாலோ என்னவோ தேர் போன்ற கருவறை அமைப்பு. உள்ளே நின்ற திருக்கோலத்தில் சிறிய மூர்த்தி. 

"மீசை வைத்து கொண்டு ஆஜானபாகுவாக பார்த்தசாரதி பெருமாளை சேவித்த நமக்கு, இப்படி சிறியவராக பார்ப்பதற்கு சற்று வித்தியாசமாகத்தான் இருக்கிறது இல்லையா?" என்றாள் அனு.

இதுதான் உன்னிடம் பிரச்சனை, ஏன் எப்போதும் ஒரு விஷயத்தை இன்னொன்றோடு ஒப்பிட்டு கொண்டே இருக்கிறாய்?  

உனக்கு ஏன் கோபம் வருகிறது? நம் ஊரில் அப்படி, இந்த ஊரில் இப்படி என்றுதான் சொல்ல வந்தேன்.

அது கலாச்சார வித்தியாசம்.

ஒவ்வொரு இடத்திலும், ஓவ்வொரு பழக்கம், நடிகர் ஜெயராம் சொன்னது போல..

ஜெயராம் என்ன சொன்னார்?

தமிழ் படத்திற்கும் மலையாள படத்திற்கும் என்ன வித்தியாசம்? என்று அவரிடம் கேட்டபொழுது, "மலையாள படத்தில் அம்மா என்று அழைக்க வேண்டுமென்றால் வெறுமனே அம்மே என்று அழைத்தால் போதும், ஆனால் தமிழ் படத்தில் அ...ம்ம்ம்ம்.மா... என்று அடி வயிற்றிலிருந்து அழைக்க வேண்டும் என்றார். 

ஓகே.. அதனால.. என்ன சொல்ல வர?

நமக்கு எல்லாமே கொஞ்சம் பிருமாண்டமாக, ஆரவாரமாக இருக்க வேண்டி இருக்கிறது. ஆனால் இவர்களுக்கு எல்லாம் சட்டிலாக இருந்தால் போதும் போலிருக்கிறது. கோவில் உட்பட. சிறிய கோவில், சிறிய மூர்த்தங்கள்..

அடடா! என்ன கண்டு பிடிப்பு?

நான் சொல்வதை எதையாவது நீ ஒப்புக் கொண்டிருக்கிறாயா? நீ கோவிலை பார்த்து விட்டு மெல்ல வா, நான் முன்னாள் மம்மியூருக்கு  செல்கிறேன்.. அவள் எனக்கு முன்னாள் மம்மியூருக்குச் சென்று விட்டாள்.  
   
நாம் தொடரலாம்...

Sunday, July 17, 2016

கம்பனின் ஏக்கம்! எனக்கும்தான்..!

கம்பனின் ஏக்கம்! எனக்கும்தான்..!

கவிச் சக்ரவர்த்தி கம்பர் சோழ அரசன் குலோத்துங்கனின் அவையை அலங்கரித்தவர் மட்டுமல்ல,அவனுடைய சிறந்த நண்பரும் கூட. ஆனால் ஒரு முறை சோழ அரசனோடு ஏற்பட்ட ஏதோ மன வருத்தத்தத்தில் சோழ தேசத்தை விட்டு நீங்கி சேர தேசத்தை அடைகிறார். சேர தேச அரசன் அவருக்கு மிகுந்த மரியாதை அளித்து அங்கு பராமரித்தாலும் கொஞ்ச நாட்களிலேயே கம்பருக்கு குலோத்துங்கன் மீது கொண்ட பகை உணர்ச்சி நீங்கி விடுகிறது. சோழ அரசனையும் தேசத்தையும் காண வேண்டும் என்ற ஏக்கம் எழுகிறது. அப்போது மருத நிலத்தை (அதாவது வயலும் வயல் சார்ந்த இடமும்) புகழ்ந்து அவர் பாடிய பாடல்தான் 

தண்டலை மயில்கள் ஆடத்
தாமரை விளக்கம் தாங்கக் 
கொண்டல்கள் முழவின் ஏங்கக் 
குவளைகண் விழித்து நோக்கத் 
தெண்திரை எழினி காட்டத் 
தேம்பிழி மகர யாழின் 
வண்டுகள் இனிது பாட 
மருதம்வீற் றிருக்கும் மாதோ 


என்னும் அழகிய பாடல் 
 
கம்பனை போலவே எனக்கும் சேர நாட்டிற்கு செல்லும் பொழுதெல்லாம், அந்த சற்றே அலுப்பூட்டும் பசுமையைக் காணும் பொழுதெல்லாம் எங்கள் சோழ நாட்டின் அழகு நினைவுக்கு வரும். ஆனால் என் மகள் இதை ஒப்புக் கொள்ள மாட்டாள். என்ன இருந்தாலும் அவள் சேர தேசத்து(பாலக்காடு) பெண் அல்லவா?   இதை படிப்பபவர்கள் எத்தனை பேர் ஒப்புக் கொள்வார்கள் என்று தெரியாது. தஞ்சை மாவட்டத்தில் எங்கே நிலம் இருக்கிறது? எல்லாவற்றையும் பிளாட் போட்டுக் கொண்டிருக்கிறார்களே என்று கேட்கலாம்.  

அது கிடக்கட்டும், கம்பனுக்கும் குலோத்துங்கனுக்கும் இடையே ஏற்பட்ட ஊடலைப் பற்றி அறிந்து கொள்ள விருப்பம் இருப்பவர்கள் கூறுங்கள், சொல்கிறேன்.

Sunday, July 10, 2016

வேலை வேலை வேலை

வேலை வேலை வேலை 

"வித்யா வந்தாச்சு, நீ பேசறயா, நான் பேசட்டுமா"? கணேஷ் தன் மனைவி கீதாவிடம் மெல்லிய குரலில் கேட்டார்.

"நானே பேசறேன், நீங்க ஏதாவது சொல்லப் போக பிரச்சனை ஆகிடப்போகுது.." பேசிக்கொண்டே ஒரு தட்டில் வித்யாவுக்காக ரெண்டு பிஸ்கேட், கொஞ்சம் மிக்சர் எடுத்து வைத்துக் கொண்டு, காபியும் கலந்து எடுத்துக் கொண்டு ஹாலுக்கு வருவதற்கும், வித்யா உடை மாற்றி, முகம் அலம்பிக் கொண்டு வருவதற்கும் சரியாக இருந்தது.

அம்மாவிடமிருந்து தட்டை வாங்கி கொண்டு, டி.வி. ரிமோட்டை கையில் எடுத்துக் கொண்டு சேனலை மற்றது துவங்க, அருகில் அமர்ந்து கொண்ட கீதா,
"உனக்கு கல்யாணம் நிச்சயமாகி விட்டது"

"ஆமாம்"

"இனிமே கொஞ்சம் பொறுப்பா இருக்கணும்"

"என்ன பண்ணனும்"?

"வீட்டு வேலையெல்லாம் செய்ய கற்றுக் கொள்"

"என்ன வேலை"?

"வீட்டை க்ளீன் பண்ணுவது, மாப் போடுவது, வாஷிங் மெஷினில் துணி துவைக்க போடுவது, துணி உலர்த்துவது, இப்படி சின்ன சின்ன வேலைகள் எல்லாம்"

"இதுக்கெல்லாம் வேலைக்காரி கிடைக்க மாட்டாளா"?

"என்னதான் வேலைக்காரி இருந்தாலும் நமக்கும் செய்யத் தெரியணும்"

"ஓ.கே."

"அப்புறம் இப்படி ஆபிசிலிருந்து வந்தவுடன் அம்மா காபி கலந்து நீட்டுவது போல கிடைக்கும் என்று எதிர்பார்க்க முடியாது. காபி போட கத்துக்கோ, அதோட மட்டுமில்ல, குக்கர் வைக்க, சிம்பிளா ஒரு வற்றல் குழம்பு, ரசம் வைக்க கற்றுக் கொள்".

அம்மா சொல்வதை எல்லாம் புன்னகையோடு கேட்டுக்கொண்டு, "அது சரிம்மா, எல்லா வேலையையும் நானே செய்து விட்டால் வீட்டில் பெண்டாட்டி என்று ஒருத்தி இருப்பாளே,அவள் என்னதான் செய்வாள்"? என்றான் வித்யா என்னும் வித்யாசாகர்.

"ரெண்டு பேரும் வேலைக்கு போறீங்க, உனக்கு எவ்வளவு டயர்ட் நெஸ் இருக்குமோ அவளுக்கும் அதே அளவு ட்யர்ட்னெஸ் இருக்கும்டா, புரிஞ்சு நடந்துக்கோ" என்றாள் கீதா.

"சரி, சரி இப்போ இந்த காபி கப்பை நான்தான் கொண்டு போய் சிங்கில் போட வேண்டுமா"?

"முடிந்தால் கழுவி வைத்து விடேன்" என்றால் 21ம் நூற்றாண்டு  பிள்ளையைப் பெற்ற அம்மா. 


ஹையா! என்னோட அக்கா சீனியர் சிடிஸின் ஆயிட்டா!

ஹையா! என்னோட அக்கா சீனியர் சிடிஸின் ஆயிட்டா!

இதில் உனக்கு அப்படி என்ன சந்தோஷம்? என்று கேட்க்கிறீர்களா? எனக்கும் என் அக்காவுக்கும் சரியாக ஒரு வருடம்தான் வித்தியாசம். முதல் வருடம் ஜூலை 5ம் தேதி அவள் பிறந்தாள். நான் எல்லாவற்றிலும் கொஞ்சம் ஸ்லோ, அவளோடு சேர்ந்து பிறந்திருக்க வேண்டியவள் ஒரு வருடம் லேட்டாக அடுத்த வருடம் அதே ஜூலை 5ம் தேதி பிறந்தேன். எனவே இரட்டையர்களைப் போலவேதான் வளர்ந்தோம். அவளை பள்ளியில் சேர்க்க வேண்டிய காலம் வந்த பொழுது, அவளை பிரிய முடியாது என்று நான் அழுதேனாம், எனவே என்னையும் அவளோடு சேர்த்து பள்ளிக்கு அனுப்பி விட்டார்கள். அப்போதெல்லாம் பர்த் செர்டிபிகேட் கெடுபிடியெல்லாம் கிடையாது என்பதால் என் அக்காவுக்கு எனக்கு இரண்டு பேருக்குமே ஒரு வயது அதிகம் கொடுத்து சேர்த்து விட்டார்கள். பிறந்த நாள் எல்லாம் யாருக்கு தெரியும். பள்ளி ஆசிரியரிடம் ஆனி  மாதம் என்று சொல்லி இருப்பார்கள், அவர் தனக்கு தோன்றிய ஒரு தேதியை போட்டிருப்பார். சமீபத்தில் என் சகோதரிக்கு பாஸ்போர்ட் எடுக்க வேண்டி வந்தது. அதர்க்காக அவள் அந்த அலுவலகம் செல்வதற்கு முன் அவள் பேரன், "அம்மம்மா உன் டேட் ஆப் பர்த் கேட்டால், ஜுலை 5 என்று சொல்லக் கூடாது, ஜூன் 24 என்று
சொல்ல வேண்டும்" என்று அவளுக்கு நினைவூட்டிக் கொண்டே இருந்தான். ஆக, சீனியர் சிட்டிஸின்களுக்கு வழங்கப் படும் ரயில்வே சலுகைகள் இனிமேல் அவளுக்கு கிடைக்கும். எனக்கு அடுத்த வருடம்தான். இதில் என்ன அவ்வளவு சந்தோசம் என்று மீண்டும் கேட்காதீர்கள், என் சொந்த கதை சோகக் கதையை சொல்கிறேன்.

ஒரே வகுப்பில் படித்தாலும் நாங்கள் இருவரும் சகோதரிகள் என்று நிறைய பெருக்குத் தெரியாது. வகுப்பு வாசல் வரைதான் ஒன்றாக செல்வோம், பிறகு அவளுடைய குழு வேறு, என்னுடைய குழு வேறு. ஒத்த ஜாடையும் கிடையாது.  அது மட்டுமல்ல, பழக்க வழக்கங்களிலும் நானும் அவளும் எதிரெதிர் துருவங்கள்தான். நான் கொழு கொழுவென்றிருக்க, சவலைக் குழுந்தையாகிய அவள் சோனியாக இருப்பாள் (இன்றும் அப்படித்தான்). எங்கள் வகுப்புக்கு புதிதாக வரும் ஆசிரியர்கள் இருவருக்கும் ஒரே இனிஷியல் வருவதைப் பார்த்து, நீங்கள் இரண்டு பேரும் சிஸ்டெர்ஸா? என்று ஆச்சர்யமாக கேட்பார்கள், ஆமாம் என்றால் யார் அக்கா?, யார் தங்கை என்பார்கள்? உண்மையைச் சொன்னால் நம்பவே மாட்டார்கள். அவர்கள் மட்டுமல்ல, பலரும் இன்று வரை அவள்தான் அக்கா, நான்தான் தங்கை என்பதை நம்புவதில்லை. 

இதை விட பெரிய கொடுமை அப்போதெல்லாம் பஸ்ஸில் அரை டிக்கெட் உண்டு. நான் சிறுமியாக இருந்த பொழுது நாங்கள் திருச்சி உறையூரில் இருந்தோம், அங்கிருந்த ராம விலாஸ் பஸ் ஸ்டாப்பிலிருந்து மெயின் காட் கேட் செல்ல முழு டிக்கெட் 10 பைசா, அரை டிக்கெட் 5 பைசா. பஸ்ஸில் கண்டக்டரிடம் என் அம்மா, ரெண்டு அரை டிக்கெட் என்றால், அவர் என்னை காண்பித்து, இந்த பாப்பாக்கு முழு டிக்கெட் வாங்கிடுங்க, அந்த பாப்பாக்கு அதாவது என் அக்கா அரை டிக்கெட் வாங்கிக்கலாம் என்று என் வயிற்றெரிச்சலை கொட்டிக் கொள்வார். ஒரு முறை எங்கள் பள்ளியில் திருச்சி ஏர் போர்ட் காண்பிக்க அழைத்துச் சென்றார்கள். அப்போது ஒரு அசிரியை மாணவிகளை இரெண்டு வரிசையாக பிரித்தார். ஒரு வரிசை முழு டிக்கெட்டுக்கானது, மற்றது அரை டிக்கெட். என்னை முழு டிக்கெட் வரிசையில் நிற்க வைத்துவிட்டு, என் அக்காவை அரை டிக்கெட்டுகளோடு சேர்த்தார். என்ன கொடுமை!!

என்னை பொறாமை பட வைத்த என் சகோதரியும் நானும் 


இப்படி எத்தனை முறை என் காதில் புகை வர வைத்திருக்கிறாள்.. அந்த பாச்சாவெல்லாம் இனிமேல் பலிக்காது  ட்ரெயினில் டிக்கெட் புக் பண்ணும் போதே சீனியர் சிட்டிசன் என்று குறிப்பிட்டால், சலுகை கிடைக்கும். நான் இன்னும் ஒரு வருடம் ஜாலியாக காத்திருப்பேன்.

இதற்காகவே அவளோடு எங்காவது ரயிலில் செல்ல வேண்டும் போல் இருக்கிறது. டிக்கெட் புக் பண்ணி விட்டு," பாத்தியா நீதான் சீனியர் சிட்டிசன், நான் கிடையாது", என்று கொக்கரிக்கலாமே.(அட அசட்டு அல்பமே! இவ்வளவுதானா நீ?!!?)  

Tuesday, June 28, 2016

நன்றி ஸ்ரீராம்!

நன்றி ஸ்ரீராம்! 

சனிக்கிழமை அன்று மாங்காடு சென்று விட்டு வீடு திரும்புவதற்காக கால் டாக்ஸி புக் பண்ணி விட்டு காத்திருந்தேன். எனக்கு முன்னால் நின்று கொண்டிருந்த பைக்கில் உட்கார்ந்திருந்த இளைஞன் திரும்பி என்னை முறைத்துப் பார்த்தான். 

இவன் ஏன் என்னை முறைக்கிறான்? பயந்து போய் பார்வையை திருப்பிக் கொண்டேன். அப்போதுதான் புரிந்தது அவன் என்னை முறைக்கவில்லை அவனை காக்க வைத்து விட்டுச் சென்ற அவன் தயார் எனக்குப் பின்னால் வந்து கொண்டிருக்கிறார்.. அவரைத்தான் உன்னிப்பாக பார்த்திருக்கிறான்... கடவுளே!

புக் பண்ணிய கால் டாக்ஸி இன்னும் ஒரு நிமிடத்தில் வந்து விடும் என்று அறிவிப்பு வருகிறது, ஆனால் இன்னும் காணவில்லையே..? யோசித்துக் கொண்டிருக்கும் பொழுதே ஒரு வாகனம் என்னை மெதுவாக கடந்து செல்கிறது... 
"மேடம் எங்க இருக்கீங்க?" 
"கோவிலுக்கு வெளியே ட்ராபிக் கான்ஸ்டபிள் பக்கத்தில்.."
 "அங்கதான் நானும் இருக்கேன், கொஞ்சம் முன்னால பாருங்க..."
 
என்னை கடந்து சென்ற வாகனம்தான். ஏறி உட்கார்ந்தேன்.  
எப்போதும் போல் என் பெயரை கேட்டு ஊர்ஜிதம் பண்ணிக்க கொள்ளவில்லை. வண்டியில் 'ஓலா' ஸ்டிக்கரும் இல்லை. 

சரியான வண்டிதானே? என்னை யாரும் கடத்திச் செல்லவில்லையே? மீண்டும் பயம். 

"உங்க வண்டியில் ஏன் பெயர் ஸ்டிக்கர் இல்லை?"

"சின்ன வண்டியில்தான் மேடம் ஸ்டிக்கர் இருக்கும், இது பெரிய வண்டி. தவிர ஓலா, உபர் இரண்டிலும் ஓடும்".

என்னதான் ட்ரைவர் சமாதானம் சொன்னாலும், எனக்கு கொஞ்சம் பயமாகவே இருந்தது. 

ஆனால் என் பயம் அர்த்தமற்றது. சரியான வண்டிதான், ஓட்டுனரும் நல்லவர்தான்.

மறு நாள் டூ வீலரில் அசோக் நகரில் வசிக்கும் என் சகோதரி வீட்டுக்குச்  சென்றேன். அங்கு போனதும் மழை பிடித்துக் கொண்டதால் வண்டியை அங்கேயே விட்டு விட்டு உபர் கார் புக் பண்ணி வந்தேன். 130 ரூபாய் ஆகியிருந்தது. 150 ரூபாய் கொடுத்தால், "சில்லறை இல்லை மேடம், 30 ரூபாய் தாங்களேன்". என்றார் ட்ரைவர்.

30 ரூபாயை எடுப்பதற்காக மாடிக்கு வந்தவள் வாசல் கதவை சாத்தவில்லை.
 
ஐயோ, வாசல் கதவை திறந்தே வைத்து விட்டு வந்து விட்டோமே? அந்த ட்ரைவர் பின்னாலேயே வந்து நம்மை கத்தியால் குத்தினால்...? என்னதான் அபார்ட்மெண்ட் என்றாலும், அக்கம் பக்கம் எல்லாம் கதவை அடைத்துக் கொண்டு வெளியே அல்லவா உட்கார்ந்து கொண்டிருக்கிறார்கள்? அதுவும் ஞாயிறு என்றால் கேட்கவே வேண்டாம்.." மீண்டும் பயம். 

அந்த ட்ரைவர் பாவம் அப்படி எல்லாம் எதுவும் செய்யாமல் நான் வருவதற்க்காக காத்துக் கொண்டிருந்தார். 

இத்தனை பயம் ஏன்? என் குடும்பத்தினர்கள் வெளியூர் செல்லும் போதெல்லாம் அவர்களை விடியற் காலையிலும், இரவிலும் பேருந்து நிலையத்திலும் ரயில் நிலையத்திலும் கொண்டு விட்டு விட்டு தனியாக வரும் போதெல்லாம் தோன்றாத பயம் இப்போது ஏன்? உலகம் இனிமையானது, மனிதர்களில் பெரும்பான்மையோர் நல்லவர்கள் என்று நம்புகிறவன் நான்.  துள்ளத் துடிக்க கொலை செய்யப்பட்ட ஸ்வாதியின் மரணம் என்னை வெகுவாக பாதித்து விட்டது. என் நம்பிக்கை பொய்த்துப் போன பயம், மானுடம் தோற்ற பயம். 

'எங்கள் ப்ளாக்'இல் ஸ்ரீராம் பதிவு செய்திருந்த பாசிட்டிவ் செய்திகளை படித்தப் பின் என் நம்பிக்கை மீண்டது. நன்றி ஸ்ரீராம்!         

Thursday, June 23, 2016

முருங்கைக்காய் கறி

முருங்கைக்காய் கறி 

முருங்கை காயில் சாம்பார் செய்யலாம், பொரித்த குழம்பு செய்யலாம், இது எல்லோருக்கும் தெரிந்த விஷயம். கறி கூட சமைக்கலாம்.

தேவையான பொருள்கள்:

முருங்கைக்காய் (இளசாக இருக்க வேண்டியது அவசியம்) - 4
காரப்பொடி - ஒன்றரை டீ ஸ்பூன் 
உப்பு -  1 டீ ஸ்பூன் 
மஞ்சள் தூள் - 2 சிட்டிகை
தாளிக்க: எண்ணெய், மற்றும் கடுகு.



செய்முறை: 

முதலில் முருங்கைக்காய்களை அலம்பி துண்டுகளாக்கிக் கொள்ளவும். அடுப்பில் வாணலியை வைத்து, எண்ணெய் விட்டு அது காய்ந்ததும் கடுகை போட்டு அது வெடித்தவுடன் அலம்பி வைத்திருக்கும் முருங்கைக்காய்களை போட்டு மஞ்சள் பொடி, உப்பு, காரப்பொடி இவைகளை சேர்த்து கலந்து விட்டு ஒரு தட்டைப் போட்டு மூடி வைக்கவும். அடுப்பை சிம்மில் வைத்து அவ்வப்பொழுது தண்ணீர் தெளித்த பிரட்டி விட வேண்டும். முருங்கைக்காய்கள் நிறம் மாறுவது வெந்ததற்கு அறிகுறி. உடனே இறக்கி விடலாம். தயிர் சாதத்திற்கு தொட்டுக்கொள்ள மிகவும் ருசியாக இருக்கும்.   

தன் மாமியாரிடமிருந்து என் மகளும், அவளிடமிருந்து நானும் கற்றுக் கொண்ட விஷயம் இது.



Sunday, June 19, 2016

CHOOSE THE MIDDLE PATH

CHOOSE THE MIDDLE PATH

"CHOOSE THE MIDDLE PATH" இது புத்தரின் தலையாய போதனை. இதை நாம் வாழ்க்கையில் கடை பிடிக்கிறோமோ இல்லையோ, முக்கியமான தினங்களில் கோவில்களுக்குச் செல்லும் போது அவசியம் கடை பிடிக்க வேண்டும் என்று நினைக்கிறேன். 

ஏனென்றால் இன்று மாங்காடு சென்று வரலாம் என்று நானும் என் நல்ல பாதியும்(BETTER HALF) கிளம்பினோம். இன்று ஞாயிறு, தவிர பௌர்ணமி வேறு ஆகவே சீக்கிரம் கிளம்பி விட வேண்டும் என்று நினைத்தேன். அனால் எழுந்திருக்கும் போதே காலை மணி 6:00 . கிளம்ப 8:30 ஆகி விட்டது. உபெர் கார் வரவழைத்தோம். மிகவும் சல்லிசான ரேட். கோவிலை அடைந்த பொழுது மணி ஒன்பது. வழக்கத்தை விட கொஞ்சம் அதிகமான கும்பல். எனவே 50 ரூபாய் டிக்கெட் வாங்கிக் கொண்டு அதற்கான வரிசையில்,விநாயகரை வணங்கி விட்டு  நின்றோம். அங்கு நிற்கும் பொழுதுதான் மொத்தம் மூன்று வரிசைகள் இருப்பதை கவனித்தேன். சுவரை ஒற்றி பொது வரிசை, அதற்க்கு அடுத்து நடுவில் 20 ருபாய் கட்டண வரிசை, அதற்க்கு அடுத்து கடைசியாக 50 ரூபாய் கட்டண வரிசை. 

இலவச பொது வரிசை நீண்டு இருந்தது. அதைப் பார்த்து பயந்து போய் சிறப்பு வழியில் சென்று விடலாம் என்று நினைத்த பலரும் 50 ரூபாய் வழியை தேர்ந்தெடுத்து விட்டார்கள் போல, அந்த வரிசையும் சற்று நீண்டுதான் இருந்தது. நடுவில் இருந்த 20 ரூபாய் வரிசையில் ஆட்கள் மிகவும் குறைவாக இருந்ததால்,அது சரசரவென்று நகர்ந்தது!!

இந்த அனுபவம் முதல் முறை அல்ல. ஒரு முறை திருப்பதியிலும் இப்படி நேர்ந்தது. அப்போதெல்லாம் திருப்பதியில் பொது வரிசை,கட்டண சேவை ரூ.50/-,ரூ 300/-  என்று இருந்தது. நாங்கள் 300 ரூபாயில் கும்பல் அதிகம் இருக்காது என்று நினைத்தோம். எங்களைப் போலவே பலரும் நினைத்ததால் 300 ரூபாய் வரிசை நீண்டிருந்தது. 50 ருபாய் வரிசை சற்று விரைவாக நகர்ந்து விட்டது. 

So moral of the story is always choose the middle path!   

CHOOSE THE MIDDLE PATH

CHOOSE THE MIDDLE PATH

"CHOOSE THE MIDDLE PATH" இது புத்தரின் தலையாய போதனை. இதை நாம் வாழ்க்கையில் கடை பிடிக்கிறோமோ இல்லையோ, முக்கியமான தினங்களில் கோவில்களுக்குச் செல்லும் போது அவசியம் கடை பிடிக்க வேண்டும் என்று நினைக்கிறேன். 

ஏனென்றால் இன்று மாங்காடு சென்று வரலாம் என்று நானும் என் நல்ல பாதியும்(BETTER HALF) கிளம்பினோம். இன்று ஞாயிறு, தவிர பௌர்ணமி வேறு ஆகவே சீக்கிரம் கிளம்பி விட வேண்டும் என்று நினைத்தேன். அனால் எழுந்திருக்கும் போதே காலை மணி 6:00 . கிளம்ப 8:30 ஆகி விட்டது. உபெர் கார் வரவழைத்தோம். மிகவும் சல்லிசான ரேட். கோவிலை அடைந்த பொழுது மணி ஒன்பது. வழக்கத்தை விட கொஞ்சம் அதிகமான கும்பல். எனவே 50 ரூபாய் டிக்கெட் வாங்கிக் கொண்டு அதற்கான வரிசையில்,விநாயகரை வணங்கி விட்டு  நின்றோம். அங்கு நிற்கும் பொழுதுதான் மொத்தம் மூன்று வரிசைகள் இருப்பதை கவனித்தேன். சுவரை ஒற்றி பொது வரிசை, அதற்க்கு அடுத்து நடுவில் 20 ருபாய் கட்டண வரிசை, அதற்க்கு அடுத்து கடைசியாக 50 ரூபாய் கட்டண வரிசை. 

இலவச பொது வரிசை நீண்டு இருந்தது. அதைப் பார்த்து பயந்து போய் சிறப்பு வழியில் சென்று விடலாம் என்று நினைத்த பலரும் 50 ரூபாய் வழியை தேர்ந்தெடுத்து விட்டார்கள் போல, அந்த வரிசையும் சற்று நீண்டுதான் இருந்தது. நடுவில் இருந்த 20 ரூபாய் வரிசையில் ஆட்கள் மிகவும் குறைவாக இருந்ததால்,அது சரசரவென்று நகர்ந்தது!!

இந்த அனுபவம் முதல் முறை அல்ல. ஒரு முறை திருப்பதியிலும் இப்படி நேர்ந்தது. அப்போதெல்லாம் திருப்பதியில் பொது வரிசை,கட்டண சேவை ரூ.50/-,ரூ 300/-  என்று இருந்தது. நாங்கள் 300 ரூபாயில் கும்பல் அதிகம் இருக்காது என்று நினைத்தோம். எங்களைப் போலவே பலரும் நினைத்ததால் 300 ரூபாய் வரிசை நீண்டிருந்தது. 50 ருபாய் வரிசை சற்று விரைவாக நகர்ந்து விட்டது. 

So moral of the story is always choose the middle path!   

Tuesday, June 14, 2016

புத்தகத் திருவிழா 2016!

புத்தகத் திருவிழா 2016!

எல்லா வருடங்களும் ஜனவரியில் நடக்கும் புத்தக கண்காட்சி இந்த வருடம் ஆறு மாதங்கள் ஒத்திவைக்கப் பட்டு இப்போது ஜூனில்தான் நடை பெற்றது. சென்ற வருடம் டிசம்பரில் வந்த வெள்ளத்தின் பாதிப்பிலிருந்து சென்னை விடுபடாததுதான் தாமதத்திற்கு காரணம். 
இது 39வது புத்தகக் கண்காட்சி. புத்தக கண்காட்சி என்று பொதுவாக அறியப்பட்டாலும், புத்தக ஆர்வலர்கள் இதை புத்தக திருவிழா என்றே குறிப்பிடுகிறார்கள்.

முதலில் காயிதே மில்லத் கல்லூரியிலும், பின்னர் பச்சையப்பா கல்லூரிக்கு எதிரே இருக்கும் செயின்ட்.ஜான் பள்ளியிலும், சென்ற வருடம் ஒய்.எம்.சி.ஏ. க்ரௌண்டிலும் நடை பெற்ற புத்தக கண்காட்சி இந்த வருடம் ஏனோ தீவு திடலில் நடை பெற்றது. 

ஜூன் மாதம் என்பது புத்தக கண்காட்சி நடத்த ஏற்ற மாதம் கிடையாது. இப்போதுதான் பள்ளிகள் திறக்கும், அதற்காக நிறைய செலவு செய்திருக்கும் பெற்றோர் புத்தக கண்காட்சிக்கு வருவார்களா? அதனால் வருகையும் விற்பனையும் எதிர்பார்த்தது போல இல்லை. நடுவில் இரண்டு நாட்கள் மழை வேறு, என்றெல்லாம் கூறப்பட்டது. ஆனால் நான் சென்றது ஞாயிற்று கிழமையாக இருந்ததாலோ என்னவோ, புத்தக திருவிழா என்பதற்கு ஏற்ப தேர் கூட்டம், திருவிழா கூட்டமாக இருந்தது. கார் பார்கிங்கிலிருந்து நுழைவு வாசலுக்கு மினி பஸ் ஷட்டில் சர்வீஸ் விட்டிருந்தார்கள். அதற்கு ஒரு நீண்ட வரிசை காத்துக் கொண்டு நின்றது. நாங்கள் ஒரு ஆட்டோ பிடித்து சுவாமி சிவானந்தா சாலை வழியாக சென்று, நேபியர் பாலத்தை கடந்து கண்காட்சிக்குள் நுழைந்தோம். 

எழுநூறு ஸ்டால்கள்! இட வசதி தாரளமாக இருந்ததால் அத்தனை கும்பலிலும் சௌகரியமாக நடக்க முடிந்தது என்றாலும் என் தோழி கால் வாசி சுற்றுவதர்க்குள் களைப்படைந்து விட்டார். ஆகவே என்னால் முழுமையாக பார்க்க முடியவில்லை. வழாக்கம் போல பொன்னியின் செல்வன் நிறைய கண்ணில் பட்டது. நான் சந்தியா பதிப்பகத்திலிருந்து திரு.ஜீ.வி. அவர்களின் 'ந.பிச்சமூர்த்தியிலிருந்து எஸ்.ரா. வரை' புத்தகமும்,லா.ச.ரா.வின்' புத்ர' புத்தகமும் மட்டும் வாங்கினேன். பக்கத்தில் இருந்த 3D ஓவிய அரங்கில் சில புகைப் படங்கள் எடுத்துக் கொண்டு நடையை கட்டினோம். அசோகமித்ரனின் 'புலிக் கடன்' பிலிப்கார்டில் கிடைக்கிறதா என்று பார்க்க வேண்டும். 



Friday, June 10, 2016

பழையன விரும்பு!

பழையன விரும்பு!

ஒரு காலத்தில் புழக்கத்தில் இருந்து இன்று வழக்கொழிந்து போன சில விஷயங்கள், உங்களுக்கு பரிச்சயமா? பாருங்கள்..




வண்ணான் கூடை:

நான் சிறுமியாக இருந்த காலத்தில் பெரும்பாலும் பலர் வீடுகளில் இருந்த விஷயம் இது. சலவைக்கு போடா வேண்டிய துணிகளை இந்த கூடையில் சேர்த்து வைப்பார்கள். வண்ணான் ஒவ்வொரு புதன் கிழமை அல்லது சனிக் கிழமை வந்து சாவை செய்த துணிகளை கொடுத்து விட்டு, துவைக்க வேண்டிய துணிகளை எடுத்துச் செல்வார். 

கல் சட்டி: 



கச்சிட்டி என்று வழக்கு மொழியில் அறியப்படும் பொருள். இதில் வைக்கப் படும் வற்றல் குழம்பு தனி சுவை. அதைத் தவிர சாதாரண சாம்பார், அரைத்து விட்ட சாம்பார், கூட்டு போன்றவையும் சமைக்கலாம். கெமிகல் ரிஆக்ஷன் இல்லாததால் உணவு சுவை மாறாமல் இருக்கும். ஆனால் வாங்கியவுடன் உடனே அடுப்பில் ஏற்றி விட முடியாது,பழக்க வேண்டும். பழகிய கல் சட்டி பல வருடங்கள் இருக்கும். இப்படி மாமியார் பழக்கி பயன் படுத்தி வந்த கல் சட்டியை  மருமகள் உடைத்து விட்டால் உள்நாட்டு போர் மூளும் அபாயம் உண்டு. இப்பொழுதும் ஸ்ரீரங்கத்தில் கிடைக்கிறது. எப்பொழுது போய் கேட்டாலும், "கல் சட்டி எல்லாம் வரதே இல்லீங்க" என்றபடியே உள்ளே அடுக்கி வைத்திருப்பதிலிருந்து எடுத்து தருவார். 

இரும்பு தோசைக் கல்:

இப்போதெல்லாம் பெரும்பாலானோர் நான் ஸ்டிக் தாவாவில் தான் தோசை வார்கின்றனர். எங்கள் வீட்டில் தோசைக் கல்லில் வார்க்கப்படும் தோசைக்குதான் வரவேற்பு. தோசைக் கல்லும் ஸ்ரீரங்கத்தின் சிறப்பு ஐடெம். நானும் என் சகோதரிகளும் ஒவ்வொரு முறை ஸ்ரீரெங்கம் செல்லும் போதும் காவேரியில் குளிப்பது, ரெங்கநாதரை சேவிப்பது இவை தவறலாம், ஆனால் தோசைக் கல்லோ, இலுப்பை கரண்டியோ(தளிக்கும் கரண்டி), இரும்பு சட்டியோ வாங்குவது தவறாது. என் அண்ணா ஒரு முறை "நீங்கள் தோசை கல் வாங்குவதை இன்னும் நிறுத்தவில்லையா"?. என்று கேட்டார். 

வெண்கலப் பானை:

ஒரு காலத்தில் இதில்தான் சாதம் வடித்துக் கொண்டிருந்தோம். குக்கர் என்ற ஒன்று வந்ததும் இதை பரணில் போட்டு விட்டோம். அரிசி உப்புமாவை வெண்கலப் பானையில் செய்தால் அதன் ருசியே தனி..!

அம்மி:




முன்பெல்லாம் தேங்காய் துவையல் போன்றவற்றை இதில்தான் அரைத்துக் கொண்டிருந்தோம். அம்மியில் அரைப்பது என்பதெல்லாம் இந்த தலைமுறை அறியாத ஒன்று. 

இதையெல்லாம் பயன் படுத்துவதால் என்னை பழமைவாதி என்று கருதி விடாதீர்கள். 

Thursday, June 9, 2016

வராக நதிக்கரை ஓரம் - 2

வராக நதிக்கரை ஓரம் - 2

திருவக்கரையிலிருந்து பாண்டிச்சேரி சென்று அங்கு பகல் உணவை முடித்துக் கொண்டு மாயவரத்திற்கு அருகி இருக்கும் பெரம்பூர் என்னும் சிற்றூரை நோக்கி சென்றோம். அங்குதான் எங்கள் சம்பந்தியின் குல தெய்வம் கோவில் உள்ளது. மாலையில் அங்கு அபிஷேகத்திற்கு ஏற்பாடு செய்திருந்தார்கள். 

நாங்கள் அங்கு சென்ற போது ஐந்தரை மணி இருக்கும். அர்ச்சகர் அபிஷேகத்திற்கான ஏற்பாடுகளை ஆரம்பித்தார். சிறிய கிராமமாக இருந்தாலும் கோவில் பெரிதாகத்தான் இருந்தது. இதுதான் நம்முடைய பாரம்பரிய சிறப்பு. எந்த கிராமத்திற்கு வேண்டுமானாலும் சென்று பாருங்கள், அங்குள்ள பெரிய வீட்டை விட கோவில் பெரியதாக இருக்கும். எத்தனையோ அரசர்கள் இங்கு ஆண்டிருக்கிறார்கள், அவர்களின் அரண்மனைகள் நமக்கு காண கிடைப்பதில்லை, அவர்கள் கட்டிய கோவில்கள் இன்னும் அழியாமல் காலங்களை கடந்து நிற்கின்றன. அது மட்டுமல்ல தன்னிடம் உள்ள சிறப்பான பொருள்களை இறைவனுக்குத்தான் படைக்க வேண்டும் என்று எண்ணியதால்தான் விலை உயர்ந்த ஆபரணங்களையும் பொன், மணி, இரத்தினங்களையும் அரசர்கள் கோவில்களில்  வீற்றிருக்கும் கடவுளுக்கு சமர்ப்பித்திருக்கிறார்கள். நாம்தான் அந்த கோவில்களை சரியாக பராமரிக்காமல் இருக்கிறோம். ஆனால் பெரம்பூர் வாசிகள் அப்படி இல்லை. கோவில் ஓரளவு நன்றாகவே பராமரிக்கப்படுகிறது.

கர்பக்ரஹத்தில் வள்ளி,தேவசேனா இரு புறமும் நின்றிருக்க முருகன் அந்த பெயருக்கு ஏற்றவாறு மிகவும் அழகாக மயில் மீது ஒரு காலை மடக்கியும், மறு காலை தொங்க விட்டுக் கொண்டும் அமர்ந்த கோலத்தில் எழிலான தோற்றத்தில் காட்சி அளிக்கிறார். தனி சந்நிதியில் தேவானை குடி கொண்டிருப்பதால் முருகனுக்கு முன் யானை வாகனம். அபிஷேகம் முடிவதற்குள் இருட்டி விட்டதால் பிரகாரத்தை வலம் வர முடியவில்லை.

அங்கிருந்து மாயவரம் வந்து இரவு அங்கே தங்கினோம். மறுநாள் காலை மாயவரத்தின் புகழ் பெற்ற காளியாகுடி ஹோட்டலில் பொங்கலில் முந்திரி பருப்பை சேர்த்தார்களா? அல்லது முந்திரி பருப்பில் பொங்கலைச் சேர்த்தார்களா என்று நினைக்கும்படி முந்திரி நிறைந்த நெய் சொட்டும் பொங்கலோடு காலை சிற்றுண்டியை முடித்துக் கொண்டு வைத்தீஸ்வரன் கோவிலுக்குச் சென்றோம்.    

வைத்தீஸ்வரன் கோவில் என்று அறியப்படும் கோயிலின் பண்டைய பெயர் 'புள்ளிருக்கு வேளூர்' என்பதாகும். புள் என்றால் பறவை என்று பொருள். ஜடாயு(இராமாயணத்தில் வருமே அதே ஜடாயுதான்), ரிக் வேதம், மற்றும் நவக்ரகங்களில் ஒன்றான செவ்வாய்(வேள்) இந்த மூவரும் வழிபட்ட தலம். ஜடாயுவிற்கு ராமபிரான் இங்கு கோவில் பிரகாரத்தில் உள்ள ஜடாயு குண்டம் என்னும் இடத்தில்தான் இறுதிச் சடங்குகளை செய்ததாக நம்பப் படுகிறது. 

செவ்வாய் இங்கிருக்கும் சிவபெருமானை வழிபட்டு சக்திகள் பெற்றதல் செவ்வாய்க்கு தனி சன்னிதி உள்ளது. நவக்ரகங்களில் செவ்வாய்க்கு உரிய தலமாகவும் கருதப் படுகிறது. ப்ராசீனமான சிவன் கோவில்களில் நவக்ரகங்களுக்கு என்று தனி சன்னிதி இல்லாமல் இருப்பது போல இங்கும் நவக்ரக சந்நிதி கிடையாது. ஆனால் இன்று இது ஒரு செவ்வாய் பரிகார ஷேத்திர மாகிவிட்டது. சுவாமி சன்னிதியை விட செவ்வாய் சந்நிதியில் கூட்டம் அதிகம்.

சுவாமி சந்நிதியில் எழுந்தருளி இருக்கும் லிங்கத் திரு மேனிக்கு முன்னால் ஆடி(கண்ணாடி) போன்றஒன்று பித்தளையில் ஸ்தாபிக்கப் பட்டிருக்கும். அதே போன்ற ஒன்றை திருவண்ணாமலையிலும் காணலாம். காரணம், மிகவும் சக்தி பொருந்திய வடிவாதலல் அதன் அதிர்வுகளை நம்மால் முழுமையாக தாங்க முடியாது அந்த லிங்கத் திருமேனி எதிரே வைக்கப்பட்டிருக்கும் பித்தளை ஆடியில் பிரதிபலிக்கச் செய்கிறார்கள். இறைவன் வைதீஸ்வரனாக, மருத்துவனாக வரும் பொழுது இறைவி அவனுக்கு உதவியாக வரும் செவிலி போல கையில் தைலப் பாத்திரம் ஏந்தி தைலாம்பாளாக வருகிறாள். 

ஒரு முனிவருக்கு மகளாக அவதரித்த அம்பாளை முதியவராக வந்த சிவ பெருமான் தனக்கு திருமணம் செய்து தர கேட்டாராம். மகளோ சிறுமி இந்த முதியவருக்கு எப்படி திருமணம் செய்து தருவது என்று முனிவர் தயங்க, இறைவன், கவலைப் படாதீர்கள் உங்கள் மகளின் இரும்பைப் போன்ற உறுதியான மாங்கல்ய பாக்கியம் என் உயிரை காப்பாற்றும் என்று கூறி அவளுக்கு இரும்பால் தாலி அணிவித்தராம். அந்த இரும்புத் தாலியே இன்றும் அம்மனை அலங்கரிக்கிறது. முன்பெல்லாம் இந்த விவரங்களை அர்ச்சகர் கூறி அம்பாளின் இரும்புத் தாலியை தரிசனம் செய்யச் சொல்வார். இப்போது அதையெல்லாம் சொல்வதில்லை. ஒரு பக்கம் சரியாக பராமரிக்கப்படாத கோவில்கள், இன்னொரு பக்கம் பக்தர்கள் வந்தாலும் அங்கு அர்ச்சகர்களின் அலட்சியம்...!  ஹூம்! 

இங்குள்ள குளத்தில் வெல்லம், உப்பு, மிளகு இவைகளை கரைத்தால் நம் வியாதிகள் நீங்கும் என்பது ஐதீகம். ஆனால் இப்போது.  அவைகளை கரைப்பவர்கள் அதிகமாகி விட்டதாலோ என்னவோ யாரையும் குளத்தில் கரைக்க விடுவதில்லை. குளக்கரையில் உள்ள பெட்டியில் போட்டு விடச் சொல்கிறார்கள். வெகு அழகான குளம்,




இந்தக் கோவிலில் உள்ள செல்ல முத்துக் குமரனும் மிகவும் சக்தி வாய்ந்தவர். கத்திரி வெய்யலின் பொழுது அவர் இங்கே இருக்க முடியாமல் கைலாசம் சென்று விடுவதால் அப்போது முருகன்(செல்ல முத்துக் குமரன்) சந்நிதியை பூட்டி விடுவார்கள் என்றார்கள். 

வைதீஸ்வரன் கோவிலிலிருந்து சிதம்பரம் சென்று இரத்தின சபாபதி அபிஷேகம், தீபாராதனை தரிசித்துக் கொண்டு சென்னை திரும்பினோம். 

இரத்தின சபாபதி என்பது சிவப்பு கல்லினால் ஆன சிறிய நடராஜ மூர்த்தம். சிதம்பரத்தில் தினமும் காலை 10:30க்கு ஸ்படிகத்தால் ஆன லிங்கத்திற்கு அபிஷேகம் செய்த பிறகு, இந்த இரத்தின சபாபதிக்கும் அபிஷேகம் செய்து தீபாராதனையை இரத்தின சபாபதியின் முன் பக்கம் காண்பித்து விட்டு பிறகு பின் பக்கமும் காட்டுவார்கள். ரத்தினம் வழியே ஒளி ஊடுருவி செல்லும் என்பதால், பார்க்க மிக அழகாக இருக்கும்.   

சைவர்களுக்கு கோவில் என்றால் அது சிதம்பரத்தை தான் குறிக்கும். அப்படிப் பட்ட சிறப்பான பாடல் பெற்ற தலமாகிய இதனுள் ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப் பெற்ற கோவிந்தராஜ பெருமாள் சந்நிதியும் இருப்பது ஒரு சிறப்பு. ஒரே இடத்தில் நின்றபடியே நேராக சிவபெருமானையும் பக்கவாட்டில் கோவிந்தராஜ பெருமாளையும் தரிசனம் செய்ய முடியும். ஹரியும் சிவனும் ஒன்னு, அறியாதவன் வாயிலே மண்ணு இல்லையா?

சிதம்பரம் கோவிலைப் பற்றி நிறைய விஷயங்கள் facebook, whatsaap இவைகளில் வந்து கொண்டே இருக்கின்றன. எனவே நான் புதிதாக எழுத எதுவுமில்லை. ஒன்றை மட்டும் குறிப்பிட விரும்புகிறேன் திருவண்ணாமலையைப் போலவே சிதம்பரமும் ஒரு முறை அங்கு சென்றால் மீண்டும் மீண்டும் ஈர்க்கிறது.