கணம்தோறும் பிறக்கிறேன் 

Sunday, June 24, 2018

காணாமல் போன தோடு


காணாமல் போன தோடு




நேற்று காலை குளிக்கும் பொழுதுதான் தெரிந்தது, இடது காதில் தோடு இல்லையென்பது. திருகு மட்டும் காதில் ஒட்டிக் கொண்டிருந்தது. எங்கே விழுந்ததோ தெரியவில்லையே..? பாத் ரூம் முழுவதும் பார்த்து விட்டேன், ம்ஹூம், கண்ணில் படவேயில்லை.

வெளியில் வந்து உடையணிந்து கொண்டு வீடு முழுவதும் தேடிப் பார்த்தேன். எங்குமே கண்ணில் படவில்லை.

கடவுளே! அரைக்காசு அம்மா!(ஏற்கனவே அரைக்காசு அம்மனுக்கு ஓவர் டியூ), மதர்! என்றெல்லாம் புலம்பிக் கொண்டே நோட்டம் விட்டேன். கண்ணில் பட்டால்தானே?

சென்ற வாரம் தலைக்கு குளித்த சமயம், தோடு, மூக்குத்தியை அலம்பி விட்டு மீண்டும் அணிந்து கொண்ட பொழுது திருகு மாறிவிட்டது போலும். இடது காது தோடு மிகவும் லூசாக இருந்தது. கழட்டி மாற்றி போட்டுக் கொள்ள வேண்டும் என்று நினைத்துக் கொண்டிருந்தவள் ஏனோ ஒத்திப் போட்டுக் கொண்டே இருந்தேன். முன்பே மாற்றிக் கொண்டிருக்கலாம் என்று எப்போதும் போல் பட்ட பின்பு வரும் ஞானம் இப்போதும் வந்தது.
குட்டித் தூக்கம் போட்டுக்கொண்டிருந்த கணவரை எழுப்பி, “என் காது தோட்டை காணவில்லை,உங்கள் கண்ணில் படுகிறதா பாருங்கள், என்றேன்.

“அது வைரமா?”

“இல்லை ஜெர்கான்”

“எங்கே போட்ட?”

மிக்ஸி ரிப்பேர் என்று சர்வீஸ் செய்ய எடுத்துக்கொண்டு போனால், “மிக்ஸியை உடைத்திருக்கிறீர்கள் மேடம்” என்று நாம் ஏதோ வேண்டுமென்றே கீழே போட்டு உடைத்தது போல பேசும் சர்வீஸ் சென்டர் ஆளைப் போல கேட்டார்.

"ம்ம் எனக்கு போரடித்தது, அதனால் என்னுடைய தோட்டை எங்கேயோ எறிந்து விட்டு தேடுகிறேன்.."

"தொலைப்பதையும் தொலைத்து விட்டு, இந்த மாதிரி பேச்சுக்கு ஒண்ணும் குறைச்சல் இல்லை."

பதில் பேசி சண்டை வளர்ப்பதை விட, எனக்கு தோடு முக்கியம் என்பதால் வாயை மூடிக் கொண்டேன்.

“எங்க போய் விடும்? இங்கதான் இருக்கும், வேலைக்காரி வந்து பெருக்கும் பொழுது கிடைத்து விடும். சாதாரணமாக திருகுதான் கீழே விழும், உனக்கு என்னமோ தோடு கீழே விழுந்திருக்கிறது”

அதுதான் எனக்கும் ஆச்சர்யமாக இருந்தது தோடு விழுந்தும் எப்படி திருகாணி விழாமல் ஒட்டிக் கொண்டிருந்திருக்கிறது என்று. ஒரு வேளை முன்பு கட்டிக் கொண்டிருந்த புடவையில் ஓட்டிக் கொண்டிருக்குமோ? க்ளோசசெட்டில் விழுந்து நான் ஃப்லஷ் செய்திருந்தால்…? ஒன்றும் செய்ய முடியாது.

படுக்கையில் விழுந்திருந்து நான் கவனிக்காமல் விட்டிருப்பபேனோ? யோசித்துக் கொண்டே படுக்கையை பார்க்கிறேன்… அதில் தலயணைக்கருகில் கவிழ்ந்து உட்கார்ந்திருக்கிறது காணாமல் போன என் தோடு.

அப்படியென்றால் காலையில் எழுந்திருந்த பொழுதே என் காதில் தோடு இருந்திருக்காது, ஆனாலும், காலையிலிருந்து என் கனவரோ, மருமகளோ என் ஒரு காதில் தோடு இல்லை என்பதை கவனிக்கவே இல்லை என்பது கவனிக்கப்பட வேண்டிய விஷயம்.

34 comments:

  1. எப்படியோ நீங்கள் மறுபடியும் தோடுடைய செவியள் ஆனதில் மகிழ்ச்சி!

    // சாதாரணமாக திருகுதான் கீழே விழும், உனக்கு என்னமோ தோடு கீழே விழுந்திருக்கிறது”/

    அதுதானே? ஹா.. ஹா.. ஹா...

    ReplyDelete
    Replies
    1. ஹையோ ஸ்ரீராம் ஹைஃபைவ்!!! இதை வாசித்ததும் பானுக்காவைக் கலாய்த்து போட நினைத்த வரிகள் தோடுடைய செவியள் நு நீங்கள் சொல்லிட்டீங்க டிட்டோ செஞ்சுட்ட்டேன்......
      அதே போல கோட்டட் வரிக்கு நானும் சிரித்தேன்....இன்னும் சிரித்த வரி இருக்கு அதை வேறு யாராவது கோட் பண்ணி சிரிச்சுருக்காங்களானு வேற பார்க்கணும்...

      கீதா

      Delete
    2. தோடு காணாமல் போனதோடு விடாமல் அதோடு கூட சேர்த்து கதை எழுதியதோடு எங்களுக்கும் கொடுத்த இந்தத் தோடு கதை படித்ததோடு நாங்களும் பின்னூட்டமும் இட்டாச்சு.

      :)))

      Delete
    3. ஹாஹா! ஏதோ என் உபயத்தில் எல்லோரும் சிரித்திருக்கிறீர்கள்.

      // தோடு காணாமல் போனதோடு விடாமல் அதோடு கூட சேர்த்து கதை எழுதியதோடு எங்களுக்கும் கொடுத்த இந்தத் தோடு கதை படித்ததோடு நாங்களும் பின்னூட்டமும் இட்டாச்சு.//

      ஆஹா! உங்கள் தோடு பிரமாதமாக ஜொலிக்கிறதே!

      Delete
  2. ஹிஹிஹி, பானுமதி, எனக்கு அடிக்கடி இப்படி ஆகும். தோடு தான் கீழே விழும். திருகு காதில் ஒட்டிக்கும். அடிக்கடி காதைத் தொட்டுப் பார்த்துக்குவேன். இதனாலேயே நான் தலையில் ஸ்கார்f , குரங்குக் குல்லாய் போன்றவை போடுவதில்லை. ஜெர்கின் போட்டாலும் தலையை மூடுவதில்லை. பல சமயங்களில் இரவுகளில் படுக்கையிலேயே விழுந்து பின்னர் ஏதோ ஒரு உணர்வால் விழிப்பு வந்து காதைத் தொட்டுப் பார்த்துக் கண்டுபிடித்து எடுத்திருக்கேன். அதனால் போர்வை போர்த்தினால் கூட இடுப்புக்குக் கீழே தான்! கழுத்து வரை போர்வை போர்த்தினால் அந்தப் போர்வை பட்டுப் பட்டுத் தோடு கழன்று விடுமோ என்னும் பயம்.

    ReplyDelete
    Replies
    1. // ஹிஹிஹி, பானுமதி, எனக்கு அடிக்கடி இப்படி ஆகும்.//
      அப்படியா? சிறு வயதில் திருகாணிகளை தொலைந்து அம்மாவிடம் திட்டு வாங்கியிருக்கிறேன். தோடை தவற விட்டது முதல் முறை.

      Delete
  3. மீண்டும் கிடைத்ததில் மகிழ்ச்சி

    ReplyDelete
  4. நல்ல வேளை கிடைத்து விட்டதே....

    ReplyDelete
    Replies
    1. நல்ல வேளை, என் கணவருக்கு என்று நினைக்கிறேன். இல்லாவிட்டால் பர்ஸ் பழுத்திருக்கும்.

      Delete
  5. தொலைந்தது தோடு...
    அங்குமிங்கும் அலைந்து அதைத் தேடு...
    அப்பாடா... தோடு கிடைத்ததே.. பெரும்பாடு!...

    மறக்காமல் அரைக்காசு அம்மனுக்கு காசு முடிந்து போடுங்க!..

    ReplyDelete
    Replies
    1. //மறக்காமல் அரைக்காசு அம்மனுக்கு காசு முடிந்து போடுங்க!.. //
      'காசு முடிந்து போடு' என்றிருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும். மரியாதை நிமித்தம் கருதி ஒருமையை தவிர்த்து விட்டீர்கள்.

      Delete
    2. >>> 'காசு முடிந்து போடு' என்றிருந்தால்... இன்னும் சிறப்பாக இருந்திருக்கும். மரியாதை நிமித்தம் கருதி ஒருமையை தவிர்த்து விட்டீர்கள்... <<<

      உண்மைதான்...

      என்றென்றும் நலம் வாழ்க!..

      Delete
  6. இதிலிருந்துஎன்ன தெரிகிறது உங்களை யாரும் கவனிப்பதில்லைதானே

    ReplyDelete
  7. மிக்ஸி ரிப்பேர் என்று சர்வீஸ் செய்ய எடுத்துக்கொண்டு போனால், “மிக்ஸியை உடைத்திருக்கிறீர்கள் மேடம்” என்று நாம் ஏதோ வேண்டுமென்றே கீழே போட்டு உடைத்தது போல பேசும் சர்வீஸ் சென்டர் ஆளைப் போல கேட்டார்.

    "ம்ம் எனக்கு போரடித்தது, அதனால் என்னுடைய தோட்டை எங்கேயோ எறிந்து விட்டு தேடுகிறேன்.."//

    ஹா ஹா ஹா ஹா அதானே!

    யாருமே உங்களை கவனிக்கலையாக்கா உங்க முகத்தைக் கூடப் பார்க்கலையா...ஆஆஆஆஆஆஅ அப்ப தேம்ஸ்ல ஒரு போராட்டம் போட்டுற வேண்டியதுதான் அதிரடி எங்கருக்கீங்க...உங்களுக்கு ஒரு வேலை வந்துருச்சு பாருங்கோ...

    கீதா

    ReplyDelete
    Replies
    1. நீங்கள் ரசித்து சிரித்திருப்பதை பார்க்கும் பொழுது, ஒன்று புரிகிறது. உண்மையை அப்படியே எழுதுவதை விட கொஞ்சம் கற்பனை கலந்தால் ரசிக்கப் படும்.

      Delete
  8. திருகு போச்சுனா ரொம்பவே கஷ்டம்தான் தேடி எடுப்பது....

    கீதா

    ReplyDelete
  9. அக்கா அரைக்காசு அம்மாவுக்கு முடிஞ்சு கொடுத்துருங்க..!!!! ட்யூவோடு இப்ப வேண்டுதலையும் சேர்த்து!!! அப்ப முழுக்காசோ?!!!

    கீதா

    ReplyDelete
  10. பாருங்க அம்மன் தன் ட்யூவை நினைவுபடுத்திட்டாங்க....ஹா ஹா ஹா ஹா ஹா

    கீதா

    எப்படியோ மீண்டும் கிடைத்துவிட்டதே. என் வீட்டிலும் இதெல்லாம் சர்வசகஜமாக நடக்கும்...

    துளசிதரன்.

    ReplyDelete
    Replies
    1. //பாருங்க அம்மன் தன் ட்யூவை நினைவுபடுத்திட்டாங்க. //
      கரெக்ட்!
      //என் வீட்டிலும் இதெல்லாம் சர்வசகஜமாக நடக்கும்...//
      நீங்கள் ரியாக்ட் பண்ண மாட்டீர்களோ?
      BTW. புத்தக வெளியீடு நன்றாக நடந்ததா?

      Delete
  11. தோடு தொலைந்தது கூடப் பரவாயில்லை. உங்க முகத்தைப் பார்த்து ,தோடைக் காணோமேன்னு யாரும் சொல்லாதது கண்டிக்கத் தக்கது. ஹாஹா.

    ReplyDelete
    Replies
    1. // தோடு தொலைந்தது கூடப் பரவாயில்லை. உங்க முகத்தைப் பார்த்து தோடைக் காணோமேன்னு யாரும் சொல்லாதது கண்டிக்கத் தக்கது.//
      அவரவர்களுக்கு அவரவர் வேலையில் கவனம்.

      Delete
  12. // சாதாரணமாக திருகுதான் கீழே விழும், உனக்கு என்னமோ தோடு கீழே விழுந்திருக்கிறது”///
    அக்கா உங்களை மாதிரியே திருக்கை மட்டும் போட்டுக்கிட்டு நிறையநேரம் என் பொண்ணு வருவா :)

    ReplyDelete
    Replies
    1. //சாதாரணமாக திருகுதான் கீழே விழும், உனக்கு என்னமோ தோடு கீழே விழுந்திருக்கிறது”///

      ஹா ஹா ஹா இதைத்தான் படித்தபோதே கஸ்டப்பட்டுக் கொப்பி பண்ணி எடுத்து வந்தேன்ன்.. அஞ்சுவும் அதே:))

      Delete
  13. எங்கிட்ட ஒரு 10 ஜோடி யில் ஒவ்வொன்று இப்படி காணாம ஜல சமாதி ஆகியிருக்கு :)
    எங்க மகளுக்கு பிறந்ததில் இருந்து யார் தோளில்தூக்கியிருந்தாலும் அவள் க்ரிப்புக்கு பிடிப்பது காதைத்தான் .இதில் தூங்க வைக்கும்போது என்கதை தடவி திருகை லூசாக்கி விட்ருவா .அது தெரியாம நானும் குளிக்க கடைக்கு இப்படி போனதில் நிறைய மிஸ்ஸிங் :)

    ReplyDelete
    Replies
    1. // இதில் தூங்க வைக்கும்போது என்கதை தடவி திருகை லூசாக்கி விட்ருவா//
      என் பேத்திக்கும் இந்த பழக்கம் உண்டு.

      Delete
  14. என் காதில் தோடு இருந்திருக்காது, ஆனாலும், காலையிலிருந்து என் கனவரோ, மருமகளோ என் ஒரு காதில் தோடு இல்லை என்பதை கவனிக்கவே இல்லை என்பது கவனிக்கப்பட வேண்டிய விஷயம்.//
    விடாதீங்க கண்டிப்பா இதுக்கு ஒரு முடிவு கட்டி நியாயம் கிடைக்கணும் .கவனிக்காம இருந்ததுக்கு ஒரு ஜோடி புது தோடுக்கு அப்ளிகேஷன் போட்டு வைங்க

    ReplyDelete
  15. // கவனிக்காம இருந்ததுக்கு ஒரு ஜோடி புது தோடுக்கு அப்ளிகேஷன் போட்டு வைங்க//
    பிறந்த நாள் வேறு வருகிறது. ம்ம்ம் மாட்டிக்கிட்டார்.

    ReplyDelete
  16. ஆவ்வ்வ் தொலைந்தவர் கிடைத்தால் சந்தோசத்துக்கு எல்லை ஏது...

    என்னிடம் 12 ஜோடி பவுண் தோடுகள் இருக்கு.. ஆனா அப்படியே புதுசாவே இருக்கு எல்லாம்.. ஏன் தெரியுமோ? ஹா ஹா ஹா நான் அவற்றைப் போடுவதே இல்லை...

    என்னிடம் இருக்கும் ஒரு 30/35 ஜோடி இமிட்டேசனையே எப்பவும் மாத்தி மாத்திப் போடுவேன்.. நைட்டில் போட மாட்டேன்.. பழகி விட்டது...

    ReplyDelete
    Replies
    1. வாங்க அதிரா. 30/35 தோடுகளை மாற்றி மாற்றி போடுவீர்களா? ரொம்பவும் பொறுமைதான் உங்களுக்கு.

      Delete
  17. கிடைத்ததால் நகைச்சுவையாக எழுதியிருக்கிறாய்.
    கடவுளுக்கு நன்றி🙏

    ReplyDelete
  18. வணக்கம் சகோதரி

    தோடு தொலைந்துபோய்,அதை தாங்கள் நகைச்சுவையாக சொன்ன விதம் அருமை.சில சமயங்களில் இப்படி ஏதாவது தொலைந்து விட்டால் அது கிடைக்கும் வரை நம் கவனம் வேறெதிலும் லயிக்காது. இப்படி இருந்திருந்தால், தவற விட்டிருக்க மாட்டோமோ.. என்ற சிந்தனையில் மன உளைச்சலை ஏற்படுத்தும். அழகாய் எழுதியுள்ளீர்கள். இதைப் படிக்கையில் நான் கூட என் மகனின் மோதிரம் தொலைந்து போய், அதைப் பற்றி ஒரு பதிவு எழுதியுள்ளது நினைவுக்கு வந்தது.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    ReplyDelete
    Replies
    1. வாங்க கமலா. முதல் முறையாக வருகிறீர்கள். பாராட்டுக்கு நன்றி. தொடர்ந்து வாருங்கள்.

      Delete