கணம்தோறும் பிறக்கிறேன் 

Friday, September 21, 2018

பரவசம் தந்த நவ திருப்பதியும், நவ கைலாசமும் - 4

பரவசம் தந்த நவ திருப்பதியும், 
நவ கைலாசமும் - 4



ஆழ்வார் திருநகரியில் திருப்தியாக தரிசனத்தை முடித்துக் கொண்டு, ராகு, கேது தலங்களான இரட்டைத் திருப்பதி என்னும் திருத்தொலைவில்லி மங்கலம் என்னும் தலத்திற்குச் சென்றோம். இரண்டு சிறிய கோவில்களும் அருகருகே, நடந்து செல்லும் தொலைவில்தான் இருக்கின்றன. இரண்டிற்கும் இடையே அழகான நந்தவனம் ஒன்றை அமைத்து பராமரிக்கிறார்கள். நவதிருப்பதி கோவில்களை பராமரிக்கும் டி.வி.எஸ். ட்ரஸ்டின் அலுவலகமும் இங்குதான் இருக்கிறது.  

ஆத்ரேய சுப்ரபர் என்னும் ரிஷி யாகம் செய்வதற்காக பூமியை சுத்தம் செய்த பொழுது,பூமியில்புதையுண்ட மிகவும் ஒளிமயமான ஒரு வில்லையும், தராசையும் கண்டார். அவைகளை கையில் எடுத்தவுடன் வில் ஆணாகவும், தராசு பெண்ணாகவும் மாறி, குபேரன் சாபத்தால் தாங்கள் இது போல மாறி, பூமியில் புதையுண்டு கிடந்ததாக கூறி,முக்தி அடைந்தனர். அதனாலேயே இந்த ஷேத்திரம் தொலைவில்லி மங்கலம் எனப் பெயர் பெற்றது. 

யாகத்தை சிறப்பாக நடத்தி முடித்த சுப்ரபர் அவிர் பாகத்தை தேவர்களுக்கு அளித்தார். அவிர் பாகம் கிடைக்கப்பெற்ற தேவர்கள் சுப்ரபருடன் திருமாலை வேண்ட, திருமாலும் அங்கு காட்சி அளித்தார். அதனால் மூலவர் தேவர்பிரான் என அழைக்கப்படுகிறார். இந்திரனுக்கும், வருணனுக்கு, வாயு பகவானுக்கும் பெருமாள் காட்சி அளித்த இடம். தாயாருக்கு தனி சந்நிதி இல்லை. நவகிரகங்களில் ராகுவிற்கான தலம். 

தேவர்பிரானை சுப்ரபர் தினமும் தாமரை மலர் கொண்டு பூஜிப்பதை பார்த்த, இத்திருக்கோவிலின் பெருமாள், தன்னையும் அதைப் போல தாமரை மலர் கொண்டு பூசிக்கும்படி வேண்ட, சுப்ரபர் இரண்டு கோவிலில் உள்ள பெருமாளையும் தாமரை மலர் கொண்டு தினமும் பூஜித்தாராம். "இந்தக் கோவிலில் தாமரை மலர் கொண்டு தன்னை பூஜிப்பவர்களின் சகல பாவங்களையும் நீக்கி அருள் தருவேன்" என்று பெருமாள் கூறியிருக்கிறார். ஆகவே, மக்களே, இந்த கோவிலுக்குச் செல்லும் பொழுது தாமரை மலர் வாங்கிச் செல்லுங்கள். 

மருத்துவத்திற்கு அதிபதிகளான அஸ்வினி குமாரர்கள் இந்தக் கோவில் பெருமாளை வழிபட்டு அவிர்பாகம் பெற்றார்கள் என்கிறது தல வரலாறு. 

கிழக்கு நோக்கி வீற்றிருந்த திருக்கோலத்தில் மூலவர் அரவிந்தலோசனர். உற்சவர் செந்தாமரைக்கண்ணன். தாயார் கருந்தடங்கண்ணி. தனி சந்நிதி கிடையாது.

இங்கிருந்து வன திருப்பதி என்று இப்போது அறியப்படும் புன்னை  நகர் அல்லது புன்னையடியில் சரவணபவன் முதலாளி ராஜகோபால் அண்ணாச்சி எழுப்பியிருக்கும்  ஸ்ரீனிவாசப்பெருமாள் கோவிலுக்குச் சென்றோம். 

நாங்கள் சென்ற நேரம் நடை அடைத்திருந்ததால் அங்கிருக்கும் சரவண பவனில் பகல் உணவை முடித்துக் கொண்டோம். உணவு அத்தனை சிலாக்கியம் இல்லை. உணவருந்திவிட்டு வந்த பொழுது நடை திறக்கப்பட்டிருந்தது. அங்கு தரிசனம் செய்து விட்டு, ஸ்ரீ ஜெயந்தி என்பதால் கொடுக்கப்பட்ட சுவையான வெல்லச்சீடை பிரசாதத்தை பெற்றுக் கொண்டு, ஸ்ரீனிவாச பெருமாள் சந்நிதிக்கு அருகில் இருந்த அந்த ஊரின் தெய்வமான  ஆதி நாரயணப் பெருமாள், மற்றும் கிராம தெய்வங்களான பெரிய  பலவேசம், சின்ன பலவேசம் முதலிய சன்னிதிகளில் வணங்கிவிட்டு வந்தோம். அங்கிருந்த பூசாரி, "இந்த இடத்துக்கு முன்பு யாரும் வர மாட்டார்கள், பக்கத்தில் பாலாஜி கோவில் பெரிதாக வந்தவுடன், இந்த கோவிலும் பெரிதாகி விட்டது" என்றார். 

அங்கிருந்து திருச்செந்தூர் சென்றோம். வன திருப்பதி, திருச்செந்தூர் போன்றவை நவ திருப்பதி தலங்களில் வராது என்றாலும், அவைகளுக்கும் இப்போது டூர் ஆபரேட்டர்ஸ் அழைத்துச் செல்கிறார்கள். திருச்செந்தூர் கோவிலை காலை ஆறுமணிக்கு திறந்தால், காலை ஆறு மணிக்கு இரவு 9:30குத்தான் அடைப்பார்களாம். இடையில் திரை கூட போடா மாட்டார்கள் என்பதால் மதிய நேரத்தை வீணடிக்காமல் அங்கு அழைத்துச் சென்று விடுகிறார்கள். கார் நிருத்தும் இடத்திலிருந்து பேட்டரி காரில் கோவிலின் ப்ரதான வாயில் வரை செல்லலாம். 



திருச்செந்தூரில் கும்பல் அதிகம் இல்லாததால் சந்தனக் காப்பில் முருகனை கண் குளிர தரிசனம் செய்து கொண்டோம். வெளியே ப்ரொஃபெஷனல் காமிராவை வைத்துக் கொண்டு, கடல் பின்ணனியிலும், கோவில் பின்ணனியிலும் புகைப்பட்ம் எடுத்து, அதை உடனே ப்ரிண்டும் போட்டுத் தருகிறார்கள். எங்களுக்கு பேட்டரி கார் வந்து விட்டதால் அதற்கெல்லாம் நேரம் இல்லாமல் வந்து விட்டோம்.

இன்னும் இரண்டு திருப்பதிகளை தரிசிக்க வேண்டுமே...



27 comments:

  1. உங்களுடன் நானும் பயணிக்கின்றேன்..

    ஆழ்வார் திருநகரி தரிசனம் செய்து பலவருடங்களாகின்றன...

    வருடந்தோறும் தரிசிக்கும் தலம் திருச்செந்தூர்...

    சில மாதங்களுக்கு முன்
    ஸ்ரீ வைகுண்டம் தரிசனம் ஆயிற்று...

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி ஐயா. எல்லா தலங்களையும் தரிசிக்கும் வாய்ப்பை பெருமாள் உங்களுக்கு அருள வேண்டுகிறேன்.

      Delete
  2. கோவில்கள் சிறப்பு அறிந்தேன்.

    திருச்செந்தூர் இதுவரை சென்றதில்லை.

    முருகா என்னை மன்னித்து விடு!!

    ReplyDelete
    Replies
    1. நவகிரகங்களில் குருவிற்கான தலம் திருசெந்தூர். அவசியம் செல்ல வேண்டிய தலமும் கூட.

      Delete
  3. சிறப்பான பயணம்... தொடரட்டும்.

    திருச்செந்தூர் சிறு வயதில் சென்றது தான். நினைவு தெரிந்து சென்றதில்லை.

    தொடர்கிறேன்.

    ReplyDelete
  4. திருநெல்வேலியிலேயே இருந்தும், நான் திருச்செந்தூர் தரிசனம், சில வாரங்களுக்கு முன்புதான் செய்தேன். பேட்டரி கார் அங்கு நான் பார்க்கவில்லை.

    வன திருப்பதிக்கு நாங்கள் சென்றிருந்தபோது, சைஸ் வாரியாக லட்டுவை பிரசாதமாக விற்றுக்கொண்டிருந்தார்கள். நாங்கள் வாங்கவில்லை. அந்த இடத்து சரவணபவன் ஹோட்டலின் தரம் பற்றி சிலாக்கியமாக நான் படித்ததில்லை.

    ReplyDelete
    Replies
    1. //அந்த இடத்து சரவணபவன் ஹோட்டலின் தரம் பற்றி சிலாக்கியமாக நான் படித்ததில்லை.// அங்கு மட்டுமல்ல, எங்குமே சரவண பவனில் முன்பிருந்த சுவை இப்போது இல்லை.

      Delete
  5. வணக்கம் சகோதரி

    நவ திருப்பதி தலங்களுடன் நானும் உடன் வந்து கொண்டிருக்கிறேன். கோவில்களைப் பற்றிய செய்திகள் கதைகள் அனைத்தும் சுவாரஸ்யமாக இருக்கிறது. நாங்கள் தற்சமயம் குல தெய்வ கோவிலுக்குச் செல்லும் போது திருசெந்தூர் சென்று விட்டு முருகனை தரிசனம் செய்து விட்டு வன திருப்பதிக்கும் சென்று பெருமாளை சேவித்து வந்தோம் .ஒவ்வொன்றும் பார்க்க வேண்டிய இடங்கள். எத்தனை முறை பார்த்தாலும் அலுக்காத இடங்கள். இன்று புரட்டாசி சனியன்று பெருமாளின் தரிசனம் குறித்த பதிவுகள் படித்தது மனதிற்கு மகிழ்ச்சி அளிக்கிறது. பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    ReplyDelete
    Replies
    1. உங்கள் விமர்சனம் மகிழ்ச்சி அளிக்கிறது. நன்றி.

      Delete
  6. போக விரும்புமிடங்களுக்கு உடலில் தெம்பு இருக்கும்பாதே சென்றுவிட வேண்டும்

    ReplyDelete
    Replies
    1. உண்மைதான். வருகைக்கு நன்றி.

      Delete
  7. சரவணபவன் ஓட்டல்காரர் கட்டிய கோயில் குறித்து இப்போத் தான் தெரியும். நாங்க போனது பனிரண்டு வருடங்கள் முன்னால். அப்போ இல்லைனு நினைக்கிறேன். இப்போ சரவணபவனே அண்ணாச்சியிடம் இல்லையே! :) மற்றபடி திருச்செந்தூர் 2,3 முறை போயிருக்கோம். ஒவ்வொரு முறையும் கசப்பான அனுபவங்கள்! என்றாலும் தரிசனம் என்னமோ நல்லபடியாக் கிடைச்சுடும். :)))) வன திருப்பதி எல்லாம் போனதில்லை. அதோடு பொதுவாகவே நாங்க சரவணபவன் உணவைத் தேர்வு செய்வதில்லை. தவிர்க்க முடியாமல் போனப்போ ஓரிரு முறை மைலாப்பூரிலும், அசோக்நகரிலும் சாப்பிட்டோம். அப்படி ஒண்ணும் ரசிக்கலை! ஸ்டிக்கர் பொட்டு சைசுக்கு இட்லி!. வளையல் மாதிரி அளவில் தோசை, சப்பாத்தி வகைகள். குழந்தை வளை சைசுக்குப் பூரி! :(

    ReplyDelete
    Replies
    1. //ஸ்டிக்கர் பொட்டு சைசுக்கு இட்லி!. வளையல் மாதிரி அளவில் தோசை, சப்பாத்தி வகைகள். குழந்தை வளை சைசுக்குப் பூரி! :(// hahaha!

      Delete
  8. இஃகி, இஃகி, கொட்டிக்கிற விஷயத்திலேயே கவனமா இருந்துட்டுக் கோயிலைக் கோட்டை விட்டுட்டேன். நீங்க அதிர்ஷ்டம் செய்ததால் திருச்செந்தூரில் தரிசனம் கிடைச்சிருக்கு. வள்ளி குகைக்கு எல்லாம் போகலையா? நாங்க 2,3 முறை போனோம். 2014 ஆம் ஆண்டு போனப்போ நாங்க ரெண்டு பேரும் போகலை. மகனும், மருமகளும் மட்டும் போனாங்க!

    ReplyDelete
    Replies
    1. //வள்ளி குகைக்கு எல்லாம் போகலையா?// அப்படி ஒண்ணு இருக்கா?

      Delete
    2. ஙே!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!! வள்ளி குகைக்குக் கட்டாயமாக் கூட்டிப் போயிருக்கணும். உங்க சுற்றுலா ஒருங்கிணைப்பாளர் எப்படித் தவற விட்டார்னு தெரியலை. நாழிக்கிணறு பத்தியும் கேட்க மறந்துட்டேன். நீங்க சொல்வதைப் பார்த்தா அங்கெல்லாம் போகலைனு நினைக்கிறேன்.

      Delete
    3. https://tinyurl.com/y9uskttq நாழிக்கிணறு பத்தி!

      https://tinyurl.com/ycw8mh5b வள்ளி குகை

      நேரம் கிடைக்கும்போது படிச்சுப் பாருங்க!

      Delete
  9. மகரநெடுங்குழைக்காதரைக் கண்டீங்களா இல்லையா? இன்னும் அவர் வரலையே!

    ReplyDelete
    Replies
    1. ஷெட்யூல் செய்து விட்டேன். விரைவில் எதிர்பாருங்கள்.

      Delete
  10. அருமையான திருத்தலப் பயணக் குறிப்பு

    ReplyDelete
  11. பானுக்கா உங்க ட்ரிப் பத்தினது எல்லாம் இதுவரை உள்ளது வாசித்துவிட்டேன். அந்த சரவணபவன் கட்டிய வன திருப்பதி நன்றாக இருக்கா? அங்கு வெரைட்டி சாதம் குறிப்பா சாம்பார் சாதம் ஃப்ரீயாகக் கொடுத்ததாகச் சொல்லிக் கேட்டுள்ளேன் (திருநெல்வேலியில் இருக்கும் என் கஸின் சொல்லி) ஒரு வேளை ஆரம்பித்த சமயத்திலோ என்னவோ.

    திருச்செந்தூர் போயிருக்கிறேன்...நல்ல கோயில். ஆனால் ரொம்பவும் கொச கொச..வள்ளி குகை, திருச்செந்தூரில் இருப்பது போல் வள்ளியூரிலும் முருகன் கோயில் பாறையில் உண்டு. ஆனால் அந்தக் குகைக்குள் செல்ல முடியாது.

    கீதா

    ReplyDelete
  12. அரவிந்தலோசனர்..மிக அழகான திருநாமம்..

    அருமையான பயணம் ...தகவல்களும் சிறப்பு

    ReplyDelete