கணம்தோறும் பிறக்கிறேன் 

Saturday, April 4, 2020

வரமா? சாபமா?

வரமா? சாபமா 

வரங்களே சாபங்களானால் 
தவங்கள் இங்கே 
யாருக்காக? 
என்று அப்துல் ரஹ்மானின் புதுக்கவிதை ஒன்று உண்டு.

 
டி.டி.யில் ஓடிக்கொண்டிருக்கும் ராமாயணம் கண்ணில் பட்டபொழுது கைகேயின் வரத்தால் ராம,லக்ஷ்மண,சீதை வனவாசம் சென்றுவிட, பரதன் தன் தாயிடம் சீறும் கட்டம். அதைப் பார்த்த பொழுதுதான் எனக்கு மேலே குறிப்பிட்ட கவிதை நினைவுக்கு வந்தது. கைகேயி பெற்ற வரத்தால், (அது ஒரு நிமித்த காரணம் என்றாலும்) அவளுக்கு கிடைத்தது என்ன? துயரமும் தீராத பழிச்சொல்லும். மற்றொரு காப்பியமான மஹாபாரதத்தில் குந்தி துர்வாசரிடம் பெற்ற வரம் அவளுக்கு ஆயுள் முழுவதும் ஒரு குற்ற உணர்ச்சியைத்தான் தந்தது. அந்த வரம் மூலம் பெற்ற மகனிடம் இரண்டு வரங்கள் பெற்று அதனாலேயே அவனை வீழ்த்த துணை போகிறாள். குற்ற உணர்ச்சி இல்லாமல் போகுமா? 

மற்ற புராணங்களிலும் வரங்கள் அதைப் பெற்றவர்களுக்கு பெரிதாக உதவியதாக தெரியவில்லை. உதாரணம் பஸ்மாசுரன்.  இன்னும் பல புராணங்களிலும் அரக்கர்கள் பெற்ற வரங்கள் அவர்களை காப்பாற்றியதாக தெரியவில்லை. 


இதற்கு மாறாக, சாபங்கள் கொஞ்சம் உதவியிருக்கின்றன. ராமாயணத்தில் நலன், நீலன் என்னும் இரு வானரங்கள்  ஒரு ரிஷியின் பொருள்களையெல்லாம் அடிக்கடி எடுத்து கடலுக்குள் போட்டு விடுமாம். அதனால் அந்த ரிஷி, "அந்த இருவருக்கும் நீங்கள் இருவரும் எதை கடலுக்குள் எறிந்தாலும் அது கடலில் மூழ்காமல் மிதக்கும்" என்று சபிக்கிறார். அந்த சாபம்தான் பாலம் கட்டும்போது உதவியது. வானரங்கள் கொண்டுவரும் கற்களை இந்த இருவரிடமும் கொடுத்து கடலில் போடச் சொல்வார்களாம். அதன்படி மிதக்கும் பாலம் கட்டப்பட்டது. 

மஹாபாரதத்தில் "மனைவியோடு கூடினால் மண்டை வெடித்து இறந்து விடுவாய்" என்று பாண்டுவிற்கு கிடைத்த சாபம்தான் துர்வாசர் கற்றுக் கொடுத்த மந்திர சக்தியை பிரயோகித்து   குந்தியும், மாதுரியும் பஞ்ச பாண்டவர்களை பெற . அர்ச்சுனனுக்கு ஊர்வசி கொடுத்த,"நபும்சகனாகக்கடவாய்' என்னும் சாபம்தான் அவனுக்கு அஞ்ஞாத வாசத்தின்பொழுது உதவியது. 

இதுவரை எழுதிவிட்டேன். எப்படி முடிப்பது என்று தெரியவில்லை. என் மக்களிடம் சொன்னேன். அவள்தான் என்னுடைய முதல் வாசகி மற்றும் க்ரிட்டிக். 

நான்: இப்படியே முடித்தால்,"என்ன சொல்ல வருகிறீர்கள்? வரம் வேண்டாம், சாபமே போறும் என்கிறீர்களா?" என்று கேட்பார்கள் 

மகள்: வரம் சாபமாக மாறுவதற்கு காரணம் attitude. இதைத்தான் நீ அட்ரஸ் பண்ணனும். மிகவும் கடுமையான தவங்கள் இயற்றி, வரங்களை வாங்கிய பிறகு, ஆணவம், வந்து விட, அரக்கர்கள் அழிந்து போகிறார்கள். ஆனால் சபிக்கப்படும்பொழுது பயம் வருகிறது, அடக்கத்தோடு அதற்கு பரிகாரத்தை தேடுகிறார்கள், அதன் பாதிப்பிலிருந்து மீள்கிறார்கள். 
நான்: அதனால்தான் கடவுள் சரணாகதியை வலியுறுத்துகிறாரோ?

மகள்: அதேதான்.

எனவே இப்படி முடிக்கிறேன். வரமோ, சாபமோ அது எப்படி பயன்படுத்தப் படுகிறது என்பதை பொறுத்து தன் இயல்பு மாறலாம். நம்மைப் போன்ற சாமானியர்களுக்கு இரண்டும் வேண்டாம். நமக்கு விதிக்கப்பட்டதை முறையாக செயலாற்றி, பலனை இறைவன் கையில் ஒப்படைத்து விடலாம். 


29 comments:

  1. அன்பு பானு மா. அருமையான உதாரணங்கள்
    கொடுத்துப் பதிவிட்டிருக்கிறீர்கள்.
    ஆசைப்படுவதை நிறுத்திவிட்டால் பல சங்கடங்களைச்
    சந்திக்காமல் இருக்கலாம் என்று தோன்றுகிறது.
    தங்கள் மகளுக்கு வாழ்த்துகள்.

    ReplyDelete
    Replies
    1. //ஆசைப்படுவதை நிறுத்திவிட்டால் பல சங்கடங்களைச்
      சந்திக்காமல் இருக்கலாம் என்று தோன்றுகிறது.// உண்மைதான், ஆனால் அது அவ்வளவு சுலபமா? நன்றி அக்கா. 

      Delete
  2. வணக்கம் சகோதரி

    நல்ல பதிவு. நல்ல அலசல்.. வரங்களால் பிறருக்கு தொந்தரவு மட்டுமின்றி, தனக்கு தானே உலை வைத்து கொள்வது போல் சில சம்பவங்கள் நடப்பதை புராண வரலாற்றுகளில் படித்துள்ளோம். சாபங்களுக்கு பிராயச்சித்தம் தேடும் முயற்சியில் அனேகமாக அனைத்தும் நல்ல விதமாக அமைந்து விடுகிறது.

    கவிதையும் அருமை. தங்களின் பதிவும், தங்கள் மகளின் கருத்துகளும் உண்மை. படத்துடன் குதிரையின் நிலையையும், மனிதனைப் பற்றிய விமர்சனங்களையும் ஒத்துப் போக வைத்த வரிகள் மிகவும் ரசிக்க வைத்தது. பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    ReplyDelete
    Replies
    1. ஒவ்வொன்றையும் அழகாக அலசியிருக்கிறீர்கள். மிக்க நன்றி. 

      Delete
  3. மகள்: வரம் சாபமாக மாறுவதற்கு காரணம் attitude. மிக சரியான பதிலாக நான் கருதுகிறேன்

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி. உடல்நலமாக இருக்கிறீர்களா? 

      Delete
  4. நல்ல அலசல். கவிதை நன்றாக உள்ளது. மகள் இங்கே வந்திருக்கிறாரா? அவரும் இதில் கலந்து கொள்வது உங்களுக்கு உற்சாகத்தைக் கொடுக்கும்.

    ReplyDelete
    Replies
    1. நன்றி. மகளோடு தொலைபேசியில்தான் விவாதித்தேன். 

      Delete
  5. சிறப்பான பதிவு. பதிவில் கடைசியில் கொடுக்கப்பட்ட வரிகள் நிதர்சனம்.

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி வெங்கட். 

      Delete
  6. Replies
    1. விமர்சனம் = தேடல்...
      தேடல் = சாட்டையடி...
      திருப்தி = வெற்றி...
      மனம் = குதிரை...

      நேரம் கிடைப்பின் : → ஒரு வரம் கிடைத்தால்...

      Delete
    2. யோசிக்க வைக்கும் பின்னூட்டம். நன்றி. 

      Delete
  7. பானுக்கா நல்ல ஒரு டாப்பிக் எடுத்துருக்கீங்க.

    படித்து வரும் போதே எனக்கு உடன் மனதில் தோன்றிய உதாரணம் ஹிரண்யகசிபு. இந்தக் கதையைப் பற்றியல்ல. கதைகளில் எனக்கு நிறைய கேள்விகள் வரும். அது வாதமாகும் எனவே அதைப் பற்றி அல்ல. அதில் சொல்லபட்ட ஒன்று. அவன் கேட்கும் வரம்...அந்த வரத்தினால் தனக்கு மரணம் கிடையாது என்று மமதை. அதில் உள்ள லூப் ஹோலை வைத்து நரசிம்ம அவதாரம். வதம் செய்தல்..அவன் மரணம்...

    சுபாவின் கருத்தே எனதும் எனவே ஹைஃபைவ்! வித் சுபா...

    வரம் கேட்பவர்கள் கேட்கும் போது அங்கு விதி அவர்களின் மூளைக் கண்ணை மறைத்திட கொஞ்சம் லூப் ஹோல் வைத்துவிடுவார்கள். அந்த லூப் ஹோல் வரத்தைக் கொடுப்பவர்களுக்குத் தெரியாமல் போகாதே. அது சரியான நேரம் வரும் போது கை கொடுக்கும்..

    என்னைப் பொருத்தவ்ரை வரமே ஒரு சாபம்! மறைமுகமாக. வரம் பெற்றவரின் எண்ணங்கள் தாறுமாறானால் கண்டிப்பாக சாபமே.

    எனவே உங்கள் பாயிண்டே தான் வரமும் வேண்டாம் சாபமும் வேண்டாம். எப்பா எனக்கு ஒன்றுமே தெரியாதப்பா. எல்லாம் நீயே பார்த்துக்க நான் ஹாயா இருக்கேன்னு சொல்லி டோட்டலா அவன் தாளில் விழுந்துவிடுவதே!!! இது சாதாரண வாழ்க்கையிலும் கூட பொறுப்புகளை ஒருவர் எடுத்துக் கொண்டால் நம் மனது ரிலாக்ஸ்டா ஹாயா இருக்குமே!! அப்படித்தான்.

    கீதா

    ReplyDelete
    Replies
    1. //என்னைப் பொருத்தவ்ரை வரமே ஒரு சாபம்!//சில சமயம் அப்படித்தான் தோன்றுகிறது. விரிவான பின்னூட்டத்திற்கு நன்றி. கீதா. 

      Delete
  8. அக்கா சுபா ராக்ஸ்!!! நல்ல சிந்தனையாளர்!! பாராட்டுகள். சொல்லிடுங்க!.

    கீதா

    ReplyDelete
    Replies
    1. அவள் உங்கள் எல்லோருடைய பாராட்டுகளையும் பார்த்திருப்பாள். நன்றி. 

      Delete
  9. "வரமோ, சாபமோ அது எப்படி பயன்படுத்தப்படுகிறது என்பதை பொறுத்து தன் இயல்பு மாறலாம்." என்பதை வரவேற்கிறேன்
    அருமையான பதிவு

    ReplyDelete
  10. வரமும் சாபமும் வேணாம்...ன்னு
    சொன்னாலும் கிடைச்சே தான் தீரும்...

    உயிரும் உடம்பும் தான் உதாரணம்...

    இதெல்லாம் இடம் கண்டு எடுக்கப்படும் திரைக் காட்சிகள் அல்ல...

    முன்னமே முடிவு செய்து முடித்து வைக்கப் பட்டவை...

    அதனுள் ஊடாக காற்புள்ளி ஒன்றைக் கூட மாற்ற இயலாது....

    ReplyDelete
  11. Free will என்று ஒன்று உண்டே? வருகைக்கு நன்றி. 

    ReplyDelete
  12. காரணம் இல்லாமல் காரியம் இல்லை என்பார்கள்.
    அது போல் தான் பின்னால் வருவதற்கு ஏற்ப வரமும், சாபமும் சொல்லப்பட்டது.

    நிறைய புராணகதைகள் நமக்கு இதை உணர்த்தும்.

    ReplyDelete
  13. இதைத்தான் துரை செல்வரிஜீ சாரும் சொல்லியிருக்கிறார். நன்றி.

    ReplyDelete
  14. அருமையான அலசல். இன்றைய நிலையில் இறைவனிடம் அல்லது இயற்கையிடம் மனிதகுலம் மண்டி இட்டிருக்கிறது.

    ReplyDelete
    Replies
    1. மனிதனின் அறிவு,திறமை,எல்லாமே கேள்விக்கிடமாகியிருக்கின்றன.

      Delete
  15. இணைக்கப் பட்னிருக்கும் படத்தில் உள்ள வரிகள் டாப்.

    ReplyDelete
  16. மகள் பதினாறடி பாய்ந்திருக்கிறார் போல...!

    ReplyDelete
  17. வாட்ஸாப்பில் வந்தது.

    ReplyDelete
  18. https://images.app.goo.gl/d6ep8PngfpopMHx86

    ReplyDelete