கணம்தோறும் பிறக்கிறேன் 

Wednesday, July 8, 2026

பிறந்த நட்சத்திரமும், நாளும்

கனடா டைரி:

பிறந்த நட்சத்திரமும், நாளும்



பாலின்ட்ரோம் என்பதற்கு தமிழில் என்ன வார்த்தை என்று தெரியாமல் இருந்தேன், இருவழியொக்க சொல் என்று தெரிந்து கொண்டேன். இடமிருந்து வலமாக படித்தாலும் சரி, ஒரே விதமாக இருப்பதைத்தான் பாலின்ட்ரோம் என்பார்கள் உதாரணம் விகடகவி. 

இப்படி பாலிண்டிரோமாக பதினோரு பாடல்களை திருஞானசம்பந்தர் எழுதியிருக்கிறார். அதற்கு மாலைமாற்று பதிகம் என்று பெயர். 

"யாமாமாநீ யாமாமா யாழீகாமா காணாகா                                                                           காணாகாமா காழீயா மாமாயாநீ மாமாயா''

இப்படி பதினோரு பாடல்கள்.

என் மூத்த பேத்தி பிறந்த நாள், நேரம் எல்லாமே பாலின்ட்ரோம் ஆக அமைந்தது. 

பாலின்ட்ரோமாக அமைந்த. 26.6.26 அன்று என்னுடைய நட்சத்திர பிறந்த நாள். 66 வயதை பூர்த்தி செய்கிறேன். அதுவும் பாலிண்ட்ரோம்! 

ஜூலை 5, நான் பிறந்த தேதி. கனடாவில் இருக்கும் சத்திய சாயி சமிதியில் இணைந்திருக்கும் என் பெண்ணும், மாப்பிள்ளையும் அதில் நடக்கும் நிகழ்ச்சிகளுக்கு தவறாமல் செல்வார்கள். ஜூலை 3,4,5 ஆம் தேதிகளில் சம்மர் காம்ப் ஒன்றில் ரிட்ரீட் ஒன்றில் கலந்து கொள்ள பதிவு செய்திருந்தார்கள். என் மகள் அலுவலக வேலை முடிந்து வெள்ளியன்று மாலை 6:30க்கு கிளம்பிய நாங்கள், காம்ப் அடைய இரவு 10 மணி ஆகி விட்டது. வழியில் மழை. எங்களுக்கு ஒதுக்கப்பட்ட இடத்திற்க்குச் சென்றோம். ஆண்களுக்குத் தனியாகவும், பெண்களுக்குத் தனியாகவும் தங்குமிடங்கள். 

ஒவ்வொரு அறையிலும் மூன்று பங்கர் பெட்டுகள், ஆறு பேர்கள் படுத்துக் கொள்ளலாம். அது பரவாயில்லை, குளிக்கும் அறைகளும், கழிவறைகளும் வெளியே தனியாக இருந்தன.  "இரவில் போக வேண்டுமென்றால் தனியாக செல்லாதீர்கள், கயோட்டி எனப்படும் ஓநாய்கள் இருக்கிறதாம். எதிர்பட்டால் ஓடாதீர்கள், துரத்தும், மூச்சை இழுத்து, கைகளை விரித்து, உங்களை பெரிய உருவமாக காட்டிக் கொள்ளுங்கள், ஃப்ளாஷ் லைட் போன்ற ஏதாவது பயன்படுத்துங்கள், பெரிதாக ஒலி எழுப்புங்கள், குழந்தைகளை ஒருபோதும் தனியாக விடாதீர்கள் என்று எச்சரித்து,பயமுறுத்தினார்கள். 


படத்தில் தெரியும் கட்டிடங்கள்தான் தங்குமிடங்கள்

இரண்டு நாட்களும் ஓம்காரம், சுப்ரபாதம், பஜனை, கெஸ்ட் லெக்சர், குழந்தைகள் கலந்து கொண்ட கலை நிகழ்ச்சிகள், குழந்தைகளுக்கும், பெரியவர்களுக்குமான வினாடி வினா, அவுட்டோர் கேம்ஸ் என்று நிகழ்ச்சிகளை அமைத்திருந்தார்கள். வேளா வேளைக்கு சாப்பாடு. சமைத்தது இந்த காம்ப்பில் கலந்து கொண்டவர்கள்தான். சென்ற வருடம் எனக்கும் கூட சமையல் அறையில் வேலை ஒதுக்கியிருந்தார்கள்.




சத்திய சாயி நிறுவனங்களில் நிகழ்ச்சிகள் குறிப்பிட்ட நேரத்தில் துவங்கி, குறிப்பிட்ட நேரத்தில் முடியும். வேளா வேளைக்கு சுவையான உணவு வழங்கப்படும். காலையில் காபி, ஏழு மணிக்கு ப்ரேக்ஃபாஸ்ட்(ஏகப்பட்ட ஐட்டங்கள்+காபி/டீ/ஜூஸ்), பதினோரு மணிக்கு குக்கீஸ் வித டீ, ஒரு மணிக்கு நான், ஷாஹி பனீர், சாதம், சாம்பார், சிப்ஸ், தயிர்,வாழைப்பழம், மாலை முறுக்கு, பிஸ்கெட், டீ/ஜூஸ், இரவு மீண்டும் சப்பாத்தி அல்லது நான், சாதம், தயிர் வாழைப்பழம்.

ஜூலை 5ஆம் தேதி காலை சிற்றுண்டி முடித்ததும் டைனிங் ரூமில் இருந்தவர்கள் எனக்கு பிறந்த நாள் வாழ்த்து பாடினார்கள். ஆச்சர்யமாகவும், சந்தோஷமாகவும் இருந்தது. ஒரு பெண், ஹௌ ஓல்ட் ஆர் யூ?21?" என்று கேட்டாள். நான், "பதினாறு வயதிற்கு பிறகு அதை மறந்து விட்டேன் என்று அளக்க, பக்கத்தில் இருந்த என் பேத்தி,"பானு பாட்டி இஸ் 66 இயர்ஸ் ஓல்ட்" என்று போட்டு உடைத்தாள்:)) அது மட்டுமல்ல யாரெல்லாம் எனக்கு வாழ்த்து சொன்னார்களோ அவர்கள் எல்லோரிடமும் சொல்லிக் கொண்டே இருந்தாள்:))


படத்தில் மணி ஆன்டி மற்றும் Dr.கல்யாணி என்பவர். ராமாயணம், பாகவதம், பகவத் கீதை, உபநிஷத் போன்றவற்றில் இவருக்கு இருக்கும் ஆழ்ந்த அறிவு வியக்க வைக்கும்.

இந்த நிகழ்ச்சிக்கு ஸ்யமந்தகமணி என்பவர் வந்திருந்தார். அவரை மணி ஆன்டி என்று எல்லோரும் அழைக்கிறார்கள். 90 வயதாகும் இவர் அவருடைய சிறு வயதிலிருந்தே சாயிபாபாவின் அணுக்கத் தொண்டர். சுவாமி மீது நிறைய பாடல்கள் எழுதியிருக்கிறார். சாயி பஜன்களில் விபூதி வழங்கப்படும் பொழுது சொல்லும் "பரமம் பவித்ரம் பாபா விபூதிம், பரமம் விசித்ரம் லீலா விபூதிம், பரமார்த்த இஷ்டார்த்த மோக்ஷ ப்ரதானம்,பாபா விபூதிம் இதமாஸ்த்ரயாமி" என்னும் ஸ்லோகத்தை எழுதியவர். 90 வயதிற்கு இவருக்கு இருக்கும் நினைவாற்றல் ஆச்சர்யமூட்டுகிறது. அவரிடம் ஆசி பெற முடிந்தது பெரும் பாக்யம் என்றே கருதுகிறேன்.  

வீட்டிற்கு வந்ததும், வாட்சாப்பிலும், முகநூலிலும் வந்திருந்த வாழ்த்துகளுக்கு பதில் அனுப்பினேன். வித்தியாசமான பிறந்த நாள் கொண்டாட்டம்!

மேலும் சில படங்கள் பார்வைக்கு:









இரவில் காம்ப் ஃபயர் செய்வதற்கான இடம்







பக்த துருவா நாடகத்தில் நடித்த குழந்தைகள்


தட்டும் விரல்களுக்காய் தவமிருக்கும் தபலாக்கள்

26 comments:

  1. அக்கா தாமதமான பிறந்த நாள் வாழ்த்துகள்! பிரமாதமான பிறந்தநாள் பரிசு! இடமும் சூழலும், இயற்கையும், நல்ல மனிதர்களும், நேர்மறை அதிர்வுகளும் செமையா இருந்திருக்கும். நல்ல Retreat! Gift for your Birthday!

    உணவு எல்லாம் பிரமிக்க வைக்கிறன இவ்வளவா என்று!. சமையலறை சுத்தம் !!!! பார்க்கும் போதே நமக்கு நம்மை அறியாமலேயே சாப்பிடும் ஆசை எழும்!

    படங்கள் எல்லாம் சூப்பர். இடம் மனதை ரொம்பக் கவர்கிறது. நிகழ்வுகளும் ...அருமையான பொக்கிஷமான எப்போதும் நினைவில் இருக்கும் தருணங்கள் இல்லையாக்கா.

    கீதா

    ReplyDelete
    Replies
    1. பானுமதி.வெ.July 11, 2026 at 3:45 AM

      நன்றி கீதா. வித்தியாசமான, மறக்கமுடியாத பிறந்தநாள் கொண்டாட்டமாக அமைந்து விட்டது.

      Delete
  2. அருமையாக எழுதி இருக்கிறாய்.நல்ல அனுபவம் வாழ்த்துகள்👏👏💐

    ReplyDelete
    Replies
    1. பானுமதி.வெ.July 11, 2026 at 3:46 AM

      நன்றி.

      Delete
  3. பாலின்றோம் ஒற்றுமை வியக்க வைக்கிறது. அதற்கான தமிழ் வார்த்தையையையும் நான் இப்போதுதான் அறிகிறேன்.

    ReplyDelete
    Replies
    1. பானுமதி.வெ.July 11, 2026 at 3:48 AM

      பாலின்ட்ரோம் என்பதற்கு ஈடான தமிழ்ச்சொல்லை மத்யமர் மூலம் அறிந்தேன்.

      Delete
  4. ஓநாய் பயமுறுத்தல் சிறப்பு. எவ்வளவு ஆபத்தான விஷயம்!

    ReplyDelete
    Replies
    1. பானுமதி.வெ.July 11, 2026 at 3:53 AM

      சுற்றிலும் காடு போல அடர்ந்திருந்த மரங்கள், வேலி கிடையாது. ரொம்பவே பயமாக இருந்தது. சென்ற வருடம் சென்றிருந்த பொழுது நடு இரவில் பாத்ரூம் செல்ல வேண்டியிருந்தபொழுது எந்த பயமும் இல்லாததால், தனியாக சென்றேன், இந்த முறை என் மகளை எழுப்பி துணைக்கு அழைத்துச் சென்றேன்.

      Delete
  5. பஜனை கொண்டாட்டங்களோடு பிறந்தநாள் கொண்டாடியது சிறப்பு. காணொளி வாழ்த்து கண்டு ரசித்தேன். .புகைப்படத்தில் வித்தியாசமாக இருக்கிறீர்கள்.

    ReplyDelete
    Replies
    1. பானுமதி.வெ.July 11, 2026 at 3:58 AM

      //புகைப்படத்தில் வித்தியாசமாக இருக்கிறீர்கள்.// அப்படியா? வெள்ளை முடி செய்யும் வேலையோ? மத்யமரில் யாரோ ஒருவர், சம்பந்தமே இல்லாமல் எம்.எஸ்.சுப்புலட்சுமி போல இருப்பதாக எழுதியிருந்தார்.

      Delete
  6. படங்கள் யாவும் அழகு. விவரங்கள் சுவாரஸ்யம்.

    ReplyDelete
  7. நல்லவேளையாக உங்கள் பிறந்தநாள் அன்றே சரியாக வாழ்த்தி விட்டேன்!

    ReplyDelete
    Replies
    1. பானுமதி.வெ.July 11, 2026 at 3:59 AM

      இதையே நானும் உங்களுக்கு திருப்பி விட்டேன்.

      Delete
  8. உங்களுக்கும் , பேத்திக்கும் பிறந்த நாள் வாழ்த்துகள் வாழ்க வளமுடன்
    பதிவு அருமை.

    //சாயிபாபாவின் அணுக்கத் தொண்டர். சுவாமி மீது நிறைய பாடல்கள் எழுதியிருக்கிறார். சாயி பஜன்களில் விபூதி வழங்கப்படும் பொழுது சொல்லும் "பரமம் பவித்ரம் பாபா விபூதிம், பரமம் விசித்ரம் லீலா விபூதிம், பரமார்த்த இஷ்டார்த்த மோக்ஷ ப்ரதானம்,பாபா விபூதிம் இதமாஸ்த்ரயாமி" என்னும் ஸ்லோகத்தை எழுதியவர்//

    அவரிடம் ஆசி பெற்றது சிறப்பு.

    ReplyDelete
    Replies
    1. பானுமதி.வெ.July 11, 2026 at 4:01 AM

      //அவரிடம் ஆசி பெற்றது சிறப்பு.// உண்மை. உங்களை பதிவுகளில் சந்தித்து நீண்ட நாடகளாகி விட்டது. எப்படி இருக்கிறீர்கள்?

      Delete
  9. வணக்கம் சகோதரி

    பதிவு அருமை. தங்களுக்கும், தங்கள் பேத்திக்கும் இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்.

    நானும் பாலிண்டிரோம் அர்த்தம் தெரிந்து கொண்டேன். திருஞான சம்பந்தர் அதே விதத்தில் தேவாரப் பாடல்கள் 11 ஆக (அவர் எழுதியுள்ள இந்தப் பாடல்களின் எண்ணும் அதே முறையில் அமையுமாறு எழுதியுள்ளாரோ.?) .எழுதிய முறையையும், தெரிந்து கொண்டேன்.

    படங்கள் அனைத்தும் அருமையாக உள்ளது.இறுதி படமும் அதன் வாக்கியமும் கவர்கிறது. .

    /இந்த நிகழ்ச்சிக்கு ஸ்யமந்தகமணி என்பவர் வந்திருந்தார். அவரை மணி ஆன்டி என்று எல்லோரும் அழைக்கிறார்கள். 90 வயதாகும் இவர் அவருடைய சிறு வயதிலிருந்தே சாயிபாபாவின் அணுக்கத் தொண்டர். சுவாமி மீது நிறைய பாடல்கள் எழுதியிருக்கிறார் /

    அவரைப்பற்றி தெரிந்து கொண்டேன். அவருடன் தாங்கள் எடுத்துக் கொண்ட புகைப்படமும் அருமை. பிறந்த நாளன்று அவருடன் சேர்ந்திருந்து அவரிடம் ஆசி பெற்றதும் சிறப்பு.. தாங்கள் 1959ல் பிறந்தீர்களா? நானும் அதே வருடந்தான்.

    பிறந்தநாள் கொண்டாடிய இடத்தில், சமையல் மெனுக்கள், படங்கள் அனைத்தும் நன்றாக உள்ளது. ஓநாய் பற்றிய பயணங்களைத் தவிர, அந்த இடத்தின் பசுமைகள் கவர்கின்றன. பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    ReplyDelete
  10. பானுமதி.வெ.July 11, 2026 at 4:05 AM

    வாங்க கமலா, வழக்கம் போல விரிவான கருத்திற்கு நன்றி. நான் பிறந்தது 1960 ஆம் ஆண்டு. என்னைவிட ஒரு வயது அல்லது சில மாதங்கள் மூத்தவர் நீங்கள்.

    ReplyDelete
  11. பிறந்தநாள் வாழ்த்துகள். இன்னொருவர் என்னைவிட ரொம்பப் பெரியவர் என்று அறியும்போது ஏற்படும் சந்தோஷமே அலாதிதான் (ஹா ஹா ஹா)

    ReplyDelete
    Replies
    1. வாழ்த்துக்கு நன்றி. //இன்னொருவர் என்னைவிட ரொம்பப் பெரியவர் என்று அறியும்போது ஏற்படும் சந்தோஷமே அலாதிதான் (ஹா ஹா ஹா)// அப்படியாடா?(ஈஸி ஈஸி 😉)

      Delete
  12. புட்டபர்த்தி சாயி பாபா....... எத்தனையோ நினைவுகள். எவ்வளவோ கேள்விப்பட்ட நிகழ்வுகள்.

    ReplyDelete
  13. என்ன ரிப்போர்ட்டர் நீங்க போங்க..... பதிவு எழுதப்போறோம்னு தெரியும். இரவு முழித்திருந்து கயோட்டி/ஓநாய் படங்கள் எடுத்துப் போட்டிருப்பீங்கன்னு பார்த்தால், சாப்பாட்டுப் படத்தைப் போட்டிருக்கீங்களே

    ReplyDelete
  14. இருபாலாரும் தனித்தனியா இருக்கணும் என்பது கொஞ்சம் கஷ்டம்தான் (அவர்களது கோயில்களில் எல்லாம்). எனக்கு சென்னையில் அந்த அனுபவம் ஏற்பட்டது. எனக்கு மனைவியுடன் சேர்ந்துதான் எல்லா இடங்களுக்கும் (ஒரு கோயிலில்) செல்வேன். அங்க என்னடான்ன, நீங்க இந்த வழில போய் அங்க உட்காருங்க, அவங்க அந்த வாசல் வழியாப் போட்டும் என்று சொல்லிட்டாங்க.

    ReplyDelete
    Replies
    1. ஆமாம், ஆண்கள் செல்லும் வழியில் கூட பெண்கள் செல்லக்கூடாது என்பார்கள்.

      Delete