கணம்தோறும் பிறக்கிறேன் 

Thursday, April 16, 2015

புது வருட குழப்பங்கள்!

புது வருட குழப்பங்கள்!  


  









இந்த புது வருடத்தின் பெயர் மன்மத வருடம். என்ன ஒரு வசீகரமான பெயர்!

எத்தனை புத்தாண்டுகள்? பாரம்பரியமான தமிழ் புத்தாண்டு. ஆங்கிலேயர்களின் உபயம் ஆங்கில புத்தாண்டு. தைப் பொங்கல் நாள்தான் தமிழ் புத்தாண்டு என்று திடீரென்று கலைஞர் விட்ட கரடி!


இந்தியாவில் எத்தனை மாநிலங்கள் உள்ளதோ அத்தனை புத்தாண்டுகள் கொண்டாடப்படும் என்று நினைக்கிறேன், ஒன்றிரண்டு குறையலாம்..! 

எனக்கு தெரிந்து பஞ்சாப், சண்டிகர், உ.பி., குஜராத் மாநிலங்களில் தீபாவளிக்கு அடுத்த நாளை புத்தாண்டாக கொண்டாடுகிறார்கள். மராட்டியர்கள்  குடி படுவாவையும், கன்னடர்களும், தெலுங்கர்களும் யுகாதியையும்  புது வருடமாக கொண்டாடுகிறார்கள். தமிழர்களாகிய நாமும், கேரளர்களும் சித்திரை மாத பிறப்பை புது வருடமாக கொண்டாடுகிறோம். மற்ற மாநிலத்தவர் சந்திரமானச பஞ்சாங்கத்தையும்(Lunar calendar),தமிழ் நாட்டிலும் கேரளாவிலும் சௌரமானச பஞ்சாங்கத்தையும்(solar calendar) பின்பற்றுவதால் இந்த வழக்கம். அதில் கூட நாம் இருவரும் ஒரே நாளில் புது வருடத்தை கொண்டாடுவதில்லை ஒரு நாள் முன்னே பின்னே வருகிறது. 



இந்த வருடம் ஏப்ரல் 14ம் தேதி நாம் விடுமுறை எடுத்துக் கொண்டு, விருந்து சாப்பாடு சாப்பிட்டு,தொலை காட்சியில் சிறப்பு நிகழ்சிகளைப் பார்த்து, கோவில்களில் நெரிபட்டொம். ஆனால் மலையாளிகள் ஏப்ரல் 15 தான் விஷுக் கனி கண்டு, புத்தாடை அணிந்து கொண்டு, சத்யா சாப்பிட்டார்கள். நேற்று மதியம் 12 மணிக்குத்தான் சூரியன் மேஷ ராசிக்குள் பிரவேசிக்கிறார். சூர்யா உதயத்தின் பொழுது அவர் மீன ராசியில்தானே இருக்கிறார், அப்போது எப்படி புது வருடம் பிறந்து விட்டது என்று சொல்ல முடியும்? என்பது அவர்களின் வாதமாக இருக்கலாம்.



இதில் ஒரு வேடிக்கை என்னவென்றால் கேரள, தமிழக இரு மாநிலத்தவருமே சூரியன் எந்த ராசியில் இருக்கிறதோ அதைக் கொண்டுதான் மாதங்களை அனுசரித்தாலும் அவர்கள் அந்தந்த ராசியின் பெயரைத்தான் மாதங்களுக்கும் வழங்கி மேஷ மாசம், ரிஷப மாசம் என்று குறிப்பிடுகிறார்கள். ஆனால் இங்கே கொஞ்சம் சொதப்புகிறோம். மாதங்களை அனுசரிப்பது சூரியனை வைத்து, ஆனால் அதற்கான பெயர்களோ சந்திரனை வைத்து. அதாவது அந்த மாதத்தில் எந்த நக்ஷத்திரத்தில் பௌர்ணமி வருகிறதோ அந்த நக்ஷத்திரத்தின் பெயர்தான் மாதங்களுக்கு வழங்கப் பட்டிருக்கிறது. உதாரணமாக சித்திரை மாதத்தில் சித்ரா நக்ஷத்திரத்தில் பௌர்ணமி வரும், வைகாசி மாதத்தில் விசாக நக்ஷத்திரத்தில் பௌர்ணமி வரும்.  கார்த்திகை மாதத்தில் கார்த்திகை நக்ஷத்திரத்தில் பௌர்ணமி வரும்.. அதைக் கொண்டே தமிழ் மாதத்தின் பெயர்கள்...

மீனமோ,மேஷமோ, பாலக்காட்டில் பிறந்து, தஞ்சாவூர் பெண்ணை மணந்து கொண்டிருக்கும் இனிப்பு விரும்பியான என் கணவரை போன்றவர்களுக்கு முதல் நாள் போளி வடையும், மறு நாள்  பலா பழ பாயசமும், அடை பிரதமனும் கிடைக்கும் பட்சத்தில் எந்த நாளில் சித்திரை பிறந்தால் என்ன? எல்லாவற்றையும் கொண்டாடி விட்டு போகலாம்.     

கூடி களிக்கவும், கொண்டாடி மகிழவும் 
சின்ன திரை முன் சிறை பட்டு கிடக்கவும் 
சித்திரையோ, தையோ,
ஆங்கிலமோ, தமிழோ 
அனைத்தயும் வரவேற்போம். 

Tuesday, March 17, 2015

மாமியார் கொடுமை போச்சு, மேலதிகாரி கொடுமை வந்தது டும்! டும்! டும்!

மாமியார் கொடுமை போச்சு, மேலதிகாரி கொடுமை வந்தது 
டும்! டும்! டும்! 



அந்தக் கால சினிமாக்களிலும் கதைகளிலும் பார்த்தால் சாதுவான நல்ல பெண்களை மாமியார்கள் ஆட்டி படைப்பார்கள். கதா நாயகிகளும் அத்தனை கொடுமைகளையும் வாய் திறக்காமல் பொறுத்துக் கொள்வார்கள். ஏன் நிஜத்திலும் அது பெருவாரியாக நடந்தது. இதெற்கெல்லாம்  பெண்களுக்கு படிப்பறிவு இல்லாததுதான் காரணம். பெண்கள் படித்து வேலைக்குச் சென்று பொருளாதார சுதந்திரம் பெற்று விட்டால் இந்தக் கொடுமைகளிலிருந்து விடுதலை பெற்று விடலாம் என்ற எண்ணம் வலுப் பெற்று பெண் கல்வி வலியுறுத்தப் பட்டது. என்றாலும் ஆரம்ப காலங்களில் பெண்களை கல்லூரிக்கு அனுப்ப பெரும்பாலோர் தயங்கினார்கள். அதற்கு அப்போதிருந்த குடும்ப அமைப்பும் ஒரு காரணம். ஒவ்வொரு வீட்டிலும் ஆணும் பெண்ணுமாக ஆறேழு குழந்தைகள் இருந்த பொழுது பெண்ணென்றால் எப்படியும் திருமணமாகி அனுப்பி விட வேண்டும், ஆகவே அவளை எதற்கு செலவழித்து படிக்க வைக்க வேண்டும்? அதற்கு பையனை படிக்க வைத்தால் அவன் சம்பாதித்து கொடுப்பான்  என்ற எண்ணம்தான் மேலோங்கி இருந்தது. ஆகவே பெண் கல்வி என்பது பள்ளியோடு பெரும்பாலும் முடிந்தது. அதைத் தாண்டி கல்லூரிக்கு அனுப்பியவர்களில் பி.ஏ. படித்தால் போதுமே எதற்கு கஷ்டப்பட்டு பி.எஸ்சி படிக்க வேண்டும் என்று நினைத்தவர்கள் உண்டு.  அதே போல பெண்களுக்கு ஏற்ற வேலை என்றால் அது டீச்சர் வேலைதான் என்று ஒரு கருத்தும் இருந்தது. 

அதற்கு அடுத்த கட்டத்தில் பெண்களுக்கான தகுதியான வேலை என்பதில் வங்கி வேலையும் சேர்ந்து கொண்டது. காலை 9 மணிக்கு போய் விட்டு மாலை 6 மணிக்கு வீட்டிற்க்கு வந்து விடலாம். அப்பொழுது வங்கிகளில் வேலைக்கு சேர்ந்த பல பெண்கள் உத்தியோக உயர்வு வேண்டாம் என்று எழுதி கொடுத்து விட்டு க்ளர்க்காகவே இன்னும் வேலை செய்து கொண்டிருக்கிறார்கள். அதற்கு அடுத்த இடத்தில் தொந்தரவில்லாத அரசு உத்தியோகங்கள். தனியார் நிறுவனங்களில் வேலைக்கு சென்ற பெண்கள் சொற்பம்தான். 

காலம் மாறியது, குடும்பங்கள் சிறுத்தன. எட்டும் அறிவினில் ஆணுக்கு பெண் இங்கு சற்றும் இளைப்பில்லை என்று  படிக்க ஆரம்பித்த பெண்கள் இல்லாத துறை இன்று இல்லை. பக்கத்து தெருவிற்கு செல்வதற்கே துணையோடுதான் செல்ல வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்ட பெண்கள் இன்று வெளி நாடுகளுக்கே படிக்கவும் உத்தியோக நிமித்தமாகவும் தனியாக செல்கிறார்கள். போன தலைமுறை பெண்களைப் போல இல்லாமல் தனியார் நிறுவனங்களில் வேலைக்கு செல்லவே இன்றைய பெண்கள் விரும்புகிறார்கள். பொருளாதார சுதந்திரம் அடைந்து விட்டதால் இப்போதெல்லாம் வரதக்ஷணை கொடுமைகளெல்லாம் வெகுவாக குறைந்து விட்டன. 

அப்படியானால் கொடுமையான மாமியார்களெல்லாம் சீரியெல்களில் மட்டும்தான் இருக்கிறார்கள் போலிருக்கிறது என்று அவசரப்பட்டு முடிவுக்கு வந்து விடாதீர்கள். பலர் அலுவலகங்களில் மேலதிகாரிகளாக இருந்து தனக்கு கீழே பணி புரிபவர்களை வதை கொட்டுகிறார்கள். அதே 'மாமியார் உடைத்தால் மண் குடம் மருமகள் உடைத்தால் பொன் குடம்' மனப்பான்மை. அந்தக் கால மாமியார்களைப் போலவே ஜாடையாக குத்தல் பேச்சுக்கள், எள்ளல்கள். நாங்கள் எல்லாம் இப்படியா இருந்தோம் என்னும் அசூயை..அப்பப்பா! ஒரு பெண் அதிகாரியின் கீழ் வேலை பார்க்கும் இன்னொரு பெண் படும் துன்பங்கள் இருக்கிறதே...! 

அந்தக் காலத்தில் சொல்வார்கள், மருமகள் தன் மாமியார் செய்யும் கொடுமை எல்லாவற்றையும் பொறுமையாக சகித்துக் கொள்வாளாம் காரணம் தானும் ஒரு நாள் மாமியார் ஆவோம், தனக்கு வரும் மருமகளை படுத்தி வைக்கலாம் என்ற எண்ணம். இந்தக் காலத்தில் அந்த உணர்வு அலுவலகத்திற்கு ஷிப்ட் ஆகி விட்டது போலிருக்கிறது. 
 
உங்கள் வீட்டில் அல்லது உங்களுக்கு தெரிந்த பணி புரியும் பெண்கள் இருந்தால் கேட்டு பாருங்கள் அவர்கள் யார் கீழே பணி புரிய விரும்புகிறார்கள்? என்று பத்துக்கு எட்டு பேர் ஆண்களுக்குத் தான் ஓட்டளிப்பார்கள். பாக்கி இருவரில் ஒருவர் பேப்பர் போட்டிருப்பார், இன்னொருவர் ஜால்ரவாக இருப்பார்.   


மாமியார்: 

நாங்களெல்லாம் கார்த்தால நாலு மணிக்கு எழுந்தா 
ராத்திரி பத்து மணிக்கு படுக்க போற வரை உட்கார முடியாது. 

புள்ள பெத்த பச்ச உடம்புன்னு கூட பாக்காம எங்க மாமியார் 
வேலை வாங்குவா 

என்னது பொறந்த வீட்டுக்கு போறயா? இங்க ரெண்டு நாளுக்கு தேவையான இட்லி,தோசை மாவு அரைச்சு வைச்சுட்டு, புளி காய்ச்சல் செஞ்சு வைச்சுட்டு, குண்டான், தவலை எல்லாத்திலும் தண்ணி ரொப்பி வைச்சுட்டு போ 



மேலதிகாரி:

உங்களை மாதிரி எடுத்த எடுப்புல ஆபீசர் ஆகிடல, கிளார்க்கா சேர்ந்து, படிப்படியா உயர்ந்து, இன்னிக்கு மேனேஜர் ஆகி இருக்கேன். 18 வருஷ அனுபவம்.

எங்க காலத்தில் மெடெர்னெடி லீவு மூணு மாசம்தான். இப்போ மாதிரி ஆறு மாசம் கிடையாது.

என்னது பர்மீஷனா? பெண்டிங் வொர்க் எல்லாம் முடிச்சுட்டு, பைலிங் வொர்க் இருந்தா அதை முடிச்சுட்டு போங்க.


எப்பொழுதுமே ஒரு பெண்ணுக்கு இன்னொரு பெண்தான் எதிரி. முன்பு வீடுகளில், இப்போது அலுவலகங்களில்.

படங்கள்: நன்றி: ask.com & google

Tuesday, February 10, 2015

ஸ்ரீரங்கம் தை தேர்

ஸ்ரீரங்கம் தை தேர் 

ஏறத்தாழ 28 வருடங்களுக்குப் பிறகு ஸ்ரீரெங்கம் நம்பெருமானின் தை தேர் உற்சவம் பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. பிப்ரவரி 1ம் தேதி ஒரு குடும்ப சுப நிகழ்ச்சிக்காக ஸ்ரீரெங்கம் செல்ல வேண்டி இருந்தது. 2ம் தேதி தை தேர். இந்த வாய்ப்பை நழுவ விட விரும்பாமல் ஒரு நாள் அதிகம் தங்கி தேர் திருவிழாவை கண்டு களித்து(நிஜமாக) விட்டு வந்தேன். உண்மையாக சொல்ல வேண்டுமென்றால் தேருக்கு முதல் நாள் நடக்கும் 'கோண வையாளி' என்னும் சிறப்பு நிகழ்ச்சியையும் பார்க்க விரும்பினேன். முடியவில்லை. அதென்ன 'கோண வையாளி' என்று கேட்பவர்களுக்கு...






















வேங்கடவன் வடிவழகு, காஞ்சி குடை அழகு, ஸ்ரீரெங்கம் நடை அழகு என்பது வழக்கு. வைணவ தலங்களில் முக்கியமான திருப்பதியில் சாலிக்ராம பெருமாளின் திருமேனி அழகு. காஞ்சிபுரத்தில் வரதராஜ பெருமாளுக்கு பிடிக்கப் படும் குடை அழகு. ஸ்ரீரங்கத்திலோ ஸ்ரீ ரங்கநாதரின் நடை அழகு. அந்த நடைக்கு வையாளி என்று பெயர். பெருமாளை எழுந்தருளச் செய்யும் பொழுது, பெருமாளின் விக்ரஹத்தை சுமந்து வரும் ஸ்ரீ பாதாம் தாங்கிகள் தங்கள் கைகளை பிணைத்துக் கொண்டு கால்களை ஒரே போல சற்று அகட்டி வைத்து நடப்பார்கள். தொலைவிலிருந்து பார்க்கும் நமக்கு ரெங்கநாதர் கம்பீரமாக நடந்து வருவது போல மிக அழகாக தோன்றும்.

தேருக்கு முதல் நாள் குதிரை வாகனத்தில் சுவாமி புறப்பாடாகி வருவார். மறுநாள் அதிகாலையில் தேர் கிளம்ப வேண்டும் என்பதால் முதல் நாள் மாலையே அலங்காரம் செய்யப்பட்டு தயார் ஆகி விடும்.  பிரும்மாண்டமாக நிற்கும் அந்த தேரைக் கண்டு பெருமாள் ஏறி வரும் குதிரை மிரண்டு ஓடுவது போல கற்பனை செய்து ஒரு நிகழ்வு நடக்கும். அதுவரை சாதாரணமான வையாளியில் நடந்து வரும் ஸ்ரீபாதம்தாங்கிகள் தேருக்கு எதிரே வரும் பொழுது குதிரை மிரண்டு ஓடுவது போல தாறுமாறாக, தறி கெட்டு ஓடுவது போல கோணல் மாணலாக ஓடுவார்கள். அவர்கள் மட்டுமல்ல, தீவட்டி ஏந்தி வருபவர்களும் அப்படியே கோணல்மானலாக ஓடுவார்கள். அது மட்டுமல்லாமல் அப்படி தறி கெட்டு ஓடிய குதிரை ஒரு ஓரமாக நின்று மூச்சு வாங்கும், அப்பொழுது குதிரையின் தலை மேலும் கீழுமாக அசையும், பெருமாள் பிடித்துக் கொண்டிருக்கும் அந்த குதிரையின் தும்பும் அதற்கேற்றார் போல் அசையும். ஒரு நாடகம் போன்ற மிக சுவாரஸ்யமான இந்த நிகழ்ச்சிதான் கோண(ல்) வையாளி எனப்படும்.



மறு நாள் காலை நான் சென்ற பொழுது பெருமாள் வடக்கு உத்திர வீதியின் இறுதிக்கு  வந்து கொண்டிருந்தார். அந்த மூலை திரும்பி கிழக்கு உத்திர வீதிக்கு வரும் வரை பார்த்து விட்டு வந்தேன். இதில் எனக்கு ஏமாற்றம் அளித்த ஒரு விஷயம்.. அப்போதெல்லாம் அதாவது ஸ்ரீ ரங்கத்தில் அடுக்கு மாடி குடிஇருப்புகள் வராத பொழுது எத்தனை பேர்கள் வந்தார்களோ அதே அளவு மக்கள்தான் ஸ்ரீரங்கத்தின் மக்கள் தொகை பன்மடங்கு பெருகி விட்ட இந்த காலத்திலும் வந்தது. இன்னும் அதிக அளவு மக்கள் வந்திருக்க வேண்டாமா?

முன்பெல்லாம் தேருக்கு மர சக்கரங்கள், அவை மூலை திரும்ப வெகு நேரம் எடுக்கும். ஆனால் திருச்சி BHEL நிறுவனம் அந்த சக்கரங்களில் இரும்பு சட்டம் அடித்து தந்த பிறகு சற்று சீக்கிரம் மூலை திரும்பி விடுகிறது. தேர் மூலை திரும்புவதை பார்த்தால் நம் வாழ்க்கையில் ஒரு திருப்பம் வரும் என்று கூறுவார்கள். ஆனால் எனக்கு மூலை திரும்பும் நிகழ்ச்சி வாழ்க்கையின் ஒரு தத்துவத்தை உணர்த்துவது போல தோன்றியது.

ஓடிக்கொண்டே இருக்கும் தேர், ஒரு மூலைக்கு வரும் பொழுது அதை திருப்புவது கடினமாக இருக்கும். தேர் சக்கரங்களுக்கு கீழே பின்னால் ஏத்தம் கட்டை என்று ஒன்றை சொருகுவார்கள். இப்பொழுது அது சீசா மரம் போல ஆகி விடுகிறது, அதில் ஆண்கள் உட்கார்ந்து அழுத்த, சக்கரம் கொஞ்சம் நகர்ந்து கொடுக்கும், அதே நேரத்தில் முன்னால் வடம் பிடிப்பவர்கள் இழுக்க, சற்று முன்னேறும். இப்படி இம்மி இம்மியாக நகரும் தேர் மூலை திரும்பி விட்டால் பிறகு கட கடவென்று நகர ஆரம்பித்து விடும். ஆனாலும் இந்த நேரத்தில் பின்னாலிருந்து ஏத்தம் கட்டை போடுபவர்களும் சரி, முன்னாலிருந்து வடம் பிடித்து இழுப்பவர்களும் சரி அதை தங்கள் செயலாக சொல்லிக் கொள்வது இல்லை.  மேலே தேரில் உட்கார்ந்திருக்கும் பெருமாளின் விருப்பமாகவே சொல்கிறார்கள்.

எல்லோர் வாழ்க்கையிலும் முன்னாலும் செல்ல முடியாமல், பின்னாலும் செல்ல முடியாமல், ஸ்தம்பித்து நிற்பது போல ஒரு சமயம் வரும். அப்போது ஏத்தம் கட்டை போடுவது போல சிலர் உதவுவார்கள். அதை பயன் படுத்திக் கொண்டு நம்முடைய முயற்சி என்னும் வடத்தை இழுப்பதை விட்டு விடாமல் தொடர்ந்தால் மேலே இருக்கும் இறை அருள் செயல் பட நம் வாழ்வில் திருப்பம் வரும்.

 
         

Wednesday, January 21, 2015

அரபிக் கடலோரம் ஓர் அழகை கண்டேனே - III


அரபிக் கடலோரம் ஓர் அழகை கண்டேனே - III


கேரளாவில் நங்கள் சென்ற மற்றொரு முக்கியமான கோவில் சோட்டாணிக்கரை பகவதி கோவில். கோவில் கீழ் காவு, மேல் காவு என்று இரண்டு பகுதிகளாக இருக்கிறது. இரண்டு அம்மன்களும் சகோதரிகள், கீழ் காவில் உள்ள பகவதி அக்கா என்றும் மேல் காவில் எழுந்தருளி இருப்பது தங்கை என்றும் ஒரு நம்பிக்கை. முதலில் கீழ் காவில் உள்ள பகவதியை தரிசனம் செய்து கொண்டு பிறகு தான் மேல் காவில் உள்ள பகவதியை தரிசனம் செய்ய வேண்டும் என்பது முறை. இரண்டு இடங்களிலும் எழுந்தருளியிருக்கும் அம்மன் அருள் வடிவாக காட்சி அளிக்கிறாள்.   

மேல் காவு பகவதி கோவில்  

மன நிலை பாதிக்கப் பட்டவர்களும், துர்சக்திகளால் பீடிக்கப் பட்டு துயருபவர்களும் இங்கே வந்து பஜனம் இருந்து, அம்மனின் அபிஷேக தீர்த்தத்தை முகத்தில் தெளித்துக் கொண்டு, பிரசாதம் உட்கொண்டு வர, அந்த பாதிப்புகளிலிருந்து அவர்கள் விடுபடுவது இன்றளவும் நடக்கும் ஒரு விஷயம். இரவு எட்டு மணிக்கு கீழ் காவில் அம்மனுக்கு நடக்கும் குருதி பூஜை மிகவும் பிரசித்தி பெற்ற ஒன்று.  முன் காலங்களில் இந்த பூஜை இரவு பன்னிரண்டு மணிக்கு நடக்குமாம். அப்பொழுது விலங்குகள் பலியிடப்பட்டு அந்த ரத்தம் அன்னத்தோடு கலந்து அம்மனுக்கு நைவேதியம் செய்யப்படுமாம். தற்போது மிருகங்களை பலியிடுவது தடை செய்யப் பட்டுவிட்டதால் மஞ்சள் பொடியைத் தான் குருதி பிரசாதம் என்று தருகிறார்கள்.    

குருதி பூஜையில் கலந்து கொள்ளும் நோயாளிகள் தங்கள் கைகளாலும், தலையாலும் பெரிய பெரிய ஆணிகளை கீழ் காவில் உள்ள மரத்தில் அறைவார்களாம் அப்பொழுது அவர்கள் உடலில் இருந்து வெளியேறும் ரத்தத்தின் மூலமாக அவர்கள் உடம்பில் இருக்கும் தீய சக்திகளும் வெளியேறி விடும் என்பது வெறும் நம்பிக்கை மட்டுமல்ல நிஜமும் கூட. அதற்கு சாட்சியாக கீழ் காவில் உள்ள  மரத்தில் அறையப்பட்டிருக்கும் ஆணிகளை இப்பொழுதும் காண முடிகிறது. அங்கு மட்டுமல்லாமல் மேல் காவில் உள்ள கருங்கல் தூண்களிலும் ஆணிகள் அறையப் பட்டிருக்கின்றன. 

கீழ் காவில் ஆணிகள் அறையப் பட்டிருக்கும் மரம்
  
அதைத் தவிர கேரள கோவில்களுக்கே உரிய வெடி வழிபாடும் இங்கு உண்டு. மேலும் அவரவர் வேண்டுதல்களுக்கு ஏற்ப கை, கால், கண், மற்றும் ஆண்.பெண் உருவங்களை கோவில் தேவ ஸ்தானம் வைத்திருக்கிறது. அவற்றை நாம் ஏதோ ஒரு ஒரு குறிப்பிட்ட தொகை செலுத்தி எடுத்துக் கொண்டு கோடி மரத்திற்கு அருகே வைத்து குறிப்பிட அங்கங்களின் நோய் தீர பிரார்த்தித்துக் கொள்ளலாம். 

கீழ் காவில் கோவிலுக்கான பெரிய குளம் உள்ளது(தற்சமயம் அதை செப்பனிட்டுக் கொண்டிருக்கிறார்கள்). அங்கிருந்து படியேறி வந்தவுடன் இடது பக்கம் விநாயகர் மற்றும் ஆஞ்சநேயருக்கு தனி தனி சன்னதிகள். அங்கு தொழுது விட்டு, கொடிமரத்தை வணங்கி, கேரளாவுக்கே உரிய சிறிய வாயில் வழியே கோவிலின் உள்ளே செல்கிறோம். தக தகவென்று ஜொலிக்கும் கருணை பெருகும் அம்பிகையின் வடிவு நம்மை ஆகர்ஷிக்கிறது.  இங்கிருக்கும் அம்மன் காலையில் வெள்ளை ஆடை உடுத்தி சரஸ்வதியாகவும், மதியம் சிவப்பு ஆடை அணிந்து லக்ஷ்மியாகவும், மாலையில் நீல உடையில் துர்க்கையாகவும் காட்சி அளிக்கிறாள். சாதாரனமாக எல்லா தெய்வ உருவங்களும் வலது கையை அபய ஹஸ்தமாக வைத்திருப்பதுதான் வழக்கம் ஆனால் இங்கே வலது கையால் தீய சக்திகளை அடக்குவதால் இடது கையை அபய ஹஸ்தமாக காட்டியபடி எழுந்தருளி இருக்கிறாள். உள் சுற்றில் ஸ்ரீ தர்ம சாஸ்தாவுக்கு தனி சந்நிதி உள்ளது. சற்றே பெரிய வெளி பிரகாரத்தில் இடது புறம் மகாவிஷ்ணுவிற்கு தனி சந்நிதி இருக்கிறது.  

ஏறக்குறைய இருபது ஆண்டுகளுக்கு முன் இந்தக் கோவிலுக்கு சென்ற பொழுது, கொஞ்சம் சிறியதாக, சற்றே அமானுஷ்யமாக இருந்த கோவில் இடைப் பட்ட காலத்தில் நன்கு வளர்ந்து பெரியதாகி விட்டது. 

கேரள யாத்திரை எப்போதுமே மனதிற்கு சந்தோஷம் தரக் கூடியதுதான். காரணம் அழகான இயற்கை காட்சிகள் மட்டுமல்ல(அது கொஞ்சம் மொனாடனஸ் க்ரீன்தான்). அந்த சுத்தம்!ரயில்வே ட்ராக்கை கூட பெருக்குகிறார்கள். கோவில்களில் நெரிசல் இருந்தாலும் கூச்சலும், இரைச்சலும் இல்லை. புதாறு போட் ரெஸ்டாரென்ட் ஐ  பார்த்த பொழுது, இது நம்மூராக இருந்தால் இந்த ரெஸ்டாரென்ட் ஐ சுற்றி பிளாஸ்டிக் குப்பிகளும், தட்டுகளும், மிதக்கும் என்று நினைத்துக் கொண்டேன். பிரயாணங்களில் குறைவாக சாப்பிடுகிறார்கள். அதனாலோ என்னவோ மலைப் பாங்கான பிரதேசமாக இருந்தாலும் பேருந்து பயணங்களில் யாரும் வாந்தி எடுப்பது இல்லை. புகை வண்டியில் கழிப்பறைகளில் துர்நாற்றம் குறைவாக இருக்கிறது. நம்மூரில் நாம் பேருந்து நிலையத்தை நெருங்கி கொண்டிருக்கிறோம் என்பதை அங்கிருந்து வரும் துர்  நாற்றம்  ஒரு கிலோ மீட்டருக்கு முன்னாலேயே தெரிவித்து விடும். கேரளாவில் அந்த கெட்ட  வாடை எங்குமே இல்லை. நம் சேட்டங்களிடம் நாம் கற்றுக் கொள்ள வேண்டிய விஷயங்கள் இருக்கின்றன பாண்டிகளே!

Saturday, January 17, 2015

அரபிக் கடலோரம் ஓர் அழகைக் கண்டேனே - II


அரபிக் கடலோரம் ஓர் அழகைக் கண்டேனே - II

ஆட்டுக்கால் பகவதி கோவிலில் தரிசனம் முடித்துக் கொண்டு நாங்கள் ரூமிற்கு திரும்பி குளித்து, உடை மாற்றி அனந்த பத்மநாபசுவாமி கோவிலை அடையும் பொழுது மணி ஏழே காலாகி விட்டது. கோவில் வாசலில் என் கணவர் சட்டையை கழற்றி, அங்கவஸ்திரம் அணிந்து கொண்டு, செல் போன், செருப்பு போன்ற உடைமைகளை ஆட்டோ ஓட்டுனரிடம் ஒப்படைத்து விட்டு, பாதுகாப்பு  பரிசோதனைக்கு உட்பட்டு கோவில் உள்ளே பிரவேசித்த பொழுது பிரகாரத்தில் ஒரு மூதாட்டி, "சீக்கிரம் சீக்கிரம் ஓடுங்கள், நடை அடைத்து விடப் போகிறார்கள்" என்று எங்களை துரிதப் படுத்தினர். நாங்கள் எந்த வாயில் வழியாக உள்ளே செல்வது என்று தெரியாமல் அங்கும் இங்கும் அலைந்து நேரம் விரயம் செய்ததில் நடை அடைக்கப் பட்டு விட்டது.அடுத்த தரிசனம் எட்டே காலுக்குத்தான் என்றார்கள். பொது தரிசனமும் இல்லை, சிறப்பு தரிசனமும் இப்போது கிடையாது. ஐம்பது ரூபாய் கட்டண தரிசனம்தான் இருந்தது. ஐம்பது ரூபாய் டிக்கெட் வங்கிக் கொண்டு அந்த வரிசையில் நின்று கொண்டிருந்த ஐயப்பமார்களோடு சேர்ந்து கொண்டோம். கிட்டத் தட்ட எட்டு மணிக்கு ஸ்ரீரங்கம் அரையர் போல அலங்கரித்துக் கொண்ட  மூன்று அர்ச்சகர்கள்  உள்ளிருந்து உற்சவ விக்கிரகங்களை தங்கள் தலையில் சுமந்த வண்ணம் வெளிப்பட்டனர். அவர்களும், அவர்களை பின் தொடர்ந்து கையில் விளக்கு ஏந்திய பெண்களும், ஹரே ராம,ஹரே ராம,ராம ராம ஹரே ஹரே. ஹரே கிருஷ்ண, ஹரே கிருஷ்ண, கிருஷ்ண,கிருஷ்ண ஹரே ஹரே என்னும் மஹா மந்திரத்தை ஜபித்த வண்ணம் ஒரு சில பக்தர்களும் செல்ல, கோவிலை மூன்று முறை வலம் வருகிறார்கள். அவர்கள் உள்ளே சென்றதும் நடை திறக்கப்படுகிறது. 

வரிசையில் நின்று கொண்டிருந்த எல்லோரையும் உள்ளே விட்டார்கள். ஒற்றைக்கால் மண்டபத்திற்கு இந்த பக்கம் நின்று கொண்டுதான் பெருமாளை தரிசனம் செய்ய வேண்டிய நிர்பந்தம். ஒரு பக்கம் முண்டி அடிக்கும் கும்பல், மறு பக்கம் இருட்டுக்கு பழகாத கண்கள்.. பெருமாள் ஒரு சில்ஹௌட் போல தெரிந்தார். திருவடியை தரிசனம் செய்ய முடியவில்லை. காலையில் ஒரு முறை வந்து நன்றாக தரிசனம் செய்ய வேண்டும் என்று நினைத்துக் கொண்டோம்.

மறுநாள் அமிர்தபுரி(வள்ளிக்காவு) சென்று அமிர்தானந்தமயியை தரிசனம் செய்து கொண்டோம். அடுத்த நாள் திங்கள் கிழமை காலை மீண்டும் அனந்தபத்மநாப சுவாமி கோவிலுக்குச் சென்றோம். 180 ரூபாய்க்கு நுழைவு சீட்டு பெற்றுக் கொண்டோம். இதற்கு இரண்டு பேர்களை அனுமதிக்கிறார்கள்,இரண்டு டின் அரவணை பாயசமும் ப்ரசாதமாக கிடைக்கும்.

அர்த்த மண்டபத்தில் நுழையும் முன் ருத்ர நரசிம்மரை வணங்கிக் கொள்கிறோம். உள்ளே ஒற்றைக் கால் மண்டபம் தாண்டி,தெற்கே தலை வைத்து,வடக்கே காலை நீட்டி, தொப்பூழிளிருந்து எழும் தாமரையில் பிரம்மா வீற்றிருக்க, இடது கரத்தில் தாமரை பூவை ஏந்தி,வலது கை கீழே சிவலிங்கத்தின் மீது இருக்க, அனந்தன் என்னும் ஐந்து தலை பாம்பின் மீது பள்ளி கொண்டிருக்கும் பெருமாளின் அற்புத கோலத்தை பார்த்துக் கொண்டே இருக்கலாம் போலிருக்கிறது. 

சுவாதி திருநாள் ம்யூசியம் முன்
உள்  பிரகாரத்தில் சீதா,லக்ஷ்மண  சமேத ஆஞ்சநேய சன்னிதி ஒன்று இருக்கிறது. வெளி பிரகாரத்தில் கோவில் கொண்டுள்ள திருவம்பாடி கிருஷ்ணன் சன்னிதி தமிழ் நட்டு கோவில் போல இருக்கும் அனந்த பத்மநாப சுவாமி கோவிலுக்குள் முழு முழுக்க கேரளா பாணியிலேயே அமைந்துள்ள சிறு தனி கோவில். இதற்கு முன் இருக்கும் மண்டபத்தின் மரத்தால் ஆன விதானத்தில் மிக அழகான தசாவதார சிற்பங்கள் உள்ளன. 

அனந்த பத்மநாபசுவாமி கோவில் முன்பு 

கோவிலின் மடப்பளியில் இருக்கும் அக்ர சாலை கணபதியையும் தொழுது வெளி வந்து கொடிமரத்தின் முன் வணங்கி வெளி வருகிறோம். கேரள கோவில்களைப்  போல இல்லாமல்  அகன்ற பெரிய பிரகாரம், நாயக்கர், பிற்கால சோழர்கள் கால சிற்பங்களைப் போல பெரிய பெரிய சிற்பங்கள் என்று தமிழக கோவில்களைப் போல இருக்கிறது பத்மநாப சுவாமி கோவில். கோபுரம் கூட நம்மூர் பாணியிலேயே அமைந்துள்ளது. பிரகாரத்தில் இரண்டு புறமும்   ஒவ்வொரு தூணுக்கு முன்பும் இருக்கும் விளக்கு நாச்சியார் சிலைகளின் கைகளில் அந்தக் காலத்தில் நிஜமான விளக்கு ஏற்றி வைத்திருப்பார்கள், இன்றோ..? எல்லாவற்றிலும் மின்சார  விளக்குகள்!!! 

திருவனந்தபுரம் பெருமாளின் திருமேனி ஆரம்ப காலத்தில் இலுப்ப மரத்தால்தான் செய்யப்பட்டிருந்ததாம், பின்னாளில்தான் தற்போதிருக்கும் 12008 சாளிக்ராமங்களால் ஆக்கபட்டிருக்கும் திருமேனியை ப்ரதிஷ்டை செய்திருக்கிறார்கள். 108 சாளிக்ராமங்களை ஒரு சேர தரிசிப்பதே புண்ணியம் என்னும்போது 12008 சாலிக்ராமங்களை ஒரு சேர தரிசிக்க முடிவது ஒரு சிறப்பு  ன்றால், சயனித்துக் கொண்டிருக்கும் விஷ்ணு, அவரது தொப்பூழிலிருந்து பிரம்மா, கீழே கை தொட்டுக் கொண்டிருக்கும் சிவ லிங்கம், என்று மும்மூர்த்திகளையும் ஒரே இடத்தில் தரிசிக்க முடிகிற வாய்ப்பையும் தருகிற தரிசனம் இன்னொரு சிறப்பு!

- தொடரும் 

Wednesday, December 31, 2014

அரபிக் கடலோரம் ஓர் அழகை கண்டேனே...!

அரபிக் கடலோரம்  ஓர் அழகை கண்டேனே...!

ஒரு குடும்ப விசேஷத்திற்காக கேரளா செல்ல வேண்டி இருந்தது. அந்த நிகழ்ச்சியை முடித்துக் கொண்டு திருவனந்தபுரம் சென்றோம். முப்பது வருடங்களுக்கு முன் திருவனந்தபுரம் சென்ற பொழுது, "என்ன இது ஒரு மாநில தலை நகர் போல இல்லாமல் வெகு சாதாரணமாக ஒரு சிறு நகரம் போல இருக்கிறதே..?" என்று நினைத்துக் கொண்டேன். இப்பொழுது மேம்பாலங்கள், வாசல் எது? ஜன்னல் எது? என்று தெரியாத நவீன கட்டிடங்கள் வந்து ஓரளவிற்கு பெரு நகரங்களுக்கு நெருங்கி வந்து விட்டது.

விஸ்தாரமான கொட்டார(அரண்மனை)வளாகம், அந்தக் கால கேரள பாணி ஒட்டு வீடுகள், வளைந்து வளைந்து செல்லும் குறுகலான தெருக்கள், இவற்றோடு நவீன கட்டிடங்கள், என்று  ஜீன்ஸ்,டீ ஷர்ட், கொலுசு, உச்சி பொட்டு இவற்றோடு காட்சி அளிக்கும் பெண் போல பழமையும் புதுமையும் கலந்து காட்சி அளிக்கிறது திருவனந்தபுரம்!

நாங்கள் தங்கி இருந்த ஹோட்டல் வாசலிலேயே எங்களை மடக்கிய ஒரு ஆட்டோ ஓட்டுனர் நாங்கள் பார்க்க வேண்டிய இடங்களை தீர்மானித்தார். அதன்படி முதலில் மியூசியம், ராஜா ரவிவர்மா ஆர்ட் காலரிக்கு சென்றோம். 

விஸ்தாரமான மைதானத்தில் கம்பீரமான கேரள பாணி கட்டிடங்களில் அமைந்துள்ளன அருங்காட்சியகமும், ஓவியக் கூடமும். அருங்காட்சியகத்தில் நான்காம் நூற்றாண்டு சிற்பங்களிலிருந்து வைக்கப் பெற்றுருக்கின்றன. இதில் சேரநாட்டு சிற்பங்கள் மட்டுமல்லாமல் சோழ நாட்டு சிற்பங்களும் இருக்கின்றன. 


மியுசியத்தின் முன் நானும் என் கணவரும் 






















ரவி வர்மா ஓவிய கூடத்தை பார்க்க நான் மிகவும் விரும்பினேன். சில ஓவியங்கள் பிரமாதமாகவும், பல மிக சாதரணமாகவும் இருந்தன.  

அங்கிருந்து புது ஆறு என்னும் இடத்தில் போட்டிங் போவது ஒரு புதிய அனுபவமாக இருக்கும் என்று கூறினார். சமீப காலத்தில் கேரள அரசு சுற்றுலாவை வளர்ப்பதில் தீவிரம் காட்டி வருகிறது. அதில் ஒன்றுதான்  back water படகு சவாரிகள் . புதாற்றில் கிட்டத்தட்ட நான்கு கிலோ மீட்டர் மாங்க்ரூவ் காடுகளிடையே(இங்குதான் அனகோண்டா பார்ட் 3 படமாக்கினார்களாம்,)  போட்  ஹௌஸில் பயணித்து புதாறு கடலோடு கலக்கும் இடத்தில் ஒரு சிறு திட்டு உள்ளது. அங்கு இறக்கி விடுகிறார்கள். அதில் சிறிது நேரம் கழித்து விட்டு திரும்பி வரலாம். போகும் வழியில் உள்ள மிதக்கும் உணவு விடுதியில் நமக்கு தேவையான உணவை ஆர்டர் கொடுத்து விட்டு போனால் வரும் வழியில் சாப்பிட்டுக் கொள்ளலாம். ராமேஸ்வரம் தவிர மற்ற இடங்களில் சமுத்திர ஸ்நானம் செய்ய வேண்டும் என்றால் அது ஒரு நதி கடலோடு கலக்கும் இடமாக இருக்க வேண்டும் என்பது சாஸ்திரம் கூறும் விதி. ஆனால் எங்களின் இந்த பயணம் திட்டமிடப் படாததால் அங்கு குளிக்க முடியவில்லை. திரும்பி வரும் வழியில் மிதக்கும் விடுதியில் சுவையான ப்ரைட் ரைஸை பைனாப்பில் ராய்தாவோடு சாப்பிட்டு விட்டு திரும்பினோம். கொஞ்சம் காஸ்ட்லியான நல்ல அனுபவம்.

Add captionபுதாற்றில் படகு சவாரி 
புதாறு கடலோடு சங்கமிக்கும் இடத்தில் நீரை தலையில் ப்ரோஷித்து கொள்கிறார் என் கணவர் 


நாங்கள் பயணித்த படகிலிருந்து, மிதக்கும் உணவு விடுதிக்கு மாறும் பொழுது, கால் தடுக்கி படகிற்கும்,விடுதிக்கும் இடையே விழ இருந்தேன். எப்படியோ சமாளித்து மற்றவர்கள் உதவியோடு விடுதிக்கு சென்று விட்டேன். நல்ல வேலை தப்பித்தோம் என்று நினைத்தேன். "இரு இரு உன்னை வைத்துக் கொள்கிறேன்" என்று காலம் கருவியது என் காதில் விழவில்லை.
இரண்டு வாரங்களுக்குப் பிறகு பெங்களூரிலிருந்து சென்னை திரும்பும் வழியில் உணவு விடுதியில்(இங்கும் உணவு விடுதி) உணவு அருந்தி விட்டு படியில் இறங்கும் பொழுது கால் இடறி கீழே விழுந்து ஹேர் லைன் கிராக் ஆகா வைத்து தன வஞ்சத்தை தீர்த்துக் கொண்டது காலம்.:( 

அங்கிருந்து திரும்பி வரும் வழியில் கோவளத்திற்குச் சென்று கடலில் கால் நனைத்து விட்டு வந்தோம். அன்று சனிக்கிழமை என்றதால் நல்ல கூட்டம். குறிப்பாக இளைஞர்,யுவதியர் கூட்டம். 

அங்கிருந்து திருவனந்தபுரம் திரும்பி வரும் வழியில் ஆட்டுக்கால் பகவதி அம்மன் கோவிலுக்கு சென்றோம். ஆற்றுக்கால் பகவதி என்பது மருவி ஆட்டுக்கால் பகவதி என்றாகி விட்டது. 

தன கணவன் கோவலனை அநியாயமாக கொன்ற பாண்டிய மன்னனிடம் நீதி கேட்டு, மதுரையை எரித்து விட்டு சேர நாட்டிற்கு வந்த கண்ணகி கொடுங்கல்லூர் செல்லும் முன்  இங்கிருக்கும்'கிள்ளி' ஆற்றங் கரையில் தங்கி தன் கோபத்தை தணித்து கொண்டதாகவும் (அதனால்தான் ஆற்றுக் கால்) அவளுக்கு சாப்பிட பொங்கல் கொடுத்த குடும்பத்தை வாழ்த்தி மறைந்ததால் ஒவ்வொரு  வருடமும்  அந்த நாளில் அவளுக்கு பொங்கல் படைப்பது மிகப் பெரிய உற்சவமாக இங்கு கொண்டாடப் படுகிறது. 

மாசி அல்லது பங்குனி மாத கார்த்திகையில் துவங்கி பத்து நாட்கள் நடக்கும் 'பொங்கல' உற்சவத்தில் ஒன்பதாம் நாள் அம்மனுக்கு பொங்கல் படைக்கப் படுகிறது. இதில் முழுக்க முழுக்க பெண்கள் மட்டுமே பங்கு பெறுவது ஒரு சிறப்பு. இதனால் இந்தக் கோவில் பெண்களின் சபரி மலை எனப்படுகிறது. லட்ச கணக்கில் பெண்கள் கலந்து கொள்ளும் இந்த விழா மிக அதிகமான பக்தர்கள் கலந்து கொள்ளும் நிகழ்ச்சி என்று கின்னஸில் இடம் பிடித்திருக்கிறது.

தமிழக கேரள பாணியில் அமைந்திருக்கும் விஸ்தாரமான கோவில். பிரகாரத்தில் விநாயகருக்கும் வீர பத்திரருக்கும் தனி சந்நிதிகள் உள்ளன. அதற்கு அருகில் ஒரு மேடையில் அரச மரத்தின் கீழ் நாகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப் பட்டுள்ளன. மூல ஸ்தான அம்மன் விக்ரஹத்தின் முன் ஒரு பாலகனின் சிலை உள்ளது. கண்ணகி இங்கு வரும் பொழுது ஐந்து வயது சிறுவன் ஒருவன் உடன் வந்ததாக கூறுகிறார்கள். ஆனால் சிலப்பதிகாரப்படி கண்ணகிக்கு குழந்தைகள் இருந்ததாக செய்தி இல்லை.

வாசகர்களுக்கு புத்தாண்டு வாழ்த்துக்கள்! அடுத்த பதிப்பில் தொடரலாம்...

Monday, December 29, 2014

எல்லே இளம் கிளியே!

எல்லே இளம் கிளியே!





திருப்பாவையின் பதினைந்தாவது பாசுரம், "எல்லே இளங்கிளியே... " என்று துவங்கும் இந்த பாடல். பாவை நோன்பு நோற்க ஒவ்வொரு பெண்ணாக எழுப்பி அழைத்து வரும் ஆண்டாள் மற்றும் அவள் தோழிகளுக்கும்  இன்னும் எழுந்து வராமல் உள்ளே உறங்கிக் கொண்டிருக்கும் பெண்ணிற்கும் நடக்கும் உரையாடலை அப்படியே பாடலாக்கி இருக்கிறாள்
  
எல்லே இளங்கிளியே! இன்னம் உறங்குதியோ?
சில்லென் றழையேன்மின், நங்கைமீர்! போதர்கின்றேன்;
‘வல்லை, உன் கட்டுரைகள்! பண்டேஉன் வாயறிதும்!’
‘வல்லீர்கள் நீங்களே, நானேதான் ஆயிடுக!’
‘ஒல்லைநீ போதாய், உனக்கென்ன வேறுடையை?’
‘எல்லோரும் போந்தாரோ?’ ‘போந்தார், போந்து எண்ணிக்கொள்’
வல்லானை கொன்றானை, மாற்றாரை மாற்றழிக்க
வல்லானை, மாயனைப் பாடேலோ ரெம்பாவாய்.

வாசலில் நிற்கும் பெண்கள்,"இன்னுமா உறங்கிக் கொண்டிருக்கிறாய்"?  என்று கேட்க, "சில்லென்று பேச வேண்டாம், வந்து விட்டேன்" என்கிறாள் உள்ளே இருக்கும் பெண். வார்த்தையை கவனியுங்கள், "சில்"லென்று அழைக்க வேண்டாம்" என்கிறாள்.. சாதாரணமாக கோபமாக பேசுவதை "சுள்" என்று பேசுவது என்றுதான் சொல்வோம். ஆனால் குளிரான மார்கழி மாதத்தில் அதிகாலையில் "சுள்" என்று பேசுவதை விட, "சில்" என்று பேசுவதுதானே பொறுக்க முடியாமல் இருக்கும்?

வா.நி.பெ.: உன்னுடைய வாய் சவடால் எங்களுக்குத் தெரியும் (தெரியாதா ? என்பது உட் கிடை)அடுத்து வரும்   'வல்லீர்கள் நீங்களே, நானேதான் ஆயிடுக'  என்னும் இந்த இரண்டு வரிகளும் மிக முக்கியமானவை.

"என்னை வாய் சவடால் என்று கூறும் நீங்கள் மட்டும் என்ன?, சரி அப்படியே இருக்கட்டும்" இதுதான் சண்டையை வளர்த்தாமல், சமாதானமாக போகும் வைணவ கோட்பாட்டை விளக்குகிறது.

வா.நி.பெ.: சரி, வேறு எதையும் பற்றி எண்ணாமல் சீக்கிரம் கிளம்பேன்..

உ.இரு.பெ.: என்னை விரட்டுகிறீர்களே, மற்ற எல்லோரும் வந்து விட்டார்களா?  - இதுதானே, நம்முடைய வழக்கம். நம்மை யாராவது ஒரு நல்ல செயலுக்கு தூண்டும் பொழுது, நான் மட்டும்தான் கிடைத்தேனா? மற்றவர்கள் என்ன ஆனார்கள் என்று கேட்பதுதானே நம் பழக்கம்? 

வா.நி.பெ.: எல்லாரும் வந்தாச்சு, சந்தேகம் இருந்தால் வந்து எண்ணிக்கொள்..

குவலய பீடம் என்னும் யானையை கொன்றவனும், தீயவர்களை அழிக்கக் கூடியவனுமாகிய, மாயவனை பாட வாராய் என்று முடியும் இந்த பாடலின் ஒவ்வொரு வரியும் வைணவர்கள் கடை பிடிக்க வேண்டிய வழி முறைகளை வலியுறுத்துவதால் இது மிக முக்கியமான பாசுரம்(அத்தனை விரிவாக நாம் பார்க்கவில்லை). பாடல் வடிவில் ஒரு ஓரங்க நாடகத்தையே நம் கண் முன் நிறுத்தும் ஆண்டாளின் திறமை மனதை கொள்ளை கொள்கிறது! 




Thursday, December 25, 2014

உறவுகள்

உறவுகள் 

திரு.G.M. பாலசுப்ரமணியன் தன் வலைப்பூவில் 'உறவுகள்' என்னும் பதிவில் முன்பு போல் இல்லாமல் தற்காலத்தில் உறவுகள் இருக்கின்றனவே தவிர அதில் ஒட்டுதல் இல்லை அதற்கு காரணம் பெண்கள் பிறந்த வீட்டு சொந்தங்களுக்கு அளிக்கும் முக்கியத்துவத்தை புகுந்த வீட்டினருக்கு அளிக்காததுதான் என்று முடித்திருப்பதோடு  இதை  ஒரு தொடர் பதிவாக்க விரும்புவதாகவும், குறிப்பாக பெண் பதிவாளர்களை தொடரும்படியும் வேண்டுகோள் விடுத்திருக்கிறார். ஒரு வேளை நம்மை(அதாங்க பெண்களை) சீண்டி விட்டு வேடிக்கை பார்க்கிறாரோ என்றும் ஒரு சந்தேகம் வந்தது.  எப்படி இருந்தாலும் பதில் சொல்லலாம் என்று முடிவு எடுத்து விட்டேன்.. 

Disclaimer: இது பெண்ணிய கட்டுரை அல்ல 

உலகம் முழுவதிலுமே திருமணத்திற்கு பின் ஒரு ஆணோடுதான் பெண் வர வேண்டி இருக்கிறது. தன்னுடைய தாய்,தந்தை,உடன் பிறந்தவர்கள் என்று எல்லோரையும் துறந்து கணவனை மட்டும் உறவாக கொண்டு புகுந்த வீட்டிற்குள் வாழ வரும் அவளை எத்தனை வீட்டில் தன் குடும்ப உறுப்பினராக முழு மனதோடு சேர்த்துக் கொள்கிறார்கள்? மருமகள் என்று கூறினாலும் மகளுக்கு கொடுக்கப்படும் சலுகைகள் மருமகளுக்கு பெரும்பாலும் வழங்கப்படுவதில்லை. பேரன், பேத்திகளை கொண்டாடும் குடும்பங்கள் அவர்களை பெற்றுத் தந்த மருமகள்களை பெரும்பாலும் மதிப்பதில்லை. சில குடும்பங்கள் இன்னும் மோசம், மறுமகள் மேல் உள்ள த்வேஷத்தை பேரக் குழந்தைகள் மேலும் காண்பிப்பார்கள். 

பல பெண்களுக்கு வருத்தம் தரும் ஒரு விஷயம் என்னவென்றால், புகுந்த வீட்டினர் சில விஷயங்களை டிஸ்கஸ் செய்யும் பொழுது, மாமனார், மாமியார், கணவன்,மைத்துனர்,நாத்தனார் என்று எல்லோரும் கூடி பேசுவார்களே தவிர அந்த கூட்டத்தில் மருமகள்கள் ஓரங்கட்டப்படுவதுதான். இப்படி இருக்கும் பொழுது அந்தப் பெண்ணிற்கு எப்படி புகுந்த வீட்டினர் மீது பாசம் வரும்? சிறு வயதில் தாயோடு அதிக நேரத்தை கழிக்கும் குழந்தைகள் தாய் சிறுமை படுத்தப் படுவதை உணரும் பொழுது அவர்களின் அடி மனதில் தந்தை வழி உறவினர் மீது ஒரு கோபம் பதியலாம். 

தான் எதிர்பார்த்த பாசமும் நேசமும் புகுந்த வீட்டில் கிடைக்காத பொழுது அந்த ஏக்கத்தை தன் கணவனிடம் சொல்லி ஆறுதல் தேட முயலும் பொழுது கணவன்மார்கள் மனைவியின் குறையை காது கொடுத்து கேட்டால் போதும்.  ஆனால்  எத்தனை கணவன்மார்கள் இதை செய்கிறார்கள்? "ஆரம்பித்து விட்டாயா உன் புலம்பலை?" " என் வீட்டு மனிதர்களை குறை சொல்லா விட்டால் உனக்கு தூக்கம் வராதே" "ஏண்டா வீட்டுக்கு வரோம்னு இருக்கு" என்றெல்லாம் இவள் மீதே குற்றத்தை திருப்ப, வேறு வழியில்லாமல் அவள் தன் பிறந்த வீட்டையே தஞ்சம் அடைகிறாள். அங்கு அவளுக்கு ஆறுதலும், தேறுதலும், அரவணைப்பும் கிடைக்க எங்கு தாய் சந்தோஷமாக இருக்கிறாளோ,அங்கு குழந்தைகளும் பாசமாக இருக்கின்றன.

கணவன்மார்கள் நினைத்தால் உறவுகளை மேம்படுத்த முடியும். மனைவிக்கு மனிதர்களை அனுசரித்துச் செல்லும் குணம் இல்லை என்றாலும் அவளுக்கு தெரியாமல் அவன் தன் தாய் தந்தையோடும், உடன் பிறந்தவர்களோடும் உறவைத் தொடர வாய்ப்பும்,வசதியும் உண்டு. மனைவி வராவிட்டாலும் தன் உறவினர் வீடுகளுக்கு தான் செல்வதோடு, தன் குழந்தைகளையும் அழைத்துச் செல்வது, அவர்களைப் பற்றி நல்ல விதமாக குழந்தைகளிடம் பதிய வைப்பது போன்ற செயல்களை செய்வதன் மூலம் உறவுகளை மேம்படுத்தலாம். இப்படி செய்த பல ஆண்களை எனக்கு தெரியும். நாளாவட்டத்தில் அவர்களின் மனைவியரும் மனம் மாறி புகுந்த வீட்டினரோடு பாசமாக மாறினர்.

திருமணத்திற்கு முன் புகைபிடிக்கும் பழக்கத்தை வளர்த்துக் கொண்டவன் மனைவி எத்தனை சொல்லியும் அந்த பழக்கத்தை விடுவதில்லை. திருமணத்திற்கு முன் மது அருந்த ஆரம்பித்தவன், மனைவி சொல்லி அதை விடுவதில்லை, ஆனால் பெற்ற தாய்,தந்தையர்,சகோதர,சகோதரியரை மாத்திரம் மனைவி சொல்லி விட்டு விடுவது என்ன நியாயம்?

ஆனால் தற்காலத்தில் நிலைமை கொஞ்சம் மாறி வருவது சற்று ஆறுதல்.

Wednesday, December 17, 2014

காவியத் தலைவன் (Review)

காவியத்  தலைவன் 





இந்தியா சுதந்திரம் அடைவதற்கு முந்தைய காலத்தில் நம் நாட்டில் கொடி கட்டி பறந்த பாய்ஸ் கம்பெனியை நிலை களமாக வைத்து புனையப்பட்டிருக்கும் கதை.
 
நாசர் நடத்தும் பாய்ஸ் கம்பெனியில் சிறு வயது முதலே சேர்ந்து பயிற்சி பெரும் காளியப்பன்(சித்தார்த்),கோமதி நாயகம்(பிரித்விராஜ்) இருவருக்கும் இடையே நிலவும் நட்பு ,பொறாமை , பகை இவைகளை சுற்றியே படம் நகர்கிறது. 

ப்ரித்விராஜின் பாத்திரப் படைப்பில் இருக்கும் தெளிவு சித்தார்த்தின் பாத்திரப் படைப்பில் இல்லாதது ஒரு குறை. ராஜபார்ட் சித்தார்த்தா? குருவி தலையில் பனங்காய்! அதற்கேற்ற உடல் அமைப்பும் அவருக்கு  இல்லை. குரலிலும், உடல் மொழியிலும் அவரையும் அறியாமல் கான்வென்ட் வந்து விடுகிறது.  மைல்ஸ் டு கோ.

பிரித்விராஜ் பின்னி எடுக்கிறார். ஆரம்பத்தில் பொன் வண்ணனின் நடிப்பை மறைந்திருந்து பார்த்து தானும் ஒரு நாள் ராஜ பார்ட் வேஷம் கட்ட வேண்டும் என்று ஆசைப் படுவதாகட்டும், ராஜ பார்ட் வேஷத்தை ஆசானுக்கு முன் நடித்து காட்டிவிட்டு தனக்குத் தான் அந்த வேடம் கிட்டப் போகிறது என்று எதிர்பார்போடு நிற்பதாகட்டும், அது கிட்டதா போது குமைவதாகட்டும், பின்னால் கம்பெனி முதலாளியாக தானே மாருவதாகட்டும், ஒரு இடத்திலும் சோடை போகவில்லை. சித்தார்த் மீது அவருக்கு வரும் பொறாமை கூட தனக்கு கிட்ட வேண்டிய அங்கீகாரம் கிட்டாததால் அவர் அடையும் தாபம் போல தோன்றுவது இயக்குனரின் திறமையா? அல்லது நடிகரின் திறமையா? அந்த தமிழாளத்தை மன்னித்து விடலாம்.

கொஞ்ச நேரமே வந்தாலும் பொன் வண்ணனும், தம்பி ராமையாவும்   மன்சூர் அலிகானும் கச்சிதம். முத்திரை நடிப்பு நாசருடையது! திருப்புகழை மனப்பாடம் செய்ய சொல்லும் காட்சியும், படத்தின் முன் பாதியில் ப்ரித்விராஜை ஒருமையில் அழைக்கும் தம்பி ராமையா,பின் பாதியில் முதலாளி என்று விளிப்பதும் அந்தக்  கால நடை முறையை எடுத்துக் காட்டுகிறது. அரங்க அமைப்பும் உடைகளும் கூட நம்மை அந்தக் காலத்திற்கே அழைத்துச் செல்லுகின்றன. பாடல்கள் இனிமை என்றாலும் 1940களின் இசை போல இல்லை. 

ஜமீன்தாரின் மகளாக வந்து, சித்தார்த்தை காதலித்து இறந்து போகும் அனைகா மனதில் ஒட்டவே இல்லை. ராணி வேஷம் போட்டுக் கொண்ட பள்ளிக் கூட மாணவி போல இருக்கிறார். வேதிகா பரவாயில்லை. 

ரத்தம் பீரிடும் சண்டை இல்லை, அடி உதை,இரட்டை அர்த்த காமெடி இல்லை. வித்தியாசமான கதை களத்தில், போரடிக்காமல் ஒரு படத்தை எடுத்திருக்கும் வசந்த பாலனை உற்சாகப்படுத்த இந்த படத்தை எல்லோரும் ஒரு முறை பார்க்கலாம். பார்க்க வேண்டும் 

Friday, November 21, 2014

நீடித்த சந்தோஷம் எது?


நீடித்த சந்தோஷம் எது?


முகநூல்(face book) தோழி திருமதி காயத்ரி  சுந்தரேசன் சமீபத்தில் ஒரு கேள்வி எழுப்பி இருந்தார். 

Pleasure- what is it that gives one pleasure? Physical?mental?emotional? which is lasting pleasure? 

நான் தமிழில் சிந்திப்பதால் இதை தமிழ் படுத்துகிறேன். ஒருவருக்கு எது சந்தோஷத்தை கொடுக்கிறது? புலனின்பமா? அறிவு சார்ந்த இன்பமா? இல்லை உணர்வு சார்ந்த இன்பமா? எந்த இன்பம் நீடித்திருக்கும்?

நல்லது! முதலில் புலனின்பத்தை எடுத்துக் கொள்வோம். கண்டு,கேட்டு, உற்று,உணர்ந்து.முகரும் இந்த ஐவகை இன்பங்களும் பெண்ணிடம் உண்டு. சாப்பாட்டிலும் உண்டு. இந்த இரண்டு வகை இன்பங்களை தேடித் தேடி ஓடாதவர்கள் உண்டா? இதனால் கிடைக்கும் இன்பம் நிச்சயமாக நிலையானது கிடையாது. 

மேலும் இந்த புலனின்பத்தை அனுபவித்து தீர்த்து விட முடியாது. மகாபாரதத்தில் வரும் யயாதி கதையில் யயாதி கூறியதைப் போல, உலக இன்பங்களை அனுபவித்து தீர்த்து விடலாம் என்று நினைப்பது எரிகின்ற கொள்ளிக்கு நெய் வார்த்து அதை அணைத்து விடலாம் என்று நினைப்பதற்கு ஒப்பானது. எனவே நீடித்த இன்பத்தை ஒரு போதும் தராது. அதனால்தான் நம் முன்னோர்கள் இது ஒரு வரம்பிற்குள் இருக்க வேண்டும் என்பதர்காகத்தான் அவ்வப்பொழுது விரதங்களை அனுஷ்டிக்க வேண்டும் என்று வலியுறுத்தினர். 

அடுத்து அறிவார்ந்த சந்தோஷம்: அறிவார்ந்த சந்தோஷம் என்று ஒன்று உண்டா என்று தெரியவில்லை. ஏனென்றால் அறிவு செயல் பட ஆரம்பிக்கும் பொழுது சந்தோஷம் விடை பெற்று விடும். சிறு வயதில் மயலின் இறகை நோட்டு புத்தகத்தில் வைத்து அது குட்டி போடும் என்று நம்பும் சந்தோஷம் வளர்ந்த பிறகு இருக்குமா?  

மணிக்கொடி எழத்தாளர்களில் ஒருவரான கு.ப.ராஜகோபால் ஒரு அருமையான சிறு கதை எழுதி உள்ளார்.  அதில் சித்தார்த்தன் என்னும் இளவரசன் ஏன் புத்தனானான்  என்பதற்கு ஒரு காரணம் கூறியிருப்பார். 

இரவில் மனைவி யசோதராவோடு சுகிக்கிறான் சித்தார்த்தன். அதற்குப் பிறகு அவள் உறங்கி விட, இவ்வளவுதானா? இதற்குத்தானா? என்னும் கேள்விகள் அவனை வாட்ட, அன்றிரவே அரண்மனையை விட்டு வெளியேறுகிறான். என்று  முடித்திருப்பார்.

அடுத்தது உணர்வு பூர்வமான சந்தோஷம்: இது சற்று உயர்ந்த ரகம்: மேலே சொன்ன இரண்டு ரகங்களும் அனுபவிக்கும் ஒருவருக்கு மட்டும் சந்தோஷத்தை தரும் என்றால், இதில் நாம் மற்றவரையும் சந்தோஷப்படுத்தலாம். எப்படி என்றால் ஒருவர் பாடுகிறார். அது அவருக்கு சந்தோஷம், அது நன்றாக இருக்கும் பட்சத்தில் கேட்பவருக்கும் சந்தோஷம். எம்.எஸ்.சுப்புலக்ஷ்மி  இன்று இல்லை. ஆனால்  அவருடைய சங்கீதம் இன்றும் நம்மை சந்தோஷப் படுத்துகிறது. 

ஸ்வாமி ஏ.பார்த்தசாரதியின் உரையில் ஒரு முறை குறிப்பிட்டார். இந்த உலகில் மூன்று  விதமான உதவிகள் உண்டு. ஒன்று பணத்தால் ஒருவருக்கு உதவுவது. இது அதமம் (கடைசி). இரண்டாவது உடலால் ஒருவருக்கு உதவுவது இது மத்யமம்(இடை நிலை). மூன்றாவது உணர்வு பூர்வமாக ஒருவருக்கு உதவுவது, இதுதான் உத்தமம் (உயர்ந்த நிலை). 

முன்பெல்லாம் எல்லா மகான்களும் பாடகர்கள், நடிகர்கள், கதாசிரியர்கள், விளையாட்டு வீரர்கள் போன்ற செலிப்ரிடிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் பொழுது நான், "எல்லா இடங்களிலும் பெரிய மனிதர்கள் என்றால் ஒரு தனி கவனிப்புதான்" என்று நினைத்துக் கொள்வேன்.  ஆனால் அவர்கள் தங்கள் திறமையால் எத்தனை பேர்களை உணர்வு பூர்வமாக சந்தோஷப் படுத்துகிறார்கள்? அதற்கான அங்கீகாரம்தான் அவர்களுக்கு  கொடுக்கப்படும் முக்கியத்துவம். மேலும் இந்த உணர்வு பூர்வமான சந்தோஷத்தை தெய்வீகமாக மாற்றுவது எளிது. 

இதில் எதுவுமே நிலைத்த சந்தோஷத்தை தராது என்பதுதான் உண்மை. எதுவுமே நீடித்த சந்தோஷத்தை தராது என்பதை கண்டு கொள்வதுதான் சந்தோஷத்தை தரும்.  

யாதனின் யாதனின் நீங்கியாங்கு நோதல் 
அதனின் அதனின் இல 

எதில் எதில் இருந்தெல்லாம் விலகி இருக்கிறோமோ அவைகளால் துன்பம் கிடையாது என்று இதைத்தான் வள்ளுவர் சொன்னார். நீங்குதல் என்பது  புறக்கணித்தல் அல்ல எட்டி இருத்தல், டிடாச்மென்ட். இதை பழக்கிக் கொண்டோமானால் வாழ்கை இனிக்கும்! 

Sunday, October 19, 2014

Be Positive!

Be Positive

முன்பெல்லாம்,அதாவது ஏழெட்டு  வருடங்களுக்கு முன்பு வரை யாராவது, "அந்த கோவிலில் என்ன ஒரு வைப்ரேஷன்!" என்றால் எனக்கு அது புரியவே புரியாது. பாலகுமாரன் வேறு நல்ல அதிர்வுகள் என்று எழுதுவார். நல்ல அதிர்வா? அது எப்படி இருக்கும்? உடல் ஆடுமா? என்றெல்லாம் யோசிப்பேன். 

அந்த கட்டத்தில்தான் சுதர்சன் க்ரியா கற்றுக் கொண்டேன். அடடா என்ன அதிர்வு!! கற்றுக் கொண்டதோடு நிற்காமல் தினசரி செய்வதை பழக்கமாக்கிக் கொண்டேன்! நல்ல அதிர்வுகளை உணர ஆரம்பித்தேன். இந்த நல்ல அதிர்வுகளை கோவில்களில் மட்டுமல்லாமல் நல்ல மனிதர்களிடமும், நல்ல வீடுகளிலும், ஏன்? பூக்கள், பழங்கள், காய்கறிகளிலும் உணர முடிந்தது. 

இவை எல்லாம் உணரத் தொடங்கிய பொழுதுதான் .எதற்காக கோவில்களில் சுவாமிக்கு(சுவாமி சிலைகளுக்கு) பால்,தயிர்,தேன், பஞ்சாமிர்தம்(பழங்கள்)  இவைகளால் அபிஷேகம் செய்கிறார்கள் என்று புரிந்து கொள்ள முடிந்தது. பசும் பால், தயிர் இவைகளில் அபரிமிதமான நல்ல அதிர்வு உண்டு. அதைப் போலவே இயற்கை பொருள்களான தேன், சந்தனம் இவைகளிலும் நல்ல அதிர்வுகள் உண்டு. இவைகளைக் கொண்டு சிலைகளுக்கு அபிஷேகம் செய்யும் பொழுது அந்த நல்ல அதிர்வுகளை அந்த விக்ரகங்களும் பெற்று அதிக சக்தி உடையதாக ஆகின்றன. 

இதைப் போலவே ஆன்மீகத்தில் முன்னேற விரும்புகிறவர்கள் வெங்காயம், பூண்டு போன்றவைகளையும், முதல் நாள் சமைத்த பண்டங்களையும் தவிர்ப்பது நல்லது என்று கூறுவதற்கும் அர்த்தம் இருக்கிறது. மேற் சொன்ன காய்கறிகளில் நல்ல அதிர்வுகள் இருக்காது. அதே சமயம், திவசத்தன்று சமைக்க வேண்டிய காய்கறி களான அவரை, புடலை,பாகல் போன்றவற்றில் மிக நல்ல அதிர்வுகள் உண்டு. நாம் உண்ணும் உணவு வெறும் உடல் பலத்தை மட்டும் பெருக்காமல் ஆன்மீக பலத்தையும் பெருக்க வேண்டும் என்பதனால்தான் உணவில்  இத்தகைய கட்டுப்பாடுகளை விதித்துள்ளார்கள் நம் முன்னோர்.

நாதஸ்வரம், வீணை போன்ற கருவிகளின் ஓசையும் நல்ல அதிர்வுகளை உண்டாக்குவதால்தான் நாதஸ்வரத்தை மங்கள வாத்தியம் என்பதோடு சுப நிகழ்ச்சிகளின் பொழுது அதை இசைக்கிறோம். வீணைக்கும் தெய்வீகத்திற்கும் உள்ள சம்பந்தத்தை பற்றி தனி கட்டுரை எழுத வேண்டும். மணி ஓசைக்கு தீய சக்திகளை விரட்டும் ஆற்றல் உண்டு என்பதால்தான் பூஜை சமயத்தில் மணி ஓசை ஒலிக்கச் செய்கிறோம். தினசரி மணி அடித்தபடி வீட்டை சுற்றி வருவது வீட்டில் உள்ள தீய சக்திகளை விரட்டும். 

முடிந்த வரை பாசிடிவ் எனெர்ஜியை பெருக்கிக் கொள்வோமே!

Wednesday, October 1, 2014

இனித்திடும் இரவுகள்!

இனித்திடும் இரவுகள்!




ஒவ்வொரு பண்டிகையுமே அதனதன் அளவில் நமக்கு எதையோ போதிக்கின்றன.  நவராத்திரியோ வாழ்க்கைக்கு மிக மிக அவசியமான சகிப்புத் தன்மையையை வலியுறுத்துகிறது. ஆம், நவராத்திரியில் நாம் எத்தனை விஷயங்களை சகித்துக் கொள்கிறோம்..! 

முதலில் இடம்...! 
எங்களின் இளம் வயதில் பெரும்பாலான வீடுகளில் ரெடிமேட் படி இருக்காது. கட்டும் படிதான். வீட்டில் இருக்கும் பலகை, பெட்டி, ட்ரம்கள் மற்றும் ரேழியில் நாளை எண்ணிக் கொண்டிருக்கும் தாத்தா படுத்திருக்கும் பெஞ்ச் உட்பட.. இவற்றை கொண்டுதான் படி அமைக்கப் படும். தாத்தா கயிற்று கட்டிலுக்கு மாற்றப் படுவார். 
  
கிச்சனில் சாமான்கள் அடுக்க போடப் பட்டிருக்கும் பலகை உருவப் பட்டு ஒரு படியாகி விடும். சாமான்கள்? ஒரு வாரம்தானே கீழே இருந்தால் என்ன? கிச்சன் வரை யார்  வரப் போகிறார்கள்? அப்படியே வந்தாலும்தான்  என்ன? அவர்கள் வீட்டிலும் இதே நிலமைதனே?   இதில் ஒரே ஒரு கஷ்டம் கொலுவை எடுக்கும் வரை கருவடாம் பொரித்து சாப்பிட முடியாது. கருவடாம் டின் அடியில் மாட்டிக் கொண்டிருக்குமே!! 

பலகைகள் ஏறத்தாழ இல்லாமல் சமன் படுத்த சமயத்தில் குழந்தைகளின் நோட்டு புத்தகங்களை வைத்து விடுவார்கள். குழந்தைகளுக்கு சந்தோஷம்தான், பெரியவர்கள் அவர்களை படி படி என்று திட்ட திட்ட முடியாதே..! blessing in disguise!

இப்போது போல மூட்டு வலியால் பெரும்பாலனோர் அப்போது அவதிப் படவில்லை போலிருக்கிறது ஆகவே தரையில் ஒரு ஜமக்காளத்தை விரித்து விட்டால் வருபவர்கள் கீழே உட்கார்ந்து  விடுவார்கள். 

இப்போது, இருக்கும் இடத்தில் கொலுவிர்க்காக  கணிசமான இடத்தை ஒதுக்கிய பிறகு, மிஞ்சி இருக்கும் இடத்தில் சோபா, கட்டில், வாஷிங் மெஷின், ப்ரிட்ஜ்  இவற்றோடு நாம் அட்ஜஸ்ட் செய்து கொள்ள வேண்டும்.  

அடுத்தது டிரஸ்! 
நாங்கள் சிறுமிகளாக இருந்த பொழுது, ஒரு நாள் ராதா, ஒரு நாள் கிருஷ்ணர், ஒரு நாள் மடிசார்,இதிலும் (ஐயர் கட்டு, ஐயங்கார்  கட்டு என்று இரண்டு நாள் கட்டி விடுவார்கள்). அப்படியெல்லாம் இப்போது சிறுமிகளுக்கு யாரும் வேஷம் போட்டு விடுவதில்லையே ஏன்? அம்மாக்களுக்கே மடிசார் யாரோ ஒருவர் கட்டி விட வேண்டும் என்னும் போது அவர்கள் எப்படி மற்றவர்களுக்கு கட்டி விட முடியும் என்கிறீர்களோ? வாஸ்தவம்தான். இப்படி வேஷம் போட்டுக் கொள்ளாத நாளில் பட்டு பாவாடை  அணிந்து கொள்வோம். இருக்கும் இரண்டு பட்டுப் பாவாடைகளையே தினசரி கட்டிக் கொள்ள முடியுமா? "தரையில் புரள விடக் கூடாது, "அழுக்காக்கி விடக் கூடாது" என்று ஏக கண்டீஷன்களோடு  தன் பாவாடையை அக்கா ஒரு நாள் தருவாள். அதில்  எக்கச்சக்க எண்ணை தாளித்து பேப்பரில் கட்டி தந்த யார் வீட்டு சுண்டலோ   சர்வ நிச்சயமாக கொட்டும். அக்காவிற்கு தெரியாமல் நைசாக அவிழ்த்து வைத்து விடலாம் என்றால், நைட் ஷிப்ட் முடித்து வீடு திரும்பும் அப்பாவி ஐ.டி  இளைஞனை "ஊது" என்று ரவுசு பண்ணும் ராத்திரி ரோந்து போலிஸ் மாதிரி, "எங்க பாவாடையை அழுக்கு பண்ணிக்காமல் இருக்கியான்னு பார்க்கலாம்" என்று பாவாடையை அவிழ்க்கும் நேரத்தில் எங்கிருந்தோ ஆஜராவாள் அக்கா! சில நாட்கள் அம்மா தன்னுடைய பட்டுப்  புடவையை எங்கள் உயரத்திற்கு தோதாக மடித்து, இடுப்பில் ஒரு நாடாவை  கட்டி, அதில் புடவையை பாவாடை போல கொசுவி சொருகி விடுவாள். 

இன்றைய பெண்களுக்கு புடவை கட்டிக் கொள்ள வேண்டும் என்பதே ஒரு டாஸ்க் என்றால் எங்களுக்கு பிரச்சனை ப்ளௌஸ்! இந்த புடவையை கட்டிக் கொண்டு ரொம்ப நாட்களாகி விட்டதே, இன்றைக்கு கட்டிக் கொள்ளலாம் என்று ஒரு புடவையை எடுத்து வைப்போம் . பாழாய்ப் போன ப்ளௌஸ் முழங்கைக்கு மேல் ஏற மாட்டேன் என்கிறதே..!! ஒன்று அவசர அவசரமாக கையை பிரிக்க வேண்டும், அல்லது, வேறு புடவைக்கான ப்லௌசை இன்று போட்டுக் கொண்டு விட்டு, அந்த புடவை கட்டிக் கொள்ளும் போது 'ஞே' என்று முழிக்காமல் ஏதாவது அட்ஜஸ்ட் செய்ய வேண்டும். 

மிக மிக டேஞ்சரான அட்ஜஸ்ட்மென்ட் சாப்பாடும்,  சாப்பிடும் நேரமும். 
மஹாலய அமாவாசை அன்று பாயசத்தோடு துவங்கும் சாப்பாடு, புட்டு, ஒக்காரை, வெல்லம் போட்ட காராமணி, சுகியன், வடை, என்று விஜய தசமி வரை தினசரி ஹை கலோரி உணவுகள்,  அதுவும் பெரும்பாலும்  அகாலத்தில்தான். இவற்றை தவிர வாழைப் பழம், வெற்றிலை  பாக்கிற்காக போகும் இடங்களில்  காபி, டீ, ரோஸ் மில்க் வகையறாக்கள் நம் எடையை ஏற்றுவதில் கணிசமான பங்கு வகிக்கும்.  காலை  சாப்பாடு எப்படியோ கிடைத்து விடும். இரவுதான்... எல்லா வீடுகளிலிருந்தும் கலக்ட் செய்யப் படும் சுண்டல், பழங்களை(பழம் கள் இல்லை) ருசி  பார்த்து, ராத்திரிக்கு ஒண்ணும் வேண்டாம், வயிறு புல் என்று ஜம்பமாக கூறியவர்கள் அர்த்த ராத்திரியில் பிரிஜ்ஜை குடைந்து கொண்டு நிற்பார்கள். இல்லாவிட்டால் காலையில் காபி குடிக்கும் பொழுதே பசி பிராண்டும். 



அடுத்த ரொம்ப சிறப்பான அட்ஜஸ்ட்மென்ட் டைம் மானேஜ்மென்ட். 
இந்த ஒன்பது  அல்லது பத்து நாட்களுக்கு மட்டும் நமக்கு எப்படி பூஜை செய்யவும்,கோவிலுக்கு போகவும், உறவினர்கள் மற்றும் நண்பர்கள் வீடுகளுக்கு விசிட் செய்யவும், நம்மையும் வீட்டையும் அழகாக அலங்கரித்துக் கொள்ளவும்(அடடா இந்த அழகுணர்ச்சி வருடம் முழுவதும் இருந்தால் எப்படி இருக்கும்!!) நேரம் கிடைக்கிறதே!! இதில் டி.வீ. சீரியல்களையும் விட்டு வைப்பதில்லை. மேலே குறிப்பிட்ட எல்லாவற்றிலும் நமக்குள் ஒளிந்திருக்கும் திறமை வெளிக் கொணரப் படுகிறது. எப்படியோ அட்ஜஸ்ட் செய்து எல்லாவற்றையும் செய்கிறோம்.

இந்த  நவராத்திரி காலத்தில் நம் தந்தை குலத்தின் சகிப்புத் தன்மையை  பாராட்டியே தீர வேண்டும். இந்த வருடம் சிம்பிளாக கொலு வைக்கலாம் என்று தொடங்கும் கொலு எந்த வருடம் சிம்பிளாக முடிந்திருக்கிறது?  கொஞ்சமாக கொஞ்சமாக சேரும் பொம்மைகள், அலங்கார பொருள்கள், ரிடன் கிப்ட்,  மளிகையில் உபரி செலவு, வெளியே போய் வர ஆகும் செலவு என்று அடுத்தடுத்து மனைவிமார்கள் போடும் குண்டுகளால்  பெரிதும்  பாதிக்கப் படுவதலோ என்னவோ, குடும்பத் தலைவர்கள் வாய் மூடி மௌனியாகி விடுகின்றனர். அப்புறம் என்ன பெண்கள் ஜாம் ஜாமென்று நவராத்திரி கொண்டாடுகிறோம்.

"தந்தது என்தன்னை, கொண்டது நின் தன்னை, சதுரர் எவர் கொலோ சங்கரா?" (குறைகள்  உடைய என்னை உனக்குத்  தந்தேன், நிறைவான,  பூரனனான உன்னை பெற்றுக் கொண்டேன், நம் இருவரில் யார் சாமர்த்தியம் மிக்கவர்கள்?) என்று மாணிக்க வாசகர்  சிவபெருமானிடம் வினவியது போல இந்த பத்து நாட்கள் நாம் சில சின்ன விஷயங்களை விட்டு கொடுத்து அட்ஜஸ்ட் செய்து கொள்வதால் பல சந்தோஷங்களையும் புண்ணியங்களையும்{??)  அடைகிறோம். எனவே இனிய நவராத்திரிக்கு நன்றி கூறி மீண்டும் மீண்டும் வருக என்று வரவேற்போம்!

Wednesday, September 10, 2014

சினிமாவில் வராத கவுண்டமணி செந்தில் காட்சி!

சினிமாவில்  வராத கவுண்டமணி  செந்தில் காட்சி!



கவுண்டமணி: ஏண்டா நாயே! என்னடா சொன்ன என்கிட்ட? சொல்லுவியாடா ? சொல்லுவியாடா? (செந்திலை அடிக்க ஓடுகிறார்)

அண்ணே! ஏன் அண்ணே அவனை அடிக்கிறீங்க?

இந்த நாய் கிட்ட நான் என்ன கேட்டேன்,  இவன் என்ன பண்ணியிருக்கான்? கேளுங்க...

அப்படி என்னப்பா செஞ்ச?  அண்ணன் உன்கிட்ட என்னப்பா சொன்னாரு?

அவரு தங்கச்சிக்கு பையன்  பாக்க சொன்னாரு..

அவ்வளவுதானே? பாத்தியா?

பார்த்தேன்,

அவுரு எப்படி  சொன்னாரு, நீ எப்படி பார்த்த?

அவரு சொன்ன மாதிரியே நல்ல ஹீ..

கவுண்டமணி: டேய்! வேணாம் சொல்லாத, படுவா..

அண்ணே, விடுங்கண்ணே, நீ சொல்லுப்பா,  எந்த மாதிரி பையன் பார்த்த..?

நல்ல ஹீரோ மாதிரி மாப்பிளைதான் பார்த்தேன்.

டேய்!  மறுபடியும் அதயே சொல்ற,,?

அண்ணே!  நீங்க சொன்ன மாதிரிதானே பாத்துருக்கான், அப்புறம் ஏன் போட்டு அடிக்கிறீங்க?

கவுண்டமணி(லேசான அழுகையோடு): நீங்களே சொல்லுங்க ஹீரோ இப்படியா  இருப்பான்? அவர் கை காட்டும் இடத்தில், நபர் அழுக்காக, பரட்டை தலை, லுங்கி, வாயில் பீடி, எட்டு நாள்  மீசையோடு, போதையில் சொருகும் கண்களோடு, கேட்ட வார்த்தை பேசியபடி இருக்கிறான். அவனைக்கண்டு அதிர்ந்து போனவர்கள் செந்தில் பக்கம் திரும்பி,

என்னப்பா இது?

என்னங்க? இவர் ஹீரோ மாதிரின்னு சொன்னாரே தவிர, எந்த கால ஹீரோன்னு சொன்னாரா? இப்போல்லாம் ஹீரோ இப்படித்தானே இருக்காங்க?

கவுண்டமணி: டேய்! வேண்டாம், ஓடிப் போயிடு... அடிக்க வர, செந்தில் தப்பித்து ஓடுகிறார்..



   



Monday, August 18, 2014

நினைவலைகள்!

நினைவலைகள்! 

எல்லா பண்டிகைகளின் பொழுதும் அம்மாவின் நினைவு வரும். குறிப்பாக கோகுலஷ்டமியிலும், நவராத்திரியிலும்,  தீபாவளியின் பொழுதும் அம்மாவின் நினைவை தவிர்க்கவே முடியாது. 

அம்மாவின் இஷ்ட தெய்வம் ஸ்ரீ குருவாயூரப்பன் என்பதால் அதிக பட்ச ஈடுபாட்டோடு பட்சணங்கள் செய்வாள். அன்று முழுவதும் முழு பட்டினி! ஜுரம் வந்தது போல வித விதமான பலகாரங்கள் அலுக்காமல் சலிக்காமல் செய்து  கொண்டே இருப்பாள். ஓரிரு முறை தானே நெல்லை ஊற வைத்து, உரலில் இடித்து வீட்டிலேயே அவல் கூட தயாரித்திருக்கிறாள்! ஒவ்வொரு செயலிலும் தென்படும் கிருஷ்ணனின் மீதான அம்மாவின் அன்பு! மற்றபடி உட்கார்ந்து  சுலோகம் சொல்வதோ பூஜை செய்வதோ அம்மாவின் வழக்கம் இல்லை. பூஜைக்கான அத்தனை ஏற்பாடுகளையும் செய்து கொடுப்பாள். நாங்கள் பஜனை செய்வோம்! 

இதைப் போலவே நவராத்திரி! ஒன்பது படி கட்டி, அழகாக பார்க் அமைத்து கொலு வைப்பாள். வைதீகர் ஒருவரை வைத்து தேவி மஹாத்மியம் பாராயனதிற்க்கு ஏற்பாடு செய்வாள். அந்த சிறப்பு பூஜைக்கான ஏற்பாடுகள். அதைத் தவிர தினசரி வீட்டில் உள்ளவர்கள் செய்யும் பூஜைக்கான ஏற்பாடு, பாயசம் வடையோடு சமையல், மாலையில் சுண்டல், வெள்ளிக்கிழமை அன்று புட்டு, இதற்க்கு நடுவில் எங்களுக்கு ஒவ்வொரு நாளும் ஒரு வேடம், வருபவர்களுக்கு வெற்றிலை பாக்கு வழங்குவது, தானும் மற்றவர் வீடுகளுக்கு செல்வது, என்று எத்தனை விஷயங்களை அனாயசமாக செய்திருக்கிறாள்..! இத்தனைக்கும் இப்போது போல மிக்ஸி, கிரைண்டர் போன்ற வசதிகள் கிடையாது.  ஏன் தண்ணீர் கூட வெளியிலிருந்து பிடித்துக் கொண்டு வர வேண்டும். இதில் வெள்ளிக் கிழமை அன்று ஒரு சுமங்கலியை சாப்பிட சொல்லி புடவை வைத்து கொடுப்பதும் நடக்கும். 

தீபாவளி அன்றும் அம்மாவுக்கு பட்சண ஜுரம் பிடிக்கும். அதற்க்கு நடுவில் எங்களுக்கு டிரஸ் கூட தைத்து கொடுத்திருக்கிறாள். விடியல் காலை தீபாவளி மருந்து கிளறி விட்டு, சுடச் சுட மைசூர்பாக் கிளறி கொட்டுவது அம்மாவின் வாடிக்கை. எங்களையெல்லாம் எண்ணை தேய்த்து குளிக்க வைத்து, புதிது அணியச் செய்து, நாங்கள் ஒரு கோர்ஸ் பட்டாசு வெடித்து விட்டு உள்ளே வந்ததும் எங்களுக்கு காபி கொடுத்து விட்டு துலா ஸ்நானம்  செய்ய காவிரிக்கு கிளம்பி விடுவாள். வீட்டில்  வேலை செய்பவர் உட்பட அத்தனை பேருக்கும் புது துணி வாங்கி கொடுக்கும் அம்மா ஒரு முறை கூட புதுசு அணிந்து கொண்டதாக எனக்கு ஞாபகம் இல்லை. நாங்கள் யாரும், "உனக்கு என்னம்மா வாங்கிக் கொண்டாய்"? என்று கேட்டதும் இல்லை. 

Saturday, July 19, 2014

அரிமா நம்பி! - review

அரிமா நம்பி!


ஒரு பப்பில்(PUB) முதல் நாள் இரவு அறிமுகம் ஆகும் விக்ரம் பிரபுவும், பிரியா ஆனந்தும் உடனே காதலில் விழுந்து  மறுநாளும் ஒரு ரெஸ்டாரெண்டில் சந்தித்து, "பார் மூடும் நேரமாகி விட்டது சார்" என்று சர்வர் கூறும் வரை குடித்து, குடியைத் தொடர(அடடா!) ப்ரியாவின் வீட்டிற்க்குச் செல்கிறார்கள். அங்கு அவர் கடத்தப் பட, அதன் பின்னணி என்ன? அவரை அரிமா நம்பி மீட்டாரா? என்பதுதான் கதை. அரிமா என்றால் சிங்கம், நம்பி என்பது இளைஞன் என்பதைக் குறிக்கும் தமிழ்ச் சொல்.           

A.R. முருகதாசின் சீடர் ஆனந்த் சங்கர் இயக்கி இருக்கும் முதல் படம். குருவிற்கு ஏற்ற சீடராக படத்தை விறுவிறுவென்று கொண்டு சென்றிருக்கிறார்! படம் ஆரம்பித்த பத்தாவது நிமிடம் தீயாக பற்றிக் கொள்ளும் பரபரப்பு இறுதி வரை நீடித்திருப்பது ஒரு சிறப்பு. ட்ரம்ஸ் சிவமணி இசைஅமைப்பாளராக அறிமுகம். பாடல்களில் இன்னும் கொஞ்சம் கவனம் செலுத்தி இருக்கலாம். 

பொதுவாக இந்த மாதிரி   படங்களில் கதா நாயகிக்கு பெரிதாக நடிக்க வாய்ப்பு இருக்காது, இதில் கதா நாயகனுக்கும் இல்லை. சமீபத்திய ந ம்பிக்கை நட்சத்திரமான விக்ரம் பிரபு ஓடுகிறார், துரத்துகிறார், சண்டை போடுகிறார். கொஞ்சம் காதலிக்கவும் கற்றுக் கொள்ளலாம்.

அதென்ன பிரியா ஆனந்த் எல்லா படங்களிலும் ஹீரோவோடு சேர்ந்து   மட்டையாகிற அளவுக்கு குடிக்கிறார்? நவீன பெண்கள் எல்லோருமே இப்படித்தான் இருக்கிறார்களா என்ன? 

சின்ன  ரோலில் வந்தாலும் எம்.எஸ்.பாஸ்கர் மனதில் நிற்கிறார். 

பிரியா ஆனந்த் குடியிருக்கும் அபார்ட்மெண்ட் சர்வேயலென்ஸ் காமிராவில் பிரியா ஆனந்தும் விக்ரம் பிரபுவும் பதிவாகாமல் போனது எப்படி? ஒரு பெரிய சேனலின் சி.ஈ.வோ.வின் வீடு இப்படியா கை வைத்ததும் திறந்து கொள்ள கூடியதாய் காவல் எதுவும் இல்லாமல் அனாமத்தாய் இருக்கும்? அதன் வாசலில் பார்க் செய்யப் பட்டிருக்கும் விக்ரம் பிரபுவின் பைக்  வில்லன் கையாட்களின் கண்களில் படாதது எப்படி? எந்த சென்ட்ரல் மினிஸ்டர் ஐ.ஜி. ஆபீசில் உட்கார்ந்து வில்லனைத் தேடுவார்? அங்கு  உண்மைக்கு வெகு அருகில் வந்து விடும் இளம் போலிஸ் அதிகாரியை வெகு அலட்சியமாக கொலை செய்கிறாரே அது அவ்வளவுதானா? 
தனக்கு எல்லாமே தன தந்தைதான் எனும் கதாநாயகி அவர் கொடூரமாக கொலை செய்யப் பட்டிருக்கிறார் என்று அறியும் போது ஏதோ நாலு வீடு  இருக்கும் அங்கிள் இறந்து போனது போல ஏனோ தானோ என்றுதான் கண்ணீர் வடிப்பாரா? என்பது போன்ற கேள்விகளை மறக்கடிக்கிறது படத்தின் விறுவிறுப்பு!