கணம்தோறும் பிறக்கிறேன் 

Friday, October 4, 2013

மஹாலய அமாவாசையும் மாடும்!
இன்றைக்கு மகாளய அமாவாசை! இன்று பசு மாட்டிற்கு அகத்தி கீரை கொடுப்பது நல்லது என்று ஏதாவது புத்தகத்தில் படித்திருப்பேன் அல்லது டி.வீ. சானெல் எதிலாவது யாராவது கூறியிருப்பார்கள்... அது நினைவுக்கு வரவே கே.கே.நகரில் இருக்கும் ஐயப்பன் கோவிலில் இருக்கும் மாடுகளுக்கு அகத்தி கீரை கொடுக்கலாம் என்று நானும் என் மகனும் ஒரு கட்டு  அகத்தி கீரை வாங்கிக் கொண்டு சென்றோம்.
என் மகனுக்கு ஒரு கட்டு என்பது ரொம்பவும் குறைந்த அளவு என்று தோன்றியது. கோவில் வாசலிலே அகத்தி கீரை விற்பார்கள், வாங்கிக் கொள்ளலாம் என்று நினைத்தேன். ஆனால் என் நினைப்பு எவ்வளவு தவறு என்பது அங்கே போனதும்தான் தெரிந்தது. எனக்கு முன்னாலேயே பலர் அங்கு விற்றுக் கொண்டிருந்த அகத்தி கீரை அனைத்தையும் வாங்கி மாடுகளுக்கு போட்டு விட்டனர். என் மகன் நீட்டிய அகத்தி கீரை கட்டை முகர்ந்து பார்த்த மாடு முகத்தை திருப்பி கொண்டு விட்டது. கொட்டிலில் வைக்கோல் போடும் இடம் முழுவதும் அகத்தி கீரையாகவே இருந்தால் அது என்னதான் செய்யும்?
சரி நம் வீட்டுக்கு வரும் வழியில் ஒரு வீட்டு வாசலில் மாடு கட்டியிருப்பார்கள், அங்கு போட்டு விடலாம் என்று திரும்பினோம். அங்கும் சிலர் அகத்திகீரை கட்டை போட்டிருந்தார்கள் என்றாலும் கீரை அதுவரை திகட்டாததால் நாங்கள் கொடுத்ததை சாப்பிட்டது. எங்களுக்கு பின்னாலேயே இன்னொருவர் கீரை கட்டோடு வந்தார்... அடுத்த முறை  கொஞ்சம்  ஜாக்கிரதையாகத்தான் இருக்க வேண்டும்
அகத்தி கீரை போடப் போனால் நம்மை மாடு முட்டினாலும் ஆச்சர்யமில்லை.

Wednesday, October 2, 2013

பெரியோரைப் போற்றுவோம்!

பெரியோரைப் போற்றுவோம்!
 
 
 
அகில இந்திய காங்கிரெஸ் கமிட்டி அந்த இளைஞருக்கு மாதம் பதினைந்து ரூபாய் சம்பளமாக கொடுத்து வந்தது. அதை வைத்துக் கொண்டுதான் குடும்பத்தை ஓட்ட வேண்டும். ஒரு சமயம் எதிர் பாராத திடீர் செலவு வந்தது எப்படி சமாளிப்பது என்று அவர் குழம்பிய பொழுது அவர் மனைவி, "என்னிடம் கொஞ்சம் பணம் இருக்கிறது அதை வைத்துக் கொண்டு சமாளிப்போம்" என்று தன்னிடம் இருந்த பணத்தை எடுத்துத் தந்தார். இவருக்கோ ஆச்சர்யம், "உன்னிடம் ஏது பணம்"? என்று எல்லா கணவன்மார்களையும் போலவே கேட்க, "நீங்கள் தந்த பதினைந்து ரூபாயில் பன்னிரண்டு ரூபாய்  மட்டும் செலவழித்து விட்டு மிச்சம் மூன்று  ரூபாயை சேமித்து வந்தேன்" என்றார். அப்படியா என்று கேட்டுக் கொண்ட அவர் உடனே காங்கிரெஸ் கமிட்டிக்கு ஒரு கடிதம் எழுதினார் என்னவென்று தெரியுமா? "ஐயா! நீங்கள் எனக்கு தரும் சம்பளம் அதிகம் எங்கள் குடும்ப செலவிற்கு ரூ.பன்னிரண்டு  மட்டும் போதும். எனவே அடுத்த மாதம் முதல் ரூ.பன்னிரண்டு  மட்டும் அனுப்புங்கள்" என்று!!! நம்ப முடிகிறதா? அதனால்தான்  பிரதமராக பணியாற்றிய அவர் இறந்த பொழுது அவர் கடனில் அம்பாசிடர் கார் வாங்கிய நிலுவை பாக்கி இருந்தது.  
 
இப்படி பட்ட எளிய, நேர்மையான மா மனிதர் திரு.லால் பகதூர் சாஸ்திரி. அவருக்கும் இன்றுதான் பிறந்த நாள் (அக்டோபர் இரண்டு). இன்று அவரையும் நினைவு கூர்வோம்! 
 
இன்றைய அரசியல் வாரிசுகள் எந்த வியக்கும் செல்லாமல் கோடி கணக்கில் செலவழித்து சினிமா எடுக்கிறார்கள். அவர்கள் வாங்கியிருக்கும் ஆடம்பர கார்களை நிறுத்துவதற்கே கிழக்கு கடற்கரை சாலையில் நிலங்களை வாங்குகிறார்கள்.  இந்த சூழலில் லால் பகதூர் சாஸ்திரி போல ஒருவர் நம் நாட்டு பிரதமராக இருந்திருக்கிறார் என்பதே ஆச்சர்யமாக இருக்கும். சரித்திரம் தன்னைத் தானே புரட்டிப் போட்டுக் கொள்ளும் என்பார்கள்(history repeats itself) என்பார்கள். அப்படி புரட்டிப் போட்டுக் கொள்ளட்டும் மீண்டும் நமக்கு உன்னதமான தலைவர்கள் கிடைக்கட்டும் என்று இந்த நாளில் வேண்டிக் கொள்வோம்!
  

Thursday, July 25, 2013

படித்ததில் பிடித்தது!

படித்ததில் பிடித்தது!


சமீபத்தில் இரண்டு புத்தகங்கள் படித்தேன். ஒன்று சுஜாதாவின் 'கற்றதும் பெற்றதும்' இரண்டாம் பாகம், மற்றது  சென்னை உயர் நீதி மன்றத்தில் வழக்கறிஞராக இருக்கும் திரு.SP.சொக்கலிங்கம் அவர்கள் எழுதியுள்ள 'பிரபல கொலை வழக்குகள்' என்னும் புத்தகம்.

கற்றதும் பெற்றதும்:

ஆனந்த விகடனில் தொடர் கட்டுரைகளாக வந்த பொழுது இருந்த சுவாரஸ்யம் அத்தனை கட்டுரைகளையும் மொத்தமாக படிக்கும் பொழுது இல்லை. ஒரு புத்தகம் வெளியிட்டதுமே குறிப்பாக கவிதை தொகுப்பு தனக்கு அனுப்பிவிடுவதாக மீண்டும் மீண்டும் பல இடங்களில் குறை பட்டுக்கொண்டிருக்கிறார். அதைப்போலவே அசல் ஹைகூவிற்க்கும் ஹைக்கூ என்று நினைத்துக் கொண்டு அடுக்கப்படும் வார்த்தைகளுக்கும் உள்ள வித்தியாசத்தை விளக்க பல முறை முயன்றிருக்கிறார். சுவாரஸ்யமான இரண்டு விஞ்ஞான கட்டுரைகள். வீரமாமுனிவர் தமிழில் மட்டுமில்லை மத மாற்றத்திலும் வல்லவராக இருந்திருக்கிறார் என்னும் புது விஷயத்தையும் அவருடைய பரமார்த்த குரு கதைகள் இந்து மத சாமியார்களையும் நம்பிக்கைகளையும் கேலி செய்து எழுதப்பட்டவை என்பதும் கொஞ்சம் அதிர்ச்சி அளித்தன.

 பிரபல கொலை வழக்குகள்:

ஒவ்வொரு கால கட்டத்திலும் பல் வேறு ஸ்வாரஸ்யமான வழக்குகள் நீதி மன்றத்தில் அரங்கேறிக் கொண்டுதான் இருக்கின்றன. நாம் அவற்றைப்  பற்றி கொஞ்ச நாள் பேசி விட்டு, அடுத்த பரபரப்பு செய்தி வந்தவுடன் மறந்து விடுகிறோம். அப்படி பேசப்பட்ட சில வழக்குகளைப் பற்றி துப்பறியும் நாவல் போல விவரித்துள்ளார் புத்தகாசிரியர்.

நமக்கு கொஞ்சம் பரிச்சயமான வாஞ்சிநாதன் சம்பந்தப்பட்ட  ஆஷ் கொலை வழக்கு, லக்ஷ்மிகாந்தன் கொலை வழக்கு, எம்.ஜி.ஆர் சுடப்பட்ட வழக்கு இவைகளோடு   சிங்கம்பட்டி கொலை வழக்கு, பாவ்லா கொலை வழக்கு, ஆளவந்தான் கொலை வழக்கு, பகூர் கொலை வழக்கு, நானாவதி கொலை வழக்கு, விஷ ஊசி வழக்கு மற்றும் மர்ம சன்யாசி வழக்கு என்று மொத்தம் பத்து கொலை வழக்குகளைப் பற்றி சரளமான நடையில் விறுவிறுப்பு குறையாமல் எழுதப் பட்டிருப்பதால் புத்தகத்தை கையில் எடுத்து விட்டால் கீழே  வைக்க முடியவில்லை. நூலாசிரியர் வக்கீலாக இருந்தாலும் வழக்கு சம்பத்தப்பட்ட தொழில் நுட்ப தகவல்களை அளவுக்கு அதிகமாக தராமல் வாசகர்களுக்கு எவ்வளவு கொடுத்தால் அவர்களால் உள் வாங்கிக் கொள்ள முடியுமோ அவ்வளவு மட்டும் விஷய தானம் செய்திருப்பது ஒரு சிறப்பு. சம்பவங்களால் பிரபலமான வழக்குகள், பிரபலமான மனிதர்கள் சம்பந்தபட்டிருப்பதால் பிரபலமான வழக்குகள் என இரண்டு வகையான வழக்குகளையும் சேர்த்திருப்பது இன்னும் ஒரு சிறப்பு.

ஆஷ் துரை கொலை வழக்கில் முதல் தீர்ப்பை எதிர்த்து மறு ஆய்விற்காக சென்னை உயர் நீதி மன்றத்தில் மனு தாக்கல் செய்யப் பட்ட பொழுது அதை விசாரணை செய்த ஐந்து நீதிபதிகள் அடங்கிய பெஞ்சில் P.R.சுந்தரம் ஐயரும் ஒருவர் என்பதும் அவர் குற்றவாளிகளுக்கு வழங்கப்பட்ட தீர்ப்பு செல்லுபடியாகுமா என்று சந்தேகம் தெரிவித்தார் என்பதையும்  அறிய ஸ்வாரஸ்யமாக இருக்கிறது.

எம்.ஜி.ஆர். சுடப்பட்ட வழக்கில் எம்.ஜி.ஆரை சுட்டுவிட்டு தன்னையும் சுட்டுக் கொண்டார்  எம்.ஆர். ராதா. ஆனால் ஆச்சர்யம்  இருவருக்கும் உயிர் போகவில்லை. காரணம் 17 ஆண்டுகளுக்கு முன்னால் வாங்கப்பட்டு எம்.ஆர்.ராதாவின் மேஜை டிராயரில் வைக்கப்பட்டிருந்த அந்த குண்டுகள் ஒவ்வொரு முறை மேஜை டிராயர் திறந்து மூடப்பட்ட பொழுதும் அதிர்ச்சிக்கு உள்ளானதால் தன் வீர்யத்தை இழந்து விட்டிருக்கின்றன எனவே துப்பாக்கியிலிருந்து வெளிப்பட்ட பொழுது அவைகளால் போதுமான வேகத்தில் சென்று இலக்கை தாக்க முடியவில்லை என்னும் தகவல் மற்றொரு ஆச்சர்யம்.

அந்தக் கால சூப்பர் ஸ்டார்களான எம்.கே. தியாகராஜ பாகவதரும் என்.எஸ்.கிருஷ்ணனும் சம்பத்தப்பட்ட லக்ஷ்மிகாந்தன் கொலை வழக்கு மேல் முறையீடிர்க்காக   சென்னை உயர் நீதி மன்றத்தில் விசாரணைக்காக வந்த பொழுது அதை விசாரித்த நீதிபதிகளுள் ஒருவராக இருந்த ஷஹாபுதீன் பிரிவினைக்குப் பின் பாகிஸ்தான் சென்று அங்கு உயர் நீதி மன்றத்தில் நீதிபதியாக பணியாற்றி ஒய்வு பெற்றார் என்பதை அறிய ஆச்சர்யமாக இருக்கிறது என்றால் அதை விட ஆச்சர்யம் லக்ஷ்மிகாந்தனை  கொலை செய்தது யார் என்பது இன்றளவும் மர்மமாகவே உள்ளது என்னும் செய்தி.

நானாவதி கொலை வழக்கு விசாரணை 1959ஆம் ஆண்டு நடை பெற்ற பொழுது அஹுஜா டவல்களும் நானாவதி  விளையாட்டு துப்பாக்கிகளும் அமோகமாக விற்பனையாகினவாம்.

பாவ்லா கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்காக ஆஜரானவர் முகமது அலி ஜின்னா, அனால் அவரால் இந்த கேசில் வெற்றி அடைய முடியவில்லை.

எல்லாவற்றையும் விட மிக மிக சுவாரஸ்யமானது இறந்து விட்டதாக கருதப்பட்ட ஜமீன் வாரிசு மீண்டு வந்த 'மர்ம சாமியார்' வழக்கு. தற்போதைய பங்களா தேஷின் டாக்காவில் இருந்த மேஜோ குமார் என்னும் ஜமீன் இளவரசரைப் பற்றி living with the Himalayan Masters என்னும் புத்தகம் படித்தவர்கள் அறிந்திருக்கலாம். எனக்கு நான் மிகச்  சிறிய வயதில் பார்த்த 'இதய கமலம்' படம்தான் நினைவுக்கு வந்தது.  உண்மை கற்பனையை விட விநோதமானது என்பதை மெய்ப்பிக்கும் நிகழ்வுகள்.

நல்ல புத்தகம்! கிழக்கு பதிப்பகத்தின் வெளியீடு. ஆசிரியர் எஸ்.பி.சொக்கலிங்கம்.

     






   

Tuesday, June 18, 2013

கொடுமை கொடுமை என்று கோவிலுக்குப் போனால்...

கொடுமை கொடுமை என்று கோவிலுக்குப் போனால்...
 
 
இப்போதெல்லாம் தொலை  காட்சியில் நிறைய ஜோதிட நிகழ்சிகள் இடம் பெறுகின்றன. அதில் ஜாதகத்தில் என்னென்ன  தோஷங்கள் இருந்தால்  எந்தெந்த கோவில்களுக்குச் செல்ல வேண்டும் என்று கூறுகிறார்கள். அதைத் தவிர கோவில்களைப் பற்றி சிறப்பு நிகழ்சிகளும் காண்பிக்கப்படுகின்றன. அவைகளிலும் அந்த ஆலயங்களில் சென்று வழி படுவதால் ஒருவருக்கு என்ன நன்மைகள் நடக்கும் என்று சிறப்பித்து சொல்கிறார்கள். இந்த நிகழ்சிகளைப் பார்க்கும் மக்கள் எப்படியாவது தன்  துன்பம் தீராதா என்ற ஆதங்கத்தோடு அந்த கோவிலுக்குச்  செல்கிறார்கள். ஆனால் அங்கு நடப்பது என்ன? பெரும்பாலான பெரிய கோவில்களில் அர்ச்சனை செய்வதே கிடையாது. நாம் வாங்கிச்  செல்லும் தேங்காயை வெளியிலேயே உடைத்து விட்டு நம்மிடம் திருப்பித்  தந்து விடுகிறார்கள்.
 
கடவுளுக்கு மாலை சாற்றுவது மிகவும் சிறப்பு என்று ஒரு புத்தகத்தில் படித்தேன் எனவே திருச்சிக்கு அருகில் உள்ள அந்த பிரசித்தி பெற்ற அம்மன் கோவிலுக்குச் சென்ற பொழுது மாலை வாங்கி சென்றேன் ஆனால் அங்கிருந்த அர்ச்சகரோ மாலையிலிருந்து ஒரு ரோஜாப் பூவை பிய்த்து என் கையில் கொடுத்து விட்டு மாலையை நின்று கொண்டிருந்த இடத்தில் இருந்த படியே சந்நிதியை நோக்கி விட்டெரிந்தர் அது அம்மன் காலடியில் போய் விழுந்தது. நான் மனம் நொந்து போனேன்.
 
இன்னொரு முறை சங்கடஹர சதுர்த்தி அன்று விநாயகருக்கு தேங்காய் மாலை சாற்ற சொன்னதால் தேங்காய் மாலை வாங்கிக்கொண்டு கோவிலுக்குச் சென்றேன். அங்கு, "நாங்கள் ஏற்கனவே ஒரு மாலை சாற்றி விட்டோம் எனவே இதை நாளை சாற்றுகிறோம் என்றார்கள்". சதுர்த்தி அன்று சாற்ற வேண்டிய மாலையை அவர்கள் மறு நாள் சாற்றுவர்களாம்...!
அதை விட கொடுமை அன்றைக்கு விநாயகருக்கு அர்ச்சனை செய்ய அர்ச்சனை தட்டு வாங்கிக்   கொண்டு சென்றோம். அவர்கள் அஷ்டோத்திரம்(108) சொல்லி  அர்ச்சனை செய்யாமல் விநாயகருக்கு உரிய ஷோடச நாமாக்களை (16 மட்டும்) சொல்லி அர்ச்சித்து கொடுத்து விட்டார்கள். இதன்  பிறகும் நமக்கு அர்ச்சனை செய்ய வேண்டும் என்று தோன்றுமா? ஒரு வேளை விளக்கு ஏற்றக் கூட வழி இல்லாமல் இருந்த கோவில்களில் இன்று கும்பல் நெரிகிறது, அதை நல விதமாக அங்குள்ளோர் பயன் படுத்திக்கொண்டால் பக்தர்களுக்கும் மனம் நிறையும் கோவில்களும் செழிக்கும்!

Wednesday, May 29, 2013

குருவே சரணம்!

குருவே சரணம்!


இன்று (28.5.2013)வாக்கிய பஞ்சாங்க கணிப்பின்படி  குரு பெயர்ச்சி! திருக்கணித காரர்கள் 24ம் தேதியே குரு பெயர்ந்து விட்டார் என்கிறார்கள். எப்படியோ, இது வரை ரிஷப ராசியில் இருந்த குரு  பகவான் மிதுன  ராசிக்கு மாறுகிறார்.

ஆங்கிலத்தில் ஜுபிடர் என்று அறியப்படும் கிரகத்தை நாம் குரு என்கிறோம். தேவர்களின் ஆச்சர்யனாக(ப்ரஹஸ்பதி)  விளங்குவதால்  குரு  என  அறியப்படுகிறார். பொன் வண்ண நிறத்தில் விளங்குவதால் 'பொன்னன்' என்றும் 'வியாழன்' என்ற பெயர்களாலும் அழைக்கப்படுகிறார்.

சிலர் குரு பகவானும்  தக்ஷிணாமூர்த்தியும் ஒன்று என்று நினைத்துக் கொள்கின்றனர். தக்ஷிணாமூர்த்தி சிவ பெருமானின் ஒரு ரூபம். தேவர்களின் குருவாகிய ப்ரஹஸ்பதி சிவ பெருமானை வழிபட்டு அவரால் "குரு" என்று
அழைக்கப்பட்டு நவ கிரகங்களில் ஒன்றானவர்.

குரு வழிபட்ட தலங்களுள் முக்கியமானவை குருவாயூர், காஞ்சீபுரம் வரதராஜ பெருமாள் கோவில், சென்னைக்கு அருகில்  உள்ள பாடி,  தஞ்சாவூருக்கு  அருகில் உள்ள திட்டை, முதலிய கோவில்கள் ஆகும். ஆலங்குடியில்  தட்சிணாமூர்த்தியே குரு  வடிவாக வணங்கப் படுகிறார்.

குருவிற்கு உரிய மூலிகை : பொன் ஆவரை
திசை                                            :  வட கிழக்கு என்னும் ஈசான்யம்
உலோகம்                                  :   தங்கம்
நிறம்                                            :  மஞ்சள்
மரம்                                             :  சந்தனம்
சமித்து                                        :  அரசு(அரச மர பட்டை/குச்சி)
குருவிற்குரிய தலம்             :  திருச்செந்தூர்




 

Sunday, May 26, 2013

கொஞ்ச நாட்களாக ஏனோ சலிப்பு! ப்ளாக் எழுத அலுப்பாக இருந்தது. ஆமாம், நான் எழுதி என்ன சாதிக்கப் போகிறேன்? என்று தோன்றியது. மழை யாருக்காக பொழிகிறது? இதோ இந்த வேப்ப மரத்திலிருந்து கூவுகிறதே ஒரு குயில் அது கை தட்டலை எதிர் பார்த்தா கூவுகிறது? என்றெல்லாம் என்னை நானே தேற்றிக் கொண்டு தமிழ் கூறும் நல்லுலகத்திற்கு தொண்டாற்ற வந்து விட்டேன்.

மீண்டும் திருவண்ணாமலை பயணம். இந்த முறை விடி காலை 4.30 மணிக்கு பஸ்சில் ஏறி விட்டோம்!!  அதி காலையில் சாலைகளில் போக்குவரத்து குறைவாக இருக்கும் என்பது பொய்யாய், பழங்கதையாய் போய்க் கொண்டிருக்கிறது!பேருந்தில் நல்ல கூட்டம், டோல் கேட்டில் வாகன நெரிசல், கடக்க 10 நிமிடங்களாகியது. 

அந்த விடிகாலை நேரத்தில் பஸ்சில் சினிமா பாடல்களை அலற விட்டார்கள். மற்றவர்களின் மௌனத்தில் இப்படி அத்து மீறி பிரவேசிக்கும் நம்மவர்களின் அதிரடி உரிமை என்னை எப்போதுமே ஆச்சர்யப்படுத்தும். நல்ல வேளை  போட்டது எல்லாம் எம்.ஜி.ஆர். படப் பாடல்கள். ஆகவே  கொஞ்சம்  ரசிக்க  முடிந்தது. எம்.ஜி.ஆர். பாடல்கள்  தீர்ந்த  பிறகு  ஒன்றிரண்டு  சிவாஜி  பாடல்களும், சந்திரபாபு பாடல்களும் வந்தன.  சிவாஜியைப்  போல  'போனால் போகட்டும் போடா' என்றோ 'சட்டி சுட்டதடா'   என்றோ விரக்தியாக இல்லாமல் 'சிரித்து வாழ வேண்டும்' 'நாளை நமதே' என்ற உற்சாக பாடல் வரிகள்,  தாளம்  போட  வைக்கும் இசை அமைப்பு.... அந்த 'ஆடலுடன் பாடலை கேட்டு ரசிப்பதிலேதான் சுகம்' பாடலைச் சொல்லுங்கள்! அதற்க்கு ஈடாகவோ அல்லது அதை  விட சிறப்பாகவோ வேறு ஒரு பாடல் வந்ததாக தெரியவில்லை.

சந்திர பாபுவின் தனித்தன்மை கொண்ட இனிய பாடல்களை கேட்ட பொழுது, ஏன் இவர் பாடல்களை சூபர் சிங்கர்கள் பாடுவதில்லை? என்று தோன்றியது.

சந்திக்கலாம்...





     
 

Tuesday, March 26, 2013

யாமறிந்த பெண் எழுத்தாளர்களிலே ....

யாமறிந்த பெண் எழுத்தாளர்களிலே ....


மகளிர் தினத்தை ஒட்டி ஒரு பெண்கள் பத்திரிகை வெளியிட்டிருந்த சிறப்பிதழில் 'தமிழ் சினிமா கதா நாயகிகள் பற்றிய ஒரு கட்டுரை வாசித்தேன்.
உடனே 'எழுத்துலகில் பெண்கள்' குறிப்பாக பெண் கதாசிரியைகளைப்  பற்றி எழுதலாமே என்று தோன்றியது. ஆனால் தமிழில் எழுதும் எல்லோருடைய எழுத்தையும் நான் படித்ததில்லை, அதுவும் சமீப கால எழுத்தாளர்களின்  படைப்புகளை படிப்பதே இல்லை என்று கூட சொல்லலாம். இந்த நிலையில்நியாயமான மதிப்பீட்டை தர முடியுமா என்று தெரியவில்லை. எனவே நான் படித்த வரையில் பெண் எழுத்தாளர்களைப் பற்றிய என் பார்வை இது.

வை.மு.கோதைநாயகி அம்மாள்:




தமிழில் முதல் பெண் எழுத்தாளர்(கதாசிரியர்) என்றால் அது வை.மு. கோதை நாயகி அம்மாள்தான். அந்தண குலத்தில் பிறந்து, ஐந்து  வயதில்  திருமணம் செய்து கொண்டு, அதற்குப்  பிறகு  கணவரின்  தூண்டுதலால்  படித்து கதாசிரியராக பரிணமித்தவர். 115 புத்தகங்களை பிரசுரித்திருக்கிறார். ஜகன்மோகினி என்னும் பத்திரிகையின் ஆசிரியராகவும் இருந்திருக்கிறார். எழுத்தாளர், பேச்சாளர்,சுதந்திர போராட்ட வீராங்கனை,பாடகி என்ற பன்முகங்கள் கொண்டவர். ஒரு பத்திரிகையின் ஆசிரியர் குழுமத்தில் இடம் பெற்ற முதல் எழுத்தாளர். சென்சார் போர்ட் உறுப்பினராகவும் இருந்திருக்கிறார். இவருடைய  படைப்புகள்  சில  திரைப்படமாகவும்  வந்திருக்கின்றன. பிரமிக்க வைக்கும் சாதனையாளர்!

லக்ஷ்மி:

ஆனந்த விகடனின் ஆசி பெற்ற பெண் எழுதாளர்களில் முதன்மையானவர் லக்ஷ்மி! திரிபுரசுந்தரி என்னும் இயற் பெயர் கொண்ட இவர் ஒரு மருத்துவர். மெடிக்கல் காலேஜில் படிக்கும் காலத்திலேயே கதை எழுத ஆரம்பித்த இவரின் முதல் சிறுகதையான 'தகுந்த தண்டனையா'? மற்றும் முதல் நாவலான 'பவானி' இரண்டுமே ஆனந்த விகடனில்தான் வெளியாயின. பெண்களை மிகவும் கவர்ந்த நாவலாசிரியை.  இவருடைய  கதைகளில்  பவானி, மிதிலா விலாஸ்,  பண்ணையார்  மகள்  போன்றவை  பெரும்  வரவேற்பை பெற்றவை.   இவருடைய கதா நாயகிகள் அத்தனை பேருமே, "தற் காத்து, தற்  கொண்டார் பேணி, தகை சார்த்து, சொற் காத்து சோர்விலாள் பெண்" என்று  இலக்கணம் மாறாத பாரத நாரிகள். அடுத்தடுத்து துன்பங்களை அனுபவித்தாலும் இறுதியில் எல்லாம் சுபம் என்று முடியும் குடும்ப கதைகள்தான் இவருடைய களம்.


ஐம்பதுகளிலும், அறுபதுகளிலும் கோலோச்சிய பெண் எழுத்தாளர் இவர்.
இருபது வருடங்களுக்கும் மேலாக எழுதாமல் இருந்து விட்டு நீண்ட
இடைவெளிக்குப் பிறகு குமுதத்தில் இவர் எழுதிய 'அத்தை', ' என் பெயர் டீ.ஜி.கார்த்திக்' போன்ற நாவல்களும் பெரும் வரவேற்பை பெற்றது
இவருடைய எழுத்து திறனுக்கு ஒரு சான்று.

இவருடைய காஞ்சனையின் கனவும், பெண் மனமும்(இருவர் உள்ளம்) திரைப்படங்களாகவும் வந்தன. பெண் மனம், மிதிலா விலாஸ் நாவல்கள் தமிழ் வளர்சிக் கழகத்தின் பரிசினையும், 'ஒரு காவிரியைப் போல்' நாவல் சாகித்திய அகடமியின் பரிசினையும் வென்றன. இவருடைய  கதைகளுக்கென்று ஒரு பார்முலா இருக்கும், அது  சுவாரஸ்யமாகவும்  இருக்கும் என்பதுதான் விஷயம்.

சிவ சங்கரி:

அறுபதுகளின் இறுதியில் எழுத ஆரம்பித்த இவர் கிட்டத்தட்ட முப்பது வருடங்களுக்கும் மேலாக கொடி கட்டி பறந்தார். இவரை அறிமுகப்படுத்தியது கல்கி என்றாலும் மேலே தூக்கி விட்டதில் ஆனந்த விகடனுக்கும், பத்திரிகை ஆசிரியர் சாவிக்கும் பெரும் பங்கு உண்டு.

150க்கும் மேற்பட்ட சிறு கதைகள்,குறுநாவல்கள், 36 நாவல்கள், பல்வேறு கட்டுரைகள் எழுதியிருக்கிறார். இலக்கியம் மூலமாக இந்திய ஒருமைப்பாடு என்னும் பெயரில் இவர் நம் நாட்டின் எல்லா மொழிகளிலும் உள்ள சிறப்பான கதைகளை தொகுத்து வெளியிட்டிருப்பது ஒரு நல்ல முயற்சி. இவருடைய சில கதைகள் திரைப்படமாகவும், டி. வீ. சீரியல்களாகவும் வந்துள்ளன.



ஆளுமை கொண்ட எழுத்து இவருடையது. 1997 ஆம்  ஆண்டு  நமது  நாட்டின் சுதந்திர பொன்விழாவின் போது ஆங்கில பத்திரிகை பெமினா
இந்தியாவை  உருவாக்கிய  ஐம்பது  பெண்மணிகளுள்  ஒருவர்  என்னும்  விருதை வழங்கியது.  1999 ஆம் ஆண்டு  அமெரிக்காவில்  உள்ள  டென்னசி  மாகாண கவர்னர் ஊக பிரிட்ஜ் நகரத்தின்  கௌரவ  பிரஜை  விருதை  வழங்கி கௌரவித்தார். இதைத் தவிர  பல விருதுகளும், கௌரவங்களும்  பெற்றுள்ளார்.

தியாகு என்பதை  த் ...யா.. கூ  என்று இவர் எழுதியதை ஒற்றெழுத்து வார்த்தையின்
துவக்கத்தில் வராது என்னும் இலக்கணம் தெரியாமல் எழுதுகிறார் என்று சிலர் கண்டித்தார்கள்.

ஒரு உயர்ந்த பீடத்தில் உட்கார்ந்து கொண்டு உபதேசம் செய்வதும்,கதையில் சமையல் குறிப்பு எழுதுவதும், கதை மாந்தர்கள் அமைப்பில் இவர் அதிகம் தெரிவதும் இவருடைய குறைகள். கதாசிரியராக தொடங்கிய  இவருடைய  பொது வாழ்க்கை சமூக  ஆர்வலராக  பரிணமித்தது.

இந்துமதி:



முதலில் கணையாழி போன்ற இலக்கிய பத்திரிகைகளில் எழுதிக் கொண்டிருந்த இவர் அனந்த விகடன் மூலம் வெகுஜன பத்திரிகை உலகில் பிரவேசித்தார்.  கிடாரில் கர்நாடக சங்கீதம் வாசிப்பது போல துள்ளலும்,இளமையும், இனிமையும் கொண்டது இவருடைய எழுத்து. இவருடைய  'தரையில் இறங்கும் விமானங்கள்' மற்றும் 'வீணையில் உறங்கும் ராகங்கள்' இரண்டும் மிக நல்ல இலக்கிய படைப்புகள். என் வாசிப்பு அனுபவத்தை அடுத்த  படிக்கு  எடுத்துச்  சென்றவர்களில்  இவருக்கு முக்கிய இடம் உண்டு. இவர் எழுத்தை படித்து விட்டுதான் நான் தி.ஜானகிராமன் எழுத்துக்களை வாசித்தேன். அங்கிருந்தது கு.ப.ரா., புதுமைப்பித்தன் என்று என் வாசிப்பு விரிந்தது.

வாஸந்தி:

ஆனந்த விகடன் ஆதரவு பெற்ற மற்றொரு எழுத்தாளர். அதுவரையில் தமிழ் நாட்டை மட்டும் குறிப்பாக  சென்னையை மட்டும் சுற்றி வந்து கொண்டிருந்த தமிழ் கதையுலகை வட  இந்தியாவிற்கு கொண்டு சென்றவர். தன்னை பெமினிஸ்ட் என்று இவர் கூறிக்  கொண்டாலும் நடு நிலைமையில் நின்று எழுதக் கூடிய நல்ல எழுத்தாளர். அம்மணி போன்ற அருமையான நாவலை ஒரு பெமினிஸ்ட்டால் எழுதவே முடியாது. பெண்கள்  பிரச்சனைகளை  மட்டுமல்லாமல் பொதுவான சமூக பிரச்சனைகளையும் பற்றி எழுதியுள்ளார்.
சாதாரணமாக பெண் எழுத்தாளர்கள் தொடாத அரசியலை நிலை களனாக கொண்டு எழுதிய முதல் பெண் எழுத்தாளரும் இவர்தான்.



இவருடைய 'ஆகாச வீடுகள்' நாவல் ஆங்கிலம், இந்தி, ஜெர்மன், மொழிகளில்  மொழிபெயெர்க்கப் பட்டுள்ளது. பல விருதுகளுக்கு சொந்தக்காரர். இந்தியா டுடேயின் தமிழ் பதிப்பிற்கு ஆசிரியராக இருந்திருக்கிறார். ஜெய லலிதாவைப் பற்றி பென்குயின் பதிப்பகத்திற்காக இவர் எழுதிய,
'ஜெய லலிதா எ போர்ட்ரைட்' என்னும் புத்தகத்திற்கு ஜெயலலிதா  ஸ்டே ஆர்டர்  வாங்கியதால் அப்புத்தகம் வெளியிடப் படவில்லை.

அனுராதா ரமணன்:



லே அவுட் ஆர்டிஸ்ட் ஆக  பத்திரிகை உலகில் நுழைந்தவர்  'விஜயாவின் டைரி' என்னும் தன்னுடைய  வாழ்க்கை குறிப்பை எழுதியதன் மூலம் எழுத்தாளராக மாறினார். பெரும்பாலும் குடும்ப கதைகளாக எழுதினாலும்
நகைச் சுவை உட்பட பல் வேறு சுவைகளிலும் எழுதி இருக்கிறார். சாதாரண கதைகளாகவே எழுதிக் கொண்டிருப்பவர் திடீரென்று ஒரு நல்ல கதை எழுதி  விடுவார்.

ரமணி சந்திரன்:



ஒரு முறை நான் லெண்டிங் லைப்ரரி சென்றிருந்த பொழுது அங்கு வந்த அத்தனை பெண்களும் ரமணி சந்திரன் நாவல்தான் வேண்டும் என்று கேட்டார்கள். (பெண் )வாசகர்கள் இடையே மிக அதிக வரவேற்பை பெறுவது  இவருடைய எழுத்து. இவருடைய எல்லா நாவல்களுமே மில்ஸ் அண்ட் பூன் பாணி அல்லது மௌன ராகம் பாணி கதைகள்தான். ஏதோ ஒரு காரணத்தால்
கணவன் மனைவி ஆகிவிடும் இருவரிடையே நடக்கும் பனிப் போர், இறுதியில்அது சுபமாக முடிவது என்று சலிக்காமல்  அவரும்  எழுதிக்  கொண்டே இருக்கிறார், அலுக்காமல்  பெண்களும்  படித்துக்  கொண்டே  இருக்கிறார்கள். எது எப்படியோ  மிக  அதிகமாக  விற்பனையாவது  இவருடைய நாவல்கள்தான்.

சீதா ரவி:




பாரம்பரியம் மிக்க பத்திரிகையான கல்கி குடும்பத்தைச் சேர்ந்தவர். அந்த பாரம்பரியம் இவருடைய எழுத்தில் வெளிப்படும். நூல் பிடித்தார் போன்ற தெளிவான நடை இவருடைய சிறப்பு. பழங்கால  எழுத்தாளரான  அனுத்தமவைப் போல என்று கூறலாம். கல்கி குழுமத்தை தாண்டியும் இவர்
வெளியே வர வேண்டும்.

மஞ்சுளா ரமேஷ்:



கல்கி குழுமம் என்றால் பெண்களுக்கு நினைவுக்கு வருவது மங்கையர் மலர். மங்கையர் மலர் என்றால் நினைவுக்கு வருபவர் மஞ்சுளா ரமேஷ். இவர்
ஆசிரியராக இருந்த பொழுது மங்கையர் மலர் அடைந்த வளர்ச்சி அபரிமிதம்.
கட்டுக்கோப்பான எழுத்து இவருடையது. இவருடைய ஆன்மீக கட்டுரைகள் சிறப்பானவை. 'மஞ்சுளா ரமேஷின் சிநேகிதி', மற்றும் 'ஞான ஆலயம்' ஆகிய
இரண்டு பத்திரிகைகளுக்கு ஆசிரியராக இருக்கிறார்.

திலகவதி I.P.S.:




தமிழகத்தின் முதல் பெண் I.P.S. ஆன இவர் முன்னூறுக்கும் மேற்பட்ட சிறு கதைகளும், நிறைய நாவல்கள் மற்றும் கவிதைகள்   எழுதியிருக்கிறார். 2005 ஆம் ஆண்டு அவருடைய கல் மரம் நாவலுக்காக சாகித்திய அகடமியின் பரிசினை வென்றார்.  இவருடையதும் ஆளுமை கொண்ட எழுத்து.

ஆர்.சூடாமணி:



பெண் எழுதாளர்களில் இவர் வித்தியாசமானவர். பெண்ணியம் என்னும் விலங்கை மாட்டிக்கொள்ளாமல், புலம்பாமல், சாடாமல் தனக்கென ஒரு தனி
இடம் பிடித்தவர். கலைமகள், கல்கி, அமுதசுரபி  பத்திரிகைகளில்  இவருடைய  படைப்புகள் வெளியாகும். மனித  மனத்தின்  நுட்பங்களை  நுணுக்கமாக படைப்பதில் வல்லுநர். நிறைய  பரிசுகளும்  பாராட்டுகளும்  பெற்றிருக்கிறார். மிகச் சிறந்த இலக்கிய படைப்பாளி.

இவரைப் போலவே ராஜம் கிருஷ்ணனும் சிறந்த இலக்கிய படைப்பாளி.

அம்பையும், ஜோதிர் லதா கிரிஜாவும் நல்ல எழுத்தாளர்கள்தான் என்றாலும் பெண்ணியத்தை சிலுவையாக சுமப்பதாலோ என்னோவோ அவர்கள்  எழுத்தில் கசப்பு வழியும்.

அமெரிக்காவிலிருந்து கொண்டு  எழுதும் கீதா பென்னட், துணிச்சலான எழுத்தாளர் என்றால், அமெரிக்காவின்  இன்னொரு  முகத்தை  நமக்கு  காட்டும் காஞ்சனா தாமோதரனும் ஒரு சிறந்த எழுத்தாளர். இவர்களைத் தவிர கமலா சடகோபன், விமலா ரமணி, கோமளா வரதன், ஸ்ரீரங்கம் எஸ்.பட்டமாள் போன்ற பலர் என்னைக் கவர்ந்த கதைகளை எழுதி இருக்கிறார்கள்.

ஒருமுறை எனக்குத்  தெரிந்த  ஒரு  பெண்  பத்திரிகையாளரிடம்,  "சுஜாதா ஒரு முறை சொன்னது போல பெண் எழுதாளர்களின் எழுத்து சமையலறையை தாண்டி வர மாட்டேன் என்கிறதே" என்றேன்,அதற்கு அவர், "வராது, வராது .. ஏனென்றால் நாம் அங்குதான் வாழ்கிறோம். ஒரு  கால்  சென்டரைப் பற்றி கதை  எழுத  வேண்டும்  என்றால்  ஆறு மாதமாவது  கால்  சென்டரில்  போய் வேலை செய்ய வேண்டும். எல்லாவற்றையும்  கற்பனை  செய்தே  எழுத முடியாது". என்றார்.  அதாவது எதற்கு எக்ஸ்போஷர் கிடைக்கிறதோ அதைப் பற்றிதான் எழுத முடியும் என்பது அவர் வாதம். அதே நேரத்தில் பெண் எழுதாளர்களுக்கு ஒரு குறை இருக்கிறது. "நாங்கள் புடவை கட்டி கொள்கிறோம் சரி, எங்கள்  எழுத்துக்களுக்கும்  புடவை கட்டி விடாதீர்கள்" என்கிறார்கள்.

இப்போது இருக்கும் பெண்களுக்கு எக்ஸ்போஷர் அதிகம் என்பதில் சந்தேகம் இல்லை. அவர்கள் மட்டுமல்ல அவர்களின் எழுத்தும் ஜீன்ஸ் போட்டுக் கொள்வதில் யாருக்கும் இப்போது ஆட்சேபனை இருக்காது.  தமிழில்  எழுத அவர்களுக்கு தமிழ் தெரிய வேண்டுமே என்பதுதான்
என் போன்ற வாசகர்களுக்கு கவலை.

பி.கு. இது ஒரு மீள் பதிவு.


  























  

Friday, February 22, 2013

viswaroopam - review

விஸ்வரூபம்!


பெரிதும் சர்ச்சைக்குள்ளான  அதனால்  அளவுக்கு  அதிகமாக  பப்ளிசிட்டி  பெற்ற விஸ்வரூபம் திரைப்படத்தை பார்த்தேன்! மிகச் சமீபத்தில் நடந்த மிக முக்கியமான ஒரு சரித்தர சம்பவத்தை படமாக்க முயற்சித்திருக்கிறார் கமல்ஹாசன்! ஆனால் அதை நடு நிலையோடு அணுகாமல் அமெரிக்காவுக்கு வால் பிடித்திருப்பதால்
இந்தப் படம் ஏற்படுத்தி இருக்க வேண்டிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. அது  மட்டுமில்லை மருத்துவம் பார்க்க வந்த பெண்ணின் மரணமும், ரசித்து ஊஞ்சல் ஆடும் இளைஞன்  சூசைட் பாம்பராகி இறக்கும் சோகமும் மனதைத் தொடவே இல்லை.

 கதக் நடனக் கலைஞர் வேடத்தில் இருக்கும் இந்திய ரா உளவாளியான விஸ்வநாத்தை
(கமலை) அவர்  மனைவியாக  வரும்  பூஜா  குமார்  சந்தேகப்பட்டு  உளவறிய  ஒரு ஆளை அனுப்புவதில் படம் தொடங்குகிறது.  ஆனால் அவர்  எதற்காக  கமல் மேல் சந்தேகம் கொள்கிறார் என்பது தெளிவாக காட்டப்படவில்லை. அதே போல கணவனிடம் பொய் சொல்லிவிட்டு தன் பாசோடு வெளியே சுற்றி விட்டு வீடு
திரும்பும் பூஜா கணவனின் குறட்டை ஒலி கேட்டு அவர் தூங்கி விட்டதாக நினைத்து  நிம்மதியாக படுத்துக்கொள்ளும்
போது  வேறு பக்கம் திரும்பி படுத்திருக்கும் கமல் தூங்காமல் உக்கிர பார்வை (பயங்கர பின்னணி இசையோடு) பார்கிறாரே  பிறகு என்ன செய்தார்?

ஆண்ட்ரியவுக்கு வேலையே இல்லையே என்று சிலர் வருத்தப்படுகிறார்கள், ஆனானப்பட்ட சேகர் கபூரும் நாசரும் வீணடிக்கப்பட்டிருப்பது அவர்கள் கண்களில் படவில்லை போலிருக்கிறது.

இந்தப் படத்தில் பிரமாதமான விஷயங்கள் என்றால் முதலாவது ராகுல் போசின் நடிப்பு, இரண்டாவது செட் அமைப்பு, கமலஹாசன் பேட்டியில் சொல்லியிருக்க விட்டால் நாம் நிஜமாகவே
ஆப்கானிஸ்தானில்தான் படம் பிடித்திருக்கிறார்கள் என்று நம்பி இருப்போம். இசை
இரையாமல், உறுத்தாமல் இழைகிறது. பிறகு அந்த முதல் சண்டை காட்சி, வாவ்!

இந்தப் படத்தின் நல்ல விஷயங்கள்: 1. பூஜா குமார் பத்து வருடங்களுக்கு முன்பே ஏதோ ஒரு படத்தில் நடித்திருக்கிறாராம் நல்ல
வேளை நமக்கு அது தெரியாது எனவே வெல்கம் பூஜா!
2. கமல் அறிமுகமாகும் காட்சி! ஒரு படத்தில் மட்டும் நடித்திருக்கும் நடிகர்கள் கூட காலின் கீழ் நெருப்பு பொறி பறப்பது போல அறிமுகமாகும் பொழுது பெண்மை மிளிரும் ஒரு கதா பாத்திரத்தில் அறிமுகமாகும் துணிச்சல் மற்றும் இறுதிக் காட்சி.

தவிர்த்திருக்க கூடியவை:
"என் கடவுளுக்கு நான்கு கைகள் உண்டு"
"அப்படி என்றல் அவரை எப்படி சிலுவையில் அறைவீர்கள்'?
நாங்கள் சிலுவையில் அறைய மாட்டோம், கடலில் மூழ்கடித்து விடுவோம்"
என்பது போன்ற தேவையில்லாத குசும்புகளை விட்டு விட்டால் நன்றாக இருக்கும். தளர்வான, கொடூரமான முதல் பாதி  இன்னும் கொஞ்சம் க்ரிப்போடு இருந்திருக்கலாம். தீவிர வாதத்தின் தீமையை  காட்ட வேண்டும் என்றால் ரத்தம் ஆறாக ஓட வேண்டும் என்பது கிடையாது. சட்டிலாக அதை உணர்த்தக் கற்றுக் கொண்டு விட்டால் கமல் நல்ல இயக்குனரும் ஆகி விடுவார்.









 

Thursday, February 7, 2013

uratha sindhanai

உரத்த சிந்தனை!

எங்கள் வீட்டிக்குப் பக்கத்தில் ஒரு வீட்டில் திருமணம். இரண்டு நாட்களாக லவுட் ஸ்பீக்கரில் பாடல்களை அலற விட்டு படுத்தி எடுத்து விட்டார்கள். நமக்கு  இவ்வளவு சத்தம் போட யார் உரிமை கொடுத்தார்கள்?

எல்லாவற்றையுமே நாம் சத்தமாகத்தான் செய்கிறோம். "கெட்டி மேளம்" "கெட்டி மேளம்" என்று எல்லோரும் அலற, 'டம' 'டம' வென்று மேளம் சத்தமாக கொட்டிதான் கல்யாணம் செய்து கொள்கிறோம். இறுதி ஊர்வலத்தில் கூட தாரை, தப்பட்டை அதிர் வேட்டு என்று அதிர அடிக்கிறோம்.
பூப்பு நீராட்டு போன்ற அந்தரங்க விஷயங்கள் கூட பகிரங்கமாக்கப்படும் பொழுது பாண்டு கச்சேரி, மெல்லிசை என்று அமர்களப்படுத்தபடும்.  
அது மட்டுமா? இறை வழிபாட்டிலும் நாம் சோடை போவதில்லை அம்மனுக்கு கூழ் வார்த்தாலும் சரி, ஐயப்பனுக்கு மாலை போட்டாலும் சரி லவுட் ஸ்பீக்கர் நிச்சயம் தேவை.

போனில் எவ்வளவு பேர் மெதுவாக பேசுகிறோம்? எஸ்.டி.டி. கால் என்றால் உரக்கத்தான் பேச  வேண்டும்  என்று  இன்றும்  சிலர்  நினைத்துக்கொண்டிருக்கிறார்கள். சிலர் பொது இடம் என்றும் பாராமல் தங்கள் குடும்ப விவகாரங்களையும், முக்கிய  தகவல்களையும்  பகிர்ந்து  கொள்கிறார்கள்.  

ஹார்ன்  அடிக்காமல் வண்டி ஓட்டத் தெரியாது. நான் வெளி நாடு சென்ற புதிதில் அங்கு கார்கள் ஒலி எழுப்பாமலேயே விரைவதைப் பார்த்து இங்கு கார்களுக்கு ஹார்னே கிடையாதா? என்று அப்பாவித்தனமாக கேட்க நண்பர் ஒருவர்,"உண்டே", என்று ஒலி எழுப்பிக் காண்பித்தார். அங்கெல்லாம்  எப்படிப்பட்ட  டிராபிக்  ஜாமிலும் ஹார்ன் அடிக்க மாட்டார்கள். 

சமீபத்தில் காஸ் அடுப்பு விலாசம் மாற்ற ஏஜென்சிக்குச் சென்றிருந்தேன். அங்கு புதிய இணைப்பிற்காக விண்ணப்பம் கொடுக்க வந்திருந்தவர்களின் கூட்டம். இங்கு விஷயம் கூட்டமில்லை, அது போட்ட கூச்சல், அதனால் விளைந்த குழப்பம்....அம்மம்மா..! ஏன் இப்படி இரைச்சல் போடுகிறார்கள்?


நம் திரைப் படங்களிலோ மணி ரத்னம் வரும் வரை, "கிட்ட வா உன்கிட்ட ஒரு ரகசியம் சொல்லணும்"  என்னும்  வசனத்தைக்  கூட   ஹை  டெசிபெல்லில்தான்  கூறுவார்கள்.  

   
இதைப் பற்றி இன்னும் கொஞ்சம் தீவிரமாக யோசித்தப்பொழுது ஒன்று தோன்றியது. அமைதியாக இருக்கும் மேலை நாடுகளை விட இரைச்சலாக  இருக்கும்  நம் நாட்டில்தான் தியானம், யோகம்  போன்ற  விஷயங்களும்  இருக்கின்றன. மௌன  விரதம்  அனுஷ்டிக்கும்  பழக்கமும்  நம்  மதத்தில்  ஒரு வழிபாட்டு முறை. ஒரு  வேளை  நம்மை  சுற்றி  இத்தனை  சத்தம்  இருப்பதால்தான் ஒரு  சிலராவது  அமைதியை  தேடிச்  செல்கிறார்கள்  போலிருக்கிறது.  பெரும் பாலோர் சைவமாக இருக்கும் இந்தியர்களுக்கு செல்லப் பிராணிகள் வளர்ப்பு என்பது குறைவு. ஆனால் முழுக்க முழுக்க அசைவமாக இருக்கும் மேலை நாட்டினருக்கு செல்ல பிராணிகள் வளர்ப்பில் 
ஈடுபாடு அதிகம் என்பது ஒரு இனிய முரண்பாடு என்பார்கள். அதைப்போலத்தான் இதுவுமோ?


Saturday, December 29, 2012

நீதானே என் பொன் வசந்தம்!

நீதானே என் பொன் வசந்தம்!





"நான் சொல்வதெல்லாம் காதல், காதலைத் தவிர வேறு ஒன்றுமில்லை" என்று பிரதிக்ஞை செய்து விட்டு இந்தப் படத்தை கெளதம்  வாசுதேவ்  மேனன்  எடுத்திருப்பார் போல, படம்  முழுவதும்  காதல் காதல் காதல்!கொஞ்சம் ஓவர் டோஸ்தான். அதுவும் முன் பாதியில் காமம்தான் காதல் என்பது போல சித்தரிப்பது நியாயமா கெளதம்?

கௌதமின் எல்லா கதா நாயகர்களையும் போல இந்தப் படத்திலும் மிடில் கிளாஸ்  இன்ஜீநீயரிங் மாணவனான ஜீவா, அவரை விட அந்தஸ்தில் உயர்ந்த சமந்தாவை காதலிக்கிறார். காதலியின் உபயத்தில் விலை உயர்ந்த உடை, சொகுசுக் கார் பயணம், செல் போன், நட்சத்திர ஓட்டல் சாப்பாடு என்று அதனை சொகுசுகளையும் அனுபவிக்கிறார், காதலியின் வீட்டில் ஒருவரும் இல்லாத போது அவருடன் தனியாக இருக்கிறார். அவருடைய அண்ணன் தான் ஆசைப்பட்ட பெண்ணை அந்தஸ்து குறைவான காரணத்தால் மணக்க முடியாமல் போகும் பொழுது நிதர்சனத்தை உணரும் அவர் படிப்பும் நல்ல உத்தியோகமும் வாழ்க்கைக்கு எவ்வளவு அவசியம் என்று புரிந்து கொண்டு எம். பி. ஏ. நுழைவுத்  தேர்வுக்கு  தன்னை  தயார்  செய்து  கொள்ள  வேண்டும்  என்பதால் காதலியிடமிருந்து  விலகுவதோடு  அவளையும், "என்னையே சார்ந்திருக்காதே  ஏதாவது உருப்படியாகச் செய்" என்று  நியாயமாக  அறிவுறுத்த அதை சரியாக புரிந்து கொள்ளாத சமந்தா அவரைப் பிரிகிறார். இது இயல்பான முன் பாதி என்றால், ஜீவாவின் படிப்பும்  நல்ல  உத்தியோகமும் அவரது குடும்ப அந்தஸ்தை உயர்த்துகிறது. இந்த  கால  இடைவெளியில்(மூன்று வருடங்கள்) சுனாமி  நிவாரண  கிராமம்  ஒன்றில்  ஆசிரியையாக பணி ஆற்றச் செல்கிறார் சமந்தா
அவரைத் தேடிச் செல்லும்(நோட்:கெளதம் கதா நாயகன்) ஜீவா தன்னோடு வரும்படி சமந்தாவை அழைக்க, "உன் வேலைகளை எல்லாம்
முடித்து விட்டு இப்பொழுது  என்னை வந்து அழைக்கிறாய், இதற்க்கு  உனக்கு மூன்று வருடங்கள் ஆகியிருக்கிறது,இன்னும் மூன்று வருடங்கள் ஆகி
இருந்தால் அப்பொழுதுதான் வந்து இருப்பாயா? நீ  அழைத்தவுடன்  உன்னோடு  நான் வந்து விட வேண்டுமா எனக்கு இங்கே வேலை இருக்கிறது". என்று கூறிவிட (இங்கே  படம்  முடிந்திருந்தால்  கூட  நன்றாக  இருந்திருக்கும்)  அதில்  உள்ள  நியாயத்தை  புரிந்து  கொள்ளாமல்  அவரை விட்டு விட்டு  தன்   அண்ணியின்  தங்கையையே  மணக்க  முடிவு  செய்யும் ஜீவா, கல்யாணத்திற்கு ஒரு மணி நேரத்திற்க்கு முன் திருமணத்தை நிறுத்தி விட்டு(நோட் மீண்டும் கெளதம் படம்) சமந்தவோடு மீண்டும் இணைவதுதான்  சினிமாத்தனமான பின் பகுதி. 

ஜீவாவைப் பொறுத்த வரை இது ஒரு முக்கியமான படம். கல்லூரி கல்சுரல்சில்,'நீதானே என் பொன் வசந்தம்' பாடல்  பாடும்  பொழுது  அவர்  முகத்தில் தென் படும் பரவசமும் சரி இறுதியில், "ஐ ஹேட்  யூ நித்யா" என்று கூறும் பொழுது முகத்தின் இறுக்கமும் சரி சபாஷ் சொல்ல வைக்கின்றன. சமந்தா  பள்ளி மாணவியாக படு கியூட்! பின்னால் சேலையில் பரிதாபம். முன் பாதியை சுவாரஸ்யமாக கொண்டு
சென்றிருபத்தில் சந்தானத்தின் டைமிங்கான காமெடிக்கு கணிசமான பங்கு
இருக்கிறது. பிரபல  சின்னத்திரை  நடிகர்  மோகன் ராமின்  மகள்  நகைச்  சுவை நடிகையாக அறிமுகமாகி  இருக்கிறார். மனோரமா போல வர ஆசையாம். ஆல் த பெஸ்ட் !

ஜீவாவும் சமந்தாவும் பிரியும் மிக மிக்கியமான கட்டத்தில் டைட்  க்ளோசப் இல்லாவிட்டாலும், மிட் ஷாட்டவது வைத்திருக்க வேண்டாமா?
லாங் ஷாட்டிலும், ஏரியல் ஷாட்டிலும் அந்தக் காட்சியை படம் பிடித்திருப்பது...? கௌதமுக்கும் ஹாரிஸ் ஜெயராஜுக்கும்
இருக்கும் கெமிஸ்ட்ரி இசை ஞானியோடு இல்லை. தேர்ந்த நடிகரான ரவி
ராகவேந்தருக்கு ஏன் உணர்ச்சியே இல்லாத ஒரு இரவல் குரல்?

பாடல்கள் பல பிரமாதம். கௌதமின் மற்ற படங்களை விட இந்தப் படத்தில் வசனம் மிகச் சிறப்பாக இருக்கிறது. காமிரா துல்லியம்! படம்? ஹி! ஹி! 

இறுதியாக கெளதம் வாசுதேவ் மேனன் சமூகத்திற்கு ஒரு விண்ணப்பம்! தயவு செய்து உடல் இச்சையை காதல் என்று காட்டாதீர்கள். அதே போல
கல்யாண மேடையில்  திருமணத்தை  நிறுத்தும்  காட்சியும்  இனிமேல்  வேண்டாம். 




    

 

Friday, November 9, 2012

Kodiyadhu katkin...

கொடியது கேட்கின்....

நமக்கு செய்ய பிடிக்காத விஷயங்களை,"உலகத்திலேயே கொடுமையான விஷயம் என்றல் அது இதுதான்" என்போம் அப்படி ஒரு கொடுமையான விஷயங்களுள் ஒன்று துக்கம் கேட்கச் செல்வது! மற்றவர்களோடு பகிர்ந்து கொள்ளும் பொழுது சம்பந்தப்பட்டவர்களின் துக்கம் பாதியாக குறையும் என்ற நம்பிக்கையில் செல்கிறோம். ஆனால் நிஜமாகவே துக்கத்தைப் பகிர்ந்து கொள்ள முடியுமா?

சமீபத்தில் அப்படி ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வேண்டிய துர்பாக்கியத்திற்கு ஆளானேன்! காலமானது மிக நெருங்கிய நண்பர். என்னதான் மிக மோசமான விபத்தை சந்தித்து ஐந்து வருடங்களாக கோமாவில் இருந்தாலும் அவருடைய மனைவியின் அக்கறை மிகுந்த கவனிப்பால் மிக மிக சொற்ப முன்னேற்றத்தை காட்டி வந்த அவர் இறுதி வரை முழு நினைவு திரும்பாமலேயே இறந்தது கொடுமை இல்லையா? அந்தப் பெண்ணின் உழைப்பு அத்தனையும்  வீண்தானா? தன கணவர் நிச்சயமாக பிழைத்துக் கொள்வார் என்ற நம்பிக்கையில் ஐந்து வருடங்கள் சரியாக தூங்காமல் அவருடைய ஒவ்வொரு அசைவையும் புரிந்து கொண்டு பணியாற்றிய, அந்தப்பெண், "நான் கஷ்டப்பட்டேன் என்று எல்லோரும் சொல்கிறார்கள், நான் கஷ்டப்படவேயில்லை,எனக்கு ஒரு குழந்தை இருந்தால் பார்த்துக்கொள்ள மாட்டேனா? ஐந்து வருடங்கள் நான் பட்டது ஒன்றுமே இல்லை,கடைசி ஒரு மாதத்தில் ஆஸ்பத்ரியில் அவர் அனுபவித்த
கஷ்டத்தை பார்த்த பொழுது அவர்இருப்பதை விட இறப்பதே மேல் என்று தோன்றி விட்டது அதனால்தான் நான் அழவே இல்லை என்று கண்களில் வழிந்த நீரை துடைத்தபடியே பேசும்
 அந்தப் பெண்ணிடமும், எண்பத்தைந்து வயதில் மகனை பறிகொடுத்து  விட்டு புத்திர சோகத்தில் தவிக்கும் தாயிடமும்,  பிறந்ததில்  இருந்து  மிக செல்லமாக குறிப்பாக அப்பாவின் செல்லமாக ஒரு இளவரசி போல வளர்ந்த குழந்தை, மோசமான ஒரு நாளில் நடந்த விபத்து வாழ்கையையே புரட்டி போட அதை மிக இயல்பாக
ஏற்றுக்கொண்டு இப்பொழுது சீ.ஏ. பரீட்சி நேரத்தில் தந்தை இறந்து போக, என்னால் சரியாக அழக்கூட முடியவில்லை எனும் சின்னப் பெண்ணிடமும்,'உப்பும் நீரும் சேரச் சேர
எல்லா துக்கமும் மாறிப்போகும்" என்று கூற வேண்டிய தருணம் கொடியதுதானே?

Friday, September 28, 2012

இரயில் பயணங்களில்!
(டி. ஆர். பட விமர்சனம் அல்ல!)


சமீபத்தில் நிறைய பயணம் செய்தேன்! பெரும்பாலும் புகை வண்டியில்(நிலக்கரியால் ஓடி, புகையைக் கக்கி, நம் உடைகளை பாழக்கிய அந்தக் காலத்தில் புகை வண்டி என்பது சரியாக இருந்தது. இப்போதுமா புகை வண்டி? வேறு பெயர் கண்டு பிடிங்க பாஸ்)



இரயில் பயணம் இப்போது மிகவும் சுலபமாகவும், வசதியாகவும் இருக்கிறது.
நம் வேலையெல்லாம் விட்டு விட்டு பயணச்சீட்டு வாங்குவதற்காக நீண்ட க்யு வரிசையில் காத்திருக்க வேண்டாம். மகனையோ, மகளையோ கெஞ்சி வீட்டில் இருந்த படியே கணினியில் பதிவு செய்து விடலாம்.  இன்னொரு நல்ல விஷயம், இப்போதெல்லாம் ரயில்கள் பெரும்பாலும் சரியான நேரத்தில்  புறப்பட்டு சரியான நேரத்தில் இலக்கை அடைகின்றன.  நம் நாட்டில் எமெர்ஜென்சி நிலவிய  பொழுது  இதைத்தான்  பெரிய  விஷயமாக  சொன்னார்கள் அதன் அதரவாளர்கள். அதைப் போலவே முன்பெல்லாம் ஒவ்வொரு
நிறுத்தத்திலும் வண்டி நிற்கும் பொழுதும் இட்லி, வடை, தயிர் சதம், வேர்கடலை, காபி, டீ இன்ன பிற சமாச்சாரங்களை சுமந்து கொண்டு கூவியபடி வண்டியின்  வேகத்தோடு ஓடிவரும்  சிறு  வியாபாரிகளைக்  காணவில்லை. எந்த எந்த  ஊரில்  என்ன என்ன  உணவு  நன்றாக  இருக்கும்  என்று சிலர் லிஸ்டே வைத்திருப்பார்கள். வண்டியிலேயே  எல்லா  உணவு  வகைகளும் கிடைத்து விடுவதால் வெளியே வாங்குபவர்கள் குறைந்து  விட்டார்கள் போலிருக்கிறது! சதாப்தி போன்ற வண்டிகளில் IRCTC நிர்வாகமே வேளா வேளைக்கு டீ, பிஸ்கெட்  முதல்  ஐஸ்ச்ரீமோடு  உணவு  வரை டான் டானென்று வழங்கி விடும் போது வெளியே ஏன் வாங்க வேண்டும்?
உபரியாக படிக்க தினசரியும் குடிக்க நீரும் வேறு..!  ஏசி  கோச்சுகளில்  கழிப்பறை நன்றாகவே பராமரிக்கப்  படுகிறது.   

ஸ்லீப்பர் கோச்சுகளில் சில்லறை சாமான்கள் விற்பவர்கள், காபி,டீ  இவற்றோடு பிச்சைக்காரர்கள், தவிர  வண்டியை  தன்  கையில்  உள்ள  துணியால் துடைத்து விட்டு  காசு  கேட்பவர்கள்  தொந்தரவு  செய்து கொண்டே இருக்கிறார்கள். இதில்  என்ன  ஆச்சர்யம்  என்றால் ஒவ்வொரு பத்து நிமிடத்திற்கும் ஒருவன் வந்து
துடைக்கிறான்  அப்பொழுதும் குப்பை வருகிறது. பொது இடத்தில் குப்பை போடுவதில் நமக்கு நிகர் நாம்தான்! 

ரயில்வே மட்டுமல்லாது infrastructure எனப்படும்  கட்டுமான  அமைப்பும் வெகுவாக வளர்ந்துள்ளதால் சாலைப் பயணமும் முன்பை விட
இலகுவாகவும், துரிதமாகவும்  இருக்கிறது. நவி மும்பையின்  வளர்ச்சி பிரமிக்க வைக்கிறது! மும்பையில் ஒரு புகைப்படம் எடுத்துக் கொண்டு வெளி நாட்டில் எடுத்தது என்றல் நம்பி விடுவார்கள்.

இவ்வளவு ஊழல், தகிடுதித்தங்களையும் மீறி இந்த தேசம் வளர்கிறதே! இறை அருள்தான் !
      

Saturday, August 11, 2012

naan ee - film review

நான் ஈ (விமர்சனம்)



மிருகங்களை வைத்து எடுக்கப்பட்ட படங்களில் ஆட்டுக்கார அலமேலுவிர்க்குப்பிறகு எல்லா தரப்பு ரசிகர்களையும் கவர்ந்த திரைப்படம் நான் ஈயாகத்தான் இருக்கும்!

பணக்கார வெற்றிகரமான வர்த்தக பெரும்புள்ளி சுதீப். தன் மனைவியைத் தவிர தான் விரும்பும் அத்தனை பெண்களையும் தன்னால் வீழ்த்திவிட முடியும் என இருமாந்திருக்கும் அவர் நுண் கலைஞரான(micro artist) சமந்தாவை அடைய விரும்புகிறார். அவரோ நாணியைக் காதலிக்க, அப்பாவி நானி சுதீபால்  கொல்லப்படுகிறார். ஒரு ஈயாக மறு பிறவி எடுக்கும் நாணி சுதீபை எப்படி பழி தீர்க்கிறார் என்பதுதான் கதை! சர்வ சாதரணமான இந்தக் கதையை வெகு சுவாரஸ்யமாக படமாக்கி
-யிருப்பதில் டைரக்டர் ராஜ மௌலியின் திறமை பளிச்சிடுகிறது.

சமந்தாவின் புறக்கணிப்பைக் கூட தனக்கு சாதகமாக மாற்றி கூறும் அப்பாவித்தனத்தை அழகாக செய்திருக்கிறார் நாணி. வில்லன்  சுதீபின் உருவம், நடிப்பு இரண்டிலுமே ரகுவரனின் லேசான சாயல்!
குரல் கொடுத்தவர் வேறு ரகுவரனை மிமிக் செய்திருக்கிறார்  என்றாலும் ஓகே! சமந்தாவை குறை சொல்ல முடியாதுதான்
என்றாலும் இன்னும்  கொஞ்சம்  நமக்கு  நெருங்கி  வந்திருக்கலாம். தேவ தர்ஷினி போன்ற நமக்கு பரிச்சயமான முகங்கள்
தலை  காட்டினாலும் தெலுங்கு படம் பார்பது போன்ற உணர்வை
தவிர்க்க முடியவில்லை! சந்தானம் கூட இரண்டு காட்சிகளில் வந்து கலகலப்பூட்டுகிறார்!

வசனம் க்ரேசி மோகன் என்று போடுகிறார்கள், அவரே மருத்துவராக
வரும் கடைசி காட்சியைத் தவிர மற்ற இடங்களில் க்ரேசியை காணவில்லை.
ஒளிப்பதிவும் இசையும் படத்திற்கு மிகவும் உதவி செய்திருக்கின்றன. கிராபிக்ஸ் படம் என்பதால் காதை அதிரச் செய்யாத பின்னணி இசையை
சேர்த்திருக்கும் மரகதமணியை பாராட்டத்தான் வேண்டும். பாடல்கள்  இரண்டும் இன்பம்! நம் ஊரில் அம்மன் படம் எடுப்பவர்கள் ராஜ மௌலியிடம் க்ராபிகசை எப்படி பயன் படுத்த வேண்டும் என்று
கற்றுக் கொண்டால் நன்றாக இருக்கும்.

மொத்தத்தில் ஒரு நல்ல பொழுது போக்கு படம் எடுக்க மாஸ் ஹீரோக்கள்
தேவை இல்லை, நல்ல திரைக்கதை, சிறப்பான  தொழில்  நுட்பம்  இருந்தால்  போதும் என்பது  மீண்டும்  நிரூபணமாகி  இருக்கிறது.















  

Thursday, June 21, 2012

அடி கள்ளி !

அடி கள்ளி ! 


என்னதான் விவசாய குடும்பத்தில் பிறந்திருந்தாலும் எனக்கு தோட்டக் கலையில் அவ்வளவாக ஆர்வம் கிடையாது. நானும் என் சகோதரியும் ஒட்டிப்பிறந்த இரட்டையர் போல, அவளுக்கோ தோட்ட கலையில் அபரிமித ஈடுபாடு, எனவே செடிகளை தேடி அவள் செல்லும் இடங்களுக்கெல்லாம் நானும் செல்வேன். கவனியுங்கள்! செல்வேன் அவ்வளவுதான்! மற்றபடி செடிகளையும்,விதைகளையும் வாங்குவது, அவற்றை எப்படி பராமரிப்பது போன்ற விவரங்களை எல்லாம் அவள்தான் கேட்டுக் கொள்வாள். நான் அங்கு ஏதாவது துண்டு பேபர் கிடைத்தால் எடுத்து படிக்க ஆரம்பித்து விடுவேன், அப்படி ஒரு புத்தகப் பைத்தியம்! 

இதில் நான் மிகவும் ரசித்த விஷயம் கைக்குள் பொத்தி வைத்திருக்கும் கனகாம்பர விதைகள் கை சூட்டிலும் வியர்வையிலும் 'பட்'  'பட்' என்று வெடித்ததைதான்!

இப்படி அவ்வப்பொழுது செடிகளையும் விதைகளையும் வாங்கி  வந்து நட்டு
எப்படி கவனித்தாலும் பெரிதாக  எதுவும்  வளரவில்லை.   ஒரே  ஒரு  முறை  ஒரு  ரோஜா  செடி நன்கு வளர்ந்து  நான்கைந்து பூக்களைக்  கொடுத்து   எங்களுக்கு  சந்தோஷம் அளித்தது. அதற்கு மேல் அதோடு மெனக்கெட முழு பரீட்சையும், கோடை  விடுமுறையும் இடம் கொடுக்கததால் ரோஜா செடி பட்டு போனது.  அதன் பிறகு என் தோட்ட கலை, வீட்டில் இருந்த துளசி செடிக்கு தண்ணீர் ஊற்றுவது மட்டும்தான்.

திருமணமாகி மஸ்கட் சென்ற பொழுதும் பின்னர் சென்னை திரும்பிய பிறகும் மணி பிளான்ட் வளர்க்கலாம் என்று இரண்டு மூன்று முறை முயற்சி செய்தேன். மணி பிளான்ட் நன்றாக இருக்கும் வரை ஓகே தான், அது காய்ந்தலோ கையில் இருக்கும் கொஞ்சம் சேமிப்பும் தடாலென்று கரையும்  வண்ணம்  பெரிய செலவு  ஏதாவது வந்து விடும். எதற்கு வம்பு என்று மணி பிளான்ட் ஆசைக்கு முடிவு கட்டினேன்.

அப்பொழுதுதான் கள்ளிச்செடி(cactus) வீட்டில் வளர்ப்பது நல்லது, திருஷ்டி தோஷங்களை நீக்கும் என்று  ஒரு புத்தகத்தில் படித்தேன். எனவே ஒரு கள்ளிச் செடியை வாங்கிக் கொண்டு வீட்டில் ஒரு தொட்டியில்
வைத்தேன். அதை வாங்கிக்கொண்டு வரும் பொழுது வேறு சில வேலைகளும்
இருந்ததால் வண்டியை இரண்டு மூன்று இடங்களில் நிறுத்தி அந்த
வேலைகளை முடித்துக்கொண்டு வந்தேன். நிறுத்திய இடங்களிலெல்லாம் எல்லோரும், " கள்ளி செடியா ? வீட்டுல வைக்க போறீங்களா" ? என்று விசாரித்தார்கள். இத்தனை பேர்களின் கண்களில்  விழுந்து விட்டது, அவ்வளவுதான் இது வந்த மாதிரிதான் என்று நினைத்தபடிதான் அதை 
வைத்தேன்.

பக்கத்தில் இருந்த ரோஜா செடிக்கு அளித்த கவனத்தில் பத்தில் ஒரு பங்கு கூட
இதற்க்கு கிடையாது. தண்ணீர் கூட எப்போதாவது விட்டால் போதுமே, ஆனாலும்  வஞ்சனை  இல்லாமல்  ரோஜாவை  விட நன்றாகவே வளர்ந்தது.

நான் ஊரில் இல்லாத மூன்று மாதங்களில் என் குழந்தைகள் அதை சுத்தமாகவே புறக்கணித்து விட்டார்கள் போலிருக்கிறது, வாடிப் போய்  விட்டது. அதை வைத்து ஒரு வருடத்திற்கும் மேலாகி விட்டது, அதன் லைப் அவ்வளவுதான் போலிருக்கிறது என்று நானும் பேசாமல் இருந்து விட்டேன். கோடை முடிந்து மழைக்காலம் தொடங்கியது தினசரி செடிகளுக்கு தண்ணீர் ஊற்றுவது போல  அன்றைக்கும் சென்றவளுக்கு ஒரு ஆச்சர்யம் காத்திருந்தது... காய்ந்து விட்டது என்று நினைத்த கள்ளிச் செடி மீண்டும் துளிர்த்திருந்தது..! காற்றில் இருக்கும் ஈரப்பதத்தை உறிஞ்சியே துளிர்த்து விடுமாமே! மீண்டும் துளிர்த்த கள்ளிச்செடியை இப்போதெல்லாம் நன்கு கவனித்துக் கொள்கிறேன்! இப்போது எனக்கு அதிகம் அலட்டிக் கொள்ளும் ரோஜாவை விட இந்த கள்ளியே மிகவும் பிடித்திருக்கிறது. தரையில் படுத்தபடி புத்தகம் வாசிக்கும் நான் யதேச்சையாக கள்ளியை பார்க்கிறேன், இந்த கோணத்தில் பூர்ண கும்பம் போலஅழகாகத்  தெரிகிறது.

வாழ்ந்தால் கள்ளி  போல வாழ வேண்டும் என்று தோன்றுகிறது. குறைந்த தேவைகள், எளிமையான வாழ்க்கை, தீமை தரும் புறச் சூழலை எதிர்த்து நிற்கும் உறுதி, அதோடு மற்றவர்களுக்கு உதவும் (மருத்துவ) குணம்.. அழகு கொஞ்சம் குறைச்சலாக இருந்தால்தான் என்ன?







 





   

Tuesday, April 24, 2012

அது ஒரு வேனிற் காலம்

அது ஒரு வேனிற் காலம்!

இப்போதெல்லாம் குழந்தைகளுக்கு கோடை விடுமுறை என்றல் உடனே அவர்களை எந்த சம்மர்  கோர்ஸில்  சேர்க்கலாம்  என்று ஆலோசித்து  அமல் படுத்துகிறார்கள், கூடவே  குழந்தைகளையும்  விடுமுறையை  அனுபவிக்க விடாமல்  படுத்துகிறார்கள்.  நாங்கள்  குழந்தைகளாக  இருந்த பொழுது  இதெற்கெல்லாம்  அவசியம் கிடையாது.  எல்லோருக்கும் கிராமத்தில்  தாத்தா பாட்டி இருந்தார்கள்.  அங்கு சென்று விடுவோம். ஒன்றரை மாதத்தை கிராமத்தில் சந்தோஷமாக
கழித்து விட்டு திரும்புவோம்.

மார்ச் மாதம் பிறந்த உடனேயே எங்கள் தாத்தா குழந்தைகளுக்கு எப்பொழுது பள்ளிக்கூடம் லீவு விடுகிறார்கள்? என்று கேட்டு கடிதம் எழுதி
விடுவார். அடுத்த கடிதத்தில் நாங்கள் ஊருக்குச் செல்ல நல்ல நாள் எது என்றும்
குறித்து அனுப்பி விடுவார். பரீட்சை முடிந்ததும் அந்த நாளில் நாங்கள் பெரும்பாலும்
ஒரு அம்பாசிடர் வாடகை கார் எடுத்துக் கொண்டு ஊருக்கு கிளம்புவோம்.
அந்த காரில் எங்கள் குடும்பத்தை சேர்ந்த எட்டு பேர்களோடு பாட்டி, பெரும்பாலும்
ஒரு மாமா மற்றும் டவுனில் வசித்து வந்த எங்கள் அத்தையும் சேர்ந்து கொள்வார்.
கால் வலிக்கிறது என்றெல்லாம் சொல்ல முடியாது. கொஞ்ச நேரம் பொறுத்துக்
கொள்ள முடியாதா? என்று அம்மா அதட்டுவாள். பெரும்பாலும்  காரை  விட்டு  இறங்கும் பொழுது கால் மரத்து போய் விடும்.

சில சமயம் புகை வண்டியிலும் சென்றிருக்கிறோம். அது ஒரு பெரிய ப்ராசெஸ். திருச்சியிலிருந்து பூதலூருக்கு புகை வண்டியில்
சென்று விட்டு அங்கிருந்து திருக்காட்டுப்பள்ளிக்கு பேருந்தில் செல்ல வேண்டும்.
பிறகு திருவையாறு அல்லது தஞ்சாவூர்  செல்லும் மற்றொரு  பேருந்தில்
பயணித்து எங்கள்  ஊரின்  மெயின்  ரோடில்  இறங்கிக்  கொள்ள  வேண்டும்.  அங்கே நாங்கள் வருவது தெரிந்திருந்தால் மாமா மாட்டு வண்டி கட்டிக்கொண்டு வந்து எங்களுக்காக காத்திருப்பார். அப்படி இல்லாவிட்டால் மெயின் ரோடில் இறங்கிக் கொண்ட நாங்கள் வந்திருப்பதை அங்கிருக்கும் யார் மூலமாவது சொல்லி அனுப்பினால்
கொஞ்ச நேரத்தில் மாமா வண்டி கட்டிக் கொண்டு வருவார். அவர் வரும் வரை கும்மிருட்டில் காத்துக்கொண்டு இருப்போம். அப்படி காத்துக்கொண்டிருக்கும் பொழுது பக்கத்தில் இருக்கும் டீ கடையிலிருந்து மினுக் மினுக் என்ற வெளிச்சமும், ரேடியோவில் 'மாலை பொழுதின் மயக்கத்திலே.. ' பாடலும் வரும். இப்பொழுது கூட அந்தப் பாடலை கேட்க நேரும் பொழுதெல்லாம் ஒரு அமானுஷ்ய உணர்வு என்னை ஆட்கொள்ளும்.

நாங்கள் ஊருக்குச் சென்றதும் வண்டியில் இருந்து இறங்கும் எங்கள் ஒவ்வருவரையும் குறட்டில் (குறடு என்பதை போர்டிகோ என்று கூறலாம்)நின்று கொண்டிருக்கும் தாத்தா  தனித்தனியாக பெயர் சொல்லி வாஞ்சையோடு வரவேற்பார்.

மறு நாள் முதல் எங்கள் கோடை விடு முறை தொடங்கும். அப்பொழுதெல்லாம்
அகிரஹாரங்களில் காலையில் பிரேக் ஃபாஸ்ட்  பெரும்பாலும் கிடையாது. ப்ரெட்? (அதெல்லாம் ஜுரம் வந்தால்தான் சாப்பிடனும்.), ஓட்ஸ் (அப்படினா..?) போன்றவைகளும் பழக்கம் கிடையாது.   குழந்தைகளுக்கு பழைய  சாதத்தைதான்  பிசைந்து போடுவார்கள்.  சமையல்  அறையில் பழையது மேடை என்றே தனியாக ஒன்று இருக்கும்.முதல் நாள் இரவு மீந்து போகும் சாதத்தில் தண்ணீர் ஊற்றி ஒரு கல் சட்டியில் வைத்து விடுவார்கள், ஒரு வேளை சாதம் மீறவில்லை என்றால்  மறு நாள் குழந்தைகளுக்கு  போடுவதர்க்காகவே  சாதம்  வெடித்து  அதில் தண்ணீர் ஊற்றி வைப்பார்கள். அடுத்த நாள் ஊறிய சாதத்தில் கெட்டி தயிர்  ஊற்றி பிசைந்து கோடை கால  சிறப்பு  ஊறுகாய்   வகைகளான  வடு மாங்காய், ஆவக்காய்,   மாங்காய்  தொக்கு  இவைகளோடு  சேர்த்து   போடும் வேலை அம்மா  வீட்டில்  மாமிகளுள்  ஒருவருக்கு,  அப்பா  வீட்டில்  கடைசி  அத்தைக்கு.  நாங்களெல்லாம் அப்பொழுது குழைந்தைகளாக இருந்தோம் இன்னும் சம்பாதிக்க ஆரம்பிக்கவில்லை ஒரு வேளை சம்பாதிக்க   ஆரம்பித்திருந்தால் எங்கள் சம்பளத்தை அந்த பழையது,ஊறுகாய் சுவைக்கு அப்படியே கொடுத்திருப்போம்!

எங்கள் அம்மாவிற்கு பிறந்த வீடு புகுந்த வீடு இரண்டுமே ஒரே ஊரிலேயே அமைந்து விட்டதால் எங்களுக்கு இரண்டு தாத்தா  வீடுகளுமே அதே ஊராகி விட்டது. அதில் இருந்த ஒரு சௌகரியம் ஒரு தாத்தா வீட்டில் கீரை மசியல், அரிசி உப்புமா போன்ற பிடிக்காத ஐட்டம்கள் இருந்தால் மற்றொரு வீட்டிற்க்கு சென்று விடுவோம். சில சமயங்களில் இரண்டு வீடுகளிலுமே அரிசி உப்புமா செய்து எங்களுக்கு
பல்ப் கொடுப்பார்கள்.

அம்மா வீட்டில் (தெற்குத் தெரு) காலை சமையல் சீக்கிரம் ஆகி விடும். அங்கு சாப்பிட்டு விட்டு அப்பா வீட்டிற்கு (வடக்குத் தெரு) சென்றால் அப்போதுதான் சாப்பிட உட்கார்ந்திருப்பார் கள். "வா சாப்பிட உட்கார்" என்று அழைக்கும் சின்னத் தாத்தாவிடம் "அந்தாத்தில் சாப்பிட்டு விட்டேன்" என்றால் கோபம் வந்து விடும். "அங்கே சாப்பிட்டு விட்டு இங்கே எதற்கு வருகிறாய்?" என்று கோபிப்பார். அதனால் பேசாமல் சாப்பிட உட்கார்ந்து விடுவோம். அம்மாவிற்கு நாங்கள் அங்கு சாப்பிட்டிருப்போம் என்பது தெரியும். அதனால் கொஞ்சமாக பரிமாறுவார்.

ஸ்நாக்ஸ்...? முறுக்கு, பொருவிளங்கா உருண்டை, மனோகரம் போன்றவைதான். பாட்டியின் மனோகரம் டென்னிஸ் பந்து சைஸில் இருக்கும். அம்மா வீட்டில் ஆணோ, பெண்ணோ தலைக்கு இரண்டு முறுக்கு, ஒரு பொ.வி.உருண்டை கிடைத்து விடும். அப்பா வீட்டில் கொஞ்சம் பாரபட்சம் உண்டு. ஆண் பிள்ளைகளுக்கு இரண்டு முறுக்கு ஒரு பொ.வி.உருண்டை என்றால் பெண் குழந்தைகளுக்கு ஒரு முறுக்கு, ஒரு பொ.வி. உருண்டைதான். எங்கள் அத்தையின் பையன்கள் பட்டத்தை வினியோகிக்கும் பெரிய அத்தையை (அப்பாவின் அத்தை) ஏமாற்றி எங்களுக்கும் இரண்டு முறுக்கு கள் வாங்கித் தருவார்கள்.

பகல் வேளைகளில் வீட்டிற்குள் புளியங்காய், பல்லாங்குழி, தாயகட்டம்(இதில் சண்டை வராமல் இருக்காது), கேரம், பெரியவர்களுக்கும் தெரியாமல் சீட்டாட்டம், சிறிது நாட்களுக்குப் பிறகு பெரியவர்கள் கண்டு கொள்ளாமல் விட்டு விட்டார்கள். அதில் ட்ரம்ப் விளையாடும் பொழுதும் சண்டை வரும்.  மாலையில் ஐ ஸ்பை, நொண்டி போன்றவை விளையாட ஊரில் இருக்கும் குழந்தைகள், விடுமுறையில் ஊருக்கு வந்திருக்கும் குழந்தைகள் என்று ஒரு பட்டாளம் களத்தில் இறங்கும். 

இரவு ஏழரைக்கு சாப்பாடு ஆகி விடும். பெரும்பாலும் ஒரு துவையல் சுட்ட அப்பளம், அல்லது வற்றல் குழம்பு, வதக்கல் கறி இதுதான் மெனு.  சில நாட்கள் இரண்டு பெரிய அடுக்குகளில் ஒன்றில் ரசம் சாதம், இன்னொன்றில் தயிர் சாதத்தை மாமி பிசைந்து கொண்டு வந்து வைக்க, பாட்டி கையில் உருட்டி போடுவார். 

அதன் பின்னர் சாயங்காலமே தண்ணீர் கொட்டி காய்ந்த முற்றத்தில் ஜமக்காளத்தை விரித்துப் படுத்தால் வானில் கொட்டிக் கிடக்கும் ஆயிரம் நட்சத்திரங்களும் நமக்குத்தானே..!

கோடைக்கால இன்னும் சில சுவாரஸ்யங்கள் அடுத்த பதிவில்.


    



 








    

Tuesday, March 6, 2012

காதலில் சொதப்புவது எப்படி?


தமிழ் சினிமாவுக்கு இப்போது பரிசோதனை காலம்.  புதுப்புது இளைஞர்கள் புத்தம் புது ஐடியாக்களோடு
தமிழ் சினிமாவை ஒரு கை பார்த்து விடுவது என்று பரிக்ஷார்த்த
முயற்சிகளில் இறங்குகிறார்கள். பரிக்ஷார்தம் என்றதும் பயந்து
விட வேண்டாம், உலகத்து சோகத்தையே சுமக்கும் கதாநாயகி,
இருட்டு, அதீத வன்முறை போன்றவைகள் கிடையாது. யதார்த்தமான
கதை, சுவாரஸ்யமான சம்பவங்கள், நமக்கு மிகவும் பரிச்சயமான கதா
பாத்திரங்கள் என்று நம்முடைய உலகத்தையே ஒரு தூரப்பார்வையாக
நம்மை பார்க்க வைக்கும் முயற்சி! அப்படி ஒரு நல்ல முயற்சிதான் அறிமுக
இயக்குனர் பாலாஜி மோகனின் 'காதலில் சொதப்புவது எப்படி?' படம்.

கதை என்று  சொல்ல  பெரிதாக   எதுவும்  இல்லை, பொறி இயல் கல்லூரியில் படிக்கும் அன்பான குடும்ப சூழலை கொண்ட சித்தார்த்துக்கும்,   அதே கல்லூரியில் படிக்கும் எப்போதும் சண்டை போட்டு கொண்டிருக்கும் விவகாரத்தை எதிர் பார்த்து காத்து கொண்டிருக்கும் பெற்றோரை  
உடைய அமலா பாலுக்கும்  இடையே துளிர்க்கும் காதல், அது சந்திக்கும் நெருக்கடிகள்தான் தீம். கதையை நகர்த்திச் செல்வதற்காக பிரியப் பார்க்கும் அமலா பாலின் பெற்றோர்களின் ஊடலும், சித்தார்த்தின் நண்பர்களின் காதல் சொதப்பல்களும் ஊறுகாயாக உதவுகின்றன. ஆனால்
சைட் டிஷ்ஷின் அளவு மெயின் உணவின் அளவை விட அதிகமாக இருப்பது கொஞ்சம் தமாஷ்தான். இட்லியை சாம்பாரில் தோய்த்து சாப்பிடுபவர்களும் உண்டு, சாம்பாரில் மூழ்க வைத்து குடிப்பவர்களும் உண்டு. பாலாஜி மோகன் இரண்டாம் வகையைச் சேர்ந்தவர் போலிருக்கிறது.

நகைச்சுவைக்கு முக்கியத்துவம் அளித்து காட்சிகளை அமைத்திருப்பதில் தவறில்லை
அதற்காக அமலா பாலின் பெற்றோர்கள் மீண்டும் சேரும் காட்சியை கூட அப்படி காமெடி
ஆகியிருக்க வேண்டுமா என்ன?

பாத்திரங்களுக்கான  நடிகர்கள் தேர்வு கச்சிதம்! டைலர் மேட் ரோலில் சிக்கென
பொருந்துகிறார் சித்தார்த். ஒரு முழுமையான கத நாயகி ஆகிவிட்டார் அமலா பால்.
தன்னுடைய குரலால் அவருடைய நடிப்புக்கு உயிரூட்டியுள்ள தீப வெங்கட்டிற்கு
ஸ்பெஷல் சபாஷ்! ஒருவருக்கு மற்றவர் காம்ப்ளிமேன்றியாக ஒரு ஜோடியை
திரையில் பார்த்து எத்தனை நாட்களாகிவிட்டது?

படத்தின் ஆரம்ப காட்சிகள் நாளைய இயக்குனரை பெரிய திரையில் பார்ப்பது போல
அமெச்சூர் தனமாக இருந்தாலும் பின் பாதியில் நல்ல முதிர்ச்சி  வந்து விடுகிறது. இயக்குனர்
பாசாகி விடுகிறார், ஆனால் போக வேண்டிய தூரம் அதிகம். 

 பால்,சக்கரை, டிகாஷன் எல்லாம் சரியான விகிதத்தில்  கலந்த  இன்ஸ்டன்ட்  காபி!  இளைஞர்களுக்கு ருசிக்கும்.

     


  



      


Wednesday, February 29, 2012

Ra.Ganapathy

ரா.கணபதி கலியுக வியாசர்!
 


ஆன்மீகத்தில் ஈடுபாடு கொண்ட புத்தகப் பிரியர்களால் மறக்கப்பட முடியாத பெயர். இவருடைய 'அறிவுக்கனலே அருட்புனலே' புத்தகத்தை படித்து விட்டு நெகிழாதவர் இருக்க முடியுமா? இன்னும் 'காற்றினிலே வரும் கீதம்'-மீராவின்  சரிதம்,   சாரதா  தேவியின்  வாழ்க்கை  வரலாறான   அம்மா'... இப்படிஎத்தனை  நூல்கள்..! எல்லாவற்றிற்கும் சிகரமாக காஞ்சி மஹா பெரியவர்களின் உபதேசந்களை நேரில் அவர் வாய் மொழியாகவே கேட்பது போல அவர் தொகுத்து கொடுத்திருந்த 'தெய்வத்தின் குரல்'ஐ
கலியுக வேதம் எனலாம். மகாபாரதத்தை வேதா வியாசர் கூற கணபதி எழுதியதாக புராணம் கூறும். இக்கலியிலோ நடமாடும் தெய்வமாக விளங்கிய காஞ்சி மஹான் உபதேசம் வழங்க அதை இந்த கணபதி தொகுத்து வழங்கி இருக்கிறார்!


இவரின் இன்னொரு சிறப்பு காஞ்சி பெரியவரின் சீடராக இருப்பவர் சாய்பாபாவை ஒப்புக்கொள்ள மாட்டார் என்னும் கருத்துக்கு மாற்றாக புட்டபர்த்தி சாய்பாபாவின் பரம பக்தராகி அவரைப் பற்றியும் பல அற்புத நூல்களை எழுதி இருக்கிறார்.
இப்படிப்பட்ட ஒரு நல்ல ஆத்மா சிவராத்திரி அன்று தன் உடலை உகுத்திருப்பது. சாதாரணமாக சைவர்கள் யாராவது இறந்து விட்டால் சிவனடி சேர்ந்தார் என்பார்கள், இவரோ சிவ ராத்திரி அன்றே மரணமடைந்திருப்பது எப்படிப் பட்ட பாக்யம்!    
         
             

Sunday, January 1, 2012

திருச்சேறை சரநாதப் பெருமாள்



திருச்சேறை சரநாதப் பெருமாள் 




அடுத்து நாங்கள் சென்றது திருச்சேறை சாரநாத பெருமாள் கோவிலுக்கு.
108 வைணவ திருப்பதிகளுள் ஒன்று.  சார பெருமாள்,சார நாயகி(தாயார்),சார விமானம், சார புஷ்கரிணி என்னும் பெருமைகளை உடையது! இதைத் தவிர இங்கு ஐந்து தாயார்களை சேவிக்கலாம்.

தனி சந்நிதி கொண்டுள்ள சரநாயகி, உற்சவரோடு ஸ்ரீ தேவி, பூதேவி,
அகலகில்லேன் என்று பெருமாளின் திருமார்பில் உறையும் திருமகள்,அவர்
அணிந்திருக்கும் பதக்கத்தில் மஹா லக்ஷ்மி இப்படி இந்த ஒரு கோவிலில் மட்டும் தாயார் ஐந்து வடிவங்களில் எழுந்தருளி நமக்கு அருள் செய்ய காத்திருக்கிறாள்! இந்த கோவிலின் தல புராணமும் மிகச் சுவையான ஒன்று!

ஒரு முறை கங்கை, காவேரி, யமுனை, கோதாவரி போன்ற புண்ணிய
நதிகள் யாவும் பேசி, விளையடிக்கொண்டிருந்தன! அப்போழ்து அவ்வழியே வந்த முனிவர் ஒருவர் உனக்கு வணக்கம் என்று கூறிச் சென்றார். அவர்
தன்னைத்தான் வணங்கினார் என்று  கங்கையும்  காவிரியும்  தங்களுக்குள்  வாக்குவாதம் செய்து கொண்டனர். அந்த சமயத்தில் அதே முனிவர்  மீண்டும்    அவ்வழியே திரும்பி வர அவ்விரு நதிப் பெண்களும் அந்த முனிவரிடம் சென்று," நீங்கள் யாரை வணங்கினீர்கள்"? என்று வினவ அவர், "உங்கள் இருவரில் யார் உயர்ந்தவரோ அவரை வணங்கினேன்" என்று  சாமர்த்தியமாக பதில் சொல்லிவிட்டு சென்று விட்டார்.

மீண்டும் வாக்குவாதத்தில் ஈடுபட்ட அவ்விருவரும் ப்ருஹ்மாவிடம் சென்று தங்களுள் உயர்ந்தவர் யார் என்று கேட்க, அதற்கு பிரம்மா, "கங்கை  தேவ லோகத்தில் இருந்து வந்தது, சிவ பெருமான் தன் சிரசில் அதை சூடிக் கொன்டுள்ளார், திருமால் வாமனனாக வந்து த்ரிவிக்ரமனாக  உயர்ந்த  பொழுது விண்ணுலகுக்கு சென்ற அவர் திருவடியை நான் ஆகாய
கங்கையால்தான் நீராட்டினேன், எனவேதான் கங்கையில் குளிப்பது சகல பாபங்களையும் போக்க வல்லது, இத்தகைய புண்ணிய தன்மைகளால் உங்கள் இருவரில் கங்கையே உயர்ந்தவள்" என்று கூறிவிட, இதனால் வருத்தம் அடைந்த காவிரி தானும் கங்கையைப் போல் புனிதத் தன்மை அடைய என்ன செய்ய வேண்டும் என்று வினவ, திருமாலை குறித்து தவம் புரிய வேண்டும் என்றார். உடனே காவேரி இங்குதான் திருமலை குறித்து தவம் இயற்றத் தொடங்கினாள் அவளது தவத்தில் மகிழ்ந்த திருமால் அவள் விரும்பும் வரத்தை கேட்க,காவிரி தானும் கங்கைக்கு ஈடான புனித தன்மையைப் பெற வேண்டும் என்று வேண்ட திருமால் அதை அருளியதோடு துலா  மாதத்தில் (ஐப்பசி   மாதத்தில்) காவிரியில் நீராடுவதால் கங்கையில் நீராடிய பலனை அடையலாம் என்று அருளியதோடு தான் ஒரு சிறு குழந்தையாக மாறி அவள் மடியில் தவழ்ந்து விளையாடினார். இன்றும் கருவறையில் சாரநாத பெருமாளுக்கு அருகே தவம் செய்யும் காவிரியின் திருவுருவச் சிலையையும் தரிசிக்கலாம். அதோடு மட்டுமல்ல காவிரியின் மடியில் குழந்தையாக பெருமாள் தவழும் அற்புத சிறிய மூர்த்தத்தை நம் கையில் கொடுத்து வணங்கச் சொல்கிறார்கள். நெக்குருக வணங்குகிறோம்! பெருமாளை மட்டுமல்ல இத்தனை விஷயங்களையும் எங்களுக்கு அழகாக விளக்கி சிறப்பாக தரிசனம் செய்துவித்த பட்டாசாரியாரையும்தான்!

தை பூசத்தன்று இங்கு தீர்த்தவாரி விசேஷம்! திருமங்கை ஆழ்வாரால் மங்களா சாசனம் செய்யப்பட்ட இக்கோவில் கும்பகோணம் திருவாரூர் சாலையில் திருநாரையூரிலிருந்து   3  km  தொலைவில் உள்ளது.குடந்தையிலிருந்து ஏராள பேருந்து,கார் மற்றும் ஆட்டோ வசதி உண்டு. ஒரு முறை சென்று சாரநாத பெருமாள், ஐந்து  தாயார்கள் மற்றும் காவேரி அம்மனை வழிபட்டு வாருங்கள்.        









































Sunday, December 18, 2011

சென்னையில் ஒரு மழைக் காலம்:(((

சென்னையில் ஒரு மழைக் காலம்:(((





முன் குறிப்பு:இதை படிக்கும் முன் கிரி படத்தில் வரும்
வடிவேலு,ஆர்த்தி காமெடி சீனை நினைவுப் படுத்திக் கொள்ளுங்கள். 

நான் மாமா வீட்டிற்கு சென்ற பொழுது மாமா கை, கால், மண்டை என்று பல இடங்களில் காயத்தோடும் அதில் கட்டோடும் காணப்பட்டார்.

என்ன மாமா என்ன ஆச்சு?

ஒன்னுமில்லப்பா, மழையில கொஞ்சம் வெளில போக வேண்டி வந்தது.

அப்படி என்ன மாமா முக்கியம்? மழை நின்ன பொறவு போக வேண்டியதுதானே?

இல்லப்பா, ரொம்ப தோஸ்து, ஆஸ்பத்ரில  சீரிஸா  இருகார்னாங்க  போகாம  இருக்க முடியுமா..?

சரி பஸுல போக வேண்டியதுதானே?

அது எங்கப்பா வருது..? அவசரத்துக்கு ஆகுமா?

ஆட்டோ புடிக்க வேண்டியதுதானே..?

சரிதான் மழைல ஆட்டோவா?  என்னோட  ஒரு  மாச  சம்பளம்  முழுசையும்  ஆட்டோவுக்கு கொடுத்துட்டு நான் என்ன பண்ணறது? சரி நமக்கு தெரிஞ்ச
ரோடுதானே? எங்க பள்ளம் எங்க குழி எல்லாம் தெரியும் என்கர தைரியத்தில் டூ வீலரில்  கிளம்பினேன்..

மெயின் ரோடுல போனா அங்க ட்ராபிக் ஜாம்... சரி
பரவாயில்லன்னு குறுக்கு ரோடுல நொழஞ்சேன்.. மொதல்ல நல்லாத்தான் இருந்துச்சு.. திடீர்னு ஒரு பள்ளம்... அவ்வளவு பெரிய பள்ளமா இருக்கும்னு எதிர் பார்கல... வண்டியோட விழுந்துட்டேன்..  கைல அடி..

அய்யய்யோ!

சமாளிச்சு எழுந்து மெதுவா ஒட்டிகிட்டே வந்து மெயின் ரோடு நல்லாத்தான் இருக்கும்னு ந...ம்...ம்...பி    திரும்பிட்டேன், அங்க லைட்டே  எரியல, வண்டி கீழ விழுந்ததுல ஹெட் லைட்டும் எரியல, ரோடுல கிடந்த ஒரு கல்லுல மோதி மறுபடியும் கீழ விழுந்தேன்
காலுல,தலைல அடி,

அடடா! நீங்க சொல்றதப் பார்த்தா நம்ம கவுன்சலர் வீடு வழியாத்தான்
வந்துருக்கீங்க... அப்படியே அவரப் போய் பார்த்து ரோடைப்பத்தி கம்ப்ளைன்ட் பண்ண வேண்டியதுதானே...?

போய் சொன்னேனே...அவரு என்னைப் பார்த்து ஒரு
வார்த்தை சொல்லிட்டார் ...

அப்படி என்ன சொன்னார்?

இவன்  ரொ...ம்ம் ...ப.. நல்லவன்டா... ரோடு எவ்ளோ மோசமா இருந்தாலும் ஓட்டறான் ன்னு சொல்லிட்டாரே...!
ஓஓஒ!

பி.கு. : இது என்னுடைய ஒரு பழைய பதிவு. சென்னையில் கொஞ்சம் மழை பெய்கிறது. எங்கள் பகுதியில் நன்றாக இருந்த சாலைகளையெல்லாம் மெட்ரோ வாட்டர் இணைப்பிற்காக தோண்டி, குத்தி, கிளறி போட்டிருக்கிறார்கள். நாங்கள் படும் அவஸ்தையை உங்களுக்கு உணர்த்த இதை பகிர்கிறேன்.















Sunday, December 11, 2011

mayakkam enna - review

மயக்கம் என்ன? - விமர்சனம்


தமிழ் சினிமாத் தனங்களை தைரியமாக தாண்டும் மற்றும் ஒரு செல்வராகவன் படம்.

வைல்ட் லைப் போடோக்ராபெராக ஆசைப்படும் கார்த்திக் சுவாமிநாதன் (தனுஷ்) அவருடைய ஆதர்ச புகைப்பட கலைஞர் மாதேஷ்  கிரிஷ்ணச்வாமியால்  (ரவி பிரசாத்)  வஞ்சிக்கப்பட்டு விபத்துக்குள்ளாகி, குடிக்கு அடிமையாகி பாதை மாறுவதும், சகிப்பு தன்மையும், காதலும்,பெருந்தன்மையும் கொண்ட மனைவியால் தன் இலட்சியத்தை அடைவதும் பொறுமையாக செல்வராகவன் வழியில் சொல்லப்பட்டிருக்கின்றது.

தனுஷின் கலைப் பயணத்தில் ஒரு முக்கியமான  படம். படம் முழுவதும் அவரைச் சுற்றியே சுழுல்கிறது.  சும்மா சொல்லக்கூடாது அவரும் தொழில் வேட்கை, நண்பனின் தோழியை காதலியாக்கிக் கொள்ளும் போது குற்ற உணர்ச்சி, தான் ஆதர்சமாக கொண்டவரே தன்னை வஞ்சிக்கும் பொழுது கழிவிரக்கம், குடி வெறி, இறுதியில் அமைதி என்று அத்தனை உணர்வுகளையும் அழகாக வெளிப்படுத்தி தேசிய விருதை நியாயப்படுத்துகிறார்!  ரிச்சா..?  ம்ம்ம் ...ம்ஹூம்! ஏன் எப்பொழுதும் வெறித்த பார்வையோடு இருக்கிறார் என்று புரியவில்லை, குரல் கொடுத்தவரும் உலர்ந்த குரலில் பேசுகிறார்.

முதல் காட்சியில் தனுஷும் அவருடைய நண்பனும் குடித்து விட்டு,அவ கலீஜுடா, உன் கிட்டேயும் சரி என்று சொல்லிவிட்டு என் கிட்டேயும் சரி என்று சொல்ரா. அவ வேண்டாம்ட, என்று பேசிக் கொண்டே இருக்கும் பொழுது வெளியே யாமினியின்(ரிச்சா) குரல் ஒலிக்கிறது, கண்களில் காதல் தவிப்போடு ஜன்னல் வழியே தனுஷ் பார்க்கிறார், அடுத்த காட்சி தனுஷுக்கும் ரிச்சாவுக்கும்  திருமணம்....  வழக்கமான சினிமா போல இது கனவு என்று காட்சி முடியும் என்று நினைக்கிறோம், நல்ல வேளை அப்படி இல்லை. அதே போல தான் எடுத்த புகைப் படங்களை ரவி பிரசாத் தன் பெயரில் பிரசுரித்துக் கொள்ளும் போழ்து வழக்கமான சினிமா கதா நாயகன் போல அவருடைய சட்டை காலரை பிடித்து உலுக்காமல் யதார்த்தமாக கெஞ்சும் பொழுதும் செல்வராகவன் பளிச்சிடுகிறார்.

படத்தின் குறிப்பிடத்தக்க இன்னும் இருவர் ஒளிப்பதிவாளர், மற்றும்  இசை அமைப்பாளர் ஜி.வீ.  பிரகாஷ் ! இயக்குனரோடு கை கோர்த்து அருமையாக பணியாற்றி உள்ளனர்.

நாலு டூயெட், ரெண்டு பைட், தனியாக காமெடி ட்ராக் என்றெல்லாம் இல்லாத, நேர்த்தியாக எடுக்கப்பட்டிருக்கும் வித்தியாசமான படம்! ரசிக்கலாம் கொஞ்சம் பொறுமை வேண்டும்!