கணம்தோறும் பிறக்கிறேன் 

Tuesday, March 12, 2019

மசாலா சாட்

மசாலா சாட்


கொஞ்ச நாட்களாக ஒரே அலைச்சல்! "பேசாமல் பெங்களூருக்கும், சென்னைக்கும் சீசன் டிக்கெட் வாங்கி வைத்துக் கொண்டு விடு" என்று சிலர் ஆலோசனை கூட சொன்னார்கள். 

இந்த மாதிரி  பயணங்களால் என் பூஜை புனஸ்காரங்கள்(பெரிதாக ஒன்றும் இல்லை), காலை ஆறு மணிக்கு கண்களை மூடிக்கொண்டு அமர்ந்து எண்ணங்களை வேடிக்கை பார்ப்பது(இதை தியானம் எனலாமா?),  கை, கால்களை பவர் யோகா என்னும் பெயரால் அசைப்பது, சுதர்ஷன் க்ரியா, போன்றவை பாதிக்கப்படுகின்றன. இன்னொரு பாதிப்பு வலையுலகத்திற்கு வர முடியாமல் போவது. செல் போனில் பதிவுகளை படித்து, பின்னூட்டமிடுவது கொஞ்சம் கஷ்டமாகத்தான் இருக்கிறது. 

"ஏற்கனவே பேய்க்கோலம் அதில் இன்னும் கொஞ்சம் அக்கிலி  பிக்கிலி" என்று என் அம்மா ஒரு சொலவடை சொல்லுவாள். அதைப் போல சாதாரணமாகவே நான் பின்னூட்டமிடுவதில் கொஞ்சம் மோசம், எல்லா பதிவுகளிலும், கடைசி பின்னூட்டம் என்னுடையதாகத்தான் இருக்கும். பயணங்கள் என் பங்களிப்பை இன்னும் கொஞ்சம் தாமதித்து விடுகின்றன. போதும் போதாதற்கு கணினிக்கும் வைஃபாய்க்கும் ஊடல். எப்போது சரியாகுமா?  தவிர பன்னிரெண்டாம் தேதி வரை கொஞ்சம் வேலை அதிகம். 

சென்னையில் நான் கலந்துகொண்ட திருமணத்தில் எண்பது வயதைக் கடந்த மணப்பெண்ணின் தாத்தாவும், பாட்டியும், தங்கள்  உடல் நிலையையும் பொருட்படுத்தாமல்,திருமணத்திற்கு வந்தவர்களை வரவேற்பது, ரிடர்ன் கிஃபிட் கொடுப்பது,என்று சுறுசுறுப்பாக இயங்கியது எனக்கு மிகவும் பிடித்திருந்தது. தாத்தாவுக்கு தினசரி இரண்டுமுறை டயாலிசிஸ் செய்யப்பட வேண்டும். பாட்டி சில மாதங்களுக்கு முன் இதய பாதிப்பால் பெட் ரெஸ்டில் இருந்தார்.  இருந்தாலும் அதையெல்லாம் பொருட்படுத்தாமல் அவர்கள் செயல்பட்ட விதம் மெச்சத்தகுந்ததுதான். அந்த திருமணத்தில் என்னை கவர்ந்த இன்னொரு விஷயம் ஸ்மைலி உருவங்கள் வரையப்பட்டிருந்த ஆரஞ்சுகள். 



Image result for balasaraswathiImage result for madurai somu




இந்த வருடம் மதுரை சோமுவிற்கு மட்டுமல்ல, நாட்டியதாரகை பாலசரஸ்வதிக்கும் நூற்றாண்டு. 

இளையராஜா எழுபத்தைந்து நிகழ்ச்சியை என் கணவர் பார்த்ததால், நானும் பார்க்க நேர்ந்தது. இளையராஜா என்றாலே நம் நினைவுக்கு வரும் வைரமுத்து, எஸ்.பி.பி., ஜானகி போன்றவர்கள் எங்கே? வைரமுத்துவோடும், எஸ்.பி.பி.யோடும் லடாய், ஜானகி? நான் பார்த்தது முதல் எபிசோட்தான். ஒருவேளை அடுத்த எபிசோடுகளில் வரலாம்.

ஆடலும், பாடலும் நம்முடைய வழிபாட்டு முறைகளில் ஒன்று. இதற்கு முக்கிய காரணம், கைகளை கொட்டி பாடுவதும், லஜ்ஜை விட்டு ஆடுவதும் மிகச்சிறந்த ஸ்ட்ரெஸ் பஸ்டர்ஸ்(மனமிளக்கிகள் எனலாமா?). அதனால்தான் நம் கடவுளர்களையும் இசையோடும், நடனத்தோடும் சம்பந்தப்படுத்தியிருக்கிறோம் போலிருக்கிறது. 
"நீ உட்கார்ந்து பஜனை செய்தால், நான் அதை நின்று கொண்டு கேட்கிறேன், நீ நின்று கொண்டு பஜனை செய்தால் நான் அதை நடனமாடி ரசிக்கிறேன், நீ ஆடிக்கொண்டே பஜனை செய்தால்,அதை நான் உன் காலடியில் உட்கார்ந்து கேட்கிறேன் " என்பாது ஷீர்டி சாய்பாபாவின் வாக்கு. 

சம்பிரதாய ஹரி பஜன் என்பவற்றில் ஆண்கள்தான் முன்பெல்லாம் பாடுவார்கள். ராதா கல்யாணம், சீதா கல்யாணம் போன்றவை செய்யும் பொழுது அஷ்டபதிகளை பாடுவார்கள், அதில் நடனமும் பிரதான இடம் பிடிக்கும். ஆடுபவர்கள் எல்லோரும் ஆண்கள்தான். 

இப்போது, அப்படிப்பட்ட ராதா, சீதா கல்யாணங்களை வெகுவாக சுருக்கி விட்டார்கள். பெண்கள் மட்டும் நடத்தும் இவ்வகை பஜனைகளில் ஓரிரு ஆண்களும் பங்கேற்கிறார்கள். திருமணம், பூணூல் போன்ற நிகழ்ச்சிகளில் இப்படிப்பட்ட நிகழ்ச்சிகள் வைக்கப்படுகின்றன. சமீபத்தில் நான் கலந்து கொண்ட ஒரு திருமணத்தில் இப்படி பெண்கள் நடத்தும் ஒரு ராதா கல்யாண நிகழ்ச்சியை பார்த்தேன். அதில் அங்கு வந்திருந்த குழந்தைகளுக்கு சாமி பிள்ளையார், முருகன், மாரியம்மன், அய்யப்பன் ஹனுமான் போன்ற வேடங்களிட்டு அதற்கு சம்பந்தப்பட்ட பாடல்களை பாடிய வரை ஓ.கே. கிருஷ்ணனாக ஒரு ஆண்  குழந்தைக்கும், ராதையாக ஒரு பெண் குழந்தைக்கும் வேடமிட்டு, "மாலை மாற்றினாள், கோதை மலை மாற்றினாள் .." என்ற பாடலுக்கு ஆண் குழந்தை கழுத்தில் இருந்த மாலையை எடுத்து ஒருவர் பெண் குழந்தையின் கழுத்தில் போட்டார். பெண் குழந்தையின்  கழுத்தில் இருந்த மாலையை எடுத்து ஆண் குழந்தையின் கழுத்தில் போட்டார்.  எனக்கு மிகவும் அதிர்ச்சியாக இருந்தது. இது தவறல்லவா? 

வாட்ஸாப்பில் வந்த சில ஜோக்குகளோடு முடிக்கலாம்:

இந்த ஊரில் தங்க வீடு கிடைக்குமா?
கிடைக்காது, கூரை வீடு, ஓட்டு வீடு, மாடி வீடுதான் கிடைக்கும்.

இண்டெர்வியூவில் சேல்ஸ் மேனஜர்: உங்களுக்கு ஏதாவது விற்பனை அனுபவம் இருக்கிறதா?
ஓ! நிறைய, என் வீடு,கார்,மற்றும் என்னுடைய மனைவியின் அணைத்து நகைகளும் விற்றிருக்கிறேன். 

என்னங்க ஏன் அடிக்கடி சமையல் ரூம் பக்கம் அடிக்கடி போறீங்க?
டாக்டர்தான் சுகர் இருக்கான்னு செக் பண்ணிக்க சொன்னார் அதான்.

ஒரு காப்பி எவ்வளவு சார்? 
ஐந்து ரூபாய்
எதிர்த்த கடையில் ஐம்பது காசுன்னு எழுதியிருக்கே?
டேய்,சாவுகிராக்கி, அது xerox காபிடா! 
  

காதல் ஒரு மழை மாதிரி 
நனையும் பொழுது சந்தோஷம் 
நனைந்த பிறகு ஜலதோஷம் 

Thursday, March 7, 2019

யாமறிந்த பெண் எழுத்தாளர்களிலே ....

யாமறிந்த பெண் எழுத்தாளர்களிலே ....


மகளிர் தினத்தை ஒட்டி ஒரு பெண்கள் பத்திரிகை வெளியிட்டிருந்த சிறப்பிதழில் 'தமிழ் சினிமா கதா நாயகிகள் பற்றிய ஒரு கட்டுரை வாசித்தேன். 
உடனே 'எழுத்துலகில் பெண்கள்' குறிப்பாக பெண் கதாசிரியைகளைப்  பற்றி எழுதலாமே என்று தோன்றியது. ஆனால் தமிழில் எழுதும் எல்லோருடைய எழுத்தையும் நான் படித்ததில்லை, அதுவும் சமீப கால எழுத்தாளர்களின்  படைப்புகளை படிப்பதே இல்லை என்று கூட சொல்லலாம். இந்த நிலையில்நியாயமான மதிப்பீட்டை தர முடியுமா என்று தெரியவில்லை. எனவே நான் படித்த வரையில் பெண் எழுத்தாளர்களைப் பற்றிய என் பார்வை இது.

வை.மு.கோதைநாயகி அம்மாள்:




தமிழில் முதல் பெண் எழுத்தாளர்(கதாசிரியர்) என்றால் அது வை.மு. கோதை நாயகி அம்மாள்தான். அந்தண குலத்தில் பிறந்து, ஐந்து  வயதில்  திருமணம் செய்து கொண்டு, அதற்குப்  பிறகு  கணவரின்  தூண்டுதலால்  படித்து கதாசிரியராக பரிணமித்தவர். 115 புத்தகங்களை பிரசுரித்திருக்கிறார். ஜகன்மோகினி என்னும் பத்திரிகையின் ஆசிரியராகவும் இருந்திருக்கிறார். எழுத்தாளர், பேச்சாளர்,சுதந்திர போராட்ட வீராங்கனை,பாடகி என்ற பன்முகங்கள் கொண்டவர். ஒரு பத்திரிகையின் ஆசிரியர் குழுமத்தில் இடம் பெற்ற முதல் எழுத்தாளர். சென்சார் போர்ட் உறுப்பினராகவும் இருந்திருக்கிறார். இவருடைய  படைப்புகள்  சில  திரைப்படமாகவும்  வந்திருக்கின்றன. பிரமிக்க வைக்கும் சாதனையாளர்!

லக்ஷ்மி:

ஆனந்த விகடனின் ஆசி பெற்ற பெண் எழுதாளர்களில் முதன்மையானவர் லக்ஷ்மி! திரிபுரசுந்தரி என்னும் இயற் பெயர் கொண்ட இவர் ஒரு மருத்துவர். மெடிக்கல் காலேஜில் படிக்கும் காலத்திலேயே கதை எழுத ஆரம்பித்த இவரின் முதல் சிறுகதையான 'தகுந்த தண்டனையா'? மற்றும் முதல் நாவலான 'பவானி' இரண்டுமே ஆனந்த விகடனில்தான் வெளியாயின. பெண்களை மிகவும் கவர்ந்த நாவலாசிரியை.  இவருடைய  கதைகளில்  பவானி, மிதிலா விலாஸ்,  பண்ணையார்  மகள்  போன்றவை  பெரும்  வரவேற்பை பெற்றவை.   இவருடைய கதா நாயகிகள் அத்தனை பேருமே, "தற் காத்து, தற்  கொண்டார் பேணி, தகை சார்த்து, சொற் காத்து சோர்விலாள் பெண்" என்று  இலக்கணம் மாறாத பாரத நாரிகள். அடுத்தடுத்து துன்பங்களை அனுபவித்தாலும் இறுதியில் எல்லாம் சுபம் என்று முடியும் குடும்ப கதைகள்தான் இவருடைய களம்.


ஐம்பதுகளிலும், அறுபதுகளிலும் கோலோச்சிய பெண் எழுத்தாளர் இவர்.
இருபது வருடங்களுக்கும் மேலாக எழுதாமல் இருந்து விட்டு நீண்ட
இடைவெளிக்குப் பிறகு குமுதத்தில் இவர் எழுதிய 'அத்தை', ' என் பெயர் டீ.ஜி.கார்த்திக்' போன்ற நாவல்களும் பெரும் வரவேற்பை பெற்றது
இவருடைய எழுத்து திறனுக்கு ஒரு சான்று. 

இவருடைய காஞ்சனையின் கனவும், பெண் மனமும்(இருவர் உள்ளம்) திரைப்படங்களாகவும் வந்தன. பெண் மனம், மிதிலா விலாஸ் நாவல்கள் தமிழ் வளர்சிக் கழகத்தின் பரிசினையும், 'ஒரு காவிரியைப் போல்' நாவல் சாகித்திய அகடமியின் பரிசினையும் வென்றன. இவருடைய  கதைகளுக்கென்று ஒரு பார்முலா இருக்கும், அது  சுவாரஸ்யமாகவும்  இருக்கும் என்பதுதான் விஷயம்.

சிவ சங்கரி:

அறுபதுகளின் இறுதியில் எழுத ஆரம்பித்த இவர் கிட்டத்தட்ட முப்பது வருடங்களுக்கும் மேலாக கொடி கட்டி பறந்தார். இவரை அறிமுகப்படுத்தியது கல்கி என்றாலும் மேலே தூக்கி விட்டதில் ஆனந்த விகடனுக்கும், பத்திரிகை ஆசிரியர் சாவிக்கும் பெரும் பங்கு உண்டு. 

150க்கும் மேற்பட்ட சிறு கதைகள்,குறுநாவல்கள், 36 நாவல்கள், பல்வேறு கட்டுரைகள் எழுதியிருக்கிறார். இலக்கியம் மூலமாக இந்திய ஒருமைப்பாடு என்னும் பெயரில் இவர் நம் நாட்டின் எல்லா மொழிகளிலும் உள்ள சிறப்பான கதைகளை தொகுத்து வெளியிட்டிருப்பது ஒரு நல்ல முயற்சி. இவருடைய சில கதைகள் திரைப்படமாகவும், டி. வீ. சீரியல்களாகவும் வந்துள்ளன.



ஆளுமை கொண்ட எழுத்து இவருடையது. 1997 ஆம்  ஆண்டு  நமது  நாட்டின் சுதந்திர பொன்விழாவின் போது ஆங்கில பத்திரிகை பெமினா
இந்தியாவை  உருவாக்கிய  ஐம்பது  பெண்மணிகளுள்  ஒருவர்  என்னும்  விருதை வழங்கியது.  1999 ஆம் ஆண்டு  அமெரிக்காவில்  உள்ள  டென்னசி  மாகாண கவர்னர் ஊக பிரிட்ஜ் நகரத்தின்  கௌரவ  பிரஜை  விருதை  வழங்கி கௌரவித்தார். இதைத் தவிர  பல விருதுகளும், கௌரவங்களும்  பெற்றுள்ளார். 

தியாகு என்பதை  த் ...யா.. கூ  என்று இவர் எழுதியதை ஒற்றெழுத்து வார்த்தையின்
துவக்கத்தில் வராது என்னும் இலக்கணம் தெரியாமல் எழுதுகிறார் என்று சிலர் கண்டித்தார்கள். 

ஒரு உயர்ந்த பீடத்தில் உட்கார்ந்து கொண்டு உபதேசம் செய்வதும்,கதையில் சமையல் குறிப்பு எழுதுவதும், கதை மாந்தர்கள் அமைப்பில் இவர் அதிகம் தெரிவதும் இவருடைய குறைகள். கதாசிரியராக தொடங்கிய  இவருடைய  பொது வாழ்க்கை சமூக  ஆர்வலராக  பரிணமித்தது.

இந்துமதி:


முதலில் கணையாழி போன்ற இலக்கிய பத்திரிகைகளில் எழுதிக் கொண்டிருந்த இவர் அனந்த விகடன் மூலம் வெகுஜன பத்திரிகை உலகில் பிரவேசித்தார்.  கிடாரில் கர்நாடக சங்கீதம் வாசிப்பது போல துள்ளலும்,இளமையும், இனிமையும் கொண்டது இவருடைய எழுத்து. இவருடைய  'தரையில் இறங்கும் விமானங்கள்' மற்றும் 'வீணையில் உறங்கும் ராகங்கள்' இரண்டும் மிக நல்ல இலக்கிய படைப்புகள். என் வாசிப்பு அனுபவத்தை அடுத்த  படிக்கு  எடுத்துச்  சென்றவர்களில்  இவருக்கு முக்கிய இடம் உண்டு. இவர் எழுத்தை படித்து விட்டுதான் நான் தி.ஜானகிராமன் எழுத்துக்களை வாசித்தேன். அங்கிருந்தது கு.ப.ரா., புதுமைப்பித்தன் என்று என் வாசிப்பு விரிந்தது.

வாஸந்தி:

ஆனந்த விகடன் ஆதரவு பெற்ற மற்றொரு எழுத்தாளர். அதுவரையில் தமிழ் நாட்டை மட்டும் குறிப்பாக  சென்னையை மட்டும் சுற்றி வந்து கொண்டிருந்த தமிழ் கதையுலகை வட  இந்தியாவிற்கு கொண்டு சென்றவர். தன்னை பெமினிஸ்ட் என்று இவர் கூறிக்  கொண்டாலும் நடு நிலைமையில் நின்று எழுதக் கூடிய நல்ல எழுத்தாளர். அம்மணி போன்ற அருமையான நாவலை ஒரு பெமினிஸ்ட்டால் எழுதவே முடியாது. பெண்கள்  பிரச்சனைகளை  மட்டுமல்லாமல் பொதுவான சமூக பிரச்சனைகளையும் பற்றி எழுதியுள்ளார்.
சாதாரணமாக பெண் எழுத்தாளர்கள் தொடாத அரசியலை நிலை களனாக கொண்டு எழுதிய முதல் பெண் எழுத்தாளரும் இவர்தான். 



இவருடைய 'ஆகாச வீடுகள்' நாவல் ஆங்கிலம், இந்தி, ஜெர்மன், மொழிகளில்  மொழிபெயெர்க்கப் பட்டுள்ளது. பல விருதுகளுக்கு சொந்தக்காரர். இந்தியா டுடேயின் தமிழ் பதிப்பிற்கு ஆசிரியராக இருந்திருக்கிறார். ஜெய லலிதாவைப் பற்றி பென்குயின் பதிப்பகத்திற்காக இவர் எழுதிய,
'ஜெய லலிதா எ போர்ட்ரைட்' என்னும் புத்தகத்திற்கு ஜெயலலிதா  ஸ்டே ஆர்டர்  வாங்கியதால் அப்புத்தகம் வெளியிடப் படவில்லை. 

அனுராதா ரமணன்:



லே அவுட் ஆர்டிஸ்ட் ஆக  பத்திரிகை உலகில் நுழைந்தவர்  'விஜயாவின் டைரி' என்னும் தன்னுடைய  வாழ்க்கை குறிப்பை எழுதியதன் மூலம் எழுத்தாளராக மாறினார். பெரும்பாலும் குடும்ப கதைகளாக எழுதினாலும்
நகைச் சுவை உட்பட பல் வேறு சுவைகளிலும் எழுதி இருக்கிறார். சாதாரண கதைகளாகவே எழுதிக் கொண்டிருப்பவர் திடீரென்று ஒரு நல்ல கதை எழுதி  விடுவார். 

ரமணி சந்திரன்:



ஒரு முறை நான் லெண்டிங் லைப்ரரி சென்றிருந்த பொழுது அங்கு வந்த அத்தனை பெண்களும் ரமணி சந்திரன் நாவல்தான் வேண்டும் என்று கேட்டார்கள். (பெண் )வாசகர்கள் இடையே மிக அதிக வரவேற்பை பெறுவது  இவருடைய எழுத்து. இவருடைய எல்லா நாவல்களுமே மில்ஸ் அண்ட் பூன் பாணி அல்லது மௌன ராகம் பாணி கதைகள்தான். ஏதோ ஒரு காரணத்தால்
கணவன் மனைவி ஆகிவிடும் இருவரிடையே நடக்கும் பனிப் போர், இறுதியில்அது சுபமாக முடிவது என்று சலிக்காமல்  அவரும்  எழுதிக்  கொண்டே இருக்கிறார், அலுக்காமல்  பெண்களும்  படித்துக்  கொண்டே  இருக்கிறார்கள். எது எப்படியோ  மிக  அதிகமாக  விற்பனையாவது  இவருடைய நாவல்கள்தான்.

சீதா ரவி:




பாரம்பரியம் மிக்க பத்திரிகையான கல்கி குடும்பத்தைச் சேர்ந்தவர். அந்த பாரம்பரியம் இவருடைய எழுத்தில் வெளிப்படும். நூல் பிடித்தார் போன்ற தெளிவான நடை இவருடைய சிறப்பு. பழங்கால  எழுத்தாளரான  அனுத்தமவைப் போல என்று கூறலாம். கல்கி குழுமத்தை தாண்டியும் இவர்
வெளியே வர வேண்டும்.

மஞ்சுளா ரமேஷ்:



கல்கி குழுமம் என்றால் பெண்களுக்கு நினைவுக்கு வருவது மங்கையர் மலர். மங்கையர் மலர் என்றால் நினைவுக்கு வருபவர் மஞ்சுளா ரமேஷ். இவர்
ஆசிரியராக இருந்த பொழுது மங்கையர் மலர் அடைந்த வளர்ச்சி அபரிமிதம். 
கட்டுக்கோப்பான எழுத்து இவருடையது. இவருடைய ஆன்மீக கட்டுரைகள் சிறப்பானவை. 'மஞ்சுளா ரமேஷின் சிநேகிதி', மற்றும் 'ஞான ஆலயம்' ஆகிய
இரண்டு பத்திரிகைகளுக்கு ஆசிரியராக இருக்கிறார்.

திலகவதி I.P.S.:




தமிழகத்தின் முதல் பெண் I.P.S. ஆன இவர் முன்னூறுக்கும் மேற்பட்ட சிறு கதைகளும், நிறைய நாவல்கள் மற்றும் கவிதைகள்   எழுதியிருக்கிறார். 2005 ஆம் ஆண்டு அவருடைய கல் மரம் நாவலுக்காக சாகித்திய அகடமியின் பரிசினை வென்றார்.  இவருடையதும் ஆளுமை கொண்ட எழுத்து.

ஆர்.சூடாமணி:



பெண் எழுதாளர்களில் இவர் வித்தியாசமானவர். பெண்ணியம் என்னும் விலங்கை மாட்டிக்கொள்ளாமல், புலம்பாமல், சாடாமல் தனக்கென ஒரு தனி
இடம் பிடித்தவர். கலைமகள், கல்கி, அமுதசுரபி  பத்திரிகைகளில்  இவருடைய  படைப்புகள் வெளியாகும். மனித  மனத்தின்  நுட்பங்களை  நுணுக்கமாக படைப்பதில் வல்லுநர். நிறைய  பரிசுகளும்  பாராட்டுகளும்  பெற்றிருக்கிறார். மிகச் சிறந்த இலக்கிய படைப்பாளி.

இவரைப் போலவே ராஜம் கிருஷ்ணனும் சிறந்த இலக்கிய படைப்பாளி.

அம்பையும், ஜோதிர் லதா கிரிஜாவும் நல்ல எழுத்தாளர்கள்தான் என்றாலும் பெண்ணியத்தை சிலுவையாக சுமப்பதாலோ என்னோவோ அவர்கள்  எழுத்தில் கசப்பு வழியும்.

அமெரிக்காவிலிருந்து கொண்டு  எழுதும் கீதா பென்னட், துணிச்சலான எழுத்தாளர் என்றால், அமெரிக்காவின்  இன்னொரு  முகத்தை  நமக்கு  காட்டும் காஞ்சனா தாமோதரனும் ஒரு சிறந்த எழுத்தாளர். இவர்களைத் தவிர கமலா சடகோபன், விமலா ரமணி, கோமளா வரதன், ஸ்ரீரங்கம் எஸ்.பட்டமாள் போன்ற பலர் என்னைக் கவர்ந்த கதைகளை எழுதி இருக்கிறார்கள்.

ஒருமுறை எனக்குத்  தெரிந்த  ஒரு  பெண்  பத்திரிகையாளரிடம்,  "சுஜாதா ஒரு முறை சொன்னது போல பெண் எழுதாளர்களின் எழுத்து சமையலறையை தாண்டி வர மாட்டேன் என்கிறதே" என்றேன்,அதற்கு அவர், "வராது, வராது .. ஏனென்றால் நாம் அங்குதான் வாழ்கிறோம். ஒரு  கால்  சென்டரைப் பற்றி கதை  எழுத  வேண்டும்  என்றால்  ஆறு மாதமாவது  கால்  சென்டரில்  போய் வேலை செய்ய வேண்டும். எல்லாவற்றையும்  கற்பனை  செய்தே  எழுத முடியாது". என்றார்.  அதாவது எதற்கு எக்ஸ்போஷர் கிடைக்கிறதோ அதைப் பற்றிதான் எழுத முடியும் என்பது அவர் வாதம். அதே நேரத்தில் பெண் எழுதாளர்களுக்கு ஒரு குறை இருக்கிறது. "நாங்கள் புடவை கட்டி கொள்கிறோம் சரி, எங்கள்  எழுத்துக்களுக்கும்  புடவை கட்டி விடாதீர்கள்" என்கிறார்கள்.

இப்போது இருக்கும் பெண்களுக்கு எக்ஸ்போஷர் அதிகம் என்பதில் சந்தேகம் இல்லை. அவர்கள் மட்டுமல்ல அவர்களின் எழுத்தும் ஜீன்ஸ் போட்டுக் கொள்வதில் யாருக்கும் இப்போது ஆட்சேபனை இருக்காது.  தமிழில்  எழுத அவர்களுக்கு தமிழ் தெரிய வேண்டுமே என்பதுதான்
என் போன்ற வாசகர்களுக்கு கவலை. 

பி.கு. இது ஒரு மீள் பதிவு.

Tuesday, February 26, 2019

எல்.கே.ஜி. (விமர்சனம்)

எல்.கே.ஜி. (விமர்சனம்)



நீண்ட நாட்களுக்குப் பிறகு ஒரு அரசியல் நையாண்டி படம். தமிழ்த்தாய் வாழ்த்து பாடும் பொழுது எழுந்து நிற்க மறுக்கும் சாமியார் தொடங்கி, வைகையில் தெர்மோகோலை மிதக்கிவிட்ட செல்லூர் ராஜா, சி.எம் மருத்துவமனையில் அட்மிட் ஆகியிருக்கும் பொழுது நடக்கும் அவலங்கள், தனியார் பள்ளிகளின் அடர்சிடீஸ், யூ டியூபில் திரைப்படங்களை விமர்சிக்கும் நீலச்சட்டை வரை சமீப கால அரசியல், சமூக விஷயங்களை கலாய்த்திருக்கும் படம். 

அரசியலில் பெரிதாக பணமோ, புகழோ சம்பாதிக்க முடியாத தன்  அப்பா போல், தான் இருந்து விடக் கூடாது, எப்படியாவது தலைவரிடம் நல்ல பெயர் வாங்கி, தேர்தலில் ஜெயித்து, சி.எம். ஆகி விட வேண்டும் என்று நினைக்கும் லால்குடி கருப்பையா காந்தி(LKG)  செய்யும் தகிடுதத்தங்கள்தான் அல்லது அரசியல் சாணக்கியத்தனங்கள்தான்  படம்.  

இதுவரை காமெடியனாக நாம் பார்த்த ஆர்.ஜே.பாலாஜி, கதை,திரைக்கதை,வசனம் எழுதி கதாநாயகனாகவும் நடித்திருக்கிறார். அவருடைய களமாக இருப்பதால் புகுந்து விளையாடியிருக்கிறார். அவருடைய தந்தையாக நிஜ அரசியல்வாதியான நாஞ்சில் சம்பத். கட்சித் தலைவராக ராம்குமார்(சிவாஜி கணேசனின் மூத்த மகர்). அப்பாவின் சாயலில், அப்பாவின் குரலில் இதுவரை நடித்த படங்களில் ஏற்படுத்தாத பாதிப்பை இதில் ஏற்படுத்தியிருக்கிறார்.  பிரியா ஆனந்த் ஒரு முக்கிய பாத்திரத்தில் வருகிறார், ஆனால் கதாநாயகனுக்கு அவர் ஜோடி கிடையாது. இரண்டாம் பாதியில் படத்தை நகர்த்த பெரிதும் உதவியிருப்பது ஜே.கே. ரித்தீஷ். இவர் தயவால் பின்பாதி நல்ல கலகலப்பு. நாஞ்சில் சம்பத்தை கொல்வதற்காக எதிரிகள் துரத்தி வரும் பொழுது கையில் ஒரு ஆயுதத்துடன் எதிரிகள் முன் பாலாஜி தோன்றும் பொழுது போச்சுடா, பறந்து பறந்து அடிக்கப் போகிறார் என்று நினைக்கிறோம், ஆனால் அந்த மாதிரி விபரீதம் எதுவும் நடக்கவில்லை. 

"உங்களுக்கெல்லாம் கவர்மெண்ட் கொடுக்கிற டீ.வி. வேணும், கிரைண்டர் வேணும், ஆனால் கவர்மெண்ட் ஸ்கூல் வேண்டாம்."
நீங்க கார்ப்பரேட், யார் கொடுத்தாலும் வாங்குவீங்க, எவ்வளவு கொடுத்தாலும் வாங்குவீங்க, எப்போ கொடுத்தாலும் வாங்குவீங்க " என்று வசனங்கள் படு ஷார்ப்.

பாடல்கள் பெரிதாக கவரவில்லை.  ஒரு வேளை கேட்க கேட்க பிடிக்குமோ? படத்தை ரசித்தாலும் கொஞ்சம் வெட்கமும், வேதனையும் வருவதை தவிர்க்க முடியவில்லை.

இயக்குனர் பிரபுவிற்கு இது முதல் படம். இன்னொரு திறமையான இயக்குனர். வெல்கம்! வெல்கம்!



Thursday, February 14, 2019

காதலர்கள்

காதலர்கள்



'வேலண்டைன்ஸ் டே'  கொண்டாடும் வழக்கம் இல்லை. எ.பி.யில் ஸ்ரீராமின் கவிதையையும், வெங்கட்டின் பதிவையும் படித்த பிறகு இது சம்பந்தமான இரண்டு விஷயங்கள் நினைவிற்கு வந்தன. 

நான் மஸ்கட்டில் அலுவலக வண்டிக்காக காத்திருக்கும் நேரம் எனக்கு எரிச்சலாக இருக்கும். ஏனென்றால் அங்கு நானும், என் அலுவலகத்தில் பணியாற்றிய ஒரு ஓமானி, ஒரு இந்தியன் யாவரும் தள்ளித் தள்ளி நின்று கொண்டிருப்போம். எனக்கு அருகில் நர்சரி ஸ்கூல் ஒன்றில் பணியாற்றிய கோவன் ஆசிரியை ஒருத்தி இருப்பாள். அவள் என்னைப் பார்த்து லே..சா..க சிரிப்பாள். அவ்வளவுதான். மற்றபடி பேசவோ, பார்க்கவோ யாரும், எதுவும் இருக்காது. 

சரி, சுற்றும் முற்றும் இப்படி இருக்கிறதே உருமாறும் மேகங்களையாவது வேடிக்கை பார்க்கலாம் என்றால்.. மேகமா? ம் ஹூம்!   மேகமாவது, ஒன்றாவது? துடைத்து விட்டது போல பளிச்சென்று சலிப்பூட்டும் நீல வானம். 

நம் ஊர் என்றால் இப்படியா இருக்கும்? டீ கடையிலிருந்து பாடல் அலறும், பூ வாங்கிக்கமா என்று ஒரு பெண் கூப்பிடுவார். அழகான  பெண்களை ரசிக்கலாம். என்றெல்லாம் நினைத்துக் கொள்வேன். அது போல ஒரு முறை கே.கே.நகர் அமுதம் பஸ் நிறுத்தத்தில் நின்று கொண்டிருந்த பொழுது, பார்த்த ஒரு காட்சி:

பஸ் ஸ்டாப்பிலிருந்து கொஞ்சம் தள்ளி நின்று கொண்டிருந்த அந்த பெண்ணிடம் ஒரு வாலிபன் எதற்கோ கெஞ்சி கொண்டிருந்தான், எங்கேயோ அழைத்தான் போலிருக்கிறது, அந்தப் பெண் மறுத்தாள், மிகவும் பலவீனமான மறுப்பு என்று நினைக்கிறேன்,ஏனென்றால், உடனே ஒப்புக்கொண்டு விட்டாளே, அந்த இளைஞனுக்கு சந்தோஷம் தாங்கவில்லை, அந்தப் பக்கம் சென்று கொண்டிருந்த ஆட்டோவை நிறுத்தினான், அந்தப் பெண்ணை ஏறச்சொல்லி விட்டு அவள் கன்னத்தில் பச்சென்று ஒரு உம்மா கொடுத்தான். அவனுடைய மகிழ்ச்சி, அந்தப் பெண்ணின் திடுக்கிடல் இவை எனக்கு இன்னும் நன்றாக நினைவில் இருக்கின்றன.  (இது போன்ற காட்சிகளெல்லாம் மஸ்கெட்டில் காணக் கிடைக்குமா?)

இன்னொரு விஷயம் சற்று சோகமானது. சிட்டி சென்டர் துவங்கிய புதிதில்  அங்கிருக்கும் ஐனாக்ஸில் 'நினைத்தாலே இனிக்கும்' படம் பார்க்கச் சென்றிருந்தோம், டைரக்டர் பி.வாசுவின் மகன், பிரிதிவிராஜ், பிரியா மணி முதலியவர்கள் நடித்த மொக்கை படம். 

படத்திற்கு வந்திருந்த காதல் ஜோடிகளில் ஒரு பெண் படம் முடிந்து வெளியே வந்ததும் செல் போனை பார்த்து விட்டு பெரிதாக அழ ஆரம்பித்து விட்டாள். 

வீட்டிற்கு தெரியாமல் காதலனோடு சினிமாவிற்கு வந்திருந்த அந்த பெண், செல் ஃபோனை ஸ்விட்ச் ஆஃப் செய்திருக்கிறாள். அந்த நேரத்தில் வீட்டில் அவள் தந்தை ஹார்ட் அட்டாக்கில் மரணமடைந்து விட்டார். அவளை தொடர்பு கொள்ள வீட்டிலிருந்து முயன்றிருப்பது தெரிந்து அவள் கதறிய கதறல்...!





Wednesday, February 13, 2019

தொட்ட மாலூர்(Dhodda Maloor) - சென்னப்பட்டினம்


தொட்ட மாலூர்(Dhodda Maloor) - சென்னப்பட்டினம்

                                           




நீண்ட நாட்களாக செல்ல வேண்டும் என்று நினைத்தது நேற்றுதான் நடந்தது. ஒரு கோவிலுக்கு செல்ல வேண்டும் என்று நாம் நினைத்தால் போதாது, அங்கிருக்கும் தெய்வம் நம்மை அழைக்க வேண்டும் என்பார்கள். நாங்கள் பல நாட்களாக ஆசைப்பட்டாலும், ஸ்ரீ.அப்ரமேயராமா நேற்றுதான் எங்களை அழைத்தார். 

காலை ஏழு மணிக்கு வீட்டிலிருந்து கிளம்பி, வழியில் அடிகாவில் சிற்றுண்டியை முடித்துக் கொண்டு, பதினொன்று பதினைந்திற்கு தொட்ட மாலூரை அடைந்தோம். அர்ச்சனைத்தட்டும், துளசி மாலையும் வாங்கிக்கொண்டு கோவிலுக்குள் நுழைந்தோம். சிறிய கோவில். (மரத்தால் ஆன) கொடிமரம், பலிபீடத்தை தாண்டி, படியேறி உள்ளே சென்றால் மூலவர் அப்ரமேயராமா சந்நிதி. நின்ற திருக்கோலத்தில், மேலிரு கைகளில் சங்கு, சக்கரமும், கீழ் இடது கையில் கதையும் தாங்கி, வலது கரம் அபயஹஸ்தத்தோடு காட்சி அளிக்கிறார். அர்ச்சகர் முழுமையாக அர்ச்சனை செய்கிறார். எல்லா பெருமாள் கோவில்களைப் போலவும் தீர்த்தம் கொடுத்தார்கள், ஆனால் சடாரி சாதிக்கவில்லை.



பிரகாரத்திலிருந்து உள் விமான தோற்றம்
 கோவிலின் வாகனங்கள் ப்ரும்மாண்டமாக இருக்கின்றன.



 


பெருமாளை தரிசித்த பிறகு, பிரகாரத்தை வலம் பொழுது மீண்டும் படியேறினால், தாயார் சந்நிதி. அமர்ந்த திருக்கோலத்தில் அழகான அரவிந்தவல்லியை சேவித்து விட்டு, அதே திண்ணை போன்ற அமைப்பில் வலது பக்கம் திரும்பி தொடர்ந்து நடந்தால் மாலூர் கிருஷ்ணன் எனப்படும். நவநீத கிருஷ்ணனை தரிசிக்கலாம்.  "கண்ணா, கருமை நிறக்கண்ணா .." என்பதற்கிணங்க ஒரு கையில் வெண்ணையோடு தவழும் கருமை நிற கண்ணன் ஜீவ களையோடு! முகம் தவிர உடல் முழுவதும் வெண்ணை காப்பிடப்பட்ட கிருஷ்ணன். காதுக்கருகில் தொங்கும் குழல் கற்றை, இடுப்பில் சலங்கை இவைகளை வெண்ணை காப்பிடவில்லை. அழகான அந்த கண்ணனை அப்படியே தூக்கி வைத்துக் கொள்ளலாம் போலிருக்கிறது.




குழந்தைகள் இல்லாத தம்பதிகள் இந்த நவநீத கிருஷ்ணனை வகிழிபட்டு வேண்டிக்கொள்ள, அவர்களுக்கு உடனே குழந்தை பிறக்கும் என்பது நம்பிக்கை மட்டுமல்ல, நடைமுறையும் கூட. குழந்தை  பிறகு அந்த குழந்தையை இந்த கோவிலின் வெள்ளித்தொட்டிலில் விடுவார்களாம். நாங்கள் கோவிலை விட்டு வெளியே வரும்பொழுது, இரண்டு மாத குழந்தையோடு ஒரு குடும்பம் வந்து கொண்டிருந்தது. 

பிரகாரங்களில் வேதாந்த தேசிகர், ராமானுஜர், இவர்களோடு கூரத்தாழ்வாருக்கும் தனி சன்னிதி இருக்கிறது. இதைத்தவிர ஸ்ரீதேவி, பூதேவி சமேத வைகுண்டநாதருக்கும் தனி சந்நிதி இருக்கிறது. நிறைவாக தரிசனம் முடித்து வெளியே வந்தோம். 

அந்த கோவிலுக்கு வெளியே கடைகளில் கிடைக்கும் புளிக்காய்ச்சலும், புளியோதரையும் மிகவும் நன்றாக இருக்கும் என்று எங்கள் சம்பந்தி சொல்லியிருந்தார். ஆனால் ஒரே ஒரு ஐயங்கார் மெஸ் என்பதைத் தவிர வேறு கடைகள் ஏதும் கண்ணில் படவில்லை. பக்கத்தில் இருக்கும் நதி நரசிம்மர் கோவிலில் கிடைக்கலாம் என்று இங்கே வாங்காமல் விட்டு விட்டோம். ஆனால் அங்கேயும் கிடைக்கவில்லை., புளியோதரை போச்சு...:((( 

மாலூர் அப்ரமேயராமா கோவிலிருந்து 1.2 கி.மீ. தொலைவில் வயல்களுக்கு நடுவில் அமைந்திருக்கிறது நதி நரசிம்மர் கோவில். மிகவும் சிறிய கோவில். 1200 வருடங்களுக்கு முந்தையது என்று தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர் என்று அங்கிருக்கும் அர்ச்சகர் கூறுகிறார்.  ஆனால் அப்படிப்பட்ட புராதன கட்டிட கலை அமைப்பு அதுவும் தெரியவில்லை.

நதி நரசிம்மா கோவில்

இப்பொழுது இந்த நரசிம்மர் கோவில் அமைந்திருக்கும் இடம்தான் முன் காலத்தில் ஊராக இருந்ததாம். அருகில் இருக்கும் கண்வ நதியில் வெள்ளம் வந்து ஊரு முழுவதும் நீரில் மூழ்கி, பின்னர் மண் மேடிட்டு விட்டதாம். கன்னடத்தில் மரலூர்(sand city) என்றால் மண் என்று பொருளாம். மரலூர் என்பதே மாலூர் என்று மறுவியதாம். 

கண்வ மகரிஷி (சகுந்தலையின் வளர்ப்புத் தந்தை) இங்கு தவம் செய்ததாகவும், அப்போது வனமாக இருந்த இந்த பகுதியில் அவருக்கு காட்சி அளித்த நரசிம்மர், தனக்கு ஒரு கோவில் இங்கே கட்டி வழிபட சொன்னதோடு, அவருக்கு என்ன வரம் வேண்டும் என்றும் கேட்கிறார். கண்வ மகரிஷி," இங்கு வந்து தங்களை வழிபடுபவர்களின் தேவைகளை தாங்கள் நிறைவேற்றி வைக்க வேண்டும்" என்று வேண்டிக் கொண்டாராம்.ஆகவே அந்த நரசிம்மரை, ஸ்வாதி நட்சத்திரத்தன்று வழிபடுபவர்கள் கேட்கும் வரத்தை இந்த நரசிம்மர் வழங்குவார் என்றும் கூறினார். சிறிய கோவிலாக இருந்தாலும், அழகாக அலங்காரம் செய்திருந்தார்கள். நல்ல அதிர்வுகளை உணர முடிந்தது. அங்கும் வழிபட்டு விட்டு வீடு திரும்பினோம்.  

நவநீத கிருஷ்ணன் படம் உதவி: கூகுள்.நன்றி.


Saturday, February 9, 2019

பவானி அத்தைகள் இறப்பதில்லை.

பவானி அத்தைகள் இறப்பதில்லை.

நான் சிறு வயதில் எங்கள்   கிராமத்தில் சந்தித்த சில சுவாரஸ்யமான மனிதர்களை என்னால் மறக்கவே முடியவில்லை.ஒவ்வொருவரையும் பற்றி ஒரு பதிவு எழுதலாம்.

அதில் முக்கியமானவர் பவானி அத்தை. அத்தை என்றால் நேரடியாக அத்தை கிடையாது. என் அப்பாவிற்கு அத்தை முறை, எந்த வகையில் என்று தெரியாது. ஏதோ தூரத்து சொந்தம்.
அதையெல்லாம் நாங்கள் கேட்டதில்லை. அப்பா, அம்மா, அத்தைகள் எல்லோரும் அத்தை என்று அழைப்பார்கள், அதனால் நாங்களும் அப்படியே அழைத்தோம். 

இளம் வயதில் விதவையானவர், என்பது பின்னாளில் தெரிந்தது. குழந்தைகளும் கிடையாது. தன் வீட்டில் தனியாகத்தான் வசித்து வந்தார் . எப்பொழுதாவது அவருடைய நெருங்கிய சொந்தங்கள் வருவார்கள் என்று நினைவு. எங்கள் சின்ன தாத்தா, பெரிய அத்தை (அப்பாவின் அத்தை) இவர்களை பெயர் சொல்லி அழைப்பார், அவர்கள் கோபமாக இருக்கும் பொழுது, வீட்டில் இருக்கும் மற்றவர்கள் சொல்ல நினைப்பதை அவர்கள் சார்பாக சொல்லுவார். அதே போல் வீட்டு பெரியவர்களின் கருத்தையும் சிறியவர்களுக்கு எடுத்துச் சொல்லுவார். அதை வைத்து குடும்பத்திற்கு மிகவும் நெருக்கமானவர் என்று புரிந்து கொண்டோம். 

நியூக்ளியர் ஃபாமிலியாக இருக்கும் இந்த காலத்து குழந்தைகளுக்கு இப்படிப்பட்ட உறவுகள் புரியுமோ என்று தெரியவில்லை. அப்போதெல்லாம் ஒரு வீடு என்றிருந்தால் அதில் தாத்தா, பாட்டி, அவர்தம் சகோதர, சகோதரிகள், பெரியப்பா, சித்தப்பா, அத்தான், அம்மாஞ்சி, மட்டுமல்ல, ஆதரவில்லாத தூரத்து சொந்தங்களும் புழங்கும் இடம்.  

அதனாலோ என்னவோ, பவானி அத்தை பெரும்பாலும் எங்கள் வீட்டில்தான் சாப்பிடுவார். அவர் சாப்பிடுவது எங்களுக்கெல்லாம் சிரிப்பாக இருக்கும். ஏனென்றால், "சாப்பிடவே பிடிக்கவில்லை, என்னது கத்தரிக்காய் சாம்பாரா? கத்தரிக்காய் எனக்கு பிடிக்காது கொஞ்சமா விடு.." தொட்டுக்க என்ன இருக்கு? புடலங்கா கறியா? ஐயோ வேண்டியே இருக்கவில்லை, கொஞ்சம் போடு, போறும்.." ஊறுகாய் என்ன இருக்கு? வடு மாங்காயா? வடு மாங்காய் எல்லாம் முன்ன  மாதிரி எங்க இருக்கு?" ரெண்டே ரெண்டு போடு, " என்ன சொல்லு, மோருஞ்சாதத்திற்கு ஈடு இல்ல, ஐயோ மோர் ஒரே புளிப்பு.. வேண்டாம் நார்த்தங்காய் இருந்தா போடு, சாப்பிடவே பிடிக்கல.." என்று சொல்லிக் கொண்டே எல்லாவற்றையும் ஒரு  கை பார்ப்பார். நாங்கள் அப்போது ஒருவரை ஒருவர் பார்த்து சிரித்துக் கொள்வோம்.

இப்போதும் பவானி அத்தை பல வீடுகளில் இருக்கிறார் ஆனால் வேறு வடிவில் என்றுதான் தோன்றுகிறது. என் மாமியாருக்கு காலை கண் விழிக்கும் பொழுதே தொலைகாட்சி பெட்டியை ஆன் செய்தாக வேண்டும். " முன்ன விஜய் டி.வி.யில் நல்ல சத் விஷயங்கள் போட்டுக் கொண்டிருந்தார்கள்,  ஜெயாவுக்கு மாத்து,  இவர் நன்றாகத்தான் சொல்கிறார், ஆனால் ஏன் இந்த சைவ துவேஷம்?" " ஏழு மணியாகி விட்டதா? ஹரிகேச நல்லூர் ஜோசியம் போடு, இவர் எல்லாருக்கும் நாள் பிரமாதமா இருக்கும்பார், என்னவோ, கடக ராசிக்கு என்ன சொல்றர்னு பார்ப்போம்... என்னது திருமண ப்ராப்தியா?" (அது கல்யாண வயதில் இருப்பவர்களுக்கு என்று புரியாதா?) "எல்லாத்துலேயும் யோகா.."  (அதைப் பார்த்து கையை, காலை கொஞ்சம் அசைத்தால் நன்றாக இருக்கும்). 

காலை நேர நிகழ்ச்சிகளுக்கு இப்படி என்றால்,சீரியல் தொடங்கி விட்டால் வேறு விதம். " எல்லா சீரியலிலும் மாமியாரை கெட்டவளாகவே காட்டுகிறார்கள். ஏன் இப்படி பண்ணுகிறார்கள் என்று தெரியவில்லை. ஒரே நெகட்டிவிடி மணி பதினொன்னு ஆயிடுத்தா? ... ஆரம்பித்திருக்குமே? போடு போடு. நேத்திக்கு அந்த மாமியார் கடன்காரி மாட்டுப் பெண்ணை கொல்ல ஏற்பாடு பண்ணப் போறாள். நன்னா இருப்பாளா?" என்ற ரீதியில் கமெண்டுகள் கொடுத்துக் கொண்டே பார்ப்பார்.  
இதனால் அவர் வெறும் சீரியல்கள் மட்டும்தான் பார்ப்பார் என்று நினைத்துவிட வேண்டாம். நியூஸ் சேனல்களையும் விட்டு வைக்க மாட்டார். "இவன் ஏன் இப்படி கத்தறான்? எங்கேயாவது ஹார்ட் அட்டாக் வந்துவிட போகிறது. இவாளெல்லாம் இப்படி கத்துவதால் என்ன மாறி விடப் போகிறது?" என்பாரே தவிர,பார்க்காமல் இருக்க மாட்டார். 

எனக்கு சின்ன வயதில் பார்த்த பவானி அத்தைதான் நினைவுக்கு வருவார்.  

Sunday, February 3, 2019

மசாலா சாட்

மசாலா சாட் 

சாதாரணமாக நமக்கு நம் நாட்டையும், அரசையும் குறை சொல்வதென்றால் மிகவும் பிடிக்கும். அதனால் இந்தியன் ரயில்வே போன்ற அரசு அமைப்புகள் எவ்வளவுதான் முன்னேறினாலும், நமக்கு நல்ல சேவையை தர முன்வந்தாலும் நாம் பாராட்ட மாட்டோம். ஆனால் சமீபத்திய இந்திய ரயில்வேயின் சேவையை கேட்டால் பாராட்டாமல் இருக்க முடியாது. 

நடு இரவில் ஓடும் ரயிலில் எதிர்பாராமல் மாத விலக்கான ஒரு பெண்ணுக்கு சானிட்டரி நாப்கின் வழங்கி உதவியிருக்கிறது ரயில்வே நிர்வாகம். 

பெங்களூர்-பெல்லாரி-ஹோஸ்பெட் பாசஞ்சர் ரயிலில் பயணம் செய்த ஆர்க்கிடெக்ட் மாணவி ஒருவருக்கு அந்த ரயில் பெங்களூரை விட்டு கிளம்பிய சிறிது நேரத்தில் பீரியட்ஸ் வந்து விட்டது. அப்போது மணி இரவு 11. அதற்கான முன்னேற் பாடுகளோடு வராத அவர், அதே வண்டியில் பயணித்த தன் நண்பருக்கு மெசேஜ் அனுப்பியிருக்கிறார். ட்ரைனி இன்ஜினீயரான அந்த நண்பர் இந்தியன் ரயில்வே சேவாவுக்கு உதவி கேட்டு ட்வீட் செய்திருக்கிறார். 11.06க்கு சம்பந்தப்பட்ட அதிகாரி அந்தப் பெண்ணோடு பேசி அவரின் தேவையை கேட்டறிந்து,இரவு 2 மணிக்கு அரசிகெரெ என்னும் இடத்தை வண்டி அடைந்த பொழுது, அந்தப் பெண்ணிற்கு தேவையான சானிட்டரி பேட், மற்றும் மாத்திரைகளை ரயில்வே நிர்வாகம் வழங்கியிருக்கிறது. வாழ்க!


சரி, இப்போது கொஞ்சம் புதிர்:

1.ஒரு ஒற்றை இலக்க எண்ணை   இரண்டு  முறை மட்டுமே பயன்படுத்தி  
அதிக பட்ச மதிப்புள்ள எண்ணை பெற வேண்டுமென்றால் அந்த எண்ணை எப்படி பயன் படுத்துவீர்கள்?அவைகளுக்கு இடையில் எந்த குறியீடுகளையும் பயன்படுத்த கூடாது.  

2. Though having 85 keys, cannot open any lock, who am I?

   
கீழ் கண்ட நடிகர்களுக்கு ஒரு ஒற்றுமை இருக்கிறது, அது என்ன?

Image result for jeevaImage result for vishnu vishal



Image result for rajinikanth
Image result for sivaji ganesan
Image result for vikram  Related image



ஒரு ஜோக்கோடு முடிக்கலாம்:

ஆபரேஷன் டேபிளில் படுத்துக்கொண்டிருக்கும் நோயாளி, டாக்டரிடம், "டாக்டர், இந்த ஆபரேஷனுக்குப் பிறகு, நான் எல்லா செயல்களும் செய்ய முடியுமா?"
டாக்டர்: அதில் என்ன சந்தேகம்? நீங்கள் விரும்பும் எல்லா செயல்களும் செய்ய முடியும்.
நோயாளி: வயலின் வாசிக்க முடியுமா?
டாக்டர்: தாராளமா வாசிக்கலாமே..
நோயாளி: அப்படியா? ஆச்சர்யமா இருக்கே?
டாக்டர்: இதில் ஆச்சர்யப்பட என்ன இருக்கு?
நோயாளி: எனக்கு வயலின் வாசிக்கவே தெரியாதே..

Image result for bouquet of flowers



                                                                                 





Thursday, January 31, 2019

பேட்ட(விமரிசனம்)

பேட்ட(விமரிசனம்) 


கபாலியும், காலாவும் தந்த ஏமாற்றங்களுக்குப் பிறகு 'பேட்ட' பார்ப்பதில் கொஞ்சம் பயம் இருந்தது. நீலச்சட்டை வேறு தன் விமர்சனத்தில் கலாய்த்திருந்தார். மணிகர்ணிகா செல்லலாம் என்றேன், ஆனால் என் கணவருக்கு என்னவோ பேட்ட தான் பார்க்க வேண்டும் என்று தோன்றியதால் ஒரு ரிஸ்க் எடுத்தோம்.

மலைவாச ஸ்தலத்தில் இருக்கும் ஒரு கல்லூரியின் வார்டனாக வந்து சேரும் முதல் காட்சியிலிருந்து, "போட்றா நம்ம பாட்டை.."என்று 'ராமன் ஆண்டாளும் ராவணன் ஆண்டாலும் எனக்கொரு கவலை இல்ல.." என்று ஆடும் இறுதி காட்சி வரை அவுட் அண்ட் அவுட் ரஜினி படம். எத்தனை நாட்களாயிற்று ரஜினியை இப்படி பார்த்து? 

கல்லூரியில் வம்பு செய்யும் பையன்களை அடக்குவது, மற்ற மாணவர்களோடு ஆட்டம் போடுவது, என்று சம்பவங்கள் எதுவும் இல்லாமல் டிரைலர் போல முதல் பாதி படம் ஓடுகிறது. இரண்டாவது பாதியில்தான் கதை துவங்குகிறது. முதல் பாதியில் ஆங்காங்கே அரசியல் பேசுகிறார். 

விஜய் சேதுபதி, சசிகுமார், சிம்ரன், திரிஷா,பாபி சிம்ஹா,ஒய்.ஜி.மகேந்திரன் என்று ஏகப்பட்ட நட்சத்திரங்கள். இதில் பாபி சிம்ஹாவும், விஜய் சேதுபதியும் தவிர மற்றவர்கள் ஓரிரெண்டு காட்சிகளில் மட்டுமே வருகின்றனர். இயக்குனர் மகேந்திரனும் சில காட்சிகளில் வந்து இறந்து போகிறார்.

மற்ற படங்களைப் போல் இல்லாமல் பாபி சிம்ஹா ட்ரிம்மாக ஒரு கல்லூரி மாணவன் என்று சொல்லலாம் போல இருக்கிறார். ரஜினியின் தோழனாக சசிகுமார், உணர்ந்து, அழகாக பாத்திரத்தோடு ஒன்றியிருக்கிறார். விஜய் சேதுபதி நன்றாகத்தான் நடித்திருக்கிறார், கொஞ்சம் அடக்கி வாசித்திருக்கிறாரோ? என்று தோன்றுகிறது. 

ரஜினியின் மனைவியாக வரும் திரிஷா, வரும் காட்சிகளிலெல்லாம் புடவை உடுத்தி, தலையை இழைத்து வாரி, பின்னலிட்டு குடும்ப பாங்காக வந்து பரிதாபமாக இறந்து போகிறார். வில்லனாக வரும் நவாஸுதீன் சித்திக் பஹுத் அச்சா ஹை!

இதற்கு முன் சில படங்களில் வந்திருந்தாலும், அவைகளைப் போல் இல்லாமல், கல்லூரியில் படிக்கும் பெண்ணின் தாயாராக இருந்தாலும் டி.எல்.ஜே. அணிந்து, வாலி படத்தை நினைவு படுத்தும்படியாக வரும் சிம்ரனுக்கு ஒரு 'ஓ' போடத்தோன்றுகிறது. ஆனால் மிக சொற்பமாகத்தான் வருகிறார் என்பது கொஞ்சம் வருத்தம்.  அவருக்கும் சரி, ரஜினிக்கும் சரி இளமையை மீட்டுத் தந்திருப்பது ஒப்பனையாளரா? போட்டோஷாப்பா? எதுவாக இருந்தாலும் குட் ஜாப்!

முழு க்ரெடிட் கொடுக்கப்பட வேண்டிய இன்னும் இருவர், இசையமைத்திருக்கும் அனிருத்தும், காமிராவை கையாண்டிருக்கும் திருவும். 'ஊலாலா.' 'மரண மாஸ்..' போன்ற பாடல்களில் மட்டுமல்ல, பின்னணி இசையிலும் பிரமாதப் படுத்தியிருக்கிறார் அனிருத் என்றால், காட்சிக்கேற்ற கோணம், லைட்டிங் இவற்றில் 'திரு'வின் பணி திருத்தம்!

தனக்கே உரிய ஸ்பெஷல் டச்சோடு இறுதி காட்சியை வைத்திருக்கும் கார்த்திக் சுப்புராஜுக்கு ரஜினியை எப்படி பயன்படுத்த வேண்டும் என்று தெரிந்திருக்கிறது. வயலென்ஸ் கொஞ்சம் அதிகம்தான் என்றாலும், "நான் வீழ்வேன் என நினைத்தாயோ?" என்றபடி அறிமுகமாகும் ரஜினியை தூக்கி நிறுத்தி விட்டார். 

ரஜினி ரசிகர்களுக்கு ஒரு ஃபுல் கட்டு பிரியாணி. 

Thursday, January 24, 2019

பெண் எழுத்தாளர்களுக்காக ஒரு புதிய முயற்சி.






குமுதம் சினேகிதியில் வெளியாகியிருந்த இந்த அறிவிப்பை பெண் எழுத்தாளர்கள் பயன்படுத்தி கொள்வார்கள் என்று நம்புகிறேன். All the best bloggers!👍👍