கணம்தோறும் பிறக்கிறேன் 

Wednesday, June 29, 2022

மனதில் நின்ற வரிகள், வசனங்கள்.அ

மனதில் நின்ற வரிகள், வசனங்கள்.

சமீபத்தில் மத்யமரில் Post of the week வாங்கிய என்னுடைய பதிவு இது. சிலவற்றை எழுதும் பொழுதே மனதிற்கு ஒரு திருப்தி வரும். அப்படிப்பட்ட பதிவு என்பதால் இங்கும் பகிர்ந்து கொள்கிறேன். 

லௌகீக வாழ்க்கையில் (material life) வெற்றி பெற்றவர்களைத்தான் திறமைசாலிகள் என்று கருதுகிறோம். அப்படி வெற்றிக் கனியை எட்டிப் பிடிக்க முடியாதவர்களை அசடு என்று சொல்லத் தயங்குவதில்லை. ஆனால் அசோகமித்திரன் ஒரு கதையில் (கதை பெயர் மறந்து விட்டது) என்ன சொல்கிறார் தெரியுமா? 

"கெட்டிக்காரத்தனம், அசட்டுத்தனம் என்றெல்லாம் கிடையவே கிடையாது. நாம் செய்யும் ஒரு காரியம் வெற்றி அடைந்து விட்டால் அதுதான் கெட்டிக்காரத்தனம், புத்திசாலித்தனம். அந்த காரியம் தோல்வி அடைந்து விட்டால் அதுவே அசட்டுத்தனம், முட்டாள்தனம் ஆகி விடும். How true! 

இதே வெற்றி, தோல்வி பற்றி ஜெயகாந்தனுடைய கருத்தையும் மறக்க முடியாது. 'ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள்' படத்தில் வரும் "நடிகை பார்க்கும் நாடகம் இதில் ரசிகர் எல்லாம் பாத்திரம்..." என்ற பாடலில்

"நன்மை என்பதும், தீமை என்பதும்

நாமணிந்திடும் வேடமே இதில்

வெல்வதென்னடி, தோல்வி என்னடி

மேடையில் ஒர் விளையாடலில் நாம்

மேடையில் விளையாடலில்" 

என்னும் வரிகளை மறக்கவே

முடியாது. 

ஜெயிக்கறதாவது? தோற்கறதாவது? All crap, just live the life என்று அனாயாசமாக கூறிவிட்டு சென்றுவிட்டார்.

லா.ச.ரா. அவருடைய பாற்கடல் அல்லது சிந்தாநதி இந்த இரண்டு நூல்களுள் ஏதோ ஒன்றில் 

"சிறு வயதில் கஷ்டப்படுவது பூண்டு வைத்த பாத்திரம் போல, எத்தனை தேய்த்து அலம்பினாலும் அந்த வாடை போகாது" என்று எழுதியிருந்ததையும். 

அவருடைய 'தரிசனம்' சிறுகதையில் கன்யாகுமரியை  

'அபிஷேக சுந்தரியாய் அவளின் அந்த சகிக்க முடியாத சௌந்தர்யம்!" என்று வர்ணித்ததையும்... அடடா! எப்படி மறக்க முடியும்?

சுஜாதாவின் 'சிவந்த கைகள்' கதையில் 

"பொய் சொல்லுவதற்கு அசோக்கின் இரண்டு விதிகள்

பொய் சொல்லாதே

பொய் சொன்னால் அதை உண்மையாக்கிவிடு"

எனக்கு பொய் சொல்ல வேண்டும் என்ற நிர்ப்பந்தம் ஏற்படும் பொழுதெல்லாம் இதை நினைத்துக் கொள்வேன். பொய் சொல்ல மாட்டேன்.

தி.ஜானகிராமன் மோகமுள் கதையை 

"இந்த பிரபஞ்சத்திற்கு எதுவுமே புதிதில்லை" 

என்னும் அட்சர லட்சம் பெறும் வார்த்தைகளோடு முடித்திருந்ததை மறக்க முடியுமா?

அவரே 'அன்பே ஆரமுதே' நாவலில் 

'இல்லறத் துறவு எவ்வளவு புனிதமோ அவ்வளவு புனிதம் துறவில்லறமும்'

என்று எழுதியிருந்ததும் மனதில் பச்சக்கென்று ஒட்டிக் கொண்ட வரிகள்.


சமீபத்தில் படித்த எஸ்.ராமகிருஷ்ணனின் நாவலில் காது கேட்காத ஒருவன்தான் கதாநாயகன். அதில் அவன் ,"குளிக்கும் பொழுது தண்ணீர் கீழே விழும் சத்தம் கேட்காது" என்று சொல்வதாக வரும் வரிகள் என்னை அதிர வைத்தது. இப்படி ஒரு விஷயம் இருக்கிறதா? என்ற எண்ணம் நெஞ்சை பிசைந்தது.

எவ்வளவு முயற்சி செய்தும் நாம் விரும்பும் சில விஷயங்கள் நடக்காத பொழுது 'முத்து' படத்தில் சூப்பர் ஸ்டார் சொல்லும்

"கிடைக்கிறது கிடைக்காம இருக்காது, கிடைக்காம இருக்கறது கிடைக்காது" என்னும் வசனம்தான் ஆறுதல்.

மற்றொரு மறக்க முடியாத வசனம் விருமாண்டி படத்தில் கமல் கூறும்,

"பெரும்பாலும் நாம் சந்தோஷமா இருக்கும் பொழுது நமக்கு அது தெரிவதில்லை " 

எவ்வளவு அர்த்தமுள்ள வசனம்! 

கண்ணதாசனின் இந்த வரிகளை கூறாமல் இந்த கட்டுரை நிறைவு பெறாது.

பிறப்பில் வருவது யாதெனக் கேட்டேன்
பிறந்த பார் என இறைவன் பணித்தான்
இறப்பில் வருவது யாதெனக் கேட்டேன்
இறந்து பார் என இறைவன் பணித்தான்
மனையாள் சுகமெனில் யாதெனக் கேட்டேன்
மணந்து பார் என இறைவன் பணித்தான்
அனுபவித்தே தான் அறிவது வாழ்வெனில்
ஆண்டவனே நீ ஏன் எனக் கேட்டேன்
படைத்தவன் சற்றே அருகினில் வந்து
அனுபவம் என்பதே நான்தான் என்றான் 

Tuesday, June 28, 2022

Fingertip - தமிழ் வெப் சீரீஸ்- விமர்சனம்

Fingertip - தமிழ் வெப் சீரீஸ்- விமர்சனம் 

சோஷியல் மீடியா என்பது விரல் நுனியில் இருக்கும் விபரீதம். இதை Zee5 ல் வெளியாகியிருக்கும் ஃபிங்கர்டிப் என்னும் வெப்சீரீஸ் அலசியிருக்கிறது. 

சீசன் ஒன்றில் ஐந்து வெவ்வேறு கதைகளில் வெவ்வேறு நடிகர்கள் நடிக்க, சோஷியல் மீடியாவிற்கு அடிமையானவர்கள், நல்லவர்கள், அப்பாவிகள், இவர்களை சோஷியல் மீடியா எப்படி பாதிக்கிறது என்று சுவாரஸ்யமாக காட்டியிருக்கிறார்கள். ஆனால் தலைப்புகள் Greed, Rage, Betrayal, Lust, Vengeance என்று ஆங்கிலத்திலேயே இருப்பது சற்று நெருடலாக இருக்கிறது. எல்லா மொழிகளிலும் டப் செய்து வெளியிட சௌகரியமாக இருக்கும் என்பதாலோ?

சீசன் இரண்டு ப்ளாக் வெப்(black web) என்னும் பயங்கரத்தை டீல் பண்ணுகிறது. 

தங்கள் செல்போன்களை சர்வீஸுக்கு கொடுக்கும் பெண்களின் புகைப்படங்களை மக் பண்ணி, அவர்களை விரட்டுபவன், மார்பிங் மூலம் பிரபலங்களின் பொது வாழ்வை சீர் குலைப்பவன், தாழ்வு மனப்பான்மை கொண்ட ஃபுட் டெலிவரி செய்பவன், காஸ்மெட்டிக் சர்ஜரி மூலம் தன் மூக்கை திருத்திக் கொள்ள நினைக்கும் நடிகை, எக்லிப்ஸ் என்னும் எதிக்கல் ஹாக்கர், சி.சி.டி.வி.காமிரா பொருத்த வருபவர்கள் போல வந்து தனிமையில் இருக்கும் முதியவர்களை கொலை செய்யும் ஒரு கும்பல், அதை கண்டுபிடிக்க முயலும் போலீஸ் அதிகாரி இப்படி தனித் தனியாக இருக்கும் கதைகள் ஒரு புள்ளியில் அழகாக இணைகின்றன. இதில் அந்த நடிகையின் கதை மட்டும் கொஞ்சம் ஒட்டாது போல இருக்கிறது. எல்லா நடிகர்களும் சிறப்பாக நடித்திருக்கின்றனர். குறிப்பாக மார்பிங் செய்யும் அந்த இளைஞர், சரியான வில்லன். நல்ல திரைக்கதை மற்றும் இயக்கம். இயக்குனர் ஸ்ரீனிவாசன் ஷிவகரை விரைவில் பெரிய திரையில் எதிர்பார்க்கலாம் என்று தோன்றுகிறது. 

Monday, June 20, 2022

விக்ரம்(விமர்சனம்)

விக்ரம் 


நானும் விக்ரம் பார்த்து விட்டேன். இந்த படத்தைப் பற்றி பலவிதமான விமர்சனங்கள் வந்தன. 

"பிரமாதம்.." என்று சிலரும், "ஒரே இருட்டு, டயலாக் புரியவேயில்லை" "எக்கச்சக்க வயலன்ஸ்" என்று சிலரும் எழுத, ஓ.டி.டி.யில் பார்த்துக் கொள்ளலாம் என்று முடிவெடுத்திருந்தேன். ஆனால் நண்பர் ஸ்ரீராம் படம் நன்றாக இருக்கிறது. தியேட்டரில் பாருங்கள் என்றது நம்பிக்கை அளித்தது. 

நான் கமலஹாசனின் நடிப்பை ரசிப்பேன் ஆனால் அவருடைய ஹார்ட் கோர் ஃபேன் கிடையாது. லோகேஷ் கனகராஜின் மாநகரம் படம் மிகவும் பிடித்திருந்தது.  என் மகளுக்கும் பார்க்க வேண்டும் என்று தோன்றியதால் கிளம்பினோம்.

முதல் பாதி செம! பகத் ஃபாசில் படத்தை எடுத்துச் செல்கிறார். இடைவேளையில் ஒரு முடிச்சு அவிழ, பின்பாதி எப்படி இருக்கும் என்று புரிந்து விடுகிறது. இருந்தாலும் இரண்டாம் பாதியும் நன்றாகவே இருக்கிறது. படத்தின் நீளம் தெரியவில்லை. 

நட்சத்திர பட்டாளம், எல்லோருக்கும் பெரிய ரோல் என்று சொல்ல முடியாது, ஆனால் குறிப்பிடத்தக்க பங்கு இருக்கிறது. எல்லோரும் தங்கள் பங்களிப்பை செவ்வனே செய்திருக்கிறார்கள்.

இருட்டு, இரைச்சல் என்பதெல்லாம் கொஞ்சம் மிகையான விமர்சனம். காட்சிகள் துல்லியம். பாடல்கள் பெரிதாக மனதில் நிற்கா விட்டாலும்,  பின்னணி இசை படத்திற்கு நல்ல சப்போர்ட். 

விஜய் சேதுபதியின் அறிமுக காட்சியில் கனடாவில் கைதட்டி வரவேற்கிறார்கள்! சூர்யாவுக்கும்  அப்படியே. 

நிச்சயமாக ஒரு முறை பார்க்கலாம்.

Saturday, June 18, 2022

மனம் கவர்ந்த மாண்ட்ரியால்


மனம் கவர்ந்த மாண்ட்ரியால்



ஆட்டவாவிலிருந்து மாண்ட்ரியால் செல்வதற்கு இரண்டு வழிகளை கூகுளார் பரிந்துரைத்தார். ஒன்று ஹைவே, மற்றது சீனிக் பியூட்டி பாதை. நாங்கள் இரண்டாவதை தேர்ந்தெடுத்தோம். வழி முழுவதும் காடு, ஆறு என்று இயற்கையை ரசித்தபடி பயணித்தோம். முதல் நாள் சூறைக்காற்று சேர்ந்த மழையால் ஆங்காங்கு முறிந்து கிடக்கும் மரங்களையும் பார்க்க முடிந்தது. அகண்டு, விரிந்து ஓடும் செயின்ட் லாரன்ஸ் நதி எங்கள் திருச்சியின் அகண்ட காவேரியை நினைவூட்டியது. 

க்யூபெக் எல்லையைத் தொட்டவுடனேயே ஃபிரஞ்சு ஆதிக்கம். தெருப் பெயர்கள், சிக்னல்களில் இருந்த பெயர்ப் பலகைகள் எல்லாவற்றிலும் ஃபிரெஞ்சு, ஆங்கிலம் இரண்டு மொழிகளும் காணப்பட்டன. 






மாண்ட்ரியால் அழகும், கம்பீரமும் சேர்ந்த நகரம்.  அதுவும் ஓல்ட் மாண்ட்ரியாலில் Notredame பெசலிகா அமைந்திருக்கும் டவுன்டவுனில் எல்லா வங்கிகளின் தலைமை அலுவலகங்களும் இருக்கின்றன. எல்லாமே ஃபிரெஞ்சு கட்டிடக்கலையில் அமைந்து நம்மை நிமிர்ந்து பார்க்கத் தூண்டி சொல்லிழக்க வைக்கின்றன. 










நாற்றிடேம் (Notredame) பெசலிகா சுற்றுலா பயணிகளை கவரும் இடமாக இருக்கிறது. இதன் விதானங்களின் வேலைப்பாடுகள் கலை நயத்தோடு இருக்கின்றன. இங்கு வண்ண வண்ணமாக ஏற்றி வைக்கப் பட்டிருக்கும் மெழுகு வர்த்திகள் இங்கே பிரார்த்தனை செய்யவும் வருகிறார்கள் என்று எண்ண வைத்தாலும், பெரும்பாலும் இதை ஒரு சுற்றுலா தலமாக கருதி புகைப்படம் மற்றும் செல்ஃபி எடுத்துக் கொள்பவர்கள் தான் அதிகம். 

அங்கிருந்து மதிய உணவு சாப்பிட இந்திய உணவகத்தை  நடந்து, நடந்து தேடி கண்டுபிடித்து சாப்பிட்டு விட்டு, ஒரு ஐஸ் கிரீமையும் விழுங்கி விட்டு ஓல்ட் போர்ட் சென்றோம்.



செயின்ட் லாரன்ஸ் நதிக்கரையில் அமைந்திருக்கும் ஓல்ட் போர்ட்டில் இந்த வசந்தம் மற்றும் கோடை காலத்தில் வருகை தரும் சுற்றுலா பயணிகளுக்காக எக்கச்சக்க பொழுது போக்கு அம்சங்கள். ஜிப் லைன் போன்ற அட்வென்சர் விளையாட்டுகள், பெடல் போட்ஸ், சைக்கிள் இவைகளை எடுத்து ஓட்டலாம். ஒரு இடத்தில் டில்லியில் இருக்கும் சைக்கிள் ரிக் ஷாக்கள் போல வரிசையாக நிறுத்தி வைக்கப் பட்டிருந்தன.  டிக்கெட் வாங்கி கொண்டு ஏறி அதில் அந்த இடத்தை சுற்றிப் பார்க்கலாம் என்று நினைத்தேன். அதை க்வாட்ரா சைக்கிள் (qradra cycle) என்கிறார்கள். அதில் ஏறி சுற்றி வரலாம், ஆனால் நாம்தான் ஓட்ட வேண்டும். நோ ரிக் ஷாகாரர். 





நிறைய உணவு விடுதிகள், அழகு பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள், டாட்டூ போட்டு விடுபவர்கள் என்று அந்த இடம் நம் ஊரின் பொருட்காட்சி நடைபெறும் இடம் மாதிரி இருக்கிறது. இரவு உணவை அங்கேயே முடித்துக் கொண்டு ஹோட்டலுக்குச் சென்றோம்.

மறுநாள் தாவரவியல் பூங்காவிற் குச் சென்றோம். முதலில் எனக்கு பெரிதாக எனக்கு எந்த அபிப்ராயமும் இல்லை. "என்ன பெரிய பொட்டானிக்கல் கார்டன்?லால்பாகை விடவா? என்று நினைத்தேன். 

ஆனால் மிகப்பெரிய, ஏறத்தாழ 22,000க்கும் மேற்பட்ட செடி வகைகள். மூலிகைச் செடிகள், நீர்த்தாவரங்கள் என்று விதம் விதமான தாவரங்கள் வளரும் மிகப் பெரிய பூங்கா. இதை சுற்றி வருவதற்கு இரண்டு மணி நேரங்கள் பிடிக்கிறது. 



இதில் சைனீஸ் தோட்டம் கணிசமான இடத்தை ஆக்கிரமிக்கிறது. அங்கு போன்சாய் மரங்களுக்கு தனி இடம். எனக்கு போன்சாயை ரசிக்க முடியாது. உயர்ந்து, பரந்து வளரக்கூடிய மரங்களை குட்டையாக வளர்ப்பது அவைகளுக்கு செய்யும் துரோகம் என்று தோன்றும்.‌ 

இந்த தாவரவியல் பூங்காவிற்கு எதிரே மாண்ட்ரியால் டவரும், ஒலிம்பிக் ஸ்டேடியமும் இருக்கின்றன. அவை பராமரிப்பு வேலைகளுக்காக மூடப்பட்டிருந்ததால் உள்ளே சென்று பார்க்க முடியவில்லை. மாண்ட்ரியால் டவரின் சிறப்பு அது 45 டிகிரி சாய்வாக கட்டப்பட்டிருப்பதுதான். 

மாண்ட்ரியால் டவர்

பூங்கா முழுவதும் சுற்றிப் பார்த்து விட்டு ஊருக்கு கிளம்பினோம். ஒரு இந்திய உணவகத்தில் மதிய உணவை கையில் வாங்கிக் கொண்டோம். வழியில் தென்னிந்திய பாணியில் கோபுரம், பளபளக்கும்  விமானத்தோடு, ஒரு கோவில் தென்பட்டது. எந்த கோவில் என்று தெரியவில்லை. அடுத்த முறை வரும் பொழுது பார்த்துக் கொள்ளலாம் என்று நினைத்துக் கொண்டோம். ஆனால் ஆட்டவாவிற்கு தனியாக இரண்டு நாட்கள், மாண்ட்ரியாலுக்கு இரண்டு நாட்கள் பிளான் பண்ண வேண்டும் என்று தோன்றியது. 

திரும்பும் வழியெங்கும் ஒரு பக்கம் நதி, இன்னொரு பக்கம் வயல்கள். அவற்றில் மேய்ந்து கொண்டிருந்த மாடுகள், சில இடங்களில் குதிரைகள். நான் என் மகளிடம்," என் சின்ன வயதில் நான் வசித்த திருச்சி இப்படித்தான் நகரத்திற்கு நடுவிலேயே வயல்களோடு இருக்கும்" என்று கூறி பெருமூச்சு விட்டேன். வேறு என்ன செய்ய முடியும்?

பல தடங்கல்களோடு தொடங்கினாலும், இனிமையாக முடிந்த பயணம். 

Sunday, June 12, 2022

கனடா போனாலும் கரெண்ட் கட் விடவில்லை!

கனடா போனாலும் கரெண்ட் கட் விடவில்லை!

முதல் படத்தில் தெரிவது மியூசியம்

மதிய உணவை சாப்பிட்டு விட்டு அலெக்ஸாண்ட்ரா பாலத்தில் நடந்து விட்டு, ரைட்யூ நதியில் படகு சவாரிக்கு வர வேண்டும் என்ற திட்டத்தின் படி மதிய உணவிற்குப் பின் அலெக்ஸாண்ட்ரா பாலத்தை நோக்கி வண்டியை செலுத்தினார் மருமகன். 

நேஷனல் வார் மெமோரியல் அருகே வந்த பொழுது தூறல் தொடங்கியது. ஆலங்கட்டி மழை போல பெரிய பெரிய மழைத்துளிகள் பெருத்த ஓசையோடு கார் மீது விழுந்தன. அன்றைய வானிலை அறிக்கையில் மூன்று மணிக்கு மழை என்று இருந்ததால் நாங்கள் குடைகள் எடுத்துக் கொண்டிருந்தோம். ஆனால் அன்று பெய்த மழைக்கு இந்த குடைகள் உதவியிருக்காது. அப்படி ஒரு பேய் மழை. கார் ஓட்டுவது மிகவும் கஷ்டமாக இருந்தது. எதிரே சாலை தெரியவேயில்லை. பக்கவாட்டில் மரங்களின் ஆட்டம் பயமுறுத்தியது. எப்படியோ மாப்பிள்ளை சமாளித்து ஓட்டினார். ஜி.பி.எஸ் வேலை செய்யாததால் வழி காட்ட யாருமில்லை. ஒரே இடத்தையே சுற்றிச் சுற்றி வந்து கொண்டிருந்தோம். இந்த மழையில் போட்டிங் இருந்தால் கூட போக வேண்டாம் என்று தோன்றியது.
 
 



ஒரு வழியாக மழை விட்டது. நாங்கள் ரைட்யூ கேனால் வந்து சேர்ந்தோம். க்ரூஸ் கிளம்பும் இடத்திற்கு வந்து சேர்ந்த பொழுது ஒரு க்ரூஸ் கிளம்பிச் சென்றதை பார்த்தோம். என் மகள் அதன் ஆர்கனைசர்களை தொடர்பு கொண்ட பொழுது நாங்கள் புக் பண்ணியிருந்த 4:30 மணி க்ரூஸ் கேன்சலாகி விட்டதாகவும் 5:30 மணி க்ரூஸில் இடம் இருந்தால் எங்களை ஏற்றுக் கொள்வதாகவும், இல்லாவிட்டால் பணம் திருப்பித் தரப்படும் என்றும் கூறினர். 

அலெக்ஸாண்ட்ரா பாலத்தை கையில் அடக்குவதை போல என் மகள் எடுத்த படம்

அந்த க்ரூஸ் பயணம் ஒன்றரை மணிநேரம். நாங்கள் அவசரத்தில் குழந்தைக்கு உணவு எதுவும் கையில் எடுத்துக் கொள்ளவில்லை. டயபர் வேறு மாற்ற வேண்டும். அதுவும் கையில் இல்லை. எனவே மிகவும் எதிர்பார்ப்போடு இருந்த க்ரூஸ் பயணத்தை ரத்து செய்து, சில புகைப்படங்கள் மட்டும் எடுத்துக் ஹோட்டலுக்குச் சென்றோம். 


செல்லும் வழியில் சாலையில் சிக்னல்கள் எதுவும் வேலை செய்யவில்லை. என்ன காரணம் என்பது ஹாலிடே இன் சென்ற பிறகுதான் தெரிந்தது. சற்று முன் மழை பெய்த பொழுது ஒரு பெரிய இடி இடித்தது, அதில் ஆட்டவா முழுவதும் மின்சாரம் துண்டிக்கப்பட்டு விட்டதாம். "சிஸ்டம் வேலை செய்யாததால் இப்போது செக் இன் செய்வது கடினம்". என்றார்கள். 

ஹோட்டலிலிருந்து வியூ 

என்ன செய்யலாம் என்று ஆலோசித்தோம். மறுநாள் செல்வதாக இருந்த மாண்ட்ரியாலுக்கு இன்றே சென்று விடலாமா? என்று தோன்றியது. அங்கு ஏதாவது ஹோட்டலில் இடம் கிடைக்குமா என்று தேடினால் எல்லா விடுதிகளுமே ஓவர் புக்ட்! சரி வெளியே சென்று சாப்பிட்டு விட்டு வரலாம். வழியில் ஏதாவது கடையில் குழந்தைகளுக்கு டெட்ராபேக்கில் பால் வாங்கிக் கொள்ளலாம் என்று முடிவு செய்தோம். ஆனால் கிரகம் விடவில்லை. மின்சாரம் இல்லாததால் எல்லா கடைகளும், மூடப்பட்டு விட்டன. 

திறந்திருந்த ஒரு இந்திய உணவு விடுதியில்,  "ஏ.சி. போட முடியாததால் உள்ளே சூடாக இருக்கும், மெனு கார்டில் இருக்கும் எல்லா ஐட்டம்களும் கிடைக்காது" என்றார்கள். அதனால் என்ன? சாப்பிட ஏதாவது கிடைக்கிறதே என்று அங்கேயே இரவு உணவை
முடித்துக் கொண்டோம். அங்கிருந்த பெண்மணி, "நாளைக் காலை பத்து மணிக்குத்தான் மின்சாரம் வரும்" என்று குண்டைப் போட்டார். கால் நீட்டி படுக்க இடம் கிடைத்தால் போதும் என்று ஹாலிடே இன்னுக்கே திரும்பினோம். 

"உங்கள் அறை ஐந்தாவது மாடியில் இருக்கிறது. அங்கிருக்கும் செக்யூரிட்டி உங்களுக்கு அறையைத் திறந்து விடுவார். பவர் இல்லாததால் லிஃப்ட் இல்லை, நீங்கள் படியேறித்தான் செல்ல வேண்டும். சாரி ஃபார் த இன்கன்வீனியன்ஸ்" என்றார்கள். அந்த அசௌகரியத்திற்காக பில் தொகையில் இருந்து டாலர் கழித்துக் கொண்டார்கள்.

செல்ஃபோனில் இருக்கும் டார்ச்சின் உதவியோடு எங்கள் உடைமைகளையும் தூக்கிக் கொண்டு படியேறினோம். கனடா போனாலும் கரெண்ட் கட் விடவில்லை!

அறை வசதியாக இருந்தது. காஃபி மேக்கர், மைக்ரோ வேவ் அவன், அயர்ன் பாக்ஸ் என்று அத்தனையும் இருந்து என்ன பயன்? அவற்றை இயக்க மின்சாரம் இல்லையே!!

கனடா என்பதால் புழுக்கம் இல்லை. அதனால் நன்றாக தூங்கினோம். மறுநாள் காலை எழுந்து பல் துலக்கி விட்டு குளிக்கலாமா? வேண்டாமா? என்று யோசித்துக் கொண்டிருந்த பொழுது கரெண்ட் வந்து விட்டது. 

அப்பாடா! வாட் எ ரிலீஃப்! முதலில் காபி குடித்தோம். காம்ப்ளிமெண்ட்ரி ப்ரேக் ஃபாஸ்ட் என்றார்கள். என்ன பிரமாதம்? இட்லி, வடை, பொங்கல், பூரியா கிடைக்கப் போகிறது? ப்ரெட், பட்டர்,ஜாம், கார்ன் ஃப்ளேக்ஸ், பான் கேக்(Pan cake), கப் கேக் இவைதானே? சாப்பிட்டு விட்டு பக்கத்தில் இருக்கும் அருவியை பார்த்து விட்டு அந்த காட்டிற்குள் கொஞ்சம் நடந்து விட்டு வரலாம் என்று சென்றோம். 

இதுதான் அருவியாம் 

வாட்டர் ஃபாலஸ், வாட்டர் ஃபால்ஸ் என்று என் மகள் கொடுத்த பில்ட் அப்பில் நான் குற்றாலம், பாபநாசம் ரேஞ்சுக்கு கற்பனை செய்து கொண்டேன். ஒரு சின்ன ஓடை, ஒரு பாறையிலிருந்து விழுகிறது,
அது வாட்டர் ஃபால்ஸாம்.. தோடா!


ஆனால் அந்த ட்ரேயில் (trail) மிக அழகு! எனக்கு அஹோபிலம்தான் நினைவுக்கு வந்தது. 

- இன்னும் வரும் 

Wednesday, June 8, 2022

அலைக்கழித்த ஆட்டவா!

 அலைக்கழித்த ஆட்டவா!

மே.23 விக்டோரியா தினம் என்பதால் கனடாவில் அன்று விடுமுறை. அது எந்த கிழமையில் வந்தாலும் லாங் வீக் எண்ட் கிடைக்க வேண்டும் என்பதற்காக 23ம் தேதியை தொடர்ந்து வரும் திங்கள் கிழமை விடுமுறை அளிக்கப்படுமாம். இந்த வருடம் மே 21,22,23 அப்படிப்பட்ட விடுமுறை நாட்களாக அமைய

ஆட்டவாவிற்கும், மாண்ட்ரியாலுக்கும் சென்று வரலாம் என்று என் மகளும், மருமகனும் முடிவுசெய்து ஹோட்டல் அறைகள், பார்க்க வேண்டிய இடங்களில் நுழைவுச்சீட்டு போன்ற முன்பதிவுகளை ஒரு மாதத்திற்கு முன்பே செய்து விட்டனர். 

21ம் தேதி சனிக்கிழமை காலை கிளம்ப வேண்டும். வெள்ளி மாலை முதல் என் இடது காலில் வாயு பிடிப்பு போல வலிக்க ஆரம்பித்தது. காலை நீட்டினால் சரியாகும் என்று என் மகள் சில பயிற்சிகளை கூறினாள். அவைகளை செய்ததும் வலி பொறுக்க முடியாத அளவிற்கு அதிகமாகி விட்டது. நான் பட்ட அவஸ்தையைப் பார்த்த என் மாப்பிள்ளை டூர் ப்ரோகராமை கான்சல் செய்து விடலாம் என்றார். 

வலியை குறைக்க மாத்திரை போட்டுக் கொண்டு என் மகளை விட்டு பிராணிக் ஹீலிங் செய்யச் சொன்னேன். அதன் பின்னர் வலி நன்றாக குறைந்து விட மறுநாள் கிளம்பினோம்.

இந்த வசந்த காலத்தில் ஆட்டவா வில் துலிப் ஃபெஸ்டிவல் மிகவும் பிரசித்தி பெற்றது. இந்த திருவிழா இந்த வருடம் மே 13 முதல் 23 வரை பதினோரு நாட்கள் நடந்தது. ஒரு பூங்கா முழுவதும் கலர் கலராக துலிப் மலர்கள் பூத்துக் குலுங்குகின்றன. இந்த வருடம் (2022) எழுபதாவது வருடமாகிய பிளாட்டின விழாவாம்.

துலிப் மலர்கள் நட்பிற்கான மலர்களால் அறியப்படுகின்றன. இதற்கு காரணம் இரண்டாம் உலகப் போரின் பொழுது ஜெர்மனிய படையெடுப்பில் தப்பி கனடாவிற்கு அடைக்கலமாக வந்த டச்சு அரசு குடும்பம் இரண்டு வருடங்கள் இங்கே தங்கி யிருக்கிறார்கள். பிறகு நாடு திரும்பியதும் தங்கள் அன்பையும், நட்பையும் வெளிப்படுத்தும் விதமாக 100,000 துலிப் கன்றுகளை டச்சு அரசி கனடாவிற்கு அனுப்பி வைத்தாராம். இன்றளவும் அந்த வழக்கம் தொடர்கிறதாம். டௌஸ் ஏரிக்கரையை ஒட்டியிருக்கும் கமிஷனர் பார்க்கில்தான் இந்த துலிப் திருவிழா நடைபெறுகிறது. 

இதற்கு நுழைவு கட்டணம் கிடையாது. ஆனால் காரை நிறுத்த இடம் கிடைக்க வேண்டுமே என்று கவலையாக இருந்தது. நல்ல வேளை அதிகம் நடக்கத் தேவையில்லாமல் காரை நிறுத்த முடிந்தது. 





தோட்டத்திற்குள் பtல வண்ண மலர்கள், பல வண்ண மனிதர்கள். துலிப் மலர்களுக்கு நடுவே புகைப்படம் எடுத்துக் கொள்ள ஏதுவாக பாத்திக்கு ஊடாக வழி அமைத்து கொடுத்திருக்கின்றனர். 

ஆங்காங்கே உணவு கடைகள், புகைப்படம் மற்றும் செல்ஃபி எடுத்துக் கொள்ள தோதாக அமைப்புகள். குழந்தைகள் ஏன் பெரியவர்களும் விளையாட பெரிய அளவில் செஸ் போர்ட், சைனீஸ் செக்கர்ஸ் போன்ற உபகரணங்கள். 


இரவில் வாண வேடிக்கைகளும் இருக்குமாம்.

பூங்காவில் நாங்கள் நடக்கும் பொழுது நல்ல வெய்யில். தண்ணீர் குடித்து மாளவில்லை. மதிய உணவை ஆர்டர் செய்து வாங்கிக் கொண்டு காரிலேயே சாப்பிட்டோம். ஆலு பராத்தாவும், வெஜிடபிள் பிரியாணியும், ராய்த்தாவும் ருசியாகவே இருந்தன. 

அதன் பிறகு அலெக்ஸாண்ட்ரா பாலத்தில் நடந்து விட்டு ரைடு கால்வாயில்(Rideau canal) படகுசவாரியை முடித்துக் கொண்டு ஹோட்டலுக்கு சென்று கொஞ்சம் ரிலாக்ஸ் செய்து கொண்டு பிறகு பைவார்ட் மார்க்கெட் செல்லலாம் என்று ஏற்பாடு. ஆனால் எங்கள் திட்டத்தை தவிடு பொடியாக்கினார் வருண பகவான்.


- தொடரும்





Saturday, June 4, 2022

அழகே உன்னை ஆராதிக்கிறேன்

அழகே உன்னை ஆராதிக்கிறேன்

மனிதர்கள், விலங்குகள் பறவைகள், தாவரங்கள் எல்லாவற்றிர்க்கும் அழகு இருப்பது போல் ஊர்களுக்கும் அழகு உண்டு. 

ஒரு இடம் இயற்கையாக அமைந்த விதத்தால் உண்டாகும் அழகு, நிர்மாணிக்கப்பட்ட விதத்தில் உண்டாகும் அழகு என இரண்டு வகை அழகுகள் உண்டு. 

மலை வாசஸ்தலங்கள் இயற்கை அழகில் மிளிரும். அப்படி பல மலைகள் இருந்தாலும் ஊட்டியைத்தானொ 'மலைகளின் ராணி' என்கிறோம். அதன் அழகு அப்படிப்பட்டது. 

நான் பார்த்தவரை அழகான ஊர்கள் என்றால் திருச்சி, மதுரை, புனே, மைசூர், டில்லி, மஸ்கட் இவைகளைச் சொல்வேன். 



இப்போது திருச்சிக்கு செல்லும் பொழுதெல்லாம் நாம் பிறந்து வளர்ந்த திருச்சி இதுவல்ல என்று தோன்றும். என் சிறு வயதில் நகரத்தின் நடுவிலேயே வயல்கள் இருக்கும். இப்போது கரூர் டர்னிங்கிலிருந்து பிரிந்து ஒரு ரோடு தில்லை நகருக்கு முன்னால் வந்து சேருகிறதே அவையெல்லாமே வயல்கள்தான். காவேரிப்பாலம் தாண்டி விட்டால் வயல்களும், தோப்பும் துரவுமாக ஒரே பசுமை!

கோட்டை ஸ்டேஷனுக்கு செல்லும் பாதையில் நரிக்குறவர்களின் கூடாரம் இருக்கும். அங்கு இரவில் வெட்டவெளியில் அடுப்பு மூட்டி அவர்கள் சமைக்கும் நெருப்பு, மரத்தில் கட்டப்பட்ட தூளிகளில் ஆடும் குழந்தைகள்... ஒரு ஓவியம் போல இன்னும் என் மனதில் இருக்கிறது. 

ஒரு நகரத்தின் சௌகரியம், கிராமத்தின் அமைதி, அழகு இதுதான் திருச்சியாக இருந்தது. நவீனமயமாக்குதலில் இவை எல்லாம் மாறி விட்டன. 




பின்கொசவம் வைத்த புடவை கட்டிக்கொண்டு, தலையை பிச்சோடா போட்டு, பூவைத்துக் கொண்டிருக்கும் மாத்வ பெண்மணியைப் போன்ற அழகு மதுரைக்கு என்று லா.ச.ரா. எழுதியிருப்பார்.   எனக்கு மைசூர் அப்படித் தோன்றும். கோவிலை மையமாகக் கொண்டு வாஸ்து சாஸ்திரப்படி அமைக்கப்பட்ட எதினிக் சிட்டியான மதுரை ஸ்மார்ட் சிட்டி ஆவதற்காக இப்போது நிறைய மாறி விட்டது என்கிறார்கள். மைசூர் மாறியிருக்காது என்று நினைக்கிறேன். 



பெங்களூர், புனே, டில்லி எல்லாமே பெருகி வரும் மக்கள் தொகை, அதிகரித்து வரும் வாகன நெரிசல் இவைகளை சமாளிக்க மேம்பாலங்கள் கட்டவும், மெட்ரோ ரயிலுக்காகவும் பல மரங்களை இழந்து புது கோலத்தை ஏற்றிருப்பது காலத்தின் கட்டாயம். எப்படி இருந்தாலும் அழகான ஊர்கள்தான். 

வெளிநாடுகளில் மக்கள்தொகை குறைவாக இருப்பதாலோ என்னவோ பழைய அழகை இழக்காமல் வளர்வது சாத்தியமாகிறது. அங்கெல்லாம் சில இடங்களில் நகரம் நியூ சிட்டி, ஓல்ட் சிட்டி என்று இரண்டு பகுதிகளாக இருக்கும். ஓல்ட் சிட்டி பழமையை அப்படியே மெயின்டெய்ன் பண்ண, நியூ சிட்டி அடுக்கு மாடி குடியிருப்புகளோடு நவீனமாக இருக்கும். 

 
கண்டாப் பீச் - மஸ்கட் 

பாலைவனமான மஸ்கட், துபாய் போன்றவை பார்த்து பார்த்து அழகூட்டப்பட்டிருப்பது சந்தோஷம் அளிக்கும் விஷயம். ஓமானில் மன்னராக இருந்த சுல்தான் காபூஸ் அவர்களுக்கு அழகுணர்ச்சி அதிகம். பால்கனியில் 
கொடியில் தொங்கும் துணிகள் பார்வைக்கு நன்றாக இருக்காது என்பதால் அங்கு கலர்கலராக துணிகளை பால்கனியில் உலர்த்த முடியாது. அதே போல் ஏ.சி.யிலிருந்து வெளியேறும் தண்ணீர் சுவற்றில் வழிந்து கறை உண்டாக்கு -வதையும் அனுமதிக்க மாட்டார்கள்.  அங்கிருக்கும் கடற்கரைகளையும் மிக அழகாக்கி விட்டார்கள். 
 






சமீபத்தில் தன் அழகால் என்னைக் கவர்ந்த ஊர் மாண்ட்ரியால். அங்கிருக்கும் கலைநயமிக்க பிரும்மாண்டமான கட்டிடங்களும், வயலும், ஆறும் மனதை கொள்ளை கொண்டன. 

முகநூலில் பெண் சக்தி என்னும் குழுவில் 'அழகே உன்னை ஆராதிக்கிறேன்' என்ற தலைப்பில் கட்டுரை கேட்டிருந்தார்கள், அதற்கு நான் எழுதிய கட்டுரை இது.

Sunday, May 29, 2022

சூடாக ஒரு கப் டீ!

சூடாக ஒரு கப் டீ!


காலை எழுந்தவுடன் சூடாக அருமையான ஃபில்டர் காபி குடித்த வாயோடு மத்யமரில் உமா சஷிகாந்தின் டீ பற்றிய பதிவை குடித்தேன் , சாரி ஃபார் த  டங்க் ஸ்லிப் படித்தேன். சிறிது நேரத்திலேயே அருணா ரகுராமனின் டீ பற்றிய பதிவு. என் பங்கிற்கு ஒரு கப் சாய்!

என்ன இருந்தாலும்  மதராஸிகளிடம் காபியா? டீயா? என்று கேட்டால் காபி என்றுதான் கூறுவோம். திராவிட மாடல்! அதுவும் வீட்டில். மாடு இருந்து, கறந்த பாலில் காபி குடித்து பழகிய என்னைப் போன்றவர்கள் காபி பிரியர்களாகத்தானே இருக்க முடியும்?

ரயில் பயணங்களில் தமிழ் நாடு எல்லையைத் தாண்டினால் காபி கிடைக்காது. திரும்பி வரும் பொழுது "காபி காபி.." என்னும் குரல் கேட்டால் இன்பத்தேன் வந்து பாயும் காதினிலே.

எங்கள் வீட்டில் டீ வாங்கியதே இல்லை. அப்போதெல்லாம் டீ என்றால் ஒரு சின்ன சாஷேயில் கட்டி தொங்கவிடப் பட்டிருக்குமே அதுதான். எங்கள் உறவில் இரண்டு பெண்மணிகள் மஹா பெரியவரின் பக்தைகள். அவர் காபி குடிக்க கூடாது என்று சொன்னதால் காபியை துறந்து டீயை பற்றிக் கொண்டவர்கள்.  அவர்கள் மற்றவர்கள் வீடுகளுக்குச் செல்லும் பொழுது டீ பாக்கெட்டுகளோடு டீ வடிகட்டியும் கொண்டு வந்து விடுவார்கள்.

என் மூன்றாவது அக்கா கருவுற்றிருந்த பொழுது அவளுக்கு காபி பிடிக்கவில்லை, டீ குடிப்பாள். அப்போதுதான் எங்கள் வீட்டில் டீ வாங்க ஆரம்பித்தோம். எனக்கும் இதே கதை.  கருவுற்றிருந்த பொழுது காபி ஒரு துளி கூட உள்ளே தங்காது. அப்போதுதான் டீ குடிக்க ஆரம்பித்தேன். இருந்தாலும் நான் போடும் டீ எனக்கு அவ்வளவு திருப்தி தந்ததில்லை. பலவிதமான காம்பினேஷன்கள் முயற்சி பண்ணினேன். 

மஸ்கட்டில் இருந்த பொழுது சிலோன் டீ என்று கிடைக்கும் பிராண்ட்தான் என் சாய்ஸ். இந்தியா திரும்பிய பிறகு நட்ஸ் & ஸ்பைஸில் கிடைக்கும் ஒரு பிராண்ட் டீ நான் போட்டால் கூட நன்றாக இருக்கும். 

ஒரு முறை பெங்களூர் மால் ஒன்றில் சாய் பாய்ண்ட் என்னும் டீக்கடையில் என் மகன் இஞ்சி டீ வாங்கித் தந்தான். லோட்டா போன்ற பெரிய கப்பில் வந்த சூடான, காரமான அந்த டீயை குடிப்பதற்குள் வியர்த்து, விறுவிறுத்து விழி பிதுங்கினேன்.

டீயோடு கொஞ்சம் பூஸ்ட் அல்லது கோகோ சேர்த்த பூஸ்ட் டீ எனக்கும் என் மகளுக்கும் பிடிக்கும். 

தோழி ஒருத்தி லைட்டான டீ டிகாஷனில் பனங்கல்கண்டு சேர்த்து தந்த பிளாக் டீ அருமையாக இருந்தது. நானும் அவ்வப்பொழுது அந்த பிளாக் டீ குடிப்பதுண்டு. அதில் புதினா இலைகளும் போடலாம்.

லெமன் டீ குடித்தால் உடல் இளைக்குமாம். கொழுப்பு குறைகிறதோ இல்லையோ, சில நாட்கள் கேரா இருக்குமே, அப்போது லெமன் டீ நல்ல பரிகாரம். 

டில்லியில் எங்கள் சம்பந்தி வீட்டில் வேலை செய்யும் பெண்மணி டீயில் கொஞ்சமாக உப்பு சேர்த்து அருந்துவார்.

டீயை குடிப்பதற்கு மட்டுமல்லாமல், தலைக்கு ஹேர் பேக் போடவும் பயன்படுத்துவார்கள்.

சரித்திரத்தில் ஒரு முக்கியமான சம்பவம் அமெரிக்க சுதந்திர போரோடு சம்பந்தப்பட்ட பாஸ்டன் டீ பார்ட்டி என்னும் நிகழ்வு.


ஜப்பானிய கலாசாரத்தில் சனோயூ அல்லது சாடோ எனப்படும் க்ரீன் டீ தயாரித்து வழங்கும் தேநீர் சடங்கு ஒரு முக்கியமான விஷயம். இதற்கு நிழலில் வளர்க்கப்பட்டு, நிழலிலேயே உலர்த்தப்பட்ட மாச்சா என்னும் பச்சை நிற தேயிலைத்தூளே பயன்படுத்தப் படும். 

கனடாவில் டொரொண்டோவில் ஒவ்வொரு வருடமும் ஜனவரியில் தேநீர்த் திருவிழா கொண்டாடப்படுமாம். பலவிதமான தேநீரை அங்கே சுவைக்க முடியுமாம். ஆனால் மூன்று வருடங்களாக கொரோனா காரணமாக அந்நிகழ்ச்சி நடைபெறவில்லை. கனடாவில் சில மால்களில் 'சாய் டீ' என்ற அறிவிப்பை பார்த்தேன். இங்கே இருப்பவர்கள் தேநீரில் பால் சேர்க்காமல்தான் அருந்துவார்கள். பால்சேர்த்த இந்திய தேநீர் தான் சாய் டீ என்ற விளக்கம் கிடைத்தது.

நம் நாட்டில் அஸ்ஸாமிலும் நவம்பரிலிருந்து ஜனவரிக்குள் இப்படி ஒரு டீ ஃபெஸ்டிவல் உண்டு.

பிரிட்டிஷ் கலாசாரத்தில் முக்கியமானது 'ஹை டீ'. இதில் ஸ்பைஸி உணவுகளோடு டீ பரிமாறப்படும். உணவை விட அரட்டையும், உரையாடலும் முக்கியம் என்றாலும் எந்த விதமான பாத்திரங்களை பயன்படுத்தவேண்டும், எப்படிப்பட்ட மேஜை விரிப்புகள், திரைச்சீலைகள் இருக்க வேண்டும் என்று  பலவித கோட்பாடுகள் கடைபிடிக்கப்பட்டு தங்கள் அந்தஸ்தை வெளிப்படுத்தும் விஷயமாக ஆனது. 

ஒரு கப் சாறோடு உலகத்தையே சுற்றி  விட்டேன் போலிருக்கிறது. 



என் தளத்திற்கு வருகை தந்து படிக்கப் போகும் அனைவருக்கும் நன்றி. பிளாக்கர் பிரச்சனையினால் கருத்திட முடியவில்லை. மன்னிக்கவும் 🙏🙏


Friday, May 20, 2022

திக் திக் நிமிடங்கள்

 திக் திக் நிமிடங்கள்

வாழ்க்கை என்பது அனுபவங்களால் ஆனது. சிறியதும், பெரியதும், நல்லதும் கெட்டதுமான அனுபவங்களே வாழ்க்கை. நல்ல அனுபவங்கள் மகிழ்ச்சியையும், மோசமான அனுபவங்கள் படிப்பினையையும் தருகின்றன. அன்று நான் ஒரு பாடம் கற்றுக் கொண்டேன். 

இது நாங்கள் சென்னையில் ராமாபுரம் தில் இருந்த பொழுது நடந்த நிகழ்ச்சி.  என் பெரிய பேத்திக்கு அப்போது ஒன்றரை வயத. சென்னையில் ஒரு முதியோர் இல்லத்தில் இருந்த என் நாத்தனாரின் கணவர் எங்கள் வீட்டிற்கு வந்திருந்தார். அவருக்கு செவித்திறன் மிகவும் குறைவு. 

அன்று காலை மணி ஒன்பதரை இருக்கும். திடீரென்று மின்சாரம் துண்டிக்கப் பட்டது. ஒரு வேளை பராமரிப்புக்காக காலை ஒன்பது மணி  முதல் மாலை ஐந்து மணி வரை நிறுத்தப் பட்டிருக்கிறதோ? என்று முதல் நாள் செய்தி தாளை எடுத்து பார்த்ததில் அப்படி எதுவும் இல்லை. அக்கம் பக்கத்தில் உள்ள வீடுகளில் மின்சாரம் இருப்பது தெரிய வந்தது. ஏன் நம் வீட்டில் மட்டும் இல்லை என்று குழம்பிய பொழுது, மூன்றாம் மாடியில் வசிக்கும் சிறுமி, காசு கட்டிடீங்களா ஆண்டி? எங்க வீட்டுல கூட காசு கட்டல என்று கரெண்டை கட் பண்ணிட்டாங்க." என்றாள். 

"கட்டியாச்சே.." என்றதும், ஆன் லைனில் கட்டுகிறீர்களா? அப்படீன்னா ரெபரென்ஸ்  நம்பர் கேக்கறாங்க. வாசலில் செகூரிடி அருகில் ஒரு ஈ.பீ. ஆபீஸ் ஆள் உட்கார்ந்திருக்கார் சீக்கிரம் போய் காட்டுங்க" என்றாள்.(தெளிவுதான்)

மின்சார கட்டணம், தொலை பேசி கட்டணம் எல்லாவற்றையும் என் மகன்தான் கட்டுவது வழக்கம். அவன் இப்போது வெளியூர் செல்வதற்காக விமான நிலையத்தில் அல்லவா இருப்பான். என்ன செய்வது? என்று குழம்பினேன். 

என் மகள் அவனை கை பேசியில் அழைத்துப் பார்க்கலாம் என்று முயற்சி செய்ய, ஏதோ ஒரு நல்ல காலம் அவன் பதில் அளித்தான். என் மகள் அவனுக்கு விவரங்களிச் சொல்லி, TNEB receipt ஐ அவள் மெயில் ஐடிக்கு அனுப்ப சொல்ல அவனும் அப்படியே செய்ய, அதை ஈ.பீ. அலுவலகத்தில் சென்று காண்பிக்க உடனே மின்சாரம் வந்து விட்டது. இதுதான் என் அனுபவம் என்று அவசரப் பட்டு முடிவுக்கு வந்து விடாதீர்கள். முக்கியமான விஷயம் இனிமேல்தான் வருகிறது. 

என் மகளின் ஆதார் அட்டையில் அவளுடைய கை பேசி எண் தவறாக குறிக்கப் பட்டிருக்கிறது. அதை திருத்த வேண்டுமென்றால் குறிப்பிட்ட வார்டின் கார்பரேஷன் கிளை அலுவலகத்திற்கு நேரே சென்றுதான் விண்ணப்பம் கொடுக்க வேண்டும் என்று கூறப் பட்டதால் அலுவலகத்திற்கு விடுப்பான நேற்று அந்த வேலையை முடித்து விடலாம் என்று அதற்காக கிளம்பிக் கொண்டிருந்தாள். இடையில் ஏற்பட்ட மின்சார தடையால் தன்னுடைய கைப் பையை எங்கள் வீட்டிலேயே வைத்து விட்டு சென்று விட்டாள். அதையும், அவளின் டூ வீலர் சாவியையும் கீழே கொண்டு வந்து தருமாறு என்னிடம் கூறினாள். 

அப்போதுதான் அடுப்பில் குக்கரை வைத்திருந்த நான் அவள் கேட்ட பொருள்களை எடுத்துக் கொண்டு,  என் காலை கட்டிக் கொண்டு அழுத என் பேத்தியையும்  தூக்கிக் கொண்டு( நல்ல வேளையாக) கீழே சென்ற பொழுது எப்போதும்  செய்வது போல் ஸ்டாப்பரை போடாமல் வாசல் கதவை முக்கால் வாசி திறந்து வைத்து விட்டு சென்றேன். என் பெண்ணிடம் அவள் கேட்டவற்றை கொடுத்து விட்டு மேலே வந்து பார்த்தால்... ஆட்டோ லாக் கதவு பூட்டிக் கொண்டு விட்டது. என்னிடம் சாவி கிடையாது.  

உள்ளே எண்பத்தாறு வயது நிறைந்த எங்கள் அத்திம்பேர் (நாத்தனாரின் கணவர்) இருந்தார். ஆனால் அவருக்கு 90% காது கேட்காது. ஹால் சோபாவில் உட்கார்ந்திருந்தாலாவது பெல் சத்தம் கேட்கலாம், உள்ளே படுத்துக் கொண்டிருக்கிறார், நான் வாசலில் நின்றபடி காலிங் பெல்லை அடித்துக் கொண்டே இருக்கிறேன்.. ம் ஹூம்..! அவருக்கு காது கேட்டால்தானே கதவை திறப்பார்? சமையல் அறையில் இருந்து குக்கர் ஒரு விசில், இரு விசில் என்று ஒலி  எழுப்ப, எனக்கு பிரஷர் எகிற ஆரம்பித்தது.

இன்னொரு பக்கமோ வியர்வை தாங்க முடியாமல் குழந்தை அழ ஆரம்பித்து விட்டது. 

என் கையில் செல் போனும் இல்லை. பக்கத்து வீட்டிற்க்குச் சென்று 

என் மகளுக்கும், கணவருக்கும் போன் செய்தால், அவர்கள் எடுத்தால்தானே..? என்னோடு என் பக்கத்துக்கு வீட்டுகாரர்களும் சேர்ந்து கொண்டு கதவை இடித்தார்கள், பெல் அடித்தார்கள். இந்த கலாட்டா சத்தம் கேட்டு எதிர் வீட்டுக்காரர்களும் வந்து விட்டார்கள். அவர்களும் அவர்கள் பங்கிற்கு கதவை தட்டினார்கள். எதற்கும் பலன் இல்லை. இப்போது குக்கர் எங்கேயாவது வெடித்து விடப் போகிறது என்னும் பயத்தோடு, அத்திம்பேருக்கு காது கேட்காததால்தான் திறக்கவில்லையா? அல்லது முதியவரான அவர் மயங்கி விழுந்து விட்டாரா? என்னும் கவலையும் சேர்ந்து கொண்டது. 

எங்கள் வீட்டின் வாசல் கதவிற்கு மூன்று சாவிகள் உண்டு. ஒன்று என் கணவரிடமும், ஒன்று என்னிடமும், மற்றொன்று என் மகளிடமும் இருக்கும். இப்போது என் சாவி வீட்டினுள் மாட்டிக்கொண்டு விட்டது. என் கணவரோ, மகளோ வந்தால் கதவைத் திறந்து விடலாம். "ஆண்டி, அங்கிள் அங்கே வரார்.. வண்டு ஒன்று கூவ, மேலே இருந்த படியே," வீட்டு சாவியை சீக்கிரம் கொடுங்கள் என்று கூவினேன். "சாவியா? நீங்கள் எல்லாம் வீட்டில் இருக்கிறீர்களே என்று நான் சாவியை எடுத்துக் கொண்டு செல்லவில்லை" என்றாரே பார்க்கலாம்.. போச்சுடா! ஒரே கதி என் மகள்தான்.

"சுபா எங்கே போய் இருக்கிறாள் என்று சொல்லுங்கள். நான் கண்ணனை விட்டு சாவியை வாங்கி வரச் சொல்லுகிறேன்". பக்கத்துக்கு வீட்டு பெண்மணி உதவ முன் வந்தார். 

"ராமாவரம் லக்ஷ்மி நரசிம்மர் கோவிலுக்கு  அருகேதான் இருக்கு என்று 
கூகுளில் பார்த்து விட்டு சென்றுருக்கிறாள், சரியாகத் தெரியாது.."

"பால்கனி கிரில் திறந்துதானே இருக்கும்? ஒரு ஏணி வைத்து யாரையாவது பால்கனி வழியாக உள்ளே நுழையச் சொல்லலாமே..?"

எதிர் வீட்டு நவநீதாவின் ஆலோசனை. 

"இல்லையே.. பால்கனி கிரில் பூட்டிதான்  இருக்கும்".

போச்சு.. ஒரு ஒரு கதவாக மூடிக்கொண்டே வருகின்றதே..!

இல்லை இல்லை எல்லா கதவுகளும் மூடவில்லை, அத்திம்பேர் படுத்திருக்கும் பெட் ரூம் ஜன்னல் திறந்து இருக்கிறது. அங்கிருக்கும் நெட்லானை அலம்ப வேண்டும் என்பதற்காக கழட்டிய பொழுது ஜன்னலை திறந்து வைத்திருக்கிறோம்.

"ஓ!வெரி குட்! நந்து நீயும், கண்ணனும் கீழே போய் பின்னால் ஏணி இருக்கும் அதில் ஏறி அந்த தாத்தாவை கூப்பிட்டு கதவை திறக்கச் சொல்லுங்கள்". என்று தெளிவாக உத்தரவு பிறப்பித்து விட்டு, 

"நீங்கள் ஏன் வெளியில் நிற்கிறீர்கள்? உள்ளே வாருங்கள் என்று எங்களையும் அவர் வீட்டிற்க்கு அழைத்துச் சென்றார் நவநீதா. நாங்கள் அவர் வீட்டிற்க்குள் சென்று தண்ணீர் குடிக்க கேட்டோம். தண்ணீர் வருவதற்குள் 'க்ளிக்' என்ற ஓசையோடு எங்கள் வீட்டு கதவு திறந்தது. 

அப்பாடா!... என் கணவர் ஓடிப்போய் அடுப்பை நிறுத்தினார். 

"யாரோ ஒரு பையன் தாத்தா, தாத்தா என்று கூப்பிட்டு கதவை திறக்கச் சொன்னான். ரொம்ப நேரமா தட்டுகிறீர்களா?"

"சீ! சீ! அதெல்லாம் இல்லை". ஒரு வயதான விருந்தினரிடம் வேறு என்ன சொல்ல முடியும்? 

சரி இதிலிருந்து என்ன கற்று கொண்டாய்? என்கிறீர்களா? 

வீட்டின் ஒரு சாவியை அக்கம் பக்கத்தில் யாரிடமாவது கொடுத்து வைக்க வேண்டும். பால்கனி கிரில்லை தினசரி பூட்ட வேண்டியதில்லை. ஐந்து நிமிடமோ, பத்து நிமிடமோ சாவியை மறக்க கூடாது என்பது கோல்டன் ரூல். பதிமூன்று வருடங்கள் மறக்காமல் இருந்தது பெரிய விஷயமில்லை, ஒரு முறை மறந்ததுதான் பெரிய விஷயம்.

ப்ளசிங் இன் டிஸ்கைஸ் என்பது போல அன்று சாதம் நன்றாக குழைந்து விட்டதால் பேத்தி லபக் லபக்கென்று முழுங்கி விட்டாள்.

Saturday, May 14, 2022

திரைப்படங்கள் சொல்லும் செய்திகள்.

திரைப்படங்கள் சொல்லும் செய்திகள்.

திரைப்படம் என்பது சக்தி வாய்ந்த ஒரு ஊடகம். நம் நாட்டைப் பொறுத்தவரை அரசியல், சமூக மாற்றங்களுக்கே திரைப்படங்கள் காரணமாக இருந்திருக்கின்றன. என்னதான். தொழில் நுட்ப வளர்ச்சி சினிமாவின் நடப்பவை நிஜமல்ல என்னும் தெளிவை ஓரளவுக்கு மக்களுக்கு அளித்தாலும் இன்றும் தங்களுடைய அபிமான கதாநாயகன் நடித்த படத்தை முதல் காட்சி பார்க்க வேண்டும் என்பதற்காக 1500 ரூபாய் வரை செலவழிக்க தயாராக இருக்கும் ஒரு கூட்டம் இருந்து கொண்டு தான் இருக்கிறது அப்படி இருக்கும் பொழுது சினிமாக்கள் சொல்லும் செய்திகளில் கவனமாக இருக்க வேண்டாமா?

இங்கும் அங்குமாக நடக்கும் விஷயங்களை வெளிச்சம் போட்டு காட்டும் பொழுது பலருக்கு அந்த கதாநாயகன் செய்யும் செயலை தானும செய்யலாம் தவறில்லை என்னும் எண்ணம் வந்துவிடாதா?

இப்போது வரும் திரைப்படங்கள்,  அவை சொல்லும் செய்திகள் மிகவும் அச்சமூட்டுகின்றன. நற்பண்புகளக்கு
 உறைவிடமானவன்தான் கதா நாயகன் என்னும் நிலை மாறி எல்லா துர்குணங்களும் கொண்டவன்தான் கதாநாயகன் என்னும் நிலைக்கு வந்து விட்டது. 

குறிப்பாக வெங்கட் பிரபு படங்களில் கதாநாயகனும், அவன் தோழர்களும் மது அருந்தாத காட்சி கிடையாது. 

சமீபத்தில் வெளியாகியிருக்கும் அவருடைய 'மன்மத லீலை' படத்தில் கதாநாயகன் பாத்திரப் படைப்பு மிகவும் வருத்தம் கொள்ள வைத்தது. 

திருமணத்திற்கு முன்பே ஆர்குட் மூலம் நட்பு கொள்ளும் ஒரு பெண்ணின் அழைப்பின் பேரில் அவளைக் காணச் செல்லும் அஷோக் செல்வன் கை நிறைய பியர் பாட்டில்களை எடுத்துச் செல்கிறார். இருவரும் எல்லை மீறும் தருணத்தில் அந்தப் பெண்ணின் தந்தை (ஜெய பிரகாஷ்) வந்து விடுகிறார். அவர் அவளுடைய தந்தை இல்லை, கணவர் என்பது தெரிய வருகிறது. அசோக் செல்வனுக்கும் ஜெய பிரகாஷிற்கும் நடக்கும் கை கலப்பில் ஜெ.பி. இறந்து விட, அதை தற்கொலை என்பது போல
 ஜோடித்து, அவர் பணத்தை திருடிக் கொண்டு, தன்னோடு வரும் அந்தப் பெண்ணையும் கொலை செய்து விட்டு கொஞ்சம் கூட குற்ற உணர்ச்சி இல்லாமல் இன்னொரு பெண்ணை திருமணம் செய்து கொண்டு ஜாலியாக இருக்கிறார்.

திருமணத்திற்கு பிறகாவது திருந்தினாரா? என்றால் இல்லவே இல்லை. அவருடைய மன்மத லீலை தொடர்கிறது. இவருடைய வீக்னெஸை தெரிந்து கொண்ட, அவரால் கொலை செய்யப்பட்ட பெண்ணின் முன்னாள் காதலன் அவரை பழி வாங்குவதற்காக,  ஒரு பெண்ணை அனுப்பி அவரோடு பழக வைத்து, அதை செல் ஃபோனில் படமெடுத்து அவரை பிளாக் மெயில் செய்கிறான். கில்லாடியான அஷோக் செல்வன் அவர்களையும் தன்னுடைய ஃபார்ம் ஹவுஸிற்கு அழைத்துச் சென்று கொலை செய்து, அங்கேயே புதைத்து விட்டு ஜாலியாக இருப்பதை தொடர்கிறார். 

என்னவிதமான பாத்திரப் படைப்பு இது? என்ன வேண்டுமானாலும் செய்யலாம், எதற்கும் தண்டனை கிடையாது. தவறு செய்தவன் வாழ்க்கையில் நிம்மதியாகவும், சந்தோஷமாகவும் இருப்பான் என்று கூறும் படங்கள் என்னவிதமான செய்தியை கடத்துகின்றன? 

வெங்கட் பிரபு போன்ற திறமையான இளைஞர்கள் இதை யோசிக்க வேண்டும். அவருடைய மங்காத்தாவும் நெகடிவ் மெசேஜைத்தான் தந்தது. நளன் குமாரசாமியின் சூது கவ்வும் படமும் இந்த வகையைச் சேர்ந்தது தான். இந்தப்படங்கள் மிகவும் ஸ்வாரஸ்யமாக எடுக்கப் பட்டிருந்தன என்பதில் சந்தேகம் கிடையாது. மிகவும் ருசியான விஷம் என்பதை உண்ண கொடுக்கலாமா? பொழுது போக்கைத் தாண்டி சமுதாயப் பொறுப்பு கலைஞர்களுக்கு இருக்க வேண்டாமா?

ஆண்கள்தான் கெட்டழிய வேண்டுமா?  பெண்களுக்கு அந்த வாய்ப்பு மறுக்கப்படுவது எந்த விதத்திலும் நியாயம் கிடையாது  என்று நினைத்து எடுத்தது போல் 'அச்சம், மடம்,நாணம், பயிர்ப்பு' என்னும் படம். 

மூன்று இளம் பெண்களில் ஒருத்தி அப்பர் மிடில் கிளாஸை சேர்ந்த பிராமணப் பெண்(அக்ஷரா ஹாசன்), வீட்டின் கண்டிப்பு, கட்டுப்பாடுகளால் மன உளைச்சலுக்கு உள்ளாகிறாளாம். பெற்றோர்கள் வீட்டில் இல்லாத ஒரு நாளில் காதலனோடு உறவு கொள்ள தூண்டுகிறாள் தான் ப்ளஸ் டூ படித்த காலத்திலிருந்தே பல நண்பர்களோடு உறவு கொண்டிருப்பதாகக் கூறும் அவள் தோழி. பாதுகாப்பான உறவிற்கு காண்டெமும் வாங்கித் தருகிறாள். 

ஒரு நாள் மீன் சாப்பிட்டு விட்டதால் குற்ற உணர்ச்சியில் தவிக்கும் அவளை,"எனக்கு பிடிக்காது நான் சாப்பிடவில்லை. உனக்கு பிடித்திருந்தால் நீ தாராளமாக சாப்பிடு" என்று கூறி தேற்றும் பாட்டி இன்னொரு நாள் மீன் பரிமாறுகிறார். ஒரு தளை உடைகிறது. 

ஆனால் முதல் முறையாக அசைவம் சாப்பிட்ட பொழுது வந்த குற்ற உணர்ச்சி கூட திருமணத்திற்கு முன்பே காதலனோடு உறவு கொள்ளும் பொழுது அவளுக்கு வரவில்லை. தளைகள் உடைந்த சந்தோஷத்தில் திளைக்கிறாள். என்னவொரு முற்போக்கு! 

"டோண்ட் ஜட்ஜ் மீ...  ஃபிஷ்ஷையும், சிக்கனையும் வெஜிடேரியின் லிஸ்டில் சேர்க்க மனு போடப் போகிறேன்.." என்று அவள் பாடி ஆடுவதோடு படம் முடிகிறது. இதுதான் பெண்ணியம் என்று வலியுறுத்துவதைப் போன்ற கருத்து. 

டீன் ஏஜ் என்பதே உணர்வுகள் அறிவை மழுங்கச் செய்யும் பருவம் அந்த நேரத்தில் இப்படிப்பட்ட படங்கள் எப்படிப் பட்ட மோசமான பாதிப்பை ஏற்படுத்தும் என்பதை படைப்பாளிகள் உணர வேண்டும்