கணம்தோறும் பிறக்கிறேன் 

Friday, July 29, 2022

பிரமிக்க வைத்த நயாகரா

பிரமிக்க வைத்த நயாகரா

நயாகரா பெண்ணைப்போல, ஒவ்வொரு பருவத்திலும் ஒவ்வொரு அழகு! என்றார் என் மாப்பிள்ளையின் தோழர். உண்மைதான். குளிர் காலத்தில் இரண்டு முறை அங்கு சென்றேன். கிருஸ்துமஸ் சமயத்தில் அங்கு செய்யப்பட்டிருக்கும் விளக்கொளி அலங்காரங்களையும், வாண வேடிக்கைகளையும் பார்ப்பதற்காக இரவில் ஒரு முறை சென்றோம். பகலில்தான் அருவியின் அழகு தெரியும் என்றாள் என் மகள். அதை ரசிப்பதற்காக பகலில் ஒரு முறை சென்றோம். 

வாண வேடிக்கைகள் பிரமாதம் என்று கூற முடியாது. தீபாவளியின் பொழுது நாம் வெடிக்கும் ஃபேன்ஸி வெடிகள் மாதிரிதான். அதே போல் அருவியும் பெரிதாக என்னை வசீகரிக்கவில்லை. அருவி தொடங்கும் இடத்திலிருந்து பார்த்தது காரணமாக இருக்கலாம். 

நீர்வீழ்ச்சி என்றால் மலையிலிருந்து தொபேலென்று கீழே விழ வேண்டும், ஹோவென்ற ஓசை எழுப்ப வேண்டும். நீர்த்திவலைகள் சாரலாக நம்மை நனைக்க வேண்டும். இந்த அனுபவங்களைத் தராத அருவியில் என்னதான் வினாடிக்கு 2800க்யூபிக் மீட்டர் நீர் கொட்டினாலும் அது மலையிலிருந்து நீர் வழிவதாகத்தான் தோன்றுகிறதே ஒழிய குற்றாலமோ, பாபநாசமோ தந்த சந்தோஷத்தை தரவில்லை என்று நான் கூறி விட்டதில் என் மகளுக்கு சற்று வருத்தம்தான். 

மேலே நான் சொன்ன அனுபவங்கள் கிடைக்காததற்கு குளிர் காலத்தில் நயாகராவுக்கு சென்றது ஒரு காரணமாக இருக்கலாம். "குளிருக்கு அடக்கமாக லேயர்கள் அணிந்து கொண்டு அதன் மீது ஓவர் கோட், தலைக்கு குல்லாய், கால்களில் கம்பூட்ஸ், காதுகளையும் மூடிக்கொண்டு, இத்தனையும் 

போதாதென்று கொரோனாவிற்காக மாஸ்க்...இத்தனையையும் மீறி சாரல் அடிக்கவில்லை, சத்தம் 

கேட்கவில்லை என்றெல்லாம் சொல்வது நியாயம் கிடையாது. சம்மர் வரட்டும் அப்போது நயாகராவுக்குச் செல்லலாம்" என்றாள் மகள். 

சனி, ஞாயிறு என்றால் மிகவும் கும்பலாக இருக்கும் என்பதால் வெள்ளியன்று கிளம்பினோம். நாங்கள் வசிக்கும் இடத்திலிருந்து நயாகராவிற்கு இரண்டு மணி நேர பயணம்.‌ காலை ஆறு மணிக்கு வீட்டை விட்டு கிளம்பி விட்டோம். அதற்கு முன்னாலேயே பார்க்கிங் உட்பட போட்டிங், ஜர்னி பிஹைண்ட் த ஃபால்ஸ், வொயிட் வாட்டர் வாக், ஃப்ளவர் ஷோ, பட்டர் ஃப்ளை சாங்சுரி என்ற எல்லாவற்றிர்க்கும் ஆன் லைனில் டிக்கெட் வாங்கியாகி விட்டது. இதில் என்ன வேடிக்கை என்றால் ஆன் லைனில் டிக்கெட் வாங்கியவர்கள் வரிசைதான் நீளமாக இருந்தது. நேரிடையாக வந்து நுழைவுச்சீட்டு வாங்கியவர்கள் காத்திருக்க தேவையிருக்கவில்லை.


Rainbow bridge

நயாகரா நீர்வீழ்ச்சியை கனடா, அமெரிக்கா என்ற இரண்டு நாடுகளிலிருந்தும் கண்டு ரசிக்கலாம். உண்மையில் நயாகரா அருவி என்பது நோ மேன்ஸ் ஏரியா எனப்படுகிறது.‌ இந்த இரு நாடுகளையும் ரெயின்போ ப்ரிட்ஜ் என்னும் பாலம் இணைக்கிறது. அமெரிக்காவில் இருப்பது பிரைடல் ஃபால்ஸ் என்னும் அளவில் கொஞ்சம் சிறிய அருவி. கனடாவில்தான் ஹார்ஸ் ஷு என்னும் குதிரை லாடத்தைப்போல

வளைந்திருக்கும் பெரிய பகுதி. இதற்கு அருகாமை வரை சிறிய கப்பலில் செல்ல முடியும். 

அந்த கப்பலில் பயணிக்கும் பொழுது அருவியிலிருந்து அடிக்கும் சாரலில் நாம் நனைந்து விடாதிருக்க சிவப்பு நிறத்தில் மெல்லிய ரெயின் கோட் தருகிறார்கள். கனடாவிற்கு நேர் எதிர் பகுதியில் அமெரிக்காவிலிருந்தும் சிறிய கப்பல்களில் சுற்றுலா பயணிகள் வருகிறார்கள். அங்கிருந்து வருபவர்கள் நீல நிற ரெயின்கோட் அணிந்திருக்கிறார்கள். படகு பயணத்தில் ஏதாவது அசம்பாவிதம் நடந்தால் எந்த நாட்டை சேர்ந்தவர்கள் என்று கண்டு பிடிக்கவே இப்படி வித்தியாசமான நிறங்களில் ரெயின் கோட் வழங்கும் ஏற்பாடாம்.

கப்பல் நகரத் தொடங்கி சிறிது நேரத்தில் ஹோவென்ற பேரிரைச்சலோடு தண்ணீர் நம்மீது தெளிக்கிறது, இல்லையில்லை பலத்த மழை போல நம்மை தொப்பலாக நனைக்கிறது. படகில் இருக்கும் அத்தனை பேரும் மகிழ்ச்சியில் உற்சாகமாக ஆரவாரம் செய்கிறார்கள். நடுவில் வானவில் வேறு தெரிய அதை படமெடுக்க போட்டி. 

ஜர்னி பிஹைண்ட் த ஃபால்ஸ் என்பதும் ஒரு அற்புதமான அனுபவம். நுழைவிடத்திலிருந்து நம்மை மின்தூக்கியில் 125 அடி கீழே அழைத்துச் செல்கிறார்கள். அங்கிருந்து ஒரு நீண்ட குகையில் நடந்து சென்றால் நயாகரா பூமியில் விழுவதை அருவிக்கு பின்புறமிருந்து பார்க்கலாம். 

அந்த குகையில் கொஞ்சம் நடந்தால் வலதுபுறம் ஒரு பிரிவு செல்கிறது. அங்கு நயாகரா பற்றிய விவரங்கள், நயாகராவில் சாகஸ முயற்சிகள் செய்தவர்களின் விவரங்கள், அங்கு விஜயம் செய்த பிரபலங்கள் யார் யார் என்ற தகவல்கள் புகைப்படங்களோடு காணக்கிடைக்கின்றன. அங்கு இரண்டு சாளரங்கள் வழியே அருவியை அருகில் பார்க்க முடியும். கையை நீட்டி மழை போல கொட்டும் அருவியின் சாரலை அனுபவிக்க முடியும். அங்கிருந்து மீண்டும் டன்னலில் நடந்து அருவி பூமியைத் தொடும் இடத்திற்கு வந்தால் பார்வையாளர்களுக்கு தனியாக இடம் இருக்கிறது. இங்கேயும் சாரலிலிருந்து நம்மை காக்க ரெயின் கோட் தருகிறார்கள்.அங்கிருந்து பார்க்கும் பொழுது அந்த அருவியின் பிரும்மாண்டம் தெரிகிறது. 

அருவி தந்த அந்த பரவச அனுபவத்திலிருந்து மீண்டு வொயிட் வாட்டர் வாக்ஸ் சென்றோம். ஈரி ஏரியிலிருந்து ஒண்டோரியோ ஏரிக்கு செல்லும் நீர்த்தடத்தை ஒட்டிய மரப்பாலத்தில் .07 மைல் தொலைவு நடப்பதைத்தான் வொயிட் வாட்டர் வாக்ஸ் என்கிறார்கள். இதிலும் நாம் லிஃப்டில் கீழே அழைத்துச் செல்லப்படுகிறோம். அந்த மரப்பாலத்தில் இரண்டு இடங்களில் சற்று கீழே இறங்கி நதியோட்டத்தை மிக அருகில் பார்க்க முடியும். அந்த நதியோட்டத்தில் எழும் அலைகள் நதியின் வேகத்தால் எழுபவை. ஹரித்வார், ரிஷிகேஷ் போன்ற இடங்களில் கங்கை நதியில் இப்படிப்பட்ட அலைகளை பார்க்க முடியும். 

வேர்ல்பூல் ஏரோ கார் என்பதில் 250 அடி உயரத்தில் கேபிள் காரில் பயணித்து ஒரு குறுகலான இடத்தில் சடாரென திரும்பும் பொழுது நதியில் உண்டாகும் சுழல் களை ரசிப்பது. இந்த பயணத்தில் ஒரு சுவாரஸ்யமான விஷயம் கனடாவிலிருந்து பாஸ்போர்ட் இல்லாமலேயே அமெரிக்காவின் எல்லைக்குள் சென்று திரும்பலாம்.

மொத்தத்தில் ஒரு நல்ல அனுபவம்.

"இப்போது என்ன சொல்கிறாய்?" என்றாள் மகள். என்ன சொல்வது அருவியின் பிரும்மாண்டம், அழகு, என் வாயை அடைத்து விட்டதே..!!

Wednesday, July 20, 2022

வாஷி (மலையாள திரைப்படம்)

வாஷி 

(மலையாள திரைப்படம்)


மலையாளத்தில் வாஷி என்றால் பிடிவாதம் என்று பொருள்.(அப்படித்தானே கீதா?)

இளம் வக்கீல்களான எபின் மாத்யூ
(டொவினோ தாமஸ்),  மது(கீர்த்தி சுரேஷ்) இருவரும் வெற்றிகரமான வக்கீல்களாக தங்களை நிலை நிறுத்திக் கொள்ள பாடுபடுகிறார்கள். அவர்களுடைய வெல்விஷர் மூலம் ஒரே அலுவலகத்தை இருவரும் பகிர்ந்து கொள்ளும் இருவருக்குமிடையே காதல் பூக்கிறது. 

சாராயக்கடை நடத்தும், அரசியல் செல்வாக்குள்ள சகோதரியின் கணவர் மூலம் எபினுக்கு பப்ளிக் பிராக்ஸிக்யூட்டர் பதவி கிடைக்கிறது. 

டொவினோ தாமஸ் பப்ளிக் பிராக்ஸிக்யூட்டராக வாதாடும் முதல் கேஸிலேயே அவருக்கு எதிராக அவருடைய மனைவியாகிவிட்ட கீர்த்தி சுரேஷ். இருவருக்குமே தங்களை நிலை நிறுத்திக் கொள்ள இது ஒரு முக்கியமான கேஸ். குற்றம் சாட்டப்பட்ட ஆணை காப்பாற்ற கீர்த்தி சுரேஷ் முயல, பாதிக்கப்பட்ட பெண்ணின் சார்பாக டொவினோ தாமஸ்.  இந்த வழக்கு சம்பவங்கள் அவர்கள் வாழ்க்கையையும் பாதித்து, இளம் தம்பதிகளான அவர்கள் தனித்தனியே உறங்கும் அளவிற்குச் செல்கிறது. கேஸில் யார் ஜெயித்தார்கள்? அவர்கள் வாழ்க்கை என்னவானது? என்பதையெல்லாம் மிகையில்லாமல், இயல்பாக, சுவாரஸ்யமாக சொல்லியிருக்கும் படம். 

கடைசியில் தன் வாதத்தை தொகுத்து வழங்கும் கீர்த்தி சுரேஷ்  எல்லா படங்களையும் போல உடைந்து போய் அழுது தன் வாதத்தை முடிக்கப் போகிறார் என்று நினைத்தால்.. அப்படியெல்லாம் இல்லை. 

நோ ஹீரோயிசம், நோ மெலோ டிராமா, நோ வயலென்ஸ், நோ டூயட், நோ தனி காமெடி டிராக்‌.

கட்டுக்கோப்பான திரைக்கதை, இயல்பான காட்சிகள், வசனங்கள் மற்றும் நடிப்பு.  நிச்சயமாக ஒரு முறை குடும்பத்தோடு பார்க்கலாம். 
Available in Netflix. 

Saturday, July 9, 2022

கெட்ட சொப்பனம்..


கெட்ட சொப்பனம்..

பலராலும் ஆவலோடு எதிர்பார்க்கப்பட்ட அந்தப் படம் ரிலீசாகி விட்டது. திரையரங்குகளில் ஒரே கும்பல். முதல் காட்சியை என் மகள் என் சகோதரி குடும்பத்தோடு பார்த்து விட்டாள். "என்னை விட்டு விட்டு நீ மட்டும் பார்த்து விட்டாய்" என்று அவளிடம் கூறி விட்டு நான் வரிசையில் நிற்கச் செல்கிறேன். என்னோடு பாம்பே ஜெயஶ்ரீ இணைந்து கொள்கிறார். தியேட்டரில் உள்ளே வருபவர்களுக்கெல்லாம் வாழை மட்டை தட்டில் பொங்கல் தருகிறார்கள். இந்த நேரத்தில் பாம்பே ஜெயஶ்ரீ எங்கேயோ சென்று விடுகிறார். 

நான் படம் பார்த்து விட்டு Awesome என்ற ஒரே வார்த்தையை பெரிதாக என் பிளாகில் விமர்சனமாக எழுதுகிறேன். அதற்கு பின்னூட்டத்தில் ஸ்ரீராம், "அதற்குள் பார்த்து விட்டீர்களா? ஃபர்ஸ்ட் டே, ஃபர்ஸ்ட் ஷோவா?" என்று கேட்கிறார். கீதா அக்கா,"நிஜமாக வா..? நன்றாக இருக்கிறதா?" என்கிறார். எனக்கு திடீரென நாம் நிஜமாகவே படத்தை பார்த்தோமா? பாதியில் தூங்கி விட்டோம் போலிருக்கிறதே..? இதில் விமர்சனம் வேறு எழுதி விட்டோம் என்று சந்தேகம் வருகிறது. புரண்டு படுத்து முழித்துக் கொண்டு விட்டேன். 

நேற்று பொன்னியின் செல்வன் -1 டீசர் பார்த்தேன். அதற்கு இப்படி ஒரு விளைவா? சின்ன வயதில் ராத்திரி நேரத்தில் பேய்க்கதைகளை படிக்க க் கூடாது கெட்ட சொப்பனம் வரும் என்பார்கள். 

Wednesday, July 6, 2022

பிறந்த நாள் இன்று பிறந்த நாள்

 பிறந்த நாள் இன்று பிறந்த நாள்


பழைய சினிமா ஒன்று 
"விரும்பிப் போனால் விலகிப் போகும்" 
"விலகிப் போனால் விரும்பி வரும்" என்ற வாசகங்களோடு துவங்கும். அந்த வாக்கியங்களை நியாயப்படுத்தும் சம்பவங்கள்தான் கதை. 

என் வாழ்க்கை முழுவதும் இப்படித்தான் அமைந்திருக்கிறது. எந்த விஷயத்திற்காவது அதிகம் ஆசைப்பட்டால் அது கிடைக்கவே கிடைக்காது. அந்த ஆசை அடங்கி அதை விட்டு விலகியதும் மடியில் வந்து விழும். 

பிறந்த நாள் வாழ்த்துக்களும் அப்படித்தான். சின்ன வயதில் பிறந்தநாள் கொண்டாடப்பட வேண்டும். எல்லோரும் வாழ்த்து சொல்ல வேண்டும் என்று ரொம்ப ஆசைப்பட்டிருக்கிறேன். ம்ஹூம்!  நடந்ததேயில்லை. பிறந்த நாள் என்று என்பது தெரிந்தால் தானே கொண்டாட? அது வருவதும் தெரியாது போவதும் தெரியாது. தவிர எங்கள் வீட்டில் நாம் பிறந்த தமிழ் மாதத்தில் நம்முடைய நட்சத்திரம் வரும் நாளைத் தான் பிறந்த நாள் என்பார்கள். அதைக் கூட கொண்டாடும் பழக்கமெல்லாம் கிடையாது. முடிந்தால் கோவிலுக்குச் செல்வோம். பள்ளியில் பிறந்த நாளன்று புத்தாடை அணிந்து சாக்லேட் கொடுக்கும் சில மாணவிகளை பார்க்கும் பொழுது நாமும் இப்படி கொடுக்க வேண்டும் என்று ஆசையாக இருக்கும். 

திருமணத்திற்குப் பிறகு என் கணவர் சர்ப்ரைஸ் கிஃப்டெல்லாம் கொடுத்ததில்லை.‌ என் பிறந்த நாளன்று உறவினர்கள், நண்பர்கள் யாராவது வாழ்த்தினால்  என் கணவர்,"உனக்கு இன்னிக்கு பிறந்த நாளா? சொல்லவேயில்ல..?" என்பார். போஸ்டரா அடித்து ஒட்ட முடியும்?

முதிர்ச்சி வர வர, பிறந்த நாளைக் கொண்டாடும்படி நாம் என்ன செய்து விட்டோம்? என்னும் கேள்வி பிறந்தது. ரமண மகரிஷியிடம் ஒரு முறை அவர் பிறந்த நாள் கொண்டாட்டத்திற்காக அனுமதி கேட்ட பொழுது,"பிறவி எடுத்ததற்காக வருத்தப்பட வேண்டும், அதில் கொண்டாட என்ன இருக்கிறது?" என்றாராம். அவரே அப்படி கூறியிருக்கும் பொழுது பிறந்த நாள் கொண்டாட நமக்கென்ன அருகதையிருக்கிறது? என்று அந்த ஆசை அற்றுப் போனது. 

அதன் பிறகுதான் முகநூலில் சேர்ந்தேன். பிறந்த நாளில் சிலர் வாழ்த்துவார்கள். இந்த வருடம் வாட்ஸாப், முகநூல், மெஸென்ஜர் என்று எல்லா தளங்களிலும் வாழ்த்துக்கள் வந்தன. உறவினர்கள், நண்பர்கள், நன்கு தெரிந்தவர்கள், நேரில் பார்த்து பழகாதவர்கள் என்று பலரும் வாழ்த்து தெரிவித்திருந்தீர்கள். அத்தனை பேருக்கும் நெஞ்சார்ந்த நன்றி. பெரியவர்களுக்கு என் நமஸ்காரங்கள் 🙏🙏. சிறியவர்களுக்கு ஆசிகள்.

என் மரியாதைக்குரிய பலரும் வாழ்த்தியது மகிழ்ச்சியூட்டியது.

என் பேத்தி பேப்பரைக் கொண்டு  பூங்கொத்து அவளே செய்து எனக்கு கொடுத்தாள். நிஜமான பூ என்றால் வாடி விடும். இது வாடாமலர் பூங்கொத்து! இது போதாதா?

உங்கள் அத்தனை பேரின் அன்பிற்கும் மீண்டும் நன்றி 🙏🙏❤️❤️❤️

எ.பி.வாட்ஸாப் குழுவில் எனக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவிக்கப்பட்டதாக அறிந்தேன். எல்லோருக்கும் நன்றி 🙏🙏

Wednesday, June 29, 2022

மனதில் நின்ற வரிகள், வசனங்கள்.அ

மனதில் நின்ற வரிகள், வசனங்கள்.

சமீபத்தில் மத்யமரில் Post of the week வாங்கிய என்னுடைய பதிவு இது. சிலவற்றை எழுதும் பொழுதே மனதிற்கு ஒரு திருப்தி வரும். அப்படிப்பட்ட பதிவு என்பதால் இங்கும் பகிர்ந்து கொள்கிறேன். 

லௌகீக வாழ்க்கையில் (material life) வெற்றி பெற்றவர்களைத்தான் திறமைசாலிகள் என்று கருதுகிறோம். அப்படி வெற்றிக் கனியை எட்டிப் பிடிக்க முடியாதவர்களை அசடு என்று சொல்லத் தயங்குவதில்லை. ஆனால் அசோகமித்திரன் ஒரு கதையில் (கதை பெயர் மறந்து விட்டது) என்ன சொல்கிறார் தெரியுமா? 

"கெட்டிக்காரத்தனம், அசட்டுத்தனம் என்றெல்லாம் கிடையவே கிடையாது. நாம் செய்யும் ஒரு காரியம் வெற்றி அடைந்து விட்டால் அதுதான் கெட்டிக்காரத்தனம், புத்திசாலித்தனம். அந்த காரியம் தோல்வி அடைந்து விட்டால் அதுவே அசட்டுத்தனம், முட்டாள்தனம் ஆகி விடும். How true! 

இதே வெற்றி, தோல்வி பற்றி ஜெயகாந்தனுடைய கருத்தையும் மறக்க முடியாது. 'ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள்' படத்தில் வரும் "நடிகை பார்க்கும் நாடகம் இதில் ரசிகர் எல்லாம் பாத்திரம்..." என்ற பாடலில்

"நன்மை என்பதும், தீமை என்பதும்

நாமணிந்திடும் வேடமே இதில்

வெல்வதென்னடி, தோல்வி என்னடி

மேடையில் ஒர் விளையாடலில் நாம்

மேடையில் விளையாடலில்" 

என்னும் வரிகளை மறக்கவே

முடியாது. 

ஜெயிக்கறதாவது? தோற்கறதாவது? All crap, just live the life என்று அனாயாசமாக கூறிவிட்டு சென்றுவிட்டார்.

லா.ச.ரா. அவருடைய பாற்கடல் அல்லது சிந்தாநதி இந்த இரண்டு நூல்களுள் ஏதோ ஒன்றில் 

"சிறு வயதில் கஷ்டப்படுவது பூண்டு வைத்த பாத்திரம் போல, எத்தனை தேய்த்து அலம்பினாலும் அந்த வாடை போகாது" என்று எழுதியிருந்ததையும். 

அவருடைய 'தரிசனம்' சிறுகதையில் கன்யாகுமரியை  

'அபிஷேக சுந்தரியாய் அவளின் அந்த சகிக்க முடியாத சௌந்தர்யம்!" என்று வர்ணித்ததையும்... அடடா! எப்படி மறக்க முடியும்?

சுஜாதாவின் 'சிவந்த கைகள்' கதையில் 

"பொய் சொல்லுவதற்கு அசோக்கின் இரண்டு விதிகள்

பொய் சொல்லாதே

பொய் சொன்னால் அதை உண்மையாக்கிவிடு"

எனக்கு பொய் சொல்ல வேண்டும் என்ற நிர்ப்பந்தம் ஏற்படும் பொழுதெல்லாம் இதை நினைத்துக் கொள்வேன். பொய் சொல்ல மாட்டேன்.

தி.ஜானகிராமன் மோகமுள் கதையை 

"இந்த பிரபஞ்சத்திற்கு எதுவுமே புதிதில்லை" 

என்னும் அட்சர லட்சம் பெறும் வார்த்தைகளோடு முடித்திருந்ததை மறக்க முடியுமா?

அவரே 'அன்பே ஆரமுதே' நாவலில் 

'இல்லறத் துறவு எவ்வளவு புனிதமோ அவ்வளவு புனிதம் துறவில்லறமும்'

என்று எழுதியிருந்ததும் மனதில் பச்சக்கென்று ஒட்டிக் கொண்ட வரிகள்.


சமீபத்தில் படித்த எஸ்.ராமகிருஷ்ணனின் நாவலில் காது கேட்காத ஒருவன்தான் கதாநாயகன். அதில் அவன் ,"குளிக்கும் பொழுது தண்ணீர் கீழே விழும் சத்தம் கேட்காது" என்று சொல்வதாக வரும் வரிகள் என்னை அதிர வைத்தது. இப்படி ஒரு விஷயம் இருக்கிறதா? என்ற எண்ணம் நெஞ்சை பிசைந்தது.

எவ்வளவு முயற்சி செய்தும் நாம் விரும்பும் சில விஷயங்கள் நடக்காத பொழுது 'முத்து' படத்தில் சூப்பர் ஸ்டார் சொல்லும்

"கிடைக்கிறது கிடைக்காம இருக்காது, கிடைக்காம இருக்கறது கிடைக்காது" என்னும் வசனம்தான் ஆறுதல்.

மற்றொரு மறக்க முடியாத வசனம் விருமாண்டி படத்தில் கமல் கூறும்,

"பெரும்பாலும் நாம் சந்தோஷமா இருக்கும் பொழுது நமக்கு அது தெரிவதில்லை " 

எவ்வளவு அர்த்தமுள்ள வசனம்! 

கண்ணதாசனின் இந்த வரிகளை கூறாமல் இந்த கட்டுரை நிறைவு பெறாது.

பிறப்பில் வருவது யாதெனக் கேட்டேன்
பிறந்த பார் என இறைவன் பணித்தான்
இறப்பில் வருவது யாதெனக் கேட்டேன்
இறந்து பார் என இறைவன் பணித்தான்
மனையாள் சுகமெனில் யாதெனக் கேட்டேன்
மணந்து பார் என இறைவன் பணித்தான்
அனுபவித்தே தான் அறிவது வாழ்வெனில்
ஆண்டவனே நீ ஏன் எனக் கேட்டேன்
படைத்தவன் சற்றே அருகினில் வந்து
அனுபவம் என்பதே நான்தான் என்றான் 

Tuesday, June 28, 2022

Fingertip - தமிழ் வெப் சீரீஸ்- விமர்சனம்

Fingertip - தமிழ் வெப் சீரீஸ்- விமர்சனம் 

சோஷியல் மீடியா என்பது விரல் நுனியில் இருக்கும் விபரீதம். இதை Zee5 ல் வெளியாகியிருக்கும் ஃபிங்கர்டிப் என்னும் வெப்சீரீஸ் அலசியிருக்கிறது. 

சீசன் ஒன்றில் ஐந்து வெவ்வேறு கதைகளில் வெவ்வேறு நடிகர்கள் நடிக்க, சோஷியல் மீடியாவிற்கு அடிமையானவர்கள், நல்லவர்கள், அப்பாவிகள், இவர்களை சோஷியல் மீடியா எப்படி பாதிக்கிறது என்று சுவாரஸ்யமாக காட்டியிருக்கிறார்கள். ஆனால் தலைப்புகள் Greed, Rage, Betrayal, Lust, Vengeance என்று ஆங்கிலத்திலேயே இருப்பது சற்று நெருடலாக இருக்கிறது. எல்லா மொழிகளிலும் டப் செய்து வெளியிட சௌகரியமாக இருக்கும் என்பதாலோ?

சீசன் இரண்டு ப்ளாக் வெப்(black web) என்னும் பயங்கரத்தை டீல் பண்ணுகிறது. 

தங்கள் செல்போன்களை சர்வீஸுக்கு கொடுக்கும் பெண்களின் புகைப்படங்களை மக் பண்ணி, அவர்களை விரட்டுபவன், மார்பிங் மூலம் பிரபலங்களின் பொது வாழ்வை சீர் குலைப்பவன், தாழ்வு மனப்பான்மை கொண்ட ஃபுட் டெலிவரி செய்பவன், காஸ்மெட்டிக் சர்ஜரி மூலம் தன் மூக்கை திருத்திக் கொள்ள நினைக்கும் நடிகை, எக்லிப்ஸ் என்னும் எதிக்கல் ஹாக்கர், சி.சி.டி.வி.காமிரா பொருத்த வருபவர்கள் போல வந்து தனிமையில் இருக்கும் முதியவர்களை கொலை செய்யும் ஒரு கும்பல், அதை கண்டுபிடிக்க முயலும் போலீஸ் அதிகாரி இப்படி தனித் தனியாக இருக்கும் கதைகள் ஒரு புள்ளியில் அழகாக இணைகின்றன. இதில் அந்த நடிகையின் கதை மட்டும் கொஞ்சம் ஒட்டாது போல இருக்கிறது. எல்லா நடிகர்களும் சிறப்பாக நடித்திருக்கின்றனர். குறிப்பாக மார்பிங் செய்யும் அந்த இளைஞர், சரியான வில்லன். நல்ல திரைக்கதை மற்றும் இயக்கம். இயக்குனர் ஸ்ரீனிவாசன் ஷிவகரை விரைவில் பெரிய திரையில் எதிர்பார்க்கலாம் என்று தோன்றுகிறது. 

Monday, June 20, 2022

விக்ரம்(விமர்சனம்)

விக்ரம் 


நானும் விக்ரம் பார்த்து விட்டேன். இந்த படத்தைப் பற்றி பலவிதமான விமர்சனங்கள் வந்தன. 

"பிரமாதம்.." என்று சிலரும், "ஒரே இருட்டு, டயலாக் புரியவேயில்லை" "எக்கச்சக்க வயலன்ஸ்" என்று சிலரும் எழுத, ஓ.டி.டி.யில் பார்த்துக் கொள்ளலாம் என்று முடிவெடுத்திருந்தேன். ஆனால் நண்பர் ஸ்ரீராம் படம் நன்றாக இருக்கிறது. தியேட்டரில் பாருங்கள் என்றது நம்பிக்கை அளித்தது. 

நான் கமலஹாசனின் நடிப்பை ரசிப்பேன் ஆனால் அவருடைய ஹார்ட் கோர் ஃபேன் கிடையாது. லோகேஷ் கனகராஜின் மாநகரம் படம் மிகவும் பிடித்திருந்தது.  என் மகளுக்கும் பார்க்க வேண்டும் என்று தோன்றியதால் கிளம்பினோம்.

முதல் பாதி செம! பகத் ஃபாசில் படத்தை எடுத்துச் செல்கிறார். இடைவேளையில் ஒரு முடிச்சு அவிழ, பின்பாதி எப்படி இருக்கும் என்று புரிந்து விடுகிறது. இருந்தாலும் இரண்டாம் பாதியும் நன்றாகவே இருக்கிறது. படத்தின் நீளம் தெரியவில்லை. 

நட்சத்திர பட்டாளம், எல்லோருக்கும் பெரிய ரோல் என்று சொல்ல முடியாது, ஆனால் குறிப்பிடத்தக்க பங்கு இருக்கிறது. எல்லோரும் தங்கள் பங்களிப்பை செவ்வனே செய்திருக்கிறார்கள்.

இருட்டு, இரைச்சல் என்பதெல்லாம் கொஞ்சம் மிகையான விமர்சனம். காட்சிகள் துல்லியம். பாடல்கள் பெரிதாக மனதில் நிற்கா விட்டாலும்,  பின்னணி இசை படத்திற்கு நல்ல சப்போர்ட். 

விஜய் சேதுபதியின் அறிமுக காட்சியில் கனடாவில் கைதட்டி வரவேற்கிறார்கள்! சூர்யாவுக்கும்  அப்படியே. 

நிச்சயமாக ஒரு முறை பார்க்கலாம்.

Saturday, June 18, 2022

மனம் கவர்ந்த மாண்ட்ரியால்


மனம் கவர்ந்த மாண்ட்ரியால்



ஆட்டவாவிலிருந்து மாண்ட்ரியால் செல்வதற்கு இரண்டு வழிகளை கூகுளார் பரிந்துரைத்தார். ஒன்று ஹைவே, மற்றது சீனிக் பியூட்டி பாதை. நாங்கள் இரண்டாவதை தேர்ந்தெடுத்தோம். வழி முழுவதும் காடு, ஆறு என்று இயற்கையை ரசித்தபடி பயணித்தோம். முதல் நாள் சூறைக்காற்று சேர்ந்த மழையால் ஆங்காங்கு முறிந்து கிடக்கும் மரங்களையும் பார்க்க முடிந்தது. அகண்டு, விரிந்து ஓடும் செயின்ட் லாரன்ஸ் நதி எங்கள் திருச்சியின் அகண்ட காவேரியை நினைவூட்டியது. 

க்யூபெக் எல்லையைத் தொட்டவுடனேயே ஃபிரஞ்சு ஆதிக்கம். தெருப் பெயர்கள், சிக்னல்களில் இருந்த பெயர்ப் பலகைகள் எல்லாவற்றிலும் ஃபிரெஞ்சு, ஆங்கிலம் இரண்டு மொழிகளும் காணப்பட்டன. 






மாண்ட்ரியால் அழகும், கம்பீரமும் சேர்ந்த நகரம்.  அதுவும் ஓல்ட் மாண்ட்ரியாலில் Notredame பெசலிகா அமைந்திருக்கும் டவுன்டவுனில் எல்லா வங்கிகளின் தலைமை அலுவலகங்களும் இருக்கின்றன. எல்லாமே ஃபிரெஞ்சு கட்டிடக்கலையில் அமைந்து நம்மை நிமிர்ந்து பார்க்கத் தூண்டி சொல்லிழக்க வைக்கின்றன. 










நாற்றிடேம் (Notredame) பெசலிகா சுற்றுலா பயணிகளை கவரும் இடமாக இருக்கிறது. இதன் விதானங்களின் வேலைப்பாடுகள் கலை நயத்தோடு இருக்கின்றன. இங்கு வண்ண வண்ணமாக ஏற்றி வைக்கப் பட்டிருக்கும் மெழுகு வர்த்திகள் இங்கே பிரார்த்தனை செய்யவும் வருகிறார்கள் என்று எண்ண வைத்தாலும், பெரும்பாலும் இதை ஒரு சுற்றுலா தலமாக கருதி புகைப்படம் மற்றும் செல்ஃபி எடுத்துக் கொள்பவர்கள் தான் அதிகம். 

அங்கிருந்து மதிய உணவு சாப்பிட இந்திய உணவகத்தை  நடந்து, நடந்து தேடி கண்டுபிடித்து சாப்பிட்டு விட்டு, ஒரு ஐஸ் கிரீமையும் விழுங்கி விட்டு ஓல்ட் போர்ட் சென்றோம்.



செயின்ட் லாரன்ஸ் நதிக்கரையில் அமைந்திருக்கும் ஓல்ட் போர்ட்டில் இந்த வசந்தம் மற்றும் கோடை காலத்தில் வருகை தரும் சுற்றுலா பயணிகளுக்காக எக்கச்சக்க பொழுது போக்கு அம்சங்கள். ஜிப் லைன் போன்ற அட்வென்சர் விளையாட்டுகள், பெடல் போட்ஸ், சைக்கிள் இவைகளை எடுத்து ஓட்டலாம். ஒரு இடத்தில் டில்லியில் இருக்கும் சைக்கிள் ரிக் ஷாக்கள் போல வரிசையாக நிறுத்தி வைக்கப் பட்டிருந்தன.  டிக்கெட் வாங்கி கொண்டு ஏறி அதில் அந்த இடத்தை சுற்றிப் பார்க்கலாம் என்று நினைத்தேன். அதை க்வாட்ரா சைக்கிள் (qradra cycle) என்கிறார்கள். அதில் ஏறி சுற்றி வரலாம், ஆனால் நாம்தான் ஓட்ட வேண்டும். நோ ரிக் ஷாகாரர். 





நிறைய உணவு விடுதிகள், அழகு பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள், டாட்டூ போட்டு விடுபவர்கள் என்று அந்த இடம் நம் ஊரின் பொருட்காட்சி நடைபெறும் இடம் மாதிரி இருக்கிறது. இரவு உணவை அங்கேயே முடித்துக் கொண்டு ஹோட்டலுக்குச் சென்றோம்.

மறுநாள் தாவரவியல் பூங்காவிற் குச் சென்றோம். முதலில் எனக்கு பெரிதாக எனக்கு எந்த அபிப்ராயமும் இல்லை. "என்ன பெரிய பொட்டானிக்கல் கார்டன்?லால்பாகை விடவா? என்று நினைத்தேன். 

ஆனால் மிகப்பெரிய, ஏறத்தாழ 22,000க்கும் மேற்பட்ட செடி வகைகள். மூலிகைச் செடிகள், நீர்த்தாவரங்கள் என்று விதம் விதமான தாவரங்கள் வளரும் மிகப் பெரிய பூங்கா. இதை சுற்றி வருவதற்கு இரண்டு மணி நேரங்கள் பிடிக்கிறது. 



இதில் சைனீஸ் தோட்டம் கணிசமான இடத்தை ஆக்கிரமிக்கிறது. அங்கு போன்சாய் மரங்களுக்கு தனி இடம். எனக்கு போன்சாயை ரசிக்க முடியாது. உயர்ந்து, பரந்து வளரக்கூடிய மரங்களை குட்டையாக வளர்ப்பது அவைகளுக்கு செய்யும் துரோகம் என்று தோன்றும்.‌ 

இந்த தாவரவியல் பூங்காவிற்கு எதிரே மாண்ட்ரியால் டவரும், ஒலிம்பிக் ஸ்டேடியமும் இருக்கின்றன. அவை பராமரிப்பு வேலைகளுக்காக மூடப்பட்டிருந்ததால் உள்ளே சென்று பார்க்க முடியவில்லை. மாண்ட்ரியால் டவரின் சிறப்பு அது 45 டிகிரி சாய்வாக கட்டப்பட்டிருப்பதுதான். 

மாண்ட்ரியால் டவர்

பூங்கா முழுவதும் சுற்றிப் பார்த்து விட்டு ஊருக்கு கிளம்பினோம். ஒரு இந்திய உணவகத்தில் மதிய உணவை கையில் வாங்கிக் கொண்டோம். வழியில் தென்னிந்திய பாணியில் கோபுரம், பளபளக்கும்  விமானத்தோடு, ஒரு கோவில் தென்பட்டது. எந்த கோவில் என்று தெரியவில்லை. அடுத்த முறை வரும் பொழுது பார்த்துக் கொள்ளலாம் என்று நினைத்துக் கொண்டோம். ஆனால் ஆட்டவாவிற்கு தனியாக இரண்டு நாட்கள், மாண்ட்ரியாலுக்கு இரண்டு நாட்கள் பிளான் பண்ண வேண்டும் என்று தோன்றியது. 

திரும்பும் வழியெங்கும் ஒரு பக்கம் நதி, இன்னொரு பக்கம் வயல்கள். அவற்றில் மேய்ந்து கொண்டிருந்த மாடுகள், சில இடங்களில் குதிரைகள். நான் என் மகளிடம்," என் சின்ன வயதில் நான் வசித்த திருச்சி இப்படித்தான் நகரத்திற்கு நடுவிலேயே வயல்களோடு இருக்கும்" என்று கூறி பெருமூச்சு விட்டேன். வேறு என்ன செய்ய முடியும்?

பல தடங்கல்களோடு தொடங்கினாலும், இனிமையாக முடிந்த பயணம். 

Sunday, June 12, 2022

கனடா போனாலும் கரெண்ட் கட் விடவில்லை!

கனடா போனாலும் கரெண்ட் கட் விடவில்லை!

முதல் படத்தில் தெரிவது மியூசியம்

மதிய உணவை சாப்பிட்டு விட்டு அலெக்ஸாண்ட்ரா பாலத்தில் நடந்து விட்டு, ரைட்யூ நதியில் படகு சவாரிக்கு வர வேண்டும் என்ற திட்டத்தின் படி மதிய உணவிற்குப் பின் அலெக்ஸாண்ட்ரா பாலத்தை நோக்கி வண்டியை செலுத்தினார் மருமகன். 

நேஷனல் வார் மெமோரியல் அருகே வந்த பொழுது தூறல் தொடங்கியது. ஆலங்கட்டி மழை போல பெரிய பெரிய மழைத்துளிகள் பெருத்த ஓசையோடு கார் மீது விழுந்தன. அன்றைய வானிலை அறிக்கையில் மூன்று மணிக்கு மழை என்று இருந்ததால் நாங்கள் குடைகள் எடுத்துக் கொண்டிருந்தோம். ஆனால் அன்று பெய்த மழைக்கு இந்த குடைகள் உதவியிருக்காது. அப்படி ஒரு பேய் மழை. கார் ஓட்டுவது மிகவும் கஷ்டமாக இருந்தது. எதிரே சாலை தெரியவேயில்லை. பக்கவாட்டில் மரங்களின் ஆட்டம் பயமுறுத்தியது. எப்படியோ மாப்பிள்ளை சமாளித்து ஓட்டினார். ஜி.பி.எஸ் வேலை செய்யாததால் வழி காட்ட யாருமில்லை. ஒரே இடத்தையே சுற்றிச் சுற்றி வந்து கொண்டிருந்தோம். இந்த மழையில் போட்டிங் இருந்தால் கூட போக வேண்டாம் என்று தோன்றியது.
 
 



ஒரு வழியாக மழை விட்டது. நாங்கள் ரைட்யூ கேனால் வந்து சேர்ந்தோம். க்ரூஸ் கிளம்பும் இடத்திற்கு வந்து சேர்ந்த பொழுது ஒரு க்ரூஸ் கிளம்பிச் சென்றதை பார்த்தோம். என் மகள் அதன் ஆர்கனைசர்களை தொடர்பு கொண்ட பொழுது நாங்கள் புக் பண்ணியிருந்த 4:30 மணி க்ரூஸ் கேன்சலாகி விட்டதாகவும் 5:30 மணி க்ரூஸில் இடம் இருந்தால் எங்களை ஏற்றுக் கொள்வதாகவும், இல்லாவிட்டால் பணம் திருப்பித் தரப்படும் என்றும் கூறினர். 

அலெக்ஸாண்ட்ரா பாலத்தை கையில் அடக்குவதை போல என் மகள் எடுத்த படம்

அந்த க்ரூஸ் பயணம் ஒன்றரை மணிநேரம். நாங்கள் அவசரத்தில் குழந்தைக்கு உணவு எதுவும் கையில் எடுத்துக் கொள்ளவில்லை. டயபர் வேறு மாற்ற வேண்டும். அதுவும் கையில் இல்லை. எனவே மிகவும் எதிர்பார்ப்போடு இருந்த க்ரூஸ் பயணத்தை ரத்து செய்து, சில புகைப்படங்கள் மட்டும் எடுத்துக் ஹோட்டலுக்குச் சென்றோம். 


செல்லும் வழியில் சாலையில் சிக்னல்கள் எதுவும் வேலை செய்யவில்லை. என்ன காரணம் என்பது ஹாலிடே இன் சென்ற பிறகுதான் தெரிந்தது. சற்று முன் மழை பெய்த பொழுது ஒரு பெரிய இடி இடித்தது, அதில் ஆட்டவா முழுவதும் மின்சாரம் துண்டிக்கப்பட்டு விட்டதாம். "சிஸ்டம் வேலை செய்யாததால் இப்போது செக் இன் செய்வது கடினம்". என்றார்கள். 

ஹோட்டலிலிருந்து வியூ 

என்ன செய்யலாம் என்று ஆலோசித்தோம். மறுநாள் செல்வதாக இருந்த மாண்ட்ரியாலுக்கு இன்றே சென்று விடலாமா? என்று தோன்றியது. அங்கு ஏதாவது ஹோட்டலில் இடம் கிடைக்குமா என்று தேடினால் எல்லா விடுதிகளுமே ஓவர் புக்ட்! சரி வெளியே சென்று சாப்பிட்டு விட்டு வரலாம். வழியில் ஏதாவது கடையில் குழந்தைகளுக்கு டெட்ராபேக்கில் பால் வாங்கிக் கொள்ளலாம் என்று முடிவு செய்தோம். ஆனால் கிரகம் விடவில்லை. மின்சாரம் இல்லாததால் எல்லா கடைகளும், மூடப்பட்டு விட்டன. 

திறந்திருந்த ஒரு இந்திய உணவு விடுதியில்,  "ஏ.சி. போட முடியாததால் உள்ளே சூடாக இருக்கும், மெனு கார்டில் இருக்கும் எல்லா ஐட்டம்களும் கிடைக்காது" என்றார்கள். அதனால் என்ன? சாப்பிட ஏதாவது கிடைக்கிறதே என்று அங்கேயே இரவு உணவை
முடித்துக் கொண்டோம். அங்கிருந்த பெண்மணி, "நாளைக் காலை பத்து மணிக்குத்தான் மின்சாரம் வரும்" என்று குண்டைப் போட்டார். கால் நீட்டி படுக்க இடம் கிடைத்தால் போதும் என்று ஹாலிடே இன்னுக்கே திரும்பினோம். 

"உங்கள் அறை ஐந்தாவது மாடியில் இருக்கிறது. அங்கிருக்கும் செக்யூரிட்டி உங்களுக்கு அறையைத் திறந்து விடுவார். பவர் இல்லாததால் லிஃப்ட் இல்லை, நீங்கள் படியேறித்தான் செல்ல வேண்டும். சாரி ஃபார் த இன்கன்வீனியன்ஸ்" என்றார்கள். அந்த அசௌகரியத்திற்காக பில் தொகையில் இருந்து டாலர் கழித்துக் கொண்டார்கள்.

செல்ஃபோனில் இருக்கும் டார்ச்சின் உதவியோடு எங்கள் உடைமைகளையும் தூக்கிக் கொண்டு படியேறினோம். கனடா போனாலும் கரெண்ட் கட் விடவில்லை!

அறை வசதியாக இருந்தது. காஃபி மேக்கர், மைக்ரோ வேவ் அவன், அயர்ன் பாக்ஸ் என்று அத்தனையும் இருந்து என்ன பயன்? அவற்றை இயக்க மின்சாரம் இல்லையே!!

கனடா என்பதால் புழுக்கம் இல்லை. அதனால் நன்றாக தூங்கினோம். மறுநாள் காலை எழுந்து பல் துலக்கி விட்டு குளிக்கலாமா? வேண்டாமா? என்று யோசித்துக் கொண்டிருந்த பொழுது கரெண்ட் வந்து விட்டது. 

அப்பாடா! வாட் எ ரிலீஃப்! முதலில் காபி குடித்தோம். காம்ப்ளிமெண்ட்ரி ப்ரேக் ஃபாஸ்ட் என்றார்கள். என்ன பிரமாதம்? இட்லி, வடை, பொங்கல், பூரியா கிடைக்கப் போகிறது? ப்ரெட், பட்டர்,ஜாம், கார்ன் ஃப்ளேக்ஸ், பான் கேக்(Pan cake), கப் கேக் இவைதானே? சாப்பிட்டு விட்டு பக்கத்தில் இருக்கும் அருவியை பார்த்து விட்டு அந்த காட்டிற்குள் கொஞ்சம் நடந்து விட்டு வரலாம் என்று சென்றோம். 

இதுதான் அருவியாம் 

வாட்டர் ஃபாலஸ், வாட்டர் ஃபால்ஸ் என்று என் மகள் கொடுத்த பில்ட் அப்பில் நான் குற்றாலம், பாபநாசம் ரேஞ்சுக்கு கற்பனை செய்து கொண்டேன். ஒரு சின்ன ஓடை, ஒரு பாறையிலிருந்து விழுகிறது,
அது வாட்டர் ஃபால்ஸாம்.. தோடா!


ஆனால் அந்த ட்ரேயில் (trail) மிக அழகு! எனக்கு அஹோபிலம்தான் நினைவுக்கு வந்தது. 

- இன்னும் வரும் 

Wednesday, June 8, 2022

அலைக்கழித்த ஆட்டவா!

 அலைக்கழித்த ஆட்டவா!

மே.23 விக்டோரியா தினம் என்பதால் கனடாவில் அன்று விடுமுறை. அது எந்த கிழமையில் வந்தாலும் லாங் வீக் எண்ட் கிடைக்க வேண்டும் என்பதற்காக 23ம் தேதியை தொடர்ந்து வரும் திங்கள் கிழமை விடுமுறை அளிக்கப்படுமாம். இந்த வருடம் மே 21,22,23 அப்படிப்பட்ட விடுமுறை நாட்களாக அமைய

ஆட்டவாவிற்கும், மாண்ட்ரியாலுக்கும் சென்று வரலாம் என்று என் மகளும், மருமகனும் முடிவுசெய்து ஹோட்டல் அறைகள், பார்க்க வேண்டிய இடங்களில் நுழைவுச்சீட்டு போன்ற முன்பதிவுகளை ஒரு மாதத்திற்கு முன்பே செய்து விட்டனர். 

21ம் தேதி சனிக்கிழமை காலை கிளம்ப வேண்டும். வெள்ளி மாலை முதல் என் இடது காலில் வாயு பிடிப்பு போல வலிக்க ஆரம்பித்தது. காலை நீட்டினால் சரியாகும் என்று என் மகள் சில பயிற்சிகளை கூறினாள். அவைகளை செய்ததும் வலி பொறுக்க முடியாத அளவிற்கு அதிகமாகி விட்டது. நான் பட்ட அவஸ்தையைப் பார்த்த என் மாப்பிள்ளை டூர் ப்ரோகராமை கான்சல் செய்து விடலாம் என்றார். 

வலியை குறைக்க மாத்திரை போட்டுக் கொண்டு என் மகளை விட்டு பிராணிக் ஹீலிங் செய்யச் சொன்னேன். அதன் பின்னர் வலி நன்றாக குறைந்து விட மறுநாள் கிளம்பினோம்.

இந்த வசந்த காலத்தில் ஆட்டவா வில் துலிப் ஃபெஸ்டிவல் மிகவும் பிரசித்தி பெற்றது. இந்த திருவிழா இந்த வருடம் மே 13 முதல் 23 வரை பதினோரு நாட்கள் நடந்தது. ஒரு பூங்கா முழுவதும் கலர் கலராக துலிப் மலர்கள் பூத்துக் குலுங்குகின்றன. இந்த வருடம் (2022) எழுபதாவது வருடமாகிய பிளாட்டின விழாவாம்.

துலிப் மலர்கள் நட்பிற்கான மலர்களால் அறியப்படுகின்றன. இதற்கு காரணம் இரண்டாம் உலகப் போரின் பொழுது ஜெர்மனிய படையெடுப்பில் தப்பி கனடாவிற்கு அடைக்கலமாக வந்த டச்சு அரசு குடும்பம் இரண்டு வருடங்கள் இங்கே தங்கி யிருக்கிறார்கள். பிறகு நாடு திரும்பியதும் தங்கள் அன்பையும், நட்பையும் வெளிப்படுத்தும் விதமாக 100,000 துலிப் கன்றுகளை டச்சு அரசி கனடாவிற்கு அனுப்பி வைத்தாராம். இன்றளவும் அந்த வழக்கம் தொடர்கிறதாம். டௌஸ் ஏரிக்கரையை ஒட்டியிருக்கும் கமிஷனர் பார்க்கில்தான் இந்த துலிப் திருவிழா நடைபெறுகிறது. 

இதற்கு நுழைவு கட்டணம் கிடையாது. ஆனால் காரை நிறுத்த இடம் கிடைக்க வேண்டுமே என்று கவலையாக இருந்தது. நல்ல வேளை அதிகம் நடக்கத் தேவையில்லாமல் காரை நிறுத்த முடிந்தது. 





தோட்டத்திற்குள் பtல வண்ண மலர்கள், பல வண்ண மனிதர்கள். துலிப் மலர்களுக்கு நடுவே புகைப்படம் எடுத்துக் கொள்ள ஏதுவாக பாத்திக்கு ஊடாக வழி அமைத்து கொடுத்திருக்கின்றனர். 

ஆங்காங்கே உணவு கடைகள், புகைப்படம் மற்றும் செல்ஃபி எடுத்துக் கொள்ள தோதாக அமைப்புகள். குழந்தைகள் ஏன் பெரியவர்களும் விளையாட பெரிய அளவில் செஸ் போர்ட், சைனீஸ் செக்கர்ஸ் போன்ற உபகரணங்கள். 


இரவில் வாண வேடிக்கைகளும் இருக்குமாம்.

பூங்காவில் நாங்கள் நடக்கும் பொழுது நல்ல வெய்யில். தண்ணீர் குடித்து மாளவில்லை. மதிய உணவை ஆர்டர் செய்து வாங்கிக் கொண்டு காரிலேயே சாப்பிட்டோம். ஆலு பராத்தாவும், வெஜிடபிள் பிரியாணியும், ராய்த்தாவும் ருசியாகவே இருந்தன. 

அதன் பிறகு அலெக்ஸாண்ட்ரா பாலத்தில் நடந்து விட்டு ரைடு கால்வாயில்(Rideau canal) படகுசவாரியை முடித்துக் கொண்டு ஹோட்டலுக்கு சென்று கொஞ்சம் ரிலாக்ஸ் செய்து கொண்டு பிறகு பைவார்ட் மார்க்கெட் செல்லலாம் என்று ஏற்பாடு. ஆனால் எங்கள் திட்டத்தை தவிடு பொடியாக்கினார் வருண பகவான்.


- தொடரும்