கணம்தோறும் பிறக்கிறேன் 

Monday, November 18, 2019

ஒரு இட்டிலியும், ஆறு சட்டினிகளும்

ஒரு இட்டிலியும், ஆறு சட்டினிகளும் 


வாழ்க்கை வாழ்வதற்கே என்னும் தலைப்பில் திரு. சுகி சிவம் அவர்களின் சொற்பொழிவை  யூ டியூபில் கேட்டேன். அதில் அவர் அவருடைய தாயாரைப் பற்றி கூறும் பொழுது, ஆறு பேர்கள் இருந்த அவருடைய வீட்டில் ஒருவருக்கு தேங்காய், பச்சை மிளகாய் சேர்த்து அரைத்த சட்டினியும், ஒருவருக்கு வெங்காய சட்டினியும், ஒருவருக்கு மிளகாய்ப் பொடியும்,  ஒருவருக்கு சாம்பாரும் இருந்தால்தான் இட்லி சாப்பிடுவார்களாம். அவருடைய தாயாரும் அவரவருக்கு தேவையானவற்றை செய்து கொடுப்பார்கள் என்று கூறியவர், அதோடு நிறுத்திக் கொண்டிருந்தால் பரவாயில்லை. "இப்போதெல்லாம் சில வீடுகளில் என்ன இலையில் விழுகிறதோ அதை சாப்பிட வேண்டும் என்று கூறுகிறார்கள். இலையில் விழுவதை சாப்பிடும் இடத்திற்கு மிலிட்டரி என்று பெயர். நாம் என்ன மிலிட்டிரியா நடத்துகிறோம்? குடித்தனம் நடத்துகிறோம். என்ன சாப்பிட வேண்டும் என்று நினைக்கிறோமோ அது கிடைக்கும் இடம்தான் வீடு" என்கிறார். இதையெல்லாம் மேடையில் கை தட்டல் வாங்குவதற்காக பேச நன்றாக இருக்கும்.  ஆனால், குழந்தை வளர்ப்பில் இது ஒரு மோசமான முறை. வீடு என்பது குழந்தைகளுக்கு விரும்பியதையெல்லாம், அல்லது விரும்பியதை மட்டும் சமைத்து கொடுத்துக்கொண்டே இருக்கும் இடம் மட்டும்தானா? எல்லாவற்றையும் சாப்பிடுவதற்கும், எல்லோருடனும் அனுசரித்து போவதற்கும் கற்றுக் கொடுக்கும் இடமும் அல்லவா? இப்படி பிடித்ததைத்தான் சாப்பிடுவேன் என்று பிடிவாதம் பிடிக்கும் குழந்தைகள் பின்னாளில் அந்த சாப்பாட்டு பழக்கத்தாலேயே பல்வேறு பிரச்சனைகளை சந்திப்பார்கள், மற்றவர்களுக்கு தொந்தரவாக இருப்பார்கள்.  

ஒரே நாளில் ஆறு பேருக்கு ஆறு விதமான சட்னி, செய்து கொடுக்கும் அம்மாவை விட, "நேற்று உனக்கு பிடித்த தேங்காய் சட்னி செய்து கொடுத்தேன், அதை அப்பா,அண்ணன்கள் எல்லோரும் சாப்பிட்டார்கள், இன்று அண்ணனுக்கு பிடித்த வெங்காயச் சட்டினியை நீ சாப்பிடு" என்று சொல்லும் அம்மாதான் நல்ல அம்மாவாக இருக்க முடியும். வாழ்க்கை முழுவதும் நமக்கு பிடித்த விஷயங்கள் எல்லாம் எப்போதும் கிடைத்துக் கொண்டே இருக்காது. எது கிடைக்கிறதோ அதை ஏற்றுக் கொள்ள பழக்க சாப்பாட்டிலிருந்துதான் ஆரம்பிக்க வேண்டும். 

ஹாஸ்டல் சாப்பாடு நன்றாக இல்லை என்பதற்காக கல்லூரியிலிருந்து வெளியேறிய மாணவனையும், நல்ல சாப்பாடு கிடைக்கவில்லை என்று வெளியூர் செல்ல மறுத்த இளைஞனையும், "நாற்பது வருடங்களாக சமைத்துப் போடுகிறேன், ஒரு நாள் கூட குறை சொல்லாமல் சாப்பிட்டதில்லை" என்று புழுங்கும் மனைவிகளையும் நான் அறிவேன். ஏன் இன்றைக்கு பல விவகாரத்துகளுக்கு அனுசரித்து போக முடியாத, விட்டு கொடுக்க முடியாத மனப்பாங்குதான் காரணம். அனுசரித்துப் போகும் குணமும், அனுசரித்து போவதும், வீட்டிலிருந்துதான் தொடங்க வேண்டும். அதற்கு எளிய வழி பிடித்ததை மட்டுமே சாப்பிடுவேன் என்று கூறாமல், இலையில் விழுவதை சாப்பிட குழந்தைகளை பழக்குவதுதான். 

தவிர காலம் இருக்கும் இருப்பில் இப்போதைய பெண்கள் வீட்டில் இட்டிலிக்கு மாவு அரைத்து, வார்ப்பதே பெரிய விஷயம். அதில் இருக்கும் நான்கு பேருக்கு, அல்லது மூன்று பேருக்கு விதம் விதமாக சட்டினி அரை என்றால் முதலுக்கே மோசமாகி விடாதா?

இவருக்கு நேர் மாறான கருத்தை வழக்கறிஞர் சுமதி கூறியிருக்கிறார்.
இந்த சுட்டியை சொடுக்கி கேளுங்கள்.
https://youtu.be/8tjkIYlXW50










Tuesday, November 12, 2019

மசாலா சாட் - 13

மசாலா சாட்  - 13

இந்த வருடம் ஆஸ்திரேலியாவில் குடியுரிமை வாங்கியவர்களில் 65%
இந்தியர்களாம். சென்ற வருடமும் அங்கு குடியுரிமைக்கு அதிகம் விண்ணப்பித்தது இந்தியர்கள்தானாம். அதற்கு அடுத்த இடத்தில் சீனா.

அமெரிக்க வாழ் இந்தியர்களில் பெரும்பான்மையோர் பேசும் மொழி ஹிந்தியாம். அதற்கடுத்த இரு இடங்களை குஜராத்தியும், தெலுங்கும் பிடித்துக் கொள்ள, நான்காம் இடத்தில் நம் தாய் மொழி.


முன்னாள் எலெக்க்ஷன் கமிஷனர் டி.என். சேஷன் 10.11.19 1அன்று காலமானார். அரசியல்வாதிகளுக்கு எலெக்க்ஷன் கமிஷனின் சக்தியை உணர்த்தியவர். அதனால் கிடைத்த பிராபல்யத்தில் தேர்தலில் நின்றதையும், விளம்பர படங்களில் நடித்ததையும் எல்லோரும் மறந்திருப்பார்கள்.


முன்னாள் கிரிக்கெட் வீரரும் ஆல் ரவுண்டருமான இர்பான் பத்தான் விக்ரமோடு இணைந்து தமிழ்ப்படம் ஒன்றில் நடிக்கிறாராம். ஆரம்ப காலத்தில் சுருள் சுருளாக தொங்கும் அவருடைய தலையலங்காரம் எனக்கு பிடிக்கும்.

"பட்டு முக பத்தான்
வீசும் பந்து வேகம்
அவன் கேசப் பந்தோ
சுழலும்"

என்று கவிதை எழுதியிருக்கிறேன். யாருடைய துர் போதனையோ அவர் அதை மாற்றிக்கொண்டு விட்டார்.

திரை அரங்குகள், விமான நிலையங்கள், மால்கள் போன்ற இடங்களில் டாய்லெட்டுகளில், ஆண், பெண், என்ற பிரிவுகள் மட்டும்தான் இருக்கும். சமீபத்தில் விமான நிலையங்களில் family toilet என்ற அறிவிப்பை பார்த்தபொழுது தூக்கிவாரிப் போட்டது.  அதன் சூச்சுமம் பிறகுதான் புரிந்தது. யாருக்காவது ஃபேமிலி டாய்லெட்டின் அவசியம் தெரிகிறதா? தெரியாவிட்டால் இந்த கட்டுரையின் கடைசி பாரா வரும் வரை காத்திருக்கவும்.

பெங்களூரின் போக்குவரத்து நெரிசலை சமாளிக்க பேருந்துகளை மக்கள் அதிகம் பயன்படுத்தும் விதமாக அதன் கட்டணத்தை குறைக்கவும், பி.எம்.டி.சி. பஸ்களின் எண்ணிக்கையை அதிகரிக்கப் போவதாகவும்  எடியூரப்பா அறிவித்திருக்கிறார்.  நல்லதுதான், ஆனால், அந்த பஸ்கள் செல்ல சாலையில் இடம் வேண்டுமே? சாலையில் ஒரு லேனை(lane) பேருந்துகளுக்காக மட்டும் ஒதுக்கப் போகிறார்களாம்.

சமீப காலங்களில் நிறைய தொலைக்காட்சி பார்க்கிறேன். பொறுமையை சோதிக்கும் பொழுது நிறுத்தி விட்டு, யூ டியூபிற்கு மாறுவேன். சேனல்களை மாற்றிய பொழுது, முப்பது வருடங்களுக்கு முன்னால் வெளியான ஏதோ ஒரு படப்பாடலுக்காக கமல்,அம்பிகாவை தூக்கி சுழற்றுவதை பார்க்க நேர்ந்தது. கமல் திறமையான நடிகராக இருப்பதால் கொஞ்சம்  கஷ்டப்பட்டு கஷ்டப்படுவதை மறைத்துக் கொண்டார்.

ஏதோ ஒரு படத்தில் பாடல் காட்சியில் கதா நாயகியை தூக்கியபடி பாட்டு பாட வேண்டிய காட்சியில் நடித்த சிவகுமாரிடம் அந்த படத்தின் கேமிராமேன் கொஞ்சம் சிரியுங்கள் என்றாராம், உடனே சிவகுமார், "இத்தனை எடையை தூக்கிக் கொண்டு உங்களால் சிரிக்க முடியுமா? என்னால் இவ்வளவுதான் முடியும்" என்றாராம்.

நம்பியாரின் அனுபவம் இது: ஏதோ ஓர் படத்தில் சரோஜாதேவியை தூக்கிக் கொண்டு மலை மேல் ஏற வேண்டிய காட்சியில் நடிக்க வேண்டியிருந்தபொழுது,  அவர் கன்னடத்து கிளியிடம், "நான் உங்களை தூக்கும் பொழுது மூச்சை தம் பிடித்துக் கொள்ளுங்கள், அப்போது எடை தெரியாது, எனக்கு கஷ்டமில்லாமல் இருக்கும்"  என்றாராம். மண்டையை ஆட்டிய சரோஜா தேவி அப்படி செய்யாததால் நம்பியாருக்கு கஷ்டமாக இருந்ததாம். இரண்டு டேக் எடுத்தும் சரியாக வரவில்லையாம். நம்பியார் சரோஜா தேவியிடம்,"அடுத்த முறை நீங்கள் மூச்சை பிடித்துக் கொள்ளாவிட்டால் நான் உங்களை கீழே போட்டு விடுவேன்" என்று எச்சரித்தும் கதாநாயகி அவர் சொன்னதை கேட்கவில்லையாம், கடுப்பான நம்பியார் நிஜ வில்லனாக மாறி, சொன்னதை செய்ய, அதன் பிறகுதான் சரோஜாதேவி ஒத்துழைப்பு கொடுத்து, அந்த காட்சி ஓ.கே. ஆனதாம்.

இப்போது ஹீரோயின்கள் சைஸ் ஸீரோ என்பதில் கவனம் செலுத்துவதால் ஹீரோக்களுக்கு கவலை இருக்காது.

சில வாரங்களுக்கு முன் ஸ்ரீராம் எந்த சினிமாவின் க்ளைமாக்ஸ் காட்சி பிடிக்கும்  என்று கேட்டிருந்தார்.  பொதுவாக நம் இயக்குனர்கள் க்ளைமாக்சில் சொதப்புவதில் வல்லுநர்கள். சமீபத்திய சொதப்பல் திலகம் ஏ.ஆர்.முருகதாஸ்.

பாக்யராஜ் படங்களில் க்ளைமாக்ஸ் நன்றாக இருக்கும். அந்த ஏழு நாட்களையும், டார்லிங்,டார்லிங்,டார்லிங்கையும் மறக்க முடியுமா?

ஜிகிர்தண்டா 
அவரைப் போலவே எதிர்பாராத, ஸ்வாரஸ்யமான க்ளைமாக்ஸை கார்த்திக் சுப்புராஜ் அமைக்கிறார். ஜிகிர் தண்டா, பேட்ட இரண்டிலேயும் க்ளைமாக்ஸ் 
ரசிக்கும்படி இருந்தது.

பரியேறும் பெருமாள் 
இப்போது புதிதாக வரும் பல இளம் இயக்குனர்கள் திறமையான திரைக்கதையையும், சுவாரஸ்யமான க்ளைமாக்ஸையும் அமைக்கிறார்கள். மாநகரம், நானும் ரௌடிதான் போன்ற படங்களின் க்ளைமாக்ஸ் கூட ரசிக்கும்படி இருக்கும். பரியேறும் பெருமாள் படத்தின் இயல்பான க்ளைமாக்ஸும் நன்றாக இருந்தது.

மேலை நாடுகளில் சிங்கிள் பேரண்ட் என்பது சகஜம். அப்படிப்பட்டவர்கள் ஆணோ, பெண்ணோ குழந்தையை டாய்லெட்டிற்கு அழைத்துச் செல்ல வேண்டும், அல்லது சிறு குழந்தைக்கு டயபர் மாற்ற வேண்டும்
என்றால் பயன்படுத்த தோதாக இப்படிப்பட்ட பேமிலி டாய்லெட்டுகள்.

இப்பொழுது மூன்றாம் பாலினத்தவர்கள் படித்து, வேலைக்கு வருவது அதிகரித்திருப்பதால் அலுவலகங்களிலும், பொது இடங்களிலும் தங்களுக்கு தனி டாய்லெட் வேண்டும் என்று கேட்கத் தொடங்கியிருக்கிறார்கள் நியாயமான கோரிக்கைதான்.












Tuesday, November 5, 2019

கோலங்கள்

கோலங்கள்



வீட்டு வாசலிலும், பூஜை அறையிலும் தினசரி கோலம் போடுவது நம் மரபு. மண் அடுப்புகளில் சமைத்துத்துக் கொண்டிருந்த பொழுது, தினசரி அடுப்பை பசு மாட்டின் சாணி போட்டு மெழுகி விட்டு அதில் கோலம் போட்டு வைப்பார்கள்,அதை பார்ப்பதற்கே லக்ஷ்மிகரமாக இருக்கும்.  எங்கள் வீட்டில் மண் அடுப்பு போய், காஸ் அடுப்பு வந்த பிறகும், அந்த பழக்கம் தொடர்ந்து கொண்டிருந்தது. இப்பொழுது பொங்கலுக்கு முதல் நாள் மட்டுமே அடுப்பில் கோலம் போடுகிறோம்.

அதே போல தீபாவளிக்கு முதல் நாள் வெந்நீர் தவலையை தேய்த்து, அதில் சந்திரன், சூரியன் வரையும் பழக்கமும் இருந்தது. வெந்நீர் தவலையை எலக்ட்ரிக் ஹீட்டர்கள் பிடித்துக் கொண்டுவிட்ட இந்த காலத்தில் சந்திரனாவது, சூரியனாவது?

கோலங்கள் வெறும் அழகுக்காக மட்டும் போடப்படுவதில்லை. அதில் ஆன்மீகமும் மறைந்திருக்கிறது. ஒரு வார்த்தையை ஒரு குறிப்பிட்ட மீட்டரில் உச்சரிக்கும் பொழுது, அது சக்தி வாய்ந்த மந்திரமாக மாறுவது போல, சாதாரண கோடுகளும், வளைவுகளும் திட்டமாக வரையப்படும் பொழுது சக்தி பெற்றவைகளாக மாறுகின்றன.



நாம் பிள்ளையார் கோலம் என்று கூறும் மேலும் கீழுமாக இரண்டு முக்கோணங்கள் அமைந்த கோலம் முருகனை குறிப்பது. இதில் மேலிருந்து கீழே இறங்கும் முக்கோணம் மண்ணுலக இச்சைகளையும், கீழிருந்து மேலே செல்லும் முக்கோணம் விண்ணுலகு ஏகும் விருப்பத்தையும் குறிக்கின்றது. மனித வாழ்க்கை இந்த இரண்டும் இணைந்தது என்பதே இதன் உட்பொருள் என்று சான்றோர்கள் கூறுகிறார்கள்.

அதே போல் ஹ்ருதய கமலம் கோலமும், ஐஸ்வர்ய கோலமும் அம்பிகையின் வடிவமாகவே கருதப்படுகின்றன. அதனால் அவைகளை வாசலில் போடக்கூடாது என்பார்கள்.



மஹாலக்ஷ்மியின் கருணைக்கு பாத்திரமாவது எப்படி என்பதை விளக்க வரும் ஒரு கதை இப்படி தொடங்கும்; தன்னுடைய அருளை யாருக்காவது வழங்க வேண்டும் என்று விரும்பிய லட்சுமி தேவி ஒரு முறை பூமிக்கு இறங்கி ஒரு கிராமத்திற்குள் நுழைகிறாள். அங்கு ஒரு வீட்டில் காலை வேளையில் வாசல் திண்ணையில் தலையை விரித்து போட்டுக் கொண்டு பேன் பார்த்துக் கொண்டிருந்தார்களாம் அந்த காட்சியில் அருவருத்து அந்த வீட்டிற்குள் நுழையாமல் தாண்டிச் சென்று விடுகிறாள். அடுத்த வீட்டில் ஒருவருக்கொருவர் சண்டையிட்டுக் கொண்டிருந்தனராம். அதுவும் அமங்கலமான சொற்களால் ஒருவரை ஒருவர் திட்டிக்கொண்டும், சபித்துக் கொண்டும் இருந்ததை கேட்ட திருமகள் அந்த இடத்தை வெகு விரைவாக கடந்து சென்று விடுகிறாள். இன்னொரு வீட்டிலோ சூரியன் உதித்த பிறகும் எழுந்திருந்து வாசல் தெளித்து கோலம் கூட போடாமல் தூங்கிக் கொண்டிருந்தனராம். அதற்கடுத்த வீட்டில் புழுத்த சாணத்தால் வாசல் தெளிப்பதை பார்த்து அங்கிருந்தும் நகர்ந்து விடுகிறாள். கடைசியாக ஒரு வீட்டில் ஏழ்மை நிலையில் இருந்தாலும் அதிகாலையில் எழுந்து, வாசல் தெளித்து அழகாக கோலமிட்டு, வீட்டிற்குள் பூஜை அறையிலும் கோலமிட்டு, விளக்கேற்றி வைக்கப்பட்டிருந்ததாம். அதனால் கவரப்பட்ட ஸ்ரீதேவி,"இந்த இடம்தான் நான் வாசம் செய்ய தோதான இடம்" என்று அந்த வீட்டிற்குள் பிரவேசித்து அங்கு வசிக்க தொடங்கியதும் அந்த குடும்பத்தினரின் வறுமை நீங்கி செல்வ செழிப்பு ஏற்பட்டது என்று அந்த கதை முடியும்.  இதிலிருந்து முக்கிய நிகழ்வுகளுக்கு மட்டுமல்லாமல் தினசரி கோலமிடுவதும் நமக்கு எத்தனை முக்கியத்துவம் வாய்ந்தது என்று தெரிந்து கொள்கிறோம்.

துளசி வழிபாட்டில் சொல்லப்படும் ஸ்லோகத்தில்,
'அன்புடனே நல்ல அருந்துளசி கொண்டு வந்து
முற்றத்தில் தான் வளர்த்து, முத்துப் போல் கோலமிட்டு..' என்று வரும். நம்முடைய வழிபாட்டில் கோலதிற்கு முக்கிய பங்கு உண்டு. கார்த்திகை மாதம் கோவில்களை சுத்தம் செய்து கோலமிடுவது ஒரு மிகச்சிறந்த புண்ணிய காரியமாகவே கருதப்படுகிறது.

பகவதி சேவையின்பொழுது போடப்படும் கோலம்(பத்மம்) 
கேரளீயர்களுக்கு பகவதி சேவை என்னும் அம்பிகை வழிபாடு
முக்கியமானது. அந்த பூஜையில் முக்கியமானது பத்மம் எனப்படும் கோலம் வரைவது. அதை பூஜாரிதான் வரைவார். கலர் பொடிகள் கொண்டு மிக அழகாக காட்சி தரும் அந்த கோலத்தை வரையவே இரண்டு மணிநேரங்கள் பிடிக்கும். கோலத்தின் நடுவில் பெரிய குத்து விளக்கை ஏற்றி வைத்து அதில் அம்பிகையை ஆவாஹனம் செய்து பூஜிப்பார்கள்.

மஸ்கட்டில் இருக்கும் கிருஷ்ணர் கோவிலில் விசேஷ தினங்களில் கலர்
பொடி கொண்டு போடப்படும் ரங்கோலி தவிர, பழங்கள், காய்கறிகள், உலர் பழங்கள், நவதானியங்கள் என்று ஒவ்வொரு நாளும் விதம் விதமாக பெரிய பெரிய கோலங்களை போடுவார்கள். அதை விரைவாகவும் போட்டு விடுவார்கள் என்பது சிறப்பு. 

சில பண்டிகைகளுக்கென்று தனி கோலங்களும் இருக்கின்றன. சுமங்கலி பிரார்த்தனை, சமாராதனை போன்றவைகளுக்கு ஒவ்வொரு குடும்பத்திலும் ஒரு குறிப்பிட்ட கோலம்தான் போட வேண்டும் என்ற வழக்கம் கூட இருக்கும்.  மதுரையைச் சேர்ந்த பிராமணர்கள்  திருமணங்களில் மணமகன், மணமகள் அமர வேண்டிய இடத்தில்  போட வேண்டிய மணை கோலம் போடும்பொழுது தனித்தனியாக இரண்டு கோலங்கள் போடாமல், இரண்டும் ஒன்றையொன்று ஒட்டிக்கொண்டிருப்பதை போல போடுவார்கள்.

அப்பொழுதெல்லாம் ஸ்ரீரங்கத்தில் மார்கழி மாதம் என்றால் அதிகாலை மூன்றரை மணிக்கு எழுந்து போட்டி போட்டுக் கொண்டு தெருவை அடைத்து பெரிய பெரிய கோலங்களை போடுவார்கள். எங்கள் அம்மா மிக அழகாக கோலம் போடுவார். நான் சிறுமியாக இருந்த பொழுது எங்கள் வீட்டிற்கு எதிர் வீட்டில் இருந்த மாமி, "நீதான் அழகாக கோலம் போடுகிறாய். இரண்டு வீட்டிற்கும் பொதுவாக நீயே கோலம் போட்டு விடு" என்று என் அம்மவிற்கு இடம் ஒழித்து கொடுத்து விடுவார்.  

குனிந்து கோலம் போடுவது நல்ல உடற்பயிற்சி மட்டுமல்ல, மூளைக்கும் நல்ல பயிற்சி. கோடுகளை எப்படி வளைப்பது, எங்கே இணைப்பது என்பதையெல்லாம் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டாமா? இதைப் போன்ற செயல்களை செய்து கொண்டிருந்ததால்தான் முன்பு டிமென்ஷியா போன்றவை அதிகம் பேர்களை தாக்கவில்லையோ என்னவோ.

இப்போதெல்லாம் திருமணம் போன்ற விசேஷங்களில் கேட்டரிங்காரர்களே கோலமும் போட்டு விடுகிறார்கள். சமீபத்தில் நான் கலந்து கொண்ட ஒரு திருமணத்தில், "ஒரு கோலம் போட வேண்டும்" என்று சாஸ்திரிகள் கூறியதும்  மேடைக்கு விரைந்தது 50+ வயதுக்காரர்கள்தான். இளைய தலைமுறையினர் யாரும் முன்வரவில்லை என்றாலும் கோலம் போடும் கலை அறவே ஒழிந்து போய் விடவில்லை என்பது ஒரு ஆறுதல். அது பழையபடி செழிக்க வேண்டும் என்பது ஆசை.  அத்தனைக்கும் ஆசைப்படுகிறோமோ இல்லையோ, இத்தனைக்கு ஆசைப் படலாமே.






கோலங்களுக்கு கூகுளுக்கு நன்றி.



Wednesday, October 30, 2019

மாலைப் பொழுதினிலே

மாலைப்  பொழுதினிலே 

ராமகிருஷ்ண பரமஹம்சருக்கு முதல் முதலில் தெய்வீக அனுபவம் ஏற்பட்டது ஒரு மாலை நேரத்தில்தான். அஸ்தமன நேரத்தில் வயல்காட்டில் நடந்து வந்து கொண்டிருந்த அவர் கண்ணில் கூட்டமாக கூடு திரும்பி கொண்டிருந்த பறவை கூட்டம் ஒன்று பட்டது. துல்லியமான வான பின்னணியில் அந்த பறவை கூட்டத்தை கண்டவர் பரவச நிலைக்கு ஆட்பட்டாராம். மாலை நேர வானம் மோனமானதுதான்.

எங்கள் வீட்டிற்கு கிழக்கு பார்த்த வாசல். ஆகவே வரவேற்பு கூடத்தை ஓட்டிய பால்கனியிலிருந்து சில சமயங்களில் வெகு அழகான மாலை நேர வானத்தை பார்க்க முடியும். அவற்றில் சில உங்கள் பார்வைக்கும்.





Wednesday, October 23, 2019

மசாலா சாட்

மசாலா சாட் 
சில விமர்சனங்கள்


அருணா சாய்ராம் கச்சேரி:



Front Enders Foundation என்னும் சேவை நிறுவனம் அதோடு சம்பந்தப்பட்ட'மைத்ரி' என்னும் நிறுவனத்திற்காக அதுல்யா மற்றும் ஹெல்த் ஃபார் 60+ இவற்றோடு சேர்ந்து ஏற்பாடு செய்திருந்த அருணா சாய்ராமின்  இசைக்கச்சேரிக்கு பாஸ் கிடைத்தது. 

18.10.19  வெள்ளியன்று மாலை 6:30க்கு கச்சேரி துவங்கும் என்று போட்டிருந்தாலும், வரவேற்புரை, ப்ரண்ட் எண்டெர்ஸ், மைத்ரி, அதுல்யா, ஹெல்த் ஃபார் 60+ போன்றவைகளை பற்றிய சுருக்கமான அறிமுகம், ஸ்பான்சர்களுக்கு பாராட்டு, கச்சேரி செய்யப் போகும் கலைஞர்களை கௌரவித்தல் போன்றவைகல் முடிந்து கச்சேரி தொடங்கவே 7:15 ஆகி விட்டது. 

'வாழ்க்கைப் பயணம்' என்னும் பொருளுக்கு ஏற்ப ஒரு மனிதனின் வாழ்வில் நடக்கும் முக்கிய நிகழ்வுகளுக்கு பொருத்தமான பாடல்களை தேர்ந்தெடுத்திருந்தார். 'ஒருத்தி மகனாய் பிறந்து..' என்னும் திருப்பாவை பாசுரத்தோடு கச்சேரியை தொடங்கியவர் அடுத்தடுத்து தியாகய்யர், ஊத்துக்காடு வேங்கட சுப்புரமணியர், முத்துசாமி தீக்ஷதர், அஷ்டபதி, பாபநாசம் சிவன், அபங் என்று அழகாக பாடல்களை தொகுத்திருந்தார். கச்சேரியை எதிர்பார்த்து வந்தவர்கள் ஏமாந்து விடக்கூடாதே என்பதற்காக கல்யாண ராமா பாடலில் ஸ்வரம் பாடினார். கபாலி நின் கருணை நிலவு பொழில் பாடலில் தனி ஆவர்த்தனம் என்று முழு நீள கச்சேரியாக வடிவமைத்திருந்தார். பக்கம் வாத்தியம் வாசித்த எல்லோருமே திறமையாக ஒத்துழைப்பு கொடுத்தார்கள் என்றாலும் மிருதங்கம் வாசித்தவரும், புல்லாங்குழல் வாசித்தவரும் அபாரம். மிருதங்கம் சுநாதமாக ஒலித்தது. எங்கே வலுவாக இருக்க வேண்டும், எங்கே மென்மையாக இருக்க வேண்டும் என்று உணர்ந்து வாசித்தார். புல்லாங்குழல் வாசித்தவருக்கு ஆடியன்ஸ் அப்லாஸ் கொடுத்த பொழுது,"ஹி டிசெர்வர்ஸ் திஸ்" என்று அருணா கூறியதில் அவருடைய பெருந்தன்மை தெரிந்தது. ஆனாலும், தனியாக வீடு திரும்ப வேண்டுமே என்று கச்சேரி முடியும் முன்பே கிளம்பி விட்டேன். ஒரு அற்புதமான மாலை!
(அட! நான் கூட ஒரு இசை விமர்சனம் எழுதி விட்டேன்.😃😄😄)

அசுரன்(திரைப்படம்):



நான் சென்னை வரும்பொழுதெல்லாம் என் தோழி ஏதாவது ஒரு சினிமாவிற்கு டிக்கெட் புக் பண்ணிவிடுவார். இந்த முறை அவர் அழைத்துச் சென்ற படம் வெற்றி மாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்திருந்த 'அசுரன்' திரைப்படம். 

பூமணி எழுதிய 'வெக்கை' என்னும் நாவல்தான் படமாக்கப்பட்டிருக்கிறது என்கிறார்கள். நாவலை படிக்காததால் படமாக்கப்பட்டதில் எதை பெற்றிருக்கிறது, எதை இழந்திருக்கிறது என்று கூற முடியவில்லை. 

ஊரின் பெரிய நிலச் சுவாந்தரான ஆடுகளம் நரேன் அவர் நிலத்திற்கருகில் ஒரு சிறு பூமியை வைத்திருக்கும் தனுஷின் நிலத்தையும் சிமெண்ட் ஃபாக்டரி கட்டுவதற்காக பறித்துக் கொள்ள பார்க்கிறார். இதற்கான முயற்சியில் நடக்கும் ஜாதி மோதல்கள், பழி வாங்கும் நடவடிக்கைகள் இவையே கதையாக விரிகிறது. தன்  நிலத்தை காப்பற்றிக் கொள்ள தனுஷ் குடும்பம் படும் பாட்டை விட ஜாதி சண்டையும், ஆண்டான், அடிமை மனப்பாங்குமே முன்னிலை வகிக்கின்றன.

தனுஷும், அவருடைய மனைவியாக தமிழுக்கு வருகை தந்திருக்கும் மஞ்சு வாரியரும் நன்றாகத்தான் நடித்திருக்கிறார்கள். இருந்தாலும் பசுபதிக்கும் தனுஷின் இள வயது காதலியாக வரும் அம்மு அபிராமிக்கும் பொருந்துவது போல் இவர்கள் இருவருக்கும் பொருந்தவில்லை. பாத்திரத்திற்குள் புகுந்து கொள்ளாமல் கொஞ்சம் அந்நியப்பட்டு நிற்பதாகவே தோன்றுகிறது. சிவாஜி கூட இளம் வயதிலேயே வயதான பாத்திரங்களில் நடித்திருக்கிறார். அவருக்கு அதற்கேற்ற உடலமைப்பு இருக்கும். தனுஷின் உடல் அமைப்பை விட்டு விடலாம், ஒல்லியாக இருக்கும் கிராமத்து மனிதர்கள் இல்லையா? அவர் முகத்திலேயே மெசூரிட்டி இல்லையோ என்று தோன்றுகிறது. அதைப் போலவே மஞ்சு வாரியரின் உடல் மொழிகளும் நகரம், நகரம் என்கின்றன. 

பசுபதி, அம்மு அபிராமி, தனுஷின் மகன்களாக வரும் தீஜே அருணாச்சலம், கெவின் கருணாஸ்(கருணாஸின் மகனா?) எல்லோருமே பாத்திரத்திற்குள் கச்சிதமாக பொருந்தி, சிறப்பாக நடித்திருக்கிறார்கள். அதுவும் பசுபதி, தனுஷிற்கு இடையே நிலவும் அன்னியோன்னியம் சிறப்பாக சித்தரிக்கப்பட்டுள்ளது. பிரகாஷ் ராஜுக்கும், இன்ஸ்பெக்டராக வரும் பாலாஜி சக்தி வேலுக்கும் அதிக வேலை இல்லை. 

முன் பாதியில் பாசம், நேசம், உணர்ச்சிபெருக்கு போன்றவை பின் பாதியில் காணாமல் போய் வெறும் வஞ்சம், ஜாதி மோதல் இவைகளே பிரதான இடம் பிடிக்கின்றன. இரண்டாம் பாதியில் பீறிடும் ரத்தம் நம் மீது தெளித்து விடுமோ என்று தோன்றுகிறது. 
மகனை போலீஸ் பிடியிலிருந்து விடுவிக்க தனுஷ் ஊர் மக்கள் ஒவ்வொருவர் காலிலும் விழும் பொழுது அந்த வலியை நாம் உணர வேண்டாமா? 

கனமான விஷயம், வியாபார நிர்பந்தங்களினால் ஏற்படுத்த வேண்டிய பாதிப்பை ஏற்படுத்தவில்லை.  

சாரம் உதைத்த சர மழை:

இந்த வருடம் இந்தியா முழுவதுமே நல்ல மழை. இப்போது தமிழகத்திலும் பருவ மழை தொடங்கி வெளுத்து வாங்குகிறது. மே, ஜுனில் மழை பெய்ய வேண்டும் என்பதற்காக வருண ஜெபமெல்லாம் செய்தார்கள். இந்த சுலோகம் சொல்லுங்கள், இந்த மந்திரத்தை ஜபியுங்கள் என்று வாட்ஸாப்பில் தினம் ஒரு மந்திரம் வந்து கொண்டிருந்தது.  இப்போது மழை பொழிகிறதே அந்த நீரை சேமித்து வைத்துக் கொள்ள என்ன செய்கிறோம்? எல்லாமே அரசாங்கம்தான் செய்ய வேண்டுமா? பெரிய பெரிய குடியிருப்புகளும், தனி வீடுகளும் மழை நீர் சேகரிப்பை செய்கின்றனவா? 

கோடையில் கடுமையான தண்ணீர் பஞ்சம் நிலவிய பொழுது நான் சிலரிடம் தண்ணீர் கஷ்டத்தை எப்படி சமாளிக்கிறீர்கள்? என்று கேட்ட பொழுது பெரும்பாலானோர், "சொசைட்டியில் லாரி தண்ணீர் வாங்கி ஊற்றுகிறார்கள். எங்கள் வீட்டில் தண்ணீர் வருகிறது". என்றார்கள். இப்படிப்பட்டவர்கள் என்ன நடவடிக்கை எடுப்பார்கள்? இந்த விஷயத்தில் கிராமத்து இளைஞர்களுக்கு இருக்கும் உத்வேகம் நகரத்துவாசிகளுக்கு இல்லை. சனியன்று எங்கள் பிளாகில் வெளியாகும் பாசிட்டிவ் செய்திகளை கவனித்தாலே இது புரியும். கிராமத்து இளைஞர்கள்தான் ஆறுகளையும், ஏரிகளையும் தூர் வாருகிறார்கள், மழை நீரை சேமிக்கிறார்கள். நகரத்திற்குத்தான் தண்ணீர் லாரிகள் இருக்கின்றதே. 

Tuesday, October 15, 2019

மாமனிதர் போற்றுதும்! மாமனிதர் போற்றுதும்

மாமனிதர் போற்றுதும்! மாமனிதர் போற்றுதும் 




அப்துல் கலாமின் பிறந்த ஊரான ராமேஸ்வரத்தில் அவருக்கு ஒரு நினைவிடம் அமைக்கப்பட்டிருக்கிறது. பிரதமர் நரேந்திர மோடியால் துவக்கி வைக்கப்பட்ட இந்த நினைவிடத்தை DRDO மிகச்சிறப்பாக பராமரிக்கிறார்கள்.




உள்ளே நுழைந்ததும் மைய ஹாலில் அமைக்கப்பட்டிருக்கும் அலுவலகம் போன்ற அமைப்பில் அவர் ஒரு மேஜைக்குப் பின்னால் அவர் அமர்ந்திருப்பது போன்ற மெழுகு பொம்மை வெகு தத்ரூபமாக இருக்கிறது.  இதைத்தவிர உலகத்தலைவர்களோடு அவர் அவர் இருப்பது போன்ற மெழுகு பொம்மைகளும் உள்ளன. அவர் பயன் படுத்திய பேனா, வீணை, மடிக்கணினி, அவருடைய காலணி, எல்லாவற்றையும் காட்சிப்படுத்தியிருக்கிறார்கள். கடைசியாக அவர் கொண்டு சென்ற ஒரு சிறிய பிரீஃப் கேசில் வைத்திருந்த அவருடைய உடைகள் இரண்டே இரண்டு,மற்றும் ஒரு ஹவாய் செப்பல் இவற்றை பார்க்கும் பொழுது எத்தனை பெரிய மனிதர் எவ்வளவு எளிமையாக வாழ்ந்திருக்கிறார்! என்றுதான் தோன்றுகிறது.  கட்டிடத்திற்கு வெளியே அக்னி ஏவுகணையின் மாதிரி ஒன்றும் இருக்கிறது.

நிறைய சுற்றுலா பயணிகள் வருகிறார்கள். ராமேஸ்வரத்தில் பார்க்க வேண்டிய இடங்களில் இதுவும் ஒன்றாகி விட்டது. கண்டிப்பாக பார்க்க வேண்டிய இடம்தான்.
 



பண்டிகைகளை ஏன் கொண்டாட வேண்டும்?

Sunday, October 6, 2019

பெட்டர் ஹாஃப்

பெட்டர் ஹாஃப் 



மனைவியை பெட்டர் ஹாஃப் என்று சொல்வது பழக்கம். இது யாருக்கு ரொம்ப பொருத்தம் தெரியுமா? பெருமாளுக்கும் தாயாருக்கும்தான். ஒன்று என்னும் எண்ணை இரண்டு பகுதிகளாக  பிரித்தால் ஒரு பாதி .5, மறு பாதி .5 என்று பிரியும். இரண்டும் சமமாக இல்லாமல் ஒரு பகுதி .48 என்றும் மற்றொரு பாதி .52  என்று இருந்தால் இரண்டையும் .5 என்றுதான் எடுத்துக் கொள்வோம். ஆனாலும்  .48, .52 என்னும் இரு பாதிகளில் இரண்டாவது பெட்டர் இல்லையா? அதைப்போல மகா விஷ்ணுவையும், லக்ஷ்மி தேவியையும் எடுத்துக் கொண்டால் பெருமாளுக்கு செருக்கு, பரத்துவம் என்னும் குணங்கள் உண்டு. தாயாருக்கோ தண்டிக்கவே தெரியாது. கருணையே வடிவானவள். எனவே பெருமாள் .48 பாதியாகவும், தாயார் .52 என்னும் பெட்டர் ஹாஃப் ஆகவும் இருக்கின்றனர். 

- துஷ்யந்த் ஸ்ரீதரின் உபன்யாசத்தில் கேட்டது.



விகடர் என்று சொன்னாலே எல்லோருக்கும் வாரப்பத்திரிகை ஞாபகம்தான் வரும். ஹாஸ்யத்திற்கு, பரிகாசம்-கேலி, சிரிக்க சிரிக்க பண்ணுவதற்கு 'விகடம்' என்று பெயர் சொல்லுகிறோம். அந்த ஹாஸ்யத்திலே புத்தி சாதுர்யமும் இருக்கும். 'விகடகவி' என்று வேடிக்கை வேடிக்கையாக வார்த்தை விளையாட்டு பண்ணுபவரை சொல்கிறது. அந்த பேரிலேயே வார்த்தை விளையாட்டு இருக்கிறது. பின்னாலிருந்து திருப்பி படித்தாலும் விகடகவி என்றே வரும். சாமர்த்தியமாக பேசி ஏமாற்று பண்ணுவது அகடவிகடம் என்பார்கள். ஏமாற்று என்றாலும் அதிலிருந்த சாமர்த்தியத்தில் சிரிக்கும்படியும் இருக்கும். 

சம்ஸ்க்ருத டிக்ஷ்னரியில் 'விகட' என்பதற்கு அர்த்தம் பார்த்தால் ஹாஸ்யம்,தமாஷ் என்று இருக்காது. கோரம், பயங்கரம் என்றுதான் போட்டிருக்கும். ஆனால் நடைமுறையில் ஹாஸ்யம் பண்ணுவது, சிரிக்க வைப்பது, சிரிக்கும்படியாக ஏமாற்று சாமர்த்தியம் பண்ணுவது, இதெல்லாம்தான் விகடம். விதூஷகன்-காமிக் பாத்திரமென்று இந்நாளில் சொல்கிறார்கள் - அவன்தான் விகடன் என்று வைத்துக் கொண்டிருக்கிறோம். டிக்ஷ்னரி அர்த்தப்படி 'ப்ரதிநாயகன்' அதாவது வில்லன் என்று இருக்கிற பாத்திரம்தான் விகடன் - கோர ரூபத்தோடும்,குரூரமான காரியத்தோடும் இருப்பவன். 

-தெய்வத்தின் குரல் ஐந்தாம் பாகத்தில் காஞ்சி காமகோடி பீடாதிபதி சந்திரசேகர சரஸ்வதி ஸ்வாமிகள் 

அம்பிகையின் மூன்று வடிவங்களான மஹாகாளி, மஹா சரஸ்வதி, மஹா லட்சுமி குறித்து பாண்டிச்சேரி அன்னை கூறியுள்ளது. 


இந்த மூன்று வடிவங்களில் மனிதர்களுக்கு மிக நெருங்கி இருப்பவள் மஹா சரஸ்வதி. தன்னை மனிதன் அழைக்க மாட்டானா? என்று காத்திருப்பவள். ஒரு முறை அழைத்தாள்  போதும் ஓடி வந்து அருள் புரிவாள். எத்தனை தவறு செய்தாலும் மீண்டும் மீண்டும் அவனுக்கு அருள் புரிந்து அவனை கை தூக்கி விடத்  துடிப்பவள்.

மஹாலக்ஷ்மியின் அருளுக்கு பாத்திரமாவது கடினம். அவளை தக்க வைத்துக் கொள்வதும் கடினம். நழுவி ஓடி விட துடித்துக் கொண்டிருப்பாள். 

கருணை மிகுந்தவள் மஹா காளி, ஆனால் சிறு ஒழுங்கீனத்தையும் சகித்துக் கொள்ள மாட்டாள், தண்டித்து விடுவாள். 

இதை நாம் இப்படி புரிந்து கொள்ளலாம். எந்த தேர்வையும் எடுத்துக் கொள்ளுங்கள் 100 மதிப்பெண்களுக்கு கேள்விகள் இருந்தாலும், 100 மார்க் வாங்கினால்தான் தேர்ச்சி என்பது கிடையாது. குறைந்த பட்சம் 35 அல்லது நாற்பது வாங்கினால் போதும் பாஸாகி விடலாம். அது கூட வாங்க முடியாமல் தோல்வி அடைந்தாலும் மீண்டும் மீண்டும் தேர்வு எழுதலாம். ஆனால் அந்த தேர்வை நாம்தான் எழுத வேண்டும். நமக்காக மற்றவர்களை எழுதச் சொல்லக் கூடாது.  அப்படி செய்தால் மஹா சரஸ்வதி, மஹா காளியாகி விடுவாள்.  

சரஸ்வதி பூஜை அன்று கருணை வடிவான அன்னைக்கு நம் வணக்கங்கள்.


மண்கண்ட வெண்குடைக் கீழாக மேற்பட்ட மன்னருமென் 
பண்கண்டளவில் பணியச் செய்வாய் படைப்போன் முதலாம் 
விண்கண்ட தெய்வம்பல் கோடியுண்டேனும் விளம்பிலுன்போற் 
கண்கண்ட தெய்வமுளதோ  சகல கலாவல்லியே 



Friday, October 4, 2019

Rangoli - Jamakalam


கோலம் போடுவது, ரங்கோலி வரைவது போன்றவைகளில் திறமையுள்ள என் சகோதரி ரங்கோலியில் வரைந்த ஜமுக்காளம் உங்கள் பார்வைக்கு. 

Monday, September 30, 2019

ஆனை ஆனை, அழகர் ஆனை!

ஆனை ஆனை, அழகர் ஆனை!


சில நாட்களுக்கு முன்பு சன் டி.வி.யின் 'வணக்கம் தமிழா' நிகழ்ச்சியில் வனத்துறை அதிகாரியாக  அதிலும் யானைகள் பாதுகாப்பு பிரிவில் பணியாற்றி ஓய்வு பெற்ற திரு.சிவ கணேசன் கலந்து கொண்டார். அவர் யானைகளைப் பற்றி தெரிவித்த விஷயங்களை இங்கே உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன்.

மனிதர்களிடம் இருக்கும் சில பழக்கங்கள் யானைகளிடமும்  உண்டாம். குட்டியை ஈன்ற தாய் யானை அதை பராமரிக்காதாம். அதன் அத்தைகளும் மூத்த சகோதர, சகோதரிகளும்தான் பராமரிக்குமாம். அதாவது நம்முடைய பழைய கூட்டு குடும்ப மரபு.

கூட்டத்தில் ஒரு யானை இறந்து விட்டால் அதன் உடல் டீகம்போஸ் ஆக இரண்டு அல்லது மூன்று மாதங்களாகுமாம். அப்படி இறந்து போன யானையின் எலும்புகளை அதன் குடும்பத்தை சேர்ந்த யானை எடுத்து அருகிலிருக்கும் நீர் நிலையில் போட்டு விட்டு, கண்ணீர் விட்டு அஞ்சலி செலுத்துமாம்.

தங்கள் குடும்பத்தை விட்டு பிரிந்த யானையை இருபது வருடங்களுக்குப் பிறகும் அதன் லத்தியை பரிசோதித்து, தன்னுடைய குடும்பமா இல்லையா என்று கண்டறிந்து தங்கள் குடும்பமாக இருந்தால் மீண்டும் சேர்த்துக் கொள்ளுமாம்.

குடும்பத் தலைமையை வகிப்பது பெண் யானைதான். அந்த குடும்பத்தின் மூத்த பெண் யானைதான் அந்த பொறுப்பை வகிக்கும். ஒரே வயதில் நான்கு பெண் யானைகள் இருந்தாலும் எல்லாம் தலைமைக்கு வந்து விட முடியாதாம்.  தலைமை பொறுப்பை ஏற்றிருக்கும் அந்த மூத்த பெண் யானை தான் உயிருடன் இருக்கும் பொழுதே தனக்கு பிறகு யார் அந்த இடத்திற்கு வர வேண்டும் என்பதை தீர்மானித்து  அந்த குட்டி யானைக்கு இளம் வயதிலேயே அதற்கான பயிற்சிகளை கொடுத்து தயார் செய்து விடுமாம்.

யானைக்கு பார்வைத்திறன் குறைவுதானாம். ஆனால் மோப்ப சக்தி மிக அதிகமாம். யானையை பழக்க நினைக்கும் பாகன் தன் உடல் வாசனை அதற்கு பழக வேண்டும் என்பதற்காக மூன்று மாதங்கள் வரை கூட குளிக்காமல் இருப்பதுண்டாம். இந்தியாவிலேயே யானைகளை பழக்குவதில் தமிழகத்திற்குதான் முதலிடம் என்றார்.

கோவில்களில் பெண் யானைகளைத்தான் வைத்துக் கொள்வார்களாம். அவைகளுக்கு என்ன உணவு கொடுக்க வேண்டும் என்று நியதி இருக்கிறதாம். ஜெயலலிதா முதலமைச்சராக இருந்த பொழுது கோவில் யானைகள் வருடத்தில் ஒரு மாதம் முதுமலைக்கு ரிட்ரீட்டுக்கு அனுப்பப்பட வேண்டும் என்ற திட்டத்தை கொண்டு வந்தது ஒரு நல்ல விஷயம் என்றார்.

ஒருமுறை சூலுற்ற ஒரு யானை அவரையும் அவரது உதவியாளரையும் துரத்தியதாம், அவரது உதவியாளர்,"உங்களால் வேகமாக மரம் ஏற முடியாது, நான் வேகமாக மரத்தில் ஏறி விடுவேன், எனவே, நான் மரத்தில் ஏறி விடுகிறேன், நீங்கள் பாலத்தின் அடியில் இருக்கும் கல்வெட்டுக்கு பின்னால் ஒளிந்து கொள்ளுங்கள்" என்று கூறி விட்டு, மரத்தின் மீது ஏறிக்கொண்டு விட்டாராம். அதோடு மட்டுமல்ல,"சார், கல் வெட்டுக்கு பின்னல் ஒளிந்து கொள்ளும் முன் அங்கு கரடி எதுவும் இல்லையே என்று உறுதி படுத்திக்கொள்ளுங்கள்" என்றாராம், நல்ல உதவியாளர்! இது போல் பல சுவாரஸ்யமான நிகழ்வுகள்(!!??) என்றார். சரிதான்!




Friday, September 27, 2019

மசாலா சாட் - 11



மனம் சோர்வுற்றிருக்கும்பொழுது இசை கொடுக்கும் ஆறுதல் அலாதி. லால்குடி ஜெயராமன் அவர்களின் தில்லானாவாக இருக்கலாம். மேடை அமைப்பை பார்த்தால் வெளிநாட்டில் நடந்த கச்சேரி என்று தோன்றுகிறது.
இப்போதெல்லாம் பல விஷயங்கள் மாறியிருக்கின்றன. கர்நாடக இசைக்கச்சேரி மேடை போல இல்லாமல் ஆர்கெஸ்ட்ரா போல சிஷ்ய கோடிகளோடு பாடியிருக்கிறார். குட் ஜாப்!


வேடிக்கை மனிதர்கள்:

பிரிட்டனில் ஒரு தம்பதி தங்களுக்கு பிறந்த குழந்தையை  எந்தவிதமான பால் வேற்றுமையும் காட்டாமல் வளர்க்க வேண்டும் என்றும் விரும்பினார்களாம்.
அதனால் தங்களுக்கு குழந்தை பிறந்திருக்கிறது என்று தெரிவித்தார்களே ஒழிய, என்ன குழந்தை என்று தெரிவிக்கவில்லையாம். ஆனால் குழந்தையை கொஞ்சும் பொழுதும், அழும் பொழுது சமாதானப் படுத்தும் பொழுதும் கஷ்டமாக இருந்ததாம். மற்றவர்களிடம் அந்த குழந்தையைப் பற்றி குறிப்பிடும் பொழுது, 'ஹி', என்றோ, 'ஷி' என்றோ குறிப்பிடாமல் 'தே' என்று குறிப்பிடுவார்களாம். குழந்தையின் பாட்டி ஒரு முறை டயப்பர் மற்றும் பொழுது தெரிந்து கொண்டாராம்.  இது குழந்தையை மனோ தத்துவ நீதியாக பாதிக்காதா? நேச்சுரல் இன்ஸ்டிங்ட் என்று என்று ஒன்று உண்டே, அது காண்பித்து கொடுத்து விடாதா? 'கொலையுதிர் காலம்'  நாவலில் சுஜாதா "இந்தக் காலத்தில் பெண்கள் ஆண்களின் ஆடைகளை, ஏன் உள்ளாடைகளையே அணிந்து கொள்வது பற்றி எனக்கு நன்றாகவே தெரியும், இருந்தாலும் அவள் பெண்தான் என்பதற்கு நிறைய சாட்சியங்கள் இருந்தன, தெரிந்தன" என்று எழுதியிருந்ததைப் போல தெரிந்து விடாதா என்ன?