கணம்தோறும் பிறக்கிறேன் 

Sunday, February 14, 2021

மசாலா சாட்!

மசாலா சாட்!

பகுள பஞ்சமி அன்று யூ ட்யூபில் வெளியிட சத்குரு ஸ்ரீ தியாகராஜரைப் பற்றி பேசி அனுப்ப கேட்டிருந்தார்கள். அதற்காக திரட்டிய தகவல்களில் இதுவரை கேள்விப்படாத சில சங்கதிகள்:

ஸங்கீத மும்மூர்த்திகளில் ஒருவரான ஸ்யாமா சாஸ்திரிகள் தன் மகன் சுப்பராய சாஸ்திரிகளை தியாகராஜரிடம் இசை பயில அனுப்பினாராம். அப்போது இரண்டு பேரும் அடிக்கடி சந்தித்துக் கொண்டனர். சியாமா சாஸ்திரிகள் அம்பாள் மீது ஆனந்த பைரவி ராகத்தில் பல பாடல்களை பாடியிருப்பதை கேட்ட பிறகு,அதன் பரிபூரண அழகின் சிறப்பை உணர்ந்து, தியாகராஜர்  அதற்குப் பிறகு ஆனந்த பைரவி ராகத்தில் பாடப் போவதில்லை என்று முடிவெடுத்தாராம். 

தியாகராஜர் சங்கீதம் மட்டுமல்லாமல், கணிதம், ஜோதிடம் இவற்|றிலும் வல்லவராக இருந்தாராம். 

ப்ரஹ்வாத பக்த விஜயம், நவுகா சரித்திரம், போன்ற புகழ் பெற்ற இசை நாடகங்களும் எழுதியிருகிறார்.  

பஜனை சம்பிராதய வழியில் திவ்ய நாம கீர்த்தனங்கள், உற்சவ சம்ப்ரதாய கீர்த்தனைகள் போன்றவைகளையும் இயற்றியிருக்கிறார். 

***********************************************************************************

மனதார சொல்கிறேன், என்று கூறும் பொழுது நம் கையை இதயம் இருக்கும் இடத்திற்கருகே வைத்துக் கொள்வது நம் பழக்கமாக இருந்தாலும்,  மனம் என்பது எது? அப்படி நிஜமாகவே ஒன்று உண்டா? மனமும், மூளையும் ஒன்றுதானா? என்று பல சந்தேகங்கள் உண்டு. மனம் என்று தனியாக ஒன்று கிடையாது, அது எண்ணங்களின் தொகுப்பு என்றும் சொல்வார்கள். ஆனால் மனம் ஒரு குரங்கு என்னும் கூற்றில் சந்தேகம் இருக்க முடியாது. அதை அடக்குவதும் ஆள்வதும் பிரும்ம பிரயத்தனம்தான். இல்லாத ஒன்று என்ன பாடு படுத்துகிறது? அன்று சௌந்தர்யலஹரி வகுப்பில் திரிஷா என்று ஒரு வார்த்தை,  காது கேட்பதை, வாய் சொல்லிக் கொண்டிருக்க,  இந்த பொல்லாத மனம், அழகான அஜித்தைப் பார்த்து, மிக அழகான திரிஷா, "இப்படி ஸ்மார்ட் ஆகிக்கொண்டே போனால்மா நாங்களெல்லாம் என்ன செய்வது?" என்று கேட்கும் காட்சிக்கு தாவி விட்டது. அதை கஷ்டப்பட்டு இழுத்துக் கொண்டு வர வேண்டியதாகப் போனது. 

தடந் தோளினாய்! மனம் அலையும் தன்மையது, அதை கட்டுப்படுத்துவது கடினம் என்றாலும் அப்பியாசத்தாலும், வைராக்கியதாலும் அதை கட்டுப்படுத்த முடியும் என்கிறார் கீதாச்சார்யன். வைராக்கியம்.. அதுதானே குறைவாக இருக்கிறது.  

***********************************************************************************

என் மகன் காதி சோப்தான் உபயோகப்படுத்துவான். இப்போது காதி சந்தன சோப் பயன்படுத்திகிறான். குளித்துவிட்டு வந்தால் வீடே மணக்கிறது. இன்று அவன் குளித்து விட்டு வந்ததும், ஒரே கம கம மணம். அது எனக்கு ஒரு பழைய விளம்பரத்தை நினைவூட்டியது.

கம,கமா, நிதம் நிதம் கம கமா

இதென்ன சரிகமா? ஏதாவது சுரமா?

நறுமண சுரம் 

புதுவிதமா?

எக்ஸோடிகா டால்கம் கம,கமா 

சரி சரி சரி 

யாருக்காவது இந்த விளம்பர பாடல் நினைவிருக்கிறதா?

*************************************************

இரண்டு வார்த்தைகளால் எந்த கதவையும் திறக்க முடியும் 

அப்படியா?

ஆமாம், தள்ளு, இழு... 

இந்த ஜோக் கூகுள் சொன்னது. அவ்வப்பொழுது செல் போன் திரையில் ஒரு மைக் தோன்றி, இதை சொல்லிப் பாருங்கள் என்று ஒரு தமிழ் வார்த்தை தோன்றும். இன்று, உங்களுக்கு என்ன உதவி வேண்டும்? என்று கேட்டு, கீழே ஒரு கட்டத்துக்குள்  ஒரு ஜோக் சொல்லு, என்ற ஆணையும் இருந்தது. சரி என்று அழுத்தினேன், அப்போது வந்த ஜோக் இது. 

ஒரு திரைப்புதிரோடு முடித்துக் கொள்கிறேன். 

தமிழ் திரையுலகில் சகோதர,சகாதரிகள் நடித்திருக்கிறிர்கள், நடித்துக்கொண்டிருக்கிறார்கள். அப்படி சிலரை நினைவு கூற முடிகிறதா? 

  

Sunday, February 7, 2021

சித்திரமும்...

சித்திரமும்...

எனக்கும் நுண் கலைகளுக்கும் வெகு தூரம். அதுவும் ட்ராயிங்..?சுத்தம்!  பள்ளி நாட்களில் ட்ராயிங் வகுப்புகளில் பென்சில் சீவியே நேரத்தை ஓட்டுவேன். வரைய வேண்டியவைகளை எங்கள் வீட்டிற்கு பக்கத்தில் இருந்த ராதா என்னும் அக்கா வரைந்து கொடுப்பார். அவர் ஊர் மாறி மதுரைக்குச் சென்றதும் என் அக்காவிடம் கெஞ்சிக் கூத்தாடி வரைந்து கொள்வேன். சயின்ஸ் பரீட்சையில் படம் வரைந்து பாகங்களைக்குறி என்னும்  கேள்விகளை தவிர்க்கப் பார்ப்பேன். என் நினைவில் நானே வரைந்த முதல்படம் முதுகெலும்பின் படம். 

எனக்கு குழந்தைகள் பிறந்ததும்,"இவர்கள் பள்ளியில் ப்ராஜக்ட் பண்ண சொன்னால் என்ன செய்வது?" என்று கவலை வந்தது. ஆனால் என் குழந்தைகள் இரண்டு பேருமே நன்றாக வரைந்து என் கவலையைத் தீர்த்தார்கள். 

இந்த லட்சணத்தில் நான் போடும் கோலம் எப்படி இருக்கும்? ஒரு முறை நான் மஸ்கட் போய் விட்டு திரும்பியவுடன் என் வீட்டில் வேலை செய்த பெண்மணி,"பொண்ணு நல்லா கோலம் போடுதம்மா.." என்றாள். அதோடு நிறுத்திக் கொண்டிருந்தால் நன்றாக இருந்திருக்கும், "நீ நல்லாவே போட மாட்ட.." என்று உண்மையைக்கூறி என்னை நோகடித்தாள்.கொஞ்சம் கொஞ்சமாக கோலம் போடுவதிலும் என் திறமையை வளர்த்துக் கொண்டேன். 

இவை நான் போட்ட ரங்கோலி, நீர் மேல் கோலம்,மற்றும் மாக்கோலம் 

இந்த வருடம் கொலு பொம்மையில் வைத்திருந்த வெங்கடாஜலபதி,பத்மாவதி தாயாரின் பொம்மைகள் கலர் மங்கியிருப்பதாக தோன்றியதால், அதை பெயிண்ட் பண்ணி வைத்தேன். பார்த்தவர்கள் அழகாக இருப்பதாக கூறினார்கள். 

சில நாட்களுக்கு முன்பு என் மகன் ஒரு மண் பானையில் தயிர் வாங்கி வந்தான். தயிர் தீர்ந்ததும் அதிலேயே மீண்டும் தயிர் தோய்க்க முயற்சி செய்தோம். இந்த பெங்களூர் குளிரில் அதில் தயிர் சரியாக தோயவில்லை. அழகாக இருந்த அந்த குட்டிப் பானையை தூக்கிப் போட மனமில்லை. அதில் பெயிண்ட் பண்ணி பூ ஜாடியாக பயன் படுத்தலாம் என்று தோன்றியது. எனக்கு தெரிந்த வகையில்  அதை கொஞ்சம் சிம்பிளாக பெயிண்ட் பண்ணினேன். எப்படி இருக்கிறது சொல்லுங்கள். 
 

Friday, January 29, 2021

திரை விமர்சனங்கள்

திரை விமர்சனங்கள் 

சில்லு கருப்பட்டி: 


தொலைகாட்சியில்தான் பார்த்தேன் சில்லு கருப்பட்டி என்னும் ஆந்தாலஜி படத்தை. ஹலிதா ஷமீம் என்னும் இளம் பெண் இயக்குனர் இயக்கியிருக்கும் படம். நான்கு விதமான காதல்களை பேசுகிறது. முதல் கதையில்(Pink bag) குப்பை பொறுக்கும் ஒரு சிறுவனுக்கு தினமும் பிங்க் நிற பையில் குப்பைகளை போடும் ஒரு பெண் மீது ஏற்படும் லயிப்பு. சாரா அர்ஜுனும்(சைவம் படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்த பெண்) ராகுலும் நடித்திருக்கும் படம். இதில் வசனங்கள் மிகவும் குறைவு. பின்னணி இசை அற்புதம்!  அடுத்த கதை காக்கா கடியில் மீம்ஸ் கிரியேட்டரான, கான்சரில் பாதிக்கப்பட்ட  ஒரு ஐ.டி. இளைஞனுக்கும், அவனோடு காரில் பயணிக்கும் பெண்ணுக்கும் இடையே மலரும் காதலை  சொல்கிறது  மணிகண்டனும், நிவேதிதா சதீஷும் நடித்திருக்கிறார்கள். டர்டில் என்னும் இந்தப் படம் முதியவர்களின் காதல் என்னும் கத்தியில் நடப்பது போன்ற விஷயத்தை தேர்ந்தெடுத்திருக்கிறது. திருமணம் செய்து கொள்ளாமல் வாழும் ஒரு முதிய பெண்மணிக்கும்(லீலா சாம்சன்), மனைவியை இழந்து, மகனோடு வாழ்ந்தாலும் தனிமையாக உணரும் ஒரு முதியவருக்கும்(க்ரவ் மேக ஸ்ரீராம்) இடையே அரும்பும் காதலை காட்டுகிறது. மிகவும் டெலிகேட்டான ஒரு  விஷயத்தை கண்ணியமாக கையாண்டிருக்கிறார் இயக்குனர்.  கடைசி கதை ஹே அம்மு. சமுத்திர கனியும், சுனைனாவும் நடித்திருக்கும் இந்தக் கதை திருமணமாகி, மூன்று குழந்தைகள் பெற்ற, குடும்ப வாழ்க்கையின் ரொடீனில் காதலித்த தொலைத்த அப்பர் மிடில் கிளாஸை சேர்ந்த ஒரு கணவன், மனைவி இழந்த தங்கள் காதலை மீட்டெடுக்கும் கதை. மிக மிக இயல்பான இந்த படத்தை பார்க்கும் நடுத்தர வயதினர் பலர் தங்களை இதில் அடையாளம் காண முடியும்.  எல்லோருமே சிறப்பாக நடித்திருந்தாலும் சமுத்திர கனியும், சுனைனாவும் பாத்திரத்தோடு ஒன்றியிருக்கிறார்கள். மிகச் சிறப்பான வெளிப்பாடு. சுனைனா இவ்வளவு நன்றாக நடிப்பாரா என்று ஆச்சர்யமாக இருக்கிறது. சமுத்திரக்கனியின்  
இதற்கு முந்தைய படங்களிலிருந்து மாறுபட்டு மிகச் சிறப்பாக நடித்திருக்கிறார். அவருடைய சில எக்ஸ்பிரஷன்ஸ் அபாரம்!காட்சி அமைப்புகளும், வசனங்களும் வெகு இயல்பு.  எல்லா படங்களுமே மிகவும் கண்ணியமாக, ரசிக்கும்படி எடுக்கப் பட்டிருக்கின்றன. நான்கு படங்களுக்கும் நான்கு ஒளிப்பதிவாளர்கள். இந்தப் படத்தின் மூலம் இரு விருதுகளை வென்றுள்ள ஹலிதா ஷமீம் நம்பிக்கையூட்டுகிறார். பெரிய நட்சத்திரங்கள் இவரை மசாலா உலகிற்கு இழுத்து வராமல் இருக்க வேண்டும்.  

மாறா:  

திரையரங்குகளுக்குச் செல்லாமல் நேரடியாக ஓ.டி.டி.யில் வெளியாகியுள்ள படம். மாதவன் ஷ்ரத்தா ஸ்ரீநாத், மௌலி,ஷிவ்தா முதிலியவர்கள் நடித்திருக்கும் படம். நமக்கெல்லாம் தெரிந்த ஸ்டாண்ட் அப்  காமெடியன்  அலெக்ஸ்  திருடனாக வந்து சிரிப்பூட்டுகிறார். மலையாளத்தில் வந்து விருதுகளை குவித்த சார்லி என்னும் படம்தான் ரீ மேக் ஆகியிருக்கிறது. அதனாலோ என்னவோ மலையாளம் படம் பார்க்கும் உணர்வு. அவர்களால்தான் ஒரு காதல் கதையை மிஸ்ட்ரி போல எடுக்க முடியும்.  இந்தப் படத்தின் மிகப் பெரிய பலம் காமிரா! மலை நாட்டின் அழகை சிறைப்பிடித்து நம் பார்வைக்கு விரித் திருக்கிறது. மலையாள படம் என்று சொல்லி விட்டதால் எல்லோரும் இயல்பாக நடித்திருக்கிறார்கள் என்று சொல்லத் தேவை இல்லை. மௌலியின் குறிப்பிடத்தக்க படங்களுள் இது ஒன்று. இசை ஜிப்ரான். புதுமுக இயக்குனர் திலிப் குமாருக்கு ரத்தின கம்பள வரவேற்பு கொடுக்கலாம். ஆனால் ஒன்று சொல்லியாக வேண்டும். இந்தப் படத்தை ரசிப்பதற்கு நமக்கு கொஞ்சம் பொறுமை வேண்டும். 

Monday, January 18, 2021

கலை, கைவினை கண்காட்சி - 2

 கலை, கைவினை கண்காட்சி - 2 







இந்த மாடர்ன் ஓவியம் என்ன உணர்த்துகிறது என்று எனக்கு புரியவில்லை. உங்களுக்கு புரிந்தால் சொல்லுங்கள். 




இந்த 3டி ஓவியம் மிகவும் பிடித்தது. பெண்ணின் தோளில் இருக்கும் பென்சில், அதில் கட்டியிருக்கும் நூல் எல்லாமே மிகவும் தத்ரூபமாக இருந்தன. ஏன் மரச்சட்டம் போல் தெரிகிறதே அது கூட ஓவியம்தான்.



எனக்கு இந்த ஓவியம் மிகவும் பிடித்தது. 


பொம்மலாட்டத்திற்கான ராமன், ராவணன், சீதை ஓவியங்கள்.






 

Wednesday, January 13, 2021

கண்டு கொள்வோம் கூத்தாடிகளை!

 கண்டு கொள்வோம் கூத்தாடிகளை!


உலகமே ஸ்தம்பித்திருக்கிறது. தொழில்கள் முடங்கி யிருக்கின்றன, லட்சக்கணக்கில் மரணம், காட்டுத் தீயாய்  பரவிய நோய் இப்போதுதான்  கட்டுக்குள் வந்திருக்கிறது. அதற்குள் இரண்டாவது அலை என்கிறார்கள். சில நாடுகள் மீண்டும் பொது முடக்கம் அறிவித்திருக்கின்றன. இந்த நிலையில்  மாஸ்டர் என்று ஏதோ ஒரு சினிமாவாம் அது திரையரங்கில்தான் வெளியிடப்பட வேண்டுமாம், மக்களை பற்றியும், அவர்கள் நலனைப் பற்றியும், இதனால் சமூகமும், அரசாங்கமும் எதிர் கொள்ள வேண்டிய ஆபத்தை பற்றி கொஞ்சம் கூட கவலைப்படாமல் 100% ஆகுபன்சி வேண்டும் என்று அந்த நடிகர் முதலமைச்சரை பார்த்து பேசுகிறார். அவருடை ரசிகர்கள் ஏதோ அந்த படத்தை பார்க்காவிட்டால் தங்கள் ஜென்மம் கடைத்தேறாது என்பது போல மாஸ்க் அணியாமல், சமூக இடைவெளி என்ற பிரக்ஞை இல்லாமல் முன்பதிவுக்கு முட்டி மோதுகிறார்கள். என்ன கொடுமை இது? 

விஜய்க்கு சமூக பொறுப்பு என்பது கொஞ்சமாவது இருந்தால் தன்னுடைய  படத்தை OTTஇல் வெளியிட்டிருக்க வேண்டும். அல்லது தன் ரசிகர்களுக்கு ஆன் லைனில் மட்டுமே பதிவு செய்து படத்தை பாருங்கள் என்று அறிவுறுத்தியிருக்க வேண்டும். அவர் எப்படி செய்வார்? தன் கட் அவுட்டிற்கு பால் அபிஷேகம் செய்வதை தடுக்காதவர்கள்தானே இவர்கள்.  இவர்கள் ஒரு புறம் கோக கோலா  விளம்பரத்தில் நடிப்பார்கள், இன்னொரு புறம் கார்ப்பரேட் கம்பெனிகள் நம் நீராதாரத்தை சுரண்டுகின்றன என்று குரல் கொடுப்பார்கள்.  'ஒரு விரல் புரட்சியே..' என்று இவர்கள் பாடினால் போதுமா? மக்கள் மீதும், சமூகத்தின் மீதும் அக்கறை வேண்டாமா?

அரசாங்கத்தின் செயல்பாடும் மிகவும் வருத்தம் அளிக்கிறது.  திரை
யரங்குகளுக்கு ஆன் லைனில் மட்டுமே டிக்கெட்டுகளை விற்க வேண்டும் என்று சட்டம் போட்டிருக்க  வேண்டும். சுற்றுலா தளங்களிலும், விமான நிலையங்களிலும், ரயில் டிக்கெட் முன்பதிவுகளிலும் கடுமையான சட்ட திட்டங்களை செயல்படுத்தும் அரசாங்கம் சினிமா அரங்குகளை கண்டு கொள்ளாமல் விட்டது ஏன்? 



Tuesday, January 12, 2021

கலை,கைவினை கண்காட்சி

கலை, கைவினை கண்காட்சி!

ஞாயிறன்று கர்நாடகா சித்திரகலா பரிக்ஷித்தின் ஆதரவில் நடைபெற்ற ஆர்ட்ஸ் & க்ராப்ட்ஸ் எக்சிபிஷனுக்கு சென்றிருந்தோம். அங்கு என் செல்போனில் சிறை பட்டவை :

பழைய பித்தளை பாத்திரங்கள் 


                    





வெண்கல சிலைகள் பகுதியிலிருக்கும் விநாயகரை தனியாக ஃபோகஸ் செய்ய முடியவில்லை.  தலைப் பகுதி எந்த ஆதாரமும் இல்லாமல் தனியாக இருந்தது.   

ஒடிசா ஓவியங்கள் அற்புதம்! அங்கு துணியில் செய்யப்பட்டிருந்த தாய  கட்டத்தை விளையாடிவிட்டு மடித்து வைத்து விடலாம், பிரயாணங்களில் பயன்படும். 1500 ரூபாய் மட்டுமே. சீ! சீ! என்ன இருந்ததும் நாம் கையால் வரைவது போலாகுமா? 









Sunday, January 10, 2021

சார் போஸ்ட்!

 சார் போஸ்ட்!


'நிலவுக்கு வான் எழுதும் கடிதம், நீருக்கு மீன் எழுதும்கடிதம், மலருக்கு தேன் எழுதும் கடிதம், ..' என்று ஒரு பழைய பாடலில் வரும்.  இவையெல்லாம் கடிதம் எழுதுமா? என்று தெரியாது, ஆனால் நாம் எல்லோரும் கடிதங்கள் எழுதியிருக்கிறோம்.

Sunday, January 3, 2021

மசாலா சாட் - 21

மசாலா சாட் - 21


எனக்கு என்னவோ சிறு வயதிலிருந்தே ஆங்கில புத்தாண்டு கொண்டாட்டங்களில் அத்தனை ஈடுபாடு கிடையாது. எங்கள் அம்மா ஆங்கிலப் புத்தாண்டு அன்று இனிப்பு செய்வதுண்டு. ஒரு முறை நான் என் அம்மாவிடம், "நம்முடைய புது வருடம் சித்திரை மாத பிறப்புதானே?" என்று கேட்டேன். அதற்கு அம்மா," அது விசேஷங்களுக்கு, மற்ற விஷயங்களுக்கு ஆங்கில  தேதியைத்தானே ஃபாலோ பண்ணுகிறோம். ஒண்ணாம்  தேதிதான்  சம்பளம் வாங்குகிறோம். இதையும் கொண்டாடத்தான் வேண்டும்" என்றாள். என்றாலும் பெரிதாக கொண்டாடியதில்லை. புத்தாண்டு தினத்தன்று அதிக கும்பலாக இருக்கும் என்பதால் அன்று கோவிலுக்குச் செல்வதையும்  தவிர்ப்பேன்.  பள்ளி, கல்லூரி நாட்களில் நேரில் பார்க்கும் பொழுது வாழ்த்து சொல்வதோடு சரி. மஸ்கட்டில் இருந்த பொழுது புத்தாண்டு பார்டிகளில் கலந்து கொண்டதுண்டு. அந்த பார்ட்டிகளில் உற்சாக பானம் கட்டாயம் இருக்கும். விளையாட்டுகள், தம்போலா, பின்னர் சாப்பாடு என்று செல்லும். ஒரு முறை நண்பர் ஒருவர் வீட்டில் நடந்த புது வருட பார்ட்டியில் ஒருவருக்கு உற்சாகம் பீறிட்டு, அவர்கள் வீட்டு டீபாயில் ஏறி நடனமாடியதில் அந்த டீபாயின்  கண்ணாடி  உடைந்து  விட்டது. வீட்டம்மா ," புது வருடத்தில் கண்ணாடி உடைவது நல்ல சகுனம்" என்றாள். வேறு என்ன சொல்ல முடியும்?  

ஓமானில் ஆங்கில புத்தாண்டிற்கு விடுமுறை கிடையாது. அவர்கள் கொண்டாடவும் மாட்டர்கள். நாம் வாழ்த்தினால் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். "திஸ் இஸ் நாட் அவர் நியூ இயர்" என்று கூறி விடுவார்கள். எனக்கும் கூட இதைப்புது வருடம் என்கிறார்களே, இதில் என்ன புதிது? நம்முடைய புது வருடம் என்றால் அன்று சூரியன் ரசிக்கட்டத்தில் முதலாவதான மேஷத்தில்  நுழைகிறார், ஜனவரி ஒன்று இன்னொரு நாள்தானே என்றுதான் தோன்றும். இருந்தாலும், எல்லோரும் வாழ்த்து சொல்வதால் நானும் பதிலுக்கு  வாழ்த்துவேன். காசா? பணமா? வாழ்த்திவிட்டு போகலாமே? இனிய புத்தாண்டு வாழ்த்துகள்!

 *************** 

நேற்று பொன்னியின் செல்வன் ஆடியோ புக் கேட்டேன். இதற்கு முன் பவா செல்லத்துரை அவர்கள் சொல்லிய சில கதைகளையும், பாரதி பாஸ்கர் படித்த சில கதைகளையும் கேட்டிருக்கிறேன். அவை வேறு விதம். ஆடியோ புக் என்றால் ஒலிச்சித்திரம் போல இருக்கும் என்று நினைத்தேன். ஆனால் பொன்னியின் செல்வனை படித்த ஒருவர் அதை இன்னொருவருக்கு சொல்வது போல் குரலில் எந்தவித ஏற்ற இரக்கமும் இல்லாமல் சொல்லிக் கொண்டே போகிறார். கல்கியின் வர்ணனை அழகுகளையோ, பாத்திர படைப்புகளின் சிறப்பையோ உணர முடியவில்லை. குந்தவையின் கம்பீரம், நந்தினியின் தந்திரம், பெரிய பழுவேட்டரையரின் சபலம், வந்தியத்தேவனின் சாதுர்யம், ஆழ்வார்கடியானின் நகைச்சுவை,  அநிருத்த  பிரம்மராயரின் அறிவு தவறு, அநிருத்த பிரம்மராயரே காணோம். பொன்னியின் செல்வன் படித்து கொஞ்சம் குழப்பம் இருப்பவர்கள் இதைக் கேட்டு தெளிவு படுத்திக்கொள்ளலாம். மற்றபடி கேட்டலில் படிப்பதே நலம். 

*************

ஒரு மைக்ரோ கதை!

திருமணம் முடிந்து எல்லோரும் விடைபெற்றுச் சென்றனர். தன் அறையில் துணிகளை மடித்து பெட்டியில் வைத்துக் கொண்டிருந்த மகளை நெருங்கி அவள் தோளை தட்டினார் சந்திரசேகர்  "எல்லா ப்ராப்லங்களையும் தாண்டி நீ ஆசைப்பட்டபடியே கல்யாணம் நல்லபடியா முடிஞ்சுடுத்து" என்று அவள் கையை குலுக்கியதும் அவளுக்கு கண்கள் லேசாக கலங்கின. துணி மடிப்பதை நிறுத்தி விட்டு படுக்கையில் உட்கார்ந்தாள். அவளுடைய அம்மாவும் அவள் அருகில் அமர்ந்து பெண்ணை மெல் அணைத்துக் கொண்டு பேசத்  தொடங்கினாள், "உனக்கு நாங்க சொல்லிக் கொடுக்க வேண்டாம். உனக்கே  எல்லாம் தெரியும், நீ கெட்டிக்காரி. இத்தனை நாட்கள் இருந்ததும், நல்ல பெயர் வாங்கியதும் பெரிசு கிடையாது. இனிமேல்தான்  கஷ்டம். நீ சாதாரணமா பேசுவது கூட தவறாக புரிந்து கொள்ளப் படலாம். நல்ல மாட்டுப்பொண்ணுனு பெயர் வாங்கி விடலாம், நல்ல மாமியார்னு பெயர் வாங்குவதுதான் கஷ்டம். ஜாக்கிரதை!" என்றாள் மகனுக்கு திருமணம் முடித்து மாமியாராகியிருக்கும் மகளிடம். 

************

சென்ற வாரம் ஊரிலிருந்து வந்திருந்த அக்கா பெண், மாப்பிளை, குழந்தைகளோடு பன்னர்கட்டாவில் இருக்கும் உயிரியல் பூங்காவிற்கு சென்றிருந்தோம். நல்ல கும்பல் இருந்தது.  பெரும்பான்மையோர்  மாஸ்க் அணிந்திருந்தார்கள்.  அங்கே சஃபாரிக்காக செல்லும் பொழுது நான் கால் இடறி கீழே விழுந்தேன் . நல்ல வேளை பெரிதாக அடி படவில்லை.  
"கையில் செல்ஃபோன்" (அதனால் இல்லை)
"புடவை தடுக்கி விட்டதா?" (இல்லை)
"கீழே கவனிக்கவில்லையா?" (ஆமாம்)
விழும் பொழுது கையை ஊன்றிக் கொண்டு விட்டீர்கள், அப்படி செய்யக் கூடாது (அது அனிச்சை செயல் அல்லவா?)
மாரல் ஆஃப் தி ஸ்டோரி: நாம் தவறு செய்யும் பொழுது நிறைய கேள்விகளுக்கு பதில் சொல்ல வேண்டும்.


அபூர்வமான வெள்ளைப் புலி 



 
சிற்றுண்டி மற்றும் சிறுகடைகள் 


சில வருடங்களுக்கு முன்னர் இங்கு சஃபாரி ரைட் சென்ற பெண் குழந்தையை ஒரு புலி கவ்விச் சென்ற செய்தி நினைவுக்கு வந்து கொண்டே இருந்தது. இப்போது பாதுகாப்பாக வேலி  அமைத்து விட்டார்கள்.  அதிலும் மிகவும் நெருங்கிச் சென்று பார்க்க வேண்டாம் என்ற அறிவிப்பும் இருக்கிறது.  சஃபாரி சவாரிக்கு அழைத்துச் செல்லும் வண்டிகளும் கம்பிகள் அமைக்கப் பட்டு, புகைப்படம் எடுப்பதற்காக ஒரு சிறிய திறப்பு மட்டும் வைக்கப்பட்டிருக்கிறது.   

***********



பேருந்து நிலையத்தில் நின்று கொண்டிருந்த பஸ்சிலிருந்த கண்டக்டர்,:"சிதம்பரம் எல்லாம் ஏறுங்க" 
பயணி ஒருவர்: "சார், நான் ராமசாமி, ஏறலாமா?" 
                                      

               







Saturday, December 26, 2020

தெய்வம் மனுஷ ரூபேண

 தெய்வம் மனுஷ ரூபேண


சென்ற வார சண்டே டாபிக்காக மத்யமரில் கொடுத்திருந்தார்கள். அதற்காக நான் எழுதிய கட்டுரை. அதில் எழுதாத சில விஷயங்களையும் இதை எழுதியிருக்கிறேன். 

எனக்கு பல சமயங்களில் தெய்வம் போல் மனிதர்கள் உதவியிருக்கிறார்கள். அதில் முக்கியமான இரண்டு தருணங்களை உங்களோடு பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். 

எனக்கு திருமணமாகி மூன்று வருடங்களுக்குப் பிறகே  மஸ்கட்டில் இருந்த என் கணவரோடு சேர்ந்து வாழும் விதமாக எனக்கு விசா கிடைத்து அங்கு செல்ல முடிந்தது. 1987 ஜனவரியில் அங்கு சென்ற நான் உடனே கருவுற்றேன். வெளிநாட்டில்தான் பிறக்க வேண்டும் என் மகன் தீர்மானித்திருந்தான் போலிருக்கிறது. என் மணிவயிற்றில் வந்துதித்தான். 

வீட்டில் கடைசி பெண்ணான என்னை சூலுற்ற கோலத்தில் பார்க்க என் வீட்டில் எல்லோருக்கும் ஆசை. பிரசவத்திற்கு ஊருக்கு  வரச்சொல்லி அழைத்தார்கள். ஆனால் என் கணவரோ, "நாம் மினிஸ்டரி ஆப் ஹெல்த்தில் வேலை பார்ப்பதால் நமக்கு ஆஸ்பத்திரியில் மருத்துவ செலவு இலவசம்தான், மேலும், நீ இப்போதுதான் இங்கு வந்திருக்கிறாய், அதனால் பிரசவத்திற்கு முன்பாக ஊருக்குச் சென்றால் குழந்தை பிறந்து அதிக நாட்கள் அங்கு இருக்க முடியாது, அதற்குப் பதிலாக இங்கு பிரசவித்து விட்டு பிறகு ஊருக்குச் சென்றால் மெட்டர்னிட்டி லீவையும் சேர்த்து மூன்று மாதங்கள் அங்கு இருந்துவிட்டு வரலாம்" என்று என்னை அங்கேயே இருக்கச்சொல்லி விட்டார். என் பெற்றோர்கள்  எத்தனையோ சொல்லியும் கேட்கவில்லை. அங்கும் நண்பர்கள் எல்லோரும், எப்போது ஊருக்குச் செல்லப் போகிறீர்கள்?" என்று கேட்பார்கள்,நான் "ஊருக்கு போகப்போவதில்லை, இங்கேயேதான் இருக்கப்போகிறேன்" என்றால் "ஊரிலிருந்து யாரவது உதவிக்கு வருகிறார்களா? என்பார்கள். "அதுவும் இல்லை, பிரசவத்திற்குப் பிறகு நான் ஊருக்குப் போகப் போகிறேன்" என்ற என் பதில் பலரை அதிர்ச்சிக்கு உள்ளாக்கும். "தனியாக எப்படி மேனேஜ் பண்ணுவீர்கள்?" என்ற பலரும் கேட்ட பொழுது, "இருக்கலாம் பானு, ஒண்ணும்  கவலை இல்லை, நாங்கள் எல்லாம் இருக்கிறோம் என்று தைரியம் கொடுத்தவர்கள் மூன்று  பேர்கள்தான்.  என் கணவரின் நண்பரான  திரு.ரமணன் என்பவரின் மனைவி திருமதி வசந்தா ரமணனும், இன்னொரு நண்பரான திரு.ஸ்ரீதரன் மற்றும் அவரின் மனைவி திருமதி. ராஜேஸ்வரி ஸ்ரீதரன். அறிமுகத்திற்காக ராஜேஸ்வரி என்று சொல்லி விட்டேன், இனிமேல் ராஜி என்று குறிப்பிடுகிறேன். 

ராஜியும் ஸ்ரீதரும் என் முதல் பிரசவத்தில் செய்த  உதவிகளை  எப்படி சொல்வது? அவளுக்கும் எனக்கும் சம வயதுதான். மூணு வயதில் குழந்தையை வைத்துக் கொண்டிருந்த அவள் நிறைய அனுபவம் மிகுந்தவன் போல் எனக்கு தைரியம் சொன்னாளே அதைச் சொல்வதா?  எனக்கு ஃபால்ஸ் பெயின் எடுத்த பொழுது,  தன் மைத்துனருக்கு போன் பண்ணி பள்ளியிலிருந்து வரும் குழந்தையை பிக் அப் பண்ணிக் கொள்ளச் சொல்லி விட்டு, என்னோடு மருத்துவமனைக்கு புறப்பட்டு வந்தாளே அதைச் சொல்வதா? எனக்கு பனிக்குடம் உடைந்து, மருத்துவ  மனைக்கு கிளம்ப வேண்டிய நிலை ஏற்பட்ட பொழுது, ஸ்ரீதர் "தைரியமா இரு பானு," என்று கூறி வழியில் என்னை உற்சாகப்படுத்தியபடி பேசிக்கொண்டே வந்ததை சொல்வதா? மருத்துவமனையிலிருந்து வீடு திரும்ப வேண்டிய நாளில் தன்னுடைய  மாஸ்டா காரை ஒரு சிறு குலுங்கல் கூட இல்லாமல் ஒட்டிக் கொண்டு வந்ததை சொல்வதா? பதினைந்து நாட்கள் என்னை அவர்கள் வீட்டில் வைத்துக் கொண்டு உடன் பிறந்த சகோதரிக்கு செய்வதைப் போல் பத்தியம் வடித்துப் போட்டு, பார்த்துக் கொண்டதை சொல்வதா? என்னைப் பார்ப்பதற்காக தினசரி யாரவது வருவார்கள், அவர்களை யெல்லாம் முகம் சுளிக்காமல் உபசரித்ததை சொல்வதா? 

இதைத் தவிர,நான் ஆஸ்பத்திரியில் இருந்த எட்டு நாட்களும் பல நண்பர்களின் மனைவிகள் போட்டி போட்டுக் கொண்டு எனக்கு சாப்பாடு கொடுத்து  அனுப்புவார்கள். இதில் குறிப்பிட்டு சொல்லக் கூடியவர் என் கணவரின் மற்றொரு நண்பரின் மனைவியான  மாலா சங்கர் ராமகிருஷ்ணன் அவர்கள். அவர் எனக்கு தினசரி மதிய உணவு கொடுத்தனுப்பியதோடு தன் காரையும் என் சகோதரருக்கு கொடுத்து பயன்படுத்திக் கொள்ளச் சொன்னார். 

என்னை வார்டுக்கு மாற்றிய பிறகு ஒரு நாள் திருமதி வசந்தா ரமணன் என் உதவிக்காக வந்திருந்தார். சிசேரியன் ஆகியிருந்த எனக்கு படுக்கையிலிருந்து எழுந்திருப்பது மிகவும் கஷ்டமாக இருக்கும். ஆனால் அவர் எனக்கு உதவாமல் பேசாமல் உட்கார்ந்திருந்தார். நான் எப்படியோ  வலியை பொறுத்துக் கொண்டு மிகவும் கஷ்டப்பட்டு எழுந்து உட்கார்ந்ததும்," நீங்கள் எழுந்திருக்க சிரமப்படுவதை பார்ப்பதற்கு கஷ்டமாகத்தான் இருக்கிறது, ஆனால் நான் உங்களுக்கு உதவி விட்டால், உங்களுக்கு தானாக முயற்சிக்க வேண்டும் என்று தோன்றாது, அதனால்தான் நான் உதவவில்லை" என்றார். உண்மைதான். நானே முயற்சி செய்து எழுந்திருந்து, நடந்து எல்லாம் செய்ததால் தான் பதினைந்து  நாட்களே ஆன குழந்தையை தூக்கிக் கொண்டு திருச்சி வரை விமானத்தில் பயணிப்பது எனக்கு எளிதாக  இருந்தது. 

மேலும் நான் செவிலியர்களை உதவிக்கு அழைக்காமல் இருந்ததால்  அவர்களுக்கு பிடித்த பேஷண்டானேன்.   நான் கேட்கும் சின்ன சின்ன  உதவிகளை மறுக்காமல் செய்வார்கள். அந்த அனுபவம் என்னுடைய இரண்டாவது பிரசவத்திலும்  எனக்கு கை கொடுத்தது. இரண்டாவதும் சிசேரியன்தான். நான் ஐ.சி.யூ.வில் இருந்தபொழுதே ஒரே பக்கமாக  படுத்துக் கொள்ளாமல், உதவிக்கும் நர்ஸுகளை அழைக்காமல் நானே திரும்பி படுத்துக்க கொள்வேன். பாத்ரூம் செல்ல வேண்டும் என்றாலும் யாருடைய உதவியையும் எதிர்பார்க்காமல் தனியாகவே செல்வேன்.  அப்படி ஒரு மனோ தைரியத்தை அளித்தது திருமதி வசந்த ரமணன் செய்யாமல்  செய்த உதவி

1995ஆம் வருடம் என் கணவருக்கு ஒரு விபத்தில் வலது கை தோள்பட்டை பந்து கிண்ண மூட்டு மூன்று சில்லுகளாக உடைந்து விட்டது. முதலில் செய்யப்பட்ட சிகிச்சையில் சரியாக சேரவில்லை. மீண்டும் ஒரு சிகிச்சை செய்ய வேண்டியிருந்தது. அப்பொழுதும் என் குழந்தைகளை பார்த்து கொண்டது, ராஜிதான். அந்த சமயத்தில் என் மைத்துனர் இறந்து விட்டதால் எங்களுக்கு பத்து நாட்கள் தீட்டு உண்டே, அப்பொழுது மற்றவர்கள் வீடுகளுக்குச் செல்லக் கூடாது என்பார்கவே என்று நான் தயங்கிய பொழுது,"இந்த சமயத்தில் இப்படியெல்லாம் யோசிக்கலாமா? நீ தாராளமாக எங்கள் வீட்டிற்கு வரலாம்" என்றதோடு இரண்டு மூன்று நாட்களுக்கு எனக்கு சமையல் வேலை இல்லாமல்    பார்த்துக் கொண்டாள்.   

என் கணவருக்கு இரண்டாம் முறை அறுவை சிகிச்சை நடந்த பொழுது சாயி அன்பர்கள் தங்களுக்குள் பேசிக் கொண்டு ஷிஃப்ட் முறையில் மருத்துவமனையில் என் கணவரோடு இருந்து கவனித்துக் கொண்டார்கள். என்னை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லவும், அங்கிருந்து அழைத்து வரவும், என் கணவரால் வண்டி ஓட்ட முடியாத மூன்று மாதங்களும்  மாதாந்திர சாமான்கள் வாங்கவும், கறிகாய்கள் வாங்கவும் பல நண்பர்கள் உதவினார்கள். 

அவர் மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் ஆக வேண்டிய நாளன்று என் அலுவலகத்தில் என்னுடன் பணியாற்றிய  ஓமானியர்   சமீர் என்பவர் தன்னுடைய காரை மருத்துவமனைக்கு கொண்டு வந்திருந்தார். கடைசி நிமிடத்தில் மருத்துவமனையில் நீங்கள் முதலில் பணம் கட்ட வேண்டும், பின்னர் அது ரீ எம்பர்ஸ் செய்யப்படும் என்றார்கள், என் கையிலோ பணம் இல்லை,  அப்பொழுதெல்லாம் ஏ.டி.எம். கார்ட் இப்போது போல் அவ்வளவு புழக்கத்தில் வரவில்லை. என்ன செய்வது என்று யோசித்த பொழுது  உடனே என் அலுவலக சக ஊழியர் தன்னுடைய  க்ரெடிட்  கார்ட்டில் பணம் கட்டிவிட்டு பின்னர் வாங்கி கொண்டார். எத்தனை தெய்வங்கள்!

Friday, December 18, 2020

பய பக்தி

பய பக்தி  

நாம் கோவிலுக்குச் சேரும் பொழுது பய பக்தியோடு செல்வோம். ஆனால் பயம் 90% பக்தி 10% என்று ஒரு கோவிலுக்குச் சென்றோம் என்றால் அது சோட்டாணிக் கரை பகவதி கோவிலுக்குச் சென்றதை கூறலாம். 

ஏறத்தாழ முப்பது வருடங்களுக்கு முன் கேரளா சென்ற பொழுது சோட்டாணிக் கரைக்கும் சென்றோம். நாங்கள் சென்றபொழுது சாயரட்சை தீபாராதனை நேரம். அந்தக் கோவிலைப் பற்றி பரணீதரன் எழுதியிருந்தவை நினைவுக்கு வந்து கிலியை  ஊட்டியது. மன நலம் சரியில்லாமல் அங்கே தங்கியிருப்பவர்கள் தரிசனத்திற்கு வரும் நேரம். 

அந்தக் கோவிலின் சுவர்களில் அடிக்கப் பட்டிருந்த  பெரிய பெரிய ஆணிகளை  பார்த்தாலே பகீரென்றது. அவை எல்லாம் அந்தக் கோவிலில் தங்கியிருந்த மன நலம் குன்றியவர்கள், மற்றும் பேய் பிடித்தவர்கள் அர்த்தஜாம குருதி  பூஜையில்  அவர்கள் கைகளால், அல்லது தலையால்  அந்த கருங்கல் சுவர்களில் அடித்தவை.

மன நலம் குன்றியவர்களும், பேய், பிசாசு முதலிய தொல்லைகள் உள்ளவர்களும் சோட்டாணிக்கரைக்கு வந்து தங்கி, அந்த கோவிலில் நடக்கும் பூஜைகளில் கலந்து  கொண்டு, தேவியின் பிரசாதத்தை உண்ண வேண்டும். அங்கு நடக்கும்  குருதி பூஜையின் பொழுது இந்த மன நலம் குன்றியவர்கள் தங்கள் கைகளாலோ அல்லது  தலையாலோ ஆணியை கோவிலின்  கருங்கல் சுவரிலோ அல்லது அங்கிருக்கும் மரத்திலோ  அடிப்பார்களாம், அப்போது அவர்கள் உடலிலிருந்து பெருகும் ரத்தத்தின் வழியே துர் சக்திகள் வெளியேறிவிடும் என்பது நம்பிக்கை. 

இந்த கோவில் இரண்டு பகுதிகளை கொண்டது. மேலே இருக்கும் கோவிலில் அம்பிகை பகவதியாக காலையில் சரஸ்வதியின் அம்சமாகவும், பகலில் லக்ஷ்மியின் அம்சமாகவும் இரவில் துர்கையின் அம்சமாகவும் காட்சி அளிக்கிறாள். மிகவும் சௌமியமான, அழகான ரூபம். கீழ்க்காவு என்று படிகள் இறங்கி கீழே இருக்கும் கோவிலில் குடி கொண்டிருக்கும் அம்மன் பத்ரகாளியின் அம்சமாக விளங்குகிறாள். இங்குதான்  வெள்ளிக்கிழமை இரவுகளில் குருதி பூஜை நடைபெறுமாம். அதை காண்பதற்கு மனதில் மிகவும் உறுதி வேண்டும் என்று திரு.பரணீதரன் அவர்கள் அந்த பூஜை நடக்கும் விதத்தை விவரித்து எழுதியிருப்பார்.  அந்தக் காலங்களில் நிஜமாகவே ஒரு கோழியையோ, ஆட்டையோ பலி கொடுத்து அந்த ரத்தத்தில் சோற்றைக்   கலந்து அதைத்தான் நிவேதனம் செய்வார்களாம். பின்னர் அரசாங்கம் உயிர் பலியை தடை செய்த பிறகு மஞ்சள் பொடியில் சுண்ணாம்பை கலந்தால் சிவப்பு நிறத்தில் வருமே, அதை ரத்த சோறாக கொடுக்கிறார்கள் என்றார்கள். இருந்தாலும் அந்த கீழ்க்காவில் ரத்த வாடை அடிப்பது போல இருந்தது. ஜலதாரைகளில் படிந்திருந்த கறை, ரத்தக்  கறையோ என்று தோன்றியது.  அந்தக் கோவிலில் ஒரு அமானுஷ்யம் நிலவியது.

அதுவும் நாங்கள் சென்றது சாயரட்சை தீபாராதனை நேரம். மன நலம் குன்றிய பெண்கள் சிலர் குளித்துவிட்டு தரிசனத்திற்கு வந்தனர். அவர்கள்  அங்கிருக்கும்  மஹாவிஷ்ணு சந்நிதியில் அமர வைக்கப்பட்டனர். அதில் ஒரு பெண் திடீரென்று விசித்து விசித்து அழுதபடி எழுந்திருக்க நான் வெலவெலத்துப் போனேன்.  அம்மனை தரிசிக்க எங்கே மனம் சென்றது? அடிக்கப்பட்டிருக்கும் ஆணிகளை அல்லவா பார்க்கத் தோன்றியது. "கோவிலுக்கு வந்தால் சாமியை பார்க்காமல், வேறு எதையாவது ஏன் பார்க்கிறீர்கள்?" என்று அம்மா திட்டினாள். 

அதே கோவிலுக்கு மிக சமீபத்தில் சென்றிருந்தோம். கோவில் அடியோடு மாறி நவீனமாகிவிட்டது. அந்த அமானுஷ்யம் போன இடம் தெரியவில்லை. 

Saturday, November 28, 2020

அண்ணாமலையானுக்கு அரோஹரா!

அண்ணாமலையானுக்கு அரோஹரா!



கார்த்திகை என்றாலே நம் எல்லோருக்கும் நினைவுக்கு வருவது திருவண்ணாமலை! பஞ்சபூத தலங்களில் நெருப்பிற்கு உரிய தலமாகும்.  இந்த மலையோடு சம்பந்தப்பட்ட பண்டிகை திருக்கார்த்திகை ஆகும். 

கைலாயத்தில் ஒரு முறை உமா தேவியார் சிவ பெருமானின் கண்களை விளையாட்டாக பொத்தி விட, அந்த ஒரு நொடியில் அண்ட சராசரமும் இருண்டு விடுகிறது. இதனால் சினம் கொண்ட சிவ பெருமான், உமா தேவியை பூமிக்குச் சென்று  தவம் புரிய ஆணையிடுகிறார். சிவனின் ஆணைப்படி திருவண்ணாமலையில் இருந்த கௌதம மஹரிஷியின் ஆஸ்ரமத்திற்கு வந்து தவம் செய்து, கார்த்திகை மாத பௌர்ணமி அன்று சிவ பெருமானின் உடலில் பாதியைப் பெறுகிறாள். அதனால்தான் கார்த்திகை அன்று அர்த்தநாரீஸ்வர கோலத்தில்தான் அண்ணாமலையார் எழுந்தருளுவார். 

ஸ்ரீரங்கம், அடுத்து உயரமான(217 அடி) கோபுரத்தை கொண்டது. 2668 அடி உயரமான மலையின் மீது ஏற்றப்படும் தீபம் மகாதீபம் என்று அழைக்கப் படுகிறது.  ஏழு அடி உயரம் கொண்ட செப்பு கொப்பரையில் ஏற்றப்படும் தீபத்தை எரிய வைக்க 3000கிலோ பசு நெய் தேவைப்படும். திரிக்கு 1000 மீட்டர் காடாத் துணியும், இரண்டு கிலோ கற்பூரமும் பயன்படுத்தப் படுகின்றன.  எரிந்த பஸ்மம் திருவாதிரை அன்றுதான் பிரஸாதமாக வழங்கப்படும்.  

மலை வடிவில் இருப்பது சிவ லிங்கமே என்பதால் இதை வலம் வருவது சிறப்பான வழிபாடாக கருதப்படுகிறது. அதிலும் குறிப்பாக பௌர்ணமி அன்று இந்த மலையை வலம் வருவது மிகவும் சிறப்பு என்ற நம்பிக்கை இருந்தாலும் ஒவ்வொரு கிழமையில் கிரி வலம் செய்வதும் ஒரு சிறப்பான பலனைத்தரும். 

ஞாயிறன்று கிரி வலம் செய்தால் நோய்கள் நீங்கி, உலகில் அரசனைப் போல் வாழலாம் 

திங்கள் கிழமைகளில் கிரிவலம் செய்ய பாவங்கள் நீங்கி, போகங்களை அனுபவிக்க முடியும்.

செவ்வாய் கிழமையில் திருவண்ணாமலையை வலம் வர கடன்கள் தீரும், தரித்திரம் அகலும்.

புதன் கிழமைகளில் கிரிவலம் செய்தால் எல்லா கலைகளிலும் நிபுணத்துவம் பெறலாம். சாத்திர ஞானம் வாய்க்கும். 

வியாழக் கிழமைகளில் கிரிவலம் செய்ய தேவ முனிவர்களுக்கு தலைவனாகும் யோகம் வாய்க்கும்.

வெள்ளிக்கிழமைகளில் கிரிவலம் வர லக்ஷ்மிபதியான மஹாவிஷ்ணுவின் திருவடிகளை அடையலாம். 

சனிக்கிழமைகளில் கிரி வலம் செய்யும் பொழுது நவக்கிரகங்களால் ஏற்படும் தோஷங்களும், பாதிப்புகளும் அகலும். 

முடிந்தபொழுது திருவண்ணாமலை சென்று வணங்கி வரலாமே. இயலாதவர்கள் இருந்து இடத்தில் இருந்தபடியே நினைத்தாலே முக்தி தரும் அண்ணாமலையாரை மனதார வணங்கலாம். அண்ணாமலையனுக்கு அரோஹரா!



Tuesday, November 17, 2020

கேள்வி பிறந்தது கனவில், பதில் கிடைத்தது காரில்

கேள்வி பிறந்தது கனவில், பதில் கிடைத்தது காரில்

ஆறு மாதங்களுக்குப் பிறகு சென்னை விஜயம். கடந்த மார்ச்சில் சென்னை, அங்கிருந்து மதுரையில் ஒரு திருமணத்தில் கலந்து கொண்டுவிட்டு பெங்களூர் திரும்பினேன். அப்போதே கொரோனாவும் தொடங்கி விட்டது. கூ்டவே லாக் டவுன், எங்கும் செல்ல முடியவில்லை. 

கட்டுப்பாடுகளை தளர்திய பிறகு ஒரு முறை சென்னைக்கு வரச்சொல்லி சகோதரிகள் அழைத்துக் கொண்டிருந்தனர். தீபாவளி அன்று மாலை சகோதரிகள் வீடுகளுள் ஒன்றில் குடும்ப உறுப்பினர்கள் எல்லோரும் ஒன்று் சேர்ந்து பட்டாசுகள் வெடிப்பது பழக்கம். 

தீபாவளியன்று காலை பெங்களூர் எங்கள் வீட்டில் எண்ணெய்,தேய்த்து குளித்து, சிம்பிளாக தீபாவளி கொண்டாடி விட்டு, எட்டே முக்காலுக்கு கிளம்பினோம். மதியம் ஒண்ணே முக்காலுக்கு சென்னையை அடைந்து விட்டோம். மதிய உணவறுந்தி விட்டு, சிறிது ஒய்வு எடுத்துக் கொண்டு விட்டு மாலையில் பட்டாசுகள் வெடித்து தீபாவளியை சிறப்பாக கொண்டாடினோம். பட்டாசுகளை கண்டால் எனக்குள் இருக்கும் குழந்தை குதித்து வெளியே ஓடி வந்து விடுவாள்.

ஒரு வினோத கனவு:

தீபாவளிக்கு முதல் நாள் எனக்கு ஒரு கனவு வந்தது. நான் கல்லூரி மாணவியாக இருக்கிறேன். எகனாமிக்ஸ் வகுப்பு. அதில் வகுப்பெடுக்கும் ஒரு பேராசிரியர்," இதில் ABCD என்பதன் பொருளைத் தெரிந்து கொள்ள வேண்டும்" என்று கூறி, விளக்குகிறார். அவர் சென்றதும் நான் அருகில் இருக்கும் மாணவியிடம்,"ABCD என்பதன் விரிவாக்கம் கூறினாரே, அது என்ன?" என்று கேட்கிறேன் ஆனால் பதில் கிடைக்கவில்லை. முழித்துக் கொண்டு விட்டேன். 

காரில் பயணித்த பொழுது, நியூ ஜெர்ஸியில் நடந்த கல்யாண மாலை பட்டிமன்ற நிகழ்ச்சியை (பழையது) கேட்டோம். குடும்ப வாழ்க்கை இனிப்பது இந்தியாவிலா? அமெரிக்காவிலா? என்பதுதான் தலைப்பு. இந்தியாவில்தான் என்று பேசிய ஒருவர், "இங்கிருப்-பவர்களில் ABCD என்று ஒரு பிரிவு உண்டு, America Born Confused Desi" என்றார். என் கனவில் ஏற்பட்ட சந்தேகத்திற்கு விளக்கம் காரில் கிடைத்தது.

வழியில் சாய் சங்கீத்தில் காபிக்காக நிறுத்தினோம். அங்கு கண்ணை கவர்ந்தவற்றை க்ளிக்கினேன்.

யாராவது வாங்கி ஊறுகாய் போடுவாரக்கள் என்று காத்திருக்கும் ஜாடிகள்

                    கருங்கல் காளான்கள்

கோமதி அக்காவை நினைவூட்டின

இது யாரை நினைவூட்டியது என்று சொல்ல வேண்டுமா?
அழகான டெரகோட்டா சொப்பு

Trilogy:

ஒரே கருத்தை அடிப்படையாக கொண்டு எழுதப்படும் மூன்று கதைகள் ட்ரிலாஜி  எனப்படும். நான் திருமணம் என்னும் கருவை அடிப்படையாகக் கொண்டு இதுவரை இரண்டாம் தாரம், தீமெடிக் கல்யாண வைபோகமே,  திருமணத் திருத்தங்கள் சிறுகதைகளை எழுதியிருக்கிறேன். இவற்றில் முதல் கதையும்,மூன்றாாவது கதையும் என் தளத்தில் வெளியாயின. இரண்டாவது கதை எங்கள் ப்ளாகில் வெளியாயின.


Wednesday, November 11, 2020

புத்தம் புது காலை(விமர்சனம்)

 புத்தம் புது காலை(விமர்சனம்) 


தமிழின் முதல் அந்தாலஜி(anthology) படமான புத்தம் புது காலை  படத்தை  அமேசான் ப்ரைமில் பார்த்தேன். இது அமேசான்  பிரைம்ல்தான் வெளியிடப் பட்டது. அந்தாலஜி என்பது ஒரே கருவை அடிப்படையாக கொண்ட ஐந்து கதைகள் . இதில்  லாக் டவுன் நாட்களில் நடப்பதை அடிப்படையாக  கொண்ட  கதைகள் படமாக்கப்பட்டுள்ன. 

 
இந்த ஐந்து படங்களில் 'இளமை இதோ இதோ' படத்தை இறுதிச்சுற்று படத்தை இயக்கிய சுதா கொங்கராவும், 
இரண்டாவது படமான அவளும் நானும்/அவரும் நானும்  படத்தை கௌதம் வாசுதேவன் மேனனும் 
மூன்றாவது படமான எனி ஒன் காஃபி படத்தை சுஹாசினி மணிரத்னமும், 
நாகவது படமான ரீ யூனியன் ஐ ராஜீவ் மேனனும், 
ஐந்தாவது படமான மிராக்கிள் படத்தை கார்த்திக் சுப்புராஜும் இயக்கி உள்ளனர்.

இளமை இதோ இதோ: முன்னாள் காதலரான, மனைவியை  இழந்து, தனியாக  வாழும் ஜெயராமை காண அவரது முன்னாள் காதலியான கணவனை இழந்த ஊர்வசி யோகா ரிட்ரீட்டுக்கு பாண்டிச்சேரி  செல்வதாக மகனிடம் சொல்லிவிட்டு வருகிறார். அவர் வந்ததும்  21 நாட்களுக்கு லாக் டவுன் அறிவிக்கப்படுகிறது. 
21 நாட்கள் சேர்ந்து வசிக்கும் அவர்கள் எடுக்கும் முடிவு என்ன? 

ஊர்வசியும், ஜெயராமும் ஊதித்  தள்ளிவிட்டார்கள்.  காதல் வசப்படும் பொழுது வயது குறைந்து போகிறது என்பதை உணர்த்த இளமையான ஜெயராம், ஊர்வசி பாத்திரங்களில் காளிதாஸ் ஜெயராம்(ஜெயராமின் மகன்), கல்யாணி பிரியதர்சனை நடிக்க வைத்திருப்பதையும் காளிதாஸ் அப்பாவை காப்பி அடிக்காமல் தனி பாணியை பின்பற்றியிருப்பதையும் பாராட்டலாம்.  இருவருமே   இயல்பாக நடித்திருக்கிறார்கள். சகஜமாக, சவுகர்யமாக feel good உணர்வு தரும் படம். 

லாக் அவுட் சமயத்தில் தனியாக வசிக்கும் ரிட்டையர்டு சயிண்டிஸ்டான தாத்தாவோடு சேர்ந்து இருக்க வரும் பேத்திக்கும், தாத்தாவுக்கும் இடையே வலுப்படும்  உறவைப் பேசுகிறது  கௌதம் மேனன் இயக்கியிருக்கும் அவரும் நானும்/அவளும் நானும் படம்.  

நகைச்சுவை நடிகராக அறிமுகமான எம்.எஸ்.பாஸ்கர் தான் ஒரு சிறந்த  குணச்சித்திர நடிகன் என்று இதற்கு முன் சில படங்களில்  நிரூபித்திருந்தாலும் இதில் ஒரு தனி பரிமாணம் காட்டுகிறார். பேத்தியாக வரும் ரிது வர்மா  பார்க்கவும் அழகு, நடிப்பும் அப்படியே. நிஜமான தாத்தா,பேத்தியை பார்ப்பது போல்தான் இருக்கிறது. இந்த தொகுப்பில் என்னை மிகவும் கவர்ந்த  படம் இது. 

சுஹாசினி மணிரத்னம் இயக்கியிருக்கும் எனி ஒன் காஃபி? படத்தை ஒரு குடும்பப் படம் எனலாம். சுஹாசினி, அனு ஹாசன், சுருதி ஹாசன், சாருஹாசன் மனைவி கோமளா என்று குடும்ப உறுப்பினர்கள் நிறைந்திருக்கும் படம். இவர்களோடு காத்தாடி ராமமூர்த்தி. 

கோமாவில் இருக்கும் தாயாரை பார்க்க லண்டனிலிருந்தும் துபாயிலிருந்தும், மூத்த சகோதரிகள் வருகை தர, மும்பையில் இருக்கும் கடைசி பெண் மட்டும் அம்மா மீது கோபித்துக் கொண்டு  அக்காக்கள் அழைத்தும் வர மறுக்கிறார். திடீரென்று மனம் மாறி (மன மாற்றத்திற்கு காரணம் சொல்லப் படவில்லை) அம்மாவிடம்   வீடியோ காலில் மன்னிப்பு கேட்டு, அவருக்காக ஒரு பாடலும் பாட, அம்மாவிற்கு நினைவு திரும்பி விடுகிறது. 

மூத்த சகோதரிக்கு டிஸ்லெக்சிக்காக ஒரு குழந்தை, இரண்டாவது சகோதரிக்கு நீண்ட நாட்கள் கழிந்து கர்ப்பம் தரித்திருப்பது தெரிய வருகிறது  போன்றவை  கதையின் ஓட்டத்திற்கு எந்த வகையிலும்  உதவவில்லை. 

அனு ஹாசன் எக்கச்சக்கமாக வெயிட் போட்டிருந்தாலும் இயல்பான நடிப்பு. சுஹாசினி வழக்கம் போல். சுருதி ஹாசன் ஓகே! படம் ஸோ ஸோ!

ரீ யூனியனில், தன் ஸ்கூட்டி பஞ்சரானதால் மருத்துவராக  இருக்கும்  தன்னுடைய பள்ளித் தோழன் வீட்டிற்கு  வருகிறார்  ஆண்ட்ரியா. பள்ளித்  தோழனாக கர்னாடக இசைப் பாடகரான  குருசரண்.  ஜி.என்.பி.,பாலமுரளி,  சேஷ கோபாலனைத் தொடர்ந்து சிக்கில் குருசரணா? நன்றாகவே நடித்திருக்கிறார். அவருடைய அம்மாவாக லீலா சாம்சன். காஸ்டிங், செட்டிங், ஆக்டிங் எல்லாமே நன்றாக இருக்கிறது. ஆனால் கதை?? 

ஆண்ட்ரியா டிரக் அடிக்ட்டாம், அவரை மீட்க ஹீரோவும், அவன் அம்மாவும் முயல்கிறார்களாம். எதிலும் ஒரு ஆழமோ, அழுத்தமோ இல்லை. அளவிற்கு அதிகமாக ஆங்கில வசனங்கள். 

இந்த படத்தில் என்னைக் கவர்ந்தது குருசரண் வீடுதான். இந்த தொகுப்பிலேயே மொக்கையான படம் என்றால் இதுதான். 

அடுத்ததாக வருகிறார் கார்த்திக் சுப்புராஜ்! இது வரை எல்லா படங்களுமே மேல் மட்டத்தை மட்டுமே குறி வைத்தன. கார்த்தி சுப்புராஜின் மிராக்கிள் மட்டுமே  கீழ் மட்டத்தை லாக் டவுன் எப்படி பாதித்திருக்கிறது என்று கொஞ்சம் நெகட்டிவாக தொட்டு பார்த்திருக்கிறது . 

மிராக்கிள் நடக்கும் என்று நம்புங்கள் என்று ஒரு ஸ்வாமிஜி டி வி.யில்          பேசுவதோடு படம் தொடங்குகிறது. லாக் டவுனில்  வேலை இல்லாத இரண்டு திருடர்கள் காரை திருட முயற்சிப்பது கடைசியில் மிராக்கிள் நடக்கிறது, யாருக்கு?  என்பது கார்த்திக் சுப்புராஜுக்கே உரிய ஸ்பெஷல். ஆனால் படம் பெரும்பான்மை இருட்டில் நடப்பதாக காண்பித்திருப்பதை  செல்போனில் பார்க்கும் பொழுது முழுமையாக ரசிக்க முடியவில்லை. 

இந்த தொகுப்பில் ஒரு குறை எல்லா கதைகளுமே லாக் டவுனில்  நடப்பதை  காட்டினாலும், எந்த படமும்  லாக் டவுனால் வேலை இழந்தவர்கள், உறவினர்களை இழந்தவர்கள் அவர்களின்  ஈமச் சடங்கிற்கு கூட வர முடியாதது போன்ற விஷயங்களை தொடவே இல்லை என்பதுதான். ஐந்து 
குறும் படங்களை சேர்த்து பார்த்தது போல் இருக்கிறது. 

  




Sunday, November 8, 2020

திருமண திருத்தங்கள்

 திருமண திருத்தங்கள் 


ரெஸ்டாரெண்டில்  தனக்கு எதிர்  நாற்காலியில் உட்கார்ந்திருந்த ஆர்த்தியிடம், விஷால் ," நீ உங்க அப்பா,அம்மாவிடம் பேசினாயா?" என்று கேட்டான். 

காபியை ஒரு சிப் அருந்தி விட்டு, "பேசினேன், பட் நோ யூஸ்"  என்றாள்.

எங்க வீட்டிலும் அதே கதைதான் என்ற விஷால் ," "ஸோ, வேற வழியில்லை, நம்ம பிளானை எக்சிகியூட் பண்ண வேண்டியதுதான்" என்றான்.   
 
அவனுக்கு பதில் சொல்லாமல் ஆர்த்தி, ஜன்னல் வழியே தெரிந்த தோட்டத்தை வெறிக்க, டேபிளை தட்டி, "என்னாச்சு? எனி பிராப்லம்?" 

"ஒண்ணுமில்லை, நம்ம அப்பா,அம்மாவுக்கு இது ரொம்ப ஷாக் ஆக இருக்குமோனு தோண்றது"

"வேற வழியில்ல, நம்ம இஷ்டம் என்னனு கேட்காம அவங்களா  ஒன்றை டிசைட் பண்ணி, அதை நம்ம மேல திணிச்சா வேற என்ன பண்ண முடியும்?"

ஆமாம், அப்போ நீ சொல்ற மாதிரி நாம் ரிஜிஸ்டர் மேரேஜ் பண்ணிக் கொள்வதைத் தவிர வேற வழியில்லை. அதுக்கான அரேஞ்சு மென்ட்ஸ்..?"

"அதையெல்லாம் நான் பார்த்துக்கறேன். உன் சைடுல நீ ஸ்ட்ராங்கா இரு அது போறும். அம்மா, அப்பா செண்டிமெண்டில் நீ கட்சி மாறிடக் கூடாது" 

"நோ! நோ! " என்று அவள் புன்னகைத்ததும் விஷால்,"அப்பா! வந்ததிலிருந்து இப்போதான் சிரிக்கிற.." என்றதும் அவள் மேலும் தன் புன்னகையை விரிவு படுத்தினாள். அந்த புன்னகைக்காக என்னவேண்டுமானாலும் செய்யலாம் என்று விஷாலுக்குத் தோன்றியது.

அடுத்தடுத்து வேலைகளை விஷால் விரைந்து முடித்தான்.  ஆர்த்தி  அம்மாவுடன்  புடவை  வாங்க கடைக்குச் சென்று, இரண்டு புடவைகள் மட்டும் எடுத்துக் கொண்டாள். அவர்களுக்கு  திருமணப் பதிவில் உதவி செய்த ஏஜென்ட் பெண்மணி ஆர்த்தியிடம், "நாளைக்கு ரிஜிஸ்டர் பண்ண வரும் பொழுது இப்படி ஜீன்ஸில் வராதம்மா, புடவை கட்டிக்கிட்டு வா"  என்றாள்.  

குறிப்பிட்ட நாளில்," அம்மா இன்னிக்கு விஷாலோட அப்பா அம்மா நம்ம வீட்டுக்கு வருவாங்க," என்று ஆர்த்தியும், "ஆர்த்தியோட அப்பா அம்மா உங்களை அவங்க வீட்டுக்கு வரச் சொல்லியிருக்காங்க" என்று விஷாலும் கூறி, அவர்கள் எல்லோரையும் ஒரே இடத்தில் கூட்டினர். எதற்காக தாங்கள் அங்கே கூடியிருக்கிறோம் என்று புரியாத பெரியவர்கள் பொதுவாக ஏதேதோ பேசிக் கொண்டிருந்தனர். அப்போது காரில் பட்டுப் புடவையில் ஆர்த்தியும்  பட்டு வேஷ்டியில் விஷாலும்  மாலையும் ,கழுத்துமாக வந்திறங்கிய பொழுது அவர்களின் பெற்றோர்கள், ஆச்சர்யமா? அதிர்ச்சியா? என்று சொல்லத் தெரியாத உணர்வில் திகைக்க, 

"நாங்க இன்னிக்கு ரிஜிஸ்டர் மேரேஜ் பண்ணிக்கொண்டு விட்டோம். எல்லோரும் சேர்ந்து நில்லுங்கோ, நாங்க நமஸ்காரம் பண்றோம்"  

வாட்?

என்ன நடக்கறது இங்க?

என்னடி கூத்து இது?

என்று விதம் விதமாக தங்கள் அதிர்ச்சியை வெளிப்படுத்தினார்கள். 

கோபமாக எழுந்த விஷாலின் தந்தை வெளியிடம் என்பதால் தன் கோபத்தை காட்ட முடியாமல் விருட்டென்று எழுந்து வெளிப் பக்கம் நடக்கத் துவங்க, அவருக்கு முன்னாள் ஓடி வாசல் கதவை தாளிட்ட ஆர்த்தி, "அங்கிள் ப்ளீஸ் ,ஒரு நிமிஷம்.. நாங்க சொல்றத கேளுங்க.." என்றதும் திரும்பி வந்து சோபாவில் கோபமாக அமர்ந்தார். 

"ஆர்த்தி, வாட்ஸ் ஹாப்பனிங்?" என்ற ஆர்த்தியின் தகப்பனாரிடம் "அங்கிள், நான் சொல்றேன். கொஞ்சம் எல்லோரும் அமைதியா இருங்கோ" என்ற விஷால் தன் கழுத்திலிருந்த மாலையை கழற்றி டீப்பாயின் மேல் வைத்தான். 

உங்க ரெண்டு பேருக்கும் கல்யாணம் நிச்சயம் பண்ணி, அடுத்த மாசம் தேதி குறிச்சிருக்கு, அதுக்குள்ள இப்போ என்ன அவசரம்? 

விஷாலின் அம்மா முதல் முறையாக வாய் திறந்தாள்.

கரெக்ட்! எங்களுக்கு கல்யாணம் நீங்க நிச்சயம் பண்ணி விட்டீர்கள். ஆனால் அதை எப்படி பண்ணப் போறேள்? ஒரே ஆடம்பரம்.,லட்சக்கணக்கா செலவு, அதெல்லாம் எதுக்கு? எங்க ரெண்டு பேருக்குமே அதில் கொஞ்சம் கூட விருப்பம் இல்ல. நாங்க எவ்வளவு சொல்லியும் நீங்க கேட்கறதா இல்ல, அதனால்தான் நாங்கள் ரெஜிஸ்டர் மேரேஜ் பண்ணிக்கலாம்னு முடிவு எடுத்தோம். 

இன்னிக்கு நல்ல நாளானு பார்க்க வேண்டாமா? 

"இன்னிக்கு நல்ல முகூர்த்த நாள்தான். கிருஷ்ணமூர்த்தி ஜோசியர் கிட்ட கன்சல்ட் பண்ணிதான் இந்த தேதியை பிக்ஸ்  பண்ணினோம்."

"வேற என்ன பாக்கி? தனிக்குடித்தனம் போக வீடு பார்த்தாச்சா?"

"சே! சே! அப்படியெல்லாம் கிடையாதுப்பா..  இந்த ஆடம்பர கல்யாணத்துக்கு ஒரு முடிவு கட்டணும்னு நினைச்சோம். "

"என்னடி ஆடம்பரம்? எங்களுக்கு இருக்கறது நீ ஒரு பொண்ணு, உன்னோட கல்யாணத்தை சிறப்பா பண்ணனும்னு எங்களுக்கு ஆசை இருக்காதா?" என்று ஆர்த்தியின் அம்மாவும்,

"லைஃபில் ஒரு தடவ நடக்கப்போற விஷயம், நம்மால் அஃபோர்ட் பண்ணவும் முடியும், அப்படியிருக்க எதுக்காக சிம்பிளா பண்ணனும்?"  என்று விஷாலின் அம்மாவும் கேட்க,

"இதுதான் பிரச்னை. லைஃபில் ஒரு தடவைத்தானே வரப்போறதுனு ஒரு பேச்சு, அடுத்தது அஃபோர்ட்டபிலிட்டி... நம்மால்  முடியும்னு நினைக்கிறவங்க ஆடம்பரமா செய்வதால் அவர்களை பார்த்து மற்றவர்களுக்கும் அந்த ஆசை வருகிறது. ஒரு பியர் பிரஷரை நாம் கிரியேட் பண்ணிவிடுகிறோம். கல்யாணத்தில் இவ்வளவு ஆடம்பரம் தேவையே இல்லை. இதுக்கு யார் முடிவு கட்டுவது? நாங்க ஸ்டாப் பண்ணலாம்னு நினைச்சோம். ."  பட்டிமன்ற பேச்சாளர் போல் விஷால் பேசி முடித்தான். 

"நீ ஒருத்தன் இதையெல்லாம் நிறுத்தினா, எல்லாரும் நிறுத்திடுவாளா?"

"மற்றவர்களைப் பற்றி எனக்கு கவலை இல்லை, எங்களுக்கு ஆடம்பரத் திருமணம் வேண்டாம்.  தவிர எல்லா நல்ல விஷயங்களையும் யாரோ ஒருத்தர்தான் ஆரம்பித்திருக்கிறார்". 

"இப்படி நீண்ட விவாதம் கொஞ்சம் கொஞ்சமாக சூடு குறைந்து, ஆர்த்தி,விஷால் சொல்வதின் நியாயம் புரிந்து பெரியவர்கள் தங்கள் பிடியைத் தளர விட்டார்கள். " சரி, நடந்தது நடந்து விட்டது. வாங்கோ ரெண்டு பேரும் சுவாமிக்கு முதலில் நமஸ்காரம் பண்ணுங்கோ,  நான் ஒரு பாயசமாவது பண்றேன்.." என்று ஆர்த்தியின் அம்மா எழுந்திருக்க, 

"இல்ல மாமி, நீங்க எதுவும் பண்ண வேண்டாம், நாங்க கேடரிங்கில் சாப்பாடு சொல்லி விட்டோம்."

"மை காட்!.. எங்களுக்கு எதுவுமே விட்டு வைக்கலையா?"

"சாப்பிட்டு விட்டு, ரிசப்ஷன் எங்க வெச்சுக்கலாம்னு டிசைட் பண்ணலாம், ஹனிமூன் எந்த ஊருக்கு போகச் சொல்கிறீர்களோ அந்த ஊருக்கே போகிறோம்"  சிரித்துக் கொண்டே விஷால் கூற,

"ஹனிமூனா? நத்திங் டூயிங். முதலில் குல தெய்வம் கோவில், அப்புறம், திருப்பதி, குருவாயூர்னு ஷேத்ராடனம் எல்லாம் முடி, அப்புறம் யோசிக்கலாம்" என்று அவன் அப்பா அவனை சீண்ட, "பெருமாளே!" என்று அவன் அதிர்ச்சியடைய, "அதையேதான் நானும் சொல்றேன்" என்றார் அவன் தந்தை.   

பி.கு.:
என்னதான் ஆர்த்தியும், விஷாலும் பதிவுத் திருமணம் செய்து கொண்டாலும் அவர்களுடைய பெற்றோர்களின் விருப்பத்தை நிறைவேற்ற எளிமையாக ஒரு வைதீக திருமணமும் செய்து கொண்டதாக கேள்வி. 

Saturday, October 24, 2020

மாறுவது பொம்மை, மாறாதது சுண்டல்

 மாறுவது பொம்மை, மாறாதது சுண்டல் 


நவராத்திரி என்றால் முதலில் நினைவுக்கு வருவது  பொம்மைகள்தான். பொம்மை கொலு என்றே இதை சொல்வார்கள். இந்த பொம்மைகளின் பரிணாம வளர்ச்சியை பார்க்கலாமா? 


முன்பெல்லாம் கொலு என்றால் அதில் மரப்பாச்சி  பொம்மைகள்தான்  பிரதான இடம் பிடிக்கும். எங்கள் அப்பா, மரப்பாச்சியைத்தான் முதலில் வைக்க வேண்டும் என்பார்.  மரப்பாச்சி என்றால் நினைவுக்கு வருவது திருப்பதி. "திருப்பதியில் மரப்பாச்சி கடை வைத்தவனுக்கும், ஸ்ரீரெங்கத்தில் பட்டாணி கடை வைத்தவனுக்கும் நேரே வைகுண்டம், ஏனென்றால் கோவிலிலிருந்து வருபவர்கள் நேரே அங்கேதான் செல்வார்கள்"  என்று அனந்தராம தீக்ஷதர் கூறுவாராம். இப்போதும் எங்கள் வீடுகளில் படி கட்டியதும் முதலில் மரப்பாச்சியைத்தான் வைப்போம்.

அதன்பிறகு மண் பொம்மைகள் வந்தன. மண் பொம்மைகள் என்றால் நமக்கு நினைவுக்கு வருவது பண்ருட்டிதான். ஆரம்பத்தில் கடவுள் உருவங்கள்தான் பொம்மைகளாக வந்தன. செட் பொம்மைகள் என்று வரத்தொடங்கிய பொழுது இரண்டு பொம்மைகள் ஜோடியாக வரும். இடுப்பில் குடத்தோடு நிற்கும்  பெண்கள், தலையில் பூக்கூடையோடு நிற்கும் பெண்கள், நடனமாடும் பெண்கள். எங்கள் வீட்டில் இருந்த இரண்டு நடன பொம்மைகளை பத்மினி, ராகினி  பொம்மைகள் என்பார்கள். அதே போல் தியாக பூமி படம் வந்த காலத்தில் பேபி சரோஜா பொம்மை என்பது பிரபலமாக இருந்ததாம். 



பின்னர் ராமர் செட்(ராமன், சீதை, லட்சுமணன், ஹனுமான்), தசாவதார செட், ஆறுபடை வீடு செட், அஷ்ட லட்சுமி செட், கிருஷ்ணர் ராச லீலை செட்  போன்றவை வந்தன. அதற்குப் பிறகு கல்யாண  செட், என்றுதான் முதலில் வந்தது. பின்னர் அதில் முகூர்த்த செட், ஜான்வாச செட், ரிசப்ஷன் செட் என்று விதம் விதமாக வர ஆரம்பித்து விட்டன.  

புத்தர், விவேகானந்தர், மகாபெரியவர் , ஜெயேந்திரர், விஜயேந்திரர் இவர்களோடு காந்தி, நேரு, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா போன்ற அரசியல் தலைவர்கள் பொம்மைகளும் இடம் பெறத் தொடங்கின. அப்போதெல்லாம் பைஜாமா, ஜிப்பா, குல்லா அணிந்து  கையில்  தேசிய கொடியை  தாங்கிக் கொண்ட இளைஞன் பொம்மை பல வீடுகளில் இருக்கும். 

அதே போல முன்பெல்லாம் வெள்ளைக்கார பொம்மைகள் எனப்படும் பீங்கான் பொம்மைகள் நிறைய இருக்கும். அவை பெரும்பாலும் ஆங்கிலேயர்களின் உருவங்களாகத்தான் இருக்கும். கோட், சூட், தொப்பி அணிந்து ஆண்கள், நீண்ட கவுன் அணிந்த பெண்கள் பொம்மைகள் எங்கள் வீட்டில் ஒரு பெட்டி நிறைய இருந்தது. அவை எல்லாம்  வீடுகள்  மாற்றியதில் எங்கே சென்றன என்றே தெரியவில்லை. அவைகளை பெரும்பாலும் பார்க்குகளில் வைப்போம். நவராத்திரி கொலுவில்  ஆங்கிலேயர்களுக்கு என்ன வேலை என்று அப்போது தோன்றவில்லை.  இப்போதும் பீங்கான் பொம்மைகள் இருக்கின்றன. அவை பெரும்பாலும் விலங்குகள், பறவைகள், மீன்கள் போன்றவைதான். 


இப்போதெல்லாம் பாற்கடல் கடைவது, ராமாயண காட்சிகள், பாட்டி வடை சுடும் கதை போன்றவை பொம்மைகளாக வருகின்றன. அதைத்தவிர பள்ளிக்கூட செட், கிரிக்கெட் செட், கிரிவலம் செட், கிராம காட்சிகள் , போன்ற சமூக நிகழ்வுகளும் பொம்மைகளாக வருகின்றன. இந்த வருடம் கொரோன செட் என்று மாஸ்க் அணிந்த மனிதர்கள், வெறிச்சோடிய வீதிகள், ஒர்க் ஃபிரம் ஹோம், போன்றவை  பொம்மைகளாக வரும் என்று எதிர்பார்த்தேன். அடுத்த வருடம் நிச்சயமாக வந்துவிடும்.   



பொம்மைகளின் அடுத்த அவதாரம் காகிதக்கூழ் பொம்மைகள். இவைகள் அளவில் பெரிதாக இருந்தாலும் கனமில்லாமல் இருப்பதால் பராமரிப்பது எளிது. எனவே வெளிநாட்டில் வசிக்கும் இந்தியர்கள் இவ்வகை  பொம்மை களையே எடுத்துச் செல்ல விரும்புகிறார்கள். இப்போது ஃபைபர் பொம்மைகள் வந்து விட்டன.    

கிராமங்களில் வீடுகள் பெரிதாக இருந்த காலத்தில் பொம்மைகளும் பெரிதாக இரண்டடியில் வந்தன. எங்கள்  வீட்டில், எங்கள் கொள்ளு பாட்டி கால  தவழும் கிருஷ்ணர் பொம்மை நிஜமாக ஒரு எட்டு மாத குழந்தை சைசில் இருக்கும்.  அதற்கு பிறகு வந்தவை ஓரடி பொம்மைகள். அவைகளை வைப்பதற்கு ஏற்றார்போல் படிகளும் பெரிதாக இருக்கும். இப்போது அபார்ட்மெண்ட் வீடுகளுக்கு ஏற்றாற்போல் பொம்மைகளும் அளவில் சுருங்கி விட்டன. படிகளும், கனமில்லாமல், ஈசியாக  விரித்து, மடிக்க கூடியவர்களாக வந்திருக்கின்றன. எதிர் காலத்தில் படிகளும், பொம்மைகளும் இல்லாமல் விருந்தினர் வரும் பொழுது மட்டும் கொலு இருப்பது போல் தோற்றம் அளிக்கும்  வெர்ச்சுவல் கொலுவாக, வந்தாலும் வந்து விடும்.  ஆனால் சுண்டல் கொடுக்கும் பழக்கம் மட்டும் மாறாது என்று நினைக்கிறேன்.   

Thursday, October 22, 2020

மசாலா சாட் - 20

 மசாலா சாட்  - 20


யார் யாரை எப்படி வணங்க வேண்டும்? 

பெற்றோர்களை நாபிக்கு எதிரே கை கூப்பி வணங்க வேண்டும். காரணம் நம்மை தன் வயிற்றிலே சுமந்தவள் தாய் நமக்கு உணவளித்தவர் தந்தை. 

நண்பர்களையும், பெரியவர்களையும் நம் நெஞ்சில் வைத்து போற்றுகின்றோம் என்பதை உணர்த்த நெஞ்சிற்கு எதிரே கை கூப்பி வணங்க வேண்டும். 

ஆன்மீக வழி காட்டும் குருவுக்கு, அவர் நமது ஞானக் கண்ணை திறப்பதால் நெற்றிக்கு நேரே கரம் குவித்து வணங்க வேண்டும். 

எல்லாவற்றையும் கடந்த இறைவனையோ தலைக்கு மேல் கை கூப்பி வணங்க வேண்டும். 
- அபிராமி அந்தாதி உரையில் சுகி சிவம்.

ஆண்  மூலம் அரசாளும் என்கிறார்கள். இது தவறாக புரிந்து கொள்ளப்பட்ட பழமொழி. ஆனி மாதத்திலே மூலம் நட்சத்திரத்தில் பௌர்ணமி வரும். அன்று பிறப்பது சிறப்பான யோகத்தை தரும். ஆனி மூலம் அரசாளும் என்பதை,ஆண் மூலம் அரசாளும் என்று திரித்து விட்டார்கள்.  
- ஜீ தமிழில் ஜோதிட சிம்மம் கண்ணன் பட்டாச்சார்யா 
அதோடு நிறுத்தியிருந்தால் பரவாயில்லையே, பெண் மூலம் நிர்மூலம் என்று வேறு சேர்த்து விட்டார்களே, அதுதான் கொடுமை!


தனிஷ்க் விளம்பரத்திற்கு மதச்சாயம் பூசி அதை வாபஸ் பெற வைத்து விட்டார்கள். திருமணம் செய்து கொள்ளாமல் சேர்ந்து வாழ்வதை ஆதரிக்கும் தேநீர் விளம்பரத்திற்கு ஏன் எந்த எதிர்ப்பும் இல்லை? 


நவராத்திரியில் லலிதா சஹஸ்ரநாம பாராயணத்திற்கு சென்ற வீட்டில்  அழகாக இருந்ததால் புகைப்படம் எடுத்தேன். அங்கு கிடைத்த கிஃபிட் இது. என்னவென்று தெரிகிறதா? பாட்டில் வடிவில்   zip lock bag.  குளிர்சாதன பெட்டியில் ஸ்டோரிங் கன்டைனராக பயன்படுத்தலாம் என்று அமேசான் இல் பார்த்தேன்.  


கடைசியாக ஒரு செய்தி. இதை கிச்சன் டிப்ஸ் என்றும் கொள்ளலாம். அமாவாசையன்று என் மகன் தர்ப்பணம் செய்து விட்டு வைக்கும் பாத்திரதில் இருக்கும் எள், தர்ப்பை போன்றவைகளை எடுத்து விட்டு தேய்க்கப் போட்டால் என்னதான் புளி, பீதாம்பரி எல்லாம் போட்டு தேய்த்தாலும், கறை போகாது. அன்றொரு நாள் இரவு மிச்சமிருந்த சாம்பார், ரசம் இவைகளை அதில் கொட்டி வைத்து விட்டு,   மறுநாள் காலை அவைகளை தேய்க்க, கறை போச்சு, இட்ஸ் கான், பாத்திரங்கள் பளிச்! ஸோ,மாறல் ஆஃப் தி ஸ்டோரி: மீந்து போகும் குழம்பு, ரசத்தில் பித்தளை பாத்திரங்களை தேய்க்கலாம். 



அடுத்த பதிவில் சந்திக்கும்வரை வணக்கம் கூறி விடை பெறுவது யார் என்று உங்களுக்கே தெரியும்.







   

Friday, October 9, 2020

மைக் மேனியா

மைக் மேனியா 

மூன்று வாரங்களுக்கு முன்பு முகநூலின் மத்யமர் குழுவில் ஒரு விவாதத்தில்  பேசும் வாய்ப்பு கிடைத்தது. இங்கு மத்யமர் என்றால் என்ன என்று கூறி விடுகிறேன். முக நூலில் இருக்கும் எத்தனையோ குழுக்களில் மத்யமாறும் ஒன்று. சங்கர் ராஜரத்தினம் என்பவரால் தொடங்கப்பட்டு இப்போது 30000 உறுப்பினர்களோடு சக்கை போடு போட்டுக் கொண்டிருக்கிறது. வெறுமனே முகநூலில் அரட்டை அடிப்பதோடு நிறுத்திக் கொள்ளாமல் சமூக சேவைகளும் செய்து வருகிறார்கள்.  ஒவ்வொரு வாரமும் ஒரு தலைப்பு கொடுத்து எழுதச் சொல்வார்கள். சிறந்த படைப்புகளுக்கு போஸ்ட் ஆஃப் தி வீக் என்று சான்றிதழ் வழங்குவார்கள். நம் ரஞ்சனி நாராயணன் நிறைய POTW வாங்கியிருக்கிறார்.  நானும் இந்த வருடத்தில்  இதுவரை நான்கு POTW வாங்கியிருக்கிறேன். இதைத்தவிர தனித்திறமை, குழுத்திறமை, நாடகம், கவிதை என்றெல்லாம் நடத்தி  பரிசுகள் வழங்குகிறார்கள். சமீபத்தில் புதன் கிழமைகளில் மத்யமர் சபா என்று விவாதங்கள் நடத்துகிறார்கள். அதில்தான் நான் பங்கு கொண்டு பேசினேன். 

இந்த மத்யமர் சபாவில் மூன்று வாரங்களுக்கு முன்பு நம் சமுதாயத்தில் ஆணாதிக்கம் முடிந்து பெண்ணாதிக்கம் தொடங்கி விட்டது, இல்லை இன்னும் ஆணாதிக்கம்தான் தொடர்கிறது என்று பேச விருப்புகிறவர்கள் பெயர் கொடுக்கலாம் என்றார்கள். அடுத்த நாள் திரு.சங்கர் ராஜரத்தினம் அவர்கள், "என்னது பெண்ணாதிக்கம் தொடங்கி விட்டது என்று பேச யாருமே பெயர் கொடுக்கவில்லையே, அவ்வளவு பயமா?" என்று கேட்டிருந்தார். நான் உடனே," யாருமே முன்வரவில்லையென்றால் நான் பேசுகிறேன் என்று செய்தி அனுப்பினேன். உடனே, "நீங்கள் என்ன பேச நினைக்கிறீர்கள் என்பதை சுருக்கமாக ஒரு நிமிட ஆடியோவாக எடுத்து அனுப்புங்கள்" என்றார்கள். அதன்படி செய்து தேர்ந்தெடுக்கப் பட்டேன். 

அதில் இன்னும் ஆணாதிக்கம்தான் நீடிக்கிறது என்று கலிபோர்னியாவிலிருந்து பேசிய ஒரு பெண்மணி வெளுத்து வாங்கினார். அவர் வீட்டில் மகன், மருமகள்  இருவருமே ஐ.டி.யில் பணிபுரிந்தாலும், மகன் காலையில் பேப்பர் படித்துக் கொண்டிருக்க, மருமகள் அடுப்பங்கரையில் பிசியாக இருப்பாளாம். மாலை அலுவலகத்திலிருந்து வந்ததும் மகன் செல்போனுடனும், ரிமோட்டுடனும் சோபாவில் செட்டிலாகி விட, மருமகள் அவன் தேவைகளை பார்த்து பார்த்து நிறைவேற்றுவாளாம். கோபம் அதிகமாகும் பொழுது மகனின் கை நீளுமாம். இப்படி அதிரடியாக பேசினார். பின்னூட்டங்களில் கூட அவருக்கு நிறைய பாராட்டுகள் கிடைத்தன. 

அதே ஆண்டி மறு நாள், " ஐயையோ! என் மகன் தங்கம். வீட்டு வேலைகளை மகன்,மருமகள்  இருவரும் பகிர்ந்துதான் செய்வார்கள்.  நான் என் வாதத்திற்கு வலு சேர்க்க உதாரணம் கொடுப்பதற்காக என் மகனை பயன்படுத்திக் கொண்டு விட்டேன். என் மகனும்,மருமகளும் இதை ஈசியாக எடுத்துக் கொண்டாலும் மற்ற உறவினர்களுக்கு என் மீது ரொம்ப கோபம். எங்கள் சம்பந்தியும் மத்யமரில் இருக்கிறார் அவர் என்ன நினைத்துக் கொள்வார்? தயவு செய்து நான் செய்த தவறை மற்ற பேச்சாளர்கள் இனிமேல் செய்யக் கூடாது என்று விரும்புகிறேன் என்று அந்தர் பல்டி அடித்து விட்டார். ஆண்டியின் ஆண்ட்டி க்ளைமாக்ஸ் எப்படி?     

சிலருக்கு மைக்கை கையில் எடுத்து விட்டால் கீழே வைக்கத் தெரியாது, சிலருக்கு என்ன பேச வேண்டும்? எப்படி பேச வேண்டும்? என்பதே தெரியாது. எல்லாம் மைக் மேனியா!


Sunday, September 27, 2020

இயல்பு நிலை திரும்புகிறதா?

இயல்பு நிலை திரும்புகிறதா? 

கடந்த ஒரு மாதத்தில் மூன்று  சனிக்கிழமைகளில் வெளியே செல்ல நேர்ந்தது. முதல் முறை சென்ற பொழுது சாலையில் அத்தனை வாகனங்கள் இல்லை. சென்ற வாரம் ஓரளவு நார்மல் போக்குவரத்து காணப்பட்டது. நேற்று கொஞ்சம் பர்சேஸ் செய்ய  வேண்டியிருந்ததால் ஜெயநகர் சென்றோம். வழக்கமான நெரிசல் தொடங்கி விட்டது என்றே தோன்றியது. உணவகங்கள் திறந்து விட்டாலும் கும்பல் குறைவாகவே இருக்கிறது.

ஆகஸ்ட் 15 அன்று மாலை எம்.ஜி.ரோட்


மேலே இருக்கும் படத்தில் இருப்பது செலஃபோன் கடை ஒன்றில் சமூக இடைவெளியை பின்பற்றுவதற்காக வரையப்பட்டிருந்த கட்டங்கள். ஆனால் அதை மதிக்காமல் கும்பலாக நின்றபடி வியாபாரம் செய்து கொண்டிருந்தனர்.  

கொஞ்சம் ஜவுளி எடுக்க வேண்டியிருந்தது எனவே ஜெயநகரில் இருந்த வரமஹாலக்ஷ்மி கடைக்குச் சென்றோம். உள்ளே நுழையும் முன் நம் காலணிகளை ஒரு பையில் சேகரித்து டோக்கன் தந்தார்கள். எல்லா கடைகளையும் போல் ஹாண்ட் சானிடைசரை கையில் பூசிக்கொண்டு உள்ளே நுழைந்தால் நடுவில் பிரதானமாக பெரிய மஹாலக்ஷ்மி சிலை. தரையில் பாய்கள் விரிக்கப்பட்டு அதன் மீது வெள்ளைத் துணியை விரித்து புடவைகளை காட்டுகிறார்கள். நாம் தரையில் உட்கார்ந்து பார்க்கலாம், கீழே அமர முடியாதவர்கள் நாற்காலியிலோ அல்லது குட்டை ஸ்டூலிலோ அமர்ந்து கொள்ளலாம். விற்பனை சிப்பந்திகள் பொறுமையாக, சலிக்காமல் புடவைகளை காண்பித்தார்கள். ஆனாலும் சென்னையில் ஜவுளிக் கடலில் ஷாப்பிங் செய்து விட்டு இங்கெல்லாம் ஷாப்பிங் செய்வது குற்றாலீஸ்வரனை நம்முடைய வளாகத்தில் இருக்கும் சிறு நீச்சல் குளத்தில் நீந்தச் சொன்னது போல் இருக்கிறது. பில்லை கட்டியதும் துணிகளை பையில் போட்டு அங்கிருக்கும் ஐயர் ஒருவர் அவைகளை மஹாலக்ஷ்மி உருவச்சிலை முன் வைத்து, தீபாராதனை காட்டி நம்மிடம் தந்தது வித்தியாசமாக இருந்தது. 

கும்பலில்லாத சென்ட்ரல் மாலில் அனாவசிய எக்ஸ்பிரஸ் பில்லிங் கவுண்டர் 

வீட்டிற்கு வந்ததும் முறையாக ஆவி பிடித்தோம். அதென்ன முறையாக என்கிறீர்களா? ஆவி பிடிக்கும் பொழுது முதல் ஐந்து முறைகள் மூக்கினால் ஆவியை இழுத்து, வாயினால் வெளி விட வேண்டும். பிறகு ஐந்து முறைகள் வாயினால் இழுத்து மூக்கினால் சுவாசத்தை விட வேண்டும். பின்னர் உப்பு நீரில் வாயைக் கொப்பளித்தோம். 


செப்டெம்பர் 27 முதல் அக்டோபர் 03 வரை ஸ்டீமிங் வாரமாம். எல்லோரும் தினசரி   ஆவி பிடித்து அந்த பெயர் சொல்லாத கிருமி பரவாமல் தடுக்க வேண்டுமாம். செய்யலாம்.