கணம்தோறும் பிறக்கிறேன் 

Tuesday, November 5, 2019

கோலங்கள்

கோலங்கள்



வீட்டு வாசலிலும், பூஜை அறையிலும் தினசரி கோலம் போடுவது நம் மரபு. மண் அடுப்புகளில் சமைத்துத்துக் கொண்டிருந்த பொழுது, தினசரி அடுப்பை பசு மாட்டின் சாணி போட்டு மெழுகி விட்டு அதில் கோலம் போட்டு வைப்பார்கள்,அதை பார்ப்பதற்கே லக்ஷ்மிகரமாக இருக்கும்.  எங்கள் வீட்டில் மண் அடுப்பு போய், காஸ் அடுப்பு வந்த பிறகும், அந்த பழக்கம் தொடர்ந்து கொண்டிருந்தது. இப்பொழுது பொங்கலுக்கு முதல் நாள் மட்டுமே அடுப்பில் கோலம் போடுகிறோம்.

அதே போல தீபாவளிக்கு முதல் நாள் வெந்நீர் தவலையை தேய்த்து, அதில் சந்திரன், சூரியன் வரையும் பழக்கமும் இருந்தது. வெந்நீர் தவலையை எலக்ட்ரிக் ஹீட்டர்கள் பிடித்துக் கொண்டுவிட்ட இந்த காலத்தில் சந்திரனாவது, சூரியனாவது?

கோலங்கள் வெறும் அழகுக்காக மட்டும் போடப்படுவதில்லை. அதில் ஆன்மீகமும் மறைந்திருக்கிறது. ஒரு வார்த்தையை ஒரு குறிப்பிட்ட மீட்டரில் உச்சரிக்கும் பொழுது, அது சக்தி வாய்ந்த மந்திரமாக மாறுவது போல, சாதாரண கோடுகளும், வளைவுகளும் திட்டமாக வரையப்படும் பொழுது சக்தி பெற்றவைகளாக மாறுகின்றன.



நாம் பிள்ளையார் கோலம் என்று கூறும் மேலும் கீழுமாக இரண்டு முக்கோணங்கள் அமைந்த கோலம் முருகனை குறிப்பது. இதில் மேலிருந்து கீழே இறங்கும் முக்கோணம் மண்ணுலக இச்சைகளையும், கீழிருந்து மேலே செல்லும் முக்கோணம் விண்ணுலகு ஏகும் விருப்பத்தையும் குறிக்கின்றது. மனித வாழ்க்கை இந்த இரண்டும் இணைந்தது என்பதே இதன் உட்பொருள் என்று சான்றோர்கள் கூறுகிறார்கள்.

அதே போல் ஹ்ருதய கமலம் கோலமும், ஐஸ்வர்ய கோலமும் அம்பிகையின் வடிவமாகவே கருதப்படுகின்றன. அதனால் அவைகளை வாசலில் போடக்கூடாது என்பார்கள்.



மஹாலக்ஷ்மியின் கருணைக்கு பாத்திரமாவது எப்படி என்பதை விளக்க வரும் ஒரு கதை இப்படி தொடங்கும்; தன்னுடைய அருளை யாருக்காவது வழங்க வேண்டும் என்று விரும்பிய லட்சுமி தேவி ஒரு முறை பூமிக்கு இறங்கி ஒரு கிராமத்திற்குள் நுழைகிறாள். அங்கு ஒரு வீட்டில் காலை வேளையில் வாசல் திண்ணையில் தலையை விரித்து போட்டுக் கொண்டு பேன் பார்த்துக் கொண்டிருந்தார்களாம் அந்த காட்சியில் அருவருத்து அந்த வீட்டிற்குள் நுழையாமல் தாண்டிச் சென்று விடுகிறாள். அடுத்த வீட்டில் ஒருவருக்கொருவர் சண்டையிட்டுக் கொண்டிருந்தனராம். அதுவும் அமங்கலமான சொற்களால் ஒருவரை ஒருவர் திட்டிக்கொண்டும், சபித்துக் கொண்டும் இருந்ததை கேட்ட திருமகள் அந்த இடத்தை வெகு விரைவாக கடந்து சென்று விடுகிறாள். இன்னொரு வீட்டிலோ சூரியன் உதித்த பிறகும் எழுந்திருந்து வாசல் தெளித்து கோலம் கூட போடாமல் தூங்கிக் கொண்டிருந்தனராம். அதற்கடுத்த வீட்டில் புழுத்த சாணத்தால் வாசல் தெளிப்பதை பார்த்து அங்கிருந்தும் நகர்ந்து விடுகிறாள். கடைசியாக ஒரு வீட்டில் ஏழ்மை நிலையில் இருந்தாலும் அதிகாலையில் எழுந்து, வாசல் தெளித்து அழகாக கோலமிட்டு, வீட்டிற்குள் பூஜை அறையிலும் கோலமிட்டு, விளக்கேற்றி வைக்கப்பட்டிருந்ததாம். அதனால் கவரப்பட்ட ஸ்ரீதேவி,"இந்த இடம்தான் நான் வாசம் செய்ய தோதான இடம்" என்று அந்த வீட்டிற்குள் பிரவேசித்து அங்கு வசிக்க தொடங்கியதும் அந்த குடும்பத்தினரின் வறுமை நீங்கி செல்வ செழிப்பு ஏற்பட்டது என்று அந்த கதை முடியும்.  இதிலிருந்து முக்கிய நிகழ்வுகளுக்கு மட்டுமல்லாமல் தினசரி கோலமிடுவதும் நமக்கு எத்தனை முக்கியத்துவம் வாய்ந்தது என்று தெரிந்து கொள்கிறோம்.

துளசி வழிபாட்டில் சொல்லப்படும் ஸ்லோகத்தில்,
'அன்புடனே நல்ல அருந்துளசி கொண்டு வந்து
முற்றத்தில் தான் வளர்த்து, முத்துப் போல் கோலமிட்டு..' என்று வரும். நம்முடைய வழிபாட்டில் கோலதிற்கு முக்கிய பங்கு உண்டு. கார்த்திகை மாதம் கோவில்களை சுத்தம் செய்து கோலமிடுவது ஒரு மிகச்சிறந்த புண்ணிய காரியமாகவே கருதப்படுகிறது.

பகவதி சேவையின்பொழுது போடப்படும் கோலம்(பத்மம்) 
கேரளீயர்களுக்கு பகவதி சேவை என்னும் அம்பிகை வழிபாடு
முக்கியமானது. அந்த பூஜையில் முக்கியமானது பத்மம் எனப்படும் கோலம் வரைவது. அதை பூஜாரிதான் வரைவார். கலர் பொடிகள் கொண்டு மிக அழகாக காட்சி தரும் அந்த கோலத்தை வரையவே இரண்டு மணிநேரங்கள் பிடிக்கும். கோலத்தின் நடுவில் பெரிய குத்து விளக்கை ஏற்றி வைத்து அதில் அம்பிகையை ஆவாஹனம் செய்து பூஜிப்பார்கள்.

மஸ்கட்டில் இருக்கும் கிருஷ்ணர் கோவிலில் விசேஷ தினங்களில் கலர்
பொடி கொண்டு போடப்படும் ரங்கோலி தவிர, பழங்கள், காய்கறிகள், உலர் பழங்கள், நவதானியங்கள் என்று ஒவ்வொரு நாளும் விதம் விதமாக பெரிய பெரிய கோலங்களை போடுவார்கள். அதை விரைவாகவும் போட்டு விடுவார்கள் என்பது சிறப்பு. 

சில பண்டிகைகளுக்கென்று தனி கோலங்களும் இருக்கின்றன. சுமங்கலி பிரார்த்தனை, சமாராதனை போன்றவைகளுக்கு ஒவ்வொரு குடும்பத்திலும் ஒரு குறிப்பிட்ட கோலம்தான் போட வேண்டும் என்ற வழக்கம் கூட இருக்கும்.  மதுரையைச் சேர்ந்த பிராமணர்கள்  திருமணங்களில் மணமகன், மணமகள் அமர வேண்டிய இடத்தில்  போட வேண்டிய மணை கோலம் போடும்பொழுது தனித்தனியாக இரண்டு கோலங்கள் போடாமல், இரண்டும் ஒன்றையொன்று ஒட்டிக்கொண்டிருப்பதை போல போடுவார்கள்.

அப்பொழுதெல்லாம் ஸ்ரீரங்கத்தில் மார்கழி மாதம் என்றால் அதிகாலை மூன்றரை மணிக்கு எழுந்து போட்டி போட்டுக் கொண்டு தெருவை அடைத்து பெரிய பெரிய கோலங்களை போடுவார்கள். எங்கள் அம்மா மிக அழகாக கோலம் போடுவார். நான் சிறுமியாக இருந்த பொழுது எங்கள் வீட்டிற்கு எதிர் வீட்டில் இருந்த மாமி, "நீதான் அழகாக கோலம் போடுகிறாய். இரண்டு வீட்டிற்கும் பொதுவாக நீயே கோலம் போட்டு விடு" என்று என் அம்மவிற்கு இடம் ஒழித்து கொடுத்து விடுவார்.  

குனிந்து கோலம் போடுவது நல்ல உடற்பயிற்சி மட்டுமல்ல, மூளைக்கும் நல்ல பயிற்சி. கோடுகளை எப்படி வளைப்பது, எங்கே இணைப்பது என்பதையெல்லாம் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டாமா? இதைப் போன்ற செயல்களை செய்து கொண்டிருந்ததால்தான் முன்பு டிமென்ஷியா போன்றவை அதிகம் பேர்களை தாக்கவில்லையோ என்னவோ.

இப்போதெல்லாம் திருமணம் போன்ற விசேஷங்களில் கேட்டரிங்காரர்களே கோலமும் போட்டு விடுகிறார்கள். சமீபத்தில் நான் கலந்து கொண்ட ஒரு திருமணத்தில், "ஒரு கோலம் போட வேண்டும்" என்று சாஸ்திரிகள் கூறியதும்  மேடைக்கு விரைந்தது 50+ வயதுக்காரர்கள்தான். இளைய தலைமுறையினர் யாரும் முன்வரவில்லை என்றாலும் கோலம் போடும் கலை அறவே ஒழிந்து போய் விடவில்லை என்பது ஒரு ஆறுதல். அது பழையபடி செழிக்க வேண்டும் என்பது ஆசை.  அத்தனைக்கும் ஆசைப்படுகிறோமோ இல்லையோ, இத்தனைக்கு ஆசைப் படலாமே.






கோலங்களுக்கு கூகுளுக்கு நன்றி.



Wednesday, October 30, 2019

மாலைப் பொழுதினிலே

மாலைப்  பொழுதினிலே 

ராமகிருஷ்ண பரமஹம்சருக்கு முதல் முதலில் தெய்வீக அனுபவம் ஏற்பட்டது ஒரு மாலை நேரத்தில்தான். அஸ்தமன நேரத்தில் வயல்காட்டில் நடந்து வந்து கொண்டிருந்த அவர் கண்ணில் கூட்டமாக கூடு திரும்பி கொண்டிருந்த பறவை கூட்டம் ஒன்று பட்டது. துல்லியமான வான பின்னணியில் அந்த பறவை கூட்டத்தை கண்டவர் பரவச நிலைக்கு ஆட்பட்டாராம். மாலை நேர வானம் மோனமானதுதான்.

எங்கள் வீட்டிற்கு கிழக்கு பார்த்த வாசல். ஆகவே வரவேற்பு கூடத்தை ஓட்டிய பால்கனியிலிருந்து சில சமயங்களில் வெகு அழகான மாலை நேர வானத்தை பார்க்க முடியும். அவற்றில் சில உங்கள் பார்வைக்கும்.





Wednesday, October 23, 2019

மசாலா சாட்

மசாலா சாட் 
சில விமர்சனங்கள்


அருணா சாய்ராம் கச்சேரி:



Front Enders Foundation என்னும் சேவை நிறுவனம் அதோடு சம்பந்தப்பட்ட'மைத்ரி' என்னும் நிறுவனத்திற்காக அதுல்யா மற்றும் ஹெல்த் ஃபார் 60+ இவற்றோடு சேர்ந்து ஏற்பாடு செய்திருந்த அருணா சாய்ராமின்  இசைக்கச்சேரிக்கு பாஸ் கிடைத்தது. 

18.10.19  வெள்ளியன்று மாலை 6:30க்கு கச்சேரி துவங்கும் என்று போட்டிருந்தாலும், வரவேற்புரை, ப்ரண்ட் எண்டெர்ஸ், மைத்ரி, அதுல்யா, ஹெல்த் ஃபார் 60+ போன்றவைகளை பற்றிய சுருக்கமான அறிமுகம், ஸ்பான்சர்களுக்கு பாராட்டு, கச்சேரி செய்யப் போகும் கலைஞர்களை கௌரவித்தல் போன்றவைகல் முடிந்து கச்சேரி தொடங்கவே 7:15 ஆகி விட்டது. 

'வாழ்க்கைப் பயணம்' என்னும் பொருளுக்கு ஏற்ப ஒரு மனிதனின் வாழ்வில் நடக்கும் முக்கிய நிகழ்வுகளுக்கு பொருத்தமான பாடல்களை தேர்ந்தெடுத்திருந்தார். 'ஒருத்தி மகனாய் பிறந்து..' என்னும் திருப்பாவை பாசுரத்தோடு கச்சேரியை தொடங்கியவர் அடுத்தடுத்து தியாகய்யர், ஊத்துக்காடு வேங்கட சுப்புரமணியர், முத்துசாமி தீக்ஷதர், அஷ்டபதி, பாபநாசம் சிவன், அபங் என்று அழகாக பாடல்களை தொகுத்திருந்தார். கச்சேரியை எதிர்பார்த்து வந்தவர்கள் ஏமாந்து விடக்கூடாதே என்பதற்காக கல்யாண ராமா பாடலில் ஸ்வரம் பாடினார். கபாலி நின் கருணை நிலவு பொழில் பாடலில் தனி ஆவர்த்தனம் என்று முழு நீள கச்சேரியாக வடிவமைத்திருந்தார். பக்கம் வாத்தியம் வாசித்த எல்லோருமே திறமையாக ஒத்துழைப்பு கொடுத்தார்கள் என்றாலும் மிருதங்கம் வாசித்தவரும், புல்லாங்குழல் வாசித்தவரும் அபாரம். மிருதங்கம் சுநாதமாக ஒலித்தது. எங்கே வலுவாக இருக்க வேண்டும், எங்கே மென்மையாக இருக்க வேண்டும் என்று உணர்ந்து வாசித்தார். புல்லாங்குழல் வாசித்தவருக்கு ஆடியன்ஸ் அப்லாஸ் கொடுத்த பொழுது,"ஹி டிசெர்வர்ஸ் திஸ்" என்று அருணா கூறியதில் அவருடைய பெருந்தன்மை தெரிந்தது. ஆனாலும், தனியாக வீடு திரும்ப வேண்டுமே என்று கச்சேரி முடியும் முன்பே கிளம்பி விட்டேன். ஒரு அற்புதமான மாலை!
(அட! நான் கூட ஒரு இசை விமர்சனம் எழுதி விட்டேன்.😃😄😄)

அசுரன்(திரைப்படம்):



நான் சென்னை வரும்பொழுதெல்லாம் என் தோழி ஏதாவது ஒரு சினிமாவிற்கு டிக்கெட் புக் பண்ணிவிடுவார். இந்த முறை அவர் அழைத்துச் சென்ற படம் வெற்றி மாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்திருந்த 'அசுரன்' திரைப்படம். 

பூமணி எழுதிய 'வெக்கை' என்னும் நாவல்தான் படமாக்கப்பட்டிருக்கிறது என்கிறார்கள். நாவலை படிக்காததால் படமாக்கப்பட்டதில் எதை பெற்றிருக்கிறது, எதை இழந்திருக்கிறது என்று கூற முடியவில்லை. 

ஊரின் பெரிய நிலச் சுவாந்தரான ஆடுகளம் நரேன் அவர் நிலத்திற்கருகில் ஒரு சிறு பூமியை வைத்திருக்கும் தனுஷின் நிலத்தையும் சிமெண்ட் ஃபாக்டரி கட்டுவதற்காக பறித்துக் கொள்ள பார்க்கிறார். இதற்கான முயற்சியில் நடக்கும் ஜாதி மோதல்கள், பழி வாங்கும் நடவடிக்கைகள் இவையே கதையாக விரிகிறது. தன்  நிலத்தை காப்பற்றிக் கொள்ள தனுஷ் குடும்பம் படும் பாட்டை விட ஜாதி சண்டையும், ஆண்டான், அடிமை மனப்பாங்குமே முன்னிலை வகிக்கின்றன.

தனுஷும், அவருடைய மனைவியாக தமிழுக்கு வருகை தந்திருக்கும் மஞ்சு வாரியரும் நன்றாகத்தான் நடித்திருக்கிறார்கள். இருந்தாலும் பசுபதிக்கும் தனுஷின் இள வயது காதலியாக வரும் அம்மு அபிராமிக்கும் பொருந்துவது போல் இவர்கள் இருவருக்கும் பொருந்தவில்லை. பாத்திரத்திற்குள் புகுந்து கொள்ளாமல் கொஞ்சம் அந்நியப்பட்டு நிற்பதாகவே தோன்றுகிறது. சிவாஜி கூட இளம் வயதிலேயே வயதான பாத்திரங்களில் நடித்திருக்கிறார். அவருக்கு அதற்கேற்ற உடலமைப்பு இருக்கும். தனுஷின் உடல் அமைப்பை விட்டு விடலாம், ஒல்லியாக இருக்கும் கிராமத்து மனிதர்கள் இல்லையா? அவர் முகத்திலேயே மெசூரிட்டி இல்லையோ என்று தோன்றுகிறது. அதைப் போலவே மஞ்சு வாரியரின் உடல் மொழிகளும் நகரம், நகரம் என்கின்றன. 

பசுபதி, அம்மு அபிராமி, தனுஷின் மகன்களாக வரும் தீஜே அருணாச்சலம், கெவின் கருணாஸ்(கருணாஸின் மகனா?) எல்லோருமே பாத்திரத்திற்குள் கச்சிதமாக பொருந்தி, சிறப்பாக நடித்திருக்கிறார்கள். அதுவும் பசுபதி, தனுஷிற்கு இடையே நிலவும் அன்னியோன்னியம் சிறப்பாக சித்தரிக்கப்பட்டுள்ளது. பிரகாஷ் ராஜுக்கும், இன்ஸ்பெக்டராக வரும் பாலாஜி சக்தி வேலுக்கும் அதிக வேலை இல்லை. 

முன் பாதியில் பாசம், நேசம், உணர்ச்சிபெருக்கு போன்றவை பின் பாதியில் காணாமல் போய் வெறும் வஞ்சம், ஜாதி மோதல் இவைகளே பிரதான இடம் பிடிக்கின்றன. இரண்டாம் பாதியில் பீறிடும் ரத்தம் நம் மீது தெளித்து விடுமோ என்று தோன்றுகிறது. 
மகனை போலீஸ் பிடியிலிருந்து விடுவிக்க தனுஷ் ஊர் மக்கள் ஒவ்வொருவர் காலிலும் விழும் பொழுது அந்த வலியை நாம் உணர வேண்டாமா? 

கனமான விஷயம், வியாபார நிர்பந்தங்களினால் ஏற்படுத்த வேண்டிய பாதிப்பை ஏற்படுத்தவில்லை.  

சாரம் உதைத்த சர மழை:

இந்த வருடம் இந்தியா முழுவதுமே நல்ல மழை. இப்போது தமிழகத்திலும் பருவ மழை தொடங்கி வெளுத்து வாங்குகிறது. மே, ஜுனில் மழை பெய்ய வேண்டும் என்பதற்காக வருண ஜெபமெல்லாம் செய்தார்கள். இந்த சுலோகம் சொல்லுங்கள், இந்த மந்திரத்தை ஜபியுங்கள் என்று வாட்ஸாப்பில் தினம் ஒரு மந்திரம் வந்து கொண்டிருந்தது.  இப்போது மழை பொழிகிறதே அந்த நீரை சேமித்து வைத்துக் கொள்ள என்ன செய்கிறோம்? எல்லாமே அரசாங்கம்தான் செய்ய வேண்டுமா? பெரிய பெரிய குடியிருப்புகளும், தனி வீடுகளும் மழை நீர் சேகரிப்பை செய்கின்றனவா? 

கோடையில் கடுமையான தண்ணீர் பஞ்சம் நிலவிய பொழுது நான் சிலரிடம் தண்ணீர் கஷ்டத்தை எப்படி சமாளிக்கிறீர்கள்? என்று கேட்ட பொழுது பெரும்பாலானோர், "சொசைட்டியில் லாரி தண்ணீர் வாங்கி ஊற்றுகிறார்கள். எங்கள் வீட்டில் தண்ணீர் வருகிறது". என்றார்கள். இப்படிப்பட்டவர்கள் என்ன நடவடிக்கை எடுப்பார்கள்? இந்த விஷயத்தில் கிராமத்து இளைஞர்களுக்கு இருக்கும் உத்வேகம் நகரத்துவாசிகளுக்கு இல்லை. சனியன்று எங்கள் பிளாகில் வெளியாகும் பாசிட்டிவ் செய்திகளை கவனித்தாலே இது புரியும். கிராமத்து இளைஞர்கள்தான் ஆறுகளையும், ஏரிகளையும் தூர் வாருகிறார்கள், மழை நீரை சேமிக்கிறார்கள். நகரத்திற்குத்தான் தண்ணீர் லாரிகள் இருக்கின்றதே. 

Tuesday, October 15, 2019

மாமனிதர் போற்றுதும்! மாமனிதர் போற்றுதும்

மாமனிதர் போற்றுதும்! மாமனிதர் போற்றுதும் 




அப்துல் கலாமின் பிறந்த ஊரான ராமேஸ்வரத்தில் அவருக்கு ஒரு நினைவிடம் அமைக்கப்பட்டிருக்கிறது. பிரதமர் நரேந்திர மோடியால் துவக்கி வைக்கப்பட்ட இந்த நினைவிடத்தை DRDO மிகச்சிறப்பாக பராமரிக்கிறார்கள்.




உள்ளே நுழைந்ததும் மைய ஹாலில் அமைக்கப்பட்டிருக்கும் அலுவலகம் போன்ற அமைப்பில் அவர் ஒரு மேஜைக்குப் பின்னால் அவர் அமர்ந்திருப்பது போன்ற மெழுகு பொம்மை வெகு தத்ரூபமாக இருக்கிறது.  இதைத்தவிர உலகத்தலைவர்களோடு அவர் அவர் இருப்பது போன்ற மெழுகு பொம்மைகளும் உள்ளன. அவர் பயன் படுத்திய பேனா, வீணை, மடிக்கணினி, அவருடைய காலணி, எல்லாவற்றையும் காட்சிப்படுத்தியிருக்கிறார்கள். கடைசியாக அவர் கொண்டு சென்ற ஒரு சிறிய பிரீஃப் கேசில் வைத்திருந்த அவருடைய உடைகள் இரண்டே இரண்டு,மற்றும் ஒரு ஹவாய் செப்பல் இவற்றை பார்க்கும் பொழுது எத்தனை பெரிய மனிதர் எவ்வளவு எளிமையாக வாழ்ந்திருக்கிறார்! என்றுதான் தோன்றுகிறது.  கட்டிடத்திற்கு வெளியே அக்னி ஏவுகணையின் மாதிரி ஒன்றும் இருக்கிறது.

நிறைய சுற்றுலா பயணிகள் வருகிறார்கள். ராமேஸ்வரத்தில் பார்க்க வேண்டிய இடங்களில் இதுவும் ஒன்றாகி விட்டது. கண்டிப்பாக பார்க்க வேண்டிய இடம்தான்.
 



பண்டிகைகளை ஏன் கொண்டாட வேண்டும்?

Sunday, October 6, 2019

பெட்டர் ஹாஃப்

பெட்டர் ஹாஃப் 



மனைவியை பெட்டர் ஹாஃப் என்று சொல்வது பழக்கம். இது யாருக்கு ரொம்ப பொருத்தம் தெரியுமா? பெருமாளுக்கும் தாயாருக்கும்தான். ஒன்று என்னும் எண்ணை இரண்டு பகுதிகளாக  பிரித்தால் ஒரு பாதி .5, மறு பாதி .5 என்று பிரியும். இரண்டும் சமமாக இல்லாமல் ஒரு பகுதி .48 என்றும் மற்றொரு பாதி .52  என்று இருந்தால் இரண்டையும் .5 என்றுதான் எடுத்துக் கொள்வோம். ஆனாலும்  .48, .52 என்னும் இரு பாதிகளில் இரண்டாவது பெட்டர் இல்லையா? அதைப்போல மகா விஷ்ணுவையும், லக்ஷ்மி தேவியையும் எடுத்துக் கொண்டால் பெருமாளுக்கு செருக்கு, பரத்துவம் என்னும் குணங்கள் உண்டு. தாயாருக்கோ தண்டிக்கவே தெரியாது. கருணையே வடிவானவள். எனவே பெருமாள் .48 பாதியாகவும், தாயார் .52 என்னும் பெட்டர் ஹாஃப் ஆகவும் இருக்கின்றனர். 

- துஷ்யந்த் ஸ்ரீதரின் உபன்யாசத்தில் கேட்டது.



விகடர் என்று சொன்னாலே எல்லோருக்கும் வாரப்பத்திரிகை ஞாபகம்தான் வரும். ஹாஸ்யத்திற்கு, பரிகாசம்-கேலி, சிரிக்க சிரிக்க பண்ணுவதற்கு 'விகடம்' என்று பெயர் சொல்லுகிறோம். அந்த ஹாஸ்யத்திலே புத்தி சாதுர்யமும் இருக்கும். 'விகடகவி' என்று வேடிக்கை வேடிக்கையாக வார்த்தை விளையாட்டு பண்ணுபவரை சொல்கிறது. அந்த பேரிலேயே வார்த்தை விளையாட்டு இருக்கிறது. பின்னாலிருந்து திருப்பி படித்தாலும் விகடகவி என்றே வரும். சாமர்த்தியமாக பேசி ஏமாற்று பண்ணுவது அகடவிகடம் என்பார்கள். ஏமாற்று என்றாலும் அதிலிருந்த சாமர்த்தியத்தில் சிரிக்கும்படியும் இருக்கும். 

சம்ஸ்க்ருத டிக்ஷ்னரியில் 'விகட' என்பதற்கு அர்த்தம் பார்த்தால் ஹாஸ்யம்,தமாஷ் என்று இருக்காது. கோரம், பயங்கரம் என்றுதான் போட்டிருக்கும். ஆனால் நடைமுறையில் ஹாஸ்யம் பண்ணுவது, சிரிக்க வைப்பது, சிரிக்கும்படியாக ஏமாற்று சாமர்த்தியம் பண்ணுவது, இதெல்லாம்தான் விகடம். விதூஷகன்-காமிக் பாத்திரமென்று இந்நாளில் சொல்கிறார்கள் - அவன்தான் விகடன் என்று வைத்துக் கொண்டிருக்கிறோம். டிக்ஷ்னரி அர்த்தப்படி 'ப்ரதிநாயகன்' அதாவது வில்லன் என்று இருக்கிற பாத்திரம்தான் விகடன் - கோர ரூபத்தோடும்,குரூரமான காரியத்தோடும் இருப்பவன். 

-தெய்வத்தின் குரல் ஐந்தாம் பாகத்தில் காஞ்சி காமகோடி பீடாதிபதி சந்திரசேகர சரஸ்வதி ஸ்வாமிகள் 

அம்பிகையின் மூன்று வடிவங்களான மஹாகாளி, மஹா சரஸ்வதி, மஹா லட்சுமி குறித்து பாண்டிச்சேரி அன்னை கூறியுள்ளது. 


இந்த மூன்று வடிவங்களில் மனிதர்களுக்கு மிக நெருங்கி இருப்பவள் மஹா சரஸ்வதி. தன்னை மனிதன் அழைக்க மாட்டானா? என்று காத்திருப்பவள். ஒரு முறை அழைத்தாள்  போதும் ஓடி வந்து அருள் புரிவாள். எத்தனை தவறு செய்தாலும் மீண்டும் மீண்டும் அவனுக்கு அருள் புரிந்து அவனை கை தூக்கி விடத்  துடிப்பவள்.

மஹாலக்ஷ்மியின் அருளுக்கு பாத்திரமாவது கடினம். அவளை தக்க வைத்துக் கொள்வதும் கடினம். நழுவி ஓடி விட துடித்துக் கொண்டிருப்பாள். 

கருணை மிகுந்தவள் மஹா காளி, ஆனால் சிறு ஒழுங்கீனத்தையும் சகித்துக் கொள்ள மாட்டாள், தண்டித்து விடுவாள். 

இதை நாம் இப்படி புரிந்து கொள்ளலாம். எந்த தேர்வையும் எடுத்துக் கொள்ளுங்கள் 100 மதிப்பெண்களுக்கு கேள்விகள் இருந்தாலும், 100 மார்க் வாங்கினால்தான் தேர்ச்சி என்பது கிடையாது. குறைந்த பட்சம் 35 அல்லது நாற்பது வாங்கினால் போதும் பாஸாகி விடலாம். அது கூட வாங்க முடியாமல் தோல்வி அடைந்தாலும் மீண்டும் மீண்டும் தேர்வு எழுதலாம். ஆனால் அந்த தேர்வை நாம்தான் எழுத வேண்டும். நமக்காக மற்றவர்களை எழுதச் சொல்லக் கூடாது.  அப்படி செய்தால் மஹா சரஸ்வதி, மஹா காளியாகி விடுவாள்.  

சரஸ்வதி பூஜை அன்று கருணை வடிவான அன்னைக்கு நம் வணக்கங்கள்.


மண்கண்ட வெண்குடைக் கீழாக மேற்பட்ட மன்னருமென் 
பண்கண்டளவில் பணியச் செய்வாய் படைப்போன் முதலாம் 
விண்கண்ட தெய்வம்பல் கோடியுண்டேனும் விளம்பிலுன்போற் 
கண்கண்ட தெய்வமுளதோ  சகல கலாவல்லியே 



Friday, October 4, 2019

Rangoli - Jamakalam


கோலம் போடுவது, ரங்கோலி வரைவது போன்றவைகளில் திறமையுள்ள என் சகோதரி ரங்கோலியில் வரைந்த ஜமுக்காளம் உங்கள் பார்வைக்கு. 

Monday, September 30, 2019

ஆனை ஆனை, அழகர் ஆனை!

ஆனை ஆனை, அழகர் ஆனை!


சில நாட்களுக்கு முன்பு சன் டி.வி.யின் 'வணக்கம் தமிழா' நிகழ்ச்சியில் வனத்துறை அதிகாரியாக  அதிலும் யானைகள் பாதுகாப்பு பிரிவில் பணியாற்றி ஓய்வு பெற்ற திரு.சிவ கணேசன் கலந்து கொண்டார். அவர் யானைகளைப் பற்றி தெரிவித்த விஷயங்களை இங்கே உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன்.

மனிதர்களிடம் இருக்கும் சில பழக்கங்கள் யானைகளிடமும்  உண்டாம். குட்டியை ஈன்ற தாய் யானை அதை பராமரிக்காதாம். அதன் அத்தைகளும் மூத்த சகோதர, சகோதரிகளும்தான் பராமரிக்குமாம். அதாவது நம்முடைய பழைய கூட்டு குடும்ப மரபு.

கூட்டத்தில் ஒரு யானை இறந்து விட்டால் அதன் உடல் டீகம்போஸ் ஆக இரண்டு அல்லது மூன்று மாதங்களாகுமாம். அப்படி இறந்து போன யானையின் எலும்புகளை அதன் குடும்பத்தை சேர்ந்த யானை எடுத்து அருகிலிருக்கும் நீர் நிலையில் போட்டு விட்டு, கண்ணீர் விட்டு அஞ்சலி செலுத்துமாம்.

தங்கள் குடும்பத்தை விட்டு பிரிந்த யானையை இருபது வருடங்களுக்குப் பிறகும் அதன் லத்தியை பரிசோதித்து, தன்னுடைய குடும்பமா இல்லையா என்று கண்டறிந்து தங்கள் குடும்பமாக இருந்தால் மீண்டும் சேர்த்துக் கொள்ளுமாம்.

குடும்பத் தலைமையை வகிப்பது பெண் யானைதான். அந்த குடும்பத்தின் மூத்த பெண் யானைதான் அந்த பொறுப்பை வகிக்கும். ஒரே வயதில் நான்கு பெண் யானைகள் இருந்தாலும் எல்லாம் தலைமைக்கு வந்து விட முடியாதாம்.  தலைமை பொறுப்பை ஏற்றிருக்கும் அந்த மூத்த பெண் யானை தான் உயிருடன் இருக்கும் பொழுதே தனக்கு பிறகு யார் அந்த இடத்திற்கு வர வேண்டும் என்பதை தீர்மானித்து  அந்த குட்டி யானைக்கு இளம் வயதிலேயே அதற்கான பயிற்சிகளை கொடுத்து தயார் செய்து விடுமாம்.

யானைக்கு பார்வைத்திறன் குறைவுதானாம். ஆனால் மோப்ப சக்தி மிக அதிகமாம். யானையை பழக்க நினைக்கும் பாகன் தன் உடல் வாசனை அதற்கு பழக வேண்டும் என்பதற்காக மூன்று மாதங்கள் வரை கூட குளிக்காமல் இருப்பதுண்டாம். இந்தியாவிலேயே யானைகளை பழக்குவதில் தமிழகத்திற்குதான் முதலிடம் என்றார்.

கோவில்களில் பெண் யானைகளைத்தான் வைத்துக் கொள்வார்களாம். அவைகளுக்கு என்ன உணவு கொடுக்க வேண்டும் என்று நியதி இருக்கிறதாம். ஜெயலலிதா முதலமைச்சராக இருந்த பொழுது கோவில் யானைகள் வருடத்தில் ஒரு மாதம் முதுமலைக்கு ரிட்ரீட்டுக்கு அனுப்பப்பட வேண்டும் என்ற திட்டத்தை கொண்டு வந்தது ஒரு நல்ல விஷயம் என்றார்.

ஒருமுறை சூலுற்ற ஒரு யானை அவரையும் அவரது உதவியாளரையும் துரத்தியதாம், அவரது உதவியாளர்,"உங்களால் வேகமாக மரம் ஏற முடியாது, நான் வேகமாக மரத்தில் ஏறி விடுவேன், எனவே, நான் மரத்தில் ஏறி விடுகிறேன், நீங்கள் பாலத்தின் அடியில் இருக்கும் கல்வெட்டுக்கு பின்னால் ஒளிந்து கொள்ளுங்கள்" என்று கூறி விட்டு, மரத்தின் மீது ஏறிக்கொண்டு விட்டாராம். அதோடு மட்டுமல்ல,"சார், கல் வெட்டுக்கு பின்னல் ஒளிந்து கொள்ளும் முன் அங்கு கரடி எதுவும் இல்லையே என்று உறுதி படுத்திக்கொள்ளுங்கள்" என்றாராம், நல்ல உதவியாளர்! இது போல் பல சுவாரஸ்யமான நிகழ்வுகள்(!!??) என்றார். சரிதான்!




Friday, September 27, 2019

மசாலா சாட் - 11



மனம் சோர்வுற்றிருக்கும்பொழுது இசை கொடுக்கும் ஆறுதல் அலாதி. லால்குடி ஜெயராமன் அவர்களின் தில்லானாவாக இருக்கலாம். மேடை அமைப்பை பார்த்தால் வெளிநாட்டில் நடந்த கச்சேரி என்று தோன்றுகிறது.
இப்போதெல்லாம் பல விஷயங்கள் மாறியிருக்கின்றன. கர்நாடக இசைக்கச்சேரி மேடை போல இல்லாமல் ஆர்கெஸ்ட்ரா போல சிஷ்ய கோடிகளோடு பாடியிருக்கிறார். குட் ஜாப்!


வேடிக்கை மனிதர்கள்:

பிரிட்டனில் ஒரு தம்பதி தங்களுக்கு பிறந்த குழந்தையை  எந்தவிதமான பால் வேற்றுமையும் காட்டாமல் வளர்க்க வேண்டும் என்றும் விரும்பினார்களாம்.
அதனால் தங்களுக்கு குழந்தை பிறந்திருக்கிறது என்று தெரிவித்தார்களே ஒழிய, என்ன குழந்தை என்று தெரிவிக்கவில்லையாம். ஆனால் குழந்தையை கொஞ்சும் பொழுதும், அழும் பொழுது சமாதானப் படுத்தும் பொழுதும் கஷ்டமாக இருந்ததாம். மற்றவர்களிடம் அந்த குழந்தையைப் பற்றி குறிப்பிடும் பொழுது, 'ஹி', என்றோ, 'ஷி' என்றோ குறிப்பிடாமல் 'தே' என்று குறிப்பிடுவார்களாம். குழந்தையின் பாட்டி ஒரு முறை டயப்பர் மற்றும் பொழுது தெரிந்து கொண்டாராம்.  இது குழந்தையை மனோ தத்துவ நீதியாக பாதிக்காதா? நேச்சுரல் இன்ஸ்டிங்ட் என்று என்று ஒன்று உண்டே, அது காண்பித்து கொடுத்து விடாதா? 'கொலையுதிர் காலம்'  நாவலில் சுஜாதா "இந்தக் காலத்தில் பெண்கள் ஆண்களின் ஆடைகளை, ஏன் உள்ளாடைகளையே அணிந்து கொள்வது பற்றி எனக்கு நன்றாகவே தெரியும், இருந்தாலும் அவள் பெண்தான் என்பதற்கு நிறைய சாட்சியங்கள் இருந்தன, தெரிந்தன" என்று எழுதியிருந்ததைப் போல தெரிந்து விடாதா என்ன?










Thursday, September 19, 2019

சில்லென்று பூத்த சிறு நெருஞ்சி காட்டினிலே நில்லென்று சொல்லி நிறுத்தி வழி போனாரே..

சில்லென்று பூத்த சிறு நெருஞ்சி காட்டினிலே நில்லென்று சொல்லி நிறுத்தி வழி போனாரே..


"நாளை அவருக்கு பிறந்த நாள் என்கிறீர்கள், ஒரு சின்ன கேக் வாங்கிக் கொண்டு வாருங்கள், உங்கள் நாலு பேரை ஐ.சி.யூ. உள்ளே அனுமதிக்கிறேன், செடேஷனை குறைக்கச் சொல்கிறேன், அவர் கட்டிலருகே நின்று 'ஹாப்பி பர்த் டே சாங் பாடுங்கள், அவரால் கேட்க முடியும். தன் பிறந்த நாளை  நீங்கள் கொண்டாடுகிறீர்கள்(??) என்று அவரால் உணர முடியும்." மருத்துவர் கூறியதற்கு இணங்க, அரை கிலோ சாக்லேட் கேக்கிற்கு ஆர்டர் கொடுத்து, அதை எடுத்துக் கொண்டு சென்றோம்.

"நம் வீட்டில் கேக் கட் பண்ணும் பழக்கம் கிடையாதே அம்மா? நாம் ஐயப்பன் கோவிலுக்குத்தானே செல்வோம், ஐயப்பன் கோவில் சந்தனம் இருக்கிறதா?" என்று கேட்டாள் என் மகள். இருந்தது. அதையும்  அவருடைய பிறந்த நாளான ஆகஸ்ட் 31அன்று  எடுத்துச் சென்று அவருடைய நெற்றியில் இட்டு விட்டு, அவருக்கு எல்லோரும் பிறந்த நாள் வாழ்த்து கூறினோம். அதை பார்த்துக் கொண்டிருந்த ஒரு இளம் நர்ஸின் கண்களில் கண்ணீர் துளிர்த்தது.

அறுபத்தைந்து வருடங்களுக்கு முன்பு ஆகஸ்ட் 31 அன்று துடிக்க ஆரம்பித்த அவருடைய இதயம், அதே ஆகஸ்ட் 31 அன்று துடிப்பதை நிறுத்திக் கொண்டது.

எங்களையெல்லாம் துயரத்தில் ஆழ்த்தி விட்டு, எனக்கு தனிமைத் துயரையும் தந்து விட்டு இறைவனடி அடைந்து விட்டார். வீட்டில் உறவினர்கள் இருந்த வரை பெரிதாக எதுவும் தெரியவில்லை. குறிப்பாக பேத்தி இருந்த வரை தனிமையை உணரவில்லை. அவர்களும் ஊருக்குச் சென்றதும்தான் தனிமை தகிக்கிறது.

"எங்களால் ஆன எல்லாவற்றையும் செய்து விட்டோம், மெடிசன் இஸ் எ சப்போர்ட் ஒன்லி, பாடி ஷுட் ஹீல், டெத் இஸ் இன் எவிடேபில், பீ ப்ரீபெர்ட் பார் யுவர் லாஸ்"  தலைமை மருத்துவர் எங்கள் தலையில் இறக்கிய இடியை தாங்கிக் கொண்டு வெளியே வந்த பொழுது, அவரது அலுவலக வாசலில் இருந்த பெண், "திருப்பதி லட்டு" என்று பெருமாள் பிரசாதத்தை கொடுத்தாள்  "என்ன சொல்கிறார் இந்த வெங்கி?(திருப்பதி பெருமாளை நான் வெங்கி என்றுதான் குறிப்பிடுவேன்)"  எது நடந்தாலும் என் ஆசிர்வாதம் உனக்கு உண்டு என்கிறாரோ என்று தோன்றியது.

சுற்றமும், நட்பும் என்னை எழுதச் சொல்கிறார்கள். இதுவரை மூன்று முறைகளுக்கு மேல் எழுதத் தொடங்கி, தொடர முடியாமல் நிறுத்தி விட்டேன்.  அலமாரியில் இருக்கும் புடவைகளை எடுத்து மீண்டும் அடுக்க முயல்கிறேன். ஒவ்வொரு புடவையையும் மடிக்கும் பொழுதும், அவற்றை வாங்கிய தருணங்கள் மனதில் வருகிறது. பாடல் கேட்கலாம் என்றால் என் கணவருக்கு பிடித்த ஏதோ ஒரு பாடல் வந்து விடுகிறது. ஸ்லோகம் சொல்லவோ பூஜை செய்யவோ  இயலவில்லை.

என்னை வலையுலகத்திற்கு மீண்டும் வரச்சொல்லி எங்கள் பிளாக் உறுப்பினர்கள் பலரும் அழைப்பு விடுத்திருந்த அதிராவின் பதிவையும், கீதா அக்காவின் பதிவையும் ஸ்ரீராம் எனக்கு வாட்ஸாப்பில் அனுப்பி வைத்திருந்தார். இத்தனை கருணைக்கும், அன்பிற்கும் நெகிழ்ச்சியோடு நன்றி கூறிக்கொள்கிறேன்.

என் சோகம் என்னோடு, உங்களை மீண்டும் சந்திக்கும் பொழுது உற்சாகமான பதிவுகளோடுதான் சந்திக்க விருப்பம். சந்திப்போம்.


Wednesday, August 21, 2019

ராமேஸ்வரம்

ராமேஸ்வரம்


ராவண சம்ஹாரத்திற்குப்பிறகு பிராமணனான அவனை கொன்றதால் தன்னை பீடித்த பிரும்மஹத்தி தோஷத்தை எப்படி போக்கி கொள்வது எனறு கலங்கிய ராமனிடம் சிவ பெருமானை பூஜிப்பதன் மூலம்தான் அந்த தோஷம் விலகும் என்று முனிவர்கள் கூற, தான் பூஜிப்பதற்காக கைலாயத்திலிருந்து சிவ லிங்கங்களை பெற்று வருமாறு ஆஞ்சநேயரை பணிக்கிறார்.

கைலாயத்திலிருந்து இரண்டு சிவ லிங்கங்களை பெற்றுக் கொண்டு ஆஞ்சநேயர் வருவதற்கு முன் பூஜிக்க வேண்டிய நல்ல நேரம் முடிந்து விடுமே என்பதால் சீதை கடற்கரை மணலில் பிடித்து வைத்த லிங்கத்தையே ராமபிரான் பூஜித்து பிரும்மஹத்தி தோஷத்திலிருந்து விடுபடுகிறார். அதைப் பார்த்த ஆஞ்சநேயருக்கு தன்னை அவமதித்து விட்டார்கள் என்று கோபம் வருகிறது. தன கொண்டு வந்த சிவலிங்கத்தைத்தான் வைத்து பூஜிக்க வேண்டும் என்று நிர்பந்திகின்றார். அதற்கு ராமன், "உன்னால் முடிந்தால் இந்த லிங்கத்தை அகற்றி விட்டு  நீ கொண்டு வந்து லிங்கத்தை ஸ்தாபிக்கலாம்" என்று கூற, அவர் அதை பிடுங்க முயற்சி செய்கிறார். எவ்வளவு முயற்சி செய்த போதிலும் அவரால் அதை அகற்ற முடியவில்லை. இறுதியாக தன்னுடைய வாலால் அந்த லிங்கத்தை மூன்று சுற்றுகள் சுற்றி, தன்னுடைய முழு பலத்தையும் பிரயோகித்து அசைக்கப் பார்க்கிறார். இந்த முயற்சியில் அவருடைய வால் அறுபட்டு அவர் தூக்கி எறியப்படுகிறார். ரத்த வெள்ளத்தில் கிடந்த ஆஞ்சநேயரை தூக்கி எடுத்த ராமன், தன் மார்போடு அனைத்துக் கொண்டு ஆதுரத்துடன் அவர் உடலைத் தடவி கொடுக்கிறார். சீதையும் காயம் பட்ட ஆஞ்சநேயரின் உடலை தடவி கொடுத்தவுடன், ஆஞ்சநேயரின் உடலில் பட்ட காயங்கள் ஆறி, அவர் தன் பழைய உடல் பலத்தையும், வனப்பையும் பெறுகிறார்.

"உன் அறியாமையால் பிரும்மா, விஷ்ணு, இந்திரன் இவர்களால் அசைக்க முடியாத இந்த லிங்கத்தை நீ இவ்விதம் செய்ய முற்பட்டதால் சிவ அபாரதத்திற்கு ஆளானாய். இனி இவ்விதம் செய்யாதே. நீ விழுந்த இவ்விடம் ஹனுமத் குண்டம் என்று அழைக்கப்படும்.  நீ கொண்டு வந்த லிங்கங்களுள் ஒன்றை நான் பூஜை செய்த லிங்கத்திற்கு வடக்கே பிரதிஷ்டை செய்து காசி விஸ்வநாதராக பூஜிக்கிறேன். இந்த கோவிலுக்கு வரும் பக்தர்கள் முதலில் காசி விஸ்வநாதரை வணங்கி அதன் பிறகே என்னால் பிரதிஷ்டை செய்யப்பட்ட லிங்கத்தை பூஜிக்க வேண்டும். மற்றொரு லிங்கத்தை நீ உனக்கு அருகே மேற்கு பக்கத்தில் ப்ரதிஷ்டை செய்து இந்த கோவிலுக்கு காவலாக இருந்து கொண்டு பூஜித்து வருவாயாக. இதனால் நீ செய்த அபசாரத்திலிருந்து விடுபடுவாய்" என்று  ராமன் கூறியதாக தல புராணம் கூறுகிறது.

பிரும்மாண்டமான அழகான கோவில். சந்நிதியில் நுழையும் முன் வல்லப கணபதியை வணங்கி உள்ளே நுழைகிறோம். பிருமாண்டமான, அழகான  நந்தி. ஆனால் அதன் அழகை முழுமையாக ரசிக்க முடியாமல் நெருக்கமாக கம்பிகள்.  இந்த நந்தி கோவிலின் பிரும்மாண்டத்திற்கு தோதாக பின்னாட்களில் வைக்கப் பட்டிருக்கலாம் என்று தோன்றியது.

சீதை மணலால் பிடித்த லிங்கம் என்பதை நம்பலாம் போல அழகிய, சிறிய லிங்கம்.  அதற்கேற்றார் போன்ற சிறிய நந்தியை வரிசையில் நிற்கும் பொழுது பார்க்க முடிகிறது.  சுவாமியை தரிசித்து விட்டு வரும் பொழுது சீதா,ராம, லக்ஷ்மணர்களை வணங்கியபடி நிற்கும் ஆஞ்சநேயர், மற்றும் சுக்ரீவனை வணங்கி பிரகாரம் சுற்றி வரும் பொழுது கோஷ்டத்தில் தக்ஷிணாமூர்த்தி யையும், பிராகாரத்தில் பள்ளி கொண்ட பெருமாளையும் வணங்குகிறோம். கோஷ்டத்தில் தக்ஷிணாமூர்த்திக்கு எதிர் பக்கத்தில் பிரும்மா  இருக்கிறார். ஆஞ்சநேயரால் கொண்டு வரப்பட்ட காசி விஸ்வநாதர், விசாலாட்சியையும் வணங்குகிறோம். எல்லா சிவன் கோவில்களையும் போலவே நுழைவாயிலுக்கு இரு புறங்களிலும் சூரிய, சந்திரன் காட்சி அளிக்கிறார்கள்.

வெளி வந்து அம்பாள் சன்னதியில் பர்வதவர்த்தினியை தரிசித்துக் கொள்கிறோம். அம்மன் சன்னதிக்கு வெளியே தூண்களில் நவ கன்னிகையர்களின்
சிலைகள் இருக்கின்றன.





பிரசித்தி பெற்ற மூன்றாம் பிரகாரத்தை இப்போது வர்ணம் பூசியிருக்கிறார்கள். எனக்கென்னவோ வர்ணம் பூசப்படாத பொழுது இன்னும் அழகாக இருந்ததோ என்று தோன்றியது. புகைப்படம் எடுப்பதில் ஆர்வமும், திறமையும் கொண்டிருந்த எங்கள் அப்பா அப்போது புகைப்படம் எடுத்திருக்கிறார். இப்போது என் செல் ஃபோனால் சிறை பிடிக்க முயன்றேன். ஐந்துக்கு மூன்று பழுதில்லை அல்லவா?°

இங்கு கிழக்கு வாசலிலிருந்து பேட்டரி கார்கள் இயக்கப்படுகின்றன. காலையில் அக்னி தீர்த்தம் எனப்படும் கடலில் நீராடி விட்டு கிழக்கு வாலில் இந்த பேட்டரி காரில் ஏறிக்கொண்டால் வடக்கு வாசலில் இறக்கி விடுகிறார்கள். அங்கிருந்து உள்ளிருக்கும் 27 தீர்த்தங்களில் நீராடி மேற்கு வாசலுக்கு வந்து விடுவோம். அங்கு உடை மாற்றிக் கொள்ள இடம் இருக்கிறது. உடை மாற்றிக் கொண்டு இறைவனை தரிசிக்கலாம்.

இந்த கோவில் சைவ,வைணவ ஒற்றுமைக்கு உதாரணமாக காட்டப்பட்டாலும் வைணவர்கள் அதிகம் கண்களில் படவில்லை. வட இந்தியர்கள் நிறைய பேர் வருகிறார்கள்.








Sunday, August 18, 2019

திருப்புல்லாணி

திருப்புல்லாணி 



தேவிப்பட்டிணத்திலிருந்து திருஉத்திரகோசமங்கைக்கு சென்று விட்டு பின்னர் திருப்புல்லாணி சென்றோம்.  தர்பசயன ராமர் கோவில் என்று பிரபலமாக அறியப்பட்டாலும் மிகவும் புராதனமான இக்கோவில் ஆதி ஜெகந்நாதர் கோவில் என்றே அழைக்கப்படுகிறது. 

கருவறையில் ஆதி ஜெகந்நாதர் தர்பாசனத்தில் அமர்ந்த கோலத்தில் இரு புறமும் ஸ்ரீதேவி,பூதேவி நாச்சியார்களோடு காட்சி அளிக்கிறார். இங்குதான் புத்திரகாமேஷ்டி யாகம் செய்த தசரதருக்கு பாயசம் வழங்கப்பட்டது என்கிறார்கள். அதனால் இப்போது கூட குழந்தைகள் இல்லாத தம்பதிகள் இங்கு வந்து இறைவனுக்கு பாயசம் படைத்தது பிரார்தித்துக்கொள்ள குழந்தை பாக்கியம் கிட்டும் என்பது நிதர்சனமான நம்பிக்கை. தனிசந்நிதியில் அழகே உருவாய் பத்மாசினி தாயார். ஆண்டாளுக்கும் தனி சந்நிதி இருக்கிறது. 

பிரகாரத்தை சுற்றி வரும் பொழுது தனி சந்நிதியில் தர்ப்பை படுக்கையில் பள்ளி கொண்டிருக்கும்  ராமபிரானை தரிசிக்க முடிகிறது. சீதையை இழந்த சோகத்தில், கடலை கடந்து எப்படி சீதையை மீட்கப்போகிறோம் என்ற சிந்தனையில் தர்பை புல்லையே  படுக்கையாக விரித்து படுத்து விட்டாராம். அவருடைய தொப்பூழிலிருந்து மூன்று தண்டுகள் பிரிய ஒன்றில் பிரம்மா, ஒன்றில், சூரியன், மற்றொன்றில் சந்திரன் இருக்க, சுற்றிலும் முப்பது முக்கோடி தேவர்களும் பாலம் கட்டுவதைப் பற்றி ஆலோசனை செய்தார்களாம். 

இங்கிருந்து இலங்கை கடலின் நடுவே செல்ல பாலம் கட்டுவதற்கு சமுத்திரராஜனிடம் அனுமதி வாங்குவதற்காக அவனை வரச்சொல்கிறார் ராமர். சமுத்திரராஜன் வராததால் கோபமுற்று தன் கோதண்டத்திலிருந்து அம்பினை ஏவுகிறார், அக்னி பிழம்பாக அம்பு பாய, பயந்து போன சமுத்திர ராஜன் ஓடிவந்து ராமனின் பாதம் பணிகிறான். அதன் பிறகு இங்கிருந்துதான் பாலம் கட்டப்பட்டது. அதனால் இந்த இடம் ஆதி சேது என்று வழங்கப்படுகிறது. இங்குதான் விபீஷணன் ராமரிடம் சரணடைந்தாராம். எனவே இது சரணாகதி ஷேத்திரம் என்றும் அழைக்கப்படுகிறது. 

கடலைத்தாண்டி சீதையைக் கண்டு, அவளிடமிருந்து சூடாமணியை பெற்று வந்த ஹனுமான் இங்குதான் அதை ராமனிடம் தந்ததாக சொல்கிறார்கள்.

இங்கு பட்டாபிஷேக ராமருக்கு என்று ஒரு தனி சந்நிதியும், சந்தானகோபாலருக்கு தனிசந்நிதியும் இருக்கின்றன.  ஆனால் நடை சாத்தி விட்டதால் இங்கு எழுந்தருளியிருக்கும் கிருஷ்ணரை எங்களால் தரிசனம் செய்ய முடியவில்லை.  குழந்தை இல்லாத தம்பதிகள் இந்த கிருஷ்ணருக்குத்தான் பால் பாயசம் படைத்து வேண்டிக் கொள்ள வேண்டும் என்கிறார்கள்.  வெளி பிரகாரத்தில் அரச மரத்திற்க்கு அடியில் நிறைய நாகர்கள் பிரதிஷ்டை செய்யப்பட்டிருக்கின்றன. 

திருமங்கையாழ்வாரால் மங்களா சாஸனம் செய்யப்பட்ட தலம். 108 வைணவ திருப்பதிகளுள் ஒன்று. மூலவர் ஆதி ஜெகன்னாதர், உற்சவர் கல்யாண ஜகந்நாதர். தாயார் பத்மாசினி மற்றும் கல்யாணவல்லி. 

இங்கிருக்கும் சமுத்திரத்தில் நீராடி விட்டுதான் ராமேஸ்வரம் செல்ல வேண்டும் என்கிறார்கள். நாங்கள் தரிசனம் மட்டும் செய்து கொண்டோம். 

Thursday, August 15, 2019

தேவிப்பட்டிணம் - நவ பாஷாணம்

தேவிப்பட்டிணம் - நவ பாஷாணம் 



ராமேஸ்வரம் யாத்திரை மேற்கொள்பவர்கள் முதலில் தேவி பட்டிணம் சென்று அங்கு ராமபிரான் ஸ்தாபித்த நவபாஷாண நவகிரகங்களை வணங்கி, பின்னர் திருப்புல்லாணி சென்று தர்பசயன ராமரை சேவித்து பின்னரே ராமேஸ்வரம் வந்து பர்வதவர்த்தினி சமேத ராமநாதரையும், அவருக்கு அருகில் பிரதிஷ்டை செய்யப்பட்டிருக்கும் காசி விஸ்வநாதரையும், விசாலாக்ஷியையும் வணங்க வேண்டுமாம். இந்த நடைமுறை எங்களுக்குத் தெரியாது. ஆனாலும் யதேச்சையாக இப்படி நேர்ந்தது இறையருள் என்றுதான் கூற வேண்டும். 

சென்னையிலிருந்து ராமேஸ்வரம் சென்றவுடன் தேவிபட்டிணம், உத்திரகோசமங்கை, திருப்புல்லாணி தலங்களுக்கு சென்றுவிட்டு வந்து விடலாம் என்று முடிவு செய்தோம்.

தேவிப்பட்டிணம் என்றால் எல்லோருக்கும் நினைவுக்கு வருவது நவபாஷாண நவக்கிரகங்கள். ஆனால் இந்த இடம் பல புராதன பெருமைகளை உடையது. மூல சேது என்று அழைக்கப்படும் இங்கு ஒரு முறை தர்ம தேவதை தன்மைகொண்டது நான்கு கால்களோடு தவம் புரிந்து சிவ பெருமானின் வாகனமாகிய ரிஷபமாகியதால் இதற்கு தர்ம தீர்த்தம் என்று ஒரு பெயர் உண்டு. 

காலவ மகரிஷி என்பவர் இங்கு மஹாவிஷ்ணுவை குறித்து அக்னிக்கு நடுவில் தவம் இயற்றிக் கொண்டிருந்த பொழுது, மிகுந்த பசியோடிருந்த துர்தமன் என்னும் அசுரன் பயங்கர சப்தம் எழுப்பியபடி இவரை விழுங்க வந்தான். அவன் எழுப்பிய சப்தத்தால் தவம் கலைந்த காலவ மகரிஷி அவனைக் கண்டு பயந்து போய் கண்களை மூடி  மஹாவிஷ்ணுவை மனதில் இருத்தி மீண்டும் தவத்தில் ஈடுபட, மஹாவிஷ்ணு தன் சக்ராயுதத்தால் துர்தமனை வதம் செய்தார். காலவ மகரிஷி சக்ராயுதத்தின் ஒரு பகுதி இந்த தீர்த்தத்தில் இருக்க வேண்டும் என்று வேண்டினார். அதன்படி சக்ராயுதத்தின் ஒரு பகுதி இந்த தீர்த்தத்தில் இருப்பதால் இது சக்ர தீர்த்தம் என்று வழங்கப்படுகிறது. 

மஹிஷாசுரனுக்கும், அம்பிகைக்கும் யுத்தம் நடந்த பொழுது, மகிஷாசுரன் இங்கிருக்கும் சக்ரகுளத்தில் வந்து ஒளிந்து கொள்கிறான். அம்பிகை தனது வாகனமாகிய சிங்கத்திடம், இந்த குளத்தின் நீரை  குடிக்கச் செய்து மகிஷாசுரனை வதம் செய்கிறாள். எனவே இந்த குளம் வற்றி விடுகிறது. இந்திரன் முதலான தேவர்கள் தேவலோகத்திலிருந்து அமிர்தத்தை கொண்டுவந்து இதை நிரப்புகிறார்கள். ஏனவே இது அமிர்த தீர்த்தம் என்றும் அழைக்கப்படுகிறது.  மஹிஷனை அம்பிகை அழித்த இடமாகையால் தேவிப் பட்டிணம் என்னும் பெயர் பெற்றது. 





ராமபிரான், ராவணனோடு யுத்தம் செய்யவும் முன் இங்கு நவபாஷாணத்தால் ஆன நவகிரகங்களை அமைத்து,வழிபட்டுவிட்டு சென்றாராம். இப்போது தேவி பட்டினம் என்றால் எல்லோருக்கும் அதுதான் நினைவுக்கு வரும். முன்பெல்லாம் கடலுக்குள் இருக்கும் அந்த நவபாஷாண நவகிரகங்களை கடலுக்குள் இறங்கித்தான் வணங்க முடியும். இப்போது அதைச் சுற்றி பாலம் போல அமைத்து விட்டார்கள். இயலாதவர்கள் அந்த பாலத்தில் மேல் நடந்து சென்று நவகிரகங்களை சுற்றி வர முடியும். நாங்கள் அதைத்தான் செய்தோம். 

அடுத்து தர்பசயன ராமரை தரிசிக்கலாம்.

*கடைசி புகைப்படம் உபயம் கூகுள். 

Monday, August 12, 2019

திருஉத்திரகோசமங்கை

திருஉத்திரகோசமங்கை


நீண்ட நாட்களாக திருஉத்திரகோசமங்கை செல்ல வேண்டும் என்ற என் ஆசை சமீபத்தில் நிறைவேறியது. காசிக்கு செல்லும் முன் ராமேஸ்வரம் செல்ல வேண்டும் என்பதால் அங்கு சென்ற பொழுது உத்திரகோசமங்கைக்கும் சென்றோம்.

சைவர்களுக்கு மிகவும் முக்கியமான கோவிலான இது ராமநாதபுரம் மாவட்டத்தில், இராமநாதபுரத்திற்கும் ராமேஸ்வரத்திற்கு இடையில், இராமேஸ்வரத்திலிருந்து 70 கி.மீ. தொலைவில் உள்ளது.  . ராமாயண காலத்திற்கு முற்பட்ட மிகவும் புராதனமான கோவில்என்கிறார்கள். மண்டோதரி இங்கிருக்கும் மங்களேஸ்வரரை வழிபட்டுதான் ராவணனை கணவனாக அடைந்தாளாம்.

உத்திரம் என்றால் உபதேசம், கோசம் என்றால் ரகசியம், மங்கை என்பது இங்கே பார்வதி தேவியை குறிக்கிறது. சிவபெருமான் மங்கையாகிய பார்வதி தேவிக்கு, வேதங்களின் பொருளை ரகசியமாக உபதேசித்த இடம் என்பதால் உத்திரகோசமங்கை. திரு என்னும் அடைமொழி சேர்த்து திருஉத்திரகோசமங்கை.
இறைவன்: மங்களேஷ்வரர்/மங்கள நாதன்
இறைவி : மங்களேஷ்வரி
ஸ்தல விருட்சம் : இலந்தை
நடராஜர் : ஆதி சிதம்பரேசன்


இரண்டு கோபுரங்கள் தெரிகிறதா?

பெரிய விஸ்தாரமான கோவில். சுவாமி சந்நிதிக்கு, அம்பாள் சந்நிதிக்கு என்று இரண்டு கோபுரங்கள். கோவில் வளாகம் சுத்தமாக பராமரிக்கப்படுகிறது.

இந்த கோவிலின் கருவறைக்கு முன்பு வலது பக்கத்தில் பெரிய சாளக்ராமமா?? சிறிய லிங்கமா என்று தெரியாமல் ஒன்று இருந்தது.  அதைப்பற்றி விசாரித்தபொழுது, அந்த அர்ச்சகர்," இது இராவணன் பூஜித்த சாளக்ராமம்" என்றார்.  புகைப்படம் எடுத்துக் கொள்ள அனுமதித்தார்.

ராவணன் பூஜித்த சாளக்ராமம் 



ராமநாதபுரம் ராஜா

மரகத நடராஜர் சன்னதி

இந்த கோவிலில் பல வித்தியாசமான விஷயங்கள் உள்ளன.

சாதாரணமாக எல்லா சிவன் கோவில்களிலும் நுழைவு வாசலில் இடது புறம் விநாயகருக்கும், வலது புறம் முருகனுக்கும் சிறிய சந்நிதி இருப்பதை காணலாம். இங்கு அது இடம் மாறி வலது புறத்தில் முருகனுக்கும், இடது புறம் விநாயகருக்கும் சிறிய சந்நிதிகள் காணப்படுகின்றன.

சிவனுக்கு ஆகாது என்று சொல்லப்படும் தாழம்பூவால் இங்கிருக்கும் சிவபெருமானை அர்ச்சனை செய்யலாம்.

இங்கிருக்கும் நடராஜர் முழுவதும் மரகத கல்லால் வடிக்கப்பட்டவர். அதிக ஒலி மரகத கல்லில் விரிசலை ஏற்படுத்தும் என்பதால் இந்த கோவிலில் மேளம் போன்ற அதிக ஒலியை ஏற்படுத்தும் கருவிகள் வாசிக்கப்படுவதில்லை. சப்தத்தால் பாதிக்கப்படாமல் இருப்பதற்காக வருடம் முழுவதும் இந்த நடராஜர் சந்தன காப்பிடப்பட்டு இருக்கிறார்.  மார்கழி மாதத்தில் வரும் பௌர்ணமி மற்றும் திருவாதிரை அன்று மட்டும்(பெரும்பாலும் இரண்டும் ஒரே நாளில்தான் வரும்) சந்தன காப்பு களையப்பட்டு அபிஷேகங்கள் செய்யப்படுமாம்.  பிறகு மீண்டும் சந்தன காப்பிடப்பட்டு விடுகிறது.

இங்கிருக்கும் நடராஜருக்கு கையில் பாம்பு கிடையாது, இடுப்பில் புலித்தோல் கிடையாது, தலையில் கங்கை கிடையாது என்று கோவிலில் வைக்கப்பட்டிருக்கும் அறிவிப்பு பலகையில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இங்குதான் முதன்முதலாய் நடராஜா நடனம் ஆடினாராம், அதற்குப்பின்னர்தான் சிதம்பரத்தில் ஆடினாராம், எனவே இது ஆதி சிதம்பரம் என்றும் அழைக்கப்படுகிறது.  இத்தனை சிறப்புக்கள் கொண்ட நடராஜர், கோவிலின் வெளிப்பிரகாரத்தில் தனி சந்நிதியில் எழுதருளியிருக்கிறார்.

திருவிளையாடற்புராணத்தில் வரும் வலை வீசி மீன் பிடித்த படலம் இங்கேதான் நிகழ்ந்தது.

தற்சமயம் கோவிலில் பராமரிப்பு பணிகள் நடந்து கொண்டிருக்கின்றன. அதனாலோ என்னவோ, இந்த கோவிலின் சிறப்பு அம்சமான திறந்த வாய்க்குள் சுழலும் பந்தோடு கூடிய யாளியை பார்க்க முடியவில்லை. அறுபது மூவர் சிலைகளுக்கு மேல் ஒவ்வொரு நாயனாரும் செய்த திருப்பணி ஓவியமாக தீட்டப்பட்டிருக்கிறது.

கோவிலை விட்டு வெளியே வந்த பொழுது எங்கள் காரோட்டி,"இந்த கோவிலுக்கு எல்லோரும் வந்து விட முடியாது, இங்கிருக்கும் சிவன் அழைத்தால்தான் வர முடியும்" என்றார். கடவுளுக்கு நன்றி கூறி கிளம்பினோம். தென்னாடுடைய சிவனே போற்றி!