கணம்தோறும் பிறக்கிறேன் 

Friday, December 17, 2021

திருவெம்பாவை பாடல் 2

திருவெம்பாவை பாடல் 2




பாசம் பரஞ்சோதிக்கென்பாய் இராப்பகல் நாம் 
பேசும் போதெப்போது இப்போதார் அமளிக்கே
நேசமும் வைத்தனையோ நேரிழையாய் நேரிழையீர்
சீசி இவையுஞ் சிலவோ விளையாடி
ஏசும் இடம் ஈதோ விண்ணோர்கள் ஏத்துதற்குக்
கூசும் மலர்ப்பாதம் தந்தருள வந்தருளும்
தேசன் சிவலோகன் தில்லைச் சிற்றம்பலத்துள்
ஈசனார்க்கு அன்பர் யாம் ஆரேலோர் எம்பாவாய்.

முதல் பாடலில் ஒரு பெண்ணை எழுப்பி அழைத்துக் கொண்டு வந்தவர்கள் அடுத்த பெண்ணின் வீட்டிற்கு வருகிறார்கள். அவளும் இன்னும் எழுந்திருக்கவில்லை. வாசலில் நிற்பவர்களுக்கு அலுப்பாக இருக்கிறது ஏனென்றால் இந்த பெண் எப்படிப்பட்டவள் என்றால், இரவும் பகலும் தோழிகளோடு பேசும் பொழுதெல்லாம் தனக்கு மிகவும் விருப்பமானவர் பரஞ்சோதியாகிய அந்த சிவபெருமான்தான் என்று கூறுகிறவள். ஆனால் இன்று இன்னும் எழுந்திருக்காமல் உறங்கிக் கொண்டிருப்பதை பார்த்து வெளியே நிற்கும் தோழிகள் சற்றே கேலியாக," அழகான ஆபரணங்களை அணிந்து கொண்டிருக்கும் பெண்ணே,எங்களிடம் சிவபெருமான்தான் என் பாசத்திற் குரியவர் என்று கூறினாய். ஆனால் உன் பாசம்  படுக்கையின் மீதுதான் என்று புரிந்து விட்டது"  என்றதும் உள்ளே இருப்பவளுக்கு கோபம் வந்து விடுகிறது. "நீங்களும்தான் அழகான ஆபரணங்களை அணிந்திருக்கிறீர்கள். என்னை கேலி செய்து ஏசும் நேரமா இது? நாம் எல்லோருமே தேவர்களுக்கு கூட காட்ட விரும்பாத தன்னுடைய திருவடியை பக்தர்களுக்கு காட்டி அருளக்கூடிய, தில்லையில் இருக்கும் ஈசனின் அன்பர்கள் தானே?" என்று சமாதானமாக பேசி சமாளிக்கிறாள். 




Thursday, December 16, 2021

திருவெம்பாவை - 1

 திருவெம்பாவை



ஆதியும் அந்தமும் இல்லா அரும்பெரும் சோதியை

யாம் பாடக் கேட்டேயும் வாள் தடங்கண்
மாதே வளருதியோ வன்செவியோ நின்செவிதான்
மாதேவன் வார்கழல்கள் வாழ்த்திய வாழ்த்தொலி போய்
வீதிவாய்க் கேட்டலுமே விம்மிவிம்மி மெய்ம்மறந்து
போதார் அமளியின் மேல் நின்றும் புரண்டு இங்ஙன்
ஏதேனும் ஆகான் கிடந்தாள் என்னே என்னே
ஈதே எந்தோழி பரிலோர் எம்பாவாய்

பாவை நோன்பு என்பது நாட்டில் நல்ல மழை பெய்து பயிர்கள் செழிக்கவும், நல்ல கணவனை அடைந்து தங்கள் வாழ்க்கை செழிக்கவும் பெண்கள் அனுசரிக்கும் நோன்பு.

மாணிக்கவாசகர் தன்னை ஒரு பெண்ணாக உருவகப்படுத்திக் கொண்டு நாயகன்,நாயகி பாவத்தில் திருவண்ணாமலையில் குடி கொண்டிருக்கும் அண்ணாமலையாரை துதித்து பாடியதுதான் திருவெம்பாவை பாடல்கள். இதில் முதல் ஒன்பது பாடல்கள் முதலில் எழுந்த பெண்கள், விடியற்காலையில் எழுந்து, பாவை நோன்பு நோற்பதற்கு வருவதாக கூறிவிட்டு, எழுந்திருக்காமல் உறங்கிக் கொண்டிருக்கும் பெண்களை எழுப்புவதாக அமைந்திருக்கும். 

முதல் பந்திலேயே சிக்ஸர் அடிப்பதை போல, முதல் பாடலின் முதல் வரியிலேயே யாரைக் குறித்து இந்த பாடல்கள் பாடப்பட்டன என்று தெளிவு படுத்தி விடுகிறார். 

ஆதியும் அந்தமும் இல்லா அருட்பெரும் சோதியாக எழுந்து, உயர்ந்து நின்றவன் அந்த அண்ணாமலையான் தானே? அப்படிப்பட்ட அந்த அண்ணாமலையானின் பெருமைகளை நாங்கள் பாடக் கேட்டும் பெரிய கண்களை உடைய பெண்ணே  நீ உறங்கிக் கொண்டிருக்கிறாயே? உன் செவிகள் என்ன இரும்பாலானவையா? 
வீதியில் யாராவது சிவபெருமானின் பெருமைகளை பேசிக்கொண்டு செல்வதை கேட்டாலே உணர்ச்சி வசப்பட்டு அழுவாயே? இப்போது நாங்கள் உன் வீட்டு வாசலில் வந்து சிவநாமத்தை சொல்கிறோம், நீயானால் எழுந்து வராமல் மெத்தையிலே புரண்டு கொண்டிருக்கிறாய். இதுதான் உன் சிறப்பா?
 

Tuesday, December 14, 2021

பார்ப்பது, கேட்பது, படிப்பது(தொடர்ச்சி)

பார்ப்பது, கேட்பது, படிப்பது(தொடர்ச்சி)



நான் இங்கே வருவதற்கு முன் என் மகன் இந்திரா நூயி எழுதிய மை லைஃப் இன் ஃபுல் என்ற புத்தகத்தை அமேசானில் வரவழைத்தான். ஊருக்கு வருவதற்கு முன் அதை படித்து விட வேண்டும் என்று நினைத்தேன், ஆனால் முடியவில்லை. இந்திரா நூயி பெப்ஸி கோவின் சிஇஓ வாக ஆவதோடு நிறுத்தி இருந்தேன். 

இங்கே வந்து லைப்ரரியில் தேடினால் வெயிட்டிங் லிஸ்ட் 93. ஒவ்வொருவரும் ஒரு புத்தகத்தை 14 நாட்கள் வைத்திருக்கலாம். அந்த கணக்கில் பார்த்தால் என் முறை வருவதற்கு வருடக்கணக்கில் ஆகிவிடும். ஆகவே நெட்டில் டவுன்லோட் செய்து படிக்க வேண்டும் அதற்கும் லைப்ரரியில் வசதி இருக்கிறது. ஆனால் அங்கேயும் இரண்டு வாரங்கள் காத்திருக்க வேண்டும். அதற்கு பிறகு தான் படித்து முடிக்க வேண்டும் படித்து முடித்த பிறகு அதை பற்றி சொல்கிறேன். 

இங்கிருக்கும் நூலகத்தில் தமிழ் புத்தகங்களும் பார்க்க முடிந்தது. அசோகமித்திரன், தி ஜானகிராமன், எஸ். ராமகிருஷ்ணன் போன்றவர்களின் புத்தகங்கள் இருந்தன இதுவரை எஸ்ராவின் கதை எதுவும் நான் படித்ததில்லை. எனவே அவர் எழுதிய 'நிமித்தம்' என்னும் புத்தகத்தை எடுத்து வந்தேன்.  

காதுகேளாத  ஒருவனின் அனுபவங்கள், சோகங்கள் கதையாக விரிந்திருக் கின்றன. "குளிக்கும் பொழுது தண்ணீர் கீழே விழும் சத்தம் கேட்காதா?" என்று ஒருவர் கேட்கிறார். அவனுக்கு கேட்காது. தண்ணீர் உடம்பில் படும் உணர்வுதான். காது கேட்காதவர்களின் இழப்புகளை துல்லியமாக புரிய வைத்த இடம் இது.  

தேவராஜ் என்னும் சிறுவன் குளிர் காய்ச்சலுக்கும் பிறகு தன் செவித்திறனை இழக்கிறான். இடது காது முற்றிலும் செயலிழக்க, வலது காது கொஞ்சமாக கேட்கும். இப்படிப்பட்ட ஒரு குழந்தைக்கு ஆதரவும், பரிவும் கிடைக்காததால் அவன் சந்திக்கும் அவமானங்களும் சோகங்களும் அவனை அலைக்கழிக்கின்றன. "செத்து தொலையாமல் இருந்து எங்களை தொல்லை செய்கிறாய்" என்று எப்போதும் அவனை கரித்துக் கொட்டும் மூர்க்கத்தனமான தந்தை, பள்ளியில் ஆசிரியர் பேசுவது புரியாமல் இவன் மதங்க மலங்க முழிக்கும் பொழுது, "செவிட்டு முண்டமே ஏன் இங்கே வந்து உயிரை வாங்குகிறாய்?" என்று புளியமர விளாரால் விளாசும் ஆசிரியரால் படிப்பை பாதியில் நிறுத்துகிறான். 

அவனுக்கு காது கேட்க வைப்பதற்காக அவன் தாய் எடுக்கும் முயற்சிகள் தோற்கின்றன. காது கேளாதோர் களுக்கான பள்ளியில் அவனை சேர்த்து விடுகிறாள். அங்கு அளவிற்கு அதிகமான மாணவர்கள் ஒரு சிறிய அறையில் ஒருவரோடு ஒருவர் இடித்துக் கொண்டு படுத்துக் கொண்டதில் ஒரு மாணவனுக்கிருந்த சரும நோய் இவனுக்கும் வந்துவிடுகிறது. அதை குணப்படுததிக்கொண்டு வா என்று வீட்டிற்கு அனுப்பி விடுகிறார்கள். வந்தவனுக்கு திரும்பிச் செல்ல பிடிக்கவில்லை.   தந்தையால் மூர்க்கமாக சிதைக்கப்படும் காதல், எந்த வேலையிலும் நிலைக்க முடியாமை என்று நூலறுந்த பட்டமாக அலைகிறது அவன் வாழ்வு. 

தேவராஜின் வாழ்க்கையில் தென்றலாய் இருப்பவர்கள் அவன்மீது அன்பாக இருக்கும் புஷ்பா டீச்சரும், ஓவியரான அவர் கணவரும், மற்றும் நண்பன் ராமசுப்பு மட்டுமே. இறுதியில் ராமசுப்பு வால் நிறந்தர வருமானத்திற்கு வழி பிறக்க, அவனுடைய 47 வயதில் கணவனை இழந்த ஒரு நர்ஸை மணந்து கொள்ள சம்மதிக்கிறான்.  திருமண சடங்குகள் ஒரு அபத்தமான நாடகமாக தோன்றுகிறது. முன்பை விட இப்போதுதான் வாழ்க்கையை நினைத்து பயமாக இருக்கிறது என்று முடிகிறது கதை.

கதையின் நீளம் அதிகம்.  காது கேட்காத ஒருவன் அனுபவிக்கும் துயரங்களை மட்டும் சொல்லி இருந்தால் அதற்கு ஒரு தீர்வும் சொல்லியிருந்தால் நன்றாக இருந்திருக்கும். சொல்ல வந்த விஷயம் நச்சென்று பதிந்திருக்கும்.  இந்த கதையில் அவன் சந்தித்த மனிதர்கள், அவர்களுடைய வாழ்க்கை என்று பிரிந்து போய் அவன் யார் யாரிடம் பழகினாலும் அவர்களை பற்றி எல்லாம் ஒவ்வொரு அத்தியாயம். அவர் திரட்டிய பல விஷயங்கள் அத்தனையையும் ஒரு நாவலில் கொட்டியிருக்கிறார். அதனால் மூலக்கரு சிதைந்து போகிறது. பாஸிட்டிவாக முடிக்காததும்,  செவித்திறன் அற்றவர்கள் எப்படி வாழ்க்கையை அமைத்துக் கொள்ள வேண்டும் என்ற வழிகாட்டுதல்கள் இல்லாததும் குறைகளாக எனக்குப்பட்டன. 




Monday, December 13, 2021

பார்ப்பது, கேட்பது, படிப்பது

பார்ப்பது, கேட்பது, படிப்பது 

இங்கு வந்ததிலிருந்து ஒரு நாளைக்கு ஒன்று என்ற ரேஞ்சில் நிறைய சினிமாக்கள் பார்க்கிறேன்.  தமிழ்தான் என்றில்லை, ஹிந்தி,  ஆங்கிலம்,  மலையாளம் எல்லாம்தான். அண்ணாத்த, அரன்மனை3 போன்ற படங்களை இதய நோயாளிகள் தவிர்ப்பது நலம். அந்த இரைச்சல் அவர்கள் உடம்பிற்கு ஆகாது. ரஜினிகாந்த் இனியும் தொடர்ந்து நடிக்கத்தான் வேண்டுமா?

இந்த படங்களை பார்த்த பொழுது இது தமிழ் சினிமாவின் இருண்ட காலமோ என்று தோன்றியது. நம்பிக்கையளிக்கும் விதம் வேறு சில படங்களும் வந்திருக்கின்றன.  

ஜெய் பீம் நன்றாகத்தான் இருந்தது. அந்தப் படத்தின் கான்ட்ரவர்சிகளை பலரும் எழுதி விட்டார்கள். ஜெய் பீமிற்கு ஒரு மாற்று போன்ற படம் 'ருத்ர தாண்டவம்'. நல்ல போலீஸ், வக்கீலாக வரும் ராதா ரவி,"இந்த நாட்டு மக்கள் அத்தனை பேருக்குமான அரசியல் அமைப்பு சட்டத்தை எழுதியவர் அம்பேத்கர். அவரை  ஒரு குறிப்பிட்ட இனத்திற்கு மட்டும் சொந்தக்காரர் என்பது போல சொல்கிறார்கள்" என்கிறார். ஒரு வேளை இதற்கு தியேட்டரில் கைதட்டல் கிடைத்திருக்கலாம்.

வெங்கட் பிரபுவின் மாநாடு ஒரு வித்தியாசமான முயற்சி. டைம் லூப் என்னும் கான்செப்ட் தமிழுக்கு புதுசு. இன்று,நேற்று,நாளை என்னும் படத்தில் டைம் மிஷின் கான்செப்ட்டிலும் இறந்தவர் மீண்டும் பிழைப்பது போல் வரும். இதில் மீண்டும் மீண்டும் வருவது, எஸ்.ஜெ. சூர்யா வார்த்தைகளில் "வந்தான், சுட்டான், செத்தான், ரிபீட்.." . இந்த கான்செப்ட் எத்தனை பேருக்கு புரியும் என்று தோன்றியது. ஒரு இடத்தில் கூட தேங்காத விறுவிறுப்பு படத்தின் பிளஸ் குறிப்பாக படத்தின் முதல் பாதி விறுவிறுவிறு.... 

ஒரு மாநிலத்தின் முதலமைச்சரை ஒரு மாநாட்டில் வைத்து கொலை செய்து அதை மதக் கலவரமாக மாற்ற நடக்கும் முயற்சி எப்படி முறியடிக்கப்படுகிறது என்பதுதான் கதை. இந்த சாதாரண கதையை டைம் லூப் என்னும் கான்செப்டை பயன்படுத்தி ஸ்வாரஸ்யமாக்கியிருப்பது இயக்குனரின் திறமை.   

இந்த படத்தின் கதாநாயகன் சிம்புவாக இருந்தாலும், எஸ்.ஜே.சூர்யா ஸ்டீல்ஸ் தி ஷோ. கொஞ்சம் ஓவர் ஆக்டிங் என்று தோன்றலாம், ஆனால் அப்படி நடித்தால்தான் அந்த காரெக்டர் நிற்கும். வில்லனாக ஒய்.ஜி.மகேந்திரன் சிறப்பாக செய்திருக்கிறார்.  சினிமா ஒரு கூட்டு முயற்சி என்பது இந்த படத்தில் நன்கு விளங்குகிறது. எடிட்டர், இசையமைப்பாளர், திரைக்கதாசிரியர் என்று அத்தனை பேரும் தங்கள் பங்களிப்பை சிறப்பாக செய்திருக்கிறார்கள். தவற விடக்கூடாத படம். 

இந்தப் படத்தின் கதாநாயகி கல்யாணி ப்ரியதர்ஷன். "இவள் 'வரனே அவஸ்யமுண்டு'  என்னும் மலையாள படத்தின் கதாநாயகியாச்சே? அதில் 
ஷோபனாவின் மகளாக நடித்திருக்கிறாள்"  என்று என் மகள் கூறியதும் ஷோபனா நடிப்பதை நிறுத்தி விட்டார் என்றல்லவா நினைத்தேன், பார்த்து விட வேண்டியதுதான் என்று அந்த மலையாள படத்தை பார்த்தேன். திருமண வயதில் பெண் இருக்கும் சிங்கிள் பேரண்டான ஷோபனாவுக்கும்,  கட்டுப்படுத்த முடியாத தன் கோபத்திற்கு மனோதத்துவ சிகிச்சை எடுத்துக் கொள்ளும்  எக்ஸ் சர்வீஸ் மேனான சுரேஷ் கோபிக்கும் இடையே மலரும் நட்பை அழகாக சொல்லியிருந்த படம். இப்படியெல்லாம் ஏன் தமிழில் படங்கள் எடுப்பதில்லை என்னும் தாபம் வருகிறது. ஆனால் மலையாள இளம் கதா நாயகர்களுக்கும் ஹீரோயிசம் காட்ட வேண்டும் என்ற ஆசை வந்து விட்டதோ என்று தோன்றுகிறது. 

நிவின் பாலி நடித்திருந்த ஒரு படம் சரியாக சென்றுகொண்டே இருந்தது, தீடீரென்று தமிழ்.தெலுங்கு படங்களைப் போல மாறி விட்டது. துல்கர் சல்மான் படத்தில்கூட அவர் ஒரே ஒரு குத்து விடுகிறார், பேருந்தின் கண்டக்டர் பேருந்தின் முன் கண்ணாடியை உடைத்துக் கொண்டு கீழே விழுகிறார். ஹூம்ம்! காதை செவிடாக்கும் ஜாரிங் இசை இல்லை என்பது மலையாளப் படங்களின் சிறப்பு.

படித்த புத்தகங்களை பற்றி அடுத்த பதிவில் பார்க்கலாம்.



Friday, December 10, 2021

காணொளி காணீர்.

இந்த பதிவில் இரண்டு காணொளிகளை பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். ஒன்று கப்பல் கவிழ்ந்தாலும் கன்னத்தில் கை வைக்காதே என்னும் பழமொழிக்கான விளக்கம்.  மற்றது என் மாமா மகன் நடித்திருக்கும் குறும்படம். 

https://www.youtube.com/watch?v=GzjQ9_wSdWQ&t=16s


மேற்கண்ட காணொளியில் நான் கன்னம் என்பது கடப்பாரை போல ஒரு ஆயுதம் என்று கூறியிருந்தேன். எங்கள் உறவினரான திருமதி.நிர்மலா கல்யாணராமன் அவர்கள் கன்னம் என்பது உறுதியான மூங்கில் கழி, அதன் கீழ் பாகத்தில் ரசாயன கலவைகள் கலந்த துணி கட்டப்பட்டிருக்கும். அந்தக் காலங்களில் வீடுகள் பெரும்பாலும் மண், சுண்ணாம்பு, காறை போன்ற கரையக் கூடிய பொருட்களால் தான் கட்டப்பட்டிருக்கும் என்பதால் ரசாயன கலவை கொண்ட கன்னத்தால் சுவரை சத்தமில்லாமல் கரைத்துவிட முடியும். என்னும் விளக்கத்தை அளித்திருந்தார்.

அடுத்து பிராயச்சித்தம் என்னும் குறும்படத்தை பார்த்து உங்கள் கருத்தை பகிருங்கள்.




https://www.youtube.com/watch?v=bpgvrRhmKFU




Monday, December 6, 2021

கிறிஸ்துமஸ் அலங்காரங்கள்

கிறிஸ்துமஸ் அலங்காரங்கள் 

ஒவ்வொரு ஊருக்கும் ஒரு அழகு உண்டு அந்த பிராந்தியத்திற்கு என்று விசேஷமான பண்டிகைகள் உண்டு. அது வரும் சமயத்தில் அந்த இடத்தின்  பொலிவு அதிகமாகிவிடும். பொங்கல் என்றால் கிராமங்களில்தான் அதன் அழகை பார்க்க முடியும் நாங்கள் திருச்சியில் இருந்த வரை  தீபாவளி கடைத் தெருவை பார்ப்பதற்கென்றே ஒருமுறை சின்ன கடை வீதி பெரிய கடை வீதி எல்லாம் சுற்றி விட்டு வருவோம்.  சென்னையிலும் விண்டோ ஷாப்பிங் செய்யவே டி.நகர் சென்றிருக்கிறோம். ஊரே ஜொலி ஜொலிக்கும்.  ஓமானில் ரமதான் வருகிறது என்றால் அந்த ஊரின் தோற்றமே மாறிவிடும். ஒரு ஃபெஸ்டிவல் மூடு வந்து விடும். கடைகள் எல்லாம் இரவு பதினொன்றரை திறந்திருக்கும். பூங்காக்களும் அப்படியே. நிறைய பேர் இரவு பூங்காக்களுக்கு குடும்பத்தோடு சென்று உணவருந்தி விட்டு மெல்ல வீடு திரும்புவார்கள். அதைப்போல இப்பொழுது இங்கு கனடாவில் கிறிஸ்துமஸ் நெருங்கிக் கொண்டிருப்பதால் ஊர் விளக்கு அலங்காரங்களால் ஜொலிக்கிறது. அதன் சில காட்சிகள் உங்கள் பார்வைக்கு



நாதன் பிலிப் ஸ்கொயர்(Nathan Phillips square) என்னும் இடத்தில் நிறுவப்பட்டிருக்கும் இந்த கிறிஸ்துமஸ் மரம்தான் டொரோண்டோவின் அதிகாரபூர்வ கிருஸ்துமஸ் மரம். 58 அடி  உயரமும்,, 300,000 விளக்குகளும், 500 அலங்கார அமைப்புகளும் கொண்டிருக்கிறது. இந்த மரம் நிறுவப்பட்ட பிறகுதான் மற்ற இடங்களில் கிருஸ்துமஸ் மரங்கள் நிறுவப்படுமாம். 








உறைந்திருக்கும் பனியில் ஸ்கேட்டிங் விளையாடுபவர்கள் அவுட் ஆஃப் 
ஃபோகஸில் தெரிகிறார்களா? 

பனிக்கட்டி சிற்பங்கள் 


ஈடன் சென்டர் என்னும் வணிக வளாகத்தில் வைக்கப்பட்டிருந்த பெரிய கிருஸ்துமஸ் மரம். 


Friday, December 3, 2021

பெயரில் என்ன இருக்கிறது?

பெயரில் என்ன இருக்கிறது?

ஒரு ரோஜாவை எந்த  பெயரிட்டு  அழைத்தால் என்ன?  அது  ரோஜாவாகத்தனே இருக்கும்  என்னும் ஷேக்ஸ்பியரின் பிரபலமான
வாசகத்தை எல்லோரும் ஒரு முறையாவது மேற்கோள் காட்டாமல்
இருக்க மாட்டோம். ஆனால் பெயர் அவ்வளவு சாதாரணமான விஷயம்
கிடையாது என்பது 18 .3 .12 அன்று 'நீயா நானா'வில் விவாதிக்கப்பட பொழுது
புரிந்தது. ராஜரத்தினம்,  புகழேந்தி  என்ற ஆண் பெயரைக்  கொண்ட  பெயரைக் கொண்ட பெண்களும், சிந்து,தேன்மொழி என்றெல்லாம் 
பெயர் கொண்ட ஆண்களும் விவாதத்தில் கலந்து கொண்டனர்.

பொதுவாக ஆண் பெயெர் கொண்ட பெண்களெல்லாம் தங்கள் பெயரால்
தங்களுக்கு நேர்ந்த அவமானத்தை கூறும் பொழுது அதிகம் உணர்ச்சி
வசப்படாமல் இயல்பாக பேசினார்கள்.மேலும் ஆண் பெயரைக்  கொண்டிருப்பது தங்களுக்கு தன்னம்பிக்கையை வளர்க்கிறது
என்று கூட கூறினார்கள். இதற்க்கு நேர் மாறாக பெண் பெயரைக் கொண்டிருக்கும் ஆண்கள் பேச்சில் கழிவிரக்கமும், கோபமும், தாபமும் 
வெளிப்பட்டன.

ஒரு இளைஞர் தனக்கு பெண் பெயரை வைத்த  தன் பெற்றோர்  மீது  வெறுப்பு  வருகிறது என்றார். மற்றொருவருக்கு பேசும் பொழுது துக்கம் தொண்டையை
அடைத்தது.

சிறப்பு விருந்தினராக வந்திருந்த சாரு நிவேதிதா(இவர்  நீயா  நானாவின்  நிலைய வித்வான்) இப்பொழுது பெயர்கள் தம் அடையாளங்களை இழந்து
விட்டன என்றார். உண்மைதான். முன்பெல்லாம் பெயரை  வைத்து  அவர்  தென் இந்தியரா, வட இந்தியரா என்று  கணிக்க  முடியும்.  ஏன்  தமிழ் நாட்டை  எடுத்துக் கொண்டாலே பெயரை வைத்து அவர் தமிழ் நாட்டின்  எந்த  பகுதியைச்  சார்ந்தவர்,  எந்த  குலத்திர்க்குரியவர்  என்றெல்லாவற்றையும்  அறிந்து கொண்டுவிட முடியும்.

குருசாமி, குருநாதன், சுவாமிநாதன் போன்ற பெயர்களை கொண்டவர்கள் என்றால் அவர்களுக்கு சுவாமி மலை முருகன் குல தெய்வமாக இருக்கும்.
மன்னார்குடியை சேர்ந்தவர்கள் ராஜகோபாலன், விமலா என்றெல்லாம் பெயர்
வைப்பார்கள்.  மாது என்னும் மாத்ருபூதம்,  சுகந்தா/சுகந்தி,  ஜம்புநாதன்,  அகிலா போன்ற பெயர்கள் திருச்சி மாவட்டகாரர்களுக்கு    உரியவை.  சப்த ரிஷி, ஸ்ரீமதி போன்ற பெயர்கள்  லால்குடி  வட்டத்தில்  உண்டு.  காந்திமதி, கோமதி, நெல்லையப்பன் போன்ற பெயர்கள்  நெல்லை  மாவட்டதிற்குரியவை  என்று  சொல்லத் தேவை இல்லை. 

தாங்கள் வைணவர்கள் என்று அப்பட்டமாக வெளிப்படுத்தும் கமலவல்லி, வேதவல்லி, குமுதவல்லி,உப்பிலி, கேசவன்,போன்ற பெயர்களும் மற்றும் ஆராவமுதன், வகுளாபரணன் என்ற அழகான தமிழ் பெயர்களும் போனதெங்கே?

உறவில் ஒரு குழந்தைக்கு இவியான் என்று பெயர். கூகுளில் தேடி வைத்திருக்கிறார்கள். இவியான் என்றால் சிவா என்று பொருளாம். நமக்கு இவியான் என்றால் வைட்டமின் இ மாத்திரைதான் நினைவுக்கு வரும். நிகிதா என்றால்  ரஷ்ய  மொழியில் 'சாந்தி' என்று  பொருளாம், அதனால்  தன்  மகளுக்கு நிகிதா என்று பெயர் வைத்திருப்பதாக எங்கள் நட்பு வட்டத்தில் ஒரு பெண்மணி கூறினார். சாந்தி என்றே வைத்திருக்கலாமே! எந்த ரஷ்யரும் சாந்தி என்று  பெயர்  வைப்பதாக  தெரியவில்லை.  ஏன்   நாம்  வட  இந்திய  பெயர்களை ஸ்வீகரித்திருக்கும்  அளவிற்கு அவர்கள்  செய்வதாக தெரியவில்லை. நாம்தான் நம் அடையாளங்களை தொலைத்து  விட்டு நிற்கிறோம்.

இந்திய பெயர்கள் வெளிநாடுகளில் படும் பாடு...! நான் அரபுநாடுகள் ஒன்றில்  மினிஸ்டரியில் பணிக்கு சேர்ந்த பொழுது உன் பெயர் என்ன என்று கேட்ட என் மேலதிகாரியிடம்,"பானுமதி" என்றதும்,"ஓ டிபிகல்ட்! இந்டியன் நேம்ஸ்" என்றார் அஹமத் பின் அப்துல் காதர் அல் கசானி" என்று பெயர் வைத்துக் கொண்டிருந்த அவர். 

பானுமதியே கஷ்டம் என்றால் கோவிந்தராஜபுரம் கிருஷ்ணமூர்த்தி வெங்கடேஸ்வரன் என்ற என் கணவரின் பெயரை நினைத்துப் பாருங்கள். ஜொவிந்தா ராகா என்பதற்கு மேல் தொடர முடியாமல் கஷ்டப்பட்ட அவர்கள் என் கணவரின் பெயரில் அவர்களுக்கு உச்சரிக்க சுலபமாக இருந்த மூர்த்தி என்பதை மட்டும் எடுத்துக் கொண்டார்கள்.  

இதற்காகவே சில நண்பர்கள் தங்கள் பெயரை சுருக்கிக்கொண்டார்கள். நீலகண்டன் நீல் ஆனதும் , பத்மநாபன் பாடி(Paddy) ஆனதும் ஓகேதான் தண்டபாணி டான் ஆனதுதான் மனதிற்கு கஷ்டமாக இருந்தது.   

எனிவே, ஒரு  ஜோக்கோடு  இதை  முடிக்கலாம்  என்று  நினைக்கிறேன்.  அருணஜடை என்னும் வித்தியாசமான பெயர்  கொண்ட  ஒரு நண்பர்  சொன்ன ஜோக் இது. 
ஒருவனுக்கு முதலில் பிறந்த பெண் குழந்தைக்கு பூஜா என்று பெயர்  வைத்தானாம் , இரண்டாவதாக பிறந்த பெண்ணுக்கு ஆர்த்தி என்று பெயர்  சூட்டி  விட்டான்.  மூன்றாவதாக  பிறந்தது  ஆண் குழந்தை,  என்ன  பெயர் வைக்கலாம்  என்று  நண்பரிடம்  ஆலோசனை  கேட்க,  குறும்புக்கார  அந்த  நண்பன்,  பேசாமல்  குருக்கள்  என்று  வைத்து  விடேன் என்றானாம். 

இது ஒரு மீள் பதிவு. மத்யமரில் உங்கள் பெயர் உங்களுக்கு கொடுக்கப்பட்டதன் காரணம் என்ன? நீங்கள் யாருக்காவது பெயர் வைத்திருக்கிறீர்களா? உங்களுக்கு பிடித்த ஐந்து பெயர்களை எழுதுங்கள் என்றெல்லாம் கேட்டிருந்தார்கள், அப்பொழுது நான் பெயரில் என்ன இருக்கிறது என்னும் தலைப்பில் ஒரு பதிவு எழுதியிருந்தது நினைவுக்கு வந்தது. மத்யமரில் நான் எழுதியது கீழே:

"உனக்கு யார் பானுமதி என்று பெயர் வைத்தார்கள்?" என்று ஒருவர் என்னை கேட்டபொழுது என்னால் பதில் சொல்ல முடியவில்லை. ஏனென்றால் எனக்கு இந்தப் பெயரை வைக்க வேண்டும் என்று யோசித்திருப்பார்களா என்பது சந்தேகம்தான். 

நான் என் வீட்டில் ஏழாவது குழந்தை, ஐந்தாவது பெண், என்னைப் பெற்றது என் அம்மாவுக்கு ஹை ரிஸ்க் டெலிவரி. அம்மா பிழைத்ததே தெய்வ அனுகிரஹம். குழந்தையின் முகத்தையே ஒரு மாதம் கழித்துதான் பார்த்தாளாம். இப்படியிருக்க எனக்கு என்ன பெயர் வைப்பது என்றெல்லாம் யோசித்திருப்பார்களா என்ன?  என் அக்காக்கள் யாராவது அப்போது பிரபலமாக இருந்த பானு என்று அழைத்திருக்க வேண்டும். பள்ளியில் சேர்த்தபொழுது அது பானுமதி ஆகிவிட்டது. வகுப்பில் எப்போதும் இரண்டு மூன்று பானுமதிகள் இருப்போம். 

இப்போது முதல் பாராவின் கேள்விக்கு வரலாம். "உனக்கு யார்  பானுமதி என்று பெயர் வைத்தார்கள்?" என்ற கேள்விக்கு பதில் இல்லாததால் "ஏன்?" என்று எதிர் கேள்வி கேட்டேன் 

"பானுமதி என்பது துரியோதனின் மனைவியின் பெயர், அந்தப் பெயரை வைக்கக்கூடாது" என்றதும் நான்," பானுமதி என்றால் துரியோதனன் மனைவி என்று ஏன் நினைக்க வேண்டும்? பானு என்றால் சூரியன், மதி என்றால் அறிவு, சூரியனைப் போல் பிரகாசிக்கும் அறிவை உடையவள் என்று எடுத்துக் கொள்ளலாமே? அல்லது பானு என்பதை ஒளி என்று கொண்டால் பானுமதி என்பதற்கு ஒளியுடையவள் என்று அர்த்தம் கொள்ளலாம்" என்றேன். அவர் "உடனே அதெப்படி?" என்கிறார்.
"ஸ்ரீமதி என்றால் செல்வம் உடையவள், வசுமதி என்றால் வளம் உடையவள்(பூமாதேவி) என்றெல்லாம் பொருள் கூறுகிறார்கள், அதனால் பானு என்பதை ஒளி என்று கொண்டால் பானுமதி  என்றால் ஒளி உடையவள் என்றுதான் அர்த்தம் கொள்ள வேண்டும்" என்றேன். 

அன்று முதல் எனக்கு என் பெயர் மிகவும் பிடித்து விட்டது. பானுமதி - ஒளியுடையவள் ஆஹா! எத்தனை பொருள் பொதிந்த பெயர்! அதுவும் எப்படிப்பட்ட ஒளி? தான் மாறாமல், தன் ஓளி எதன் மீது படுகிறதோ அந்தப் பொருளை தன் இயல்புக்கு மாற்றும் தன்மை கொண்டதாம் பானு என்னும் ஒளி என்று வேளுக்குடி கிருஷ்ணன் ஒரு முறை கூறினார். என் பெருமை இன்னும் கூடிவிட்டது. 

எங்களுக்கு மகன் பிறந்த பொழுது, என் கணவர் அவருடைய தந்தையின் பெயரான கிரிஷ்ணமூர்த்தியிலிருக்கும் கிருஷ்ணனோடு  சாயி பக்தர்களானதால்  சாய் என்பதை சேர்த்து சாய்கிருஷ்ணன்  என்னும் பெயரை தேர்ந்தெடுத்து விட்டு, வினு என்று கூப்பிடலாம் என்றார். அதற்கு அவர் கூறிய காரணம் வெங்கடேஸ்வரனில் இருக்கும் வி, பானுவில் இருக்கும் னு இரண்டையும் சேர்த்து வினுவாம். என்னிடம் உன் விருப்பம் என்ன? உனக்கு இந்த பெயர் பிடித்திருக்கிறதா? என்ற ஆலோசனை யெல்லாம் கிடையாது. அது எனக்கு கொஞ்சம் வருத்தம்தான். அதை சொல்லிக்கொண்டே இருந்ததால் மகள் பிறந்த பொழுது பெயரை தேர்ந்தெடுக்கும் பொறுப்பை என்னிடமே விட்டு விட்டார். 

எனக்கு பொன்னியின் செல்வனில் வரும் நந்தினி கதாபாத்திரம் மிகவும் பிடிக்கும். அதனால் நந்தினி என்று பெயர் வைக்க விரும்பினேன். ஆனால் நியூமராலஜி கைகொடுக்காததால் சுபாஷிணி என்னும் பெயரை தேர்ந்தெடுத்தேன். சுபாஷிணி என்றால் இனிமையாக பேசுகிறவள் என்று பொருள். அவள் அப்படிதான். மிகவும் தன்மையாகவும்,இனிமையாகவும் பேசுவாள். கோபத்தில் கூட நிதானமிழந்து வார்த்தைகளை கொட்ட மாட்டாள். 

அவளுடைய முதல் மகள் பிறந்தபொழுது அந்த குழந்தைக்கு சாய் ஷிவானி என்ற பெயரை  அவளுடைய மானார் தேர்ந்தெடுத்தார். காரணம் என் மகள் முதல் முதலாக வங்கியில் வேலை கிடைத்து சென்ற ஊர் திருவண்ணாமலை. திருமணமாகி சில மாதங்கள் அங்குதான் இருந்தாள். அதனாலோ என்னவோ என் மகளுக்கு  திருவண்ணாமலை மீது ஒரு தனி பற்று உண்டு.  குழந்தையின் நட்சத்திரம் சிவனுக்குகந்த  திருவாதிரை. எனவே சாய் ஷிவானி! 

என் மகனுக்கு சென்ற வருடம் சியாமளா நவராத்திரியில் பெண் குழந்தை பிறந்ததால் சரஸ்வதியின் பெயரோடு ஸ்ரீ சேர்த்து இருக்க வேண்டும் என்று நினைத்தோம். சரஸ்வதி அஷ்டோத்திரத்தை  படித்த பொழுது ரிதன்யா என்னும் பெயர் எனக்கு பிடித்தது. அதற்கு முன்பே நான் பேத்தியாக இருந்தால் எங்கள் ஊர் தெய்வமான ஹேமாம்பிகா என்னும் பெயரை வைக்க வேண்டும் என்றும், பேரனாக இருந்தால் ஹேமந்த் என்று பெயரிட வேண்டும் என்றும் நினைத்திருந்தேன்.  அக்ஷரா என்னும் பெயர் என் மருமகளின் பெற்றோர்களுக்குப் பிடித்தது. மருமகளின் தேர்வு நவ்யா. ஆக நான் விரும்பிய ஹேமாம்பிகா, சம்பந்திகளின் தேர்வான அக்ஷரா, என்ற இரு பெயர்களோடு மகன் மருமகளின் விருப்பமான நவ்யா என்பதோடு ஸ்ரீ சேர்த்து நவ்யாஸ்ரீ என்று மூன்று பெயர்களிட்டோம். நவ்யாஸ்ரீதான் அஃபிஷியல்!

பிடித்த பெண் பெயர்கள் 
ஹேமா 
பூர்ணா
அபர்ணா 
ராதிகா  

ஆண் பெயர்கள் 
க்ருத்திவாசன் 
வகுளாபரணன் 
ஆராவமுதன் 

        
 
  
      


                                

Monday, November 29, 2021

நயாகரா

நயாகரா


கனடா என்றாலே எல்லோருக்கும் நினைவுக்கு வருவது நயாகரா நீர்வீழ்ச்சி. கடந்த வெள்ளியன்று அங்கு ஒளியலங்காரங்கள் தொடங்க இருப்பதால் வெள்ளியன்று மதியம் அங்கு சென்றால் சூரிய வெளிச்சத்திலும் நயாகராவை பார்த்து பிரமிக்கலாம், இருட்டிய பிறகு ஒளியலங்காரங்களையும் ரசிக்கலாம் என்று நினைத்தோம். ஆனால் வெள்ளியன்று என் அக்கா பேத்திக்கு ஜலதோஷம், லேசான ஜுரம் என்பதால் செல்ல முடியவில்லை, சனிக்கிழமைதான்(27.11.21) செல்ல முடிந்தது. 

நயாகரா நீர்வீழ்ச்சி என்று அழைக்கப்பட்டாலும் ஹார்ஸ் ஷூ ஃபால்ஸ், அமெரிக்கன் ஃபால்ஸ், பிரைடல் வெய்ல் ஃபால்ஸ் என்னும் மூன்று நீர்வீழ்ச்சிகளை கொண்டது. நீர் வரத்து அதிகமாக இருக்கும் நாட்களில் ஒரு வினாடிக்கு 225,000 க்யூபிக் ஃபீட் நீர் விழுமாம். சராசரியாக 85000 கியூபிக் ஃபீட்.  இந்த நீர்நவீழ்ச்சியின் பெரும் பகுதி கனடாவிலும், சிறு பகுதி அமெரிக்காவிலும் இருக்கிறது. இந்த இரு நாடுகளையும் ரெயின்போ பிரிட்ஜ் என்னும் ஒரு பாலம் இணைக்கிறது.  இங்கிருக்கும் நீர்மின் நிலையம் கனடாவின் மின்சார தேவையை பூர்த்தி செய்வதில் பெரும் பங்கு வகிக்கிறது. 

அதுவும் சனியன்று நயாகரா செல்லலாம் என்று காலை பதினோரு மணிக்குத்தான் முடிவெடுத்தோம். எனவே நினைத்தது போல் சீக்கிரம் கிளம்ப முடியவில்லை. நயாகராவை அடைந்த பொழுதே மாலை ஐந்து மணி ஆகி விட்டது. இப்பொழுதெல்லாம் மாலை நாலரைக்கே இருட்டத் தொடங்கி விடுகிறது. ஐந்து மணிக்கு நல்ல இருட்டாகி அங்கு விளக்கு அலங்காரங்கள் ஒளிரத் தொடங்கி விட்டன. அருவிக்கு அருகில் வாண வேடிக்கைகளும் தொடங்கி விட்டன.

அருவியை அருகில் சென்று பார்த்தோம். வழியெங்கும் விளக்கு அலங்காரங்கள், செல்ஃபி எடுத்துக் கொள்ள ஸ்டாண்டுகள். 

 






















சுற்றுலா பயணிகள் அதிகம் வருவதால் அவர்களை கவர்ந்திழுக்கும் பல அம்சங்கள், கேசினோ எனப்படும் சூதாட்ட கேளிக்கை விளையாட்டுகள் நிறைய இருப்பதால் அந்த வீதியே ஜொலிக்கிறது. என்னதான் செயற்கை வெளிச்சத்தில் குளித்தாலும் பகல் வேளையில் பாக்கும் பொழுதுதான் அதன் பிரும்மாண்டத்தை உணர முடியும் என்பது என் மகளின் கருத்து. உணர்ந்தால் உங்களோடு பகிர்வேன். 


Friday, November 26, 2021

தி.ஜானகிராமன் நூற்றாண்டு.

தி.ஜானகிராமன் நூற்றாண்டு. 




இந்த வருடம் எழுத்தாளர் தி.ஜானகிராமனின் நூற்றாண்டு. அவருடைய பல படைப்புகளை படித்து ரசித்திருக்கிறேன். மோகமுள் படித்த பொழுது இந்தக் கதையை படித்துக் கொண்டிருக்கும் பொழுதே என் மூச்சு பிரிய வேண்டும் என்று தோன்றியது. கும்பகோணத்தில் பிறந்து,  டில்லியில் வாழ்ந்தவர். 

தஞ்சை ஜில்லாவை சேர்ந்தவராக இருந்தாலோ என்னவோ இவருக்கு காவிரி மீது ஒரு தனி காதல் உண்டு.  இவருடைய எல்லா கதைகளிலும் காவிரி ஓடும். இவருடைய எல்லா கதாநாயகிகளும் காவிரியைப் போலவே அழகாகவும், கம்பீமாகவும் இருப்பார்கள்.

நம் நாட்டில் தி.ஜானகிராமனின் நூற்றாண்டு விழாவை கொண்டாடுகிறார்களா என்று தெரியவில்லை, கானடாவிலிருந்து வெளிவரும்  'இலக்கிய வெளி' என்னும் தமிழ் பத்திரிகை தி.ஜானகிராமன் சிறப்பிதழாக வெளியிட்டிருக்கிறது. அதில் அவருடைய மகள் அவரைப் பற்றி எழுதியிருப்பதை இங்கே உங்களோடு பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி. 



 







இலக்கிய வெளி ஆசிரியர் திரு. அகில் அவர்களுக்கு நன்றி. 

 

Tuesday, November 16, 2021

சித்திரம் பேசுதடி

சித்திரம் பேசுதடி


ஒரு புகைப்பட பதிவு போட வேண்டும் என்று ரொம்ப நாளாக ஆசை.

ஹலோவின் அலங்காரம் 

என் மகள் வீட்டு மாடியிலிருந்து…





கிறிஸ்துமஸுக்கு தயாராகும் வால்மார்ட்  



பேத்தியின் ஆண்டு நிறைவு நடந்த ராதா கிருஷ்ணா கோவில் 

Saturday, November 13, 2021

கடலைக் கடந்து (இரண்டாம் பாகம்) - 3

கடலைக் கடந்து (இரண்டாம் பாகம்) - 3


இதற்கு முன்னால் விவரித்த நிகழ்வுகள் ஆகஸ்ட் மத்தியில் முடிந்தன. செப்டம்பரில் கிளம்பலாமா? என்று நினைத்தேன். ஆனால் கனடாவிற்கு படிக்கச் செல்லும் மாணவர்கள் செப்டம்பரில் தான் செல்வார்கள் என்பதால் டிக்கெட்டுகள் விலை வானத்தை தொட்டன. "அக்டோபரில் பார்" என்றாள் மகள். அவள் பார்க்கச் சொன்னது பயணம் செய்ய ஏற்ற நல்ல நாள். 

அஷ்டமி,நவமி, பரணி, கார்த்திகை, ஜென்ம நட்சத்திரம், சந்திராஷ்டமம், சூலம் இவை அத்தனையும் இல்லாத நாள் கிடைத்தால் அன்று யோகம் சரியாக இல்லை. நான் பஞ்சாங்கத்தை திருப்பி திருப்பி பார்க்க, என் மகன், “அம்மா ஃபிளைட்ஸ்  கம்மி, என்னிக்கு டிக்கெட் கிடைக்கிறதோ அன்னிக்கு கிளம்ப வேண்டியதுதான், நீ நாளெல்லாம் பார்க்க முடியாது” என்றான். உண்மைதான்.

இதற்கிடையில் என் மகள் டெலிபோனில் இன்னொரு கண்ணாடி வாங்கி கொள், பல் டாக்டரை பார்க்கவேண்டுமென்றால் பார்த்து விடு என்று கூற, ஒரு டென்டிஸ்ட்டை சென்று பார்த்தேன். அவர் கடைசி பல்லை பிடுங்க வேண்டும் என்றார். அவ்வளவுதானே? பிடுங்கி விடலாம் என்று சரி என்று சொல்லி விட்டேன். அந்தப் பல்லானால் என்னை பிரிய முரண்டு பிடித்ததில் சிறிய அறுவை சிகிச்சை, ஊருக்குச் செல்வதற்கு நாள் நெருங்கி கொண்டிருக்கிறது, ஒரு பக்க கன்னம் வீக்கம் வடியவேயில்லை. டாக்டரானால், "கவலைப்படாதீர்கள்,தையல் பிரித்தால் சரியாகி விடும் வாயைத் திறங்கள்" என்று என் திறந்த வாயினுள் எட்டிப் பார்த்து விட்டு, "ஓ! டிசால்விங் ஸ்டிச்சஸா?" என்று என்னையே கேட்கிறார். எப்படியோ நல்லபடியாக வீக்கம் வடிந்தது. ஒரு தனி கதை. 

விமானங்கள் குறைவு. சில விமானங்களில் பயணித்தால் இரண்டு மூன்று நாடுகள் வழியாக செல்ல வேண்டும். அதில் ஒரு நாட்டில் மூன்று நாட்கள் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும். கனடாவை கண்ணால் காண நான்கு நாட்கள் ஆகி விடும். அபுதாபி வழியாக செல்லும் எதிஹாட்டில்(Etihad)  பயணித்தால் அபுதாபியில் ஆறு மணி நேரங்கள் ட்ரான்சிட்டில் காத்திருக்க வேண்டும். அங்கு கொரோனா  டெஸ்ட் எடுத்துக் கொள்ள வேண்டும்,  ரிசல்ட் இரண்டு மணி நேரத்தில் வந்து விடும். அங்கிருந்து டொரோண்டோவை அன்று மாலையே அடைந்து விடலாம். ஆனால் அந்த விமானம் பெங்களூரிலிருந்து வாரத்திற்கு இரண்டுதான். எப்படி நாள் பார்ப்பது? 29ம் தேதி அதிகாலை 2:30க்கு பெங்களூரிலிருந்து விமானம். நான் 28 இரவு எட்டு மணிக்கு வீட்டை விட்டு கிளம்பினால்  போதும் என்று நினைத்தேன். இதிஹாட் அலுவலகத்திலிருந்து காலையில் அழைத்து இரவு ஒன்பதரை மணிக்கு கவுண்டர் திறந்து விடுவோம், அப்போதே வந்து விடுங்கள் என்றதால் வீட்டிலிருந்து ஏழு மணிக்கு முன்பாகவே கிளம்பி விட்டேன்.

விமான நிலையத்தில் அபுதாபி செல்லும் பயணிகள் செக் இன்  செய்த பிறகு டொரண்டோ  பயணிகள் செக் இன் செய்யலாம் அமருங்கள் என்றார்கள். சற்று பொறுத்து டொரோண்டோ பணிகள் செக் இன் செய்யலாம் என்ற அறிவிப்பு வந்ததும் முதல் ஆளாக செக் இந்த கவுண்டரை நோக்கி,  “ஆஹா! நாம்தான் முதல் ஆளா. என்று சந்தோஷமாக சென்றேன்.  நான் அப்படியெல்லாம் சந்தோஷப்பட்டு விட முடியுமா? அங்கும் ஒரு சிறிய பிரச்சனை. 

அங்கிருந்த பணியாளர், “ரிடர்ன் டிக்கெட் இல்லையா?” என்றார். 

“இல்லை நான் சூப்பர்  மாம்  விசாவில்  செல்வதால் ரிடர்ன் டிக்கெட் தேவையில்லை” என்றதை ஒப்புக் கொள்ளாமல், “கனடாவில் யார் இருக்கிறார்கள்? மகளா? அவரோடு பேச முடியுமா?” என்று கேட்க, மகளை தொடர்பு கொண்டு ஃபோனை அவரிடம்  கொடுத்தேன், மகளோடு நீண்ட நேரம் விவாதம் செய்த பிறகு என்னை செக் இன் செய்ய அனுமதித்தார்கள். இதில் வேடிக்கை என்னவென்றால் என்னுடன் பயணித்த இரு இளம் பெண்களும் கூட முதல் முறையாக கனடாவிற்கு பயணித்தார்கள். 2019 இல் திருமணமான இருவருக்கும் இப்போதுதான் விசா கிடைத்து பயணிக்கிறார்கள், அவர்களிடமும் ரிடர்ன் டிக்கெட் கிடையாது, ஆனால் அவர்களிடம் எந்த பிரச்னையும் பண்ணாமல் செக் இன் செய்ய அனுமதித்து விட்டார்கள்!!!

அபுதாபி விமான நிலையத்தில் ஒட்டகத்தை கட்டிக்கொண்டு

அபுதாபியில் விமான நிலையத்தில் உணவகங்கள் ஏதும் திறந்திருக்காது என்று கூறப்பட்டதற்கு மாறாக திறந்திருந்தன. படிப்பதற்காக  கனடா வரும் என் பெரிய அக்காவின் பேத்தி அங்கு என்னோடு இணைந்து கொண்டாள்.  குழந்தையாக இருந்த பொழுது ‘ர’ சொல்ல வராமல் ‘லமணி  பெலிப்பா", ‘கிலி’ மாமா" என்றெல்லாம் சொல்லிக் கொண்டிருந்த குழந்தை படிப்பிற்காக வெளிநாடு செல்லும் அளவிற்கு வளர்ந்து விட்டாளா? என்று வியப்பாக இருந்தது.


பயணத்தில் ஒரு தெலுங்கு படம், ஒரு மலையாள படம், ஆங்கில பிரண்ட்ஸ் சீரியலின் சில பகுதிகள் பார்த்தேன். கொஞ்சம் தூங்கினேன். குறிப்பிட்ட நேரத்திற்கு சற்று முன்னதாகவே விமானம் தரை இறங்கியது. இமிக்ரேஷனை முடித்து வெளியே வர மூன்று மணி நேரங்களாகி விட்டது. கஸ்டம்ஸ் என்ற கஷ்டம் இல்லை.  இரவு எட்டு மணிக்கு வீட்டை அடைந்தோம். வரும் வழி எனக்கு மஸ்கட்டை நினைவூட்டியது. மஸ்கட் ஏர்போர்ட்டிலிருந்து சிட்டிக்குள் நுழையும் வழியில் ஹாலிடே இன் ஹோட்டல் இருக்கும், இங்கும் அது போலவே இருக்கிறது.


அடுத்த நாள் ஹாலோவீன் தினம், என் மகள் வசிக்கும் அப்பார்ட்மென்டில் குழந்தைகளுக்கு சாக்லேட்டுகள் வழங்கினார்கள். வெளியே கூட்டம் கூட்டமாக கருப்பு ஆடை அணிந்து கொண்டு கையில் ஒரு பிளாஸ்டிக்  பை அல்லது பக்கெட் எடுத்துக் கொண்டு விபரீத வேடம் புனைந்து வீடு வீடாக சென்று கொண்டிருந்த சிறுவர்கள்..எங்கள் சிறு வயதில் நவராத்திரியில் கொலுவிற்கு அழைக்கும் சாக்கில் சுண்டல் கலக்ஷனுக்குச் சென்றதை  நினைவூட்டினார்கள்.  ஆக நானும் கனடா வந்து விட்டேன். 

†******†***********************************

Sunday, November 7, 2021

கடலைக் கடந்து (இரண்டாம் பாகம்) - 2

கடலைக் கடந்து (இரண்டாம் பாகம்) - 2

பாஸ்போர்ட்டோடு ப்ளூடார்ட் ஊழியரிடம் சமர்ப்பிக்க வேண்டிய எல்லா டாகுமெண்டுகளையும் சனிக்கிழமை மாலையே தயார் செய்துவிட்டு திங்கள் கிழமை காலை பத்து மணி முதல் ப்ளூ டார்ட் ஊழியரை எதிர்பார்க்க ஆரம்பித்தேன். பதினொன்றாகியது, பன்னிரெண்டும் ஆனது.. அவர் வரும் வழியாயில்லை. அவரை தொலைபேசியில் தொடர்பு கொண்டால்," நீங்கள் சனிக்கிழமை தரவில்லை, அதனால் உங்களுக்கான ஆர்டர் கான்சலாகி விட்டது. இனி அடுத்த ஸ்லாட் எப்போது வருமோ அப்போதுதான் வருவோம்" என்று தலையில் குண்டை போட்டார். 

எனக்கு பக்கென்றாகி விட்டது. "இது மாதிரி விஷயங்களில் நாம் திருப்பி அனுப்பக் கூடாது, இப்போது பார்....இனி அடுத்த ஸ்லாட் எப்போது வருமோ..? மேலும் அவர்கள் கேட்ட பொழுது நாம் சப்மிட் பண்ணவில்லை என்றால் நமக்கு விருப்பமில்லை என்று கூட அவர்கள் புரிந்து கொள்ளலாம்.."என்றெல்லாம் நான் புலம்ப என் மகன்,"பதட்டப்படாதே மா, இந்த ஆள் ப்ளூடார்டின் கூரியரை கலெக்ட் பண்ணுவதற்காக ஆள். அவனுக்கு சனிக்கிழமை இந்த வேல கொடுத்திருப்பார்கள். அடுத்தது வேறு யாரையாவது அனுப்புவார்கள். ஒரே ஒரு முறை முயற்சி செய்து விட்டு ஆள் இல்லை என்று கூறிவிட மாட்டார்கள் அடுத்தது என்ன செய்யலாம் என்று யோசிக்கலாம்" என்று எனக்கு தைரியம் கூறி விட்டு வி.எஃப்.எஸ். க்ளோபல், ப்ளூ டார்ட் இரண்டு கஸ்டமர் கேர் எண்களை தொடர்பு கொண்டதில் உருப்படியாக ஒரு தகவலும் கிடைக்கவில்லை. எங்கள் வீட்டிற்கு அருகில் இருக்கும் ப்ளூ டார்ட் அலுவலகத்திற்கு சென்று விசாரித்ததில் முதலில் அங்கிருந்த பெண்ணிற்கு சரியாக புரியவில்லை. என்னிடமிருந்து ரெஃபரென்ஸ் நம்பரை வாங்கி அருகிலிருந்த தலைமை அலுவலகத்தை தொடர்பு கொண்டு விசாரித்தார். அவர்கள் என் பெயர், விலாசம் இவற்றை உறுதி செய்து கொண்டு டாகுமெண்ட்ஸ் அடங்கிய என்வெலப் ரெடியாக இருந்தால் அந்தப் பெண்ணிடம் சமர்ப்பிக்க சொன்னார்கள். அதுதான் ரெடியாக இருந்ததே.. ப்ளூ டார்டின் கிளை அலுவலகத்தில் சமர்பித்து விட்டு வந்தேன். 

அவர்கள் தந்த ரெஃபரென்ஸ் நம்பரைக் கொண்டு பாஸ்போர்ட் கனடியன் கான்சலேட்டிற்கு அனுப்பப்பட்டு விட்டது, விசா ஸ்டாம்பிங்கிற்காக காத்துக் கொண்டிருக்கிறது, விசா ஸ்டாம்ப் செய்யப்பட்டு விட்டது. இன்னும் இரண்டு நாட்களில் திருப்பி அனுப்பப்பட்டுவிடும் என்றெல்லாம் தகவல்கள் அறிய முடிந்தது. ஒரு வழியாக விசா ஸ்டாம்ப் ஆகி பாஸ்போர்ட் வந்ததும் நிம்மதி பெருமூச்சு வந்தது.

எங்கள் வீட்டிற்கு அருகில் இருக்கும் விநாயகருக்கு ஒரு சூரைக்காயை போட்டு விட்டு அடுத்த நிகழ்ச்சியான பயணத்திற்கு நாள் பார்க்கும் படலம் துவங்கியது.

-தொடரும்




Saturday, November 6, 2021

கடலைக் கடந்து (இரண்டாம் பாகம்)

கடலைக் கடந்து (இரண்டாம் பாகம்)

சென்ற வருடமே  நடந்திருக்க வேண்டியது, இந்த வருடம்தான் சாத்தியமானது. என்னுடைய கனடா  விஜயத்தைத்தான் சொல்கிறேன். கனடாவில்  வசிக்கும் என் மகள் அவளுடைய இரண்டாவது பிரசவத்திற்கு துணையாக நான் வர வேண்டும்  என விசாவிற்கு  ஏற்பாடு செய்தாலும் கொரோனாவினால் என் பயணம் தடை பட்டது .  

நானும் வி.எப்.எஸ் க்ளோபல் இப்போது திறந்து விடும், அப்போது திறந்து விடும் என்றெல்லாம் எதிர்பார்த்து அடிக்கடி அந்த வெப் சைட்டை திறந்து பார்த்து "யூ ஆர் நாட் எலிஜிபில் இன் திஸ் காடகிரி" என்னும் அறிவிப்பை பார்த்து நொந்து போய் அதை பார்ப்பதை நிறுத்தி விட்டேன். என் மகளும், மாப்பிள்ளையும் தனியாகவே சமாளித்து விட்டார்கள். என் மருமகளுக்கும்  பிப்ரவரியில் பெண் குழந்தை பிறந்தது. பெண் வயிற்றுப் பேத்தியை கைகளில் வாங்கப் போகிறேன் என்று நினைத்த நான் பிள்ளை வயிற்றுப் பேத்தியை கைகளில் வாங்க நேர்ந்தது எதிர்பாராத இனிய ஆச்சர்யம்.

அதன் பிறகு கனடா விஜயம் என்பதை மறந்து விட்டேன். ஒரு நாள் அதிகாலையில் என்னை அழைத்த என் மகள், மெஸேஜ் பார்த்தாயா? உனக்கு வி.எஃப்.எஸ். க்ளோபலிலிருந்து பயோ மெட்ரிக் கொடுக்கச் சொல்லி மெயில் வந்திருக்கிறது" என்று சந்தோஷமாக சொன்னபொழுது நம்ப முடியாமல் மெயிலை செக் பண்ணினேன். பயோ மெட்ரிக் கொடுப்பதற்கான ஸ்லாட் ஒரு மாதம் கழித்தே கிடைத்தது. 

பயோமெட்ரிக் கில் பத்து விரல்கள் ரேகைகளையம் பதிய வேண்டும். எனக்கு டிடர்ஜென்ட் அலர்ஜி உண்டு. பாத்திரம் துலக்கும் சோப்பு போன்றவைகளை பயன்படுத்தினால் கைகள் வெடித்து விடும். அல்லது சொரசொரப்பாகி விடும். இன்னும் ஒரு மாதம் இருக்கிறதே  ஜாக்கிரதையாக இருந்து கைகளை பாதுகாத்து கொள்ளலாம் என்று மிகவும் எச்சரிக்கையாக இருந்தேன்.  கை விரல்களில் வெடிப்பு அல்லது வெட்டுக்காயம் போன்றவை இருந்தால் அது சரியாகும் வரை பயோமெட்ரிக் கொடுக்க முடியாதாம்.  என்னதான் ஜாக்கிரதையாக இருந்த போதிலும் நடு விரலிலும், சுண்டு விரலிலும் லேசான சொரசொரப்பு இருந்தது. வி.எப். எஸ்.ஸில்  என் படிவத்தை பெற்றுக் கொண்ட பெண் என் கையைப் பார்த்து விட்டு, “லெட் அஸ் சீ” என்று பயமுறுத்தினார். ஆனாலும் நல்ல விதமாகவே பயோ மெட்ரிக்ஸ் முடிந்தது. அன்று இரவே மெடிக்கல் டெஸ்ட் கொடுக்கச் சொல்லி மெயில் வந்தது. 

அவர்கள் குறிப்பிட்டிருந்த மெடிக்கல் சென்டருக்கு போனில் முன்பதிவு செய்து கொண்ட பொழுது,"சாப்பிட்டு விட்டு வர வேண்டுமா?" என்று கேட்டதற்கு,"தயவு செய்து சாப்பிட்டு விட்டு வாருங்கள்" என்றார்கள்.  ஏன் அப்படி சொன்னார்கள் என்பது அங்கே போனதும்தான் தெரிந்தது. அங்கு காபி/டீக்கு கூட வழியில்லை. காலை பத்து மணிக்கு அங்கு சென்ற நான் எல்லா டெஸ்டுகளையும் முடிக்க மாலை நான்கு மணியாகி விட்டது.

இரண்டு நாட்கள் கழிந்து விசா ஸ்டாம்ப் செய்வதற்காக உங்கள் பாஸ்போர்ட்டை கலெக்ட் பண்ணிக் கொள்ள ப்ளூ டார்ட்டிலிருந்து அடுத்த ஐந்து வேலை நாட்களுக்குள் ஆட்கள் வருவார்கள்.  என்று தகவல் வந்தது.  ஆனால் அதே நாளில் நான் சாப்பிட்டுக் கொண்டிருக்கும் பொழுதே "மேடம் உங்கள் டாக்கு மெண்ட்ஸ் தயாரா? நான் ப்ளூ டார்ட்டிலிருந்து வந்திருக்கிறேன்" என்று ஒருவர் அழைத்தார். சில பிரிண்ட் அவுட்டுகள் எடுக்க வேண்டி இருந்ததால் அவரால் இரண்டு மணி நேரம் கழித்து வர முடிந்தால் நான் எல்லாவற்றையும் தயார் செய்து விடுவதாக கூற அவரும் ஒப்புக்கொண்டார். என் மகன், "இரண்டு மணி நேரத்தில் எப்படி தயார் செய்ய முடியும்? நாளைக்கு வரச்சொல்" என்றான். நானும் அவன் சொன்னபடி ப்ளூ டார்ட் ஊழியரிடம் வேண்டி கொண்டேன், அவரும் ஒப்புக் கொண்டார், ஆனால் அது எவ்வளவு பிழை என்பது திங்களன்று புரிந்தது.

- தொடரும்...







Tuesday, October 19, 2021

பார்த்தேன்,பார்த்தேன்,பார்த்தேன்...

பார்த்தேன்,பார்த்தேன்,பார்த்தேன்... 

பலர் பாராட்டிய 'ஹோம்' என்னும் மலையாள படத்தை நானும் பார்த்தேன். எனக்கென்னவோ அப்படி பிரமாதமாக தோன்றவில்லை. படம் ரொ...ம்...ப... ஸ்லோ! தவிர  கட்டுக்கோப்பாக இல்லாமல் அலைகிறது. 


அடுத்து நான் பார்த்த இன்னொரு மலையாள படமான 'கோல்ட் கேஸ்' எனக்கு பிடித்தது. அமானுஷ்யம் கலந்த திரில்லர்.  அதிதி பாலன், லட்சுமி பிரியா, மற்றும் பிரித்விராஜ் நடித்திருக்கும் படம். நல்ல திரைக்கதை, மற்றும் சாதுர்யமான எடிட்டிங் படத்தின் பிளஸ்.


நேற்று 'தலைவி' பார்த்தேன். இந்தப் படம் பிரமாதம் என்று சிலரும், மஹா மட்டம் என்று சிலரும் கூறினார்கள். ஒரு முறை பார்க்கலாம்.  எம்.ஜி.ஆர். போலவும், கருணாநிதி போலவும், ஒப்பனை செய்து விட்டு, எம்.ஜே.ஆர்., கருணா, ஆர்.என்.வீ. என்று பெயரை சற்று மாற்றினால் தெரியாதா என்ன? கதாநாயகியின்  பெயர் ஜெயா. 

ஒப்பனை கலைஞரை பாராட்ட வேண்டும். எம்.ஜி.ஆரை கண்முன் கொண்டு வந்து நிறுத்தி விட்டார். கொஞ்சம் உயரம்! முதல் பாதியை விட, இரண்டாம் பாதியில் சிறப்பாக செய்திருக்கிறார் அரவிந்த்சாமி. 

ஜெயலலிதாவின் பாத்திரப் படைப்பு சரியில்லை. அவரை ஆணவம், கர்வம், திமிர், தான் நினைத்ததை சாதிக்க எந்த நிலைக்கும் செல்பவர் என்பது போல் காட்டியிருப்பது சரியா? ஆனால் அதை திறம்பட செய்திருக்கிறார் கங்கனா ரெனாவத்.  ஜெயாவின் அரசியல் ஆலோசகரான சோ எங்கே? 

தலைவி என்று பெயர் கொடுத்து விட்டதால் ஜெய லலிதாவின் அரசியல் வாழ்க்கையை மட்டும் காட்டினால் போதும் என்று நினைத்து விட்டார் இயக்குனர், ஆனால் பாத்திர படைப்பில் கோட்டை விட்டது தோல்வி. இந்தப் படத்தை பார்த்தால் ஜெயாவின் மீது அபிமானமோ, மரியாதையோ,பரிதாபமோ வராது. அவருடைய சொந்த வாழ்வில் அவர் சந்தித்த தோல்விகள், அவமானங்கள், இழப்புகள் இவை எதையும் காட்டாமல், தலைவி என்னும் இடத்திற்கு வெகு சுலபமாக வந்து விட்டது போல சித்தரித்திருக்கிறார். கங்கானாவிற்கு குரல் கொடுத்திருக்கும் சவிதாவுக்கு ஸ்பெஷல் பாராட்டுகள்!
தம்பி ராமையாவும், சமுத்திரக்கனியும் தங்கள் பங்கை செம்மையாக செய்திருக்கிறார்கள். 

ஓ.டி.டி. யை விட்டு விட்டு தொலைக்காட்சிக்கு வரலாமா? சனி, மற்றும் ஞாயிறு சன் டி.வி.யில் ஒளிபரப்பாகும் 'மாஸ்டர் செஃப் இந்தியா' - தமிழை தொடர்ந்து பார்க்கிறேன்.  ஒரு மணி நேரம் போவதே தெரியவில்லை. அதில் அவர்கள்  கொடுக்கும் சேலஞ்சுகளும், அதை போட்டியாளர்கள் திறம்பட சமாளிப்பதும் பார்க்க வெகு சுவாரஸ்யம். ஆனால் அப்படிப்பட்ட உணவுகளை வீட்டில் சாதாரணமாக செய்து சாப்பிட முடியுமா? என்று தெரியவில்லை. 

யூ டியூபில் நான் ரசிக்கும் ஒரு நிகழ்ச்சி சுபஸ்ரீ தணிகாசலம் வழங்கும் QFR(quarantine from reality). பல வருடங்களுக்கு முன்பு டிசம்பர் சீசனில் ஒருவர், கர்னாடக இசையை வளர்க்க வேண்டுமென்றால் இளைஞர்களுக்கு மியூசிக் அப்ரிசியேஷன் வகுப்பு எடுக்க வேண்டும் என்று பேசியதற்கு,விகடனில் இசையை ரசிப்பது எப்படி என்று எப்படி கற்றுக் கொடுக்க முடியும்? அது இயல்பாக வர வேண்டாமா? என்று எழுதியிருந்தார்கள். இப்போது சுபஸ்ரீ QFR நடத்துவதை பார்த்தால் அந்தக் கேள்வி வராது. அவர் ஒவ்வொரு பாட்டையும் அணு அணுவாக ரசித்து,அதை விவரிக்கும் பொழுது அட! இந்தப் 
பாட்டில் இவ்வளவு விஷயம் இருக்கிறதா? என்று தோன்றும்.   




Wednesday, October 6, 2021

குதிரை

குதிரை


என்னதான் செல்ஃபோனில் காலண்டர் இருந்தாலும் மந்த்லி ஷீட் காலண்டர், டெய்லி ஷீட் காலண்டர் இவைகள் எனக்கு தேவை. அதிலும் மந்த்லி காலண்டரில் எனது விருப்பம் ஜி.ஆர்.டி. காலண்டர். சென்னையில் இருந்தவரை ஒவ்வொரு வருடமும் எப்படியாவது ஜி.ஆர்.டி. காலண்டர் கிடைத்து விடும். அதைப்போலவே ஒரு காலண்டரை எங்கள் எல்.ஐ.சி. ஏஜெண்ட் அனுப்புவார். அதில் தேதிக்கு பின்னால் சில ஸ்வாரஸ்யமான தகவல்கள் இருக்கும். அதில் எனக்கு படிக்க கிடைத்த குதிரை பற்றிய தகவல்களை பகிர்வதில் மகிழ்ச்சி.

மனிதர்களால் மிகவும் நேசிக்கப்படும், பராமரித்து வளர்க்கப்படும் விலங்கு வகைகளில் குதிரை நான்காவது விலங்காக விளங்குகிறது. சென்ற நூற்றாண்டு வரை குதிரைகள் வீடுகளில் செல்ல பிராணிகளாக வளர்க்கப்பட்டன.

குதிரை மனிதர்களின் போக்குவரத்துக்கு பயன்படுத்தப்பட்டது என்பது நமக்குத் தெரியும், மேல் நாடுகளில் ஏர் உழுவதற்கும் பயன்படுத்தப்பட்டனவாம்.

போர்க்காலங்களிலும்,அலங்கார அணிவகுப்புகளிலும் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. பழங்காலத்தில் குதிரைப்படை வீரர்கள் மட்டுமே குதிரையேற்றம் கற்றனர், இப்போது குதிரையேற்றம் ஒரு ஒலிம்பிக் விளையாட்டாகவும் இருக்கிறது. குதிரைகள் பயன்படுத்தப் படும் ஒரு விளையாட்டு நேருவுக்கு மிகவும் பிடித்த போலோ. குதிரைப் பந்தயங்களும் விளையாட்டுதான்,ஆனால் சூதாட்டம் என்பதில் வரும்.

குதிரைப் படைகளை பண்டைய காலத்தில் இருந்தே போரில் பயன்படுத்தி வருகின்றனர். சங்க காலம் தொட்டு தமிழக அரசர்கள் வைத்திருந்த நால்வகை படைகளில் குதிரைப்படையும் ஒன்று. பாண்டிய மன்னனிடம் அமைச்சராக இருந்த மாணிக்கவாசகரின் வாழ்க்கையில் குதிரைக்கு ஒரு முக்கிய இடம் உண்டு. நரியை பரியாக்கிய திருவிளையாடல் நாம் அறிந்ததுதானே.

பொதுமக்களுக்கான குதிரை வண்டியிலிருந்து,அரசர்கள் பயணிக்கும் தேர்கள் வரை ஒருவரோ, பலரோ பயணிக்கும் வண்ணம் வண்டிகள் வடிவமைக்கப்பட்டு அவற்றில் குதிரைகள் பயன்படுத்தப்பட்டன.

குதிரைகளார்ல் மனித குலத்திற்கு கிடைக்கும் இன்னுமொரு நன்மை பாம்பு கடிக்கு மாற்றாக பயன்படுத்தும் மருந்து குதிரையின் உடலிருந்து எடுக்கப் படுகிறது என்பது. குதிரையின் உடலில் பாம்பின் விஷம் ஊசி மூலம் செலுத்தப்படும். உடனே குதிரையின் உடலில் நஞ்சு எதிர்ப்பு நீர்மங்கள் உருவாகும், அந்த நீர்மங்களை குதிரையின் ரத்ததிலிருந்து பிரித்து அதுவே பாம்பு நஞ்சுக்கு மருந்தாக பயன்படுத்தப்படுகிறது. மன நலம் குன்றிய நோயாளிகள் குதிரையோடு பழகும் பொழுது விரைவில் குணமடைகிறார்களாம்.

குதிரைகளின் சராசரி உயரம் அறுபது அங்குலம் முதல் அருபத்திரெண்டு அங்குலம் வரை. அதன் ஆயுட்காலம் இருபதைந்து ஆண்டுகள் முதல் முப்பது ஆண்டுகள் வரை. பிறந்த ஐந்து ஆண்டுகளிலேயே இனப் பெருக்கத்திற்கு தயாராகி விடுகின்றன.

ஒரு நாளில் ஏறக்குறைய பதினோரு கிலோ உணவையும், நாற்பத்தைந்து லிட்டர் நீரும் எடுத்துக் கொள்ளும். கொள்ளும் என்றதும் குதிரையின் உணவு கொள்ளு என்பது நினைவுக்கு வருகிறது. கொள்ளு உட்லில் சேரும் கொழுப்பை கரைக்க வல்லது என்பதால்தான் கொள்ளை தின்னும் குதிரை விண்ணென்று இருக்கிறது என்று கூட சிலர் கூறுவார்கள்.

பாலூட்டிகள் யாவற்றிலும் குதிரையின் கண்களே பெரியது. குதிரைகள் பகலிலும்,இரவிலும் தங்களின் ஒற்றைக் கண்ணால் 350 டிகிரிக்கு மேலும் பார்க்க இயலும். அதாவது முன்னால் உள்ளவை, பின்னால் உள்ளவை, பக்கவாட்டில் உள்ளவை என் அனைத்தையும் பார்க்க இயலும்.

அதைப் போல குதிரைகள் தங்கள் காதுகளை 180 டிகிரி வரை திருப்ப இயலும். எனவே தலையைத் திருப்பாமலேயே எந்தப் பக்கம் இருந்து சத்தம் கேட்டாலும் உணர முடியும்.

குதிரைகளால் நின்று கொண்டே தூங்க முடியும். குதிரையானது சரசரியாக ஒரு நாளைக்கு மூன்று மணி நேரம் வரை தூங்குகிறது. நான்கிலிருந்து பதினைந்து மணி நேரம் வரை நின்று கொண்டே ஓய்வெடுக்கிறது. சிங்கம், புலி, சிறுத்தை போன்ற மாமிச பட்சிணிகளுக்கு இரையாக இருப்பதால், இயற்கையிலேயே இவற்றின் கால்கள் உறுதியாக,மிக விரைவாக ஓடக்கூடிய வகையில் அமைந்துள்ளன.  

தன் எஜமானரின் மன ஓட்டத்தை கண நேரத்தில் உணர்ந்து செயல்படும் அறிவு குதிரைகளுக்கு உண்டு. அப்படி  சில குதிரைகள் சரித்திரத்தில் இடம் பிடித்திருக்கின்றன.

ராணா பிரதாப் சிங்கின் சேத்தக் என்னும் குதிரை முகலாயர்களுடன் ஏற்பட்ட போரில் படுகாயமடைந்தது, அந்த நிலையிலும் எஜமானருக்காக விசுவாசமாக இறுதிவரை போராடியது. அது இறந்த பொழுது கதறியழுத ராணா பிரதாப் சிங், அது உயிர் விட்ட இடத்தில் அதற்கு சமாதி கட்டினார்.

அலெக்ஸாண்டர் வெற்றி பெற்ற பல போர்களில் அவரை சுமந்து சென்ற குதிரையின் பெயர் புசிபலஸ். அதன் கம்பீரமே காண்பவர்களை மிரட்டும். அலெக்ஸாண்டர் புஸிபலஸை தன் குதிரையாக தேர்ந்தெடுத்தபொழுது அவருடைய வயது பதிமூன்று. அப்போதிலிருந்து அந்த குதிரையை அவர் பிரிந்ததே இல்லை.

மராட்டிய வீரன் சிவாஜியை நம்மால் குதிரை மீதுதானே கற்பனை செய்ய முடியும். கற்பனையோ, நிஜமோ நமக்கு நினைவுக்கு வரும் இன்னொரு குதிரை வீரன், அடங்காத டில்லி சுல்தானின் நீலவேணி என்னும் குதிரையை அடக்கிய ராஜா தேசிங்கு.

புராணத்தில் பாற்கடலை கடைந்த பொழுது வெளிப்பட்ட உச்ரைவசஸ் என்னும் குதிரையால் பறக்க முடியும். கிரேக்க புராணத்தில் வரும் பெகாசஸ் என்னும் குதிரைக்கும் இறக்கைகள் உண்டு என்பதால் அதனால் பறக்க முடியும்.

புராண காலத்தில் வரும் ராஜாக்கள் அஸ்வமேத யாகம் செய்யும் பொழுது அதில் முக்கிய அங்கம் வகிப்பது குதிரைகள்தான்.(அஸ்வதம் என்றாலே குதிரைகள்தானே). சூரியன் ஏழு குதிரைகள் பூட்டிய ரதத்தில் வருவதாக நம்புகிறோம்.

குதிரைகளின் எண்ணிக்கையும் குறைந்து கொண்டே வருகிறது என்பது வருத்தம் அளிக்கும் செய்தி.

Moral of the story:

காலண்டர் ஷீட்டுகளை கிழித்து தூர எறிந்து விடாதீர்கள். அதிலும் உங்களுக்கு எழுத ஒரு விஷயம் கிடைக்கலாம். குப்பையில் மாணிக்கம்!

*நீல நிறத்தில் இருப்பவை என் கருத்துக்கள்:

Friday, September 24, 2021

ஈசாவாஸ்ய உபநிஷத் - பாபா காட்டிய விளக்கம்

 ஈசாவாஸ்ய உபநிஷத் - பாபா காட்டிய விளக்கம் 


சென்ற வாரம் நான் விளையாட்டாய் 'ஈசாவாஸ்ய உபநிஷத்' பற்றி எ.பி.யில் கேட்க முடியுமா? என்று கேட்க, அவர்கள் ஈசாவாஸ்ய உபநிஷத் பற்றி ஜடாயு அவர்களின் விளக்கத்தை பகிர்ந்து கொண்டிருந்தார்கள். நன்றாக இருந்தது. 

நேற்று சாய் சத் சரிதம் படித்த பொழுது ஷீர்டி சாய்பாபா அவருடைய சீடரான தாஸ்கணு என்பவருக்கு ஈசாவாஸ்ய உபநிஷதத்தின் பொருளை எங்கனம் உணர்த்தினார் என்னும் சம்பவத்தை படிக்க நேர்ந்தது. 

தாஸ்கணு என்பவர் ஈசாவாஸ்ய உபநிஷதத்தை மராட்டிய மொழியில் மொழி பெயர்த்தார். ஆனால் அந்த உபநிஷத்தின் உட்பொருளை அவர் உணராததால் அவருடைய   மொழிபெயர்ப்பு அவருக்கே திருப்தி அளிக்கவில்லை. அதை குறித்து பல அறிஞர்களோடு விவாதித்தும் அவருக்கு முழு திருப்தியளிக்கும் விளக்கம் அவருக்கு கிடைக்கவில்லை. ஆத்மானுபூதி அடைந்த ஒருவரே இதற்கு சரியான விளக்கம் அளிக்க முடியும் என்று கருதிய அவர்  ஷீர்டி சாய் பாபாவை தேடி வருகிறார். பாபாவிடம் தனது வேண்டுகோளை வைக்க, அவர்,"இது ஒன்றும் பெரிய விஷயமில்லை. நீ வீட்டிற்கு திரும்பி போகும் வழியில் வில்லபார்லாவில் காகா சாஹேப் தீக்ஷித் வீட்டு வேலைக்காரி உன்னுடைய சந்தேகத்தை தீர்த்து வைப்பாள்" என்று கூறினார். இதைக் கேட்டு சிலர், படித்த ஒரு அறிஞரின் சந்தேகத்தை படிப்பறிவில்லாத ஒரு வேலைக்காரி எப்படி தீர்க்க முடியும்? என்று நினைத்துக் கொண்டார்களாம், ஆனால் தாஸ்கணுவோ பாபாவின் வார்த்தைகளில் நம்பிக்கை வைத்து பம்பாயின் புறநகரான வில்லபார்லாவில் இருந்த காக்கா சாஹேப் தீக்ஷித்தின் வீட்டில் தங்குகிறார். 

அங்கு சிறுதுயில் கொண்டிருந்த அவரை தீட்சித் வீட்டில் வேலை செய்து கொண்டிருந்த பெண் பாடிய பாடல் எழுப்பி விடுகிறது. கிழிந்த உடையை அணிந்து கொண்டிருந்த அச்சிறு பெண், 'கருஞ்சிவப்பு நிற உடை, அது எவ்வளவு நன்றாக  இருக்கிறது! அதன் எம்ப்ராய்டரி எவ்வளவு நேர்த்தியாய் இருக்கிறது! அதன் முந்தானையும், கரையும் எவ்வளவு அழகாய் இருக்கிறது!.." என்னும் பொருள்படும் பாடலை மிகவும் சந்தோஷமாக பாடுவதைப் பார்த்த அவர் அந்தப் பெண்ணிற்கு ஒரு பாவாடை, தாவணி வாகித் தர செய்கிறார். 

புது ஆடையை அணிந்து கொண்டு வந்த அந்தப் பெண் மிகவும் மகிழ்ச்சியோடு தன் தோழிகளோடு விளையாடுகிறாள், கோலாட்டம் ஆடுகிறாள். ஆனால் மறுநாள் அந்த புது ஆடையை  வீட்டில் பெட்டியில் வைத்து விட்டு, தன்னுடைய பழைய கந்தல் ஆடையையே அணிந்து கொண்டு வந்தாள். ஆனால் அப்போதும் அவள் மகிழ்ச்சி சிறிதும் குறையவில்லை. பழைய கந்தலை உடுத்தியும் எள்ளளவும் துன்பமோ,மனச்சோர்வோ இல்லாதபடி அவற்றை அவள் தாங்கிக் கொண்டாள். இதிலிருந்து நமது இன்ப,துன்ப உணர்ச்சிகள் எல்லாம் நமது மனத்தின் பாங்கைப் பொறுத்தே இருக்கின்றன என்பதை அவர் உணர்ந்தார். 

மேலும் இந்நிகழ்ச்சியைப் பற்றி தீவிரமாக யோசித்து இச்சந்தர்ப்பத்தில் ஏழைச்சிறுமியின் வறுமை நிலை, அவளது கந்தல் உடை, புது ஆடை, அதை அன்பளிப்பாக கொடுத்தவர்,  அதை பெற்றுக் கொண்டவள், அதனை ஏற்றுக் கொள்ளுதல் எல்லாம் கடவுளின் கூறுகளே, அவரே எல்லாவற்றிலும் ஊடுருவி பரந்து இருக்கிறார், எது நேரினும் அது கடவுளின் ஆணையே என்றும், இறுதியில் அது நமக்கு நன்மை அளிக்கும் என்று தமக்குரியவைகளிடம் திருப்தி  கொள்ளுதல் நலம் என்னும்   உபநிஷத பாடத்தின் நடைமுறைச் சான்று விளக்கத்தினை தாஸ்கணு பெற்றார். 

அன்று ஈசாவாஸ்ய உபநிஷத் பற்றிய கேள்வி, அதற்கு சாய் சத் சரிதாவில் பதில் என்று நடந்ததால் இதை இங்கே பகிர்ந்து கொண்டிருக்கிறேன். மற்றபடி தாஸ்கணு அவர்கள் உணர்ந்ததை நம்மால் உணர முடியுமா? என்று தெரியவில்லை. ஆகவே இது குறித்து உங்களுக்கு ஏதாவது சந்தேகம் வந்தால் அதை பகவான் பாபா தீர்த்து வைப்பார். ஓம் சாய்ராம்! 




  


Monday, September 20, 2021

அவன் தந்த சந்தோஷமும் ஏமாற்றமும்

  அவன் தந்த சந்தோஷமும் ஏமாற்றமும் 


வீட்டிலிருந்த மைக்ரோ வேவ் அவன் பழுதானதால் புதிது வாங்குவதை சற்று ஒத்திப் போட்டு, சென்ற வாரம் வாங்கி வந்தார்கள். புதிய அவனில் ஏதாவது இனிப்பு செய்யலாம் என்று யோசித்த பொழுது, திரட்டுப்பால் செய்யலாம் என்றேன். ஒரு டப்பா கண்டென்ஸ்டு மில்க் வாங்கி வரச்சொன்னேன். அதை ஒரு கண்ணடி பாத்திரத்தில் ஊற்றி, அதனுடன் ஒரு ஸ்பூன் தயிர், ஒரு ஸ்பூன் நெய் சேர்த்து, அவனில் வைத்து அவனை ஸ்டார்ட் பண்ண, ஐந்தே நிமிடங்களில் வெள்ளை வெளேர் என்று சுவையான திரட்டுப்பால் கிடைத்து விட்டது.  என் மருமகளுக்கு ஒரே சந்தோஷம். 

அந்த அவனில் தயிர் என்னும் ஆப்ஷன் இருப்பதை பார்த்து விட்டு,"இதில் அரைமணி நேரத்தில் தயிர் செய்து விடலாம்" என்றாள் என் மருமகள். "தட்ஸ் கிரேட்! நமக்கு எப்படியும் இன்று தயிர் தோய்க்க வேண்டும். இதில் செய்து விடலாம்" என்ற நான், பாலக் காய்ச்சி, ஆறியதும் வழக்கம் போல் ஒரு டேபிள் ஸ்பூன் தயிர் அதில் சேர்த்து, அந்த பாத்திரத்தை அவனில் வைத்து, அரை மணி நேரத்திற்கு செட் செய்து விட்டு, அரை மணி நேரம் கழித்து திறந்து பார்த்தால், பால் அப்படியே இருந்தது.  

ஒரு வேளை அரை மணி நேரம் என்பது அரை லிட்டர் பாலுக்காக இருக்கலாம், நாம் ஒரு லிட்டர் பாலை உரைக்குத்தியிருக்கிறோம் எனவே இன்னும் ஒரு அரை மணி நேரம் வைக்கலாம் என்று மீண்டும் ஒரு அரை மணி நேரம் செட் பண்ணினேன். அப்போதும் பால் தயிராக மாறவில்லை. வெளியே எடுத்து வைத்து விட்டு கொஞ்ச நேரம் பொறுத்து பார்த்தாலும் அதே நிலை. "என்னடா இது மதுரைக்கு வந்து சோதனை?" என்று தோன்றியது. 

யூ ட்யூபில் சென்று மன்றோ வேவ் அவனில் தயிர் செய்வது எப்படி என்று பார்த்தால், நான் செய்த விஷயங்கள் சரி, ஒன்றே ஒன்றைத் தவிர, உறைகுற்றிய பால் பாத்திரத்தை அவனில் வைத்து விட்டு தயிர் என்னும் பட்டனை அழுத்தி 2:2 என்னும் ஆப்ஷனை தேர்ந்தெடுக்க வேண்டும், அது 9 மணி நேரம் என்று அவனுக்குள் வைக்க வேண்டிய கால அளவைக்காட்டுகிறது. ஆறு மணி நேரத்தில் தயராகி விடும், பிறகு மூன்று மணி நேரம் பிரீசரில் வைக்க வேண்டும். கட்டித் தயிர் ரெடியாகி விடும் என்று ஒரு ஆன்டி ஹிந்தியில் போலினார். உரை குற்றி  ஒன்பது மணி நேரம் வெளியே வைத்தாலே தயிர் ரெடியாகி விடுமே?  

அன்று மாலை மைக்ரோ வேவ் அவனை எப்படி இயக்குவது என்று செய்முறை விளக்கம் அளிக்க கம்பெனியிலிருந்து வந்தவரிடம் தயிர் மகாத்மியத்தை கூறிய பொழுது, "இதெல்லாம் மேல் நாட்டவருக்காக, நாம் எப்போதும் செய்வது போல் தயிர் பண்ணிக் கொள்வதுதான் சரி" என்கிறார். சரிதான்!  4x2 என்ற கணக்கிற்கு கால்குலேட்டரை பயன்படுத்துவது போலத்தான் என்று நினைத்துக் கொண்டேன்.