கணம்தோறும் பிறக்கிறேன் 

Friday, June 25, 2021

ஒரு ஊரின் கதை

 ஒரு ஊரின் கதை 


இரண்டு மூன்று வாரங்களுக்கு முன்பு திரு.துரை செல்வராஜூ அவர்களின் 'அந்த  காலத்துல' என்னும் கதை எங்கள் பிளாகில் பிரசுரமாகியிருந்தது. அதில் வளர்ச்சி என்ற பெயரில் நம் ஊர்கள் எப்படி பாழடிக்கப்படுகின்றன என்று ஆதங்கப் பட்டிருந்தார். அதற்கு தில்லையகத்து கீதா தன்னுடைய பின்னூட்டத்தில்,"வளர்ச்சி தவிர்க்கப் பட முடியாதது, ஆனால் வளர்ச்சிக்காக நாம் ஊரின் அழகு பாதிக்கப்படுவது சோகம் என்று எழுதியிருந்தார். இதை படித்த பிறகு எனக்கு ஓமான் நினைவு வந்தது. அந்த நாடு ஒரு பருவப் பெண்ணைப் போல் வெகு அழகாக வளர்ந்தது. 

என் கணவர் 1979இல் அங்கு சென்ற பொழுது பாலைவனம் என்றால் பாலைவனம்தான். எங்கும் மொட்டையாக நிற்கும் மலைகளும், மணலும்தானாம். ஏன் நான் 1987 அங்கு சென்ற பொழுது கூட சில முக்கியமான சாலைகளைத் தவிர பெரும்பான்மையான சாலைகள் கச்சா ரோடாகத்தான் இருந்தன. அப்போதுதான் அல் குவைர் எனப்படும் குடியிருப்பு பகுதி உருவாக ஆரம்பித்தது. அப்போதெல்லாம் அங்கிருந்த பி.ஹெச்.எஸ். எனப்படும் ஒரு வட்ட வடிவ கட்டிடம், ஐஸ் ஸ்கேட்டிங் ரிங் எனப்படும் போன்றவை அடையாளங்கள். நாளடைவில் அல்-குவைர்  பிரம்மாண்டமாக  வளர்ந்து விட்ட பிறகு இவை இருக்கும்  இடம் தெரியவில்லை. 

அதைப்  போலத்தான் வாடி கபீர் என்னும் இடமும். ஆரம்பத்தில் வெறும் கச்சா ரோடாக இருந்த இடத்தில் இருட்டிய பிறகு செல்வதற்கு பயப்படுவார்களாம். ஓரளவு வளர்ந்த பிறகு கூட நெருப்புத் துண்டுகளாக ஜொலிக்கும் கண்களோடு நரிகள் ஓடுவதை பார்த்திருக்கிறேன். பின்னர் அந்த இடம் எப்படிப்பட்ட அழகான,பாதுகாப்பான இடமாக மாற்றப்பட்டது!

ஆரம்பத்தில் அங்கு ரியாம் பார்க் என்று ஒரு பார்க் மட்டுமே நகருக்குள் உண்டு. கொஞ்சம் தள்ளி நசீம் கார்டன் என்று ஒரு இடம் உண்டு. அங்குதான் விடுமுறை நாட்களில் பிக்னிக் செல்வோம். நாளடைவில் வாடி கபீர் பார்க், டார்செய்ட் பார்க்,கல்பூ பார்க், குரம் என்னும் இடத்தில் மிகப் பெரிய ரோஸ் கார்டன். விதம் விதமான ரோஜாக்களை அந்த பாலைவனத்தில் பூக்க வைத்தார்கள். அங்கு ஒரு செயற்கை நீர் வீழ்ச்சி வேறு உண்டு. விடுமுறை நாட்களில் மியூஸிக்கல் பவுண்டன் உண்டு.

அதே போல பீச் என்றால் மத்ரா என்னும் இடத்தில் இருந்த கார்னிஷ்தான். அங்கு சமுத்திரத்தில் இறங்கி காலை நனைக்க முடியாது. பேவ்மெண்ட்டில் நடக்கலாம், ஆங்காங்கே போடப்பட்டிருக்கும் பெஞ்சுகளில் உட்காரலாம். விடுமுறை நாட்களில் கண்டாப் என்னும் இடத்திற்குச் செல்வோம். அங்கு போட்டிங் போகலாம். மற்றபடி பெரிதாக எதுவும் கிடையாது. அழ-ஸவாதி என்னும் பீச்சிற்கும் பிக்னிக் செல்வதுண்டு. அங்கு கடலுக்கு நடுவில் அமைந்திருக்கும் ஒரு திட்டிற்குச் சென்று, கையில் கொண்டு சென்றவற்றை சாப்பிட்டு விட்டு வருவோம். அந்தக் கடலில் ஜெல்லி பிஷ் நிறைய இருக்கும். என்பதால் காலை நனைக்க பயமாக இருக்கும். ஒரு முறை பிக்னிக் சென்றபோது நிறைய பேருக்கு காலில் ஜெல்லி பிஷ்ஷின் முட்கள் அடையாக அப்பிள் கொள்ள, அதை மருத்துவரிடம் சென்று எடுக்க வேண்டியதாக போய் விட்டது. அதெல்லாம் அந்தக் காலம், 2000குப் பிறகு அந்த பீச்சை வெகு அழகாக மாற்றி விட்டார்கள். 



எட்டி பீச் என்றொரு இடம் உண்டு. தொன்னூறுகளின் இறுதியில் அப்படி ஒரு இடம் இருக்கிறது என்று கேள்விப்பட்டு நண்பர்களோடு அங்கு சென்ற பொழுது அது ஒரு பயமுறுத்தும் அனுபவமாக இருந்தது. ஏனென்றால்  ஒரு குறிப்பிட்ட தூரம் வரைதான் நல்ல பாதை, அதன் பிறகு மேடும், பள்ளமும், சரளைக் கற்களும், வண்டி குதித்து குதித்து, குழந்தைகள் பயந்து விட்டார்கள். நாங்களும்தான், எங்கேயாவது வண்டி பஞ்சராகிவிடப் போகிறதே என்று நடுக்கம். ஆனால் ஒரே வருடத்திற்குள், அருமையான பாதி அமைத்து விட்டார்கள். பீச்சும் வெகு அழகு. வின்டரில் பல நாடுகளிலிருந்தும் பல அபூர்வ பறவைகள் வரும். 


இவைகளைத் தவிர இன்டர் கான்டினென்டல் பீச், குரம் பீச் போன்ற நகருக்குள் இருந்த கடற்கரைகளில் , வாக்கிங் போவதற்கு நடைபாதை அமைத்து மிகவும் அழகாக்கி விட்டார்கள். அங்கெல்லாம் சிறிய காபி கடைகள் உண்டு, ஆனால் அவற்றில் அடுப்பில் எண்ணெய் சட்டியை வைத்து எதையும் பொரிக்க அனுமதி கிடையாது. எண்ணெய் வாடை சுற்றுப்புறத்தை பாழ் படுத்திவிடக் கூடாது என்பதுதான் காரணம். அங்கு செல்லும் போதெல்லாம் எனக்கு நம்முடைய மெரீனா பீச் நினைவுக்கு வரும். எத்தனை அழகான கடற்கரை!ஆனால்...?

ஸீப்(Seeb) என்னும் கடற்கரை சாலைக்குச் சென்றால் வெகு அழகான பங்களாக்களை காண முடியும்.  நவம்பரிலிருந்து பிப்ரவரி வரை ஓமானுக்கு வருகை தரும் டால்ஃபின்களை காண  சிதாப் என்னும் பீச்சிலிருந்து படகில் அழைத்துச் சென்று நடுக்கடலில் முக்கால் மனை நேரத்திற்கும் மேல் நிறுத்துவார்கள். நமக்கு லைஃப் ஜாக்கெட் தருவார்கள்,அதை அணிந்து கொண்டு விருப்பப்பட்டால் கடலில் குளிக்கலாம். ஆனால் நம் ஊர்க்காரர்கள் டிபன் பாக்ஸை திறந்து விடுவோம். ஐரோப்பியர்கள்தான் குளிப்பார்கள். 

இந்த சிதாப் பீச்சில் கந்தசாமி படத்தில் வரும் "எக்ஸ்க்யூஸ் மீ மிஸ்டர் கந்தசாமி.." பாட்டு படமாக்கப்பட்டிருக்கிறது. பீமா படத்தில் ஒரு பாடல்(விக்ரம்,திரிஷா) ஸீப் பீச்சில் படமாக்கப்பட்டதாக  சொன்னார்கள்.  

ஒரு கிராமமாக இருந்த ஸீப், பொட்டலாக இருந்த காலா(Ghala) என்னும் இடங்களையெல்லாம் மிகவும் சிறப்பாக,அழகாக மாற்றி விட்டார்கள். அங்கெல்லாம் ஒரு இடத்தை நிர்மாணிக்கும் பொழுதே வாட்டர் கனெக்ஷன், ட்ரைனேஜ், டெலிபோன், மற்றும் மின்சார இணைப்புகளையும் முடித்து விடுவார்கள். அதனால் ஒவ்வொன்றிற்கும் தனித்தனியாக தோண்டும் வேலை கிடையாது.

நம் நாட்டின் மக்கள்தொகை, மக்களின் ஒத்துழையாமை, ஊழல் போன்றவை நம் தேசத்தின் அழகை குலைக்கின்றன.   

பி.கு.: என்னிடம் இருந்த புகைப்படங்களை தேட முடியாததால் இணையத்திலிருந்து எடுத்து போட்டிருக்கிறேன். 

Sunday, June 6, 2021

என் வீட்டுப் பொருள்கள் பேசினால்….புத்தகங்கள்

என் வீட்டுப் பொருள்கள் பேசினால்….புத்தகங்கள் 

வின்சென்ட் சர்சில் என்றால் சுருட்டு, நேரு என்றால் புஷ் கோட்,

தொப்பி, எம்.ஜி.ஆர் என்றால் கருப்பு கண்ணாடி, குல்லா எப்படி

எல்லோருக்கும் நினைவுக்கு வருமோ? அப்படி உன்னைத்

தெரிந்தவர்களுக்கு பானு என்றால் புத்தகங்கள்தானே நினைவுக்கு

வரும்? நீண்ட வருடங்களுக்குப் பிறகு உன்னை சந்திக்கும் உன்

உறவினர்களும், நண்பர்களும்,”சிறு வயதில் பானு எப்போதும்

புத்தகமும்,கையுமாகத்தானே இருப்பாள்?” என்றுதானே உன்னை

நினைவு கூர்வார்கள்? புஸ்தகம் ஹஸ்த பூஷணம் என்பதற்கு

இணங்க எப்போதும் கையில் என்னோடுதானே காட்சி

அளிப்பாய்?


உன் புக்ககத்து மனிதர்கள், “பொருள்காட்சிகளில் பானுவை

காணும் என்றால் தேடுவது ரொம்ப சுலபம், ஏதாவது புத்தக

ஸ்டாலில்தான் இருப்பாள்” என்பார்கள். அப்படி ஒரு புத்தக

பைத்தியம்.


ஏன் ஒரு முறை நீ புத்தக கண்காட்சியில் புத்தகங்களை வாங்கி

குவித்ததை பார்த்த உன் மகன், ”பாரதி படத்தில் பாரதியாருக்கு

அரண்மனையில் வேலை கிடைத்ததும் வீட்டிற்கு தேவையான

சாமாங்களை அவர் வாங்கி வரப் போகிறார் என்று அவர்

மனைவி நினைத்திருக்க அவர் வண்டி நிறைய புத்தகங்களை

வாங்கிக் கொண்டு வருவார். நீ கூட அப்படித்தான்” என்றானே

ஞாபகம் இருக்கிறதா?

 

அதற்கு இப்பொதென்ன? என்கிறாயா? இந்த வருடமும்

நீ புத்தக கண்காட்சிக்குச் சென்றாய், சுற்றிப் பார்த்தாய், சாருநிவேதிதாவோடு புகைப்படம் எடுத்துக் கொண்டாய், ஆனால்எத்தனை புத்தகங்கள் வாங்கினாய்? ரெண்டே ரெண்டு, கேட்டால் எனக்குப் பிறகு உன்னை யார் பராமரிப்பார்கள்? என்கிறாய். 


இந்த ஆண்ட்ராய்ட் ஃபோன் வந்தாலும் வந்தது, நீ என்னை எங்கே மதிக்கிறாய்? 
இப்போதுதான் எல்லாமே ஆன்லைனில் கிடைக்கிறதே?எல்லாவற்றையும் அதிலேயே படித்து விடுகிறாய். போதும் போதாதற்கு இந்த மத்யமர் வந்தாலும் வந்தது, என்னைத் தீண்ட உனக்கெங்கே நேரம்? புத்தகமும் கையுமாக இருந்த நீ இப்பொது என்னை எங்கே சீண்டுகிறாய்? ஒரு புத்தகத்தை தொட்டால் முடிக்காமல் கீழே வைக்க மாட்டாய், அப்படிபட்டவள் இப்போதெல்லாம் புத்தகங்களை பிரித்து, கொஞ்சம் படிக்கிறாய், புக் மார்க் வைத்துவிட்டு சென்றால்.. எப்போது தொடர்வாய் என்பது நிச்சயமில்லை. புக் மார்க்கால் என் பக்கங்கள் புண்ணானதுதான் மிச்சம்.  

என்னை உன்னிடமிருந்து யாராலும் பிரிக்க முடியாமல்  இணைபிரியா பந்தத்தோடு நாம் இருந்தோம். ஹூம் அதெல்லாம்ஒரு காலம்..!

 

Monday, May 24, 2021

இண்டலக்சுவல் குண்டா!

இண்டலக்சுவல் குண்டா!


இந்த முறை புத்தக கண்காட்சியில் சோ எழுதிய 'ஓசாமாஅசா' என்னும் புத்தகம் வாங்கினேன். இப்போதுதான் படித்து முடித்தேன். அதென்ன ஓசாமஅசா என்று தோன்றுகிறதா? "தலைப்பைக் கண்டு திகைக்க வேண்டாம், புரியும்படியாக எதையும் எழுதிவிடக் கூடாது என்னும் என் வைரக்கியத்தை ஒட்டி இந்த தலைப்பை கொடுதிருக்கிறேன்" என்று முன்னுரையில் கூறியிருக்கிறார். 

நாடகம், சினிமா, பத்திரிகையுலகம், அரசியல் என்ற பல்வேறு துறைகளிலிலும் அவர் பழகிய பலதரப்பட்ட மனிதர்களின் நல்ல குணாதிசயங்களை விவரித்திருக்கிறார். குமுதத்தில் தொடராக வந்ததாம். 

சிவாஜி கணேசனிடம் இவர் துக்ளக் பத்திரிகை ஆரம்பிக்கப் போவதாக சொன்னதும், "ஏற்கனவே உன்னுடைய கிறுக்குத்தனத்தைப் பற்றி கேட்க வேண்டாம், பத்திரிகை வேற ஆரம்பிக்கப் போற.. ஒரு குரங்கு கள்ளை குடிச்சு, அதுக்கு தேளும் கொட்டி, அது கண்ணிலே மிளகாய்ப் பொடியையும் தூவிகிட்டா என்ன ஆகுமோ அப்படி இருக்கப் போவுது உன் பத்திரிகை" என்றாராம். 

ஒரு முறை சிவாஜி அழுது நடித்த காட்சி மிகையாக இருந்தது என்று இவர் கூற, இவருக்கு அந்தக் காட்சியில் கதறி அழாமல் சட்டிலாக(subtle) எப்படி நடிப்பது என்று நடித்துக் காண்பித்த பொழுது தனக்கு உடல் சிலிர்த்தது என்கிறார்.

காமராஜைப் பற்றியும், மொரார்ஜி தேசாயைப் பற்றியும் இவர் எழுதியிருப்பதை படித்த பொழுது கண்கள் கலங்குகின்றன. எப்படிபட்ட தலைவர்கள்!

முகமது பின் துக்ளக் நாடகத்தை பார்த்த திரைப்பட இயக்குனர் பீம்சிங், அந்த நாடகத்தில் சமஸ்கிருதம் இறந்து விட்டது என்று வரும் வசனம் எழுதியது மிகவும் தவறு, அதில் எத்தனை தத்துவங்கள் இருக்கின்றன, எத்தனை விஷயங்கள் இருக்கின்றன? மரியாதையா அந்த வசனத்தை எடு என்று கோபப்பட்டராம். 

அந்த நாடகத்தை திரைப்படமாக எடுத்த பொழுது நிறைய பிரச்சனைகளை சந்தித்தார்களாம். இருபத்தியாறு முறைக்கு மேல் காமிராமேன்கள் மாற்றப்பட்டர்களாம். இத்தனை இடஞ்சல்களையும் மீறி படம் முடிக்கப்பட்டு சென்சாருக்கு அனுப்பினால் அங்கு 22 கட் கொடுத்தார்களாம். அதை ஒப்புக் கொண்டு வெளியிட படம் ஹிட்டாம். இத்தனைக்கும் அந்தப் படத்தை எடுத்தது  எம்.ஜி.ஆரின் மானேஜராக இருந்த நாராயணன் என்பவராம்.  

அவருடைய சில நாடகங்களில் சித்தரிக்கப்பட்டிருந்த சில சம்பவங்கள் அப்படியே நிஜமானதாம். 

சோ என்னதான் வலதுசாரியாக இருந்தாலும் கம்யூனிஸ்டுகளை பற்றி, "கம்யூனிஸ்டுகளுடைய சித்தாந்தத்தை நான் சுத்தமாக ஒப்புக் கொள்ளவில்லை.கம்யூனிசம் சுத்தமாக பிடிக்காது,ஆனால் கம்யூனிஸ்டுகள் நேர்மையானவர்கள்" என்கிறார்.

ஜோதி பாசுவை இவர் சந்தித்ததை இவர் விவரித்திருப்பது மிகவும் சுவாரஸ்யம். 

எம்.ஜி.ஆர். உடல் நிலை சரியில்லாமல் போன பொழுது ஜானகி இவரை அழைத்து எம்.ஜி.ஆரின் ஜாதகத்தை இவரிடம் கொடுத்து, "உங்களுக்குத் தெரிந்த நல்ல ஜோசியரிடம் இவருடைய உடல் நிலை பற்றி கணித்து சொல்லச் சொல்லுங்கள், அது மற்றவர்களுக்கு தெரிய வேண்டாம், எனக்கு ரொம்ப கவலையாக இருக்கிறது " என்று கேட்டுக் கொண்டாராம்.  இத்தனைக்கும் அது சோ, எம்.ஜே.ஆரை கடுமையாக விமர்சித்து வந்த நேரமாம்.   

கருணாநிதியை கடுமையாக விமர்சித்த பொழுதும் அவரோடு இருந்த நட்பு பாதிக்கப் படவில்லை என்கிறார். இந்தியன் எக்ஸ்பிரஸ் கோயங்கா இவரை இன்டலக்சுவல் குண்டா என்பாராம்.  ஜெயலலிதாவையும், ரஜினியையும் பற்றி பேசும்பொழுது சற்று பட்சபாதமாக பேசுகிறாரோ என்று தோன்றுகிறது.

சுவையான அனுபவங்களின் தொகுப்பு. 

*********

என்னுடைய முந்தைய பதிவில் மேலே இருக்கும் புகைப்படத்தில் இருக்கும் அரசியல்வாதி யார் என்று கேட்டிருந்தேன், அதற்கு மனோ சுவாமிநாதன் அவர்கள் எல்.கே. அத்வானி என்ற சரியான விடையைக் கூறி விட்டார். அவருக்கு பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்கிறேன். நன்றி. 

Tuesday, May 11, 2021

மசாலா சாட்

மசாலா சாட் 

அதைப் பற்றி பேச வேண்டாம் என்றுதான் நினைத்தேன். ஊடகங்களில் இதை தவிர வேறு பேச்சு இல்லை.  எங்கேயோ இருக்கிறது, அங்கே இருக்கிறது, இங்கே இருக்கிறது என்ற நிலை மாறி நம் நெருங்கிய உறவுகளையும், நட்புகளையும் பீடிக்கும் பொழுது கவலை, இப்போது எங்கள் அப்பார்ட்மெண்டிலேயே எங்கள் வீட்டிற்கு நேர் கீழே, இரண்டு மாடிகளுக்கு கீழே ஒருவரை பாதித்து விட்டது என்று அறிந்தவுடன் அச்சம்! ஜன்னல் கதவை திறக்கலாமா? வேண்டாமா? என்று தோன்றுகிறது.  ஆனால் இப்பொழுது கூட முகக்கவசம் அணியாமல் சந்தைகளில் கூடும் மக்களையும், வியாபாரிகளையும் பார்க்கும் பொழுது என்ன சொல்வது என்று தெரியவில்லை.  

என்னதான் லாக் டவுன் என்றாலும் பால், மளிகை சாமான்கள், கறிகாய்கள், இறைச்சி போன்றவை விற்கும் கடைகள் காலை ஆறு மணி முதல் பத்து மணி வரை கர்நாடகாவிலும், மதியம் பன்னிரெண்டு மணி வரை தமிழகத்திலும் திறந்திருக்கும் என்று அரசு அறிவித்திருக்கிறது. அப்படியிருக்க ஞாயிறு அன்று ஏன் கடைகளை முற்றுகை இடவேண்டும் என்று புரியவில்லை. 

--------------------------------------

அன்றொரு நாள் பாலை அடுப்பில் வைத்தவுடன் டொப்,டொப் என்று சப்தம் கேட்டது. பால் திரிந்து விட்டது. அதை இன்னும் சற்று நேரம் அடுப்பில் வைத்து, கிளறி, கோவாவாக செய்து கொண்டேன். கொஞ்சமாக பயத்தம் பருப்பை வறுத்து, ஊற வைத்து அரைத்துக் கொண்டேன். வெல்லத்தில்  பாகு வைத்துக் கொண்டு, அதில் கொஞ்சம் தேங்காய் துருவல், அரைத்த பயறு விழுது, மற்றும் கோவாவையும் சேர்த்து கிளறியதில் ஒரு நல்ல இனிப்பு கிடைத்து விட்டது. அதற்கு பெயர்தான் கிடைக்கவில்லை. 

வாணலியில் வறுபடும் பயத்தம் பருப்பு 

அரைத்த விழுது, தேங்காய், பால் கோவா 



வெல்லம் பாகாகிறது 

End product

------------------------------


இந்த படத்தில் இருப்பவர் யார் என்று யூகிக்க முடிகிறதா? ஒரு நல்ல அரசியல் தலைவரின் இளம் வயது புகைப்படம்.  

---------------------------


பூஜ்யஸ்ரீ ஓம்காரானந்தா இன்று மாலை(10.05.21) மஹாசமாதி அடைந்தார் என்னும் செய்தி இடியாக இறங்கியது. கொரோனாவால் பாதிக்கப்பட்ட இவர் மதுரையில் சிகிச்சை பெற்று வந்தார், விமானத்தில் சென்னைக்கு அழைத்து வந்து சிகிச்சை அளிக்கலாம் என்று முடிவு செய்யப்பட்ட நிலையில் அவர் இறைவனடி சேர்ந்து விட்டார். இவர் மஸ்கெட்டிற்கு வருகை தந்த பொழுது இவரது கீதை உரைகளை கேட்டிருக்கிறேன். எளிமையாக இருக்கும். சமஸ்க்ருதம், தமிழ் இரண்டிலும் நிபுணர்.  திருக்குறளிலிருந்து நிறைய மேற்கோள் காட்டுவார். திருக்குறளுக்கும், பகவத் கீதைக்கும் இருக்கும் ஒற்றுமைகளை விளக்கி உரைகள் நிகழ்த்தியிருக்கிறார். திருக்குறளை பள்ளி மாணவர்களுக்கு முழுமையாக கற்றுத் தர வேண்டும் என்பதில் மிகுந்த ஆவல் கொண்டவர்.    ஓம் சாந்தி!

---------------------------------------------

நானும் தில்லையகத்து கீதாவும் இணைந்து எங்கள் பிளாகில் எழுதிய 'நானும் நீயும் சேர்ந்தே செல்லும் நேரமே....'  என்னும் கதை  கிண்டலில் புத்தகமாக வெளியாகியிருக்கிறது. அதோடு ஒரே கருவிற்கு நாங்கள் இருவரும் தனித்தனியாக எழுதிய இரு வேறு கதைகளும் படிக்க கிடைக்கும். திரு. வெங்கட் தன்னுடைய வேலைப்பளுவிற்கு இடையிலும் இதற்கு நேரம் ஒதுக்கி உதவியிருக்கிறார். 


இந்த புத்தகத்தை படித்துக் கொண்டிருங்கள், அடுத்த பதிவில் சந்திக்கலாம்.

  









Monday, April 26, 2021

சில விமர்சனங்கள்

சில விமர்சனங்கள்

கர்ணன்

பார்க்க வேண்டும் என்று மிகவும் ஆசைப் பட்ட படம் பிரம்மாண்டமான தயாரிப்பு. நடிகர்களின் தேர்வும் சிறப்புதான். அவர்களும் நன்றாகவே நடித்திருக்கிறார்கள். பாடல்கள் சற்று அதிகம் தான் இருந்தாலும் இனிமை. என்ன? கொஞ்சம் அசந்தால் கதாநாயகியின் தோழிகள் கையில் ஒரு தட்டோடு நடனமாட வந்துவிடுகிறார்கள். இத்தனை சிறப்புகள் இருக்கும் இந்த படத்தினை கொஞ்சம் உண்மையாகவும் எடுத்திருந்தால் நன்றாக ரசித்திருக்கலாம் என்ன செய்வது பெரிய ஹீரோக்களை போட்டு படங்கள் எடுக்கும் பொழுது கதைகள் அவர்களுக்கு ஏற்றார் போல் மாற்றப்படுகின்றன. 

பரசுராமரிடம் பாடம் கற்கச் சென்ற கர்ணன் அவரிடம் சாபம் பெற்று திரும்பும் வரை ஒழுங்காக சென்றுகொண்டிருந்த கதை  சுபாங்கி(தேவிகா)யை கர்ணன்(சிவாஜி)  சந்தித்ததும் அவர்கள் பின்னால் சென்று விடுகிறது. காதல் டூயட் கல்யாணம் குழந்தை பிறப்பு என்று கதை பாதை மாறி விடுகிறது. 

கர்ணனும் குந்தியும் சந்திக்கும் இடம் நெகிழ்ச்சி. சிவாஜி நடிப்பதற்கு என்ன நம் கண்களை குளமாக்கி விட்டார். அதேபோல  இந்திரனுக்கு தன் கவச குண்டலங்களை தானமாக கொடுக்கும் இடத்திலும் சிவாஜியின் நடிப்பு சிறப்பு, ஆனால் மாமனாரால் அவமானப் படுத்தப்படும் பொழுது சிங்கம் போல் கர்ஜித்தார், அந்த காட்சியை அந்த காலத்தில் அவருடைய ரசிகர்கள் கைதட்டி ரசித்திருப்பார்கள் இப்பொழுது அரங்கமே கொல்லென்று சிரிக்கிறது. 

என்டிஆர் கொஞ்ச நேரம்தான் வருகிறார் ஆனால் ஆனால் கருத்தைக் கவர்ந்து விடுகிறார்.  "செத்த பாம்பை அடித்து விட்டு நான் அடித்தேன்,நான் அடித்தேன் என்கிறாயே" போன்ற வசனங்கள் ஷார்ப்.

எதிர்பார்ப்புகள் அதிகம் நிறைவேறியது குறைவு

பி.கு.

தனுஷ் நடித்த கர்ணனை பார்க்க முடியாததால்,சிவாஜி நடித்த கர்ணனுக்கு விமர்சனம் எழுதி விட்டேன். ஹி ஹி!

−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−

பரமபதம் விளையாட்டு


கதாநாயகியாக நடித்த நடிகைகளுக்கு வயது ஆக ஆக வாய்ப்புக் குறைகிறது. தங்களை நிலை நிறுத்திக் கொள்ள தங்களுக்கு முக்கியத்துவம் இருக்கும் படங்களில் நடிக்க விரும்புகிறார்கள். அப்படி திரிஷா நடித்திருக்கும் ஒரு படம்தான் பரமபத விளையாட்டு. முதல் பாதியில் ஆங்கிலப் படத்திற்கு இணையாக விறுவிறுப்பாகவும் புத்திசாலித்தனமாகவும் செல்லும் இந்த படம் இரண்டாம் பாதியில் தொப்பென்று கீழே விழுந்து விடுகிறது. படத்தின் குறிப்பிடத்தக்க ஒரு அம்சம் இதுவரை காமெடி நடிகராக இருந்த சாம்ஸ், இந்தப் படத்தில் காமெடி வில்லனாக மாறி இருக்கிறார். 

இடைவேளைக்குப்பிறகு தேவையே இல்லாமல் ஒரு குத்துப்பாட்டோடு ஆரம்பிக்கும் அந்த படம் காட்டில் சுற்றி சுற்றி வருகிறது பெரும்பாலும் சேசிங் என்பதுதான் காட்சிகள் என்பதால் அதை திறமையாக கொண்டு செல்ல முடியாமல் திணறி இருக்கிறார் இயக்குனர் ஒரு அரசியல் படமாக ஆரம்பித்து திரில்லர் படமாக மாறி காட்டிற்குள் காணாமல் போய்விடுகிறது கதை. வில்லன் யார் என்பதையும் யூகிக்க முடிந்து விடுவதால் நமக்கு மிஞ்சுவது அலுப்பும், ஆயாசமும். 



Wednesday, April 21, 2021

ஸ்ரீராமநவமி உற்சவம்

ஸ்ரீராமநவமி  உற்சவம் 



என் சிறு வயதில் திருச்சி உறையூரில் நாங்கள் வசித்த பஞ்சு அய்யர்  ஸ்டோர் என்னும் இடத்தில் வெகு விமரிசையாக ராம நவமியைத் தொடர்ந்து ஐந்து நாட்களுக்கு உற்சவம், நடத்தப்பட்டு, சீதா கல்யாணமும், கடைசி நாளன்று ஆஞ்சநேய உற்சவமும் நடந்து நிறைவு பெறும். 


ஸ்டோர் என்றதும் ஒண்டு குடித்தனம், காமன்  டாய்லட்  என்றெல்லாம் கற்பனை பண்ணிக்க கொள்ளாதீர்கள். ஒரு காம்பவுண்டுக்குள் பதினேழு தனித் தனி  வீடுகள். ஒவ்வொரு  வீட்டிற்கும் ஒரு குட்டித்திண்ணை, ஒரு பெரிய திண்ணை, ரேழி, முற்றம் எல்லாம் உண்டு. சில்ட்ரன்ஸ் பிளே ஏரியா கூட உண்டு. இப்போதைய பாஷையில் அதை கேட்டட் கம்யூனிட்டி எனலாம். 

ஒவ்வொரு வருடமும் ராம நவமி வருவதற்கு முன் அந்த கொண்டாட்டங்களுக்காக ஒரு கமிட்டி அமைக்கப்பட்டு செலவுகள் திட்டமிடப்படுமாம். எங்களுக்கு அதெல்லாம் தெரியாது. ராம நவமிக்கு நான்கு நாட்களுக்கு முன்பே பந்தல் போடுவதற்கு ஆட்கள் வந்து விடுவார்கள். எங்களுக்கு ஒரே சந்தோஷம் தினமும் அந்த பந்தக் காலில் நாலு மூலை தாய்ச்சி விளையாடலாமே! 

செலவுகளை எல்லோரும் பகிர்ந்து கொள்வார்கள். அக்கம் பக்கத்திலும், தெரிந்தவர்களிடமும் வசூல் செய்வதும் உண்டு. ஒரு முறை என் அம்மாவும் அவரின் தோழியான  ஐய்யங்கார் மாமியும் அதிக பட்சம் வசூல் செய்து கொடுத்து பாராட்டு பெற்றார்கள். 

தோரணங்கள் கட்டுவதற்கு என் அப்பா, உஷா என்று ஒரு அக்கா இவர்கள்தான்  பொறுப்பு. அவர்கள் கட் பண்ணி கொடுப்பதை நாங்கள் ஒட்டுவோம்.  எங்கள் வீடு கடைசி வீடு என்பதால் எங்கள் வீட்டுத் திண்ணையில்தான் சாமி படங்கள் வைக்கப்படும். எங்கள் எதிர் வீட்டில் இருந்த தஞ்சாவூர் ராமர்  பட்டாபிஷேக  படம் பிரதான இடத்தைப் பிடிக்கும். இன்னொருவர் வீட்டிலிருந்து ராதா,ருக்மணி சமேத கிருஷ்ணர், இதுவும் தஞ்சாவூர் படம்தான்.எங்கள் வீட்டு ராமர் படமும் இரண்டாவது படியில் இடம் பெறும். 

தினசரி காலையும்,மாலையும் விஷ்ணு ஸஹஸ்ரநாம பாராயணம் உண்டு.  அதை தவிர தினசரி பூஜை நைவேத்தியமாக பாயசம், வடை. அதை ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வீட்டில் ஏற்றுக் கொண்டு செய்வார்கள். அந்த பாயசத்தை போன்ற ஒரு பாயசத்தை வேறு எங்கும்  இன்று வரை நான் சாப்பிட்டதில்லை.  

நடுவில் ஒரு நாள் அகண்ட ராம நாமம் இருக்கும். எங்கள் வீட்டுத்  திண்ணையில் சுவாமி வைத்திருப்பதால், அதற்கு எதிர் திண்ணையில் அமர்ந்து பேட்ச் பேட்ச்சாக ராம நாமம் சொல்வோம். அலுவலகம் பள்ளி செல்ல வேண்டியவர்களுக்கு காலை நேர பேட்ச் ஒதுக்கப்படும். பின்னர் குடும்பத்தலைவிகள், வீட்டில் இருக்கும் பெரியவர்கள் ராம நாமம் கூறுவார்கள். அதில் மதிய நேர பேட்ச்தான் கொஞ்சம் டல் அடிக்கும் என்று கேள்விப்  பட்டிருக்கிறேன். மாலை மீண்டும் சூடு பிடிக்கும். இரவில்  இளைஞர்கள் பங்கேற்பார்கள். ஒரு வருடம் என் மூத்த சகோதரி பொறுப்பு எடுத்துக் கொண்டு  வெவ்வேறு ராகங்களில் ராம  நாமத்தை சொல்ல வைத்ததை பாராட்டி ராமைய்யா மாமா என்றவர் என் அக்காவுக்கு ராம நாமம் பொறிக்கப்பட்ட ஒரு வெள்ளி மை கூடு பரிசளித்தார். 

சீதா கல்யாணத்திற்கு முதல் நாள் இரவு பூப்பந்தல் போடுவது எங்கள் கடைசி மாமா, எங்கள் அம்மா, பஞ்சு வாத்தியார் என்னும் ஒருவர் இவர்களின் வேலை. சீதா கல்யாணத்தன்று முத்து குத்துதல் என்னும் ஒரு நிகழ்ச்சியில் சிறு பெண்களின் கையில் தங்க மோதிரம் அணிவித்து அரிசியை ஒரு உரலில் போடச் சொல்வார்கள். நாங்கள் ஆவலாக காத்திருப்போம். தங்க மோதிரம் அணிந்து கொள்ளலாமே..!

அன்று எல்லோருக்கும் கல்யாண விருந்து. அன்றைய சாப்பாடு எங்கள் வீட்டு உபயம். எங்கள் வீட்டில்தான் சமையல். சமைப்பது, பரிமாறுவது, சுத்தம் செய்வது என்று அத்தனை வேலைகளையும் எல்லோரும் பகிர்ந்து செய்வார்கள். 

தினமும் மாலையில் கச்சேரி இருக்கும். பாடகர்களுக்கு டிபன்,காபி பெரும்பாலும் எங்கள் வீட்டில்தான்.  பஞ்சு வாத்தியார் என்பவர் என் அம்மாவிடம்,"மாமி கச்சேரி பார்ட்டி வந்து விட்டது, அவர்களுக்கு டிபன்,காபி கொடுக்க வேண்டுமே"  என்பார்.  எங்கள் அம்மா உடனே அவல் கேசரி, உப்புமா, ரவா கேசரி, கிச்சடி, சேமியா கேசரி பஜ்ஜி + தேங்காய் சட்னி செய்து விடுவார். அதை சாப்பிடுபவர்கள் எங்களிடம்,"நீ சாப்பிடலையா?" என்றால் நாங்கள் " நாங்கள் அப்பொழுதே சாப்பிட்டு விட்டோமே" என்று சமத்தாக பொய் சொல்லுவோம்.  

கடைசி நாள் மாலை குழந்தைகள் பங்கு பெரும் நடனம், நாடகம், மகளிர் பங்கேற்கும் பின்னல் கோலாட்டம் போன்றவை நடக்கும். எங்களுக்கு நடனம் பயிற்றுவிப்பது உஷா அக்காதான். இதில்  என்ன ஒரு விஷயம் என்றால் அப்போது முழு பரீட்சை(annual exam) சமயமாக இருக்கும். ஒரு பக்கம் பரிட்சைக்கு படித்துக் கொண்டு, இன்னொரு பக்கம் இவை எல்லாவற்றிலும் பங்கேற்போம். எங்கள் பெற்றோர்கள், "பரீட்சை சமயத்தில் என்ன பாட்டும், டான்ஸும்" என்று எங்களை கோபித்ததில்லை. 

வீடு விருந்தினர்களால் நிரம்பி வழியும். மாமாக்கள், அத்தைகள், அவர்கள் குழந்தைகள், இன்னும் தூரத்து சொந்தங்கள், நண்பர்கள், என்று எத்தனை பேர்கள்!.  எங்கள்  மட்டுமல்ல அந்த ஸ்டோரில் வசித்த எல்லோரும் ஏதோ தங்கள் வீட்டு பெண்ணுக்கு கல்யாணம் என்பது போல் தினசரி புத்தாடை அணிந்து, அலங்கரித்துக் கொண்டு,பக்தியோடு சந்தோஷமாக  அனுபவித்த அந்த நாட்கள் மறக்க முடியாதவை. 

ஒவ்வொரு வருடமும் சீதா கல்யாணம் முடிந்த பிறகு அந்த ஸ்டோரில் திருமண வயதில்  இருந்த பெண்களுக்கு திருமணம் நடந்தததாக அம்மா சொல்லியிருக்கிறார்.  அங்கு பாராயணம் செய்த விஷ்ணு சஹஸ்ரநாமத்தை கேட்டதனாலேயே அது மனப்பாடம் ஆனவர்கள் உண்டு. என் மூன்றாவது அக்கா ஐந்து வயதிலேயே விஷ்ணு சஹஸ்ரநாமத்தை பிழையில்லாமல் சொல்வாளாம். என் சகோதரிகளுக்கு அஷ்டபதி  பந்ததியும்  இதனால்தான் தெரிந்தது. 

அவையெல்லாம் பொற்காலங்கள். கோடி ரூபாய் கொட்டிக் கொடுத்தாலும் திரும்ப கிடைக்காது.  சீதாராமன் அருளால் அப்போது கிடைத்தது. ஜெய் ஸ்ரீ ராம்!

Monday, April 19, 2021

அறியாமையும், அலட்சியமும்

 அறியாமையும், அலட்சியமும் 

பிப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களில் நன்கு குறைந்திருந்த தீ நுண் கிருமி தொற்று மார்ச்சிலருந்து கொஞ்சம் கொஞ்சமாக அதிகரித்து இப்போது பழைய தீவிரத்தை அடைந்துள்ளது. இதற்கு மக்களின் அறியாமை மட்டுமல்ல அரசியல் தலைவர்களின் அலட்சியமும்தான் காரணம். 

தேர்தல் அறிவித்து, நடத்தியது தவறு என்று கூற முடியாது. ஆனால் பிரச்சாரத்தை ஊடகங்கள் மூலம் மட்டுமே நடத்தியிருக்க வேண்டும். தேர்தல் பிரச்சார கூட்டங்களுக்கு வந்திருந்த மக்களில் பெரும்பான்மையோர் மாஸ்க் அணிந்திருக்கவில்லை, சமூக இடைவெளியா? அப்படி என்றால் என்ன? என்று கேட்கும்படியாகத்தான் இருந்தது நிலைமை.

நான் சென்னையிலிருந்து ஊர் திரும்பி, வீட்டிற்கு வந்த ஆட்டோ டிரைவரிடம், "இங்கு(பெங்களூர்) கொரோனா தீவிரம் எப்படி இருக்கிறது?" என்று கேட்டேன். அதற்கு அவர், "நானும் ஒரு வருஷமா தேடிக்கொண்டிருக்கிறேன் மேடம், எங்க இருக்கு கொரோனா?" என்றாரே பார்க்கலாம். 

"என்னங்க இப்படி சொல்றீங்க? உலகம் முழுவதும் கோடிக்கணக்கான மக்கள் இறந்து கொண்டிருக்கிறார்கள், இப்படி கேட்கிறீர்களே?"

"இதுக்கு முன்னால வியாதி வந்து யாரும் சாகலையா? அவங்க கொரோனாவினால்தான் செத்தார்கள் என்று என்பது என்ன நிச்சயம்?" கடவுளை கண் முன் வரச்சொல் அப்போதுதான் நம்புவேன் என்பது போல கூறினார். மேலும் இது மருத்துவர்கள் பணம் சம்பாதிக்க செய்த சதி என்று அபாண்டமாக பழி கூறினார். 

"எல்லாத்தையும் முடக்கிப் போட்டு எங்கள பிச்சை எடுக்க வைத்ததுதான் மிச்சம் இன்னிக்கு கார்த்தாலேர்ந்து இதுதான் ரெண்டாவது சவாரி"  என்ற அவரின் ஆத்திரத்தைக் கூட புரிந்து கொள்ள முடிகிறது. ஆனால் படித்தவர்கள் செய்யும் அட்டூழியம்..!

வீட்டில் சில பொருள்களை மாற்ற வேண்டியிருந்தது. என் மகன் ஆன் லைனில் தேடி ஒரு கடையைத் தேர்ந்தெடுத்திருந்தான்.   அந்த ஷோ ரூம் இருக்கும் சந்தில் ஒன்றிரண்டு பப்கள்(Pub) இருந்தன. அவற்றிலிருந்து இரைச்சலான இசை பெருக்கெடுத்து ஓடிக் கொண்டிருந்தது. தெரு முழுவதும் இளைஞர்கள்.. ஒன்றிரண்டு இளைஞிகளும்.. ஒருவரும் மாஸ்க் அணிந்திருக்கவில்லை. எல்லோரும் படித்து வேலையில் இருபவர்களாகத்தான் இருக்கும். இந்த நேரத்தில் பப்பிற்கு செல்ல வேண்டியது ரொம்ப அவசியமா?   

நடிகர் விவேக் மரணமடைந்தது மிகவும் வருத்தமளிக்கும் செய்திதான். ஆனால் அதற்காக அவருடைய இறுதி ஊர்வலத்தில் இத்தனை பேர்கள் கலந்து கொள்ள வேண்டுமா? இவர்களில் எத்தனை பேர்கள் தங்கள் உறவினர்களின் இறுதிச் சடங்கில் கலந்து கொண்டிருப்பார்கள்? இங்கிலாந்து ராணியின் கணவரின் இறுதிச் சடங்கில் கலந்து கொள்ள முப்பது பேருக்குத்தான் அனுமதியாம். எம்.ஆர்.ராதா இருந்திருந்தால் என்ன சொல்லியிருப்பார் என்று யோசித்துப் பார்க்கிறேன். 

இதற்கிடையில் மக்களை கோவிட் தடுப்பூசி போட்டுக் கொள்ள அறிவுறுத்தாமல் அதனால்  பலன் ஏதும் கிடையாது என்பது போல மீம்ஸ்! இவர்களையெல்லாம் என்ன செய்தால் தேவலை? நல்ல புத்தியைக் கொடு கடவுளே என்று வேண்டிக் கொள்ளகிறேன். சப்பகோ சன்மதி தோ பகவான்! 


    




Thursday, April 1, 2021

பக்தவத்சல பெருமாள் கோவில் - திருநின்றவூர்

பக்தவத்சல பெருமாள் கோவில் - திருநின்றவூர்


ஒரு முறை கணவராகிய திருமால் மீது ஊடல் கொண்ட திருமகள் கீழே இறங்கி வந்து நின்றதால் இந்த இடம் திரு நின்றவூர் எனப்படுகிறது. 

தன்  மகளாகிய ஸ்ரீதேவியை சமாதானப்படுத்தி மீண்டும் கணவரோடு சேர்த்து வைக்க சமுத்திர ராஜன் முயல்கிறார். "நீ என்னுடைய மகள் இல்லையம்மா, எண்ணெய் பெற்ற தாயாரே நீதான்" என்று புகழ்ந்ததில் மனம் மாறி தாயார் வைகுந்தம் திரும்புகிறாள். அதனால் இங்கு உறையும் தாயாருக்கு 'என்னைப் பெற்ற தாயார்' என்று வாத்சல்யமான பெயர். பெயருக்கு ஏற்றாற்போல் குபேரன் இழந்த செல்வங்களை அவனுக்கு மீட்டுத் தந்த வைபவ லட்சுமி.  தாயார் இத்தனை கருணையோடு இருக்கும் பொழுது, பெருமாள் பக்தர்களுக்கு அருள் செய்யும் பக்தவத்சல பெருமாளாகத்தானே இருக்க முடியும்?


சிறிய கோவில். கொடிமரத்தையும், பலி பீடத்தையும் தாண்டி, நான்கு படிகள் ஏறி கருடனை வணங்கி உள்ளே சென்றால் ஸ்ரீதேவி,பூதேவி தாயார்களோடு நின்ற திருக்கோலத்தில் புன்னகை தவழும் வதனத்தோடு நம் கண்ணையும்,கருத்தையும் கவர்கிறார் பக்தவத்சல பெருமாள். உற்சவர் பக்தராவி பெருமாள் என்று அழைக்கப் படுகிறார். 


எல்லா வைணவக்  கோவில்களையும் போல ஆஞ்சநேயர், ஆண்டாள் சன்னதிகளோடு மற்ற கோவில்களில் காணப்படாத அதிசயமாக ஆதிசேஷனுக்கு தனி சந்நிதி இருக்கிறது. அங்கு புதன் கிழமைகளில் நெய் விளக்கேற்றி பால் பாயசம் நைவேத்தியம் செய்ய ராகு,கேது, தோஷங்களும், சர்ப்ப தோஷமும் நீங்குமாம். ஆதிசேஷனுக்குரிய ஆயில்ய நட்சத்திரத்தில் நெய் விளக்கு ஏற்றி வழிபட்டால் வயிற்று வலி, பல் வலி, கால் வலி போன்ற உபாதைகள் நீங்குமாம். 


108 வைணவ திருப்பதிகளுள் 58வது திருப்பதி. திருமங்கையாழ்வாரால் மங்களாசாசனம் செய்யப்பட்டது. இந்த வழியே சென்ற திருமங்கையாழ்வார் இந்த கோவிலில் குடி கொண்டிருக்கும் பெருமாளை பாடாமல் தாண்டிச் சென்று விடுகிறார். தாயார் அவரிடம் பாடல் பெற்று வரும்படி பெருமாளை பணிக்கிறார். பெருமாள் அவரைத்  தேடி செல்வதற்குள் திருமங்கையாழ்வார் திருவிடந்தை தாண்டி, மாமல்லபுரம் சென்று விடுகிறார். அவரிடம் பெருமாள் பாடலை வேண்ட, அவர் ஒரே ஒரு பாடல் எழுதிக் கொடுக்கிறார். அதை பெருமையோடு தாயாரிடம் காட்ட, தாயாரோ,"ஐயோ இவ்வளவு அசடாகவா இருப்பீர்கள்? எல்லா தலங்கள் மேலும் பத்து பாடல்கள் இயற்றும் கலியன், இந்தக் கோவில் மீது ஒரே ஒரு பாடல்தான் எழுதிக் கொடுத்திருக்கிறான், நீங்களும் மறு பேச்சில்லாமல் வாங்கி கொண்டு வந்திருக்கிறீர்கள்.. உங்களை என்ன செய்தால் தேவலை? கலியனிடமிருந்து மிச்ச ஒன்பது பாசுரங்களையும் வாங்கி வாருங்கள்" என்று பெருமாளை துரத்த, அப்பாவி பெருமாள் திருமங்கை மன்னனைத் தேடிச் செல்லும் பொழுது அவர் திருக்கண்ணமங்கை சென்று விடுகிறார். அங்கு பக்தவத்சல பெருமாள் நிற்பதை ஓரக்கண்ணால் பார்த்து விட்ட திருமங்கை ஆழ்வார் அவரையும் மங்களாசாசனம் செய்தாராம். 

பக்தவத்சலப்பெருமாளையும், என்னைப் பெற்ற தாயாரையும் வணங்கி நம் விருப்பங்கள் ஈடேறப்  பெறுவோம். 



Friday, March 26, 2021

ஹ்ருதயாலீஸ்வரர் கோவில் -- திருநின்றவூர்

 ஹ்ருதயாலீஸ்வரர் கோவில் -- திருநின்றவூர் 


கோவிலின் கட்டுமான பணிகள் முடிந்து விட்டன. தான் நினைத்தபடியே சிறப்பாக கோவில் அமைந்து விட்டதில் மகிழ்ந்த மன்னன் கும்பாபிஷேகத்திற்கு நாள் குறித்து விட்டு மகிழ்ச்சியோடு  உறங்கச் சென்றான் பல்லா அரசனான ராஜ சிம்மபல்லவன்.  அவன் கனவில் வந்த சிவ பெருமானோ அவன் கும்பாபிஷேகத்திற்கு குறித்திருக்கும் நாளில் பூசலார் என்னும்  தன்னுடைய பக்தன் திருநின்றவூரில் கட்டியிருக்கும் கோவிலில்  தான் எழுந்தருளப் போவதால் இங்கே காஞ்சிபுரத்தில் அவன் கட்டியிருக்கும் கோவிலில் அன்று எழுந்தருள இயலாது என்று கூறி விடுகிறார். 

மன்னனுக்கு அதிர்ச்சி. அரசனான தான் கட்டிய கோயிலை விட சிறப்பாக வேறு ஒரு கோவிலா? அப்படி என்ன சிறப்பு அந்தக் கோவிலில்? என்று அதைக் காண விரும்பி திருநின்றவூருக்கு வருகிறார். எதிர்பாராமல் மன்னனைக் கண்ட ஊர் மக்கள் திகைக்கிறார்கள். பூசலார் கட்டிய கோவில் எங்கே இருக்கிறது என்று மன்னன் கேட்டதும் மேலும் திகைக்கிறார்கள். பூசலார் கோவில் கட்டியிருக்கிறாரா? இது என்ன புது கதை? கோவில் காட்டும் அளவிற்கு எந்த வசதியும் இல்லாதவராயிற்றே?    ஊருக்கு வெளியே இருக்கும் இலுப்பை மரக்காட்டில் காட்டில் எப்போதும் கண்களை மூடிக் கொண்டு உட்கார்ந்திருக்கும் அவர் எங்கே எப்படி  கோவில் கட்டுவார்? என்று ஊர் மக்கள் பயத்தோடும், தயக்கத்தோடும், கூற மன்னன் அவரை சந்தித்தே ஆக வேண்டும் என்று அவரைத் தேடிச் செல்கிறான். அங்கு ஊர் மக்கள் சொன்னபடி கண்களை மூடி  அமர்ந்திருக்கிறார் பூசலார். மன்னர் வந்திருப்பதைக் கூறி அவரை உலுக்கி எழுப்புகின்றனர் மக்கள். 

பூசலாரைப் பார்த்ததுமே அவர் சாதாரண மனிதர் இல்லை என்பது புரிந்து விட, அவரைப் பணிந்து," ஐயா, தாங்கள் கட்டியிருக்கும் கோவில் எங்கே? நீங்கள் நாளை அதற்கு கும்பாபிஷேகம் செய்ய முடிவு செய்திருக்கிறீர்களாமே? நான் கட்டிய கோவிலை புறக்கணித்து, உங்களுடைய கோவிலில் எழுந்தருளுவதில்தான் சிவ பெருமானுக்கு விருப்பம், நான் அந்தக் கோவிலை கான் முடியுமா?" என்று வினவ, பூசலார் விக்கித்துப் போய் விடுகிறார். கண்கள் நீரைப் பெருக்க, "நான் கோவில் கட்டியது என் மனதில் அல்லவா? அதை என் சிவன் ஏற்றுக் கொண்டு விட்டாரா?" என்று புளகாங்கிதத்துடன் தான் மனதில் கோவில் கட்டிய விவரத்தைக் கூற, மானசீகமாக கட்டிய கோவிலை இறைவன் அங்கீகரிக்கிறார் என்றால் அவர் எத்தனை விசுவாசத்தோடு அதை செய்திருக்க வேண்டும் என்பதை உணர்ந்த மன்னன் அவர் விரும்பிய வண்ணம் ஒரு கோவிலை நிர்மாணித்து தருகிறான். பூசலார் தன்  இதயத்தில் கோவில் கட்டியதால், இக்கோவில் ஹ்ருதயாலீஸ்வரர் கோவில் என்று அறியப் படுகிறது. 



சென்னையிலிருந்து முப்பத்திமூன்று கிலோ மீட்டர் தொலைவில் திருவள்ளூர் செல்லும் வழியில் அமைந்திருக்கிறது. சிறிய கோவில்தான். கிழக்கே பார்த்த ஸ்வாமி சன்னதியும், கருவறைக்குள்ளேயே பூசலாரின் சிலையும் அமையப் பெற்றிருப்பது சிறப்பு. மரகதாம்பாள் என்ற திரு நாமத்தோடு தனி சன்னிதியில்  தெற்கு நோக்கி குடிகொண்டிருக்கும் அம்பிகை.  மூலவர் ஹ்ருதயாலீஸ்வரர் என்பதால் இங்கு வந்து வழிபட இதயக் கோளாறுகள் சரியாகும் என்பது நம்பிக்கை. 

தொண்டை மண்டல கோவில்களுக்கே உரிய கஜபிருஷ்ட விமானம். கோஷ்டத்தில் தக்ஷிணாமூர்த்தி,  மஹா விஷ்ணு, மற்றும் பிரும்மா.  பிரதான வாயிலின் இரு புறங்களிலும் சூரிய சந்திரர். நவகிரக சந்நிதியை ஒட்டி பல்லவ ராஜாவான ராஜசிம்மனுக்கும் சிலை இருக்கிறது. வெளி பிரகாரத்தில் மேற்கு வாசலைப் பார்த்தபடி அமர்ந்திருக்கும் விநாயகர் கண்ணையும்,கருத்தையும் கவர்கிறார். 




ஒரு முறை சென்று வணங்கிவிட்டு வாருங்களேன். 



Friday, March 19, 2021

மறந்தே போச்சு..

 மறந்தே போச்சு..

ஒரு காலத்தில் கொழுப்பு என்பதே உடல் நலத்திற்கு கேடானது என்ற எண்ணம் இருந்தது,ஆனால் இப்போதோ கொழுப்பு என்பதும் உடலுக்கு தேவையான ஒன்றுதான் என்பதோடு கொழுப்பில் இரண்டு வகை உண்டு,ஒன்று நல்ல கொழுப்பு, இன்னொன்று கெட்ட கொழுப்பு என்கிறார்கள். அதைப் போலவேத்தான் மறதியிலும் நல்ல மறதி,கெட்ட மறதி என்று இரண்டு உண்டு.

நமக்கு இழைக்கப்பட்ட துரோகங்களை மறந்து விட்டால் அவைகளிலிருந்து பாடம் கற்றுக் கொள்ள முடியுமா? துரோகங்களை  மன்னிக்கலாம், மறக்கக்கூடாது. 

இயக்குனர் சேரன்,   "என் உதவியாளர்களிடம் செய்த தவற்றையே மறுபடியும் செய்யாதீர்கள், புதிதாக செய்யுங்கள்" என்று கூறுவேன் என்றார். தவறுகளிடமிருந்து பாடம் கற்றுக் கொள்ள வேண்டுமென்றால் அதை மறந்தால் எப்படி இயலும்?

ஏதாவது ஒன்றை கற்றுக் கொள்ளும் பொழுது மீண்டும் மீண்டும் அதை செய்யச் சொல்வதற்கு(பயிற்சி) காரணம் கற்றுக் கொண்டதை மறக்க கூடாது என்பதற்காகத்தானே?

நம் வாழ்க்கையில் நடந்த சில விஷயங்களில் நம் கையை மீறி நடப்பவை, நம்மால் மாற்றவே முடியாது என்ற விஷயங்களை மறப்பதுதான் நலம். 

குடும்பத்திலும், நட்பிலும் சில விஷயங்களை மறக்கும் பொழுதுதான் சந்தோஷமாக வாழ  முடியும். சிலர் சிறு வயதில் பட்ட கஷ்டங்களை மறக்காமல் ஆயுள் முழுவதும் வருந்திக் கொண்டே இருப்பார்கள். 

எக்ஸாஸ்ட் ஃபேனை நிறுத்த மறந்ததால் தீ விபத்துகள் நிகழ்ந்திருக்கின்றன.

மனைவியின் பிறந்த நாளையும், தங்கள் திருமணநாளையும் மறப்பதால் குடும்பத்தில் சலசலப்பு நிச்சயம். 

மறதியால் கிடைத்த ஒரு நன்மை, ஞாபகமறதிக்காரர்களைப் பற்றிய ஜோக்குகள். 

திருச்சி.கே.கல்யாணராமன் தன் உபன்யாசங்களில்,"உங்களுடைய மறதிதான் எங்கள் பலம். நீங்கள் ராமாயணத்தையும், மஹாபாரதத்தையும் மறப்பதால்தான் நாங்கள் கதை சொல்லி பிழைக்க முடிகிறது" என்பார். 

நமக்கு ஈடுபாடு இருக்கும் விஷயங்களை நாம் மறப்பதில்லை. நெட் பாங்கிங் கடவுச்சொற்களையும், பின் நம்பர்களையும் மறக்கும் நான் லைப்ரரி மெம்பர்ஷிப் எண்ணை மறக்க மாட்டேன். எப்போதோ படித்த கதை, கவிதை வரிகள் நினைவில் இருக்கும். உறவிலும், நட்பிலும் எல்லோருடைய பிறந்த நாள், திருமண நாள் போன்றவைகளை மறக்காமல் நினைவில் வைத்துக் கொண்டு வாழ்த்துவேன். பிரபலங்கள் உட்பட பலரின் ஜாதகங்கள் கூட எனக்கும் என்னுடைய இன்னொரு சகோதரிக்கும் மனப்பாடம், காரணம் ஈடுபாடு. 

மகா வித்வான் மீனாட்சி சுந்தரம் பிள்ளை தன் நண்பர்களோடு திருச்சி உறையூரில் இருக்கும் குடமுருட்டி ஆற்றுக்கு குளிக்கச் செல்வாராம். எல்லோரும் பல் தேய்த்து விட்டு ஆற்றில் துளைத்து நீராடி விட்டு திரும்பி வந்தால் மீனாட்சி சுந்தரம் பிள்ளை அப்போதும் பல் தேய்த்துக் கொண்டே இருப்பாராம். அதிர்ச்சி அடைந்த நண்பர்கள், "இன்னுமா பல் தேய்த்து முடிக்கவில்லை?" என்று கேட்டால், "சங்கப் பாடலின் ஒரு வரியை யோசித்துக் கொண்டேயிருந்ததில் மறந்து விட்டது" என்பாராம்.

சர்.சி.வி. ராமன் வாக்கிங் சென்று வருகிறேன் என்று கூறி விட்டு நடக்க ஆரம்பித்தால் நடந்து கொண்டே இருப்பாராம், வீட்டிற்கு திரும்பி வர வேண்டும் என்பதே மறந்து விடுமாம் உடன் செல்பவர்கள் யாராவது நினைவூட்ட வேண்டுமாம். ஆனால் இவையெல்லாம் மறதி என்பதில் வராது, ஓவர் தி்ங்கிங் என்று வேண்டுமானால் சொல்லலாம்.

ஞாபகமறதியுள்ள மற்றொரு பிரபலம், பாடகர் உன்னி கிருஷ்ணன். அவருடைய ஞாபக மறதியைப் பற்றி அவருடைய தாயாரும், மனைவியும் காஃபி வித் அனு நிகழ்ச்சியில் பகிர்ந்து கொண்டார்கள்.  பொள்ளாச்சிக்கு கச்சேரிக்கு சென்ற பொழுது, ரயில்வே ஸ்டேஷனில் டிக்கெட் கலெக்டரிடம் சென்னை−பொள்ளாச்சி டிக்கெட்டை கோடுப்பதற்கு பதிலாக, பொள்ளாச்சியிலிருந்து சென்னைக்கு வர வேண்டிய ரிடர்ன் டிக்கெட்டை கொடுத்து விட்டாராம். ரூமுக்குச் சென்று ரிடர்ன் டிக்கெட் இல்லாததை பார்த்த அவருடைய அம்மா, நிகழ்ச்சி ஏற்பாடு செய்தவர்களிடம் சொல்லி, அந்த டிக்கெட்டை மீட்டெடுத்தாராம். 

ஹனிமூன் சென்ற பொழுது மனைவியின் பெட்டியை லிஃப்டிலிருந்து எடுக்கவே மறந்து விட்டாராம், மனைவி உடை மாற்றிக்கொள்ள பெட்டியை தேடிய பொழுதுதான் பெட்டியை லிஃப்டிலேயே விட்டு விட்டது நினைவுக்கு வந்து சென்று பார்த்ததில், நல்ல வேளை பெட்டி லிஃப்டிலேயே இருந்திருக்கிறது.

கச்சேரிகளில் பாடல் வரிகள் மறந்து விடுவாராம். வயலின் வாசிப்பவர் எடுத்துக் கொடுத்தால் உண்டு என்று அவரே சிரித்தபடி கூறினார்.

எழுபது வயதாகும் ஒரு முதியவர் தன் மனைவியை "ஹனி","டார்லிங்" என்றெல்லாம் அழைப்பதை பார்த்த ஒரு இளைஞர், "உங்களுக்கு திருமணமாகி இத்தனை வருடங்கள் ஆகியும் மனைவியை, ஹனி,டார்லிங் என்றே அழைக்கிறீர்களே, அவ்வளவு காதலா?" என்று கேட்டானாம்.அதற்கு அந்த முதியவர்,"என் மனைவியின் பெயர் என்ன என்பது பத்து ஆண்டுகளுக்கு முன்பே மறந்து விட்டது,அதை அவளிடம் கேட்க பயம், அதனால்தான் இப்படி கூப்பிட்டு சமாளிக்கிறேன்" என்றாராம். எப்பூ..டி?

Saturday, March 13, 2021

மசாலா சாட் - 23

 மசாலா சாட் - 23


பெங்களூரிலிருந்து டில்லிக்கு விஸ்தாராவில் பயணப்பட்டோம். விமான நிலையம் பழையபடி ஆகி விட்டது. மாஸ்க் அணிந்திருப்பது மட்டுமே மாறுதல். விமானம் முழு கொள்ளளவில் இருந்தது. நடு இருக்கையில் அமர்ந்திருப்பவர் முழு  பாதுகாப்பு கவசம் அணிந்திருக்க வேண்டும் என்னும் விதியை என்னருகில் அமர்ந்திருருந்த பெண்மணி கடை பிடிக்கவில்லை. டில்லியில் இருக்கும் அவருடைய தாத்தாவின் 100வது பிறந்த நாளை கொண்டாட குடும்பத்தோடு (ஏறக்குறைய பதினைந்து பேர்கள்) சென்று கொண்டிருந்தார்கள். பிளேன் டேக் ஆஃப் ஆனதிலிருந்து சாப்பிட ஆரம்பித்தார்கள். எனக்கும்  உபசாரம்! 

இந்த குழு இப்படி என்றால் இன்னொரு குழு டில்லியை சுற்றிப் பார்க்கச் செல்கிறார்கள் போலிருக்கிறது.  முதல் விமானப் பயணம் என்று  தோன்றியது.  விமானத்திற்குள் நுழைவதிலிருந்து, கேபின் பேகேஜ் வைப்பது, இறங்கியதும், வாக்கலேட்டரில் நடப்பது என்று அத்தனையையும் வீடியோ எடுத்துக் கொண்டே வந்தார்கள். நிச்சயம் இன்ஸ்டாக்ராமில் பகிர்வார்கள் என்றுதான் தோன்றியது. 

டில்லியிலிருந்து சென்னை திரும்பியவுடன் கொரோனா தடுப்பூசி விஜயா ஹெல்த் சென்டரில் போட்டுக் கொண்டேன். எல்லோருக்கும் கோவிஷீல்டுதான் போடுகிறார்கள். பெங்களூரில் வசிக்கும் நான் சென்னையில் போட்டுக் கொள்ள முடியுமா? என்னும் தயக்கம் இருந்தது. டில்லியில் வசிக்கும் வெங்கையா நாயுடு சென்னையில் போட்டுக் கொண்டது ஒரு நம்பிக்கையை தந்தது. முதல் ஊசியை எங்கு போட்டுக் கொள்கிறோமோ அதே இடத்தில் இரண்டாம் ஊசியையும்  போட்டுக் கொண்டால்தான் சான்றிதழ் தருவார்களாம். எங்கள் வீட்டிலும், நட்பு வட்டாரத்திலும் ஊசி போட்டுக் கொள்ள சிலருக்கு ஏதோ தயக்கம் இருப்பது தெரிகிறது.  எங்கள் குடும்பத்தில் நான்தான் முதல் ஆளாக தடுப்பூசி போட்டுக் கொண்டிருக்கிறேன். 

சென்னையிலிருந்து திருச்சிக்கு செல்ல வேண்டியிருந்தது. மார்ச் 10,11 வேலை இருந்தது. 9ஆம் தேதி காலை காரில் பயணப்பட்டோம். அந்த டிரைவர் மாஸ்க் அணிந்து கொள்ளவில்லை. கேட்டதற்கு கொரோனாவெல்லாம் முடிந்து விட்டது மேடம் என்கிறார்.  முதலில் நாங்கள் இன்னும் இரண்டு நாட்கள் திருச்சியில் தங்கி அருகில் இருக்கும் கோவில்களுக்கு சென்று, திருச்சி பதிவர்களை சந்தித்து விட்டு வரலாம் என்று நினைத்தேன். ஆனால் இனொரு அக்காவின் மகன் சென்னை சி.ஐ.டி. காலனியில் 'பவுல்டு'(BOWLD) என்னும் உணவகத்தின் கிளையை துவங்கியதால் வியாழனன்றே திரும்ப வேண்டிய நிர்பந்தம். கிடைத்த கொஞ்ச நேரத்தில் திரு.ரிஷபன் அவர்களையும், திருமதி. ஆதி வெங்கட்டையும் மட்டும் சந்தித்தேன்.

திரு ரிஷபன் அவர்களின் எழுத்தைப் போலவே அவரும் எளிமையாக இருக்கிறார். மனைவி அருமையான டீ கொடுத்தார். அவர் தந்தையும் எங்கள் உரையாடலில் அவ்வப்பொழுது கலந்து கொண்டார். ஆதி வெங்கட் வீட்டை கண்ணாடி போல் பளிச்சென்று வைத்திருக்கிறார். அவரோடு அதிக நேரம் செலவிட முடியவில்லை. இந்த முறை கீதா அக்காவையும் பார்க்க முடியவில்லை. 

கூரத்தாழ்வார் சன்னதி

கமலவல்லி சமேத அழகிய மணவாளன் சன்னதி நுழை வாயில்

எப்போதும் செல்லும் மலைக்கோட்டை விநாயகர், திருவானைக்கோவில், ஸ்ரீரங்கம் தலங்களை தரிசனம் செய்து விட்டு, உறையூரில் இருக்கும் வெக்காளி அம்மன் கோவில், நாச்சியார் கோவில்களுக்கும் சென்றோம். எந்த கோவிலிலும் நமஸ்கரிக்க அனுமதியில்லை. பெருமாள் கோவில்களில் தீர்த்தம், சடாரி சாதிப்பது போன்றவை இல்லை. அதற்காக நாச்சியார் கோவிலில் இருந்த அர்ச்சகர்கள் இரண்டு பேரும் வெகு அலட்சியமாக கால்களை நீட்டியபடி அமர்ந்து கொண்டிருந்ததும், எங்கள் கேள்விகளுக்கு அசிரத்தையாக பதில் சொன்னதும் வருத்தமாக இருந்தது. சாதாரணமாக வைணவ கோவில்களில் தீபாராதனை காட்டும் பொழுது அங்கு உறையும் பெருமாளின் சிறப்பை எடுத்துக் கூறுவார்கள். இங்கோ பெருமாள் கையில் இருக்கும் சக்கரம் பிரயோக சக்கரம் என்பதை நான் கவனித்து, கேட்டேன் அப்போதும் அலட்சியமான பதில்தான்.. பெருமாளின் சக்கரம் பிரயோக சக்கரமாக இருக்கும் தலங்கள் மிகவும் சிறப்பானவை. 


ஏற்கனவே டி.நகரிலும், மடிப்பாக்கத்திலும் கிளைகள் உள்ள பவுல்டு என்னும் உணவகத்தின் கிளையை சென்னை சி.ஐ.டி. காலனியில் துவக்கியுள்ளார் என்னுடைய சகோதரியின் மகன். ஹோட்டல் என்றாலே நான்,பரோட்டா, மட்டர் பனீர், குருமா, பிரியாணி என்ற எண்ணத்தை மாற்றி  வீட்டில் கிடைக்கும் ஆனால் இப்போது பெரும்பாலானோர் செய்யாத மோர்க்கூழ், உப்புமா கொழுக்கட்டை, பால் கொழுக்கட்டை போன்ற ஐட்டங்களை கொடுப்பது நோக்கம். தற்சமயம் டேக் அவே ஆர்டர்களில் கவனம் செலுத்துகிறார்கள். ஸ்விகி மூலம் ஆர்டர் கொடுக்கலாம். 

ரைஸ் பவுலில் பருப்பு சாதம், ரசம் சாதம், மோர் குழம்பு சாதம், வற்றல் குழம்பு சாதம், மிளகு குழம்பு சாதம், புளியோதரை, தயிர் சாதம் போன்றவைகள் இருக்கின்றன.  ஹோட்டல் சாப்பாடு பிடிக்காத, வீட்டில் சமைக்கவும் முடியாத பெரியவர்களுக்கு மிகவும் உபயோகமாக இருக்கும். 


Saturday, March 6, 2021

சுந்தர் நர்சரி & ஹுமாயூன் டோம்ப்

 சுந்தர் நர்சரி & ஹுமாயூன் டோம்ப் 


டில்லியில் இருந்த சொற்ப நாளில் பதிவர் வெங்கட் நாகராஜ் அவர்களின் டில்லி உலாவை படித்து விட்டு, சுந்தர் நர்சரிக்கு செல்ல முடிவெடுத்தோம்.







 நகரின் மையத்தில் இத்தனை பெரிய பூங்கா அமைந்திருப்பது ஆச்சர்யம்தான். அது நன்றாகவும் பராமரிக்கப்படுகிறது. 





நாங்கள் உள்ளே சென்ற பொழுது அழகாக அலங்கரித்துக் கொண்ட ஒரு யுவனும்,யுவதியும் புகைப்பட கலைஞர் தொடர உள்ளே வந்தனர். போட்டோ ஷூட் ஆக இருக்கும் என்று தோன்றியது. இன்னொரு பக்கத்தில் ஒரு மரத்தின் ஒரு பக்கத்தில் நீல நிற பலூன்கள், மற்றொரு பக்கத்தில் பிங்க் நிற பலூன்கள் கட்டி தொங்கவிடப்பட்டிருக்க கர்ப்பமாக இருக்கும் ஒரு பெண்ணை விதம் விதமாக புகைப்படம் எடுத்துக் கொண்டிருந்தது ஒரு சீக்கிய குடும்பம். வெட்டிங் போட்டோ ஷூட் போல, இந்த ப்ரெக்னென்சி போட்டோ ஷூட்டும் இப்போது பிரபலமாகிக் கொண்டு வரும் ஒரு விஷயமாச்சே!



நடந்து கொண்டிருந்த பொழுது கண்களை மூடி அமர்ந்திருந்த ஒரு சீக்கியர் கண்ணில் பட்டார். அவரை ஓவியமாக இரண்டு பேர் வரைந்து கொண்டிருந்தார்கள். 




வெளியேறும் வழியில் ஒரு மரத்தடியில் முதியவர்கள் கூட்டம்... ரீ யூனியனாக இருக்கும் என்று நினைத்தேன். 


இறந்து போன தங்கள் உறவினர்கள் நினைவாக பார்க்குகளில் பெஞ்சுகள் அமைக்கும் பழக்கம் லண்டனில் உண்டு என்று ஏஞ்சல் ஒரு முறை தன் வலை தளத்தில் எழுதியிருந்தார். அதைப் போல சுந்தர் நர்சரியிலும் சில பெஞ்சுகளை பார்க்க முடிந்தது. 


அங்கு வந்த பெரும்பாலானோர் ஒரு பெரிய பை, பாய் இவைகளோடு வந்தனர். பாயை விரித்து  கொண்டு சாப்பாட்டு கடையை விரிகின்றனர். நமக்கு சோறு முக்கியம்.  மஸ்கெட்டில் ஒரு முறை டீப் சீ டைவிங் சென்றிருந்தோம். நடுக்கடலில் நாங்கள் சென்ற படகை நிறுத்தி, "லைஃப் ஜாக்கெட் இருக்கிறது, அதை அணிந்து கொண்டு நீங்கள் கடலில் குளிக்கலாம் என்றதும்,  அந்தப் படகில் இருந்த ஒரு ஐரோப்பிய குடும்பம் மட்டுமே கடலில் இறங்கியது. இந்தியர்கள் எல்லோரும் குறிப்பாக வட இந்தியர்கள் சாப்பாட்டு கடையை விரித்து விட்டார்கள்.   

அழகழகான பூக்கள். ரோஜாக்களின் சைஸ் மிரட்டியது. ஹை ப்ரடாக இருக்குமோ? 




சுந்தர் நர்சரியை முடித்து விட்டு ஹுமாயூன் டோம்ப் சென்றோம். இதை முன் மாதிரியாக வைத்துதான் தாஜ் மஹால் கட்டப்பட்டிருக்குமோ என்று தோன்றியது. மொகலாய மன்னர்கள் கட்டிய கட்டிடங்களின் சிறப்பு என்னவென்றால் பிரதான வாயிலிருந்து குறிப்பிட்ட கட்டிடத்தை அடைவதற்கே நீண்ட தூரம் நடக்க வேண்டும். தாஜ் மஹாலும் சரி, ஹுமாயுன் டோம்பும் சரி, அதன் தோற்றத்தை  கெடுக்கும் வண்ணம் இடையில் வேறு எதுவும் வர முடியாது. நம்முடைய கோவில்களை நாம் அப்படியா வைத்திருக்கிறோம்? சுற்றி கடைகள். ஸ்ரீவில்லிபுத்தூர் ஆலய கோபுரத்திற்கு அடுத்த பெரிய கோபுரம் திருவண்ணாமலை கோபுரம். ஆனால், அதன் முழு தோற்றமும் நம்மால் பார்க்க முடியாது. முன்னால் இருக்கும் கடைகளின் கூரைகள் அந்த தோற்றத்தை மறைத்து விடும்.     







ஹுமாயூன் கல்லறை 



கல்லறையின் மேல் விதானம் 

ஹுமாயூன் டோம்பிலிருந்து கன்னாட் பிளேஸ் சென்று ஒரு பஞ்சாபி உணவகத்தில் உணவருந்தி விட்டு, ஜன்பத் மார்க்கெட்டில் குட்டியாக ஒரு ஷாப்பிங் செய்து விட்டு, இந்தியா கேட் சென்றோம். 


இந்தியா கேட் அருகே  அனுமதிக்கவில்லை. அதற்கு எதிரே இருந்த பெரிய திடலில் ஏதோ திருவிழா போல் கும்பல். பெரும்பாலானோர் மாஸ்க் அணிந்திருக்கவில்லை. அங்கு இருந்த ஒரு நீர்நிலை சரியாக பராமரிக்கப் படாமல் ஒரே குப்பையும், கூளமுமாக இருந்தது. ஸ்வட்ச் பாரத் என்று பிரதமர் சொல்லிக் கொண்டிருக்க, தலைநகரின் பிரதான இடம் இப்படி இருப்பது  யார் கண்ணிலும் படாதது ஆச்சரியமாகத்தான் இருக்கிறது. 


தாயின் மிகப்பெரிய மணிக்கொடி பாரீர்