கணம்தோறும் பிறக்கிறேன் 

Friday, January 11, 2019

மசாலா சாட்

மசாலா சாட் 


ஒரு நாள் காலை தொலைக்காட்சியில் சேனலை மாற்றியபொழுது கண்ணன் பட்டாச்சார்யா என்பவர் எந்தெந்த ராசிக்காரர்கள் கடைக்குச் செல்லும் பொழுது எந்தெந்த நிற பைகளை எடுத்துச் செல்ல வேண்டும் என்று சொல்லிக் கொண்டிருந்தார். அப்படி ராசிக்கேற்ற பையை எடுத்துச்சென்றால் நாம் வாங்கும் சாமான்கள் நன்றாக அமையும் என்கிறார். பார்க்கலாமா?





மேஷ ராசிக்காரர்கள் - அடர்ந்த சிவப்பு, சிக்னல் சிவப்பு நிரப்பையை எடுத்துச் செல்ல வேண்டுமாம்.

ரிஷப ராசிக்காரர்கள் - வெளிர்நீல நிற பை எடுத்துக்கொண்டு போக வேண்டும் 

மிதுன ராசிக்காரர்கள் கொண்டு போக வேண்டிய பை  - இளம் பச்சை நிறத்தில் இருந்தால் நலமாம்.

கடக ராசிக்காரர்கள்  தூய வெண்மை நிற பையைத்தான் எடுத்துக்கொண்டு போக வேண்டுமாம்.

சிம்ம ராசிக்காரர்களுக்கு இளம் சிவப்பு நிற பைகள் நல்லது செய்யுமாம்.

கன்னி ராசிக்காரர்கள் வைத்துக் கொள்ள வேண்டிய பை அடர்ந்த பச்சை நிறத்தில் இருப்பது நலமாம்.

துலாம் ராசிக்காரர்களுக்கு ராசியானது அடர்ந்த நீல நிறப்பை.

விருச்சிக ராசிக்காரர்களும் அடர்ந்த சிவப்பு நிற பையைத்தான் எடுத்துக்கொண்டு போக வேண்டுமாம்.

தனுர் ராசிக்காரர்களுக்கு கை கொடுப்பது மஞ்சப்பை.

மகர ராசிக்காரர்கள் பிரௌன் கலந்த கருப்பு நிற பையையும், கும்ப ராசிக்காரர்கள் அடர்ந்த கரு நிற பையையும் எடுத்துச் செல்வது நலமாம்.

மீன ராசிக்காரர்கள் பொன் நிற மஞ்சள் பையை தேடிப் பிடியுங்கள். 

இப்படியெல்லாம் எடுத்துக் கொண்டு சென்று வாங்கி வந்த வெண்டைக்காயில் பூச்சி இருந்தால் ஆர்கானிக் என்று சொல்லி சமாளியுங்கள். 
                                            ------------------------

தொலைக்காட்சி என்றதும் என்னைக் கவர்ந்த ஒரு சாக்லேட் விளம்பரம் நினைவிற்கு வருகிறது.

தனக்கு கொடுக்கப்பட்ட சாக்லேட் பட்டையை தின்று முடித்து விட்ட சிறுவன் கண்களை மூடி ,"காட்! எனக்கு இன்னும் ஒரே ஒரு சாக்லேட், ப்ளீஸ்" என்று வேண்டிக்கொள்வான் அதைப் பார்த்த அருகில் படித்துக் கொண்டிருக்கும் அவன் மூத்த சகோதரன்(அவனும் சிறுவன்தான்) தான் திங்காமல் வைத்துக் கொண்டிருக்கும் தன்னுடைய சாக்லேட் பட்டையை தம்பிக்கு முன் வைத்து விடுவான். அது தெரியாத தம்பி தன்னுடைய வேண்டுதலுக்கு இரங்கி நிஜமாகவே கடவுள் கொடுத்து விட்டார் என்று நினைத்து,"ஆ!கிடைத்து விட்டது!" என்று அண்ணனிடமே காட்டுவான். அதற்கு அவனும்," எனக்கும் ஒன்று கேட்டிருக்கலாமே?" என, "நெக்ஸ்ட் டைம்" என்று கூறி விட்டு முழு சாக்லேட் பட்டையையும் எடுத்துச் சென்று விடுவான். அவன் விட்டுச்சென்ற சாக்லேட் பேப்பரை அண்ணன் எடுக்க, இதையெல்லாம் அறிந்த அவர்கள் தாய்,"சாக்லேட் பேப்பரை நான் தூக்கி போடட்டுமா?" என்று மகனின் தலையை கோதி கேட்பதோடு முடியும். பகிர்தல், விட்டுக்கொடுத்தல் போன்ற குணங்கள் இன்னும் இருக்கின்றன என்று கூறும் அந்த விளம்பரத்தை விரும்பி பார்ப்பேன். 
 --------------------



ஒரு வழியாக காற்றின் மொழியை அமேசான் பிரைமில் பார்த்தேன். வித்யா பாலன் நடித்திருந்த 'தும்ஹாரி சுலோ' என்னும் ஹிந்தி படத்தின் தமிழ் வடிவம். family drama. மூலத்தை சிதைக்கவில்லை. முன்பாதி முழுவதும் ராதா மோஹனுக்கே உரிய இயல்பான நகைச்சுவையோடு நகர்கிறது. ஜோதிகா என்னவோ நன்றாகத்தான் நடித்திருக்கிறார். இருந்தாலும் வித்யா பாலன் இன்னும் கொஞ்சம் இயல்பாக செய்திருந்தாரோ என்று தோன்றுகிறது. இதற்கு இரண்டு காரணங்கள் ஒன்று, ஜோதிகாவின் குறும்பு எப்படி இருக்கும் என்று நமக்குத் தெரியும், வித்யா பாலனைப்பற்றி தெரியாததால் அவர் எப்படி நடித்திருந்தாலும் ஓகே. அவருடைய நடைதான்.. ஹி ஹி!

இரண்டாவது ஜோதிகா பாவம் என்ன செய்வார்? அவருடைய முட்டை கண்ணை இரண்டு சென்டி மீட்டர் விரிக்க வேண்டுமென்றாலும், அது ஐந்து சென்டி மீட்டர் விரிந்து விடுகிறதே? நமக்கு அது ஓவர் ஆக்டிங் போல தோன்றுகிறது. ஆனால் இரண்டாம் பாதியில் சோகக்காட்சிகளில் ஜமாய்த்து விட்டார்.   விதார்த் தன் பாத்திரத்தை உணர்ந்து செய்திருக்கிறார். 
ஸ்டார் வேல்யூ உள்ள வேறு நடிகரை போட்டிருந்தால், இன்னும் கொஞ்சம் பெட்டராக இருந்திருக்குமோ? 

ஜோதிகாவின் பாஸாக வரும் நடிகை யார் என்று தெரியவில்லை. மிக நன்றாக நடித்திருக்கிறார். அந்த பேஸ் வாய்ஸ் ஒரு பிளஸ். 

எதிர்பார்த்த திருப்பங்களோடு(பிரமாத திருப்பங்கள் எதுவும் இல்லை), எதிர்பார்த்த முடிவோடு, சுத்த சைவமாக அந்தக் கால மௌலி படங்கள் போல இருக்கிறது. 
-------------------

என் அக்காவின் வீட்டில் இருந்த பொழுது, ஒரு நாள் அக்கா பேத்தி ரோஷ்ணியை எங்கே காணோம் என்று தேடினோம். ஐந்தே வயதாகும் அவளானால் செருப்பை மாட்டிக்கொண்டு எங்கேயோ சென்று விட்டு வந்தாள். எங்கே போயிருந்தாய்? என்று கேட்டதற்கு,"சும்மா ஒரு ரவுண்ட் போய் விட்டு வந்தேன் என்றாள். எல்லோரும் அவளை இப்படியெல்லாம் தனியாக, வீட்டில் சொல்லாமல் எங்கேயும் போகக்கூடாது என்று சொல்லி விட்டு விட்டார்கள். நான் மட்டும் கொஞ்சம் அதிகமாக அவளிடம்," இப்படியெல்லாம் வீட்டில் சொல்லாமல் தனியாக போனால், யாராவது உன்னை தூக்கிக்கொண்டு போய் விடுவார்கள், அப்படி இப்படி என்று பயமுறுத்தினேன். நான் சொன்னதையெல்லாம் கேட்டுக்கொண்டிருந்த அவள் என்னிடம்,"வீட்டில் சொல்லிவிட்டு போனால் தூக்கிக்கொண்டு போக மாட்டார்களா?" என்று கேட்டாளே ஒரு கேள்வி.

இன்னொரு நாள் என்னோடு கடைக்கு வந்தாள். அங்கு நெயில் பாலீஷை அவள் கையில் எடுப்பதை பார்த்து அவளுக்கு வாங்கிக் கொடுத்தேன். மறுநாள் அதை தன் கை, கால் விரல்களுக்கு போட்டுக்கொண்டதோடு எனக்கும் போட்டு விட வந்தாள். ஐயோ! நான் பாட்டிடா, பாட்டியெல்லாம் நெயில் பாலீஷ் போட்டுக்கொள்வார்களா? யாராவது பார்த்தால் கேலி பண்ணுவார்கள் என்றேன். உடனே,"நீ சித்திதானே, நான் உன்னை பானு சித்தி என்றுதானே கூப்பிடுகிறேன்?" என்று எனக்கு ஐஸ் வைத்து, என் கை, கால் விரல்களில் நெய்ல் பாலீஷ் போட்டு விட்டுவிட்டாள். 
இதனால் நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியது என்னவென்றால், நான் பாட்டியில்லை. ஹா ஹா ஹா! 
-----------------

Wednesday, January 9, 2019

சந்திப்பு - சரவெடி ஸ்ரீதர்


சந்திப்பு - சரவெடி ஸ்ரீதர் 




சில நாட்களுக்கு  முன் என் சகோதரியின் மகளின் உடல் நிலை சரியாக பிரார்த்தனை செய்யும்படி உங்களிடம் கேட்டிருந்தேன். உங்கள் எல்லோரின் பிரார்த்தனையாலும், கடவுள் அருளாலும் அக்கா மகளின் உடல் நிலை தேறி வருகிறது. உங்கள் எல்லோருக்கும் பிரத்யேகமாக தன் நன்றிகளை என் அக்கா தெரிவிக்க சொன்னார். நன்றி! நன்றி! நன்றி!

அக்கா மகளுக்கு உதவியாக ஆஸ்பத்திரியில் இருந்த பொழுது அங்கிருந்த லிஃட் ஆபரேட்டர்  எல்லோரோடும் கனிவாக பேசிக்கொண்டும், ஜோக் அடித்துக்கொண்டும் பணி புரிவதை பார்க்க முடிந்தது. அவரோடு பேச்சு கொடுத்த பொழுது தன்னைப்பற்றிய விவரங்களை சொன்னார்.

பாரதியாரின் சொந்த ஊரான எட்டையபுரம்தான் இவருக்கும் சொந்த ஊராம். எட்டையபுரம் அரண்மனையில் பணியாற்றிய இவர் தந்தை பாரதிக்கு நண்பராம். தந்தை பொதுப்பணித்துறையில் பணி புரிந்ததால், பணி நிமித்தம் பல ஊர்களுக்கு மாற்றல், எனவே இவரும் எட்டயபுரம், ஸ்ரீவைகுண்டம், அம்பாசமுத்திரம், என்று வெவேறு ஊர்களில் படித்தாராம். ஸ்ரீவைகுண்டம் குமரகுருபரர் ஆண்கள் உயர்நிலைப்பள்ளியில் படித்த பொழுதுதான் இவருடைய நகைச்சுவை உணர்வை கண்டுபிடித்த தமிழாசிரியர்,"உனக்கு நல்ல நகைச்சுவை உணர்ச்சி இருக்கிறது. பத்திரிகைகளுக்கு நகைச்சுவை துணுக்குகள் எழுதிப்போடேன்" என்று உற்சாகப்படுத்தியதால் பத்திரிகைகளுக்கு துணுக்குகள் எழுத ஆரம்பித்தாராம். 

அவருடைய முதல் ஜோக் 1978 மாலை முரசில் தமாஷ் என்ற தலைப்பில் வெளியானதாம். இப்போது அவர் நகைச்சுவை துணுக்குகள் வெளிவராத பத்திரிகைகளே இல்லை எனலாம். "எப்போதும் என் கையில் போஸ்ட் கார்டும், பேனாவும் ரெடியாக வைத்துக் கொண்டிருப்பேன். ஜோக் மனதில் தோன்றியவுடனேயே பத்திரிகைகளுக்கு எழுதிப்போட்டு விடுவேன்". என்கிறார். இப்படி சரமாரியாக ஜோக்குகளை பொழிவதால் 'சரவெடி ஸ்ரீதர்' என்னும் பட்டப்பெயர் பெற்றுள்ளார். 


தொழில்முறையில் ஆபரேஷன் தியேட்டர் அசிஸ்டென்ட் ஆன இவர் கோவை பாப்பநாயக்கன் பாளையத்தில் குப்புசாமி நாயுடு நினைவு மருத்துவமனை, மதுரை மீனாட்சி நர்ஸிங்ஹோம், தாம்பரம் ஹிந்து மிஷன் மருத்துவமனை போன்ற பல இடங்களில் பணியாற்றி தற்சமயம் மாம்பலம் பப்ளிக் ஹெல்த் சென்டரில் பணி  புரிகிறார்.   

பாரீஸ், லண்டன், ரோம், ஜெர்மனி, ஸ்பெயின் போன்ற பல ஐரோப்பிய நாடுகளுக்கு சென்றிருக்கிறாராம். ஸ்விட்சர்லாந்தில் பணி புரிந்தபொழுது அங்கு இந்தியன் ஹை கமிஷன் அலுவலகத்தில் உயர் அதிகாரியாக பணியாற்றிய ஒருவர் இவருடைய சம்பளத்தை அந்நிய செலவாணியாக பெற்றுக்கொண்டு இவரிடம் வெறும் இரண்டாயிரம் ரூபாய் மட்டும் தந்து இவரை ஏமாற்றி விட்டாராம். 'எத்தனை பெரிய மனிதருக்கு எத்தனை சிறிய குணமிருக்கு?'

பல்வேறு விருதுகள், பெற்றிருக்கும் இவர் திரு.பாக்கியம் ராமசாமி அணிந்துரையில் ஒரு நூலும், திரு ராணி மைந்தன் வாழ்த்துரையில் ஒன்றுமாக இரண்டு நகைச்சுவை நூல்களும், ஒரு சி.டி.யும் வெளியிட்டிருக்கிறார்.














பேசிக்கொண்டிருக்கும்பொழுதே நாம் சொல்லும் ஒரு வார்த்தையை வைத்து ஒரு ஜோக் சொல்லி விடுகிறார். திருமணம், போன்ற குடும்ப விழாக்களில் ஸ்டாண்டப் காமெடி செய்கிறாராம். திருமணத்தில் இரைச்சலாக லைட் மியூசிக் வைப்பதற்கு பதிலாக இப்படிப்பட்ட நிகழ்ச்சியை ஏற்பாடு செய்யலாமே.

இவர் பெற்றிருக்கும் விருதுகளும் பங்கெடுத்த நிகழ்ச்சிகளும்:


சிரிக்க தெரிந்தவன் பாக்கியவான், சிரிக்க வைப்பவன் அதைவிட பாக்கியவான் என்பார்கள். நண்பர் சரவெடி ஸ்ரீதரின் வாழ்க்கையில் எல்லா பாக்கியங்களும் நிறைந்திருக்க கடவுளை பிரார்த்திக்கிறேன்.

அவருடைய ஜோக்ஸ் புத்தகத்திலிருந்து சில:

ஆசிரியர்: மாணவர்களே, நானும் உங்களில் ஒருவன், என்னை வேறுபடுத்தி பார்க்க வேண்டாம் 
மாணவன்: சரிடா மச்சி! கீழே உட்காரு.

ஆசிரியர்: ப்ராகரஸ் ரிப்போர்ட்டில் உங்கப்பா கையெழுத்து மாதிரி தெரியலையே?
மாணவன்: அப்படி எல்லாம் சந்தேகப்படாதீங்க சார், வேணா இரண்டாவது வாட்டி போட்டு காட்டறேன். 

பல் டாக்டர்: என்கிட்ட எதுக்கு சார் வீடு டாக்குமெண்ட்,வங்கிப் புத்தகம் எல்லாம் காட்டுகிறீர்கள்?
பேஷண்ட்: நீங்கதானே சார் சொத்தை பார்த்த பிறகுதான் பல்லைப் பிடுங்க வேண்டும் என்று சொன்னீர்கள் 

டாக்டர் அறுவை சிகிச்சை முடித்த பிறகு,"எப்படி பண்ணியிருக்கேன்"னு கேட்டார், 
அதற்கு நர்ஸ்,"கொன்னுடீங்க டாக்டர்" என்றார்.

தோழி1: உன்னைப் பெண் பார்க்க திடீர்னு நாற்பது பேர் வந்தாங்களாமே? மாப்பிள்ளையின் பெயர் என்ன?
தோழி2: அலிபாபா 

ஆசிரியர்: வேர்ல்டு மேப்பை காட்டி ஜப்பான் எங்கு இருக்கிறது, ஆஸ்திரேலியா எங்கு இருக்கிறது? அமெரிக்கா எங்கு இருக்கிறது காட்டு பார்க்கலாம் 
யோகேஸ்வர் என்ற மாணவன் ஆசிரியர் கேட்ட எல்லா நாடுகளையும் காட்டினான்.
ஆசிரியர்: இந்தியா எங்கே இருக்கிறது காட்டு 
யோகேஸ்வர் தயங்கினான்.
ஆசிரியர்: தெரியாவிட்டால் தெரியாது என்று சொல்ல வேண்டியதுதானே?
யோகேஸ்வர்: நீங்கள் என்னை எவ்வளவுதான் மிரட்டினாலும், என் தாய் நாட்டை நான் காட்டி கொடுக்க மாட்டேன்.

பேரன்: பாட்டி, இந்தா இந்த பலூனை ஊதிக்கொடு 
பாட்டி: போடா வயசாச்சு, என்னால முடியாது 
பேரன்: அப்பாதான் சொன்னாங்க பாட்டி சின்ன விஷயத்தை கூட ஊதி ஊதி பெரிசாக்கிடுவாங்கன்னு..

இவருடைய ஜோக் புத்தகத்தை படிக்கும் பொழுது நகைச்சுவை உலகில் ஆசிரியர்-மாணவன், டாக்டர்-நர்ஸ்-நோயாளி, கணவன்-மனைவி-மாமியார் இவை வற்றாத ஜீவ நதிகள் என்று புரிகிறது.





Friday, December 28, 2018

சாரதே சாரதே ஞான தாயினே


சாரதே சாரதே ஞான தாயினே


"ஒரே ஒரு குழந்தை உன்னை அம்மா என்று அழைக்க வேண்டுமா?, உலகத்தில் உள்ள எல்லா குழந்தைகளும் உன்னை அம்மா என்று அழைக்க வேண்டுமா?" என்று பரமஹம்சர் கேட்க, இரண்டாவதை தேர்ந்தெடுத்து உலகத்திற்கே அன்னையான ஶ்ரீ சாரதா தேவியின் 166வது பிறந்த நாள் இன்று. "யாதேவி சர்வ பூதேஷு மா மாத்ரு ரூபேண சம்ஸ்திதா, நமஸ்தஸ்மை, நமஸ்தஸ்மை நமஸ்தஸ்மை நமோ நமஹ"(எந்த தேவியானவள் எல்லா உயிகளிடத்திலும் அன்னை வடிவமாக விளங்குகிறாளோ, அவளை வணங்குகிறேன், வணங்குகிறேன், வணங்குகிறேன்) என்று தேவி பாகவதம் துதிக்கிறது. சாரதா தேவியை எல்லா உயிர்களுக்கும் அன்னையானாளோ அவளை வணங்குகிறேன் என்று துதிக்கலாம்.
 'கற்றதும் பெற்றதும் இரண்டாம் பாகத்தில்' சுஜாதா எப்படி நினைவு கூர்ந்திருக்கிறார் பாருங்கள்:




Sunday, December 23, 2018

அன்புள்ளம் கொண்ட எங்கள் ப்ளாக் நண்பர்களிடம் ஒரு வேண்டுகோள். மிக சமீபத்தில்(17.12.18) என் சகோதரியின் கணவர் இறந்து போனார். சில வருடங்களாகவே நுரையீரல் பாதிப்பால் அவதிப்பட்டு க்கொண்டிருந்த அவருக்கு ஐப்பசி, கார்த்திகை மாதங்களில் உடம்பு சரியில்லாமல் போய், ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்படுவதும், மீண்டு வருவதும் வாடிக்கையாக இருந்தது. இந்த முறை ஸ்வைன்  ஃபளூ, நிமோனியாவாக மாறி அவரை வீழ்த்தியது.

இதற்கிடையில் வெளிநாட்டில் வசிக்கும் என் அக்காவின் இரண்டாவது பெண்ணுக்கு சென்ற மாதம் 25ம் தேதி வந்த காய்ச்சல் விடவேயில்லை. இரண்டு முறை ஒரு பிரபல மருத்துவ மனையில் அனுமதித்தும் அவளுக்கு வந்திருப்பது எந்த வகை காய்ச்சல் என்று சரியாக கண்டு பிடிக்காமல் ஏகப்பட்ட ஆண்டி பயாடிக்ஸ்,  ஸ்டிராய்ட்ஸ் போன்றவை கொடுத்ததால் உடம்பு மிகவும் பலவீனமானதேயொழிய காய்ச்சல் விடவேயில்லை. பிறகு தெரிந்தவர்கள் கூறியதன் பேரில் மாம்பலம் ஹெல்த் சென்டரில் அனுமதித்தோம்.  அங்கு மீண்டும் டெஸ்டுகள் எடுத்ததில் லட்சத்தில் 160 பேரை தாக்கும் stills disease  என்று கண்டு பிடித்து இப்பொழுதுதான் ட்ரீட்மெண்ட்  ஆரம்பித்திருக்கிறார்கள். இருந்தாலும் இன்னும் காய்ச்சல் வருவது நிற்கவில்லை. என் அக்காவுக்கு கணவர் மறைந்த துக்கம் ஒரு புறம், மகளின் உடல் நிலை குறித்த கவலை ஒரு புறம். "இரு கோடுகள் தத்துவம் போல ஆகி விட்டது என் நிலமை" என்கிறாள்.
என் அக்கா பெண்ணின் உடல் பூரண குணமடையவும், என் அக்காவின் மனதிற்கு அமைதி கிடைக்கவும் ப்ரார்த்தனை செய்ய உங்கள் அணைவரையும் வேண்டுகிறேன்.🙏🙏

Wednesday, December 19, 2018

சொமாட்டோ ஊழியர் உணர்த்தும் உளவியல் உண்மைகள்


சொமாட்டோ ஊழியர் உணர்த்தும் உளவியல் உண்மைகள்

மதுரையில் சொமாட்டோ ஊழியர் வாடிக்கையாளர்களுக்கு எடுத்துச் சென்ற உணவை  சாப்பிட்ட வீடியோ, வைரலாகி, அதைப்  பற்றி நெட்டிசன்கள் பேசி தீர்த்து விட்டார்கள்.  இது தவறு  என்று பலரும், அந்த ஊழியர் பசியோடு இருந்ததால்தான் இப்படி செய்திருக்கிறார், அதை கருத்தில் கொள்ள வேண்டும் என்று சிலரும் எழுதியிருக்கிறார்கள். 

நான் மஸ்கட்டில் இருந்தபொழுது ஒரு வீட்டில் நான்கு வருடங்கள் வேலையாளாக இருந்த ஒருவன் தன் எஜமானன், மற்றும் எஜமானி அம்மாவை கொலை செய்து விட்டான். இத்தனைக்கும் அவர்கள் ஒரு வேலைக்காரனை போல் அவனை நடத்தமாட்டார்களாம்.   நண்பர் ஒருவர் வீட்டிற்கு சென்றிருந்த பொழுது  இதைப்பற்றி பேச்சு வந்தது. நான்," இதற்கு காரணம், வறுமைதான்" என்றதும், அந்த நண்பர், " தப்பாக யோசிக்கிறீர்களே?" என்றார். நான் புரியாமல் விழிக்க,அவர் விளக்கினார்."வறுமைதான் காரணம் என்றால் அவன் அவர்கள் வீட்டிற்குள் வந்தவுடனே கொன்றிருக்க வேண்டும். அவன் வறுமையில் இருக்கும்பொழுது அவனுடைய பசியை போக்கிக்கொள்ள அவனுக்கு ஒரு பிடிப்பு தேவை. அது கிடைத்து, அங்கேயே தங்க ஆரம்பித்த பிறகு, ஒப்பிடத் தொடங்குகிறான். அதில்தான் பிரச்சனை தொடங்குகிறது. நம்மை விட இவர்கள் எந்த விதத்தில் ஒசத்தி? ஏன் அவர்களுக்கு கிடைக்கும் வசதிகள் நமக்கு கிடைப்பதில்லைஎன்று எண்ணத் தொடங்குகிறான். அப்போது சின்னச்சின்ன கோபங்கள், அலட்சியங்கள் கூட  அவனை எரிச்சலடைய வைக்கிறது. அதன் விளைவுதான் இதைப்போன்ற நடவடிக்கைகள்" என்றார்.

என்னுடைய பட்டப்படிப்பில் ஆங்கிலத்தில் ஒரு பாடம். லிஃப்ட் ஆபரேட்டராக இருக்கும் ஒருவன் லிஃப்டில் ஏறிய ஒரு ஆசாமி, அவனிடம்,"லிஃப்ட் ப்ளீஸ்" என்பதற்கு பதிலாக, "லிஃப்ட்" என்று கூறியதற்காக அவனை அரைந்து விட்டான் என்னும் செய்தியை செய்திதாளில் படித்த ஒருவர் எழுதிய கட்டுரை எனக்கு எனக்கு பாடமாக வந்திருந்தது. அந்த கட்டுரையாசிரியர்  பெயர் மறந்து விட்டது, ஆனால் விஷயம் மறக்கவில்லை.

அதில் அவர்,"ஒரு லிஃப்ட் ஆபரேட்டர் என்பவன் வாழ்க்கையில் கடை நிலையில் இருப்பவன். ஒரு வேளை அன்று அவன் மனைவியோடு சண்டை போட்டுவிட்டு வந்திருக்கலாம், தெருவில் சென்று கொண்டிருந்த நாய் ஒன்றை ஒரு சிறுவன் கல்லால் அடித்து விட, அது அவன் மனைவியை கடித்திருக்கலாம்,அவள் அந்த கோபத்தை இவன் மீது காட்டியிருக்கலாம், அந்த எரிச்சலில் அவன் தன்னை மரியாதை குறைவாக பேசிய பயனாளியை அறைந்திருக்கலாம். எப்படி ஒரு நல்ல வார்த்தையோ, செயலோ ஒரு தொடர் நல்ல வார்த்தைகளையோ, செயல்களையோ உருவாக்குமோ அதே போல ஒரு மோசமான வார்த்தையோ, செயலோ தொடர் மோசமான வார்த்தைகளையோ, செயல்களையோ உருவாக்கும் என்று முடித்திருப்பார்.

அதைப்போல வாழ்வின் கடை நிலையில் இருக்கும் சொமாட்டோ டெலிவரி ஆளின் எந்த பிரச்சனை அவரை இப்படி நடந்து கொள்ள வைத்ததோ? என்று தோன்றுகிறது.லட்சக்கணக்கில் லாபம் பார்க்கும் இத்தகைய நிறுவனங்கள் இப்படிப்பட்ட டெலிவரி ஆட்களுக்கு ஒரு சாப்பாடு கொடுப்பதில் குறைந்து போய் விடுமா? இலவசமாக கொடுக்காவிட்டாலும் சலுகை விலையில் தரலாமே. டெலிவரிக்கு செல்லும் ஆட்கள் பட்டினியாக கிடக்கக் கூடாது என்பதை கடைபிடித்திருக்கலாம்.  அல்லது அவருடைய மேலதிகாரி அவரிடம் கருணையில்லாமல் நடந்து கொண்டிருக்கலாம். "எங்கிட்டயா மோதற? வெக்கறேன் பாரு ஆப்பு.." அவர் வேண்டுமென்றே தான் சாப்பிடுவதை யாரையாவது விட்டு வீடியோ எடுக்க சொல்லியிருக்கலாம். திருட்டு வீடியோ போல இல்லாமல் தெளிவான படப்பிடிப்பு.

எங்கள் மாமா அவருடைய தாத்தாவைப்பற்றி(அதாவது என் கொள்ளு தாத்தா) அடிக்கடி ஒரு விஷயம் சொல்லுவார்.

எங்கள் வீட்டு வைக்கோல் போரில் பக்கத்து வீட்டு மாடு மேய்ந்தால், அதை நயமாக உரியவரிடம் சொல்ல வேண்டுமே தவிர, அந்த மாட்டை அடித்து விரட்டக்கூடாது என்பாராம். ஒரு மாடு ஒரு கையளவு வைக்கோலை சாப்பிடுமா?  அதற்காக அந்த மாட்டை அடிப்பது, அல்லது உரியவர்களோடு சண்டை போடுவது  போன்ற செயல்களில் ஈடுபட்டால் அந்த கோபத்தில் அவர் ஒரு நெருப்பு குச்சியை கிழித்து வைக்கோல் போர் அடியில் வைத்து விட்டால் முடிந்தது கதை. அவனுக்கு செலவு ஒரு நெருப்பு குச்சிதான், நமக்கு ஒரு வைக்கோல் போர் காலியாகி விடும்" என்பாராம்.

அதேபோல வீட்டில் விசேஷ சமயங்களில் சமைப்பதற்கு அழைத்திருக்கும் பரிசாகரை பல பேர் முன்னிலையில் அவமானப் படுத்தக்கூடாது என்பாராம். " ஐநூறு பேர்களை சாப்பிடக்கூப்பிட்டு, அண்டா நிறைய பால் பாயசம் செய்ய சொல்லியிருப்போம், சமையல்காரனை திட்டி, அவன் கோபத்தில் கொஞ்சம் உப்பை எடுத்து பால் பாயசத்தில் போட்டு விட்டால், அண்டா பாயசமும் வீணாகிவிடாதா?" என்பாராம்.

பள்ளிப்படிப்பை தாண்டாத அவருடைய உளவியல் அறிவு என்னை வியக்க வைக்கும்.

அடிமட்டத்தில் இருக்கும் மக்களை வேலை வாங்க அதிகாரம் மட்டும் போதாது, உளவியல் ஞானமும், கருணையும் கூட வேண்டும்.

Sunday, December 16, 2018

Sridhara Aiyawal Thiruvisanallur - Part 1

திருவிசநல்லூர் ஸ்ரீதர ஐயாவாள் - கங்கோதாரண உற்சவம் 


கும்பகோணத்திற்கு அருகில் இருக்கும் திருவிசநல்லூரில் 6.12.2018 அன்று அதாவது கார்த்திகை மாதத்து அமாவாசை அன்று கங்கோதாரண உற்சவம் நடைபெற்றது. அன்று திருவிசநல்லூரில் இருக்கும் ஸ்ரீதர ஐயாவாளின் மடத்தில் உள்ள கிணற்றில் கங்கை பொங்கி வருவதாக ஐதீகம். ஆயிரக்கணக்கான மக்கள் அன்று அங்கு சென்று அந்த கிணற்று நீரில் நீராடுவார்கள். 

ஏறக்குறைய அறநூறு ஆண்டுகளுக்கு முன் மைசூர் சமஸ்தானத்தில் திவானாக இருந்தவர் வெங்கடேச தீக்ஷதர் என்பவர். அவருடைய மகனான ஸ்ரீதரன் சிறு வயதிலிருந்தே தெய்வ வழிபாட்டிலும், ஆன்மீக சிந்தனையிலும் அதிக ஈடுபாடு உடையவராக இருந்தார். அதனாலோ என்னவோ தன் தந்தையின் மறைவிற்குப் பிறகு தனக்களிக்கப்பட்ட திவான் பதவியை ஏற்றுக்கொள்ளாமல் திருச்சிராப்பள்ளிக்கு(திருச்சி) புலம் பெயர்ந்தார். 

திருச்சிராப்பள்ளியில் இருக்கும் தாயுமானவர் மீது அதிக பக்தி கொண்டு தினசரி தாயுமானவரை தரிசிப்பதை வழக்கமாக  கொண்டிருந்தார். ஒரு முறை அங்கு பாம்பு கடித்து இறந்த ஒரு சிறுவனை இவர் மீண்டும் உயிர்ப்பிக்க, அந்த ஊர் மக்கள் இவரை தெய்வத்திற்கு நிகராக வணங்க ஆரம்பித்தனர். 

அதை விரும்பாத இவர் அங்கிருந்து, திருவிடைமருதூர், கோவிந்தபுரம் இவைகளுக்கு அருகில் உள்ள திருவிசநல்லூர் கிராமத்தில் குடியேறினார். திருவிடைமருதூரில் உள்ள ஸ்ரீமஹாலிங்கேஸ்வரர் மீது மிகுந்த பக்தி கொண்டிருந்தார். தினசரி திருவிடைமருதூருக்குச் சென்று மஹாலிங்கேஸ்வரரை தரிசிப்பாராம். 

கனத்த மழை பெய்த ஒரு நாளில் இவரால் திருவிடைமருதூர் செல்ல முடியவில்லை. அதனால் மிகவும் மனது வருத்தப்பட்டுக்  கொண்டிருந்தாராம். அன்று இரவு திருவிடைமருதூர் கோவில் அர்ச்சகர் இவர் வீட்டிற்கு வந்து, "இன்று மழையாக இருப்பதால் உங்களால் கோவிலுக்கு வர முடியாது என்பதால் நானே பிரசாதம் தந்து விட்டு போகலாம் என்று வந்தேன்" என்று கூறி, பிரசாதம் கொடுத்தாராம். அப்போது மழை பெய்து கொண்டிருந்ததால், "இந்த மழையில் நீங்கள் செல்ல வேண்டாம், இரவு எங்கள் வீட்டிலேயே தங்கி விட்டு, காலையில் செல்லுங்கள் என்று அவரை திண்ணையில் உறங்க ஒரு பாயும், குளிராக இருந்ததால் பொருத்திக்கொள்ள ஒரு கம்பளி சால்வையின் தந்திருக்கிறார். காலையில் எழுந்திருந்து பார்த்தால், திண்ணையில் படுத்துத்துக் கொண்டிருந்த அர்ச்சகரை காணவில்லை. தன்னிடம் விடை  கொள்ளாமலேய சென்று விட்டாரே என்று நினைத்துக் கொண்ட ஐயாவாள், மறுநாள் திருவிடைமருதூர் கோவிலுக்குச்சென்ற பொழுது அங்கிருந்த அர்ச்சகரிடம், என்ன நேற்று எனக்கு பிரசாதம் தருவதற்காக எங்கள் வீட்டுக்கு வந்த நீங்கள் என்னிடம் சொல்லிக் கொள்ளாமலேயே வந்து விட்டீர்களே?" என்று கேட்டதும், அந்த அர்ச்சகர், "நானா? உங்கள் வீட்டுக்கா? நான் வரவேயில்லையே?" 
என்றதும்தான் ஸ்ரீதர ஐயாவாளுக்கு சாஷாத் பரமசிவனே தனக்காக, தங்கள் வீட்டுக்கு வந்திருக்கிறார் என்று புரிந்து நெகிழ்ந்து போனாராம். 

ஒரு கார்த்திகை மாத அமாவாசையன்று, அவருடைய தகப்பனாரின் ஸ்ரார்த்தம் அதாவது தகப்பனாருக்கு திதி கொடுக்க வேண்டிய நாள், வீட்டில் சமையல் செய்து கொண்டிருக்கிறார்கள். 
சமையல் வாசனையை மோப்பம் பிடித்த அவர் வீட்டில் வேலை செய்யும் பெண்மணி அவள் கணவனிடம்,"அப்பா, நல்ல வாசனை! இந்த மனமே இவ்வளவு நல்லா இருக்கே? சமையல் எவ்வளவு ருசியா இருக்கும்? நமக்கு கிடைக்குமா?" என்கிறாள். உடனே அவள் கணவன்,"சீ சீ! என்ன புள்ள பேசற?  இன்னிக்கு அவங்க வீட்டில் திதி, நாம அதை சாப்பிடக்கூடாது." என்று அதட்டுகிறான். எதற்காகவோ கொல்லைப்புறம் சென்ற அவரின் காதில் இந்த உரையாடல் விழுகிறது.   

இந்த சாப்பாட்டை சாப்பிட வேண்டும் என்று ஒருவர் ஆசைப்பட்டு விட்டார். ஆகவே அவருக்கு தராமல் இருக்கக்கூடாது என்று திவசத்திற்காக சமைத்த உணவை எடுத்து அந்த குடியானவ தம்பதியினருக்கு வழங்கி விடுகிறார்.

இதைப்பார்த்த சனாதிகர்களான மற்ற பிராமணர்கள், "பிதுர்களுக்காக சமைக்கப்பட்ட உணவை நீங்கள் குடியானவர்களுக்கு வழங்கி விட்டீர்கள். இதனால் திவசம் செய்யம் யோக்கியதையை இழந்து விட்டீர்கள். காசியில் சென்று கங்கையில் நீராடி வந்தால்தான் இந்த தோஷத்திலிருந்து நீங்கள் விடுபட முடியும். அதை செய்து விட்டு வாருங்கள், நாங்கள் உங்களுக்கு திவசம் செய்து வைக்கிறோம்" என்று கூறி விட்டு சென்றுவிட, மனம் வருந்திய ஸ்ரீதர ஐயாவாள், கங்கா தேவி மேல் கங்காஷ்டகம் என்னும் ஸ்லோகத்தை இயற்றுகிறார். உடனே அவர் வீட்டு கிணற்றில் கங்கை பொங்கி பெருகி, அக்கிரஹாரத்தில் பிரவாகமாக ஓடினாளாம். இதைக் கண்ணுற்ற மற்ற பிராமணர்கள் தங்கள் தவறை உணர்ந்து, ஐயாவாள் வீட்டில் திதியை முறையாக செய்து வைத்தார்களாம். 

அதிலிருந்து ஒவ்வொரு கார்த்திகை மாத அமாவாசை அன்றும் ஸ்ரீதர ஐயாவாள் வீட்டில் உள்ள கிணற்றில் கங்கை ஆவிர்பவிப்பதாக ஐதீகம். ஆயிரக்கணக்கான பேர்கள் அன்று அந்த கிணற்று நீரில் நீராடுகிறார்கள். இதை கங்கோத்தாரண உற்சவம் என்கிறார்கள்.  


Monday, December 10, 2018

மசாலா சாட்- 2

 மசாலா சாட்- 2

எனக்கு தெரிந்த இளைஞன் ஒருவன் கூறிய விஷயம், அவன் பணிபுரியும் நிறுவனத்தில் ஆண்கள் தாடி வளர்க்கக்கூடாது என்பது நிறுவனத்தின் விதிகளில் ஒன்று. ஆனால் இப்போதைய இளைஞர்கள் தாடி வைக்காமல் இருப்பார்களா? பொறுத்துப் பார்த்த நிறுவனம் வேறு வழியில்லாமல்,"தாடி வைத்துக் கொள்ளுங்கள், வேண்டாம் என்று சொல்லவில்லை, ஆனால் அதை சரியாக திருத்தி, ஒழுங்காக பராமரியுங்கள் என்று மொட்டைத் தலை,தாடியோடு கூடிய ஒரு மாடல் இளைஞனின் புகைப்படத்தோடு சர்குலர் ஒன்றை அனுப்பிவிட்டதாம். இது எப்படி இருக்கு?



எகனாமிஸ்ட் என்னும் பத்திரிகை எடுத்திருக்கும் ஒரு கணக்கெடுப்பில் வந்த விவரம்: இந்தியாவில் படித்துவிட்டு வேலைக்குச் செல்லும் பெண்களின் எண்ணிக்கை 22% குறைந்திருக்கிறதாம். பெண்களை படிக்க வைக்கும் பெற்றோர் அவர்களை வேலைக்கு அனுப்பாமல் இருப்பதற்கு முக்கியமான காரணம் வேலைக்குச் சென்று விட்டால் தாங்கள் பார்க்கும் மணமகனை திருமணம் செய்து கொள்ள பெண்கள் ஒப்புக்கொள்வார்களோ மாட்டார்களோ என்னும் பயமாம்.  இதை கல்யாண மாலை நிகழ்ச்சியில் பாரதி பாஸ்கர் கூறினார். இதைப்பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?

உலகில் அதிக மக்கள்தொகை கொண்ட நகரங்களில் முதன்மையாக விளங்கிய சைனாவின் பீஜிங் நகரில் மக்கள் தொகை குறைந்துள்ளதாம். இருபது வருட கடுமையான போராட்டத்திற்குப் பிறகு சாதிக்கப்பட்ட விஷயம் இது சீன அரசாங்கம் மகிழிச்சியோடு சொல்கிறது. வாழ்க வளமுடன்.

ஒரு குட்டி ரெசிபி

மாங்கா(ய்)இஞ்சி பிசிறல்

மாங்கா இஞ்சி என்பது பார்ப்பதற்கு கஸ்தூரி மஞ்சள் போல் இருக்கும். முகர்ந்து பார்த்தால், மாங்காய் வாசனையும், இஞ்சி வாசனையும் அடிக்கும். சுவையும் இரண்டும் கலந்த சுவைதான்.




மாங்கா இஞ்சி   -  50கிராம் 
பச்சை மிளகாய் - 3
எலுமிச்சம் பழம் - ஒரு மூடி 
உப்பு                       - தேவையான அளவு 
தாளிக்க எண்ணெய் - 1 டீ  ஸ்பூன் 
கடுகு                            -  1/4 டீ ஸ்பூன் 

மாங்கா இஞ்சியை தோல் சீவி கழுவி விட்டு, பொடியாக நறுக்கி கொள்ளவும். பின்னர் பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் சேர்த்து, எலுமிச்சம்பழம் பிழிந்து உப்பு போட்டு கலந்து விட்டு, கடுகு தாளிக்கவும். மோர் சாதத்திற்கு ஏற்ற சுவையான இன்ஸ்டன்ட் ஊறுகாய். பிரிட்ஜில் வைத்து உபயோகிக்கலாம். 

இப்போது ஒரு குட்டி கதை.

சமீபத்தில் திரு.ஜி.எம்.பி. ஐயா அவர்கள், "யாரடி அவன்"? என்று துவங்கி ஒரு கதை எழுதிவிட்டு, வாசகர்களும் தொடரலாம் என்று கூறியிருந்தார். ஸ்ரீராம் அடுத்தடுத்து மூன்று கதைகள் எழுதி விட்டார். நெல்லை தமிழனும் ஒரு கதை எழுதியிருந்தார். இதோ என் பங்கிற்கு ஒரு கதை.

காதல் பிறந்த கதை

"யாருடி அவன்?" என்று எரிச்சலுடன் கேட்டாள் ராதா தன்  மகளிடம்.
யாருமா?
"அதோ அங்க பாரு, பஸ் ஸ்டாண்டில், செல் போன் பார்ப்பது போல் பாவனை செய்து கொண்டு உன்னையே பார்க்கிறான்" 
தன்னுடைய செல் போனில் எதையோ பார்த்துக் கொண்டிருந்த பாவனா தன் அம்மா சுட்டிக் காட்டிய அந்த பையனை முதல் முறையாக பார்த்தாள். 
"ஹூ நோஸ்? யாராவது ரோடு ரோமியோவாக இருக்கும்.. நீ ஏன் அவனைப் பார்க்கிறாய்?" 
"வயசுப்பொண்ணை வைத்துக் கொண்டிருக்கும் அம்மாவின் கவலை உனக்கு என்ன தெரியும்? துப்பட்டா போடுன்னா கேக்கறயா? எப்போ பார்த்தாலும் ஜீன்ஸ், குர்தா.."
அம்மா ப்ளீஸ் ஆரம்பிச்சுடாத.."
அதற்குள் வந்த ஒரு ஆட்டோவை நிறுத்தி, பெண்ணை உள்ளே தள்ளி, தானும் அமர்ந்தாள் ராதா.
மறு நாள் கல்லூரியிலிருந்து வந்த மகளிடம், "இன்னிக்கு அந்த கடன்காரன் நின்று கொண்டிருந்தானா?" என்றாள்.
யாரை கேட்கிறாய்?
அதாண்டி, நேத்து உன்னையே பார்த்துக் கொண்டிருந்தானே, அவன்தான்."
"நான் அதையெல்லாம் பார்க்கவில்லை" இரண்டு மூன்று நாட்கள் அவனை கவனித்தாள் பாவனா. பஸ்சுக்காக காத்துக்கொண்டிருந்த  அம்மா சொல்வது உண்மைதான் போலிருக்கிறது. அவன் செல் போனில் எதையோ பார்ப்பது போல் என்னைத்தான் பார்க்கிறான். இன்றைக்கு இதற்கு ஒரு முடிவு கட்டி விடலாம் என்று நினைத்த அவள், அந்த இளைஞன் அருகில்  சென்று, "ஹலோ, வொய் ஆர் யூ ஸ்டேரிங் அட் மீ? என்றதும், திடுக்கிட்ட அந்த பையன், "வாட்?" என்றான்.
"நானும் ஒரு வாரமா பார்க்கறேன், செல் போனில் எதையோ பார்ப்பது போல் நீங்கள் என்னையே பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள்."
கமான், நான் என் ஃப்ரெண்டிர்க்காக வெய்ட் பண்ணிக் கொண்டிருக்கிறேன். ஐம் நாட் ஸ்டேரிங் அட் யூ?   
அவன் சொன்னது போலவே அவன் சிநேகிதன் டூ வீலரில் வர, அந்த இளைஞன் புறப்பட்டான். 
மறு நாள், இவளைக்கண்டதும், அவன் திரும்பி நின்று கொள்ள, அவளுக்கு என்னவோ போலானது. அவனை அழைத்து, "ஐயம் சாரி" என்றதும், 
"இட்ஸ் ஓகே" என்றான். அடுத்து வந்த நாட்களில் நண்பனின் வண்டியில் ஏறிக் கொண்டதும் அவளைப்பார்த்து புன்னகையோடு கை அசைக்க, அவளும் புன்னகைத்தபடியே கை அசைத்தாள். 
"டேய் என்னடா நடக்கறது இங்க..?" என்றான் நண்பன்.
"எல்லாம் நல்லதுதான்டா, வண்டியை பார்த்து ஒட்டு" என்றான் பாவனாவின் காதலன். 
                                                                       --------



Wednesday, December 5, 2018

ஆற்றில் போட்டதை குளத்தில் தேடுவதா?(உரைநடை)

ஆற்றில் போட்டதை குளத்தில் தேடுவதா?(உரைநடை)


இதே தலைப்பில் ஒரு காணொளி வெளியிட்டிருக்கிறேன். அதை பார்க்க முடியாதவர்களுக்காக இந்த உரை நடை:

ஆற்றில் போட்டதை குளத்தில் தேடுவதா? என்று ஒரு சொலவடை நம் ஊரில் உண்டு. எங்கேயோ தவற விட்ட ஒன்றை அதற்கு சம்பந்தமே இல்லாத வேறு ஒரு இடத்தில் தேடுவதைத்தான் இப்படி சொல்கிறார்கள் என்று புரிந்து கொண்டாலும், எவ்வளவுதான் வடிகட்டிய முட்டாளாக இருந்தாலும், இப்படி ஒரு செயலை செய்வார்களா? என்று ஒரு சந்தேகமும், அப்படியானால் அர்த்தமே இல்லாமல் ஒரு சொலவடை வருமா? என்றும் கேள்விகள் புறப்படுகின்றன, இதற்கு விடை தெரிய வேண்டுமானால் சைவ சமய குரவர்கள் நால்வரில் ஒருவராகிய சுந்தரமூர்த்தி நாயன்மாரின் வாழ்க்கை சரிதத்தை புரட்டிப் பார்க்க வேண்டும்.

சிவபெருமானை தன்னுடைய தோழனாக கருதி வழிபட்ட சுந்தரமூர்த்தி நாயனார், தொண்டை மண்டலத்தில் உள்ள பல்வேறு  சிவாலயங்களுக்கு சென்று வழிபட்டு விருதாச்சலத்தை கடந்து செல்லும் பொழுது, "எம்மை மறந்தனையோ சுந்தரா?"என்னும்  அசரீரி கேட்டு, அருகில் எங்கேயோ சிவாலயம் இருக்க வேண்டும் ஆனால் அதற்கு எப்படி செல்வது என்பது தெரியவில்லையே..?" என்று மயங்கி நிற்கும் பொழுது, இறைவனும், இறைவியும்  வயது முதிர்ந்த தம்பதியினராக வந்து சுந்தரரை விருத்தாச்சலம் கோவிலுக்கு அழைத்துச் செல்கின்றனர். அங்கிருக்கும் சிவபெருமான் மீது பாடல்கள் பாடிய சுந்தரருக்கு சிவபெருமான் பதினையாயிரம் தங்க கட்டிகளை வழங்குகிறார். அவற்றை தனியாகச் செல்லும் தான் எப்படி எடுத்துச் செல்வது என்று தயங்கிய சுந்தரர், சிவபெருமானிடம், "இந்த தங்க கட்டிகளை நான் இங்கு ஓடும் திருமணிமுக்தா நதியில் போடுகிறேன், அவைகளை திருவாரூரில் இருக்கும் கமலாலயம் திருக்குளத்தில் கிடைக்கும்படி அருள வேண்டும்" என்று வேண்டுகிறார். சிவபெருமானும் அதற்கு ஒப்புக்கொள்ள அவரளித்த பதினையாயிரம் தங்க கட்டிகளில் அடையாளமிட்டு திருமணிமுக்தா நதியில் போட்டு விடுகிறார். 

திருவாரூருக்கு திரும்பிச் சென்ற, சுந்தரர் தன் மனைவியாகிய பரவை நாச்சியாரிடம் இந்த விஷயத்தை கூறி, அவரையும் கமலாலயத்திற்கு அழைக்கிறார். அவர் கூறியதில் நம்பிக்கை இல்லாவிட்டாலும், அவருடன் செல்கிறார் பரவை நாச்சியார். திருவாரூர் தியாகேசனையும், அங்கிருக்கும் விநாயகரையும்  வணங்கி, கமலாலயம் குளத்தில் மூழ்கி தான் மணிமுக்தா ஆற்றில் போட்ட தங்க கட்டிகளை தேடுகிறார், அவருக்கு கிட்டவில்லை. மீண்டும் ஒரு முறை மூழ்கி தேடுகிறார், அப்போதும் கிட்டவில்லை, இதைப்பார்த்த பரவை நாச்சியார்,"ஆற்றில் இட்டதை குளத்தில் தேடுவதோ" என்று கேலியாக நகைத்தாராம். உடனே சுந்தரமூர்த்தி ஸ்வாமிகள், சிவபெருமானிடம்,"என் மனைவி என்னை கேலி செய்யும்படி வைத்து விட்டாயே இறைவா, இது சரியில்லை, எனக்கு அந்த பொற்கட்டிகளை தந்தருள வேண்டும்" என்று வேண்ட, அவர் மணிமுக்தா ஆற்றில் இட்ட தங்க கட்டிகள்  திருவாரூர் கமலாலயம் குளத்தில் அவருக்கு கிட்டின. நமக்கு ஒரு சொலவடையும் கிட்டியது.    



Sunday, December 2, 2018

Bhavani Patti Talks - ஆற்றில் போட்டதை குளத்தில் தேடுவதா?

2.0 (விமர்சனம்)



2.0
(விமர்சனம்


Image result for enthiran 2


என்னத்த விமர்சனம் எழுதுவது?

ஷங்கர், ஏ.ஆர்.ரஹ்மான், ரஜினி காம்பினேஷன், 600 கோடி பட்ஜெட், மூன்று வருடங்கள் தயாரிப்பு, 3D தொழில்நுட்பம் என்று எக்கச்சக்க எதிர்பார்ப்புகளோடு வெளியாகியிருக்கும் படம். இதில் தொழில் நுட்பம் மட்டுமே ஏமாற்றமளிக்கவில்லை. 

கதாநாயகி இல்லை, இனிமையான பாடல்கள் இல்லை, நகைச்சுவை இல்லை, வலுவான வில்லன் கதாபாத்திரம் இல்லை, முக்கியமாக கதை இல்லை. மொத்தத்தில் ஷங்கர் படம் தரும் திருப்தியில்லை. 



Monday, November 26, 2018

வழிந்ததே அசடு வழிந்ததே


வழிந்ததே அசடு வழிந்ததே

தமிழகத்தின் டெல்டா மாவட்டங்களை கஜா புயல் தாக்கிய நேரம், என்னை ஜலதோஷ புயல் தாக்கியது. மூக்கிலிருந்து விடாமல் ஜலதாரை, உடம்பு வலி, தலை வலி, லேசான ஜுரம். dola 650 போட்டுக்கொண்டு, கார்த்திகைக்கான நெய் அப்பம்,பொரி,அடை வகையறாக்களை செய்து விட்டேன். கோலம் போடுவது, விளக்குகளுக்கு திரி போட்டு, எண்ணெய் விட்டு, சந்தன ம், குங்குமம் இடுவது போன்ற சில்லறை வேலைகளை செய்வதுதான் கஷ்டமாக இருந்தது.

கார்த்திகை அன்று இரவு என் மகனோடு  என் சினேகிதியின் மகளின் திருமணத்தில் கலந்து கொள்ள சென்னைக்கு செல்வதாக இருந்தது. உடல் நிலை காரணமாக என் பயணத்தை ரத்து செய்து விட்டேன். ஊருக்குச் செல்லும் முன் என் மகன் ஆவி பிடிக்கச் சொல்லி, அதற்கான கருவியையும் எடுத்து கொடுத்து விட்டு சென்றான். 

அதை எப்படி பயன் படுத்துவது என்று  அட்டைப் பெட்டியில் போட்டிருந்தது. அந்த கருவியில் குறிப்பிடப்பட்டிருக்கும் அளவு தண்ணீர் ஊற்றவும் என்றிருந்தது. பெரிய குவளை போன்றதில் எவ்வளவு தண்ணீர் ஊற்ற வேண்டும் என்பதற்கான அடையாளம் எதுவும் இல்லை. எனவே நான் அரை டம்ளர் தண்ணீர் ஊற்றி, மிஷினை ஆன் செய்தேன். தண்ணீர் கொதிப்பது போல ஓசை வந்ததேயொழிய, ஆவி வரவில்லை. பக்கவாட்டிலிருந்து நீர் வழிந்தது. தண்ணீர் அதிகம் விட்டு விட்டோம் போலிருக்கிறது என்று கொஞ்சம் தண்ணீரை குறைத்தேன். அப்படியும் ஆவி வரவேயில்லை. சரிதான் நாம் அடுப்பிலேயே வெந்நீர் போட்டுக் க்கொள்ளலாம் என்று அதை ஓரம் கட்டிவிட்டு, அடுப்பில் வெந்நீர் போட்டு ஆவி பிடித்தேன். 

அடுத்த நாள் காலை என்னை அழைத்த என் மருமகள்," நேற்று தண்ணீரை எங்கு ஊற்றினீர்கள்? என்றாள், நான் சொன்னதும் சிரித்துக் கொண்டே, "அங்கு ஊற்றக் கூடாது, அந்த பெரிய கப்பை கழற்றி அடியில் ஊற்ற வேண்டும், அதில் அளவு குறிப்பிட பட்டிருக்கிறது பாருங்கள்" என்றாள். 

இருமுவது போல பாவலா காட்டி, முகத்தை துடைத்துக் கொண்டேன். வேறு வழி.

இருமலால் தூங்க முடியாமல் அவஸ்தைப்பட்ட இரவு, யூ ட்யூபில் பார்த்த எழுத்தாளர் சாரு நிவேதிதாவின் பேட்டியை இணைத்திருக்கிறேன். சாருநிவேதிதாவின் கதைகளை நான் படித்ததில்லை. கட்டுரைகளை படித்திருக்கிறேன். தன்னுடைய நூல் வெளியீடுகளை ஒரு விழா போல செய்பவர்.  துணிச்சலான எண்ணங்களுக்கு சொந்தக்காரர். கேட்டு விட்டு சொல்லுங்கள். 

அதற்கு முன் ஒரு கேள்வி. சம கால எழுத்தாளர்களின் எழுத்துக்களை எத்தனை பேர் படிக்கிறோம்?  சுஜாதா, பாலகுமாரனுக்குப் பிறகு வந்த எழுத்தாளர்களில் எத்தனை பேரின் படைப்புகளை படித்திருக்கின்றீர்கள்?  ஆம் என்றால் நீங்கள் படித்தவற்றில் சிறப்பானதை எனக்கு சொல்லுங்கள். இல்லை என்றால் ஏன்? தயவு செய்து தேவி பாலா, இந்திரா சௌந்திரராஜன் என்றெல்லாம் கூறி விடாதீர்கள். 







Friday, November 23, 2018

பரிகாரம்

பரிகாரம் 

மகனின் பள்ளிக்கு பேரெண்ட்,டீச்சர் மீட்டிங்கிற்கு சென்று விட்டு வந்த ராதிகாவிற்கு வருத்தமும் கவலையும் மேலிட்டது. பத்தாம் வகுப்பு வரை நன்றாக படித்துக் கொண்டிருந்த கிரீஷ் இப்போது கொஞ்சம் பின் தங்கி
விட்டா ன். 

அவனுடைய ஆசிரியர்களும்," நல்லா படிக்கக் கூடிய பையன்தான், ஹோம் ஒர்கெல்லாம் சரியா செய்ய மாட்டேங்கரான், லாட் ஆஃப்  டிஸ்ட்ராக்ஷன்ஸ், கொஞ்சம் கவனியுங்கள்" என்று கூறி விட அவள் மிகவும் அப்செட் ஆகிவிட்டாள்.

ப்ளஸ் டூவில் நல்ல மார்க் வாங்கினால்தானே நல்ல கல்லூரியில் சேர்க்க முடியும்? என்ன பிரச்சனை அவனுக்கு? கணவனிடம் சொன்ன பொழுது அவன்," இப்போ செவன்டி பர்சென்ட் வாங்கறாந்தானே?" என்றான்.

"அதை வைத்துக் கொண்டு என்ன பண்ண முடியும்?"

"இத்தனைக்கும் ட்யூஷன் வேற போகிறான்.." 

"அந்த டீச்சர் ஒரு நாளைக்கு 200 கணக்கு போடணும்னு சொல்றா..இவன் எவ்வளவு போடறானோ?"

"இருநூறு கணக்கா?" அஷோக்கிற்கு கண்ணை கட்டியது. நல்ல வேளை, நாம் படித்து முடித்து விட்டோம் என்று நினைத்துக் கொண்டான். "அதெல்லாம் கொஞ்சம் கஷ்ட்டம்மா"

"என்ன கஷ்டம்? போட்டுதான் ஆகணும். இந்த டீச்சர் பரவாயில்லை, இருநூறு கணக்கு போடணும்னு சொன்னாலும், ஐம்பதுதான் ஹோம் ஒர்க்காக தருகிறாள், ஆஷா மேடம்னா, இருநூறு கணக்கு போடாவிட்டால் டியூஷனிலிருந்து நிறுத்தி விடுவாள். "

"படிப்பான், படிப்பான், ரொம்ப ப்ரெஷர் கொடுக்காத. அடலஸண்ட் ஏஜ்." 

"அதனால்தான் நான் சொன்னேன், கோ எஜுகேஷன் ஸ்கூல் வேண்டாம்னு, யூ டிண்ட் லிசன்."

"கமான், இதெல்லாம், பார்ட் அண்ட் பார்செல் ஆஃப் லைஃப். ரிஷ்யஸ்ருங்கர் மாதிரி வளர்க்கச் சொல்றியா?. அவன் படிக்க நம்மால் முடிஞ்ச அளவு ஹெல்ப் பண்ணலாம்"    

சொல்லிவிட்டானே தவிர எப்படி உதவுவது என்று தெரியவில்லை. நகரத்தின் நல்ல பள்ளியில் சேர்த்து விட்டோம், ட்யூஷனும் வைத்திருக்கிறோம். பள்ளிக்கு போய் வர ஆட்டோ, படிக்க தனி அறை, வீட்டில் அவனுக்கென்று லேப்டாப். வேறு என்ன வேண்டும்? நம்மைப் போல் நடந்து பள்ளிக்குச் சென்று, ஒரே அறையில் மூன்று பேர்கள் படிக்க வேண்டும் என்னும் நிர்ப்பந்தமெல்லாம் உண்டா? டியூஷன் வகுப்பில் சேர்ந்தால் அவமானம் என்று அப்பா சேர்த்து விட மறுத்து விட்டார். என்ன செய்வது?

மகனை நல்ல மார்க் வாங்க வைக்க ராதிகா ஒரு உபாயம் கண்டு பிடித்தாள். அவன் ஜாதகத்தை எடுத்துக் கொண்டு டி.வி.யில் ஜோதிடம் சொல்லும் ஒரு ஜோசியரிடம் அப்பாயிண்ட்மெண்ட் வாங்கி கொண்டு   சந்தித்தாள்.அவர் அவனுடைய ஜாதகத்தை பார்த்து விட்டு, "அதெல்லாம் நன்னா படிப்பான், கவலைப்படாதீங்கோம்மா". என்று கூறி விட்டு, அவனுக்கு ஏதோ தசையில் ஏதோ புக்தி  நடப்பதாகவும், அதற்கு ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் பிள்ளையாருக்கு அவன் பெயருக்கு அர்ச்சனை செய்ய வேண்டும்,எனவும் மேலும் ஐந்து புதன் கிழமைகளில் நவகிரஹ சந்நிதியில் உள்ள புத பகவானுக்கு அர்ச்சனை செய்ய வேண்டும் எனவும் கூறினார். மேலும் தினசரி விஷ்ணு சஹஸ்ரநாமத்தை உங்களை பிள்ளை சொல்லாவிட்டாலும் கேட்கச் சொல்லுங்கள். என்று கூறினார். அதோடு ராசிக்கல் மோதிரம் ஒன்றையும் பரிந்துரைத்தார். 

ராசிக்கல் மோதிரத்திற்கு அசோக் ஒப்புக்கொள்ளவில்லை."ராதிகா நீ எந்த கோவிலுக்கு வேணாலும் போ, அர்ச்சனை பண்ணு, நான் வேண்டாம்னு சொல்லலை, ஆனால் மோதிரமெல்லாம் வேண்டாம். நாளைக்கு அவன் படித்து நல்ல மார்க் வாங்கினாலும், மோதிரத்தால்தான் தான் வாங்கினோம் என்று அவனுக்கு தோன்றி விடும். தட்ஸ் நாட் குட்" என்று தீர்மானமாக சொல்லிவிட, ராதிகா மோதிரம் வாங்கும் எண்ணத்தை கை விட்டாள்.

தன்னால் கோவிலுக்குச் செல்ல முடியுமோ முடியாதோ என்று, தன் வீட்டில் சமையலுக்கு வரும் லதா மாமியிடம் பணத்தையும் மகனின் பெயர், நட்சத்திரம் போன்ற விவரங்களையும் கொடுத்து புதன் கிழமை அர்ச்சனை செய்து கொண்டுவரச் சொன்னாள். தினசரி வீட்டில் விஷ்ணு சஹஸ்ரநாமம் ஒலிக்கத் தொடங்கியது. 

லதா மாமி அதோடு கூட தானும் விஷ்ணு சஹஸ்ரநாமம் சொல்லியபடியே சமைப்பாள். கோவிலில் அர்ச்சனை செய்யும் பொழுதும், விளக்கு போடும் பொழுதும் அந்த வருஷம் ப்ளஸ் டூ பரீட்சை எழுதப் போகும் தன் மகனுக்காகவும் வேண்டிக் கொள்வாள். 

அந்த வருட பொதுத்தேர்வில் கிரீஷ் பெற்ற மதிப்பெண்களில் பெரிதாக முன்னேற்றமில்லை. ஆனால் லதா மாமியின் மகன் 92% சதவிகிதம் வாங்கி தேர்ச்சி பெற்றிருந்தான்.


Wednesday, November 21, 2018

கார்த்திகை தீபம் - தீப ஜோதி நமோ நம:

கார்த்திகை தீபம் - தீப ஜோதி நமோ நம: 



27தீபங்களும்_அதன்_பயன்களும் !

தீபஜோதியே நமோ நம :
சுபம் கரோதி கல்யாணம் ஆரோக்யம் தன சம்பதா
சத்புத்தி ப்ரகாசாய தீபஜ்யோதிர் நமோநம:

தீபம் ஏற்றுவதால் சுபம், ஆரோக்கியம், நன்மை, தனசேர்த்தி, நல்லபுத்தி ஆகியவை பெருகும் எனச் சொல்கிறது மேற்காணும்  ஸ்லோகம்.

நம் பாரதத்தின் ஆன்மிகக் கலாசாரத்துடன் இரண்டறக் கலந்தது தீபவழிபாடு. விரிவான வழிபாடுகள் தெரியவில்லை என்றாலும், காலை-மாலை இரண்டு வேளைகளில் தீபம் ஏற்றிவைத்து, அதற்கு நமஸ்காரம் செய்தாலே போதும்; தீய சக்திகள் யாவும் விலகி, வீட்டில் லட்சுமி கடாட்சம் ஸித்திக்கும் என்கின்றன ஞான நூல்கள். அப்படியான தீபத்தைச் சிறப்பிக்கும் மாதம்தான் திருக்கார்த்திகை. இந்த மாதத்தில் திரு விளக்கேற்றி வழிபடுவது அவ்வளவு விசேஷம்.

தினமும் 27 விளக்குகள்...

கார்த்திகை மாதத்தில், நமது வீடுகளில் 27 இடங்களில் தீபங்கள் ஏற்றிவைக்க வேண்டுமாம். அவை எந்தெந்த இடங்கள், எந்தெந்த  இடங்களில்  எத்தனை தீபங்கள்  ஏற்றுவது?   என்பது குறித்து விரிவாக அறிவோமா

கோலமிடப்பட்ட வாசலில்: ஐந்து விளக்குகள்

திண்ணைகளில்: நான்கு விளக்குகள்

மாடக்குழிகளில்:  இரண்டு விளக்குகள்

நிலைப்படியில்: இரண்டு விளக்குகள்

நடைகளில்: இரண்டு விளக்குகள்

முற்றத்தில்: நான்கு விளக்குகள்

இந்த இடங்களில் எல்லாம் தீபங்கள் ஏற்றிவைப்பதால், நமது இல்லம் லட்சுமி கடாட்சத்தை வரவேற்கத் தயாராகி விடும்; தீய சக்திகள் விலகியோடும்.

பூஜையறையில்: இரண்டு கார்த்திகை விளக்குகள் ஏற்றிவைக்கவேண்டும். இதனால் சர்வமங்கலங்களும் உண்டாகும்.

சமையல் அறையில்: ஒரு விளக்கு; அன்ன தோஷம் ஏற்படாது.

தோட்டம் முதலான வெளிப்பகுதிகளில்: யம தீபம் ஏற்றவேண்டும். இதனால் மரண பயம் நீங்கும். ஆயுள்விருத்தி உண்டாகும்.

பின்கட்டு பகுதியில்:நான்கு விளக்குகளை ஏற்றிவைக்க விஷ ஜந்துக்கள் அணுகாது.

ஆனால், அபார்ட்மென்ட் மற்றும் மாடி வீடுகள் அதிகம் உள்ள தற்காலத்தில்,   மேற்சொன்ன முறைப்படி விளக்கு ஏற்ற முடியாது ஆகையால், வசதிக்கு ஏற்ப வீட்டுக்குள்ளேயும் வெளியிலுமாக 27 விளக்குகளை ஏற்றிவைத்து பலன் பெறலாம்.

தீபத்தின் வகைகள்:

தீபத்தில் மகாலட்சுமி வசிப்பதால், தீபம் ஏற்றியதும் `தீபலட்சுமியே நமோ நம' என்று கூறி வணங்குவது அவசியம். தீபத்தை பலவகையாகச் சொல்லி விளக்குகின்றன ஞானநூல்கள். அவற்றில் சில...

சித்ர தீபம்: தரையில் வண்ணப் பொடி களால் சித்திரக் கோலம் இட்டு, அதன்மீது  ஏற்றப்படும் தீபங்கள்.



மாலா தீபம்: அடுக்கடுக்கான தீபத் தட்டுகளில் ஏற்றப்படுவது.



ஆகாச தீபம்: வீட்டின் வெளிப்புறத்தில் உயர்ந்த பகுதியில் ஏற்றிவைக்கப்படுவது, ஆகாச தீபமாகும். கார்த்திகை மாதம் சதுர்த்தி திதிநாளில் இந்த தீபத்தை ஏற்றி வழிபட்டால், யம பயம் நீங்கும்.

ஜல தீபம்: நதி நீரில் மிதக்கவிடப்படும் தீபங்கள் ஜல தீபம் ஆகும்.



நௌகா (படகு) தீபம்: கங்கை  கரையோரங்களில் வாழும் மக்கள், புண்ணிய யாத் திரையாக கங்கைதீரத்துக்குச் செல்பவர் கள், கங்கை நதிக்கு மாலைவேளையில் ஆரத்தி செய்து, வாழை மட்டையின் மீது தீபம் ஏற்றிவைத்து, அதை கங்கையில் மிதக்கவிடுவர். படகு போன்ற வடிவங் களில் தீபங்கள் தயார் செய்தும் மிதக்க விடுவார்கள். இவற்றையே நெளகா தீபங் கள் என்று அழைப்பர். சம்ஸ்கிருதத்தில் `நௌகா' என்றால் `படகு' எனப் பொருள்.

சர்வ தீபம்: வீட்டின் அனைத்து பாகங் களிலும் வரிசையாக ஏற்றிவைக்கப்படுபவை சர்வ தீபமாகும்.

மோட்ச தீபம்: முன்னோர் நற்கதியடையும் பொருட்டு, ஆலய கோபுரங்களின் மீது ஏற்றி வைக்கப்படுவது.

சர்வாலய தீபம்: கார்த்திகை மாதம் பௌர்ணமி அன்று, மாலைவேளையில் சிவாலயங்களில் ஏற்றப்படுவது. அதாவது, பனை ஓலை களால் கூடுபோல் பெரிதாகச் செய்து, அதற்கு பூஜை செய்து தீபாராதனை காட்டி, கற்பூரத்தின் ஜோதியை அதில் ஏற்றுவது, சர்வாலய தீபம் ஆகும்.

அகண்ட தீபம்: மலையுச்சியில் பெரிய கொப்பரையில் ஏற்றப்படுவது அகண்ட தீபம்.திருவண்ணாமலை, பழநிமலை, திருப் பரங்குன்றம் முதலான திருத்தலங்களில், அகண்ட தீபத்தைத் தரிசிக்கலாம்.



லட்ச தீபம்: ஒரு லட்சம் விளக்குகளால் ஆலயத்தை அலங்கரிப்பது லட்சதீபமாகும்.   திருமயிலை, திருக்கழுக்குன்றம் (12 ஆண்டுகளுக்கு ஒருமுறை) முதலான பல ஆலயங்களில் லட்சதீபம் ஏற்றுவது உண்டு.

மாவிளக்கு தீபம்: அம்மன் ஆலயங்களில் நோய் தீர வேண்டிக்கொண்டு மாவிளக்கு ஏற்றுவார்கள். அரிசி மாவில் வெல்லம் போட்டு, இளநீர் விட்டுப் பிசைந்து உருண்டை யாக்கி, நடுவில் குழித்து நெய் ஊற்றி திரி போட்டு ஏற்றுவது மாவிளக்கு ஆகும்.



காஞ்சிபுரத்தில் உள்ள அருள்மிகு  கச்சபேஸ்வரர் ஆலயத்தில், கார்த்திகை மாத ஞாயிற்றுக்கிழமை களில், இவ்வகை தீபத்தை தலையில் வைத்துக்கொண்டு ஆலயத்தை வலம் வந்து வழிபடும் வழக்கம் உண்டு. இதை, மண்டை விளக்கு பிரார்த்தனை' என்கிறார்கள்.

விருட்ச தீபம்: ஒரு மரத்தைப்போன்று கிளைகளுடன் அடுக்கடுக்காக அமைக்கப் படும் தீப ஸ்தம்பங்களில் விளக்கேற்றும்போது, விருட்சத்தைப் போன்று காட்சித் தரும்.சிதம்பரம், திருவண்ணாமலை, குருவாயூர் ஆலயங்களில் விருட்ச தீபத்தைக் காணலாம்.

தீபத் திருநாள் நல்வாழ்த்துக்கள் !!

பி.கு. வாட்ஸாப்பில் வந்த செய்தியை பகிர்ந்திருக்கிறேன்.
படங்கள்: கூகுள் உபயம் 

Friday, November 16, 2018

வண்டிப் பயணமும், வாழ்க்கைப் பயணமும்

வண்டிப் பயணமும், வாழ்க்கைப் பயணமும் 


நூறு புத்தகங்கள் படிப்பதால் பெறும் அறிவை ஒரு பயணம் தந்துவிடும் என்பார்கள். பயணங்கள் மூலம் நான் பெற்ற அறிவை விட, பயணங்களுக்கும்  நம் வாழ்க்கைப் பயணத்திற்கும் உள்ள ஒற்றுமையை அலசுவதே என் நோக்கம். 

என் நாற்பதாவது வயதில்தான் டூ வீலர் ஒட்டக்  கற்றுக் கொண்டேன். என்னைவிட இளையவர்களைவிட நான் சீக்கிரம் கற்றுக் கொள்வதாகவும், தைரியமாக ஓட்டுவதாகவும் எனக்கு பயிற்சி அளித்தவர் சொன்னாலும், எனக்கு அடி மனதில் ஒரு பயம் இருந்து கொண்டே இருக்கும். "நமக்குப் பின்னால் ஒரு குடும்பம் இருக்கிறது, நாம் ஏதாவது விபத்தில் சிக்கிக் கொண்டால் மிகவும் கஷ்டம்" என்னும் அச்சம் இருந்ததால் மெதுவாகத்தான் செல்வேன், சாலை விதிகளை மீற மாட்டேன். 



நம் நாட்டில் சாலையில் மாட்டு வண்டி, மீன் பாடி வண்டி, சைக்கிள், ஆட்டோ, சிட்டி பஸ், தண்ணீர் லாரி, நவீன ரக டூ வீலர்கள், பென்ஸ் கார், டாட்டா சுமோ என்று எல்லா வகை வாகனங்களும் அதனதன் வேகத்தில் விரையுமே. இதில் சைக்கிளையோ, மாட்டு வண்டியையோ முந்துவதால் நமக்கு எந்த பெருமையும் கிடையாது. டாட்டா சுமோவோடு போட்டி போடுவது அறிவீனம். நம் சௌகரியத்திற்க்காக நாம்  வண்டியில் செல்கிறோம், நாம் போக வேண்டிய இடத்திற்கு பாதுகாப்பாக செல்வதுதான் நம் வேலை. 

இதைப் போலத்தான் வாழ்க்கையும். அவரவர்க்கு வாய்த்த இடம் அவன் போட்ட பிச்சை. நம் வாழ்க்கையைத்தான் நாம் வாழ வேண்டுமே தவிர, மற்றவர்களோடு ஓப்பிட்டுக் கொள்ளுதல் சரியில்லை என்னும் மிகச்சிறந்த வாழ்க்கை பாடத்தை புரிந்து கொண்டேன். 

இது ஒரு விதம் என்றால், வெளிநாட்டுப் பயணங்கள் வேறு விதமாக வாழ்க்கை தத்துவத்தை புரிய வைத்தன. 

நம் நாட்டிலிருந்து வேறு ஒரு நாட்டிற்கு செல்லும்பொழுது அங்கு தங்குவதற்கு மூன்று மாதமோ, ஆறு மாதமோ, இரண்டு வருடங்களோ தங்கும்படி விசா கிடைக்கும். அத்தனை நாட்கள்தான் அங்கு தங்க முடியும். அதே போல நாமும் இந்த பூமியில் குறிப்பிட்ட நாட்கள் மட்டுமே வாழ அனுமதிக்கப் படுகிறோம். விசா முடிந்து விட்டால் தங்க முடியாதது போல நமக்கான காலம் முடிந்து விட்டால் இங்கிருந்து கிளம்ப வேண்டியதுதான். சில சிறப்பு காரணங்களுக்காக விசாவை நீட்டித்துக் கொள்ளலாம் என்பது போல, நம்மால் இங்கு ஏதாவது நன்மை விளையும், என்றால் குருவின் அருளோடு ஆயுளை நீட்டித்துக் கொள்ளலாம். 



சரி நம் காலம் முடிந்து நாம் கிளம்புகிறோம், நண்பர்கள் வீட்டிலேயே பை சொல்லி விடை கொடுத்து விடுவார்கள். மகனோ, மகளோ ஏர்போர்ட் வரைதான் நம்மோடு வர முடியும். அதன் பிறகு பாவ,புண்ணியம் போல லக்கேஜ், கேபின் பேகேஜ் என்னும் இரண்டு சுமையையும் நாம் மட்டும் தனியாகத்தான் சுமந்து செல்ல வேண்டும். எத்தனைக்கெத்தனை குறைவாக லக்கேஜ் இருக்கிறதோ, அத்தனைக்கத்தனை பயணம் சுகமாக இருக்கும். ஆனால் நாம் எங்கே குறைவாக லக்கேஜ் வைத்துக் கொள்கிறோம்?  செல்லும் இடங்களிலெல்லாம் எதையாவது வாங்கி அதிக சுமையோடுதானே திரும்புகிறோம். அப்போது அதற்கு எக்ஸெல் பேகேஜ் கட்டணம் கட்டித்தான் ஆக வேண்டும். இந்த எக்செஸ் பேகேஜ் கட்டணத்தை நாம் வியாதிக்காக செலவிடும் தொகையோடு ஒப்பிடலாமா?  

லக்கேஜ், அல்லது கேபின் பேகேஜ் குறைவாக இருந்தால், சில சமயம் நாம் எகானமி வகுப்பு டிக்கெட் வாங்கியிருந்தாலும், நம்மை முதல் வகுப்பிற்கு உயர்த்துவார்கள். இதனால் என்ன பயன்? என்று கேட்கலாம். பேகேஜ் அதிகம் எடுத்துச் செல்ல முடியும், விரைவாக வெளியே சென்று விடலாம்.  

நம் நாட்டை அடைந்ததும் இங்கு சுங்க வரி(கஸ்டம்ஸ்) கட்ட வேண்டிய பொருள்களை நாம் வைத்திருந்தால் அதை கட்டாமல் இருக்க முடியாது. அப்படி எதுவும் இல்லை என்றால் க்ரீன் சேனல் வழியே விரைவாக வெளியேறி விடலாம்.  அரசை ஏமாற்றி விலக்கப்பட்ட பொருள்களை கடத்த நினைத்தால் கடுமையான தண்டனை நிச்சயம்.

அதைப்போலவே வரம்பு மீறாமல் வாழும் பொழுது நமது அடுத்த பிறவி நன்றாக அமைந்து விடும். நாலு பேருக்கு நல்லது செய்வதற்காக சில பாவங்களை செய்தால், அதற்கான கூலியை கொடுத்தேயாக வேண்டும். பேராசையால் பெரும் குற்றங்களை செய்யம் பொழுது, தண்டனையிலிருந்து தப்ப முடியாது. 

எப்படி பார்த்தாலும் லெஸ் லக்கேஜ், மோர் கம்ஃபார்ட் என்பது வண்டிப் பயணம், வாழ்க்கைப் பயணம் இரண்டுக்குமே நல்லது. என்ன என் கருத்து சரியா? நீங்கள் நினைப்பதை சொல்லுங்கள். 


Tuesday, November 13, 2018

மசாலா சாட்

மசாலா சாட்  

பயணங்களின் பொழுது பாடல்கள் கேட்பதுண்டு. என் மகனோடு பயணிக்கும் பொழுது ஸ்டாண்ட் அப் காமெடி போடச் சொல்லுவான். எனக்கென்னவோ கெட்ட வார்த்தைகள் நிறைந்த அந்த நகைச்சுவை கேட்க பிடிப்பதில்லை. எனவே பாடல்களுக்குப் பிறகு திருச்சி கே. கல்யாணராமனின் உபன்யாசங்களை போட்டேன். நகைச்சுவையாக, ஜனரஞ்சகமாக, புது விஷயங்களையும் சொல்கிறார். அவ்வப்பொழுது தலை காட்டும் சுய பிரதாபத்தை கொஞ்சம் சகித்துக் கொள்ள வேண்டும். மற்றபடி போகும் வழிக்கும் புண்ணியம்!.




பாடல்களில் இளையராஜா, ஏ.ஆர்.ரஹ்மான், ஹாரிஸ் ஜெயராஜ், அனிருத் என்று எல்லோருடைய பாடல்களும் கேட்டோம். இளையராஜாவின் இசையில் வைரமுத்து எழுதிய சில பழைய பாடல்களையும், ஏ.ஆர்.ஆரின் இசையில் அவர் எழுதிய 'மரங்கள் கேட்டேன் வனமே தந்தனை..' பாடலையும் கேட்ட பொழுது, அதை முழுமையாக ரசிக்க முடியாமல் கடலை சாப்பிடும் பொழுது வாயில் அகப்பட்டு சுவையைக் கெடுக்கும் சொத்தைக் கடலையைப் போல 'மீ டூ' விஷயம் செய்தது.  இவ்வளவு நல்ல கவிஞரா இத்தனை சின்னத் தனமாக நடந்து கொண்டிருக்கிறார்? என்று தோன்றியது.

                                                                         


அதே நேரத்தில் கண்ணதாசனின் நினைவும் வந்தது. அவருக்கு மது மட்டுமல்ல போதை மருந்து பழக்கமும் இருந்தது என்பதை அவரே சொல்லியிருக்கிறார். பெண்கள் விஷயத்திலும் பலவீனமானவர் என்பதும் எல்லோருக்கும் தெரியும். ஆனாலும் அவர்மீது யாருக்கும் வெறுப்பு வந்ததில்லை. 

'போடா போ, காமுகனும் மாண்டான், 
கடவுள் நெறி பேசும் மாமுனியும் மாண்டான்
நம்மை நாம் பாப்போம்  நமதுடலை 
பெண் பார்ப்பாள்..'

'பட்ட கடன் தீர்ப்பதற்கு 
கட்டிக்கொண்ட பெண்களுக்கு 
கொட்டித் தந்த இன்பம் ஒரு கோடி, அதில் 
ஒட்டி வந்த ஞானம் ஒரு பாதி ..'

'ஒரு கோப்பையிலே என் குடியிருப்பு 
ஒரு கோல மயில் என் துணையிருப்பு..'

என்றெல்லாம் வெட்ட வெளிச்சமாக, திறந்த புத்தகமாக அவர் வாழ்ந்தது ஒரு காரணமோ?

தீபாவளிக்கு இனிப்புகள் செய்வதும், புத்தாடை அணிந்து கொள்வதும், பட்டாஸு வெடிப்பதும் மட்டுமா சம்பிரதாயம்? வீட்டிற்கு வந்திருக்கும் விருந்தினர்களை சினிமாவுக்கு அழைத்துச் செல்வதும் சம்பிரதாயம்தான். அந்த வகையில் 'பதாயி ஹோ' படம் பார்க்கச் சென்றோம். என்னைத் தவிர எல்லோருக்கும் ஹிந்தி புரியும் என்பதாலும், நகைச்சுவை படம் என்பதாலும் இதைத் தேர்ந்தெடுத்தார்கள். ஹிந்தி படங்களில் கதை என்ன என்று புரிந்து விடும். வசனங்களும் ஓரளவு புரிந்து விடும். நகைச்சுவை காட்சிகளின் பொழுதுதான் என் நிலைமை பரிதாபமாகி விடும். 'த்ரீ இடியட்ஸ்' படத்தில் அரங்கமே அதிர்ந்த ஒரு நகைச்சுவை காட்சியில் நான் மட்டும் கலந்து கொள்ள முடியாமல் பரிதாபமாக உட்கார்ந்திருந்தேன்.



திருமண வயதில் ஒரு மகனையும், பிளஸ் டூ படிக்கும் இன்னொரு மகனையும் வைத்துக் கொண்டு மீண்டும் கர்ப்பமாகும் ஒரு மிடில் கிளாஸ் தாய். முதலில் அதை ஏற்றுக்கொள்ள 
முடியாமல் அவமானத்தில் மறுகும் அந்தக் குடும்பத்தினர் பின்னர் மனம் மாறுவதுதான் திரைப்படம். நீனா குப்தா(தாய்), சுரேகா சிக்ரி(மாமியார்) போன்ற தெரிந்த முகங்கள் இருக்கின்றன.  நீனா குப்தாவின் கணவராக வருபவர் நன்றாகவே நடித்திருக்கிறார். முதல் பாதியில் நகைச்சுவை அதிகம் போலிருக்கிறது. எல்லோரும் அதிகம் சிரித்தார்கள். நான் இதை தமிழில் எடுத்தால்(நிச்சயம் எடுத்து விடுவார்கள் என்றுதான் தோன்றுகிறது) யார் யாரை போடலாம் என்று ஆலோசித்துக் கொண்டிருந்தேன். 

என் மகள் இது 'ஃபாதர் ஆஃப் த பிரைட் பார்ட் டூ' வை உல்ட்டா செய்திருக்கும்   படம் என்றாள். நான் FOB part one பார்த்திருக்கிறேன். பார்ட் டூ பார்க்க வேண்டும்.