கணம்தோறும் பிறக்கிறேன் 

Saturday, February 12, 2022

திரை விமர்சனங்கள்

நரை எழுதும் சுயசரிதம் 

ஜெய் பீம் படத்தில் முக்கிய வேடத்தில் நடித்த மணிகண்டன் எழுதி இயக்கியிருக்கும் படம். 

ஒரு அலுவலகத்தில் பணியாற்றிய, ரிடையர்மெண்ட் வயதை நெருங்கிக் கொண்டிருக்கும் ஒருவரை (டெல்லி கணேஷ்) கம்பெனியை கம்ப்யூடரைஸ் செய்யப் போகிறோம் என்ற காரணம் கூறி நிர்வாகம் கட்டாய ஓய்வு கொடுத்து அனுப்பி விடுகிறது. ஓய்விற்குப் பிறகு வீட்டில் தான் புறக்கணிக்கப்படுவதாக புழுங்கும் அவர் ஒரு நாள் தான் பணியாற்றிய அலுவலகத்திற்குச் செல்கிறார். அங்கும் அவமானப் படுத்தப்பட விரக்தியில் முதல்  முறையாக குடித்து விட்டு, மணிகண்டன் மீது டூ வீலரை மோதி இருவருக்கும் கைகலப்பாகிறது. பின்னர் அவர்களிடையே பூக்கும் நட்பால்  அவர்கள் அணுகுமுறையிலும், வாழ்க்கையிலும் ஏற்படும் மாறுதல்கள்தான் திரைப்படம். 

அதுவரை சிடுமூஞ்சியாக, பேத்தியோடு கூட பேசாதவராக இருந்தவர் கலகலப்பாக மாற முயற்சிக்கிறார். பேத்தியோடு விளையாடி, நெருங்குகிறார். 'ஓட ஓட ஓட பாதை முடியல..' என்னும் பாடலை மகன் ரசிக்கும் பொழுது திட்டியவர் அதே பாடலை மிகவும் ரசித்து பாடத்துவங்குகிறார்.

அதே போல் பரட்டை தலை, தாடி, மீசையோடு இருக்கும் மணிகண்டன் டெல்லி கணேஷ் உதவியோடு பளிச்சென்று மாறுகிறார். இந்த மாற்றங்களால் விளைவது என்ன? குடும்பத்தின் ரியாக்ஷன் என்ன? என்பது க்ளைமாக்ஸ்.

படத்தில் பாடல் கிடையாது, தனி காமெடி ட்ராக் கிடையாது. சண்டை கிடையாது ஏன் கதாநாயகியே கிடையாது. டெல்லி கணேஷ்தான் படம் முழுக்க. எப்போதும் போல கிடைத்த வாய்ப்பை செம்மையாக பயன்படுத்திக் கொண்டிருக்கிறார். மனைவி மீது கோபித்துக் கொண்டு நான்கு நாட்களாக பேசவில்லை என்றவரை மணிகண்டன் திட்டி மனைவியோடு பேசச் சொன்னதும், "பேசி விட்டேன்" என்று மணிகண்டனிடம் வெட்கப்பட்டுக் கொண்டே சொல்லும் இடம் ரசனைக்குரியது. 

இந்த படத்தில் ஒரு குறை இது திரைப்படமா? குறும்படமா? என்ற சந்தேகம் வருவதை தவிர்க்க முடியவில்லை. ஓ.டி.டி.யில் வெளியாகி விருதுகளை குவித்திருக்கிறது இந்தப்படம்.

Bro Daddy(மலையாள திரைப்படம்)

மலையாள நடிகரான பிருத்விராஜ் நடித்து இயக்கியிருக்கும் 'ப்ரோ டாடி' என்னும் நகைச்சுவை படத்தில் மோகன்லால், மீனா, லாலு அலெக்ஸ், கனிகா, கல்யாணி பிரியதர்ஷன் என்று பலரும் நடித்திருக்கிறார்கள். 

பெங்களூரில் ஒரு விளம்பர நிறுவனத்தில் வேலை பார்க்கும் பிரித்விராஜுக்கும், ஐ.டி. ஊழியரான கல்யாணி பிரியதர்ஷனுக்கும் திருமணம் செய்து வைக்கலாம் என்று குடும்ப நண்பர்களான அவர்களுடைய பெற்றோர்கள் பேசுகிறார்கள். அவர்களிடம் பிடி கொடுக்காமல் பேசும் பிரித்வியும், கல்யாணியும் மூன்று வருடங்களாக லிவ் இன் ரிலேஷன்ஷிப்பில் இருப்பது பெற்றோர்களுக்குத் தெரியாது. 

திருமணமாகமலேயே கருவுறம் கல்யாணிக்கு கருவை கலைக்க மனம் வரவில்லை, இதற்கிடையில் பிரித்வியை அவசரமாக ஊருக்கு வரச்சொல்லும் மோகன்லால் தன் மனைவி மீனா அதாவது பிருத்வியின் தாயார் கருவுற்றிருப்பதாக கூறுகிறார். அவரிடம் தன்னுடைய காதல் கதையை பிரித்வி கூற மகன் காதலியை கை பிடிக்க லாலேட்டன் எப்படி உதவுகிறார் என்பதை நகைச்சுவையாக கொண்டு சென்றிருக்கிறார்கள்.

நடிப்பில் யாருமே குறை வைக்கவில்லை. மோகன்லாலுக்கு இதெல்லாம் ஜுஜுபி!. ஊதி தள்ளிவிட்டார். வில்லனாக நான் அறிந்திருந்த லாலு அலெக்ஸ் இதில் காமெடியிலும் கலக்கியிருக்கிறார். மீனாவுக்கும், கனிகாவுக்கும் பெரிதாக வேலை இல்லை. சின்ன ரோலாக இருந்தாலும் சார்லி நிறைவாக செய்திருக்கிறார். அதைப்போல வெட்டிங் இவெண்ட் மேனேஜ்மென்ட் செய்பவராக வருபவரும் சிறப்பாக செய்திருக்கிறார். கண்டிப்பாக ஒரு முறை பார்க்கலாம்.

இப்போது வரும் படங்களில் பெண்கள் குடிப்பது போலவும், லிவ் இன் ரிலேஷன்ஷிப்பில் இருப்பதாகவும் காண்பிப்பது கவலை அளிக்கிறது. நம் நாட்டில் மதிப்பீடுகள் அத்தனை குறைந்து விட்டதா? அல்லது எனக்கு வயதாகி விட்டதா? 

Monday, January 31, 2022

ரிச்மாண்ட்ஹில்(கனடா) சித்திவிநாயகர் கோவில்

ரிச்மாண்ட்ஹில்(கனடா) சித்திவிநாயகர் கோவில்

நேற்று மாலை கனடாவின் ரிச்சமாண்ட் ஹில் என்னும் இடத்தில் இருக்கும் சித்திவிநாயகர் கோவிலுக்கு சென்றிருந்தோம். சித்திவிநாயகர் கோவில் என்று அழைக்கப்பட்டாலும் விநாயகர், முருகன், சிவன், வெங்கடாசலபதி பெருமாள், துர்க்கை என்று எல்லா  தெய்வங்களுக்கும் தனித்தனி சன்னதிகள் உள்ளன. 

இங்கே இப்போது நல்ல குளிர் போகும் வழியெங்கும் மலை மலையாக குவிக்கப்பட்டிருந்த பனி எனக்கு திருவிளையாடல் படத்தை நினைவூட்டியது.

இந்த ஊரில் கோவில்களிலும், பொது கூடங்களிலும் நுழைந்ததும் நம்முடைய ஓவர் கோட்டை கழற்றி மாட்ட ஹாங்கர்கள் இருக்கும். மற்றவர்கள் ஓவர் கோட் டை அவிழ்த்தார்கள். நான் அவிழ்க்க வில்லை, காலில் சாக்ஸையும் அணிந்து கொண்டுதான் உள்ளே சென்றேன். எனக்கு இணையாக சிலர் இருந்தனர். 

வடக்கத்திய பாணியில் சலவைக் கல் விக்கிரகங்களை எதிர்பார்த்துச் சென்ற எனக்கு முற்றிலும் தென்னிந்திய பாணியில் அமைந்திருந்த அந்த கோவில் இனிய ஏமாற்றத்தை தந்தது. 

உற்சவர் விநாயகர்

உற்சவர் முருகன்

பிரும்மாண்டமாண கூடத்தில் விநாயகர், முருகன், வெங்கடாசலபதி சன்னதிகளுக்கு தனித்தனியாக கொடிமரத்துடன் தோரணவாயில். பாண்டிச்சேரி கற்பக விநாயகரை நினைவுபடுத்தும் விநாயகர், டில்லி மலையகத்தின், பெங்களூர் திப்பசந்திரா பாலமுருகன் கோவில்களில் இருப்பதை போன்று நின்ற கோலத்தில் மேலிரண்டு கரங்களில் வேல், மயில், கீழ் வலது கரத்தில் தாமரை மலரோடு பிரும்மாண்ட முருகன். எதிரில் வள்ளிக்கு தனி சன்னதி. 

பெருமாள் உற்சவர்

வெங்கிடாசலபதி சன்னதிக்கு நேரே தனி சன்னதியில் அமர்ந்த கோலத்தில் மஹாலட்சுமி.  பெருமாளுக்கு அருகில் சக்கிரத்தாழ்வார்.

 ராம,லட்சுமண்,சீதாவோடு ஆஞ்சநேயர் மற்றும் ஆழ்வார்கள் தனியே எழுந்தருளியிருக்கிறார்கள். 





இதைத்தவிர அமர்ந்த கோலத்தில் சரஸ்வதி, நின்ற கோலத்தில் துர்க்கை, சிவலிங்கத்திற்கு அருகில் நடராஜர், திரிபுரசுந்தரி, பைரவருக்கு தனி சன்னதிகள் மற்றும் நவக்கிரகங்களும் இருக்கின்றன. 


நேற்று (சனி)பிரதோஷம் என்பதால் சுவாமி புறப்பாடு முடிந்து நந்திக்கும், ஸ்வாமிக்கும்  பூஜை நடந்து கொண்டிருந்தது. தீபாராதனை பார்த்து விட்டு கிளம்பினோம். மிகவும் திருப்தியாக இருந்தது. 


பிரதோஷ பூஜையில் பக்தர்கள்

சேஷ வாகனம்

ஹனுமந்த, கருட வாகனங்கள்

கோவில் வாசலில் பேத்தியோடு நான்

Saturday, January 29, 2022

ஆயிரம் பொய் சொல்லி ஒரே ஒரு பொய் சொல்லி ஒரு கல்யாணம்

ஆயிரம் பொய் சொல்லி 

ஒரே ஒரு பொய் சொல்லி ஒரு கல்யாணம்


"தீர்க்க சுமங்கலி பவ

ஆயுஷ்மான் பவ, ஷேமமா இருக்கணும்.. சீக்கிரம் மாப்பிள்ளை வரட்டும்.."
தன்னை நமஸ்கரித்த சீதாராமனையும், அவன் மனைவி ஜானகியையும் ஆசிர்வதித்தார் ராம சுப்பு. 

எழுந்திருந்தவர்களிடம் "சக்குவோட ஜாதகம் எடுத்துட்டியா?"  

"எடுத்தாச்சு.. ஆனா ஒண்ணும் சரியா அமையல, ரெண்டு மூணு பேர் வந்து பாத்துட்டு, நிறம் மட்டுனு சொல்லிட்டு போயிட்டா, ‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌இவளுக்கு
அப்புறம் இன்னும் ரெண்டு பேர் இருக்கா" கவலையோடு சீதாராமன் சொன்னார்.

"என்ன வயசாறது?"

"பதினெட்டு நடக்கறது.."

"எப்படி பாக்கற..?"

"நல்ல குடும்பமா இருக்கணும், அதான் முக்கியம்."

அது சரி, பையன் உத்யோகத்துல இருக்கணுமா? கிராமத்துல விவசாயம் பார்த்ததுண்டு இருந்தா பொண்ணு குடுப்பியா?"

"அதுக்கென்ன..? நீங்க பாத்து நல்ல பையன்னு சொன்னா போதாதா..?"

பக்கத்து ஊரு பட்டாமணியர் மஹாதேவன் என்னோட சிநேகிதன்தான். அவன் கடைசி பையனுக்கு பொண்ணு தேடிண்டிருக்கான், அவனுக்கு மூணு பசங்க, பெரிய பையன் தஞ்சாவூரில் வக்கீல், அடுத்தவன் பட்டணத்துல வேலையா இருக்கான். இவன் ஊரோடு தங்கி விவசாயம் பாக்கறான். அவாளுக்கு நூறு வேலி நிலம். மாமி நல்லவ, நம்பி கொடுக்கலாம்"

"நீங்க இவ்வளவு தூரம் சொல்றது போதாதா? நான் ஊருக்கு போய் ஜாதகம் அனுப்பறேன்.."

"அனுப்பறயா..?" என்ன யாருக்கோ மாதிரி பேசற? ஒரு நல்ல நாளாக பாத்து  கையோடு எடுத்துண்டு வா..
நாம நேர பாத்து ஜாதகத்தை குடுத்துட்டு பையன் ஜாதகம் வாங்கிட்டு வரலாம். பையனையும் நேர பாத்த மாதிரி இருக்கும். அப்புறம் பகவான் சித்தம்.." அவர் சொல்லி முடிக்க, கூடத்தில் மாட்டப்பட்டிருந்த நூறு வருட கடிகாரம் யாரென்று மணியடித்தது. 

"பாத்தியா? மணி அடிக்கிறது" என்றதும் சீதாராமனுக்கு சந்தோஷமாக இருந்தது.  ராமசுப்பு சொன்னபடியே ஒரு நல்ல நாளில் தன் பெண் சகுந்தலாவின் ஜாதகத்தை எழுதிக் கொண்டு, வெற்றிலை பாக்கு, ஒரு சீப்பு ரஸ்தாளி வாழைப்பழம், கல்கண்டு, ஒரு பந்து மல்லிகைப்பூ இவைகளோடு ராமசுப்பு  வீட்டிற்கு வந்தார். அங்கிருந்து இருவரும் வில் வண்டியில் புறப்பட்டனர். 

"வில் வண்டி புதுசா வாங்யிருக்கேளா அத்திம்பேர்?"

"நம்ம மைனரோடது, சம்பந்தம் பேசப் போறோம், கொஞ்சம் கெளரவமா இருக்க வேண்டாமா?"

இவர்களைக் கண்ட பட்டாமணியம் ஆரவாரமாக வரவேற்றார். வாசலில் பளிச்சென்று கோலம் போடப்பட்டு செம்மண் இடப்பட்டிருந்தது. ஸ்வாமி அலமாரியில் பெரிய தஞ்சாவூர் ராமர் பட்டாபிஷேக படம். வெள்ளி குத்து விளக்குகள் எரிந்து கொண்டிருக்க, உள்ளிருந்து பட்டாமணியத்தின் மனைவி போர்த்திய தலைப்போடு வந்து, " வாங்கோ.. செளக்கியமா? மீனாட்சி குழந்தைகள் செளக்கியமா?" என்று சம்பிரதாயமாக விசாரித்து விட்டு சென்றாள்"

"எல்லாரும் செளக்கியம், ஒரு தாம்பாளம் கொண்டு வா"

அவள் கொண்டு வந்த பித்தளை தாம்பாளம் நன்றாக தேய்க்கப் பட்டு பளிச்சென்று மின்னியது. அதில் இவர்கள் கொண்டு சென்ற வெற்றிலை, பாக்கு, பழம், பூ  இவைகளை எடுத்து வைத்து அதன் மீது சீதாராமன் மகள் சகுந்தலாவின் ஜாதகத்தை எடுத்து வைத்து, "இவன் என் மச்சினன், இவன் பொண்ணு சகுந்தலாவை நம்ம விச்சுவிற்கு பார்க்கலாம்னு தோண்றது, இது சகுந்தலா ஜாதகம்" என்று தட்டை நீட்ட, அவர் அதை வாங்கி சாமிக்கு முன்னால் வைத்து விட்டு, "உட்காருங்கோ.." என்று ஊஞ்சலைக் காட்டினார். 
வந்தவர்கள் ஊஞ்சலில் அமர, அதற்கு எதிரே இருந்த பெஞ்சில் பட்டாமணியம் உட்கார்ந்தார். அவர் மனைவி மூன்று தட்டுகளில் கேசரியும், தட்டையும், ஒரு வெங்கல கூஜாவில் குடிக்க தண்ணீர் மற்றும் வெங்கல டம்ளர் கொண்டு வைத்தாள். 

"சாப்பிடுங்கோ.. " என்று வந்தவர்களை உபசரித்தவர் "ரொம்ப சந்தோஷம்! நீங்க ஜாதகம் கொண்டு வந்திருக்கேள், ஆனா நான் ஜாதகம் பார்க்கற வழக்கம் இல்லை.. ஸ்வாமி ட்ட உத்தரவு கேட்பேன், உத்தரவு கிடைக்கணும். என் மூணு பொண்கள், இரண்டு பசங்களுக்கும் அப்படித்தான் பண்ணினேன்"

"உத்தரவுனா எப்படி? பூக்கட்டி பார்க்கிறதா?"

"இல்லை யில்ல.. உனக்கு தெரியாதா ராமு, எனக்கு பேச்சியம்மன்தான் எல்லாம். நான் இந்த ஜாதகத்தை பிரிச்சு கூட பார்க்க மாட்டேன். கொண்டு போய் அம்பாள் காலடியில் வெச்சு அர்ச்சனை பண்ணுவேன். பிரகாரம் சுத்தி வரும்போது எனக்கு ஒரு மட்டை தேங்காய் கிடைச்சா உத்தரவு கொடுத்தூட்டாள்னு அர்த்தம்"

"மட்டைத் தேங்காயா..?" சீதாராமன் அவநம்பிக்கையோடு கேட்க, 

"ஆமாம், கிடைக்கும், கிடைச்சிருக்கே.." என்றார் அழுத்தமாக. "உங்களுக்கு ஜாதகம் பார்க்கணும்னா தாராளம பாருங்கோ.  அப்புறம் எனக்கு சொல்லுங்கோ, இப்போ இந்த காபியை குடிங்கோ, விச்சு உரம் வாங்க போயிருக்கான்.  இப்போ வந்துடுவான்.

காபியை குடித்து விட்டு அவர்களுக்கு வீட்டை சுற்றிக் காண்பித்தார். மூன்று  கட்டு வீடு, கொட்டில் நிறைய கறவை மாடுகளும், காளை மாடுகளும். 
மாப்பிள்ளை பையனாக விஸ்வநாதனாகிய விச்சுவையும் அவர்களுக்குப் பிடித்தது. 

திரும்பி வரும்பொழுது, "என்ன அத்திம்பேர் என்னவோ சாமி உத்தரவு என்கிறாறே..?" 

"நீ முதலில் ஜாதகப் பொருத்தம் பாரு. யார்கிட்ட காட்டுவ?"

"நம்ம வேம்பு கிட்டதான்" 
பார்த்து ஜாதகம் பொருந்தி யிருக்கிறது என்று தகவல் அனுப்பினார்.

பட்டாணி யம் மஹாதேவன், "ரொம்ப சந்தோஷம். வர புதன் நாள் நன்னா இருக்கு. அன்னிக்கே பேச்சி அம்மன் கோவிலில் உத்தரவு கேட்டு விடுகிறேன். நீங்கள் யாராவது வர வேண்டும் என்றாலும் வரலாம்"  என்று கூற, ராமசுப்பு அவரோடு செல்வதாக முடிவாயிற்று. 

ராமசுப்பு நேராக கோவிலுக்கு வந்து விடுவதாக கூறிவிட்டு, மஹாதேவன் வருவதற்கு சற்று முன்னதாகவே கோவிலை அடைந்து விட்டார். கோவில் வாசலில் பூக்கடை வைத்திருந்த சண்முகம் பண்டாரத்திடம் சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்தார். 
மஹாதேவன் வண்டி வருவது தெரிந்ததும்,  "பார்த்துக்கோ" என்று விட்டு நகர்ந்து கோவில் வாசலுக்கு சென்று நின்று கொண்டார். 

இருவரும்  சேர்ந்து கோவிலுக்குச் சென்று அர்ச்சனை செய்து விட்டு வெளியே வந்து பிரகாரத்தை சுற்றத் தொடங்கினர். ராமசுப்பு தெரிந்தவர் ஒருவரோடு பேசியதில் கொஞ்சம் பின் தங்கினார், பிரகாரம் முடியும் தருவாயில் மஹாதேவன் கண்ணில் அந்த தேங்காய் பட்டது. வளைந்து நின்றிருக்கும் தென்னை மரத்தை ஏறிட்டார். பின்னர் அந்த தேங்காயை எடுத்துக் கொண்டு ராமசுப்பு வர காத்திருந்தார். 

"ராமு இங்க பார் மட்டை தேங்காய், இப்போதுதான் மரத்திலிருந்து விழுந்திருக்கிறது, அம்பாள் உத்தரவு கொடுத்துட்டா" என்று மகிழ்ச்சியோடு கூற, அம்பாள் சன்னதியை நோக்கி கும்பிடு போட்டவர் சண்முகம் பண்டாரத்தையும் பார்த்து லேசாக சிரித்தார். மனசுக்குள் "ஏதோ இந்த மட்டும் மஹாதேவன் மட்டை தேங்காய் கிடைக்கணும்னு சொன்னான், நானே ஒரு தேங்காயை போட்டு வைத்து, அதை வேறு யாரும் எடுத்துக் கொண்டு போய் விடாமல் பண்டாரம் சண்முகத்தையும் காவலுக்கு போட்டு சமாளித்து விட்டோம், அவன் மட்டும் கருட தரிசனம் கிடைக்க வேண்டும் என்று சொல்லியிருந்தால் கதை கந்தலாகியிருக்கும்" என்று நினைத்துக் கொண்டார்.

பிறகு என்ன, விச்சு என்னும் விஸ்வநாதனுக்கும், சக்கு என்னும் சகுந்தலாவிற்கும் சுபயோக, சுப தினத்தில் திருமணம் நடந்து, அறுபது வருடங்களை கடந்து விட்டது. 

பி.கு: மத்யமரில் ஆயிரம் பொய் சொல்லி என்னும் தலைப்பில் நம் திருமணத்தில் சொல்லப்பட்ட பொய் பற்றி எழுதச் சொல்லியிருந்தார்கள். அதற்காக நான் கதை போல எழுதியிருந்தாலும் எங்கள் ஊரில் நிஜமாகவே நடந்த சம்பவம். 

 

Monday, January 24, 2022

மசாலா சாட்




ரொம்ப நாட்களாக பார்க்க ஆசைப்பட்ட ராமானுஜன் படத்தை யூ ட்யூபில்  பார்த்தேன்.  ஹூம்! இருந்தாலும் அந்த படத்தை விமர்சிக்க விருப்பம் இல்லை.  

நம் நாட்டில் வாழ்ந்த ஒரு மேதையின்
வாழ்க்கையை திரைப்படமாக எடுக்க முன் வந்திருப்பதை பாராட்டத்தான் வேண்டும். என்றாலும் சில நெருடல்கள். 

ஒரு டாகுமெண்ட்ரி போல எடுக்கப் பட்டிருந்த இந்த படம் தராத ஸ்வாரஸ்யத்தை அவரைப் பற்றிய ஒரு ஆங்கில டாகுமெண்ட்ரி தந்தது.

அந்தக் கால படங்களைப் போல ஆங்கிலேயர்களை கொச்சைத் தமிழில் பேச வைத்திருக்க வேண்டாம்.  

வறுமையில் உழல்வதாக  காட்டப் பட்டிருக்கும் ராமானுஜத்தின் தாயார் (சுஹாசினி) ராமானுஜம் அவர்களின் திருமணத்தின் பொழுது காசு மாலையும், கல் அட்டிகையுமாக காட்சி அளிப்பதும், சில காட்சிகளில்  ஜரிகை வைத்த மாட்சிங் ப்ளவுஸ் அணிந்திருப்பதும் கொஞ்சம் உறுத்துகிறது. பின்னால் இயல்பாக மாறி விடுகிறார். நடிப்பும் இயல்பு. நடித்திருந்த பலரும் தங்கள் பாத்திரத்தை சிறப்பாகவே செய்திருந்தார்கள்.

ராமானுஜத்தின் குல தெய்வமான நாமகிரித் தாயார் ராமானுஜம், அவருடைய தாயார் இரண்டு பேரின் கனவிலும் ஒரே சமயத்தில் தோன்றி அவர் லண்டன் செல்ல உத்தரவு அளித்ததை வெறும் வசனத்தில் கடந்து போகாமல் விஷுவலாக காண்பித்திருக்கலாம், ஏனெனில் அது நிஜமாகவே நடந்த விஷயம். 

கணிதத்தின் பயன்பாடு கட்டிடங்கள் கட்டவும், இயந்திரங்களை படைத்து, இயக்கவும்தான் என்று நினைத்துக் கொண்டிருந்தேன். ராமானுஜம் அவர்களின் நம்பர் தியரி சாலை போக்குவரத்திற்கும் பயன்படுகிறது.  நெடுஞ்சாலைகளில் டிராஃபிக் ஜாம் ஏற்படும் பொழுது மாற்று வழி கண்டு பிடிக்க GPSக்கு உதவுகிறது என்பது ஆச்சர்யமாக இருந்தது. 

******†**********************************


தனுஷ் ஐஸ்வர்யா பிரிவு செய்தி வந்தவுடன் இது அவர்களின் சொந்த விஷயம் மற்றவர்களுக்கு கருத்து சொல்ல உரிமை கிடையாது என்று சொல்லிக் கொண்டே யூ ட்யூபில் அத்தனை பேரும் இதையே பேசினார்கள். 

ராஜன் என்னும் சினிமா பிரமுகர் சினிமா நட்சத்திரங்கள் மக்களுக்கு முன்மாதிரியாக இருக்க வேண்டாமா? என்று கோபித்தார். சிரிப்பு வந்தது. இப்போதெல்லாம் யார் சினிமா நட்சத்திரங்களை முன் மாதிரியாக கொள்கிறார்கள்? யோசித்துப் பார்த்தால் எம்.ஜி.ஆர்., சிவாஜிக்கு முன்னாலும் சினிமாக்காரர்களுக்கு சமூகத்தில் மரியாதை கிடையாது.  நம் கில்லர்ஜி போல பலரும் அவர்களை கூத்தாடிகள் என்றே குறிப்பிட்டனர்.

இப்போது சினிமா சண்டைக் காட்சிகள் எவ்வளவு தூரம் நிஜம், எவ்வளவு கிராஃபிக்ஸ் என்பது சிறு குழந்தைகளுக்குக் கூடத் தெரியும். அதனால் எம்.ஜி.ஆர்., சிவாஜி காலத்தில் நட்சத்திரங்கள் மீது இருந்த பிரமிப்பு இப்போது கிடையாது. மேலும் இப்போது ஊடகங்கள் நடிகர், நடிகைகளின் அந்தரங்கங்களை படத்தோடு அம்பலப்படுத்தி விடுவதால் அவர்கள் மீது மரியாதையும் கிடையாது. தவிர முன்னோடியாக கொள்ளக்கூடிய பாத்திரங்களையா இன்றைய கதாநாயகர்கள் செய்கிறார்கள்? 

அப்போது கட் அவுட் டிற்கு பால் அபிஷேகம் செய்வது என்னவாம் என்கிறீர்களா? அது ஒரு வகை ஏமாற்று.

**********************************************
கீதா ரங்கன் தயவில் 'வெண்ணிலா'வின் ஒரு கதையை படித்தேன். பெண்ணின் விரக தாபத்தை விலாவாரியாக விவரித்திருக்கும் கதை. கத்தி மேல் நடக்கும் வித்தை. கொஞ்சம் அசந்தாலும் ஆபாசமாகிவிடும் அபாயம். நேர்மையாகவும், திறமையாகவும் கையாண்டிருக்கிறார். 

நம் சமூகத்தில் பெண் எழுத்தாளர்களுக்கும் பல கட்டுப்பாடுகள் உண்டு. ஒரு முறை வாசந்தி தன் கதை ஒன்றில்," அவளின் சட்டை பட்டன்களை அவிழ்த்தான்" என்று எழுதியிருந்ததை படித்த பத்திரிகை ஆசிரியர் ஒருவர் அதிர்ந்து போய் "நோ! நோ! ஒரு பெண் எப்படி இப்படி எழுதலாம்?" என்றாராம். அதற்கு வாசந்தி, "சட்டை பட்டனை அவிழ்க்காமல் எப்படி காதல் பண்ணுவீர்கள்?" என்று கேட்டாராம். இவரோ பல விஷயங்களை அனாயசமாக கடந்து சென்றிருக்கிறார்.

அப்போதெல்லாம் பெண் எழுத்தாளர்கள், "நாங்கள் புடவை கட்டிக் கொள்கிறோம், எங்கள் எழுத்துக்களுக்கு புடவை கட்டி விடாதீர்கள்" என்பார்கள். புடவைக்குப் பின்னால் உணர்வும், மனமும் உண்டு என்பதை நேர்த்தியாக உணர்த்தியிருக்கிறார் வெண்ணிலா. அந்த வகையில் அவரை பாராட்டலாம். 
சுட்டியை இணைத்திருக்கிறேன். கதையை படிப்பதோடு நிறுத்திக் கொள்ளாமல் அதன் பின்னூட்டங்களையும் படியுங்கள்.

https://kanali.in/indira-neelam/






Wednesday, January 19, 2022

குளிரும் நானும்


குளிரும், நானும்


"உங்களுக்கு அந்த குளிர் தாங்குமா? பெங்களூர் குளிரே பொறுக்காதே..?"உங்களுக்கு  அக்டோபரில் கனடா செல்லலாம் என்று நான் முடிவெடுத்ததும் என் மருமகள் கேட்டாள். 

உணமைதான். எனக்கு குளிர் தாங்காது.திருச்சியில் இருந்த பொழுது அந்த குளிருக்கே, "குளிருகிறது.." என்றால் வீட்டில் எல்லோரும் கேலி செய்வார்கள். 

மஸ்கட்டில் டிசம்பர்,ஜனவரியில்தான் குளிரும். பிப்ரவரியில் இரவுகள் தான் குளுமையாக இருக்கும். மார்ச் மாதத்திலிருந்து போர்வை தேவையிருக்காது. ஆஹா! என்ன சுகம்!

பெங்களூர் வந்ததும் வருடம் 365 நாட்களும் வீட்டிற்குள்ளேயே செருப்பு அணிந்து கொள்வேன். சென்னையில் செய்வது போல் தரையில் ஒரு துணியை விரித்து படுத்துக் கொள்ள முடியவில்லையே என்று தாபமாக இருக்கும். ஜனவரியில் , "என்ன கிளைமேட் இது? அனீசியாக இருக்கிறது"என்று புலம்புவேன்.

பல்வேறு காரணங்களால் அக்டோபர் இறுதியிலேயே கனடா வந்து விட்டேன். அப்போது இங்கு 10°C இருந்திருக்கும். ஊரிலிருந்து வந்த இரண்டாம் நாள் என் மகள் மாலையில் கொஞ்சம் நடந்துவிட்டது வரலாம் என்று அழைத்துச் சென்றாள். என்னதான் ஓவர் கோட் அணிந்திருந்தாலும் சிலீர் என்று குளிர் தாக்கியது. 

நவம்பர் மாதத்திலேயே பனி பொழிவு இருந்தது என்றாலும் வீட்டிற்குள் குளிர் தெரியவில்லை.  சுளீர் என்று வெய்யலடித்த ஒரு நாள் நான்,"நல்ல வெய்யில் இருக்கிறதே..? நான் கீழே போய் வெய்யிலில் கொஞ்சம் நடந்து விட்டு வருகிறேன்" என்று வெளியே வந்தேன்" 

வெய்யிலா..? அது பாட்டுக்கு இருந்ததே ஒழிய உடம்பில் உரைத்தால் தானே வம்பு? தவிர சீறும் காற்றில் விரல்கள் மறத்து விடும் போலாயிற்று. ஐந்து நிமிடங்கள் கூட தாக்கு பிடிக்க முடியவில்லை. "இப்போ புரிஞ்சுதா? சொன்னால் கேட்க மாட்ட.. அதனால்தான் நாங்க எதுவும் சொல்லவில்லை. வெய்யிலில் நிற்கணும்னா ஜன்னல் வழியாக வரும் வெய்யிலில் காய்ந்து கொள்" என்றாள். 

என்னிடம் எல்லோரும் "குளிர் எப்படி இருக்கிறது?" என்றால் நான் ஜம்பமாக வீட்டிற்குள் தெரியவில்லை" என்றேன். "அப்படியா சொல்ற? இரு இரு.." என்று இயற்கை நினைத்துக் கொண்டது எனக்குத் தெரியவில்லை.

அப்போதெல்லாம் என் மகள், " குளிர் தொடங்கி விட்டால், லேயர்ஸ் அணிந்து கொள்ள வேண்டும் " "குளிர் தொடங்கி விட்டால் குளித்து விட்டு உடை அணிந்து கொள்வதற்குள் அப்படி குளிரும்.." என்றெல்லாம் சொல்லும் பொழுது "இப்போதே குளிராகத்தானே இருக்கிறது? இன்னும் என்ன குளிர் தொடங்கி விட்டால்..?" என்று நினைத்துக் கொண்டேன். 

என்னுடைய அந்த கேள்விகளுக்கு ஜனவரியில் விடை கிடைத்தது. டெம்பரேச்சர் கிடுகிடுவென்று கீழே இறங்க, கூடவே காற்றும் சேர்ந்து கொள்ள, நான் சினிமாக்களில் வரும் திமிர் பிடித்த பணக்கார மாமியார்கள் போல, எப்போதும் ஒரு ஷாலை போர்த்திக்கொண்டு நடந்தேன். 

அப்போதுதான் பிரும்மரீ பிராணாயாமம் செய்தால் குளிரை உணராமல் இருக்கலாம் என்று எப்போதோ படித்தது நினைவுக்கு வந்தது. யோகா டீச்சராக இருக்கும் எங்கள் உறவினர் ஒருவரிடம் பிரும்மரீ பிராணாயாமம் செய்வதை கேட்டு தெரிந்து கொண்டு செய்ய ஆரம்பித்தேன். ஷால் தேவையாக இல்லை. 

சகோதரிகளின் வீடியோ கான்ஃப்ரன்ஸின் பொழுது, என்ன பானு இன்னிக்கு ஸ்வெட்டர் போட்டுக்கல? குளிர் இல்லையா? என்றதும் நான் பிரும்மரி பிராணாயாமத்தின் மகிமையை அவிழ்த்துவட என் மகள் சிரித்தாள் "இன்றைக்கு சூரியன் இருக்கிறது. சன் வரும் நாட்களில் வீட்டிற்குள் அவ்வளவாக குளிர் தெரியாது. சில நாட்களில் சூரியன் இல்லாமல் இருண்டு கிடக்கும் அந்த நாட்களில் நீ பிரம்மரி பிராணாயாமம் செய்து குளிரை உணர வில்லை என்றால் ஒப்புக்கொள்கிறேன் என்றாள். எப்படியோ குளிர் தெரியாமல் சந்தோஷமாக இருந்தேன். 

இப்படி இருக்க 16ஆம் தேதி ஞாயிறு அன்று மறுநாள் திங்கள் முதல் குழந்தைக்கு பள்ளியில் இன் பெர்சன் வகுப்புகள் துவங்க இருப்பதால் அதற்கான ஏற்பாடுகளை மகள் செய்த பொழுது, மாப்பிள்ளை,"நாளை கடுமையான பனிப்புயலை எதிர்பார்ப்பதால் பள்ளி இயங்குமா? இருக்காதா?  என்பது குறித்து நாளை காலை ஆறு மணிக்கு மெயில் அனுப்புகிறோம் என்று பள்ளியிலிருந்து மெயில் வந்திருப்பதாகக் கூறினார். 

அன்று இரவே பனிப்பொழிவு தொடங்கி விட்டது. காலை எழுந்து பார்த்தால் கடுமையான பனிப்பொழிவு. மரங்கள் மீதெல்லாம் கொத்து கொத்தாக பனிப்படலம். மகள் வீட்டு பால்கனியில் சிறு பனிக்குன்று. எதிரே இரண்டு கார்கள் பனியில் மாட்டிக்கொண்டிருப்பதை பார்க்க முடிந்தது. 



20செ.மீட்டரிலிருந்து 30 செ.மீ.வரை பனிப்பொழிவு இருக்கும், மிகவும் அத்தியாவசியம் என்று இருந்தாலே யொழிய பயணம் மேற் கொள்ள வேண்டாம் என்று அரசு அறிவுறுத்தியிருந்தது. சாலையில் போக்குவரத்து இல்லை என்றே கூறலாம். ஓடிக்கொண்டிருந்த ஒன்றிரண்டு வாகனங்களும் மிகவும் மெதுவாகச் சென்றன.

பதினோரு மணி வாக்கில் சற்று நின்றது போலத் தோன்றிய பனிப்பொழிவு மீண்டும் உக்கிரமாகத் தொடங்கியது. அறிவித்திருந்த 30 செ.மீ.யையும் தாண்டி 60 செ.மீ.வரை சென்றதாக செய்திகள் வந்தன. 

எப்படி இருந்தாலும் இவ்வளவு தூரம் வந்துவிட்டு புகைப்படம் எடுக்காமல் இருக்க முடியுமா? அதற்கேற்ற முஸ்தீபுகளோடு சென்று சில புகைப்படங்கள் எடுத்தேன். 

இந்த ஊரில் கொஞ்சம் கடியான விஷயம் ஒன்றன் மேல் ஒன்றாக உடைகள் அணிய வேண்டியிருப்பதும், குப்பையை போட வேண்டும் என்றால் கூட கோட், தலைக்கு குல்லாய், காலில் பூட்ஸ் என்று அணிந்து கொள்ள வேண்டியிருப்பதும்தான். 

இங்கு வந்ததும் தான் இதைப் போன்ற குளிர் தேசங்களில் இருப்பவர்கள் ஏன் தரையில் அமர்வதில்லை? ஏன் டாய்லெட் டிஷ்யூ பேப்பர் பயன்படுத்துகிறார்கள்? ஆண்கள், பெண்கள் அத்தனை பேரும் ஏன் நீண்ட கால் சராய் அணிகிறார்கள்? என்பதெல்லாம் புரிகிறது. வருடத்தில் முக்கால் வாசி நேரம் ஏகப்பட்ட உடைகள் அணிய வேண்டி இருப்பதால்தான் கோடை வந்தவுடன் மினிமம் உடைக்கு வந்து விடுகிறார்கள் போலிருக்கிறது.

திருச்சி வெய்யிலில் பிறந்து வளர்ந்து, மஸ்கட் வெய்யிலில் வாழ்ந்து, சென்னை வெய்யிலில் புழுங்கி, திருவண்ணாமலை வெய்யிலில் கூட சில வருடங்கள் இருந்த, வெய்யில் தவிர வாழ்க்கையில வேற எதுவும் தெரியாமல், வெய்யிலோடு விளையாடி, வெய்யிலோடு உறவாடிய எனக்கு how fortunate are we to born in India! என்று தோன்றுவது நியாயமான விஷயம்தானே? 

எங்கள் அப்பா அடிக்கடி "இந்தியா போல ஒரு இடம் கிடையாது. என்ன இயற்கை வளம்! கன்ட்யூசிவ் கிளைமேட்.. எப்படி இருக்க வேண்டிய தேசம், அரசியல்வாதிகளால் பாழாகிறது" என்பார். அதுதான் நினைவுக்கு வந்தது.

Friday, January 14, 2022

வைகுண்ட ஏகாதசி

வைகுண்ட ஏகாதசி

போகிப் பண்டிகையாகிய இன்றுதான் அதாவது 13.01.2022 தான் வைகுண்ட ஏகாதசி. ஆனால் ஸ்ரீரங்கத்தில் சென்ற ஏகாதசியையே வைகுண்ட ஏகாதசி யாக கொண்டாடி விட்டதால் சிலருக்கு குழப்பம் வந்தது. சென்ற ஏகாதசி குருவாயூர் ஏகாதசி அல்லது கைசிக ஏகாதசி எனப்படும். திருக்குறுங்குடி ஏகாதசி என்றும் சொல்வார்கள்.

நம் நாட்டில் பின்பற்றும் எல்லா கேலண்டர்கள் அல்லது பஞ்சாங்கங்கள் படியும் ஒரு மாதத்திற்கு வளர்பிறையில் ஒன்று, தேய்பிறையில் ஒன்று என இரண்டு ஏகாதசிகள் வரும். மார்கழி மாத வளர்பிறையில் வரும் ஏகாதசியே வைகுண்ட ஏகாதசி. 

ஸ்ரீரங்கத்தை பொறுத்தவரை ஒவ்வொரு மாதமும் ஒரு திருவிழா உண்டு.  அந்த கோவிலின் மிகச் சிறப்பான விழா வைகுண்ட ஏகாதசி. ஏகாதசிக்கு முன்னால் பகல் பத்து என்று பத்து நாட்கள், ஏகாதசிக்கு பின்னர் ராப்பத்து என்று பத்து நாட்கள் என்று மிகவும் விமரிசையாக இருபது நாட்கள் நடக்கும். இந்த வருடம் வைகுண்ட ஏகாதசி மார்கழி மாதத்தின் கடைசி நாளான போகியன்று வருகிறது. அதை கடைபிடித்தால் தை மாதத்தில் வரும் உற்சவம் நடத்துவதில் பிரச்சனை வரும்.

அதனால் கோவில் ஒழுகுமுறைக்காக கார்த்திகை மாதம் வந்த ஏகாதசியையே வைகுண்ட ஏகாதசியாக ஸ்ரீரங்கம் கோவிலில் மட்டும் அனுஷ்டித்து விட்டார்கள். மணவாள மாமுனிகள் செய்த ஏற்பாடாம் இது. பதினெட்டு வருடங்களுக்கு ஒரு முறை இப்படி நிகழும் என்கிறார்கள்.

சித்திரை தொடங்கி பங்குனி வரை வளர்பிறையிலும், தேய்பிறையிலும் வரும் ஏகாதசிகள்

காமதா, பாபமோசனிகா

மோகினி, வரூதினி

நிர்ஜலா, அபரா 

சபனீ, யோகிணி 

காமிகா, புத்திரதா 

பத்மநாபா,  அஜா 

பாபாங்குசா, இந்திரா 

ப்ரபோதினி, ரமா 

மோக்ஷ, உற்பத்தி

புத்ரதா, சபலா

ஜயா, ஷட்திலா

ஆமலகி, விஜயா

சில வருடங்களில் மட்டும் கமலா ஏகாதசி என்று இருபத்தைந்தாக ஒன்றும் வரும்.

ஹிந்து வாக பிறந்த ஒவ்வொருவரும் கண்டிப்பாக அனுஷ்டிக்க வேண்டிய விரதம் ஏகாதசி விரதம் என்று நம்பப்படுகிறது. எட்டு வயது பூர்த்தியானவர் முதல் எண்பது வயது நிறைந்தவர் வரை கடைப்பிடிக்க வேண்டும்.  எந்த நிலையிலும் கடைபிடிப்பதை நிறுத்தி விடக்கூடாது என்று அறிவுறுத்தப்படுகிறது.

இதில் ஒரு ஸ்வாரஸ்யமான விஷயம் வைகுண்ட ஏகாதசி என்று அறியப்படும் ஏகாதசிக்கு மோக்ஷ ஏகாதசி என்றுதான் பெயர். வைகுண்ட ஏகாதசி என்னும் பெயர் பின்னாளில் வந்திருக்கும்.

ஏகாதசி விரதத்தை முறையாக அனுஷ்டித்து முக்தி அடைந்த அரசன் அம்பரீஷன் என்பது பலருக்கும் தெரியும்.

நாங்கள் கார்த்திகை மாத வளர்பிறை ஏகாதசி அன்று கனடாவில் இருக்கும் திருப்பதி வெங்கடாசலபதி கோவிலுக்குச் சென்றிருந்தோம். 

பெயர் என்னவோ திருப்பதி வெங்கடாசலபதி கோயில் என்றிருந்தாலும், அங்கு விநாயகர், முருகன், சிவன், துர்க்கை, நவகிரகங்கள் என எல்லா சன்னதிகளும் இருந்தன. மூலவர் திருப்பதி பெருமாள். அன்று அங்கு ஏதோ சிறப்பு பூஜை இருந்ததால் நல்ல கும்பல். செல்லும் வழியில் பூசை சாமான்கள் என்று தமிழில் பெயர் பலகையோடு கடை கண்ணில் பட்டது. கும்பலாக இருந்ததால் அருகில் சென்று புகைப்படம் எடுக்க முடிவதில்லை.









Tuesday, January 11, 2022

தேடல்

தேடல்

கடந்த இரண்டு வியாழன்களாக ஸ்ரீராம் பொருள்களை மறந்து விட்டு தேடுவதைப் பற்றி எழுதியதை படித்த பொழுது தேடல் என்பது பற்றி என் சிந்தனை ஓடியது. 

வாழ்க்கை என்பதே தேடல்தான். சிறு வயதில் அறிவைத் தேடுகிறோம், பின்னர் வேலை, அதன் பிறகு அல்லது அதனிடையே துணையைத் தேடும் வாலிபம். எதையோ தேடுகிறோம், ஓடுகிறோம்  தேடியது கிடைத்து விட்டால் மகிழ்ச்சி இல்லாவிட்டால் துக்கம், ஏக்கம், பொறாமை போன்ற எதிர்மறை உணர்வுகள். 

சரி அப்படி தேடியது கிடைத்து விட்டால் மட்டும் நின்று விடுகிறோமா? அடுத்த கட்ட தேடல் துவங்குகிறது. அதுதானே வளர்ச்சி. தேடல் நின்று விட்டால் தேங்கல்.  புதுப்புது உணவுகள், உடைகள், மாறும் ஃபேஷன்கள், ரசனைகள் எல்லாமே தேடலின் விளைவுகள்தான். 

ரொம்ப பாடுபட்டு தேடியதை அடைந்த பிறகு மிஞ்சுவது இவ்வளவுதானா? இதற்குதானா இத்தனை கஷ்டப்பட்டோம் என்னும் லேசான ஏமாற்றம். மெட்டீரியல் உலகின் வெற்றியில் இந்த உணர்வு வராதவர்கள் வெகு குறைவு. அதனால்தான் அவர்களில் பலர் ஆன்மீகத்திற்கு திரும்புகிறார்கள்.

ஆன்மீகத் தேடல்கள்தான் புதுப்புது தத்துவங்கள், குருமார்கள். ஆனால் அதன் முடிவு என்னவோ கண்டவர் விண்டிலர்தான். 

ஓடி ஓடி ஓடி ஓடி உள் கலந்த ஜோதியை
நாடி நாடி நாடி நாடி நாட்களும் கடந்து போய்
தேடி தேடி தேடி தேடி மாண்டு போன மாந்தர்கள்
கோடி கோடி கோடி கோடி எண்ணிறந்த கோடியே.
என்பது சித்தர் வாக்கு. 

ரொம்ப சீரியஸாகி விட்டதோ? 
வாட்ஸாப்பில் வந்த ஒரு ஜோக்கோடு முடித்துக் கொள்ளலாம். 







Thursday, January 6, 2022

படமா? காசா?

 படமா? காசா?

அசோக் நகர் ஆஞ்சநேயர்

ஒவ்வொரு வருடமும் ஹனும ஜெயந்தி அன்று சென்னை அசோக் நகரில் இருக்கும் ஆஞ்சநேயர் கோவிலில் நடைபெறும் லட்சார்ச்சனைக்கு கோவிலுக்கு மிக அருகில் வசிக்கும் என் சகோதரி எங்கள் குடும்ப உறுப்பினர்கள் எல்லோருக்கும் அர்ச்சனை டிக்கெட் வாங்கி அவரவருக்கு தோதான நேரத்திற்கு டோக்கனும் வாங்கி வைத்து விடுவாள். நாங்கள் போய் அர்ச்சனை செய்து விட்டு வருவோம்.  கோவிலில் பிரசாதமாக லட்டு, பூக்கள் தவிர ஒரு ஆஞ்சநேயர் படமும் தருவார்கள். அப்படி என்னிடம் மூன்று படங்கள் சேர்ந்து விட்டன. 

2017 ஆம் வருடம் என்று நினைக்கிறேன். கோவிலுக்கு கிளம்பும் பொழுது, "ஏற்கனவே நம்மிடம் மூன்று படங்கள் இருக்கின்றன, இந்த வருடம் வேறு ஒரு படத்தை கொடுத்தால் என்ன செய்வது? எத்தனை படங்களை வைத்துக் கொள்ள முடியும்?" என்று நினைத்தேன்.

கோவிலில் வழங்கப்பட்ட படங்களில் ஒன்று

அந்த வருடம் எங்கள் சகோதரிகள் எல்லோருக்கும் காலை பத்து மணி ஸ்லாட் டில் புக் பண்ணியிருக்கார் என் அக்கா. அர்ச்சனை முடித்து அவள் வீட்டில் மோர் குழம்பு, பீன்ஸ் பருப்பு உசிலி, சீரக ரசம் என்று சாப்பிட்டு விட்டு கோவிலில் கொடுத்த பையை பிரித்து பார்த்தேன். ஆஞ்சநேயர் படம் இல்லை. 'இந்த வருடம் படத்திற்கு பதிலாக ஆஞ்சநேயர் உருவம் பொறித்த வெள்ளி காசு கொடுத்திருக்கிறார்கள் என்றாள் என் சகோதரி. ஒரு சிறிய ஜிப் லாக் பையில் இருந்த அந்த வெள்ளி காசை "நல்ல வேளை, படம் கொடுக்கவில்லை" என்ற நினைப்போடு மீண்டும் பைக்குகள் வைத்தேன்.

வீட்டிற்கு வந்ததும், ஸ்வாமி அலமாரியில் வைப்பதற்காக பையில் கை விட்டால் வெள்ளி காசு இல்லை. பையை கவிழ்த்து பொறுமையாக ஒவ்வொன்றாக பிரித்துப் பார்த்தேன். ம்ஹும்! என் கைப்பையிலும் தேடினேன். இல்லை. என் சகோதரிக்கு ஃபோன் பண்ணி அவள் வீட்டில் இருக்கிறதா? என்று கேட்டேன். அங்கும் இல்லை என்று கூறி விட்டாள். 

"படமாக வந்தால் என்ன செய்வது என்று யோசித்தாயே..? வெள்ளிக் காசு என்றால் மட்டும் வரவேற்பாயா? உன் வீட்டிற்கு நான் ஏன் வர வேண்டும்?" என்று ஆஞ்சநேயர் அந்தர்த்யானமாகி விட்டாரோ? 

அதற்குப் பிறகு ஊர் மாற்றம், குடும்பத்தில் சில இழப்புகள், கொரோனா போன்ற காரணங்களால் ஹனும ஜெயந்தி விழாவில் கலந்து கொள்ள முடியவில்லை. இந்த வருடம் கனடா வந்து விட்டேன். பார்க்கலாம் அடுத்த வருடமாவது ஹனும ஜெயந்தி பூஜையில் கலந்து கொள்ள அசோக் நகர் ஆஞ்சநேயர் அருள் வேண்டும். 🙏🙏


Tuesday, January 4, 2022

திருவெம்பாவை - 20

திருவெம்பாவை - 20


போற்றி அருளுக நின் ஆதியாம் பாதமலர்
போற்றி அருளுக நின் அந்தமாம் செந்தளிர்கள்
போற்றி எல்லா உயிர்க்கும் தோற்றமாம் பொற்பாதம்
போற்றி எல்லா உயிர்க்கும் போகமாம் பூங்கழல்கள்
போற்றி எல்லா உயிர்க்கும் ஈறாம்
இணையடிகள்
போற்றி மால் நான்முகனும் காணாத புண்டரீகம்
போற்றி யாம் உய்ய ஆட்கொண்டருளும் பொன்மலர்கள்
போற்றி யாம் மார்கழி நீராடேலோர் எம்பாவாய்.

பாவை நோன்பை முடிக்கும் பெண்கள் சிவபெருமானை போற்றி வணங்குவதாக அமைந்திருக்கிறது திருவெம்பாவையின் கடைசி பாடல்.

அனைத்திற்கும் மூலமான மலர்ப் பாதங்களை போற்றுகிறோம்.
அனைத்திற்கும் முடிவான செம்மை பொருந்திய தளிர் பாதங்களை போற்றுகிறோம்.
எல்லா உயிர்களின் எதிலிருந்து தோன்றுமோ அந்த பொற் பாதங்களை  போற்றுகிறோம்.
இவ்வுலகில் உள்ள உயிர்களும் அனுபவிக்கும் போகங்களாக விளங்கும் கழலணிந்த மலர் பாதங்களை போற்றுகிறோம். எல்லா உயிர்களின் முடிவாக விளங்கும் பாதங்களை போற்றுகிறோம்.
திருமாலும், நான்முகனான பிரம்மனும் காண முடியாத தாமரைப் பாதங்களை போற்றுகிறோம்.
நாங்கள் உய்யும் பொருட்டு எங்களை ஆட்கொண்டு அருளும் பொற்பாதங்களை வணங்கி மார்கழி நீராடுகிறோம். 

இத்துடன் திருவெம்பாவை முற்றுப்பெறுகிறது. திருச்சிற்றம்பலம்.

Monday, January 3, 2022

திருவெம்பாவை - 19

திருவெம்பாவை - 19

உங்கையிற் பிள்ளை உனக்கே அடைக்கலமென்று
அங்கு அப்பழஞ் சொற் புதுக்குமெம் அச்சத்தால்
எங்கள் பெருமான் உனக்கொன்று உரைப்போம் கேள்
எம் கொங்கை நின் அன்பரல்லாதோர் தோள் சேரற்க
எம் கை உனக்கல்லாது எப்பணியும் செய்யற்க
கங்குல் பகலெங்கண் மற்றொன்றும் காணற்க
இங்கு இப்பரிசே எமக்கு எம்கோன் நல்குதியேல்
எங்கெழிலன் ஞாயிறு எமக்கேலோர் எம்பாவாய்.

பாவை நோன்பை நிறைவு செய்யும் பெண்கள் சிவ பெருமானிடம் தங்கள் கோரிக்கையை வைக்கிறார்கள். பெண்களுக்கு திருமணம் செய்து கொடுக்கும் பொழுது, அவள் கையை பிடித்து மாப்பிள்ளையாக வரும் ஆண் மகனிடம், "இனி இந்தப் பெண் உன்னுடைமை" என்று ஒப்படைப்பது காலம் காலமாக இருந்து வரும் பழக்கம்.  அதை நினைத்தாலே எங்களுக்கு அச்சமாக இருக்கிறது. எங்கள் பெருமானே உன்னிடம் நாங்கள் ஒன்று சொல்ல விரும்புகிறோம், கேட்பாயாக. நாங்கள் ஒரு சிவ பக்தனுக்கு மனைவியாகி அவனால் தழுவப் படுவதையே விரும்புகிறோம். எங்கள் கரங்கள் சிவத்தொண்டிலேயே ஈடுபட வேண்டும். இரவும், பகலும் எம் கண்கள் உன்னையே தரிசிக்க வேண்டும். இந்த பரிசை மட்டும் எங்களுக்கு நீ தந்து விட்டால் சூரியன் எந்த திசையில் உதித்தாலும் எங்களுக்கு கவலை இல்லை. 

பாவை நோன்பு நோர்ப்பது நல்ல மண வாழ்க்கை அமைய வேண்டும் என்பதற்காகத்தான். அதற்காக  யாரோ ஒருவனை மணந்து கொள்வதில் இந்த பெண்களுக்கு விருப்பமில்லை என்பதை 'உன்கையிற் பிள்ளை உனக்கே அடைக்கலம் எனும் அங்கு அப்பழஞ்சொற் புதுக்கும் எம் அச்சத்தால்' என்னும் வரிகளும், இறைத்தொண்டு வாய்த்து விட்டால் வேறு எதுவும் பொருட்டில்லை என்பதை இறுதி வரிகளும் தெளிவு படுத்துகின்றன. திருவெம்பாவையின் மகுடமாக விளங்கும் பாடல் இது.


Sunday, January 2, 2022

திருவெம்பாவை - 18

திருவெம்பாவை - 18


அண்ணாமலையான் அடிக்கமலம் சென்றிறைஞ்சும்
விண்ணோர் முடியின் மணித்தொகை வீறற்றாற் போல்
கண்ணார் இரவி கதிர் வந்து கார் கரப்பத்
தண்ணார் ஒளி மழுங்கித் தாரகைகள் தாமகல
பெண்ணாகி ஆணாய் அலியாய் பிறங்கொளிசேர்
விண்ணாகி மண்ணாகி
இத்தனையும் வேறாகி
கண்ணா ரமுதமாய் நின்றான் கழல்பாடி
பெண்ணே இப்பூம்புனல் பாய்ந்தாடலோர் எம்பாவாய்.

ஒளி வடிவான அண்ணாமலையாரின் பாதத்தில் விழுந்து துதிக்கும் தேவர்களின் கிரீடத்தில் பதிக்கப் பட்டிருக்கும் நவரத்தினங்கள் தங்கள் பிரகாசத்தை இழப்பதை போல, கதிரவன் உதித்து இருளை விரட்டியதால் நட்சத்திரங்கள் தங்கள் ஒளியை இழந்து மறைந்து விட்டன. பெண், ஆண், மூன்றாம் பாலினத்தார், ஒளி பொருந்திய விண், மண் மற்றும் பல் வேறு பொருள்களானவரும், நம் கண்ணிற்கு இனிமையானவருமாகிய அண்ணாமலையாரின் பாதகமலங்களை துதிக்க இந்த பூக்கள் பூத்திருக்கும் பொய்கையில் நீராடலாம் பெண்ணே.

Saturday, January 1, 2022

திருவெம்பாவை - 17

திருவெம்பாவை - 17


செங்கண் அவன்பால் திசைமுகன்பால் தேவர்கள்பால்
எங்கும் இலாதோர் இன்பம் நம்பாலதாக்
கொங்கு உண் கருங்குழலி நந்தம்மை கோதாட்டி
இங்கு நம் இல்லங்கள் தோறும் எழுந்தருளிச்
செங்கமலப் பொற்பாதம் தந்தருளும் சேவகனை
அங்கண் அரசை அடியோங்கட்கு ஆரமுதை
நங்கள் பெருமானைப் பாடி நலம் திகழ்ந்
பங்கயப் பூம்புனல் பாய்ந்தாடேலோர் எம்பாவாய்.

அழகான கண்களை உடைய திருமால் மீதும்,  திசைக்கு ஒரு முகம் வைத்துக் கொண்டிருக்கும் பிரம்மா மீதும், தேவர்கள் மீதும் கொண்டிருக்கும் அன்பை விட அதிகமாக நம் மீது அன்பு வைத்திருப்பவரும், நம் குற்றங்களை களைந்து நம்மை உயர்த்தும் பொருட்டு நம் மனமாகிய வீட்டில் எழுந்தருளி சிவந்த தாமரை மலர்கள் போன்ற தன் பாதங்களை காட்டி நமக்கு சேவை செய்பவரும், அழகான கண்களை உடைய அரசனும், அடியவர்களுக்கு அமுதம் போன்றவரும் நம்முடைய பெருமானுமாகிய சிவபெருமானை பணிந்து நலம் பெறும் பொருட்டு தாமரை மலர்கள் பூத்திருக்கும் அழகிய இந்த சுனையில் நீராடலாம் வாருங்கள்.

Friday, December 31, 2021

திருவெம்பாவை - 16

திருவெம்பாவை - 16

முன்னிக்கடலை சுருக்கி எழுந்துடையாள்
என்னத் திகழ்ந்து எம்மை ஆளுடையாள்
மின்னிப் பொலிந்து எம்பிராட்டி திருவடிமேல்
பொன்னம் சிலம்பின் சிலம்பித் திருப்புருவம்
என்னச் சிலை குலவி நந்தம்மை
ஆளுடையாள்
தன்னில் பிரிவிலா எம்கோமான் அன்பர்க்கு
முன்னியவள் நமக்கு முன்சுரக்கும் இன்னருளே
என்னப் பொழியாய் மழையேலோர் எம்பாவாய்

முன்னொரு பாடலில் பாவைப் பெண்கள் நீராடும் பொய்கை அவர்களுக்கு சிவபெருமானையும், பிராட்டியையும் நினைவு படுத்தியது போல இந்தப் பாடலில் மழை வருவதற்கான சூழல் அவர்களுக்கு பிராட்டியை நினைவு படுத்துகிறது.

கருநீலக்கடலை சுருங்கியது போல திரண்டிருக்கும் கார் மேகங்கள் பிராட்டியையும், மழை வரும் முன் பளிச்சிடும் மின்னல் அவளுடைய மெல்லிய இடையையும், இடியோசை அம்பிகை காலில் அணிந்திருக்கும் பொற்சிலம்பு எழுப்பும் இசையையும்,  வானில் தோன்றும் வானவில் வளைந்திருக்கும் அவளது புருவத்தையும், நினைவூட்டுவதாக கூறும் அப்பெண்கள் மழையிடம் ஒரு வேண்டுகோள் வைக்கிறார்கள். பெண்கள் பாவை நோன்பு நோர்ப்பது நல்ல கணவனை அடைந்து தங்கள் வாழ்க்கை செழிக்க வேண்டும் என்பதற்காகவும், நாட்டில் நல்ல மழை பொழிந்து சமுதாயம் செழிப்பதற்காகவும்தான். எனவே அந்த மழை எப்படி பொழிய வேண்டும் என்றால் தன் கணவனை பிரியாத பார்வதி பக்தர்களுக்கு அருள வேண்டும் என்னும் பொழுது அவருக்கு முன்னால் ஓடி வந்து அருளுவது போல எங்களுக்கு தேவையான நேரத்தில் காத்து நிற்கத் தேவையில்லாமல் பொழிய வேண்டும்.

Thursday, December 30, 2021

திருவெம்பாவை - 15

திருவெம்பாவை - 15


ஓரொரு கால் எம்பெருமான் என்றென்றே
நம்பெருமான் சீரொருகால் வாய் ஓவாள்
சித்தம் களிகூர நீரொருகால் ஓவா
நெடுந்தாரை கண்பனிப்ப பாரொருகால் வந்து
அணையாள் விண்ணோரைத் தான் பணியாள்
பேரரையற்கு இங்ஙனே பித்தொருவர் ஆமாறும்
ஆரொருவர் இவ்வண்ணம் ஆட்கொள்ளும் வித்தகர் தாள்
வார் உருவப் பூண்முலையீர் வாயார நாம்பாடி
ஏர் உருவப்பூம்புனல் பாய்ந்தாடலோர் எம்பாவாய்.

இந்தப் பாடல் குளத்தில் நீராடும் பெண்கள் தங்கள் தோழி ஒருத்தியின் பக்தியைப் பற்றி பேசுவதாக அமைந்திருக்கிறது. சாதாரணமாகவே எந்த ஒரு துறையிலும் முன்னேற விரும்புகிறவர்கள் அந்த துறையில் சிறப்பாக  விளங்குகிறவர்களின் செயல்பாடுகளை முன்மாதிரியாக கொள்வதுதானே வழக்கம்.

அழகிய ஆபரணங்கள் பூண்டிருக்கும் கொங்கைகளை உடைய பெண்களே, அதோ அங்கே வரும் நம் தோழி சிவபெருமானின் நினைவிலேயே வாழ்பவள். ஒரு முறை சிவனே என்பாள். மீண்டும் மீண்டும் பல முறைகள் எம்பெருமான் எம்பெருமான் என்றே மன மகிழ்ச்சியோடு கண்களில் நீர் வழிய உணர்ச்சி வசப்பட்டு பிச்சியைப் போல பிதற்றுவாள். இவ்வுலகை மறந்து பூமியில் கால் பாவாமல் பேரின்பப் பெருவெளியில் மிதப்பாள். அந்தப் பெண்ணை ஆட்கொண்டு இப்படிப்பட்ட நிலைக்கு ஆளாக்கிய வித்தகனாகிய சிவபெருமானின் திருவடிகளை நாமும் பாடி அழகான இந்தப் பொய்கையில் நீராடலாம் வாருங்கள்.

Tuesday, December 28, 2021

திருவெம்பாவை - 14

திருவெம்பாவை - 14

காதார் குழையாடப் பைம்பூண் கலனாடக்
கோதை குழலாட வண்டின் குழாம் ஆட
சீதப்புனலாடிச் சிற்றம்பலம் பாடி
வேதப் பொருள்பாடி அப்பொருளா மாபாடி
சோதி திறம்பாடி சூழ்கொன்றைத் தார்பாடி
ஆதி திறம்பாடி அந்தமா மாபாடி
பேதித்து நம்மை வளர்ந்தெடுத்த பெய்வளை தன்
பாதத் திறம்பாடி ஆடேலோர் எம்பாவாய்.

மற்றுமொரு அழகான பாடல். பாவை நோன்பு நோர்க்கும் பெண்களைப் பற்றிய வர்ணனை. அந்தப் பெண்கள் பொய்கையில் குடைந்து நீராடும் பொழுது அவர்கள் காதில் அணிந்திருக்கும் குழைகள் ஆடுகின்றன, உடலில் அணிந்திருக்கும் அணிகலன்கள் ஆடுகின்றன, கூந்தல் அசைகிறது, அதில் அவர்கள் சூடியிருக்கும் மலர்கள் அமைகின்றன, அந்த மலர்களை மொய்க்கும் வண்டுகளும் சுற்றிச் சுற்றி ஆடுகின்றன. இப்படி நீராடும் நாங்கள் வேதத்தின் பொருளாக விளங்கும் சிவபெருமானை துதித்து, உருவமற்ற சோதியாக உயர்ந்த அவர் நமக்காக ஒரு உருவத்தை எடுத்துக் கொண்டு கொன்றை மாலை அணிந்து காட்சியளிக்கிறாரே அவரின் திறத்தையும், நன்மை, தீமைகளை பிரித்து காட்டி நம்மை உயரச்செய்யும் உமையாளின் பாதகமலங்களையும் பாடி நீராடுகிறோம்.

திருவெம்பாவை - 13

திருவெம்பாவை - 13



பைங்குவளைக் கார் மலரால் செங்கமலப் பைம்போதால்
அங்கங் குருகினத்தாற் பின்னும் அரவத்தால்
தங்கள் மலங்கழுவு வார்வந்து சார்தலினால்
எங்கள் பிராட்டியும் எங்கோனும் போன்றிசைந்த
பொங்கு மடுவிற் புகப்பாய்ந்து பாய்ந்து
நம் சங்கஞ் சிலம்பச் சிலம்பு
கலர்ந்தார்ப்பக்
கொங்கைகள் பொங்கக் குடையும் புனல் பொங்கப்
பங்கயப் பூம்புனல் பாய்ந்தாடு ஏலோர் எம்பாவாய்.

பாவை நோன்பு மேற்கொள்ளேம் பெண்களுக்கு அவர்கள் நீராடும் குளத்தின் காட்சி சிவ பெருமானையும், பார்வதி தேவியையும் நினைவு படுத்துகிறது. 

அந்தக் குளத்தில் பூத்திருக்கும் கரு நிறம் கொண்ட குவளை மலர்கள் பார்வதி தேவியையும், சிவப்பு நிற தாமரை மலர்கள் சிவபெருமானையும், நீர் அருந்த வந்து வரிசையாக அமர்ந்திருக்கும் வெண்மை நிற குருகுப் பறவைகள் சிவ பெருமான் அணிந்திருக்கும் மாலையையும், குளத்தில் அங்கும் இங்கும் ஓடும் நீர்ப் பாம்புகள் சிவ பெருமான் அணிந்திருக்கும் நாகாபரணங்களையும், அந்த குளத்தில் நீராடி தங்கள் உடல் அழுக்குகளை கழுவிக் கொள்கிறவர்கள், சிவ நாமத்தை ஜபித்து தங்கள் ஆன்மாவை தூய்மை படுத்திக் கொள்ளும் அடியார்களையும் ஒத்திருப்பதாக தோன்றுகிறது. அப்படிப்பட்ட பொய்கையில் நம் கைகளில் அணிந்திருக்கும் சங்கு வளையல்கள் ஒலி எழுப்பவும் அதோடு சேர்ந்து பாதச் சலங்கைகள் ஒலிக்கும் வண்ணம் தாமரைகள் பூத்திருக்கும் குளத்தில் பாய்ந்து அதனால் அந்தப் பொய்கை அசைய, நம் கொள்கைகளும் அசைய நீராடுகிறோம்.

நம்மை அந்த குளக்கரைக்கு அழைத்துச் செல்லும் வண்ணம் மிக அழகான வர்ணனை. பொய்கையை‌ பார்க்கும் பொழுது சில பெருமானின் நினைவு வருகிறது என்பது பக்தியின் சிறப்பு. கோபிகைகளுக்கு பார்க்கும் அத்தனை பேரும் கண்ணனாக தெரிந்தார்கள் என்று பாகவதத்தில் படித்திருக்கிறோம். "மண்ணை இருந்து துழாவி வாமனன் மண் இது என்று சொல்லும், விண்ணைத் தொழுது அவன் மேவும் வைகுண்டம் என்று கை காட்டும்..." என்று ஆழ்வார் பாடவில்லையா? "பார்க்கும் மரங்கள் எல்லாம் நந்தலாலா நின்றன் பச்சை நிறம் தோன்றுதய்யே நந்தலாலா என்பது மஹாகவியின் வாக்கு.

Monday, December 27, 2021

திருவெம்பாவை -12

 திருவெம்பாவை -1




ஆர்த்த பிறவித்துயர் கெட நாம் ஆர்த்தாடும்

தீர்த்தன் நல் தில்லைச் சிற்றம்பலத்தே தீயாடும்
கூத்தன் இவ் வானும் குவலயமும் எல்லோமும்
காத்தும் படைத்தும் கரந்தும் விளையாடி
வார்த்தையும் பேசி வளைசிலம்ப வார் கலைகள்
ஆர்ப்ப அரவம் செய்ய அணிகுழல்மேல் வண்டார்ப்ப
பூத்திகழும் பொய்கை குடைந்துடையான் பொற்பாதம்
எத்தி இருஞ்சுனை நீராடேலோர் எம்பாவாய்

எங்கள் பிறவித் துன்பம் நீங்குவதற்காக நாங்கள் வணங்கும் சிவபெருமான் தலையில் கங்கையை கொண்டவராக கையிலே நெருப்பை ஏந்தி அந்தத் தில்லையிலே நடனமாடுகிறார். அவர் இந்த வான், மண் அதற்கு இடையில் உள்ள பொருள்கள் எல்லாவற்றையும் விளையாடுவது போல மிகவும் அனாயசமாக படைத்து, காத்து, அழிக்கவும் செய்கிறார். அவரை நாங்கள் புகழ்ந்து பேசியபடி எங்கள் கை வளையல்கள் ஒலிக்க இடையில் அணிந்திருக்கும் மேகலை சிணுங்க, தலையில் சூடி இருக்கும் வாசமுள்ள மலர்களை மொய்க்கும் வண்டுகள் ஒலி எழுப்ப இந்தப் பொய்கையில் நீராடி வணங்குகிறோம்.

Sunday, December 26, 2021

திருவெம்பாவை - 11

திருவெம்பாவை - 11


மொய்யார் தடம் பொய்கை புக்கு முகேர் என்னக்
கையால் குடைந்து குடைந்து உன் கழல்பாடி
ஐயா வழியடியோம் வாழ்ந்தோம் காண்
ஆரழல் போல் செய்யா!
வெண்ணீறு ஆடி! செல்வா!
சிறு மருங்குல் மையார் தடங்கண் மடந்தை மணவாளா!
ஐயா! நீ ஆட்கொண்டருளும் விளையாட்டில்
உய்வார்கள் உய்யும் வகையெல்லாம் உய்ந்தொழிந்தோம்
எய்யாமல் காப்பாய் எமையேலோர் எம்பாவாய்.

கொழுந்து விட்டு எரியும் நெருப்பு போல சிவந்த நிறம் கொண்டவரே, திருநீற்றிலேயே குளித்தது போல உடலெங்கும் வெண்ணீறு பூசிக் கொண்டிருப்பவரே, சிறுத்த இடையும், பெரிய கண்களும் கொண்ட பார்வதியின் மணாளனே,  வண்டுகள் மொய்க்கும் பொய்கையில் நீராடி, வழி வழியாக உன்னை வழிபடுவதால் நாங்கள் நலமாக வாழ்கிறோம். பக்தர்களை ஆட்கொண்டு அருளும் உன் திருவிளையியாடலுக்கு ஆட்பட்டதால் பல நன்மைகளை அடைந்தோம். இதிலிருந்து குறையாமல் எங்களை காப்பாயாக. 

Saturday, December 25, 2021

திருவெம்பாவை -10

 திருவெம்பாவை -10


பாதாளம் ஏழினும் கீழ் சொற்கழிவு பாதமலர்
போதார் புனைமுடியும் எல்லாப் பொருள்முடிவே
பேதை ஒருபால் திருமேனி ஒன்றல்லன்
வேதமுதல் விண்ணோரும் மண்ணும் துதித்தாலும்
ஓதஉலவா ஒரு தோழன் தொண்டர் உளன்
கோதில் குலத்தரன் தன் கோயிற்பிணாப் பிள்ளைகாள் 
ஏதவனூர் ஏதவன்பேர் ஆருற்றார் ஆரயலார்
ஏதவனைப் பாடும் பரிசேலோர் எம்பாவாய்.


சிவ பெருமானின் கோவிலை நாடி வந்திருக்கும் பெண் பிள்ளைகளே, சிவனின் பெருமையை எப்படி கூறுவது? அவருடைய திருவடியோ அதள, விதள, சுதள, தளாதள, ரசாதளா, மஹாதள, பாதாள என்னும் ஏழு உலகங்களுக்கும் கீழே உள்ளது, திருமுடியோ எல்லா உலகங்களையும் தாண்டி உள்ளது. அதை விவரிக்க நம்மிடம் சொற்கள் இல்லை. பெண்ணை தன் இட பாகத்தில் கொண்ட அவரை விண்ணுலக தேவர்களும், மண்ணுலக மாந்தர்களும் பல விதமாக பாடினாலும் முழுமையாக விளக்க முடியாதவர். வேதங்களின் முதல் பொருள். இப்படியெல்லாம் இருந்தாலும் தொண்டர்களின் உள்ளத்தில் இருப்பவன். அவர்களுக்கு ஒரு தோழன். தனக்கென்று ஒரு ஊரோ, பெயரோ இல்லாதவன்(எண்ணற்ற பெயர்களை உடையவன், எல்லா இடங்களிலும் உறைபவன் என்பது மறைந்திருக்கும் பொருள்). அவனுக்கு வேண்டியவர்கள், வேண்டாதவர்கள் என்றும் கிடையாது.