கணம்தோறும் பிறக்கிறேன் 

Wednesday, May 13, 2020

என்ன என்ன பாவங்களோ..?

என்ன என்ன பாவங்களோ..?


கம்பராமாயணத்தில், ராமனை காட்டிற்கு அனுப்பி விட்டு தான் பட்டத்தை ஏற்றுக் கொண்டால் தான் எப்படிப்பட்ட பாவியாவேன் என்று கௌசல்யாவிடம் கூறும் பரதன் என்னென்ன பாவங்கள் இருக்கின்றன என்று ஒரு லிஸ்ட் கொடுக்கிறான்.

Friday, May 8, 2020

திக் திக் நேரம் (ஒரு கதையும் ஒரு நிஜமும்)

திக் திக் நேரம் 
(ஒரு கதையும் ஒரு நிஜமும்)

கதை: 

முரளி அலுவலகத்திலிருந்து கிளம்பி, அம்மா சொல்லியிருக்கும் சாமான்களை வாங்கிக் கொண்டு ஊருக்கு கிளம்பும் பொழுது மணி ஏழாகி விட்டது.  அவன் அலுவலக பியூன் அவனோடு பஸ் ஸ்டாண்ட் வரை வந்து பஸ்ஸில் ஏற்றி விட்டான். 

"இருட்டடிச்சே சார், கையில் பூவெல்லாம் எடுத்துக்கிட்டு போறீங்க.."

"ஊருல குல தெய்வம் கோவிலில் நாளைக்கு பூஜை. அதுக்குத்தான் பூ".

"கொஞ்சம் முன்னாள் கிளம்பியிருக்கலாமே சார். இருட்டின பிறகு மல்லிகைப் பூவெல்லாம் எடுத்துக்கிட்டு போகக் கூடாது"

"ஏன்?"

அது வந்து.. மோகினி.. சென்று தொடங்கியவன், "அதெல்லாம் சும்மா சார். நீங்க தகிரியமா  போங்க..  வீடு ரோடு மேல தான இருக்கு? 

"இல்ல ரோட்டிலிருந்து உள்ள ஒரு முக்கா மைல் நடக்கணும்." என்று முரளி கூறியதும்,"அப்படியா? என்றவன் கொஞ்சம் சுரத்து குறைந்து
கந்த சஷ்டி கவசம் தெரியும்ல? சொல்லிகிட்டே போய்டுங்க..  ஒண்ணும் பயமில்ல.." என்று பய விதையை மனசுக்குள் விதைத்தான்.

முரளியின் சொந்த ஊருக்கு திருச்சியிலிருந்து இரண்டு பஸ்கள்  மாறிச் செல்ல வேண்டும். கடைசி பஸ் இரவு எட்டு மணிக்கு. அவர்கள் ஊரின் மெயின் ரோடில் இறங்கி அங்கிருந்து முக்கால் மைல் நடக்க வேண்டும். இரண்டு புறமும் வயல்கள் இருக்க, ஒத்தையடி பாதை. ஊரின் ஆரம்பத்தில் ஒன்றும், நடுவில் ஒன்றுமாக இரண்டே விளக்குகள்தான். அதைப் பற்றியெல்லாம் எந்தக் கவலையும் இல்லாமல்தான் இருந்தான். ஆனால் அவனை ரோட்டில் இறக்கி விட்டு விட்டு பேருந்து நகர்ந்ததும்  பொட்டென்று தெரு விளக்குகள் அணைந்து  சாலை  கும்மிருட்டாகியது.  

"எங்க போறீங்க?' என்று ஒரு குரல் வந்ததும் கொஞ்சம்  திடுக்கிட்டான். இருட்டுக்கு கண்களை பழக்கிக் கொண்டு  பார்த்தபொழுது அந்தக் குரலுக்குரியவர் பக்கத்திலிருந்கும் குடிசை வாசலில் நின்றிருப்பது தெரிந்தது.

"பட்டாமணியர் வீட்டுக்கு".

"பார்த்து போங்க, இன்னிக்கு காலையிலிருந்து கரெண்டு போயிட்டு போயிட்டு வருது."

முரளி நடக்க ஆரம்பித்தான். செல் ஃபோனில் டார்ச் லைட்டை  போட்டுக் கொண்டான். கொஞ்ச தூரம் போனதும் டார்ச் ஒளியிழந்து நின்றது. வேலை பளுவில் சார்ஜ் செய்ய மறந்தது நினைவில் வந்தது. வேரு வழியில்லை. இருட்டில்தான் நடக்க வேண்டும். 

சுற்றிலும் கண்ணை ஓட்டிய பொழுது சற்று தொலைவில்  குபீரென்று ஏதோ பற்றி எரிந்தது. கொள்ளிவாய் பிசாசு..? சீ ! அப்படியெல்லாம் ஒன்று கிடையவே கிடையாது. அது மீத்தேன் வாயு. 

கால்கள் சற்று எட்டிப் போட, வாய் கந்த சஷ்டி கவசத்தை முணுமுணுக்க ஆரம்பித்தது. தன்னை யாரோ தொடர்கிறார்கள் என்பது போல் உணர்ந்தான். 

பிரமை இல்லை, நிஜம்தான். தனக்குப் பின்னால் சரக் சரக்கென்று காலடி ஓசை சீராக கேட்பதை உணர்ந்தான்.  அவன் வேகமாக நடக்கத் துவங்க அந்த காலடியும் வேகமாக தொடர்ந்து வந்தது. 

பாதி தூரம் கடந்து விட்டோம், இன்னும் பாதிதான், வேறு வழியில்லை, ஓட ஆரம்பித்தான். அவனைத்துரத்தி வந்த அதுவும் ஓடி வந்தது. 

மூச்சைப் பிடித்துக் கொண்டு ஓடினான். அப்பாடா! இதோ ஊரு துவக்கத்தில் இருக்கும் சந்திக்கரை பிள்ளையார் கோவில் கண்ணில் படுகிறது.  வேகத்தை மட்டுப்படுத்தினான். 

கோவிலை நெருங்கி கன்னத்தில் போட்டுக்கொண்டு கும்பிட்ட பொழுது, 

"வா முரளி, ஏன் இவ்வளவு நேரமாயிடிச்சு? " மாமா தோளைத் தொட்டார். 

"என்ன இது? உடம்பெல்லாம் இப்படி வேர்துருக்கு?"
 
"நடந்து வந்ததால இருக்கும்." பேசிக் கொண்டே வந்த வழியை உற்றுப் பார்த்தான். எதுவும் தென்படவில்லை. 

வீட்டிற்குப் போய் குளித்து, சாப்பிட்டு, படுக்கும் பொழுது கூட பயம் முழுமையாக விலகவில்லை. நடந்த அசதி, ஜில்லென்று காற்று எல்லாமுமாக சேர்ந்து ஆழ்ந்த தூக்கம் வந்தது. காலையில் தாத்தா யாரிடமோ சத்தம் போட்டுக் கொண்டிருப்பது கேட்டு கண் விழித்தான். பல் துலக்க கொல்லைப்புறம் சென்ற பொழுது, அங்கு மாட்டுக் கொட்டிலில் ரெங்கனும், அனுசுயாவும் பேசிக்கொண்டிருப்பது காதில் விழுந்தது.  

"நேத்து ராத்திரி சினிமாவுக்கு போயிட்டு எத்தனை மணிக்கு வந்த?"
அதையேன்  கேக்குற? ஒன்பது மணிக்கு ரோட்டுல வந்து எறங்கினா கும்மிருட்டு. மெதுவா நடந்தேன். முன்னால யாரோ போய்கிட்டிருந்தாங்க, சரி தொணையாச்சுன்னு நானும்  பின்னலேயே வந்தேன், அவன் என்ன நினைச்சானோ..திடீர்னு ஓட ஆரம்பிச்சுட்டான்.."

"அப்புறம்?"

அப்புறம் என்ன? நானும் அவன் பின்னாலேயே ஓடியாந்துட்டேன்.."

ரங்கன் சொன்னதைக் கேட்டு அனுசுயா கலகலவென்று சிரிக்க, முரளி எதுவும் காதில் விழாதது போல் உள்ளே வந்தான்.  
*********************************************************************************
நிஜம்:

அப்போது எங்கள் அக்கா செயின்ட் மேரீஸ் சாலையில் வசித்து வந்தார். அவர் வீட்டுக்கு எதிரே ஒரு இடுகாடு உண்டு. பல திரைப்படங்களில் வந்திருக்கிறது அந்த இடுகாடு. 

என் சகோதரியின் கணவர் வேலை பார்த்த தொழிற்சாலையில் வேலை நேரம் காலை, மதியம், இரவு என்று ஷிஃப்ட் மாறி  மாறி வரும். அவர் இரவு நேர ஷிஃப்ட் பார்க்கச் சென்றிருந்த ஒரு நாள் நாங்கள் இரவு உணவை முடித்து விட்டு பேசிக் கொண்டிருந்தோம். அப்போது 'ஜல் ஜல்'  என்று சலங்கை ஒலி கேட்டது. முதலில் சற்று அசிரத்தையாக இருந்த நாங்கள் அந்த ஒலி வீட்டைச் சுற்றி வருவது போல் கேட்டதும் கொஞ்சம் பயந்தோம். தினமும் இரவு 9:30க்கு மேல் கேட்கத் தொடங்கும் அந்த சலங்கை சத்தம் பத்து அல்லது பத்தே காலுக்கு அடங்கி விடும். 

ஒரு தனி வீட்டின் போர்ஷனான அதில் குழாய், பாத்ரூம், டாய்லெட் எல்லாம் வெளியேதான் இருந்தன. ஒரு நாள் இரவு சாப்பாடு,மற்றும் வேலைகளை முடித்து கதவை சாத்தியாகி விட்டது. திடீரென்று பாத்ரூமில் விளக்கெரிந்து குழாயில் தண்ணீர் கொட்டும் சத்தம் கேட்டதும், நானும் என் அக்காவும் மிகவும் பயந்து விட்டோம். பாத்ரூமில் யாரு? என்ற எங்கள் கேள்விக்கு பதில் இல்லை. சற்று நேரம் கழித்து வாசல் அழைப்பு மணியை யாரோ அழுத்தினார்கள். தயக்கத்தோடும், பயத்தோடும் மெள்ள கதவைத் திறந்து பார்த்தால் வெளியே எங்கள் சகோதரர்! வரும் வழியில் எதையோ மிதித்து விட்டதாகவும், அதனால் நேராக பாத்ரூமுக்குப் போய் காலை கழுவிக் கொண்டு வந்ததாகவும் சொன்னார். எங்களை பயமுறுத்தவே வேண்டுமென்றே எங்கள் கேள்விக்கு பதில் அளிக்கவில்லையென்றும் சொன்னார்.   

அதோடு தினசரி ஜல் ஜல் என்று சப்தம் வருகிறதே அது என்ன தெரியுமா? என்று கேட்டார். அவரே சொல்லட்டும் என்று நாங்கள் பேசாமல் இருந்தோம். 

"ஒரு ரிக்ஷாகாரன் தன்னுடைய வண்டியின் முன் சக்கரத்தில் சலங்கையை கட்டி வைத்திருக்கிறான். அவன் சவாரிக்காக இந்த தெருவை சுற்றி சுற்றி வரும்பொழுது எழுப்பப்படும் ஒலிதான்  நம்மை இத்தனை நாட்களாக பயமுறுத்தியிருக்கிறது".என்று கூறியதும் "சே! இவ்வளவுதானா?" என்று நினைத்துக் கொண்டோம். பயம் விலகி விட்டதாலோ என்னவோ எங்களுக்கு அதன் பிறகு அந்த சலங்கை சத்தம் காதில் விழவில்லை.  


Monday, May 4, 2020

மசாலா சாட்

மசாலா சாட் - 17 

லாக் அவுட் தொடங்கிய முதல் வாரம்:

காசுக்கு கேடா ஒரு வேலைக்காரியை வைத்துக் கொண்டிருக்கிறோம். என்னவோ வீட்டைப் பெருக்கி,  மெழுகினேன் என்று பேர் பண்ணிவிட்டு செல்கிறாள். இப்போது நாமே செய்து கொள்ளும் பொழுது, வீடு பளிச்சென்று இருக்கிறது. பாத்திரங்கள் மின்னுகின்றன.

லாக் அவுட் தொடங்கிய இரண்டாம் வாரம்:

நேற்றுதான் வீட்டை மெழுகினோம். நாளை மெழுகிக் கொள்ளலாம். 

லாக் அவுட் தொடங்கிய மூன்றாவது வாரம்:

ஐயோ! சிங்கில் இவ்வளவு பாத்திரம் கிடக்கிறதே? வீட்டை செவ்வாய், வெள்ளி மெழுகினால் போதும். 

தற்சமயம்:

முடியல, தோள் வலிக்கிறது. லாக் அவுட் எப்போது முடியும்? பார்ஷியல் லிஃட்ல வேலைக்காரர்களை அனுமதிக்கலாம். அதுவும் எசென்ஷியல் சர்வீஸ்தானே? 

லாக் அவுட் பீரியட்டில் பலரும் அவர்கள் பார்த்த திரைப்படங்களை பற்றி பகிர்ந்து கொள்கிறார்கள்.  நான் யூ டியூபை சரணைடைந்தேன். குறும்படங்கள், உபன்யாசங்கள், பிரபலங்களின் பேட்டிகள் என்று பார்க்கிறேன்.

யூ ட்யூபில் பல பழைய தமிழ்ப் படங்கள் காணக்  கிடைக்கின்றன. தனிகுடித்னம் சினிமா கொஞ்சம் பார்த்தேன். நாடகத்தை ரசிக்க முடிந்தது போல் திரைப்படத்தை ரசிக்க முடியவில்லை. காமு என்னும் முக்கிய பாத்திரத்தை ஏற்று நடித்த கே.ஆர். விஜயா மடிசார் கட்டிக்கொண்டு காபியை தூக்கி குடிக்காமல் எச்சில் பண்ணி குடிக்கும் காட்சியை பார்த்த பிறகு தொடர்ந்து பார்க்க பிடிக்காமல் நிறுத்தி விட்டேன்.

சி.வி. ராஜேந்திரன் இயக்கத்தில் சித்ராலயா கோபு கதை வசனத்தில் லட்சுமி,ஜெய்சங்கர், முத்துராமன், வெண்ணிற ஆடை நிர்மலா, நாகேஷ்,
வி.கே. ராமசாமி முதலியவர்கள் நடித்திருந்த 'வீட்டுக்கு வீடு' படம் பார்த்தேன்.
பாடல்களை ஓட்டி விட்டால் படம் ரசிக்கும்படி இருந்தது. எனக்குத் தெரிந்து ஜெய்சங்கர் நடித்திருந்த படங்கள் இரண்டுதான். ஒன்று வீட்டுக்கு வீடு, மற்றது  தளபதி.

இந்தக் கதையை அப்படியே ராம்கி,விவேக் போன்றவர்கள் நடித்து ஒரு படம் வந்தது. ஏன் கமலஹாசனின் 'காதலா காதலா' கூட இதே கதைதான்.

தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சீரியல்களும் காணக் கிடைக்கின்றன. அவற்றுள் கே. பாலச்சந்தரின் 'ஜன்னல்' சீரியல்கள் எனக்கு மிகவும் பிடித்தன. அதிலும்  லட்சுமியும், எஸ்.பி.பி.யும் நடித்திருந்த 'அடுத்த வீட்டு கவிதை' என்னும் சீரியல் மிகவும் பிடித்தது. எஸ்.பி.பி. சற்று மிகை நடிப்பை கொடுத்திருந்தாலும், லட்சுமியின் நடிப்பு பிரமாதம்! கிட்டத்தட்ட இருபது வருடங்களுக்கு முன்பே லிவிங் ரிலேஷன்ஷிப் பற்றி எந்த வித ஆபாசமும் இல்லாமல் கன்வின்சாக எடுத்திருக்கும் பாலச்சந்தர் ஜித்தன்தான். சேத்தன் பகத் எழுதியிருந்த 'ஒன் இந்தியன் கேர்ள்' நாவலை படித்த பொழுதும் எனக்கு இப்படித்தான் தோன்றியது. ஒரு பெண், மூன்று ஆண்கள் என்னும் கருவை எழுபதுகளிலேயே படமாக எடுத்திருக்கிறாரே பாலச்சந்தர் என்று வியந்தேன்.

சரி இப்போது ஒரு பழைய பாடல்.




Saturday, May 2, 2020

சொல்லாமல் விட்டவை ....

சொல்லாமல் விட்டவை ....


பெங்களூரை பெண்களூர் என்று குறிப்பிடுவதைக்க குறித்து கீதா அக்கா எழுதியிருந்தார்.

Wednesday, April 29, 2020

கொரோனா பயங்கள் தேவையா?

கொரோனா பயங்கள் தேவையா?


நான் பிறந்ததும் இதே போல் ஒரு சார்வரி வருடத்தில்தான். அந்த வருடத்திலும் இப்படி ஏதாவது பாதிப்பு இருந்ததா? என்று என் பெரிய அக்காவிடம் கேட்டேன்.

Monday, April 27, 2020

ஜே.கிருஷ்ணமூர்த்திக்கு ஜே!


ஜே.கிருஷ்ணமூர்த்திக்கு ஜே!



SECURITY IS A PRISON என்பது ஜே.கிருஷ்ணமூர்த்தி கூறியது. இதை வைத்து பாலகுமாரன் கூட தனது இரும்பு குதிரைகள் நாவலில் 'விஸ்வநாதனுக்கு பின்னால் ஒரு வலுவான குடும்பம் இருந்தது, அவனை முன்னேற விடாமல் தடுத்தது' என்று எழுதியிருப்பார். சமீபத்தில் நான் பார்த்த பல தமிழ் வெப் சீரிஸ்கள் என்னை ஜே.கிருஷ்ணமூர்த்திக்கு ஜே போட வைக்கின்றன.

இந்த வெப் சீரிஸ்கள் பலவும் திறமையுள்ள இளைஞர்களால் எடுக்கப்படுகின்றன.  ஆனால் இந்த திறமையை வைத்து அவர்கள் என்ன சொல்கிறார்கள் என்பதுதான் மிகவும் ஏமாற்றமளிக்கிறது.

Friday, April 17, 2020

விடுமுறை விளையாட்டுகள்

 விடுமுறை விளையாட்டுகள் 


இப்போது லாக் அவுட் பீரியட். எல்லோரும் வீட்டில் இருக்க வேண்டிய நிர்பந்தம். இந்த வருட கோடை  விடுமுறையை  வீட்டிற்குள்ளேயே கழிக்க வேண்டிய நிர்பந்தம் குழந்தைகளுக்கு. இல்லாவிட்டால் அவர்களை ஏதாவதொரு சம்மர் வகுப்பில்  சேர்த்து விட்டிருப்பார்கள். 

Saturday, April 4, 2020

வரமா? சாபமா?

வரமா? சாபமா 

வரங்களே சாபங்களானால் 
தவங்கள் இங்கே 
யாருக்காக? 
என்று அப்துல் ரஹ்மானின் புதுக்கவிதை ஒன்று உண்டு.

Saturday, March 28, 2020

நம்புவதே வழி

நம்புவதே வழி   

21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு. அத்தியாவசிய பொருள்கள் கிடைக்கும் என்கிறார்கள். ஆனாலும் மக்கள் மனதில் ஒரு பீதி. இதையெல்லாம் பார்க்கும் பொழுது இப்படி பீதியூட்டிய வேறு சில தருணங்கள் நினைவுக்கு வந்தன.

Thursday, March 19, 2020

நிழலும், நிஜமும்


நிழலும், நிஜமும்

பொது இடங்களைப் பற்றி நமக்கு கிடைக்கும் பல பிம்பங்களை சினிமாக்கள்தான் உருவாக்குகின்றன. ஆனால் நிழலுக்கும் நிஜத்திற்கும் நிறைய வித்தியாசங்கள். உங்களில் யாராவது போலீஸ் ஸ்டேஷனுக்குச் சென்றிருக்கறீர்களா? எனக்கு அந்த சான்ஸ் கிடைத்தது. 

Wednesday, March 4, 2020

மசாலா சாட் - 16 சில நிகழ்வுகள், சில செய்திகள்

மசாலா சாட்  -  16  
சில நிகழ்வுகள், சில செய்திகள்

என்னுடைய சென்ற சென்னை விஜயத்தில் சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் கல்யாண மாலை நிகழ்சிக்கான பேச்சரங்கம் ஒன்றில் கலந்து கொண்டேன்.

சென்னையில் நடை பெற்ற ஆன்மீக பொருட்காட்சியில்தான் அது நிகழ்ந்தது. நிகழ்ச்சி ஐந்து மணிக்கு துவங்கும் என்று குறிப்பிடப்பட்டிருந்தாலும், நாங்கள் நாலு முப்பதுக்கே அரங்கத்திற்கு சென்று விட்டோம்.  அப்போதுதான் மேடையை தயார் செய்து கொண்டிருந்தார்கள்.

Monday, February 17, 2020

ஒன்றைப் படித்தேன், ஒன்றை ரசித்தேன்.

ஒன்றைப் படித்தேன், ஒன்றை ரசித்தேன்.



அதெல்லாம் ஒரு காலம், தீபாவளி என்றால் புத்தாடை, பட்டாசு, பட்சணங்கள், இதோடு தீபாவளி மலர்களும் இடம் பிடித்த காலம். தீபாவளி மலர்கள் விலை அதிகம் என்பதால் வீட்டில் வாங்க மாட்டார்கள். யார் வாங்குகிறார்களோ அவர்கள் வீடுகளில் அதைப் பார்க்கும் பொழுதே கை துறுதுறுக்கும். அவர்களோ அதை தொட விட மாட்டார்கள். அவர்கள் கவனிக்காத பொழுது, நைசாக புரட்டி விட்டு கீழே வைத்து விட வேண்டும். அவர்கள் வீட்டில் எல்லோரும் படித்த பிறகுதான் படிக்க கொடுப்பார்கள். சில சமயங்களில் ஒரு மாதம் கூட ஆகி விடும்.

Monday, February 10, 2020

ஹிந்து ஆன்மீக மற்றும் சேவை கண்காட்சி - 2020

ஹிந்து ஆன்மீக மற்றும் சேவை கண்காட்சி - 2020
தொடர்ச்சி  


ஹிந்து ஆன்மீக கண்காட்சியில் அமைக்கப் பட்டிருந்த சில ஸ்டால்கள். 
கீழே காணப்படுவது ஃபைபரினால் செய்யப்பட்டிருந்த பொம்மைகள். 




வாயிலில் வைக்கப்பட்டிருந்த சமயபுரம் மாரியம்மன்.


மேலும் சில ஃபாய்பர்  பொம்மைகள்.


அயோத்தியில் அமையப்போகும் ஸ்ரீராமர் கோயிலின் மாடல்.



கீழே காணப்படுவது விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த துணியினால் செய்யப்பட்ட பொம்மைகள். 


மாதா அமிர்தானந்தமயி மடங்களில் காணப்படும் பிரும்மஸ்தானங்களின் மாடல். 









வேலூரைசேர்ந்த ஜெய்சங்கர் என்னும் இவர் ஒரு பாசிட்டிவ் மனிதர்.  அனாதை பிணங்களை அடக்கம் செய்வதை ஒரு சேவையாக செய்து வருகிறாராம். பழைய பேப்பர் வியாபாரியாக இருந்த இவருக்கு தினமும் நிறைய அழைப்புகள் வருவதால் பார்த்துக் கொண்டிருந்த வேலையையும் விட்டு விட்டாராம். திருமணமும் செய்து கொள்ளவில்லை. எல்லோரிடமும் உதவிகள் பெற்று அனாதை பிணங்களை அடக்கம் செய்வதாக கூறினார். 



கை குழந்தைகளோடு வரும் தாய்மார்களுக்காக அமைக்கப்பட்டிருந்த இடம். 


இதோ இங்கே வருகிறது நம்ம ஏரியா! Multi cuisine food court!



அதிராவின் அரிசி அல்வா!





ஜவ்வரிசி கொழுக்கட்டை! முதல் முறையாக சாப்பிட்டேன். நன்றாக இருந்தது. பாண்டிச்சேரி ஸ்பெஷலாம். ஜவ்வரிசிக்குள் தேங்காயை வைத்து ஆவியில் வேகவைத்து, அதன் மீது பனங் கல்கண்டை தூவி தந்தார்கள். நன்றாக இருந்தது. 

Sunday, February 9, 2020

ஹிந்து ஆன்மீக மற்றும் சேவை கண்காட்சி 2020

ஹிந்து ஆன்மீக மற்றும் சேவை கண்காட்சி 2020



ஒவ்வொரு வருடமும் சென்னையில் நடக்கும் ஹிந்து ஆன்மீக மற்றும் சேவை கண்காட்சி இந்த வருடம் சென்னை வேளச்சேரியில் இருக்கும் குருநானக் கல்லூரியில் ஜனவரி 28ஆம் தேதி துவங்கி பிப்ரவரி 03ஆம் தேதி வரை நடந்தது.

தென்னகத்தில் இருக்கும் பல்வேறு ஆன்மீக இயக்கங்கள் தங்கள் அமைப்புகள் குறித்தும், அவை செய்யும் சேவை குறித்தும் காட்சி படுத்தியிருந்தார்கள். ருத்திராட்சம், ஆன்மீக புத்தகங்கள், விபூதி, குங்குமம், ஸ்படிக மாலை போன்றவை விற்பனைக்கிருந்தன. சென்ற வருடங்களை விட இந்த வருடம் கோ சம்ரக்ஷணை செய்யும் அமைப்புகள் நிறைய கண்ணில் பட்டன. சுத்தமான பசு நெய், கோமியம், வரட்டி, இயற்கை உரம் போன்றவை விற்கப்பட்டன.

இந்தியன் எக்ஸ்பிரஸ் குழுமம், தினத்தந்தி, தினமலர், குமுதம், ஆனந்த விகடன், தி ஹிந்து போன்ற ஊடகங்களும் ஸ்டால்கள் போட்டிருந்தன.  அவை தங்கள் யூ ட்யூபிற்காக கவரேஜ் செய்தன.

இவை தவிர இந்தியா போஸ்ட்டும் ஸ்டால் அமைத்திருந்தது. அதில் முன்னூறு ரூபாய்க்கு நம்முடைய ஃபோட்டோவோ, அல்லது நமக்கு பிரியமானவர்களின் புகைப்படமோ கொடுத்தால் உடனடியாக 10 ஸ்டாம்புகள் தயாரித்து கொடுப்பதாக சொன்னார்கள்.  நான் செய்து வரும் இலக்கிய பணிக்காக அரசாங்கமே என் தபால் தலையை வெளியிடலாம். அதனால் வேண்டம் என்று சொல்லி விட்டேன்.  ரூபாய் 65க்கு ராமாயண காட்சிகள் தபால் தலைகளாக வந்திருக்கின்றன. அவைகளை நாம் பயன் படுத்தலாம், யாருக்காவது பரிசளிக்கலாம், அல்லது அப்படியே சேமிப்பாகவும் வைத்திருக்கலாம். என் சகோதரி தன் பேரனுக்காக ஒன்று வாங்கினார். அதைப்போல சென்ற வருடத்தின் சிறப்பு நிகழ்வான அத்தி வரதரின் வருகையை முன்னிட்டு ஒரு சிறப்பு என்வெலப் கூட வெளியிடபட்டிருக்கிறது. அதையும் நாம் பயன் படுத்தலாம் அல்லது நினைவாக வைத்துக் கொள்ளலாம்.

Athi Varadhar envelope 
 


இந்த வருடம் ஆன்மீக கண்காட்சிக்காக எடுத்துக் கொண்ட பொருள் 'பெண்மையை போற்றுவோம்' அதனால் நம் தேசத்தில் வாழ்ந்த பெருமை மிகு பெண்களைப் பற்றிய ஓவியங்கள் நுழையும் பொழுது வரவேற்றன.  ஆரம்பத்தில் நுழை வாயிலில் வைத்திருந்த கண்ணகி சிலையை பின்னர் மத்தியில் வெளியேறும் வழியைப் பார்த்தவாறு மாற்றி விட்டார்கள். கண்ணகி சிலையில் முகத்தில் ஆக்ரோஷத்திற்கு பதிலாக சிரிப்பு!!



கண்காட்சியை தொடங்கி வைத்தது மாதா அமிர்தானந்தமயி. அன்று மேடையில் ஹிந்து ஆன்மீக, சேவை நிறுவனத்தின் தலைவி திருமதி.ராஜலக்ஷ்மி, பத்மா சுப்பிரமணியம், ஷீலா ராஜேந்திரன் என்று அனைவரும் பெண்கள்தான்.

கண்காட்சியை துவக்கி வைத்து உரையாற்றிய அமிர்தானந்தமயி அவர்கள் மலையாளத்தில் உரையாற்றியதை அவருடைய சீடர் ஸ்வாமிஜி ராமக்ரிஷ்ணானந்தபுரி அவர்கள் தமிழில் மொழி பெயர்த்தார். ராஜலக்ஷ்மி அவர்களும், பத்மா சுப்பிரமணியம் அவர்களும் நீண்ட உரை நிகழ்த்தினார்கள். இதில் ராஜலக்ஷ்மி அவர்கள் மேலை நாட்டில் பெண்ணை வீக்கர் செக்ஸ் என்று கூறும் பொழுது, நம் நாட்டில் பெண்ணை சக்தி என்கிறோம் என்றார். பத்மா சுப்பிரமணியம் நம்முடைய ஹிந்து ஆன்மீக அமைப்புகள் செய்யும் சமூக சேவைகளை பட்டியலிட்டு பிரமிக்க வைத்தார். உதவி செய்து விட்டு அதனால் மதம் மாற்றுவது நம் நோக்கமல்ல,வலது கை கொடுப்பது இடது கைக்குத் தெரியக்கூடாது என்னும் கொள்கையை நாம் பின்பற்றுவதால் நம்முடைய சேவைகளை நாம் பிரகடனப் படுத்திக்க கொள்வதில்லை என்றார்.  உண்மையில் இந்த கண்காட்சியில் சென்று பார்த்த பொழுதுதான் ஹிந்து அமைப்புகள் எத்தனையெத்தனை சேவைகளை சத்தம் போடாமல் செய்து கொண்டிருக்கின்றன என்பது புரிகிறது.



வருகை புரிந்த ஆயிரக்கணக்கானவர்களில் பெரும்பாலும் ஐம்பது வயதிற்கு மேற்பட்டவர்களாகத்தான் இருந்தார்கள். அல்லது பள்ளிக்குழந்தைகள். இளைஞர்களும், மத்திம வயதினரும் குறைவாகத்தான் இருந்தார்கள். இந்த வருடம் இதை தவற விட்டவர்கள், அடுத்த முறை கண்டிப்பாக வருகை தாருங்கள். ஒரு அருமையான, பெருமிதம் கொள்வீர்கள்.

கல்யாணமாலை நிகழ்ச்சிக்கான பேச்சரங்கம் சனி அன்று நடை பெற்றது. காலம்தோறும் பெண் என்பதில் பக்தியில் பெண் என்னும் தலைப்பில் டாக்டர்.சுதா சேஷய்யன் ஒரு அருமையான சொற்பொழிவாற்றினார். குடும்பத்தில் பெண் என்பதைக் குறித்து திருமதி.ஜெயந்தஸ்ரீ பாலகிருஷ்ணன் 
பேசி கை தட்டல்களை அள்ளினார். அவரைத் தொடர்ந்து திருமதி.கவிதா ராமானுஜம் என்னும், மும்பையில் வருமானவரித்துறையில் உயரதிகாரியாக பணியாற்றும்  இளம் பெண், நிர்வாகத்தில் பெண் என்னும் தலைப்பில்  மேடைப் பேச்சில் ஜாம்பவான்களுக்கு ஈடு கொடுத்தார். இறுதியில் இலக்கியத்தில் பெண் என்பது பற்றி திருமதி பாரதி பாஸ்கர்,  நேரம் சற்று குறைவாக இருந்தாலும் உரையாற்றி அசர அடித்தார். மறக்க முடியாத மாலையாக அது அமைந்தது. 

ஜெயந்தஸ்ரீ பாலகிருஷ்ணனோடும், பாரதி பாஸ்கரோடும் நானும் என் அக்கா பெண்ணும்.

மேலும் சில தகவல்களும் புகைப்படங்களும் அடுத்த பதிவில்.




Thursday, February 6, 2020

படித்தேன், ரசித்தேன்

படித்தேன், ரசித்தேன்



சமீபத்தில் படித்த மூன்று புத்தகங்களை பற்றி சொல்ல ஆசை.
முதலில் வருவது 'தாமிரபரணி என்னும் சினேகிதி' என்னும் புத்தகம்தான். 

ஒரு புத்தகத்தை கையில் எடுத்தால் அதை முடிக்காமல் கீழே வைக்காத நாட்களெல்லாம் திருமணத்திற்கு முன்புதான்.நீண்ட வருடங்களுக்குப் பிறகு அழகான ஓவியங்கள், புகைப்படங்களோடு எல்லோரும் படிக்கக்கூடிய பெரிய எழுத்துக்கள், ஹார்ட் பவுண்ட் அட்டையோடு கூடிய ஒரு புத்தகத்தை படித்து முடித்தேன் என்றால் அது தாமிரபரணி என்னும் சினேகிதி. மத்யமர் இரண்டாம் ஆண்டு விழாவில் விற்பனைக்கு வைத்திருந்த திரு.நெல்லை கணேஷ் எழுதிய இந்த புத்தகத்தை ஒரு தோழி எனக்கு பரிசளித்தார். 

ஒரு ஐ.டி.கம்பெனியில் மிகப் பெரிய பதவியில் இருக்கும் திரு. நெல்லை கணேஷ் இரண்டு வருடங்களாக ஃபேஸ் புக்கின் மத்யமர் குழுவில் எழுதிய கட்டுரைகள், ஒன்றிரண்டு கதைகளின் தொகுப்பு இந்நூல். வெகு சரளமாக கொஞ்சம் சுஜாதாவின் சாயலில் பல விஷயங்களை தொட்டிருக்கிறார். 

வந்தியத்தேவனை கால எந்திரத்தில் ஏற்றி தஞ்சாவூருக்கு அனுப்புகிறார். சோழர் , பாண்டியர், விஜயநகர, நாயக்கர்கள் கால சிற்பங்களுக்கிடையே உள்ள வித்தியாசங்களை விளக்குகிறார். திருமங்கையாழ்வாரை குமுதவல்லியின் கணவனாகவும், பெரியாழ்வாரை ஆண்டாளின் தகப்பனாராகவும் காட்டுகிறார். தான் ரசித்த கர்னாடக இசைக்கச்சேரியை அழகாக விமர்ச்சிக்கிறார். என்னைப் போலவே இவருக்கும் மதுரை மணி ஐயர் கச்சேரி கேட்டுத்தான் இசையில் ஈடுபாடு வந்ததாம். 

தனக்கு பிடித்த கடவுளாக திருமால் ஆனதற்கான காரணமாக அவர் சொல்வது, செவிக்கு நல்ல தமிழும், அருமையான ததியோன்னமும், புளியோதரையும்,சாப்பிட்ட பின் இனிப்புக்கு அக்கார அடிசிலும், லட்டுவும் தரும் பெருமாளே கடவுளின் உருவமாக இருந்து விட்டு போகட்டுமே. போகட்டுமே என்று நமக்கும் தோன்றுகிறது. 

இந்தப் புத்தகத்தில் என்னைக் கவர்ந்தவை 'காவல் தெய்வம்', 'அமெரிக்கா ஒரு தேடல்', மற்றும் 'தாய் மாமன்' என்னும் கட்டுரைகள் ஆகும். காவல் தெய்வம் என்னும் கட்டுரையில் தென் தமிழகத்தில் ஒரு காவல் நிலையத்தில் நேர்மையாக பணியாற்றிய ஒரு இன்ஸ்பெக்டரைப் பற்றியது.  "சார் இராமர் வாலியை எப்படிக் கொன்னாரு? சட்டப்படியா செஞ்சாரு? மறைஞ்சு இருந்துதான அம்பு போட்டாரு? சட்டப்படி செல்லாதுதான், ஆனா அவர் செஞ்சது தர்மம், நியாயம்தானே? எது நியாயமோ அதச் செய்யறதுக்குத்தான் சட்டம், ஸ்டேஷன் எல்லாம்".  என்ற அந்த இன்ஸ்பெக்டர் நேர்மையாக இருந்ததாலேயே எந்த ஊரிலும் ஆறு மாதத்திற்கு மேல் இருந்ததில்லையாம். 

குடிகார புருஷனால் தினமும் அடி  உதை என அவஸ்தைப்பட்ட ஒரு பெண் அந்த இன்ஸ்பெக்டரிடம் வந்து, கம்பளைண்ட் கொடுக்க மறுத்து, "கூப்பிட்டு நல்ல புத்தி சொல்லுங்க சார்" என்று  அழுதாளாம்.  அவள் புகார் கொடுக்காததால் அவளுடைய கணவன் மீது சட்டப்படி எந்த நடவடிக்கையும் எடுக்க முடியாது. எனவே ஒரு நாள் ஓடுகிற பஸ்ஸில் ஒரு பெண்ணிடம் வம்பு செய்தான் என்று அவனைப் பிடித்து லாக் அப்பில் வைத்து, ஒரு நாள் முழுவதும் மிதி மிடி என்று மிதித்தாராம். அவனுடைய மனைவியின் வலி தெரிய வேண்டும் என்று சொல்லியே அடித்தாராம். அதன் பிறகு அந்த ஆசாமி குடியெல்லாம் விட்டு விட்டு மனைவியோடு அன்பாக இருக்க ஆரம்பித்தானாம். அப்போது அவர் கூறியவைதான் வாலி வதம் பற்றிய நியாயம். அப்படிப்பட்ட அந்த நேர்மையான காவல் அதிகாரி அகலமாக மரணித்ததை பற்றி நெல்லை கணேஷ்  "வைகுண்டத்தில் என்ன லா அண்ட் ஆர்டர் பிரச்சனையோ பெருமாளுக்கு? சீக்கிரமே ராமையாவை(இன்ஸ்பெக்டர்) நித்யசூரியாக்கி அழைத்துக் கொண்டு போய் விட்டார். என்கிறார்.   

அமெரிக்கா ஒரு தேடலில் அமெரிக்கா என்னைப்போல் பல பேர் வாழ்க்கையில் மறக்க முடியாத நாடு. முதல் கார், முதல் முத்தம் என பல முதல் அனுபவங்கள் பலருக்கும் இங்குதான். வாழ்வில் தொட்ட உயரங்களுக்கெல்லாம் ஏணிகள் இங்குதான் கிடைத்தன. என்று தொடங்கும் இந்த கட்டுரையில் இரண்டு வருடங்களுக்குப் பிறகு அமெரிக்காவில் பல நகரங்களுக்கும் சென்று அந்த அனுபவங்களை எழுதியிருக்கிறார். நியூ டவுன், கனெடிக்கெட் பயணம் பற்றிஎழுதும் பொழுது, "சாலைகள் பல இடத்தில விரிசல் விட்டு இருக்க, பாலங்கள் நியாயம் இழந்து வெளிறி இருந்தன. சமீபத்தில் வேலையில் இருந்து ஓய்வு பெற்ற உயர் அதிகாரி போல் நகரம் பழைய பெருமையை  இன்னும் இழக்காமல், ஆனால் சற்று ஆடிப்போயிருப்பது போல் தெரிந்தது. போகும் வழியில் பல நகரங்கள் - டெர்பி, ஷெல்டன் இங்கெல்லாம் பல பாக்டரிகள் இருந்திருக்கின்றன. இப்போது எதுவும் இல்லை. பல கட்டிடங்களில் கண்ணாடி எல்லாம் உடைந்து இருக்கிறது. ரோடுகள் எல்லாம் குண்டும் குழியுமாய். டாலஸ் விமான நிலையம். வயதாகி,வலு குறைந்து,காலை இழந்த முனையங்கள்(டெர்மினல்ஸ்).  என்றெல்லாம் இவர் எழுதியிருப்பதை படிக்கும் பொழுது அமெரிக்காவின் இன்னொரு முகத்தை, நமக்கெல்லாம் தெரியாத முகத்தை காட்டுகிறார். 

இருந்தாலும், காவிரியில் முழு வருடமும் பொங்கி ஓடும் தண்ணீரும், தாவணி அணிந்த இளம் பெண்களின் கோலாட்ட குதூகலங்கள் நிறைந்த அக்கிரகாரங்களும் திரும்பி வரப்போவதில்லை. ஆனால் அங்கு வசித்த குடும்பங்களின் பல வாரிசுகள் இன்று ஹட்சன் நதிக்கரையில் விநாயக சதுர்த்தி கொண்டாடிக் கொண்டிருக்கிறார்கள். அதே சுபிட்சம் இடிந்து விழுந்த கண்ணாடி கட்டிடங்கள் மட்டுமே உள்ள டெர்பி, கனெக்டிகட் போன்ற ஊர்களில் வாழும் வயதானவர்களின் வாரிசுகளுக்கும் வர பெரிய பெருமாளோ, மேரி அம்மையோ ஆசிர்வதிக்கட்டும். என்று முடித்திருப்பதில் அவருடைய நன்றி உணர்ச்சியை புரிந்து கொள்ள முடிகிறது.   

தாய் மாமன் கட்டுரையில் அவருக்கும் அவருடைய மாமாவுக்கும் இருந்த உணர்வு பூர்வமான பந்தத்தை விவரித்து விட்டு, மாமாவின் இறுதிச் சடங்கில் கலந்து கொண்டதை, "கலங்கிச் சகதியாய் ஓடிக்கொண்டிருந்த தாமிரபரணி நதியில் கிட்டத்தட்ட முப்பத்தைந்து வருடங்களுக்குப் பிறகு முங்கி எழுந்தேன். கண்ணீரையும் சேர்த்துத் துடைத்துக் கொண்டு ஓடியது தாமிரபரணி.

திருநெல்வேலிக்கு வந்தால் திரும்பிப் போகவே மனம் வராத எனக்கு, இரவே பஸ் பிடித்துச் சென்று விடலாம் என்று தோன்றியது. திருநெல்வேலிக்கு வர வேண்டிய காரணங்கள் எல்லாம் குறைந்து கொண்டே வருகின்றன. மாமாவும் சாம்பலாகி தாமிரபரணியில் கரைந்து போனார். 

குல தெய்வம் நடுக்காவுடையாரும், கோடாலி வெட்டுக் காயத்துடன் நெல்லையப்பரும் இருக்கிறார்கள். கல்லாய் சமைந்து போன இருவர். யாருக்கென்ன! இருந்து விட்டு போகட்டும்" என்று கையறு நிலையில் வரும் விரக்தியை  கூட அழகாக பதிவு செய்திருக்கிறார். 

எம்.எஸ். சுப்புலட்சுமி பற்றி எழுதியிருப்பது இதுவரை கேள்விப்படாதது. ஜெயலலிதா மாண்டியா ஐயங்கார் என்பது கூட தவறுதான். அவருடைய தந்தையின் பூர்வீகம் திருச்சிக்கு அருகில் இருக்கும் நங்கவரம்.   

அகவை ஐம்பது என்னும் கட்டுரையில் ஐம்பதாவது வயதை எட்டிய தான் எடுத்திருக்கும் சில தீர்மானங்களை எழுதிவிட்டு இறுதியில் 
கடைசியாய் ஒன்று "தாய் மொழியில் எழுத பேசாத தெரியாதவர்கள் அடுத்த பிறவியில் குரங்காய் பிறப்பார்கள் என்கிறார் பாரதி. மகனோ, மகளோ, தாய் மொழியில் பேசுவதற்காவது சொல்லிக் கொடுத்து விடுங்கள். உயில் தாய் மொழியில் எழுதி வைத்து விடுவது இதற்கு கை கொடுக்கும் என்று புன்னகைக்க வைக்கிறார்.

மன்னிக்கவும் கடைசி கடைசியாய் இன்னொன்று. ஐம்பது வயதுக்குப் பிறகு, இது மாதிரியான அச்சு பிச்சென்று புத்திமதி சொல்லும் பதிவுகளை 'படித்ததில் பிடித்தது, பிடித்தால் பகிரவும், தமிழனாய் இருந்தால் பகிர்ந்து விடு, இருபது நிமிடத்தில் இருபது பேருக்கு ஃபார்வர்ட் செய்தால் நினைத்தது நடக்கும் என்று எழுதி அனுப்ப வேண்டாம். உடனேயே குப்பைத் தொட்டிக்கு அனுப்பி விடவும்" என்று மிகுந்த தன்னடக்கத்தோடு சொல்லியிருக்கிறார். ஆனால் அவருடைய இந்த தாமிரபரணி என்னும் சினேகிதியை நிச்சயம் குப்பைத் தொட்டியில் போட மாட்டோம். பத்திரமாக நம் கலெக்ஷனில் வைத்துக் கொள்வோம். 

Friday, January 24, 2020

மசாலா சாட் -15

மசாலா சாட் - 15
(மாறுதல் வரும்) 


சமீபத்தில் ஏதோ ஒரு சேனலில் குடும்பம் ஒரு கதம்பம் படம் போட்டார்கள். அதில் ஒரு காட்சியில் எஸ்.வி. சேகர்,"பொண்ண பெத்தவங்க என்ன இப்படி அலையறாங்க? பாஸ்கர் ஊரிலிருந்து வந்து முழுசா ஒரு வாரம் ஆகல, அதுக்குள்ள ரெண்டு ஜாதகம் வந்து விட்டது" என்பார். அதை இன்றைய நிலையோடு ஒப்பிட்டேன் சிரிப்பு வந்தது. பையனுக்கு பெண் தேடும் அம்மாக்கள் எல்லோரும் சொல்லுவது,"பெண் வீட்டிலிருந்து கூப்பிடவே மாட்டேன் என்கிறார்கள். நாம்தான் ஃபோன் பண்ண வேண்டியிருக்கு." என்பதாகும்.  இப்படியே போய்க்கொண்டிருந்தால் இன்னும் கொஞ்ச நாளில் நல்ல மனைவி கிடைக்க வேண்டும் என்று வேண்டி ஆண்கள் பாவை நோன்பு நோற்க நேரிடலாம் என்று  நான் முக நூலில் பகிர்ந்த பொழுது ஒரு நண்பர், அது 'காளை நோன்பு' ஆகும் என்று பின்னூட்டம் இட்டிருந்தார். 

இப்படி பல விஷயங்கள் மாறியிருக்கின்றன. நமக்கு பிடித்திருக்கிறதோ இல்லையோ மாற்றங்களை தவிர்க்க முடியாது. மாற்றம் ஒன்றே மாறாதது.    

கல்யாண மாலை நிகழ்ச்சியில் பெண்கள், "என்னை அட்ஜெஸ்ட் செய்து கொள்ளும் பையன் வேண்டும்" என்கிறார்கள். "பெண்ணுக்கு சமைக்கத் தெரியாவிட்டாலும் பரவாயில்லை, நான் நன்றாக சமைப்பேன்" என்கிறார் ஒருவர்.  

சமையல் என்றதும் ஒரு விஷயம் தோன்றுகிறது. ஒரு காலத்தில் ஹோட்டல்களில் வாங்கி சாப்பிடுவது கௌரவக் குறைச்சல். ஹோட்டல்களும் குறைவுதான். மெஸ் என்பது பேச்சுலர்கள் சாப்பிடும் இடம். சமையல் புத்தகம் என்றால் அது மீனாட்சி அம்மாள் சமயல் புத்தகம் மட்டும்தான். புத்தகத்தை பார்த்து சமைப்பது கேலிக்கு உரிய விஷயமாக கருதப்பட்டது. 

அரிசியை கழுவி,நீர் ஊற்றி, குக்கரில் வைத்து விட்டு 20 நிமிடம் கழித்து திறந்து பார்த்தால் சாதம் ஆகவே இல்லை. ஏனென்றால் அடுப்பை பத்த வைக்க வேண்டும் என்று அதில் போடாததால் என் மனைவி அதை செய்யவில்லை. 
போன்ற ஜோக்குகள் அப்போது பிரபலம். 

ஆனால் இப்போதோ ஏகப்பட்ட சமையல் புத்தகங்கள். டி.வி.யில் நாள் முழுக்க எந்த சானலை திருப்பினாலும் யாராவது சமைத்துக் கொண்டே இருக்கிறார்கள். அதைத்தவிர யூ டியூப், முக நூல், ஹலோ ஆப் என்ற எல்லாவற்றிலும் சமைத்துத் தள்ளுகிறார்கள்.  இருந்தாலும் பலர் வீட்டில் சமைப்பதாக தெரியவில்லை. 

ஹோட்டல்களுக்குச் சென்றால் பார்சல் வாங்கும் இடத்தில் ஸ்விகிகாரர்கள் வரிசை கட்டி நிற்கிறார்கள். அதைத்தவிர சமைத்து கொண்டு வந்து வீட்டில் கொடுக்க  ஏகப்பட்ட கேட்டரிங்குகள்.  வீடு கட்டுபவர்கள், குறிப்பாக அப்பார்ட்மெண்டுகள் சமையலறையின் அளவை குறைத்து விடுகின்றன. காரணம் கேட்டால் இப்போதெல்லாம் யார் சமைக்கிறார்கள்? என்கிறார்கள்!!

எத்தனை விதமான உணவுகள் இருக்கின்றதோ அத்தனை விதமான டயட் முறைகளும் இருக்கின்றன. பேலியோ டயட், வேகன் டயட், ஃப்ரூட் டயட், என்று என்னென்னவோ சொல்கிறார்கள். அரிசி சாப்பிடக் கூடாது, எண்ணெய் கூடாது என்றெல்லாம் சொல்லிக் கொண்டிருந்ததை ருஜூதா திவாகர் முற்றிலுமாய் மறுக்கிறார்.   இரவில் அரிசி சாப்பிடக் கூடாது என்பவர்கள் கரீனா (கபூர்) கானைப் பாருங்கள். அவர் இரவில் தால் சாதம், தயிர் சாதம்தான் சாப்பிடுகிறார். என்கிறார். மேலும் கடலை எண்ணெய், தேங்காய் எண்ணெய் போன்றவைகளில் கொழுப்பு அதிகம் என்பதையும் இவர் ஏற்பதில்லை. நம்முடைய பாரம்பரிய உணவுகளையும், நம் நாட்டில் விளையும் காய்கறிகள், பழங்களையும் தவிர்க்கத் தேவையில்லை என்பது இவர் கருத்து. 


"நெய் சாப்பிடக் கூடாது என்று சொன்ன மேற்கத்தியர்கள் இப்போது நெய் உடலுக்கு அவசியம் என்பதால் அதை காபியில்(ப்ளாக் காபி)  கலந்து குடிக்கிறார்கள். சாதத்தோடு கலந்து கொண்டால் தீமை அளிக்கும் நெய், காபியில் கலந்து கொண்டு விட்டால் நன்மை செய்து விடுமா?  நம்முடைய பாரம்பரிய உணவுகளை  வெளி நாட்டவர் தவிர்க்கச் சொன்னால் அதை ஆராய வேண்டும்" என்று அரசியலும் பேசுகிறார். 

Rujutha Diwakar - celebrity dietician
பார்க்கலாம் இன்னும் என்னென்ன மாறுமோ? இப்போதெல்லாம் பிஸ்ஸாவில் டாப்பிங்காக கத்திரிக்காய் போட ஆரம்பித்து விட்டார்களாமே? கஞ்சியாக குடித்துக் கொண்டிருந்த ஓட்ஸில், இட்லி, தோசை, எல்லாம்  செய்கிறார்கள். நான் ஓட்ஸில் உப்புமா செய்தேன். 

ஓட்ஸை லேசாக வறுத்துக் கொள்ளுங்கள்.  எல்லா உப்புமாக்களுக்கும் தாளிப்பது போல் கடுகு, உ.பருப்பு, க.பருப்பு, கறிவேப்பிலை, பச்சை மிளகாய் தாளித்து ஓட்ஸை அதோடு சேர்த்து, உப்பு போட்டு தண்ணீரை தெளித்து, தெளித்து கிளற வேண்டும். அரிசி மாவில் செய்யும் உப்புமா போல் சுவையாக இருக்கிறது. 


ஓட்ஸ் உப்புமாவோடு 'மாற்றங்கள் ஒன்றேதான் மாறாதடா..' என்னும் பாடலையும் சுவையுங்கள் சுட்டி இணைக்கப்பட்டிருக்கிறது. https://youtu.be/oE6zm6OAghg